தூங்காவனமும், தீபாவளியும் . . .

papanasamபோன வருடம் தீபாவளியன்று கேரளத்தின் தொடுபுழாவில் இருந்தேன். ‘பாபநாசம்’ படப்பிடிப்பின் பரபரப்பில் தீபாவளி மறந்து போனது. இந்த வருடம் தீபாவளிக்கு நான் வசனம் எழுதியிருக்கும் ‘தூங்காவனம்’ திரைப்படம் வெளியாகிறது. பதின்வயது தீபாவளி சந்தோஷங்களுக்குப் பிறகு தீபாவளி உட்பட எந்தப் பண்டிகையிலும் நாட்டமில்லை. அவை குறித்த விசேஷமான நினைவுகளுமில்லை. ஆனால் போன வருடத்து தீபாவளியையும், இந்த வருடத் தீபாவளியையும் மறக்க முடியாதுதான்.

தெளிவாக எழுதப்பட்ட திரைக்கதையை, படப்பிடிப்புக்கு முன்பாகவே எல்லா நடிக, நடிகையரையும் அமர வைத்து, அவர்கள் ஏற்று நடிக்க இருக்கிற கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் பேச வேண்டும், நடக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்பதை விளக்கும் விதமாக திரைக்கதையை வாசித்துக் காண்பித்து, பின் படப்பிடிப்புக்குக் கிளம்பிய படம், ‘தூங்காவனம்’. அதனாலேயே எந்தவிதமான குழப்பமுமில்லாமல் படப்பிடிப்பு அத்தனை சந்தோஷமாக நடந்தது. கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கும் மேலாக கமல்ஹாசன் அவர்களிடம் திரைக்கலை பயின்ற இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா, இந்தியாவின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சானு வர்கீஸ், முறையான இசைப் பயிற்சியும், அசாத்திய கற்பனை வளமும் கொண்ட இசையமைப்பாளர் ஜிப்ரான், மிகச் சிறந்த படத்தொகுப்பாளர் ஷான் முகம்மது என திறமைசாலிகளின் கூட்டணியில் உருவான திரைப்படம், ‘தூங்காவனம்’. ஒரு ஆக்‌ஷன் திரில்லருக்கு மிகக் குறைவான வசனங்களே தேவைப்படும். அந்தக் குறைவான வசனங்களை எழுத என்னைத் தேர்ந்தெடுத்தார் ‘அண்ணாச்சி’ கமல்ஹாசன்.

‘இது நான் எழுதக் கூடியதா எனக்குத் தோணலியே!’

‘உங்களுக்கு எதுவும் எழுத வரும். அது உங்களை விட எனக்குத் தெரியும்’ என்று என் வாயை அடைத்தார்.

தனது மூத்த மாணவருடன், இளைய மாணவன் இணைந்து பணியாற்றிய திரைப்படத்தைப் பார்க்க ‘வாத்தியார்’ பாலு மகேந்திரா இல்லையே என்கிற வருத்தம் எனக்கு இல்லாமலில்லை.

thoongavanam

ஹிஸ்டரி, ஜியாக்ரஃபி…

                                                   varthairasanaimoongilmoochu

 

‘எழுத்தும், எண்ணமும்,’ குழுமத்தில்தான் முதன்முதலில் விளையாட்டாக எழுதத் தொடங்கினேன். அந்தக் குழுமத்துக்குள் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று எழுத வைத்தவர் நண்பர். பி. கே. சிவகுமார். பின்னர் சிவகுமாரும், கோபால் ராஜாராம், துகாராம் சகோதரர்கள் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து துவக்கிய ‘வார்த்தை’ சிற்றிதழில் ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமத்தில் நான் எழுதிய சில கட்டுரைகள் போக இன்னும் பல கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் முக்கியமானதாக நான் கருதுவது, ‘யுகசந்தி’. ‘வார்த்தை’ சிற்றிதழில் என் கட்டுரைகளைப் படித்து விட்டு தொடர்பு கொண்டவர்களில் முதன்மையானவர் காலம்சென்ற தி.க.சி. தாத்தா. “வே! எங்கலே இருந்தேரு இத்தன நாளா?”

‘வார்த்தை’ சிற்றிதழின் ஆசிரியர் ஐயா பி.ச. குப்புசாமி தொடர்ந்து ஊக்குவித்தார்.

‘நான் திருநவேலில பிறக்கலியேன்னு ஏங்க வைக்கறீங்களே, சுகா!’

“சுகா, ‘வார்த்தை’ல எளுதறீங்க. ஓகே. அதையெல்லாம் இணையத்துல ஒரு பிளாக் ஓப்பன் பண்ணி சேத்து வச்சா, அது ஒரு டைரி மாதிரி காலத்துக்கும் இருக்கும்,” என்று சொல்லி எனக்கான ஒரு வலைப்பூவைத் துவக்கி அதுவரைக்கும் நான் எழுதிய கட்டுரைகளை அந்த வலைப்பூவில் இட்டு சேமிக்கத் தொடங்கினார், நண்பர் மனோ. பெயர் மட்டும் ‘வேணுவனம்’ என்று நான் வைத்தேன்.

பிறகு தம்பி சேதுபதி அருணாசலம் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவங்க இருக்கிற விஷயத்தைச் சொல்லி அதில் தொடர்ந்து எழுதச் சொன்னார். ;வார்த்தை’யில் ஏற்கனவே பிரசுரமாகிய ‘திசை’ கட்டுரையுடன் சொல்வனம் முதல் இதழ் வெளியாகியது. இதற்கிடையே ஆனந்த விகடன் ஆசிரியர் நண்பர் இரா. கண்ணன் விகடனில் தொடர் எழுதச் சொன்னார். அதுதான் ‘மூங்கில் மூச்சு’. முப்பத்து மூன்று வாரங்கள் விகடனில் எழுதிய பிறகும், தொடர்ந்து ‘சொல்வனம்’ மின்னிதழில் எழுதி வந்தேன். வருகிறேன். “‘வார்த்தை’ இதழில் வெளிவந்திருந்தாலும் பரவாயில்லை, நாங்களும் எங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்கிறோம்,” என்று நான் எழுதிய கட்டுரைகளை தமது ‘ரசனை’ பத்திரிக்கையில் தொடர்ந்து பிரசுரித்தார், சகோதரர் மரபின் முத்தையா. இப்போது ‘வேணுவனம்’ கட்டுரைகள், மற்றும் ஆனந்த விகடன் இதழில் நான் அபூர்வமாக எழுதுகிற சிறுகதைகளை இட்டு சேமித்து வைக்கிறார் நட்பாஸ் என்கிற பாஸ்கர் என்கிற ‘பதாகை’ பாஸ்கர்.

இதுவே நான் ரைட்டரான ஹிஸ்டரியும், ஜியாக்ரஃபியும்.

வண்ணதாசன் என்னும் ரசிகர் . . .

vannadasan
ஒரு சிறுகதை என்றால் அதில் கதை சொல்லியே ஆக வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் ஒன்றுமில்லை என்பதை எனக்கு உணர்த்தியவர் வண்ணதாசன். வண்ணதாசனைப் படிப்பதற்கு முன்புவரை என் மனதில் இருந்த சிறுகதை குறித்த வடிவம் முற்றிலுமாகக் கலைந்து போனது.

