இடுக்கண் களைவதாம்

நண்பன் குஞ்சரமணி அப்போது கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தான். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஸ்டிரைக் என்று சொல்லி திருநெல்வேலிக்கு வந்துவிடுவான். அப்படி வந்திருந்த ஒரு நாளில் என்னை அவனுடனேயே இருக்கச் சொல்லி வற்புறுத்தினான். வீட்டுக்குள்ளும் செல்லாமல் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு யார் வரவையோ எதிர்பார்த்து காத்திருந்தான்.

‘யாருல வரப்போறா’ . . . .

‘இரு . . சொல்லுதேன்’.

அம்மன் சன்னதி மண்டபம் வழியாக போஸ்ட்மேன் வருவது தெரிந்தது. அவர் எங்களுக்கு அருகில் வருவதற்குள் என்னையும் இழுத்துக் கொண்டு அவரிடம் சென்றான். ‘ எனக்கு ஏதும் லெட்டர் வந்திருக்கா’. வெயிலில் வந்த களைப்பும், சலிப்புமாக ‘ வந்தா வீட்டுல கொண்டு தர மாட்டேனா’ என்று சொல்லியபடி எரிச்சலோடு பைக்குள் பார்த்து ஒரு இன்லேண்ட் லெட்டரை எடுத்து கொடுத்தார் போஸ்ட்மேன் .

பஜனை மடத்தின் உட்திண்ணை நிழலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வாயெல்லாம் பல்லாக என்னிடம் அந்த இன்லேண்ட் லெட்டரை கொடுத்து பிரிக்கச் சொன்னான். ‘ வாள்க்கைல எனக்கு வர்ற மொத லவ்லெட்டரை நீதாம்ல பிரிக்கணும் ‘. என்னதான் உயிர் நண்பனாக இருந்தாலும் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதால் அதை பிரித்த வேகத்தில் படிக்கத் துவங்கினேன். அதில் குஞ்சுவுக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. அவனுக்கு தேவையெல்லாம் எனது பொறாமை ஒன்றே என்பதால் ஒரு போலி பெருந்தன்மை மூஞ்சியை வைத்துக் கொண்டு என்னை ஒரு புண்ணாக்கு பார்வை பார்த்தான். எனக்கு மட்டுமே தெரிந்த இவனது அக்கிரமங்களையெல்லாம் வீர பராக்கிரமங்களாக அந்த முட்டாள் பெண் புகழ்ந்து எழுதியிருந்தாள். பின் வழக்கம் போல தத்துபித்தென கவிதை.

‘தித்திக்கும் முத்தம் நீ தந்தாய்
பத்திக்கும் முத்தம் நான் தந்தேன்
எத்திக்கும் செல்லும் நம் காதல் எண்ணம்
யார் புத்திக்கும் புரியாத கவிதைச் சின்னம் ‘

‘இதுக்கு பதிலா அவ அசந்து போற மாதிரி ஒரு கவிதையை நீதாம்ல எளுதணும்’ என்றான் குஞ்சு. அந்த பிள்ளைக்கு முத்தமெல்லாம் கொடுத்திருக்கிறானே என்று தாங்க முடியாமல் உடனே சொன்னேன்.

‘தித்திக்கும் முத்தத்தை நீ சம்மதித்தால்
உன் சித்திக்கும் தருவேனடி பேதைப் பெண்ணே’

‘ஒன் கவித மயிர நீயே வச்சுக்கோ வயித்தெரிச்சல் புடிச்ச பயலே’ என்று லெட்டரை என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு போனான்.

பாளையங்கோட்டையிலுள்ள அந்த பெண்ணின் அண்ணனுக்கு இவர்களின் காதல் விவகாரம் தெரிய வந்து குஞ்சுவைத் தேடி வந்துவிட்டான். அம்மன் சன்னதி வந்தவனுக்கு குஞ்சுவை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. ஒரு வீட்டுத் திண்ணையில் சாய்ந்து கொண்டு போகிற வருகிற பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரை பார்த்திருக்கிறான். சட்டை போடாத பூணூல் போட்ட ஒல்லியான உடல்வாகுடைய அவரிடம் போய், ‘ இங்கெ குஞ்சிதபாதம் வீடு எங்கே இருக்கு’ என்று விசாரித்திருக்கிறான். அதற்கு அந்த பெரியவர், ‘நோ நோ ஹி இஸ் நாட் குஞ்சிதபாதம். குஞ்சரமணி, மை சன்’ என்று சொல்லி வீட்டுக்குளிருந்த குஞ்சுவை அழைத்து அவனிடம் பெருமிதம் பொங்க ஒப்படைத்து விட்டார். குஞ்சுவுக்கு அவனை பார்த்தவுடனேயே அவன் யார் என்பது தெரிந்து போய்விட்டது. ‘பஸ்ஸ்டாண்டுக்கு வா தனியாக பேச வேண்டும்’ என்று அழைத்தவனிடம் ‘நீ போ பின்னால் வருகிறேன் என்று சொல்லிவிட்டு என்னை பார்க்க வந்துவிட்டான்.

