நாறும்பூமாலை

‘என்னோட ரெண்டாவது புஸ்தக வெளியீட்டு விளாவுக்கு நீங்க அவசியம் வரணும்’.

இரண்டு மாதங்களுக்குமுன்பே சொல்லிவிட்டார், எழுத்தாளர் நாறும்பூநாதன். நாறும்பூநாதன் என்ற பெயரில் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார் என்னும் செய்தியே எனக்கு ஓராண்டுக்கு முன்னர்தான் தெரிய வந்தது.சொன்னவர் நாஞ்சில் நாடன் சித்தப்பா. திருப்புடைமருதூர் சிவபெருமானின் பெயரான நாறும்பூநாதனின் பெயரை வைத்துக் கொண்டு ஒரு மனிதர் நடமாடுகிறார் என்ற செய்தியும், அதிலும் அவர் எழுதுகிறவர் என்கிற கூடுதல் தகவலும் என்னை ஆச்சரியப்படுத்தின. இத்தனைக்கும் அவர் திருநெல்வேலியிலேயே வேறு இருக்கிறார்.

நாறும்பூநாதனை நான் கேள்விப்பட்டிருந்த சில மாதங்களிலேயே என்னைப் பார்க்க வந்திருந்தார். இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி சென்றுவிட்டு சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த என்னை அவர் வந்து சந்தித்த போது, ஆனந்த விகடனில் நான் ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் அவர் என்னுடைய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தையும் படித்து முடித்திருந்தார். முதன்முதலில் சந்தித்தபோது எங்கள் இருவரையுமே இணைத்தது ‘கூச்சம்’. தன் ‘பளபளக்கும்’ தலை குனிந்து அவரும், கண்ணை மறைக்கும் சிகை ஒதுக்கி நானும் அவ்வப்போது ஒருவர் முகம் மற்றவர் பார்த்து ஒரு சில வார்த்தைகள் பேசிக் கொண்டோம்.

சென்னைக்கு நான் திரும்பிய பிறகு இயல்பாக ஒருசில மின்னஞ்சல்களிலும், தொலைபேசி அழைப்புகளிலும் பேசிக் கொண்டோம்.அதன்பின் நான் திருநெல்வேலிக்குச் செல்லும் போதெல்லாம் நாறும்பூநாதனைச் சந்திக்காமல் வருவதில்லை.எங்கள் சந்திப்பில் தவறாது இடம்பெறக்கூடிய மற்றொருவர், ஜானகிராம் ஹோட்டலின் பங்குதாரரோ என்று ஆரம்பத்தில் நான் சந்தேகித்த ‘கவிஞர்’ க்ருஷி. க்ருஷி ஸார்வாளும், திருநெல்வேலியின் ஜானகிராம் ஹோட்டலும் சாகித்ய அகாடமி விருதும், சர்ச்சையும் போல பிரித்துவிடவே முடியாத மாதிரி அவ்வளவு நெருக்கம். இரண்டு மாதங்களுக்குமுன்ஒருமாலைவேளையில் ஜானகிராம் ஹோட்டலின் Roof gardenஇல் வைத்துத்தான் தோழர் நாறும்பூநாதன் தனது இரண்டாம் புத்தக வெளியீட்டு விழா பற்றிச் சொன்னார். ‘தம்பி, நீங்க வரலேன்னா இந்த விளா நடத்தியே ப்ரயோஜனமில்ல பாத்துக்குங்க’. சரித்திர நாடகங்களில் நடிக்கும் ஹெரான் ராமசாமியின் குரலை ஞாபகப்படுக்கிற ஒலியில் க்ருஷி ஸார்வாள் கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னார்.

திருநெல்வேலிக்கு வர இருப்பதை வழக்கம்போல குஞ்சுவுக்கும், பின் மீனாட்சிக்கும் சொல்லியிருந்தேன்.நெல்லை எக்ஸ்பிரெஸ்ஸில் போய் இறங்கியவுடனேயே மீனாட்சி ஃபோனில் அழைத்தான்.

‘வந்துட்டேளா சித்தப்பா?நான் எப்பொ எங்கெ வரணும்?’

‘சாயங்காலம் ஜானகிராம் ஓட்டலுக்குப் போகணும். வந்துரு.’

‘விஞ்சைக்குப் போயிருவோமெ!நாளாச்சுல்லா.அண்ணாச்சியும் ஒங்கள பாத்தா சந்தோசப்படுவா’.

