கடிதத்திலிருந்து விருது வரை . . .

வாணி மகாலுக்குள் நுழைந்தவுடன் வாசலின் இடதுபுறத்தில் ‘எழுத்துச் சித்தர்’ பாலகுமாரனின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வலது பக்க மேசையில் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதி, கையெழுத்து போட்டு, கைபேசி எண் குறித்த பின், உடல் வெப்பம் சரி பார்த்து, உள்ளங்கையில் சானிட்டைஸர் தெளித்து உள்ளே அனுப்பி வைத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு செல்லும் பொது நிகழ்ச்சி. நிறைய நாற்காலிகளில் பிளாஸ்டிக் வெண்கயிறு ஒட்டப்பட்டிருந்தது. 

‘யாரோ வர்றாங்க போல’ என்றேன்.

‘இல்ல ஸார். கோவிட்ல சீட் அரேஞ்ச்மெண்ட் இப்படித்தான் இருக்கும். நான் ஏற்கனவே தியேட்டர்ஸ்ல  பாத்தேன்’ என்றான், மனோஜ். 

அப்புறம்தான் கவனித்தேன். ஒரு நாற்காலி விட்டு ஒரு நாற்காலி கயிறால் கட்டப்பட்டிருந்தது.

வழக்கம் போல கடைசி வரிசையில் உட்காராமல் அதிக கூட்டம் இல்லாததால் ஆறாவது, ஏழாவது வரிசையில் உட்காரலாம் என்று நானும், மனோஜும் அமர்ந்தோம். அப்போதுதான் முன் பக்கக் கதவு வழியாக கவிஞர் கலாப்ரியா அரங்கத்துக்குள் நுழைவது தெரிந்தது. பாலகுமாரன் அறக்கட்டளையின் சார்பாக விருது பெறப் போகிற கலாப்ரியாவை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசி முடிக்கும்வரைக் காத்திருந்து விட்டு தன்னுடைய இருக்கையில் அமரப் போன கலாப்ரியாவின் அருகில் சென்று மாமா என்று வணங்கினேன். ‘ஆகா மருமகனே! எதிர்பார்க்கவே இல்ல’ என்று அருகிலுள்ள ஒன்று விட்ட நாற்காலியில் அமரச் செய்தார். எனக்கு ஒன்று விட்ட நாற்காலியில் வந்து அமர்ந்தார் ரங்கராஜ் பாண்டே. வழக்கமாக நாங்கள் பேசிக்கொள்ளும் அசலான தெக்கத்தி பாஷையில்  பாண்டேயும், நானும் பேசிக் கொண்டிருந்தோம். 

விழா துவங்கியது. விருது பெறுபவர், வழங்குபவர், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டனர். மேடையில் வந்து அமர்ந்த கவிஞர் ரவி சுப்பிரமணியத்தை முன் வரிசையில் மாஸ்குக்குள் ஒளிந்திருந்த ‘அளகிய முகம்’ சுண்டி இழுத்திருக்க வேண்டும். வணக்கம் சொன்னார். பதில் வணக்கமும் கிடைக்கப் பெற்றார். அவர்தான் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை எனக்கு அனுப்பியிருந்தார். நிகழ்ச்சியை பாலகுமாரனின் மகள் தொகுத்து வழங்கினார். முதலில் இல. கணேசன் பேச வந்தார். அவரது பிரத்தியேக உச்சரிப்புடன் ச் ப் த் ள் ழ் என அழுத்தம் திருத்தமாக பேசினார். பாலகுமாரனின் பிறந்த நாளை முன்னிட்டு நடக்க இருக்கும் நிகழ்வை தனது ‘பொற்றாமரை இயக்கம்’ நடத்தத் தயாராக உள்ளது என்று அறிவித்து விட்டு அமர்ந்தார். அடுத்து பாலகுமாரனின் தீவிர வாசகரான சசிக்குமார் பேசினார். ‘ஸாரோட நெறய புக்ஸ் என் வீட்டு ரேக்ல இருக்கும்’ என்று துவங்கி பாலகுமாரன் எப்படி அவருக்கு ஆசான் ஆனார் என்பதை மேடைப்பேச்சு தந்த பதற்றத்துடன் விளக்கிச் சொல்லி முடித்துக் கொண்டார். அடுத்து இல கணேசன் அவர்களின் அண்ணியாரும் , பாலகுமாரனின் தீவிர வாசகியுமான திருமதி சந்திரா கோபாலன் பேசினார். திருவையாற்றில் பிறந்த தன்னால் தியாக பிரும்மத்தையும், ஐயன் பாலகுமாரனையும் ஒருமுகமாகப் பார்க்க முடிவதாக உணர்ச்சிமயமாக சொன்னார்.  இந்த நேரத்தில் பின் வரிசையிலிருந்து மனோஜ் குறுஞ்செய்தி அனுப்பினான். ‘ஸார். நடேசன் பார்க் பொடி தோசக்கட இன்னும் தொறக்கலையாம். விசாரிச்சுட்டேன். வேற எங்கே சாப்பிடப் போகலாம்?’ என்று கேட்டிருந்தான். அவனுக்கு பதில் அனுப்ப முயன்றால் பேசிக்கொண்டிருக்கும் சந்திரா கோபாலன், ‘எல! இங்கெ ஒருத்தி கண்கலங்க பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்னல போன நோண்டிக்கிட்டிருக்கே?’ என்று ஏசிவிடுவாரோ என்று பயந்து அவரது பேச்சில் மட்டுமே கவனம் செலுத்தும் முகபாவத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு கார்ப்பரேட் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த சமயத்தில் தனக்கிருந்த தாழ்வுணர்ச்சியைப் போக்கியது, பாலகுமாரனின் ‘கரையோர முதலைகள்’ நாவலின் ஸ்வப்னா கதாபாத்திரம்தான் என்றார் சந்திரா கோபாலன். அடுத்து கவிஞர் ரவிசுப்பிரமணியன் பேச வந்தார். பாடும் போது கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டார். ரவி சுப்பிரமணியன் பேசும் போது அவருக்கும், பாலகுமாரனுக்கும் இடையே இருந்த உறவை, நட்பைப் பற்றி சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனக்கு ஆச்சரியமாகவும், புதிதாகவும் இருந்தன. ரவி சுப்பிரமணியத்தின் முதல் கவிதைத் தொகுப்புக்கு பாலகுமாரன் அணிந்துரை எழுதிய செய்தி, ‘இலக்கியம்லாம் வேண்டாம்டா. வசதியான வீட்டுப் பையன் நீ. உனக்கு எதுக்கு இந்த பொழைப்பெல்லாம்? இங்கே வந்தா சாகணும்டா. சொன்னா கேளுடா’ என்று பாலகுமாரன் தன்னிடம் வாஞ்சையும், அக்கறையுமாக சொன்ன விஷயங்கள் உட்பட ரவி சுப்பிரமணியன் சொன்ன அனைத்துமே சுவாரஸ்யமான தகவல்கள். பாலகுமாரன் பற்றி விலாவாரியாகப் பேசிவிட்டு ஒருவழியாக கலாப்ரியாவுக்கு வந்து சேர்ந்தார், ரவி. கவிஞர் கலாப்ரியாவின் புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்றான ‘விதி’ என்னும் கவிதையை வாசித்தார். 

‘அந்திக் கருக்கலில்

இந்தத் திசை தவறிய

பெண் பறவை

தன் கூட்டுக்காய்

தன் குஞ்சுக்காய்

அலைமோதிக் கரைகிறது.

எனக்கதன் 

கூடும் தெரியும்

குஞ்சும் தெரியும்

இருந்தும்

எனக்கதன்

பாஷை புரியவில்லை.

