சித்தூர் தென்கரை மகாராஜாவும், நெல்லையப்பரும்

‘ஒங்களுக்கு சாஸ்தா கோயில் எது?’ பல்வேறு சந்தர்ப்பங்களில், பலதரப்பட்ட மனிதர்களிடமிருந்து இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் ‘தெரியலீங்களே’ என்று நெளிவேன். திருநெல்வேலி பகுதிகளில் குலதெய்வம் கோயிலை ‘சாஸ்தா’ கோயில் என்றே சொல்வார்கள். பேச்சு வழக்கில் சாத்தாங்கோயில். ‘சொக்கலிங்கம் பிள்ளை மொதலாளிக்கும், எங்க குடும்பத்துக்கும் ஒரே சாத்தாங்கோயில்தான். ஆனா இதச் சொல்லி அவாள்ட்ட போயி ஒறவாட முடியுமா? நாயல்லா அவுத்து விட்டுருவாரு.’ ஒரு ஐந்தாறு வருஷத்துக்கு முன் ஒருமாதிரியாக என் தகப்பனார் மூலம் எங்களின் ‘சாஸ்தா’ யார் என்பது தெரிந்து போனது. ஆனால் எங்கள் தகப்பனார் உட்பட குடும்பத்துப் பெரியவர்கள் பலருக்கும் ‘சாஸ்தா’வைப் பற்றித் தெரிந்தே இருந்திருக்கிறது. தாத்தா காலத்தில் ‘சாஸ்தா’வுடன் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டு, அவர் முகத்தில் முழிக்காமல் இருந்திருக்கிறார்கள். ‘ஒங்க தாத்தாக்கு கோவம் வந்துட்டா காந்திமதியையும், நெல்லையப்பரையும் மாமனாரு, மாமியார ஏசுத மாரில்லா தாறுமாறா ஏசுவா!’ ஆச்சி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

சென்னையில் ஓர் ஆங்கில் நாளிதழின் நிருபராகப் பணிபுரிகிற ஒரு பெண்மணியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது, ‘எங்களுக்கு சாஸ்தா கோயில் திருநவேலி பக்கத்துல கங்கைகொண்டான்லதான் ஸார் இருக்கு. வருஷா வருஷம் போவோம்,’ என்றார். அன்றிலிருந்தே எங்கள் சாஸ்தாவைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. பத்து நாட்களுக்கு முன்புதான் அதற்கு வாய்த்தது. தலைமுறை தலைமுறையாக எங்கள் குடும்பம் வணங்கி வந்த குலதெய்வ சாஸ்தாவின் பெயர் ’தென்கரை மகாராஜா’ என்றும், வள்ளியூருக்கு அருகில் உள்ள சித்தூரில் இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.

திருநெல்வேலியிலிருந்து காரில் போனால் இரண்டிலிருந்து இரண்டரை மணிநேரம் வரை ஆகும் என்றார்கள். ‘சித்தூர் தென்கர மகராசா கோயிலுக்குத்தானெ? சாட்ரூட்ல ஒருமணிநேரத்துல போயிரலாம். நான் எத்தன மட்டம் போயிருக்கென்.’ சொன்னபடியே ஒருமணிநேரத்தில் சித்தூருக்கு அழைத்துச் சென்றார் டிரைவர் சாகுல் ஹமீது. தென்கரை மஹாராஜா கோயிலுக்கான தேர் ஒரு ஓரமாக அலங்காரமில்லாமல் நின்று கொண்டிருந்த்து. ஆங்காங்கே சின்னச் சின்னக் கோயில்கள். தென்கரை மகாராஜா கோயிலுக்கு முன் பெரிதாக எடுத்துக் கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய மண்டபம். ‘அருள்மிகு ஸ்ரீ தென்கரை மகாராஜேஸ்வரர் திரு(க்)கோவில் என்று முகப்பு வளையத்தில் எழுதியிருந்தது. தென்கரை மகாராஜாவுக்கு ‘க்’கன்னா ஆகாது என்பது உள்முகப்பிலும் ‘திருகோயில்’ என்று எழுதியிருப்பதைப் பார்த்ததும் உறுதியானது.

தென்கரை மகாராஜாவுக்கு பூஜை செய்யும் பொறுப்பை ஒரு பெரியவரும் அவரது மகன்களுமாக ஒரு பிராமணக் குடும்பம் ஏற்றுக் கொண்டுள்ளது. அர்ச்சக சகோதர்ர்களில் ஒருவரான சேகர், தங்கச் சங்கிலியில் இணைக்கப்பட்ட ருத்திராட்சம் அணிந்திருந்தார். தென்கரை மகாராஜா இருந்த அறையைத் திறந்து எங்களை அவரிடம் கூட்டிப் போனார். பேரமைதி நிலவிய சந்நிதியில், நல்ல துடிப்பாக கண்முழித்து பார்த்துக் கொண்டிருந்தார், மகாராஜா. அந்த இடத்தில் முகம், பெயர் தெரியாத எனது மூதாதையரை நினைத்துக் கொண்டேன். எப்படியும் அவர்களையும் மகாராஜா இப்படித்தான் பார்த்திருப்பார். அர்ச்சனை முடிந்து தீபாராதனை காட்டி முடிந்தவுடன், ‘பேச்சியம்மாளுக்கும் பூச பண்ணனும்லா?’ என்று கேட்டார் சேகர். ரத்தச்சிவப்பில் குங்குமம் அப்பிய முகத்துடன் கோயிலின் பின்புறத்தில் இருந்தாள் பேச்சியம்மாள். அந்த அம்மாளையும் வணங்கி முடித்தோம். மொத்த்த்தில் பத்தே நிமிடங்களில் சாஸ்தா வழிபாடு முடிந்தது. வெளிமண்டபத்தில் சில முதியவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நல்ல காற்று அடித்துக் கொண்டிருந்த்து. அர்ச்சகர் சேகரின் குழந்தை படுத்துக் கிடந்த கிராமத்து முதியவர் ஒருவர் மேல் சாய்ந்தபடி அமர்ந்து தலைகீழாக வைத்து தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தாள். சற்றுத் தள்ளி அர்ச்சகரின் சகோதரர்களில் ஒருவராக இருக்கக் கூடும் என்று நாங்கள் யூகித்த ஒரு நபர் கழுத்தில் தங்கச் சங்கிலி மினுமினுக்க உட்கார்ந்திருந்தார். ஆவணி அவிட்டம் முடிந்து சிலநாட்களே ஆகியிருந்ததால் அழுக்கேறாத புத்தம்புதுப் பூணூல் அணிந்திருந்தார். செருப்பை மாட்டும் போது அப்பா கேட்டார்கள். ‘நீங்க சேகரோட அண்ணனா? எழுந்து நின்ற அவர்,

‘ஆமாய்யா,’ என்றார்.

‘பேரு?’

‘சொரிமுத்து,’ என்றார். ஒருவேளை பாபநாசத்திலுள்ள ‘சொரிமுத்து அய்யனார்’ அவருடைய சாஸ்தாவாக இருக்கலாம்.

-o00o-

‘நீங்க சாஸ்தா கோயிலுக்குப் போனதுல்லாம் சரி. அதுக்காக அம்மையையும், அப்பனையும் பாக்காம ஊருக்குப் போயிராதிய. அவாளாது பரவாயில்ல. ஒண்ணும் கண்டுக்கிட மாட்டா. ஆனா அம்மை ரொம்ப வெசனப்படுவா, பாத்துக்கிடுங்க. நான் சொல்லுதத சொல்லிட்டென். அதுக்கு மேல ஒங்க இஷ்டம் சித்தப்பா.’ மீனாட்சி சுந்தரம் வழக்கமாக இப்படித்தான் மிரட்டுவான். அம்மை, அப்பன் என்று அவன் சொன்னது ’அம்மையப்பன்’ காந்திமதியம்மையையும், நெல்லையப்பரையும்.

‘இப்ப என்னலெ செய்யணுங்கெ?’

‘காலைல அஞ்சு மணிக்குல்லாம் வந்திருதென். குளிச்சு ரெடியா இருங்க.’

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் தெற்குப்புதுத் தெருவிலிருந்து தனது டி.வி.எஸ் 50-யில் மீனாட்சி வரவும், நெல்லையப்பர் கோயிலுக்குக் கிளம்பினோம். பலவருடங்களுக்குப் பிறகு அதிகாலைத் திருநெல்வேலியைப் பார்த்தேன். மீனாட்சியின் கட்டளைப்படி காலில் செருப்பில்லாமல், வேட்டி கட்டிக் கொண்டு, வழக்கம் போல பின்சீட்டில் (வேட்டி கட்டியிருந்ததால்) பெண்கள் போல ஒருசைடாக உட்கார்ந்திருந்தேன். அம்மன் சன்னதி மண்டபத்தைத் தாண்டி, கீழரதவீதிக்குள் நுழையும் போது இரவு போல்தான் இருந்தது.

‘எல, இன்னும் நட தொறக்கலியே?’

‘அதனாலென்ன? வாள்க்கைல நெல்லையப்பர் கோயில் நட தொறக்குறதுக்கு முன்னாலயே நீங்க வந்ததில்லேல்லா? இன்னைக்கு புதுசாத்தான் அனுபவிங்களென்யா.’