வண்ணதாசனிடம் எனக்குள்ள முதல் ஈர்ப்பாக திருநெல்வேலியே இருந்தது. சிறுவயதில் நான் பார்த்த மனிதர்கள், நான் புழங்கிய பகுதிகள் என வண்ணதாசனின் கதைகளில் வரும் அத்தனையையும் நேரடியாக பார்த்து அனுபவித்திருந்தேன். கீழப்புதுதெருவில் குடியிருந்த ‘தாடி’ ரத்தின பாகவதர் மார்கழிமாதக் காலையில் தன் சிறு குழுவுடன் பஜனை சங்கீதம் இசைத்துச் செல்வதை வண்ணதாசனின் ‘வேர்’ சிறுகதையில் படித்தபோது மனதுக்குள் அப்படி ஒரு சந்தோஷம்! ‘தாடி’ பாகவதர் வாயாலேயே ‘மோர்சிங்’ ஒலியெழுப்புவதை வண்ணதாசன் குறிப்பிட்டிருந்ததையும்விட, பாகவதரின் கூடவே புல்லாங்குழல் இசைத்து வரும் கண்பார்வையற்றவரைப் பற்றி இப்படி எழுதியிருந்தார். ’கண்ணில்லாதவர்களுக்குத்தான் புல்லாங்குழல் வாசிக்க வரும் என்று நான் சிறுவயதில் நம்பியிருக்கிறேன். எதிர்த்தவீட்டுப் பிள்ளைகளுக்கு எப்படியென்று தெரியவில்லை. கேட்க வேண்டும்’. Read More

ஆகாயப் பந்தலிலே…

msv

எம்.எஸ். விஸ்வநாதன் என்கிற பெயரை முதன்முறையாக எனக்கு அறிமுகம் செய்தது, இலங்கை வானொலியாகத்தான் இருக்க வேண்டும். ‘பொன்னூஞ்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ என்கிற பாடல், சிறுவயதில் என் மனதில் பதிந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களில் ஒன்று. எழுபதுகளின் மத்தியில் வெளிவந்த படங்களான ‘ராஜபார்ட் ரங்கதுரை, அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோயில்’ போன்ற சிவாஜி கணேசனின் படங்கள் மூலம் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பவரை, சிவாஜி படங்களுக்கு இசையமைப்பவர் என்றே முதிரா என் இள வயதில் அறிந்து வைத்திருந்தேன். எம்.எஸ்.வியின் எண்ணிலடங்கா இசைச் சாதனைகளை, அவரது பிற பாடல்கள் மூலம் எனக்குப் புரிய வைத்தவர்கள், மேடை மெல்லிசைக் கலைஞர்களே! ‘அரசுப் பொருக்காச்சில விஸ்வநாதன் கச்சேரி ஆரம்பிக்கும்போது ‘காதலிக்க நேரமில்லைல வரும்லா ‘நாளாம் நாளாம் திருநாளாம்’! அந்தப் பாட்ட வாசிச்சுல்லா திரையத் தூக்குவாங்க

https://www.youtube.com/watch?v=fAl20VnpgU4

Read More

வடம்

10412027_1438591953083812_4479874386173740702_n

ஓரங்களிலிருக்கும் அன்பர்கள், பக்தர்கள் எல்லோரும் அம்மையப்பன் தேர்வடம் பிடித்து . . . .’

தூரத்திலிருந்து காற்றில் கலந்து வரும் குரல் கேட்டு, ‘இன்னைக்குத் தேரோட்டம்லா!’ என்று திடுக்கிட்டு படுக்கையிலிருந்து எழுகிறேன். தொடர்ந்து ‘டம டம’ என்ற சத்தம். வலுவான புஜங்களைக் கொண்ட மனிதர்கள் ‘தடி’ போடுகிறார்கள். கீழ ரதவீதியின் இருபுறமும் ஜனக்கூட்டம். கழுத்துச் சங்கிலி வெளியே தெரிய, வட்டக்கழுத்து ஜிப்பா அணிந்த குஞ்சு பெண்கள் பகுதி வடத்தைப் பார்த்து உற்சாகக் குரல் எழுப்பியவாறே வடத்தைத் தூக்கிப் பிடித்து இழுக்கிறான்.

‘சித்தப்பா! இந்தப் பக்கம் வாங்க’ என்று என்னை அழைத்தபடியே, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி ‘நம பார்வதி பதயே’ என்கிறான் தலைப்பா கட்டிய மீனாட்சி.

வருடத்துக்கு ஒருமுறை தேரோட்டத்தன்று மட்டுமே பார்க்க முடிகிற செல்லத்து அத்தையின் மகள், பூதத்தான் முக்கு அருகே கத்தரிப்பூ தாவணியில் வெட்கச் சிரிப்பு பூத்த முகத்துடன் தன் தாயின் முதுகுக்குப் பின் மறைந்து நிற்கிறாள்.

‘தேரோட்டம் வந்தாலே ஒரு வாசம் அடிக்கி, பாத்தியா! ஏ அப்பா! என்னா மணம்!’ என்று மூச்சைப் பிடித்து இழுத்து ரசிக்கிறான், சந்திரஹாசன்.

‘கோட்டிக்காரப்பயலெ! அது பொருட்காட்சி மணம். காத்துல இங்கெ வரைக்கும் அடிக்கி. சாயங்காலம் எல்லாரும் போயிருவோம்’ என்கிறான் கணேசண்ணன்.

‘இந்த வருஷம் சந்திரா ஜெயிண்ட் வீல்ல ஏறுனான்னா, நானும் ஏறிருதெம்ல’ என்கிறான், ராமசுப்பிரமணியன்.

‘வே மருமகனே! கலர் பாத்தது போதும். வந்து ஒரு கை வடம் பிடியும்வே’. கேலியும், உரிமையும் கலந்த குரலில் சொல்லுகிறார், ராஜாமணி பட்டர் மாமா.

‘போன வருசம் மாரி இந்த வருசம் தேரோட்டம் இல்ல, மக்கா’ என்கிறான், லெட்சுமணன்.

‘எண்ணே! குனிஞ்சு வடத்தத் தூக்கும்போது லேசா நிமிந்து தேரப் பாருங்க. வச்ச கண்ணு வாங்காம நம்மளையேப் பாக்கும். இதத்தானெ கல்யாணி அண்ணாச்சி ‘நிலை’ கதைல எளுதுனா’ என்கிறான், வள்ளிநாயகம்.

‘என்னப் பெத்த ஐயா! இந்தப் பயலுக்கு ஒரு கொறயும் வரக்கூடாது. அடுத்த தேரோட்டத்துக்காவது என் பேரப்பிள்ளைகளப் பாக்க வச்சிரு’. பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு, தன்னை அநாதையாய்த் தவிக்க விட்டுச் சென்ற மகனை எண்ணி ‘மாரார் ஸ்டூடியோ’ வாசலில் நின்றபடி தேருக்குள் வீற்றிருக்கும் நெல்லையப்பனை வணங்குகிறாள், முப்பிடாதியின் தாய்.

‘ஸார்! வந்துட்டேன்.’.

டிரைவர் முனுசாமியின் ஃபோன் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது. இன்று சென்னை கே.கே நகரில் படப்பிடிப்பு. கிளம்புகிறேன்.

தெலுங்கானா தோசையும், சாய்லட்சுமியின் இசையும் . .

ஹைதராபாத் விமான நிலையத்தில் போய் இறங்கும் போதே தெலுங்கானாவின் உஷ்ணக்காற்று மூஞ்சியில் அறைந்து சினத்துடன் வரவேற்றது.

‘நம்ம ஊர் வெப்பம் எவ்வளவோ பரவாயில்லன்னுத் தோண வைக்குதே, ராஜேஷ்!’

‘ஆமா ஸார்! உங்களுக்காவது வெளியேதான் ஹீட்டு. எனக்கு உள்ளேயும். தொட்டுப் பாருங்க’.

கழுத்தைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார், ‘தூங்காவனம்’ இயக்குநர் ராஜேஷ். கொதித்தது. சென்னை விமான நிலையத்திலேயே இருமிக் கொண்டிருந்தார்.

‘நாளைக்கு இங்கெ பிரஸ் மீட். நாளான்னைக்கு ஷூட்டிங். உடம்ப கவனிக்க வேண்டாமா? டாக்டர்கிட்டப் போனீங்களா?’

‘அதெல்லாம் போயிப் பாத்து டேப்லட் போட்டுக்கிட்டுத்தான் ஸார் இருக்கேன். பிரஸ் மீட்ல பேசறத நெனச்சா, காய்ச்சல் ஜாஸ்தியாகுது. . . ஆங்! சொல்லமறந்துட்டேன். நீங்களும் பேச வேண்டியதிருக்கும், ஸார்’.

‘ஐயோ! எனக்கு தெலுங்கு தெரியாதே, ராஜேஷ்! மேடைல பேசச் சொன்னா தமிழும் மறந்து போயிருமே!’

‘அதெல்லாம் பாத்துக்கலாம். நீங்க பேசறீங்க’.

பெட்டியை உருட்டிக் கொண்டு முன்னே சென்றார், ராஜேஷ். மெல்ல அவர் பின்னாலேயெ என் பெட்டியை உருட்டியபடிச் சென்ற எனக்கு உள்ளுக்குள் உஷ்ணம் ஏற ஆரம்பித்தது.

