நடைச்சித்திரம் . . .

90களின் துவக்கத்தில் சாலிகிராமம் அபுசாலி தெருவில் ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே வந்த கே.ஜே.யேசுதாஸின் ஒன்று விட்ட சகோதரர், வாத்தியாரைப் பார்த்து பதறி வணங்கி, ‘என்ன ஸார் இது? நீங்க நடந்து போறீங்க?’ என்றார். ‘ஏன்? நான் நடந்தா என்ன?’ என்றார், வாத்தியார். ‘வேணும்னா தம்பிய போகச் சொல்லலாமே! நீங்க போய் நடந்துக்கிட்டு?’ என்னைக் காண்பித்து சொன்னார். ‘எனக்காக நானும், அவனுக்காக அவனும் நடக்கறான்’. வாத்தியாரின் பதில் அவருக்கு திருப்தியளிக்கவில்லை என்பது அவரது முகபாவனையில் தெரிந்தது. ‘என்னவோ போங்க’ என்பது போல நகர்ந்து சென்றார். ‘வாடா போகலாம்’. சிரித்தபடி வாத்தியார் நடையைத் தொடர, நானும் அவரைத் தொடர்ந்தேன். சாலிகிராமத்துக்குள்ளேயே எங்கு செல்வதாக இருந்தாலும் வாத்தியார் நடந்துதான் செல்வார். அப்போதெல்லாம் அநேகமாக வாரத்தில் நான்கு நாட்கள் பாண்டி பஜார் நடைபாதைக் கடைகளையொட்டி வாத்தியாரும், நானும் நடந்து செல்வோம். சும்மா நடப்பதும் உண்டு. அது தவிர சின்னச் சின்ன ஆபரணங்கள், துணிமணிகள் உட்பட இன்னும் சில கலைப்பொருட்களை அங்குள்ள நடைபாதைக் கடைகளில்தான் வாத்தியார் தேர்ந்தெடுத்து வாங்குவார். அங்கும் எதிர்ப்படும் மனிதர்கள் கேட்கும் ‘என்ன ஸார் நடந்து வர்றீங்க?’ கேள்விகளைப் பொருட்படுத்தாமல் அடுத்த கடைக்குச் செல்வோம். ஒருமுறை அப்படி ஒரு நடைபாதைக் கடையில் பின்னணி பாடகி எஸ்.ஜானகியைக் கண்டோம். ஜானகி அம்மாவும், வாத்தியாரும் பரஸ்பரம் ‘என்ன நடந்து வர்றீங்க?’ என்று கேட்டுக் கொள்ளவில்லை. 

‘வாக்கிங்’ போவதற்காகப் பூங்காக்களையோ, கடற்கரையையோ நாடாமல் நாம் இருக்கும் பகுதியிலுள்ள தெருக்களிலேயே நடப்பது என்கிற முடிவை எடுக்க வைத்தவர், வாத்தியார்தான். முன்பெல்லாம் சாலிகிராமம் அருணாசலம் சாலையில் நடப்பதுண்டு. சூர்யா மருத்துமனைக்கு அருகிலுள்ள ‘திருநெல்வேலி ஹோட்டல்’ கதிர் கண்களில் சிக்கிக் கொள்வேன். ‘என்னண்ணே! ஆளையே காணோம்?’ கதிரின் தாயுள்ளம் கொண்ட வாஞ்சைக் குரல், சில நொடிகளில் வாழை இலையில் வைக்கப்பட்ட வடைகளின் முன் உட்கார வைத்துவிடும். கூடவே முறுகலான எண்ணெய் தோசையும் வந்து அமரும். ஒருகட்டத்துக்குப் பின் அந்தப் பக்கம் செல்வதைத் தவிர்த்து, நடேசன் நகர் பக்கம் நடையைத் திருப்பினேன். அங்கும் சாத்தான் காத்திருந்தது. அங்குள்ள ‘சுவாமிநாத் கபே’யின் உரிமையாளர் என்னவோ கும்பகோணத்துக்காரர்தான். ஆனால் அங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலோர் திருநவேலி ஜில்லாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் கல்லிடைக்குறிச்சி ஆச்சி ஒருத்தி இருக்கிறாள். என் நேரத்துக்கு  கடையை ஒட்டி வெளியே காபி போட்டுக் கொண்டிருக்கும் அவள் கண்களில் சிக்கிக் கொள்வேன். 

‘என்னய்யா? பாத்தும் பாக்காத மாரி போறே?’ 

‘இல்ல பெரிம்ம. ஒன்னப் பாத்துட்டுதானெ ரோட்ட க்ராஸ் பண்ணி வாரென்’.

பிள்ளேள்லாம் சும்ம இருக்கா? இப்போதைக்கு ஊருக்குப் போனியா? நான் போறதுக்கு ரெண்டு மாசம் செல்லும். கோயில் கொட வருதுல்லா’.

கல்லிடைக்குறிச்சிக்காரியின் வட்டார வழக்குப் பேச்சில் மயங்கி காபிக்கு முன், இட்லி மற்றும் பூரி கிழங்கு சாப்பிடுவேன். சுவாமிநாத் கபேயில் சாப்பிடும்போதெல்லாம் அண்ணாச்சி இளவரசுவிடம் மாட்டுவேன். 

‘யோவ்! நீ வாக்கிங் போற லட்சணத்த தயவு செஞ்சு வெளிய சொல்லி கில்லித் தொலச்சுராதே. ஒருத்தன் மதிக்க மாட்டான். ஏன் பூரியோட நிறுத்தறே? ஒரு ரவா சொல்லி சாப்பிடேன்’.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சுவாமிநாத் கபேக்கு எதிரே உள்ள உடற்பயிற்சி நிலையத்துக்கு தினமும் செல்வது இளவரசு அண்ணாச்சியின் வழக்கம். அவர் உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக தினமும் அந்த ஜிம்முக்குச் சென்று எல்லோருடனும் மனம் விட்டுப் பேசிவிட்டு, களைப்புடன் சுவாமிநாத் கபேக்கு வந்து சீனியில்லாத காபி குடித்துவிட்டு செல்வார். 

நடேசன் நகர் பக்கம் நடைப்பயிற்சி செல்வதும் சரிவராத காரணத்தால் மீண்டும் சில நாட்கள் அருணாசலம் சாலைப் பக்கம் தொடர்ந்தேன். இந்தமுறை மனக்குரங்கு திருநவேலி ஹோட்டல் கதிர் அழைக்காமலேயே உள்ளே இழுத்துச் செல்லத் துவங்கிவிட்டது. 