‘ஏ மூதி!திங்கிறதுலயெ இரி.ஜானகிராம் ஓட்டல்ல நம்ம நாறும்பூ ஸாரோட பொஸ்தகம் வெளியிடுற விளால’.

‘பொஸ்தவமா?சரியாப் போச்சு. எனக்கும் எலக்கியத்துக்கும் என்ன சித்தப்பா சம்பந்தம்?நீங்க போயிட்டு வாங்க’.

‘எல எனக்கு மட்டும் என்ன சம்பந்தம் இருக்கு? மதிச்சு கூப்பிடுதாங்க. வராம இருந்திராத’.

சாயங்காலம் மேலரதவீதி வழியாக குஞ்சு, மீனாட்சியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது ’சோனா’ மாமா கடையை அடுத்த சுவரைக் காண்பித்து மீனாட்சி ‘சித்தப்பா, அங்கெ பாருங்க’ என்றான். ‘எழுத்தாளர் நாறும்பூநாதனின் புத்தக வெளியீட்டு விழா’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த்து . பெரிய எழுத்தில் ‘சுகா’ என்று அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் சங்கடமாக இருந்த்து. ‘சே என்னல இது? பெரிய பெரிய ஆட்கள் பேரயெல்லாம் சிறுசா போட்டு நம்ம பேர அத்தா தண்டிக்கு போட்டிருக்கங்க?’ என்றேன். ’என்ன சித்தப்பா இப்பிடி சடச்சுக்கிடுதிய! மூங்கில் மூச்சு என்னா ரீச்சுங்கிய! அத படிச்சுட்டு நம்ம ஊர்ல எத்தன பேரு ஒங்கள பாக்கணுன்னு துடியா துடிக்காங்க, தெரியுமா?’ என்றான், ‘மூங்கில் மூச்சு’ தொடரின் ஒரு அத்தியாயத்தைக் கூட இன்றுவரை படித்திராத மீனாட்சி.

ஏற்கனவே கொஞ்சம் தாமதமாக போகலாம் என்று குஞ்சு சொல்லியிருந்தான். ‘எல நீதான் சீஃப் கெஸ்ட்டு. நீ மொதல்லயெ போயி பறக்க பாத்துட்டு உக்காந்திருக்கக் கூடாது.கொஞ்சம் லேட்டா போனாத்தான் ஒரு பரபரப்பு இருக்கும்’. அவன் எதிர்பார்க்கிற பரபரப்பில் நானே பயந்து விடுவேன் என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தும், ஏனோ அதற்கு ஆசைப்பட்டான். ’சும்மா கெடல, கோட்டிக்காரப்பயலெ’ என்று சொல்லிவிட்டு, சரியான நேரத்துக்கே டவுணிலிருந்து கிளம்பிவிட்டேன். ஆனாலும் அன்றைக்குப் பார்த்து ‘மக்கள் தளபதி’ ஜி.கே.வாசன், ‘அரசியல் துருணோச்சாரியார்’ ப.சிதம்பரம், ‘இளம் பெரியார்’ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘இளைய தலைவர்’ கார்த்தி சிதம்பரம் போன்றோர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டதுக்காக நகர் முழுவதும் பேனர்களும், வரவேற்புத் தோரணங்களும், வாகனங்களுமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக டவுணிலிருந்து ஜங்ஷன் செல்ல பத்து நிமிடங்கள் ஆயின. வழக்கமாக பதினைந்து நிமிடங்களில் சென்று விடலாம்.