அன்றைக்கு சரஸ்வதி பூஜை. புத்தகங்கள், தம்பூரா, ஹார்மோனியம், மிருதங்கம் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு சர்க்கரைப் பொங்கல், பூம்பருப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பதற்றத்தை மறைத்தபடி குஞ்சு வந்து பஸ்ஸ்டாண்டுக்கு அழைத்தான். பாதிவழி போகும் போதுதான் யாரை பார்க்க போகிறோம் என்று கேட்டேன். விஷயத்தை அவன் சொன்னவுடன் வயிற்றுக்குள் சர்க்கரைப் பொங்கலும், பூம்பருப்பும் சண்டை போட ஆரம்பித்தன. ஆனால் நாம் நேரே அந்த பெண்ணின் அண்ணனைப் பார்க்க போகவில்லை. அதற்கு முன் கோ-ஆப்டக்ஸ் ஷங்கரை பார்த்து அவனையும் உடன் அழைத்துச் செல்ல இருக்கிறோம் என்றான் குஞ்சு. நான் நிம்மதியடைந்தேன். ஷங்கர் பார்ப்பதற்கு அப்படியே ராதாரவி மாதிரி இருப்பான். அவனுடைய தகப்பனார் கோ-ஆப்டக்ஸில் மேலாளராக இருந்ததால் அவன் கோ-ஆப்டக்ஸ் ஷங்கர். ஷங்கருக்கு உள்ளூர் ரௌடிகள் அனைவரும் நண்பர்கள். அவர்களுடன் ஷங்கர் பல அடிதடிகளில் கலந்து கொண்டதாக செவிவழிச் செய்திகள் உண்டு. அந்த தைரியத்தில் ‘ ரெண்டுல ஒண்ணு பாத்துருவோம்ல ‘ என்றேன் குஞ்சுவிடம்.

பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டான் ஷங்கர். ‘அந்த பொண்ணு உன்னை காதலிக்கிறது உண்மைதானா’ என்றான் குஞ்சுவிடம். நான் ‘ அவ இவனுக்கு எழுதின லெட்டர படிச்சேன். அவ அண்ணன் ரொம்ப பேசுனான்னா நாம இத சொல்லுவோம். வா ஷங்கர்’ என்றேன். நடந்து போகும் தூரத்தில்தான் பஸ்ஸ்டாண்ட் இருந்தது என்றாலும் ஷங்கர் ஒரு ஆட்டோ பிடித்தான். எங்களுக்கு புரியவில்லை. இதில் ஏதோ சமயோசித சாதுர்ய யுத்த யுக்தி இருக்கிறது என்று யூகித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினோம். முரட்டு உடல்வாகுடைய ஷங்கர் இருக்கும் தெம்பில் இருந்த என் கண்ணுக்கு முதலில் தென்பட்டது அந்த பெண்ணின் அண்ணனுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபர்தான். ஷங்கருக்கு மாமா மாதிரி இருந்த அவர், தாராசிங் கருப்பாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத குஞ்சு இரண்டு வீரர்கள் ஆட்டோவில் இருக்கிற தைரியத்தில் இறங்கிச் சென்றான்.

பத்தடி தூரத்தில் போலீஸ் ஸ்டேஷன் இருந்ததாலோ, என்னவோ முதலில் சாதாரணமாகத்தான் பேசிக் கொண்டார்கள். திடீரென்று டப்டப்பென்று சத்தம் கேட்டது. இவன் அவனை அடிக்க, அவன் இவனை அடிக்க கட்டிப் பிடித்து தரையில் உருண்டார்கள். சட் சட்டென்று பக்கத்து கடைகளின் ஷட்டர்கள் இறக்கப்பட்டன. நாங்கள் உட்கார்ந்திருந்த ஆட்டோ லேசாக ஆடத் துவங்கியது. கோ-ஆப்டக்ஸ் ஷங்கர் பதற்றத்தில் குலுங்கிக் கொண்டிருந்தான். அந்த பெரிய குலுங்கலுக்குள் எனது சின்னக் குலுங்கல் அமுங்கிப் போனது. அடித்து சட்டையைக் கிழித்து உருண்டுக் கொண்டிருந்த இருவருக்கருகிலும் தலையைப் பிடித்தபடி அந்த தாராசிங் மாமா உட்கார்ந்து கொண்டு பெண்குரலில் ‘அய்யோ இப்படி கெடந்து அடிச்சிக்கிறாங்களே யாராவது வந்து விலக்குங்களேன்’ என்று கதறினார்.

ஒருமாதிரியாக அவர்களாகவே களைப்படைந்து விலகி குஞ்சு வந்து ஆட்டோவில் ஏறினான். ஆட்டோ கிளம்பி நகர ஆரம்பித்ததும் கோ-ஆப்டக்ஸ் ஷங்கர், ‘எல . . மேல கைய வச்சிட்டேல்லா . . பாருல . . இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள உன்ன தூக்குதோம்’ என்று ஓவராக சவுண்ட் விட்டான். நானும் என் பங்குக்கு அவனை விட சத்தமாக மனதுக்குள் சத்தம் போட்டேன். அம்மன் சன்னதிக்கு வந்ததும் குஞ்சுவிடம் ‘ரொம்ப அடி பட்டிருச்சா’ என்றேன். ‘ஒங்கள கூட்டிக்கிட்டு போனதுக்கு பதிலா ரெண்டு நாயை கூட்டிக்கிட்டு போயிருந்தாலாவது மேல விளுந்து கடிச்சிருக்கும்’ என்று சொல்லிவிட்டு உதட்டைப் பிதுக்கி ரத்தம் வருகிறதா என்று குஞ்சு பார்த்தான்.