‘அப்புறம் கதிரு! என்ன ஒன்னய ஆளையே காங்கல?’

‘நான் இங்கனயேதானெண்ணெ கெடக்கென். நமக்கு எங்கெ போக்கெடம் சொல்லுங்க. இன்னொரு வட வைக்கட்டுமா?’

தனியாக அமர்ந்து ‘எங்கே தவறு நடக்கிறது?’ என்று யோசித்துப் பார்த்து ஹோட்டல்கள் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் நடக்க தீர்மானம் செய்து உடனடியாக செயல்படுத்தவும் தொடங்கினேன். சாலிகிராமம் காந்தி நகரைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டுக்கு நான்கைந்து வீடுகள் தள்ளி உள்ள ஒரு வீட்டு வாசல் கேட் அருகே போகிற வருகிற ஜனங்களை வேடிக்கை பார்க்கும் ‘கியூட்டி’ என்கிற லாப்ரடார் வகை நாயைத் தாண்டிச் செல்ல சில நிமிடங்கள் ஆகும். கியூட்டியிடமும், அவளை மகள் போல வளர்க்கும் மனிதரிடமும் நின்று பேசுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. சில நேரங்களில் கியூட்டியைப் பார்க்காமல் நடந்து போனால் சத்தம் போட்டு ‘கியூட்டி’ அழைக்கும். குரலில் ‘மாமா’ என்று கேட்கும். ‘இப்படி பாக்காம போகாதீங்க ஸார். அப்புறம் அவ அப்ஸெட் ஆயிடுவா’. கியூட்டியுடன் சில நிமிடங்கள் செலவழித்துவிட்டு அடுத்த தெருவுக்குள் நுழைந்தால் அங்கு ‘ரூனோ’ காத்திருப்பான். ‘ரூனோ’ பீகிள் வகையைச் சேர்ந்த பையன். ‘கியூட்டியை’யாவது அவள் வீட்டு வாசலில் நின்று கொஞ்சுவதோடு ஜோலி முடிந்துவிடும். ஆனால் ‘ரூனோ’வுக்கு என்னுடன் வெளியே ஒரு ரவுண்டு வர வேண்டும். அவன் வீட்டு ஆட்கள் என் தலையைப் பார்த்ததும் அவன் கழுத்துப் பட்டையில் ஒரு வாரைப் பொருத்தி என் கைகளில் கொடுத்து விடுவார்கள். அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று விட்டு, அவனை வீட்டில் விட்டுவிட்டு நான் வீடு திரும்பிவிடுவேன். இப்படியே போச்சுன்னா நாம நடந்த மாதிரிதான் என்று தோன்றவே வடபழனி குமரன் காலனியைத் தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பித்தேன். அங்குதான் திரைப்பட தயாரிப்பு நிர்வாக உதவியாளர்கள் சங்கம் இருக்கிறது. அதை கவனிக்காமல் அது வழியாக நடந்து சரியாக கோபாலிடம் மாட்டிக் கொண்டேன். 

‘ஸாஆஆஆர்! வண்டில ஏறுங்க’.

கிட்டத்தட்ட மிரட்டினான், கோபால்.

‘கோபால். சொன்னாப் புரிஞ்சுக்கோ. நான் கொஞ்சம் நடக்கணும்’.

‘நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன். வண்டில ஏறப்போறீங்களா, இல்லியா?’

கோபாலால் தெருகடத்தப்பட்டு என் வீட்டுக்குள் அடைக்கப்பட்டேன். குமரன் காலனியை ஒட்டியுள்ள தெருக்களில் நடக்கலாமே! அங்கு யார் நம்மை என்ன செய்து விட முடியும்? சுமுகமாக நடக்க முடிந்தது. சில தினங்கள்தான். அங்கு(ம்) ஒரு சினிமா பட்டறை இருப்பதை கவனிக்கத் தவறினேன். விளைவு, ‘அப்பத்தாவை ஆட்டயைப் போட்டுட்டாங்க’(ஆம். அதுதான் படத்தின் பெயர்) திரைப்படத்தின் இயக்குநர் ஸ்டீஃபனால் மறிக்கப்பட்டேன். வழக்கமான ‘என்ன ஸார் நடந்து போ . . .’. ஸ்டீஃபனை முடிக்க விடவில்லை. ‘ஆமா ஸ்டீஃபன். நான் நடந்து போயிக்கறேன். நீ பைக்கை ஆஃப் பண்ணு’. திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். அதற்கு அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள். குமரன் காலனியையும், அருணாசலம் சாலையையும் இணைக்கிற சாலைத் திருப்பத்தில் ‘பரணி டப்பிங் தியேட்டர் இன்சார்ஜ்’ தனகோடியின் கைனட்டிக் ஹோண்டா என் மீது மோதியது. வண்டியில் தனகோடி இருந்தார். தூயசினிமா பாஷையில் ‘ஜி’ என்றழைத்தபடி தனகோடி என் கைகளை எட்டிப் பிடித்தார். தனகோடி அணிகிற சட்டைத்துணியில் என் அளவுக்கு நான் ஆறு முழுக்கை சட்டையும் மூன்று கைக்குட்டைகளும் தைத்துக் கொள்ளலாம். அத்தனை அகலமான மனிதர். உள்ளமும் குறைச்சலில்லை. 

‘எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா ஜி, நீங்க நடந்து போறதப் பாக்கறதுக்கு’.

கண்கள் கலங்க முயன்றன. 

‘நீங்க கலங்கற அளவுக்கு ஒண்ணும் ஆகல தனகோடி. ‘பழமுதிர்சோலை’க்கு வந்தேன். பளம் வாங்கிட்டு அப்படியே நடந்து போகலாம்னு பிளான். நீங்க கெளம்புங்க’.

