துரத்தும் பாடல் . . .

திரையிசை குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். ‘கர்ணன்’ திரைப்படத்தின் இசை குறித்து ‘கர்ணனுக்கு வழங்கியவர்கள்‘, ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா திரைப்படத்தின் இசையை விதந்தோதும் ‘ஹிஸ் ஹைனஸ் ரவீந்திரன்‘, ஜென்ஸியின் குரலை வர்ணிக்கும் ‘செண்பகத்தக்காவின் குரல்‘, ஸ்வர்ணலதாவின் மறைவு தந்த துக்கத்தில் எழுதப்பட்ட ‘சின்னஞ்சிறு கிளியே‘, மறக்கவே முடியாத மலேஷியா வாசுதேவன் பற்றிய ‘அண்ணன்களின் பாடகன்‘ , இப்படி இன்னும் பல. இவை எல்லாமே பலரது அபிமானத்தைப் பெற்ற கட்டுரைகள். ஆனால் நான் எழுதிய இசைக் கட்டுரைகளிலேயே ஒரே ஒரு பாடல் குறித்து எழுதிய ‘தேவனின் கோயில்’ கட்டுரை குறித்த எதிர்வினைகள் இன்னும் எனக்கு வந்து கொண்டேயிருக்கின்றன. ஓரிரு மாத இடைவெளியில் யாரோ ஒருவர் எங்கிருந்தோ மின்னஞ்சலிலோ, அலைபேசியிலோ, குறுஞ்செய்தியிலோ கண்ணீர் உகுத்து, என்னையும் கலங்க வைப்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்மணி ‘தேவனின் கோயில்’ கட்டுரையைப் படித்து விட்டு தொலைபேசியில் பேசத் துவங்கியவர், அடக்க இயலா அழுகையுடன் இணைப்பைத் துண்டித்து விட்டார். சில நிமிடங்களில் இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தது: ‘இந்தக் கட்டுரையை நான் படித்திருக்கக் கூடாது. படித்த பின் இந்தப் பாடலை நான் கேட்டிருக்கக் கூடாது. உங்களை, உங்கள் பெயரை நான் அறிந்திருக்கக் கூடாது.’ ஒரு திரையிசைப் பாடலுக்கு இத்தனை சக்தி உள்ளதா? அது குறித்து எழுதப்பட்ட வார்த்தைகள் ஏன் படித்தவரின் மனதை பாதித்தன? இந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. வழக்கமாக என் மனதை பாதிக்கும் எந்த ஒரு பாடலையும் கேட்காமல் கடந்து விடுவதே வழக்கம். ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் ‘அழகிய கண்ணே’ அதற்கு தலையாய உதாரணம். அது போக ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் ‘கற்பூர பொம்மை ஒன்று’, ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் ‘குயில் பாட்டு’, ‘அச்சாணி’ திரைப்படத்தின் ‘மாதா உன் கோயிலில்’ போன்ற பாடல்களுடன் ‘மூன்றாம் பிறை’யின் ‘கண்ணே கலைமானே’ பாடலையும் எல்லா சமயத்திலும் கேட்கும் திராணி இருந்ததே இல்லை. இது போன்ற பட்டியல் எல்லோருக்கும் இருக்கக் கூடும். நண்பன் குஞ்சு ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல் துவங்கும் போதே, ‘பாட்டை மாத்தித் தொல’ என்பான். அது அவனுக்குப் பிடிக்காத பாடலல்ல. அது தரும் தொந்தரவிலிருந்துத் தப்பிக்கவே தவிர்ப்பான்.

