ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒவ்வொரு பெயர்

அம்பாசமுத்திரம் வழியாகச் செல்லும் போது ஆம்பூர் வந்துவிட்டாலே ஆழ்வார்குறிச்சி வந்துவிட்டதாகத்தான் அர்த்தம். காதுகளில் பாம்படங்கள் தொங்க ‘ஆம்பூர் ஆச்சி’ எங்காவது தென்படுகிறாளா? என்று காரிலிருந்து எட்டிப் பார்ப்பேன். ‘ஆம்பூர்’ ஆச்சி ஆம்பூரில் இருப்பதில்லை என்னும் விவரமெல்லாம் அந்தச் சின்ன வயதில் எனக்கு தெரிந்ததில்லை.ஆற்றுப் பாலத்தைக் கடந்து இரண்டு பக்கமும் பச்சைப் பசேலென்ற வயல்கள் நிறைந்த நேர் ரோட்டில் கார் செல்லும் போதெல்லாம் அம்மா மறக்காமல் ‘இந்த ரோட்லதான் என்.எஸ்.கிருஷ்ணன் மணமகள் படம் எடுத்தாரு’ என்று சொல்வாள். ‘இத எத்தன தடவதான் சொல்லுவே?’ என்று நான் சலித்துக் கொள்வதை அவள் பொருட்படுத்தியதே இல்லை. ஊருக்குள் நுழைந்து தெப்பக்குளம் தாண்டி, செண்பக அண்ணனின் சைக்கிள் கடைப் பக்கம் வரும் போது அதுவரை திருநெல்வேலிக்காரியாக அம்மா முழுக்க முழுக்க ஆழ்வார்குறிச்சிக்காரியாக மாறிவிடுவாள். வழக்கமாக அவள் பேசும் பேச்சு, நடை, உடை, பாவனையெல்லாமே கூட மாறிவிடும். தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு வந்து அம்மா கூடவே ஆழ்வார்குறிச்சிக்கு வரும் சித்திக்கும் செண்பக அண்ணன் கடைதான் இலக்கு.

ஆழ்வார்குறிச்சிக்கு அம்மா வந்துவிட்டால் அதுவரைக்கும் ஆச்சி வீட்டுக்கு அவ்வளவாக வந்து எட்டிப்பார்க்காத ஜனங்களெல்லாம் வருவார்கள். முதலில் ‘குட்டை’ ஆச்சி வருவாள். பிறகு ‘பசு’ஆச்சி. இவர்களில் ‘குட்டை’ ஆச்சிக்கான பெயர்க் காரணம் அவளது உயரத்தைப் பார்த்தாலே நமக்கு தெரியும்.நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே என்னை விட குட்டையாக இருந்தாள்.

‘ஏச்சி, பாத்தியா! நான் ஒன்ன விட ஒயரம்’ என்பேன்.

‘இருக்கட்டுமெய்யா. இதுலதான் பேத்தியாமாருகளுக்கு சந்தோசம். நீ பொறந்த ஒடனெ பார்வதிம்மா என் கைலதானெ ஒன்னய குடுத்தா’ என்று சொல்லி எட்டி என் கன்னத்தைப் பிடித்து முத்திக் கொள்வாள். ஆழ்வார்குறிச்சியில் அப்போதெல்லாம் பிரவசத்துக்கு மருத்துவமனைக்கு யாரும் செல்வதில்லையாம். பார்வதியம்மாள் வீட்டுக்கு வந்து பிரசவம் பார்த்தாலே போதும். (இத்தனைக்கும் சிம்ஸன் கம்பெனியினர் ‘பரமகல்யாணி மருத்துவமனை, பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளி, பரமகல்யாணி கல்லூரி’ என ஆழ்வார்குறிச்சி மக்களுக்குக்காக நிறைய செய்திருக்கிறார்கள்.) தன் தாயின் வயதுடைய பார்வதியம்மாளை அம்மாவும், சித்தியும் ‘பார்வதிம்மா’ என்று அழைத்ததில் ஆச்சரியமில்லை. எங்களுக்கும் ‘பார்வதிம்மா’ என்றே சொல்லிக் கொடுத்தார்கள். பார்வதிம்மா அதிகம் பேசுவதில்லை. பதிலையே எதிர்பார்க்காத தொனியில் ‘என்னடே படிக்கே?’ என்று கேட்பதோடு சரி. பார்வதிம்மா பக்கத்தில் வந்தாலே ஊசிமருந்து வாசனையடிக்கும். அதனாலேயே கொஞ்சம் பயமாகவும் இருக்கும்.

ஆழ்வார்குறிச்சியில் ஆச்சியிடமே வளர்ந்த தம்பிக்கு சின்ன வயதில் ரத்தத்தில் உப்பின் அளவு கூடிப் போய் ரொம்பவும் சங்கடப்பட்டான். முகமும், உடலும் வீங்கிப் போனவனுக்கு பாளையங்கோட்டையிலுள்ள சுப்பையா டாக்டர்தான் மருத்துவம் பார்த்தார். கண்டிப்பாக சாப்பாட்டில் உப்பு சேர்க்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். இட்லி, தோசையில் கூட உப்பில்லாமல் பார்த்து பார்த்து பத்தியம் செய்து கண்ணும் கருத்துமாக கவனித்து அவனை வளர்த்தாள் ஆச்சி. உப்பில்லாத பத்தியச் சாப்பாடு போக சுப்பையா டாக்டர் தவறாமல் முட்டை அவித்துக் கொடுக்கச் சொல்லியிருந்தார். முட்டை என்று உச்சரிக்கக் கூட தயங்கும் ஆச்சி, அதற்கென்று ஒரு தனி இருப்புச் சட்டி, கரண்டி, தம்ளர், மற்றும் அடுப்பு ஒதுக்கி ‘குட்டை’ ஆச்சி கையில் ஒப்படைத்து விட்டாள். தம்பி உடல்நலமடைந்து தேறும் வரை அவனை ‘குட்டை’ ஆச்சி அப்படி பார்த்துக் கொண்டாள்.

‘சின்னவன ஒங்க அம்ம பாதி, குட்ட பாதில்லா வளத்தாங்க’. அம்மாவிடம் சொல்வாள் ‘பசு’ ஆச்சி. ‘பசு’ ஆச்சியைப் பார்த்தாலே எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். ‘பசு’ ஆச்சிக்கும் எங்கள் ஆச்சியின் வயதுதான். ஆனாலும் அம்மாவுக்கு அவள் தோழி. ‘அவளுக்கு பசுன்னு பேரு வச்சதே ஒங்க அம்மைதான்.
தெரியும்லா?’ என்றாள் சித்தி. பசுவந்தனையை சொந்த ஊராகக் கொண்ட ‘பசு’
ஆச்சி வாழ்க்கைப்பட்டது ஆழ்வார்குறிச்சியில். பசுவந்தனையைச் சுருக்கி ‘பசு’வாக்கிவிட்டாளாம் அம்மா. அவளை ‘பசு’ என்று அம்மா அழைப்பதிலும், நாங்கள் ‘பசு’ ஆச்சி என்றழைப்பதிலும் மகிழ்வாள். வாயெல்லாம் புகையிலையாக சிதம்பரம் ஜெயராமனின் குரலில் பேசுவாள். ‘திருனோலிலேருந்து இந்த ஆச்சிக்கு என்ன கொண்டாந்திருக்கியெ’ என்பாள்.

யாராவது மண்டையைப் போட்டால் மட்டுமே தாமிரபரணிக்குச் செல்கிற திருநெல்வேலிக்காரர்களாகிய எங்களுக்கு ஆழ்வார்குறிச்சிக்குப் போனால் தினமும் ஆற்றுக் குளியல்தான். தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊற வைத்து பெரிய எவர்சில்வர் தூக்கில் இட்லியும், சட்னியும், சோறும், குழம்புமாகச் சுமந்து கொண்டு ஆற்றுக்கு அழைத்துச் செல்வார்கள் அம்மாவும், சித்தியும். அப்போது கீழ்வீட்டாச்சியும் சேர்ந்து கொள்வாள். நடந்து செல்லும் போது மீண்டும் மணமகள் என்.எஸ்.கிருஷ்ணன் புராணம். ஆழ்வார்குறிச்சி ஆற்றில் வெள்ளம் எப்போதுமே கரைபுரண்டு ஓடும். தலைகீழே உள்ளே பாய்ந்தாலும் கழுத்து நனையாது. மணலில் குழியைத் தோண்டி சௌகரியமாக அமர்ந்து சிந்தித்து கவிதை எழுதலாம். சோப்பு நுரைகளுக்கு மத்தியில் துணியைத் துவைத்துக் கொண்டே அம்மாவுக்கும், சித்திக்கும் கீழ்வீட்டு ஆச்சி ஊர்க்கதைகள் சொல்லுவாள்.

‘பெத்த அம்மைய பூட்டி போட்டு தொறவோல கைல எடுத்துட்டு ஆச்சியும் ஐயரும் சினிமா கொட்டகைக்கு போறாங்க. இவன் வாத்தியான் வேலைக்கு படிச்சு என்னத்துக்குங்கென்?’

இடையில் அண்ணன் தம்பிகள் எங்கள் பக்கம் திரும்பி ‘எல, இந்த ஆத்துலதான் பளனி படம் எடுத்தாங்க. கணேசனும், முத்துராமனும் ஆறோடும்னு பாடுவாங்கல்லா!’ என்பாள். வருடாவருடம் கோடை விடுமுறைக்கு அங்கு செல்லும் போதெல்லாம் இந்தத் தகவலை மறக்காமல் சொல்வதில் அவளுக்கு அப்படி ஒரு பெருமை.

சாயங்கால நேரங்களில் வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்தால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தீ எரிவது தெரியும். இரவு நேரங்களில் மிருகங்கள் அண்டாமல் இருக்க அங்கிருக்கும் மலைவாசிகள் ஆங்காங்கே வைக்கும் நெருப்பு நம் கண்ணுக்கு மினுக்காம் பூச்சி போல புள்ளி புள்ளியாகத் தெரியும். அந்த நேரத்தில்தான் சைலுதாத்தா வீட்டாச்சி வருவாள். பொழுதுபோக்காகவே நிறைய பிள்ளைகள் பெற்றவள் அவள். அந்த களைப்பும், சோர்வும் அவள் கண்களிலும், உடல் தளர்ச்சியிலும் தெரியும். ஆனால் மனதுக்கு பிடித்த மனிதர்களைப் பார்த்தால் உற்சாகம் பொங்க சிரிப்பாள். ‘பிள்ளேளுக்கு லீவு விட்டுத்தான் ஒரு வாரம் ஆச்சுல்லா! அன்னைக்கே வராம அக்காளும், தங்கச்சியுமா சடைவார இப்பொ வந்திருக்கியெ! கூட ரெண்டு நாளைக்கு ஆளாருச்சிலேருந்தா திருனோலிக்காரங்க கொறைஞ்சா போயிருவியெ’. கொஞ்சம் குத்தலும், கிண்டலுமாகப் பேசத் தொடங்குவாள். ஆளாளுக்கு பேசப் பேச நேரம் போவதே தெரியாது. வீட்டுக்குள்ளிருந்து ஆச்சி சாப்பிட கூப்பிடும் போது நன்கு இருட்டியிருக்கும். மலையில் உள்ள தீ அப்போது அணையாமல் உருண்டையாகத் தெரியத் துவங்கியிருக்கும்.

ஆழ்வார்குறிச்சியில் மட்டுமே நான் குடிக்கிற காபியின் சுவைக்குக் காரணம் அங்குள்ள வேல்சாமி காப்பித்தூளா, இல்லை எங்கள் கண் முன்னே தொழுவத்தில் நிற்கிற மாட்டைக் கறந்து காய்ச்சி தருகிற சுத்தமான பசும்பாலா என்பது இன்றுவரை பிடிபடாத ஒன்று. ‘இங்க மட்டும் எப்படி இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு?’ ஒவ்வொரு முறை நான் இதை கேட்கும் போதும் பதிலேதும் சொல்லாமல் ஆச்சி சிரித்து கொள்வாள். சிவசைலம் பால்வாடி ஸ்கூல் டீச்சரான ‘மாம்பழத்தாச்சி’ ஒருமுறை சொன்னாள்.

‘வேல்சாமி காப்பித்தூளும் இல்ல. பசும்பாலும் இல்ல. ஒங்க ஆச்சி கைமணந்தான் அது’.

மாம்பழத்தாச்சியை பேரப்பிள்ளைகள் நாங்கள்தான் சிறு வயதிலேயே அப்படி கூப்பிட ஆரம்பித்து விட்டதாகச் சொன்னார்கள். அப்படியென்றால் அவள் எங்களுக்கு நிறைய மாம்பழங்கள் வாங்கித் தந்திருப்பாளாயிருக்கும். நிறைய படக்கதைகள் உள்ள புத்தகங்களைப் பரிசளிக்கிற மாம்பழத்தாச்சிக்கு குழந்தைகள் இல்லை. ‘அவளே பால்வாடி பிள்ள மாதிரிதானெ இருக்கா’ என்பாள் ஆச்சி. உற்றுப் பார்த்தால் ஆச்சி சொல்வதன் அர்த்தம் விளங்கும். ரொம்பச் சின்னதாகத்தான் இருப்பாள் மாம்பழத்தாச்சி. ஒரு கூடைநாற்காலியில் மாம்பழத்தாச்சி உட்கார்ந்திருக்க ரெட்டை ஜடை போட்டபடி அம்மாவும், சித்தியும் அவளருகில் நின்று கொண்டிருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று இன்றைக்கும் ஆழ்வார்குறிச்சியில் ஆச்சி வீட்டின் சுவற்றில் தொங்குகிறது.

இப்போது நடமாட முடியாமல் இடுப்பொடிந்து படுக்கையிலேயே உட்கார்ந்திருக்கிற ஆச்சியிடம் அவளது தோழிகள் ஒவ்வொருவராக நினைவுபடுத்தி பேசிக் கொண்டிருந்தேன். பழைய நினைவுகளில் மூழ்கி நிறைய பேசினாள்.