பதிலேதும் சொல்லாமல் இருந்தேன். ‘எப்பிடியும் ஏளு ஏளர ஆயிரும். ஒரு டீய குடிச்சிக்கிடுவோம். இல்லென்னா பசி தாங்காது.’ அவ்வளவு பக்தியிலும், பசியைப் பொருட்படுத்தும் மீனாட்சியின் யதார்த்தம்தான், இருபத்தைந்து ஆண்டுகாலமாக எனது நெருக்கமான உறவாக அவனை நினைக்க வைக்கிறது. லாலா சத்திரமுக்கில் ‘சதன்’ டீ ஸ்டாலில் இரண்டு டீ வாங்கினான் மீனாட்சி. ‘பரவாயில்ல அண்ணாச்சி. கண்ணாடி கிளாஸ்லயே குடுங்க.’ என்னிடம் டீ கிளாஸைக் கொடுக்கும் போது, ‘காலேல மொதல் போனி நாமதான். சுத்தமா வெளக்கி வச்சிருக்காரு. இல்லென்னா பேப்பர் கப்தான் வாங்குவென்.’ டீ குடித்து முடித்தவுடன் ஒரு தம்ளர் தண்ணீர் வாங்கி வந்து, ‘சித்தப்பா, ஒரு மடக்கு வாயில் ஊத்தி குடிக்காம அப்பிடியே வச்சுக்கிடுங்க.’ மீனாட்சி எதைச் சொன்னாலும் ஒரு காரணத்துக்காகத்தான் சொல்லுவான் என்பதால், மறுபேச்சு பேசாமல் வாயில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். ஆரெம்கேவி பக்கம் வரும் போது வண்டியை ஓரமாக நிறுத்தி, வாயிலுள்ள தண்ணீரைக் கொப்பளித்து விட்டு, என்னையும் அப்படியே செய்யச் சொன்னான். ‘கோயிலுக்குள்ள நிக்கும் போது சவம் வாயில டீ டேஸ்டு சவசவன்னு அப்பிடியே நிக்கும் பாத்தேளா! அதான்.’

காந்திமதியம்மன் சந்நிதியின் வாசலில் பன்னிருதிருமுறை அடியார்கள் உடம்பு முழுக்க திருநீறும், மார்பு முழுக்க ருத்திராட்சங்களுமாக, தத்தம் வேட்டியை அவிழ்த்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு வயதான ஆச்சிகளும், நடுத்தர வயதுப் பெண்களும் தேவார, திருவாசகப் புத்தகங்கள், சின்னத் தூக்குச்சட்டி, தீப்பெட்டி, பூ, கூடை சகிதம் நடைவாசலில் காத்து நின்றனர். ‘சட்டைய கெளட்டிருங்க சித்தப்பா.’ மீனாட்சியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தேன். நடை திறந்து கோயிலுக்குள் நுழையவும், பள்ளிக்கூடம் மணியடித்தவுடன் வெளியே ஓடிவரும் சிறுபிள்ளைகளின் உற்சாகக் குரலுக்கு இணையாக, ‘நம பார்வதி பதயே!’ என்று ஒரு அடியார் சத்தமெழுப்ப, கூட்டத்தோடு கூட்டமாக நானும் மனதுக்குள் ஹரஹர மஹாதேவா’ என்றபடியே உள்ளே நுழைந்தேன்.

திருநெல்வேலியிலேயே பிறந்து வளர்ந்த நான் முதன் முறையாக ‘திருவனந்தல் பூஜை’க்குச் சென்று அம்மையும், அப்பனும் ஐக்கியமாகியிருக்கும் ‘பள்ளியறை’க்கு முன்பு மீனாட்சியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நின்றேன். பள்ளியறை திறக்கவும் தேவாரம் போலவும், திருவாசகம் போலவும் தெரிந்த ஒரு ரெண்டுங்கெட்டான் பதிகத்தை ‘பன்னிருதிருமுறை அடியார்கள்’ பலத்த குரலில் பாட, ஒவ்வொரு வரியையும் மீனாட்சி உட்பட எல்லோரும் பாடினார்கள். நான் மீனாட்சியின் உதட்டைப் பின்பற்றி கிட்டத்தட்டச் சரியாக வாயசைத்தேன். முடிவில் ‘நம பார்வதி பதயே, ஹரஹர மஹாதேவா, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ சொல்லும் போது மட்டும் என் குரல் எனக்கேக் கேட்டது.

முதலில் பள்ளியறையிலிருந்து அம்மை தன் சந்நிதிக்குச் சென்றாள். அவளை வணங்கிவிட்டு, சப்பரத்தில் (பல்லக்கு)தன் சந்நிதிக்குக் கிளம்பிய அப்பனுக்குப் பின்னால் செல்லத் துவங்கினோம். இந்த இடத்தில் எனக்கொரு சௌகரியமான சூழலை ‘பன்னிருதிருமுறை அடியார்கள்’ ஏற்படுத்திக் கொடுத்தனர். வேறொன்றுமில்லை. எனக்கு நன்கு தெரிந்த ‘சிவபுராணத்தை’ப் பாடத் துவங்கினர். முதலில் சிவ சம்பிரதாயமாக ‘திருச்சிற்றமபலம்’ என்று துவங்கும் போது, சரி இதற்கும் நாம் வாயசைக்க வேண்டியதுதான் என்று முடிவு செய்துக் காத்திருந்த போது, தலைமை அடியார், ‘நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!’ என்றவுடன் எனக்கு உற்சாகம் பிறந்தது. ஆனால் அடுத்த வரியிலேயே எனக்கு ஒரு சிக்கல் காத்திருந்தது. தலைமை அடியார் பாடிய வரியை வாங்கி அப்படியே திருப்பிச் சத்தமாகப் பாடி சிவனடியார் கூட்டத்தில் இணைந்து, ஒருசிலரைத் திரும்பிப் பார்க்க வைத்து விடலாம் என்கிற எனது நியாயமான ஆசையில் ஒருலாரிமண் விழுந்தது. தலைமை அடியார் ‘நமச்சிவாயம் வாழ்க நாதன்தாள் வாழ்க’ என்று முதல் வரியைப் பாடவும் மற்ற அடியார்கள் அதற்கு அடுத்த வரியான ‘இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்று பாடினார்கள். மேற்கத்திய இசையின் call and response முறையில், ஒன்றுக்கு பிறகு மூன்று, மூன்றுக்குப் பிறகு ஐந்து என அவர்கள் பாடிய விதம் எனக்கு கைவரவில்லை. ஒவ்வொருவரியாகப் பாடினால்தான் என்னால் முழுமையாகப் பாட முடியும். ஒவ்வொரு வரியிலும் குழம்பி மறுபடியும் மனதுக்குள் முதல் வரியிலிருந்து பாடிப் பார்த்து வந்து சேர்வதற்குள் சிவபுராணம் முடிய இருந்தது. மீனாட்சியைப் பார்த்தேன். அந்த மூதேவி பழக்கம் காரணமாக தங்குதடையில்லாமல் பாடியபடி முன்னே சென்றான். இயலாமையில் கோயில் என்பதை மறந்து மீனாட்சியைக் கெட்ட வார்த்தையில் திட்டினேன். சிவனடியார்களின் பெரும் குரல்களுக்கிடையில் அது அமுங்கிப் போனது. நெல்லையப்பரைச் சுமந்து செல்லும் சப்பரம், நின்றசீர் நெடுமாறன் கலையரங்கைத் தாண்டி யானை கட்டப்பட்டிருக்கும் இடத்தை நெருங்கியது. யானை அங்கு இல்லையென்றாலும் யானையின் வாசனை மூக்கை நிறைத்தது. வாழைக்காய் கமிஷன்கடை நயினார்பிள்ளை தாத்தாவும், நெல்லையப்பர் கோயிலுக்கு அவர் வழங்கிய, அவர் ஜாடையிலேயே உள்ள ‘நயினார்’ யானையும் நின்று கொண்டிருக்கும் நெல்லையின் புகழ் பெற்ற ஓவிய நிறுவனமான ‘ARTOYS’ ஓவியத்தைப் பார்த்தவாறே சிவபுராணத்தின் மிச்சத்தைத் தவற விட்டேன்.

நெல்லையப்பர் சந்நிதியின் கொடிமரத்துக்கு அருகிலுள்ள ‘மாக்காளை’ பக்கம் சப்பரம் வரும் போது, ‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்’ என்று சிவபுராணத்தின் கடைசிக்கு முந்தைய வரி வந்தது. சட்டென்று கடைசி வரி நினைவுக்கு வர, சத்தமாக ‘செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து,’ என்றேன். பிறகு வழக்கம் போல் ‘நம பார்வதி பதயே.’

‘மாக்காளைக்கு’ப் பக்கத்தில் யானை ‘காந்திமதி’ நெற்றி நிறைய திருநீற்றுடன் சிரித்தபடி நின்று கொண்டிருந்தது. ‘பன்னிருதிருமுறை அடியார்’ கூட்டத்தில், துவக்கத்திலிருந்தே எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் உரத்த குரலில் ‘சிவபுராணம்’ பாடி வந்து என் கவனத்தைக் கலைத்துக் கொண்டே இருந்தார். சப்பரம் இறங்கி, கஜ பூஜை முடிந்து, கோ பூஜையின் போதுதான், அந்த மனிதரின் முகத்தைப் பார்க்க முடிந்தது. நெற்றியில் அழகாகத் திருமண் இட்டிருந்தார்.