கூடவே கலாப்ரியாவின் மற்றொரு புகழ் பெற்ற 

‘கொலு வைக்கும் 

வீடுகளில்

ஒருகுத்து சுண்டல் 

அதிகம் கிடைக்குமென்று 

தங்கையைத் 

தூக்க முடியாமல் 

தூக்கி வரும்

அக்காக் குழந்தைகள்’ வரிகளைச் சொன்னார். நிகழ்வுக்கு வந்திருந்த கலாப்ரியா கவிதைகளை அதுவரை அறியாதோருக்கு நிச்சயம் அந்த வரிகள் அவரது கவியுலகத்துக்கு அழைத்துச் செல்ல உதவி புரிந்திருக்கும். கலாப்ரியாவின் கவிதைகளைத் தவிர்த்து விட்டு புதுக்கவிதையின் வரலாற்றை எழுதிவிட முடியாது என்று சொன்ன ரவி சுப்பிரமணியன் அடுத்து வாசித்த கலாப்ரியாவின் கவிதையொன்றை படமாக்க வேண்டும் என்றார்.

சந்திரோதயம் நன்கு

தெரியும் விதமாய் ஒரு தோட்டம்

தோட்டத்து

நெல்லி மரத்தில் 

கயிற்றால் ஒரு ஊஞ்சல்.

‘கருக்கலாகியும்

சமஞ்ச குமரிக்கு என்ன 

விளையாட்டுடி?’யெனச்

சத்தமாய் அம்மாவின்

கூப்பாடு;

அப்படியே குதித்து இறங்கி

ஓடுவாள்.

ஊஞ்சல் மட்டும் 

தனியே ஆடிக்கொண்டிருக்கும்

கைரேகை மங்கும் கருக்கலில்’.

இந்தக் கவிதையின் கடைசி வரியை வெகுவாக சிலாகித்தார், ரவி சுப்பிரமணியன். 

அடுத்து பேச வந்த ரங்கராஜ் பாண்டே பாலகுமாரனை சந்திப்பதுதான் தன் வாழ்வின் முக்கியமான விருப்பமாக இருந்ததாகச் சொல்லி தன் உரையைத் துவக்கினார். தனது பேட்டிகளின் வாத பிரதிவாத உத்திகளை பாலகுமாரனின் எழுத்துகளிலிருந்து பயின்று கொண்டதாகச் சொன்னார், பாண்டே.  இந்த சமயத்தில் என் மனம் நான் படித்திருந்த பாலகுமாரனின் எழுத்துகளை நோக்கி பாய்ந்தது. எல்லோரும் சொல்கிற மெர்க்குரி பூக்கள், அதிகம் பேர் சொல்லாத பலாமரம், அ.தி.மு.கவின் ‘ஜெ ஜா’ பிரிவின் சமயம் எழுதப்பட்ட உயிர்ச்சுருள் என ஒரு சின்ன ரவுண்ட் அடித்து பின் பாண்டேயிடம் வந்து சேரும் போது தான் மேற்கோள் காட்டுவதற்காக எடுத்து வைத்திருந்த கவிஞர் கலாப்ரியாவின் சில கவிதைகளை ரவி சுப்பிரமணியன் சொல்லி விட்டதாகச் சொல்லி செல்ல கண்டனம் தெரிவித்தார். பிறகு கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை மற்றும் ஜெயகாந்தனின் வரிகளை கலாப்ரியாவின் கவிதைகளாக்கி சொல்லி மகிழ்ந்தார். அதற்குப் பிறகு தி.ஜானகிராமனுக்கு கலாப்ரியா சமர்ப்பித்திருந்த கவிதையொன்ற வெகுவாக சிலாகித்தார், பாண்டே.

கூட்டிலிருந்து

தவறிவிழுந்த 

குஞ்சுப் பறவை

தாயைப் போலவே

தானும் பறப்பதாய்

நினைத்தது

தரையில் மோதிச்சாகும்

வரை.

மேடையில் முழங்கி, வீதியில் கொடி பிடித்துதான் அரசியல் பேச வேண்டுமென்றில்லை. கவிதை மூலமாகவும் வலுவாக நம் அரசியல் பார்வையைச் சொல்லலாம் என்பதற்கு கலாப்ரியாவின் ‘வளர்ச்சி’ என்னும் கவிதை மிகச் சிறந்த உதாரணம் என்றார், ரங்கராஜ் பாண்டே.

எங்கள் வீடுகளையொட்டி
ஒரு வாய்க்கால்
ஒரு காலத்தில்
அதன் நீர்
எல்லோருக்கும்
பலவழிகளில்
பயன் பட்டது
நாங்கள் குழந்தைகள்
வாழை மட்டையில்
தெப்பம் செய்து
தெரிந்தவரை
அலங்கரித்து கயிறு கட்டி
படித்துறையில் இருந்தபடி
எட்டும் மட்டும் மிதக்கவிடுவோம் பின்
இழுத்துக் கொள்வோம்.
மறுபடி செல்ல அனுமதிப்போம்
மறுபடி…..மறுபடி
தெப்பம் கொஞ்சங் கொஞ்சமாய் சிதைந்து
மட்டைகளாகி நீரோடு போகும்
மனமில்லாமல்
விளையாட்டைப் பிரிவோம்.
**** **** ****
இப்போது கெட்டுப் போய்
இழுப்பற்றுத் தேங்கிய நீரில்
குப்புற மிதக்கும்
என்புதோல்ப் பிணமொன்று
வீட்டருகே
ஒதுங்கி நிற்பதாய்ச் சொல்ல
கழியெடுத்துப் போய்
தள்ளி விட்டோம்
எங்கள் எல்லையைத் தாண்டி
எங்கள் எல்லைக்குள் நின்று
தயாராய் இருந்தார்
அடுத்தடுத்த வீடுகளிலும்
அவரவர் கழிகளோடு.

இறுதியாக பேச வந்த கலாப்ரியா தனது ஏற்புரையில் உணர்ச்சிமிகுந்தவராக இருந்தார். பாலகுமாரனுக்கும் தனக்கும் 70களின் துவக்கத்தில் ஏற்பட்ட கடிதத்தொடர்பு இன்றைக்கு அவர் பெயரில் தனக்கு வழங்கப்படும் விருது வரைக்கும் வந்திருப்பதை எண்ணி நெகிழ்ந்த அவர், இதை எங்கிருந்தாவது பாலா பார்த்துக் கொண்டுதானிருப்பான் என்று கலங்கினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் கலாப்ரியாவை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விருப்பம் அவரது எண்ணற்ற வாசகர்கள் பலருக்கு இருந்திருக்கும். இந்த கோவிட் கெடுபிடி காலத்தின் காரணமாக அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவிதை, கட்டுரை, நாவல் என தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலும் அது குறித்த எந்த சத்தமும் கொடுக்காதவர் கலாப்ரியா. அன்றைய ஏற்புரையிலும் சத்தமில்லாமல் நம் அருகில் அமர்ந்து நட்புடன் பேசிக் கொண்டிருப்பது போலத்தான் பேசினார். ‘ப்ரியா’ எனத் துவங்கி ‘பாலா’ என்று முடிந்த பாலகுமாரனின் கடிதங்கள் குறித்து கலாப்ரியா உணர்ச்சிமயமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது விருது பெற்றவரைப் போலவே அவர் இல்லை. அன்றைய மேடையில் அவருக்குச் சொல்லப்பட்ட வாழ்த்துகளை அவர் வாங்கிக் கொள்ளாதவராகவே இருந்தார். 

நானும்

எல்லாரும்

எல்லா வாழ்த்துக்களையும்

காலியாக்கிவிட்ட

நம் மனிதர்களுடன்

நாள் கடத்துகிறோம்.

இந்தக் கவிதையை எழுதியவர் அப்படித்தானே இருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.

நிகழ்ச்சி முடிந்த பின் கலாப்ரியாவிடம் ‘கெளம்புதேன் மாமா’ என்று விடைபெற்றுக் கொண்டேன். 

