ராயல் டாக்கீஸ் . . .

காசிதான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தான். தம்பி வரப்போவது பற்றி அவன் வீட்டுக்கே அரசல்புரசலாகத்தான் தெரியும். ஆனால் காசிக்கு மட்டும்தான் உறுதியாக இன்ன தேதிக்கு, இந்த ரயிலில் வருகிறேன் என்பதை தம்பி சொல்லியிருந்தான்.

தம்பியின் உண்மையான பெயரான கணபதிசுப்பிரமணியம் என்பது அவனது சர்ட்டிஃபிக்கேட்டில் மட்டும்தான் உள்ளது. சுந்தரம் ஸார்வாள் சொல்வார். ‘ஒண்ணு கணவதின்னு வச்சிருக்கணும். இல்லென்னா சுப்ரமணின்னு வச்சிருக்கணும். அதென்னடே ஒருத்தனுக்கு ரெண்டு பேரு?’ வீட்டிலும் சரி. நண்பர்கள் மத்தியிலும் கணபதிசுப்பிரமணியம் எப்போதும் தம்பிதான். தாத்தா பெயரைச் சொல்லக் கூடாதென்று ஆச்சிதான் ‘தம்பி’ என்று விளிக்கத் தொடங்கினாள். ஆச்சி ஒன்றைச் சொல்லிவிட்டால் அதுதான் சட்டம். யாரும் அதை மீற மாட்டார்கள். ‘அதென்ன சாவி? தொறவோல்னு சொல்ல மாட்டேளோ?’ என்பாள். ‘ஆமா! ஒலகமே சாவின்னுதான் சொல்லுது. ஒங்க அம்மைக்கு மட்டும் எங்கெருந்துதான் வார்த்த மொளைக்கோ?’ லோகு பெரியம்மை முனகுவாள். ‘ஏட்டி! திறவுகோல்ங்கறது சுத்தமான தமிள்வார்த்த. அதச் சொல்றதுக்கு ஒங்களுக்குல்லாம் வலிக்கி. என்னா?’. சண்முகப் பெரியப்பா ஏசுவார்.

லோகநாயகியும், சண்முகமும் தம்பிக்கு பெரியம்மை, பெரியப்பா என்பது வெறும் முறைக்குத்தான். ஆனால் தம்பிக்கு அவர்கள்தான் அம்மையும், அப்பாவும். தம்பி அவர்களை அழைப்பதும் அப்படித்தான். லோகுவை அம்மா என்றழைப்பவன், சண்முகத்தை சண்முகப்பா என்பான். தம்பியைப் பெற்ற ஒருசில தினங்களிலேயே அவன் அம்மை போய்ச் சேர்ந்துவிட்டாள். ஏற்கனவே கொஞ்சம் அப்படி இப்படி இருந்த தம்பியின் அப்பா, சொத்தைப் பிரித்துத் தரச் சொல்லி சண்டை போட்டு வாங்கிக் கொண்டு யாரோ ஒரு பெண்ணுடன் எங்கோ காணாமலேயே போனார். அதற்குப் பிறகு தம்பியை வளர்த்தது, ஆச்சியும், லோகநாயகியும், சண்முகமும்தான்.

‘இப்பதாம்ல மதுரயத் தாண்டுதான்’. தம்பியின் வாட்ஸ் அப் மெஸேஜைப் பார்த்துவிட்டு காசி லேசாகச் சிரித்துக் கொண்டான். ஏற்கனவே டிரெயின் இரண்டுமணிநேரம் தாமதம் என்னும் அறிவிப்பைக் கேட்டிருந்தான், காசி. வீட்டுக்குப் போய்விட்டு வருவானேன் என்று ஸ்டேஷனிலேயே காத்திருந்தான். தம்பி திருநெல்வேலியை விட்டுப் போய் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. ஆச்சி இறந்ததற்குக் கூட வரவில்லை. அந்த சமயத்தில் தம்பி எந்த ஊரில் இருக்கிறான் என்றே தெரியவில்லை. காசிதான் கூடமாட நின்றுகொண்டு எல்லா வேலைகளையும் செய்தான். ‘இந்த வீட்ல நீ வேற, அவன் வேறயா? இந்தா பிடி’ என்று வெளித் தெப்பக்குளத்தில் ஈரவேட்டியுடன் நின்று கொண்டிருந்த சண்முகப் பெரியப்பா, காசியின் கைகளில் நெய்ப்பந்தத்தைக் கொடுத்தார். ‘முங்கி எந்திடே! திருநாறு விட்டுக்கோ. அப்புறமா அவன் கைல பந்தத்தக் குடுக்கலாம் சம்முவம்’ என்றார், டெய்லர் மகாலிங்கம் மாமா. ‘ஐயா அரசேன்னு வளத்த பய இல்லாம அவளக் கொண்டாந்து எரிக்கோம். அவ நெஞ்சு வேகும்ன்னா நெனைக்கெ? மூதிக்கு அப்படியாய்யா ஊரும், மனுசாளும் அத்துப் போச்சு?’ கருப்பந்துறையில் வைத்து பேச்சியாபிள்ளை தாத்தா சொல்லும் போது, காசிக்கு அழுகையுடன், தம்பியின் மேல் கோபமும் வந்தது. இப்போது அதெல்லாம் இல்லை. மனசு முழுக்க தம்பியைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை மட்டும்தான்.

ரயிலிலிருந்து இறங்கும் போது தம்பி வேறு ஆளாகத் தெரிந்தான். ஏற்றி வாரப்பட்ட தலைமுடி, பிடரி முழுக்க அடர்ந்துத் தவழ்ந்தது. தடித்த ஃபிரேமில் மூக்குக் கண்ணாடி. கையில் ஒரு பெட்டி, தோளில் ஒரு பை. அவ்வளவுதான். காசியைப் பார்த்தவுடன் லேசாக ஒரு குறுஞ்சிரிப்பு மட்டுமே தம்பியின் முகத்தில் காண முடிந்தது. கண்களில் நீர் துளிர்க்க காசி, தம்பியைக் கட்டிக் கொண்டான். ‘பையக் குடு’. வாங்கிக் கொண்டு வேகவேகமாக நடக்கத்தொடங்கினான். காசியின் வேகத்துக்கு தம்பியால் ஓடித்தான் வர வேண்டியிருந்தது. காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்யவும் காசி சொன்னான். ‘உன்னயப் பாத்தா கல்கத்தால இருந்து வாரவன் மாரியே தெரியல’.

‘ஏம்ல?’

‘பொறவு?என்னமோ சஷ்டிக்கு திருச்செந்தூர்க்கு போயிட்டு வாரவன் மாரி ஒரு பொட்டி, பையோட வந்து எறங்குதெ!’

பதிலேதும் சொல்லாமல் சிரித்த தம்பி, ரோட்டைப் பார்த்தபடி ‘தானா மூனா ரோடே மாறிட்டெல!’ என்றான்.

பதில் சொல்வதைத் தவிர்க்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட காசி மேற்கொண்டு ஏதும் கேட்காமல் வண்டியை ஓட்டினான். ‘நெல்லை லாட்ஜுல்லாம் மாறவே இல்ல’. மேம்பாலத்தில் போகும் போது தம்பி சொன்னான். ‘சென்ட்ரல்ல இப்பம்லாம் பளைய படம்தானா? இந்த கிரவுண்ட்ல தட்டான் புடிப்பமே! விளாமரம் நிக்கால? வாசல்ல சவ்வுமிட்டாய் வித்த ஆத்தால்லாம் இப்பம் செத்திருப்பாள்லா?’ சாஃப்டர் ஸ்கூலைத் தாண்டும் போது வரிசையாகக் கேட்டுக் கொண்டு வந்தான் தம்பி. பதிலேதுமே காசி சொல்லவில்லையென்றாலும், அதற்காகக் காத்திருக்காமல் அடுத்தடுத்த கேள்விகளுக்குத் தாவிக் கொண்டிருந்தான், தம்பி. ‘நல்ல வேளடே. ஆர்ச்ச விட்டு வச்சிருக்கிய. எங்க ரோட்ட அகலப்படுத்த இடிச்சுத் தள்ளியிருப்பேளோன்னு நெனச்சேன்’.
திருநெல்வேலி டவுணின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஆர்ச்சைக் கடக்கும் போது, தம்பியின் முகத்தில் அப்படி ஒரு நிறைவு. அதற்குப் பிறகு தெற்குப்புதுத் தெரு வரும் வரையிலும் தம்பி ஏதும் பேசவுமில்லை. கேட்கவுமில்லை.

வாசல்கதவு திறந்தே கிடந்தது. தம்பியைப் பார்த்தறியாத நாட்டுநாய் ஒன்று கட்டில் கிடந்தது. தம்பியைப் பார்த்ததும் கழுத்துச் சங்கிலி இறுக, வாஞ்சையுடன் வாலாட்டிச் சிரித்து வரவேற்றது. அதனருகில் நின்று அதன் தலையை சில நொடிகள் தடவிக் கொடுத்தான் தம்பி. கையில் பையுடன் நின்று கொண்டிருந்த காசி மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

‘மூதிக்கு இன்னும் நாய்க்கோட்டி போகல’.

பட்டுப்பாவாடை அணிந்த ஒரு சின்னப்பெண் வாசலுக்கு ஓடி வந்தாள். தம்பியைப் பார்த்தவுடன் ஒரு முழி முழித்து மீண்டும் வீட்டுக்குள் ஓட எத்தனித்தவளைத் தடுத்து நிறுத்தினான், காசி.

‘ஏட்டி! இதான் தம்பி மாமா’.

கண்களை அகல விரித்துப் பார்த்த அந்தப் பெண், ‘ஆச்சி! தம்பி மாமா வந்துட்டாங்க’ என்றபடி உள்ளே ஓடினாள்.

புருவம் தூக்கிய தம்பியிடம் ‘சுந்தரி மக’ என்றான், காசி. ஒரு கணம் தம்பியின் கண்களில் சின்னதாக ஏதோ ஒன்று தோன்றி மறைந்தது. இதற்குள் சண்முகப் பெரியப்பாவின் மகள் சுந்தரி வாசலுக்கு வந்தாள்.

‘வாண்ணே! சும்மா இருக்கியா?’

கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். சுந்தரியின் கைகள் குளிர்ச்சியாக இருந்தது.

‘ஏம்ணே ஒன் கை சுடுது?’ என்றாள், சுந்தரி.

பின்னால் தொடர்ந்த காசி, ‘ஒங்கண்ணனுக்குக் கை மட்டுமா சுடும்?’ என்றான்.

தம்பியிடம் அதற்கும் பதிலில்லை.

‘அப்பா பொறவாசல்ல இருக்கா’ என்றாள், சுந்தரி.

பின்வாசலில் மருதாணி மரத்துக்கருகே நாற்காலி போட்டு அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், சண்முகப்பா. ‘எப்பா! தம்பியண்ணன்’ என்ற சுந்தரியின் குரல் கேட்டு பேப்பரை விலக்கிய சண்முகப்பாவின் தொடைகளைத் தொட்டபடி அவர் காலருகில் அமர்ந்தான், தம்பி. இருவர் தொண்டையும் சட்டென்று வறண்டது. பொங்கிய கண்ணீரை மறைக்கும் விதமாக இருமியபடி, ‘ஏட்டி! தொண்ட பொகயுதுல்லா. தண்ணி கேட்டாத்தான் கொண்டுட்டு வருவியோ?’ என்று சுந்தரியைப் பார்த்து ஏசினார். ‘நீ சாப்பிட்டியா?’. எதிரே படிக்கட்டில் உட்கார்ந்து கொண்ட காசியைப் பார்த்துக் கேட்டார். இதற்குள் தன் ஆச்சி லோகநாயகியின் கைகளைப் பிடித்து இழுத்தபடி பின்வாசலுக்கு வந்து சேர்ந்தாள், சுந்தரியின் மகள்.

வந்ததும், வராததுமாக தன் கணவரின் கால்மாட்டில் உட்கார்ந்திருந்த தம்பியின் அருகில் வந்து குனிந்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் லோகநாயகி.

‘வளி தெரிஞ்சுட்டோல ஒனக்கு? அம்ம இருக்காளா, செத்துட்டாளான்னு பாக்க வந்தியோ? எறப்பாளி நாயே. என் சீவனப் புடிச்சுக்கிட்டாக்கும் இத்தன வருசம் இருந்தேன்’.

உடல் நடுங்க தம்பியின் அருகில் தரையில் கையை ஊன்றி உட்கார்ந்தவள், ‘என்னப் பெத்த ஐயா’ என்று தம்பியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறலானாள். இனி மறைக்க ஏதுமில்லை என்பது போல் சண்முகப்பாவும் பெருங்குரல் எடுத்து அழுதார். சொம்பில் தண்ணீர் கொண்டு வந்த சுந்தரியைத் தடுத்தான், காசி. ‘ஒங்கப்பாக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு தண்ணி தவிக்காது’.

royal talkies

ooOoo

மறுநாள் காலை தூங்கி தம்பி எழுந்திருக்கும் போது நன்றாக விடிந்திருந்தது. மச்சு ரூம் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது தட்டட்டியில் லோகம்மை கூழ்வற்றல் ஊற்றிக் கொண்டிருந்தாள். உடன் சுந்தரியும், அவள் மகளும்.

‘நீ இன்னும் இத விடலயா?’

ஜன்னலுக்குள்ளிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த லோகம்மை ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். காலையிலேயே குளித்திருந்த முகத்தில் துளிர்த்திருந்த புது வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.

‘ஏன் கேக்க மாட்டே? நாங்கல்லாம் கேட்டா சலிச்சுக்கிடுவா. ஒவ்வொரு மட்டம் ஊருக்குப் போகும்போதும் மணி ஐயர் கடைலதான் வாங்கிக் குடுத்தனுப்புவா. இப்பம் மகன் வந்திருக்காம்லா! அதான் இந்தத் தாளிப்பு’.

சுந்தரியின் செல்லக் கோபத்தை சிரிப்பால் கடந்து சென்றபடி தன் வேலையில் மும்முரமாக இருந்தாள், லோகம்மை. இதற்குள் கீழிருந்து சண்முகப்பாவின் குரல் கேட்டது.

‘ஏட்டி ஒங்கண்ணன் வாரானா இல்லயா? அவனுக்காகத்தான் இன்னும் ரெண்டாம் காப்பி குடிக்காம இருக்கேன்’.

சண்முகப்பாவின் தலைமுடி நரைத்ததைப் போல, லோகம்மையின் முகமும், உடலும் தளர்ந்ததைப் போல, திருநவேலியின் தோற்றத்திலும் சுருக்கங்களையும், மாற்றங்களையும் கண்டான், தம்பி. சிறுவயதில் சைக்கிளில் சுற்றிய பகுதிகளில் காசியுடன் நடந்தே சென்றான். நெல்லையப்பர் கோயில் வசந்த மண்டபத்து வாசலில் வீசும் காற்றை நின்று வாங்கிக் கொண்டான்.

‘இந்த காத்து மாறல. வாட கூட அப்படியேதான் அடிக்கி’.

பக்தியே இல்லாமல் கோயிலைச் சுற்றுகிறான் என்பது காசிக்குப் புரிந்தது. நடையில் அப்படி ஓர் ஆவேசம். சந்நிதிகளில் திருநீறு, குங்குமம் பிரசாதங்களை வாங்கிக் கொள்ளவில்லை. காந்திமதி யானையிடம் மட்டும் சிறிது நேரம் செலவழித்தான். கோயிலைவிட்டு வெளியே வந்த பிறகு சாந்தமானான். தேரடியைத் திரும்பிப் பார்க்கும் போது, காசி பதற்றமடைந்தான்.

‘ராயல் தியேட்டர் பக்கம் போக வேண்டாமா? அப்படியே ஆரெம்கேவி, லாலா சத்திரமுக்கு, தொண்டர் சன்னதில்லாம் போலாம்லா?’

‘ஏன்? தேரடிப்பக்கம் அவங்க யாரும் இருக்காங்களா? அதான் எல்லாரும் போயாச்சே! அப்புறம் என்ன? சும்மா ஒரு நடை நடந்துட்டு போவோம்.’

இப்படித்தான் தேரடிப் பக்கமே கிடையாகக் கிடந்த காலம் ஒன்று இருந்தது. சைக்கிளை எடுத்துக் கொண்டு காசியும், தம்பியும் வருவார்கள். ஜோதீஸ் காப்பிக்கடையிலிருந்துப் பார்த்தால் பவானியின் வீடு தெரியும்.

பாளையங்கோட்டையில் ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக இருக்கும் பவானியின் அப்பா, விடிந்து போனால், அடைந்துதான் வருவார். வீட்டுக்கு அருகில் இருந்ததாலோ என்னவோ அம்மாவும், மகளும் ராயல் தியேட்டரில்தான் சினிமா பார்ப்பார்கள். அநேகமாக கீழரதவீதி, வடக்குரதவீதி, தெப்பக்குளத்தெரு, சுவாமி சன்னதிகளில் வசிப்பவர்கள் வாராவாரம் ராயல் தியேட்டரில் சினிமா பார்ப்பது வழக்கம்.

’தில்லானா மோகனாம்பாள்’ பாக்காத படமாவே? அதான் சிவாஜிக்கு ஒரு மட்டம், பாலையாவுக்கு ஒரு மட்டம், நாகேசுக்கு ஒரு மட்டம், பத்மினிக்கு அஞ்சாறு மட்டம்னு வளச்சு வளச்சுப் பாத்தாச்சுல்லா! என்னமோ புதுப்படம் மாரி செகண்ட் ஷோக்குப் போவோமான்னுக் கேக்கேரு?’

‘வே! ராயல்ல போட்டிருக்கான். பாக்காம இருக்க முடியுமா? வீட்ல பாத்த மாரில்லா இருக்கும். சும்மா சளம்பாதீரும். நலந்தானான்னு நம்மள பாத்து கேக்கற மாரியேல்லா, புருவத்த வளச்சுப் பாடுவா. வாரும், போவோம்’. பட்டுப்பிள்ளை அண்ணாச்சி சொல்வார்.

மாலைநேரக் காட்சிக்கு பவானியும், அவள் தாயும் கிளம்பும்போது தம்பி படபடப்புடன் காத்திருப்பான். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் காசியை இழுத்துக் கொண்டு ராயல் தியேட்டருக்குச் செல்வான். மற்ற நேரங்களில் சோஃபா டிக்கெட்டில் படம் பார்ப்பவன், பவானி வந்தால் மட்டும் காசியை விட்டு பெஞ்ச் டிக்கெட்தான் எடுக்கச் சொல்லுவான். காரணம், பவானி தன் தாயுடன் பெஞ்ச் டிக்கெட்டில்தான் படம் பார்ப்பாள். ’அவ ஒருபக்கம் உக்காந்திருக்கோம். நாம எங்கயோ உக்காந்திருக்கோம். இதுல என்ன கெடைக்கோ, தெரியல. கேட்டா நீயும், அவளும் ஒண்ணா படம் பாத்ததா சொல்லுவே!’

இப்படி ஒன்றிரண்டு அல்ல. அநேகமாக எல்லா வார இறுதிகளிலும் ராயல் தியேட்டரில் பவானியுடன் படம் பார்ப்பான், தம்பி. இதுபோக தினமுமவள் டியூஷனுக்குக் கிளம்பும்வரைக்கும் காத்திருந்து அவளுடனேயே செல்வான். மீனாட்சிபுரத்தில் எஸ்.ஆர்.கே ஸார்வாளிடம்தான் பவானியும், தம்பியும், காசியும் மேத்ஸ் டியூஷன் படித்தார்கள். டியூஷன் தொடங்கும் முன், முடிந்த பின் இரண்டொரு வார்த்தைகள் தம்பியும், பவானியும் பேசிக் கொள்வார்கள்.

‘களுத்துல உத்திராச்சக் கொட்ட எதுக்கு? அத களட்டு. கூட படிக்கிற பிள்ளைள்லாம் அதச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கி’.

