சில்வர் டோன்ஸ்

கோயில் விசேஷங்களுக்கும் மெல்லிசைக் கச்சேரிகளுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. அது நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழாவாக இருந்தாலும் சரி, புட்டாரத்தி அம்மன் கோயில் கொடை விழாவாக இருந்தாலும் சரி. கண்டிப்பாக அந்தந்த கோயிலின் வசதிக்கேற்ப சிறிய, பெரிய மெல்லிசைக் குழுக்களை அமர்த்தி கச்சேரி நடத்துவார்கள். பிட் நோட்டிஸிலிருந்து போஸ்டர்கள் வரை கச்சேரி பற்றிய அறிவிப்பை ஊரெங்கும் காணலாம். ‘மக்கா இன்னைக்கு ராத்திரி லாலா சத்திர முக்குல பிரபாகரன் கச்சேரி இருக்கு. சீக்கிரமே போகணும். மறந்துராதே’ என்று இளைஞர்கள் காலையிலேயே பேசிக் கொள்வார்கள். வெளியூராட்கள் யாராவது இவர்கள் பேசுவதை கேட்க நேர்ந்தால் இவர்கள் பாடகர்களோ, இசைக் கருவி ஏதேனும் இசைப்பவர்களோ என்று சந்தேகம் வந்து விடும். கச்சேரி கேட்பதற்குத்தான் அவர்கள் இவ்வளவு உற்சாகமாக காலையிலேயே தயாராகிறார்கள் என்கிற விவரம் தெரிய வாய்ப்பில்லை.

பிடரி வரை புரளும் ஹிப்பி முடியும், ஏழுவயதுச் சிறுவன் போய் மறைந்து கொள்ளும் அளவுக்கு பெரிதான பெல்பாட்டம் பேண்டும், கையில் வெள்ளி காப்பும், முகம் பார்க்கும் சிறிய கண்ணாடி சைஸிலுள்ள ஸ்டைலான அகல ஃபிரேம் மூக்குக் கண்ணாடியும் அணிந்த இசைக் கலைஞர்களின் ‘சில்வர் டோன்ஸ்’ குழுவின் கச்சேரி நான் சின்னப் பையனாக இருக்கும் போது நெல்லைப் பகுதியில் மிகவும் பிரபலம். பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள் என்று எத்தனையோ பேர் அந்த குழுவில் இருந்தாலும் அந்த வயதுக்கேயுரிய ரசனையோடு எனக்கு டிரம் வாசிப்பவரின் மீதுதான் காதல். அகலக் காலர் வைத்த சட்டைப் பித்தான்களைத் திறந்து விட்டு கழுத்துச் சங்கிலி தெரிய ஸ்டைலாக குச்சிகளை சுழற்றியபடியே அவர் டிரம் வாசிக்கும் போது டிரம்முடன் சேர்ந்து என் மனமும் அதிரும். கச்சேரி முடியும் வரை அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன். தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்து வெங்கடாசலம் கம்பவுண்டரின் மகளான சிவகாமி அக்காவும் டிரம்மரை மட்டுமே ரசித்து பார்த்துக் கொண்டிருந்ததை ஒரு முறை கவனித்தேன்.