‘தேவனின் கோயில்’ பாடலின் இசை, பாடல் வரிகள், சித்ராவின் பாடும் முறை, மற்றும் வாத்தியக் கருவிகளின் சேர்க்கை குறித்து விலாவாரியாக எழுதியாயிற்று. இனி அந்தப் பாடல் குறித்து வியக்கவோ, சிலாகிக்கவோ என்னிடம் ஒரு சொல் கூட மிச்சமில்லை. கிட்டத்தட்ட அந்தப் பாடலை மறந்து போகும் காலம் வரும் போது சொல்லி வைத்தாற்போல் யாராவது அந்தப் பாடலைப் பற்றி என்னிடம் பேசுவார்கள். திரைக்கதை குறித்த அறிவும், ஆர்வமும் கொண்ட திரைக்கதையாசிரியரும், திரைக்கதை மற்றும் திரையிசை குறித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறவருமான சகோதரர் ‘கருந்தேள்’ ராஜேஷும், நானும் பரஸ்பரம் எழுத்து மூலமாக அறிமுகம் ஆனவர்கள். அவர் எழுதும் விதத்தைப் பார்த்த போது நிச்சயமாக இவர் ஓர் அறிவுஜீவிதான் என்ற அச்சம் எனக்கிருந்தது. நேரில் பார்த்த மாத்திரத்தில் அச்சம் ஊர்ஜிதமானது. அவரது உயரமும், திரண்ட புஜங்களும், வெறித்த பார்வையும் ‘’இந்தாளு வஸ்தாதேதான்யா’ என்று முதலில் மிரள வைத்தது. பேசத்துவங்கிய பிறகு வளர்ந்த அந்தக் ‘குழந்தைப்பையன்’ தேளல்ல, தேன் என்பது புரிந்தது. சந்தித்த சில தினங்களில் ராஜேஷிடமிருந்து ஒரு நீண்ட குறுஞ்செய்தி வந்தது. ‘தேவனின் கோயில்’ பாடல் மற்றும் கட்டுரை குறித்து கிட்டத்தட்ட புலம்பியிருந்தார். இறுதியில் இப்படி சொல்லியிருந்தார். ‘இந்தப் பாட்டு கேக்கும் போதெல்லாம் உங்க தோளில் சாய்ந்து அழணும்னு தோணுது’. என் தோளை நினைத்துக் கவலை கொண்டாலும் அவரது உணர்வைப் புரிந்து கொள்ள முடிந்தது. தன் வாழ்வோடு கலந்த பாடல் என்று தேவனின் கோயிலைச் சொல்லியிருந்தார், ராஜேஷ்.

ஜான் சுந்தர் எழுதிய ‘நகலிசைக் கலைஞன்’ புத்தக அறிமுக விழாவில் பார்வையாளனாக கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். பாடகர் ஏ.வி.ரமணன், இசை விமர்சகர் ஷாஜி, கவிஞர் மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் கலந்து கொண்ட அந்நிகழ்வில் பத்திரிக்கையாளர் கவின்மலர் ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ பாடலை அற்புதமாகப் பாடினார். இறுதியில் ஏற்புரை ஆற்ற அழைக்கப்பட்ட ஜான்சுந்தர் எடுத்த எடுப்பிலேயே தேவனின் கோயில் பாடலின் இடையிசையில் வரும் இளையராஜாவின் குரலில் ‘ஏய்ய்ய் … ஏஹேய் . . .

தந்தனா தந்தனா தந்தனா

ஆஆ . . .

தந்தானாத் தனனானத்தானன்னா

அஅஅஅ ஆ
தந்தானா தந்தானா . . . ஹேய் . . .

’ என்று பாடிவிட்டு சொன்னார். ‘எங்கோ கோயில் திருவிழா ஒலிபெருக்கியில் கேட்ட இந்தக் குரல் வழியே ஒரு கரம் நீண்டு என்னை அழைத்தது. நகலிசைக் கலைஞனாக நான் மாறியது அந்தக் கரம் நீட்டிய திசை நோக்கித்தான். ஆனால் நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது சுகா அண்ணனின் கரத்தை’. அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் ‘இந்தப் பயலுக சகவாசமே இதுக்குத்தான்பா வச்சுக்கவே கூடாது’ என்று எழுந்து ஓடி வந்துவிட்டேன். 