முகமூடி அணிந்திருந்த என்னை நோக்கி வந்த பாலகுமாரனின் மகன், ‘சுகா ஸார். நான் உங்க ரசிகன். அட்லீயின் கதை விவாதங்களில் உங்களைப் பற்றிப் பேசாத நாட்கள் இல்லை’ என்றார். அவரது தாயாரிடம் சென்று நான் வந்திருப்பதாகச் சொல்லி அழைத்து வந்தார். அவர்களும் வந்து ‘வணக்கம் சுகா’ என்று வணங்கினார்கள். பதிலுக்கு வணங்கி சில வார்த்தைகள் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு பதற்றத்தை மறைத்தபடி கிளம்பினேன். வாணி மகாலின் வாசலில் பாலகுமாரன் அறக்கட்டளையின் சார்பில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவும், யோகி ராம்சுரத்குமார் படம் அச்சிட்ட முகக்கவசமும் தந்தார்கள். பார்க்கிங் ஏரியாவில் பாலகுமாரன் விருதை சென்ற முறை பெற்றிருந்த கவிஞரும், சிறுகதையாசிரியருமான நரனும், எழுதுவதோடு நன்றாகப் பாடவும் செய்கிற கவிஞர் வெய்யிலும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சில வார்த்தைகள் பேசி விட்டு வண்டிக்குச் செல்லும் போது மனோஜ் பிளாஸ்டிக் டப்பாவைத் திறந்து ‘ஸா . . .ர்’ என்று அலறினான். டப்பாவை எட்டிப் பார்த்த போது என்னுடைய சந்தோஷ அலறலும் மனோஜின் அலறலுடன் சேர்ந்து கொண்டது. டப்பாவுக்குள் மூன்று இட்லிகள் மிளகாய்ப்பொடி நல்லெண்ணெய் தடவி பச்சைப்பிள்ளைகள் மாதிரி அழகாக இருந்தன. எடுத்துக் கொஞ்ச மனம் துடித்தது.

‘இருங்க ஸார். வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்துடறேன்’

சாலையைக் கடந்து சென்று மனோஜ் தண்ணீர் கொண்டு வருவதற்குள் இரண்டு டப்பாக்களில் ஒன்று காலியாகியிருந்தது. 

‘நீ சாப்பிடுடா’ என்று சொல்லிவிட்டு கைகழுவி தண்ணீர் குடிக்கும் போது வீட்டிலிருந்து அழைப்பு.

‘சாப்பிட்டுட்டேன்மா. ஒரு இலக்கிய நிகள்ச்சில இட்லி குடுக்கறதெல்லாம் அதிசயத்திலும் அதிசயம். அதுவும் நம்ம வீட்டு மொளாப்டி இட்லி. பாலகுமாரன் இருந்திருந்தாலும் இதத்தான் செஞ்சிருப்பாரு’ என்று துவங்கி ‘அத ஏன் கேக்கே? ஒலகம் பூரா ஃபேன்ஸ் இருக்கற பாலகுமாரனோட ஃபேமிலி மெம்பர்ஸ் எனக்கு ஃபேன்ஸாம். என்னத்தச் சொல்ல?!’ என்று சொல்லி முடிக்கவும் அதுவரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த, கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்த எதிர்முனைக்குரல் நிதானமாக அந்தக் கேள்வியைக் கேட்டது.

‘பாலகுமாரன்னா யாரு?’

ஜித்துமா . . .

 

 

எழுதப்பட்டிருந்ததா
இது முன்னரே
இக்கணம் கனவில்
உணரப்பட்டிருந்ததா
எந்த புள்ளியில்
துவங்கும் ஒரு
தினம்
எந்த தினத்தில்
நீ உன்னை
அறிந்தாய்
களிப்பில் மிதந்த போது
புதிரின் முதல் சொட்டாய்
காதலை சப்பு கொட்டிய போது
கண்ணீரில் பிசுபிசுத்த
யாரோ ஒருவனின்
கரங்களை பற்றும் போது
கடவுளில் வியக்கும் போது
திடுக்கிடுகிறோம்
யார் நமக்கு முன்
எல்லாம் தெரிந்து வந்து
நமக்குள்
இருந்து கொள்வது
ஏழு கடல்
ஏற முடியாத
எழுபது மலைகள் தாண்டி
எங்கள் உயிர்க்கிளி
கிறக்கத்தில்
இருப்பது எங்கே
உண்மை
வெறும் வார்த்தை இல்லை
இந்த கணத்தை இந்த கனவை
சிருஷ்டித்து
இதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்
எத்தனை அநீதி,
எம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

 

இளையராஜாவைப் பற்றி இப்படியெல்லாம் ஒரு மனிதன் எழுதியதைப் படித்த பிறகு எப்படி அவருடன் நட்பு கொள்ளாமல் இருக்க முடியும்? மணி எம் கே மணியுடனான நட்புக்கும், அவரது எழுத்துகளுக்கும் மேற்கண்ட வரிகள்தான் வாசலாக அமைந்தது.

மணியின் எழுத்துலகுக்குள் நுழைந்தால் ஏராளமான திரைப்படங்கள் குறித்து எழுதித் தள்ளியிருந்தார். பொதுவாக திரைப்படங்கள் குறித்து எழுதப்படுகிற எழுத்துகளில் ஆர்வமில்லாத நான் மணியின் திரைப்பார்வையை ஆச்சரியமும், சந்தோஷமுமாக ரசிக்க ஆரம்பித்தேன். பதின் வயதுகளில் பார்த்து, பின் மனதுக்குள் எப்போதும் அசை போடும் அற்புதமான மலையாளப் படங்கள் குறித்து மணி அட்டகாசமாக எழுதியிருந்தார். அதுவும் என்ன மாதிரியான படங்கள்? அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேட்டம், ஸ்வம்வரம், பி. பாஸ்கரனின் நீலக்குயில் போன்ற படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்துக்கு அதிகம் வராத பத்மராஜனின் அரப்பட்டு கட்டிய கிராமத்தில் படத்தைப் பற்றியெல்லாம் சொல்லியிருந்தார். பத்மராஜனையும், பரதனையும் சிநேகிக்கும் மணி என் சிநேகிதரானார். வெறுமனே திரைப்படங்களைப் பார்த்து கதைச்சுருக்கம் எழுதுகிற வேலையை மணி செய்யவே இல்லை. கலைஞர்கள் குறித்து அவர் எழுதிய ஒன்றிரண்டு வரிகள் அவரோடு நெருக்கமாக்கின. பத்மராஜனைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.

“ஆனால் பத்மராஜன் நூறு வயது வாழ்ந்திருந்தாலும் வெட்ட வெளியில் இருந்து பூப்பறித்து காட்டி நம்மை திடுக்கிட வைத்துக் கொண்டு தான் இருந்திருப்பார். பொதுவாய் தன்னை விடவும் வித்தைக்காரனை கடவுள் நீடிக்க விட்டு வைக்க மாட்டான்.”

திரைக்கலைஞர்கள் மட்டும்தான் என்றில்லை. இலக்கியவாதிகளை மணி போற்றும் விதம் அலங்காரமில்லாதது.

“வாழ்வின் கூரிய உண்மைகளை அணைத்துக் கொண்டு அதை வாதையுடன் உள்வாங்கி சொட்டு சொட்டாய் விளக்கி செல்லும் திராணி இல்லாதவர்கள் பேசுகிற நாண்சென்ஸ் எல்லாம் சித்தாந்தங்களாகிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் அசோகமித்திரன் எத்தனை வலியவர் என்பதை சொல்லி முடியாது.”

யோவ்! யாருய்யா நீ? இத்தனை நாளா எங்கேய்யா இருந்தே? என்று மனதுக்குள் கத்தினேன். ‘இங்கேதான் இருக்கேன். உங்களை எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்குத்தான் என்னை இப்ப தெரிஞ்சிருக்கு’ என்று எங்களின் முதல் தொலைபேசி உரையாடலில் சொல்லாமல் சொன்னார், மணி.