‘குட்டையையெல்லாம் லேசுல மறக்க முடியுமா? பசு இப்போல்லாம் இருந்தா வீட்ல கெடப்பாளா? ஓடி வந்திரமாட்டா?’ பேசும் போதே அவளையறியாமல் மகிழ்ச்சி முகத்தில் படர்ந்தது. திடீரென்று குரல் உடைந்து அழத் துவங்கினாள்.

‘எல்லாளுவளுக்கும் வயசாயிட்டு. போயி சேந்துட்டாளுவொ. என்ன குத்த வைக்க வச்சுட்டு போயிட்டாளே ஒங்க அம்மை. போற வயசா அவளுக்கு! சண்டாளிக்கு ஒன் மகன பாக்க குடுத்து வைக்கலயே! அந்தப் பயலுக்கும்லா கொடுப்பின இல்ல! அப்பாவப் பெத்த ஆச்சிய போட்டோலெல்லா பாக்கான் ?’

பொங்கப்படி

மார்கழி மாதம் பிறக்கும் முன்பு, கார்த்திகை மாதத்தின் இறுதியிலேயே பொங்கல் பண்டிகைக்கான ஆயத்தங்கள்ஆரம்பமாகிவிடும். அவற்றில் முக்கியமானது வெள்ளையடிக்கும் பணி. வெள்ளையடிக்கும் மட்டைகளைச் சுமந்த இரும்பு வாளிகளைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் ஆட்கள் நடமாடுவார்கள். பெரும்பாலும் பழைய பேட்டை, பாட்டப்பத்து பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களே வெள்ளையடிப்பு வேலைக்கு வருவார்கள். ராமையா பிள்ளை தனது சிஷ்யர்கள் இரண்டு பேரை எங்கள் வீட்டு வெள்ளையடிப்புக்கு அனுப்புவார். அவர்கள் இரண்டு பேரின் பெயர்களுமே முருகன். முருகா என்றால் இயல்பாக இருவருமே திரும்பிப் பார்ப்பார்கள். வித்தியாசத்துக்காக சின்ன முருகன், பெரிய முருகன் என்றழைப்பதை அவர்கள் இருவரும் அனுமதிப்பதில்லை. இருவரில் யார் பெரியவன் என்பதில் எப்போதுமே ஒரு குழப்பம் நிலவி வந்தது. அதனால் அவர்கள் இருவரும் அறியாத வண்ணம் உருவ அமைப்பின்படி சீனா.முருகன், பேனா.முருகன் என்றழைக்கப்பட்டனர்.

புறவாசலில் தொழுவத்துக்கு அருகிலுள்ள தொட்டியில் சுண்ணாம்பு நீற்றும் போது குமிழ் குமிழாகக் கொப்பளித்து வருவதைப் பார்ப்பதற்காகவே சின்னப் பிள்ளைகள் நாங்கள் போய் நிற்போம். ஆச்சி இருக்கும் வரை அந்தத் தொட்டி, மாடுகளின் கழனித் தொட்டியாக இருந்தது. ஆச்சிக்குப் பிறகு மாட்டுத் தொழுவத்தில் நாய்களே வசித்தன. குறைந்தது ஒருவாரகாலம் சீனா.முருகனும், பேனா.முருகனும் எங்கள் வீட்டு வெள்ளையடிப்பில் ஈடுபட்டிருப்பார்கள். உயரமான பகுதியில் வெள்ளையடிக்கும் போது கீழே ஏணியைப் பிடிக்கும் வேலையை ஏற்றுக் கொள்பவன் ’நெட்டை’ அம்பி. அம்பிக்கு உயரமென்றால் பயம். ஏணியைப் பிடிக்கும் போதும் கூட தலை குனிந்து உடல் நடுங்கியே நிற்பான். இது தெரிந்து வேண்டுமென்றே இரண்டு முருகன்களும் அம்பியை வம்புக்கிழுக்கும் விதமாக ஏதாவது பேச்சு கொடுப்பார்கள். அப்போதும் நிமிராமலேயே பதில் சொல்வான் அம்பி. அதற்கு வேறொரு காரணமும் உண்டு. . . . நிற்க. மற்றொரு காரணம். அசந்து மறந்து அம்பி மேலே பார்த்தால், தற்செயலாக மட்டையைத் தெளிப்பது போல அம்பியின் முகத்தில் சுண்ணாம்பபிஷேகம் செய்து விடுவான் சீனா.முருகன்.

அவரவர் வசதிக்கேற்ப சில வீடுகளில் காவியும், வெகு சிலர் வீடுகளில் டிஸ்டெம்பரும், அநேக வீடுகளில் நீலம் கலந்த சுண்ணாம்புச் சுவர்கள் ஊரெங்கும் மினுங்கத் தொடங்கும். வெள்ளையடிப்புக்கு அடுத்ததாக பொங்கலை ஊருக்குள் கொணர்பவை பனங்கிழங்குகள். பனங்கிழங்கின் வாசனை பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு மாதம் வரை ஊரை விட்டு லேசில் போகாது. அவிக்கப் பட்ட, அவித்து காய வைத்து பின் உரலில் போட்டு இடிக்கப்பட்ட, ஆச்சிமார்களின் கைவண்ணத்தால் தேங்காய், இஞ்சி சேர்த்து உருண்டையாகப் பிடிக்கப்பட்ட பனங்கிழங்குகள் இன்னும் இன்னும் என் நினைவில் மின்னுகிறவை.( ஒரு வாரம் வரை பல்லில் சிக்கியிருக்கும் பனங்கிழங்கின் நாரும் இதில் அடக்கம்.) பனங்கிழங்குகளின் பலாபலன்களும் விசேஷமானவை.

‘பனங்கெளங்க யாராவது வேண்டாம்பானாவே? ஒண்ணே ஒண்ணு தின்னு பாரும். காலைல நீரு எந்திரிக்கவே வேண்டாம். அதே எந்திரி எந்திரின்னு சொல்லிரும்லா!’

பிற்பாடு சென்னையில் ஒரு டிஸம்பர் மாதத்தில் வாத்தியார் பாலுமகேந்திராவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது வடபழனி மார்க்கெட் அருகே ‘ நிறுத்து நிறுத்து’ என்றார். டிரைவரும் காரை நிறுத்தினார். ‘என்ன ஸார்?’ முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்தவன் குழப்பமாகத் திரும்பிப் பார்த்தேன். ‘பனங்கிழங்குடா’ என்று இறங்க முற்பட்டார். அவர் இறங்குவதற்குள் நான் கடையை நோக்கிப் பாய்ந்தேன்.

திருநெல்வேலியில் பொங்கலையொட்டி கரும்புகளின் குவியல் பெருகியிருக்கும் போது ஓலைகளின் வருகை ஆரம்பமாகியிருக்கும். பொங்கலுக்கு முதல் நாள் சொக்கப்பனையடி முக்கில் குவிந்து கிடக்கும் ஓலைகள் மற்றும் மண்பானைகளுக்கு மத்தியில் கைப்பிள்ளைக்கு பால் கொடுத்தபடி ஒரு பெண்மணி வியாபாரம் செய்து கொண்டிருப்பாள். வருடாவருடம் அவள் மடியில் உள்ள கைப்பிள்ளை மாறிக்கொண்டேயிருக்கும்.

‘ஏம் முப்பிடாதி! போன வருசத்த விட இப்பொ அநியாயமால்லா வெல சொல்லுதே!

நீங்களும் போன வருசம் சொன்னதையேதானே சொல்லுதியெ!’

சாமர்த்தியமான வியாபாரப் பேச்சுகளில் முப்பிடாதி மூழ்கியிருப்பாள். அவ்வப்போது மாட்டு வண்டியில் வந்து ஓலைகளையும், பானைகளையும் கொண்டு வந்து போட்டு விட்டுச் செல்லும் முப்பிடாதியின் கணவனின் குரல் எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது.

பொங்கலுக்கு முந்தைய நாளில் திருநெல்வேலி டவுண் மார்க்கெட்டில் நுழைந்து வெளியே வருவது என்பது வீரதீரச் செயல்களில் ஒன்று. ஆண்களும், பெண்களுமாகக் கூட்டம் நிரம்பி வழியும். ஒரு முறை நண்பன் குஞ்சுவை அவன் வீட்டில் மார்க்கெட்டுக்குப் போய் இலை வாங்கி வரச் சொல்லி விட்டார்கள். வழக்கம் போல என்னையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குள் சென்றான் குஞ்சு. மற்ற நேரங்களில் லேசாக கை பட்டாலே ‘எல, ஒடம்பு என்னமா வருது?’ என்று முறைக்கும் பெண்கள், தங்கள் மேல் வந்து மோதி உரசி அழுத்திச் செல்லும் ஆண்களை கண்டுகொள்வதற்கான அவகாசமில்லாமல் பொங்கல் சாமான்கள் வாங்குவதில் மும்முரமாக இருந்தார்கள். உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் மூச்சு திணறி நான் தொலைந்து போய் விட்டேன். குஞ்சுவை அந்தக் கூட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். மதியம் கணேசண்ணன் மஞ்சள் குலை வாங்க மார்க்கெட்டுக்குப் போகும் போது ‘தம்பி நீயும் வாயேன்’ என்று இழுத்துச் சென்றான். மார்க்கெட்டின் நுழைவிலேயே உள்ள புகாரி ஸ்டோர்ஸ் பக்கம் செல்லும் போது உள்ளுக்குள்ளிருந்து வேர்க்க விறுவிறுக்க குஞ்சு வெளியே வந்து கொண்டிருந்தான். ஆச்சரியம் தாங்காமல் ‘ஏல, இன்னுமா நீ எல வாங்கிக்கிட்டு இருக்கே?’ என்றேன். ‘சே, பாத்தியா, மறந்தே போயிட்டேன்’ என்றபடி சந்தோஷமாக மீண்டும் கூட்டத்துக்குள் புகுந்தான் குஞ்சு.

சிறுவயதுப் பொங்கல் நினைவுகளில் முதல் இடம் பிடிப்பது பொங்கல் வாழ்த்து அட்டைகளே. ஏர் உழவன், பொங்கல் பானை, நெற்கதிர்கள், கரும்புத் தோரணம், வணங்கியபடி நிற்கும் நல்லதொரு குடும்பம், வர்ணம் பூசப்பட்ட கொம்புகளுடன் கூடிய காளை மாடுகள், தவிர்க்கவே முடியாத எம்.ஜி.ஆர், சிவாஜி, ப்ரூஸ் லீ, ரஜினிகாந்த் படங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளைத் தாங்கிய கடைகளில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் மொய்த்திருப்பர். எங்கிருந்தோ பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமாக்கள், அத்தைகள், அவர்தம் மக்கள் அனுப்பும் வாழ்த்து அட்டைகளைக் கொண்டு வரும் தபால் காரரை அன்றைக்கும் மட்டும் மதிக்கத் தோன்றும். எனக்கு எத்தனை, உனக்கு எத்தனை என்று அண்ணன் தம்பிகள் வீட்டில் போடும் சண்டைகள், அம்மாக்களுக்கு சந்தோஷம் தருபவையே. நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆழ்வார்குறிச்சியிலிருந்து தாய் மாமாவின் மகனும், மகளும் தங்கள் பிஞ்சு விரல்களால் ‘அன்புள்ள அத்தானுக்கு . . .’ என்றெழுதி வாழ்த்து அட்டைகள் அனுப்புவார்கள். காரணமில்லாமல் கண்ணீர் வரவழைத்த அட்டைகள் அவை. இப்போது பொங்கல் வாழ்த்தட்டைகள் இருக்கின்றனவா?

பொங்கலுக்கு முந்தைய நாள் இரவில் எங்கள் வீட்டின் பரந்த வாசல் முழுவதும் பொங்கல் பானைகள், சூரியன், கரும்பு, பூக்கள் என சித்திர வேலைகள் ஆரம்பமாகும். அம்மாவின் மேற்பார்வையில் விடிய விடிய நடைபெறும் இவ்வேலைகளில் பார்டரில் காவியடிக்கும் வேலையை மட்டும் நான் எடுத்துக் கொள்வேன். எவ்வளவு கவனமாக செய்தாலும் முக்கிய சித்திரத்தில் காவி கலக்கச் செய்து எல்லை தாண்டி விடுவேன்.

‘ஒனக்குத்தான் ஒரு கோடு கூட போடத் தெரியாதெ! ஒன்ன எவன் இதெல்லாம் செய்யச் சொன்னான். போய் அங்கெ உக்காந்து பேசாம வளக்கம் போல வேடிக்க பாரு’.