அனேகமாக எல்லா கச்சேரிகளும் இரவு பத்து மணிக்கு மேல்தான் ஆரம்பமாகும் என்றாலும் எட்டு மணியிலிருந்தே கச்சேரிக்கான களை கட்டிவிடும். கச்சேரிக்கு முன்னுள்ள நிகழ்ச்சி பெரும்பாலும் உள்ளூர் சொற்பொழிவாளரின் பிரசங்கமாகத்தான் இருக்கும். நேரம் ஆக ஆக கச்சேரிக்கான ரசிகர்களின் கூட்டம் அதிகமாகி, சாலை நிறைய ஆட்கள் மெல்ல மெல்ல வந்து உட்காரத் துவங்குவர். கடைகளின், வீடுகளின் மாடிகள், அடைத்த கடைகளின் நடைப்படிகளென எங்கும் ஜனத்திரள் குவியும். பிரசங்கி அதிகப்பிரசங்கியாகும் பரிதாபத்தருணமிது. தன் பேச்சுக்காக கூடும் கூட்டமல்ல இது என்னும் உண்மையை அவர் மனம் நம்ப மறுக்கும். பேச்சின் கடைசியில் துருப்புச் சீட்டாக தான் மனப்பாடம் பண்ணி வைத்திருக்கும் ஒரே பட்டினத்தார் பாட்டை சத்தமாக ஒப்பிக்கத் தொடங்குவார். முடிக்கச் சொல்லி தட்டப்படும் கைத்தட்டல்களை பட்டினத்தாருக்கு கிடைத்த பாராட்டாக எண்ணிக் கொள்வார். தொடர்ந்து பேசும் ஆசையில் சோடா குடிக்கும் சொற்ப நேர இடைவெளியில் மூளைக்குள்ளிருந்து ஒவ்வொன்றாக நினைவு படுத்திப் பார்ப்பார். ஆயத்தமாகும் நோக்கோடு கைத் துண்டால் வாயை துடைத்து தொண்டையை செறுமி தொடைகளை அசைத்து சரியாக உட்கார்ந்து மீண்டும் தொடங்க முற்படும் போது விழாக் கமிட்டியாரின் துண்டு சீட்டு போகும். அதை அவர் பொருட்படுத்தாமல் போனால் ஜவுளிக்கடை மகமைச் சங்கத்தின் பொருளாளர் மாரியப்பன் செட்டியார் மேடையேறி,”இத்துணை நேரம் நம்மையெல்லாம் தன் அற்புதமான சொற்பொழிவினால் மகிழ்வித்த . . .” நாவல்டி ரெடிமேட்ஸின் மஞ்சள் சால்வையை போர்த்தி முடித்து வைப்பார். இதற்குள் வாத்தியங்களை ஒவ்வொன்றாக மேடைக்கு ஏற்றத் தொடங்கியிருப்பர்.
ஒன்பது மணிக்கு குழுவினர் வந்து மேடையேறி விட்டாலும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது அவர்களின் ‘ஹலோ ச்செக் ச்செக்’ மற்றும் ‘டம் டிம் டப் டிப் டங்க் டிங்க்’ என்னும் ஆயத்த சத்தங்களை நாம் பொறுமையுடன் கேட்டே தீர வேண்டும். ‘எல, இவனுவொ லொட்டு லொட்டுன்னு தட்டிக்கிட்டேதான் இருப்பானுவோ. அதுக்குள்ள வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு வந்துருவொம். அம்மை ஏசிக்கிட்டு உக்காந்திருப்பா. அவளும் கச்சேரிக்கு வரணும்லா’ என்று நண்பனிடம் சொல்வான் கடை அடைத்து களைத்து வரும் ஆரெம்கேவி ஊழியன் சொக்கலிங்கம். அதிகம் வெளியே வராத சில சமைந்த பெண்கள், பீடி சுற்றும் சீனியர் பெண்மணிகளின் பாதுகாப்பில் அங்கங்கு கூட்டத்தில் கலந்திருப்பர். இவர்களுக்காகவே சில இளைஞர்கள் சில விடலைப்பையன்களை கூட்டி வருவார்கள். அவ்வப்போது அப்படி அழைத்து வந்த சிறுவனிடம், ‘லெச்சுமணா, அந்தா இருக்கா பாரு பத்மா அக்கா. அவ என்ன பாக்காளான்னு பாத்து சொல்லணும் என்னா’. பயல் கச்சேரி சுவாரஸ்யத்தில் பத்மா அக்கா இருக்கும் இடத்தை மறந்து பின் இவன் கேட்கும் போதெல்லாம் குத்துமதிப்பாக பத்மா இருக்கும் திசை பார்த்து ‘ஆமா அத்தான். உன்னையேதான் பாக்கா’ என்று சொல்லிவிட்டு பாட்டில் கவனம் செலுத்துவான். லெச்சுமணன் பத்மா அக்காவின் சித்தியை பார்த்து சொல்லியிருக்கிற விவரம் தெரியாத இந்த மடையன் ஒரு மாதிரி மயக்கத்தில் இருக்கும் போது, அடுத்த பாடலாக சொல்லி வைத்த மாதிரி, ‘ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்று பாடகி பாடுவாள். மிதப்பில் தன்னை மறந்து பனாமா ஃபில்டர் பற்ற வைத்து புகைத்து வளையம் விட்டு கச்சேரி கேட்டுக் கொண்டிருக்கும் தன் பெரியப்பாவிடமோ, மாமாவிடமோ வசமாக மாட்டிக் கொள்வான்.

மெல்லிசை கச்சேரிகளுக்கென்றே சில பாடல்கள் உள்ளன. இதயக்கனியில் உள்ள ‘இன்பமே’ அதில் ஒன்று. அந்த பாடலின் ஆரம்பத்தில் பல்லவிக்கு முன் வரும் பின்னணி இசையின் புல்லாங்குழல் பகுதியை பெரும்பாலான கச்சேரிகளில் குழலை உதறுவதிலேயே கவனமாக நேரங்கடத்தி அந்த பிட் தன்னை கடந்து சென்ற பின் ஒரு போலி பதற்றத்தை முகத்தில் காட்டுவார் ஃப்ளூட்டிஸ்ட் சிவபெருமாள். அதற்குள் அதை ஆர்மோனியத்தில் வாசித்திருப்பார் தியாகராஜன் மாமா. அது அவருக்கு பழகிப் போனது என்று குழுவில் உள்ள மற்றவர்கள் சொல்வார்கள். இதே போன்று டிரம் வாசிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு பலகாலம் எங்களை ஏமாற்றிய சங்கரசுப்புவும் ‘நினைத்தாலே இனிக்கும்’ படப்பாடலான ‘நம்ம ஊர் சிங்காரி’யின் முக்கிய டிரம் பிட்டை வாசிப்பதில் இருந்து தப்புவதற்காக குச்சியை சுழற்றி தவற விட்டு பின் அவசர அவசரமாக ஓடி வந்து எடுப்பான். அதற்குள் பாட்டு முடிந்து விடும். அதை பிடிப்பதற்கென்றே குழு உறுப்பினர்கள் ரகசியமாக ஆள் நியமித்தனர். பிறகு அதிலிருந்தும் தப்பிக்க லாவகமாக ஆளில்லாத இடம் பார்த்து குச்சியை வீச ஆரம்பித்து விட்டான்.

