கயத்தாறு

கயத்தாற்றில் கீரைப் பாத்திகள் நிறைய உண்டு. அங்கு விளையும் கீரை, விற்பனைக்காக திருநெல்வேலிக்கு வந்து மூடை, மூடையாக குவியும். கயத்தாற்றிலிருந்து லாரியில் ஏற்றப்பட்ட கீரை மூடைகள் திருநெல்வேலி ஜங்ஷனில் கொண்டு வந்து இறக்கிப் போடப்படும். பின் அவற்றை தலைச்சுமையாகத் தூக்கிக் கொண்டு கீரைக்காரர்கள் என்று சொல்லப்படும் கீரை வியாபாரிகள் திருநெல்வேலி டவுணுக்கு வருவார்கள். முதல் நாள் இரவு வரும் மூடைகளிலுள்ள கீரை, மறுநாள் அதிகாலை தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு திருநெல்வேலித் தெருக்களில் விற்பனை செய்யப்படும்.

கயத்தாற்றுக் கீரைக்காரர்கள் சேசுமணி, ராஜேந்திரன், சேசுராஜ் போன்றவர்கள் டவுணில் ஆளாளுக்கு தெருக்களைப் பிரித்துக் கொண்டு கீரை விற்று வந்தார்கள். இவர்களில் ஒருவர் விற்கும் பகுதிக்கு மற்றவர் செல்வதில்லை. அப்படி ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் அவர்களுக்கிடையே இருந்தது. இம்மூவரும் இரவு கீரை மூடையுடன் தங்குமிடம், அம்மன் சன்னதியிலுள்ள எங்கள் வீடு. முப்பது பேர் படுக்கக்கூடிய விஸ்தாரத்துடன் உள்ள வாசல்வெளியில் இவர்கள் படுப்பதற்கு வசதியாகக் குளிர்ச்சிக்காக தரை முழுதும் தண்ணீர் ஊற்றி வைத்திருப்போம். அவர்கள் வந்து படுக்கும் நேரம் தரை நன்கு காய்ந்திருக்கும்.

இம்மூவரில் சேசுமணி வயதில் பெரியவர். உடம்பெல்லாம் முடியாக, குட்டையாக இருப்பார். கருத்த முகத்தில் மெலிதான பென்ஸில் மீசை உற்றுப் பார்த்தால்தான் தெரியும். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராஜேந்திரன் சேசுமணிக்கு இளையவர். ஆரம்பகால ரஜினிகாந்தின் ஹேர்ஸ்டைலுடைய ராஜேந்திரன், அவ்வப்போது தலையை சிலுப்பி தன் தலைமுடியை சரி செய்து கொள்வார். அவருக்கும் இளையவனான சேசுராஜ் எங்கள் தோழன். கழுத்தில் சிலுவை டாலரும், கையில் மேரிமாதா உருவம் பொறித்த பிளாஸ்டிக் மோதிரமும் அணிந்திருப்பான். ‘தும்’ என்று கீரை மூடைகளைக் கீழே போடும் சத்தம், இந்தக் கீரைக்காரர்களின் வருகையை எங்களுக்கு தெரிவிக்கும்.

ராஜேந்திரனும், சேசுராஜும் முன்னதாகவே வந்து விடுவார்கள். அகல கேரியர் வைத்த லோடு சைக்கிளில் கீரை மூடையை கட்டி ஓட்டி வருவர். சேசுமணி தாமதமாகவே வருவார். தலைச்சுமையாக மூடையைச் சுமந்து கொண்டு ஜங்க்ஷனிலிருந்து டவுண் வரை வியர்வையில் குளித்தபடி வந்து சேர்வார்.

