கவிஞர் சுகுமாரனும், நானும்.

புத்தகக் கண்காட்சிக்கு முதல் முறை நானும், நண்பர் மனோவும் சென்றிருந்தோம். இரண்டாவது முறை நான் சென்ற போது திருமதி.ப்ரீத்தம் வெங்கடேஷ் சக்கரவர்த்தி அவர்களை சந்திக்கும் நோக்கத்துடன் என்னுடன் உதவி இயக்குனர் தியாகு வந்தான். அவன் ப்ரீத்தம் இருக்கும் பகுதிக்குச் சென்றுவிட, நான் எனி இந்தியனுக்குச் சென்றேன். உட்கார்ந்து மும்முரமாக வேலையில் மூழ்கியிருந்த தேவராஜன் என்னைக் கண்டதும் துள்ளி எழுந்து கைகுலுக்கி, ‘மொதல்ல உக்காருங்க ஸார்’ என்று என்னை அமரவைத்தார். ‘ரொம்ப சந்தோஷப்படுத்திட்டீங்க ஸார்’. சிரித்துக் கொண்டே இருந்தார். ‘எழுத்தும், எண்ணமும்’ குழுமத்தில் நான் எழுதியிருந்த குழுமம் ஓர் உரையாடலைப் படித்து விட்டு அன்று காலையிலேயே என்னை தொலைபேசியில் அழைத்து சிரித்திருந்தார். மீண்டும் அதைப் பற்றியே சொல்லிச் சொல்லிச் சிரித்தார். ‘ஸார், நான்ல்லாம் சிரிக்கவே மாட்டேன் ஸார். இன்னிக்கு நீங்க எழுதியிருந்ததப் படிச்சுட்டு அப்படி சிரிச்சேன் ஸார். ரொம்ப சந்தோஷமா இருந்துது. என் கவலையெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு மறந்தே போச்சு. ரொம்ப சந்தோஷம் ஸார்’, மீண்டும் சொன்னார். சிறிது நேரத்திலேயே தியாகு வந்துவிட, தேவராஜனிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

எனி இந்தியனிலிருந்து கிளம்பி செல்லும் வழியில் கவிஞர் சுகுமாரனைப் பார்த்தேன். ஒரு ஸ்டாலில் நின்று கொண்டிருந்தார். சுகுமாரனை ஒரே ஒருமுறை (சென்ற வருடம் மதுரை புத்தகக் கண்காட்சியில்) பார்த்திருக்கிறேன். மற்றபடி அவருக்கும், எனக்கும் மின்னஞ்சல் நட்பு மட்டுமே உண்டு. தொலைபேசியில் கூட பேசியதில்லை. தான் சென்னையில் இருக்கும் விவரத்தை அன்று காலைதான் எனக்கு மின்னஞ்சலில் சொல்லியிருந்தார், சுகுமாரன். சட்டென்று அவரிட்ம போய் பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. அதுபோக அவர் சுகுமாரன் தானா என்பதிலும் எனக்கு சந்தேகம் இருந்தது. நண்பர் ஹரன் பிரசன்னாவுக்கு ஃபோன் பண்ணினேன்.

பிரசன்னா . . .

யாரு?

யாரா? யோவ், நாந்தான்யா சுகா . . .

அண்ணாச்சி மன்னிச்சுக்குங்க . . . . ஃபோன் தொலைஞ்சு போனதுல நம்பரெல்லாம் போயிட்டு . . .சொல்லுங்க . .

கவிஞர் சுகுமாரன் வந்துருக்காரா?

தெரியலயே . . . வந்துருப்பாராயிருக்கும். ஏன் கேக்கியெ?

இல்ல . . . இங்கெ புதுகைத் தென்றல்ன்னு ஒரு ஸ்டால் முன்னாடி நிக்காரு. அவர்தானான்னு எனக்கு ஒரு டவுட்டு . . .அதான் கேக்கென்.