இன்னொரு நாள் இருட்டியபிறகு திருநவேலி ஹோட்டல் வரைக்கும் செல்லாமல் அருணாசலம் சாலையின் பாதிதூரம் வரைக்கும் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு காரில் என்னைக் கடந்து சென்ற கவிஞருமான ‘கவிஞர் சிநேகன்’ ஒரு நொடி காரின் வேகத்தைக் குறைத்து, பிறகு என்ன நினைத்தாரோ, நல்ல வேளையாக ஒரு கவிஞருக்கேயுரிய இலாவகத்துடன் காரை வேகமாகச் செலுத்தினார். ஒரு கவிஞர் போல ஒப்பனைக்கலைஞர் இருக்க வேண்டிய அவசியமில்லையே! அமரர் தமிழ்வாணனின் தொப்பியைப் போன்ற தொப்பி அணிபவர் திரைப்பட ஒப்பனைக் கலைஞர் ராமச்சந்திரன். கலைஞர் கருணாநிதி சாலை என்கிற கே கே சாலையிலுள்ள நாட்டு மருந்து கடை அருகே வரும் போது எதிரே தெரிந்த ராமச்சந்திரனின் தொப்பியை சரியாகப் பார்க்காமல் விட்டதன் விளைவு, ராமச்சந்திரன் என் கைகளில் பணத்தைத் திணிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றது. ‘ஆட்டோல போங்க ஸார். ஏன் ஸார் நடந்து போறீங்க? உங்கக்கிட்ட காசு இல்லங்கறது புரியுது. நான் தரேன் ஸார்’. கிட்டத்தட்ட ஓட்டமும், நடையுமாக ராமச்சந்திரனிடமிருந்துத் தப்பி வந்தேன். இனிமேல் பக்கத்து வீட்டுக்கே ஊபர்லதான் போக வேண்டியது வருமோ என்கிற கவலையை என்னைத் தெரிந்த சொற்ப மனிதர்கள் எனக்கு அளித்து வருகிறார்கள். சென்ற மாதத்தில் தசரதபுரம் போலீஸ் பூத் தாண்டி மீன் மார்க்கெட்டுக்கு முந்தைய வளைவில் உள்ள தெருவில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் ‘நாசே’ ராமச்சந்திரன் வீட்டுக்கு முன் நடந்து வரும்போது, முற்றிலும் முகம், கைகளை மறைத்து துணி சுற்றிய ஒரு பெண் தனது டூ வீலரால் என்னை மறித்து என்னைத் திடுக்கிட வைக்கும் விதமாக ‘ஸா . . . .ர்’ என்று அலறி வண்டியை அவசர அவசரமாக சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார். யாராக இருக்கும் என்று நான் யோசிப்பதற்குள் முகமூடியை அவிழ்த்தபடியே, ‘என்னைத் தெரியலியா ஸார்? நான் தான் பேச்சியம்மாள்’ என்றார். 

‘அடிப்பாவி, நீயா? நான் பயந்துல்லா போனேன். எங்கெ இந்தப்பக்கம்?’

‘பக்கத்து ஸ்டிரீட் டப்பிங் தியேட்டர்ல ஒரு டப்பிங். நம்ம விஜிமேடம்தான் இன்சார்ஜ். அத முடிச்சுட்டு வரேன்.’

பேச்சியம்மாளுக்கு சொந்த ஊர் சங்கரன்கோயில். ‘அசுரன்’ திரைப்படத்தில் இரண்டு, மூன்று கதாபாத்திரங்களுக்கு மாற்றி மாற்றிப் பேச வைத்திருந்தேன். 

பேச்சியம்மாள் வாயிலிருந்தும் அதே கேள்வி: ‘என்ன ஸார் நடந்து போறீங்க?’

‘யம்மா! என் வீடு பக்கத்துலதான் இருக்கு. முடி வெட்டிட்டு அப்படியே நடந்து வாரென்.’

‘அதுக்காக நீங்க நடந்து போகலாமா? என்னால பாத்துட்டுப் போக முடியல. நீங்க என் குருல்லா’.

‘ஏ பிள்ள! அன்னா தெரியுது பாரு ஒரு பில்டிங்கு. அதான் என் வீடு. நீ கெளம்பு’. சற்று கண்டிப்பான குரலில் சொல்லி பேச்சியம்மாளை அனுப்பி வைத்தேன்.

இதைப் படித்த யாரேனும் சாலிகிராமத்திலுள்ள காந்தி நகர் மற்றும் வடபழனி குமரன் காலனி தெருக்களில் சுட்டெரிக்கும் வெயிலில் கூட குரங்கு குல்லா அணிந்து, கழுத்தில் மஃப்ளர் சுற்றி, கருப்பு கூலிங் கிளாஸ் போட்டு, முகத்தை மறைக்கும் விதமாக கைக்குட்டை கட்டி ஓர் உருவம் நடந்து செல்வதைப் பார்த்தீர்களானால் ஏதோ வடநாட்டு சம்பல் கொள்ளைக்காரனென்றோ, பிள்ளை பிடிக்கிறவன் என்றோ நினைத்து ‘ஒன்று பூஜ்யம் பூஜ்யம்’ எண்ணை அழைத்து விடாதீர்கள்.

கல்பனா அக்காவும், கலாபவன் மணியும் . . .

kalpana-sathileelavathi435-crop

 

வழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு நான் வசனம் சொல்லிக் கொடுக்கும் போது ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா காமெராவை விட்டு இறங்கி அருகில் வருவதில்லை. கொஞ்சம் சுணங்கினால் ‘ரெடியா? நேரம் ஆகுது’ என்பார். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவும் சொல்வதில்லை.

‘சதிலீலாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை கல்பனாவுக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர் நான் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் முகத்தை உற்று நோக்குகிறார். பின் வேறெங்கோ பார்க்கிறார். சொல்லிக் கொடுத்த வசனத்தைத் திருப்பிச் சொல்லவே இல்லை. பொறுமை இழந்த வாத்தியார் காமெராவிலிருந்து இறங்கி அருகில் வந்து என் தோளில் கை போட்டபடி, ‘ம்ம்ம். இப்ப சொல்லு’ என்றார். சில நிமிடங்களில் முதல் ஷாட் எடுக்கப்பட்டது. காமெரா கோணம் மாறும் போது கல்பனா சற்றுத் தள்ளி அமர்ந்தபடி என்னைப் பார்த்து தன் உதவியாளரான ஒரு வயதான அம்மாளிடம் ஏதோ சொல்வதை கவனிக்க முடிந்தது.