துப்பு

பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு எனது பெரியப்பாவின் வீட்டிலிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. (இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன்.) நான் ஏழாவதோ, எட்டாவதோ படித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை கடைசியாகப் பார்த்திருந்தேன். எல்லாப் பெரிய குடும்பங்களையும் போல உப்புப் பெறாத காரணங்களுக்காக அத்தனை காலம் தொடர்பில்லாமல் பிரிந்திருந்தோம். அவ்வளவு நீண்ட இடைவெளியில் நான் சென்னைக்கு வந்து திரைப்படத்துறையில் நுழைந்திருந்தேன். பெரியப்பா பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரி. குடும்பத்துடன் பல அண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறியவர். என்னை அவர்கள் அழைத்தது, அவர்களின் இரண்டாவது மகனின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு. மூத்த மகனின் திருமணத்துக்கு அழைக்கவேயில்லை. எங்கள் குடும்பத்தின் சார்பாக இதற்கு என்னைப் போகச் சொல்லியிருந்தனர் என்பெற்றோர். சிறுவனாக என்னைப் பார்த்துப் பழகியிருந்த பெரியப்பாவுக்கும், பெரியம்மைக்கும் நீண்ட தாடி, மீசையுடன் வளர்ந்த வாலிபனான என்னைப் பார்த்ததில் ஆச்சரியம் கலந்த சந்தோஷம். ஐயா வா, ஐயா வா என்று தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறைதான்.
பெரியப்பாவின் வீட்டில் காலைச் சிற்றுண்டி அருந்திவிட்டு ஒரு வேனில் பெண்ணின் வீட்டில் நடக்க இருந்த நிச்சயதார்த்த விழாவுக்குக் கிளம்பினோம். வேனில் இருக்கும் போதே அத்தனை வருஷம் விட்டுப் போன பல கதைகளை பெரியம்மை சொல்லிக் கொண்டே வந்தாள். ஏதோ நினைவு வந்தவளாய் வேன் டிரைவரிடம் சொன்னாள்.
‘அந்த டர்னிங்க்ல ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போகணும். நிறுத்த மறந்துராதீங்க’
‘யார?’ நான் கேட்டேன்.
‘அவருதான் துப்பு சொன்னவரு’
‘என்னது துப்பச் சொன்னவரா?’
‘கொளுப்பு மட்டும் இந்தப் பயலுக்குக் கொறையவே இல்ல′.
சிரிப்பை அடக்கியபடி சொன்னாள் பெரியம்மை.
துப்பு என்னும் வார்த்தையை கொலை, கொள்ளை வழக்கு பற்றிய செய்திகளில் செய்தித்தாள்களில் மட்டுமேதான் படிப்பது வழக்கமாகயிருந்ததால் அதற்கு உள்ள வேறோர் அர்த்தத்தை நான் சுத்தமாக மறந்திருந்தேன். திருமணத்துக்கான வரன் குறித்த தகவல் சொல்வதை துப்பு சொல்வது என்று திருநெல்வேலியில் சொல்வதுண்டு. மற்ற ஊர்களில் இது வழக்கத்தில் உள்ளதா என்று தெரியவில்லை.
இப்படி துப்பு சொல்பவர்களை வெறுமனே தரகர்கள் என்று குறுக்கி விட முடியாது. இப்படி துப்பு சொல்பவர்கள் பணம் பெற்றுக் கொள்வதுண்டுதான் என்றாலும் அதையும் தாண்டி இரு குடும்பங்களின் நன்மைக்காகவும் உளமாற பாடுபடுபவர்கள். எப்படியும் இவர்கள் சம்பந்தப் பட்ட பெண், மாப்பிள்ளை வீடுகளின் குறை, நிறையை நன்கு அறிந்தவராகவே இருப்பர். கூடுமானவரை அதை முழுக்க தெரியப்படுத்தாமல் சமாளித்து பரஸ்பரம் இரு குடும்பத்தாருக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தி கல்யாணப் பேச்சு நடக்கும் போதே அவர்களை நெருக்கமானவர்களாக மாற்றி விடுவர். திருமணம் நடந்து முடிந்த பிறகும் கூட ஏற்படும் சின்னச் சின்ன குடும்பச் சச்சரவுகளில் உறவுப் பாலமாக செயல்பட்டு அதை நீக்கி வைப்பவர்களும் உண்டு.
marriage-2எங்கள் குடும்பத்துக்கு அப்படி வேண்டிய ஒரு துப்பு சொல்பவராக முனியப்ப தாத்தாவை பார்த்து வருகிறேன். திருநெல்வேலி சைவ வேளாளர்களில் வள்ளிநாயகம், கோமதிநாயகம், மீனாட்சிசுந்தரம், நல்லகண்ணு, நெல்லையப்பன், சபாபதி என்ற பெயர்களுக்கு மத்தியில் எனக்கு தெரிந்த ஒரே ‘முனியப்பன்’ இவர்தான். முனியப்ப தாத்தா என் தகப்பனாருக்கு சித்தப்பா முறை. ஆனால் என் தகப்பனாரை விட பதினைந்து வயது இளையவர். குள்ளமாக, குண்டாக, மாநிற உடம்பெல்லாம் புசு புசுவென முடியாக உள்ள முனியப்பத் தாத்தா இல்லாமல் திருநெல்வேலியில் எந்த ஒரு வேளாளர் வீட்டுத் திருமணத்தையும் நான் பார்த்ததில்லை. மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து மறுநாள் மறுவீட்டுப் பலகாரப் பந்தியிலும், சொதிச் சாப்பாட்டிலும் அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருப்பார் தாத்தா. மணவயதிலுள்ள எல்லா பெண்களும் முனியப்ப தாத்தாவுக்கு பேத்திகள்தான். பையன்கள் பேரன்கள்தான். வசதி குறைந்த, வசதியான யார் வீட்டிலும் முனியப்ப தாத்தாவை அவர்கள் வீட்டு அடுக்களை வரை அனுமதிப்பார்கள். குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் அந்தஸ்து, சக்தி தெரிந்து அதற்கேற்ற வரனை முனியப்ப தாத்தாவே முதலில் மனதுக்குள் முடிவு செய்து விடுவார். அவருக்கு தெரியும் யார் யாருக்கு பொருந்திப் போகும் என்று. அந்த வகையில் பெரும்பாலான திருநெல்வேலி சைவ வேளாள ஆண்களுக்கு ‘மனைவி அமைவதெல்லாம் முனியப்ப தாத்தா கொடுத்த வரம்’.
முனியப்ப தாத்தாவை விட வயதில் மூத்தவர்களே ‘என்னடே முனியப்பா! பேத்தி உக்காந்து வருஷம் எட்டாகுது. இன்னும் ஒனக்கு அக்கற இல்லையே’ என்பார்கள். அவர்கள் சொல்லும் பேத்தி அவர்களின் பேத்திதான் என்றாலும் பொதுவாக உரிமையுடன் முனியப்ப தாத்தாவிடம் சொல்லி வைப்பார்கள். ‘நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியணுமாக்கும். எல்லாம் மனசுல இருக்கு’ என்று பதில் சொல்வார். மனதில் இருப்பதை செய்யும் வண்ணம் மாப்பிள்ளையின் ஜாதகத்தோடு சில நாள் கழித்து வருவார். ‘ நம்ம செவகாமி மூல நட்சத்திரம்லா. அதான் பொறுத்துக்கிட்டே இருந்தேன். இந்தா பாத்தேளா? பையனுக்கு அம்மை இல்லை. ஜாதகமும் பொருந்தி வருது. என்ன சொல்லுதிய?’ என்பார். எப்படியும் ஓரிரு மாதங்களில் அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிந்து விடும். அது முடிந்து அடுத்த திருமண வேலைகளில் மும்முரமாக இறங்கி விடுவார். அந்த சிவகாமிக்கு பிள்ளை பிறந்ததும் முதலில் முனியப்ப தாத்தாவுக்குதான் சொல்லி விடுவார்கள். அந்தப் பிள்ளைக்கு பெயர் சூட்டும் வைபவத்திலும் முனியப்பா தாத்தாவின் ஆட்சிதான். நாள் குறிப்பதிலிருந்து ஆசாரிக்குச் சொல்வது வரை இவர்தான் எல்லாவற்றையும் முடிவு செய்து சொல்வார்.
ஊருக்கெல்லாம் துப்பு சொல்லி திருமணம் நடத்தி வைக்கும் முனியப்ப தாத்தாவின் மனைவி அவருடன் வாழ்ந்தது ஒரு சில வருடங்கள்தான். பெரும் பணக்காரியான அவர் இவரிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு தன் மகனுடன் தனியே வாழ்ந்து வருகிறார். மகன் மீது கொள்ளைப் பாசம் முனியப்ப தாத்தாவுக்கு. அவன் கல்லூரிக்குச் செல்லும் போது எதிரே இவர் வந்தால் தன் தாயின் வளர்ப்பு காரணமாக சிரிக்கக் கூட செய்யாமல் பாராமுகமாகச் சென்றதை ஒருமுறை என்னிடம் கண்கலங்கிச் சொல்லியிருக்கிறார். ‘விடுங்க தாத்தா. அந்தப் பயலுக்குக் குடுத்து வைக்கல′ என்று சமாதானப் படுத்தினேன். தனக்குத்தான் குடும்ப வாழ்க்கை அமையவில்லை, மற்றவர்களாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்னும் நல்லெண்ணமே முனியப்ப தாத்தாவை இந்த துப்பு சொல்லும் வேலையில் ஆரம்பித்து திருமண வைபவங்களை முன் நின்று நடத்தச் செய்கிறது என்றே எண்ணுகிறேன்.
துப்பு கேட்பதில் மட்டுமல்ல. அசுப காரியங்களாக இருந்தாலும் முதலில் முனியப்ப தாத்தாவுக்குத்தான் ஆள் போகும். ஓடி வருவார். மரணம் நிகழ்ந்த வீட்டுக் காரர்கள் எப்படியும் படபடப்புடன் இருப்பார்கள். முனியப்பா துக்கத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாக எல்லா காரியங்களையும் கவனித்துக் கொள்வார். முதலில் சமையலுக்கு ‘தவுசுப் பிள்ளை’க்குச் சொல்லி விடுவார். பிறகு பலசரக்கு சாமான்கள் வாங்கி வருவார். நெல்லையப்பர் கோயிலுக்கு தகவல் சொல்வார். அம்மன் சன்னதி தெரு, ஸ்வாமி சன்னதி தெருவாக இருந்தால் பிணத்தை எடுக்கும் வரை நெல்லையப்பரும், காந்திமதி அம்மையும் குளிக்க மாட்டார்கள். எந்தெந்த ஊரில் அந்த வீட்டின் உறவினர்கள் இருக்கிறார்கள் என்னும் விவரம் அறிந்தவராதலால் அவரே எல்லோருக்கும் தகவல் சொல்வார். குடியானவனுக்கும் விஷயம் சொல்லி நீர்மாலை எடுத்தலில் ஆரம்பித்து மறுநாள் சாம்பல் கரைக்கும் வரை கூடவே இருந்து பொறுப்புடன் எல்லா விஷயங்களையும் செய்து முடிப்பார். துப்பு சொல்லும் வேலையை கூடுமானவரை பதினாறு நாட்களுக்கு ஒத்தி வைப்பார்.
முனியப்ப தாத்தாவைப் போலவே இன்னும் பலர் இந்தத் துப்பு சொல்லும் வேலையில் உண்டு. அவர்கள் அனைவருக்குமே இந்த பொது நற்குணங்கள் உண்டுதான். திரைப்படங்களில் பெரும்பாலும் காட்டப் படும் அசட்டுத் தரகர்கள் போல் ஒருவரை கூட நான் இதுவரையில் திருநெல்வேலியில் பார்த்ததில்லை. சென்னையில் பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் திருநெல்வேலியிலும் கூட துப்பு சொல்பவர்கள் மறைந்து போய் திருமண தகவல் நிலையங்கள் மலிந்து விட்டதாகத் தகவல். இந்தத் தகவல் நிலையங்களால் ஜாதகங்களையும், அவர்களின் வசதிகளையும் மட்டும்தான் தெரிவிக்க முடியும். முனியப்ப தாத்தா போன்ற துப்பு சொல்பவர்களால்தான் அந்தந்த குடும்பத்து உறுப்பினர்களின் வரவு, செலவு, தரம் அறிந்து சகலத்தையும் மனதுக்குள் கணக்கு போட்டுப் பார்த்து பொருத்தமான ஜோடிகளை இணைக்க முடியும். திருமணத்துக்குப் பின் வரும் பிணக்குகளையும் அலைந்து திரிந்து போராடி, தான் கெட்ட பெயர் வாங்கினாலும், கசப்பை சம்பாதித்தாலும் குடும்பத்தை இணைக்க பாடுபடவும் முடியும். வாழ்க்கை அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அனுபவம் காரணமாக யாருக்கு யார் பொருத்தம் என்பதை அவர்களால் தெளிவாக முடிவு செய்ய முடியும்.
‘நல்லா விசாரிக்க வேண்டாமா? துப்பு சொன்னது யாரு? போ, அவனா? அப்போ வெளங்கினாப்லதான் இருக்கும்.’ இப்படி பேச்சுக்களில் தொடங்கி விவாகரத்தில் போய் முடிந்த திருமணங்களும் உண்டு. அதனாலேயே விசாரிப்பில் லேசில் திருப்தி அடைந்து விடாமல் அதே வேலையாக இருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.
marriage-1சென்ற வருடத்தின் துவக்கத்தில் திருநெல்வேலியின் கிராமப் பகுதிகளில் நண்பர்களுடன் காரில் சுற்றிக் கொண்டிருந்தேன். என்னுடன் குஞ்சுவின் தம்பி பாலாஜி (பொறியியற்கல்லூரியின் விரிவுரையாளன்), எனது உறவுக்கார மீனாட்சி சுந்தரம், ஓவியர் பொன்.வள்ளிநாயகம் போன்ற நண்பர்களும் வந்திருந்தனர். எங்கெங்கெல்லாமோ சுற்றி விட்டு திருப்புடைமருதூர் தாமிரபரணியில் குளித்து விட்டு மாலையில் வீரவநல்லூர் வந்து சேர்ந்தோம். ‘ எண்ணே, இங்கனெ ஒரு கடையில ஆம வட நல்லா இருக்கும். அப்படியே டீயும் குடிச்சுருவோம்’ என்றார் வள்ளிநாயகம். வீரவநல்லூர் அவரது சொந்த ஊர் என்பது எங்களுக்கு அப்போதுதான் தெரிந்தது. காரை ஓரமாக நிறுத்தி விட்டு அந்த சின்னக் காப்பிக் கடையின் திண்ணையில் உட்கார்ந்தோம். ‘எண்ணெ காயுது. ஒரு அஞ்சு நிமிசம்’ என்றார்கள். ‘சித்தப்பா, நீங்க இரிங்க. நான் வட போட்டவொடனே எடுத்துட்டு வாரேன்’ என்று கடைக்குள் சென்றான் மீனாட்சி. 
எல்லோருமே வேட்டி சட்டையில் இருந்தோம். பாலாஜி துண்டை தலைப்பாகையாகக் கட்டியிருந்தான். குளிர்ந்த காற்றில் மேலே போட்டிருந்த ஈர வேஷ்டியும், சட்டையும் ஒரு வித சுகத்தைக் கொடுக்க, ‘காத்து நல்லா அடிக்கி. என்னண்ணே? என்றார் வள்ளிநாயகம். சற்றும் சம்பந்தமில்லாமல் ‘ இதுதான் என் மாமனார் ஊரு’ என்றான் பாலாஜி. ‘என்ன சொல்லுதியெ? யாரு அது? இது என் சொந்த ஊருல்லா!’ என்றார் வள்ளி. மாமனாரின் பெயரை பாலாஜி சொன்னவுடனேயே வள்ளிக்குத் தெரிந்து போனது. ‘சரியாப் போச்சு. ஜம்பு தங்கச்சியையா நீங்க கட்டியிருக்கியே? அவன் என் கிளாஸ்மேட்டுல்லா!’ என்றார். இதற்குள் மீனாட்சி தந்தி பேப்பரில் சுற்றிய ஆம வடையைக் கொண்டு வந்தான். ‘சித்தப்பா, சூடா இருக்கு. பெருசா எண்ணெ குடிக்கல. எடுத்துக்குங்க. டீய வாங்கிட்டு வாரேன்’ என்று வடையைக் கொடுத்து விட்டுப் போனான்.
‘ஜம்பு படிச்சு முடிக்கவுமே அவங்க இந்த ஊர விட்டு போயிட்டாங்க. எனக்கு அவங்க வீட்டுல எல்லாரையும் நல்லா தெரியுமெ’ என்றார் வள்ளி. வடையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அதை கடிக்காமல் மெல்ல பாலாஜி வள்ளியிடம் கேட்டான்.
‘பொண்ணு நல்ல பொண்ணுதானா?’
பாதி வடையை வாயில் வைத்திருந்த வள்ளிநாயகம் அவசரமாக, அவசரமாகக் கடித்து முழுங்கிவிட்டு சொன்னார்.
‘சே, தங்கமான பிள்ள′.
இந்த கேள்வியை வள்ளிநாயகத்திடம் கேட்டபோது பாலாஜியின் மகன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