‘எங்காச்சி போட்டு விட்டது. களட்டுனா ரொம்ப வருத்தப்படுவா. அவட்ட வேணா சொல்லிட்டு சீக்கிரமே கெளட்டிருதென்’.

‘வேண்டாம்பா. என்னமாது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிரப்போது’.

ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகத்தான் செய்தது. அத்தனை புத்திசாலியான, படிப்பில் சிறந்து விளங்கிய பெண் ஏன் அப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தாள் என்பது யாருக்குமே புரியாமல் போனது. தச்சநல்லூர் கணேசன்தான் அந்தக் கேமராவைக் கொண்டு வந்தான்.

‘ஃபாரின் மக்கா. எங்க அத்தான்குள்ளது’.

இரண்டு ரோல்களை எடுத்துத் தள்ளினார்கள். தனியாக எடுத்துக் கொள்ள சம்மதிக்காத பவானி, குரூப் ஃபோட்டோவில் மட்டும் வந்து நின்று கொண்டாள். முன்வரிசையில் பெண்பிள்ளைகள் உட்கார்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் பையன்கள் நின்றபடி படம் எடுத்துக் கொண்டார்கள். சரியாக பவானிக்குப் பின்னால் தம்பி. பிரிண்ட் போட்டு காப்பி வாங்கிக் கொள்ள பவானியின் தாய் பணம் தர மறுத்தாள்.

‘டியூஷன் படிக்கப் போன எடத்துல என்னத்துக்குட்டி போட்டொவும், கீட்டொவும்? மாசாமாசம் பீஸுக்கே ஒங்கப்பா மூக்கால அளுதுக்கிட்டெ குடுக்காக’.

தம்பிதான் பவானிக்கும் சேர்த்து பிரிண்ட் போட்டு ஒரு காப்பியை அவள் கையில் கொடுத்தான். வற்புறுத்திதான் திணிக்க வேண்டியிருந்தது.

‘எங்கம்மை ஏசுவா.’

‘நீ என்னத்துக்குக் காமிக்கெங்கென்?’

இத்தனைக்கும் நோட்டுப்புத்தகத்தில் மறைத்துதான் வைத்திருந்தாள். அப்படியே வைத்திருந்தால் கூட ஒன்றும் பிரச்சனை ஆகியிருக்காது. ஃபோட்டோவில் தானும், தம்பியும் இருக்கும் பகுதியை மட்டும் கத்தரித்து, தனியாக வைத்திருந்தது, பவானியின் தாய் கண்களில் சிக்கியது. படிப்பறிவில்லாத, பழமையில் ஊறிய, இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தன் கணவனுக்கு பயந்த பவானியின் தாய் உக்கிரமாகிப் போனாள். ஆத்திரமும், கோபமுமாக வசவைத் தொடங்கியவளிடம் ஒருகட்டத்தில் பவானி எதிர்க்குரல் எழுப்ப, அவமானத்தில் அடிக்கத் தொடங்கி, பின் அழுகையும் சேர்ந்து கொண்டு, மனம் பிசகி, கையில் மண்ணெண்ணெய்கேனைத் தூக்கினாள்.

‘ஒங்கப்பன் வந்து என்னைக் கொல்றதுக்குள்ள நான் கொளுத்திக்கிட்டுப் போயிருதேன்’.

பாய்ந்துப் பிடுங்கிய பவானி தாயின் கால்களில் விழுந்து, ‘நீ பயப்படுத மாரி என்னமும் நடக்காதும்மா. என்னய நம்பு’ என்று அழ, ஓரளவு நிலைமை சமாதானமானது. காலையில் பால் ஊற்ற வருகிற கோவிந்தன் சொல்லித்தான் தம்பியின் வீட்டுக்கு விவரம் தெரிய வந்தது.

’கம்பவுண்டரு ராயல்ல செகண்ட் சோ முடிஞ்சு வந்திருக்காரு. உள்ள இருந்து பொகஞ்சிருக்கு. அதுக்குள்ள சாமிசன்னதி பட்டர்மாருங்க எல்லாரும் ஓடி வந்து கதவ ஒடச்சிருக்காங்க. ரெண்டு பேரும் கரிக்கட்டயாக் கெடந்திருக்காங்க. யாரு அம்மை, யாரு மகன்னே தெரியலயாம்’.

‘யாருடே அது?’ ஜோதீஸ் காபிக்கடை ஆனந்தம் மாமா கேட்டார். காசியுடன் வந்த தம்பி, அவரைப் பார்த்து லேசாகச் சிரித்தபடி, ‘என்ன மாமா? சும்மா இருக்கேளா?’ என்று கேட்கவும், ‘ஏ தம்பில்லா! எப்பிடி இருக்கே மாப்ளே’. வந்து அணைத்துக் கொண்டார். ‘எத்தன வருசம் ஆச்சு மாப்ளே ஒன்னப் பாத்து. காசி கூட முன்னமாரி வரமாட்டங்கான். காப்பி குடிக்கியா?’

தேரடிப் பக்கம் பவானி வீடு இருந்த இடத்தில் இப்போது வேறேதோ கடை ஒன்று நின்றது. சலனமேயில்லாமல் அந்தப் புதியக் கட்டடத்தைப் பார்த்தபடி சிறிதுநேரம் அமர்ந்திருந்தான், தம்பி.

ஆண்டிநாடார் கடையைத் தாண்டும் வரைக்கும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ராயல் தியேட்டர் பக்கம் நிமிர்ந்துப் பார்த்துக் குழம்பியவன், காசியிடம் ‘எல! ராயல் டாக்கீஸ் இப்பம் இல்லயா?’ என்று கேட்டான்.

தம்பி இப்படித்தான். தியேட்டர் என்று அவன் வாயில் வராது. டாக்கீஸ்தான். ‘இந்தக் காலத்துப்பிள்ளேளு மாரியா அவன் பேசுதான். எல்லாம் ஒன் வளப்பு’. சண்முகப்பா அவர் அம்மையைப் பார்த்து சொல்லுவார். ‘எல! நானாது டாக்கீஸுங்கென். எங்கம்மைல்லாம் கொட்டகைன்னுல்லா சொல்லுவா’. பதிலுக்கு ஆச்சி சொல்லுவாள்.

இரண்டொரு நாட்களில் தம்பி கல்கத்தாவுக்கேக் கிளம்புகிறான் என்கிற செய்தி வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

‘கல்யாணமும் பண்ணிக்கிடலங்கான். பளய மாரி இல்லன்னாலும் சின்ன யூனிட் போட்டு மில்லும் ஓடிக்கிட்டுதான இருக்கு! அத கவனிச்சுக்கிட்டு இங்கன இருக்கலாம்லா! அப்பிடியே ஒரு தாலியும் கட்ட வச்சிரலாம். நான் இன்னும் எத்தன நாளைக்கு இருக்கப் போறென்! நீயாது கொஞ்சம் சொல்லுடே காசி’.

சண்முகப்பாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே காசிக்குத் தெரியவில்லை. தம்பியிடம் அவன் இதைச் சொல்லாமல் இல்லை. ஆனால் அதற்கு அவன் கேட்கும் எதிர்க்கேள்விக்கான அர்த்தம் காசிக்குப் புரிந்தது. சண்முகப் பெரியப்பாவுக்கோ, லோகம்மைக்கோ அது புரிய வாய்ப்பில்லை. முகத்தில் உணர்ச்சியே இல்லாமல், அதே சமயம் சற்றே கலங்கிய கண்களுடன் துணிமணிகளை எடுத்துப் பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த தம்பி, காசியின் முகம் பார்க்காமல் கேட்டான்.

‘ராயல் டாக்கீஸ் இல்லாத ஊர்ல என்னால இருக்க முடியுமால?’

நன்றி- ஆனந்த விகடன்

post

மக்களின் இசைக்கு வயது 71

இசை என்றால் என்னவென்றே இனம் கண்டுகொள்ளமுடியாத இளம்பிராயத்தில் ஒரு கருப்புவெள்ளை திரைப்படத்தின் பாடல்கள் மாயாஜாலம் போல மனதில் புகுந்தன. அப்போதும்கூட அது எந்த மாதிரியான இசை, அதை அமைத்தவர் யார் என்பது பற்றியெல்லாம் தேடவோ, முயலவோ அறிந்திருக்கவில்லை. எழுபதுகளில் தென்தமிழகத்தின் திருநெல்வேலி போன்ற ஊர்மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த இலங்கை வானொலி மூலமாகவே அந்தத்திரைப்படத்தின் பெயர் ‘அன்னக்கிளி’ என்பதும், ‘இளையராஜா’ என்கிற அந்தப் புதிய இசையமைப்பாளரின் பெயரும் தெரிய வந்தது. மீண்டும் மீண்டும் ஒலிபரப்பான ‘அன்னக்கிளி’ திரைப்படப்பாடல்கள், பள்ளிக்கூடத்துப்பாடங்கள் போலக் கசக்காமல், மிக எளிதாக மனனம் ஆனது.திருமணவீடுகள், மஞ்சள்நீராட்டு மற்றும் கோயில்கொடைகளில் ‘அன்னக்கிளி’ பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன.’லாலிலாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் ‘மச்சானைப்பாத்தீங்களா’ பாடல் துவங்கும்போது, அந்தப் பாடலொலி கேட்கும் அத்தனை இடத்திலும் இனம் புரியாத பரவசம் பரவியது. ‘அன்னக்கிளிஉன்னைத்தேடுதே’ பாடல் சொல்லமுடியா சோகத்தையும், ‘சொந்தமில்லைபந்தமில்லை’ கண்ணீரையும், ‘சுத்தச்சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்’ குதியாட்டமும் போடவைத்தன. தனது முதல் படத்தின் பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு கலந்துவிட்டார், இளையராஜா. கூலித் தொழிலாளர்களிலிருந்து குளிர்சாதனையறையை விட்டு வெளியே வராத செல்வந்தர்கள் வரைக்கும் அத்தனை பேருக்குமான இசையமைப்பாளராக உருவானார். கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக ஒவ்வொரு தமிழனும் தத்தம் வாழ்வோடு இளையராஜாவை தொடர்புப்படுத்தியே வாழ்ந்து வருகிறான். ஒவ்வொருவர் வாழ்விலும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாடலாவது தொடர்புடையதாக இருந்தே தீரும். காதலிப்பதற்கு, கலங்கிஅழுவதற்கு, புன்னகைப்பதற்கு, தனிமையை ரசிப்பதற்கு, கூட்டமாகக் கொண்டாடுவதற்கு, இறைவனைத் துதிப்பதற்கு, இயற்கையை வியப்பதற்கு, நண்பர்களுக்கிடையே கேலியாக விளையாடுவதற்கு என அத்தனைக்கும் இளையராஜாவின் பாடல்கள் துணையாக இருக்கின்றன. அதனால்தான் முப்பத்தைந்தாண்டுகளாக தமிழிலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தித் திரைப்படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து, இப்போது தன்னுடைய எழுபத்தோராவது வயதில் ஆயிரமாவது படத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் இளையராஜாவை ஒரு திரைப்பட இசையமைப்பாளராக மட்டும் தமிழர்களால் பார்க்க முடியவில்லை. தமது அன்றாட வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட அவரை தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். பல்வேறு குழுக்களாக, கலாச்சார, கொள்கை வேறுபாடுகளினால் பிரிந்து கிடக்கும் நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்துப்பிரிவினருக்குமான ஒரு பொதுஈர்ப்பு, இளையராஜா.

நாட்டுப்புற இசையை தமிழ்த்திரையிசைக்குள் கொணர்ந்தவர் என்று இளையராஜாவைச் சொல்லி அவரது ஆளுமையைக் குறுக்கப்பார்ப்பவர்கள் உண்டு. தனது முதல் படத்திலிருந்தே தமது மேற்கத்திய இசை ஆளுமையை செழுமைப்படுத்தி, ஜனரஞ்சகமாகத் திரையிசையில் கொடுத்தவர், அவர்.

’மச்சானப்பாத்தீங்களா பாட்டுல வார கிதார்பீஸ்லயே புள்ளிக்காரன் ஆருன்னு தெரிஞ்சு போச்சுல்லா!’.

பாளையங்கோட்டைக்காரரானபேஸ்கிதாரிஸ்ட்கிறிஸ்டோஃபர்ஸார்வாள்சொல்வார்.

நாளடைவில் கர்நாடக இசையின் அடிப்படையில் அவர் அமைத்த பாடல்கள் பெருகின. மாயாமாளவகௌளை, மோகனம், ஹிந்தோளம், கல்யாணி, சிம்மேந்திரமத்தியமம், சுபபந்துவராளி போன்ற பிரபலமான ராகங்களில் மட்டுமல்லாமல், ஸ்ரீ, பிலஹரி,சல்லாபம், ரசிகரஞ்சனி, நாடகப்ரியா போன்ற அதிகமாகத் திரையிசையில் பயன்படுத்தப்படாத ராகங்களிலும் பாடல்களை அமைத்தார். இளையராஜாவின் ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், யாராவது ஒரு வாத்தியக்காரரிடம் பேசிப் பார்க்கவேண்டும் என்பார்கள்.வயலின், செல்லோ, கிடார், பியானோ, புல்லாங்குழல், ஷெனாய், நாகஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பவராக இருந்தாலும், மிருதங்கம், தபலா, டோலக், தவில் போன்ற தாளவாத்தியக்கருவிகளை வாசிப்பவராக இருந்தாலும் இளையராஜாவின் இசைஆளுமையைப் பற்றி அவர்கள் வியப்பும், ஆச்சரியமும் இல்லாமல் பேசுவதைக் கேட்கமுடியாது. நம் ஊரைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. ஃப்ரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் பால்மரியாட்டுக்குக்கூட இளையராஜாவின் இசை, ஆச்சரியத்தை அளித்தது. எழுபதுகளில் தமிழகமெங்கும் ஆனந்த், அபிமான், பரிச்சே, பிரேம்நகர், யாதோங்கிபாரத், ஜவானிதிவானி, பாபி போன்ற ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் பரவலாகப் பரிச்சயமாகியிருந்தன.ஹிந்தி அறியாத, வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரியாமலேயே ’மேரா ஜீவன் கோரா காகசு கோராயி ரேகயா’ என்று பாடிக் கொண்டிருந்தவர்களுக்கு ’16 வயதினிலே’ திரைப்படத்தின் ‘செந்தூரப்பூவே’க்குப் பிறகு முப்பதாண்டுகளாக ஹிந்தித் திரையிசையில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் போயிற்று. நாளடைவில் ஹிந்தித் திரையிசைவல்லுனர்களும் இளையராஜாவின் ரசிகர்களாயினர். நௌஷத்அலி, சலீல்சௌத்திரி, ஆர்.டி.பர்மன், லதாமங்கேஷ்கர், ஆஷாபோஸ்லே போன்றோர் இளையராஜாவின் இசையை வியந்தனர்.‘செண்பகமேசெண்பகமே’ பாடலைப் பாடுவதற்கு இளையராஜா அழைத்தபோது, பயத்தில் என் கைகள் நடுங்கின என்றார், ஆஷாபோஸ்லே. இந்தியாவின் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைமேதை ஹரிபிரசாத் சௌரஸ்யா தனது இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இளையராஜா வந்து ஆசீர்வதிக்கவேண்டும் என்றார். ’ஹேராம்’ திரைப்படத்தின் ‘இசையில்தொடங்குதம்மா’ பாடலைப் பாடுவதற்காக அழைக்கப்பட்டபோது, ‘அவர் கொடுக்கும் டியூனை என்னால் பாடமுடிகிறதோ, இல்லையோ!ஆனால் என் மகளை அவர் ஆசீர்வதிக்க வேண்டும். அதற்காகவே கிளம்பி வருகிறேன்’ என்றார், ஹிந்துஸ்தானி இசைவல்லுநர் அஜோய்சக்ரபர்த்தி.அவரது மகள் இன்றைக்கு ஹிந்துஸ்தானி சங்கீத உலகில் புகழ்பெற்று விளங்கும் கௌஷிகி சக்ரபர்த்தி. இவை அனைத்துக்கும் உச்சமாக, ‘இசையில் எனது சாதனைகள் என்று ஏதேனும் இருக்குமானால் அவை அனைத்தையுமே அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்’ என்று இளையராஜாவால் வணங்கப்படுகிற ‘மெல்லிசைமன்னர்’எம்.எஸ்.விஸ்வநாதன், ‘நான் இளையராஜாவின் ரசிகன்’ என்று மேடையிலேயே சொன்னார்,.

தன்னுடைய இளமைப்பருவம் முழுக்க தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களோடு மக்களாகக் கலந்து பல கச்சேரிகள் செய்தவர், இளையராஜா. அதனால்தான் அவரால் மக்களின் மனதறிந்து, அவர்களுக்கான இசையை வழங்க முடிந்தது. தலைமுறை வித்தியாசமில்லாமல் சகலசாமானியர்களிடமும் அவரது இசை நேரடியாகச் சென்றடைந்தது. சென்ற வாரத்தின் இறுதியில் செட்டிபுண்ணியம் கிராமத்திலிருந்து, சென்னையை நோக்கி கால்டாக்ஸியில் வந்துகொண்டிருந்தேன். பாபநாசத்தைச் சேர்ந்த மாரிமுத்து காரை ஓட்டி வந்தார். ‘உதயகீதம்’ திரைப்படத்தின் ‘தேனேதென்பாண்டிமீனே’ பாடலைத் தொடர்ந்து ‘பூவேசெம்பூவே, தென்றல் வந்து என்னைத் தொடும், உன் பார்வையில் ஓராயிரம்’ என இளையராஜாவின் பாடல்களை மிதமாக ஒலிக்கவிட்டு, கோடை பயணத்தின் எரிச்சலைத் தணித்து இனிதாக்கினார்.

‘இளையராஜா பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமோ, மாரிமுத்து?’ என்று கேட்டேன்.

‘என்ன ஸார் இப்படி கேட்டுட்டிய!அம்மா, அப்பா, தங்கச்சிங்க எல்லாரயும் ஊர்ல விட்டுட்டு இங்கன வந்து கஷ்டப்பட்டு ஒளைக்கிறதுக்கு, ஆறுதலா இருக்கிறது அவருதான்.தெனமும் சொரிமுத்தையன கும்பிடும் போது, என் குடும்பத்தோட சேத்து இளையராஜாவும் நல்லா இருக்கணும்னு கும்பிடுவேம்லா’ என்றார்.

இந்த ஆண்டு இளையராஜா அவர்களுக்கு நான் கொண்டு செல்லும் பிறந்தநாள் பரிசு, பாபநாசம் மாரிமுத்துவின் வார்த்தைகள்தான்.

post

திருவண்ணாமலைக்குப் போன கதை . . .

’சுகா! நான் ஃபேமிலியோட கெளம்பி திருவண்ணாமலைக்குப் போயிக்கிட்டிருக்கேன். நீங்க எப்ப வரீங்க?’

‘கிழக்குச்சீமையிலே’ எழுதிய பேராசிரியர் ரத்னகுமார் ஃபோனில் கேட்டார்.

‘ஸார்! நானும் டாக்டரும் நைட்டு கெளம்பி வந்துடறோம்’ என்றேன்.

‘டாக்டர் வீடியோகேம் கார் ஓட்டுவாரேய்யா! பாத்து பத்திரமா வந்து சேருங்க.

டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ், சென்னையின் குறிப்பிடத்தக்க குழந்தைநல மருத்துவர். வெளிவர இருக்கும் ‘மேகா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர். அறிமுகமான மிகக்குறுகிய காலத்தில் அத்தனை நெருக்கமானவர். அதற்கான எக்ஸ்டிரா காரணம், டாக்டருக்கு சொந்த ஊர் திருநவேலி. டாக்டரின் டிரைவிங் பற்றி பேராசிரியர் சொன்னது உண்மைதான். கடந்த மாதத்தின் ஓர் இரவில் சென்னையிலிருந்து டாக்டரின் இன்னோவா காரில் பேராசிரியர், நான், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த தோழர் பாலாஜி, சீத்தாராமன் போன்றோர் பண்ணைப்புரத்துக்குப் பயணமானோம். டாக்டர் ஆல்பர்ட்தான் கார் ஓட்டினார். அவரது இருக்கைக்கு அருகில் நான். கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வரும் லாரியை நோக்கி உதடு குவித்து, நொடிப்பொழுதில் ஏமாற்றி, ஸ்டியரிங்கை வளைத்து ’ழ’ என்று ரோட்டில் கார் டயர்களினால் எழுதிக் காண்பித்து, காரில் இருந்த அனைவரின் மலச்சிக்கலையும் மருந்து கொடுக்காமல் குணமாக்கினார், டாக்டர். இடையிடையே வரும் ஃபோன் கால்களையும் அட்டெண்ட் செய்து பேசினார்.

‘சொல்லுங்கம்மா. . .

கொளந்தைக்கு என்ன வயசாகுது? . . .

சரிசரி . . . ஒண்ணும் பயப்பட வேண்டாம் . . . ப்ரிஸ்க்ரிப்ஷன்ல ரெண்டாவதா எளுதியிருக்கிற மருந்துல அஞ்சு எம்.எல் குடுங்க . .

முன் அனுபவம் காரணமாகவே பேராசிரியர் தனியாகக் கிளம்பி திருவண்ணாமலைக்குச் சென்றார்.

திருவண்ணாமலையில் இளையராஜா அவர்களின் நூல்கள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே நாங்கள் சென்று கொண்டிருந்தோம். இந்தமுறையும் டாக்டருடன் நான் முன் இருக்கையில் அமர்ந்துகொள்ள, பின் சீட்டில் பெல்ட்டை உடம்பு முழுக்க இறுக்கிப் போட்டு, அண்ணாமலையாரை வேண்டியபடி, அமர்ந்திருந்த பத்திரிக்கையாளர் தம்பி தேனி கண்ணனின் உதடுகள் அரைகுறையாக கந்தரலங்காரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தன. காதில் விழுந்த வார்த்தைகளை கவனித்துக்கேட்டபோது, அது தேனி கண்ணனே எழுதியவை என்பது புரிய வந்தது. டாக்டருடன் பயணிக்கும் போது இளையராஜாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை பென்டிரைவில் நான் கொண்டு செல்வதால், ரோட்டை கவனிக்காமல் இசைக்குள் சென்று விடுவேன்.

நள்ளிரவில் நாங்கள் திருவண்ணாமலைக்குள் நுழைந்த போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. காலையில் ரமணாசிரமத்துக்குச் சென்று இளையராஜா ஸாரைப் பார்த்துவிட்டு, நிகழ்ச்சிக்கு செல்வதாகத் திட்டம். ஏதேதோ பேசிவிட்டுத் தூங்கும்போது விடிந்திருந்தது.

‘இன்னும் ரெடியாகலயாய்யா?’

இளையராஜா ஸார் ஃபோனில் சத்தம் போடவும், அவசர அவசரமாக எழுந்து, பல் தேய்த்து, குளித்து ரமணாசிரமத்துக்குக் கிளம்பிச் சென்றோம்.

‘ம்ம்ம். ஆசிரமத்தை சுத்திட்டு, கோயிலுக்குப் போங்க. 11 மணிக்கு நிகழ்ச்சி. நான் வந்துடறேன்’.

கோயிலுக்குள் நுழைந்து நிகழ்ச்சி நடைபெறும் ஆயிரங்கால் மண்டபம் அருகே சென்றபோது, நெளிந்த குரலில் யாரோ ’சொல்லடி அபிராமி’ என்று பாடிக் கொண்டிருந்தார். அவர் பாடி முடிக்கவும், அவர்தான் டி.எம்.சௌந்தர்ராஜனின் பேரன் என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பேராசிரியர் ரத்னகுமார் குடும்பத்தினருடன், நானும், டாக்டர் ஆல்பர்ட்டும் பார்வையாளர்களுடன் சென்று அமர்ந்து கொள்ள, சில நிமிடங்களில் இளையராஜா அவர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். உடன் கவிஞர்கள் முத்துலிங்கம், மு.மேத்தா, சொற்கோ, இளையகம்பன், கோ.சாரங்கபாணி மற்றும் தோழர் ஸ்டாலின் குணசேகரன் போன்றோரும் மேடையேறினர். அதற்கு முன்னால் ஸ்டாலின் குணசேகரனிடம் தேனி கண்ணன் என்னை, ‘இவர்தான் சுகா’ என்று அறிமுகப்படுத்தவும், ‘பேர் மட்டும் சொன்னா போதும். மத்தபடி இவரப் பத்தி எல்லாம் தெரியும்’ என்றபடி மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார், தோழர் ஸ்டாலின் குணசேகரன்.

இளையராஜா அவர்கள் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொருவர் பேசுவதாக நிகழ்ச்சியின் அழைப்பிதழ் சொல்லியது. விழா துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி மற்றும் அவரது சகோதரரும், கல்வியாளரும், ரசனையான எழுத்தாளருமான எஸ்.கே.பி.கருணாவும் இளையராஜா அவர்களுக்கு மாலையணிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுக் கிளம்பிச் சென்றனர். நண்பர் எஸ்.கே.பி.கருணா உணர்ச்சிமயமாக, அதேசமயம் உண்மையாகப் பேசினார். சுருக்கமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. பேசி முடித்ததும் இளையராஜா அவர்களுடன் தற்போதைய ஃபேஷனான ‘செல்ஃபி ஃபோட்டோ’ ஒன்றை எடுத்துக் கொண்டார்.

எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல், முழுக்க முழுக்க ராஜா ஸார் அழைத்தாரே என்கிற ஒரே காரணத்துக்காக அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த எனக்கு கவிஞர் முத்துலிங்கத்தின் துவக்கவுரை அத்தனை சுவாரஸ்யமாக அமைந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அத்தனை எளிமையான தமிழில் சுவையாக அமைந்தது கவிஞரின் பேச்சு. அடுத்து வந்த இளையகம்பன், இளையராஜா அவர்களை வர்ணித்து கவியரங்கத்தில் வாசிக்கப்படும் கவிதைகளைப் பாடி அமர்ந்தார். அடுத்து வடநாட்டு உடையில் பளபளப்பாக வந்த சொற்கோ உரத்த குரலில் இளையராஜா அவர்களின் வெண்பா குறித்து பேசிக் கொண்டிருந்தபோது மேடையேறினார் தமிழக அமைச்சர் மாண்புமிகு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். உடன் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி வனரோஜா மற்றும் கழகத்தைச் சார்ந்த அணுக்கத் தொண்டர்கள். நனைந்த ஜிப்பாவுடன் கவிஞர் சொற்கோ உட்கார வைக்கப்பட்டார். அமைச்சர் பெருமகனார் கையில் டைப் செய்யப்பட்ட சில காகிதங்களுடன் பேச வந்தார். தமிழ் இலக்கியம் என்றால் என்ன? திருவள்ளுவர் என்பவர் யார்? தமிழ் மொழியின் மகத்துவம் என்ன? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வண்ணம் சுவைபட, டைப் செய்யப்பட்ட அந்தப் பக்கங்களை வாசித்தார். ஐந்தாறு பக்கங்களை அவர் வாசித்து முடிக்கும்போது, மேலும் சில டைப் பக்கங்களை அவரது உதவியாளர் கொண்டு வந்து அமைச்சர் கைகளில் கொடுத்தார். ஏற்கனவே பசியிலும், தூக்கத்திலும் இருந்த நான், அருகில் அமர்ந்திருந்த பேராசிரியரின் தோள்களில் சாய்ந்தேன். தாயுள்ளத்துடன் என் தலையைத் தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார் பேராசிரியர். அமைச்சருக்கு அடுத்து பேச வந்த பாராளுமன்ற உறுப்பினர் திருமதி வனரோஜா, ’அன்பான வாக்காளப் பெருமக்களே’ என்று தொடங்கி சுவைபடப் பேசினார். பின் இளையராஜா அவர்களை வணங்கிவிட்டு, எல்லோரும் மேடையைவிட்டு இறங்கிச் சென்றனர்.


மீண்டும் நனைந்த ஜிப்பாவுடன் கவிஞர் சொற்கோ வெண்பாவைப் பற்றிப் பேச வந்தபோது, மணி மதியம் இரண்டை நெருங்கியிருந்தது. இப்போது மேடையிலும், கீழேயும் அமர்ந்திருந்த அனைவரின் உடைகளும் நனைந்திருந்தன. அத்தனை பசியிலும், களைப்பிலும் கவிஞர் சொற்கோ உறுமினார். அறைக்குச் சென்று நிச்சயம் இருமியிருப்பார். சொற்கோவின் உடல்நலனில் அக்கறை கொண்ட கவிஞர் முத்துலிங்கம் அவரை அமரச் செய்து, அடுத்து மு.மேத்தாவைப் பேச அழைத்தார். இளையராஜா அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களைப் பற்றிப் பேசிவிட்டு கவிஞர் மு.மேத்தா அமர்ந்தபோது, களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. அடுத்து புலவர் கோ.சாரங்கபாணி வந்து பாடினார். தன்னை தினமும் காலையில் இளையராஜா அவர்களின் பாடலொன்றுதான் தூக்கத்திலிருந்து எழுப்பி விடுகிறது என்று சொல்லி, முழுப்பாடலையும் பாடினார். அவர் பாடிய அந்தப் பாடல், புதுவை அரவிந்தர் அன்னையைப் பற்றி கங்கை அமரன் அவர்கள் இயற்றி, இசைத்து, பாடிய பாடல். இப்படியாக அவர் ஒரே பாடலின் மூலம் இளையராஜா அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

மதிய உணவு நேரம் எப்போதோ கடந்து விட்டிருந்தது. ஆனாலும் கூடியிருந்த மக்கள் அனைவரும் இளையராஜா அவர்களின் ஏற்புரைக்காக பொறுமையாக அமர்ந்திருந்தார்கள். இந்த நேரத்தில்தான் தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேச வந்தார். வருடந்தோறும் ஈரோட்டில் சிறப்பான முறையில் புத்தகக் கண்காட்சி நடத்துகிற செயல்வீரர், அவர். மக்களோடு மக்களாக தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கிற தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேசத் துவங்கிய ஐந்து நிமிடங்களிலேயே கூட்டத்தை தன்வசப்படுத்தினார். இன்னும் சிறிதுநேரம் பேசமாட்டாரா என்று எதிர்பார்க்க வைத்த பேச்சு. ஏற்புரையை இளையராஜா அவர்கள் மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ள, கொளுத்தும் வெயிலில் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், கொதிக்கும் கல்தரையில் ஓட்டமும், நடையுமாக அவரைப் பின் தொடர்ந்து ரமணாசிரமம் சென்றோம். மதிய உணவு, சாயங்கால பூஜை, எனது அடுத்த படம் பற்றிய அலோசனைகள் போன்றவற்றை முடித்துவிட்டு ரமணாசிரமத்தை விட்டுக் கிளம்பும் போது, வானம் இருட்டத் தொடங்கியிருந்தது.

‘என்னைச் சந்திக்காமல் போகக் கூடாது’ என்று அன்புக்கட்டளை இட்டிருந்த நண்பர் எஸ்.கே.பி.கருணாவை அவரது கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த விருந்தினர் மாளிகையில் சந்திக்கச் சென்றோம். வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்க, அடுத்தடுத்து இரண்டு முறை தேநீர் வழங்கி, சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார், கருணா. கருணாவின் கலாரசனையை ஏற்கனவே அவரது எழுத்து மூலம் நானறிவேன். உடன் வந்த டாக்டர் ஆல்பர்ட்டும், தேனி கண்ணனும் அந்த முதல் சந்திப்பிலேயே கருணாவின் ரசிகர்களானார்கள். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தனது விருந்தினர் மாளிகையைச் சுற்றிக் காண்பித்த நண்பர் கருணா, ‘இனிமேல் திருவண்ணாமலைக்கு நீங்க வர்றதா இருந்தா, எனக்கொரு ஃபோன் பண்ணிட்டு நேரே இங்கே வந்திரணும். வேற எங்கேயும் தங்கக் கூடாது’ என்றார். மழை நின்றபாடில்லை. ‘ஒண்ணும் பிரச்சனையில்ல. டின்னர் ரெடி பண்ணச் சொல்றேன். சாப்பிட்டுட்டு, நைட் தங்கிட்டு காலைல கூட நீங்க போகலாம்’ என்றார், கருணா. டாக்டரைப் பார்த்தேன். ‘பரவாயில்லண்ணே. கெளம்பிடலாம். போற வழில சாப்டுக்குவோம்’ என்றார் டாக்டர் ஆல்பர்ட். கருணாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.

மீண்டும் வீடியோ கேம் கார். ’இனிமேல் ராஜாஸார இந்த மாதிரி நிகழ்ச்சிலல்லாம் கலந்துக்கக்கூடாது, ஆல்பர்ட்’ என்றேன். ‘கரெக்டுண்ணே. நீங்கதான் அவர்கிட்ட சொல்லணும்’ என்றபடி ஸ்டியரிங்கை ஒரு சுற்று சுற்றி, இந்தமுறை கார் டயர்களினால் ரோட்டில் ‘ஞ’ எழுதிக் காண்பித்தார். பின்னணியில் கேட்டுக் கொண்டிருந்த ’அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம்’ என்கிற ‘ஜப்பானில் கல்யாணராமன்’ பாடலையும் மீறி ஒலித்தது, இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த சீட்பெல்டுக்குள் இருந்த தேனி கண்ணனின் கந்தரலங்காரம்.

புகைப்படங்கள்: நன்றி ’முரளிதர் வி.எஸ்’.

post

தி.க.சி இல்லாத திருநவேலி . . .

இருபத்திரண்டாண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில் மாதத்துக்கு ஒரு முறையாவது திருநவேலி சென்றுவிடுவது வழக்கம். பின் படிப்படியாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எனக் குறைந்து, இப்போது வருடத்துக்கு ஒருமுறை செல்வதே அபூர்வமாகி விட்டது. நண்பன் குஞ்சுவின் மகனது பூணூல் கல்யாணத்துக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

‘எல! கண்டிப்பா நான் வரணுமா?’

தவிர்த்துப் பார்த்தேன்.

‘என் வீட்ல நடக்கிற மொத விசேஷம். இத விட்டா இந்தப்பய கல்யாணந்தான். இதுல நீ இல்லேன்னா நல்லா இருக்குமா? நீயே யோசிச்சுப் பாரு’.

வயதும், அனுபவமும் குஞ்சுவின் நிதானமானப் பேச்சில் தெரிந்தது. தட்ட முடியவில்லை.

கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு பேரூந்தில் திருநவேலி பயணம். வழக்கமாக எனது பயணங்களுக்கான டிக்கெட் போடும் ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ஜே.கே இந்த முறை ரயில் டிக்கட்டில் கோட்டை விட்டுவிட்டார்.

‘மல்டி அக்ஸில் பஸ், ஸார். சௌரியமா இருக்கும். கோயம்பேடுல நைட் பத்து மணிக்கு எடுத்து, காலைல ஆறு மணிக்குல்லாம் நம்மூர்ல கொண்டு எறக்கீருவான்’.

மல்டி அக்ஸில் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளியே வரவே பதினொன்றரை மணி ஆயிற்று. ஜே.கே சொன்ன மாதிரி பயணம் சௌரியமாக இருக்கும் என்பதற்கு முதல் அறிகுறியாக பஸ்ஸில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் போட்டார்கள். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த புஷ்டியான இளைஞர், வாய் நிறைந்த பாக்குடன் திரைப்படத்தை ரசித்துப் பார்த்தபடி, அவ்வப்போது என் தொடையைத் தட்டிச் சிரித்து மகிழ்ந்தவண்ணம் இருந்தார். அலுப்பும், சலிப்பும் தூக்கத்தை வரவழைக்க, என்னையறியாமல் உறங்கிப் போனேன். சொப்பனத்தில் சிவகார்த்திகேயனும், உங்கள் சத்யராஜும் சுந்தரத் தெலுங்கில் ஏதோ ஹாஸ்யமாகச் சொல்லிவிட்டு, அவர்களே சிரித்தார்கள். மேளம் முழங்க சாமி சப்பரம் ஒன்றை ஆளோடு ஆளாகச் சுமந்து செல்கிறேன். அழுகிய குல்கந்து வாசனை மூக்கில் அடிக்க, கடுமையாக தோள்வலித்தது. அரைத்தூக்கத்தில் முழித்துப் பார்த்தால், பக்கத்து இருக்கை இளைஞர், என் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

காலை எட்டே முக்காலுக்கு திருநவேலியில் சென்று இறங்கும் போது ஜே.கே ஃபோன் பண்ணினார்.

‘ஸார்! எத்தன மணிக்கு வீட்டுக்குப் போனீங்க?’

oOo

குளித்து முடித்து அப்பாவுடன் காலை உணவைச் சாப்பிட்டு முடிக்கும்போது மீனாட்சி வந்தான்.

‘போவோமால?’

அம்மன் சன்னதியிலிருந்து பைக்கை ஸ்டார்ட் பண்ணும் போது மீனாட்சி கேட்டான்.

‘எங்கே சித்தப்பா போக?’

வழக்கமாக முதல் சோலியாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கச் செல்வேன்.

‘எங்கெயாவது போ’.

கொஞ்சம் கடுமையாகச் சொன்னேன். கீழப்புதுத் தெரு வழியாகப் போய், தெற்குப் புதுத் தெருவுக்குள் நுழைந்து, வாகையடி முக்கைத் தாண்டும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சந்திப்பிள்ளையார் கோயிலை நெருங்கும் போதே தொண்டை அடைத்தது. வண்டி தானாக சுடலைமாடன் கோயில் தெருவுக்குள் சென்றது. தாத்தாவின் வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி, இறங்கும் போது மீனாட்சியின் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தேன். தாத்தாவின் வீடு இருக்கும் வளவுக்குள் நுழையும் போதே, மனம் படபடத்தது. வழக்கமாக நான் செல்லும் போது, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருக்கும் தாத்தா, நிமிர்ந்து பார்த்து ‘வாருமய்யா’ என்று உரக்கச் சொல்லி சிரிப்பார். தாத்தா உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு அருகே உள்ள மரத்தூணில் கட்டப்பட்டிருந்த கொடியில் சாயத்துண்டுகள் கொடியில் காய்ந்து கொண்டிருந்தன. பூட்டப்பட்டிருந்த அந்தக் காலத்து கனத்த மரக்கதவுக்கு முன்னே உள்ள படியில் சிறிது நேரம் நானும், மீனாட்சியும் உட்கார்ந்திருந்தோம். பழைய புத்தகங்களின் வாசனை, பூட்டியிருந்த அந்த வீட்டுக்குள் இருந்து வந்தது.

‘தாத்தா வாடை அடிக்கி. கவனிச்சேளா, சித்தப்பா?’

மீனாட்சி கேட்டான்.

தி.க.சி தாத்தாவின் வாசனையும், புத்தகங்களின் வாசனையும் ஒன்றுதான் என்பதை புத்தகங்களே படிக்காத மீனாட்சி சொன்னதில் ஆச்சரியமில்லை. அவன் தாத்தாவைப் படித்தவன். தாத்தாவின் இறுதி நாட்களில் அவர் மனதுக்கு நெருக்கமாக இருந்த வெகுசிலரில் அவனும் ஒருவன்.