இவ்வளவுதானெய்யா. கொஞ்சம் இரிங்க. அவரு ·போன் நம்பர் தாரென். பேசி கன்ஃபர்ம் பண்ணிட்டு அப்புறம் போய் பேசுங்க.

சரி. குடுங்க.

ஒரு நிமிஷம். . . . . . . . . . அண்ணாச்சி, அவரு ஃபோன் நம்பரையும் தொலச்சுட்டேன் போலுக்கெ.

வைங்கய்யா ஃபோன.

இன்னொரு முறை எட்டிப் பார்த்தேன். சுகுமாரனுக்கும் நான் அவரை பார்ப்பது தெரிந்து விட்டது. நைசாக என்னைப் பார்க்க ஆரம்பித்தார். நான் தியாகுவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேறு பக்கம் நகர்ந்தேன். ‘தியாகு, அந்த ஸார்கிட்டெ போயி அவரு கவிஞர் சுகுமாரனான்னு கேளேன்’ என்றேன். தியாகு முன்னோக்கி நகரவும் ஒரு யோசனை. அவனை ஒரு நிமிஷம் நிற்கச் சொல்லிவிட்டு தேவராஜனுக்கு ஃபோன் பண்ணி நான் நிற்கும் இடத்துக்கு வரச் சொன்னேன். தேவராஜனிடம் சுகுமாரனைக் காண்பித்து கேட்கவும், ‘சுகுமாரன் ஸார்தான். எனக்கு நல்லா தெரியுமே’ என்றார். ‘அப்போ நான் போயி பேசலாங்கரீங்களா?’ தயக்கத்துடன் நான் கேட்கவும், ‘ஸார், உங்களுக்கு யோசனையா இருந்தா நான் வேணா வந்து பேசி உங்களை அறிமுகப்படுத்தட்டுமா?’ என்றார். தியாகு எரிச்சலடைந்தான். ‘ஸார், இதுக்கு போயி ஏன் ஸார் இவ்வளவு தயங்குறீங்க? வாங்க ஸார், நாமளே போய் பேசலாம்’ என்றான். தேவராஜனுக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு, நானும், தியாகுவும் கவிஞர் சுகுமாரனை நோக்கிச் சென்றோம்.

பதினைந்து இருபது நிமிடங்களுக்கும் மேலாக எங்களின் அலைக்கழிப்பை கவனித்துக் கொண்டிருந்த சுகுமாரன், நாங்கள் அவரை நெருங்கவும் குத்துமதிப்பாக புன்முறுவல் பூத்தபடி எங்களை எதிர்நோக்கினார். நேரே அவரிடம் சென்று நான் கையை நீட்டவும், அவரும் சிரித்தபடி கை பற்றி குலுக்கினார். முகத்தில் மட்டும் குழப்ப ரேகை. நானேதான் பேச ஆரம்பித்தேன்.

‘கவிஞர் சுகுமாரன்?’

‘நீங்களா?’

‘நான் உங்கள கேட்டேன். நீங்க கவிஞர் சுகுமாரன்தானே?’

‘இன்னிக்கு மட்டுமே நாலஞ்சு பேரு கேட்டுட்டாங்க. அதுல ரெண்டு பேரு லேடீஸ்’.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. தியாகு என் சட்டையைப் பிடித்து இழுத்தான்.

‘ஸார், போயிரலாம்’.

சுகுமாரன் தொடர்ந்தார்.

‘பரவாயில்லை. நீங்களே என்கிட்டெ வந்து பேசுனதால ஒங்களுக்கு என்னோட அன்புப் பரிசு.’

ஒரு கவிதைப் புத்தகத்தை எடுத்து கொடுத்தார். அந்த புத்தகத்தின் பெயர் ‘இரவின் நரை’. எழுதியவரின் பெயர் ‘பிச்சினிக்காடு இளங்கோ’ என்று போட்டிருந்தது.