பொங்கப்படி

மார்கழி மாதம் பிறக்கும் முன்பு, கார்த்திகை மாதத்தின் இறுதியிலேயே பொங்கல் பண்டிகைக்கான ஆயத்தங்கள்ஆரம்பமாகிவிடும். அவற்றில் முக்கியமானது வெள்ளையடிக்கும் பணி. வெள்ளையடிக்கும் மட்டைகளைச் சுமந்த இரும்பு வாளிகளைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் ஆட்கள் நடமாடுவார்கள். பெரும்பாலும் பழைய பேட்டை, பாட்டப்பத்து பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களே வெள்ளையடிப்பு வேலைக்கு வருவார்கள். ராமையா பிள்ளை தனது சிஷ்யர்கள் இரண்டு பேரை எங்கள் வீட்டு வெள்ளையடிப்புக்கு அனுப்புவார். அவர்கள் இரண்டு பேரின் பெயர்களுமே முருகன். முருகா என்றால் இயல்பாக இருவருமே திரும்பிப் பார்ப்பார்கள். வித்தியாசத்துக்காக சின்ன முருகன், பெரிய முருகன் என்றழைப்பதை அவர்கள் இருவரும் அனுமதிப்பதில்லை. இருவரில் யார் பெரியவன் என்பதில் எப்போதுமே ஒரு குழப்பம் நிலவி வந்தது. அதனால் அவர்கள் இருவரும் அறியாத வண்ணம் உருவ அமைப்பின்படி சீனா.முருகன், பேனா.முருகன் என்றழைக்கப்பட்டனர்.