சுடலைமாடன் கோயில் தெருவிலிருந்து வெளியே வரும்போது மனசு வெறுமையாகித் துப்புரவாகத் துடைத்த மாதிரி இருந்தது. எதுவுமே பேசாமல் பைக்கை குறுக்குத்துறைக்கு விட்டான், மீனாட்சி. சாலையோர மருதமரங்களும், வயல்வெளியும் சூழ்ந்த குறுக்குத்துறை ரோட்டில் ஆங்காங்கே புதிய கட்டிடங்கள், வேறு ஏதோ அசலூருக்கு வந்துவிட்டோமோ என்று குழம்ப வைத்தன. சிட்டி நர்சரி பள்ளி, பூமாதேவி கோயிலைத் தாண்டி, ரயில்வே க்ராஸ்ஸிங்கைக் கடந்தவுடன், பழமையும், பாரம்பர்யமும் நிறைந்த குறுக்குத்துறை தென்படத் துவங்கியது. தாமிரவருணியை ஒட்டிய குறுக்குத்துறை முருகன் கோயிலில் வண்டியை நிறுத்தி, உள்ளே கூட்டிச் சென்றான், மீனாட்சி. உள்ளே நுழையும் போதே யாரோ ஒரு தம்பதியினர் சஷ்டியப்த பூர்த்தி சடங்குகளில் அமர்ந்திருந்தனர்.

’அண்டமாய் அவனி யாகி
அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக் காக்க’.

மீனாட்சியின் உரத்த குரலில் குறுக்குத்துறை முருகனே ஒருகணம் திடுக்கிட்டு விழித்தார்.

‘சந்தனத்த பூசிக்கிடுங்க, சித்தப்பா. வெயிலுக்குக் குளிச்சையா இருக்கும்’.

சந்தனத்தை அள்ளி என் கைகளில் பூசினான். மோதிர விரலால் தடவி, சிறு தீற்றலாக நெற்றியில் இட்டுக் கொண்டேன். யாரோ ஒருவர் தாமிரவருணியில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன், மண்டபத்தின் வழியாக நெற்றி நிறைய திருநீறுடன் கோயிலுக்குள் நுழைந்தார். வேகவேகமான நடை. பிள்ளையாருக்கு முன் மூச்சிரைக்க ரொம்ப நேரமாகத் தோப்புக்கரணம் போட்டார். ‘ஆயிரத்தெட்டு போடுவாரோ! எண்ணுவோமா’ என்று மனதில் தோன்றி மறைந்தது.

‘பாத்தேளா! அண்ணாச்சில்லாம் ஒருநாளும் சுகர்மாத்திர சாப்பிட மாட்டா. ஆரோக்கிய வாள்கைல்லா வாளுதா’ என்றான் மீனாட்சி.

படித்துறை மண்டபம் வழியாக வரும்போது, ஆங்காங்கே ஜனங்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு, தூக்குச் சட்டி மூடியில் எலுமிச்சம்பழச்சோறு வைத்து சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஈர டிரவுசருடன், தலைகூட சரியாகத் துவட்டாமல், கல்மண்டபத்தில் அமர்ந்தபடி அந்தச் சிறுவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்கள் சாப்பிடுவதை எட்டிப் பார்த்தபடி வந்த மீனாட்சியை ஏசினேன்.

‘எல! சின்னப்பிள்ளேள் சாப்பிடுததை ஏன் எட்டிப் பாக்கே?’

‘இல்ல சித்தப்பா. பக்கத்துல இருக்கிற கிண்ணத்துல அந்த அக்கா பிள்ளையளுக்கு என்ன வச்சிருக்கான்னுப் பாத்தேன். பொரிகடலத் தொவையல்தான். அதானே நல்லா இருக்கும். கூட ரெண்டு வத்தல் வறுத்து கொண்டாந்திருக்கலாம்’.

திருநவேலியை விட்டு ஏன் மீனாட்சி நகர மாட்டேன்கிறான் என்பது புரிந்தது.

மறுநாள் காலையில் சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்குக் கிளம்பும் போது கால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் வந்தார்கள்.

‘போன தடவ உன் கூட வந்ததுதான். அப்புறம் போகவே இல்ல.’

போகிற வழியிலேயே வண்ணாரப்பேட்டையில் காரை நிறுத்தச் சொன்னார்கள்.

‘அங்கே பூச பண்ணுத சொரிமுத்து ஐயர் பிள்ளையளுக்கு பண்டம் வாங்கீட்டுப் போவோம்’.

மீனாட்சியும் வண்ணாரப்பேட்டையில் வந்து காரில் ஏறிக் கொள்ள எங்களின் குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்கு கார் விரைந்தது.

‘பேரப்பிள்ள! தென்கர மகராசா கோயிலோட விசேஷம் என்னன்னு தெரியுமாவே?’

முன்சீட்டிலிருந்த மீனாட்சியிடம் அப்பா கேட்க, ‘தேர் இருக்கிற சாஸ்தா கோயில்லா, தாத்தா’ என்றான், மீனாட்சி.

தென்கரை மகராஜா கோயில் வளாகத்துக்குள்ளேயே இருக்கும் சொரிமுத்து ஐயர் வீட்டு மாமியிடம் பிள்ளைகளுக்கு வாங்கிய பலகாரங்களைக் கொடுத்து விட்டு, கோயிலுக்குள் நுழைந்தோம். வாழ்க்கையில் இரண்டாம் முறையாகவே அந்த கோயிலுக்குள் நுழைகிறேன். ஆனால் அதற்கு முன்பு பல ஆயிரம் முறை வந்ததாக மனது உணர்ந்தது. கோயிலைச் சுற்றிலும் நான் பார்த்திராத என் பாட்டனார், முப்பாட்டனார் போன்ற மூதாதையர் ஆங்காங்கே நின்று, அமர்ந்து, தூண்களில் சாய்ந்தபடி இருந்தனர். அவர்களில் யாரோ ஒருவர், ‘அடிக்கடி வந்துட்டு போலெ’ என்று சொன்னார்கள். தென்கரை மகாராஜா சந்நிதிக்குள் நாங்கள் நுழையவும், மேளச்சத்தம் கேட்டது. சந்நிதியின் ஒரு வாசல் வழியாக பட்டு வேட்டி, சட்டை, கழுத்தில் மாலை சகிதம் மாப்பிள்ளையும், மறுவாசல் வழியாக கண்ணைப் பறிக்கும் கத்திரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவையுடன் மணப்பெண்ணும் நுழைந்தனர். சுற்றிலும் மினுமினுக்கும் கருப்புத் தோல் கிராமத்து மனிதர்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு நிரந்தரமாகத் தங்கியிருந்தது. சித்தூர் தென்கரை மகாராஜாவுக்கு முன்னால் தாலி கட்டும் போது, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். சில நொடிகளில் திருமணம் முடிந்தது. மணமக்களுக்காக பூஜை செய்து கொண்டிருந்தார், சொரிமுத்து ஐயர். வெளியே காத்து நிற்கும்போது, ‘இந்தப் பிள்ளைகள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்று மனதார வேண்டிக் கொண்டேன்.

‘பெரிய கல்யாண மண்டபத்துல கல்யாணத்த வச்சு, லச்சக்கணக்குல செலவு பண்ணி என்னத்துக்குங்க்கென்! என்ன தாத்தா?’

‘இங்கன வச்சு கல்யாணம் பண்றதுக்கு ஒரு கொடுப்பின வேணும்லா, பேரப்பிள்ளை’ என்றார்கள், அப்பா.

சொரிமுத்து ஐயர் அப்பாவை அடையாளம் கண்டு கொண்டார். பச்சைப்பிள்ளை மாதிரி சிரித்த முகத்துடன் உள்ளே நின்று கொண்டிருந்த தென்கரை மகாராஜாவைப் பார்த்து, ‘எய்யா’ என்று கண்கள் கசிய வணங்கினேன். வேறு எந்தப் பிரார்த்தனையும் சொல்லிக் கொள்ளவில்லை. சில நொடிகளுக்கு முன்னெப்போதும் உணர்ந்திராத நிசப்தம் மனம் முழுதும் பரவி, நிறைந்தது. வெளியே வந்து தளவாய் மாடசாமிக்குக் கொண்டு வந்த பூமாலைகளைக் கொடுத்து வணங்கிவிட்டு, பேச்சியம்மாளிடம் வந்தோம். பேச்சியம்மாள் விக்கிரகம் அப்படியொண்ணும் அலங்காரமானதல்ல. ஆனாலும் துடியான அமைப்பு. அவளிடமும் அடிக்கடி வாரோம் என்று சொல்லி வந்தோம்.

மாலையில் வண்ணதாசன் அண்ணாச்சியைப் போய்ப் பார்க்கலாம் என்று முடிவு செய்து போனால் வீடு பூட்டியிருந்தது. அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, மீனாட்சியுடன் ஜங்ஷன் வந்து சேரும்போது, ஓவியர் வள்ளிநாயகத்திடமிருந்து ஃபோன்.

‘எண்ணே! ஏசாதிய. கூட வேல பாக்கறவர் வீட்டுக் கல்யாணம். நம்ம கைல பொறுப்பக் குடுத்துட்டாரு. எங்கெ இருக்கியன்னு சொல்லுங்க. இந்தா வாரேன்’.

ஈரடுக்கு மேம்பாலத்துக்கு அருகே வேளுக்குடி கிருஷ்ணனின் நிகழ்ச்சி குறித்த பேனர் இருந்தது.

‘ஆகா! பிரமாதமாப் பேசுவாரே! முடிஞ்சுட்டா? கேக்கலாமே!’ என்றேன்.

’ஆங்! அதெல்லாம் நாம கேக்கக் கூடாது, சித்தப்பா. சவசவன்னு இருக்கும்’.

சட்டென்று சொன்னான், மீனாட்சி.

‘மெட்ராஸுக்குப் போயி சேரக்கூடாதவங்க கூடல்லாம் சேந்து ரொம்பல்லா கெட்டுப் போயிட்டிய.

‘ஏம்ல? ஆள்வார் பாசுரம்ல்லாம் எவ்வளவு நல்லா இருக்கும்! அதையெல்லாம் ஒதுக்கிட்டா அப்புறம் என்னல தமிளு?’

‘மாணிக்கவாசகர்ட்ட இல்லாத தமிளா? வைணவத் தமிளுல்லாம் அதுக்கிட்ட நிக்க முடியுமா? அதுல்லாம் நஞ்சு தோய்த்த தமிளு, சித்தப்பா. அத நாம கேக்கப்படாது. அப்படியே கேட்டாலும் அது நம்மள ஒண்ணும் செய்யாது. ஏன்னா நாம ஆலாலகண்டனுகள்லா!’

மேற்கொண்டு பேசினால் அந்த வீரசைவன், என் காதைக் கடித்துத் துப்பிவிடுவான் என்பதால், ‘சாப்பிடுவோமால? பசிக்கி. வள்ளி வந்துக்கிட்டிருக்கானான்னு கேளு’ என்று பேச்சை மாற்றினேன்.

கண்ணம்மன் கோயில் தெருவிலுள்ள ஒரு சாலையோரக்கடையில் ருசியும், பதமுமாக சுடச்சுட இட்லி, தோசை., சாம்பார், சட்னி. சென்னையில் உயர்ரக ஹோட்டல்கள் எதிலும் நான் காணாத சுவை.

‘அண்ணாச்சி! மொளாப்பொடி வைங்க’.

மீனாட்சி என் இலையைக் காட்டி சொன்னான்.

‘சித்தப்பா! எண்ணெ விட வேண்டாம். பாமாயிலு. நெஞ்சக் கரிக்கும்’.

சாப்பிட்டு முடித்து மீனாட்சி விடைபெற்றுக் கொள்ள, வள்ளிநாயகத்துடன் டவுணுக்குத் திரும்பினேன்.

‘கீள்ப்பாலம் வளியா நடந்து போவோமாண்ணே?’

தனது டி.வி.எஸ் 50யை வள்ளி உருட்டியபடியே, என்னுடன் நடக்க ஆரம்பித்தான். பாலத்தின் இறக்கம் வரும்போது, ‘இப்பம் என்னண்ணே படிச்சுக்கிட்டிருக்கிய?’ என்று வள்ளி கேட்க, ‘ரொம்ப நாள் களிச்சு புதுமைப்பித்தன மறுபடியும் படிக்கேண்டே! அதுவும் சங்குதேவனின் தர்மம் படிச்சுட்டு, மேற்கொண்டு படிக்க முடியாம மூடி வச்சுட்டேன் பாத்துக்கோ’. நான் இப்படி சொல்லவும், உருட்டிக் கொண்டிருந்த டி.வி.எஸ் 50யை நிறுத்தி, ‘எண்ணே!’ என்று கிட்டத்தட்ட வள்ளி அலறினான். ‘என்னாச்சு வள்ளி?’

‘எண்ணே! சங்குதேவனின் தர்மம் கதைல வார கைலாசபுரம் ரோட்டுலதானே இப்பம் நாம நிக்கோம்’ என்றான்.

பிறகு டவுண் வரைக்கும் புதுமைப்பித்தனும் எங்களுடன் நடந்து வந்தார். ஆர்ச்சுக்கு அருகில் ‘இங்கன ரெண்டு நிமிஷம் நிப்போம்’ என்றான், வள்ளி. காரணம் கேட்டதற்கு, நயினார் கொளத்துக் காத்தும், சாமிசன்னதி காத்தும் சேந்து அடிக்கிற எடம் இது ஒண்ணுதான். கொஞ்சம் அனுபவியுங்க’ என்றான். ‘இந்தப் பயலுக நம்மள மெட்ராஸுக்கு ரயிலேற விட மாட்டானுவ போலுக்கே’ என்று பயமாக இருந்தது. அம்மன் சன்னதியில் வீட்டுக்கு முன்னால் வந்து நிற்கும் போது, கா.சு. பிள்ளை நூலகத்துக்கு அடுத்துள்ள இடிந்த வீட்டின், தூசு படிந்த நடைப்படியில் அமர்ந்து ஒரு கோட்டிக்காரத் தோற்றத்து மனிதர் , இலையை விரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ‘அங்கெ பாரு வள்ளி’ என்றேன்.

‘கல்கி ஞாவகம் வருதுண்ணே’ என்றான், வள்ளி. சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தக் கோட்டிக்காரரைப் பார்த்தபடியே மேலும் சொன்னான்.
‘குறுக்குத்துறயப் பத்தி கல்கி சொன்னாருல்லா! சுழித்து ஓடும் ஆறு. இவ்வளவு அழகான படித்துறை. இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறைன்னு. அந்த மாரி திருநவேலில எந்த நேரமும், யாராவது ஒருத்தன் சாப்பிட்டுக்கிட்டிருப்பான்’. . . .

சில நொடிகள் மௌனத்துக்குப் பிறகு ‘கெடைக்கவும் செய்யும்’ என்றான். நான் வள்ளியின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

மறுநாள்தான் நான் திருநவேலிக்குச் சென்றதற்கான நாள். ‘காலைல ஆறர மணிக்குல்லாம் வந்துருல. நம்ம சிருங்கேரி மடம்தான்’ குஞ்சு சொல்லியிருந்தான். நண்பன் ராமசுப்பிரமணியனுடன் மண்டபத்துக்குள் நுழையும் போது, ஹோமப்புகை நடுவே பிராமண வேஷத்திலிருந்து குஞ்சுவும், அவன் மகனும் சிரிப்பை அடக்க முடியாமல் என்னைப் பார்த்து சிரித்தார்கள். இருவருமே பூஜை மந்திரங்களுக்கு வாயசைத்துக் கொண்டிருந்தனர். குஞ்சுவின் உறவினர்கள் ஒவ்வொருவராக என்னிடம் வந்துப் பேசினார்கள். பெண்கள் பேசும் போது மட்டும், கண்ணைக் கசக்கிக் கொண்டு, வாயசைப்பதை நிறுத்தி தூரத்திலிருக்கும் என்னை உன்னிப்பாக கவனித்தான், குஞ்சு. அவ்வப்போது பூஜையிலிருந்து எழுந்து வந்து என் தோளில் கைபோட்டபடி ‘எங்க மாமா’ என்று எல்லோருக்கும் காட்டும் வண்ணம் நின்று கொண்டான், குஞ்சுவின் மகன். மண்டபத்தில் பெரும்பாலும் பிராமின்ஸ் என்பதால் முக்கால்வாசி பேர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு மாமி என்னிடம் வந்து, ‘நீங்க அவர்தானே?’ என்றார். ‘ஆமாங்க’ என்று பொத்தாம் பொதுவாகத் தலையசைத்து வைத்தேன். உடனே யாருக்கோ ஃபோன் பண்ணி, ‘ஏடீ, ஒனக்கு ரொம்பப் புடிக்குமே, சுரா! அவர் வந்திருக்கர். அதான்டி ஆனந்த விகடன்ல மூங்கில் காத்து எளுதுனாரே! அவரேதான்’ என்றார்.

சிறு வயதிலிருந்தே நான் பார்த்து பழகிய சிறுவர்கள், என்னைப் பார்த்துப் பழக்கப்பட்ட பெரியவர்கள் சூழ பந்தியில் அமர்ந்து சாப்பிட்டேன். குஞ்சுவும் வழக்கம் போல என்னருகிலேயே உட்கார்ந்து கொண்டான்.

கண்ணை மூடி முழிக்கும் முன் சென்னைக்குக் கிளம்பும் நேரம் வந்தது. ஏற்கனவே ஜே.கேயிடம் ‘டிரெயின்லயோ, ஃபிளைட்லயோ ரிட்டர்ன் டிக்கட் போடுங்க. பஸ்ல போடறதா இருந்தா, நான் திருநவேலிலயே இருந்துக்கிடுதேன்’ என்று சொல்லியிருந்தேன். ஏதோ ஒரு படப்பிடிப்புக்காக திருநவேலிக்கே வந்திருந்த ஜே.கே, ‘சாயங்காலம் ஸ்டேஷனுக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்திருங்க, ஸார். டிக்கட்டக் கையோட கொண்டுட்டு வாரேன்’ என்றார்.

கால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் ஸ்டேஷனுக்கு கிளம்ப முயல, ‘வேண்டாம், நீங்க அங்கெ வந்து நின்னுக்கிட்டிருக்க வேண்டாம்’ என்று சொல்லித் தடுத்து, விழுந்து வணங்கி, திருநீறு பூசச் செய்து கிளம்பினேன். வழக்கமாக மீனாட்சி, எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி, ஓவியர் வள்ளிநாயகம் போன்றோருடன் ரயில்வே ஸ்டேஷனில் அரட்டையடித்து விட்டு ரயிலேறுவது வழக்கம். இந்த முறை ஒருமணி நேரத்துக்கு முன்பே வண்ணதாசன் அண்ணாச்சி வந்து விட்டார்கள். தி.க.சி தாத்தா இறந்த பிறகு அண்ணாச்சியை அப்போதுதான் பார்த்தேன். தோள் தொட்டு அணைத்துக் கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘இந்த மட்டம் திருநவேலி ட்ரிப்பு ரொம்ப விசேஷம், தாத்தா இல்லாத ஒரு கொறயத் தவிர. ஆனா அதயும் நீங்க வந்து இல்லாம பண்ணிட்டிய’ என்றேன்.

‘பச்ச சிக்னல் போட்டுட்டான். ஏறு’ என்று அண்ணாச்சி பிடித்து ரயிலில் ஏற்றி விட்டார்கள்.

ரயில் நகர நகர, மனதுக்குள் ‘வாருமய்யா பேரப்புள்ள, தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி, எப்போது, இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறை, பாமாயில் நெஞ்சக் கரிக்கும், நயினார் குளத்துக் காத்தும், சாமி சன்னதிக் காத்தும் சேத்து அடிக்கிற இடம், சங்குதேவன் நடந்த கைலாசபுரம் ரோடுல்லா, கால்வலின்னாலும் பரவாயில்ல. நானும் வாரேன்’ . . . . . இப்படி பல ஒலிகளும், பிம்பங்களுமாக ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று ஒரு சிறுவனின் அழுகுரல் கவனம் கலைத்தது. தன் தாயுடன் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் திருநவேலியிலிருந்து சென்னைக்குத் திரும்புகிற, சேரன்மகாதேவியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஆதித்தனின் பேரன் உரத்த குரலெடுத்து அழுது கொண்டிருந்தான்.