இரவெல்லாம் விழித்திருந்து அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது பூஜைமணிச் சத்தத்துடன், அம்மாவின் குலவைச் சத்தமும் சேர்ந்து கொண்டு காதுகளில் ஒலிக்கும். பொங்கல் தினத்தன்று காலையில் பொங்கப் படி கொடுக்கும், வாங்கும் படலம் ஆரம்பமாகும். தபால்தந்தி, தொலைபேசி ஊழியர்கள் தொடங்கி துப்புரவு தொழிலாளர்கள் வரை பொங்கல்படி வாங்க வருவார்கள். வழக்கமாக அணியும் யூனிஃபார்மில்லில்லாமல் புத்தாடையுடுத்தியிருப்பதால் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமமாயிருக்கும். பெரியவர்கள் தயாராக சில்லறை மாற்றி வைத்திருப்பார்கள். சின்னப் பிள்ளைகள் பெரியவர்கள் கால்களில் விழுந்து திருநீறு பூசி பொங்கப் படியாக ஐம்பது பைசாவில் தொடங்கி இரண்டு ரூபாய் வரை பெற்றுக் கொள்வார்கள். வசதியானவர்கள் பத்து ரூபாய் வரை கொடுப்பார்கள். ஒரு முறை சிவகாசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஜெயலட்சுமி அத்தை எனக்கு பொங்கல் படியாக நூறு ரூபாய் கொடுத்து விட்டார்கள். ரொம்ப நாட்களுக்கு அந்த நூறு ரூபாயைத் தாளை வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

வருடங்கள் செல்ல சென்னை வாசத்துக்குப் பழகியபிறகு பொங்கல் பண்டிகை மெல்ல மெல்ல விலகி விடை பெற்றுக் கொண்டது. பத்தாண்டுகளுக்கு முன் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களை ஒரு பொங்கல் தினத்தன்று பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு நானும், கவிஞர் அறிவுமதி அண்ணனும் சென்றோம். அப்போது வண்ணதாசன் மேற்கு மாம்பலத்தில் குடியிருந்தார். வீட்டுக்குள்ளே நாங்கள் நுழையவும் சிரித்தபடி ‘பால் பொங்குச்சா, வயிறு வீங்குச்சான்னு பாக்க வந்தீங்களாக்கும்’ என்று வரவேற்றார். திருநெல்வேலிப் பகுதியில் இப்படி விசாரிப்பதுதான் வழக்கம். எனக்கு ஒரு நிமிடம் திருநெல்வேலியில் இறங்கிய மாதிரி இருந்தது. பிறகு அந்த கொடுப்பினையும் இல்லாமல் போனது. வண்ணதாசன் அண்ணாச்சி திருநெல்வேலிக்கே போய்விட்டார். கொடுத்து வைத்த மகராசன்.

இந்த வருடம் பொங்கலன்று முதல் நாள் இரவில் எனது நண்பர் அழகம்பெருமாளிடம் பேசியபோது, ‘எங்க ஊர்ல ஒரு வாரத்துக்கு முன்னாடியே கொண்டாட்டம் ஆரம்பமாயிரும். வீடு பூரா கரும்பு குமிஞ்சு கெடக்கும், பாத்துக்கிடுங்க. இந்தா பாரும். எம்ஜியார் நகர்ல ஒத்தக் கரும்புக்கு வெல பேசிக்கிட்டிருக்கென். தலையெளுத்த பாத்தேரா’ என்று அங்கலாய்த்தார். நாகர்கோவில்காரரின் நியாயமான புலம்பலைப் புரிந்து கொள்ள முடிந்தது. மறுநாள் நான் வழக்கம் போல காலையில் எழுந்து, கேஸ் அடுப்புக் குக்கரில் வைத்த பொங்கல் பானையை வேண்டா வெறுப்பாக வணங்கிச் சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்தேன். திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கைபேசியில் நண்பரொருவர் அழைத்து ‘ஸார், ஹேப்பி பொங்கல்’ என்றார். தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்து விட்டு ‘விஷ் யூ த ஸேம்’ என்றேன்.

சுந்தரம் ஐயங்காரின் கருணை

சில நாட்களுக்குமுன் குஞ்சு ஃபோனில் அழைத்தான்.

‘எல, இந்தப்பய பைக் ஓட்டுதான்’.

‘யாரு கௌரவ்வா?’

‘ஆமா. உனக்கு நான் சொல்லியே தீரணும்னுதான் சொல்லுதேன்’.

‘சரி சரி. அந்தாக்ல ரொம்பவும் சளம்பாதே. இப்ப என்ன? அவன் பின்னாடியும் உக்காந்து ஒரு ரவுண்டு போயிட்டா போச்சு.’

கௌரவ், எட்டாங் கிளாஸ் படிக்கும் குஞ்சுவின் மகன். எனது மருமகன். அவன் பைக் ஓட்டிய செய்தியை எனக்கு அவசர அவசரமாகச் சொல்லி இந்தப்பயல் குஞ்சு மகிழ்வதற்குக் காரணம், எனக்கு பைக் ஓட்டத் தெரியாது என்பதே.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது மெல்ல மெல்ல சைக்கிள் ஓட்டப் பழகினேன். அம்மன் சன்னதியில் A.M.சைக்கிள் மார்ட் என்னும் வாடகை சைக்கிள் கடை ஒன்று உண்டு. அங்கு என்னை விட குள்ளமாக ஒரு சைக்கிள் இருந்தது. அதை வாடகைக்கு எடுத்து எங்கள் வீட்டுக்குள்ளேயே ஓட்டிக் கற்றுக் கொண்டேன். அப்போது அம்மன் சன்னதி முழுக்க மாலை நேரங்களில் சைக்கிள்கள் நிறைந்திருக்கும். G.R.ஸாரிடம் டியூஷன் படிக்க வரும் மாணவர்களின் சைக்கிள்கள் அவை. அந்த சைக்கிள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பாகத்தை இழந்து ஊனமாக நிற்கும். G.R.ஸாரின் மகன் அந்த சைக்கிள்களை எடுத்து தினமும் ஓட்டி கீழே விழுந்து, வரிசையாக அவற்றை உடைத்து வந்தான். ஒரு வருடத்தில் அநேகமாக எல்லா சைக்கிள்களும் தத்தம் அடையாளங்களை இழந்து விதவையாயின. வாத்தியாரின் மகன் என்பதால் ‘ இந்த செறுக்கியுள்ளைய அப்படியே பொத்தாமரைக் குளத்துல கொண்டு தள்ளீறணும்ல’ என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு வெளியே சொல்ல தைரியமில்லாமல் ‘ ஒனக்கில்லாத சைக்கிளா, எடுத்துக்கோடே ‘ என்று ரத்தக் கண்களோடு அந்த மாணவர்கள் சைக்கிள் சாவியைக் கொடுத்துவிட்டு மனதுக்குள் குமுறினர். ஆனால் G.R.ஸாரின் மகனான குஞ்சு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நித்தம் ஒரு சைக்கிளுடன் வாழ்ந்து வந்தான். நான் சின்ன சைக்கிளிலிருந்து பெரிய சைக்கிளுக்கு வந்து சேர்வதற்குள் அவன் இரண்டு கைகளையும் விட்டு ஓட்ட ஆரம்பித்திருந்தான்.

பெரிய சைக்கிள் ஓட்ட ஆரம்பித்திருந்த புதிதில் தினமும் மாலை வேளையில் நானும், குஞ்சுவும் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்ட் போவதை வழக்கமாக வைத்திருந்தோம். இருவருமே வெள்ளை நிற பேண்ட் துணி எடுத்து தைத்திருந்தோம். அதை அணிந்து கொண்டு சும்மா இருப்பதாவது? ஜங்ஷன் வரை சென்று வரலாம். அதுவும் சைக்கிளில் என்றான் குஞ்சு. (நாங்கள் இருப்பது திருநெல்வேலி டவுணில். ஜங்ஷனில்தான் ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் எல்லாம் உள்ளது). நான் முதல் நாளே மனதுக்குள் சைக்கிளில் பலமுறை ஜங்ஷனுக்கு போய் வந்து விட்டேன். குஞ்சு வீட்டுக்கு நான் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு போக குஞ்சு தயாராக இருந்தான். கல்லணை ஸ்கூல் பெண்கள் வருகிற நேரத்தை கணக்கு பண்ணி நாங்கள் கிளம்பவும் எதிரே வந்த சீதாலட்சுமி, ‘என்னல, வெள்ளையும், சொள்ளையுமா கலர் பாக்கக் கெளம்பிட்டேளா?’ என்றாள். குஞ்சுவின் வீட்டில் வேலை பார்த்து வந்த சீதாலட்சுமி எங்களை கொஞ்சம் கூட மதிக்க மாட்டாள். அவளை எங்களால் ஒன்றும் செய்யவும் முடியாது. குஞ்சுவின் தாயார் அவளுக்கு அத்தனை சுதந்திரத்தை கொடுத்திருந்தார். சீதாலட்சுமி இப்படி கேட்கவும் கடுப்பான குஞ்சு ‘எடுல வண்டியை’ என்றான், என்னமோ டாடா சுமோவை எடுக்கச் சொல்கிற மாதிரி. நானும் ஒரு வேகத்தில் சைக்கிளில் ஏறி மிதிக்கத் துவங்க, சீதாலட்சுமியின் மீது இருந்த கோபத்தில் துள்ளி ஏறி பின் சீட்டில் உட்கார்ந்தான் குஞ்சு. அப்போதுதான் நான் டபுள்ஸ் வைக்கப் பழகியிருந்தேன். இந்த மூதேவி உட்கார்ந்த வேகத்தில் வண்டி குடை சாய்ந்தது. ஜனநடமாட்டமுள்ள மாலை நேரத்தில் நடுரோட்டில் சைக்கிளோடு விழுந்தோம். சீதாலட்சுமி கை தட்டி சத்தம் போட்டு சிரித்தாள். ‘இவளுக்கு அம்மா ரொம்ப எடம் கொடுக்காங்கலெ’ என்றபடியே எழுந்தேன். எப்படியாவது அந்த இடத்திலிருந்து சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘மொதல்ல ஒக்காரு’ என்று கோபமாகச் சொல்லி சைக்கிளை ஓட்டத் துவங்கினான் குஞ்சு. குமரகுருபரர் ஸ்கூல் வரை சென்று சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு காலில் பட்டிருந்த அடிக்காகக் கொஞ்சமாக அழுதான். எனக்கு அவ்வளவாக அடியில்லை. வெள்ளை பேண்ட் அழுக்காகி விட்ட கவலை மட்டும் இருந்தது. அந்த சமயத்தில் அதை சொன்னால் குஞ்சு என்னைக் கொன்று விடுவான் என்பதால் சொல்லவில்லை.

ஆறாம் வகுப்பிலிருந்தே நாங்கள் கேட்டுக் கொண்டிருந்த சைக்கிளை பிளஸ்-ஒன் படிக்கும் போதுதான் எங்கள் இருவரது வீட்டிலும் வாங்கிக் கொடுத்தார்கள். அப்போது எங்களுக்கு சைக்கிள் மேலிருந்த காதல் முற்றிலுமாக வடிந்திருந்தது. இருந்தாலும் ஓட்டினோம். எங்களுடன் படித்த நண்பன் பொன்ராஜுக்கு அவனுடைய வீட்டில் சைக்கிள் வாங்கிக் கொடுக்கவில்லை. நான் எனது சைக்கிளை பொன்ராஜிடம் கொடுத்து ஓட்டச் சொல்லிப் பின்னால் உட்கார்ந்து கொள்வேன். பொன்ராஜை வைத்து நான் மட்டுமல்ல. தாராசிங்காலுமே ஓட்ட முடியாது. இரண்டு காரணங்களுக்காக பொன்ராஜ் ‘தக்காளி’ என்றழைக்கப்பட்டான். ஒன்று, பொன்ராஜின் தளதள உடம்பு. இரண்டு, பொன்ராஜின் அப்பா தச்சநல்லூர் காய்கறி மார்க்கெட்டில் ஹோல்ஸேல் தக்காளி கடை வைத்திருந்தார். பொன்ராஜை சைக்கிளை ஓட்டச் சொல்லி நான் பின்னால் உட்கார்ந்திருப்பதால் என் மீது வெயில் அடித்ததேயில்லை.

சைக்கிளிலிருந்து மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆசை வந்தது குஞ்சுவுக்கு. அவன் அப்பா ஒரு சுவேகா மொபெட் வைத்திருந்தார். அவருக்கு தெரியாமல் அதை எடுத்து வருவான். நாங்கள் இருவரும் ரவுண்ட் அடிப்போம். சுவேகா கம்பெனிக்காரர்களே தங்கள் தயாரிப்பை மறந்துவிட்ட பின்னரும் குஞ்சுவின் தந்தை அந்த வண்டியை விடாமல் போஷித்து வந்தார். பிறகு மனமே இல்லாமல் அதை கொடுத்துவிட்டு ஒரு சில்வர் பிளஸ் வாங்கினார். அதிலும் நாங்கள் ரவுண்ட் அடித்தோம். பிறகு குஞ்சு பைக் வாங்கினான். அதிலும் நான் பின்னால் அமர்ந்து போனேன். என்னைப் போலவே சைக்கிளோடு திருப்தியடைந்து விட்ட வேறு நண்பர்கள் சிலரும் இருக்கத்தான் செய்தார்கள். அப்படி இருந்த நண்பன் ராமசுப்ரமணியன். ஒரு நாள் மீனாட்சியும், நானும் ராமசுப்ரமணியனுக்காகக் காத்துக் கொண்டு ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது, நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் ராமசுப்ரமணியன் ஒரு பைக்கில் சென்றான். கூப்பிடக் கூப்பிட எங்களை மதிக்காமல் வேகமாக எங்களைத் தாண்டிச் சென்றது வண்டி. ‘என்னலெ, ஒங்க மாமன் திமிர் புடிச்சு போயி போறான்?’ என்றேன் மீனாட்சியிடம். ‘ஒண்ணும் கவலப்படாதீங்க சித்தப்பா. அவாள் அந்த முக்குல விளுந்து கெடப்பாக. போய் பாப்போம்’ என்றான் மீனாட்சி. பயலுக்கு கருநாக்கு. பால்கடை பக்கத்தில் பாதாளச் சாக்கடைக்குத் தோண்டியிருந்த குழியிலிருந்து பைக்கையும், ராமசுப்ரமணியனையும் வெளியே எடுத்து அப்போதுதான் போட்டிருந்தார்கள். ‘எங்களை பாத்துட்டு பெரிய இவரு மாதிரி நிக்காம போனேளே. அப்படி என்ன அவசரம்? இது தேவைதானா மாமா?’ என்று கேட்டான் மீனாட்சி. ‘தூரப் போலெ. உங்களை பாத்துட்டு நிறுத்தனும்னுதான் நெனச்சேன். எது க்ளெட்ச்சு, எது பிரேக்குன்னு தேடிக் கண்டுபிடிக்கிறதுக்குள்ள இங்கே வந்து விளுந்துட்டேன்’ என்றான் ராமசுப்ரமணியன், வலியில் முனகிக் கொண்டே.