 

அதுவரை அறிந்திருந்த மணியின் சொற்பமே என்னை சொக்க வைத்துக் கொண்டிருந்தபோது, அறிய நேர்ந்த மிச்சம் மேலும் நெருக்கமாக்கிவிட்டது. அதற்குப் பிறகு மணியின் எதுவும் எனக்கு அந்நியமில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து பல நாட்கள் பல விஷயங்கள் குறித்து பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டேயிருந்தோம். சுந்தரராமசாமியின் வாசகர் மணி என்பது ஏற்கனவே தெரியும். அவருடன் பேசும் போதுதான் அது பொய் என்பது தெரிய வந்தது. அவர் சு. ராவின் வாசகர் அல்ல. காதலர். மணி ஒரு விநோதக் கலவை. ஒரு பக்கம் மஸோக்கிஸம் பற்றி பேசுவார். பேச்சு அதிலிருந்து எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ‘அம்ருதம் கமயா’ திரைக்கதை நோக்கிச் செல்லும். பின் அங்கிருந்து நேராக வண்டி ரோமன் பொலான்ஸ்கியின் ‘Venus in fur’க்குச் செல்லும். பின் எங்கெங்கோ சென்று சம்பந்தமே இல்லாமல் எங்க வீட்டுப் பிள்ளையில் வந்து நிற்கும். எம்.ஜி.ஆரின் சினிமாவை மணி வியந்து பேசும் போது அவர் குரலில் தயக்கமோ, கூச்சமோ இருக்காது. பாசாங்கில்லாதவர் மணி என்பதற்கு எம்.ஜி.ஆர் குறித்த அவரது சிலாகிப்பு, மற்றுமோர் உதாரணம். இப்படி மணியுடன் பேசத் துவங்கி, பேசிக்கொண்டே  வெளியூர்களுக்குச் சென்றோம். இரவெல்லாம் கண்முழித்து பேசித் தீரவில்லை. தூக்கம் கலையாமல் சென்னைக்குத் திரும்பி வந்து பேச்சைத் தொடர்ந்தோம். இன்னும் தொடர்கிறது. பேச்சினூடே ஒருநாள் லேசான கூச்சத்துடன் சொன்னார்.

‘சிறுகதைத் தொகுப்பு வரும் போல தெரியுது!’

‘யாரோடது, மணி?’

வேறெங்கோ பார்த்தபடி, ‘என்னோடதுதான்’.

எனக்கு அப்போதுதான் உறைத்தது. எத்தனை நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறார்! இன்னும் இவருடைய புத்தகம் ஏதும் அச்சில் வரவில்லை. எல்லாவிதத்திலும் சின்னவனான நான் எழுதி நான்கு புத்தகங்கள் வந்துவிட்டன. இப்போது கூச்சம் மணியிடமிருந்து இறங்கி வந்து என் தோளில் ஏறிக் கொண்டது.

‘என்னாலான எல்லா உதவியும் செய்றேன்’ என்றேன்.

‘கதைகள் தரேன். படிச்சுட்டு உங்களுக்குத் தோணறத எழுதிக் குடுங்க. அதுக்கப்புறம் புஸ்தகம் வந்தாப் போதும்’.

பிரியத்தின் குரலல்ல அது. மதிப்பின் குரல். அத்தனை மதிப்பிற்குறியவன்தானா நான் என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு ஒரு சின்ன நடுக்கத்துடன் படிக்கத் துவங்கினேன். எதிர்பார்த்த மாதிரிதான் இருந்தன, கதைகள். உண்மையைச் சொல்வதானால் எதிர்பார்த்ததற்கும் மேலாக. சில கதைகளைத் தொடர்ந்து வாசிக்க அச்சமாக இருந்தது. இதெல்லாம் எழுதலாமா என்று சில வரிகளும், இப்படியெல்லாம் எழுதலாமா என்று பல வரிகளும் இருந்தன. படித்து முடித்தவுடன் சில வார்த்தைகள் எழுதிக் கொடுத்தேன். கவனமாக ‘வாசகவுரை’ என்று எழுதினேன். ஆம். அது வாசகவுரைதான். மணியின் வாசிப்புக்கு முன், அவரது பரந்த வாழ்வனுபவத்துக்கு முன், அவரது பாசாங்கில்லாத ரசனைக்கு முன் சின்னஞ் சிறியனான நான் அவருக்கு அணிந்துரை எழுதுவதாவது?!

கடைசியில் அந்த நாள் வந்தது. எக்மோர் இக்ஸா மையத்தில் மணியின் புத்தக வெளியீடு. மணி முதலில் தன் புத்தகத்துக்கு வைக்க நினைத்திருந்த பெயர் ‘பால்வீதி’. ஆனால் ‘பாதரசம்’ பதிப்பாளர் சரோலாமா, தூரத்திலிருந்தே வாசித்து விட முடிகிற மாதிரியான, சட்டென்று மனதில் பதிகிற  ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ என்கிற எளிய குறுந்தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஒளிப்பதிவாளரும், நடிகரும், நல்ல வாசகருமான இளவரசு அண்ணாச்சியும், நானும் சென்றிருந்தோம். மணியை தனக்குப் பிடிக்கும் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்த கவிஞர் இசையை மணியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர முடியுமா தம்பி என்று கேட்டேன். தனக்கு லத்தீன் அமெரிக்க வாசகர்கள் இருக்கிறார்கள் என்கிற மமதை கிஞ்சித்தும் இல்லாத கவிஞர் இசை பெருந்தன்மையுடன் நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்து, தோளில் மாட்டிய பையுடன் வந்தும் விட்டார்.

வாத்தியார் பாலு மகேந்திரா அவர்களின் திரைப்பள்ளியில் பயின்ற நிறைய இளைஞர்கள் மணியின் சிஷ்யர்கள் என்று அறிவேன். அவர்கள்தான் அரங்கை நிறைத்தனர். கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான நண்பர் ரவி சுப்பிரமணியம், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எங்க ஊர் மக்கா  தாமிரா, ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பு ஆசிரியரும், விரைவில் திரைப்படம் இயக்க இருப்பவருமான கவிஞர் சாம்ராஜ் உட்பட தெரிந்த சில முகங்களும், தெரியாத பல முகங்களுமாக நிகழ்ச்சி துவங்கியது. ரவி சுப்பிரமணியம் வழக்கமாக என்னிடம் சொல்வதைச் சொல்லிவிட்டு பாடித் துவக்கினார். ‘உங்க முன்னாடி பாடறேன். பிழையிருந்தா பொறுத்துக்கணும்’. அதற்கு இரு தினங்களுக்கு முன் வேறோர் நிகழ்ச்சியில் ஒரு பாடகர் சுபபந்துவராளி பாடினார். துவக்கத்தில் மட்டும்தான் சுபம் இருந்தது. அதை ரவியும், நானுமே கேட்டு மகிழ்ந்திருந்தோம்.  ‘சுதியில்லாம அந்தாள் பாடினதையே கேட்டாச்சு. உங்க பாட்டுல நிச்சயமா சுதி விலகாது. பாடுங்க ரவி’ என்று உற்சாகப்படுத்தினேன். பக்க வாத்தியம் ஏதும் இல்லாமல் சுதிசுத்தமாகப் பாடினார் ரவி.

முதலிலேயே கவிஞர் இசை பேசினார். எழுதிக் கொண்டு வந்திருந்த தாள்களைப் புரட்டி பாயிண்ட் பாயிண்டாக ஒரு கறாரான விமர்சகராகவே பேசினார் இசை. குரல் நடுங்கினாலும், உடல் மொழியில் ஜெனரல் சக்கரவர்த்தி போல் ஒரு மிடுக்கு.  ‘இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?’ என்கிற மாதிரியான கேள்வியை முன் வைத்தார். பாராட்ட வேண்டிய இடங்களையும் பாராட்ட மறக்கவில்லை. அடுத்து இளவரசு அண்ணாச்சி பேசினார். அவரது அறியா முகத்தை அன்று பலரும் அறிந்து கொண்டனர். ஆழ்ந்த படிப்பாளி அவர். தினமும் பேசிக் கொள்கிற  மிக நெருக்கமான நண்பர்கள் நாங்கள்  என்பதால் அவரது பேச்சில் எனக்கு ஆச்சரியமில்லை. மணியைப் பற்றியே அமைந்திருந்தது அவரது பேச்சு.

இறுதியாக நான் அழைக்கப்பட்டேன். இக்ஸா மையத்தின் கட்டுமானத்தின் போது என்னமோ மலையாள மாந்திரீகம் நடந்திருக்க வேண்டும். மைக்கில் நாம் பேசும் வார்த்தைகள் சுடச்சுட உடனுக்குடன் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நம் காதிலேயே கேட்கிறது. ‘ஆங் எந்தா? எந்து பறயு?’ என்று மனதுக்குள் கேட்டபடியே பேச்சைத் தொடர்வது சிரமமாக இருந்தது. நான் பேசிய அதே இடத்தில் அதற்கு முந்தைய நாள் நண்பர் ஜெயமோகன் தங்குதடையில்லாமல் நீண்ட நேரம் பேசினார். ஒருவேளை நாயர்களை மாந்திரீகம் தீண்டாது போல!