பன்மொழிப்புலமை

கமலஹாசன் அவர்களிடம் ஒரு முறை கேட்டேன். ஏழெட்டு மொழிகள் தெரிந்த நீங்கள் வேற்று மொழி கற்றுக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன் என்று. கொஞ்சம் முயற்சியும், நிறைய ஆர்வமும் இருந்தால் எந்த பாஷையும், எத்தனை பாஷையும் கற்றுக் கொள்ளலாம் என்றார். அது உண்மைதான். என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு ஒன்றிருந்தால் ஒன்று இருக்காது. தமிழையே ஒழுங்காகக் கற்றுக் கொள்ளவில்லை என்கிற தாழ்வுணர்ச்சி இன்று வரை உண்டு. அது போக கொஞ்சம் உடைந்த ஆங்கிலம் தெரியும். அதாவது எங்காவது போனால் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு தங்க, குளிக்க, சாப்பிட முடியும். அது போதாதா. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தமிழ், ஆங்கிலம் தவிர ஹிந்தி எழுதப்படிக்கத் தெரியும். தொடர்ந்து ஆர்வமுடன் பார்த்த மலையாளப் படங்களின் புண்ணியத்தில், யார் என்னிடம் மலையாளத்தில் பேசினாலும் என்னால் புரிந்து கொள்ள முடியும். முக்கியமான மலையாள ஜோக்குகளை நண்பர் ஜெயமோகன் என்னிடத்தில் மலையாளத்திலேயே சொல்வார். மோகனுக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம் தவிர சமஸ்கிருதப் பரிச்சயமும் உண்டு. சகோதரி அருண்மொழிக்கும் தமிழ், ஆங்கிலம் தவிர மலையாளம் தெரியும் என்றே நினைக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் படித்த ஹிந்தியில் ‘க’ ஒன்றைத் தவிர வேறு ஒன்றுமே நினைவில் இல்லை.1996 ஆம் வருடம் என் ஆசான் திரு.பாலு மகேந்திரா அவர்கள் ஒரு ஹிந்தி படம் எடுக்க முடிவு செய்தார். நான் அவருடைய அஸோஸியேட் டைரக்டர். படப்பிடிப்பு தேதி நெருங்க நெருங்க, எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ரேவதி, ரமேஷ் அரவிந்த், ஹீரா என எனக்கு நன்கு பழக்கமான தென்னிந்திய நட்சத்திரங்கள்தான் நடிக்கிறார்கள் என்றாலும் வசனம் சொல்லிக் கொடுக்க வேண்டுமே. அங்குதான் சிக்கல். பொதுவாகவே நான் வசனம் சொல்லிக் கொடுக்கும் முறையில் திருப்தி அடைந்து காமிராவிலேயே அமர்ந்து விடுவார் என் வாத்தியார். பாடல்கள் பற்றி முடிவு செய்ய இளையராஜா அவர்களைப் பார்க்க போய் அவருக்காகக் காத்திருந்த போது மெல்ல வாத்தியாரிடம் விஷயத்தை சொன்னேன். என்ன சொல்றே. உனக்கு ஹிந்தி தெரியாதா என்றார். ‘நமஸ்தே’ங்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றேன். பிறகு ஹிந்தி தெரிந்த உதவியாளர்களை வைத்துக் கொண்டு சமாளித்தோம். இளையராஜா அவர்களும் எனக்குத்தெரிந்து தமிழ், ஆங்கிலம், மலையாளம்,தெலுங்கு பேசுவார். ஹிந்தியும் புரிந்து கொள்வார். வாத்தியாருக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலைமை உண்டு. சிங்களமும் தெரியும். மலையாளம் பேச மாட்டார். புரிந்து கொள்வார்.

நண்பர்களில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தமிழ், ஆங்கிலம் தவிர மலையாளம் படிப்பார்.தெலுங்கு புரிந்து கொள்வார். ‘நான் கடவுள்’ படத்தில் பணியாற்றியவரும், இசை விமரிசகரும், ஏ.ஆர்.ரஹ்மானின் நண்பருமான எழுத்தாளர் ஷாஜிக்கு எட்டு பாஷைகள் எழுதப் படிக்க தெரியும். நாஞ்சில் நாடன் அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, மராட்டி என ஐந்து மொழிகள் தெரியும் என்றே கருதுகிறேன். பாரதி மணி பாட்டையாவுக்கும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் என பல பாஷைகளில் புலமை உண்டு. எங்களைப் போன்ற நெருக்கமானவர்களிடம் அவர் பேசும் பிரத்தியேக பாஷை பற்றி பொதுவில் சொல்ல இயலாது.

என் வீட்டம்மாவுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகள் தெரியும். இதில் தமிழில் மட்டும்தான் கொஞ்சம் புலமை கம்மி. தனக்குத் தெரிந்த எல்லா பாஷைகளிலும் என்னை சராமாரியாக அவர்கள் தாக்கும் போதெல்லாம் எல்லா கணவர்களுக்குமான பொது மொழியாகிய மெளனமொழியில் பதிலடி கொடுப்பேன். நிலைகுலைந்து போவார்.