குஞ்சு பைக்கிலிருந்து ஜீப்புக்கு போனான். நானும் கூடவே போனேன். இந்த முறை எனக்கு பிரமோஷன். பின் ஸீட்டிலிருந்து முன் சீட்டுக்கு. பிறகு கார் வாங்கினான். ஒரு நாளும் அதை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியதே இல்லை. அவன் ஓட்ட நான் உட்கார்ந்து போவதிலேயே சுகம் கண்டு கொண்டேன். எங்கள் வீட்டுக் கார்களையும் விட நான் அதிகமாக பயணித்தது குஞ்சுவின் கார்களில்தான். சென்னையில் நண்பர்கள் பலரும் பைக், கார் ஓட்டுகிறார்கள். பார்ப்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. சுந்தர்ராஜன் மாமா, மனோ,செழியன், திரைப்பட இணை இயக்குனர் பார்த்திபன், உதவி இயக்குனர் பத்மன் மற்றும் என் தம்பி சிவா போன்றோர் என்னை பின்னால் வைத்துக் கொண்டு பைக் ஓட்டுகின்றனர். நண்பர் ஷாஜி என்னிடம் பேசிக் கொண்டே எப்போவாவது சாலையைப் பார்த்து கார் ஓட்டுகிறார். ‘என்னைப் போல் ஒருவர்’ என்று நான் சந்தோஷமாக நம்பிக் கொண்டிருந்த வ.ஸ்ரீ அவர்களும் கார் ஓட்டி என் நம்பிக்கையில் மண்ணை அள்ளி போடுகிறார். வாழ்க்கையின் பல கட்டங்களில் எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது ஆருயிர் நண்பர் ஜெயமோகன்தான் இந்த விஷயத்தில் எனக்கு ஆறுதலாக இருக்கிறார். சைதன்யாவின் அப்பாவுக்கு சைக்கிளே ஓட்டத் தெரியாது

சென்னைக்கு வந்த பிறகு நானும் மோட்டார் ஸைக்கிள் ஓட்டும் வாய்ப்பு வந்தது. கியர் இல்லாத மொபெட். டி.வி.எஸ்.50. அந்த மொபெட்டுக்கு சாலிகிராமத்தை விட்டால் வேறு ஒரு இடமும் தெரியாது. இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் வாலிப வயது மகன் பைக் ஓட்டிக் கொண்டு போய் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அந்தத் துக்க வீட்டுக்குச் சென்றுவிட்டு மனம் உடைந்த நிலையில் நண்பர் சீமான் என்னை தொலைபேசியில் அழைத்து அந்த செய்தியைச் சொல்லி வருந்தினார். ‘ஐயாமகனே, வண்டியெல்லாம் பாத்து ஓட்டுங்க. ஒண்ணும் சரியாயில்ல’ என்றார். நான் பதிலுக்கு, ‘அதெல்லாம் கவலைப்படாதீங்க அராஜகம். நம்ம வண்டி ஏ.வி.எம். ஸ்டூடியோவைத் தாண்டி திருப்பினாலும் போகாது’ என்றேன். அந்தச் சூழலிலும் வெடித்துச் சிரித்தார் சீமான்.

கியர் இல்லாத டி.வி.எஸ்.50 முன்பு ஓட்டினேன். இப்போது அவ்வப்போது வீட்டம்மாவின் டி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் ஓட்டுகிறேன். இதற்கும் கியர் இல்லை. அந்த வகையில் டி.வி.எஸ் அதிபர் சுந்தரம் ஐயங்காருக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். எங்க ஆத்துக் காரரும் கச்சேரிக்கு போகிறாரென்று என்னையும் மோட்டார் வாகனம் ஓட்டுவோரின் பட்டியலில் சேர்த்து என் மானம் காத்தவர் அவரே.

லோகநாயகி டீச்சரும் , லலிதா ராகமும்

“சயின்ஸ் எடுக்க வந்தவ சயின்ஸ் மட்டும் எடுக்க வேண்டியதுதானே. எதுக்கு தேவையில்லாத விஷயத்துலயெல்லாம் தலையிடுதா? நான் போயி அவ பாடத்துல புகுந்து பேசுதேனா? அவ அவ வேலையை அவ அவ பாக்கணும்”.

நான்காம் வகுப்பு படிக்கும் போது பாட்டு டீச்சர் தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு ஆர்மோனியத்தைத் திறந்தது இன்னும் நினைவில் உள்ளது. லோகநாயகி மிஸ்ஸுக்கு இது காதில் விழுந்திருக்கும்தான். ஆனால் பதிலேதும் சொல்லவில்லை. வீட்டுப்பாடம் செய்யாத, சுழிச்சேட்டை பண்ணுகிற
பிள்ளைகளையே கடிந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாதவர்கள் இதற்கு ஏதாவது பதில் சொன்னால்தான் ஆச்சரியப்படவேண்டும். அன்று பாட்டு டீச்சர் வருவதற்கு சற்று தாமதமானது. எட்டே எட்டு பேர்தான் என்றாலும், நாங்கள் போட்ட கூப்பாட்டில் ஸ்டாஃப் ரூமிலிருந்து லோகநாயகி மிஸ் வந்து விட்டார்கள். என்னப்பா, சினிமாக் கதையா? எனக்கும் சொல்லுங்களேன் என்றபடியே மிஸ்
உள்ளே வந்தார்கள். பேசுகிற முதல் வாக்கியத்திலேயே மற்றவர்களின் உள்ளம் கவர்கிற சிலரை பார்க்கும் போது இன்றும் எனக்கு லோகநாயகி மிஸ்தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். பாட்டு டீச்சர் வருவதற்கு முன்பே ஆர்மோனியத்தை எடுத்துக் கொண்டு வைத்து விட்டு சென்றிருந்தாள் ஆயா அக்கா. முதலில் மிஸ் அதை எடுத்து தூசியைத் துடைக்கிறார்கள் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். மெல்ல மிஸ்ஸின் விரல்கள் ஆர்மோனியத்தின் கட்டைகளில் தவழ ஆரம்பித்தன. ஒரு பத்து நிமிடம் டீச்சர் தலை நிமிராமல்
வாசித்தார்கள். மிஸ் அளுதாங்க என்றான் நண்பன் குஞ்சு. எனக்கு அது முக்கியமாகப் படவில்லை. இதை எங்கேயோ கேட்டிருக்கிறோமே!. என் எண்ணம் முழுக்க அவர்கள் வாசித்த ஓசையைத் தொடர்ந்தே செல்கிறது. மிஸ் தலை நிமிரும் வரை பேசாமல் இருந்தோம். என்னைப் பார்த்தால் கேட்டு விடுவது எனும் முடிவோடு நான்.

என் மூஞ்சி ஒரு தினுசாக இருப்பதை கவனித்து விட்டு, என்னடே முளிக்கே? என்றார்கள்.

‘நீங்க வாசிச்ச மாதிரியே எங்க பெரியப்பா பாடி கேட்டிருக்கேன். ஆனா அது வேற மாதிரியிருக்கும்’ என்றேன்.

‘அப்படியா? அது என்னதுடே? பாடு பாப்போம்’ என்றார்கள். சத்தியமாக அப்போது எனக்கு ஒரு இழவும் தெரியாது. இதே மாதிரிதான் இருக்கும். ஆனா அது வேற என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன். மிஸ் சாதாரணமாக ஆர்மோனியத்தை வாசித்து, இதுதானே உங்க பெரியப்பா பாடுறது? என்றார்கள். ‘ஆமா மிஸ். இதேதான்’ என்றேன். ‘இது நான் வாசிச்சது இல்லியா!’. என் முழி அவர்களுக்கு சிரிப்பை வரவழைத்திருக்க வேண்டும் . சிரித்தபடியே , “ரெண்டுமே பக்கத்துப் பக்கத்து ராகம் . நான் வாசிச்சது லலிதா. உங்க பெரியப்பா பாடுனது மாயாமாளவகெளளையா இருக்கும் ” என்றார்கள். அப்படித்தான்
சொல்லியிருக்க வேண்டும் என்று இப்போது எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் அந்த வயதில் எனக்கு ராகங்களைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. இதற்குள் பாட்டு டீச்சர் வந்து விட மிஸ் அவசரமாக எழுந்து டீச்சரை வணங்கி வழி விட்டுச் சென்றார்கள். இதற்கு பின் தான் பாட்டு டீச்சர் முதலில் நான் குறிப்பிட்ட வரியைச் சொன்னார்கள்.

பாட்டு டீச்சரை பற்றி இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும் . இரண்டாண்டுகள் எங்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தார்கள் . தீராத விளையாட்டுப் பிள்ளை, தாயின் மணிக்கொடி பாரீர் , இவை இரண்டைத் தவிர வேறு எந்த ஒரு புதிய பாடலையும் அவர்கள் எங்களுக்கு சொல்லித் தந்ததில்லை. அவர்கள் ஒன்றும் வைத்துக் கொண்டு வஞ்சனை பண்ணவில்லை என்கிற விவரம் ரொம்ப நாள் கழித்தே எனக்குத் தெரிய வந்தது .

இது நடந்து ரொம்ப வருடங்களுக்குப் பின், மேற்சொன்ன மாயாமாளவகெளளை – லலிதா வித்தியாச விவரம், இளையராஜா மூலமே எனக்குத் தெரிய வந்தது. உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் “இதழில் கதை எழுதும் நேரமிது” என்ற பாடலை அட்டகாசமாக லலிதா ராகத்தில் அமைத்திருந்தார் ராஜா. இப்போது நான் ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். மெல்ல பிடிபட்டது.
மாயாமாளவகெளளையில் பஞ்சமம் இல்லையென்றால், அது லலிதா. அட . .இதுதானா! ஆச்சரியமும், சிறுவயதில் நடந்த சம்பவத்தின் நினைவுகளும், எல்லாவற்றுக்கும் மேல், அத்தனை வருடங்களுக்கு முன்பு லோகநாயகி மிஸ் வாசித்த அதே ராகத்தை இன்று நான் வாசிக்கிறேனே என்கிற சொல்ல முடியாத சந்தோஷமும் என்னை ஆட்கொண்டது. மாயாமாளவகௌளையையும், லலிதாவையும் சுமந்து கொண்டு எனது இசையாசிரியர் கிருஷ்ணன் ஸாரைப் பார்க்கப் போனேன்.

பொதுவாக எனது இசை வகுப்புகளில் கிருஷ்ணன் ஸார் எனக்கான பாடத்தை வயலினில் வாசிக்க, அதை அப்படியே வாங்கி ஹார்மோனியத்தில் வாசிப்பதோடு எனக்கான வகுப்பு முடிந்து விடும். அதன் பின் பொதுவாக ராகங்களைப் பற்றிய என்னுடைய சந்தேகங்களுக்கு கிருஷ்ணன் ஸார் விளக்கமளித்து தெளிவுபடுத்துவார். அவர் முன்னால் கொண்டு போய் மாயாமாளவகௌளை, லலிதா இரண்டையும் வைத்தேன். ‘ஏய் . . . இந்த லலிதா, மாயாமாளவகௌளைக்கு கூடப் பொறந்த தங்கச்சில்லா!’ என்றார். உடனே வயலினை எடுத்துக் கொண்டார். மிக எளிமையாக இந்த இரண்டு ராகங்களுக்குமான வித்தியாசத்தை வாசித்துக் காட்டினார். ‘இப்பொ வெளங்குதா?’ என்றவர் என் பதிலுக்குக் காத்திராமல், ‘ஒனக்குத்தான் இன்னொரு வாத்தியார் இருக்காம்லா! அவன்ட்டதான் ஒரு வண்டிக்கு இருக்குமே. போய் கேளு’ என்றார். அவர் சொன்ன அந்த இன்னொரு வாத்தியார் இளையராஜா.

இளையராஜாவின் திரையிசைப்பாடல்களைக் கேட்டே ராகங்கள் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டவன் நான் . அந்த வகையில் லலிதாவிலிருந்து பஞ்சமத்தைத் தொட்டு மாயாமாளவகெளளையை வாசிக்கிறேன் . “மாசறு பொன்னே வருக” , தேவர்மகன் பாடல் பேசுகிறது . “மஞ்சள் நிலாவுக்கு” , முதல் இரவு படப் பாடல் குதியாட்டம் போடுகிறது . “மதுர மரிக்கொழுந்து வாசம்” , எங்க ஊரு பாட்டுக்காரன் பாடுகிறான் .(அதுவும் இந்த பாடலின் சரணத்தில் ராஜா விளையாடியிருக்கும் விளையாட்டு , அபாரமானது) . கர்நாடக சங்கீதத்தின் அடிப்படை “ஸரிகமபதநி” ஸ்வர வரிசைகளை சொல்லிக் கொடுக்கப்படும் இந்த ராகத்தில் ராஜா போட்டிருக்கும் பாடல்கள் எண்ணிக்கையிலடங்காதவை . ஒன்று வாசிக்க ஆரம்பித்தால் இன்னொன்று .வந்து விழுந்த வண்ணம் இருக்க , மீண்டும் லலிதாவுக்கு திரும்புகிறேன் . கண்களை மூடியபடி வாசிக்க ஆரம்பிக்கிறேன். லோகநாயகி மிஸ்ஸின் முகம் ஞாபகத்திற்கு வருகிறது. பாட்டு டீச்சரின் முகமும்தான்.

சொக்கப்பனை

கார்த்திகை தீபத்துக்கு முந்தின நாள் காலையிலேயே அம்மன் சன்னதியிலுள்ள எங்கள் வீட்டுக்கு முன்பாக நெல்லையப்பர் கோயில் ஊழியர்கள் வெட்டப்பட்ட ஒரு பனைமரத்தை கொண்டு போட்டுவிடுவார்கள். இதேபோல் சுவாமி சன்னதி முக்கிலும் ஒரு பனைமரம் போடப்படும். சுவாமி சன்னதி முக்கு இன்றைக்கும் ‘சொக்கப்பனையடி முக்கு’ என்றே அழைக்கப்படுகிறது. கார்த்திகை தீபம் வரை ஒட்டுமொத்த திருநெல்வேலி ஊரிலுள்ள மக்களனைவரும் இவ்விரண்டு சொக்கப்பனைகளையும் பற்றி பேசிக் கொண்டிருப்பர்.