‘திருநவேலி நல்ல ஊரும்மா. நாம இங்கெயே இருக்கலாம்மா. ப்ளீஸ். எறங்கிப் போயிரலாம்மா’.

கம்பார்ட்மெண்டில் இருந்த எல்லோரும் அவனைப் பார்க்கத் தொடங்கினர். தர்மசங்கடத்துடன் அவனது தாயார், ‘சத்தம் போடாதே. எல்லாரும் பாக்காங்க பாரு’ என்று கண்டிப்பான குரலில் அதட்டினார்.

‘விடுங்கம்மா. அவனாவது வாய்விட்டு அளட்டும்’ என்றேன்.

post

ஆசான்களின் ஆசான்

ஜெயகாந்தனின் எழுத்து எனக்கு அறிமுகமாவதற்கு முன்பே அவரது பெயரும், புகழ் பெற்ற அவருடைய பல பேச்சுகளும், எனது தகப்பனார் மூலம் எனக்கு நன்கு பரிச்சயம். அதனால்தானோ என்னவோ, பதின்வயதுகளின் மத்தியில் அப்பாவின் நூலறையில் ஜெயகாந்தனின் புத்தகங்களை எடுத்து வாசிக்கத் துவங்கியபோது, ‘ஜெயகாந்தன்’ எனக்கு அந்நியமாகத் தெரியவில்லை.

‘காதல் என்பது மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்பமான காரணங்களே போதும். காதல்வயப்பட்டவர்களிடையே கூட அந்தக் காதல் வளர்வதற்கும், மேன்மையுறுவதற்கும் அந்தக் காதலோடு சேர்ந்த வேறு குணநலன்களே காரணமாயிருக்கின்றன’.

அந்த இளவயதில் ஜெயகாந்தனின் மேற்கண்ட வரிகளை நான் படித்ததனாலேயே ‘நீ நடந்தால் எனக்கு கால் வலிக்கிறது. நீ குனிந்தால் எனக்கு குறுக்கு வலிக்கிறது’ போன்ற காதல் கவிதைகளிலிருந்து என்னால் தப்பிக்க முடிந்தது. இன்றைய என் வாசிப்பின் தேர்வை, அடிப்படை ரசனையை ஜெயகாந்தனின் எழுத்துகளின் வாயிலாக எனக்குக் கிடைத்த வாசிப்பனுபவத்தின் மூலமாகவே நான் அமைத்துக் கொண்டேன். பரிட்சைக்குப் படிப்பது போல ஜெயகாந்தனின் சிறுகதைகள், கட்டுரைகள், முன்னுரைகள், குறுநாவல்கள், நாவல்கள் என ஒன்று விடாமல் படித்துத் தீர்த்த நாட்களை அசை போடுவதே இப்போதும் சுகமாக உள்ளது.

சென்னைக்கு வந்தபின் ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவும் என்னைப் போலவே தீவிரமான ‘ஜெயகாந்தனின் வாசகர்’ என்பதை அறிந்த போது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. ‘ஜெயகாந்தன் படிச்சிருக்கியா?’ என்று சாதாரணமாகக் கேட்கப் போக, நான் வரிசையாக ஜெயகாந்தனின் கதைகளைப் பற்றி ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல, வாத்தியாருக்கு அத்தனை மகிழ்ச்சி. வாத்தியார் மறந்து போயிருந்த ஜெயகாந்தனின் கவிதைகளில் ஒன்றிரண்டை அவருக்கு நினைவுபடுத்தினேன்.

‘ஒற்றைச் செருப்பு
ஒன்று கிடக்கிறது
இடமோ வலமோ
எதுவும் தெரியவில்லை
குப்புறக் கிடந்து
குமுறி அழுகிறது!
இணையைப் பிரிந்த
இலக்கியச் சோகம்
இதற்கு மட்டும்
இல்லையா என்ன?
பொருள்வயின் பிரிந்ததோ?
போர்வயின் பிரிந்ததோ?
உயிர்செலப் பிரிந்ததோ?
ஊழ்வினை மேல்வந்து
உறுத்தலால் பிரிந்ததோ?
கவிதையின் சோகமிக்
காலணிக்கில்லையோ?’

‘ரொம்ப சந்தோஷம்பா. யூ நோ சம்திங்? ஜெயகாந்தனைப் பத்திப் பேசறதுக்கு ஆள் கெடைக்காம நான் ரொம்ப நாளா தவிச்சுக்கிட்டிருந்தேன்’ என்றார், ‘வாத்தியார்’. உற்சாகமான மனநிலையில் இருக்கும் போது, அவருக்கு மிகவும் பிடித்த ஜெயகாந்தனின் கவிதையொன்றை நினைவுபடுத்திச் சிரிப்பார். ‘எங்கே? அந்த வரிகளச் சொல்லு’.

‘அட்சய வயிறு படைத்தீரே? – ஓர்
அட்சய பாத்திரம் பார்த்தீரோ?
பிச்சை கிடைத்துப் புசித்தீரே! – அந்தப்
பிச்சையிட் டவனைப் பார்த்தீரோ?
லச்சையை விட்டுச் சுகித்தீரே! – என்
லாகிரிப் பொருளைப் பழிப்பீரோ?
பத்தினிக் கதைகள் படிப்பீரே! – உம்
மச்சினி கிடைத்தால் விடுவீரோ?’

உரக்க சிரித்து, ‘அந்த மனுஷன் தொடாத ஏரியாவே கெடயாதுப்பா’ என்பார். அவ்வப்போது ஜெயகாந்தனைப் பார்க்க ‘வாத்தியார்’ செல்லும் போது, உடன் செல்லும் நான் சற்றுத் தள்ளி நின்று கொள்வேன். எத்தனையோ முறை ஜெயகாந்தனிடம் அறிமுகப்படுத்த அழைத்து ‘வாத்தியார்’ வற்புறுத்திய போதும், பணிவோடு தவிர்த்து வந்தேன். அதற்குக் காரணம், ஜெயகாந்தன் என்னும் ஆளுமையின் மேல் எனக்கிருந்த மரியாதை கலந்த பயமா, என்ன என்று இப்போது யோசித்துப் பார்த்தால் சொல்லத் தெரியவில்லை. ஜெயகாந்தனின் மணிவிழா நடந்தபோது, விழாவில் கலந்து கொள்ள வாத்தியாருடன் நானும் சென்றிருந்தேன். காமராஜர் அரங்கத்தில் நாங்கள் நுழைந்த போது, அரங்கம் நிறைந்திருந்தது. இருக்கைகளில் இடமில்லாமல் பலர் தரையில் உட்கார்ந்திருந்தனர். காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார், மத்திய அமைச்சர் அருணாசலம் போன்றோர் கலந்து கொண்ட அந்த விழாவில் வாத்தியாரின் பேச்சு அத்தனை அற்புதமாக அமைந்தது. ஜெயகாந்தனின் எழுத்து, தனிப்பட்ட முறையில் தன்னை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதைப் பற்றி ஆத்மார்த்தமாக பேசினார். மறுநாள் ஜெயகாந்தனைப் பார்க்க வாத்தியார் சென்றிருந்த போது ஜெயகாந்தன் ஆங்கிலத்தில் சொன்னார்.

’நேற்று உங்கள் பேச்சு நன்றாக இருந்தது, என்னுடையதையும் விட’.

பெரும்பாலும் வாத்தியாருடன் பேசும் போதெல்லாம் ஜெயகாந்தன் ஆங்கிலத்தில் பேசுவதை கவனித்திருக்கிறேன். இத்தனைக்கும் ‘வாத்தியார்’ தமிழில்தான் ஜெயகாந்தனிடம் பேசுவார்.

ஜெயகாந்தனைத் தவிர்த்து பிற எழுத்தாளர்களின் எழுத்துகளின்பால் மனம் திரும்பிய பிறகும், ஜெயகாந்தனை வாசிப்பது தொடர்ந்து கொண்டுதானிருந்தது. இலக்கியப் பரிச்சயம் உள்ள, நெருக்கமான நண்பர்களிடம் ஜெயகாந்தனின் எழுத்துகளைப் பற்றிச் சொல்வதுண்டு. நேரடியாக நவீன தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்துவிட்டபடியால் ஜெயகாந்தனை தான் வாசித்ததே இல்லை என்று நண்பர் செழியன் ஒருமுறை சொன்னார். செழியனுக்கு ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பொன்றைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னேன். அந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த ‘நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்’ என்ற சிறுகதை இருந்தது. என்னைப் போலவே செழியனையும் அந்தச் சிறுகதை வெகுவாக பாதித்து விட்டதாக செழியன் சொன்னார்.

‘திருவல்லிக்கேணில ஒரு வீட்டு ஜன்னல்ல யாரோ ஒரு பாட்டி உக்காந்திருக்கிறத பாத்து, எனக்கு ‘நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்’ கத ஞாபகம் வந்திடுச்சு. என் கைல கேமரா இருந்திருந்தா ஃபோட்டோ எடுத்துட்டு வந்து ஒங்கக்கிட்ட காமிச்சிருப்பேன். என்னா கதைங்க, அது!’.

அதற்குப் பிறகு ஜெயகாந்தனின் கதைகளைப் பற்றிப் பேச எனக்கு செழியன் கிடைத்தார்.

நண்பர் ஜெயமோகனும், நானும் ஜெயகாந்தனின் எழுத்துகளைப் பற்றி மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம். அவரது புகழ் பெற்ற சிறுகதைகளான ‘யுகசந்தி, அடல்ட்ஸ் ஒன்லி, குருபீடம், லவ் பண்ணுங்கோ ஸார், மௌனம் ஒரு பாஷை, அக்கினிப் பிரவேசம், நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ போன்றவை தவறாமல் எங்கள் உரையாடலில் இடம்பெறுபவை. இவற்றில் ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ சிறுகதை பற்றி ஜெயமோகன் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார். ஜெயகாந்தனின் சிறுகதைகளில் எங்கள் இருவருக்கும் பிடித்த கதை, ‘எங்கோ, யாரோ, யாருக்காகவோ’. குறுநாவல்களில் ‘விழுதுகள்’. காசியில் ஒரு நாள் மாலையிலிருந்து நள்ளிரவு வரைக்கும் ‘விழுதுகள்’ பற்றி நானும், ஜெயமோகனும் பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய என் சொப்பனத்தில் ‘விழுதுகள்’ குறுநாவலின் ‘ஓங்கூர் சாமி’ கையில் சிலும்பியுடன் வந்தார்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பர் ஜெயமோகனுடன் ஜெயகாந்தனை சந்திக்கச் சென்றிருந்தேன். பழைய அச்சம் கொஞ்சம் விலகியிருந்தது. ஜெயகாந்தனை ‘அப்பா’ என்றழைக்கும் நண்பர் அன்பு எங்களை அழைத்துச் சென்றார். எங்களுடன் நண்பர் செழியனும் வந்திருந்தார். மாடிப்படிகளேறி நாங்கள் சென்ற போது, சபை கூடியிருந்தது. வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தோம். ஒரு நீள மர மேஜைக்கு முன்னால், நடுநாயகமாக சுழலும் நாற்காலியொன்றில் ஜே.கே வீற்றிருந்தார். தரையில் யாரோ ஒரு தோழர் மும்முரமாக ஏதோ ஒரு வஸ்துவை தயாரித்துக் கொண்டிருந்தார். மிக தீவீரமாக பேசிக் கொண்டிருந்த ஜே.கே, எங்கள் வருகையினால் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டுதானிருந்தார். சிறிது நேரத்தில் தரையில் இருந்தபடியே அந்தத் தோழர், ஒரு துணியைச் சுற்றி, அந்த ‘ஏதோ’வை கோயில் பிரசாதம் போல பவ்யமாக ஜே.கே.யிடம் கொடுக்க, ஜே.கே அதை வாங்கி, முறுக்கிய தன் மீசையை விலக்கி, வாயில் வைத்து உள்ளிழுத்து, சிலநொடிகளுக்குப் பின் புகையை வெளியே விட்டார். கண்கள் முன்னைவிட ஜொலித்தன. எனக்கு ‘ஓங்கூர் சாமி’யை நேரில் பார்ப்பது போல இருந்தது. ஒரு சின்ன செருமலுக்குப் பின் மீண்டும் பேசத் தொடங்கினார். இதற்குள் அந்த ‘ஏதோ’ மேஜையைச் சுற்றிலும் உள்ள மற்ற அன்பர்களின் கைகளில் ஒரு ரவுண்டு வந்தது. இந்த சூழலில் சும்மா அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சிறிது நேரத்திலேயே லேசாக தலைசுற்ற ஆரம்பித்தது. என்னை ஒட்டிக் கொண்டு அருகிலேயே அமர்ந்திருந்த செழியன் தூரத்தில் தெரிந்தார். எதிரே அமர்ந்திருந்த நண்பர் அன்பு, உருமாறி பெண்பிள்ளை போல காட்சியளித்தார். ஜெயமோகன் மூன்று குரல்களில் பேசிக் கொண்டிருந்தார். ஜே.கே.வுக்கு வணக்கம் சொல்லிக் கிளம்பும் போது செழியனின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, படிகளில் இறங்கினேன். ‘சிவமூலிகை’யை சுவாசித்ததால், அன்றைய இரவு நண்பர் ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருக்க முடியாமல் சீக்கிரமே உறங்கிப் போனேன். ஆனாலும் வழக்கம் போல ஜெயமோகன் தொடர்ந்து என்னிடம் பேசிக் கொண்டுதானிருந்தார்.

அதற்குப் பிறகு ஜே.கேயை சந்திப்பதற்கு ஜே.கே.யை தன் மானசீக குருவாக ஆராதிக்கிற எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அவர்களுடன் பலமுறை சென்றிருக்கிறேன். அந்த சமயங்களில் சிவமூலிகையை, தன்னுடைய பழக்க, வழக்கங்கள் பற்றிய ஒளிவுமறைவில்லாத ஜே.கே விட்டொழித்திருந்தார். வ.ஸ்ரீநிவாசனுக்கும், ஜெயகாந்தனுக்கும் ஏற்கனவே நல்ல அறிமுகமும், தொடர்பும் இருந்த காரணத்தினால் அவருடன் போகும் போதெல்லாம் மெல்ல மெல்ல ஜே.கே.யுடன் நெருக்கமாகப் பேச முடிந்தது. ஒன்றிரண்டு சந்திப்புகளில் ஜே.கேக்கு என்னைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. சில நேரங்களில் எங்களுடன் நண்பர் கே.பி.விநோத்தும் வருவார். அந்த சமயத்தில் ஜெயகாந்தனின் எழுத்துகளைப் படித்திராத விநோத்துடன் ஜே.கே பிரியமாகப் பேசுவார். ஒருநாள் அப்படி பேசிக்கொண்டிருக்கையில் விநோத், ஜே.கேயிடம் சொன்னார்.

‘ஐயா! இப்பதான் நான் ‘யுகசந்தி’ படிச்சேன்’.

உடனே ஜே.கே. கேட்டார்.

‘முன்ன ஒரு ‘யுகசந்தி’தான் இருந்தது. இப்ப இன்னொண்ணும் இருக்கே! நீங்க எதை படிச்சீங்க?’

அருகில் அமர்ந்திருந்த எனக்கு சட்டென்று நெஞ்சடைத்தது. ஏனென்றால் ஜே.கே குறிப்பிட்ட இன்னொரு ‘யுகசந்தி’ கட்டுரை ‘வார்த்தை’ சிற்றிதழில் அப்போதுதான் வெளிவந்திருந்தது. அதை எழுதியவன், நான்.

கே.பி.விநோத் பதிலளித்தார். ‘இவரோட ‘யுகசந்தி’யப் படிச்சுட்டு அப்புறமா நீங்க எழுதின ’யுகசந்தி’யப் படிச்சேன்யா’.

நான் மனதுக்குள் கே.பி.விநோத்தை கெட்ட வார்த்தைகளில் ஏச ஆரம்பித்தேன். ‘வாய வச்சுக்கிட்டு இந்த மலயாளத்தான் சும்மா கெடக்க மாட்டான், போலுக்கெ! வெளிய போன ஒடனெ வளுக்கமண்டைல நங்கு நங்குன்னு நாலு குட்டு குட்டணும்’.

’யுகசந்தி’ன்னு நம்ம தலைப்புல என்ன எழுதியிருக்காருன்னு பாப்போமேன்னு படிச்சுப் பாத்தா, அதுல யுகசந்தியப் பத்தி என்ன இருக்கு? எல்லாம் ஜெயகாந்தனப் பத்தில்ல எழுதி வச்சிருக்காரு!’.

ஜே.கே என்னைக் காண்பித்து சொன்னார். அத்தோடு அந்த டாப்பிக் முடிந்தது. எனக்கும் உயிர் போய் வந்தது. ஆனாலும் மனதுக்குள் ஜெயகாந்தன் நாம் எழுதியதைப் படித்திருக்கிறார் என்கிற நிறைவு.

ஜெயமோகனும், நானும் நெருக்கமான நண்பர்கள் என்பதை ஜே.கே அறிவார். அதனாலேயே நான் போனவுடன், ‘என்ன? ஜெயமோகனும், நீங்களும் இப்ப எதைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கீங்க?’ என்று கேட்பார். ஒருநாள் அப்படி அவர் கேட்டபோது சொன்னேன். ‘சைவ, வைணவ பெயர்களப் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம்’.

‘அதுல என்ன டிஸ்கஷன்?’

‘இல்ல. வைணவப் பெயர்களை வச்சுருக்கிற சைவர்களப் பாக்க முடியுது. ஆனா சைவப் பெயர்கள் வச்சிருக்கிற வைணவர்கள்னு யாரையும் சட்டுன்னு சொல்லிட முடியலியே!’

ஆமோதிக்கும் விதமாகத் தலையை ஆட்டியபடி சொன்னார்.

‘ஆமாமா. ஒரு பரமசிவ ஐயங்கார நீங்க பாத்துர முடியாது. ஆனா வீர சைவர்கள் கூட வைணவப் பெயர்கள் வச்சுக்குவாங்க. அதுக்கு சிறந்த உதாரணமே . . .’

சில நொடிகள் என்னைப் பார்த்துவிட்டு, ‘வேற யாரு? ஒங்க அப்பன்தான்’ என்றார்.

வ.ஸ்ரீநிவாசன் அவர்களுடன் ஜே.கேயை அடிக்கடி சென்று பார்ப்பது தொடர்ந்தது. தனது நீண்டநாள் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் அவர் முற்றிலுமாக துறந்திருந்தார். சில சமயம் அமைதியாக எதுவுமே பேசாமல் அமர்ந்திருப்பார். நாங்களும் அவரது அமைதியைத் தொந்தரவு செய்யாமல் சபையில் அமர்ந்திருந்து விட்டு கிளம்பி வருவோம். நன்றாக அவர் பேசிக் கொண்டிருக்கும் போது எங்களுக்குக் கிடைக்கும் அதே சுகானுபவத்தை, அந்த அமைதியிலும் எங்களால் உணர முடிந்திருக்கிறது. பிற சமயங்களில் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பார். ஒருநாள் நாங்கள் சென்ற போது, ‘கடித இலக்கியம்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் சென்று அமர்ந்தவுடன், என் பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்து விட்டார்.

‘நீங்கள் என்னை மதித்து எனக்கு ஒரு கடிதம் எழுதுகிறீர்கள். பதிலுக்கு உங்களை மதித்து நான் ஒரு கடிதம் எழுதுகிறேன். உங்கள் அந்தரங்கத்தை நானும், எனது அந்தரங்கத்தை நீங்களும் மதிப்பதனாலேயே நாம் இருவரும் தனிப்பட்ட முறையில் நம் எண்ணங்களை பரிமாறிக் கொள்கிறோம். இதை ‘கடித இலக்கியம்’ என்கிற பெயரில் பொதுவில் வெளியிடுவது, நாம் இருவருமே ஒருவரைக்கொருவரை அவமதித்துக் கொள்ளும் செயல், இல்லையா?’