விமான நிலையத்தில் தன்னந்தனியாக பேனர் மூலம் நரசிம்மராவ் புன்னகையுடன் எங்களை வரவேற்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஹைதராபாத்தின் சாலையோர பேனர்களில் தன் சகோதரர், மற்றும் சகோதரரின் மகருடன் குடும்ப சகிதம் வரவேற்றார். பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ‘Fortune hotel’இல் அறை ஒதுக்கியிருந்தார்கள். அறையில் பெட்டியை வைத்து விட்டு சாப்பிடுவதற்காகக் கீழே உள்ள ரெஸ்டாரண்டுக்குச் சென்றோம். வேண்டியவற்றை நாமே எடுத்துத் தட்டில் போட்டுக் கொண்டு உண்ணும் ‘புஃபே’ முறை. விதம் விதமான குண்டாஞ்சட்டிகளில் பல சைவ, அசைவ பதார்த்தங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. வலப்பக்க மேஜை முழுதும் காய்கறிகளும், பழங்களும் நறுக்கி வைக்கப்பட்டிருந்தன.

‘சுகா ஸார்! இங்கெ எல்லாமே நல்ல டேஸ்ட்டியா இருக்கும். ஆனா, வருஷம் முழுக்க ஒரே டேஸ்ட்தான். ரெண்டே நாள்ல உங்களுக்கு போரடிச்சுடும்’.

தயாரிப்பாளர் சித்தாரா சுரேஷ் ஒரு தகவலாகச் சொல்லி எச்சரித்தார். அஸ்ஸாம் மற்றும் சீன முக அமைப்பு கொண்ட வடநாட்டு இளைஞர்களும், யுவதிகளும் சீருடை அணிந்து உபசாரம் செய்ய, காய்கறி சூப்பில் தொடங்கி ரொட்டி, பனீர் பட்டர் மசாலா, நவதானியங்களாலான ஏதோ ஒரு கலவை, பச்சைக் காய்கறிகள், வெஜிடபிள் புலவ் மற்றும் சோறு, சாம்பார் தோற்றத்தில் காட்சி தந்து, அசைவமோ என்று சந்தேகிக்கும் வண்ணம் அமைந்த குழம்பு, வெந்த பீன்ஸ், எண்ணெய் மிதக்கும் கத்தரிக்காய், முட்டைக்கோஸ் பொரியல், கருணக்கிழங்கும், முருங்கைக்காயும் இணைந்து ருசித்த ஒரு தொடுகறி வகை, சின்னத் துண்டுகளாக நறுக்கிப் போடப்பட்ட கேரட்டும், மிளகாயும் கலந்த தயிர் சாதம், சுட்ட மற்றும் பொரித்த அப்பளம், வத்தல், ஊறுகாய், கோங்குரா சட்னி, வித விதமான இனிப்பு வகைகள் என அமர்க்களப்பட்டது, ‘Fortune’ உணவு விடுதி. சித்தாரா சொன்ன மாதிரியே இரண்டாவது நாளே Fortune உணவு முகத்தில் அடிக்க ஆரம்பித்து விட்டது. மதியம் மட்டும் படப்பிடிப்புத் தளத்தில் சாப்பாடு. சில சமயம் காலையும். இரவு உணவு ‘Fortune’இல்தான். தினமும் இரவு வயிற்றை நிரப்பி அனுப்பினார்கள், அஸ்ஸாம் சிப்பந்திகள்.

எல்லோரும் பயமுறுத்தியது போல் தெலுங்கு உணவுவகைகளில் அத்தனை காரம் இல்லை.

படப்பிடிப்புத் தளத்தில் கமல் அண்ணாச்சியிடம் சொன்னேன்.

‘இங்கெ சாப்பாடுல்லாம் அப்படி ஒண்ணும் காரமா இல்லியே! காரச்சட்னில கூட வெல்லம் போட்டிருக்காங்களே!’

‘எல்லாத்துலயும் வெல்லத்த எதிர்பார்த்து மாட்டிக்கிடாதிய. இங்கெ கொதிக்கிற வெயில்ல மொளகா பஜ்ஜி தின்னு சூடா டீ குடிப்பாங்க. பாக்கறதுக்கு நல்லா இருக்கும். ஆசப்பட்டு வாங்கித் தின்னா அவ்ளோதான்’.

‘ஏன்? ரொம்ப காரமா இருக்குமா?’

‘காரம்னு சொல்ல முடியாது. ஆனா, காலைல ஐஸ் வாட்டர்லதான் அலம்பணும். வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா? . . . நில்லுங்க. எங்கெ போறிய?’.

உடனடியாக குட்நைட் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விலகி நடக்கும்போது நண்பகல் மணி பன்னிரெண்டு.

IMG-20150625-WA0009

படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாள் சென்னையிலிருந்து யூகி சேது வந்து சேர்ந்தார். அப்பாடா! நமக்கொரு சைவத்துணையாச்சு என்று மகிழ்ந்தேன். யூகி சேதுவுக்கு எண்ணெய் ஆகாது. தோசையையே ரொட்டி போல எண்ணெய் இல்லாமல் அடுப்பில் வாட்டித் தருமாறுக் கேட்பவர். ஒவ்வொரு நாளும் எனக்கான உணவுத் தட்டையும் அவரே நிரப்பிக் கொண்டு வந்து கொடுத்தார்.

‘இதென்ன சேது? ஏதோ பூச்சி மாதிரி இருக்கே! தொட்டாப் பேசுமோ?’

அச்சத்துடன் கேட்டேன்.

‘ஐயோ! இது ப்ரொக்கோலி சுகா. இத சாப்பிட்டதில்லயா? ஒடம்புக்கு ரொம்ப நல்லது.’

கூடவே ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் ஊற வைத்த வெந்தயம், பாதாம், முளைகட்டிய பயிறு வகைகள் எடுத்து வந்து, தாயுள்ளத்துடன் பரிமாறினார்.

‘நான் சாப்பிடலாமா, சேது?’

‘அதென்ன நீங்க மாத்திரம்? நானும் சாப்பிடுவேன்’.

‘இல்ல சேது. நாம ரெண்டு பேருமே நாண் சாப்பிடலாமா?’

‘ஓ! அந்த நாணா? அதெல்லாம் மைதா. சாப்பிடக்கூடாது. கோதுமை சாப்பிடலாம். ரொட்டி சொல்றேன். இருங்க’.

‘சாம்பார்வட நல்லா இருக்கற மாதிரி தெரியுதே, சேது!’

‘நோ நோ! எண்ணெய்! தொடப்படாது’.

யூகி சேது ஹைதராபாத்தில் இருக்கும் வரைக்கும் அவர் விருப்பப்படிதான் உண்டு வாழ்ந்தேன்.

சிலதினங்களில் நடிகர் கிஷோர் வந்து சேர்ந்தார். இயற்கை உணவு பற்றியும், இயற்கை விவசாயம் குறித்தும் கிஷோர் சொல்லியிருப்பதை அப்போதுதான் படித்திருந்தேன். கிஷோருடன் சேர்ந்து கொண்டு சத்துள்ள ஆகாரம் உண்ண விரும்பினேன். ஆனால் கிஷோர் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, என்னை கொழு கொழு தயிர் சாதத்தை முழுங்க வைப்பதிலேயே குறியாக இருந்தார். அதுவும் இரவு உணவின் போது என்னருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, ‘அநாவசியமா டயட் கியட்னு தயிர் சாதத்த மிஸ் பண்ணாதீங்க, ஸார். அமிர்தமா இருக்கு’.

‘நீங்க என்ன சொன்னாலும் நைட் ரைஸ் சாப்பிடறதா இல்ல, கிஷோர். ஸாரி’ என்றேன்.

இரண்டாம் நாளே கிஷோர் அமோக வெற்றி பெற்றார். தயிர் சாதத்துக்கு முன் ரசம் மற்றும் சாம்பார் சாதங்கள் அணிவகுத்து என் விரதத்தைச் சிதறடித்தன.

அதற்கடுத்த நாள் ஹைதராபாத் வந்து சேர்ந்த நடிகர் சோமசுந்தரம், (ஆ. காண்டம், ஜி.தண்டா) வந்த ஒரே நாளில் கிஷோரை நல்லவராக்கினார்.

‘சுகா ஸார்! எவ்வளவு சாப்பிட்டாலும் கடைசில ஐஸ்கிரீம் சாப்பிடாம இருக்கக் கூடாது. ஜீரணம் ஆக வேண்டாமா?’

வழிய வழிய இரண்டு கோப்பை ஐஸ்கிரீமைக் கொணர்ந்து என் டேபிளில் வைத்து உபசரித்தார்.

‘ஏம்பா! ஒங்களுக்கெல்லாம் என் ஹிப் சைஸக் கூட்டறதுல அப்படி என்ன சந்தோஷம்?’

கடும் கோபத்துடன் கேட்டு விட்டு ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தேன்.