‘மக்கா, இந்த வருசம் அம்மன் சன்னதி சொக்கப்பானை சாமி சன்னதிய விட சைசு கூட .. பாத்தியா?’

‘வருசா வருசம் இதையேத்தான் சொல்லுதெ . . . எனக்கென்னமோ ஒரே மாதிரிதான் தெரியுது.’

‘ஒனக்கு மயிரத் தெரியும் . . நான்லாம் ஒரு தடவ பாத்தெம்னா அளவ மனசுலயே குறிச்சுருவென். தெரியும்லா!’

சொக்கப்பனையை சொக்கப்பானை என்று சொல்லும் மனிதர்கள் இன்றும் திருநெல்வேலியில் இருக்கிறார்கள். கார்த்திகை தீபம் பெண்களுக்கான பண்டிகை என்றாலும் அது சிறுவர்களுக்கு விசேஷமானது. தீபாவளிக்கு வாங்கிய பட்டாசில் மிஞ்சியதை கார்த்திகை தீபத்துக்காக சிறுவர்கள் சேமித்து வைத்திருப்பர். அவற்றை மிஞ்சியது என்று சொல்வதுகூட தவறுதான். பெற்றோர்தான் அவற்றை பிள்ளைகளுக்குத் தெரியாமல் எடுத்து வைத்திருப்பார்கள். தீபாவளியன்று வெடிக்கும் போதே சிலர் சொல்லிப் பார்ப்பார்கள்.

‘ஏ மூதி . . எல்லாத்தையும் கொளுத்தி கொண்டாடிராதெ. கார்த்தியலுக்கு இருக்கட்டும்’.

கார்த்திகையை ‘கார்த்தியல்’ என்றே திருநெல்வேலி மக்கள் உச்சரிப்பார்கள். ‘என்ன அண்ணாச்சி! கார்த்தியல்லாம் செறப்புத்தானா?’ என்று கேட்கும் திருநெல்வேலி மக்களை இன்றைக்கும் பார்க்கலாம். தீபாவளிக்கு துணியெடுக்கும் போதே கார்த்திகைக்கும் சேர்த்து துணியெடுப்பவர்களும் உண்டு. அப்படி எடுக்காதவர்கள் கண்டிப்பாக கார்த்திகை தீபத்தன்று தீபாவளிக்கு எடுத்த உடையையே அணிந்திருப்பார்கள்.

கார்த்திகைக்கு முதல் நாள் போடப்பட்ட பனையின் மேலேறி விளையாடுவதற்கென்றே சிறுவர் கூட்டம் கிளம்பி வரும். காலையிலிருந்து அன்று இரவு வரை கீழே கிடக்கும் பனையை சுற்றி வந்து ஏறி மிதித்து விளையாடுவார்கள். நள்ளிரவில் பனை தனியாக கவனிப்பாரின்றி இருட்டுக்குள் கிடக்கும். மறுநாள் காலையிலேயே பனையில் துளை போடப்படும் சத்தம் கேட்கத் துவங்கும். நன்கு சீவப்பட்ட மூங்கில் துண்டுகளை குறுக்குவாக்கில் போடப்பட்ட துளைகளில் பொறுத்தி அடிப்பார்கள். அம்மன் சன்னதி முக்கில் தோண்டப்பட்ட குழியில் பனை இறக்கப்பட்டு அதைச் சுற்றி ஓலை கட்டப்பட்டு அதன் மேல் நீளமான மஞ்சள் நிறத் துணி போர்த்தப்படும். அதுவரை வெறும் பனையாக இருந்த பனை எல்லோரும் வணங்கிச் செல்லும் சொக்கப்பனையாகி விடும்.

கார்த்திகை தீபத்தன்று மாலையில் வீடுகளில் எப்போதும் ஏற்றும் குத்துவிளக்கு போக சிறுசிறு விளக்குகள் ஏற்றப்பட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும். அரிசி மாவுடன் வெல்லம் கலந்து உருட்டி, அதில் குழியிட்டு எண்ணெய் ஊற்றி, பஞ்சுத்திரியிட்டு ஏற்றிய ‘மாவிளக்கு’, மற்ற விளக்குகளுக்கு தலைமை தாங்கும். அன்று இரவே அந்த மாவிளக்கு, ‘பிரசாதம்’ என்னும் பெயரில் பலகாரமாகிவிடும். அதில் ஒன்றை தின்றாலே வயிறு திம்மென்று ஆகிவிடும். ராமையா மாமா அதிலுமே மூன்று தின்பார். நான்காவது வைக்கும் போதுதான் அரைகுறையாக மறுப்பார். ‘வேண்டாம் மாப்ளே, வீட்ல வேற ரெண்டு தின்னேன். வச்சிருங்க, காலையில வேணா வந்து சாப்பிடுதென்’.

காய்ந்த கோரப்புல்வகையைச் சேர்ந்த ‘சுளுந்து’ எனப்படும் சூந்துக்கட்டை கொளுத்தி கையில் பிடித்துக் கொண்டு சிறுவர்களின் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகும். வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் அணையாமல் அவ்வப்போது எண்ணெய் ஊற்றிப் பார்த்துக் கொள்வதற்காக அநேகமாக எல்லா வீட்டு கன்னிப் பெண்களும் தத்தம் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் அவர்களின் உடை பட்டுப்பாவாடை, பட்டுச்சேலைதான். ஒருசிலர் தரைச்சக்கரமும், புஸ்வாணமும் கொளுத்துவதுண்டு. அம்மன் சன்னதியிலும், சுவாமி சன்னதியிலும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து ஓரக்கண்ணால் மேய்ந்தபடியே இளைஞர்களின் ஊர்வலம் ஆரம்பமாகும்.

‘வெள்ளத்துல அடிச்சுட்டு வந்த மாதிரி எல்லாவளும் வெளியெ வந்துட்டாளுவொளெ.’

‘ஆமாடே. நமச்சிவாயம் பிள்ள பேத்தி சமஞ்சு மூணு வருசத்துக்கப்புறம் இன்னைக்குத்தானெ வெளியெ வந்து நிக்கா’.

‘அவளவிட அவ அம்மல்லா கெடந்து ரொம்ப நெளியுதா. கவனிச்சியா?’

ரகசிய கேலிப் பேச்சுக்களுடன் நகர்ந்து சொக்கப்பனை பக்கம் கூடத் துவங்குவர். ஒன்பது மணியளவில் ஆட்கள் நடமாட முடியாதபடி சொக்கப்பனை முன் கூட்டம் நிரம்பி நிற்கும். பத்துமணியை நெருங்கும் போது மேளதாளத்துடன் பட்டர் வந்து சேருவார். சரியாக மின்சாரம் துண்டிக்கப்படும். இருட்டுக்குள் பனையின் உச்சியை நோக்கி ஒரு சிறு வெளிச்சம் செல்வது தெரியும். மேலே சென்று தீபாராதனை காட்டப்படும்போது பட்டரின் முகம் லேசாகத் தெரியவரும். பட்டர் தீபாராதனையை மூன்று சுற்று சுற்றிவிட்டு நெல்லையப்பர் இருக்கும் திசை நோக்கி காட்டிவிட்டு பனையின் உச்சியில் வைத்த மறு நொடியே கீழே ஓலையில் தீ வைக்கப்படும். திகுதிகுவென எரியத் தொடங்கும் நெருப்பின் வெக்கை தாங்காமல் ஜனங்கள் சில அடிகள் பின்னோக்கி நகருவார்கள். எங்கள் வீட்டின் மாடியில் நின்று பார்க்கும் போது கீழே நின்று கையைக் காட்டுவான் குஞ்சு. என்னமோ அவன் ஒருவனே சொக்கப்பனை கொளுத்திய தோரணையில் அவனது கையசைப்பு இருக்கும். எரிந்து முடிந்த சொக்கப்பனை, அரைமணிநேரம் போராட்டத்துக்குப் பிறகு, கோயில் ஊழியர்களால் வெட்டிச் சாய்க்கப்படும். பனை வீழ்ந்தவுடன் ஆளாளுக்குப் பாய்ந்து அதில் சொருகப்பட்டிருக்கும் மூங்கில் துண்டுகளை பிடுங்கி எடுப்பார்கள். அந்தக் குச்சியில் கொடி படர்ந்தால் நன்கு வளரும் என்று ஒரு நம்பிக்கை.

சொக்கப்பனை கொளுத்தி முடிந்தவுடன் உச்சினிமாகாளி அம்மன் கோயில் பூஜை மணி அடிக்கத் துவங்கும். கோயிலின் முன் ஒரு சிறிய பப்பாளி மரம் நடப்பட்டு அதில் ஓலை சுற்றி கொளுத்தப்படும். பெரிய சொக்கப்பனையின் குட்டி போல இதையும் அம்மன் சன்னதி மக்கள் வணங்குவர். எரியும் போதே ஓலைப்பட்டாசு போல சின்ன வெடிகளை தீக்குள் போட்டு வெடிக்கச் செய்யும் இளைஞர்களை ‘சவத்து மூதிகளா’ என்று பெரியவர்கள் ஏசுவார்கள். ஆனாலும் இந்தச் சேட்டையைச் செய்ய இளைஞர்கள் தவறுவதில்லை.

வருடாவருடம் சொக்கப்பனையின் போது ஒரு பட்டரை கொளுத்திவிடுவார்கள் என்றே நான் வெகுகாலம் நம்பி வந்தேன். எனது சந்தேகத்தை குஞ்சுவும் ஊர்ஜிதம் செய்தான். ‘ஒனக்கு தெரியாதா? அதுக்குன்னே கோயில்ல இருந்து பட்டர்களை வளக்காங்க’ என்று கூசாமல் சொல்லியிருந்தான். விவரம் தெரிந்த வயதில் கார்த்திகை தீபம் முடிந்த ஓரிரு நாளில் நானும், குஞ்சுவும் போத்தி ஹோட்டலில் ரவா தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கணேச பட்டர் வந்து எங்களருகில் உட்கார்ந்து பன்னீர் பக்கோடா ஆர்டர் பண்ணி சாப்பிட்டார். அந்த வருடம் அவர்தான் சொக்கப்பனை கொளுத்தியவர். நான் மேஜைக்கடியில் அவர் கால்களையே பார்த்தேன்.

பல வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடம் கார்த்திகை தீபத் திருநாளன்று திருநெல்வேலியில் இருக்க நேர்ந்தது. ஊர் முழுக்க முதல் நாளிலிருந்தே ‘கார்த்தியல்’ பேச்சை கேட்க முடிந்தது. பனை வந்து இறங்கியதிலிருந்து, மறுநாள் இரவுவரை நான் பார்த்து, கேட்டு வளர்ந்த அதே விஷயங்கள் என் கண் முன்னாடி மறுபடியும் நடந்தேறின. ஒன்பது மணிவாக்கில் மாடிக்குச் சென்று நின்றபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆண்களும், பெண்களுமாக கூட்டம் நெருக்கியடித்தபடி நின்று கொண்டும், ஆங்காங்கே வீட்டு வாசல்களில் உட்கார்ந்தபடியும் பட்டரை எதிர்பார்த்தபடி காத்திருந்தனர். சினிமா தியேட்டரில் படப்பெட்டி வரும் போது இருக்கும் பரபரப்பு, பட்டர் வரும் போது இருந்தது. மின்சாரம் சரியாகத் துண்டிக்கப்பட, சில நொடிகளில் சொக்கப்பனை கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. வெக்கை கலந்த வெளிச்சத்தில் கண்களை சுருக்கியபடி நின்று கொண்டிருந்தேன். கீழே கூட்டத்திலிருந்து ஒரு குரல் ‘மாமா’ என்றது. குரல் வந்த திசையை பார்த்தேன். தானே சொக்கப்பனை கொளுத்திய தோரணையில் குஞ்சுவின் மகன் என்னைப் பார்த்து கையசைத்தான்.

சில்வர் டோன்ஸ்

கோயில் விசேஷங்களுக்கும் மெல்லிசைக் கச்சேரிகளுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. அது நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழாவாக இருந்தாலும் சரி, புட்டாரத்தி அம்மன் கோயில் கொடை விழாவாக இருந்தாலும் சரி. கண்டிப்பாக அந்தந்த கோயிலின் வசதிக்கேற்ப சிறிய, பெரிய மெல்லிசைக் குழுக்களை அமர்த்தி கச்சேரி நடத்துவார்கள். பிட் நோட்டிஸிலிருந்து போஸ்டர்கள் வரை கச்சேரி பற்றிய அறிவிப்பை ஊரெங்கும் காணலாம். ‘மக்கா இன்னைக்கு ராத்திரி லாலா சத்திர முக்குல பிரபாகரன் கச்சேரி இருக்கு. சீக்கிரமே போகணும். மறந்துராதே’ என்று இளைஞர்கள் காலையிலேயே பேசிக் கொள்வார்கள். வெளியூராட்கள் யாராவது இவர்கள் பேசுவதை கேட்க நேர்ந்தால் இவர்கள் பாடகர்களோ, இசைக் கருவி ஏதேனும் இசைப்பவர்களோ என்று சந்தேகம் வந்து விடும். கச்சேரி கேட்பதற்குத்தான் அவர்கள் இவ்வளவு உற்சாகமாக காலையிலேயே தயாராகிறார்கள் என்கிற விவரம் தெரிய வாய்ப்பில்லை.