‘தேவனின் கோயில்’ கட்டுரையின் துவக்கத்தில் அந்தப் பாடலை மதுரையின் ஏதோ ஒரு பகுதியிலுள்ள ஆசிரியை ஒருவர் பாடிய காணொளியைப் பார்க்க நேர்ந்ததைப் பற்றி எழுதியிருப்பேன். சொல்லப் போனால் அது குறித்த கட்டுரை எழுதத் தூண்டியதே அக் காணொளிதான். கட்டுரை எழுதிய சமயத்தில் அதை எங்கோ தொலைத்து _விட்டேன். தேவனின் கோயில் கட்டுரை காணொளி இல்லாமல்தான் இணையத்தில் வெளியானது. நான்கு தினங்களுக்கு முன் தற்செயலாகக் கிடைத்த அக்காணொளி மீண்டும் மீண்டும் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வைத்தது. தன்னை மறந்து சிறு தயக்கத்துடன் பாடத்துவங்குகிற அந்த ஆசிரியை சில நொடிகளில் பாடலுக்குள் மூழ்கி வெகுதூரம் செல்கிறார்.  மனதிலிருந்துப் பாடுகிற பாசாங்கில்லாத குரல். மீண்டும் தேவனின் கோயிலுக்குள் சென்றது மனது. ஒரு வழியாக அதிலிருந்து மீண்டிருந்த நேற்றைய காலைப் பொழுதில் ஊட்டியிலிருந்து அழைத்தார் நண்பர் மணி எம்.கே. மணி. 

‘என்ன மணி? கிளைமேட் எப்படி இருக்கு?’

‘அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. கோயம்புத்தூர்லேருந்து சாம்ஸன் தான் எங்களை ஊட்டிக்குக் கார்ல கூட்டிக்கிட்டு வந்தாரு.’

‘அட! நான் கோயம்புத்தூருக்குப் போனா சாம்ஸன் தான் பிக் அப் பண்ண வருவார். நல்லா இருக்காரா?

‘ம்ம்ம். ராத்திரி பூரா விடிய விடிய இளையராஜாதான். கூடவே உங்களைப் பத்தியும்தான் பேச்சு. அந்த ஹேங்க் ஓவர் தீந்தபிறகுதான் உங்களுக்குப் பேசணும்னு வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன். இல்லேன்னா நேத்தே கூப்பீட்டிருப்பேன்.’

‘ராத்திரி பூரா அவர் பாட்டு கேக்கறதும், அதைப் பத்திப் பேசறதும் எப்பவும் நாம பண்றதுதானே, மணி?’

‘அட அது இல்லீங்க. நாங்க பேசிக்கிட்டிருந்தது, உங்களோட ‘தேவனின் கோயில்’ பத்தி’.

மேற்கொண்டு மணியிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. ‘சரி மணி. சென்னை வந்ததும் கூப்பிடுங்க’ என்று ஃபோனை வைத்து விட்டேன்.

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் ஜான் சுந்தர் ஒரு கவிதையை அனுப்பி வைத்தார். 

தேவனின் கோவில்

மூடிய நேரம்

நானென்ன கேட்பேன்

தெய்வமே

எங்கேயும் செருகலாம்

பிடுங்கலாம்

ஒண்டிக்கட்டையை

தற்கொலை

இரங்கல் கூட்டம்

விவாகரத்து

எல்லாமே

விளையாட்டு

பேரானந்தம்

அதற்கு

என்ன இப்படிப் பண்றீங்க

டாக்டர் குரலுக்கும்

அவ்வளவு குதூகலம்

உனக்கென்ன

குடும்பமா

குழந்தையா

எனும்போது மட்டும்

ஏய்ய்ய் … ஏஹேய் . . .

தந்தனா தந்தனா தந்தனா

ஆஆ . . .

தந்தானாத் தனனானத்தானன்னா

அஅஅஅ ஆ
தந்தானா தந்தானா . . . ஹேய் . . .

கடந்த சில தினங்களுக்கு முன் காலமான கவிஞர் ‘தக்கை’ பாபுவின் கடைசிக் கவிதையாம், இது. அட போங்கப்பா!


