1993 ஆம் ஆண்டாகத்தான் இருக்கவேண்டும். ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் கன்னடத் திரைப்படமான ‘கோகிலா’ திரையிடல் பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. வாத்தியார் தமக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்களை அந்தக் காட்சிக்கு அழைத்திருந்தார். அப்போது வண்ணதாசன் அண்ணாச்சி சென்னையில் வசித்து வந்தார். அவரும், வண்ணநிலவன் அண்ணாச்சியும் பிரசாத் லேப் திரையரங்குக்கு வந்தார்கள். அதற்கு முன் வாத்தியாருக்கு நன்கு பழக்கமான வண்ணநிலவன் அண்ணாச்சியை ‘சுபமங்களா’ அலுவலகத்திலும், வாத்தியாரின் சாலிகிராமம் அலுவலகத்திலும் சந்தித்து பேசியிருக்கிறேன். வண்ணதாசன் அண்ணாச்சியை முதன்முதலில் அன்றைக்குத்தான் பார்க்கிறேன். ஓர் உதவி இயக்குநராக அவர்களை அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைக்கிற பொறுப்பை மட்டுமே அன்றைக்கு என்னால் செய்ய முடிந்தது. அதிகபட்சம் நான்கிலிருந்து ஆறு வார்த்தைகள்தான் அவர்களுடன் அன்றைக்கு பேச வாய்த்தது. என்றைக்காவது ஒருநாள் எனது அபிமான எழுத்தாளர் வண்ணதாசனை சந்தித்தால் பேசவேண்டும் என்று குறித்து வைத்திருந்த அத்தனை வார்த்தைகளும் மனதுக்குள் மோதிக்கொண்டிருந்தன. 

“‘நிலை’ கதைல வருமானம் இல்லாத நாட்கள்ல கோமு இருக்காளான்னு கேட்டுட்டு மக வேலை பாக்கற வீட்டுல அவளுக்குக் குடுத்திருக்கற சோத்தைத் தின்னுட்டு போயிட்டு வாரேன்னு கூட சொல்லாம போவாரே, கோமுவோட அப்பா? அவர் ஒரு அளுக்கு வேட்டியைக் கட்டிக்கிட்டு சட்ட இல்லாம மேல்துண்டை வேட்டியை ஒட்டி இடுப்புல கட்டியிருப்பாரு. அப்படித்தானே அண்ணாச்சி?”

“ ‘போய்க்கொண்டிருப்பவள்’ கதைல வர்ற அன்னம்ஜூடி அக்காவைப் போய் ஒரு மட்டம் பாக்கணும். அட்ரஸ் குடுப்பேளா?”

“கொலுசு வாங்க நகைக்கடையில் கதைசொல்லி உக்காந்திருக்கும்போது ஸ்போர்ட்ஸ்ல ஜெயிச்ச சின்ன வெள்ளி கோப்பையை ‘இது எவ்வளவுக்குப் போகும்?’ என்று தயக்கத்தோட கேக்கற ‘அந்தப் பையனும் ஜோதியும் நானும்’ கதையில் வர்ற அந்தப் பையன் சாஃப்டர் ஸ்கூல் தேவராஜ் சார்வாள் பையன் ஸ்டான்லி இல்லதானே?”

“‘தனுமை’ல வர்ற ஞானப்பனுக்கு ஆர்மோனியத்துல ‘யாரிடம் செல்வோம் இறைவா! வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன’ வாசிக்கத் தெரியுமா?”

“பஸ்ஸுல அளுத கைப்பிள்ளையை வாங்கி மடில போட்டு தொடைய ஆட்டித் தூங்க வைப்பாருல்லா ரிட்டையர்டு ஏட்டையா! கைல பித்தளத் தூக்குச்சட்டியோட, காதுல சிகப்புக்கல் கடுக்கன் போட்ட அவர் பேர நீங்க எளுதல. ஆனா எனக்குத் தெரியும். சுத்தமல்லி நாராயண ஏட்டய்யாதானே அவரு?”

இப்படியெல்லாம் கோட்டிக்காரத்தனமாகக் கேட்க நினைத்துக் கேட்க முடியாமல் ஆனது. கூடவே ‘பற்பசை குழாயும் நாவல்பழங்களும்’ கதையில் வருகிற 

‘கோகுலமும் குழல் ஒலியும்

கோபியரும் கண்ணனுமாய் 

ஆகும் ஒரு காதல் 

அட்டவணை எனக்கில்லை’ கவிதை வரிகளைச் சொல்ல நினைத்திருந்தேன். ஆனால் இவையெல்லாவற்றையும் பதினாறு ஆண்டுகள் கழித்து வண்ணதாசன் அண்ணாச்சியிடம் சொல்ல வாய்த்தது.