பாடகிகள் அழகிகளாக இருப்பது அபூர்வம். அப்படி ஒரு அழகான பாடகியை ஒரு கச்சேரியில் பார்க்க நேர்ந்தது. ஆளைப் போலவே குரலும் கச்சிதம். சரியான ஸ்ருதியில் பாடினாள். ஒவ்வொரு பாட்டுக்கு இடையேயும் அவளையும், அவள் குரலையும் அளவாகப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தான், கச்சேரி நடத்தும் தலைமைப் பாடகன். பணிவுக்குக் காரணம் பாடகியின் தந்தையும் மேடையில் இருந்ததுதான். பேச்சினூடே அவரையும் புகழத் தவறவில்லை. அவரும் ஒரு முன்னாள் பாடகர் என்பது அவன் பேச்சில் தெரிய வந்தது. ‘மைக்’ மோகனுக்கு கொஞ்சம் வயதான மாதிரி தோற்றத்தில் இருந்தார். மகள் நன்றாக பாடுவதை ரசித்த படியே அமர்ந்திருந்த அவரை பாட வருமாறு அழைத்த போதெல்லாம் மெல்லிய புன்முறுவலுடன் மறுத்த படியே இருந்தார். ‘எங்களுக்கெல்லாம் குருநாதர்’ என்றெல்லாம் தலைமைப்பாடகன் புகழ்ந்து பார்த்தும் அவர் மசிவதாக இல்லை. கண்ணியமான அவரது தோற்றமே அவர் ஒரு நிறைகுடம் என்பதை உணர்த்தியது. என்னருகில் நின்று கொண்டிருந்த குஞ்சு ‘ரொம்பல்லா பந்தா பண்ணுதாரு’ என்றான். கச்சேரி முடியும் போது அவர் மகளே அவரை பாட அழைத்த போது அவரால் தட்ட முடியவில்லை. எழுந்து வந்தார். ‘வந்துட்டாரு பாத்தியா’ என்றேன் குஞ்சுவிடம். எங்கள் இருவருக்கும் பிடித்த பாடலான இளையராஜாவின் ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது’ பாடலை தந்தையும், மகளும் பாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. கொஞ்சம் நகர்ந்து மேடைக்கருகில் சென்றோம். பாடலின் முதலில் வரும் ராஜாவின் ஹிந்தோள ஆலாபனையைத் தொடங்கினார், வயதான மோகன். சற்றும் எதிர்பார்க்காத வேளையில் யாரோ தன் வெற்றுக்காலை பூட்ஸ் காலால் மிதித்த மாதிரியான ஓர் அலறல். விருட்டென கூட்டத்தில் புகுந்து குஞ்சு வெளியே ஒடினான். ஓர் இடைவெளி விட்டு அடுத்த ஆலாபனை. பட்ட காலிலேயே பட்டது இன்னொரு பூட்ஸ் மிதி. இப்போது நான் ஓடினேன்.

அண்ணன் அன்னபூரணன் ஒரு கல்லூரி பேராசிரியர். தபலா வாசிப்பான். அவனது கல்லூரியின் ஆண்டு விழாவிற்காக ஒரு மெல்லிசைக் குழு அமைக்கப் பட்டிருக்கிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்த அந்த குழுவில் எந்த நேரமும் சண்டை உருவாகும் பதற்ற நிலை. பத்து பாடல்கள் பாடுவதாக திட்டம். கவனமாக இரு பிரிவினருக்கும் தலா ஐந்து என பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டு விழாவன்று கச்சேரி துவங்குவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது மாணவர்கள் தரப்பிலிருந்து கூடுதலாக ஒரு மாணவனுக்கு பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு வலியுறுத்தியிருக்கிறார்கள். ‘நேரம் இல்லையேப்பா’ என்று சொன்னதை அவர்கள் கேட்க தயாராகயில்லை.

‘விடுங்க ஸார்,பாடிட்டு போறான்…பிறகு அதுக்கு வேற ஸ்டிரைக் பண்ணுவானுவொ..பிரின்ஸி நம்மள புடிச்சு வாட்டுவாரு’

‘ஓகே.ஓகே. . .எப்பா நல்லா பாடுவானா . . மொதல்ல ஆள் யாருன்னு சொல்லுங்கடே . . .’

‘இவன்தான் ஸார் . . . . எல அவன எங்கெ . . . எல ஏய் . . . நாராயணா . . . முன்னால வால . . .’

‘எப்பிடிடே நாராயணா . . .பாடீருவியா . . .?’

‘எங்க ஊர் திருளாம் போதுல்லாம் நான்தான் ஸார் வருசாவருசம் பாடுவேன்.’

நாராயணன் பாடத் துவங்கியிருக்கிறான்.

‘நா . .ஆ . . .ன்

ஒ . .ரு

ரா . . .ஆ .. .ஆ . . . .சியில்லா . . . . .. .

ராஜூ . .ஊ . . . .ஊ . . . …’

முதல் கல் மாணவர் பகுதியிலிருந்துதான் வந்திருக்கிறது.

திசை

இரண்டு வாரங்களுக்கு முன் நானும், திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் என் மகனை அழைத்துக் கொண்டு என் தம்பியின் வீட்டுக்குப் போனோம். நாங்கள் இருப்பது சாலிகிராமத்தில். தம்பி பட்டாபிராமில். அது ஆவடியைத் தாண்டி உள்ளது. இதுவரை இரண்டே இரண்டு முறைதான் நானே போயிருக்கிறேன். தனியாகச் செல்வதற்கு எனக்கு வழி தெரியாது. பட்டாபிராமுக்கு என்று இல்லை. எங்கு செல்வதற்கும். தம்பி எங்களை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரச் சொல்லியிருந்தான். அங்கு அவன் வந்து எங்களை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. எழும்பூர் வரை செல்வதில் எனக்கு சிக்கலில்லை என்றாலும் புத்திசாலித்தனமாக மின்சாரரயிலைப் பிடித்துவிட்டேன். எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனிலேயே இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் பதற்றமில்லாமல் இருந்தேன். நாங்கள் எழும்பூர் சென்று இறங்கும் போதே காலை 11 மணிக்கு மேலாகியிருந்தது. சிறிது நேரம் காத்திருந்தோம். தம்பியைக் காணோம். தொலைபேசியில் அழைத்தேன்.