புத்தகத்தை வாங்கிக் கொண்டு பிச்சினிக்காடு இளங்கோவுக்கு நன்றி கலந்த வணக்கத்தை கண்கலங்கச் சொல்லிக் கொண்டு கிளம்பினோம். நேரே கிழக்கு பதிப்பகத்தைத் தேடிச் சென்றேன். தூரத்திலிருந்து பார்க்கும் போதே இரண்டு நாற்காலிகள் போட்டு பிரசன்னா உட்கார்ந்திருப்பது தெரிந்தது. மூச்சிரைக்க சுகுமாரனை சந்தித்த கதையை பிரசன்னாவிடம் சொன்னேன். ‘அய்யோ அண்ணாச்சி, என்னால தாங்க முடியலியே. அநியாயத்துக்கு அசிங்கப்பட்டிருக்கியளே’ கைகொட்டி உடல் குலுங்கச் சிரித்தார் பிரசன்னா. ஓங்கி ஒரு குத்து குத்த வேண்டும் போலிருந்தது. அவ்வளவு பெரிய பிரதேசத்தில் எந்தப் பகுதியில் குத்துவது என்று தெரியாமல் என் கண்கள் களைத்தன. ‘போதும்யா, ரொம்பவும் சிரிக்காதேரும். நான் வாரேன்’. கோபத்துடன் நான் திரும்பி நடக்கும் போது பின்னால் சிரிப்பொலி கேட்டுக் கொண்டுதானிருந்தது.

என்னை வீட்டில் விட்டுவிட்டு தியாகு கிளம்பும் போது அவனிடம் மெல்ல சொல்லிப் பார்த்தேன்.

‘நீ வேணா இந்த புஸ்தகத்த கொண்டு போயி படிச்சு பாரேன். நல்ல் . . .லா . .த்தான் இருக்கும்னு நெனைக்கிறேன்’

‘இல்ல ஸார். நான் மெடிஸின் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். இன்னோரு நாள் வாங்கிக்கிறேன்’.

தியாகு கிளம்பிப் போனான். ‘இரவின் நரை’ புத்தகத்தின் பின்னட்டையைப் பார்த்தேன். பிச்சினிக்காடு இளங்கோ என்னைப் பார்த்து சிரித்தபடி இருந்தார்.

முருகன்சாமி பேரு

கணவன் பெயரை சொல்லாத மனைவிமார்கள் இப்போதும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி இருந்த ஆச்சிகள், அத்தைகள், அக்காக்கள், மதினிகள், சித்திகள் என்று பலரை நான் பார்த்திருக்கிறேன். இதில் ரொம்பவும் அந்தக் காலத்துப் பெண்கள் பழமையில் ஊறி மற்றவர்களைப் படுத்துவார்கள். தாத்தாவின் பெயரான சுப்பையாவில் சுப்பு என்று வருகிறதாம். அதற்காக ஆச்சி உப்பு என்று சொல்வதற்குக் கூடத் தயங்கி லவங்கம் என்பாள். மூச்சுக்கு மூச்சு தன் கணவர் செய்யும் சகல விஷயங்களையும் விமர்சித்து பேசும் மனோன்மணி அத்தைக்கு மாமா மேல் ஏதேனும் கொஞ்சமாவது மரியாதை இருக்கிறதா என்று எங்களுக்கெல்லாம் சந்தேகம் உண்டு. ஆனால் அவளுமே கூட அவர் பெயரை உச்சரிக்கமாட்டாள். ‘உங்க வாத்தியார் மாமா இருக்காகளே’ என்றுதான் சொல்வாள். அவள் மாமாவைப் பேசும் பேச்சுக்கு அவர் பெயரை சொல்வதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது. இதை ஒருமுறை அவளிடமே சொன்னதற்கு ‘எல, எங்க அம்மை என்னை அப்படியா வளத்திருக்கா?’ என்று கடுங்கோபம் கொண்டாள்.