நான்காவது புத்தகம் . . .

image‘அந்திமழை’ ஜூன் இதழில் கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், கலாப்ரியா, ஜெயமோகன், சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் முதல் புத்தகம் வெளிவர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அனுபவித்த இன்னல்களையும் சொல்லியிருக்கிறார்கள். படிக்கப் படிக்க ஆச்சரியமாகவும், சங்கடமாகவும் இருந்தது. இவை எதுவுமே எனக்கு ஏற்படவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் எனது ஆரம்பகால கட்டுரைகள் வெளிவந்தன. பின் அந்தக் கட்டுரைகளை கோவையிலிருந்து வெளிவந்த ‘ரசனை’ இதழில் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா பிரசுரித்து வந்தார். பின்னர் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவக்கப்பட்ட போது, அதன் முதல் இதழிலிருந்துத் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். திடீரென்று ஒருநாள் ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிலிருந்த தம்பி சேதுபதி அருணாசலம் அழைத்தார். ‘ஒங்க கட்டுரைகளையெல்லாம் புத்தகமா போடலாம்னு இருக்கோம். அதுக்காகவே ஒரு பதிப்பகம் துவக்கறதாவும் உத்தேசம்’ என்றார். ‘சரி’ என்றதோடு என் வேலை முடிந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ‘தாயார் சன்னதி’ புத்தகத்தைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார், நண்பர் ‘நட்பாஸ்’ என்னும் பாஸ்கர். தமது முதல் புத்தகம் வெளிவருவதற்காக தாங்கள் பட்ட பாட்டை மூத்த எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருப்பதைப் படித்த இந்த வேளையில் எனது முதல் புத்தகம் வெளிவந்த விதத்தை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அத்தனை பிரியமாக என்னிடம் புத்தகம் போடுவதற்கான அனுமதியைக் கேட்ட சேதுபதி அருணாசலம், அதற்கு சம்மதம் தெரிவித்த ரவிசங்கர், வ. ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழு, புத்தக உருவாக்கத்தில் உழைத்த ஹரன் பிரசன்னா, தான் எழுதிய எழுத்துக்களிலேயே சிறந்ததாகக் கருதுவதாக ‘தாயார் சன்னதி’க்கான அணிந்துரையைக் குறிப்பிட்ட மரியாதைக்குரிய ‘அண்ணாச்சி’ வண்ணதாசன், இவர்கள் இல்லையேல் ‘தாயார் சன்னதி’ இல்லை. எனது இரண்டாவது புத்தகமான ‘மூங்கில் மூச்சு’, ஆலமரமான ‘ஆனந்த விகடன்’ வெளியிட்டு பரவலான வாசகர் வட்டத்துக்கு இட்டுச் சென்றது. மூன்றாம் புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளிவந்ததில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை.  ‘வம்சி’ பதிப்பகத்தின் சார்பாக தோழி ஷைலஜா அழைத்து பேசினார். அதற்கு முன் அவர் எனக்கு அறிமுகமே இல்லை. நான் சம்மதம் தெரிவித்து கட்டுரைகளை அனுப்பினேன். அவ்வளவே. அழகான ஓர் அணிந்துரையை நண்பர் செழியன் எழுதிக் கொடுத்தார். இப்போது எனது நான்காவது புத்தகமும் எனக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் வெளிவர இருக்கிறது. முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளியாகி மூன்றாண்டுகள் ஆகின்றன. அடுத்த புத்தகம் குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருந்த என்னிடம் வழக்கம் போல ஒரு தொலைபேசி அழைப்புதான் இந்தப் புத்தகத்தைப் பற்றிய விருப்பத்தைச் சொன்னது. அழைத்தவர் அத்தனை பிரியமானவர். உடனே ‘சரி’ என்றேன்.

அழைத்தவர், ‘ஹரன் பிரசன்னா’.
பதிப்பகம், ‘தடம்’.(விகடன் அல்ல)

புத்தகத்தின் தலைப்பு, ‘உபசாரம்’.
அணிந்துரை எழுதியிருப்பவர், ‘ஜெயமோகன்’.

சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘தாயார் சன்னதி’

சென்ற புத்தகக் கண்காட்சியில் ‘சொல்வனம்’ பதிப்பகம் வெளியிட்ட ‘தாயார் சன்னதி’யின் இரண்டாம் பதிப்பு, நாளை (5.1.2012) துவங்க இருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு ஸ்டாலில் (F-7)கிடைக்கும்.

இணையத்தில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-192-5.html

க்ளோ

நண்பர் சீமானின் வீடு ஒரு சேவற்கூடாரம். பத்திலிருந்து இருபது சேவல்கள் வரை உண்டு. ஒரு கம்யூன் வாழ்க்கை வாழ்ந்து வருகிற கூட்டம். உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், சின்ன நடிகர்கள் . . இப்படி நிறைய நண்பர்கள் அங்கு ஒரு குடும்பமாக உள்ளனர். யார்யாருக்கு வேலை கிடைக்கிறதோ, அவர்கள் செலவைப் பார்த்துக் கொள்ள, மற்றவர்கள் சாமான்கள் வாங்க, ஒரு சிலர் சமைக்க, எல்லோரும் சாப்பிடுவார்கள். யாருக்கும், யாரோடும் வருத்தமோ, கோபமோ வருவது இல்லை. எங்கோ பிறந்து, எங்கெங்கோ வளர்ந்து அங்கு வாழும் சகோதரர்கள் ஒருவருக்கொருவரை முறை சொல்லி அழைத்துக் கொள்வதைப் பார்ப்பதே அழகு. மாமா, மருமகன், அத்தான், மைத்துனன், சித்தப்பா, மகன், அண்ணன், தம்பி இப்படி பல. எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். சமையல் வேலைகள் சதா நடந்து கொண்டே இருக்கும். யாராவது ஒருவர் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருப்பதை நான் அங்கு போகும் போதெல்லாம் தவறாமல் பார்த்திருக்கிறேன். எப்படியும் ஒருவர் சவரம் செய்து கொண்டிருப்பார். ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருவர் ராஜ் டிஜிட்டல் பிளஸ்ஸில் பழைய பாடாவதிப் படமொன்றை உணர்ச்சி பொங்கப் பார்த்துக் கொண்டிருப்பார். மற்றொருவர் சத்தமாக தினத்தந்தி படித்துக் கொண்டிருப்பார். படிக்கும் ஒவ்வொரு செய்திக்கும் தனது கமெண்ட்டுடன். உ.தா. என்னைப் பார்த்து மற்ற கட்சிகள் பயப்படுகின்றன – விஜயகாந்த். பயப்படுவாஞ்ஞல்ல . . . முதுகில் குத்திய தேவகெளடா – எடியூரப்பா. குத்தத்தான் செய்வென் . . . இப்படி மதுரைத் தமிழில். வயதில் மூத்த ஒரு சிலர் அந்த வீட்டில் இருந்தாலும் குடும்பத் தலைவர் என்னவோ சீமான்தான்.

ஒரு நாள் காலையில் நண்பர் சீமானை செல்பேசியில் அழைத்தேன். பதிலில்லை. உடனே அவரது இல்லத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டேன். எதிர்முனையில் ஒரு குரல், ‘க்ளோ’ என்றது. அராஜகம் இல்லையா? நான் ஒருவன்தான் சீமானை அராஜகம் என்றழைப்பேன் என்பது அங்குள்ள எல்லோருக்கும் தெரியுமென்பதால், எதிர்முனைக் குரல் என்னை அடையாளம் கண்டுகொண்டு, ‘அண்ணே, வணக்கமுண்ணே . . நான் ஜிந்தா பேசுறேன்னே. அண்ணன் குளிக்கிறாருண்ணே என்றது. சரி, நான் வற்ரேன்னு சொல்லு. போனை வைத்த பின் எனக்கு யோசனை. இவன் போனை எடுத்து என்னவோ வினோதமாகச் சொன்னானே. சரி, அப்புறமாகக் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

மற்றோர் நாள் சீமான், மற்றும் சில நண்பர்களுடன் நானும் அமர்ந்து அவர் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி மணி ஒலித்தது. ஜிந்தா போய் போனை எடுத்து ‘க்ளோ’ என்றான். அடடே, இப்படித்தான் அன்றைக்கு நம்மிடமும் சொன்னானா? ஏன் இப்படி உச்சரிக்கிறான்? என்று நண்பர்களிடம் கேட்க நினைத்து, அதை அங்குள்ள யாருமே கவனிக்காமல் இருக்க, சரி அவங்க ஊரில் ஹலோவுக்கு பதில் க்ளோதான் போல என்று சும்மா இருந்து விட்டேன். இனி அந்தத் தொலைபேசி உரையாடல்.