ஹிந்தி தெரியாமல் ஜெயமோகன், ஆர்தர் வில்ஸன், ஆர்யா உட்பட நாங்களனைவரும் நாற்பது நாட்கள் காசியில் பட்ட பாட்டை ஒரு தனி புத்தகமாகவே எழுதலாம். ரயிலில் நாங்கள் பயணிக்கும் போது எங்களுடன் நான் மிகவும் மதிக்கும் கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் வந்தார். ஜி.வி.ஐயர், எம்.டி.வாசுதேவன் நாயர், பரதன் போன்ற ஜாம்பவான்களுடன் பல மொழிப் படங்களில் பணியாற்றிய மேதை அவர். இந்தியா முழுதும் சுற்றியவர். இரண்டு நாட்களும் ரயிலில் பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டே சென்றோம். பேச்சுவாக்கில் நான் கிருஷ்ணமூர்த்தி ஸாரிடம் உங்களுக்கு ஹிந்தி தெரியும்தானே ஸார் என்று கேட்டுத் தொலைத்து விட்டேன். மனிதருக்கு மூக்கின் மேல் கோபம் வந்துவிட்டது. என்ன ஸார் கேக்குறீங்க.? எனக்கு எப்படி ஹிந்தி தெரியாமல் போகும் என்றார். நான் பதறிப் போய் அவர் கைகால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். ஜெயமோகனும் இதுதான் சாக்கென்று ‘அவருக்கிருக்கும் அனுபவத்திற்கு அவரிடம் போய் இப்படி முட்டாள்தனமாகக் கேட்கலாமா’ என்று என்னை வறுத்தெடுத்து விட்டார். அதன் பிறகு காசிக்குப் போய் சேரும் வரை கிருஷணமூர்த்தி ஸாரிடம் ஒரு சேவகன் போல் பணிவுடன் நடந்து கொண்டேன். ‘மோகன், நாம் காசியியில் எங்கு சென்றாலும் கிருஷ்ணமூர்த்தி ஸாருடனே செல்வோம். அதுதான் நமக்கும் நல்லது’ என்று ஜெயமோகனிடம் சொன்னேன். அவரும் ஒத்துக் கொண்டார். காசியில் போய் இறங்கியதும் போலீஸிடம் மாட்டிக் கொண்டோம். ஒற்றைக் கடுக்கன் போட்டிருக்கும் ஆர்தர் வில்ஸனும், பச்சை கண்கள் கொண்ட ஆர்யாவும் சந்தேகத்துக்கிடமின்றி தீவிரவாதிகள் என்றே உத்திரப் பிரதேச போலீஸார் நம்பினர். கிருஷ்ணமூர்த்தி ஸார் எங்களுக்கு முன்பே காரில் ஹோட்டலுக்குச் சென்று விட்டதால் எங்களை காப்பாற்ற ஹிந்தி தெரிவார் யாருமில்லை. அப்புறம் ஒரு வழியாக எங்கள் தயாரிப்பு நிர்வாகி லோகு வந்து இன்ன பாஷை என்றே கண்டுபிடிக்க முடியாத ஒரு பாஷையில் பேசி உ.பி.போலீஸை குழப்பி திகிலுக்குள்ளாக்கி எங்களை விடுவித்தார்.

கிருஷ்ணமூர்த்தி ஸாரிடம் போய் விஷயத்தை சொன்னோம். சே. . . . நான் இல்லாமல் போனேனே என்று வருந்தினார். அதன் பிறகு காசியில் கிருஷ்ணமூர்த்தி ஸாரை தொந்தரவு செய்யாமல் நாங்களே ஒரு மாதிரியாக சமாளித்துக் கொண்டோம். காரணம் வேறொன்றுமில்லை. ‘கிதர் ஹே’ என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த ஒரு ஹிந்தி வார்த்தையும் அவர் பேசி அந்த நாற்பது நாட்களில் நாங்கள் யாருமே கேட்கவில்லை. படப்பிடிப்பு முடிந்து ஒரு நாள் கங்கைக் கரையில் விறுவிறுவென நடந்து வந்து கொண்டிருந்த என்னிடமே ஒரு பேனரை காட்டி ‘ஈ கேலரி கிதர் ஹே’ என்று கிருஷ்ணமூர்த்தி ஸார் கேட்டதுதான் அதில் உச்சம்.

பல மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமிருந்தாலும் எனக்கும், கவிஞரும், ஒளிப்பதிவாளருமான என் நண்பர் செழியனுக்கும் தெரிந்ததென்னவோ தமிழும், ஆங்கிலமும்தான். இதுபோக இப்பூவலகில் எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த மூன்றாவது மொழியைப் பேசும் அந்த மூன்றாவது நபர் இப்போது உயிருடன் இல்லை.

அந்த நபர் காலஞ்சென்ற திரு.யாகவா முனிவர். மொழி இனான்ய மொழி.

காதல் மன்னன்

மந்திரமூர்த்தியின் வீட்டை டாக்டர்பிள்ளை வீடு என்றுதான் எல்லோரும் அடையாளம் சொல்வர். மந்திரமூர்த்தியின் பூட்டனார், அதாவது தாத்தாவின் தகப்பனார், அந்த காலத்தில் புகழ் பெற்ற டாக்டராக இருந்திருக்கிறார். அவர் கட்டிய வீடு என்பதால் டாக்டர்பிள்ளை வீடு. மந்திரமூர்த்தியின் தகப்பனார், தனது இரண்டு சகோதரர்களுடன் ஒரே குடும்பமாக அந்த பெரிய வீட்டில் வசித்து வந்தார். பள்ளியில் ஒன்றாகப் படித்த நாட்களிலிருந்து இன்றுவரை மந்திரமூர்த்தி என் தோழன். என்னைப் போலவே நல்ல நிறம். ஒடிசலாக, உயரமாக இருப்பான். மனமெங்கும் தாழ்வு மனப்பான்மையும், கூச்ச சுபாவமும் உடையவன். தெருவில் நடந்து செல்லும் போது தூரத்தில் நான்கு பையன்கள் நின்று பேசிக் கொண்டிருந்தாலே வா, வேறு பக்கமாகப் போகலாம் என்று நம்மை இழுத்துச் செல்பவன். ஆனால் காதல் விஷயத்தில் மட்டும் உறுதியானவன்.

முதலில் மந்திரமூர்த்தி காதலித்தது தன்னை விட இரண்டு வயது மூத்தவளான பாத்திமாவை. பாத்திமாவின் அண்ணனும், மந்திரமூர்த்தியின் அண்ணனும் கிளாஸ்மேட்ஸ். அவள் சினிமாவுக்குக் கிளம்பினால் எப்படியாவது தகவல் தெரிந்து கொண்டு எங்களை நச்சரித்து சினிமாவுக்கு இழுத்துச் செல்வான். தினமும் டியூஷனுக்கு போகும் அவளை பத்திரமாகக் கூட்டிச் சென்று பின் வீட்டுக்குக் கொண்டு போய் சேர்த்து வந்தான். ஆனால் தன் கூடவே இவன் வருவது பாத்திமாவுக்கு தெரிந்துவிடாத அளவு இடைவெளியில்தான் நடப்பான். அவளுக்கு திருமணம் ஆகும் வரைக்கும் அது தெரியாமலேயே போனதுதான் சோகம்.