லஞ்ச் பிரேக்கின் போது கல்பனாவின் உதவியாளர் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடி, ‘எய்யா! இப்பதான் விசாரிச்சேன். ஒனக்கும் திருநவேலியாம்லா? எனக்கு கொக்கிரகுளம்’ என்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததிலேயே என் உறவினர்கள் பலரையும் அந்த அம்மாளுக்குத் தெரிந்திருப்பதை அறிய முடிந்தது. அடுத்த நாளும் கல்பனா என்னிடம் நடந்து கொண்ட விதத்தில் மாற்றமில்லாததால் அவரது உதவியாளரிடம், ‘ஆச்சி! உங்க மேடம் ஏன் என்னை முறச்சு முறச்சுப் பாக்காங்க? நான் ரொம்ப மரியாதயாத்தானெ வசனம் சொல்லிக் குடுக்கென்! வேற ஒண்ணும் பேசலயே!’ என்றேன். அன்றைய லஞ்ச் பிரேக்கின் போது அந்த அம்மாள் என்னை எங்கள் யூனிட்டோடு சாப்பிட விடவில்லை. ‘எய்யா! அக்கா உன்னக் கூப்பிடுதா. வா’ என்று அழைத்துச் சென்றார்கள்.

அப்போதெல்லாம் கேரவன் வசதி வரவில்லை. ஷூட்டிங் ஹவுஸின் ஒரு தனியறையில் கல்பனா அமர்ந்திருந்தார். தயக்கத்துடன் உள்ளே சென்றேன். சேரிலிருந்து எழுந்து என் கைகளைப் பிடித்து, சிரித்தபடி ‘பயந்துட்டீங்களா தம்பி?’ என்றபடி தன்னருகில் இருந்த சேரில் அமர வைத்தார். ஒன்றும் புரியாமல் கூச்சத்துடன் அமர்ந்த என்னிடம் சரளமாகப் பேச ஆரம்பித்தார்.

‘எமோஷனலானவதான் நான். ஆனா இப்ப அழப்போறதில்ல. நேத்திக்கு உன்னை, நீன்னு சொல்லலாமில்ல? எப்படியும் நீ என்னை விட சின்னவன்தானே!’

‘ஐயோ தாராளமா சொல்லுங்க’.

‘நேத்திக்கு உன்னை ஃபர்ஸ்ட் டைம் பாத்த உடனே சட்டுன்னு டிஸ்டர்ப் ஆயிட்டேன். அதான் ஒருமாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தேன். ஒரே ஜாடைன்னு சொல்ல முடியாது. ஆனா, ஏனோ ஒன்னக் காணும்போது நந்து ஞாபகம்’.

நந்து கல்பனாவின் இளைய சகோதரன் என்பதும், தற்கொலை செய்து கொண்டார் என்பதையும் பின்னர் அறிந்தேன்.

‘இன்னைக்கு என் கூட சாப்பிடேன்’ என்றார்.

நான் தயங்கியபடி, ‘இல்லக்கா. நான் வெஜிட்டேரியன். எனக்காக அங்கெ தனியா சாப்பாடு எடுத்து வச்சிருப்பாங்க’ என்றேன். இயல்பாக நான் அக்கா என்றழைத்தது அவரை சந்தோஷப்படுத்தி விட்டது. எழுந்து ‘மோனே’ என்று கட்டியணைத்துக் கொண்டார். அந்த நிமிஷத்திலிருந்து நடிகை கல்பனா எனக்கு அக்கா ஆனார். மறுநாள் படப்பிடிப்பில் எந்த சிக்கலுமில்லை. வசனங்களை நான் சொல்லச் சொல்ல, உடனே ரெடி என்றார் கல்பனா அக்கா. வாத்தியார் என்னிடம் மெதுவான குரலில், ‘என்னடா மேஜிக் பண்ணினே?’என்றார். நான் அவரிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. மறுநாளிலிருந்து மதிய உணவு கல்பனா அக்காவுடன் தான். எனக்கான சைவ உணவையும் அவரது அறைக்கு வர வைத்திருந்தார். அவர் நடித்த மலையாளப் படங்களை நான் பார்த்திருப்பதில் அவருக்கு அத்தனை ஆச்சரியம்.

‘என்ன தம்பி சொல்றே? பஞ்சவடி பாலம் நீ பாத்திருக்கியா?’

‘பொக்குவெயிலும் பாத்திருக்கேன்கா’.

ஒரு தமிழ்நாட்டு இளைஞன் மலையாளத்தின் முக்கியமான திரைப்படங்கள் பற்றிப் பேசுவது கல்பனாக்காவுக்கு நம்பவே முடியாத மகிழ்ச்சியை அளித்தது. ‘பெருவண்ணப்புரத்தே விசேஷங்கள், ஒருக்கம்’ மற்றும் கல்பனாக்கா நடிக்காத ‘தாழ்வாரம், தாளவட்டம், கள்ளன் பவித்ரன், ஓரிடத்தொரு பயில்வான், மற்றொரு ஆள், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ போன்ற படங்களைப் பற்றியெல்லாம் அவரிடம் சிலாகித்துப் பேசியிருக்கிறேன்.

‘கேரளத்துல உன் வயசுல உள்ள ஒருத்தனும் இந்தப் படங்களையெல்லாம் பத்திப் பேசறத நான் கேட்டதில்ல, தம்பி’ என்பார்.

கல்பனாக்காவுக்கு சங்கீத ஞானம் இருந்தது. ஶ்ரீதேவி ஹவுஸில் படப்பிடிப்பு இடைவேளைகளில் சொக்கலிங்க பாகவதரை ஏதாவது ராகம் பாடச் சொல்லிக் கேட்பேன். அப்போதெல்லாம் கல்பனாக்காவும் அவரது அறையின் வாசலில் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருப்பார். அப்புறமாக என்னிடம் தனியே விசாரிப்பார்.

‘தம்பி! ஐயா பாடுனது நாட்டைதானே?’

‘அட! ராகம்லாம் தெரியுமாக்கா?’

‘டேய்! மிருதங்கமே வாசிப்பேன்டா, நான்!’

தான் குண்டாக இருப்பதனால்தான் தனக்கான பிரத்தியேக வேடங்கள் தேடி வருகின்றன என்பதை இயல்பாகப் புரிந்து வைத்திருந்த கல்பனாக்காவுக்கு தன் உடல்வாகு குறித்த சிறு கூச்சம் உண்டு. காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் சென்று கொண்டிருக்கும் யாரையாவது காண்பித்துக் கேட்பார். ‘தம்பி தம்பி! அந்த யெல்லோ ஸாரி லேடி என்னை விட குண்டுதானே?’