க்ளோ . . .யாருங்க . . கிருஷ்ணமூர்த்தியா . . . ? ஒரு நிமிசம் . . . .சுற்றி எங்கள் எல்லோரையும் பார்த்தான். எங்கள் யார் முகத்திலாவது கிருஷ்ணமூர்த்தி தெரிகிறாரா என்று . அங்கு கிருஷ்ணமூர்த்தி என்கிற பெயரில் யாருமே இல்லை என்பது எனக்கே தெரியும்.அப்படி யாரும் இல்லீங்களே.ஓ . . .அப்பிடீங்களா . . .என்னங்க . . . இன்னொரு தடவ சொல்லுங்க .. .
சீமான் பொறுமை இழக்க ஆரம்பித்தார்.

ஜிந்தா விடுவதாக இல்லை. சத்தமாக,நீங்க என்ன நம்பர் போட்டிங்க ?ரெண்டு மூணு ஏளு ஆறு ஆறு எட்டு மூணு சைபரா? அடடா , இது ரெண்டு மூணு ஏளு ஆறு ஆறு எட்டு ரெண்டு சைபராச்சே?

ராங்நம்பர்ன்னு சொல்லேன்டா, சீமான் கத்தினார். பவ்யமாகத் திரும்பி, அதாண்ணே சொல்லிக்கிட்டு இருக்கேன், என்றான் ஜிந்தா.தலையைக் குறி வைத்துப் பறந்து வந்த வஸ்துவுக்கு லாவகமாகக் குனிந்து சமாளித்து போனை வைத்து விட்டு வந்த ஜிந்தாவுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டது. இனி நீ போனை எடுத்தால், தென்னை மரத்தில் கட்டி வைத்து உதைப்போம். உதைப்பார்கள். நான் கண்கூடாகப் பார்த்து மிரண்டிருக்கிறேன்.

ஜிந்தாவின் உண்மையான பெயர் கணேசனோ, ரவியோ, குமாரோ. சினிமாவில் நடிப்பதற்காக அவனாக வைத்துக் கொண்ட பெயர்தான் ஜிந்தா. மதுரைக்காரன். கருத்த முரட்டு உடல். முறுக்கிய மீசை. கையில், காதில் வகை வகையாய் ஏதேதோ வளையங்கள். கொஞ்சம் காது மந்தம். அதற்கு ஒரு பின்னணிக் கதையுண்டு. ஊரில் த.மு.எ.ச., மற்றும் பல கலை குழுக்களுடன் சேர்ந்து நாடகங்களில் நடித்து வந்த அனுபவம் உண்டு ஜிந்தாவுக்கு. அப்படி ஒரு நாடகத்தில் போராட்டம் நடத்தும் விவசாயக் கூட்டத்தில் ஜிந்தாவும் ஒருவன். போராட்டக்களம், போர்க்களமாகிறது. போலீஸ் வந்து கண்ணீர்ப் புகை குண்டுகளை எறிகிறார்கள். பதிலுக்கு போராட்டக்காரர்களும் வெடிகுண்டுகளை எறிய, இருபுறமும் உயிர்ச்சேதம். செத்து விழும் போராட்டக்காரர்களில் ஜிந்தாவும் ஒருவன். இறந்து கிடக்கும் ஜிந்தாவின் காதருகில் வெடிக்காமல் புகைந்து கொண்டிருந்திருக்கிறது ஒரு வெடிகுண்டு. அசையாமல் பிணமாகக் கிடந்த ஜிந்தா, ஒரு கண்ணைத் திறந்து புகைந்து கொண்டிருந்த குண்டைப் பார்த்திருக்கிறான். ஆனாலும் தீராக்கலைவெறியில் பாத்திரமாகவே, அதாவது பிணமாகவே அசையாமல் கிடந்து, அது வெடிக்கும் வரை பொறுமைகாத்து பாதி கேட்கும் திறனை இழந்தான்.