பிடரி வரை புரளும் ஹிப்பி முடியும், ஏழுவயதுச் சிறுவன் போய் மறைந்து கொள்ளும் அளவுக்கு பெரிதான பெல்பாட்டம் பேண்டும், கையில் வெள்ளி காப்பும், முகம் பார்க்கும் சிறிய கண்ணாடி சைஸிலுள்ள ஸ்டைலான அகல ஃபிரேம் மூக்குக் கண்ணாடியும் அணிந்த இசைக் கலைஞர்களின் ‘சில்வர் டோன்ஸ்’ குழுவின் கச்சேரி நான் சின்னப் பையனாக இருக்கும் போது நெல்லைப் பகுதியில் மிகவும் பிரபலம். பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள் என்று எத்தனையோ பேர் அந்த குழுவில் இருந்தாலும் அந்த வயதுக்கேயுரிய ரசனையோடு எனக்கு டிரம் வாசிப்பவரின் மீதுதான் காதல். அகலக் காலர் வைத்த சட்டைப் பித்தான்களைத் திறந்து விட்டு கழுத்துச் சங்கிலி தெரிய ஸ்டைலாக குச்சிகளை சுழற்றியபடியே அவர் டிரம் வாசிக்கும் போது டிரம்முடன் சேர்ந்து என் மனமும் அதிரும். கச்சேரி முடியும் வரை அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன். தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்து வெங்கடாசலம் கம்பவுண்டரின் மகளான சிவகாமி அக்காவும் டிரம்மரை மட்டுமே ரசித்து பார்த்துக் கொண்டிருந்ததை ஒரு முறை கவனித்தேன்.

அனேகமாக எல்லா கச்சேரிகளும் இரவு பத்து மணிக்கு மேல்தான் ஆரம்பமாகும் என்றாலும் எட்டு மணியிலிருந்தே கச்சேரிக்கான களை கட்டிவிடும். கச்சேரிக்கு முன்னுள்ள நிகழ்ச்சி பெரும்பாலும் உள்ளூர் சொற்பொழிவாளரின் பிரசங்கமாகத்தான் இருக்கும். நேரம் ஆக ஆக கச்சேரிக்கான ரசிகர்களின் கூட்டம் அதிகமாகி, சாலை நிறைய ஆட்கள் மெல்ல மெல்ல வந்து உட்காரத் துவங்குவர். கடைகளின், வீடுகளின் மாடிகள், அடைத்த கடைகளின் நடைப்படிகளென எங்கும் ஜனத்திரள் குவியும். பிரசங்கி அதிகப்பிரசங்கியாகும் பரிதாபத்தருணமிது. தன் பேச்சுக்காக கூடும் கூட்டமல்ல இது என்னும் உண்மையை அவர் மனம் நம்ப மறுக்கும். பேச்சின் கடைசியில் துருப்புச் சீட்டாக தான் மனப்பாடம் பண்ணி வைத்திருக்கும் ஒரே பட்டினத்தார் பாட்டை சத்தமாக ஒப்பிக்கத் தொடங்குவார். முடிக்கச் சொல்லி தட்டப்படும் கைத்தட்டல்களை பட்டினத்தாருக்கு கிடைத்த பாராட்டாக எண்ணிக் கொள்வார். தொடர்ந்து பேசும் ஆசையில் சோடா குடிக்கும் சொற்ப நேர இடைவெளியில் மூளைக்குள்ளிருந்து ஒவ்வொன்றாக நினைவு படுத்திப் பார்ப்பார். ஆயத்தமாகும் நோக்கோடு கைத் துண்டால் வாயை துடைத்து தொண்டையை செறுமி தொடைகளை அசைத்து சரியாக உட்கார்ந்து மீண்டும் தொடங்க முற்படும் போது விழாக் கமிட்டியாரின் துண்டு சீட்டு போகும். அதை அவர் பொருட்படுத்தாமல் போனால் ஜவுளிக்கடை மகமைச் சங்கத்தின் பொருளாளர் மாரியப்பன் செட்டியார் மேடையேறி,”இத்துணை நேரம் நம்மையெல்லாம் தன் அற்புதமான சொற்பொழிவினால் மகிழ்வித்த . . .” நாவல்டி ரெடிமேட்ஸின் மஞ்சள் சால்வையை போர்த்தி முடித்து வைப்பார். இதற்குள் வாத்தியங்களை ஒவ்வொன்றாக மேடைக்கு ஏற்றத் தொடங்கியிருப்பர்.
ஒன்பது மணிக்கு குழுவினர் வந்து மேடையேறி விட்டாலும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது அவர்களின் ‘ஹலோ ச்செக் ச்செக்’ மற்றும் ‘டம் டிம் டப் டிப் டங்க் டிங்க்’ என்னும் ஆயத்த சத்தங்களை நாம் பொறுமையுடன் கேட்டே தீர வேண்டும். ‘எல, இவனுவொ லொட்டு லொட்டுன்னு தட்டிக்கிட்டேதான் இருப்பானுவோ. அதுக்குள்ள வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு வந்துருவொம். அம்மை ஏசிக்கிட்டு உக்காந்திருப்பா. அவளும் கச்சேரிக்கு வரணும்லா’ என்று நண்பனிடம் சொல்வான் கடை அடைத்து களைத்து வரும் ஆரெம்கேவி ஊழியன் சொக்கலிங்கம். அதிகம் வெளியே வராத சில சமைந்த பெண்கள், பீடி சுற்றும் சீனியர் பெண்மணிகளின் பாதுகாப்பில் அங்கங்கு கூட்டத்தில் கலந்திருப்பர். இவர்களுக்காகவே சில இளைஞர்கள் சில விடலைப்பையன்களை கூட்டி வருவார்கள். அவ்வப்போது அப்படி அழைத்து வந்த சிறுவனிடம், ‘லெச்சுமணா, அந்தா இருக்கா பாரு பத்மா அக்கா. அவ என்ன பாக்காளான்னு பாத்து சொல்லணும் என்னா’. பயல் கச்சேரி சுவாரஸ்யத்தில் பத்மா அக்கா இருக்கும் இடத்தை மறந்து பின் இவன் கேட்கும் போதெல்லாம் குத்துமதிப்பாக பத்மா இருக்கும் திசை பார்த்து ‘ஆமா அத்தான். உன்னையேதான் பாக்கா’ என்று சொல்லிவிட்டு பாட்டில் கவனம் செலுத்துவான். லெச்சுமணன் பத்மா அக்காவின் சித்தியை பார்த்து சொல்லியிருக்கிற விவரம் தெரியாத இந்த மடையன் ஒரு மாதிரி மயக்கத்தில் இருக்கும் போது, அடுத்த பாடலாக சொல்லி வைத்த மாதிரி, ‘ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்று பாடகி பாடுவாள். மிதப்பில் தன்னை மறந்து பனாமா ஃபில்டர் பற்ற வைத்து புகைத்து வளையம் விட்டு கச்சேரி கேட்டுக் கொண்டிருக்கும் தன் பெரியப்பாவிடமோ, மாமாவிடமோ வசமாக மாட்டிக் கொள்வான்.

மெல்லிசை கச்சேரிகளுக்கென்றே சில பாடல்கள் உள்ளன. இதயக்கனியில் உள்ள ‘இன்பமே’ அதில் ஒன்று. அந்த பாடலின் ஆரம்பத்தில் பல்லவிக்கு முன் வரும் பின்னணி இசையின் புல்லாங்குழல் பகுதியை பெரும்பாலான கச்சேரிகளில் குழலை உதறுவதிலேயே கவனமாக நேரங்கடத்தி அந்த பிட் தன்னை கடந்து சென்ற பின் ஒரு போலி பதற்றத்தை முகத்தில் காட்டுவார் ஃப்ளூட்டிஸ்ட் சிவபெருமாள். அதற்குள் அதை ஆர்மோனியத்தில் வாசித்திருப்பார் தியாகராஜன் மாமா. அது அவருக்கு பழகிப் போனது என்று குழுவில் உள்ள மற்றவர்கள் சொல்வார்கள். இதே போன்று டிரம் வாசிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு பலகாலம் எங்களை ஏமாற்றிய சங்கரசுப்புவும் ‘நினைத்தாலே இனிக்கும்’ படப்பாடலான ‘நம்ம ஊர் சிங்காரி’யின் முக்கிய டிரம் பிட்டை வாசிப்பதில் இருந்து தப்புவதற்காக குச்சியை சுழற்றி தவற விட்டு பின் அவசர அவசரமாக ஓடி வந்து எடுப்பான். அதற்குள் பாட்டு முடிந்து விடும். அதை பிடிப்பதற்கென்றே குழு உறுப்பினர்கள் ரகசியமாக ஆள் நியமித்தனர். பிறகு அதிலிருந்தும் தப்பிக்க லாவகமாக ஆளில்லாத இடம் பார்த்து குச்சியை வீச ஆரம்பித்து விட்டான்.

பாடகிகள் அழகிகளாக இருப்பது அபூர்வம். அப்படி ஒரு அழகான பாடகியை ஒரு கச்சேரியில் பார்க்க நேர்ந்தது. ஆளைப் போலவே குரலும் கச்சிதம். சரியான ஸ்ருதியில் பாடினாள். ஒவ்வொரு பாட்டுக்கு இடையேயும் அவளையும், அவள் குரலையும் அளவாகப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தான், கச்சேரி நடத்தும் தலைமைப் பாடகன். பணிவுக்குக் காரணம் பாடகியின் தந்தையும் மேடையில் இருந்ததுதான். பேச்சினூடே அவரையும் புகழத் தவறவில்லை. அவரும் ஒரு முன்னாள் பாடகர் என்பது அவன் பேச்சில் தெரிய வந்தது. ‘மைக்’ மோகனுக்கு கொஞ்சம் வயதான மாதிரி தோற்றத்தில் இருந்தார். மகள் நன்றாக பாடுவதை ரசித்த படியே அமர்ந்திருந்த அவரை பாட வருமாறு அழைத்த போதெல்லாம் மெல்லிய புன்முறுவலுடன் மறுத்த படியே இருந்தார். ‘எங்களுக்கெல்லாம் குருநாதர்’ என்றெல்லாம் தலைமைப்பாடகன் புகழ்ந்து பார்த்தும் அவர் மசிவதாக இல்லை. கண்ணியமான அவரது தோற்றமே அவர் ஒரு நிறைகுடம் என்பதை உணர்த்தியது. என்னருகில் நின்று கொண்டிருந்த குஞ்சு ‘ரொம்பல்லா பந்தா பண்ணுதாரு’ என்றான். கச்சேரி முடியும் போது அவர் மகளே அவரை பாட அழைத்த போது அவரால் தட்ட முடியவில்லை. எழுந்து வந்தார். ‘வந்துட்டாரு பாத்தியா’ என்றேன் குஞ்சுவிடம். எங்கள் இருவருக்கும் பிடித்த பாடலான இளையராஜாவின் ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது’ பாடலை தந்தையும், மகளும் பாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. கொஞ்சம் நகர்ந்து மேடைக்கருகில் சென்றோம். பாடலின் முதலில் வரும் ராஜாவின் ஹிந்தோள ஆலாபனையைத் தொடங்கினார், வயதான மோகன். சற்றும் எதிர்பார்க்காத வேளையில் யாரோ தன் வெற்றுக்காலை பூட்ஸ் காலால் மிதித்த மாதிரியான ஓர் அலறல். விருட்டென கூட்டத்தில் புகுந்து குஞ்சு வெளியே ஒடினான். ஓர் இடைவெளி விட்டு அடுத்த ஆலாபனை. பட்ட காலிலேயே பட்டது இன்னொரு பூட்ஸ் மிதி. இப்போது நான் ஓடினேன்.

அண்ணன் அன்னபூரணன் ஒரு கல்லூரி பேராசிரியர். தபலா வாசிப்பான். அவனது கல்லூரியின் ஆண்டு விழாவிற்காக ஒரு மெல்லிசைக் குழு அமைக்கப் பட்டிருக்கிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்த அந்த குழுவில் எந்த நேரமும் சண்டை உருவாகும் பதற்ற நிலை. பத்து பாடல்கள் பாடுவதாக திட்டம். கவனமாக இரு பிரிவினருக்கும் தலா ஐந்து என பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டு விழாவன்று கச்சேரி துவங்குவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது மாணவர்கள் தரப்பிலிருந்து கூடுதலாக ஒரு மாணவனுக்கு பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு வலியுறுத்தியிருக்கிறார்கள். ‘நேரம் இல்லையேப்பா’ என்று சொன்னதை அவர்கள் கேட்க தயாராகயில்லை.

‘விடுங்க ஸார்,பாடிட்டு போறான்…பிறகு அதுக்கு வேற ஸ்டிரைக் பண்ணுவானுவொ..பிரின்ஸி நம்மள புடிச்சு வாட்டுவாரு’

‘ஓகே.ஓகே. . .எப்பா நல்லா பாடுவானா . . மொதல்ல ஆள் யாருன்னு சொல்லுங்கடே . . .’

‘இவன்தான் ஸார் . . . . எல அவன எங்கெ . . . எல ஏய் . . . நாராயணா . . . முன்னால வால . . .’

‘எப்பிடிடே நாராயணா . . .பாடீருவியா . . .?’

‘எங்க ஊர் திருளாம் போதுல்லாம் நான்தான் ஸார் வருசாவருசம் பாடுவேன்.’

நாராயணன் பாடத் துவங்கியிருக்கிறான்.

‘நா . .ஆ . . .ன்

ஒ . .ரு

ரா . . .ஆ .. .ஆ . . . .சியில்லா . . . . .. .

ராஜூ . .ஊ . . . .ஊ . . . …’

முதல் கல் மாணவர் பகுதியிலிருந்துதான் வந்திருக்கிறது.