இயக்குநர் ராஜேஷின் ஹிப் சைஸ் என்னுடையதை விட இமாலய அளவு அதிகம் என்பதால் அவருடன் அமர்ந்து சாப்பிடுவது மனதுக்கு மகிழ்ச்சி தருகிற ஒன்று. உடம்பைப் போலவே ராஜேஷின் மனதும் பரந்த ஒன்று.

‘உடம்ப எப்படியும் குறைச்சிரலாம்தானே, ராஜேஷ்?’

‘நிச்சயம் கொர்ர்ர்ர்றச்ச்ச்ச்ச்சிரலாம், ஸார்’.

வாய் நிறைய பாகற்காய் பக்கோடா இருந்தாலும் இந்த ஒரே பதிலைச் சொல்லத் தவறுவதே இல்லை, ராஜேஷ்.

IMG-20150625-WA0008

சீக்கிரம் படப்பிடிப்பு முடிந்த நாட்களில் யூகி சேதுவுடன் பஞ்சாரா ஹில்ஸின் நீண்ட வீதியில் ஒரு வாக்கிங் செல்ல முடிந்தது. யூகி சேதுவுடன் கண்ணை மூடிக்கொண்டுக் கூட நடந்து விடலாம். கையைப் பிடித்து பத்திரமாக அழைத்துச் சென்று விடுவார். ஆனால் காதை மூடிக் கொள்ள முடியாது. அப்படியே காதை மூடினாலும், மூளைக்குள் புகுந்து பேசி விடுவார். அந்த விஷயத்தில் யூகி சேது, நண்பர் ஜெயமோகனின் சித்தப்பா. சேதுவும், நானும் ஏற்கனவே தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் சொல்லியிருந்த ஒரு தோசைக் கடையைத் தேடி அலைந்தோம். பல நிமிடங்கள் அலைச்சலுக்குப் பிறகு தோசைக் கடை கண்ணுக்குச் சிக்காமல், நாங்கள் தங்கிருந்த ஹோட்டலுக்குச் சோர்வுடன் திரும்பியபோது மிக அருகில் ‘டிஃபன்ஸ்’ என்கிற அந்த செல்ஃப் சர்வீஸ் தோசைக் கடையைக் கண்டுபிடித்து உள்ளே புகுந்தோம்.

நின்று சாப்பிட இரண்டு டேபிள்களும், அமர்ந்து சாப்பிட நான்கு டேபிள்களும் போடப்பட்டிருந்தன. கல்லாவுக்கு எதிரே சற்று உயரத்தில் தொலைக்காட்சி ஒலி சற்று உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. வண்ணமயமான தெலுங்கு சினிமா பாடல்கள்.

‘ரெண்டு தோச. ஆயிலே இல்லாம குடுங்க’.

உடைந்த தெலுங்கில் சேது ஆர்டர் சொன்னார். எண்ணெய் இல்லாத தோசையும், கிண்ணத்தில் சாம்பாரும், சட்னியும் வாங்கிக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே உள்ள டேபிளில் உட்கார்ந்தபடி பாடலைப் பார்த்துக் கொண்டே சாப்பிடத் துவங்கினோம். கனத்த தெலுங்கு நடிகர் ஒருவர், அவரை விட புஷ்டியான சிவலிங்கத்தைப் பார்த்து கோபமாகப் பாடிக் கொண்டிருந்தார். கூடவே ஒலித்த பெண்குரல் வந்த திசை நோக்கி நானும், யூகி சேதுவும் திரும்பினோம். கல்லாவில் அமர்ந்திருந்த இளம்பெண் தொலைக்காட்சியைப் பார்க்காமலேயே பாடிக் கொண்டிருந்தாள். இருபதுகளின் துவக்கத்தில் இருந்தாள். மூக்கில் சிறு வளையம். ஸ்டிக்கர் பொட்டு. காதுகளில் மெல்லியத் தகட்டுத் தோடுகள். கழுத்தில் கருப்பு கலந்து மினுங்கும் சங்கிலி. தலைக்குப் பின்னால் புகைப்படத்தில் ஊதுவத்தி வாசனையுடன் ஷீரடி சாய்பாபா. சேது இன்னொரு எண்ணெயில்லா தோசை சொன்னார். இப்போது வேறு ஒரு காதல் பாடல். ஜூனியர் என். டி. ஆர் உடற்பயிற்சி போல ஆடி, யாரோ ஒரு மும்பை அழகியை சுந்தரத் தெலுங்கில் பாடிக் காதலித்தார். பதிலுக்கு அந்தப் பெண்ணும் அவளால் முடிந்த அளவுக்கு உடற்பயிற்சியினாலேயே பதிலுக்கு வாயசைத்துக் குதித்தாள். கல்லாப்பெட்டி பெண், நாயகன், நாயகியுடன் இணைந்து இரு குரலிலும் பாடினாள். அத்தனை சுதி சுத்தமான குரல். உச்ச ஸ்தாயி போகும் போது கொஞ்சமும் பிசிறடிக்கவில்லை. கள்ளத் தொண்டையில் அல்லாமல் அவளால் இயல்பாகப் பாட முடிந்தது.

அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் பாடலைக் கேட்பதற்காகவே நானும், யூகி சேதுவும் ‘டிஃபன்ஸ்’ கடைக்குச் சென்றோம். தோசைத் தட்டுடன் கல்லாப்பெட்டிக்கு எதிரே உள்ள நாற்காலிகளில் அந்தப் பெண் பாடுவதைப் பார்ப்பதற்கு வாகாக அமர்ந்து கொண்டோம். இந்த முறை ‘குணா’ திரைப்படத்திலிருந்து ‘கண்மணி ஈ ப்ரேம லேகனே ராசின்டி ஹ்ருதயமே ’ என்று நாம் கேட்டுப் பழகிய மெட்டு, தெலுங்கில் ஒலித்தது. கல்லாப்பெட்டி பெண் ஜானகியுடன் இணைந்து பாடினாள். சேதுவும், நானும் அந்தப் பெண்ணின் குரல் கேட்டு மகிழ்ந்து போனோம்.

‘இந்தப் பொண்ணு இப்ப இவ்வளவு சந்தோஷமா இருக்குது. எல்லாம் கல்யாணம் வரைக்கும்தான். அப்புறம் லைஃப் அவள என்னா பாடு படுத்தப் போகுதோ!’ என்றார், யூகி சேது.

‘அப்படில்லாம் இல்ல சேது. இந்தப் பொண்ணப் புரிஞ்சுக்கற மாதிரி ஒருத்தன் நிச்சயம் கெடைப்பான். இவ சந்தோஷமாப் பாடிக்கிட்டே இருக்கத்தான் போறா. மனசார வாழ்த்துவோம்’ என்றேன்.

கைகழுவி விட்டு பில் கொடுக்க கல்லாப் பெட்டிக்கு வந்தோம்.

பணம் கொடுக்கும் போது, சேது அவளுடன் மெதுவாகப் பேச்சு கொடுத்தார்.

‘பேரென்னம்மா?’

‘சாய்லட்சுமி’.

முகம் பார்க்காமல் பதில் வந்தது.
‘நல்லா பாடறியே! சினிமாவுல நடிக்கிறியா? நாங்கல்லாம் கமலஹாசன் படம் ஷூட்டிங்குக்காக வந்திருக்கோம். நான் நடிக்கிறேன். ஸார் எழுதறாரு’.

நிமிர்ந்து எங்களிருவரையும் பார்த்த சாய்லட்சுமியின் முகத்தில் சற்றும் எதிர்பாரா முறைப்பு. ‘சினிமாவா? ம்ஹூம்’ என்று வேகமாகத் தலையை ஆட்டி முகத்தைப் பொத்திக் கொண்டாள். இளம்பெண்களை ஓரக்கண்ணால் பார்த்து லேசாகப் புன்னகைத்தாலே லாரியைக் கழுத்தில் ஏற்றிக் கொல்கிற தெலுங்குத் திரைப்பட வில்லன்கள் ஒரு நொடியில் நினைவுக்கு வந்து போனார்கள். மூளை வேகமாக யோசித்தது. இதற்குள் சாய்லட்சுமி, பாரதிராஜாவின் நாயகி போல இரு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு, மெல்ல ஒரு கையை இறக்கி என்னைப் பார்த்தாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தெலுங்குக் களத்தில் குதித்தேன்.

‘நீலு குரலு பியூட்டிஃபுல்லு. மியூசிக்லு படிச்சியாலு?’