ஜானகிராம் ஹோட்டலின் மாடிப்படிகளில் அவசர அவசரமாக ஏறினோம். விழா நடைபெறும் வாசலில் நாறும்பூநாதனும், க்ருஷி ஸார்வாளும் நின்று கொண்டிருந்தனர்.‘தம்பி, இன்னும் ஒங்க காலு சரியாகல போல தெரியுதெ!’ க்ருஷி ஸார்வாளின் தொண்டை வழியாக ஹெரான் ராமசாமி என்னிடம் அக்கறையாகக் கேட்டார்.‘எல்லாரும் வந்தாச்சு.உள்ள வாங்க’.கைபிடித்து அழைத்துச் சென்றார் நாறும்பூநாதன்.உள்ளே தி.க.சி தாத்தா, தோப்பில் முகம்மது மீரான் அண்ணாச்சி, நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி போன்றோர் அமர்ந்திருந்தனர்.நீண்ட வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த ’வானம்பாடி’ சங்கர் சித்தப்பாவின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன்.மேடையில் ‘திருவுடையான்’ தபலா வாசித்துக் கொண்டே அருமையாகப் பாடிக் கொண்டிருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு மதுரை புத்தகக் கண்காட்சியின்போது திருவுடையானின் கச்சேரியைக் கேட்டு ரசித்து, அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஞாபகம் வந்தது. தாளவாத்தியம் வாசித்துக் கொண்டே பாடுவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. முயன்று பார்த்தால்தான் தெரியும். பலமுறை முயன்று கேவலப்பட்டிருக்கிறேன்.(அதேபோலத்தான் ஒரு கையில் மணியும், மற்றொரு கையில் தீபாராதனையும் காட்டுவது. முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்).திருவுடையானுக்கு முன்பே ‘கரிசல் குயில்’ கிருஷ்ணசாமி பாடிவிட்டதாகச் சொன்னார்கள். அவர் குரலைக் கேட்க முடியாமல் போனதில் வருந்தினேன். திருவுடையானைப் பற்றி ஒருமுறை இளையராஜா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ’ஸார், திருவுடையான்னு ஒரு பாடகர். கம்யூனிஸ்ட் கட்சி மேடைகள்ல . . .’ நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘ஆங், தெரியும். ‘விருமாண்டி’ பட்த்துல ‘கருமாத்தூர் காட்டுக்குள்ளே’ பாட்டு பாட வச்சிருந்தேனே’ என்றார்.

என்னை உள்ளே அனுப்பிவிட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்த குஞ்சு பதற்றமான முகத்துடன் உள்ளே வந்து என்னருகில் அமர்ந்து கொண்டான்.

‘ஏம்ல ஒருமாரி இருக்கெ?’

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெதுவான குரலில் கிசுகிசுத்தான்.‘வாசல்ல படியேறி வார ஒவ்வொருத்தர்க்கிட்டெயும் க்ருஷி ஸார்வாள், இந்தா நிக்காரு பாத்தேளா!இவாள்தான் ‘மூங்கில் மூச்சு’ல வார குஞ்சு’ன்னு அறிமுகப்படுத்த ஆரம்பிச்சுட்டா.விட்டா என் நெத்தில திருநாறு பூசி கைல கவர் குடுத்துருவாங்களோன்னு பயமாயிட்டு. அதான் நைஸா உள்ள வந்துட்டென்.’

தி.க.சி தாத்தா, ‘தேநீர்’ நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி, எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா, எழுத்தாளர் உதயசங்கர் போன்றோருடன் மேடையில் உட்கார்ந்திருக்கும் போது மனதுக்குள் தயக்கமாகவே இருந்தது. அசல் எழுத்தாளர்களான இவர்களுடன் சரிசமமாக என்னையும் உட்கார வைத்திருக்கிறார்களே என்கிற சங்கோஜம் விழா முடியும்வரை என் மனதைவிட்டு அகலவே இல்லை. இந்த விழாவில் தோழர் பவா செல்லத்துரையும், அவரது துணைவியார் கே.வி.சைலஜாவும் கலந்து கொள்வதாக இருந்தது. அவர்கள் இருவருமே எனக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழி உறவுக்காரர்கள். நேரில் சந்திக்கக் காத்திருந்தேன். விழாவன்று காலையில்தான் அவர்கள் வரவில்லை என்னும் செய்தியை நாறும்பூநாதன் சொன்னார். குறிப்பாக தோழர் பவா செல்லத்துரையைச் சந்திக்க அதிகம் விரும்பினேன். காரணம், புகைப்படங்களில் அவரைப் பார்க்கும் போது என்னைவிட அவர் நிறம் என்று தோன்றுகிறது. அருகருகில் அமர்ந்து டெஸ்ட் செய்து பார்க்கும் வாய்ப்பு நழுவிப் போனதில் வருத்தம்தான்.