பாத்திமாவின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்துவிட்டு மந்திரமூர்த்தி அடுத்து காதலிக்கத் தேர்ந்தெடுத்த பெண் மனோரஞ்சிதம். இவள் மூன்று வயது மூத்தவள். டாக்டர்பிள்ளை வீட்டுக்கு பக்கத்து வீடு. கல்லூரியில் படித்து வந்தாள். இவளை காதலித்ததில் மந்திரமூர்த்திக்கு இருந்த ஒரே சிக்கல் அவள் வேறொருவனை காதலித்து வந்தாள். அதற்காகவெல்லாம் மந்திரமூர்த்தி மனம் தளரவில்லை. எப்படியாவது மனோரஞ்சிதத்தின் காதலனை அடித்து மிரட்டி காதலிலிருந்து துரத்தி விட வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வந்தான். அழகனும், பலசாலியும், புத்திசாலியுமான மனோரஞ்சிதத்தின் காதலன் கந்தகுமார் பின்வரும் காலங்களில் எங்களுக்கு நண்பனாகிப் போனான். அப்போதெல்லாம் பழைய விஷயங்களைக் கேள்விப்பட்டு , ‘எப்பா என்னை அடிச்சுக் கிடிச்சுப் போடாதீங்கப்பா’ என்று கலாட்டா செய்வான். அந்த சமயத்தில் மந்திரமூர்த்தி, கந்தகுமார் இருவருமே மனோரஞ்சிதத்தை மறந்து விட்டிருந்தனர். அவளது கணவன் ஒரு முரடன் என்பதே அதற்கு காரணம்.

கல்லூரிக்குச் சென்றபின் மந்திரமூர்த்தி காதலித்தது உமாவை. தினமும் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் அவளை பஸ் ஏற்றிவிட்டு அதற்கு பின்பே இவன் கிளம்புவான். எங்களை விட ஒரே ஒரு வயது இளையவனான மீனாட்சி சுந்தரம்தான் மந்திரமூர்த்திக்குத் துணையாக இந்த காதலில் நின்றவன். என்னை சித்தப்பா என்றும், மந்திரமூர்த்தியை மாமா என்றும் அழைக்கும் மீனாட்சியிடம் கேட்டேன்.

எல, ஒங்க மாமன் காதலிக்கிற அந்தப் பொண்ணு நல்லா இருக்குமா?

என்ன இப்படி கேட்டுட்டீய சித்தப்பா . . செலக்கார் ஜானகியைப் பாத்தா எங்க அத்தையப் பாக்க வேண்டாம்.

சௌகார் ஜானகியை மீனாட்சி செலக்கார் ஜானகி என்றே இன்றைக்கும் சொல்வான்.

மந்திரமூர்த்தி காதலிக்கும் எல்லாப் பெண்களையும் போல உமாவுக்கும் மந்திரமூர்த்தியை யாரென்றே தெரியாது. ஆனாலும் மந்திரமூர்த்தி சும்மா இருந்துவிடவில்லை. ஒரு புத்தாண்டு தினத்திற்கு வாழ்த்து அட்டை வாங்கி அந்த பெண்ணிற்கு அனுப்ப முடிவு செய்து விட்டான். இயல்பிலேயே பயங்கரமான தைரியசாலி என்பதால் அந்த வாழ்த்து அட்டையில் கையெழுத்திடுவதற்கு வேறொருவனை தேர்ந்தெடுத்தான். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவன் குஞ்சுவின் தம்பி பாலாஜி. பாலாஜி மிகவும் மகிழ்ச்சியாக நம்மிடம் ஒருவன் கையெழுத்தெல்லாம் கேட்கிறானே என்று என்னமோ ஆட்டொகிரா·ப் போடுவது போல் போட்டு விட்டான். அதற்குப் பிறகுதான் அந்த பெண் உமாவின் தகப்பனார் போலீஸ் துறையில் வேலை பார்க்கிறார் என்னும் விவரத்தை நாங்கள் பாலாஜியிடம் சொன்னோம். விளைவு, மந்திரமூர்த்தியின் தொடர்பை துண்டித்துவிட்டு நிற்காத வயிற்றுப் போக்கின் காரணமாக ஒரு வாரம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான் பாலாஜி. அந்த வாழ்த்து அட்டை மந்திரமூர்த்தி தன் மன திருப்திக்காக எழுதி கவ¨ரெல்லாம் ஒட்டியும் தன் பெட்டிக்குள்ளேயே வைத்திருந்த விவரம் பிறகு தெரிய வந்தது. அதற்கு பிறகுதான் பாலாஜியின் உடம்பு இயல்புநிலைக்கு வந்து லேசாகச் சிரிக்க ஆரம்பித்தான்.