திசை

இரண்டு வாரங்களுக்கு முன் நானும், திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் என் மகனை அழைத்துக் கொண்டு என் தம்பியின் வீட்டுக்குப் போனோம். நாங்கள் இருப்பது சாலிகிராமத்தில். தம்பி பட்டாபிராமில். அது ஆவடியைத் தாண்டி உள்ளது. இதுவரை இரண்டே இரண்டு முறைதான் நானே போயிருக்கிறேன். தனியாகச் செல்வதற்கு எனக்கு வழி தெரியாது. பட்டாபிராமுக்கு என்று இல்லை. எங்கு செல்வதற்கும். தம்பி எங்களை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரச் சொல்லியிருந்தான். அங்கு அவன் வந்து எங்களை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. எழும்பூர் வரை செல்வதில் எனக்கு சிக்கலில்லை என்றாலும் புத்திசாலித்தனமாக மின்சாரரயிலைப் பிடித்துவிட்டேன். எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனிலேயே இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் பதற்றமில்லாமல் இருந்தேன். நாங்கள் எழும்பூர் சென்று இறங்கும் போதே காலை 11 மணிக்கு மேலாகியிருந்தது. சிறிது நேரம் காத்திருந்தோம். தம்பியைக் காணோம். தொலைபேசியில் அழைத்தேன்.

‘அங்கேயே இருங்க. வந்திருதேன்’ என்றான். ‘எந்தப் பக்கத்திலிருந்து வருவே’ என்று கேட்டதற்கு ‘ கெளக்கே இருந்து வருவேன்’ என்றான். அவன் எப்போதும் இப்படித்தான். திசை சொல்வான். எனக்கு எது கிழக்கு என்று தெரியவில்லை. அப்படி தெரிய வேண்டுமென்றால் என் வீட்டுக்குப் போனால்தான் சொல்ல முடியும். என் வீடு வடக்கு பார்த்த வீடு. அங்கு போய் அங்கிருந்தே கவனமாகப் பார்த்துக் கொண்டு எழும்பூர் வரை மீண்டும் வருவது நடக்கிற காரியமா? ‘ சித்தப்பா, கெளக்கே இருந்து வாரேங்கான்’. நாஞ்சிலாரிடம்
சொன்னேன். ‘ எது கெளக்கு. வாடே பேரப்பிள்ள போய் பாப்போம்’. என் மகனை அழைத்துக் கொண்டு வெயிலை நோக்கி நடந்தார். ‘வெயிலப் பாத்து எப்படி கண்டுபிடிப்பீங்க தாத்தா . . .’ ‘நெளல் எந்தப் பக்கம் விளுதோ, அத வச்சு தெசையை கண்டுபிடிச்சுரலாம். ஜாமென்ட்ரி பாக்ஸ்ல உள்ள கம்பாஸ வச்சுகூட கண்டுபிடிக்கலாம் . . . .’ ‘அய்யோ அது கம்பாஸ் இல்ல, கேம்பஸ். . . என்ன தாத்தா இது கூட தெரியலே உங்களுக்கு . . .’ பிளாட்பார பெஞ்சில் அமர்ந்து தாத்தாவுக்கும் பேரனுக்குமான உரையாடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு வலதுப் பக்கத்திலிருந்து தம்பி நடந்து வந்தான். அப்படியென்றால் அது கிழக்குதான் என்று நினைத்து கொண்டேன்.

ஊரெல்லாம் சுற்றுபவர்களைப் பார்த்தால் இன்றைக்கும் எனக்கு ஆச்சரியம்தான். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தியா முழுவதும் தனியாகவே சுற்றி அந்த அனுபவங்களை எழுதியுமிருக்கிறார். இது எப்படி அவரால் முடிந்தது என்று தெரியவில்லை. நண்பன் குஞ்சு தானே காரை ஓட்டிக் கொண்டு தமிழகம் முழுதும் சுற்றுவான். நான்தான் அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருப்பேன். சிறுவயதிலிருந்து என்னுடனேயே வளர்ந்த அவனுக்கு மட்டும் எப்படி எல்லாத் திசைகளும் தெரிகிறது. இன்று வரை எனக்கு புரியாத புதிர் இது. எனக்கு திருநெல்வேலியிலேயே இன்னும் பல இடங்கள் தெரியாது. பெரும்பாலான
திருநெல்வேலிக் காரர்களின் லெட்சணமும் இதுதான். எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த ரேவதி அக்காவின் தம்பி சங்கரன் என்கிற சங்காவுக்கு பேசத் தெரியாது. ஊமையில்லை. ஒரு காலை சாய்த்து நடப்பான். எல்லோருக்கும் எடுபிடி வேலைகள் செய்து வந்த சங்கா, உடம்பில் சட்டை அணிவதில்லை. ஒரு அழுக்குத் துண்டும், அதைவிட அழுக்கான வேட்டியும்தான் உடை. அவன் பேசுவது எங்களுக்கு மட்டுமே புரியும். எல்லோரையும் மாமா என்றழைப்பான். ‘மாமா கூப்பாங்கோ’ என்றால் மாமா கூப்பிடுகிறார்கள். ‘மாமா சாப்பாங்கோ’ என்றால் மாமா சாப்பிடுகிறார்கள். இரண்டு மூன்று தெருக்கள் தவிர திருநெல்வேலியிலேயே
வேறு எந்த இடம் பற்றியும் அறிந்திராத சங்கா ஒரு நாள் திசை தப்பி காணாமல் போய்விட்டான். எங்கெங்கெல்லாமோ தேடினோம். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து வைத்தோம். ஒருவாரமாகியும் தகவல் இல்லை. சங்காவைத் தெரிந்த, ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசியிராதவர்கள் கூட சங்காவைத் தேட ஆரம்பித்தார்கள். பாளயங்கோட்டை தாண்டி ஏதோ ஒரு ஊருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக இருந்த நெல்லையப்பன் அண்ணன் போயிருக்கும் போது, அவரை நோக்கி மாமா என்று ஒரு குரல் கேட்டிருக்கிறது. சங்காதான். சிரித்தபடி நின்றிருக்கிறான். பேச முடியாத சங்காவை சந்தேகித்து யார் யாரோவெல்லாம் அடித்திருந்திருக்கிறார்கள்.
நெல்லையப்பண்ணன் அழைத்து வந்து விட்டார். எங்கள் பகுதியே சங்காவை
வரவேற்றது. ‘ எல சங்கா, அவன் கூப்பிட்டான் இவன் கூப்பிட்டான்னு எங்கேயும் போவக் கூடாது, என்னா?’ சங்கா அதற்கு பிறகு எங்குமே செல்வதில்லை. அந்தப் பக்கத்திலேயே ஏதாவது கடைக்கு கிடைக்குப் போவதென்றால் போவான். அவ்வளவுதான்.

திசைகள் அறியா சங்காவுக்கும் எனக்கும் உள்ள ஒரே வேற்றுமை, எனக்கு பேசத் தெரியும். அவ்வளவே. சென்னைக்கு நான் வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் எனக்கு சாலிகிராமத்தை விட்டால் ஒரு இடமும் தெரியாது. சமயங்களில் சாலிகிராமமும். வாத்தியாரும் இங்கேயே இருக்கிறார். நான் சார்ந்திருக்கும் சினிமாத் தொழிலுக்குத் தேவையான சகல இடங்களும் இங்கேயே. பிறகு எனக்கென்ன கவலை? இடங்களைப் பற்றிய தேடலோ, ஆர்வமோ அடிப்படையிலேயே இல்லாமல் போனதுதான் இதற்கு காரணம். எத்தனையோ சிக்கல்களை இந்தக்குறைபாட்டினால் வாழ்க்கையில் சந்தித்து வந்தாலும், இன்னமும் மனதை மாற்ற முடியவில்லை. சின்ன வயதில் எனது உறவினர்களான வாசன், சுந்தர் அண்ணன், நான் மூவரும் திருநெல்வேலிக்கு பக்கத்தில் உள்ள புகழ் பெற்ற கிருஷ்ணாபுரத்துக்கு செல்லத் திட்டமிட்டோம். சிற்பக் கலையை ரசிக்கும் எங்களின் உயர்ந்த கலாமனதைப் புரிந்து கொண்டு மகிழ்ந்து வீட்டில் சாப்பாடு கட்டிக் கொடுத்தார்கள். வீட்டிற்குத் தெரியாமல் ஆளுக்கொரு சைக்கிளில் கிளம்பினோம். பாதி வழியிலேயே வாசன் மனதில் ஓர் யோசனை. அப்படியே திருச்செந்தூர் சென்று வந்தால் என்ன? சுந்தர் அண்ணனும் அதை வழிமொழிய, அவர்கள் இருக்கும் தைரியத்தில் நானும் தலையாட்டினேன். அவர்களைப் பின்தொடர்ந்து சைக்கிளை மிதிக்க மிதிக்க திருச்செந்தூர் வருவேனா என்றது. பஸ் வேகமாகப் போனாலே திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லஒரு மணிநேரமாகும். ஆனாலும் விடாது சைக்கிளை மிதித்தோம். மதிய உணவு நேரத்துக்கு முன்பே மூவருக்கும் பசித்துவிட்டது. சாப்பாட்டைப் பிரித்துஅள்ளித் தின்று முடித்தோம். தூக்கம் வருவது போல் இருந்தது. சுந்தர் அண்ணன் திட்டினான். ‘அறிவிருக்கா, இப்போவே லேட்டாயிட்டு. வா வா. ஏறி மிதி’. தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டோமே என்று தோன்றியது. காலெல்லாம் வலித்தது. திருச்செந்தூரை நெருங்கவே சாயங்காலமானது. அம்மன்புரம் என்னும் ஊர் வந்தது. அதற்கு அடுத்த ஊர் திருச்செந்தூர்தான். தாகம் தாங்க முடியவில்லை. பதநீர் குடிக்கும் யோசனையை வாசன் சொன்னான். ரோட்டை விட்டுஇறக்கத்தில் ஒரு மரத்தடியில் சின்ன ஓலைக் குடிசையொன்றைப் பார்த்து விட்டேஇதை சொல்லியிருக்கிறான். சைக்கிள்களை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி அந்தக்குடிசையை நோக்கிச் சென்றோம். மடித்த பனை ஓலையில் கொடுக்காமல் பிளாஸ்டிக் தம்ளரில் பதநீர் கொடுத்தார்கள். வாசனும், சுந்தர் அண்ணனும் இரண்டிரண்டு கிளாஸ்கள் அடிக்க, நான் மட்டும் சளைத்தவனா. அந்த சுவை பிடிக்கவில்லையென்றாலும் நானும் இரண்டு கிளாஸ்கள் பதநீர் குடித்தேன்.

அம்மன்புரத்தில் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து மிதிக்கத் தொடங்கினோம். எனக்கு லேசாக தலை சுற்றியது. அதற்குப் பிறகு சைக்கிள்தான் எங்களைக் கூட்டிக் கொண்டு போனது. அடுத்த ஊரான திருச்செந்தூர் வர ரொம்ப நாளானது. ஒருமாதிரியாக செந்திலாண்டவன் சன்னிதியை அடைந்தோம். சட்டையைக் கிழற்றிவிட்டு சன்னிதானம் முன் நின்றோம். எனக்கு இரண்டு முருகர்கள் தெரிந்தனர். ஷண்முகர் சன்னிதியில் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனை தரிசிக்கப் போன போது அங்கு அவர்கள் ஒரு கூட்டமாக ஒரு பெரிய
கூட்டுக்குடும்பமாகக் காட்சியளித்தனர். கோயிலை விட்டு வெளியே வந்து கடற்கரையில் விழுந்தோம். கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. கிருஷ்ணாபுரச் சிலைகள் நடனமாடின. சைக்கிள்கள் பறந்தன. முருகன் கையில் வேலோடு எங்களுடன் ஓலைக்குடிசையில் அமர்ந்து பிளாஸ்டிக் தம்ளரில் பதநீர் குடித்தார். கடலலை எழும்பி வந்து என்னை மூடும் போது, சுந்தர் அண்ணன் என்னை உலுக்கினான்.

‘கெளம்புவோம். இருட்டிரும்.’ அருகிலேயே மல்லாந்து கிடந்த வாசனை எழுப்பினோம். தள்ளாடி எழுந்து நின்று குனிந்து கடற்கரையில் தேடிப் பொறுக்கி தன் வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான். இருளோடு மனதில் பயமும் சேர்ந்து கொள்ள சைக்கிளை மிதிக்கத் தொடங்கினோம். ஸ்ரீவைகுண்டமருகே வயலிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த விவசாயக்
கூட்டத்தின் மேல், இருட்டுக்குள் கண் தெரியாமல் மோதி விழுந்தோம். நாங்கள்
எழுந்திருக்க உதவிய அவர்கள், பித்தளைத் தூக்குச் சட்டியிலிருந்து தண்ணீர் சாய்த்துக் கொடுத்து, ‘ டைனமோ வேற இல்லியே. பாத்துப் போங்க தம்பிகளா’என்றனர். இரவு பதினோரு மணிக்கு மேல் வீட்டுக்குத் திரும்பினோம். தெருவே எங்கள் வீட்டுவாசலில் காத்திருந்தது. போலீஸிலும் புகார் கொடுத்திருந்தனர். பெரியவர்கள் யாரும் ஒன்றுமே சொல்லவில்லை. ‘மொதல்ல போய் சாப்பிடுங்கலே’. நல்ல பையனாக நடந்து கொள்வதாக எண்ணி பெரியப்பாவிடம், ‘இந்தாங்க பெரியப்பா. திருச்செந்தூர் பிரசாதம்’ என்று திருநீற்றுப் பொட்டலத்தை நீட்டினேன். அதுவரை அமைதியாக இருந்த அனைவரும் எங்கள் மூவரையும் சோபாவில் உட்கார வைத்து செருப்பால் அடித்தார்கள்.