சட்டென்று வெட்கம் விலகி, அடக்க முடியாமல் சிரித்தபடி, ‘தமிழ்லயே பேசுங்க, ஸார். எனக்கு தமிழ் தெரியும்’ என்றாள், சாய்லட்சுமி.

உபசாரம்

‘தென்காசி ஆசாரம் திருநவேலி உபசாரம்’ என்று பேச்சு வழக்கில் திருநவேலி பகுதிகளில் பேசிக் கேட்டிருக்கிறேன். தென்காசிக்காரர்கள் வீட்டில் பழையது சாப்பிட்டு விட்டு வந்து, விசேஷ வீடுகளில் சம்பிரதாயமாகப் பேருக்குக் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு கை கழுவி விடுவார்களாம். அதே போல் திருநவேலிக்காரர்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை ‘யய்யா வாருங்க! சாப்பிடுதேளா? சாப்பிட்டுட்டுதான் வந்திருப்பிய!’ என்பார்கள் என்று கேலியாகச் சொல்வதுண்டு. தென்காசிக்காரர்களுக்கும், திருநவேலிக்காரர்களுக்கும் இடையேயான இந்தக் கிண்டல் சம்பாஷணையில் உண்மையில்லை என்று ஶ்ரீரங்கத்துக்காரரான எழுத்தாளர் சுஜாதா தன் அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கிறார். ஆரெம்கேவி, கலாப்ரியா போன்றவர்களின் வீடுகளில் தான் சாப்பிட்ட பூ போன்ற இட்லியும், கல் தோசையும், அல்வாவும் வெஜிட்டேரியன்களுக்கு சொர்க்கம் என்றார் சுஜாதா. கூடவே தமிழறிஞர் அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள் திருநவேலிக்குச்ஒரு வீட்டுக்குச் சென்றபோது ஒரு தம்ளரில் தண்ணீரும் மற்றதில் வெந்நீரும் வைத்தார்களாம். அதேபோல் ஒரு தம்ளரில் மோரும் மற்றதில் தயிரும்.

‘உங்களுக்கு ஜலதோஷமென்றால், வெந்நீர் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தயிர் ஆகாது என்றால், மோர் சாப்பிடுங்கள்,’ என்றார்களாம். இது திருநெல்வேலி உபசாரம். இந்தச் சம்பவத்தையும் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்.

திருநவேலியின் கல்யாணம், சடங்கு போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், அசுப காரியங்களிலும் பந்தி பரிமாறுவதற்கென்றே சில விசேஷமான மனிதர்களை அழைப்பார்கள்.

‘மறக்காம ரங்கனுக்கும், சம்முகத்துக்கும் சொல்லிருடே! எப்படியும் அஞ்சாறு பந்தி ஓடும். அவனுவொ இல்லென்னா சமாளிக்க முடியாது பாத்துக்கொ!’ Read More

பாபநாசத்தில் திருநவேலி . . .

papanasam

திரைப்படங்களில், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் திருநெல்வேலி வட்டார வழக்கைக் கேட்கும்போதெல்லாம் வருந்தியிருக்கிறேன். திருநவேலி பாஷை என்று அவர்களாக நினைத்துக் கொண்டு கோவை, மதுரை வட்டார வழக்கு பேசுவார்கள். அம்பாசமுத்திரத்தைக் காண்பிப்பார்கள். ஆனால் அதில் வரும் கதாபாத்திரம், ‘என்ன ரவுசு பண்றே?’ என்று பேசும். இவர்களுக்கு எந்த ஊருமே வெறும் லொக்கேஷன்தானா என்று மனம் வெதும்பும்.

கணேசண்ணன் படிக்கிற காலத்தில், தமிழ்த் தேர்வின்போது, ‘செல்வம்’ என்று முடியும் குறள் எழுதுக என்பதற்கு

‘அவனன்றி போனதை இவனோடு சென்றதனால்
ஒருபோதும் போதா செல்வம்’

என்று எழுதி மதிப்பெண் வாங்கியதாகச் சொல்வான். அதுபோல நம் திரைப்படங்களில் ஏதாவது ஒரு வட்டார வழக்கைப் பேசி (சமயங்களில் தெலுங்கும்) கடைசியிலோ, முதலிலோ ஒரு ‘ஏலேய்’ போட்டு அதை திருநவேலி வட்டார வழக்காக அவர்களாகவே நினைத்துக் கொண்டு திருப்தியடைந்து விடுவார்கள்.

‘ஏல, எல, எலேய், யோல்’ இப்படி திருநவேலி விளி நிறைய உண்டு. நிக்கான் (நிற்கிறான்), பாக்கான் (பார்க்கிறான்), கேக்கான் (கேட்கிறான்), சொல்லுதான் (சொல்கிறான்)- இவை எல்லாம் உச்சரிப்பு சார்ந்தவை. ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கியம், திருநவேலி பாஷையில் உள்ள ராகம். அதை எழுத்தில் கொண்டு வர முடியாது. ஒலியில்தான் கொண்டு வர வேண்டும். பரமக்குடியில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, பல மொழிகளில் தேர்ந்து, பழந்தமிழிலும் நன்கு பயிற்சி உள்ள கலைஞர் கமல்ஹாசன், ‘திருநவேலி பாஷை’ பேச என்னாலான உதவிகளைச் செய்திருக்கிறேன்.

‘எனக்கு ஒண்ணும் தெரியாது. கிளிப்பிள்ளை மாதிரி நீங்க சொல்றத அப்படியே திருப்பி சொல்லிடறேன்,’ என்றார். ‘சொல்லிடறேன் இல்ல. சொல்லிருதென்’ என்றேன். அந்த நொடியிலிருந்தே பயிற்சி துவங்கியது. இப்போது தொலைபேசியில் பேசினாலும் அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘எங்கெ இருக்கிய?’

என்னிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்த அண்ணாச்சி கமல்ஹாசனுக்கு நன்றி.

நண்பர் ஜெயமோகனின் வசனத்தில், ஜீத்து ஜோஸ்ஃபின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டிரெய்லர்:

 

ராயல் டாக்கீஸ் . . .

காசிதான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தான். தம்பி வரப்போவது பற்றி அவன் வீட்டுக்கே அரசல்புரசலாகத்தான் தெரியும். ஆனால் காசிக்கு மட்டும்தான் உறுதியாக இன்ன தேதிக்கு, இந்த ரயிலில் வருகிறேன் என்பதை தம்பி சொல்லியிருந்தான்.

தம்பியின் உண்மையான பெயரான கணபதிசுப்பிரமணியம் என்பது அவனது சர்ட்டிஃபிக்கேட்டில் மட்டும்தான் உள்ளது. சுந்தரம் ஸார்வாள் சொல்வார். ‘ஒண்ணு கணவதின்னு வச்சிருக்கணும். இல்லென்னா சுப்ரமணின்னு வச்சிருக்கணும். அதென்னடே ஒருத்தனுக்கு ரெண்டு பேரு?’ வீட்டிலும் சரி. நண்பர்கள் மத்தியிலும் கணபதிசுப்பிரமணியம் எப்போதும் தம்பிதான். தாத்தா பெயரைச் சொல்லக் கூடாதென்று ஆச்சிதான் ‘தம்பி’ என்று விளிக்கத் தொடங்கினாள். ஆச்சி ஒன்றைச் சொல்லிவிட்டால் அதுதான் சட்டம். யாரும் அதை மீற மாட்டார்கள். ‘அதென்ன சாவி? தொறவோல்னு சொல்ல மாட்டேளோ?’ என்பாள். ‘ஆமா! ஒலகமே சாவின்னுதான் சொல்லுது. ஒங்க அம்மைக்கு மட்டும் எங்கெருந்துதான் வார்த்த மொளைக்கோ?’ லோகு பெரியம்மை முனகுவாள். ‘ஏட்டி! திறவுகோல்ங்கறது சுத்தமான தமிள்வார்த்த. அதச் சொல்றதுக்கு ஒங்களுக்குல்லாம் வலிக்கி. என்னா?’. சண்முகப் பெரியப்பா ஏசுவார்.