மெல்ல மெல்ல மந்திரமூர்த்தி காதலிக்கும் பெண்களின் வயது குறைய ஆரம்பித்தது. அவனது தூரத்து உறவில் மாமன்மகள் முறை வருகிற ஒரு பெண்ணை போனால் போகிறது என்று காதலிக்கத் தொடங்கினான். அந்த பெண் அப்போது ப்ளஸ்டூ படித்து வந்தாள். அந்தப் பெண் உன்னை காதலிக்கிறாள் என்று எப்படி சொல்கிறாய் என்று கேட்டதற்கு, ஒரு முறை அவள் வீட்டுக்கு குடும்பத்துடன் இவன் சென்ற போது அந்தப் பெண் சிரித்தபடியே ‘வாங்க’ என்றழைத்ததை நினைவு கூர்ந்தான். பிறகு ஒருமுறை பத்திரமாக வைத்திருக்கும் படி ஒரு புகைப்படத்தை என்னிடம் கொடுத்தான். அது அந்த மாமன் மகளின் பூப்புனித நீராட்டுவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஆல்பத்திலிருந்து உருவியிருக்கிறான் என்பது அவன் சொல்லாமலேயே தெரிந்தது. கேட்டால் எப்படியும் ஒத்துக் கொள்ளாமல் அவளே கொடுத்ததாகத்தான் சொல்வான் என்பதால் அமைதியாக வாங்கி வைத்துக் கொண்டேன். ரொம்ப நாட்கள் கழித்து அவனிடமே அந்த புகைப்படத்தை நான் திருப்பிக் கொடுத்த போது அதை வாங்கிக் கிழித்து போட்டான். இந்த முறை மந்திரமூர்த்திக்கே திருமணமாகியிருந்தது.

தற்போது ஒரு டால்கம் பவுடர் நிறுவனத்தின் ஏரியா மேனேஜராக இருக்கும் மந்திரமூர்த்தி தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறான். சென்னையில் வீடுகட்டி மனைவி, மகளுடன் வசிக்கிறான். முன் வழுக்கையும், தொப்பையுமாகப் பார்ப்பதற்கு வேறு ஆளாகிவிட்டான். நீண்ட காலத்துக்குப் பின் நான், நண்பன் குஞ்சு, மந்திரமூர்த்தி மூவரும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். குஞ்சுதான் மெல்ல வாயைக் கிளறினான்.

அப்புறம் மந்திரமூர்த்தி சொல்லு . . வேறென்ன விசேஷம் .. .

ஒண்ணுமில்லேப்பா . . .ஏதோ போயிக்கிட்டிருக்கு . . .

ஏதாவது இருக்குமே . . . நீ காதல் மன்னனாச்சே. . .வந்து விளுவாங்களே உன் மேல . . . . சும்மா சொல்லுல . .பந்தா பண்ணாதே . . .

சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, பெயருக்கு ஒரு இழுப்பு இழுத்து புகை அனைத்தையும் வெளியே விட்டு சொன்னான்.

இங்கே சென்னை ஆ·பீஸ்க்கு நான் எத்தனை மணிக்கு போவேன்கிறது எனக்கே தெரியாது. ஆனா நான் போற நேரமெல்லாம் கரெக்டா எங்க ஆ·பீஸ் மாடில குடியிருக்கிற பொண்ணு வந்து நிக்கா. இதுக்கு என்ன அர்த்தம்?

நான் குஞ்சுவைப் பார்த்தேன். குஞ்சு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

நாத தனுமனிஷம்

‘மஞ்சரில விளாத்திகுளம் சாமியப் பத்தி வீரகேரளம்புதூர் விநாயகம் பிள்ளைன்னு ஒருத்தர் எழுதியிருக்காரு. படிச்சு பாருங்க. நல்லா இருக்கு’. வேறு ஏதோ பேசிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக இதை சொன்னார் நண்பர் ஜெயமோகன். ‘மோகன், அது வேற யாருமில்ல. எங்க பெரியப்பா’ என்றேன். விளாத்திகுளம் சாமியைப் பற்றி மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ மனிதர்களைப் பற்றி, எவ்வளவோ விஷயங்கள் பற்றி விநாயகத்துப் பெரியப்பா சொல்லி நான் தெரிந்திருக்கிறேன்.

விநாயகத்துப் பெரியப்பா ஒன்றும் எனக்கு ரத்த உறவு இல்லை. ஆனாலும் பெரியப்பா. இப்படி பல உறவுகள் எனக்கு உண்டு. ஐம்பதுகளில் நெல்லை சகோதரர்கள் என்றழைக்கப்பட்டு கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்து கொண்டிருந்த எனது பெரியப்பாக்களோடு மிருதங்கம் வாசிப்பவராக அறிமுகமாகி எங்கள் குடும்பத்துக்குள் வந்தவர்தான் விநாயகத்துப் பெரியப்பா. அதன் பின் தாத்தாவுக்கும், ஆச்சிக்கும் மற்றொரு மகனாக ஆகியிருக்கிறார். எனது சொந்த பெரியப்பாக்களை விட நான் அதிகமாக பெரியப்பா என்றழைத்தது விநாயகத்துப் பெரியப்பாவைத்தான். எப்போதுமே வெள்ளை அரைக்கைச் சட்டையும், வேட்டியும்தான் உடை. மாநிறம். சற்று பருமனான உடல்வாகு. மீசையில்லாத முகத்தில் சிரிக்கும் போது சற்றுத் தூக்கலான முன்பல் இரண்டும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கும்.

ரசிகமணி டி.கே.சி.யுடன் நெருங்கிப் பழகிய பெரியப்பாவைப் போன்ற ஒரு கலா ரசிகரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை. புகழ் பெற்ற தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். அந்த வகையில் தமிழறிஞர்கள் கி.வா.ஜ, திருக்குறள் முனுசாமி போன்றோரின் நண்பர். எந்த ஒரு சூழலுக்கும் ஒரு குறள் சொல்லுவார். ‘இதுக்கும் ஒரு கொறள் வச்சிருப்பேளே’ என்று கேட்டால், ‘என்ன செய்யச் சொல்லுதெ? அந்த பேதீல போவான் எல்லா எளவுக்கும்லா எளுதி வச்சிருக்கான்’ என்பார். மிருதங்கம், ஹார்மோனியம் போக தானே உருவாக்கிய ஒற்றைக் கம்பி வாத்தியம் ஒன்றும் வாசிப்பார். அந்த வாத்தியத்தை பத்திருபது நிமிடங்களுக்குள் உருவாக்கி வாசிப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒற்றைத் தந்தியில் அத்தனை ஸ்வரங்களையும் கொண்டு வந்து இசைப்பது அவ்வளவு எளிதில்லை.