எழுத்தாளர் பா. ராஜநாராயணனின் ‘கிருஷ்ணவேணி’ புத்தக அறிமுகவிழா திருநெல்வேலி ஆர்யாஸ் ஹோட்டலில் நிகழ்ந்தது. அந்த சமயம் நான் எனது ‘படித்துறை’ படத்தின் படப்பிடிப்புக்காக ஆர்யாஸ் ஹோட்டலில் தங்கியிருந்தேன். ‘கிருஷ்ணவேணி’ புத்தக விழா முடிந்ததும் வண்ணதாசன் அண்ணாச்சி எனது அறைக்கு வந்தார்கள். அப்போது நான் ‘வார்த்தை’ சிற்றிதழில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். அந்த மாதம் நான் எழுதிய ‘சுந்தரம் ஐயங்காரின் கருணை’ என்கிற கட்டுரை ‘வார்த்தை’ இதழில் வெளியாகியிருந்தது. என் கைகளைப் பிடித்துக் கொண்டு வண்ணதாசன் அண்ணாச்சி ‘சுந்தம் ஐயங்காரின் கருணை’ கட்டுரையைப் பற்றிச் சொல்லி, கண்ணீர் வர சிரித்தது இன்னும் நினைவிலிருக்கிறது. அன்றைக்கு நான் ஏதாவது உருப்படியாக அண்ணாச்சியிடம் பேசினேனா என்று தெரியவில்லை. அதையொட்டி நடந்த அண்ணாச்சியின் மகன் திருமணத்துக்குச் சென்று வந்தேன். அதற்குப் பிறகு நிறைய மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள். ஒவ்வொன்றும் நான் பெற்ற பொக்கிஷம். ஒரு குறுஞ்செய்தியில் கூட அன்பைக் கடத்திவிட முடிகிற வித்தை அண்ணாச்சிக்குத் தெரியும். அவரால் அதை இயல்பாகச் செய்ய முடிந்தது. அதற்காக அவர் மெனக்கிடுவதேயில்லை. அவ்வப்போது நான் எழுதுபவை குறித்து குறுஞ்செய்தி அனுப்புவார். ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்’ சிறுகதை அண்ணாச்சிக்குப் பிடித்திருந்தது என்பதை அதிகாலையில் அவரிடமிருந்து வந்த குறுஞ்செய்தி சொல்லாமல் சொல்லியது. அதற்குப் பிறகு அந்தக் கதை குறித்து வந்த எந்த ஒரு பாராட்டும் பெரிதாக எனக்குத் தோன்றவில்லை. அண்ணாச்சியின் தட்டிக்கொடுத்தலே எனக்கு போதுமானதாகயிருந்தது. பின்னர் அந்தக் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதெல்லாம் தனி. 

2010 க்குப் பிறகான எனது திருநெல்வேலி வருகைகள் ஒவ்வொன்றும் தி.க.சி தாத்தாவை சந்திப்பதில் துவங்கும். வண்ணதாசன் அண்ணாச்சியை சந்திப்பதில் நிறையும். இவர்கள் இருவரையும் சந்திக்காமல் நான் ரயிலேறுவதில்லை. அதிலும் ஒருமுறை வண்ணதாசன் அண்ணாச்சியை சந்திக்க இயலாமல் போன வருத்தத்தில் சென்னைக்குக் கிளம்பினேன். ரயில்வே ஸ்டேஷனுக்கு எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி, ஓவியர் பொன் வள்ளிநாயகம் ஆகியோர் வந்திருந்தனர். ரயிலுக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது. வண்ணதாசன் அண்ணாச்சியிடமிருந்து ஃபோன். ‘கிளம்பிட்டியா? இந்தா வந்துக்கிட்டிருக்கேன்’ என்றார். மகிழ்ச்சியை விட படபடப்பாக இருந்தது. என் ஆசான்களில் ஒருவர் அவர். என்னை வழியனுப்ப அவர் வருவதாவது? ஆனாலும் பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல் ரயில்வே ஸ்டேஷனில் அவர் பாதம் தொட்டு வணங்கினேன். வழக்கம் போல தடுத்தார். அதற்கடுத்து அவர் செய்த காரியம் மறைத்து வைத்திருந்த பதற்றத்தை வெளியே இழுத்துக் கொண்டு வந்து ரயில்வே பிளாட்ஃபாரத்தில் போட்டது. என் கையில் தனது‘சின்ன விஷயங்களின் மனிதன்’ புத்தகத்தைக் கொடுத்து, ‘இதை இங்கேயே உன் கையால வெளியிட்டுரு’ என்றார். சந்தோஷத்திலும், கூச்சத்திலும் திக்குமுக்காடிப் போனேன். தனது வழக்கமான தோள்தட்டலில் என்னை ஆசுவாசப்படுத்தினார் அண்ணாச்சி. பிறகு திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் வண்ணதாசன் அண்ணாச்சியின் ‘சின்ன விஷயங்களின் மனிதன்’ புத்தகத்தை எழுத்தாளர் நாறும்பூநாதன் முன்னிலையில் நான் வெளியிட கவிஞர் கிருஷி பெற்றுக்கொண்டார்.  நினைத்து நினைத்து நான் பெருமைப்பட்டுக் கொள்ளும் தருணமது. மற்றொரு பெருமைமிகு அங்கீகாரத்தையும் எனது ‘தாயார் சன்னதி’ புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியதன் மூலம் அவர் எனக்கு வழங்கினார். ‘இதுவரைக்கும் நான் எழுதினதுலயே இது பெஸ்ட். அதுக்குக் காரணம் நான் இல்ல. நீ’ என்று அவர் சொன்னதை தன்னடக்கத்தையும் மீறி வெளியே சொல்லி மகிழ்கிறேன்.