இசை தன் பேச்சில்  மணி எழுதியிருக்கும் ‘இதனால் அறியவரும் நீதி’ கதை வாசிப்பதில் தனக்கு ஏற்பட்ட தயக்கத்தைச் சொல்லியிருந்தார்.

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்
அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று
கிடைக்கிறது.
அதிலிருந்து தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது

‘இதனால் அறியவரும் நீதி’ குறித்து இசை பேசியபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்து, ‘தற்கொலைக்கு தயாராகுபவன்கற கவிதய எளுதி படிக்கிறவனைக் கொலை பண்ணின பாவிப்பய இப்படி சொல்லுதானெய்யா! இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்ன?’ என்று மனதுக்குள் நினைத்து, தம்பியின் ஹிப் சைஸைப் பார்த்து நினைத்ததை உடனே மனதுக்குள் அழித்தேன்.

அடுத்து பேசிய பதிப்பாளர் சரோலாமா, தொகுப்பிலுள்ள ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்கிற கதை குறித்து ஒரு விஷயம் சொன்னார். அந்தக் கதையில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்’ போல கடவுள் ஒரு கதாபாத்திரமாக வருவார். தான் ஒரு சிவபக்தன் என்பதால் அந்தக் கதை தனக்கு நெருடலாக இருந்ததாகவும், அதனால் அதன் தலைப்பை மணியின் ஒப்புதலோடு மாற்றிவிட்டதாகவும் சரோலாமா சொன்னார். ‘நாளைபின்னே ஒரு நல்லது கெட்டதுக்கு அவாள் மூஞ்சில என்னால முளிக்க முடியுமாய்யா?’ என்பதாக இருந்தது அவர் பேச்சு.

ஒரு சிவபக்தனுக்கும், கடவுளுக்கும் இடையே ஆன உறவு என்னை ஆச்சரியப்படுத்தியது. அதைவிட ஆச்சரியம் சரோலாமா ஒரு சிவபக்தனுக்குரிய எந்த அலங்காரமுமில்லாமல் சாதாரணமாகக் காட்சியளித்தது. நான் பார்த்த சிவபக்தர்கள் எல்லாரும் தெருமுக்கில் வரும் போதே திருநீறும், சிமிண்டும் கலந்த மணம் ஒன்று நம்மை வந்து சேரும். எழுந்தால், அமர்ந்தால், சாய்ந்தால் சிவநாமத்தை உச்சரிப்பார்கள். மணிக்கொரு தடவை சீலிங் ஃபேனைப் பார்த்தும் சிவநாமம் சொல்வார்கள். ஆனால் சரோலாமாவோ, மணி வீட்டு மீன் குழம்புக்கு அடிமையான சிவபக்தராக இருக்கிறார்.

இறுதியாக மணி ஏற்புரை நிகழ்த்தினார். மணி வழக்கமாக யாரையாவது கேலியாகவோ, கோபமாகவோ திட்டும் போது ‘ஜித்துமா’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்.
உதாரணத்துக்கு ஒன்று.

“உண்மையில் வெறுப்பின் அடியில் விருப்பம் இருக்கிறது என்பதெல்லாம் கப்ஸா தான். எனக்கு தெரிந்து ஹேட் அண்ட் லவ் என்பது பொறாமையின் நிஜ முகம். காதலில், பிடித்தவர் கரத்தை விட்டு விட ஈகோ சம்மதிப்பதில்லை என்பதே அறிவதற்கான முள். கைவசத்தில் இருந்தால் அப்புறமாய் கொன்று கொள்ளலாம் என்கிற நப்பாசை கூட இருக்கும். குறைந்த பட்ஷம் குற்றவாளி என்று நிரூபித்து கீழடக்குவது. ஆக்ரமிப்பின்றி வேறொன்றில்லை என்று அறிந்த போதிலும் எவ்வளவு சப்பைக்கட்டுகள் வேண்டியிருக்கிறது ஜித்துமா.”

நண்பர்கள் மத்தியில் அவருடைய ‘ஜித்துமா’ பிரபலமான ஒன்று. எங்கே அவர் பேசும் போது அந்த வார்த்தையை பயன்படுத்துவாரோ என்று நினைத்தேன். ஆனால் மிகச் சுருக்கமாக, வழக்கமாக நண்பர்களுடன் பேசுவது போல இயல்பாகப் பேசி ‘எல்லாருக்கும் தேங்க்ஸ்’ என்றார்.

முன் வரிசையில் மணியின் மனைவியும், அவரது மகனும் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி முழுக்க மணியைப் பற்றி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மணியின் மனைவி, ‘அப்ப நெஜமாவே இந்தாளு கெட்டிக்காரன்தானா? நாம நினைக்கிற மாதிரி இல்லியா?’ என்கிற குழப்பமும், ஆச்சரியமும் முகத்தில் தெரிந்து விடாதவண்ணம் கவனமாக அமர்ந்திருந்தார். கழுத்தில் ஒரு பைனாகுலருடன் அமர்ந்திருந்த மணியின் சின்னஞ்சிறு மகன் யாழன் எல்லோரையும் ஒரு வெறித்த பார்வை பார்த்தபடி இருந்தான். அதைப் பார்க்கும் போது, ‘ஜித்துமா’ என்று அவன் சொல்வது போலத்தான் இருந்தது.

 

 

post

தி.க.சி இல்லாத திருநவேலி . . .

இருபத்திரண்டாண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில் மாதத்துக்கு ஒரு முறையாவது திருநவேலி சென்றுவிடுவது வழக்கம். பின் படிப்படியாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எனக் குறைந்து, இப்போது வருடத்துக்கு ஒருமுறை செல்வதே அபூர்வமாகி விட்டது. நண்பன் குஞ்சுவின் மகனது பூணூல் கல்யாணத்துக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

‘எல! கண்டிப்பா நான் வரணுமா?’

தவிர்த்துப் பார்த்தேன்.

‘என் வீட்ல நடக்கிற மொத விசேஷம். இத விட்டா இந்தப்பய கல்யாணந்தான். இதுல நீ இல்லேன்னா நல்லா இருக்குமா? நீயே யோசிச்சுப் பாரு’.

வயதும், அனுபவமும் குஞ்சுவின் நிதானமானப் பேச்சில் தெரிந்தது. தட்ட முடியவில்லை.

கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு பேரூந்தில் திருநவேலி பயணம். வழக்கமாக எனது பயணங்களுக்கான டிக்கெட் போடும் ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ஜே.கே இந்த முறை ரயில் டிக்கட்டில் கோட்டை விட்டுவிட்டார்.

‘மல்டி அக்ஸில் பஸ், ஸார். சௌரியமா இருக்கும். கோயம்பேடுல நைட் பத்து மணிக்கு எடுத்து, காலைல ஆறு மணிக்குல்லாம் நம்மூர்ல கொண்டு எறக்கீருவான்’.

மல்டி அக்ஸில் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளியே வரவே பதினொன்றரை மணி ஆயிற்று. ஜே.கே சொன்ன மாதிரி பயணம் சௌரியமாக இருக்கும் என்பதற்கு முதல் அறிகுறியாக பஸ்ஸில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் போட்டார்கள். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த புஷ்டியான இளைஞர், வாய் நிறைந்த பாக்குடன் திரைப்படத்தை ரசித்துப் பார்த்தபடி, அவ்வப்போது என் தொடையைத் தட்டிச் சிரித்து மகிழ்ந்தவண்ணம் இருந்தார். அலுப்பும், சலிப்பும் தூக்கத்தை வரவழைக்க, என்னையறியாமல் உறங்கிப் போனேன். சொப்பனத்தில் சிவகார்த்திகேயனும், உங்கள் சத்யராஜும் சுந்தரத் தெலுங்கில் ஏதோ ஹாஸ்யமாகச் சொல்லிவிட்டு, அவர்களே சிரித்தார்கள். மேளம் முழங்க சாமி சப்பரம் ஒன்றை ஆளோடு ஆளாகச் சுமந்து செல்கிறேன். அழுகிய குல்கந்து வாசனை மூக்கில் அடிக்க, கடுமையாக தோள்வலித்தது. அரைத்தூக்கத்தில் முழித்துப் பார்த்தால், பக்கத்து இருக்கை இளைஞர், என் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

காலை எட்டே முக்காலுக்கு திருநவேலியில் சென்று இறங்கும் போது ஜே.கே ஃபோன் பண்ணினார்.