திருநெல்வேலிக்கு பெரியப்பா வந்தால் குறைந்தது நான்கு நாட்களாவது எங்கள் வீட்டில் தங்குவார். அந்த நான்கு நாட்களும் வீடே நிறம் மாறிவிடும். காலையில் கொஞ்சம் தாமதமாகவே குளிக்கச் செல்வார் பெரியப்பா. அரைத்தூக்கத்தில் இருக்கும் என்னை ஹார்மோனியமோ, மிருதங்கமோ வந்து வருடி எழுப்பும். ஹார்மோனியம் வாசிக்கும் போது பெரியப்பாவிடம் ஒரு கனிவு தெரியும். சித்தரஞ்சனி ராகத்தில் ‘நாத தனுமனிஷம்’ கீர்ததனைதான் பெரியப்பா அடிக்கடி வாசிப்பது. சில சமயங்களில் இருமலோடு பாடுவதும் உண்டு. சித்தரஞ்சனி ஒரு சுவாரஸியமான ராகம். அதில் மேல் ஸட்ஜமத்துக்கு மேலே உள்ள ஸ்வரங்களுக்கு வேலை இல்லை. அந்தச் சின்ன ஏரியாவுக்குள் பெரியப்பா சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக வாசித்துக் கொண்டிருப்பார். தூக்கம் கலையாத கண்களுடன் அவரருகில் சென்று உட்காருவேன். ஹார்மோனியத்திலிருந்து கையை எடுக்காமலேயே, அந்த சமயத்தில் தான் வாசித்துக் கொண்டிருக்கும் பிடிமானத்தை கண்களால் எனக்குக் காட்டிச் சிரிப்பார்.

பெரியப்பாவின் ஹார்மோனிய வாசிப்புக்கு நான் பலமுறை மிருதங்கம் வாசித்திருக்கிறேன். அவரது வேகத்துக்கும், லயிப்புக்கும் என்னால் ஈடு கொடுக்க முடிந்ததே இல்லை. கொஞ்ச நேரத்திலேயே நைஸாக மிருதங்கத்தை பெரியப்பாவின் பக்கம் தள்ளிவிட்டு நான் ஹார்மோனியத்தை எடுத்துக் கொள்வேன். மிருதங்கம் கையில் வந்தவுடன் பெரியப்பா ஆளே மாறிவிடுவார். அசுர பலம் வந்து வாசிப்பார். அவர் வாசிப்பில் மிருதங்கம் பேசும். அழும். சிரிக்கும். அதற்குப் பின் மிருதங்கத்திலிருந்து பெரியப்பா வெளியே வர ரொம்ப நேரம் ஆகும். ‘சாமியாடிட்டேளே பெரிப்பா’ என்பேன். ‘வாசிச்சா அப்படித்தான்யா வாசிக்கணும். இல்லென்னா அதத் தொடவே கூடாது’ என்பார். அவரைப் போலவே என்னையும் அந்த இரண்டு வாத்தியங்களிலும் தயார் செய்து விடவேண்டும் என்று பெரியப்பா விரும்பினார். நான் தான் அதற்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. இதில் என் மேல் அவருக்கு எப்பொழுதும் ஒரு தீராத வருத்தம் இருந்தது. ‘எல்லாருக்கும் இது வராது. ஒனக்கு வருது. ஆனா வாசிக்க ஒனக்கு வலிக்கி’. பாளயங்கோட்டையில் ஒரு கச்சேரியில் நான் மிருதங்கம் வாசித்து விட்டு திரும்பும் போது உடன் வந்திருந்த பெரியப்பா சலிப்புடன் இதை சொன்னார்.

பெங்களூர் சுந்தரம் அவர்களின் ‘ஆனந்த ரகஸ்யம்’ புத்தகத்தை வைத்துக் கொண்டு நானாக சில ஆசனங்களை பயின்று கொண்டிருந்தேன். ‘பொஸ்தகத்த பாத்துல்லாம் ஆசனம் போடக் கூடாதுய்யா’ என்று சொல்லி, முறையாக எனக்கு யோகாசனம் கற்றுக் கொடுத்த ஆசான் அவர். எனக்கு தெரிந்து அப்போதே அவர் எழுபதை நெருங்கியிருந்தார். ஆனால் அந்த வயதிலும் சிரசாசனம் உட்பட கடினமான ஆசனங்களைப் போட்டு காண்பித்து என்னை அசரடித்தார். இத்தனைக்கும் வாதம் காரணமாக அவரது இரண்டு கால்களும் சற்று வளைந்திருக்கும். அந்தக் கால்களை வைத்துக் கொண்டு அவர் நடக்கும் தூரம் நம்ப முடியாதது. பெரியப்பாவுக்கு மாலையிலும் ஒரு குளியல் உண்டு. குளித்து முடித்த பின் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து நடுவகிடெடுத்து தலை வாருவார். மெல்ல நடக்க ஆரம்பிப்பார். இரண்டு மணிநேரம் கழித்து நெற்றி நிறைய திருநீறுடன் வீடு திரும்புவார். நெல்லையப்பர் கோயிலைச் சுற்றி வந்திருக்கும் களைப்பு அவர் உட்காரும் போது நமக்கு தெரியும்.