‘என்னடே, இன்னைக்கு நேரமாயிட்டு?’ என்று கேட்கும் ஆச்சிக்கு, ‘ராலிக்காரன் கொஞ்சம் சொணக்கிட்டான்’ என்று பதில் சொல்லிக் கொண்டே துண்டால் உடம்பு, முகமெல்லாம் துடைத்தபடி தரையில் உட்காருவார் சேசுமணி. (அவர் ராலி என்று சொல்வது லாரியை). லாரிக்காரன் மீது சேசுமணி வீண்பழி போடுகிறார் என்பது ஆச்சிக்குத் தெரியும். கூடவே சேசுமணிக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்ற விஷயமும் தெரியும். ஆனால் கேட்க மாட்டாள். தன் பக்கத்திலேயே வைத்திருக்கும் செம்புத் தண்ணீரை எடுத்து கொடுப்பாள்.
கொஞ்ச நேரம் ஆச்சியிடம் ஊர் மற்றும் குடும்பக்கதைகள் பேசிக்கொண்டிருப்பார் சேசுமணி. ராஜேந்திரனும், சேசுராஜும் என்னையும், என் தம்பியையும் அவர்களுடன் சேர்த்துக் கொண்டு கபடியும், கண்ணைக்கட்டியும் விளையாடுவார்கள். ஆடிக் களைத்த பின் சாப்பிட உட்காருவார்கள். அவர்கள் கொண்டு வந்த சோற்றுக்கு எங்கள் வீட்டு அடுக்களையிலிருந்து அவர்கள் கேட்காமலேயே தொடுகறியும், குழம்பும் வரும். துணியில் சுற்றி வைத்திருக்கும் சோற்றுப் பொட்டலத்தை அவர்கள் பிரிக்கும் போது துணி கிழிவது போன்ற சத்தம் கேட்கும். ஆனால் கிழியாது. அருகில் கிடக்கும் கீரை மூடைகளிலிருந்து மண்ணும், இலையும் கலந்த ஒரு வாசனை பரவ, பல இரவுகளில் எங்கள் இரவுச் சாப்பாடு அவர்களுடனே கழிந்திருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை போக கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசையன்று கீரைக்காரர்கள் வருவதில்லை. நாள், கிழமைகளை அவற்றை கடைப்பிடிக்கும் திருநெல்வேலிக்காரர்களை விட கீரைக்காரர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்.

‘எம்மா, வார பொதன்கெளமதானெ அம்மாசி? கொஞ்சம் கேலண்டர் பாத்து சொல்லுங்களேன்.’

காலண்டரில் மிகச்சரியாக புதன் கிழமையன்று அமாவாசை என்று வட்டக்கறுப்புக்குறி போடப்பட்டிருக்கும். ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்குப் போகவேண்டுமென்பதால் அன்றைக்கு அவர்கள் விற்பனைக்கு வருவதில்லை.

ஆச்சி காலத்துக்குப் பிறகும் கீரைக்காரர்கள் எங்கள் வீட்டில் கொண்டு வந்து மூட்டைகளைப் போட்டுத் தங்கிக் கொண்டுதானிருந்தார்கள். தனது வருமானத்தில் சொற்பத் தொகையை சேசுமணி அவ்வப்போது அம்மாவிடம் கொடுத்து வருவார். வருடத்துக்கு ஒருமுறை வரும் மாதா கோயில் திருவிழாவையொட்டி ஜவுளி எடுப்பதற்காகவே இந்த சேமிப்பு. கயத்தாற்றிலிருந்து அவரது மனைவியும், மகனும் வருவார்கள். ஆரெம்கேவியில் போய் துணி எடுத்துவிட்டு அம்மாவிடம் கொண்டு வந்து காட்டிவிட்டே பஸ் ஏறுவார்கள். கரும்பச்சை, ரத்தச்சிவப்பு போன்ற வண்ணங்களிலேயே உடைகளைத் தேர்வு செய்வார்கள்.

‘நீங்களே சொல்லுங்கம்மா. போன திருளாக்குத்தானெ மாம்பளக்கலர் சட்ட எடுத்து குடுத்தோம். இந்த வருசமும் அதையே கேக்கான். இந்த திக் ரோஸ்கலர் அவனுக்கு வேண்டாமாம். இப்பல்லாம் பிள்ளைய இந்த மாதிரிதான் போடுது. மூதிக்கு புரிய மாட்டெங்கு’.
மூக்கின் பாதியை மறைத்து மூக்குத்தியணிந்திருக்கும் சேசுமணியின் மனைவி சொல்வார். சேசுமணிக்கு டிரவுசர், சட்டையணிந்தால் எப்படி இருப்பாரோ, அதே சாயலில் உள்ள பெரிய காதுகளையுடைய அவரது மகன் கலங்கிய கண்களுடன் அம்மா முன் உட்கார்ந்திருப்பான்.