‘அங்கேயே இருங்க. வந்திருதேன்’ என்றான். ‘எந்தப் பக்கத்திலிருந்து வருவே’ என்று கேட்டதற்கு ‘ கெளக்கே இருந்து வருவேன்’ என்றான். அவன் எப்போதும் இப்படித்தான். திசை சொல்வான். எனக்கு எது கிழக்கு என்று தெரியவில்லை. அப்படி தெரிய வேண்டுமென்றால் என் வீட்டுக்குப் போனால்தான் சொல்ல முடியும். என் வீடு வடக்கு பார்த்த வீடு. அங்கு போய் அங்கிருந்தே கவனமாகப் பார்த்துக் கொண்டு எழும்பூர் வரை மீண்டும் வருவது நடக்கிற காரியமா? ‘ சித்தப்பா, கெளக்கே இருந்து வாரேங்கான்’. நாஞ்சிலாரிடம்
சொன்னேன். ‘ எது கெளக்கு. வாடே பேரப்பிள்ள போய் பாப்போம்’. என் மகனை அழைத்துக் கொண்டு வெயிலை நோக்கி நடந்தார். ‘வெயிலப் பாத்து எப்படி கண்டுபிடிப்பீங்க தாத்தா . . .’ ‘நெளல் எந்தப் பக்கம் விளுதோ, அத வச்சு தெசையை கண்டுபிடிச்சுரலாம். ஜாமென்ட்ரி பாக்ஸ்ல உள்ள கம்பாஸ வச்சுகூட கண்டுபிடிக்கலாம் . . . .’ ‘அய்யோ அது கம்பாஸ் இல்ல, கேம்பஸ். . . என்ன தாத்தா இது கூட தெரியலே உங்களுக்கு . . .’ பிளாட்பார பெஞ்சில் அமர்ந்து தாத்தாவுக்கும் பேரனுக்குமான உரையாடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு வலதுப் பக்கத்திலிருந்து தம்பி நடந்து வந்தான். அப்படியென்றால் அது கிழக்குதான் என்று நினைத்து கொண்டேன்.

ஊரெல்லாம் சுற்றுபவர்களைப் பார்த்தால் இன்றைக்கும் எனக்கு ஆச்சரியம்தான். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தியா முழுவதும் தனியாகவே சுற்றி அந்த அனுபவங்களை எழுதியுமிருக்கிறார். இது எப்படி அவரால் முடிந்தது என்று தெரியவில்லை. நண்பன் குஞ்சு தானே காரை ஓட்டிக் கொண்டு தமிழகம் முழுதும் சுற்றுவான். நான்தான் அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருப்பேன். சிறுவயதிலிருந்து என்னுடனேயே வளர்ந்த அவனுக்கு மட்டும் எப்படி எல்லாத் திசைகளும் தெரிகிறது. இன்று வரை எனக்கு புரியாத புதிர் இது. எனக்கு திருநெல்வேலியிலேயே இன்னும் பல இடங்கள் தெரியாது. பெரும்பாலான
திருநெல்வேலிக் காரர்களின் லெட்சணமும் இதுதான். எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த ரேவதி அக்காவின் தம்பி சங்கரன் என்கிற சங்காவுக்கு பேசத் தெரியாது. ஊமையில்லை. ஒரு காலை சாய்த்து நடப்பான். எல்லோருக்கும் எடுபிடி வேலைகள் செய்து வந்த சங்கா, உடம்பில் சட்டை அணிவதில்லை. ஒரு அழுக்குத் துண்டும், அதைவிட அழுக்கான வேட்டியும்தான் உடை. அவன் பேசுவது எங்களுக்கு மட்டுமே புரியும். எல்லோரையும் மாமா என்றழைப்பான். ‘மாமா கூப்பாங்கோ’ என்றால் மாமா கூப்பிடுகிறார்கள். ‘மாமா சாப்பாங்கோ’ என்றால் மாமா சாப்பிடுகிறார்கள். இரண்டு மூன்று தெருக்கள் தவிர திருநெல்வேலியிலேயே
வேறு எந்த இடம் பற்றியும் அறிந்திராத சங்கா ஒரு நாள் திசை தப்பி காணாமல் போய்விட்டான். எங்கெங்கெல்லாமோ தேடினோம். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து வைத்தோம். ஒருவாரமாகியும் தகவல் இல்லை. சங்காவைத் தெரிந்த, ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசியிராதவர்கள் கூட சங்காவைத் தேட ஆரம்பித்தார்கள். பாளயங்கோட்டை தாண்டி ஏதோ ஒரு ஊருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக இருந்த நெல்லையப்பன் அண்ணன் போயிருக்கும் போது, அவரை நோக்கி மாமா என்று ஒரு குரல் கேட்டிருக்கிறது. சங்காதான். சிரித்தபடி நின்றிருக்கிறான். பேச முடியாத சங்காவை சந்தேகித்து யார் யாரோவெல்லாம் அடித்திருந்திருக்கிறார்கள்.
நெல்லையப்பண்ணன் அழைத்து வந்து விட்டார். எங்கள் பகுதியே சங்காவை
வரவேற்றது. ‘ எல சங்கா, அவன் கூப்பிட்டான் இவன் கூப்பிட்டான்னு எங்கேயும் போவக் கூடாது, என்னா?’ சங்கா அதற்கு பிறகு எங்குமே செல்வதில்லை. அந்தப் பக்கத்திலேயே ஏதாவது கடைக்கு கிடைக்குப் போவதென்றால் போவான். அவ்வளவுதான்.