சரளமாக தமிழில் பேசக் கூடியவர்தான் என்றாலும் அவரது சில தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பில் சுத்தமான மலையாளம் கேட்கும். ‘சதிலீலாவதி’யில் ஓர் இடத்தில் ‘ஐயோ முருகா’ என்று அவர் சொல்ல வேண்டும். எத்தனை முறை முயன்றும் அவரால் ‘ஐயோ முர்யுகா’ என்றுதான் சொல்ல முடிந்தது. ஒவ்வொரு முறையும் கமல் அண்ணாச்சி திருத்தி சொல்லிக் கொடுத்தும் அவரால் ‘முர்யுகா’தான் சொல்ல முடிந்தது. பல முறை எடுக்கப் பட்ட அந்த ஷாட் முடிந்தவுடன் வேக வேகமாக என்னருகில் வந்து என் வயிற்றில் குத்தினார்.

‘என்னை ஏன்க்கா குத்தறீங்க? நான் சிரிக்கக் கூட இல்லியே!’

‘நின்ன ஞான் அறியுன்டா, கள்ளா! நீ மனசுக்குள்ள சிரிச்சே!’.

பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்தை நண்பர் ஜெயமோகனிடம் நினைவுகூர்ந்து சொல்லிச் சிரித்திருக்கிறார், கல்பனாக்கா.

ஒரு திரைப்படத்தில் இணைந்து பணிபுரியும் போது நெருக்கமாகப் பழகுபவர்கள், அந்தப் படம் முடிந்தவுடன் சுத்தமாக மறந்து விடுவார்கள். ஆனால் கல்பனா அக்காவுடனான பந்தம் அப்படி இல்லை என்பதை சதிலீலாவதி முடிந்த பிறகு அவரது திருமண அழைப்பிதழை எனக்கு அனுப்பி வைத்ததன் மூலம் உணர்த்தினார். வாத்தியார் பாலுமகேந்திரா, ‘டேய்! எனக்கு இன்விட்டேஷன் அனுப்பலடா, அந்தப் பொண்ணு!’ என்றார். ‘ஏ என்னப்பா! கூட நடிச்ச என்னைக் கூப்பிடல. ப்ரொடியூஸர் கமல் ஸாரக் கூப்பிடல. பாலு ஸார கூப்பிடல. உன்னை மட்டும் கூப்பிட்டிருக்காங்க! கண்டிப்பா போயிடு’ என்றார், ரமேஷ் அரவிந்த்.

ஆனால் கல்பனா அக்காவின் திருமண சமயத்தில் மகேஷ் பட் தயாரிப்பில் வாத்தியாரின் ‘அவுர் ஏக் பிரேம் கஹானி’ படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. படத்தின் தயாரிப்பு நிர்வாகம் உட்பட கூடுதல் பொறுப்புகள். என்னால் கல்பனா அக்காவின் திருமணத்துக்குச் செல்ல முடியவில்லை. அக்காவிடம் ஃபோனில் பேசுவதற்கும் தயங்கினேன். சில நாட்கள் கழித்து ஃபோன் பண்ணினேன். என்னிடம் பேச மறுத்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் ஆகி பேசத் துவங்கினார். ஆனாலும் கோபம் குறையவில்லை. ‘அத்தான் எப்படி இருக்காருக்கா? உங்களை நல்லா பாத்துக்கறாரா?’ என்றேன். கோபம் முற்றிலும் வடிந்தது. பிறகு அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொள்வதுண்டு. ஒவ்வொரு முறையும் அவரது திருமணத்துக்கு நான் செல்லாததைக் குத்திக் காண்பிப்பார். ‘என்னடா அக்கா? பெரிய அக்கா! அக்கா கல்யாணதுக்கு வராத துரோகிதானடா, நீ?’

அடுத்த ஓரிரு வருடங்களில் அம்மா காலமான செய்தி அறிந்து ஃபோன் பண்ணினார். பிரியப்பட்டவர்களைப் பார்க்கும் போது, அவர்களின் குரலைக் கேட்கும் போது மனதில் உள்ள சோகம் வெடித்துக் கிளம்புவது நிகழ்ந்தது. அக்காவின் குரலைக் கேட்டதும் உடைந்து அழ ஆரம்பித்து விட்டேன். ‘கரயண்டா மோனே! நினக்கு அம்மயா ஞான் உண்டுடா’ என்றார்.

என்னுடைய திருமண அழைப்பிதழை அனுப்பி வைத்திருந்தேன். அது அவருக்குக் கிடைத்ததா என்பதை அறிய முடியவில்லை. அந்த சமயம் தொலைபேசியில் அக்காவை அணுக இயலவில்லை. எனது திருமண வரவேற்பு பாலக்காட்டில் நடந்தது. அதற்காகவாவது அக்கா வரவேண்டும் என்று விரும்பினேன். தொடர்ந்து தொலைபேசியில் முயன்று கொண்டே இருந்தேன். திருமண வரவேற்பன்றுதான் பேச முடிந்தது. அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்பதைச் சொன்னார். ‘இன்னைக்கு ரிஸப்ஷனை வச்சுக்கிட்டு கூப்பிட்டா நான் எப்படிடா வர்றது?’ என்றார். நியாயமாகப் பட்டது.

அதன்பிறகு ஒன்றிரண்டு முறைதான் பேசியிருப்பேன். குரலில் அத்தனை உற்சாகமில்லை. ஒவ்வொரு முறையும் அவர் கணவரை விசாரிப்பேன். பேச்சை மாற்றுவார். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு படப்பிடிப்பு தளத்தில் பார்க்க நேர்ந்தது. அவர் என்னை கவனிக்கவில்லை. அப்போதுதான் அவருக்கு விவாகரத்து ஆகியிருந்தது. எனக்கு ஏனோ அருகில் போய் பேசத் தோன்றவில்லை. சென்ற வருடம்தான் அவரது கைபேசி எண்ணை ஒரு தயாரிப்பு நிர்வாகியிடம் வாங்கினேன். ஆனால் அழைக்கவில்லை. நான் யாரிடம் அவரது கைபேசி எண்ணை வாங்கினேனோ, அதே மனிதரிடம் அக்காவும் என் எண்ணைக் கேட்டு வாங்கியிருப்பதாக அறிந்தேன். ஆனால் அவரும் அழைக்கவில்லை.