‘பிஸ்கட் திங்கியாலெ?

குனிந்த தலை நிமிராமல் ‘வேண்டாம்’ என்ற தலையசைப்பு.

‘பாக்கெட் முளுசும் ஒனக்குத்தான்’.

அம்மாவிடமிருந்து பிஸ்கட் பாக்கெட்டை வாங்கும் போதே அவன் கண்ணீர் மறைந்திருக்கும். பிஸ்கட் தின்னும் போது சிரிப்பை அடக்க முயல்வான். மாதா கோயில் திருவிழாவின் போது யார் நடித்த படம் போடுவது என்பது குறித்த சண்டை ராஜேந்திரனுக்கும், சேசுராஜுக்கும் ஆரம்பமாகிவிடும். ரஜினி ரசிகரான ராஜேந்திரனுடன், சிவாஜி ரசிகனான சேசுராஜ் மல்லுக்கு நிற்பான்.

‘வருசா வருசம் எங்கள் தங்க ராஜாவே பாத்திக்கிட்டிருக்க முடியுமா? இந்த வருசம் யார் என்ன சொன்னாலும் சரி. நான் போட்ட சவால்தான்.’

ராஜேந்திரன் அடித்துச் சொல்வார். வயதில் சிறியவனான சேசுராஜால் ஒன்றும் செய்ய முடியாது.

‘எனக்கென்ன. ஜிவாஜி படம் பாக்குறதுக்கு எங்களுக்கு கொட்டாயியா இல்ல. ராயல் டாக்கீஸ்ல இப்பொ கூட சங்கிலி போட்டிருக்கான். போய் பாத்துக்கிடுவென். எக்கேடும் கெட்டு போங்க.’

சிவாஜியை ஜிவாஜி என்றே உச்சரிக்கும் சேசுராஜ் சும்மா உட்கார்ந்திருக்கும் போது அவரது படப்பாடல்களைப் பாடி மகிழ்வான். மகிழ்ச்சி அவனுக்கு மட்டுமே. காரணம், அவன் பாடும் வரிகள்.
உதாரணம்
‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்
வாளவைப்பான் என்று பறந்து சென்றாள்.’

சேசுமணிக்கு பெரிதாக சினிமாவில் ஆர்வமில்லை. அவரது ஆர்வமெல்லாம் கோயில் கொடைகளில்தான். அதுவும் இரவு விடியவிடிய நடைபெறும் கும்பக்குட (கரகாட்டம்) ஆட்டத்தில் அவருக்கு தீராத மோகம். திருநெல்வேலி டவுணில் எந்தப்பகுதியில் கோயில் கொடையென்றாலும் அன்று இரவு அங்கு சேசுமணியைப் பார்க்கலாம். அது ராஜேந்திரனோ, சேசுராஜோ கீரை விற்கும் பகுதியாக இருந்தாலும் கும்பக்குடத்துக்காக சேசுமணி ஒப்பந்தத்தை மீறுவார். ஒருநாள் தேரடிப்பக்கம் ஒரு கும்பக்குட ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. பலமாக விசிலடித்தபடி கும்பக்குடக்காரியுடன் மேல்துண்டை இறுக்கமாகத் தலையில் தலைப்பாகையாகக் கட்டியிருந்த ஒரு மனிதர் ஆடிக் கொண்டிருந்ததை தூரத்திலிருந்தே நானும், கணேசண்ணனும் பார்த்துவிட்டோம். கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் சென்று நின்று கொண்டோம்.. ஆட்டத்தின் நடுவே தற்செயலாக நாங்கள் நிற்பதை கவனித்துவிட்ட சேசுமணி, சிக்கென்று தன் இரண்டு கண்களையும் மூடிக் கொண்டார். ஆட்டம் மட்டும் நிற்கவேயில்லை.