ஒருமுறை பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் என்னை மதுரையில் நடைபெற்ற அவரது பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்திருந்தார். முதல் நாளே சென்னையிலிருந்துக் கிளம்பி மதுரைக்குச் சென்று விட்டேன். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவையிலிருந்து சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா வந்திருந்தார். முத்தையாதான் அந்த யோசனையைச் சொன்னார். ‘கல்யாண்ஜியை அழைப்போமா? இரண்டு நாட்கள் நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கலாமே?’ எனக்கு அண்ணாச்சியிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது. ‘நீங்களே கேளுங்க’ என்று முத்தையாவிடம் சொன்னேன். அண்ணாச்சியுடன் ஃபோனில் முத்தையா பேசிவிட்டு சொன்னார். ‘சுகா பேரைச் சொன்னவுடனே கிளம்பி வரேன்னு சொல்லிட்டாருங்க’ என்றார். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மாலையில் ராஜா முத்தையா மன்றத்தில் ‘கண்ணதாசன் பாடல்கள்’ குறித்த பட்டிமன்றத்தில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் தலைமையில் மரபின் மைந்தன் முத்தையா, இசைக்கவி ரமணன் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியின் துவக்கத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தன் முன் வரிசையில் அமர்ந்திருந்த வண்ணதாசன் அண்ணாச்சியையும், என்னையும் குறிப்பிட்டு எங்களை வரவேற்று பேசினார். நாங்கள் இருவரும் எழுந்து நின்று அவையோரின் கைட்டல்களை வாங்கிக் கொண்டோம். அன்றைய இரவு பேராசிரியர், மரபின் மைந்தன், இசைக்கவி போன்றோர் எங்கள் அறைக்கு வந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு சென்றார்கள். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட விடியும் வரைக்கும் வண்ணதாசன் அண்ணாச்சியின் பல கதைகளை சிலாகித்துப் பேசிக்கொண்டேயிருந்தேன். குறிப்பாக ‘போய்க்கொண்டிருப்பவள்’ சிறுகதையைப் பற்றி நான் பேசப் பேச அண்ணாச்சிக்கு என்னவோ போலாகிவிட்டது. ‘நடுராத்திரி மூணு மணிக்கு  இத்தனை வருசம் களிச்சு போய்க்கொண்டிருப்பவள் கதையைப் பத்தி நீ சொல்லுததை கேக்க முடிஞ்சுதே! வேறென்னப்பா வேணும்? இப்பமே செத்துப்போனா சந்தோஷம்தான்’ என்றார். அத்தோடு நான் விட்டிருக்க வேண்டும். ‘அண்ணாச்சி. ‘ஒரு அமர ஊர்தியை முன்வைத்து’ கதைல’ என்றேன். ‘நல்லாயிருப்பே. தூங்குடே’ என்று இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தார். 

ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘பரமேஸ்வரி அத்தையின் மகள்’ சிறுகதை குறித்து குறுஞ்செய்தியிலும், நேர்ப்பேச்சிலும் அவர் சொன்ன வார்த்தைகளை இன்னும் மனதுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். நெல்லைக்கு நான் வரும்போது மட்டுமல்ல. சென்னையில் வண்ணதாசன் அண்ணாச்சி கலந்து கொள்ளும் நிகழ்வு குறித்துத் தெரியவந்தால் கிளம்பிச் சென்று விடுவேன். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ‘பொன்மாலைப்பொழுது’ நிகழ்ச்சியில் வண்ணதாசன் அண்ணாச்சி பேசி முடிக்கவும், காத்திருந்து அவரருகில் சென்று வணங்கினேன். சந்தோஷம் பொங்க என் கைகளைப் பிடித்துக்கொண்டு தான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றார். எங்களுடன் ‘சந்தியா’ பதிப்பகம் நடராஜன் அண்ணாச்சியும் வந்தார். விடுதியில் இறக்கிவிட்டபின் நடராஜன் அண்ணாச்சி அவரது நண்பர் வீட்டு திருமண வரவேற்புக்குச் செல்வதாகவும், எழுத்தாளர் பாவண்ணன் அங்கு காத்திருப்பதாகவும் கூறினார். ‘பாவண்ணனை நான் விசாரிச்சதா சொல்லுங்க’ என்றேன். ‘சொல்றேன். நீங்க யாருன்னு சொல்லணும்?’ என்று கேட்டார் நடராஜன் அண்ணாச்சி. அதுவரைக்கு அவருக்கு என்னைத் தெரியாது போல. ‘சுகான்னு சொல்லுங்க’ என்று நான் சொன்னதுதான் தாமதம். ‘யோவ்! ஒம்மத்தாம்யா இத்தன வருஷமா தேடிக்கிட்டு இருந்தேன்’ என்று தோளில் தட்டி அணைத்துக் கொண்டார். கழிப்பறையிலிருந்து முகம் கழுவித் துடைத்தபடி வெளியே வந்த வண்ணதாசன் அண்ணாச்சி சிரித்தார். ‘சரியாப் போச்சு. சுகாவை இப்பத்தான் முதமுதலா பாக்கறீங்களாக்கும்? என்றார். நடராஜன் அண்ணாச்சிக்கு என்னை அடையாளம் கண்டுகொண்ட பிறகு உடனே கிளம்பிச் செல்ல மனம் வரவில்லை. ‘நான் போற ரிஸப்ஷன் என் ஃபிரெண்டோட மகளுக்குத்தான். என் ஃபிரெண்டு நல்ல இலக்கிய வாசகன். நீங்க ரெண்டு பேரும் வந்தா ரொம்ப சந்தோஷப்படுவான்’ என்றார். நான் அண்ணாச்சியின் முகத்தைப் பார்த்தேன். ‘சுகாவுக்கு ஆட்சேபனை இல்லேன்னா நாம போகலாம். எனக்கொண்ணும் இல்ல’ என்றார் அண்ணாச்சி. ‘நீங்க போறதா இருந்தா நான் உங்க கூட வாரேன் அண்ணாச்சி’ என்று அவர்களுடன் நானும் கிளம்பினேன். அன்றைக்கு அண்ணாச்சி தங்கியிருந்த விடுதியிலிருந்து நடக்கும் தூரத்தில்தான் அந்தக் கல்யாண மண்டபம் இருந்தது. எங்களுடன் நடந்து வந்துகொண்டிருந்த ‘சந்தியா’ நடராஜன் அண்ணாச்சி வேகவேகமாக மண்டபத்துக்குள் சென்று தனது நண்பரை அழைத்து வந்தார். கோட் சூட்டில் கைகூப்பியபடியே வாசலுக்கு வந்த அந்த மனிதர் எங்கள் இருவரையும் மணடபத்துக்குள் அழைத்துச் சென்றார். வண்ணதாசன் அண்ணாச்சியின் எழுத்துகளை அவர் படித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. எனது எழுத்துகளையும் பற்றி மணம்மக்களிடம் சொல்லி மகிழ்ந்து ஆச்சரியப்படுத்தினார். முன்பின் தெரியாத ஒரு மனிதரின் வீட்டுவிசேஷச் சாப்பாடு சாப்பிட்ட அனுபவத்தைப் பற்றி வண்ணதாசன் அண்ணாச்சி எழுதுவார் என்று நான் இத்தனை காலம் அதுகுறித்து எழுதாமல் இருந்தேன். ஒருவேளை நான் எழுதுவேன் என்று அவர் காத்திருந்திருக்கலாம். இதோ எழுதிவிட்டேன்.

வண்ணதாசன் அண்ணாச்சிக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபின் நடந்த இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன். விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சியின் ஏற்பாட்டில் நடந்த கோவை நிகழ்வு ஒன்று. திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் சகோதரர் சிவகுருநாதன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வு மற்றொன்று. இரண்டிலும் நான் பேசிய பொதுவான கருத்து ஒன்றை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். ‘என்னை நான் ஆக்கிய ஆளுமைகளில் வண்ணதாசன் அண்ணாச்சி முக்கியமானவர். அவரை நான் வணங்குகிறேன்.’ வண்ணதாசன் அண்ணாச்சியை நான் எப்போது, எங்கு பார்த்தாலும் முதலில் அவர் பாதம் தொட்டு வணங்குவேன். எல்லா சமயமும் அதை அவர் தடுக்க முயல்வார். அவரால் குனிந்து என்னைத் தடுக்க முடியாது. அவ்வளவு உயரம் அவர்.

2 thoughts on “கோகிலாவிலிருந்து . . .

Comments are closed.