திசைகள் அறியா சங்காவுக்கும் எனக்கும் உள்ள ஒரே வேற்றுமை, எனக்கு பேசத் தெரியும். அவ்வளவே. சென்னைக்கு நான் வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் எனக்கு சாலிகிராமத்தை விட்டால் ஒரு இடமும் தெரியாது. சமயங்களில் சாலிகிராமமும். வாத்தியாரும் இங்கேயே இருக்கிறார். நான் சார்ந்திருக்கும் சினிமாத் தொழிலுக்குத் தேவையான சகல இடங்களும் இங்கேயே. பிறகு எனக்கென்ன கவலை? இடங்களைப் பற்றிய தேடலோ, ஆர்வமோ அடிப்படையிலேயே இல்லாமல் போனதுதான் இதற்கு காரணம். எத்தனையோ சிக்கல்களை இந்தக்குறைபாட்டினால் வாழ்க்கையில் சந்தித்து வந்தாலும், இன்னமும் மனதை மாற்ற முடியவில்லை. சின்ன வயதில் எனது உறவினர்களான வாசன், சுந்தர் அண்ணன், நான் மூவரும் திருநெல்வேலிக்கு பக்கத்தில் உள்ள புகழ் பெற்ற கிருஷ்ணாபுரத்துக்கு செல்லத் திட்டமிட்டோம். சிற்பக் கலையை ரசிக்கும் எங்களின் உயர்ந்த கலாமனதைப் புரிந்து கொண்டு மகிழ்ந்து வீட்டில் சாப்பாடு கட்டிக் கொடுத்தார்கள். வீட்டிற்குத் தெரியாமல் ஆளுக்கொரு சைக்கிளில் கிளம்பினோம். பாதி வழியிலேயே வாசன் மனதில் ஓர் யோசனை. அப்படியே திருச்செந்தூர் சென்று வந்தால் என்ன? சுந்தர் அண்ணனும் அதை வழிமொழிய, அவர்கள் இருக்கும் தைரியத்தில் நானும் தலையாட்டினேன். அவர்களைப் பின்தொடர்ந்து சைக்கிளை மிதிக்க மிதிக்க திருச்செந்தூர் வருவேனா என்றது. பஸ் வேகமாகப் போனாலே திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லஒரு மணிநேரமாகும். ஆனாலும் விடாது சைக்கிளை மிதித்தோம். மதிய உணவு நேரத்துக்கு முன்பே மூவருக்கும் பசித்துவிட்டது. சாப்பாட்டைப் பிரித்துஅள்ளித் தின்று முடித்தோம். தூக்கம் வருவது போல் இருந்தது. சுந்தர் அண்ணன் திட்டினான். ‘அறிவிருக்கா, இப்போவே லேட்டாயிட்டு. வா வா. ஏறி மிதி’. தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டோமே என்று தோன்றியது. காலெல்லாம் வலித்தது. திருச்செந்தூரை நெருங்கவே சாயங்காலமானது. அம்மன்புரம் என்னும் ஊர் வந்தது. அதற்கு அடுத்த ஊர் திருச்செந்தூர்தான். தாகம் தாங்க முடியவில்லை. பதநீர் குடிக்கும் யோசனையை வாசன் சொன்னான். ரோட்டை விட்டுஇறக்கத்தில் ஒரு மரத்தடியில் சின்ன ஓலைக் குடிசையொன்றைப் பார்த்து விட்டேஇதை சொல்லியிருக்கிறான். சைக்கிள்களை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி அந்தக்குடிசையை நோக்கிச் சென்றோம். மடித்த பனை ஓலையில் கொடுக்காமல் பிளாஸ்டிக் தம்ளரில் பதநீர் கொடுத்தார்கள். வாசனும், சுந்தர் அண்ணனும் இரண்டிரண்டு கிளாஸ்கள் அடிக்க, நான் மட்டும் சளைத்தவனா. அந்த சுவை பிடிக்கவில்லையென்றாலும் நானும் இரண்டு கிளாஸ்கள் பதநீர் குடித்தேன்.

அம்மன்புரத்தில் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து மிதிக்கத் தொடங்கினோம். எனக்கு லேசாக தலை சுற்றியது. அதற்குப் பிறகு சைக்கிள்தான் எங்களைக் கூட்டிக் கொண்டு போனது. அடுத்த ஊரான திருச்செந்தூர் வர ரொம்ப நாளானது. ஒருமாதிரியாக செந்திலாண்டவன் சன்னிதியை அடைந்தோம். சட்டையைக் கிழற்றிவிட்டு சன்னிதானம் முன் நின்றோம். எனக்கு இரண்டு முருகர்கள் தெரிந்தனர். ஷண்முகர் சன்னிதியில் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனை தரிசிக்கப் போன போது அங்கு அவர்கள் ஒரு கூட்டமாக ஒரு பெரிய
கூட்டுக்குடும்பமாகக் காட்சியளித்தனர். கோயிலை விட்டு வெளியே வந்து கடற்கரையில் விழுந்தோம். கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. கிருஷ்ணாபுரச் சிலைகள் நடனமாடின. சைக்கிள்கள் பறந்தன. முருகன் கையில் வேலோடு எங்களுடன் ஓலைக்குடிசையில் அமர்ந்து பிளாஸ்டிக் தம்ளரில் பதநீர் குடித்தார். கடலலை எழும்பி வந்து என்னை மூடும் போது, சுந்தர் அண்ணன் என்னை உலுக்கினான்.