அம்மா இருக்கும் வரை கீரைக்காரர்களுக்கும், எங்களுக்குமான உறவு தொடர்ந்து வந்தது. பிறகு மெல்ல குறைந்து பின் சுத்தமாக தொடர்பே இல்லாமல் போய்விட்டது. மதுரையிலிருந்து காரில் திருநெல்வேலி செல்லும் போது வலது பக்கத்தில் கம்பீரமாக நிற்கும் நடிகர் திலகம் சாயலிலுள்ள கட்டபொம்மன் சிலையைப் பார்க்கும் போது கயத்தாறு வந்து விட்டது தெரியவரும். புதிதாக திருநெல்வேலிக்கு வருபவர்கள் காரை நிறுத்தி கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் அவரது சிலையை அண்ணாந்து பார்த்தபடி சிறிது நேரம் அங்கு செலவிடுவார்கள். ஒருசிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வதுமுண்டு. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் மூலம் தாங்கள் அறிந்து வைத்திருக்கிற கட்டபொம்மனைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போவார்கள். அவர்களுக்கெல்லாம் கயத்தாறென்றால் நிச்சயமாகக் கட்டபொம்மன்தான் நினைவுக்கு வருவார். எங்களுக்கு கீரைக்காரர்கள்.

பாலாபிஷேகம்

சுவாமி நெல்லையப்பனும், காந்திமதியம்மையும் குளிப்பதற்கு தினமும் தாமிரபரணியிலிருந்துதான் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இரண்டு குடங்களுடன் மேளதாளம் முழங்க பட்டர்கள் இருவர் அம்மன் சன்னதி வழியாக ஆற்றுக்குச் செல்லும் போது அவர்களுடன் துணைக்கு நெல்லையப்பர் கோயில் யானையும் செல்வதை இன்றைக்கும் பார்க்கலாம். அம்மன் சன்னதியில் ஏதேனும் துஷ்டி விழுந்தால் மட்டும் அன்றைக்கு அம்மைக்கும், அப்பனுக்கும் குளியல் கிடையாது. மற்றபடி நித்தமும் தாமிரபரணிக் குளியல் உண்டு. இதுபோக சந்தனக் குளியல், தேன்குளியல், விபூதிக் குளியல் என்று ரகவாரியானப் பல குளியல்களுள் பாலாபிஷேகம் என்னும் பால்குளியலும் உண்டு.

சுத்தமாக விளக்கி சந்தன குங்குமமிட்ட பித்தளை பானையை இடுப்பில் சுமந்து கொண்டு சந்திப்பிள்ளையார் கோயிலில் தோப்புக்கரணம் போட்டுவிட்டு அதிகாலையில் கல்யாணி ஆச்சி கிளம்புவாள். முன் கொசுவம் வைத்த கைத்தறிப் புடவையும், நெற்றி நிறைய திருநீறும் அணிந்திருக்கும் கல்யாணி ஆச்சிக்கு பழம்பெரும் நடிகை சி.டி.ராஜகாந்தத்தின் சாயல். நான்கு ரதவீதியிலும், பின்னர் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதியிலும் வீடு வீடாகச் சென்று அவரவர் சக்திக்கேற்ப தரும் பாலை தன் பானையில் ஊற்றிக் கொள்வாள். தாமிரபரணியிலிருந்து தண்ணீர் வரும் வரை நெல்லையப்பர் காத்திருக்கிறாரோ இல்லையோ, கல்யாணி ஆச்சி கொண்டு வரும் பல வீட்டுப் பாலுக்குக் கண்டிப்பாகக் காத்திருப்பார்.