சென்னையில் என்னை எங்கு அனுப்புவதாக இருந்தாலும் வாத்தியார்
பாலுமகேந்திரா என்னிடம் இடம் குறித்து எதுவும் சொல்ல மாட்டார். ‘அகிலா, உன் புள்ள பாட்டு பாடிக்கிட்டு எங்கேயாவது போயிருவான். டிரைவரை கூப்பிடு’என்பார், தன் மனைவியிடம். தற்சமயம் நான் எங்காவது செல்வதாக இருந்தால் உதவி இயக்குனர் பத்மன், எனது தம்பி சிவா, நண்பர்கள் செழியன், ஷாஜி, மனோ என்று யாராவது வந்து என்னை கூட்டிச் செல்ல வேண்டும். நண்பர் ஜெயமோகனுக்கு பாவலர் விருது வழங்கும் விழாவிற்கு சாலிகிராமத்திலிருந்து நானும், வ.ஸ்ரீநிவாசன் சாரும் அவரது ஸ்கூட்டரில் கிளம்பினோம். ஸ்ரீநிவாசன் ஸார் தன்னுடைய மாருதி காரை ஸ்கூட்டர் என்றுதான் சொல்வார். வண்டியில்
ஏறும்போதே, ‘சுகா, உங்களுக்கு பாரதீய வித்யா பவன் எங்கேயிருக்குன்னு தெரியுந்தானே?’ என்று வினவினார். திசைகள் விஷயத்தில் ஸ்ரீனி ஸார் எனக்கு தாத்தா. நண்பர் ரவிசுப்ரமணியம் எனக்கு அனுப்பியிருந்த அழைப்பிதழை கையிலேயே வைத்திருந்தேன். அதைப் பார்த்து ‘மையிலாப்பூர்லதான் சார் இருக்கு’ என்றேன். முன் தினமே நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன், மயிலாப்பூர் கற்பகம் விலாஸின் எதிர்ப் புறத்தில் பாரதீய வித்யாபவன் இருக்கும் விஷயம் சொல்லியிருந்தார். மயிலாப்பூருக்கு எப்படி போவது என்று ஸ்ரீனிவாசன் ஸார் கேட்டு விடுவாரோ என்று பயந்த படியே உட்கார்ந்திருந்தேன். கேட்டாலும்
எனக்கு தெரியாது என்னும் விவரம் என்னை விடவும் ஸ்ரீனி ஸாருக்கு தெரியுமென்பதால் அவர் என்னிடம் கேட்கவில்லை. பெரும் போரட்டத்துக்குப் பின் மைலாப்பூரை அடைந்தோம். பாரதீய வித்யா பவனும் கண்ணில் சிக்கிவிட்டது. பெருமிதம் தாங்க முடியவில்லை ஸ்ரீனி ஸாருக்கு. உடனேயே காரை விட்டு இறங்காமல் தனக்குத் தானே சிரித்து மகிழ்ந்து கொண்டார். சாலிகிராமத்திலிருந்து கிளம்பி என்னைப் போன்ற திசையறியா ஒருவனை துணைக்கு வைத்துக் கொண்டு வெற்றிகரமாக மைலாப்பூர் வந்தடைந்த நிறைவு அவர் முகத்தில். இதற்காகவெல்லாம் பாவலர் விருது கொடுக்க மாட்டார்கள் என்று சொல்ல நினைத்தேன். திரும்பி அவருடன்தான் நான் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதால் அமைதி காத்தேன். ‘உண்மையாவே பெரிய விஷயம் சுகா.
யார்க்கிட்டேயும் கேக்காம வந்துட்டோமில்லையா?’ என்றார். ‘ஆமாம் சார். பெரிய விஷயம்தான்’ என்றேன். அன்று முழுக்க இந்த சாதனையை நினைத்தே மகிழ்ச்சியாக இருந்த வ.ஸ்ரீனிவாசன் அவர்கள் சுத்தமான சென்னைக்காரர்.

சுப்பையாவின் தம்பி

அப்பா கூடப் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். பெரியப்பாக்களுக்கு தலா நான்கு பிள்ளைகள். அத்தைகளுக்கு மும்மூன்று. நாங்கள் அண்ணன் தம்பிகள் இரண்டு பேர். ஏதாவது விசேஷம், காரியம் என்றால் அப்போதைக்கு சண்டையில்லாமல் குடும்பம் ஒன்று சேர்ந்திருந்தால் வீடு நிரம்பி வழியும். பெரியக்கா கல்யாணத்திலும், பின் ஆச்சி இறந்த போதும், கடைசியாக அம்மா இறந்த போதும்தான் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் ஒன்றாகப் பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்குமே கிட்டியது. பெரியவர்கள் அவர்களின் பரம்பரைச் சொத்தான ‘நான்’ என்கிற நினைப்பையும், வறட்டுப் பிடிவாதத்தையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஏதேதோ காரணங்களுக்காக ஆளாளுக்கு முகம் பார்க்காமல் வீஞ்சிக்கொண்டு உர்ரென்று நடமாட, பிள்ளைகள் நாங்கள் சந்தோஷமாகக் கூடி மகிழ்ந்திருந்ததை இப்போதெல்லாம் நினைத்துப்பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளவேண்டியுள்ளது. ஆச்சியின் பிணத்தின் முன் தேவாரம், திருவாசகம் படிக்கப் பட்டது. எடுக்க நேரம் ஆகும் என்று தெரிந்தவுடன் சின்னப்பிள்ளைகள் நாங்கள் விளையாடப் போய்விட்டோம். நான் மட்டும் அவ்வப்போது விளையாட்டிலிருந்து விலகி ஆச்சி பக்கத்தில் போய் அவள் முகத்தைப் பார்த்து சிறிது நேரம் அழுதுவிட்டு பின்பு மறுபடியும் விளையாட்டில் சேர்ந்து கொள்வேன். ஆச்சியிடமே வளர்ந்தவன் இது கூட செய்யவில்லையென்றால் எப்படி?

இப்போதெல்லாம் ஒரு வீட்டில் நான்கைந்து குழந்தைகளைப் பார்ப்பதற்கான வாய்ப்பே இல்லை. எனக்கு மிகவும் நெருக்கமான நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்றோருக்கு இரண்டு குழந்தைகள். எனக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு. இந்தப் பயலுக்கு போகோ சேனலை விட்டால் வேறு போக்கிடமே இல்லை. இவன் விளையாட, உடன் வளர இன்னொரு தம்பியோ, தங்கையோ வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு ஆரம்பத்திலேயே இல்லை. சமயத்தில் இவன் ஒருவனை சமாளிக்கவே 100க்கு ஃபோன் பண்ண வேண்டியுள்ளது. இதில் இன்னொரு பிள்ளையைப் பற்றி எங்கிருந்து யோசிக்க. தகப்பனாரின் தலைமுறையில் நிறைய சகோதர சகோதரிகளுடன் பிறந்து வளர்ந்தவர்கள், அற்பகாரணங்களுக்காக இப்போது பேச்சுவார்த்தையின்றி யாரோ மாதிரி வாழ்வதைப் பார்த்து மனசு வெறுத்துப் போனதினால் ஒரு வேளை போதுமய்யா ஒரு குழந்தை என்று தோன்றிவிட்டதோ என்னவோ. சமீபத்தில் ஒரு திருமணத்தில் எனது பெரியண்ணனை என் மகனுக்கு, ‘இவன்தான் உன் பெரியப்பா’ என்று அறிமுகப்படுத்தி வைக்கும் அவலநிலைக்கு ஆளானேன். கண்கலங்கியபடியே ‘எல அய்யா’ என்று தன் தம்பி மகனைக் கட்டித் தழுவிக் கொண்டான் அண்ணன். பெரியவர்களின் தேவையில்லாத வீம்பு குணத்தினால் ஒன்று விட்ட சகோதரர்களாகிய நாங்கள் ஒருவரையொருவர் மறந்தே போனோம். ஃபாஸிலின் ‘வருஷம் 16’ திரைப்படம் பார்க்கும் போது விடுமுறைக்கு ஒன்று கூடிய குடும்ப கலாட்டாகாட்சிகளில் திரையரங்கம் முழுவதும் கைதட்டி சிரித்து மகிழ்ந்த போது என்னையறியாமல் நான் அழுதேன். என் அண்ணன்களும், அக்காக்களும் அவரவர் ஊர்களில் நிச்சயம் அழுதிருப்பார்கள்.

ஒன்றாம் வகுப்பிலிருந்தே என்னுடன் ஒன்றாக படித்த என் ஆருயிர்நண்பன் குஞ்சு என்கிற குஞ்சரமணியின் தாத்தா குருசாமி தீக்ஷிதர் 94 வயது வரை வாழ்ந்தார். எட்டயபுரம் அரண்மனையின் ஆஸ்தான ஜோஸியர் அவர். அவரது பெரியம்மா மகனான சுப்பையாவை அவன் வாழ்ந்த காலத்தில் அவர் கண்டுகொள்ளவே இல்லை. சிறிய வயதிலேயே வறுமையில் இறந்து போன தன் அண்ணன் சுப்பையாவைப் பற்றி அவருக்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயமும் இல்லை. ‘யார் பேச்சையும் கேக்காம சும்மா ஒதவாக்கரையா சுத்திண்டிருந்தான்’ என்கிற அளவில் மட்டுமே அவர் சுப்பையாவைப் பற்றிப் புரிந்து வைத்திருந்தார். மேதைகள் மறைந்த பின்னர் அவர்தம் அருமைகளைத் தெரிந்து கொள்ளும் பழக்கத்திற்கு ஆளான தமிழ்ச் சமூகம் சுப்பையா காலமான பிறகு அவர் பெருமைகளை அறிந்து கொண்டது. அவர் எழுதிய கவிதைகள் அனைத்துமே மேன்மையானவை என்றது. ஊரெங்கும் சுப்பையாவின் சிலைகளை நிறுவி அதன் கீழ் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று பெயர் பொறித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது. பாரதியாரின் நூற்றாண்டு விழாவில் அரசாங்கம் அவரது குடும்பத்தை கெளரவித்த போது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் பொன்னாடை போர்த்திக் கொண்டு குருசாமி தீக்ஷிதர் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து பவ்யமாக நின்றார். தன் வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருக்கும் அந்தப் புகைப்படத்தை நண்பன் குஞ்சு, என்னதான் தன் தாத்தாவாக இருந்தாலும், ‘பாத்தியா, அவாள் போஸ’ என்று இன்றைக்கும் கேலியாகச் சொல்லிக் காட்டுவான்.

வாழ்க்கையின் பெரும்பகுதியை எட்டயபுரத்திலேயே கழித்த குருசாமி தாத்தா அவ்வப்போது திருநெல்வேலி அம்மன் சன்னதியில் உள்ள குஞ்சுவின் வீட்டுக்கு வருவார். குஞ்சுவின் வீடு குறுகலாக நீளமாக இருக்கும். வீட்டுவாசலிலிருந்து பார்க்கும் போது தூரத்தில் சப்பரத்திலுள்ள சாமி மாதிரி தாத்தா மங்கலாகத் தெரிவார். ஆனால் அவர் போடும் சத்தம் மட்டும் இரைச்சலாக வீடு முழுதும் கேட்கும். குருசாமி தாத்தா சிரித்து நான் பார்த்ததில்லை. அவருக்கு சிரிக்கத் தெரியுமா என்ற சந்தேகத்தை குஞ்சுவிடமே கேட்டிருக்கிறேன். ஒரே ஒரு தடவை அவர் சிரித்து தான் பார்த்திருப்பதாக குஞ்சு சொன்னான். தனது 94ஆவது வயதில் குருசாமி தாத்தா கீழே விழுந்து கால் எலும்பை முறித்துக் கொண்டார். பொதுவாக அவருக்கு கோபமே வராது. சோற்றில் உப்பில்லையென்றால் சாப்பிடும் இடத்திலேயே காறித் துப்புவார். மற்றபடி சாந்த சொரூபி. இப்படிப்பட்டவர் கீழே விழுந்துவிட்டால் வீடு என்ன ஆகும். தாத்தாவை படுக்கையில் போட்டார்கள்.அவருக்குத் தெரியாது அதுதான் தனது மரணப் படுக்கையென்று. திருநெல்வேலியின் புகழ்பெற்ற எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் பண்டாரவிளை நாடார் வரவழைக்கப்பட்டார். முட்டைப்பத்து போடப்பட்டது. தாத்தாவுக்கு படுக்கையிலேயே எல்லாம் ஆரம்பமானது. மருமகள்கள் தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறையாக மாமனாரைப் பார்த்துக் கொண்டார்கள். ஆனாலும் நித்தமும் அர்ச்சனைதான்.

ஹார்ளிக்ஸ் எங்கெடி.?

அதத்தானேப்பா குடிச்சிட்டிருக்கேள்!

தூ . . . ஒங்களெல்லாம் அருவாமனயால வெட்டணும்.

கையால் வெட்டுவது போல் சைகை செய்வார். குஞ்சுவின் அம்மாவும், பெரியம்மாவும் என்னிடம் ‘எல பாத்தியா, இதுக்கு என்ன பண்றது நீயே சொல்லு’ என்பார்கள். மெல்ல, மெல்ல எல்லா இயக்கங்களும் செயலிழக்கத் தொடங்கி தாத்தா அடங்கினார். கடைசி வரை அவருக்கு கால் எலும்பு முறிவுக்கான கட்டு போடப்பட்டு வந்தது. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் கட்டு பிரித்து புது கட்டு போடும் போது நான்தான் உதவிக்கு நின்றேன். நான் அவர் காலை தூக்கிப் பிடித்துக் கொள்ள பண்டாரவிளை நாடார் பரபரவென்று கட்டு போட்டார். போடும் போதே என்னிடம் பெரியவரை பற்றி விசாரிப்பு.

சாமிக்கு ஒரு தொன்னூறு வயசு இருக்குமா?

தொன்னூத்தி நாலு.

ஏ . .யப்பா . . அந்த காலத்து உடம்பு . சாமிக்கு மொத்தம் எத்தனை பிள்ளைய?

பதிமூணு

பதி . .மூணா . . . சாமி என்ன தொளில் பண்ணிக்கிட்டிருந்தா ?

அதான் சொல்லிட்டேனே.