ஒவ்வொருவர் பேச்சிலுமிருந்து ஒவ்வொரு வரியை உருவி குத்துமதிப்பாகப் பேசி சமாளித்து விடலாம் என்ற யோசனையில் சிந்திப்பது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்த என்னை அநியாயத்திலும் அநியாயமாக முதலிலேயே பேச அழைத்து விட்டார்கள். நான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து மைக் இருக்கும் இடத்துக்கு ஒருமாதிரியாக நீந்திச் சென்றடைந்தேன்.‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ எழுதிய நாறும்பூநாதனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள்’ என்று நான் பேசிய முதல் வரி மட்டும்தான் என் காதில் விழுந்தது. என் பேச்சுக்கு நடுவே நான்கைந்து இடங்களில் கைதட்டலெல்லாம் கூட கேட்டது. என்ன பேசினேன் என்றுதான் தெரியவில்லை.தோழர் நாறும்பூ வீடியோ ஏற்பாடு செய்திருந்தாரா என்று கவனிக்கவில்லை. ஒருவேளை எடுத்திருந்தால் அதைப் பார்த்து நான் பேசியதைத் தெரிந்து கொள்ள ஆவல்.ஒரு எழுத்தாளனை ஊக்குவிக்கும் விதமாக மிகச் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து தி.க.சி தாத்தாவிலிருந்து அனைவருமே பேசினார்கள்.அநேகமாக எல்லோருமே எழுதி கையோடு கொண்டு வந்திருந்த குறிப்புகளுடன் பேசினார்கள். அதுவும் கீரனூர் ஜாகீர் ராஜா ஒரு முழுநீள கட்டுரை எழுதி வந்து குரல் நடுங்க வாசித்து முடித்து, என்னருகில் அமர்ந்து ஒட்டுமொத்த மேடையையும் லேசாகக் குலுக்கினார்.‘நாறும்பூரெண்டாம் புஸ்தகம் எளுதியிருக்கதெ எனக்கு இன்னைக்குதானெ தெரியும்’ என்கிற விதமாக தோப்பில் அண்ணாச்சி படு இயல்பாகப் பேசினார்.வண்ணதாசன் அண்ணாச்சி தன் பேச்சில் எழுத்தாளர் உதயசங்கரின் எழுத்துகளை சிலாகித்துச் சொன்னார்.சமீபத்தில்தான் உதயசங்கர் எழுதிய ‘முன்னொரு காலத்திலே’ புத்தகத்தைப் படித்திருந்தேன் என்பதால் வண்ணதாசன் அண்ணாச்சியின் பாராட்டு சரியாகவே இருந்தது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்த்துச் செய்தியை தோழர் பாஸ்கரன் மேடையில் வாசித்தார்.அதில் சற்றும் எதிர்பாராவிதமாக என்னை பாராட்டி கூச்சத்தில் நெளிய வைத்தன சில வரிகள்.அதை மிஞ்சும் விதமாக ஐயா டி.செல்வராஜ் அவர் பங்குக்கு என்னை கலவரப்படுத்தினார்.‘ஒங்க எளுத்து எனக்கு ரொம்பப் புடிக்கும்.நான் எளுதுன ‘தோல்’ நாவல படிச்சு பாத்து ஒங்க அபிப்ராயத்த எளுதுங்க’.

விழா முடியும்வரை குஞ்சு ஒருவித பதற்றத்துடனேயே இருந்ததை கவனித்தேன்.‘ஏம்ல வெளக்கெண்ணெ குடிச்சா மாரியே இருக்கெ?’ என்று கேட்டதற்கு, ‘போலெ போ. எந்த நேரம் க்ருஷி ஸார்வாள் மேடையேறி ‘அடுத்து ‘மூங்கில் மூச்சு’ புகழ் குஞ்சு ‘நான் ஆளான தாமர’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்’னு சொல்ல்லீருவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்’ என்றான்.

தோழர் நாறும்பூநாதனை நான் போய் பாராட்டாவிட்டாலும் அவர் பாரட்டுக்குரியவர்தான். தொழிற்சங்க வேலைகளுக்கு இடையே அவ்வப்போது எழுதிவருகிற அவர், இனிவரும் காலங்களில் நிதானமாக எழுதுகிற பட்சத்தில் இன்னும் வலுவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பது என் அபிப்ராயம். இந்த விழாவில் நான் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமான ஓர் உதவியை நாறும்பூநாதன் செய்தார். சொல்வனம் பிரசுரம் வெளியிட்ட எனது ‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றிருக்கிற ‘திருநவேலி’யின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் மற்றும் கோட்டோவியங்கள் தந்த படைப்பாளிகளை சொல்வனம் சார்பாக கௌரவப்படுத்தும் வாய்ப்பை தனது விழாமேடையிலேயே அமைத்துத் தந்தார்.

[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வள்ளிநாயகத்தின் ஓவியம் ஒன்று]

[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இசக்கி எடுத்த ஒளிப்படம் ஒன்று]

காலம் சென்ற புகைப்படக் கலைஞர் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டியையும், ஓவியர் பொன் வள்ளிநாயகத்தையும் எழுத்தாளர் நாறும்பூநாதனின் ‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ மேடை கௌரவப்படுத்தியது.