சென்ற மாதம் ஹைதராபாத்திலிருந்து தெலுங்கு திரைப்பட வசனகர்த்தா அபூரி ரவி அழைத்தார்.

‘சுகா ஸார்! நான் எழுதியிருக்கிற ‘ஊப்பிரி’ படத்துல கல்பனா மேடம் நடிக்கிறாங்க. ஒங்களுக்கு அவங்க க்ளோஸ் இல்ல! சதிலீலாவதி பத்தி சொல்லியிருக்கீங்களே! ஞாபகம் இருக்கு. நாளைக்கு ஷூட்டிங் ஸ்பாட் போவேன். எதுவும் சொல்லாம ஃபோன் போட்டு அவங்கக்கிட்ட குடுக்கறேன். பேசுங்க. சர்பிரைஸா இருக்கட்டும்’ என்றார். மறுநாள் அக்கா அளித்த சர்பிரைஸ் நியூஸை அபூரி ரவிதான் என்னை அழைத்து கலங்கிய குரலில் சொன்னார். ‘மேடம் ரூம்லயே இறந்து கெடக்குறாங்க, ஸார்’.

 

உறவுகளைப் பேணி வளர்த்துக் கொள்ளத் தெரியாத என்னைப் போன்ற மடையனுக்கு கல்பனா அக்காவைப் போன்ற ஆத்மார்த்தமான ஒரு மனுஷியின் கடைசி நாட்கள் வரை பழகக் கொடுத்து வைக்கவில்லை. கல்பனா அக்காவின் மரணச் செய்தியைத் தொடர்ந்து ஒரு மாதத்திலேயே கலாபவன் மணி மறைந்த செய்தி. ஆஷா ஷரத் ஃபோன் பண்ணி அழுதுகொண்டே, ‘ஸார்! மணியேட்டன் மரிச்சு போயி’ என்று சொன்னபோது, மேற்கொண்டு எதுவும் பேசாமல் ‘அப்புறம் பேசறேன்மா’ என்று ஃபோனை வைத்துவிட்டேன். மணியின் மரணச் செய்தி பெரும் சோகத்தைக் கொடுத்ததென்றாலும், அத்தனை அதிர்ச்சி அளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘பாபநாசம்’ சமயத்திலேயே மணி நோய்வாய்ப்பட்டிருந்தார். அவர் காலாமாகிவிட்ட பிறகு இப்போது அதை சொல்லலாம்தான். அவர் தன் இறுதிக்காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தார் என்பதை ‘பாபநாசம்’ குழுவினர் அனைவருமே உணர்ந்திருந்தோம்.

முதல் சந்திப்பிலேயே என்னை தனியே அழைத்து கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘ஸார்! எனக்கு இந்த படம் ரொம்ப முக்கியமான படம். ரொம்ப கஷ்டப்பட்டுதான் தமிழ் பேசறேன். இதுல ஸ்லாங்க் பேசறதுல கான்ஸண்ட்டிரேட் பண்ணினா என்னால பெர்ஃபார்ம் பண்ண முடியாது. அதனால என்னை ஷூட்டிங் ஸ்பாட்ல விட்டிருங்க. டப்பிங்ல என்னை புழிஞ்சிருங்க. நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்’ என்றார்.

‘பாபநாசம்’ படப்பிடிப்பில் மணியை நான் தொந்தரவு செய்யவே இல்லை. ஆனால் அவர் வசனம் பேசுகிற விதத்தில் எனக்கு பயம் ஏற்பட்டது. ஏனென்றால் மணிக்கு வசனங்களை ப்ராம்ப்ட் பண்ண வேண்டும். அவரால் வசனங்களை மனப்பாடமாகப் பேசி நடிக்க இயலவில்லை. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இணை இயக்குநர் பஹ்ருதீன் சத்தமாக ஸ்கிரிப்டில் உள்ள வசனங்களைச் சொல்லச் சொல்ல, கேமராவுக்கு முன் ஃபிரேமுக்குள் இருக்கும் மணி, தன் காதில் வாங்கி வாங்கிச் சொல்லி நடித்துக் கொண்டிருந்தார். என்னால் இந்த முறையை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. தவிர கமலஹாசனுக்கு பிராம்ப்ட் செய்தால் ஆகவே ஆகாது. அவருக்கு மட்டுமல்ல. அவருடன் நடிக்கும் மற்றவருக்கு பிராம்ப்ட் செய்தாலும் அவர் கவனம் கலைவார். ஆனால் மணி விஷயத்தால் கலவரமான என்னை சமாதானப்படுத்தியவர், அவரே. ‘எனக்கும் இது பிடிக்காதுதான். ஆனா, பெரும்பாலும் இது மலையாள சினிமால உள்ள வழக்கம்தான். விடுங்க’ என்றார்.

ஆனாலும் என்னால் அதை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் தாய்மொழியல்லாத வேற்று மொழியை வெறுமனே காதில் வாங்கி, தப்பும் தவறுமாக உதட்டசைத்து சமாளித்தால், குரல் சேர்க்கையில் படாத பாடு பட வேண்டியது வரும். அந்த விஷயத்தில் பல முன் அனுபவங்கள் உண்டு என்பதால் இயக்குநர் ஜீத்துவிடம், ‘இந்தாள் டப்பிங்ல படுத்தப் போறான், ஜீத்து’ என்றேன். ‘அதப் பத்தி எனக்கென்ன? அது உன் பிராப்ளம்’ என்று என் தோளில் தட்டி சிரித்தார் ஜீத்து. ‘யோவ்! பல்லக் காமிக்காதய்யா’ என்றேன். ஜெயமோகன்தான் என் பயம் போக்கினார். ‘கவலையே படாதீங்க. மணிய எனக்கு நல்லாத் தெரியும். அவர வேல வாங்கத் தெரிஞ்சா போதும். எப்படின்னாலும் வளைஞ்சு குடுப்பார். ஒங்களால முடியும்’.