புறவாசலில் தொழுவத்துக்கு அருகிலுள்ள தொட்டியில் சுண்ணாம்பு நீற்றும் போது குமிழ் குமிழாகக் கொப்பளித்து வருவதைப் பார்ப்பதற்காகவே சின்னப் பிள்ளைகள் நாங்கள் போய் நிற்போம். ஆச்சி இருக்கும் வரை அந்தத் தொட்டி, மாடுகளின் கழனித் தொட்டியாக இருந்தது. ஆச்சிக்குப் பிறகு மாட்டுத் தொழுவத்தில் நாய்களே வசித்தன. குறைந்தது ஒருவாரகாலம் சீனா.முருகனும், பேனா.முருகனும் எங்கள் வீட்டு வெள்ளையடிப்பில் ஈடுபட்டிருப்பார்கள். உயரமான பகுதியில் வெள்ளையடிக்கும் போது கீழே ஏணியைப் பிடிக்கும் வேலையை ஏற்றுக் கொள்பவன் ’நெட்டை’ அம்பி. அம்பிக்கு உயரமென்றால் பயம். ஏணியைப் பிடிக்கும் போதும் கூட தலை குனிந்து உடல் நடுங்கியே நிற்பான். இது தெரிந்து வேண்டுமென்றே இரண்டு முருகன்களும் அம்பியை வம்புக்கிழுக்கும் விதமாக ஏதாவது பேச்சு கொடுப்பார்கள். அப்போதும் நிமிராமலேயே பதில் சொல்வான் அம்பி. அதற்கு வேறொரு காரணமும் உண்டு. . . . நிற்க. மற்றொரு காரணம். அசந்து மறந்து அம்பி மேலே பார்த்தால், தற்செயலாக மட்டையைத் தெளிப்பது போல அம்பியின் முகத்தில் சுண்ணாம்பபிஷேகம் செய்து விடுவான் சீனா.முருகன்.

அவரவர் வசதிக்கேற்ப சில வீடுகளில் காவியும், வெகு சிலர் வீடுகளில் டிஸ்டெம்பரும், அநேக வீடுகளில் நீலம் கலந்த சுண்ணாம்புச் சுவர்கள் ஊரெங்கும் மினுங்கத் தொடங்கும். வெள்ளையடிப்புக்கு அடுத்ததாக பொங்கலை ஊருக்குள் கொணர்பவை பனங்கிழங்குகள். பனங்கிழங்கின் வாசனை பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு மாதம் வரை ஊரை விட்டு லேசில் போகாது. அவிக்கப் பட்ட, அவித்து காய வைத்து பின் உரலில் போட்டு இடிக்கப்பட்ட, ஆச்சிமார்களின் கைவண்ணத்தால் தேங்காய், இஞ்சி சேர்த்து உருண்டையாகப் பிடிக்கப்பட்ட பனங்கிழங்குகள் இன்னும் இன்னும் என் நினைவில் மின்னுகிறவை.( ஒரு வாரம் வரை பல்லில் சிக்கியிருக்கும் பனங்கிழங்கின் நாரும் இதில் அடக்கம்.) பனங்கிழங்குகளின் பலாபலன்களும் விசேஷமானவை.

‘பனங்கெளங்க யாராவது வேண்டாம்பானாவே? ஒண்ணே ஒண்ணு தின்னு பாரும். காலைல நீரு எந்திரிக்கவே வேண்டாம். அதே எந்திரி எந்திரின்னு சொல்லிரும்லா!’

பிற்பாடு சென்னையில் ஒரு டிஸம்பர் மாதத்தில் வாத்தியார் பாலுமகேந்திராவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது வடபழனி மார்க்கெட் அருகே ‘ நிறுத்து நிறுத்து’ என்றார். டிரைவரும் காரை நிறுத்தினார். ‘என்ன ஸார்?’ முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்தவன் குழப்பமாகத் திரும்பிப் பார்த்தேன். ‘பனங்கிழங்குடா’ என்று இறங்க முற்பட்டார். அவர் இறங்குவதற்குள் நான் கடையை நோக்கிப் பாய்ந்தேன்.

திருநெல்வேலியில் பொங்கலையொட்டி கரும்புகளின் குவியல் பெருகியிருக்கும் போது ஓலைகளின் வருகை ஆரம்பமாகியிருக்கும். பொங்கலுக்கு முதல் நாள் சொக்கப்பனையடி முக்கில் குவிந்து கிடக்கும் ஓலைகள் மற்றும் மண்பானைகளுக்கு மத்தியில் கைப்பிள்ளைக்கு பால் கொடுத்தபடி ஒரு பெண்மணி வியாபாரம் செய்து கொண்டிருப்பாள். வருடாவருடம் அவள் மடியில் உள்ள கைப்பிள்ளை மாறிக்கொண்டேயிருக்கும்.

‘ஏம் முப்பிடாதி! போன வருசத்த விட இப்பொ அநியாயமால்லா வெல சொல்லுதே!

நீங்களும் போன வருசம் சொன்னதையேதானே சொல்லுதியெ!’

சாமர்த்தியமான வியாபாரப் பேச்சுகளில் முப்பிடாதி மூழ்கியிருப்பாள். அவ்வப்போது மாட்டு வண்டியில் வந்து ஓலைகளையும், பானைகளையும் கொண்டு வந்து போட்டு விட்டுச் செல்லும் முப்பிடாதியின் கணவனின் குரல் எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது.

பொங்கலுக்கு முந்தைய நாளில் திருநெல்வேலி டவுண் மார்க்கெட்டில் நுழைந்து வெளியே வருவது என்பது வீரதீரச் செயல்களில் ஒன்று. ஆண்களும், பெண்களுமாகக் கூட்டம் நிரம்பி வழியும். ஒரு முறை நண்பன் குஞ்சுவை அவன் வீட்டில் மார்க்கெட்டுக்குப் போய் இலை வாங்கி வரச் சொல்லி விட்டார்கள். வழக்கம் போல என்னையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குள் சென்றான் குஞ்சு. மற்ற நேரங்களில் லேசாக கை பட்டாலே ‘எல, ஒடம்பு என்னமா வருது?’ என்று முறைக்கும் பெண்கள், தங்கள் மேல் வந்து மோதி உரசி அழுத்திச் செல்லும் ஆண்களை கண்டுகொள்வதற்கான அவகாசமில்லாமல் பொங்கல் சாமான்கள் வாங்குவதில் மும்முரமாக இருந்தார்கள். உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் மூச்சு திணறி நான் தொலைந்து போய் விட்டேன். குஞ்சுவை அந்தக் கூட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். மதியம் கணேசண்ணன் மஞ்சள் குலை வாங்க மார்க்கெட்டுக்குப் போகும் போது ‘தம்பி நீயும் வாயேன்’ என்று இழுத்துச் சென்றான். மார்க்கெட்டின் நுழைவிலேயே உள்ள புகாரி ஸ்டோர்ஸ் பக்கம் செல்லும் போது உள்ளுக்குள்ளிருந்து வேர்க்க விறுவிறுக்க குஞ்சு வெளியே வந்து கொண்டிருந்தான். ஆச்சரியம் தாங்காமல் ‘ஏல, இன்னுமா நீ எல வாங்கிக்கிட்டு இருக்கே?’ என்றேன். ‘சே, பாத்தியா, மறந்தே போயிட்டேன்’ என்றபடி சந்தோஷமாக மீண்டும் கூட்டத்துக்குள் புகுந்தான் குஞ்சு.

சிறுவயதுப் பொங்கல் நினைவுகளில் முதல் இடம் பிடிப்பது பொங்கல் வாழ்த்து அட்டைகளே. ஏர் உழவன், பொங்கல் பானை, நெற்கதிர்கள், கரும்புத் தோரணம், வணங்கியபடி நிற்கும் நல்லதொரு குடும்பம், வர்ணம் பூசப்பட்ட கொம்புகளுடன் கூடிய காளை மாடுகள், தவிர்க்கவே முடியாத எம்.ஜி.ஆர், சிவாஜி, ப்ரூஸ் லீ, ரஜினிகாந்த் படங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளைத் தாங்கிய கடைகளில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் மொய்த்திருப்பர். எங்கிருந்தோ பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமாக்கள், அத்தைகள், அவர்தம் மக்கள் அனுப்பும் வாழ்த்து அட்டைகளைக் கொண்டு வரும் தபால் காரரை அன்றைக்கும் மட்டும் மதிக்கத் தோன்றும். எனக்கு எத்தனை, உனக்கு எத்தனை என்று அண்ணன் தம்பிகள் வீட்டில் போடும் சண்டைகள், அம்மாக்களுக்கு சந்தோஷம் தருபவையே. நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆழ்வார்குறிச்சியிலிருந்து தாய் மாமாவின் மகனும், மகளும் தங்கள் பிஞ்சு விரல்களால் ‘அன்புள்ள அத்தானுக்கு . . .’ என்றெழுதி வாழ்த்து அட்டைகள் அனுப்புவார்கள். காரணமில்லாமல் கண்ணீர் வரவழைத்த அட்டைகள் அவை. இப்போது பொங்கல் வாழ்த்தட்டைகள் இருக்கின்றனவா?

பொங்கலுக்கு முந்தைய நாள் இரவில் எங்கள் வீட்டின் பரந்த வாசல் முழுவதும் பொங்கல் பானைகள், சூரியன், கரும்பு, பூக்கள் என சித்திர வேலைகள் ஆரம்பமாகும். அம்மாவின் மேற்பார்வையில் விடிய விடிய நடைபெறும் இவ்வேலைகளில் பார்டரில் காவியடிக்கும் வேலையை மட்டும் நான் எடுத்துக் கொள்வேன். எவ்வளவு கவனமாக செய்தாலும் முக்கிய சித்திரத்தில் காவி கலக்கச் செய்து எல்லை தாண்டி விடுவேன்.

‘ஒனக்குத்தான் ஒரு கோடு கூட போடத் தெரியாதெ! ஒன்ன எவன் இதெல்லாம் செய்யச் சொன்னான். போய் அங்கெ உக்காந்து பேசாம வளக்கம் போல வேடிக்க பாரு’.