‘நானேதானெ இங்கெ வந்துக்கிட்டிருக்கென். நீ ஒரு நாளைக்கு வீரகேரளம்புதூர் வாய்யா’. ரொம்ப நாட்கள் சொல்லிக் கொண்டிருந்த பெரியப்பாவுக்காக ஒரு மாலையில் அங்கு சென்றேன். சந்தோஷத்தில் பெரியப்பாவின் வீட்டிலுள்ள அனைவரும் உபசரித்தார்கள். தடபுடலான இரவு உணவுக்குப் பின் சுகமான காற்றடிக்க இருவரும் சிறிது தூரம் நடந்தோம். ஊரே அடங்கிய அமைதியான பொழுதில் வீட்டு வாசலறையில் வந்து உட்கார்ந்தோம். பெரியப்பா ‘அந்த பொட்டிய எடு’ என்றார். பெரியம்மை ஒரு பழைய அழுக்குப் பெட்டியை எடுத்து கொடுக்க, அதை தன் பக்கம் நகர்த்தி உள்ளுக்குள்ளிருந்து நிறைய கேஸட்டுக்களை எடுத்தார். எல்லாமே பழையவை. ஒரு மோனோ டேப்ரிக்கார்டர் அருகில் இருந்தது. ‘எய்யா, இத கொஞ்சம் கேளேன்’. கரகரவென கேஸட் ஓடத் துவங்கியது. ஆல் இண்டியா ரேடியோவின் ஒலிபரப்பை பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. மயக்கும் குழலிசை. ‘என்ன ராகம் தெரியுதா?’. சற்று நேரம் யோசித்து விட்டு மால்கௌன்ஸ் மாதிரி இருக்கு’ என்றேன். ‘அதேதான். எப்படி வாசிச்சிருக்கான் பாத்தியா?’ பன்னாலால் கோஷ் என்னும் மேதையை அந்தப் பழைய கரகர ஒலிபரப்பில் அன்றைக்குத்தான் முதன்முறையாகக் கேட்டேன். ‘பேஸ் வாசிக்கறதுக்காக தான் விரல அறுத்து ஆபரேஷன் செஞ்சுக்கிட்ட சண்டாளன்யா இவன்’. இந்த மாதிரி ஏதாவது சொல்லும் போது உணர்ச்சி மிகுதியில் பெரியப்பாவின் குரல் உடையும். அப்போது அவர் அழுகிறாரோ என்று நமக்கு சந்தேகம் வரும். பன்னாலால் கோஷைத் தொடர்ந்து படே குலாம் அலிகானும் அன்றைய எங்களின் இரவை நிறைத்தார்.

ஜிம் ரீவ்ஸின்(Jim reeves) குரல் விநாயகத்துப் பெரியப்பாவுக்குப் பிடித்தமான ஒன்று. ‘இந்த ரீவ்ஸ் பய அடியோஸ் அமிகோஸ்னு பாடும் போது நம்ம தோள்ல கையப் போட்டுக்கிட்டு காதுக்குள்ள வந்து பாடுற மாதிரி இருக்குல்லா’ என்பார். லாரல் ஹார்டி இரட்டையர்களும் அவருக்கு பிடித்தமானவர்கள். சில வசனங்களை மீண்டும் மீண்டும் சொல்லி ஒரு குழந்தை போல ரசித்துச் சிரிப்பார். வீரகேரளம்புதூர் என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து கொண்டு இவர் எப்படி எல்லாவற்றையும் ரசிக்கிறார் என்று ஆச்சரியமாகவே இருக்கும். நான்கைந்து ஆண்டுகளாகச் சந்திக்கும் வாய்ப்பில்லாமல் இருந்தேன். அவ்வப்போது போஸ்ட் கார்டில் நுணுக்கி எழுதி அனுப்புவார். அதில் ஒரு குறுங்கவிதையோ, சங்கீத சமாச்சாரமோ, குற்றாலச் சாரல் பற்றிய செய்தியோ இருக்கும். அந்தச் சின்ன அஞ்சலட்டைக்குள் அதிக பட்சம் எவ்வளவு எழுத முடியுமோ, அவ்வளவு எழுதியிருப்பார். ‘முதுமை காரணமாக இப்போதெல்லாம் எங்குமே செல்ல முடிவதில்லை. வீரகேரளம்புதூரிலேயே இருக்கிறேன். நீ இங்கு வா. ஆசி’ என்றெழுதிய ஒரு கார்டு சென்ற ஆண்டில் வந்திருந்தது. ஒரு சில வாரங்களில் வீரகேரளம்புதூர் செல்லும் வாய்ப்பு வந்தது. கொஞ்சம் இளைத்திருந்த பெரியப்பா என்னைக் கண்டது எழுந்திருக்க முடியாமல் எழுந்து வந்து கட்டியணைத்து கன்னங்களில் மாறி மாறி முத்தினார்.

‘மிருதங்கத்த எப்பவோ கைகளுவிட்டெ. ஆர்மோனியமாது வாசிக்கியாய்யா’ என்று கேட்டார். ‘அப்பப்பொ வாசிக்கென். அன்னைக்குக் கூட நாத தனுமனிஷம் வாசிச்சென்’ என்றேன். ‘நானும் அன்னைக்கு டெலிவிஷன்ல சின்னப்பா காதல் கனிரசமே பாடும் போது ஒன்னத்தான் நெனச்சுக்கிட்டென்’ என்றார். சில மாதங்களுக்கு முன் என் தம்பி என்னிடம் இனி நாம் வீரகேரளம்புதூருக்குச் செல்லும் அவசியமில்லை என்ற அர்த்தத்தில் விநாயகத்துப் பெரியப்பாவைப் பற்றிய சேதி சொன்னான். அதுவே அவனுக்கு தாமதமாக வந்த செய்தி. அன்றைக்கு முழுக்க என் மனதில் நாததனுமனிஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

[email protected]