‘கெளம்புவோம். இருட்டிரும்.’ அருகிலேயே மல்லாந்து கிடந்த வாசனை எழுப்பினோம். தள்ளாடி எழுந்து நின்று குனிந்து கடற்கரையில் தேடிப் பொறுக்கி தன் வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான். இருளோடு மனதில் பயமும் சேர்ந்து கொள்ள சைக்கிளை மிதிக்கத் தொடங்கினோம். ஸ்ரீவைகுண்டமருகே வயலிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த விவசாயக்
கூட்டத்தின் மேல், இருட்டுக்குள் கண் தெரியாமல் மோதி விழுந்தோம். நாங்கள்
எழுந்திருக்க உதவிய அவர்கள், பித்தளைத் தூக்குச் சட்டியிலிருந்து தண்ணீர் சாய்த்துக் கொடுத்து, ‘ டைனமோ வேற இல்லியே. பாத்துப் போங்க தம்பிகளா’என்றனர். இரவு பதினோரு மணிக்கு மேல் வீட்டுக்குத் திரும்பினோம். தெருவே எங்கள் வீட்டுவாசலில் காத்திருந்தது. போலீஸிலும் புகார் கொடுத்திருந்தனர். பெரியவர்கள் யாரும் ஒன்றுமே சொல்லவில்லை. ‘மொதல்ல போய் சாப்பிடுங்கலே’. நல்ல பையனாக நடந்து கொள்வதாக எண்ணி பெரியப்பாவிடம், ‘இந்தாங்க பெரியப்பா. திருச்செந்தூர் பிரசாதம்’ என்று திருநீற்றுப் பொட்டலத்தை நீட்டினேன். அதுவரை அமைதியாக இருந்த அனைவரும் எங்கள் மூவரையும் சோபாவில் உட்கார வைத்து செருப்பால் அடித்தார்கள்.

சென்னையில் என்னை எங்கு அனுப்புவதாக இருந்தாலும் வாத்தியார்
பாலுமகேந்திரா என்னிடம் இடம் குறித்து எதுவும் சொல்ல மாட்டார். ‘அகிலா, உன் புள்ள பாட்டு பாடிக்கிட்டு எங்கேயாவது போயிருவான். டிரைவரை கூப்பிடு’என்பார், தன் மனைவியிடம். தற்சமயம் நான் எங்காவது செல்வதாக இருந்தால் உதவி இயக்குனர் பத்மன், எனது தம்பி சிவா, நண்பர்கள் செழியன், ஷாஜி, மனோ என்று யாராவது வந்து என்னை கூட்டிச் செல்ல வேண்டும். நண்பர் ஜெயமோகனுக்கு பாவலர் விருது வழங்கும் விழாவிற்கு சாலிகிராமத்திலிருந்து நானும், வ.ஸ்ரீநிவாசன் சாரும் அவரது ஸ்கூட்டரில் கிளம்பினோம். ஸ்ரீநிவாசன் ஸார் தன்னுடைய மாருதி காரை ஸ்கூட்டர் என்றுதான் சொல்வார். வண்டியில்
ஏறும்போதே, ‘சுகா, உங்களுக்கு பாரதீய வித்யா பவன் எங்கேயிருக்குன்னு தெரியுந்தானே?’ என்று வினவினார். திசைகள் விஷயத்தில் ஸ்ரீனி ஸார் எனக்கு தாத்தா. நண்பர் ரவிசுப்ரமணியம் எனக்கு அனுப்பியிருந்த அழைப்பிதழை கையிலேயே வைத்திருந்தேன். அதைப் பார்த்து ‘மையிலாப்பூர்லதான் சார் இருக்கு’ என்றேன். முன் தினமே நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன், மயிலாப்பூர் கற்பகம் விலாஸின் எதிர்ப் புறத்தில் பாரதீய வித்யாபவன் இருக்கும் விஷயம் சொல்லியிருந்தார். மயிலாப்பூருக்கு எப்படி போவது என்று ஸ்ரீனிவாசன் ஸார் கேட்டு விடுவாரோ என்று பயந்த படியே உட்கார்ந்திருந்தேன். கேட்டாலும்
எனக்கு தெரியாது என்னும் விவரம் என்னை விடவும் ஸ்ரீனி ஸாருக்கு தெரியுமென்பதால் அவர் என்னிடம் கேட்கவில்லை. பெரும் போரட்டத்துக்குப் பின் மைலாப்பூரை அடைந்தோம். பாரதீய வித்யா பவனும் கண்ணில் சிக்கிவிட்டது. பெருமிதம் தாங்க முடியவில்லை ஸ்ரீனி ஸாருக்கு. உடனேயே காரை விட்டு இறங்காமல் தனக்குத் தானே சிரித்து மகிழ்ந்து கொண்டார். சாலிகிராமத்திலிருந்து கிளம்பி என்னைப் போன்ற திசையறியா ஒருவனை துணைக்கு வைத்துக் கொண்டு வெற்றிகரமாக மைலாப்பூர் வந்தடைந்த நிறைவு அவர் முகத்தில். இதற்காகவெல்லாம் பாவலர் விருது கொடுக்க மாட்டார்கள் என்று சொல்ல நினைத்தேன். திரும்பி அவருடன்தான் நான் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதால் அமைதி காத்தேன். ‘உண்மையாவே பெரிய விஷயம் சுகா.
யார்க்கிட்டேயும் கேக்காம வந்துட்டோமில்லையா?’ என்றார். ‘ஆமாம் சார். பெரிய விஷயம்தான்’ என்றேன். அன்று முழுக்க இந்த சாதனையை நினைத்தே மகிழ்ச்சியாக இருந்த வ.ஸ்ரீனிவாசன் அவர்கள் சுத்தமான சென்னைக்காரர்.