காலையில் அபிஷேகம் முடிந்து தீபாராதனையும் காட்டிய பிறகு காலிப் பானையுடன் எங்கள் வீட்டுக்கு வரும் கல்யாணி ஆச்சி, பானையை கழுவி ஓரமாகக் காய வைத்து விட்டு அம்மாவின் கையால் இட்லியோ, தோசையோ சாப்பிட்டுவிட்டு எங்கள் ஆச்சியின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்வாள். கல்யாணி ஆச்சி எங்கள் ஆச்சிக்கு தங்கை முறை. நெல்லையப்பனுக்குச் செய்ய வேண்டிய கடமை முடிந்த பின் தன் அக்காவுடன் பொழுதைக் கழிப்பதுதான் அவள் வேலை. குடும்ப விவகாரங்கள், பொது விஷயங்கள் என அக்காளும், தங்கையும் அலசி ஆராய்வார்கள். வயதில் தன்னை விட சிறியவளாக இருந்தாலும் தங்கை சொல்லும் யோசனைகளுக்கு பெரும்பாலும் எங்கள் ஆச்சி மறுப்பு சொல்வதில்லை.

கல்யாணி ஆச்சி ரொம்பவும் பாஸிட்டிவான பெண்மணி. எதையும், யாரையும் நல்ல கண்ணுடன்தான் பார்ப்பாள். தன் பிள்ளைகள் பற்றி ஆச்சி என்றைக்காவது புலம்புவாள்.

‘ஏ கல்யாணி, நேத்து இந்த நடுவுல உள்ள பய ரொம்ப பேசிட்டான் கேட்டியா? மனசுக்கு ரொம்ப வேதையா போயிட்டு. . .’

பொறுக்க முடியாமல் கலங்கிய கண்களுடன் சொல்வாள் ஆச்சி.

‘சந்தோஷப்படுக்கா. கஷ்டப்பட்டு வளத்து படிக்கவச்சதுக்கு, எவ்வளவு அளகா நம்ம பிள்ளைய நம்மளையே ஏசுது. அத ரசிப்பியா . . . அத விட்டுட்டு . . . . குடுத்துல்லா வச்சிருக்கணும்.’

நிஜமாகவே இதை கல்யாணி ஆச்சி சொல்லும் தொனியில் எப்பேர்ப்பட்ட வருத்தமும் பறந்து போய்விடும். இத்தனைக்கும் கல்யாணி ஆச்சி ரொம்பவே கெடுபிடியானவள். காலை ஆட்டியபடி உட்கார்ந்திருந்தால் ‘எய்யா, காலாட்டினா வாலாட்டி தங்காது’ என்பாள். விசிலடிப்பதையும் அனுமதிப்பதில்லை. ‘சீட்டியடித்தால் வீட்டுக்காகாது’ என்று பயமுறுத்துவாள். திருநீறு இல்லாத நெற்றியை அனுமதிப்பதே இல்லை. ‘நீரில்லா நெத்தி பாள்லா’ என்பாள்.

கண்ணில் படுபவரிடமெல்லாம் குசலம் விசாரிக்கும் பண்பு அவளிடம் இருந்தது. ‘எய்யா, ஒன்னைய இப்பொல்லாம் ஆளையே காணுமே! அசலூர் போயிருந்தியோ! ஒன் தம்பியப் பாக்கும் போதெல்லாம் கேக்கணும் கேக்கணும்னு நெனைப்பேன்’. வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் உண்மையாகவே கல்யாணியின் ஆச்சியின் விசாரிப்பில் அன்பு தெரியும். அநேகமாக திருநெல்வேலியில் எல்லோரையும் கல்யாணி ஆச்சிக்கும், எல்லோருக்கும் அவளையும் தெரிந்திருந்தது.

‘எத்தை, நீங்க மட்டும் எலக்ஷன்ல நின்னா அன்னபோஸ்ட்ல ஜெயிச்சுருவியெ’. அம்மா கேலியாகச் சொல்வாள்.

‘நின்னுட்டா போச்சு. யார் போட்டாலும் மாமியாளுக்கு நீ போடுவியாக்கும்?’.

அடக்க முடியாமல் சிரித்தபடி பதில் சொல்வாள் ஆச்சி.

அந்தக் காலத்திலேயே ரயிலில் காசி சென்று வந்தவள் கல்யாணி ஆச்சி. அந்த பிரயாணத்தை எத்தனை முறை கேட்டாலும் புதிதாகச் சொல்வது போல சலிக்காமல் சொல்வாள். யாரையுமே நெருக்கமாகப் பழகுபவர் போலவேதான் ஆச்சியால் சொல்ல முடியும். ஒருமுறை சொன்னாள்.