[ஓவியர் பொன் வள்ளிநாயகம்]

[அருண்குட்டி]

ஓவியர் வள்ளிநாயகம் எப்போதும் என்னுடன் தொடர்பிலேயே இருக்கிற என் தம்பி.ஆனால் இசக்கி அண்ணாச்சியையோ, அவரது குடும்பத்தினரையோ நான் அறிந்தவன் அல்லன். ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அதிகம் சிலாகித்த இசக்கி அண்ணாச்சியின் புகைப்படங்கள் ‘தாயார் சன்னதி’ புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.இசக்கி அண்ணாச்சியைச் சந்தித்ததில்லை. ஆனால் சென்னைக்கு நான் ரயில் ஏறும்போதுரயில்வே ஸ்டேஷனில் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டு சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் நின்றார். இசக்கி அண்ணாச்சியின் கைகள்தான் அவை.

நயினார்

திருநெல்வேலி டவுணில் உள்ள ‘நேத்தாஜி போஸ் மார்க்கெட்’ பக்கம் செல்லும் போது, தமிழ்ச்சங்கம் தெருவிலிருந்து நயினார் பிள்ளை தாத்தாவின் குரல் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடியும்.

‘எல, அவன் என்ன சொல்லுதான்?’

‘கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் லோட சட்டுப்புட்டுன்னு ஏத்துங்க’.

‘யாவார நேரத்துல அங்கெ என்ன இளிப்பு வேண்டிக்கெடக்கு’.

‘தூக்கி பொத்துன்னு போடதுக்கு அது என்ன அரிசிமூட்டயால. காய் அடிபடுது பாரு. ம்ம்ம் . . பாத்து’.

வாழைக்காய் மண்டி வைத்திருந்த நயினார் பிள்ளை தாத்தாவைப் பற்றிய நினைவு வரும் போதெல்லாம், அவரது உருவம் மனதில் கலங்கலாகத் தோன்றித் தெளிவடையும் முன்பே, அவரது காத்திரமான தடித்த குரல் துல்லியமாகக் காதில் ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது.

நன்கு நரைத்த, அடர்த்தியான தொங்கு மீசையும், வழுக்கைத்தலையும், ‘நீரில்லா நெற்றி பாழ்’ என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துகிற, திருநீற்று நெற்றியும், பட்டு ஜிப்பாவும், அகலக்கரை வேட்டியும், தோளில் தொங்கும் நீள பட்டு அங்கவஸ்திரமுமாக எப்போதும் காட்சியளிக்கிற நயினார் பிள்ளை தாத்தாவைத் தெரியாதவர்களே அப்போது திருநெல்வேலியில் இருந்திருக்க முடியாது. காந்திமதியம்மையை தன் தாயாகவும், நெல்லையப்பர் கோயிலை தன் தாய்வீடாகவும்தான் நயினார் பிள்ளை தாத்தா நினைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், போனோமா, பொற்றாமரையில் கால் நனைத்தோமா, கொடிமரத்தை வணங்கி, பின் அம்மையையும், அப்பனையும் வணங்கி சிவமந்திரம் சொன்னோமா என்று எல்லோரையும் போல இருந்திருப்பார். நெல்லையப்பர் கோயிலுக்கு ஒரு யானையை வாங்கி விட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்காது.

நயினார் பிள்ளை தாத்தா வழங்கிய யானைக்குட்டி வந்த பிறகு, நெல்லையப்பர் கோயிலுக்கு வரும் ஜனங்களின் கூட்டம் அதிகரித்தது.

‘வாளக்காக்கட மொதலாளி நெல்லேப்பர் கோயிலுக்கு ஆன வாங்கி விட்டிருக்காள்ல்லா. மொத நாளெ போய் பாத்துட்டென்’.

பார்க்கும் உயிர்கள் அனைத்திடமும் அளவிடமுடியா பாசத்துடன் பழகிவிட முடிகிற, நெல்லையப்பர் கோயிலுக்கு பால் எடுத்து ஊற்றுகிற கல்யாணி ஆச்சி சொன்னாள்.

‘பச்சப்புள்ள மாரி என்னா களயா சிரிக்கிங்கெ. அப்பிடியெ ஒக்கல்ல தூக்கிட்டு வந்திரலாமான்னு இருக்கு’.