இரவெல்லாம் விழித்திருந்து அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது பூஜைமணிச் சத்தத்துடன், அம்மாவின் குலவைச் சத்தமும் சேர்ந்து கொண்டு காதுகளில் ஒலிக்கும். பொங்கல் தினத்தன்று காலையில் பொங்கப் படி கொடுக்கும், வாங்கும் படலம் ஆரம்பமாகும். தபால்தந்தி, தொலைபேசி ஊழியர்கள் தொடங்கி துப்புரவு தொழிலாளர்கள் வரை பொங்கல்படி வாங்க வருவார்கள். வழக்கமாக அணியும் யூனிஃபார்மில்லில்லாமல் புத்தாடையுடுத்தியிருப்பதால் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமமாயிருக்கும். பெரியவர்கள் தயாராக சில்லறை மாற்றி வைத்திருப்பார்கள். சின்னப் பிள்ளைகள் பெரியவர்கள் கால்களில் விழுந்து திருநீறு பூசி பொங்கப் படியாக ஐம்பது பைசாவில் தொடங்கி இரண்டு ரூபாய் வரை பெற்றுக் கொள்வார்கள். வசதியானவர்கள் பத்து ரூபாய் வரை கொடுப்பார்கள். ஒரு முறை சிவகாசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஜெயலட்சுமி அத்தை எனக்கு பொங்கல் படியாக நூறு ரூபாய் கொடுத்து விட்டார்கள். ரொம்ப நாட்களுக்கு அந்த நூறு ரூபாயைத் தாளை வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

வருடங்கள் செல்ல சென்னை வாசத்துக்குப் பழகியபிறகு பொங்கல் பண்டிகை மெல்ல மெல்ல விலகி விடை பெற்றுக் கொண்டது. பத்தாண்டுகளுக்கு முன் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களை ஒரு பொங்கல் தினத்தன்று பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு நானும், கவிஞர் அறிவுமதி அண்ணனும் சென்றோம். அப்போது வண்ணதாசன் மேற்கு மாம்பலத்தில் குடியிருந்தார். வீட்டுக்குள்ளே நாங்கள் நுழையவும் சிரித்தபடி ‘பால் பொங்குச்சா, வயிறு வீங்குச்சான்னு பாக்க வந்தீங்களாக்கும்’ என்று வரவேற்றார். திருநெல்வேலிப் பகுதியில் இப்படி விசாரிப்பதுதான் வழக்கம். எனக்கு ஒரு நிமிடம் திருநெல்வேலியில் இறங்கிய மாதிரி இருந்தது. பிறகு அந்த கொடுப்பினையும் இல்லாமல் போனது. வண்ணதாசன் அண்ணாச்சி திருநெல்வேலிக்கே போய்விட்டார். கொடுத்து வைத்த மகராசன்.

இந்த வருடம் பொங்கலன்று முதல் நாள் இரவில் எனது நண்பர் அழகம்பெருமாளிடம் பேசியபோது, ‘எங்க ஊர்ல ஒரு வாரத்துக்கு முன்னாடியே கொண்டாட்டம் ஆரம்பமாயிரும். வீடு பூரா கரும்பு குமிஞ்சு கெடக்கும், பாத்துக்கிடுங்க. இந்தா பாரும். எம்ஜியார் நகர்ல ஒத்தக் கரும்புக்கு வெல பேசிக்கிட்டிருக்கென். தலையெளுத்த பாத்தேரா’ என்று அங்கலாய்த்தார். நாகர்கோவில்காரரின் நியாயமான புலம்பலைப் புரிந்து கொள்ள முடிந்தது. மறுநாள் நான் வழக்கம் போல காலையில் எழுந்து, கேஸ் அடுப்புக் குக்கரில் வைத்த பொங்கல் பானையை வேண்டா வெறுப்பாக வணங்கிச் சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்தேன். திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கைபேசியில் நண்பரொருவர் அழைத்து ‘ஸார், ஹேப்பி பொங்கல்’ என்றார். தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்து விட்டு ‘விஷ் யூ த ஸேம்’ என்றேன்.

சுந்தரம் ஐயங்காரின் கருணை

சில நாட்களுக்குமுன் குஞ்சு ஃபோனில் அழைத்தான்.

‘எல, இந்தப்பய பைக் ஓட்டுதான்’.

‘யாரு கௌரவ்வா?’

‘ஆமா. உனக்கு நான் சொல்லியே தீரணும்னுதான் சொல்லுதேன்’.

‘சரி சரி. அந்தாக்ல ரொம்பவும் சளம்பாதே. இப்ப என்ன? அவன் பின்னாடியும் உக்காந்து ஒரு ரவுண்டு போயிட்டா போச்சு.’

கௌரவ், எட்டாங் கிளாஸ் படிக்கும் குஞ்சுவின் மகன். எனது மருமகன். அவன் பைக் ஓட்டிய செய்தியை எனக்கு அவசர அவசரமாகச் சொல்லி இந்தப்பயல் குஞ்சு மகிழ்வதற்குக் காரணம், எனக்கு பைக் ஓட்டத் தெரியாது என்பதே.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது மெல்ல மெல்ல சைக்கிள் ஓட்டப் பழகினேன். அம்மன் சன்னதியில் A.M.சைக்கிள் மார்ட் என்னும் வாடகை சைக்கிள் கடை ஒன்று உண்டு. அங்கு என்னை விட குள்ளமாக ஒரு சைக்கிள் இருந்தது. அதை வாடகைக்கு எடுத்து எங்கள் வீட்டுக்குள்ளேயே ஓட்டிக் கற்றுக் கொண்டேன். அப்போது அம்மன் சன்னதி முழுக்க மாலை நேரங்களில் சைக்கிள்கள் நிறைந்திருக்கும். G.R.ஸாரிடம் டியூஷன் படிக்க வரும் மாணவர்களின் சைக்கிள்கள் அவை. அந்த சைக்கிள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பாகத்தை இழந்து ஊனமாக நிற்கும். G.R.ஸாரின் மகன் அந்த சைக்கிள்களை எடுத்து தினமும் ஓட்டி கீழே விழுந்து, வரிசையாக அவற்றை உடைத்து வந்தான். ஒரு வருடத்தில் அநேகமாக எல்லா சைக்கிள்களும் தத்தம் அடையாளங்களை இழந்து விதவையாயின. வாத்தியாரின் மகன் என்பதால் ‘ இந்த செறுக்கியுள்ளைய அப்படியே பொத்தாமரைக் குளத்துல கொண்டு தள்ளீறணும்ல’ என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு வெளியே சொல்ல தைரியமில்லாமல் ‘ ஒனக்கில்லாத சைக்கிளா, எடுத்துக்கோடே ‘ என்று ரத்தக் கண்களோடு அந்த மாணவர்கள் சைக்கிள் சாவியைக் கொடுத்துவிட்டு மனதுக்குள் குமுறினர். ஆனால் G.R.ஸாரின் மகனான குஞ்சு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நித்தம் ஒரு சைக்கிளுடன் வாழ்ந்து வந்தான். நான் சின்ன சைக்கிளிலிருந்து பெரிய சைக்கிளுக்கு வந்து சேர்வதற்குள் அவன் இரண்டு கைகளையும் விட்டு ஓட்ட ஆரம்பித்திருந்தான்.

பெரிய சைக்கிள் ஓட்ட ஆரம்பித்திருந்த புதிதில் தினமும் மாலை வேளையில் நானும், குஞ்சுவும் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்ட் போவதை வழக்கமாக வைத்திருந்தோம். இருவருமே வெள்ளை நிற பேண்ட் துணி எடுத்து தைத்திருந்தோம். அதை அணிந்து கொண்டு சும்மா இருப்பதாவது? ஜங்ஷன் வரை சென்று வரலாம். அதுவும் சைக்கிளில் என்றான் குஞ்சு. (நாங்கள் இருப்பது திருநெல்வேலி டவுணில். ஜங்ஷனில்தான் ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் எல்லாம் உள்ளது). நான் முதல் நாளே மனதுக்குள் சைக்கிளில் பலமுறை ஜங்ஷனுக்கு போய் வந்து விட்டேன். குஞ்சு வீட்டுக்கு நான் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு போக குஞ்சு தயாராக இருந்தான். கல்லணை ஸ்கூல் பெண்கள் வருகிற நேரத்தை கணக்கு பண்ணி நாங்கள் கிளம்பவும் எதிரே வந்த சீதாலட்சுமி, ‘என்னல, வெள்ளையும், சொள்ளையுமா கலர் பாக்கக் கெளம்பிட்டேளா?’ என்றாள். குஞ்சுவின் வீட்டில் வேலை பார்த்து வந்த சீதாலட்சுமி எங்களை கொஞ்சம் கூட மதிக்க மாட்டாள். அவளை எங்களால் ஒன்றும் செய்யவும் முடியாது. குஞ்சுவின் தாயார் அவளுக்கு அத்தனை சுதந்திரத்தை கொடுத்திருந்தார். சீதாலட்சுமி இப்படி கேட்கவும் கடுப்பான குஞ்சு ‘எடுல வண்டியை’ என்றான், என்னமோ டாடா சுமோவை எடுக்கச் சொல்கிற மாதிரி. நானும் ஒரு வேகத்தில் சைக்கிளில் ஏறி மிதிக்கத் துவங்க, சீதாலட்சுமியின் மீது இருந்த கோபத்தில் துள்ளி ஏறி பின் சீட்டில் உட்கார்ந்தான் குஞ்சு. அப்போதுதான் நான் டபுள்ஸ் வைக்கப் பழகியிருந்தேன். இந்த மூதேவி உட்கார்ந்த வேகத்தில் வண்டி குடை சாய்ந்தது. ஜனநடமாட்டமுள்ள மாலை நேரத்தில் நடுரோட்டில் சைக்கிளோடு விழுந்தோம். சீதாலட்சுமி கை தட்டி சத்தம் போட்டு சிரித்தாள். ‘இவளுக்கு அம்மா ரொம்ப எடம் கொடுக்காங்கலெ’ என்றபடியே எழுந்தேன். எப்படியாவது அந்த இடத்திலிருந்து சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘மொதல்ல ஒக்காரு’ என்று கோபமாகச் சொல்லி சைக்கிளை ஓட்டத் துவங்கினான் குஞ்சு. குமரகுருபரர் ஸ்கூல் வரை சென்று சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு காலில் பட்டிருந்த அடிக்காகக் கொஞ்சமாக அழுதான். எனக்கு அவ்வளவாக அடியில்லை. வெள்ளை பேண்ட் அழுக்காகி விட்ட கவலை மட்டும் இருந்தது. அந்த சமயத்தில் அதை சொன்னால் குஞ்சு என்னைக் கொன்று விடுவான் என்பதால் சொல்லவில்லை.