‘சாவடிப் பிள்ளை அண்ணாச்சி வீட்டுக்குத்தான் அவாள் வந்திருந்தா. ஆனா நான் அவாள அங்கெ வச்சு பாக்கல. நம்ம மார்க்கெட்ல வச்சுத்தான் பாத்தேன். பக்கத்துல போயி கும்பிட்டேன். பச்சப் புள்ள மாதிரி சிரிச்சுக்கிட்டெ அவாளும் பதிலுக்கு கும்பிட்டா’.

‘அவாள்’ என்பது திருநெல்வேலியில் பிரியமானவர்களை மரியாதையுடன் விளிக்கும் சொல். கல்யாணி ஆச்சி ‘அவாள்’ என்று சொன்னது மஹாத்மா காந்தியை.

கல்யாணி ஆச்சியின் கணவர் காலமான பிறகு தனியாக வசித்து வந்தாள். அருணகிரி பெரியப்பா என்று நாங்கள் அழைக்கும் ஆச்சியின் மகன் சங்கரன்கோயில் சங்கரநயினார் – கோமதியம்பாள் கோயிலில் அலுவலராக பணி புரிந்து வந்தார். எப்போதும் சடை விழுந்த முடியுடன் காட்சியளிக்கும் அவர், தூக்கிய முன்பல்லுடன், ‘எல அய்யா, சும்மா இருக்கியா’ என்று அருகில் வந்து கேட்கும் போதெல்லாம் சிறுவனான நான் பயந்து அழுதிருக்கிறேன். ‘பெரியப்பாமாரு அப்பப்போ வந்துபோயி இருந்தாதானே பிள்ளைகளுக்கு அடையாளம் தெரியும். நீ கோமதியம்மையே கெதின்னு கெடக்கே. காந்திமதியம்மையையும் மனுஷின்னு நெனச்சு வரணும்லா’. அதிகம் தன்னை வந்துப் பார்க்காத மகனை கடவுள் பெயரால் சாந்தமாகச் சொல்லிக் காட்டுவாள் ஆச்சி.

கல்யாணி ஆச்சியின் வீடு காந்தி சதுக்கத்துக்கு அருகில் இருந்தது. சிவாஜி கணேசனைப் பார்ப்பதற்காக கல்யாணி ஆச்சியின் வீட்டுக்கு அம்மாவுடன் ஒருமுறை போயிருந்தேன். சந்திப் பிள்ளையார் முக்கில்தான் மேடை போட்டிருந்தார்கள். சின்னஞ்சிறு வீட்டில் இருந்த கல்யாணி ஆச்சி ஓடிப் போய் வடையும், கலரும் வாங்கி வந்தாள். காலையிலிருந்தே சிவாஜிக்காகக் காத்திருந்தோம். மதியத்துக்கு மேல்தான் வந்தார். ‘பிள்ளைகளே’ என்று துவக்கி இரண்டே நிமிடங்கள் பேசிவிட்டு கைகாட்டிவிட்டு இறங்கிவிட்டார். சிவாஜி கணேசனை கிட்டத்தில் பார்த்த சந்தோஷம் எங்களுக்கு இருந்தாலும், கல்யாணி ஆச்சிக்கு ஏனோ ஏமாற்றமாகவே இருந்தது. ‘இதா கணேசன், இதா கணேசன்?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். ஆச்சிக்குத் தெரிந்ததெல்லாம் ‘திருவிளையாடல்’ மற்றும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ சிவாஜி. கழுத்தில் பாம்பும், தலையில் கங்கையும் கொண்ட சிவாஜி இல்லையென்றாலும், குறைந்த பட்சம் கிரீடமும், வாளும் இல்லாத சிவாஜியை அவளால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. ‘என்னளா, வட்டக் களுத்து ஜிப்பா போட்ட ஆள போயி கணேசன்னு சொல்லுதே?’. நம்ப முடியாமல் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு பெரியர்கள் காலில் விழுந்து வணங்கி திருநீறு பூசிக் கொள்ள சின்னப் பிள்ளைகள் நாங்கள் அலையாய் அலைவோம். யாரேனும் பெரியவர்கள் வாசலில் வருவது தெரிந்தாலே, பூஜையறைக்கு ஓடிப்போய் திறுநீற்று மரவையை எடுத்து வருவோம். ஆசீர்வாதத்துக்குப் பின் அவர்கள் கொடுக்கும் பணத்துக்குத்தான் இத்தனை மரியாதை. கல்யாணி ஆச்சியிடமும் திருநீறு பூசுவோம். ‘தீர்க்காயுசா இருக்கணும்’ என்று சொல்லி ஆசீர்வதித்து திருநீறு பூசுவாள். வறுமையில் உள்ள கல்யாணி ஆச்சிக்கு நாங்கள்தான் பணம் கொடுப்போம்.