லோகநாயகியும், சண்முகமும் தம்பிக்கு பெரியம்மை, பெரியப்பா என்பது வெறும் முறைக்குத்தான். ஆனால் தம்பிக்கு அவர்கள்தான் அம்மையும், அப்பாவும். தம்பி அவர்களை அழைப்பதும் அப்படித்தான். லோகுவை அம்மா என்றழைப்பவன், சண்முகத்தை சண்முகப்பா என்பான். தம்பியைப் பெற்ற ஒருசில தினங்களிலேயே அவன் அம்மை போய்ச் சேர்ந்துவிட்டாள். ஏற்கனவே கொஞ்சம் அப்படி இப்படி இருந்த தம்பியின் அப்பா, சொத்தைப் பிரித்துத் தரச் சொல்லி சண்டை போட்டு வாங்கிக் கொண்டு யாரோ ஒரு பெண்ணுடன் எங்கோ காணாமலேயே போனார். அதற்குப் பிறகு தம்பியை வளர்த்தது, ஆச்சியும், லோகநாயகியும், சண்முகமும்தான்.

‘இப்பதாம்ல மதுரயத் தாண்டுதான்’. தம்பியின் வாட்ஸ் அப் மெஸேஜைப் பார்த்துவிட்டு காசி லேசாகச் சிரித்துக் கொண்டான். ஏற்கனவே டிரெயின் இரண்டுமணிநேரம் தாமதம் என்னும் அறிவிப்பைக் கேட்டிருந்தான், காசி. வீட்டுக்குப் போய்விட்டு வருவானேன் என்று ஸ்டேஷனிலேயே காத்திருந்தான். தம்பி திருநெல்வேலியை விட்டுப் போய் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. ஆச்சி இறந்ததற்குக் கூட வரவில்லை. அந்த சமயத்தில் தம்பி எந்த ஊரில் இருக்கிறான் என்றே தெரியவில்லை. காசிதான் கூடமாட நின்றுகொண்டு எல்லா வேலைகளையும் செய்தான். ‘இந்த வீட்ல நீ வேற, அவன் வேறயா? இந்தா பிடி’ என்று வெளித் தெப்பக்குளத்தில் ஈரவேட்டியுடன் நின்று கொண்டிருந்த சண்முகப் பெரியப்பா, காசியின் கைகளில் நெய்ப்பந்தத்தைக் கொடுத்தார். ‘முங்கி எந்திடே! திருநாறு விட்டுக்கோ. அப்புறமா அவன் கைல பந்தத்தக் குடுக்கலாம் சம்முவம்’ என்றார், டெய்லர் மகாலிங்கம் மாமா. ‘ஐயா அரசேன்னு வளத்த பய இல்லாம அவளக் கொண்டாந்து எரிக்கோம். அவ நெஞ்சு வேகும்ன்னா நெனைக்கெ? மூதிக்கு அப்படியாய்யா ஊரும், மனுசாளும் அத்துப் போச்சு?’ கருப்பந்துறையில் வைத்து பேச்சியாபிள்ளை தாத்தா சொல்லும் போது, காசிக்கு அழுகையுடன், தம்பியின் மேல் கோபமும் வந்தது. இப்போது அதெல்லாம் இல்லை. மனசு முழுக்க தம்பியைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை மட்டும்தான்.

ரயிலிலிருந்து இறங்கும் போது தம்பி வேறு ஆளாகத் தெரிந்தான். ஏற்றி வாரப்பட்ட தலைமுடி, பிடரி முழுக்க அடர்ந்துத் தவழ்ந்தது. தடித்த ஃபிரேமில் மூக்குக் கண்ணாடி. கையில் ஒரு பெட்டி, தோளில் ஒரு பை. அவ்வளவுதான். காசியைப் பார்த்தவுடன் லேசாக ஒரு குறுஞ்சிரிப்பு மட்டுமே தம்பியின் முகத்தில் காண முடிந்தது. கண்களில் நீர் துளிர்க்க காசி, தம்பியைக் கட்டிக் கொண்டான். ‘பையக் குடு’. வாங்கிக் கொண்டு வேகவேகமாக நடக்கத்தொடங்கினான். காசியின் வேகத்துக்கு தம்பியால் ஓடித்தான் வர வேண்டியிருந்தது. காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்யவும் காசி சொன்னான். ‘உன்னயப் பாத்தா கல்கத்தால இருந்து வாரவன் மாரியே தெரியல’.

‘ஏம்ல?’

‘பொறவு?என்னமோ சஷ்டிக்கு திருச்செந்தூர்க்கு போயிட்டு வாரவன் மாரி ஒரு பொட்டி, பையோட வந்து எறங்குதெ!’

பதிலேதும் சொல்லாமல் சிரித்த தம்பி, ரோட்டைப் பார்த்தபடி ‘தானா மூனா ரோடே மாறிட்டெல!’ என்றான்.

பதில் சொல்வதைத் தவிர்க்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட காசி மேற்கொண்டு ஏதும் கேட்காமல் வண்டியை ஓட்டினான். ‘நெல்லை லாட்ஜுல்லாம் மாறவே இல்ல’. மேம்பாலத்தில் போகும் போது தம்பி சொன்னான். ‘சென்ட்ரல்ல இப்பம்லாம் பளைய படம்தானா? இந்த கிரவுண்ட்ல தட்டான் புடிப்பமே! விளாமரம் நிக்கால? வாசல்ல சவ்வுமிட்டாய் வித்த ஆத்தால்லாம் இப்பம் செத்திருப்பாள்லா?’ சாஃப்டர் ஸ்கூலைத் தாண்டும் போது வரிசையாகக் கேட்டுக் கொண்டு வந்தான் தம்பி. பதிலேதுமே காசி சொல்லவில்லையென்றாலும், அதற்காகக் காத்திருக்காமல் அடுத்தடுத்த கேள்விகளுக்குத் தாவிக் கொண்டிருந்தான், தம்பி. ‘நல்ல வேளடே. ஆர்ச்ச விட்டு வச்சிருக்கிய. எங்க ரோட்ட அகலப்படுத்த இடிச்சுத் தள்ளியிருப்பேளோன்னு நெனச்சேன்’.
திருநெல்வேலி டவுணின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஆர்ச்சைக் கடக்கும் போது, தம்பியின் முகத்தில் அப்படி ஒரு நிறைவு. அதற்குப் பிறகு தெற்குப்புதுத் தெரு வரும் வரையிலும் தம்பி ஏதும் பேசவுமில்லை. கேட்கவுமில்லை.

வாசல்கதவு திறந்தே கிடந்தது. தம்பியைப் பார்த்தறியாத நாட்டுநாய் ஒன்று கட்டில் கிடந்தது. தம்பியைப் பார்த்ததும் கழுத்துச் சங்கிலி இறுக, வாஞ்சையுடன் வாலாட்டிச் சிரித்து வரவேற்றது. அதனருகில் நின்று அதன் தலையை சில நொடிகள் தடவிக் கொடுத்தான் தம்பி. கையில் பையுடன் நின்று கொண்டிருந்த காசி மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

‘மூதிக்கு இன்னும் நாய்க்கோட்டி போகல’.

பட்டுப்பாவாடை அணிந்த ஒரு சின்னப்பெண் வாசலுக்கு ஓடி வந்தாள். தம்பியைப் பார்த்தவுடன் ஒரு முழி முழித்து மீண்டும் வீட்டுக்குள் ஓட எத்தனித்தவளைத் தடுத்து நிறுத்தினான், காசி.

‘ஏட்டி! இதான் தம்பி மாமா’.

கண்களை அகல விரித்துப் பார்த்த அந்தப் பெண், ‘ஆச்சி! தம்பி மாமா வந்துட்டாங்க’ என்றபடி உள்ளே ஓடினாள்.

புருவம் தூக்கிய தம்பியிடம் ‘சுந்தரி மக’ என்றான், காசி. ஒரு கணம் தம்பியின் கண்களில் சின்னதாக ஏதோ ஒன்று தோன்றி மறைந்தது. இதற்குள் சண்முகப் பெரியப்பாவின் மகள் சுந்தரி வாசலுக்கு வந்தாள்.

‘வாண்ணே! சும்மா இருக்கியா?’

கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். சுந்தரியின் கைகள் குளிர்ச்சியாக இருந்தது.

‘ஏம்ணே ஒன் கை சுடுது?’ என்றாள், சுந்தரி.

பின்னால் தொடர்ந்த காசி, ‘ஒங்கண்ணனுக்குக் கை மட்டுமா சுடும்?’ என்றான்.

தம்பியிடம் அதற்கும் பதிலில்லை.

‘அப்பா பொறவாசல்ல இருக்கா’ என்றாள், சுந்தரி.