தாத்தாக்களின் பெயர் விடப்பட்ட பேரன்களின் மேல் இந்த ஆச்சிகளுக்கு இருக்கும் பிரியம் சொல்லி மாளாது. அவர்களை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டார்கள். பெற்ற தாயாக இருந்தாலும் அந்தப் பயல்களை அவள் ஒன்றும் சொல்லிவிட முடியாது. ‘அந்த மனுஷன் பேரை விட்ட பயலை இப்படி தாறுமாறா பேசலாமா, நீயே சொல்லுளா’ என்று ஊர் முழுவதும் அந்தக் கேஸை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார்கள் ஆச்சிகள். இத்தனைக்கும் ‘ எல, இங்கெ வா’ என்றுதான் அம்மை சொல்லியிருப்பாள். இறந்து போன தன் புருஷனை, தன் கண் முன்னால் தன் மருமகள் அவமானப் படுத்திவிட்டதாகவே ஆச்சி நினைப்பாள். இந்த பிரச்சனை சில சமயங்களில் பெரிய குடும்பச் சண்டையாக மாறிவிடுவதும் உண்டு. ஊரிலிருந்து வரும் மகளிடம் ஆச்சி சொல்லி அழுவாள். ‘ நல்ல வேளை. இதையெல்லாம் பாத்து அசிங்கப்படாம ஒங்க அப்பா போய் சேந்தா. ஏந்தலையெளுத்து. இந்த எளவையெல்லாம் பாக்கணும்னு இருக்கு. ஒன் தம்பியும்லாம்மா பொண்டாட்டி பேசுத பேச்சைக் கேட்டுக்கிட்டு வாயில மண்ணைப் போட்டுக்கிட்டு இருக்கான்’.

ஆச்சிக்கு அப்புறம் நான் அப்படி பார்த்தது பெரியம்மையைத்தான். பெரியம்மையின் பெயரிலேயே பெரியப்பாவின் பெயரும் இருந்தது. பெரியப்பாவின் பெயர் சங்கரன். பெரியம்மையின் பெயர் சங்கரவடிவு. சங்கரன்கோவிலைக் கூட தவசுக் கோயில் என்றுதான் சொல்வாள். உன் பேரு என்ன பெரியம்மை என்று நான் சிறுவனாக இருந்த போது கேட்டதற்கு ‘பாவி’ என்று அவள் பதில் சொன்னது இன்னமும் நினைவிருக்கிறது. முப்பத்தைந்து வயதில் நான்கு பிள்ளைகளுடன் விதவையாகிப் போன ஒரு பெண்மணி அப்படித்தானே சொல்வாள். சின்ன பெரியப்பாவின் மகன் ஒருவனின் பெயரும் சங்கரன். அவன் சமஸ்திபூரில் பிறந்தான். அதனால் அவனை பெரியம்மை ‘சமத்திபுரான்’ என்று அழைப்பாள். எங்கள் தலைமுறையில் எங்களுக்கெல்லாம் மூத்த அண்ணனுக்கு தங்கள் மாமனாரின் பெயர் என்பதால் பெண்கள் எல்லோருக்கும் அவன் ‘பெரியவன்’தான். எங்களுக்கு பெரியண்ணன்.

இன்னும் சில சுவாரஸ்யங்கள் உண்டு. தன் கணவனின் மூத்த சகோதரனின் பெயரையும் சில பெண்கள் சொல்ல மாட்டார்கள். ‘ஒங்க பேங்க் பெரியப்பாவைக் கேக்காங்க பாரு’ என்பாள் அம்மா. ‘வாத்தியார் அத்தான் நேத்து வந்தாக’ என்பாள் இன்னொரு பெரியப்பாவை. இன்னும் சில வீடுகளில் கொழுந்தனுக்கும் இந்த மரியாதை உண்டு. மிகச் சமீபத்தில் என் நண்பன் சரவணனுக்கு ·போன் பண்ணினேன். அவன் மதினி ·போனை எடுத்து ‘கொளுந்தன் குளிக்காங்க. நீங்க யாரு பேசுதீங்க?’ என்றார்கள். அவன் வீட்டுக்கு நான் போயிருந்த போதும் அவனை கொழுந்தன் என்றுதான் அழைத்தார்கள். சரவணனும் அந்த மதினியிடம் தன் தாயை விடவும் மரியாதையாக, பிரியமாக நடந்து கொண்டதை பார்த்தேன். சரவணனின் அண்ணன் உயிருடன் இல்லை.