ஆறாம் வகுப்பிலிருந்தே நாங்கள் கேட்டுக் கொண்டிருந்த சைக்கிளை பிளஸ்-ஒன் படிக்கும் போதுதான் எங்கள் இருவரது வீட்டிலும் வாங்கிக் கொடுத்தார்கள். அப்போது எங்களுக்கு சைக்கிள் மேலிருந்த காதல் முற்றிலுமாக வடிந்திருந்தது. இருந்தாலும் ஓட்டினோம். எங்களுடன் படித்த நண்பன் பொன்ராஜுக்கு அவனுடைய வீட்டில் சைக்கிள் வாங்கிக் கொடுக்கவில்லை. நான் எனது சைக்கிளை பொன்ராஜிடம் கொடுத்து ஓட்டச் சொல்லிப் பின்னால் உட்கார்ந்து கொள்வேன். பொன்ராஜை வைத்து நான் மட்டுமல்ல. தாராசிங்காலுமே ஓட்ட முடியாது. இரண்டு காரணங்களுக்காக பொன்ராஜ் ‘தக்காளி’ என்றழைக்கப்பட்டான். ஒன்று, பொன்ராஜின் தளதள உடம்பு. இரண்டு, பொன்ராஜின் அப்பா தச்சநல்லூர் காய்கறி மார்க்கெட்டில் ஹோல்ஸேல் தக்காளி கடை வைத்திருந்தார். பொன்ராஜை சைக்கிளை ஓட்டச் சொல்லி நான் பின்னால் உட்கார்ந்திருப்பதால் என் மீது வெயில் அடித்ததேயில்லை.

சைக்கிளிலிருந்து மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆசை வந்தது குஞ்சுவுக்கு. அவன் அப்பா ஒரு சுவேகா மொபெட் வைத்திருந்தார். அவருக்கு தெரியாமல் அதை எடுத்து வருவான். நாங்கள் இருவரும் ரவுண்ட் அடிப்போம். சுவேகா கம்பெனிக்காரர்களே தங்கள் தயாரிப்பை மறந்துவிட்ட பின்னரும் குஞ்சுவின் தந்தை அந்த வண்டியை விடாமல் போஷித்து வந்தார். பிறகு மனமே இல்லாமல் அதை கொடுத்துவிட்டு ஒரு சில்வர் பிளஸ் வாங்கினார். அதிலும் நாங்கள் ரவுண்ட் அடித்தோம். பிறகு குஞ்சு பைக் வாங்கினான். அதிலும் நான் பின்னால் அமர்ந்து போனேன். என்னைப் போலவே சைக்கிளோடு திருப்தியடைந்து விட்ட வேறு நண்பர்கள் சிலரும் இருக்கத்தான் செய்தார்கள். அப்படி இருந்த நண்பன் ராமசுப்ரமணியன். ஒரு நாள் மீனாட்சியும், நானும் ராமசுப்ரமணியனுக்காகக் காத்துக் கொண்டு ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது, நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் ராமசுப்ரமணியன் ஒரு பைக்கில் சென்றான். கூப்பிடக் கூப்பிட எங்களை மதிக்காமல் வேகமாக எங்களைத் தாண்டிச் சென்றது வண்டி. ‘என்னலெ, ஒங்க மாமன் திமிர் புடிச்சு போயி போறான்?’ என்றேன் மீனாட்சியிடம். ‘ஒண்ணும் கவலப்படாதீங்க சித்தப்பா. அவாள் அந்த முக்குல விளுந்து கெடப்பாக. போய் பாப்போம்’ என்றான் மீனாட்சி. பயலுக்கு கருநாக்கு. பால்கடை பக்கத்தில் பாதாளச் சாக்கடைக்குத் தோண்டியிருந்த குழியிலிருந்து பைக்கையும், ராமசுப்ரமணியனையும் வெளியே எடுத்து அப்போதுதான் போட்டிருந்தார்கள். ‘எங்களை பாத்துட்டு பெரிய இவரு மாதிரி நிக்காம போனேளே. அப்படி என்ன அவசரம்? இது தேவைதானா மாமா?’ என்று கேட்டான் மீனாட்சி. ‘தூரப் போலெ. உங்களை பாத்துட்டு நிறுத்தனும்னுதான் நெனச்சேன். எது க்ளெட்ச்சு, எது பிரேக்குன்னு தேடிக் கண்டுபிடிக்கிறதுக்குள்ள இங்கே வந்து விளுந்துட்டேன்’ என்றான் ராமசுப்ரமணியன், வலியில் முனகிக் கொண்டே.

குஞ்சு பைக்கிலிருந்து ஜீப்புக்கு போனான். நானும் கூடவே போனேன். இந்த முறை எனக்கு பிரமோஷன். பின் ஸீட்டிலிருந்து முன் சீட்டுக்கு. பிறகு கார் வாங்கினான். ஒரு நாளும் அதை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியதே இல்லை. அவன் ஓட்ட நான் உட்கார்ந்து போவதிலேயே சுகம் கண்டு கொண்டேன். எங்கள் வீட்டுக் கார்களையும் விட நான் அதிகமாக பயணித்தது குஞ்சுவின் கார்களில்தான். சென்னையில் நண்பர்கள் பலரும் பைக், கார் ஓட்டுகிறார்கள். பார்ப்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. சுந்தர்ராஜன் மாமா, மனோ,செழியன், திரைப்பட இணை இயக்குனர் பார்த்திபன், உதவி இயக்குனர் பத்மன் மற்றும் என் தம்பி சிவா போன்றோர் என்னை பின்னால் வைத்துக் கொண்டு பைக் ஓட்டுகின்றனர். நண்பர் ஷாஜி என்னிடம் பேசிக் கொண்டே எப்போவாவது சாலையைப் பார்த்து கார் ஓட்டுகிறார். ‘என்னைப் போல் ஒருவர்’ என்று நான் சந்தோஷமாக நம்பிக் கொண்டிருந்த வ.ஸ்ரீ அவர்களும் கார் ஓட்டி என் நம்பிக்கையில் மண்ணை அள்ளி போடுகிறார். வாழ்க்கையின் பல கட்டங்களில் எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது ஆருயிர் நண்பர் ஜெயமோகன்தான் இந்த விஷயத்தில் எனக்கு ஆறுதலாக இருக்கிறார். சைதன்யாவின் அப்பாவுக்கு சைக்கிளே ஓட்டத் தெரியாது

சென்னைக்கு வந்த பிறகு நானும் மோட்டார் ஸைக்கிள் ஓட்டும் வாய்ப்பு வந்தது. கியர் இல்லாத மொபெட். டி.வி.எஸ்.50. அந்த மொபெட்டுக்கு சாலிகிராமத்தை விட்டால் வேறு ஒரு இடமும் தெரியாது. இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் வாலிப வயது மகன் பைக் ஓட்டிக் கொண்டு போய் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அந்தத் துக்க வீட்டுக்குச் சென்றுவிட்டு மனம் உடைந்த நிலையில் நண்பர் சீமான் என்னை தொலைபேசியில் அழைத்து அந்த செய்தியைச் சொல்லி வருந்தினார். ‘ஐயாமகனே, வண்டியெல்லாம் பாத்து ஓட்டுங்க. ஒண்ணும் சரியாயில்ல’ என்றார். நான் பதிலுக்கு, ‘அதெல்லாம் கவலைப்படாதீங்க அராஜகம். நம்ம வண்டி ஏ.வி.எம். ஸ்டூடியோவைத் தாண்டி திருப்பினாலும் போகாது’ என்றேன். அந்தச் சூழலிலும் வெடித்துச் சிரித்தார் சீமான்.

கியர் இல்லாத டி.வி.எஸ்.50 முன்பு ஓட்டினேன். இப்போது அவ்வப்போது வீட்டம்மாவின் டி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் ஓட்டுகிறேன். இதற்கும் கியர் இல்லை. அந்த வகையில் டி.வி.எஸ் அதிபர் சுந்தரம் ஐயங்காருக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். எங்க ஆத்துக் காரரும் கச்சேரிக்கு போகிறாரென்று என்னையும் மோட்டார் வாகனம் ஓட்டுவோரின் பட்டியலில் சேர்த்து என் மானம் காத்தவர் அவரே.