பின்வாசலில் மருதாணி மரத்துக்கருகே நாற்காலி போட்டு அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், சண்முகப்பா. ‘எப்பா! தம்பியண்ணன்’ என்ற சுந்தரியின் குரல் கேட்டு பேப்பரை விலக்கிய சண்முகப்பாவின் தொடைகளைத் தொட்டபடி அவர் காலருகில் அமர்ந்தான், தம்பி. இருவர் தொண்டையும் சட்டென்று வறண்டது. பொங்கிய கண்ணீரை மறைக்கும் விதமாக இருமியபடி, ‘ஏட்டி! தொண்ட பொகயுதுல்லா. தண்ணி கேட்டாத்தான் கொண்டுட்டு வருவியோ?’ என்று சுந்தரியைப் பார்த்து ஏசினார். ‘நீ சாப்பிட்டியா?’. எதிரே படிக்கட்டில் உட்கார்ந்து கொண்ட காசியைப் பார்த்துக் கேட்டார். இதற்குள் தன் ஆச்சி லோகநாயகியின் கைகளைப் பிடித்து இழுத்தபடி பின்வாசலுக்கு வந்து சேர்ந்தாள், சுந்தரியின் மகள்.

வந்ததும், வராததுமாக தன் கணவரின் கால்மாட்டில் உட்கார்ந்திருந்த தம்பியின் அருகில் வந்து குனிந்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் லோகநாயகி.

‘வளி தெரிஞ்சுட்டோல ஒனக்கு? அம்ம இருக்காளா, செத்துட்டாளான்னு பாக்க வந்தியோ? எறப்பாளி நாயே. என் சீவனப் புடிச்சுக்கிட்டாக்கும் இத்தன வருசம் இருந்தேன்’.

உடல் நடுங்க தம்பியின் அருகில் தரையில் கையை ஊன்றி உட்கார்ந்தவள், ‘என்னப் பெத்த ஐயா’ என்று தம்பியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறலானாள். இனி மறைக்க ஏதுமில்லை என்பது போல் சண்முகப்பாவும் பெருங்குரல் எடுத்து அழுதார். சொம்பில் தண்ணீர் கொண்டு வந்த சுந்தரியைத் தடுத்தான், காசி. ‘ஒங்கப்பாக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு தண்ணி தவிக்காது’.

royal talkies

ooOoo

மறுநாள் காலை தூங்கி தம்பி எழுந்திருக்கும் போது நன்றாக விடிந்திருந்தது. மச்சு ரூம் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது தட்டட்டியில் லோகம்மை கூழ்வற்றல் ஊற்றிக் கொண்டிருந்தாள். உடன் சுந்தரியும், அவள் மகளும்.

‘நீ இன்னும் இத விடலயா?’

ஜன்னலுக்குள்ளிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த லோகம்மை ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். காலையிலேயே குளித்திருந்த முகத்தில் துளிர்த்திருந்த புது வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.

‘ஏன் கேக்க மாட்டே? நாங்கல்லாம் கேட்டா சலிச்சுக்கிடுவா. ஒவ்வொரு மட்டம் ஊருக்குப் போகும்போதும் மணி ஐயர் கடைலதான் வாங்கிக் குடுத்தனுப்புவா. இப்பம் மகன் வந்திருக்காம்லா! அதான் இந்தத் தாளிப்பு’.

சுந்தரியின் செல்லக் கோபத்தை சிரிப்பால் கடந்து சென்றபடி தன் வேலையில் மும்முரமாக இருந்தாள், லோகம்மை. இதற்குள் கீழிருந்து சண்முகப்பாவின் குரல் கேட்டது.

‘ஏட்டி ஒங்கண்ணன் வாரானா இல்லயா? அவனுக்காகத்தான் இன்னும் ரெண்டாம் காப்பி குடிக்காம இருக்கேன்’.

சண்முகப்பாவின் தலைமுடி நரைத்ததைப் போல, லோகம்மையின் முகமும், உடலும் தளர்ந்ததைப் போல, திருநவேலியின் தோற்றத்திலும் சுருக்கங்களையும், மாற்றங்களையும் கண்டான், தம்பி. சிறுவயதில் சைக்கிளில் சுற்றிய பகுதிகளில் காசியுடன் நடந்தே சென்றான். நெல்லையப்பர் கோயில் வசந்த மண்டபத்து வாசலில் வீசும் காற்றை நின்று வாங்கிக் கொண்டான்.

‘இந்த காத்து மாறல. வாட கூட அப்படியேதான் அடிக்கி’.

பக்தியே இல்லாமல் கோயிலைச் சுற்றுகிறான் என்பது காசிக்குப் புரிந்தது. நடையில் அப்படி ஓர் ஆவேசம். சந்நிதிகளில் திருநீறு, குங்குமம் பிரசாதங்களை வாங்கிக் கொள்ளவில்லை. காந்திமதி யானையிடம் மட்டும் சிறிது நேரம் செலவழித்தான். கோயிலைவிட்டு வெளியே வந்த பிறகு சாந்தமானான். தேரடியைத் திரும்பிப் பார்க்கும் போது, காசி பதற்றமடைந்தான்.

‘ராயல் தியேட்டர் பக்கம் போக வேண்டாமா? அப்படியே ஆரெம்கேவி, லாலா சத்திரமுக்கு, தொண்டர் சன்னதில்லாம் போலாம்லா?’

‘ஏன்? தேரடிப்பக்கம் அவங்க யாரும் இருக்காங்களா? அதான் எல்லாரும் போயாச்சே! அப்புறம் என்ன? சும்மா ஒரு நடை நடந்துட்டு போவோம்.’

இப்படித்தான் தேரடிப் பக்கமே கிடையாகக் கிடந்த காலம் ஒன்று இருந்தது. சைக்கிளை எடுத்துக் கொண்டு காசியும், தம்பியும் வருவார்கள். ஜோதீஸ் காப்பிக்கடையிலிருந்துப் பார்த்தால் பவானியின் வீடு தெரியும்.

பாளையங்கோட்டையில் ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக இருக்கும் பவானியின் அப்பா, விடிந்து போனால், அடைந்துதான் வருவார். வீட்டுக்கு அருகில் இருந்ததாலோ என்னவோ அம்மாவும், மகளும் ராயல் தியேட்டரில்தான் சினிமா பார்ப்பார்கள். அநேகமாக கீழரதவீதி, வடக்குரதவீதி, தெப்பக்குளத்தெரு, சுவாமி சன்னதிகளில் வசிப்பவர்கள் வாராவாரம் ராயல் தியேட்டரில் சினிமா பார்ப்பது வழக்கம்.

’தில்லானா மோகனாம்பாள்’ பாக்காத படமாவே? அதான் சிவாஜிக்கு ஒரு மட்டம், பாலையாவுக்கு ஒரு மட்டம், நாகேசுக்கு ஒரு மட்டம், பத்மினிக்கு அஞ்சாறு மட்டம்னு வளச்சு வளச்சுப் பாத்தாச்சுல்லா! என்னமோ புதுப்படம் மாரி செகண்ட் ஷோக்குப் போவோமான்னுக் கேக்கேரு?’

‘வே! ராயல்ல போட்டிருக்கான். பாக்காம இருக்க முடியுமா? வீட்ல பாத்த மாரில்லா இருக்கும். சும்மா சளம்பாதீரும். நலந்தானான்னு நம்மள பாத்து கேக்கற மாரியேல்லா, புருவத்த வளச்சுப் பாடுவா. வாரும், போவோம்’. பட்டுப்பிள்ளை அண்ணாச்சி சொல்வார்.

மாலைநேரக் காட்சிக்கு பவானியும், அவள் தாயும் கிளம்பும்போது தம்பி படபடப்புடன் காத்திருப்பான். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் காசியை இழுத்துக் கொண்டு ராயல் தியேட்டருக்குச் செல்வான். மற்ற நேரங்களில் சோஃபா டிக்கெட்டில் படம் பார்ப்பவன், பவானி வந்தால் மட்டும் காசியை விட்டு பெஞ்ச் டிக்கெட்தான் எடுக்கச் சொல்லுவான். காரணம், பவானி தன் தாயுடன் பெஞ்ச் டிக்கெட்டில்தான் படம் பார்ப்பாள். ’அவ ஒருபக்கம் உக்காந்திருக்கோம். நாம எங்கயோ உக்காந்திருக்கோம். இதுல என்ன கெடைக்கோ, தெரியல. கேட்டா நீயும், அவளும் ஒண்ணா படம் பாத்ததா சொல்லுவே!’