மகளைக் கட்டிய மருமகனிடம் மாமியார்கள் நடந்து கொள்வதில் பல வேடிக்கைகள் உண்டு. மருமகனின் பெயரை உச்சரிக்காமல் இருப்பது மட்டுமில்லை. மருமகனுக்கு முன்னால் மாமியார்கள் வந்து விடமாட்டார்கள். மருமகன் முன் வாசலில் இருந்தால் மாமியார் பின் வாசலை விட்டு வரவே மாட்டார். சாப்பிட வந்தால் அடுக்களைக்குள்ளேயே இருப்பார். மகளும் காலமாகிவிட்டாள். பேரன்களுக்கு திருமணமாகி அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டனர். ஆனால் இன்னமும் அம்மையைப் பெற்ற ஆச்சி என் அப்பாவுக்கு முன் வந்து விட மாட்டாள். மருமகன் சாப்பிட வரும் போது மெல்ல எழுந்து அடுக்களைக்குள் சென்று விடுவாள் எண்பத்தைந்து வயது மாமியார்.

எங்கள் குடும்ப வழக்கமாக இப்படி பெண்கள் நடந்து கொள்வதை உதவி இயக்குனரும், தற்போது விளம்பர மாடலாகவும் இருக்கிற தோழி காமேஷ்வரியிடம் ஒருமுறை சொன்னேன். அவள் நம்பவில்லை. ‘வேண்டுமானால் உன் அம்மா, பாட்டியிடம் கேட்டுப் பார். அவர்களுக்கு இந்த வழக்கம் பற்றி தெரிந்திருக்கலாம்’ என்றேன். மறுமுறை சந்தித்தபோது சொன்னாள். ‘ டேய், நீ சொன்ன மாதிரி எங்க குடும்பத்துல முன்னாடி இருந்ததாம். ஆனா ராஜீவோட பாட்டி இப்பவும் அவ ஹஸ்பண்ட் பேரை சொல்ல மாட்டாங்களாம்’ என்றாள். ‘ நீ அவங்களைப் பாத்தியா’ என்றேன். ‘இல்லை. ராஜீவ்தான் சொன்னான்’ என்றாள். ராஜீவ் அவள் கணவன்.

நண்பன் ராமசுப்ரமணியனுக்கு சொந்தமான பல வீடுகளில் ஒரு வீட்டில் குடியிருந்தார்கள், வேலாயுதம் அண்ணனும், கனகு மதினியும். சீட்டுக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த வேலாயுதம் அண்ணன் ‘அச்சமில்லை அச்சமில்லை’ ராஜேஷ் மாதிரியே இருப்பார். சைக்கிளில்லாத வேலாயுதம் அண்ணனை நான் ஒரு நாளும் பார்த்ததில்லை. அவர் வேலைக்குப் போயிருந்த சமயத்தில் வாக்காளர்கள் பெயர் சரி பார்க்கும் பணிக்காக வந்தவர் கனகு மதினியிடம் அவள் கணவன் பெயரைக் கேட்டு முழி பிதுங்கிப் போராடிக் கொண்டிருந்தார்.

‘அதான் சொல்லுதெம்லா முருகன்சாமி பேருன்னு.’