படப்பிடிப்பு இடைவேளைகளில் ஜெயமோகன், நான், இளவரசு, அருள்தாஸ் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கலாபவன் மணி வித விதமான குரல்களில் பேசி, நடித்து காண்பித்து எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். தேர்ந்த மிமிக்ரி கலைஞரான மணி, பல குரல்களில் பேசியதில் ஆச்சரியமில்லை. ஆனால் மிருகங்கள், பறவைகளின் உடல் மொழியையும் பயின்றிருந்தார். நாயின், மாட்டின், காக்கையின், குருவியின் உடல்மொழியை கண் முன் கொணர்ந்து அசரடித்தார். இடையிடையே மலையாளத்து பாலியல் கதைகளை ஒவ்வொரு கதாபாத்திரமாக நடித்து காண்பித்தார். கமலஹாசன் முன் அத்தனை பவ்யம் காட்டினார். அதற்குக் காரணமும் சொன்னார். ‘ஒங்களுக்கெல்லாம் முன்னாடியே அவர் எங்களுக்கு ஹீரோ. சின்ன வயசுலேருந்து நான் பாத்து பாத்து ரசிச்சு, பிரமிச்ச ஒருத்தர் இப்ப என் கூட நின்னு பேசறார். எனக்கு பேச்சே வரல, ஸார். வராது’.

பாபநாசம் திரைப்படத்தின் கிளைமாக்ஸுக்கு முந்தைய இன்வெஸ்ட்டிகேஷன் காட்சிகளில் கமலஹாசனைப் போட்டு அடித்து, உதைக்கும் காட்சிகளில் துவக்கத்தில் மணியால் அத்தனை சகஜமாக நடிக்க இயலவில்லை. ஒவ்வொரு ஷாட்டுக்கான ரிஹர்ஸலின் போதும் கமலஹாசன் காட்டிய முனைப்பைப் பார்த்து அவராக மெல்ல அந்தக் காட்சிக்குள் இயல்பாக வந்து சேர்ந்தார். அதற்குப் பிறகு உக்கிரமானார். காமிராவுக்கு முன்னால் மணியைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. கடைசி நாள் படப்பிடிப்பில் எல்லோருடனும் விடை பெறும் போது என்னருகில் வந்து அணைத்து, கை குலுக்கி, ‘டப்பிங்ல பாக்கலாம், ஸார்’ என்று கண்ணடித்து விடைபெற்றார். அப்போதே எனக்கு லேசாக சந்தேகம் வந்தது.

நான் சந்தேகித்த மாதிரியே ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டப்பிங் துவங்கி முடியும் கட்டம் வரும் வரைக்கும் மணி வரவில்லை. தமிழில் அவர் நடித்த சில படங்களுக்கு குரல் கொடுத்த கலைஞரை சிபாரிசு செய்தார். அவர் சொன்ன அந்தக் குரல் உட்பட இன்னும் பல குரல்களை சோதித்துப் பார்த்தோம். எதுவுமே மணியின் உடல்மொழிக்கு ஒத்து வரவில்லை. தவிர, வசனங்களை பிராம்ப்ட் செய்து நடித்திருந்ததால், பல இடங்களில் தெளிவில்லை. குறிப்பாக க்ளோஸ் அப் ஷாட்களில் மணியின் உதட்டசைவும், ஸ்கிரிப்டில் உள்ள வசனமும் பொருந்தவே இல்லை. அதற்காக நிறைய மெனக்கிட வேண்டியிருந்தது. அதற்குள் திருநெல்வேலி பாஷையை வேறு கொண்டு வர வேண்டும். உடலையும், உள்ளத்தையும் வருத்தி அதற்காக பல மணிநேரம் உழைத்து ஒருமாதிரியாக மணி பேச வேண்டிய பகுதிகளை தயார் செய்து வைத்திருந்தோம். ஆனாலும், மணி வருவதாக இல்லை. தயாரிப்பு தரப்பிலிருந்து எனக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். ‘எத்தனை நாள்தான் டப்பிங் பண்ணுவீங்க? இப்பவே ஒரு மாசம் தாண்டப் போகுது. டப்பிங்குக்கு போட்ட பட்ஜெட் எப்பவோ எகிறிடுச்சு. ப்ளீஸ் சீக்கிரம் ஒரு டெஸிஷனுக்கு வாங்க’ என்றார்கள். பல குரல்களை முயற்சி செய்து பார்த்து அலுத்து விட்டு, தீர்மானமாகச் சொன்னேன். ‘மணியை வரவழையுங்கள். அவர் வந்தால்தான் டப்பிங்’.

இன்று, நாளை என்று தள்ளிக் கொண்டே போய் ஒரு நாள் மணி வந்தார். சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். ‘வணக்கம் ஸார். நல்லா இருக்கீங்களா?’ சம்பிரதாயமாக வணக்கம் சொல்லி சிரித்து விட்டு டப்பிங் தியேட்டருக்குள் சென்றார். அவரது சிரிப்பில் கொஞ்சமும் சிநேகமில்லை என்பதைக் காண முடிந்தது. முதல் ரீலைப் போட்டவுடனேயே, தியேட்டருக்குள்ளிருந்து, ‘ஓகே டேக் போகலாம்’ என்றார். இஞ்சினியர் அறையிலிருந்த நான் பொத்தானை அழுத்தி, ‘ரீல் ஃபுல்லா ஒருவாட்டி பாத்திரலாமே, மணி?’ என்றேன். ‘இல்ல ஸார். டேக் போகலாம். ப்ளே பண்ணுங்க இஞ்சினியர் ஸார்’ என்றார். தியேட்டருக்குள் நின்ற பஹ்ருதீன் கண்ணாடித் திரை வழியாக என்னைப் பார்த்து சைகை மூலம், ‘அவர் பேசட்டும்’ என்றார். அமைதியாக இருந்தேன். நான் எதிர்பார்த்த மாதிரியே சரியாக வரவில்லை. திருத்தம் சொன்னேன். பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டார், மணி. அடுத்த டேக். பிழை. திருத்தம். அதற்கு அடுத்த டேக். இன்னும் பல டேக்குகள். மணி பொறுமையிழந்தார்.

‘ஸார். நான் இதுக்குத்தான் வர மாட்டேன்னு சொன்னேன். இப்படி நீங்க கரெக்ஷனுக்கு மேல கரெக்ஷன் சொல்லிக்கிட்டே இருந்தீங்கன்னா நான் ஹெட்ஃபோனைக் கழட்டி வச்சுட்டுப் போயிக்கிட்டே இருப்பேன்’.

நான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தது, உதவி இயக்குநர்களுக்கும், ஒலிப்பதிவு இஞ்சினியருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஐந்து நிமிடங்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மணியே மௌனம் கலைத்தார்.