லோகநாயகி டீச்சரும் , லலிதா ராகமும்

“சயின்ஸ் எடுக்க வந்தவ சயின்ஸ் மட்டும் எடுக்க வேண்டியதுதானே. எதுக்கு தேவையில்லாத விஷயத்துலயெல்லாம் தலையிடுதா? நான் போயி அவ பாடத்துல புகுந்து பேசுதேனா? அவ அவ வேலையை அவ அவ பாக்கணும்”.

நான்காம் வகுப்பு படிக்கும் போது பாட்டு டீச்சர் தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு ஆர்மோனியத்தைத் திறந்தது இன்னும் நினைவில் உள்ளது. லோகநாயகி மிஸ்ஸுக்கு இது காதில் விழுந்திருக்கும்தான். ஆனால் பதிலேதும் சொல்லவில்லை. வீட்டுப்பாடம் செய்யாத, சுழிச்சேட்டை பண்ணுகிற
பிள்ளைகளையே கடிந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாதவர்கள் இதற்கு ஏதாவது பதில் சொன்னால்தான் ஆச்சரியப்படவேண்டும். அன்று பாட்டு டீச்சர் வருவதற்கு சற்று தாமதமானது. எட்டே எட்டு பேர்தான் என்றாலும், நாங்கள் போட்ட கூப்பாட்டில் ஸ்டாஃப் ரூமிலிருந்து லோகநாயகி மிஸ் வந்து விட்டார்கள். என்னப்பா, சினிமாக் கதையா? எனக்கும் சொல்லுங்களேன் என்றபடியே மிஸ்
உள்ளே வந்தார்கள். பேசுகிற முதல் வாக்கியத்திலேயே மற்றவர்களின் உள்ளம் கவர்கிற சிலரை பார்க்கும் போது இன்றும் எனக்கு லோகநாயகி மிஸ்தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். பாட்டு டீச்சர் வருவதற்கு முன்பே ஆர்மோனியத்தை எடுத்துக் கொண்டு வைத்து விட்டு சென்றிருந்தாள் ஆயா அக்கா. முதலில் மிஸ் அதை எடுத்து தூசியைத் துடைக்கிறார்கள் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். மெல்ல மிஸ்ஸின் விரல்கள் ஆர்மோனியத்தின் கட்டைகளில் தவழ ஆரம்பித்தன. ஒரு பத்து நிமிடம் டீச்சர் தலை நிமிராமல்
வாசித்தார்கள். மிஸ் அளுதாங்க என்றான் நண்பன் குஞ்சு. எனக்கு அது முக்கியமாகப் படவில்லை. இதை எங்கேயோ கேட்டிருக்கிறோமே!. என் எண்ணம் முழுக்க அவர்கள் வாசித்த ஓசையைத் தொடர்ந்தே செல்கிறது. மிஸ் தலை நிமிரும் வரை பேசாமல் இருந்தோம். என்னைப் பார்த்தால் கேட்டு விடுவது எனும் முடிவோடு நான்.

என் மூஞ்சி ஒரு தினுசாக இருப்பதை கவனித்து விட்டு, என்னடே முளிக்கே? என்றார்கள்.

‘நீங்க வாசிச்ச மாதிரியே எங்க பெரியப்பா பாடி கேட்டிருக்கேன். ஆனா அது வேற மாதிரியிருக்கும்’ என்றேன்.

‘அப்படியா? அது என்னதுடே? பாடு பாப்போம்’ என்றார்கள். சத்தியமாக அப்போது எனக்கு ஒரு இழவும் தெரியாது. இதே மாதிரிதான் இருக்கும். ஆனா அது வேற என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன். மிஸ் சாதாரணமாக ஆர்மோனியத்தை வாசித்து, இதுதானே உங்க பெரியப்பா பாடுறது? என்றார்கள். ‘ஆமா மிஸ். இதேதான்’ என்றேன். ‘இது நான் வாசிச்சது இல்லியா!’. என் முழி அவர்களுக்கு சிரிப்பை வரவழைத்திருக்க வேண்டும் . சிரித்தபடியே , “ரெண்டுமே பக்கத்துப் பக்கத்து ராகம் . நான் வாசிச்சது லலிதா. உங்க பெரியப்பா பாடுனது மாயாமாளவகெளளையா இருக்கும் ” என்றார்கள். அப்படித்தான்
சொல்லியிருக்க வேண்டும் என்று இப்போது எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் அந்த வயதில் எனக்கு ராகங்களைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. இதற்குள் பாட்டு டீச்சர் வந்து விட மிஸ் அவசரமாக எழுந்து டீச்சரை வணங்கி வழி விட்டுச் சென்றார்கள். இதற்கு பின் தான் பாட்டு டீச்சர் முதலில் நான் குறிப்பிட்ட வரியைச் சொன்னார்கள்.

பாட்டு டீச்சரை பற்றி இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும் . இரண்டாண்டுகள் எங்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தார்கள் . தீராத விளையாட்டுப் பிள்ளை, தாயின் மணிக்கொடி பாரீர் , இவை இரண்டைத் தவிர வேறு எந்த ஒரு புதிய பாடலையும் அவர்கள் எங்களுக்கு சொல்லித் தந்ததில்லை. அவர்கள் ஒன்றும் வைத்துக் கொண்டு வஞ்சனை பண்ணவில்லை என்கிற விவரம் ரொம்ப நாள் கழித்தே எனக்குத் தெரிய வந்தது .

இது நடந்து ரொம்ப வருடங்களுக்குப் பின், மேற்சொன்ன மாயாமாளவகெளளை – லலிதா வித்தியாச விவரம், இளையராஜா மூலமே எனக்குத் தெரிய வந்தது. உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் “இதழில் கதை எழுதும் நேரமிது” என்ற பாடலை அட்டகாசமாக லலிதா ராகத்தில் அமைத்திருந்தார் ராஜா. இப்போது நான் ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். மெல்ல பிடிபட்டது.
மாயாமாளவகெளளையில் பஞ்சமம் இல்லையென்றால், அது லலிதா. அட . .இதுதானா! ஆச்சரியமும், சிறுவயதில் நடந்த சம்பவத்தின் நினைவுகளும், எல்லாவற்றுக்கும் மேல், அத்தனை வருடங்களுக்கு முன்பு லோகநாயகி மிஸ் வாசித்த அதே ராகத்தை இன்று நான் வாசிக்கிறேனே என்கிற சொல்ல முடியாத சந்தோஷமும் என்னை ஆட்கொண்டது. மாயாமாளவகௌளையையும், லலிதாவையும் சுமந்து கொண்டு எனது இசையாசிரியர் கிருஷ்ணன் ஸாரைப் பார்க்கப் போனேன்.

பொதுவாக எனது இசை வகுப்புகளில் கிருஷ்ணன் ஸார் எனக்கான பாடத்தை வயலினில் வாசிக்க, அதை அப்படியே வாங்கி ஹார்மோனியத்தில் வாசிப்பதோடு எனக்கான வகுப்பு முடிந்து விடும். அதன் பின் பொதுவாக ராகங்களைப் பற்றிய என்னுடைய சந்தேகங்களுக்கு கிருஷ்ணன் ஸார் விளக்கமளித்து தெளிவுபடுத்துவார். அவர் முன்னால் கொண்டு போய் மாயாமாளவகௌளை, லலிதா இரண்டையும் வைத்தேன். ‘ஏய் . . . இந்த லலிதா, மாயாமாளவகௌளைக்கு கூடப் பொறந்த தங்கச்சில்லா!’ என்றார். உடனே வயலினை எடுத்துக் கொண்டார். மிக எளிமையாக இந்த இரண்டு ராகங்களுக்குமான வித்தியாசத்தை வாசித்துக் காட்டினார். ‘இப்பொ வெளங்குதா?’ என்றவர் என் பதிலுக்குக் காத்திராமல், ‘ஒனக்குத்தான் இன்னொரு வாத்தியார் இருக்காம்லா! அவன்ட்டதான் ஒரு வண்டிக்கு இருக்குமே. போய் கேளு’ என்றார். அவர் சொன்ன அந்த இன்னொரு வாத்தியார் இளையராஜா.

இளையராஜாவின் திரையிசைப்பாடல்களைக் கேட்டே ராகங்கள் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டவன் நான் . அந்த வகையில் லலிதாவிலிருந்து பஞ்சமத்தைத் தொட்டு மாயாமாளவகெளளையை வாசிக்கிறேன் . “மாசறு பொன்னே வருக” , தேவர்மகன் பாடல் பேசுகிறது . “மஞ்சள் நிலாவுக்கு” , முதல் இரவு படப் பாடல் குதியாட்டம் போடுகிறது . “மதுர மரிக்கொழுந்து வாசம்” , எங்க ஊரு பாட்டுக்காரன் பாடுகிறான் .(அதுவும் இந்த பாடலின் சரணத்தில் ராஜா விளையாடியிருக்கும் விளையாட்டு , அபாரமானது) . கர்நாடக சங்கீதத்தின் அடிப்படை “ஸரிகமபதநி” ஸ்வர வரிசைகளை சொல்லிக் கொடுக்கப்படும் இந்த ராகத்தில் ராஜா போட்டிருக்கும் பாடல்கள் எண்ணிக்கையிலடங்காதவை . ஒன்று வாசிக்க ஆரம்பித்தால் இன்னொன்று .வந்து விழுந்த வண்ணம் இருக்க , மீண்டும் லலிதாவுக்கு திரும்புகிறேன் . கண்களை மூடியபடி வாசிக்க ஆரம்பிக்கிறேன். லோகநாயகி மிஸ்ஸின் முகம் ஞாபகத்திற்கு வருகிறது. பாட்டு டீச்சரின் முகமும்தான்.