சுப்பையாவின் தம்பி

அப்பா கூடப் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். பெரியப்பாக்களுக்கு தலா நான்கு பிள்ளைகள். அத்தைகளுக்கு மும்மூன்று. நாங்கள் அண்ணன் தம்பிகள் இரண்டு பேர். ஏதாவது விசேஷம், காரியம் என்றால் அப்போதைக்கு சண்டையில்லாமல் குடும்பம் ஒன்று சேர்ந்திருந்தால் வீடு நிரம்பி வழியும். பெரியக்கா கல்யாணத்திலும், பின் ஆச்சி இறந்த போதும், கடைசியாக அம்மா இறந்த போதும்தான் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் ஒன்றாகப் பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்குமே கிட்டியது. பெரியவர்கள் அவர்களின் பரம்பரைச் சொத்தான ‘நான்’ என்கிற நினைப்பையும், வறட்டுப் பிடிவாதத்தையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஏதேதோ காரணங்களுக்காக ஆளாளுக்கு முகம் பார்க்காமல் வீஞ்சிக்கொண்டு உர்ரென்று நடமாட, பிள்ளைகள் நாங்கள் சந்தோஷமாகக் கூடி மகிழ்ந்திருந்ததை இப்போதெல்லாம் நினைத்துப்பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளவேண்டியுள்ளது. ஆச்சியின் பிணத்தின் முன் தேவாரம், திருவாசகம் படிக்கப் பட்டது. எடுக்க நேரம் ஆகும் என்று தெரிந்தவுடன் சின்னப்பிள்ளைகள் நாங்கள் விளையாடப் போய்விட்டோம். நான் மட்டும் அவ்வப்போது விளையாட்டிலிருந்து விலகி ஆச்சி பக்கத்தில் போய் அவள் முகத்தைப் பார்த்து சிறிது நேரம் அழுதுவிட்டு பின்பு மறுபடியும் விளையாட்டில் சேர்ந்து கொள்வேன். ஆச்சியிடமே வளர்ந்தவன் இது கூட செய்யவில்லையென்றால் எப்படி?

இப்போதெல்லாம் ஒரு வீட்டில் நான்கைந்து குழந்தைகளைப் பார்ப்பதற்கான வாய்ப்பே இல்லை. எனக்கு மிகவும் நெருக்கமான நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்றோருக்கு இரண்டு குழந்தைகள். எனக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு. இந்தப் பயலுக்கு போகோ சேனலை விட்டால் வேறு போக்கிடமே இல்லை. இவன் விளையாட, உடன் வளர இன்னொரு தம்பியோ, தங்கையோ வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு ஆரம்பத்திலேயே இல்லை. சமயத்தில் இவன் ஒருவனை சமாளிக்கவே 100க்கு ஃபோன் பண்ண வேண்டியுள்ளது. இதில் இன்னொரு பிள்ளையைப் பற்றி எங்கிருந்து யோசிக்க. தகப்பனாரின் தலைமுறையில் நிறைய சகோதர சகோதரிகளுடன் பிறந்து வளர்ந்தவர்கள், அற்பகாரணங்களுக்காக இப்போது பேச்சுவார்த்தையின்றி யாரோ மாதிரி வாழ்வதைப் பார்த்து மனசு வெறுத்துப் போனதினால் ஒரு வேளை போதுமய்யா ஒரு குழந்தை என்று தோன்றிவிட்டதோ என்னவோ. சமீபத்தில் ஒரு திருமணத்தில் எனது பெரியண்ணனை என் மகனுக்கு, ‘இவன்தான் உன் பெரியப்பா’ என்று அறிமுகப்படுத்தி வைக்கும் அவலநிலைக்கு ஆளானேன். கண்கலங்கியபடியே ‘எல அய்யா’ என்று தன் தம்பி மகனைக் கட்டித் தழுவிக் கொண்டான் அண்ணன். பெரியவர்களின் தேவையில்லாத வீம்பு குணத்தினால் ஒன்று விட்ட சகோதரர்களாகிய நாங்கள் ஒருவரையொருவர் மறந்தே போனோம். ஃபாஸிலின் ‘வருஷம் 16’ திரைப்படம் பார்க்கும் போது விடுமுறைக்கு ஒன்று கூடிய குடும்ப கலாட்டாகாட்சிகளில் திரையரங்கம் முழுவதும் கைதட்டி சிரித்து மகிழ்ந்த போது என்னையறியாமல் நான் அழுதேன். என் அண்ணன்களும், அக்காக்களும் அவரவர் ஊர்களில் நிச்சயம் அழுதிருப்பார்கள்.