‘ஸார்! எத்தன மணிக்கு வீட்டுக்குப் போனீங்க?’

oOo

குளித்து முடித்து அப்பாவுடன் காலை உணவைச் சாப்பிட்டு முடிக்கும்போது மீனாட்சி வந்தான்.

‘போவோமால?’

அம்மன் சன்னதியிலிருந்து பைக்கை ஸ்டார்ட் பண்ணும் போது மீனாட்சி கேட்டான்.

‘எங்கே சித்தப்பா போக?’

வழக்கமாக முதல் சோலியாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கச் செல்வேன்.

‘எங்கெயாவது போ’.

கொஞ்சம் கடுமையாகச் சொன்னேன். கீழப்புதுத் தெரு வழியாகப் போய், தெற்குப் புதுத் தெருவுக்குள் நுழைந்து, வாகையடி முக்கைத் தாண்டும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சந்திப்பிள்ளையார் கோயிலை நெருங்கும் போதே தொண்டை அடைத்தது. வண்டி தானாக சுடலைமாடன் கோயில் தெருவுக்குள் சென்றது. தாத்தாவின் வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி, இறங்கும் போது மீனாட்சியின் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தேன். தாத்தாவின் வீடு இருக்கும் வளவுக்குள் நுழையும் போதே, மனம் படபடத்தது. வழக்கமாக நான் செல்லும் போது, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருக்கும் தாத்தா, நிமிர்ந்து பார்த்து ‘வாருமய்யா’ என்று உரக்கச் சொல்லி சிரிப்பார். தாத்தா உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு அருகே உள்ள மரத்தூணில் கட்டப்பட்டிருந்த கொடியில் சாயத்துண்டுகள் கொடியில் காய்ந்து கொண்டிருந்தன. பூட்டப்பட்டிருந்த அந்தக் காலத்து கனத்த மரக்கதவுக்கு முன்னே உள்ள படியில் சிறிது நேரம் நானும், மீனாட்சியும் உட்கார்ந்திருந்தோம். பழைய புத்தகங்களின் வாசனை, பூட்டியிருந்த அந்த வீட்டுக்குள் இருந்து வந்தது.

‘தாத்தா வாடை அடிக்கி. கவனிச்சேளா, சித்தப்பா?’

மீனாட்சி கேட்டான்.

தி.க.சி தாத்தாவின் வாசனையும், புத்தகங்களின் வாசனையும் ஒன்றுதான் என்பதை புத்தகங்களே படிக்காத மீனாட்சி சொன்னதில் ஆச்சரியமில்லை. அவன் தாத்தாவைப் படித்தவன். தாத்தாவின் இறுதி நாட்களில் அவர் மனதுக்கு நெருக்கமாக இருந்த வெகுசிலரில் அவனும் ஒருவன்.

சுடலைமாடன் கோயில் தெருவிலிருந்து வெளியே வரும்போது மனசு வெறுமையாகித் துப்புரவாகத் துடைத்த மாதிரி இருந்தது. எதுவுமே பேசாமல் பைக்கை குறுக்குத்துறைக்கு விட்டான், மீனாட்சி. சாலையோர மருதமரங்களும், வயல்வெளியும் சூழ்ந்த குறுக்குத்துறை ரோட்டில் ஆங்காங்கே புதிய கட்டிடங்கள், வேறு ஏதோ அசலூருக்கு வந்துவிட்டோமோ என்று குழம்ப வைத்தன. சிட்டி நர்சரி பள்ளி, பூமாதேவி கோயிலைத் தாண்டி, ரயில்வே க்ராஸ்ஸிங்கைக் கடந்தவுடன், பழமையும், பாரம்பர்யமும் நிறைந்த குறுக்குத்துறை தென்படத் துவங்கியது. தாமிரவருணியை ஒட்டிய குறுக்குத்துறை முருகன் கோயிலில் வண்டியை நிறுத்தி, உள்ளே கூட்டிச் சென்றான், மீனாட்சி. உள்ளே நுழையும் போதே யாரோ ஒரு தம்பதியினர் சஷ்டியப்த பூர்த்தி சடங்குகளில் அமர்ந்திருந்தனர்.

’அண்டமாய் அவனி யாகி
அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக் காக்க’.

மீனாட்சியின் உரத்த குரலில் குறுக்குத்துறை முருகனே ஒருகணம் திடுக்கிட்டு விழித்தார்.

‘சந்தனத்த பூசிக்கிடுங்க, சித்தப்பா. வெயிலுக்குக் குளிச்சையா இருக்கும்’.

சந்தனத்தை அள்ளி என் கைகளில் பூசினான். மோதிர விரலால் தடவி, சிறு தீற்றலாக நெற்றியில் இட்டுக் கொண்டேன். யாரோ ஒருவர் தாமிரவருணியில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன், மண்டபத்தின் வழியாக நெற்றி நிறைய திருநீறுடன் கோயிலுக்குள் நுழைந்தார். வேகவேகமான நடை. பிள்ளையாருக்கு முன் மூச்சிரைக்க ரொம்ப நேரமாகத் தோப்புக்கரணம் போட்டார். ‘ஆயிரத்தெட்டு போடுவாரோ! எண்ணுவோமா’ என்று மனதில் தோன்றி மறைந்தது.

‘பாத்தேளா! அண்ணாச்சில்லாம் ஒருநாளும் சுகர்மாத்திர சாப்பிட மாட்டா. ஆரோக்கிய வாள்கைல்லா வாளுதா’ என்றான் மீனாட்சி.

படித்துறை மண்டபம் வழியாக வரும்போது, ஆங்காங்கே ஜனங்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு, தூக்குச் சட்டி மூடியில் எலுமிச்சம்பழச்சோறு வைத்து சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஈர டிரவுசருடன், தலைகூட சரியாகத் துவட்டாமல், கல்மண்டபத்தில் அமர்ந்தபடி அந்தச் சிறுவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்கள் சாப்பிடுவதை எட்டிப் பார்த்தபடி வந்த மீனாட்சியை ஏசினேன்.

‘எல! சின்னப்பிள்ளேள் சாப்பிடுததை ஏன் எட்டிப் பாக்கே?’

‘இல்ல சித்தப்பா. பக்கத்துல இருக்கிற கிண்ணத்துல அந்த அக்கா பிள்ளையளுக்கு என்ன வச்சிருக்கான்னுப் பாத்தேன். பொரிகடலத் தொவையல்தான். அதானே நல்லா இருக்கும். கூட ரெண்டு வத்தல் வறுத்து கொண்டாந்திருக்கலாம்’.

திருநவேலியை விட்டு ஏன் மீனாட்சி நகர மாட்டேன்கிறான் என்பது புரிந்தது.

மறுநாள் காலையில் சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்குக் கிளம்பும் போது கால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் வந்தார்கள்.

‘போன தடவ உன் கூட வந்ததுதான். அப்புறம் போகவே இல்ல.’

போகிற வழியிலேயே வண்ணாரப்பேட்டையில் காரை நிறுத்தச் சொன்னார்கள்.

‘அங்கே பூச பண்ணுத சொரிமுத்து ஐயர் பிள்ளையளுக்கு பண்டம் வாங்கீட்டுப் போவோம்’.

மீனாட்சியும் வண்ணாரப்பேட்டையில் வந்து காரில் ஏறிக் கொள்ள எங்களின் குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்கு கார் விரைந்தது.

‘பேரப்பிள்ள! தென்கர மகராசா கோயிலோட விசேஷம் என்னன்னு தெரியுமாவே?’

முன்சீட்டிலிருந்த மீனாட்சியிடம் அப்பா கேட்க, ‘தேர் இருக்கிற சாஸ்தா கோயில்லா, தாத்தா’ என்றான், மீனாட்சி.