‘எம்மா, இதையே சொல்லிக்கிட்டிருந்திய்யென்னா எப்படி? சண்முகமும் இல்லெங்கியெ. கந்தன், சுப்ரமணியனும் இல்லை. அப்பொ நான் எப்படிம்மா கண்டுபுடிக்க?’

நானும், ராமசுப்ரமணியனும் அந்தப் பக்கமாகச் செல்ல கனகு மதினி ராமசுப்ரமணியனைப் பார்த்து, ‘ எய்யா, நல்லாயிருப்பெ. ஒங்க அண்ணன் பேரை சொல்லு’ என்றாள். ராமசுப்ரமணியன் சொல்லவும் அந்த மனிதர், நிம்மதிப் பெருமூச்சு விட்டு, ‘இது எனக்கு தோணாமப் போச்சே. எம்மா, குடிக்கக் கொஞ்சம் தண்ணி குடுங்க’ என்றபடியே மதினி வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார். கனகு மதினி ஒரு சொம்பில் மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.

வேலாயுதம் அண்ணனுக்கும், கனகு மதினிக்கும் மூன்று பெண் குழந்தைகள். வேலாயுதம் அண்ணனின் சொற்ப சம்பாத்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவதில் கனகு மதினிக்கு கடும் சிரமம் இருந்தது. வீட்டிலேயே சின்ன அளவில் இட்லி வியாபாரம் செய்து வந்தாள். மரப்பொடி, மண்ணெண்ணெய் அடுப்பு வைத்திருந்தாள். கேஸ் அடுப்புக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தாள். ஒரு நாள் ராமசுப்ரமணியனின் வீட்டுக்கு, வேலாயுதம் அண்ணன் வேலை பார்த்து வந்த சீட்டுக் கம்பெனியிலிருந்து தகவல் ஒன்று வந்தது. சென்ட்ரல் தியேட்டர் பக்கம் ஒரு லாரியின் அடியிலிருந்து வேலாயுதம் அண்ணனின் நொறுங்கிப் போன சைக்கிளை எடுத்த போது ராமசுப்ரமணியனோடு, நானும் போய்ப் பார்த்தேன்.

ராமசுப்ரமணியனின் வீட்டுக்குப் பின்புறமே கனகு மதினி குடியிருந்தாள். அதற்கு பக்கத்தில் உள்ள காலி மைதானத்தில் நாங்கள் வாலிபால் விளையாடி வந்தோம். நானும், ராமசுப்ரமணியனும் ஆளுக்கொரு கம்பத்தில் ஏறி வாலிபாலுக்கான நெட் கட்டிக் கொண்டிருந்த போது கனகு மதினி கேஸ் சிலிண்டர் போடும் பையனிடம் கத்திக் கொண்டிருந்தாள். வேலாயுதம் அண்ணன் இறந்த பின் நாங்கள் கனகு மதினியின் முகம் பார்த்துப் பேச முடியாமல் தவி(ர்)த்து வந்தோம். அதனால் அவள் பக்கம் போகவில்லை. சிலிண்டர்க்காரன் சொன்னான்.

‘என் கையில இருக்கிற லிஸ்ட்படிதான்மா நான் சிலிண்டர் போட முடியும். நீங்க கேக்கறதுக்காகல்லாம் குடுக்க முடியாது.’

‘காலையில ஒங்க ஆபீஸ்ல இன்னைக்கு எப்படியும் ஒங்களுக்கு சிலிண்டர் வந்துரும்னு சொல்லப் போயிதான் கேக்கேன். சும்மா கேக்கதுக்கு நான் என்ன கோட்டிக்காரியா?’

‘சரி. இருங்க. என் கையில இருக்கான்னு பாக்கேன்’.

தோளிலிருந்த சிலிண்டரை கீழே இறக்கி வைத்து விட்டு தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து சீட்டுகளை எடுத்தான்.

‘பேரு சொல்லுங்க’.

‘எஸ்.வேலாயுதம்’ என்றாள் கனகு மதினி.