ஒருமுறை ஊருக்குப் போய்விட்டு வீட்டுக்குள் நுழையும் ஜிந்தாவின் கையில் பையுடன் இருந்த இன்னொரு பொருளைப் பார்த்து ஒரு கணம் எல்லோருமே துணுக்குற்றிருக்கின்றனர். அவன் கையிலிருந்தது உறையிடப்பட்ட உண்மையான ஒரு நாதஸ்வரம். என்னடா இது ஜிந்தா? பஸ்ல வரும் போது ஒரு மேளக்காரங்கூட தகராறுண்ணே. க்காளி, என்ன சொல்லியும் அடங்க மாட்டேண்ணுட்டென். அதான் அடிச்சு இதை புடுங்கிட்டு வந்துட்டேன். அதோடு விட்டிருந்தால் அவன் ஜிந்தாவே இல்லை. ஒரு அதிகாலையில் அசந்துத் தூங்கிக் கொண்டிருக்கும் சீமான் குடும்பத்தினரின் காதுகளில் நிறைமாத கர்ப்பிணிப்பூனை ஒன்றின் பிரசவக்கதறலொலி கேட்க, தூக்கம் கலைந்த எரிச்சலோடு எழுந்து பார்த்திருக்கின்றனர். சத்தம் வந்த திசை, மொட்டை மாடியிலிருந்து. தூக்கக் கலக்கத்துடன் பூனைக்கு உதவும் நோக்கோடு மாடிக்குப் போன அவர்கள் கண்டது, ஜிந்தாவின் நாதஸ்வரச் சாதகக் காட்சி. பிறகென்ன. அந்த நாதஸ்வரத்தைப் பிடுங்கி, அதாலேயே . . . . . . .

ரொம்ப நாள் ஃபோனைத் தொடாமலேயே இருந்தான் ஜிந்தா. ஒரு நாள் நாங்கள் அனைவரும் சீமானின் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். தொலைபேசி மணியடித்தது. எடுறா ஜிந்தா என்றார் சீமான். வேண்டாண்ணே, தயங்கினான். எடுறான்னா. இன்னும் தயங்கினான். நான் உடனே சீமானிடம், ஏன் அராஜகம்? போனை எடுத்தா தென்னைமரத்துல கட்டி வச்சு அடிப்பேன்னா, அவன் எப்படி எடுப்பான் என்றேன். ஐயாமகனே . . அது சும்மா ஒரு கோபத்துல சொன்னது. ஜிந்தா நம்ம தம்பியில்லியா? அவன அடிப்போமா, சொல்லுங்க என்றார். மணியடிப்பது நின்றுவிட்டது. சீமான் தொடர்ந்தார். இப்பெல்லாம் தம்பி ஜிந்தா புத்திசாலியா ஆயிட்டானே! இல்லியாடா தம்பி! பெருமிதம் பொங்கும் முகத்துடன் அதை ஆமோதிக்கும் விதமாக மெல்ல சிரித்தபடி தலைகுனிந்தான் ஜிந்தா. மீண்டும் மணியடித்தது. உற்சாகத்துடன் சென்று போனை எடுத்த ஜிந்தா,

க்ளோ . . .

சீமான் அண்ணனா . . . .

இருக்கறாருங்க . . . .

நீங்க?

ஒரு நிமிசம் . .

கவனமாக மவுத்பீஸைப் பொத்திக் கொண்டு, பணிவுடன் சீமானிடம் •போனை நீட்டியபடியே ஜிந்தா சொன்னது,

அண்ணே, புருசோத்தமன்னு யாரோ ஒரு முஸ்லிம் பேசுறாருண்ணே.