தென்கரை மகராஜா கோயில் வளாகத்துக்குள்ளேயே இருக்கும் சொரிமுத்து ஐயர் வீட்டு மாமியிடம் பிள்ளைகளுக்கு வாங்கிய பலகாரங்களைக் கொடுத்து விட்டு, கோயிலுக்குள் நுழைந்தோம். வாழ்க்கையில் இரண்டாம் முறையாகவே அந்த கோயிலுக்குள் நுழைகிறேன். ஆனால் அதற்கு முன்பு பல ஆயிரம் முறை வந்ததாக மனது உணர்ந்தது. கோயிலைச் சுற்றிலும் நான் பார்த்திராத என் பாட்டனார், முப்பாட்டனார் போன்ற மூதாதையர் ஆங்காங்கே நின்று, அமர்ந்து, தூண்களில் சாய்ந்தபடி இருந்தனர். அவர்களில் யாரோ ஒருவர், ‘அடிக்கடி வந்துட்டு போலெ’ என்று சொன்னார்கள். தென்கரை மகாராஜா சந்நிதிக்குள் நாங்கள் நுழையவும், மேளச்சத்தம் கேட்டது. சந்நிதியின் ஒரு வாசல் வழியாக பட்டு வேட்டி, சட்டை, கழுத்தில் மாலை சகிதம் மாப்பிள்ளையும், மறுவாசல் வழியாக கண்ணைப் பறிக்கும் கத்திரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவையுடன் மணப்பெண்ணும் நுழைந்தனர். சுற்றிலும் மினுமினுக்கும் கருப்புத் தோல் கிராமத்து மனிதர்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு நிரந்தரமாகத் தங்கியிருந்தது. சித்தூர் தென்கரை மகாராஜாவுக்கு முன்னால் தாலி கட்டும் போது, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். சில நொடிகளில் திருமணம் முடிந்தது. மணமக்களுக்காக பூஜை செய்து கொண்டிருந்தார், சொரிமுத்து ஐயர். வெளியே காத்து நிற்கும்போது, ‘இந்தப் பிள்ளைகள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்று மனதார வேண்டிக் கொண்டேன்.

‘பெரிய கல்யாண மண்டபத்துல கல்யாணத்த வச்சு, லச்சக்கணக்குல செலவு பண்ணி என்னத்துக்குங்க்கென்! என்ன தாத்தா?’

‘இங்கன வச்சு கல்யாணம் பண்றதுக்கு ஒரு கொடுப்பின வேணும்லா, பேரப்பிள்ளை’ என்றார்கள், அப்பா.

சொரிமுத்து ஐயர் அப்பாவை அடையாளம் கண்டு கொண்டார். பச்சைப்பிள்ளை மாதிரி சிரித்த முகத்துடன் உள்ளே நின்று கொண்டிருந்த தென்கரை மகாராஜாவைப் பார்த்து, ‘எய்யா’ என்று கண்கள் கசிய வணங்கினேன். வேறு எந்தப் பிரார்த்தனையும் சொல்லிக் கொள்ளவில்லை. சில நொடிகளுக்கு முன்னெப்போதும் உணர்ந்திராத நிசப்தம் மனம் முழுதும் பரவி, நிறைந்தது. வெளியே வந்து தளவாய் மாடசாமிக்குக் கொண்டு வந்த பூமாலைகளைக் கொடுத்து வணங்கிவிட்டு, பேச்சியம்மாளிடம் வந்தோம். பேச்சியம்மாள் விக்கிரகம் அப்படியொண்ணும் அலங்காரமானதல்ல. ஆனாலும் துடியான அமைப்பு. அவளிடமும் அடிக்கடி வாரோம் என்று சொல்லி வந்தோம்.

மாலையில் வண்ணதாசன் அண்ணாச்சியைப் போய்ப் பார்க்கலாம் என்று முடிவு செய்து போனால் வீடு பூட்டியிருந்தது. அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, மீனாட்சியுடன் ஜங்ஷன் வந்து சேரும்போது, ஓவியர் வள்ளிநாயகத்திடமிருந்து ஃபோன்.

‘எண்ணே! ஏசாதிய. கூட வேல பாக்கறவர் வீட்டுக் கல்யாணம். நம்ம கைல பொறுப்பக் குடுத்துட்டாரு. எங்கெ இருக்கியன்னு சொல்லுங்க. இந்தா வாரேன்’.

ஈரடுக்கு மேம்பாலத்துக்கு அருகே வேளுக்குடி கிருஷ்ணனின் நிகழ்ச்சி குறித்த பேனர் இருந்தது.

‘ஆகா! பிரமாதமாப் பேசுவாரே! முடிஞ்சுட்டா? கேக்கலாமே!’ என்றேன்.

’ஆங்! அதெல்லாம் நாம கேக்கக் கூடாது, சித்தப்பா. சவசவன்னு இருக்கும்’.

சட்டென்று சொன்னான், மீனாட்சி.

‘மெட்ராஸுக்குப் போயி சேரக்கூடாதவங்க கூடல்லாம் சேந்து ரொம்பல்லா கெட்டுப் போயிட்டிய.

‘ஏம்ல? ஆள்வார் பாசுரம்ல்லாம் எவ்வளவு நல்லா இருக்கும்! அதையெல்லாம் ஒதுக்கிட்டா அப்புறம் என்னல தமிளு?’

‘மாணிக்கவாசகர்ட்ட இல்லாத தமிளா? வைணவத் தமிளுல்லாம் அதுக்கிட்ட நிக்க முடியுமா? அதுல்லாம் நஞ்சு தோய்த்த தமிளு, சித்தப்பா. அத நாம கேக்கப்படாது. அப்படியே கேட்டாலும் அது நம்மள ஒண்ணும் செய்யாது. ஏன்னா நாம ஆலாலகண்டனுகள்லா!’

மேற்கொண்டு பேசினால் அந்த வீரசைவன், என் காதைக் கடித்துத் துப்பிவிடுவான் என்பதால், ‘சாப்பிடுவோமால? பசிக்கி. வள்ளி வந்துக்கிட்டிருக்கானான்னு கேளு’ என்று பேச்சை மாற்றினேன்.

கண்ணம்மன் கோயில் தெருவிலுள்ள ஒரு சாலையோரக்கடையில் ருசியும், பதமுமாக சுடச்சுட இட்லி, தோசை., சாம்பார், சட்னி. சென்னையில் உயர்ரக ஹோட்டல்கள் எதிலும் நான் காணாத சுவை.

‘அண்ணாச்சி! மொளாப்பொடி வைங்க’.

மீனாட்சி என் இலையைக் காட்டி சொன்னான்.

‘சித்தப்பா! எண்ணெ விட வேண்டாம். பாமாயிலு. நெஞ்சக் கரிக்கும்’.

சாப்பிட்டு முடித்து மீனாட்சி விடைபெற்றுக் கொள்ள, வள்ளிநாயகத்துடன் டவுணுக்குத் திரும்பினேன்.

‘கீள்ப்பாலம் வளியா நடந்து போவோமாண்ணே?’

தனது டி.வி.எஸ் 50யை வள்ளி உருட்டியபடியே, என்னுடன் நடக்க ஆரம்பித்தான். பாலத்தின் இறக்கம் வரும்போது, ‘இப்பம் என்னண்ணே படிச்சுக்கிட்டிருக்கிய?’ என்று வள்ளி கேட்க, ‘ரொம்ப நாள் களிச்சு புதுமைப்பித்தன மறுபடியும் படிக்கேண்டே! அதுவும் சங்குதேவனின் தர்மம் படிச்சுட்டு, மேற்கொண்டு படிக்க முடியாம மூடி வச்சுட்டேன் பாத்துக்கோ’. நான் இப்படி சொல்லவும், உருட்டிக் கொண்டிருந்த டி.வி.எஸ் 50யை நிறுத்தி, ‘எண்ணே!’ என்று கிட்டத்தட்ட வள்ளி அலறினான். ‘என்னாச்சு வள்ளி?’

‘எண்ணே! சங்குதேவனின் தர்மம் கதைல வார கைலாசபுரம் ரோட்டுலதானே இப்பம் நாம நிக்கோம்’ என்றான்.