எனக்கு மனதுக்குள் அவர் எழுதிய ‘அந்தரங்கம் புனிதமானது’ சிறுகதை ஓடிக்கொண்டிருந்தது.

ஜே.கேயிடம் நான் ஆச்சரியப்பட்ட பல விஷயங்களில் குறிப்பாக சொல்வதென்றால், அவருடைய நினைவாற்றல். அவரது ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ புத்தகத்திலிருந்து அவரது சொற்பொழிவுகள் பற்றி நான் நினைவுபடுத்திச் சொன்ன போதெல்லாம், ஒரு வார்த்தை கூட பிசகாமல் அவற்றை அப்படியே மீண்டும் சொல்வதைக் கேட்டு அசந்து போயிருக்கிறேன். அவர் எழுதிய, பேசிய வார்த்தைகள் அத்தனையும் நிதானமான சிந்தனையில் உதித்தவைகளே. இதை அவர் சொல்லச் சொல்ல பல கதைகளை எழுதிய பி.ச.குப்புசாமி அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ‘அந்த இடத்துல அந்த வார்த்தைக்கு பதிலா, வேற வார்த்தை போடணும்னோ, இத கொஞ்சம் மாத்தி எழுதணும்னோ ஜே.கே ஒருபோதும் சொன்னதேயில்ல. முதல் முறையா சொல்லும் போதே அத்தனை தெளிவோட, சுத்தமா வந்து வார்த்தைகள் ஒவ்வொண்ணா விழும்’.

நேர்ப்பேச்சிலும் அத்தனை தெளிவை ஜே.கே.விடம் பார்த்திருக்கிறேன். அவரது வீட்டை இடித்துவிட்டு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட இருப்பதால், ஜே.கே வீடு மாறுகிறார் என்ற செய்தியை நண்பர் அன்பு சொன்னார். ஜே.கே தன் நண்பர்களை சந்திக்கிற ‘மடம்’ இனி இருக்காதே என்கிற கவலையுடன் அவரைப் பார்க்க அன்புவுடன் சென்றேன். ஜே.கேயுடன் சிறிதுநேரம் இருந்துவிட்டு, கிளம்பும்போது முதன்முறையாக அனிச்சையாகக் குனிந்து அவர் பாதங்களைத் தொட்டேன். ‘நல்லதே நடக்கட்டும்’ என்று ஆசீர்வதித்தார். விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்து நான் செருப்பை மாட்டிக் கொண்டிருக்கும் போது, உள்ளிருந்து ஜே.கே சொன்னார்.

‘மூத்தோரை மதிக்கும் பண்பு, நம் இளையதலைமுறையினரிடம் மறைந்து போய்விடாதுங்கற என் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது, உங்கள் பண்பு. இது நம் மரபு. ஒருபோதும் இதை விட்டுடக் கூடாது’.

அதன்பிறகு ஜே.கே வீடு மாறியபின்னர் நண்பர் ஜெயமோகன் சென்னைக்கு வரும்போதெல்லாம் நானும், அவரும் சென்று ஜே.கே.வைப் பார்ப்பதுண்டு. அதிகமாகப் பேசாத, புன்னகை தவழ்ந்த முகத்துடன், அமைதியாக அமர்ந்திருக்கிற ஜே.கே.யைப் பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வருவோம். அவரது புதிய வீட்டில் ‘வீடு’ இருந்தது. ‘மடம்’ இல்லை. இதுபற்றி மாமியே குறைப்பட்டுக் கொண்டார்கள். ‘இந்த ஃபிளாட் கட்டும் போது, ஜே.கே.க்குன்னு ஒரு மடம் வேணுமேன்னு எங்களுக்குத் தோணவே இல்ல. அதுதான் அவரோட இடம்’.

‘வாத்தியார்’ பாலுமகேந்திரா காலமாவதற்கு சில நாட்களுக்கு முன்பு ‘ஜே.கே உடம்பு சரியில்லாம இருக்காராமே! ஒருநாள் அவரப் போயி பாத்துட்டு வரலாம். என்னைக் கூட்டிட்டு போ’ என்றார். வாத்தியார் கேட்டு நான் செய்ய முடியாமல் போனது அது ஒன்றுதான்.

’எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்’ என்கிற தலைப்பில் ஜெயகாந்தனைப் பற்றிய ஆவணப்படம் தயாரித்த இளையராஜா அவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் தவறாமல் என்னிடம் கேட்கும் கேள்வி. ‘ஜே.கேயப் பாத்தியா? என்ன சொன்னார்?’

ஒவ்வொரு சமயமும் ஒவ்வொன்றைச் சொல்வேன். ஞானபீட விருது தனக்கு வழங்கப்பட்டது குறித்து ஜே.கே சொன்னதைச் சொல்லும் போதெல்லாம் அப்படி ரசிப்பார், இளையராஜா.

‘ஞானம் என்பது பீடமல்ல. கிரீடம். அதை நான் ஏற்கனவே தரித்திருக்கிறேன்’.

‘யோசிச்சுல்லாம் இப்படி சொல்ல மாட்டாரு, ஜே.கே. சின்ன வயசுல இருந்து அவரு பேச்சு எவ்வளவு கேட்டிருக்கேன்!’

பழைய நினைவுகளில் மூழ்கிப் போவார், இளையராஜா.

‘வாழ்க்கைல எத்தனையோ பெரிய ஆட்களப் பாத்தாச்சு. ஆனா நான் பாத்ததிலயே ஹீரோன்னா அது ஜே.கே தான்ப்பா.’

இளையராஜா சொல்வதை இன்னும் பலர் வேறு வேறு வார்த்தைகளில் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

சமீபத்தில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஜே.கே எழுதிய ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ நாவலை நினைவுபடுத்தும் விதமாக நான் ஏதோ சொன்ன போது, பி.ஏ.கே சொன்னார்.

‘அட! என்ன ஒரு கோ-இன்ஸிடன்ஸ் பாருங்க! நான் இப்ப அந்த நாவல்தான் படிச்சுக்கிட்டிருக்கேன்’.

ஒரே ஊர்க்காரர்கள் ஒத்தசிந்தனையுடைவர்களாகத்தான் இருப்பார்களோ என்று நான் சந்தோஷமாகச் சந்தேகிக்கும் வண்ணம், என் மனதில் ஜெயகாந்தனைப் பற்றி ரகசியமாக நான் ஒளித்து வைத்திருக்கும் வார்த்தைகளை, தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த, பி.ஏ.கிருஷ்ணனின் குரலில் கேட்டேன். ‘இன்னைக்கு இருக்கிற அளவுகோல்கள வச்சு நாம ஜெயகாந்தன மதிப்பிடக் கூடாது. இன்னும் சொல்லப் போனா நாம அவர மதிப்பிடவே கூடாது. ஏன்னா, நமக்கு அவர் ஆசான்லா’.

post

உள்காய்ச்சல்

‘எல, இப்பதானெ காலேஜு விட்டு வந்தே? அதுக்குள்ள எங்கெ கெளம்பிட்டெ? பதிலேதும் சொல்லாமல் கண்ணாடி முன் நின்று உதட்டைக் கடித்தபடி தலை சீவிக் கொண்டிருந்தான் திரவியம்.

’ஒன்ட்டத்தானெ கேக்கென்?’

சிவகாமி மறுபடியும் மகனைப் பார்த்துக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை. செருப்பை மாட்டிக் கொண்டு, ‘சொக்கத்தானப் பாத்துட்டு வாரேன்’ என்று சொல்லிவிட்டு, கிளம்பினான் திரவியம்.

‘சொக்கத்தானாம்லா சொக்கத்தான். அவன் ஒன் வாள்க்கைல சொக்கட்டான் ஆடத்தான் போறான். விடிஞ்சு போனா அடஞ்சு வார மனுசன் காதுலயும் என் பொலப்பம் விளமாட்டெங்கு. இந்த வீட்ல யாரு என்னை மதிக்கா? எல்லாரும் பைத்தியாரின்னுல்லா நெனைக்கியொ! எக்கேடும் கெட்டுப் போங்கொ.’.

சிவகாமியின் வார்த்தைகள் திரவியத்தின் காதுகளில் தேய்ந்து விழுந்தன. அதற்குள் அவன் செக்கடியைத் தாண்டியிருந்தான்.
இனி ராத்திரி சாப்பாட்டுக்குத்தான் திரவியம் வீட்டுக்கு வருவான். அதுவரை அவனை நெல்லையப்பர் கோயிலின் சுவாமி சன்னதியிலுள்ள சொக்கலிங்கத்தின் வளையல் கடையில் பார்க்கலாம். நெற்றியில் பிறை போன்ற சந்தனக் கீற்றும், செந்தூரமுமாக, ஜவ்வாது மணக்க,கடும் கோடைக் காலத்திலும் குளிர்ச்சியாக இருக்கும் வளையல்கடையில் உட்கார்ந்திருக்கும் சொக்கலிங்கம், திரவியத்துக்கு தூரத்துச் சொந்தக்காரன். திரவியத்துக்கும், அவனுக்கும் எப்படியும் இருபது வயது வித்தியாசம் இருக்கும். திரவியத்துக்கு வாழ்க்கையின் நெளிவுசுளிவுகள் கற்றுக் கொடுத்தவன். கொடுப்பவன். தான் இதுவரைக்கும் கேள்வியே பட்டிராத அபூர்வமான புத்தகங்கள் பலவற்றை சொக்கலிங்கம் மூலம் திரவியம் படித்திருக்கிறான். ’பெண்களை வசியம் செய்வது எப்படி?, மங்கையரை மயக்குவதன் ரகசியங்கள், பெண்களுக்கே தெரியாமல் பெண்களின் மனதை அறிவோம்’ போன்ற பொது அறிவுக் களஞ்சியப் புதையலே சொக்கலிங்கத்திடம் இருந்தது.

‘இந்த புஸ்தகத்துல எளுதியிருக்கிறதுல்லாம் நெசந்தானா அத்தான்?’

தொண்டையைக் கனைத்துக் கொண்டு ரகசியமாக திரவியம் பலமுறை, சொக்கலிங்கத்திடம் கேட்டிருக்கிறான். அதற்கெல்லாம் சொக்கலிங்கத்திடமிருந்து ஒரே பதில்தான் வரும்.

‘எல்லாத்தயும் அத்தான் டெஸ்ட் பண்ணியே பாத்திருக்கென். போதுமா?’.

எப்போதும் சிரித்த முகமாகக் காட்டும் தூக்கலான முன்பல்லுடன், மேலும் சிரித்தபடி சொல்லிவிட்டு, கண்ணடிப்பான், சொக்கலிங்கம். திரவியத்துக்குக் காதெல்லாம் சூடாகும். மேற்கொண்டு கேட்க தைரியமில்லாமல் அமைதியாகிவிடுவான்.

‘காலேஜ் படிக்கெ? இன்னும் நீ தனியாளா இருக்கக் கூடாது மாப்ளெ. ஒனக்கொரு ஏற்பாடு பண்ணியிருக்கென்’.

திடீரென்று ஒருநாள் சொன்னான் சொக்கலிங்கம். சொன்ன கையோடு, ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் ‘வா, பெருமாள் சன்னதி தெருவரைக்கும் போயிட்டு வருவோம்’ என்று தன்னுடைய டி.வி.எஸ் 50யில் திரவியத்தை அழைத்துக் கொண்டு சென்றான். திரவியத்துக்கு எதற்காக பெருமாள் சன்னதி தெருவுக்கு செல்கிறோம் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும் சொக்கலிங்கத்திடம் கேட்க முடியாது. ‘அத்தான் எது செஞ்சாலும் ஒன் நன்மக்குத்தான் செய்வென். குறுக்கெ பேசக் கூடாது’ என்று வாயை அடைத்து விடுவான். பெருமாள் சன்னதி தெருவிலுள்ள ஒரு வீட்டுக்கு முன்னால் வண்டியை நிறுத்தி விட்டு, ‘வா மாப்ளே’ என்று வீட்டுக்குள்ளே போனான் சொக்கலிங்கம். தயங்கியபடியே பின் தொடர்ந்த திரவியத்தை அந்த வீட்டிலுள்ள ஒரு வயதான பெண்மணியிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்.

‘பெரியம்மை, இது யாரு தெரியுதா? பிரஸ்ல வேல பாக்காள்லா, கணவதி மாமா? அவாள் மகன் தெரவியம்’.

அந்த அம்மாளுக்குப் புரிந்த மாதிரியே தெரியவில்லை. ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு, ‘காப்பி குடிக்கேளாடே?’ என்றபடி எழுந்து உள்ளே சென்றார். திரவியம் ஒடுங்கி உட்கார்ந்திருந்தான். டி.விக்கு பின்னால் சுவற்றில் ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்றெழுதி எம்.ஜி.ஆர் படம் ஒட்டப்பட்டிருந்தது. ‘பெரியம்ம, நாங்க வெளிய உக்காந்திருக்கொம்’. உரக்கச் சொல்லிவிட்டு, திரவியத்தை சைகை காண்பித்து வெளியே அழைத்தான், சொக்கலிங்கம். வெளியே வந்து நிற்கவும், கோதுமை மாவு வாசனை மூக்கை அடைத்தது. ஒட்டினாற்போல் இருந்த பக்கத்து வீட்டைக் காண்பித்து திரவியத்திடம் ஏதோ சொல்ல வந்தான், சொக்கலிங்கம். அதற்குள் இரண்டு தம்ளர்களில் காப்பி வந்தது. ‘லெச்சுமிய எங்கெ? கடைக்கு போயிருக்காளா?’. காப்பி தம்ளரை வாங்கியபடியே கேட்டான் சொக்கலிங்கம். ‘சேட்டு வீட்ல இருப்பா. இரி, கூப்பிடுதென்’ என்று சொல்லிவிட்டு, பக்கத்து வீட்டைப் பார்த்து ‘லெச்சுமி, லெச்சுமி’ என்று சத்தம் கொடுத்தார்கள். திரை விலக்கி லெட்சுமியும், செக்கச் செவேலென இன்னொரு பெண்ணும் வாசலுக்கு வந்தார்கள்.

’என்ன லெச்சுமி, எப்டி இருக்கெ?’ என்றான் சொக்கலிங்கம். ‘நேத்துத்தானெ பாத்தெ? அதுக்குள்ள எனக்கென்ன கொள்ள? நல்லாத்தான் இருக்கென்’. வெடுக்கென்று பதில் சொன்னாள் லெட்சுமி.

பெருமாள் சன்னதி தெருவிலிருந்து திரும்பும் போது, காந்தி சதுக்கத்தில் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, திரவியத்திடம் சொக்கலிங்கம் கேட்டான். ’அந்தப் பிள்ள எப்டி இருந்துது?’. திரவியத்துக்கு புரியவில்லை. ‘எந்தப் பிள்ள அத்தான்?’. எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக, திரவியத்தின் தோளைப் பிடித்தபடி, ‘எங்க பெரியம்ம வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பிள்ள. பாக்கறதுக்கு சோனியா அக்ரிகால் மாரி இருக்கா பாத்தியா?’. பதில் சொல்லாமல் எங்கோ பார்த்தபடி நின்றான், திரவியம். ‘என்ன மாப்ளே? சொல்லு. எப்டி இருந்தா?’ தோளைப் பிடித்து சொக்கலிங்கம் உலுக்கவும், திரவியத்துக்கு அந்தப் பெண்ணின் உருவம் மனதில் தோன்றி மறைந்தது. தொண்டை வறண்டது. ‘ரொம்ப அளகா இருந்தா அத்தான்’. சத்தமாகச் சிரித்தான் சொக்கலிங்கம். ‘பொறவு? அத்தான் செலக்சன் சாதாரணமா இருக்குமா? இத்தன நாளா அந்தப் பிள்ள ஜங்க்ஷன்ல இருந்திருக்கு. போன மாசந்தான் டவுணுக்கு வந்தாங்களாம். நேத்து நெல்லையப்பர் கோயிலுக்கு போகும் போது நம்ம கடவாசல்ல வச்சு பாக்கும் போதெ முடிவு பண்ணிட்டெம்லா அந்தப் பிள்ள ஒனக்குத்தான்னு’. திரவியத்தின் தொண்டை மேலும் வறண்டது. எச்சில் முழுங்கி, ‘எத்தான்’ என்றான்.

‘மேலு சுடுத மாரி இருக்குமெ?’

‘ஆமா அத்தான்’

‘அப்ப ஒர்க்ஸ் அவுட் ஆயிட்டு. இதான் உள்காய்ச்சல். வெளியெ தெரியாது. ஆனா நீ மட்டும் ஃபீலிங் பண்ணலாம். இனிமெ எல்லாம் கரெக்டா நடக்கும் மாப்ளெ’.

வண்டியை ஸ்டார்ட் செய்தான் சொக்கலிங்கம்.

அதற்குப் பிறகு எல்லா சனிக்கிழமை மாலைகளிலும், சொக்கலிங்கத்தின் கடையில் அந்த சேட்டுப் பெண்ணுக்காகக் காத்திருந்தான் திரவியம். அவள் பெயர் சொப்னா என்பது தெரியவே பதினொறு சனிக்கிழமைகள் ஆனது. ஒருநாள் கூட அந்தப் பெண் சொப்னா திரவியத்தை ஏறிட்டுப் பார்த்ததில்லை. ஆனாலும் அவள்தான் திரவியத்தின் காதலி என்று சொக்கலிங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தாள். ஒவ்வொரு முறை அவள், சொக்கலிங்கத்தின் கடையைத் தாண்டிச் செல்லும் போதும் திரவியத்துக்குக் கை, கால்கள் நடுங்க ஆரம்பிக்கும். ஆனால் சொப்னா எந்த சலனமுமில்லாமல் கோயிலுக்குள் நுழைவாள். திரும்பி வரும் போதும் அதே நிலைமைதான். அடுத்தடுத்த சனிக்கிழமைகளில் சொப்னாவைப் பற்றிய தகவல்களை சேகரித்துச் சொன்னான் சொக்கலிங்கம்.

‘சாரதா காலேஜ்ல பி.காம் மூணாம் வருசம் படிக்கா. அப்பா எலக்ட்ரிக் சாமான் கட வச்சிருக்காரு. இந்திக்காரின்னாலும் தமிள் தெரியும். ஆனா விஜய் ம்யூசிக்கல் கடைல போயி இந்திப் படம் கேசட்டா வாங்குதா. இந்த சட்டயக் கெளட்டி போட்டு ஆடுவானெ! அவன் பேரென்ன! ஆங், சலாம்கான். அவன் ரசிக. வேறென்ன டீட்டெயில்ஸு வேணும் மாப்ளெ?’

மனமுடைந்து நம்பிக்கை இழந்தான் திரவியம்.

‘நான் பி.ஏ மொத வருசம்தானெத்தான் படிக்கென்?’

‘அட கோட்டிக்காரா? நீதான் ஏளாப்புலயும், ஒம்பதாப்புலயும் பெயிலானெல்லா?’

‘ஆறாப்புலயும்ந்தான் அத்தான்’.

‘பொறவு என்ன? அப்பம் அவள விட நீ ஒரு வயசு மூப்புல்லா.’

ஆனாலும் திரவியத்துக்கு எதுவுமே சரியாக இல்லை. ‘திரும்பிக் கூடப் பாக்க மாட்டக்காளெ அத்தான்? ஒரு ஆளு நிக்குற உணர்வே இல்லாமல்லா அவ பாட்டுக்கு நம்மளத் தாண்டிப் போறா.’

‘மாப்ளெ’. கொஞ்சம் சீரியஸான தொனியில் பேச ஆரம்பித்தான் சொக்கலிங்கம். ‘அவ ஒன்னைய க்ராஸ் பண்ணும் போது ஒனக்கு மேலு சுடுதா இல்லயா?’