இப்படி ஒன்றிரண்டு அல்ல. அநேகமாக எல்லா வார இறுதிகளிலும் ராயல் தியேட்டரில் பவானியுடன் படம் பார்ப்பான், தம்பி. இதுபோக தினமுமவள் டியூஷனுக்குக் கிளம்பும்வரைக்கும் காத்திருந்து அவளுடனேயே செல்வான். மீனாட்சிபுரத்தில் எஸ்.ஆர்.கே ஸார்வாளிடம்தான் பவானியும், தம்பியும், காசியும் மேத்ஸ் டியூஷன் படித்தார்கள். டியூஷன் தொடங்கும் முன், முடிந்த பின் இரண்டொரு வார்த்தைகள் தம்பியும், பவானியும் பேசிக் கொள்வார்கள்.

‘களுத்துல உத்திராச்சக் கொட்ட எதுக்கு? அத களட்டு. கூட படிக்கிற பிள்ளைள்லாம் அதச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கி’.

‘எங்காச்சி போட்டு விட்டது. களட்டுனா ரொம்ப வருத்தப்படுவா. அவட்ட வேணா சொல்லிட்டு சீக்கிரமே கெளட்டிருதென்’.

‘வேண்டாம்பா. என்னமாது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிரப்போது’.

ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகத்தான் செய்தது. அத்தனை புத்திசாலியான, படிப்பில் சிறந்து விளங்கிய பெண் ஏன் அப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தாள் என்பது யாருக்குமே புரியாமல் போனது. தச்சநல்லூர் கணேசன்தான் அந்தக் கேமராவைக் கொண்டு வந்தான்.

‘ஃபாரின் மக்கா. எங்க அத்தான்குள்ளது’.

இரண்டு ரோல்களை எடுத்துத் தள்ளினார்கள். தனியாக எடுத்துக் கொள்ள சம்மதிக்காத பவானி, குரூப் ஃபோட்டோவில் மட்டும் வந்து நின்று கொண்டாள். முன்வரிசையில் பெண்பிள்ளைகள் உட்கார்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் பையன்கள் நின்றபடி படம் எடுத்துக் கொண்டார்கள். சரியாக பவானிக்குப் பின்னால் தம்பி. பிரிண்ட் போட்டு காப்பி வாங்கிக் கொள்ள பவானியின் தாய் பணம் தர மறுத்தாள்.

‘டியூஷன் படிக்கப் போன எடத்துல என்னத்துக்குட்டி போட்டொவும், கீட்டொவும்? மாசாமாசம் பீஸுக்கே ஒங்கப்பா மூக்கால அளுதுக்கிட்டெ குடுக்காக’.

தம்பிதான் பவானிக்கும் சேர்த்து பிரிண்ட் போட்டு ஒரு காப்பியை அவள் கையில் கொடுத்தான். வற்புறுத்திதான் திணிக்க வேண்டியிருந்தது.

‘எங்கம்மை ஏசுவா.’

‘நீ என்னத்துக்குக் காமிக்கெங்கென்?’

இத்தனைக்கும் நோட்டுப்புத்தகத்தில் மறைத்துதான் வைத்திருந்தாள். அப்படியே வைத்திருந்தால் கூட ஒன்றும் பிரச்சனை ஆகியிருக்காது. ஃபோட்டோவில் தானும், தம்பியும் இருக்கும் பகுதியை மட்டும் கத்தரித்து, தனியாக வைத்திருந்தது, பவானியின் தாய் கண்களில் சிக்கியது. படிப்பறிவில்லாத, பழமையில் ஊறிய, இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தன் கணவனுக்கு பயந்த பவானியின் தாய் உக்கிரமாகிப் போனாள். ஆத்திரமும், கோபமுமாக வசவைத் தொடங்கியவளிடம் ஒருகட்டத்தில் பவானி எதிர்க்குரல் எழுப்ப, அவமானத்தில் அடிக்கத் தொடங்கி, பின் அழுகையும் சேர்ந்து கொண்டு, மனம் பிசகி, கையில் மண்ணெண்ணெய்கேனைத் தூக்கினாள்.

‘ஒங்கப்பன் வந்து என்னைக் கொல்றதுக்குள்ள நான் கொளுத்திக்கிட்டுப் போயிருதேன்’.

பாய்ந்துப் பிடுங்கிய பவானி தாயின் கால்களில் விழுந்து, ‘நீ பயப்படுத மாரி என்னமும் நடக்காதும்மா. என்னய நம்பு’ என்று அழ, ஓரளவு நிலைமை சமாதானமானது. காலையில் பால் ஊற்ற வருகிற கோவிந்தன் சொல்லித்தான் தம்பியின் வீட்டுக்கு விவரம் தெரிய வந்தது.

’கம்பவுண்டரு ராயல்ல செகண்ட் சோ முடிஞ்சு வந்திருக்காரு. உள்ள இருந்து பொகஞ்சிருக்கு. அதுக்குள்ள சாமிசன்னதி பட்டர்மாருங்க எல்லாரும் ஓடி வந்து கதவ ஒடச்சிருக்காங்க. ரெண்டு பேரும் கரிக்கட்டயாக் கெடந்திருக்காங்க. யாரு அம்மை, யாரு மகன்னே தெரியலயாம்’.

‘யாருடே அது?’ ஜோதீஸ் காபிக்கடை ஆனந்தம் மாமா கேட்டார். காசியுடன் வந்த தம்பி, அவரைப் பார்த்து லேசாகச் சிரித்தபடி, ‘என்ன மாமா? சும்மா இருக்கேளா?’ என்று கேட்கவும், ‘ஏ தம்பில்லா! எப்பிடி இருக்கே மாப்ளே’. வந்து அணைத்துக் கொண்டார். ‘எத்தன வருசம் ஆச்சு மாப்ளே ஒன்னப் பாத்து. காசி கூட முன்னமாரி வரமாட்டங்கான். காப்பி குடிக்கியா?’

தேரடிப் பக்கம் பவானி வீடு இருந்த இடத்தில் இப்போது வேறேதோ கடை ஒன்று நின்றது. சலனமேயில்லாமல் அந்தப் புதியக் கட்டடத்தைப் பார்த்தபடி சிறிதுநேரம் அமர்ந்திருந்தான், தம்பி.

ஆண்டிநாடார் கடையைத் தாண்டும் வரைக்கும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ராயல் தியேட்டர் பக்கம் நிமிர்ந்துப் பார்த்துக் குழம்பியவன், காசியிடம் ‘எல! ராயல் டாக்கீஸ் இப்பம் இல்லயா?’ என்று கேட்டான்.

தம்பி இப்படித்தான். தியேட்டர் என்று அவன் வாயில் வராது. டாக்கீஸ்தான். ‘இந்தக் காலத்துப்பிள்ளேளு மாரியா அவன் பேசுதான். எல்லாம் ஒன் வளப்பு’. சண்முகப்பா அவர் அம்மையைப் பார்த்து சொல்லுவார். ‘எல! நானாது டாக்கீஸுங்கென். எங்கம்மைல்லாம் கொட்டகைன்னுல்லா சொல்லுவா’. பதிலுக்கு ஆச்சி சொல்லுவாள்.

இரண்டொரு நாட்களில் தம்பி கல்கத்தாவுக்கேக் கிளம்புகிறான் என்கிற செய்தி வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

‘கல்யாணமும் பண்ணிக்கிடலங்கான். பளய மாரி இல்லன்னாலும் சின்ன யூனிட் போட்டு மில்லும் ஓடிக்கிட்டுதான இருக்கு! அத கவனிச்சுக்கிட்டு இங்கன இருக்கலாம்லா! அப்பிடியே ஒரு தாலியும் கட்ட வச்சிரலாம். நான் இன்னும் எத்தன நாளைக்கு இருக்கப் போறென்! நீயாது கொஞ்சம் சொல்லுடே காசி’.

சண்முகப்பாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே காசிக்குத் தெரியவில்லை. தம்பியிடம் அவன் இதைச் சொல்லாமல் இல்லை. ஆனால் அதற்கு அவன் கேட்கும் எதிர்க்கேள்விக்கான அர்த்தம் காசிக்குப் புரிந்தது. சண்முகப் பெரியப்பாவுக்கோ, லோகம்மைக்கோ அது புரிய வாய்ப்பில்லை. முகத்தில் உணர்ச்சியே இல்லாமல், அதே சமயம் சற்றே கலங்கிய கண்களுடன் துணிமணிகளை எடுத்துப் பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த தம்பி, காசியின் முகம் பார்க்காமல் கேட்டான்.

‘ராயல் டாக்கீஸ் இல்லாத ஊர்ல என்னால இருக்க முடியுமால?’

நன்றி- ஆனந்த விகடன்