பிறகு டவுண் வரைக்கும் புதுமைப்பித்தனும் எங்களுடன் நடந்து வந்தார். ஆர்ச்சுக்கு அருகில் ‘இங்கன ரெண்டு நிமிஷம் நிப்போம்’ என்றான், வள்ளி. காரணம் கேட்டதற்கு, நயினார் கொளத்துக் காத்தும், சாமிசன்னதி காத்தும் சேந்து அடிக்கிற எடம் இது ஒண்ணுதான். கொஞ்சம் அனுபவியுங்க’ என்றான். ‘இந்தப் பயலுக நம்மள மெட்ராஸுக்கு ரயிலேற விட மாட்டானுவ போலுக்கே’ என்று பயமாக இருந்தது. அம்மன் சன்னதியில் வீட்டுக்கு முன்னால் வந்து நிற்கும் போது, கா.சு. பிள்ளை நூலகத்துக்கு அடுத்துள்ள இடிந்த வீட்டின், தூசு படிந்த நடைப்படியில் அமர்ந்து ஒரு கோட்டிக்காரத் தோற்றத்து மனிதர் , இலையை விரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ‘அங்கெ பாரு வள்ளி’ என்றேன்.

‘கல்கி ஞாவகம் வருதுண்ணே’ என்றான், வள்ளி. சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தக் கோட்டிக்காரரைப் பார்த்தபடியே மேலும் சொன்னான்.
‘குறுக்குத்துறயப் பத்தி கல்கி சொன்னாருல்லா! சுழித்து ஓடும் ஆறு. இவ்வளவு அழகான படித்துறை. இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறைன்னு. அந்த மாரி திருநவேலில எந்த நேரமும், யாராவது ஒருத்தன் சாப்பிட்டுக்கிட்டிருப்பான்’. . . .

சில நொடிகள் மௌனத்துக்குப் பிறகு ‘கெடைக்கவும் செய்யும்’ என்றான். நான் வள்ளியின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

மறுநாள்தான் நான் திருநவேலிக்குச் சென்றதற்கான நாள். ‘காலைல ஆறர மணிக்குல்லாம் வந்துருல. நம்ம சிருங்கேரி மடம்தான்’ குஞ்சு சொல்லியிருந்தான். நண்பன் ராமசுப்பிரமணியனுடன் மண்டபத்துக்குள் நுழையும் போது, ஹோமப்புகை நடுவே பிராமண வேஷத்திலிருந்து குஞ்சுவும், அவன் மகனும் சிரிப்பை அடக்க முடியாமல் என்னைப் பார்த்து சிரித்தார்கள். இருவருமே பூஜை மந்திரங்களுக்கு வாயசைத்துக் கொண்டிருந்தனர். குஞ்சுவின் உறவினர்கள் ஒவ்வொருவராக என்னிடம் வந்துப் பேசினார்கள். பெண்கள் பேசும் போது மட்டும், கண்ணைக் கசக்கிக் கொண்டு, வாயசைப்பதை நிறுத்தி தூரத்திலிருக்கும் என்னை உன்னிப்பாக கவனித்தான், குஞ்சு. அவ்வப்போது பூஜையிலிருந்து எழுந்து வந்து என் தோளில் கைபோட்டபடி ‘எங்க மாமா’ என்று எல்லோருக்கும் காட்டும் வண்ணம் நின்று கொண்டான், குஞ்சுவின் மகன். மண்டபத்தில் பெரும்பாலும் பிராமின்ஸ் என்பதால் முக்கால்வாசி பேர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு மாமி என்னிடம் வந்து, ‘நீங்க அவர்தானே?’ என்றார். ‘ஆமாங்க’ என்று பொத்தாம் பொதுவாகத் தலையசைத்து வைத்தேன். உடனே யாருக்கோ ஃபோன் பண்ணி, ‘ஏடீ, ஒனக்கு ரொம்பப் புடிக்குமே, சுரா! அவர் வந்திருக்கர். அதான்டி ஆனந்த விகடன்ல மூங்கில் காத்து எளுதுனாரே! அவரேதான்’ என்றார்.

சிறு வயதிலிருந்தே நான் பார்த்து பழகிய சிறுவர்கள், என்னைப் பார்த்துப் பழக்கப்பட்ட பெரியவர்கள் சூழ பந்தியில் அமர்ந்து சாப்பிட்டேன். குஞ்சுவும் வழக்கம் போல என்னருகிலேயே உட்கார்ந்து கொண்டான்.

கண்ணை மூடி முழிக்கும் முன் சென்னைக்குக் கிளம்பும் நேரம் வந்தது. ஏற்கனவே ஜே.கேயிடம் ‘டிரெயின்லயோ, ஃபிளைட்லயோ ரிட்டர்ன் டிக்கட் போடுங்க. பஸ்ல போடறதா இருந்தா, நான் திருநவேலிலயே இருந்துக்கிடுதேன்’ என்று சொல்லியிருந்தேன். ஏதோ ஒரு படப்பிடிப்புக்காக திருநவேலிக்கே வந்திருந்த ஜே.கே, ‘சாயங்காலம் ஸ்டேஷனுக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்திருங்க, ஸார். டிக்கட்டக் கையோட கொண்டுட்டு வாரேன்’ என்றார்.

கால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் ஸ்டேஷனுக்கு கிளம்ப முயல, ‘வேண்டாம், நீங்க அங்கெ வந்து நின்னுக்கிட்டிருக்க வேண்டாம்’ என்று சொல்லித் தடுத்து, விழுந்து வணங்கி, திருநீறு பூசச் செய்து கிளம்பினேன். வழக்கமாக மீனாட்சி, எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி, ஓவியர் வள்ளிநாயகம் போன்றோருடன் ரயில்வே ஸ்டேஷனில் அரட்டையடித்து விட்டு ரயிலேறுவது வழக்கம். இந்த முறை ஒருமணி நேரத்துக்கு முன்பே வண்ணதாசன் அண்ணாச்சி வந்து விட்டார்கள். தி.க.சி தாத்தா இறந்த பிறகு அண்ணாச்சியை அப்போதுதான் பார்த்தேன். தோள் தொட்டு அணைத்துக் கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘இந்த மட்டம் திருநவேலி ட்ரிப்பு ரொம்ப விசேஷம், தாத்தா இல்லாத ஒரு கொறயத் தவிர. ஆனா அதயும் நீங்க வந்து இல்லாம பண்ணிட்டிய’ என்றேன்.

‘பச்ச சிக்னல் போட்டுட்டான். ஏறு’ என்று அண்ணாச்சி பிடித்து ரயிலில் ஏற்றி விட்டார்கள்.

ரயில் நகர நகர, மனதுக்குள் ‘வாருமய்யா பேரப்புள்ள, தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி, எப்போது, இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறை, பாமாயில் நெஞ்சக் கரிக்கும், நயினார் குளத்துக் காத்தும், சாமி சன்னதிக் காத்தும் சேத்து அடிக்கிற இடம், சங்குதேவன் நடந்த கைலாசபுரம் ரோடுல்லா, கால்வலின்னாலும் பரவாயில்ல. நானும் வாரேன்’ . . . . . இப்படி பல ஒலிகளும், பிம்பங்களுமாக ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று ஒரு சிறுவனின் அழுகுரல் கவனம் கலைத்தது. தன் தாயுடன் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் திருநவேலியிலிருந்து சென்னைக்குத் திரும்புகிற, சேரன்மகாதேவியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஆதித்தனின் பேரன் உரத்த குரலெடுத்து அழுது கொண்டிருந்தான்.

‘திருநவேலி நல்ல ஊரும்மா. நாம இங்கெயே இருக்கலாம்மா. ப்ளீஸ். எறங்கிப் போயிரலாம்மா’.

கம்பார்ட்மெண்டில் இருந்த எல்லோரும் அவனைப் பார்க்கத் தொடங்கினர். தர்மசங்கடத்துடன் அவனது தாயார், ‘சத்தம் போடாதே. எல்லாரும் பாக்காங்க பாரு’ என்று கண்டிப்பான குரலில் அதட்டினார்.

‘விடுங்கம்மா. அவனாவது வாய்விட்டு அளட்டும்’ என்றேன்.