‘அதெல்லாம் சுடத்தான் செய்யுது? அவளுக்கும் சுடணும்லா?’

‘நீ கண்டயா? அவளுக்கும் சுடத்தான் செய்யும். நீ தொட்டுப் பாத்தாலும் தெரியாது. உள்காய்ச்சல்லா? எத்தனயோ பிள்ளைள பாக்கெ. எல்லாரப் பாக்கும் போதுமா மேலு சுடுது. அத்தான் சொன்னா சரியா இருக்கும். தைரியமா இரி. ஒங்க அம்மைக்கு சொப்புனா சப்பாத்தியா சுட்டு போடத்தான் போறா, பாரேன்’.

அதோடு விடவில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை திரவியத்தை ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள ராஜஸ்தான் ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்று சப்பாத்தியாய் வாங்கிக் கொடுத்தான்.

‘நாளைக்கு கல்யாணத்துக்கப்புறம் அந்த பிள்ள இதத்தான் செஞ்சு போடப் போகுது. இப்பவெ பளகிக்கோடே.’

மூன்று வேளையும் சோற்றைத் தின்று பழகிய திரவியத்துக்கு சப்பாத்தி ஒத்துக் கொள்ளவில்லை. ஒருநாள் ராஜஸ்தான் ஹோட்டலுக்குப் போகும் வழியில், சாலைக்குமார கோயிலுக்கு முன், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தாங்க முடியாமல் சொக்கலிங்கத்தின் கையைப் பிடித்துக் கெஞ்சி விட்டான். ‘தப்பா நெனைக்காதெ அத்தான். நீ என் நல்லதுக்குத்தான் செய்தே. இல்லேங்கல. ஆனா எனக்கு கொஞ்ச நாளா சரியா மோஷன் போக மாட்டெங்கு. சொன்னா புரிஞ்சுக்கொ’. உடைந்து அழுதே விட்டான்.

‘இதத்தான் மாப்ளெ கண்ணதாசன் எளுதுனாரு, பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்னு’. வயிற்று உபாதையையும் விட சொக்கலிங்கத்தின் இந்த பொருந்தா உதாரணம் திரவியத்தைக் கொடுமைப்படுத்தியது. கேட்டால், குறுக்கெ பேசக்கூடாது என்று சொல்வான் என்பதால் அமைதியாகவே இருந்தான்.

‘மாப்ளே. மஞ்சன வடிவம்மனுக்கு ஒரு சுலோகம் இருக்கு. நான் பசிஃபிக்கா ஒனக்காக அதச் சொல்லி வேண்டியிருக்கென். கூடிய சீக்கிரம் ஒனக்கு நல்லது நடக்கும், பாரேன்’ என்றான்.

‘அத்தானுக்குத்தான் நாப்பது வயசாகியும் கல்யாணம் ஆகல. ஒனக்காவது காலாகாலத்துல எல்லாம் நடக்கணும். அதுக்குத்தானெ நான் இப்படி கெடந்து எல்லாம் செய்தென்.’. திரவியத்துக்கு அழுகை வந்தது. இத்தனை நல்ல மனமுள்ளவனைப் புரிந்து கொள்ளாமல் அம்மை ஏசுகிறாளே என்று மனதுக்குள் வருந்தினான். ‘அவன் வயசென்ன? ஒன் வயசென்னல? ஐஸ்கூலுக்குக் கூட போகாத பய, கூட, காலேஜு படிக்கிற பயலுக்கு அப்படி என்ன சகவாசம்ங்கென்?’ திரவியத்தின் அம்மா மட்டுமல்ல, சொக்கலிங்கத்தின் அப்பாவுமே அவனை கடுமையாக ஏசி வந்தார். ‘என் காலத்துக்கப்புறம் நீ இந்த கடய தூக்கி நிறுத்துவேன்னு எனக்கு நம்பிக்க இல்ல. இப்பவெ கடன்காரனுக்கு பதில் சொல்ல முடியாம நான் கெடந்து தட்டளியுதென். நான் மண்டயப் போட்டுட்டென்னா நீ சோத்துக்கு சிங்கிதான் அடிக்கணும், தெரிஞ்சுக்கோ’. அந்த மாதிரி சமயங்களில் திரவியம்தான் , சொக்கலிங்கத்துக்கு ஆதரவாய் இருப்பான்.

‘நான் இதுக்கெல்லாம் கலங்கல, மாப்ளெ. எனக்கு அம்மயும் இல்ல. இவாள் ஒரு ஆளுக்காகத்தான் திருநவெலில கெடக்கென். இவாள் போயிட்டான்னா டக்குன்னு போயி மிலிட்டரில சேந்துருவென்’.

‘நாப்பது வயசுக்கு மேலல்லாம் மிலிட்டரில ஆள் எடுக்க மாட்டாங்கத்தான்’. வாய் தவறி திரவியம் சொல்லி விட்டான்.

‘அதெல்லாம் எக்ஸ்ப்ரஷன் உண்டு மாப்ளெ’. திரவியம் மனதுக்குள் சொக்கலிங்கம் அத்தான் சொன்ன எக்ஸ்பிரஷன், எக்ஸெப்ஷனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

‘ஆனா அதுக்கு முன்னாடி ஒன் கல்யாணத்தப் பாத்துரணும், மாப்ளெ’.

தனக்காக இல்லையென்றாலும், சொக்கலிங்கம் அத்தானுக்காகவாவது சொப்னாவைக் காதலித்து திருமணம் செய்து விட வேண்டும் என்கிற ஆசை நாளுக்கு நாள் திரவியத்துக்கு அதிகமாகிக் கொண்டே வந்தது. வீட்டில் அம்மா சொல்லி, திரவியத்தின் அப்பாவும் சொக்கலிங்கத்தின் கடைக்கு திரவியம் போவதற்கு தடை விதித்தார். ‘ஒளுங்கா மரியாதயா காலேஜ் படிப்ப முடிக்க பாரு. எங்க மொதலாளி மேலப்பாளையம் கடைல ஒன்னைய எடுத்துக்கிடுதென்னு சொல்லியிருக்காரு. இனிமேலும் அந்த வளயல்கடக்காரப் பய கூடப் பாத்தேன்னா, ஒன்ன ஒண்ணும் செய்ய மாட்டென். நேரே அவன் கடைக்குப் போயி ஆடு ஆடுன்னு ஆடிருவென், பாத்துக்கொ’.

தன்னால் சொக்கலிங்கம் அத்தான் அசிங்கப்படுவதை திரவியம் விரும்பவில்லை. சில நாட்கள் சொக்கலிங்கத்தின் கடைக்குப் போகாமல் தவிர்த்தான். இரண்டு வாரங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. காலேஜில் இருந்து கோயில் வாசல் ஸ்டாப்பில் இறங்கி, வீட்டுக்குக் கூட போகாமல் நேரே சொக்கலிங்கத்தின் கடைக்குப் போனான். கடை பூட்டியிருந்தது. பக்கத்துக் காப்பித்தூள் கடையில் கறைபடிந்த உள்பனியனோடு உட்கார்ந்திருந்த பாப்பையா அண்ணாச்சி, இவனைப் பார்த்து, ‘போயிரு போயிரு’ என்று சைகை செய்தார். ஒன்றும் புரியாமல், திரவியம் முழித்தபடி வீடு வந்து சேர்ந்தான். வாசலில் செருப்பைக் கழட்டும் போது அம்மா சொன்னாள்.

‘சொக்கத்தான் சொக்கத்தாம்பியே? ஒங்க சொக்கத்தான் செஞ்ச காரியம் தெரியுமா? பெருமாள் சன்னதி தெருல யாரோ ஒரு சேட்டுப்பிள்ளய இளுத்துக்கிட்டு ஓடிட்டானாம். போலீஸு கேஸாயிட்டு. ஒளுங்கா மரியாதயா வீட்டுக்குள்ள கெட’.

திரவியத்துக்கு மேல் சுடுகிற மாதிரி இருந்தது.

ஓவியங்கள்: ஸ்யாம்
நன்றி, ஆனந்த விகடன்

post

கன்னி

தடிவீரன்கோவில்தெருவிலிருந்த ஒரு தாழ்ந்த வீட்டின் கதவை நீண்ட நேரமாகத் தட்டிக் கொண்டிருந்தான், கைலாசம். எதிர்வீட்டிலிருந்து ஒரு அம்மா எட்டிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கிவிட்டு உள்ளே சென்று விட்டார். ’சாயங்காலம் நாலு மணிக்கு மேலயுமா தூங்குவாங்க?’. ஒரு கையில் பையும், இன்னொரு கையில் வேட்டிநுனியையும் பிடித்துக் கொண்டு நின்ற சங்கரண்ணனிடம் கேட்டான். ‘இன்னும் அஞ்சு நிமிசம் பாத்துட்டு கெளம்பிருவொம். எவ்வளவு நேரந்தான் தட்டிக்கிட்டிருக்க!. பாரு, எதுத்தவீட்டு பொம்பள யாரோ என்னமோன்னு பாத்துட்டு போறா!’ சலிப்புடன் சொன்னான், சங்கரண்ணன். இதற்குள் கதவு திறந்தது. பாதி திறந்த கதவுக்கு அந்தப் பக்கம் லெச்சுமண தாத்தா நின்று கொண்டிருந்தார். நெற்றியைச் சுருக்கி முகத்துக்குள் வந்து உற்றுப் பார்த்தார். ‘யாரு?’. அவர் உடம்பிலிருந்தோ, கசங்கிய வேட்டியிலிருந்தோ நார்த்தங்காய் வாசனை வந்தது. ‘நாந்தான் தாத்தா, கைலாசம். பெரியவீட்டு பேரன்’ என்று கைலாசம் சற்று உரக்கச் சொல்லவும், அடையாளம் தெரிந்து கொண்டதற்கு சாட்சியாக ஒரு சின்னச் சிரிப்பு, லெச்சுமண தாத்தாவின் முகத்தில் நொடிப்பொழுதில் தோன்றி மறைந்தது. ‘வா, சும்ம இருக்கியா?’ சுவர் பிடித்து ஊர்ந்து சென்றார். ‘சின்ன அக்காக்கு கல்யாணம். அதான் பெரியம்ம ஒங்களுக்கு காயிதம் குடுத்துட்டு வரச் சொன்னா’ என்ற படியே கைலாசம், தாத்தாவைத் தொடர சங்கரண்ணனும் வீட்டுக்குள்ளே நுழைந்தான்.

வீட்டின் அடுத்த கட்டுக்கு இவர்கள் செல்லவும், ஏதோ ஒரு துணிப்பொட்டலத்தை வாரிச் சுருட்டியபடி இரண்டு பெண்கள் அந்த இடத்தை விட்டு ஓடி மறைந்தார்கள். படுத்துக் கிடந்த ஆச்சி மட்டும் எழுந்து உட்கார்ந்தாள். பெரியம்மை ஏற்கனவே சொல்லி அனுப்பியிருந்தாள். ‘அங்கன ரொம்ப நேரம் நிக்காத. போனமா, காயிதத்த குடுத்தமா, வந்தமான்னு இரி. தாத்தாவத் தவிர யாரும் பேச மாட்டாங்க. கண்ணுலயும் பட மாட்டாங்க’. பையிலிருந்து சங்கரண்ணன் எடுத்துக் கொடுத்த திருமண அழைப்பிதழை தாத்தாவிடம் கொடுத்த போது, உணர்ச்சியே இல்லாமல் ஆச்சி பார்த்துக் கொண்டிருந்தாள். கைலாசத்தை ‘வா’ என்றும் கேட்கவில்லை. அழைப்பிதழைக் கொடுத்து விட்டு கிளம்பும்போது, ‘போயிட்டு வாரென் ஆச்சி. கல்யாணத்துக்கு வந்துரு’ என்று கைலாசம் சொன்னபோது ‘சரி’ என்று தலையைக் கூட ஆட்டவில்லை. ‘ஏம்ணெ இப்பிடி இருக்காங்க?’ திரும்பி வரும் வழியில் சங்கரண்ணனிடம் கைலாசம் கேட்ட போது, ‘இன்னைக்கு நேத்தால? நம்ம பெரிய தாத்தா போட்ஸா இருந்த காலத்திலயெ இவாள வளிக்கு கொண்டு வர முடியலியெ? இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்பொறம் இந்த வீடும் போயிரும். இவாள் காலத்துக்கப்பொறம் என்ன ஆகப்போதோ? ச்சை, என்ன மனுசங்கடே.’ தெருவோரச் சாக்கடையில் காறித் துப்பியபடி சொன்ன போது, சங்கரண்ணனின் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.

கைலாசம் பிறந்த சில மாதங்களிலேயே அவனது தாத்தா காலமாகிவிட்டார். அவன் தாத்தா என்று பார்த்தது, அவனது சின்ன தாத்தாவான லெட்சுமண தாத்தாவைத்தான். அவரையுமே தூரத்தில் பார்ப்பதோடு சரி. அருகில் போய் பேசினாலும், ‘சும்ம இருக்கெல்லா?’ என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார். அவரது உருவத்தை கைலாசத்தால் முழுமையாக நின்று பார்க்கக் கூட முடிந்ததில்லை. அவரை நன்றாக அருகில் இருந்து அவன் பார்த்ததே, பெரிய ஆச்சி இறந்த வீட்டில்தான். வாசலிலுள்ள பந்தல்காலைப் பிடித்துக் கொண்டு, ஈனஸ்வரத்தில் ‘மதினி, மதினி’ என்று மூக்கொழுக முனகிக் கொண்டிருந்தார். அதோடு சரி. பாடை கிளம்பிப் போகும் போது ஆள் காணாமல் போனார். ஆற்றுக்கும் வரவில்லை. கருப்பந்துறை மண்டபத்தில் ஆச்சி எரிந்து கொண்டிருக்க, எல்லோரும் துக்கம் மறந்து ஊர்க்கதை பேச ஆரம்பித்தனர். லெச்சுமண தாத்தா பற்றிய பேச்சு வந்த போது, அவரது வயதையொத்த அந்தோணி தாத்தா கோபமாக இரைந்தார். ‘எல்லாத்தையும் வித்து, காரச்சேவும், ஓமப்பொடியுமா தின்னே தீத்துட்டானெய்யா! பஞ்சபாண்டவங்க மாரி ஒண்ணுக்கு அஞ்சு பொம்பள புள்ளய. ஒண்ணயாது கெட்டிக் குடுக்கணும்னு இன்னைய வரைக்கும் அந்த சவத்துப்பயலுக்குத் தோணலயே! நானும் எத்தன மாப்பிளவீடு சொன்னேங்கிய! எல்லாத்தையும் தட்டிக் களிச்சுட்டான். பெரிய பிள்ளைக்கே நாப்பத்தஞ்சு வயசிருக்காது? என் ரெண்டாவது மகளும், அவளும் ஒரே செட்டு. இப்ப என் பேத்திக்கு மாப்பிள பாக்க ஆரம்பிச்சாச்சு. என்னத்தச் சொல்ல?’. ஏற்கனவே அறிந்ததுதான் என்றாலும் கைலாசத்துக்கு அந்தோணி தாத்தா குரலில் அவற்றைக் கேட்க அதிர்ச்சியாக இருந்தது. ஆச்சி இறந்ததை சுத்தமாக மறந்து போயிருந்தான். அவனது மனசு முழுக்க லெச்சுமண தாத்தாவும், அவன் அதுவரை பார்த்தேயிராத, திருமணமாகாத அவரது ஐந்து மகள்களுமே சுற்றி சுற்றி வந்தனர்.

சின்ன அக்காவின் திருமண அழைப்பிதழ் கொடுக்கப் போன பிறகு, அண்ணனின் திருமணத்துக்கு லெச்சுமண தாத்தா வீட்டுக்குப் போகச் சொன்னார்கள். ‘அவங்கதான் வாரதில்லையெ? அப்பொறம் என்னத்துக்கு காயிதம் குடுக்கச் சொல்லுதிய?’ கோபமும், சலிப்புமாக கைலாசம் கேட்ட போது, ’அவங்க எப்பிடியும் இருந்துட்டு போறாங்க. நாம செய்றத சரியா செஞ்சுரணும்’ என்றாள், பெரியம்மை. இந்தமுறை கதவைத் திறந்தது, லெச்சுமண தாத்தாவின் ஐந்து மகள்களில் மூத்தவள். அப்படித்தான் இருக்க வேண்டும். கைலாசம் முதல் முறையாக அவளைப் பார்த்தான். தலைமுடி நரைத்து, குண்டாக இருந்தாள். சூரியனே பார்த்திராத, வெளுப்பான முகத்தில், கண்ணைச் சுற்றி கருப்பு இறங்கியிருந்தது. ‘நீ கைலாசம்தானெ?’ கதவைத் திறந்தவள் கேட்டாள். ‘ஆ . . .மா’ என்று தயங்கியபடியே எச்சிலை முழுங்கிச் சொன்னவன், வேறு வார்த்தை வராமல் அவளையே ஒருவித பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘உள்ள வா. இப்ப யாருக்கு கல்யாணம்?’ என்றபடியே உள்ளே சென்றாள். உள் அறையில் இன்னும் இரண்டு பெண்கள் உட்கார்ந்து துணிகளை மடித்துக் கொண்டிருந்தனர். எல்லாமே அழுக்குத் துணிகள். கைலாசத்தை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. வேறு ஏதோ உலகத்துக்குள் பிரவேசித்துவிட்ட குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் நின்று கொண்டிருந்த கைலாசத்தை, கதவைத் திறந்தவளின் குரல் கலைத்தது. ‘தாத்தாவும், ஆச்சியும் தூங்குதாங்க. காயிதத்த என்ட்ட குடுத்துட்டு போ’ என்றாள். பையிலிருந்த அழைப்பிதழை எடுத்து கொடுத்தான். அதை பார்க்கக் கூட இல்லை. வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு, கைலாசத்தின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். இனி அங்கு நிற்கக்கூடாது என்பதை உணர்ந்தவனாக, கைலாசம் நகர்ந்தான். ‘அப்ப நான் கெளம்புதென்’ என்று அரைகுறையாகச் சொன்னான். ‘அத்தன்னு சொல்லு. நான் ஒனக்கு அத்ததான். சுசீலா அத்த’ என்றாள்.

அதற்குப் பிறகு கைலாசம் அந்த வீட்டுக்குப் போனது, அடுத்தடுத்த இரண்டு மரணங்களுக்கு. சொல்லிவைத்தாற்போல ஆச்சியும், லெச்சுமண தாத்தாவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் காலமானார்கள். இரண்டாண்டுகளில் சுசீலா அத்தையின் உருவத்தில் முதுமை அடர்ந்து படர்ந்திருந்தது. அதுவும் தாத்தா இறந்த வீட்டில் கைலாசம் அவளைப் பார்த்தபோது அவன் கண்களுக்கு சுசீலா அத்தை, அவள் அம்மாவைப் போலவேதெரிந்தாள். ஆச்சி தன் உருவத்தை தன் மகளுக்குக் கொடுத்து விட்டுப் போய்விட்டதாகவே கைலாசம் நினைத்தான். அப்போதுதான் சுசீலா அத்தையின் மற்ற சகோதரிகளையும் கைலாசத்தால் பார்க்க முடிந்தது. அதில் ஒருத்தியின் தலைமுடியில் நிறைய சடை விழுந்திருந்தது. அநேகமாக அவள்தான் சுசீலா அத்தைக்கு அடுத்து பிறந்தவளாக இருக்க வேண்டும். தன் தகப்பனாரின் பிணத்தின் முன் உட்கார்ந்து வாய்விட்டு அழும்போது, அவளது முன்வரிசைப் பற்களில் பாதி இல்லை என்பதை கைலாசம் கவனித்தான். லெச்சுமண தாத்தாவின் பிணத்தைத் தூக்கும் போது, வாசலில் வந்து நின்று கொண்டு, தலைவிரிகோலமாக நெஞ்சில் அறைந்தபடி சுசீலா அத்தையின் சகோதரிகள், ‘எப்பா, நாங்களும் ஒன் கூடயே வந்திருதோம்’ என்று உரத்த குரலில் கதறினார்கள். சுசீலா அத்தை மட்டும் கண்களில் கண்ணீர் காய்ந்து, ஏனோ இறுக்கமாகவே இருந்தாள்.. அன்றைக்கு கூடியிருந்த தெரு ஜனங்கள் அனைவரும், முதன்முறையாக இந்தப் பெண்களைப் பார்க்கும் ஆர்வத்தில் முண்டியடித்தார்கள். பாடையின் பின்பக்கம் தோள் போட்டு சுமந்திருந்த கைலாசம், பின்னால் திரும்பித் திரும்பி சுசீலா அத்தையையும், அவளது சகோதரிகளையும் பார்த்துக் கொண்டே சென்றான். ‘எல, பின்னால இருக்கவன் ஒளுங்கா புடி. பாட லம்புதுல்லா’. முன்பக்கத்திலிருந்து, வேம்பு மாமா சத்தம் போட்டார்.