தாத்தா வாங்கிக் கொடுத்த யானைக் குட்டிக்கு தாத்தாவின் பெயரான ‘நயினார்’ என்ற பெயரே சூட்டப்பட்டது. அதுவரை தவழ்ந்து கொண்டிருந்த சிறுகுழந்தை, நடக்க ஆரம்பித்து, பின் தத்தித் தத்தி ஓடுவதைப் பார்த்து மகிழும் குடும்பத்தினரின் மனநிலையிலேயே, திருநெல்வேலி மக்கள் அனைவரும் அப்போது குட்டி யானை நயினாரைப் பாத்து ரசித்து வந்தார்கள்.

வழக்கமான சம்பிரதாயத்தின்படி நெல்லையப்பர் காந்திமதியம்மையின் நீராடலுக்காக தாமிரபரணிக்கு தன்ணீர் எடுக்க திருமஞ்சனக் குடம் எடுத்து பட்டர்கள் செல்லும் போது, நயினாரும் உடன் செல்லும். நயினாரைப் பார்த்துக் கொள்ள புதிதாக நியமிக்கப் பட்ட பாகனும், அவரது சிறுமகனும் நயினாருடனேயே செல்வார்கள். காந்திமதியம்மன் கோயில் வாசல் வழியாக வந்து அம்மன் சன்னதி தாண்டி, கீழப்புதுதெரு முக்கு திரும்புமுன், பட்டர்கள் முன்னால் சென்று கொண்டிருக்க, வேறெந்த சிந்தனையுமில்லாமல், விறுவிறுவென அம்மன்சன்னதியின் கடைசியில் இருக்கும் எங்கள் வீட்டுக்குள் நயினார் நுழைந்து விடும். அதற்கு முன்பே அம்மா தயாராகக் காத்துக்கொண்டிருப்பாள். காலையில் அடுக்களைக்குள் நுழையும் போதே, ‘எம்மா. நேரம் ஆயிட்டெ. இந்தா இப்பம் நயினார் வந்துருமெ’. அவசர அவசரமாக ஏழெட்டு தட்டுகள் இட்லி ஊற்றுவாள். வாசல் கேட்டைத் தாண்டி, தார்சா நடையில் ஏறி, பட்டாசல் வழியாக, மானவெளியில் வந்து நின்று அடுக்களைப் பக்கம் நின்று நயினார், அம்மாவைத் தேடும் போது சிலசமயம் அம்மா ஒளிந்து கொள்வதுண்டு. தும்பிக்கையை அடுக்களைக்குள் நுழைத்து, நயினார் அங்குமிங்குமாக தடவித் துழாவி அம்மாவைத் தேடும் போது, பாகன் உட்பட நாங்கள் அனைவரும் சிரித்தபடி அருகில் நிற்போம்.

ஒரு பெரிய எவர்சில்வர் சட்டி நிறைய உள்ள இட்லிகளை அள்ளி அள்ளி நயினாரின் வாயில் அம்மா திணித்த பிறகு நயினார் கிளம்பிச் செல்லும். மீண்டும் மானவெளியிலிருந்து பட்டாசல் வழியாக, தார்சாவைக் கடந்து வீட்டுக்குள்ளிருந்து நயினார் வெளியே வந்து தெருவில் இறங்கும் போது ஜனக்கூட்டம் அதிசயமாகப் பார்த்தபடி காத்து நிற்கும். அநேகமாக எங்கள் வீட்டிலிருந்து நயினார் வெளியே வரும் போது, நயினாரின் மேல் நான் இருப்பேன். நயினார் இட்லி சாப்பிட்டு முடித்தவுடன், சிறுவனான என்னைத் தூக்கி பாகன், நயினாரின் மேல் ஏற்றி விடுவார். (ஒருமுறை இட்லிக்கு முன்பே நான் ஏற முயலும் போது, மச்சுப்படியின் கீழ்ச்சுவற்றோடு சுவராக என்னை வைத்து செல்லக் கோபத்துடன் முட்டியிருக்கிறது) டிராயரைத் தாண்டி நயினாரின் தடித்த தோலும், கூர்மையான அதன் ரோமங்களும் சொல்லமுடியா பிரதேசங்களில் குத்தும். என் வயதையொத்த சிறுவர்கள் யானை மீது என்னைப் பார்த்து பொறாமை கொள்வதைப் பார்க்கும் போது, அந்த அவஸ்தை மறந்து போய் இந்த உலகத்திலேயே பெரிய ஆள் நாம்தான் என்ற எண்ணம் தோன்றும் . கீழப்புதுத்தெரு வழியாகச் செல்லும் போது ராமசுப்ரமணியனின் பெரிய கேட் போட்ட வீட்டைத் தாண்டும் போதெல்லாம் எப்படியாவது இதை அவன் பார்க்க வேண்டுமே என்றிருக்கும். ஒருநாளும் அது நடந்ததில்லை. ஆனால் மறுநாள் ராமசுப்ரமணியன் சொல்வான்.