ஒன்றாம் வகுப்பிலிருந்தே என்னுடன் ஒன்றாக படித்த என் ஆருயிர்நண்பன் குஞ்சு என்கிற குஞ்சரமணியின் தாத்தா குருசாமி தீக்ஷிதர் 94 வயது வரை வாழ்ந்தார். எட்டயபுரம் அரண்மனையின் ஆஸ்தான ஜோஸியர் அவர். அவரது பெரியம்மா மகனான சுப்பையாவை அவன் வாழ்ந்த காலத்தில் அவர் கண்டுகொள்ளவே இல்லை. சிறிய வயதிலேயே வறுமையில் இறந்து போன தன் அண்ணன் சுப்பையாவைப் பற்றி அவருக்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயமும் இல்லை. ‘யார் பேச்சையும் கேக்காம சும்மா ஒதவாக்கரையா சுத்திண்டிருந்தான்’ என்கிற அளவில் மட்டுமே அவர் சுப்பையாவைப் பற்றிப் புரிந்து வைத்திருந்தார். மேதைகள் மறைந்த பின்னர் அவர்தம் அருமைகளைத் தெரிந்து கொள்ளும் பழக்கத்திற்கு ஆளான தமிழ்ச் சமூகம் சுப்பையா காலமான பிறகு அவர் பெருமைகளை அறிந்து கொண்டது. அவர் எழுதிய கவிதைகள் அனைத்துமே மேன்மையானவை என்றது. ஊரெங்கும் சுப்பையாவின் சிலைகளை நிறுவி அதன் கீழ் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று பெயர் பொறித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது. பாரதியாரின் நூற்றாண்டு விழாவில் அரசாங்கம் அவரது குடும்பத்தை கெளரவித்த போது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் பொன்னாடை போர்த்திக் கொண்டு குருசாமி தீக்ஷிதர் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து பவ்யமாக நின்றார். தன் வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருக்கும் அந்தப் புகைப்படத்தை நண்பன் குஞ்சு, என்னதான் தன் தாத்தாவாக இருந்தாலும், ‘பாத்தியா, அவாள் போஸ’ என்று இன்றைக்கும் கேலியாகச் சொல்லிக் காட்டுவான்.

வாழ்க்கையின் பெரும்பகுதியை எட்டயபுரத்திலேயே கழித்த குருசாமி தாத்தா அவ்வப்போது திருநெல்வேலி அம்மன் சன்னதியில் உள்ள குஞ்சுவின் வீட்டுக்கு வருவார். குஞ்சுவின் வீடு குறுகலாக நீளமாக இருக்கும். வீட்டுவாசலிலிருந்து பார்க்கும் போது தூரத்தில் சப்பரத்திலுள்ள சாமி மாதிரி தாத்தா மங்கலாகத் தெரிவார். ஆனால் அவர் போடும் சத்தம் மட்டும் இரைச்சலாக வீடு முழுதும் கேட்கும். குருசாமி தாத்தா சிரித்து நான் பார்த்ததில்லை. அவருக்கு சிரிக்கத் தெரியுமா என்ற சந்தேகத்தை குஞ்சுவிடமே கேட்டிருக்கிறேன். ஒரே ஒரு தடவை அவர் சிரித்து தான் பார்த்திருப்பதாக குஞ்சு சொன்னான். தனது 94ஆவது வயதில் குருசாமி தாத்தா கீழே விழுந்து கால் எலும்பை முறித்துக் கொண்டார். பொதுவாக அவருக்கு கோபமே வராது. சோற்றில் உப்பில்லையென்றால் சாப்பிடும் இடத்திலேயே காறித் துப்புவார். மற்றபடி சாந்த சொரூபி. இப்படிப்பட்டவர் கீழே விழுந்துவிட்டால் வீடு என்ன ஆகும். தாத்தாவை படுக்கையில் போட்டார்கள்.அவருக்குத் தெரியாது அதுதான் தனது மரணப் படுக்கையென்று. திருநெல்வேலியின் புகழ்பெற்ற எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் பண்டாரவிளை நாடார் வரவழைக்கப்பட்டார். முட்டைப்பத்து போடப்பட்டது. தாத்தாவுக்கு படுக்கையிலேயே எல்லாம் ஆரம்பமானது. மருமகள்கள் தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறையாக மாமனாரைப் பார்த்துக் கொண்டார்கள். ஆனாலும் நித்தமும் அர்ச்சனைதான்.

ஹார்ளிக்ஸ் எங்கெடி.?

அதத்தானேப்பா குடிச்சிட்டிருக்கேள்!

தூ . . . ஒங்களெல்லாம் அருவாமனயால வெட்டணும்.

கையால் வெட்டுவது போல் சைகை செய்வார். குஞ்சுவின் அம்மாவும், பெரியம்மாவும் என்னிடம் ‘எல பாத்தியா, இதுக்கு என்ன பண்றது நீயே சொல்லு’ என்பார்கள். மெல்ல, மெல்ல எல்லா இயக்கங்களும் செயலிழக்கத் தொடங்கி தாத்தா அடங்கினார். கடைசி வரை அவருக்கு கால் எலும்பு முறிவுக்கான கட்டு போடப்பட்டு வந்தது. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் கட்டு பிரித்து புது கட்டு போடும் போது நான்தான் உதவிக்கு நின்றேன். நான் அவர் காலை தூக்கிப் பிடித்துக் கொள்ள பண்டாரவிளை நாடார் பரபரவென்று கட்டு போட்டார். போடும் போதே என்னிடம் பெரியவரை பற்றி விசாரிப்பு.

சாமிக்கு ஒரு தொன்னூறு வயசு இருக்குமா?

தொன்னூத்தி நாலு.

ஏ . .யப்பா . . அந்த காலத்து உடம்பு . சாமிக்கு மொத்தம் எத்தனை பிள்ளைய?

பதிமூணு

பதி . .மூணா . . . சாமி என்ன தொளில் பண்ணிக்கிட்டிருந்தா ?

அதான் சொல்லிட்டேனே.