‘இந்த ஆச்சி மட்டும் திருநாறு பூசி துட்டு வாங்குதாங்க. குடுக்கவே மாட்டக்காங்க’.

விவரம் அறியாத குழந்தைகள் யாராவது சொன்னால் அதற்கும் ஆச்சி சந்தோஷமாகச் சிரித்தபடிதான் பதில் சொல்லுவாள்.

‘நாளைக்கு ஒன் பிள்ளைகளுக்கு நீ சொல்லலாம்லா, இப்படி ஒரு ஆச்சிட்ட நாங்க திருநாறு பூசி துட்டு குடுப்போம்னு’.

கல்யாணி ஆச்சியுடன் தெப்பம் பார்க்க போயிருக்கிறேன். அப்போதெல்லாம் தெப்பத் திருவிழா நடைபெறும் போது வெளித்தெப்பத்தில் ஒரு ஆச்சி கையில் விளக்கொன்றை ஏந்தியபடி நீந்தி வருவாள். (காவிச் சேலை அணிந்து தெப்பத்தைச் சுற்றிச் சுற்றி நீந்தி வரும் அவளைப் பற்றி எழுத்தாளர் வண்ணதாசன் எழுதியுள்ளார்.) தெப்பத்திலிருக்கும் சாமியுடன் சேர்த்து நீந்தும் ஆச்சியையும் கும்பிடுவாள் கல்யாணி ஆச்சி. ‘இந்த அக்கால்லாம் நிச்சயம் சொர்க்கத்துக்குத்தான் போவா.’ என்பாள்.

வீடு வீடாகச் சென்று பால் சேகரித்து தினமும் நெல்லையப்பருக்கு அபிஷேகம் பண்ணும் கல்யாணி ஆச்சியின் செயல் திருநெல்வேலிக்காரர்களுக்கு ஆச்சரியமாகவே இல்லை. பார்த்து பார்த்து அவர்களுக்கு பழகிவிட்டது. கல்யாணி ஆச்சியுமே அதை ஒரு பெரிய சேவையாகவோ, செயலாகவோ கருதவில்லை. உள்ளார்ந்த பக்தியுடன் ஒரு கடமை போலவேதான் செய்து வந்தாள். ஜூனியர் விகடனில் பால் குடத்துடன் இருக்கும் கல்யாணி ஆச்சியின் புகைப்படத்தை பிரசுரித்து செய்தியாக வெளியிட்டபோது கூட அவள் அதை பெருமையாகக் கருதவில்லை. எங்களுக்குத்தான் சந்தோஷமாக இருந்தது.

கல்யாணி ஆச்சி இப்போது இல்லை. இன்றைக்கும் திருநெல்வேலியில் இரண்டு பட்டர்கள் குடமேந்தி தினமும் தாமிரபரணிக்குச் செல்கிறார்கள். மேளத்துணையுடன் யானையும் உடன் செல்கிறது. துஷ்டிக்குக் குளிக்காத வழக்கத்தை இன்னமும் நெல்லைப்பர் கடைப்பிடிக்கத்தான் செய்கிறார். சந்தனம், தேன், விபூதி என குளியல்களுக்கும் குறைச்சலில்லை. கத்தரிக்கப்பட்ட விதவிதமான பாக்கெட் பாலாபிஷேகமும் நடைபெறுகிறது.