‘நேத்து நீ பச்ச டிராயர் போட்டு யான மேல உக்காந்து போனத நான்லாம் பாக்கலடெ’.

அந்த வயதிலும் குஞ்சுவின் கவலை வேறாகவே இருந்தது.

‘நீ யான மேல போனத செல்வியக்கா பாக்கலெல்லா?’

திருப்பணிமுக்கில் நயினாரின் மேலிருந்து பாகன் என்னை இறக்கி விடுவார். சொல்லி வைத்த மாதிரி அங்குதான் நயினார் லத்தி போடும். சிறுவர்கள் சுடச் சுட அதை ஆர்வத்துடன் மிதிக்கத் துவங்குவார்கள். இது தவிர திருநெல்வேலியின் ரதவீதிகளில் எங்கு நயினார் லத்தி போட்டாலும், எப்படியோ மோப்பம் பிடித்தபடி குஞ்சு அங்கு வந்து சேர்ந்து விடுவான்.

‘கால்ல இருக்குற புண்ணுல்லாம் தாவலயாயிரும்ல. யான மேல உக்காந்து போயி ஒரு மைரு ப்ரயோஜனமும் இல்ல. வா. வந்து நல்லா மிதி’.

நாட்கள் செல்ல செல்ல, எங்கள் வீட்டு வெளிவாசலுக்குள் நுழைய முடியாதபடிக்கு நயினார் பெரிதாக வளர்ந்து விட்டபடியால், வாசலுக்கே அம்மா இட்லி தட்டோடு காத்து நிற்க ஆரம்பித்தாள். ஆனால் இது கொஞ்ச நாட்களுக்குத்தான் நடந்தது. அதற்குப் பிறகு நயினாரை அதிகமாக வெளியே அழைத்து வராமல் கோயிலுக்குள்ளேயே வைத்திருந்தார்கள். காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியுடன் தலையை வலமும், இடமும் ஆட்டியபடி நிற்கும் நயினாரை கோயிலுக்குள்ளேயேதான் போய்ப் பார்க்க வேண்டியதிருந்தது. சில சமயங்களில் மேலும், கீழுமாக தலையை ஆட்டியபடி பிளிறிக் கொண்டிருக்கும். நயினாருக்கும், எங்களுக்குமான (குறிப்பாக நயினாருக்கும், எனக்குமான) உறவு ஒரு முடிவுக்கு வரத் துவங்கிய நேரமது.

நயினாருக்கு மதம் பிடித்திருப்பதாகவும், கோயிலுக்குள்ளேயே ஒரு ஆளை மிதித்துக் கொன்றுவிட்டதாகவும் வதந்திகள் வெளியே உலவின. மனதுக்குள் இருந்த நயினார் அப்படியே இருக்க, ‘மதம்’ பிடித்ததாகச் சொல்லப்பட்ட நயினாரை போய்ப் பார்க்க மனமில்லாமல், சில காலம் கோயிலுக்கே செல்லாமல் இருந்தோம். பிறகொரு நாள் நயினாரைக் காட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்கள் என்ற செய்தி வந்தது. நல்ல வேளை, அந்த செய்தி வந்தபோது நயினார் பிள்ளை தாத்தா உயிருடன் இல்லை.

நயினாருக்கு உண்மையிலேயே மனம் கலைந்து போன செய்தி உண்மை என்பது, கோயில் காவலாளி நெல்லையப்பன் மூலம் தெரிய வந்த போது சங்கடமாக இருந்தது.

‘எய்யா, ஆறுமொவ நைனார் சன்னதிக்கிட்டெ வச்சு ஒருமட்டம் ஆனைக்கு கோட்டி புடிச்சுட்டு. பேக்கூப்பாடு போட்டுக்கிட்டு அங்கெயும் இங்கெயுமா ஓட ஆரம்பிச்சுட்டு. நான் அந்தாக்ல பேஷ்கார் ரூம்புக்குள்ள ஓடி ஒளிஞ்சுட்டென். நம்ம பெரிய கோனாரு நந்தவன கேட்டத் தாண்டி முள்ளுக்குள்ள வேட்டியில்லாம விளுந்து கெடந்தாரு. இது கேட்டுக்கு வெளியவெ நிக்கி. ரொம்ப நேரம் பாகன் மல்லுக்கட்டித்தான் ஒரு வளிக்கு கொண்டாந்தாரு. அப்பொறந்தான் இது சரிப்பட்டு வராதுன்னு கொண்டு போயிட்டாவொ’.