‘இப்ப என்ன ஸார் செய்யலாம்?’

‘ஒரே ஒரு வாட்டி ரீல் ஃபுல்லா பாருங்க, மணி’. துவக்கத்தில் சொன்னதையே மீண்டும் அழுத்தமான குரலில் சொன்னேன். ‘ஓகே ஸார். போடுங்க. பாக்கலாம்’ என்றார். ரீல் முழுதும் ஓடத் துவங்கியது. மணி ஏற்று நடித்த பெருமாள் கதாபாத்திரம் பேசும் எல்லா ஷாட்களிலும் உதட்டசைவுக்கு ஏற்ப என் குரலில் பேசி பதிவு செய்து வைத்திருந்ததைக் கேட்டார், மணி. வாய்ஸ் ரூமிலிருந்து திரும்பி கண்ணாடித் திரை வழியாக இஞ்சினியர் அறையிலிருந்த என்னைப் பார்த்தார். வாய்ஸ் ரூமுக்குள் நுழைந்ததிலிருந்து மணி திரும்பவே இல்லை. ‘என்ன ஸார்! அநியாயத்துக்கு சிங்க்ல பேசியிருக்கீங்க. என் உருவத்துக்கு மட்டும் பொருந்தியிருந்தா நீங்க பேசியிருக்கிறதே பெர்ஃபெக்ட் ஸார்’ என்றார். இப்போதும் நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘இப்ப டேக் போகலாமா, மணி?’ என்றேன். ‘ரெடி, ஸார்’ என்றார்.

அன்று மதியமே மணியின் பகுதி முழுதும் டப் செய்து முடிக்கப்பட்டது. இன்னும் இரண்டு நாட்கள் இருக்க வேண்டியது வரும் என்ற எண்ணத்தில் சென்னை வந்திருந்த மணி உற்சாகமாகக் கிளம்பினார். கிளம்பும் போது எல்லோரும் அவருடன் புகைப்படம் எடுத்தனர். ‘வாங்க சுகா ஸார். நாம ஃபோட்டோ எடுக்க வேண்டாமா?’. என்னை இழுத்து அணைத்துக் கழுத்தைக் கட்டிக்கொண்டார். ‘இவ்வளவு நேரம் படுத்தினதுக்கு கழுத்தை நெரிக்கறீங்களோ, மணி!’ என்றேன். ‘ஐயோ! அன்பு ஸார். அன்பு’ என்றார். பிறகு ‘பாபநாசம்’ திரைப்படத்தின் வெற்றிக்காக பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி சொல்லும் விழாவுக்காக வந்திருந்த மணி, பின் பக்கமாக வந்து என்னைப் பிடித்துத் தூக்கினார். ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஸார்’ என்றார்.

DSC_3440

மணி இறந்த மறுநாள் நானும், ஜெயமோகனும் மணியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நான் அனுப்பிய குறுஞ்செய்தி மூலமாகவே தனக்கு மணியின் மறைவு பற்றித் தெரிய வந்ததாகச் சொன்னார். ‘சுகா! ஒங்கக்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லல. மணி ஒரு நாள் எனக்கு ஃபோன் பண்ணி ‘சுகா படம் எப்ப ஆரம்பிக்கிறார்? அதுல எனக்கு ஒரு வேஷம் வேணும்னார். சின்னப் படமாச்சேன்னேன். அதனால என்ன? கார்ச்செலவுக்கு மட்டும் குடுத்தா போதும். அடுத்த படத்துல பேரம் பேசி வாங்கிக்கிடறேன். சுகா படத்துல நான் உண்டுன்னாரு. ஒங்க எஸ் எம் எஸ் வந்தப்ப எனக்கு சட்டுன்னு நினைவுக்கு வந்தது இதுதான்’ என்றார், ஜெயமோகன்.

ஜெயமோகன் இதை என்னிடம் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.

post

முடிந்தது :-(

மின் தகன மேடையில் வாத்தியாரின் உடல் கிடத்தப்பட்டு, மார்பில் கற்பூரத்தைக் கொளுத்தி வைக்கவும் நா.முத்துக்குமாரிடம் கதறத் தொடங்கினேன்.

‘முத்து! ஸாருக்கு சுடும்டா. வேண்டாம்டா’.

அவரது டிரேட்மார்க் ஃபிடம் கேஸ்ட்ரோ தொப்பியுடன் சேர்த்து அவரது தலையைத் தொட்டு வணங்கிய அடுத்த நொடியில் சரேலென வாத்தியாரை உள்ளே இழுத்துக் கொண்டது, அந்த யந்திரம். கதறலும், கேவலுமாக அழுது மயங்கிச் சரிந்தேன். இயக்குனர் பாலாஜி சக்திவேல் தாங்கிக் கொண்டார். யார் யாரோ என்னைக் கடத்தி அங்கிருந்து நகர்த்தினர்.

‘நீங்களே இப்பிடி கண்ட்ரோல் இல்லாம அழுதீங்கன்னா என்னண்ணே அர்த்தம்?’

வெற்றி மாறன் கடிந்தான்.

‘நீங்க அழுது எங்க எல்லாரயும் அழ வைக்கிறீங்க. மொதல்ல இவர பத்திரமா வெளியெ கூட்டிட்டுப் போங்க.’

யாரிடமோ சத்தமாகச் சொன்னான், இயக்குனர் ராம்.

’வாங்க சுகா’. இயக்குனர் சசி கைப்பிடித்து வெளியே கொணர்ந்தார்.

‘சுகா! இந்தாங்க. கொஞ்சம் மோர் சாப்பிடுங்க’.

இயக்குனர் விக்ரமன் கொடுத்தார்.

‘!என்னண்ணே இது? சின்னப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு?’

தோளைப் பிடித்து அணைத்துச் சொல்லும் போதே அடக்க முடியாமல் அழுது என் மார்பில் சாய்ந்தான், இயக்குனர் சீனு ராமசாமி.

மாலையில் ராஜா ஸாரிடமிருந்து ஃபோன்.

‘என்னய்யா? பத்திரமா அனுப்பி வச்சுட்டீங்களா?’

பதில் சொல்லாமல் அழுதேன்.

புரிந்து கொண்டு மறுமுனையில் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,

‘சரி சரி. நாளைக்கு வா’ என்றார்.

நாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். இனி அவர்தானே ’வாத்தியார்’!