வாழ்க்கையில் எத்தனையோ யானைகளைப் பார்த்திருக்கிறேன்தான். வண்ணதாசன் அண்ணாச்சி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிற ‘பொட்டல்புதூர் யானை’, சர்க்கஸில் பெரிய தொப்பி போட்டு சைக்கிள் ஓட்டுகிற யானை, ‘தேவர் ஃபிலிம்ஸ்’ படங்களின் துவக்கத்தில் வந்து பிளிறுகிற யானை, ‘அன்னை ஓர் ஆலயம்’ திரைப்படத்தில் தாயைப் பிரிந்து வாடி, என்னையும், குஞ்சுவையும் அழவைத்த குட்டி யானை என பல யானைகள். ஆனாலும் பார்க்கும் யானைகள் எல்லாவற்றிலும் நயினாரைத் தேடுகிற அந்த சிறுவனின் மனசு இன்னும் அப்படியே இருக்கிறது.

என்னை விட பெரிய யானை கோட்டியான நண்பர் ஜெயமோகன், யானையைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார், சமீபத்தில் எழுதிய ‘யானை டாக்டர்’ வரை. பொதுவாகவே காப்பியிலிருந்து காந்திவரை எதைப் பற்றி எழுதினாலும் தலகாணித் தண்டிக்கு பக்கம் பக்கமாக எழுதும் ஜெயமோகன், குறிப்பாக யானையைப் பற்றி எழுதும் போது கூடுதலாக ‘சிவாஜி’ படத்து ரஜினிகாந்த் போல இரண்டு கைகொண்டு எழுதி விடுவார். எத்தனையோ கதைகளில், கட்டுரைகளில், நாவல்களில் அவர் எத்தனையோ கதாபாத்திரங்களைப் பற்றி சித்தரித்திருந்தாலும், ‘காடு’ நாவலில் அவர் விவரித்திருந்த ‘கீறக்காதன்’ என்னும் யானையைப் பற்றியே நான் அவரிடம் அதிகம் பேசியிருக்கிறேன். ‘காடு’ நாவலைப் படித்து முடித்த நாட்களில் ‘கீறக்காதன்’, என் சொப்பனத்தில் கூட வந்திருக்கிறது.

[நெல்லையப்பர் கோயில் ‘காந்திமதி’]

நயினாருக்குப் பிறகு ஒன்றிரண்டு யானைகள், நெல்லையப்பர் கோயிலுக்கு வந்ததாக அறிந்தேன். அப்போது நான் சென்னைக்கு வந்து விட்டேன். அவைகளின் பெயரையோ, மற்ற விவரங்களையோ அறிந்து கொள்ளும் ஆர்வம் வரவேயில்லை. தற்சமயம் நெல்லையப்பர் கோயிலில் உள்ள யானையின் பெயர் ‘காந்திமதி’ என்று சொல்கிறார்கள். சமீப கால திருநெல்வேலி பயணங்களின் போது, ‘காந்திமதி’யையும் பார்த்து, ஆசி வாங்குகிறேன். குட்டி நயினாருடன் குட்டிப் பாகனாக இருந்த, பெரிய யானைப் பாகனின் மகன், இப்போது ‘காந்திமதி’யின் பாகன். ‘காந்திமதி’யிடம் நான் ஆசி வாங்கும் போதெல்லாம், என்னை அடையாளம் தெரிந்து, எதுவுமே பேசாமல் புன்முறுவலுடன் என் கண்களை நோக்குவான்.

[நயினாரும், நயினார் பிள்ளையும்]

‘காந்திமதி’யின் கொட்டடிக்கு அருகிலேயே மாட்டப்பட்டிருக்கும் ஓவியம் ஒன்றில், நயினார் பிள்ளை தாத்தாவுடன் இணைந்து ‘குட்டி யானை நயினார்’ நின்று கொண்டிருக்கும். மனபிரமைதான் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், மனதுக்குள் ‘சும்மாயிருக்கியா மக்கா’ என்று நான் தொட்டு உறவாடி, விளையாடிய நயினார் என்னிடம் கேட்பதாகவே உணர்கிறேன்.

புகைப்பட உதவி :
ராமலக்ஷ்மி காந்திமதி யானை புகைப்படங்கள்
http://photo.net/leica-rangefinders-forum/00EkJuM