தாத்தாவும், ஆச்சியும் போன பிறகு சுசீலா அத்தை மட்டும் வெளியே நடமாடத் தொடங்கினாள். நேரில் பார்க்க நேர்ந்தால், லெச்சுமண தாத்தா போலவே அவளும் ‘சும்ம இருக்கெல்லா?’ என்றபடி நகர்ந்து சென்று விடுவாள். ஒரே ஒருமுறை மட்டும் அதிசயமாக நெல்லையப்பர் கோயிலின் ஆறுமுகநயினார் சன்னிதியில் வைத்து, வழக்கமான ‘சும்ம இருக்கெல்லா’வைக் கேட்டுவிட்டு, ‘ஒங்க வீட்டுக்கு ஒருநாள் வாரென், என்னா?’ என்று சொன்னாள். ‘கண்டிப்பா வாங்க அத்த’ என்று கைலாசம் பதிலுக்கு சொன்னபோது, அவள் திரும்பிப் பார்க்காமல் வெளி பிரகாரத்துக்குச் சென்று விட்டாள்.

இவள் எங்கே வரப் போகிறாள் என்று நினைத்த கைலாசத்துக்கு, அவன் அம்மா இறந்த வீட்டுக்கு சுசீலா அத்தை வந்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘ஒங்க அம்மை கல்யாணம் ஆன புதுசுல ஒங்க வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் இப்பொதான் வாரேன்’ என்று சுசீலா அத்தை சிரித்தபடி சொன்னாள். கைலாசத்தைத் தவிர எல்லோருக்கும் அவளது வருகையும், செய்கையும் பிடிக்கவில்லை. கைலாசத்துக்கு அந்த சூழலிலும் அவளைப் பார்க்க பரிதாபமாகவே இருந்தது. வழக்கத்துக்கு மாறாக கைலாசத்துக்கருகில் அமர்ந்து கொண்டு அவனிடம் பேசிக் கொண்டே இருந்தாள், சுசீலா அத்தை. ‘எப்ப எடுக்கப் போறிய? வெளியூர்லேருந்து யாரும் வரணுமோ? பொறவாசல்லதான் ஆக்குப்புர போட்டிருக்கேளோ? தவுசுப்பிள்ள யாரு? சாம்பார் கொதிக்கற மணம் அடிக்கெ?’. சங்கரண்ணனும், சோமு சித்தப்பாவும் கைலாசத்தைத் தனியே அழைத்தார்கள். ‘எல, இவள வெளிய போகச் சொல்லுதியா, இல்ல நானே அவள வாரியலால அடிச்சு அனுப்பட்டுமா?’. சோமு பெரியப்பா பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னார். ‘இவன்ட்ட என்ன மயித்துக்கு கேக்கணுங்கென்? செறுக்கியுள்ளய நாலு இளுப்பு இளுத்து அடிச்சு வெளிய தள்ளிருவோம்’. சங்கரண்ணன் கொஞ்சம் சத்தமாகவே சொன்னான். ‘மேற்கொண்டு அவ பேசாம நான் பாத்துக்கிடுதென். அமைதியா இரிங்க’. கைலாசம் அவர்களை சமாதானப்படுத்தினான். எத்தனையோ முறை சுசீலா அத்தையையும், அவளது சகோதரிகளையும் பற்றி கண்ணீர் மல்க அம்மா அவனிடம் சொல்லியிருப்பது நினைவில் வந்தது. ‘கொஞ்சம் சொன்ன பேச்ச கேட்டாங்கன்னா, நாமளே அவங்க எல்லாருக்கும் ஒரே மேடைல கல்யாணம் பண்ணி வச்சிருந்திருக்கலாம். அவங்கதான் வீட்டுக்குள்ளயே யாரையும் விட மாட்டக்காங்களெ! எந்த ஜென்மத்து பாவமோ, சாபமோ! அது நம்மளையும் சேந்ததுதான்’.

அம்மா இறந்த பிறகு சென்னைக்கு வந்துவிட்ட கைலாசத்துக்கு திருமணம் நிச்சயமானபோது, சுசீலா அத்தைக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் எண்ணம் அவனுக்கே வரவில்லை. ‘நீ குடுக்கணும்னு நெனச்சாலும் முடியாது. அவ்வொல்லாம் ஊர விட்டே போயாச்சு’. சங்கரண்ணன் சொன்னான். ‘அப்ப தடிவீரன்கோயில்தெரு வீடு?’ பதற்றத்துடன் கைலாசம் கேட்டதற்கு, ‘ஆமா, பெரிய தடிவீரன்கோயில்தெரு வீடு? அரமண மாரி இருந்த சாமிசன்னதி வீட்டையெ கமிஷன் கடக்காரருக்குத் தூக்கிக் குடுத்தாச்சு’. எரிச்சலான குரலில் மேலும் சொன்னான், சங்கரண்ணன். திருமணம், குழந்தை, வேலைமாற்றம் என ஆண்டுகள் நிமிடங்களாக, நொடிகளாக ஓடியபிறகு சுசீலா அத்தை பற்றிய நினைப்பு எப்போதாவது கைலாசத்துக்கு வருவதுண்டு. ஆனால் எத்தனை முயன்றும் அவனால் சுசீலா அத்தையின் மற்ற சகோதரிகளின் உருவங்களை மனதுக்குள் கொண்டு வரமுடியவில்லை. லெச்சுமண தாத்தாவின் உருவமே நாட்கள் ஆக ஆக நினைவில் மங்க ஆரம்பித்தது. திருநெல்வேலிக்கு வருவதும் குறைந்து போனது.

‘ஒங்கப்பாட்ட கல்யாணம் ஆன புதுசுல கேட்டேன், திருச்செந்தூருக்குக் கூட்டிட்டு போங்கன்னு. வருஷம் பன்னெண்டாச்சு. நீ படிச்சு வேலைக்கு போயிதான் என்னைக் கூட்டீட்டு போவே போலுக்கு’. மகளிடம் கைலாசத்தின் மனைவி இடித்துக் காட்டுவது, ஒரு முடிவுக்கு வந்தது. விடுப்பு எடுத்து திருச்செந்தூர் வந்து இறங்கியபோது, சிறுவயதில் பார்த்த அதே திருச்செந்தூர், அதே விபூதி, சந்தன வாசத்துடன் வரவேற்றது. செந்திலாண்டவனிடத்திலும் மாற்றமில்ல. கோயிலுக்குள்ளிருந்து வெளியே வந்து கைலாசம் சட்டையைப் போடும் போது, ‘அப்பா, Seaல குளிக்கணும்பா’. அடம்பிடித்தாள் மகள். ‘கோயிலுக்கு போறதுக்கு முன்னாடிதாண்டா குளிக்கணும்’. சமாதானத்தை ஏற்காத மகளுக்காகக் கடலில் இறங்கி சிறிதுநேரம் குளித்து விட்டு, பிரகாரத்தில் வீசும் காற்றில், கலைந்த தலையும், குளிர்ந்த உடம்புமாக கைலாசம் வந்து கொண்டிருந்தான். ‘ஏம்பா, சூடா வட போடறாங்க. வாங்குங்களேன்’. மனைவியின் குரலில் உள்ள ஆசை, இவனையும் தொற்றிக் கொள்ள, வடை போடும் ஆச்சியை நெருங்கும் போது, அந்த ஆச்சி சுசீலா அத்தையின் ஜாடையில் இருந்தாள்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவள் உருவம் நம் மனதில் தங்கியிருக்கிறதா, என்ன? இவளை எப்படி நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது? திரும்பி விடலாம் என்ற நினைப்பு மூளையைச் சென்றடைவதற்குள், சுசீலா அத்தைக்கு, கைலாசத்தைத் தெரிந்து போனது. தினமும் பார்ப்பது போல் சாவகாசமாகச் சிரித்தபடி ‘சும்ம இருக்கியா’ என்றாள். வேறு பேச்சு வராமல் கைலாசம் தடுமாற, அருகில் நின்ற அவன் மகளைப் பார்த்து, ‘இதாரு, ஒன் மகளா?’ என்று கேட்டபடி நாலைந்து வடைகளை எடுத்து ஒரு பேப்பரில் சுற்றி அவள் கைகளில் கொடுத்தாள். யாரோ ஒரு வடை போடும் ஆச்சி தருவதை வாங்கத் தயங்கியபடி, கைலாசத்தின் மகள் தன் தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க, ‘ஏட்டி, நான் ஒண்ணும் மூணாம் மனுசி இல்ல. வாங்கிக்கோ. ஒங்கப்பா சத்தம் போட மாட்டான்’ என்று சொல்லி கைகளில் திணித்தாள். கைலாசத்திடம், ‘நீ சொல்ல வேண்டியதானெ, நான் யாருன்னு’ என்றவள், ‘அதுக்காக ஆச்சி கீச்சின்னு சொல்லீராதெ. அக்கான்னே சொல்லு. நான் அப்பிடியேதானெ இருக்கென். இன்னும் கல்யாணம்கூட ஆகலெல்லா.’ சிரிப்பு மாறாமலேயே சொன்னாள் சுசீலா அத்தை.

[புகைப்படங்கள்: நன்றி (c) Oochappan]

(ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான சிறுகதை)

post

என்னை ‘நான்’ ஆக்கியவர் . . .

கைபேசியில் அவரது எண்ணுடன் கம்பீரமான அவரது பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை வைத்திருப்பேன். அவர் அழைக்கும்போது ‘மூன்றாம் பிறை’யின் ‘பூங்காற்று புதிதானது’ பாடலின் துவக்க இசை ஒலிக்கும். அதை முழுமையாக ஒலிக்க ஒருமுறையும் விட்டதில்லை. ’ஸார்’ என்பேன். நிதானமான குரலில் ‘நான் பாலு பேசறேன். உன்னால ஒரு பத்து நிமிஷம் வந்துட்டு போக முடியுமா? என்பார். ‘கிளம்பி வாடா’ என்று சொல்வதற்கான முழு உரிமையும் கொண்ட அந்த மனிதரின் அடிப்படையான பண்பு, இது. அழைத்த சில நிமிடங்களில் அவர் முன் போய் நிற்பேன். படித்துக் கொண்டோ, எழுதிக் கொண்டோ இருப்பவர் சட்டென்று அதை ஏறக்கட்டிவிட்டு, ‘உக்காரு. ப்ளாக் டீ சாப்பிடலாமா?’ என்பார். ‘ஏதும் முக்கியமான விஷயமா, ஸார்?’ என்று கேட்டால், ‘உன்னப் பாக்கணும் போல இருந்துச்சு. அதான்’ என்பார்.

இருபத்தோரு ஆண்டுகளாக அவரது வீடு, அலுவலகம் இருக்கும் பகுதியிலேயே வசித்து வருகிறேன். எந்த நேரமும் அவர் அழைத்தால் ஓடிப் போய் நிற்க வேண்டும் என்கிற ஒரே காரணத்தைத் தவிர வேறில்லை. அதனாலேயே இன்றைக்கும் சென்னையில் எனக்கு சாலிகிராமத்தை விட்டால் வேறு எந்த ஒரு பகுதிக்கும் துணையில்லாமல் போய்வரத் தெரியாது. அவர் அழைக்காமல் நானாகப் போயும் பார்ப்பதுண்டு. எப்போதும் திறந்தே இருக்கும் அவரது அறையின் கதவைத் தட்டி ‘ஸார்’ என்றால், நிமிர்ந்து பார்த்து எப்போதும் அவர் சொல்லுவதைச் சொல்லுவார். ‘நம்புவியா? இப்ப நீ வரலேன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல நானே உனக்கு ஃபோன் பண்ணியிருப்பேன்’.

தொன்னூறுகளில் துவக்கத்தில் நான் அவருடன் வந்து இணைந்த நாளிலிருந்து இன்றுவரை என் வாழ்வின் ஆதாரமாகத் திகழும் பாலுமகேந்திரா என்னும் உன்னதமான கலைஞன்பால் எனக்கேற்பட்ட ஈர்ப்புக்குக் காரணமென்னவோ அவரது திரைப்படங்கள்தான். ஆனால் பாலுமகேந்திரா என்கிற மனிதர், பாலு மகேந்திரா என்னும் ஆளுமை, பாலுமகேந்திரா என்றழைக்கப்படுகிற என்னுடைய குருநாதரை மறக்க முடியாமல் செய்து, தொடர்ந்து அவருடைய நினைவுகளால் இன்னும் கதறச்செய்து கொண்டிருப்பது அவருடனான எனது தனிப்பட்ட அனுபவங்கள்தான். அவை எல்லாமே நினைத்து நினைத்து மகிழக்கூடிய சுகமான அனுபவங்கள் மட்டுமல்ல. வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் மூத்த அந்த பெரிய மனிதரிடம் சண்டை போட்டிருக்கிறேன். கோபம் கொண்டு பேசாமல் இருந்திருக்கிறேன். முகத்துக்கு நேராக முறைத்திருக்கிறேன். ஓரிருமுறை அவரை விட்டு விலகிச் சென்றிருக்கிறேன். அப்படி கோபித்துச் சென்ற ஒரு சந்தர்ப்பத்தில், சென்னையில் உள்ள என் வீட்டு படுக்கையறையில், தூங்கி விழிக்கும் போது என் முன் அமர்ந்திருந்தார். பாலுமகேந்திரா என்னும் அந்த மகத்தான ஆளுமைக்கு முன்னால் சின்னஞ்சிறு பயலான நான் சுக்குநூறாகிப் போன மறக்கவே முடியாத தருணமது. இன்னொருமுறை கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, திருநெல்வேலிக்குச் சென்று விட்டேன். மறுநாளே தன் துணைவியாரோடு திருநெல்வேலிக்கு வந்தவர், ‘நீ இருந்து அவனைக் கூட்டிக்கிட்டு வா’ என்று அகிலா அம்மையாரிடம் சொல்லி அவரை எங்கள் இல்லத்திலேயே விட்டுவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, செ.கணேசலிங்கம், செ.யோகநாதன், எஸ்.பொ, கோமல் சாமிநாதன், வண்ணநிலவன் போன்ற இலக்கிய மற்றும் பத்திரிக்கையுலக ஆளுமைகளோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். இளையராஜா, கமல்ஹாசன், பரதன், கிரீஷ் காசரவல்லி, கே.விஸ்வநாத், ஷாஜி கருண், கவிஞர் வாலி, மோகன்லால், மம்முட்டி, மகேஷ்பட், அனந்து, கிரேசி மோகன் போன்ற திரையுலகக் கலைஞர்களுடன் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். இன்று நான் சினிமாவில் இருப்பதற்கு மட்டுமல்ல, சென்னையில் நான் இருப்பதற்கே காரணமானவர். ஏற்கனவே எனக்கிருந்த வாசிக்கும் பழக்கத்தைத் தீவிரப்படுத்தியவர். தனது முதல் படமான ‘கோகிலா’வை திரையிட்டு, தன் அருகிலேயே என்னை அமரவைத்துக் கொண்டு ‘ஷாட் பை ஷாட்’டாக Film making என்பது ஒன்றும் கம்பசூத்திரமல்ல என்பதை எளிமையாக விளக்கியவர். இது போன்ற எத்தனையோ உலகத் திரைப்படங்களை அருகில் அமர்ந்து பார்க்கச் செய்து தொழில்நுட்ப அறிவை சுவையாகப் புகட்டியவர். பின்பு அவரது சினிமா பட்டறையில் அவருடைய தற்போதைய மாணவர்களுக்கு என்னை வகுப்பெடுக்க வைத்தவர். இப்படி இன்னும் பல பல.

சினிமா மற்றுமல்லாமல் வாழ்வின் யதார்த்தமான விஷயங்களை மிக எளிதாகப் புரியும்படி உரைத்தவர். அவரது நண்பர் ஒருவரின் இல்லத்துக்கு என்னை அழைத்துச் சென்றிருந்தார். தென்னக ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூர்த்தி என்ற அந்த மனிதருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. திரு. மூர்த்தி, Wildlife Photographyயில் உலக அளவில் சிறந்து விளங்கும் அல்ஃபோன்ஸ் ராயின் தகப்பனார். ’மூர்த்தி! இந்தப் புள்ளைக்கும் ஒங்க ஊர்தான்’. சந்தோஷமாக அறிமுகம் செய்து வைத்தார். ஊர்ப்பாசம் கண்களில் கொப்பளிக்க பெரியவர் மூர்த்தி காபி கொடுத்து உபசரித்தார். அப்போதெல்லாம் காபி, டீ அருந்தும் பழக்கம் எனக்கில்லை என்பதால் காபியைத் தவிர்த்தேன். ‘அப்ப பால் சாப்பிடறீங்களா? ஜூஸ் தரட்டுமா? என்று கேட்டார், மூர்த்தி.

காரில் வீடு திரும்பும் போது வாத்தியார் சொன்னார்.

‘காபி, டீ குடிக்காதது நல்ல பழக்கம்தான். ஆனா யார் இடத்துக்கோ நாம போயிருக்கும் போது, அவங்களால அதுதான் குடுக்க முடியும்னா யோசிக்காம வாங்கிக் குடிச்சிடு. உனக்காக அவங்க அவங்க வீட்ல இல்லாத ஒண்ண தயார் பண்ணிக் குடுக்கிற சிரமத்தை இனியாவது தவிர்த்திடு’.

வேதவாக்காக இன்று வரை நான் கடைப்பிடித்து வரும் பழக்கம், இது. இப்படி அறிவுறுத்தியவர் ஒருபோதும் என்னை அசைவம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியதில்லை. ‘எப்படிப்பா சைவம் மட்டுமே சாப்பிட்டு உன்னால இருக்க முடியுது!’ என்று வியந்ததோடு சரி.

மாற்று அபிப்ராயமுடையவர்களை கொலைவெறியுடன் முறைத்துப் பார்ப்பதை இயல்பாகத் தவிர்க்கச் செய்தவர். நெருக்கடியான காலக்கட்டத்தில் அவரை கடுமையாக வசை பாடியவர்களிடத்திலும் மரியாதையுடன் பழகியவர். இன்றுவரை அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள முனையும் பழக்கம், இது. மாற்றுக் கருத்துடையவர்களை முறைப்பதில்லையே தவிர அவரைப் போன்று இன்முகம் காட்டிப் பழக இயலாமல் விலகிச் சென்று விடுகிறேன்.

இயல்பிலேயே Dog Loversஆன அவரும், நானும் மிக அதிகமான நேரங்களில் நாய்களைப் பற்றிப் பேசியிருக்கிறோம். ‘மூன்றாம் பிறை’ சுப்பிரமணி, ‘சத்மா’ சில்கி போன்ற நாய்களுக்குப் பிறகு, ‘பீட்டர்’ என்னும் லேப்ரடார் வகை நாயை பிரியமுடன் வளர்த்து வந்தார். ‘பீட்டர்’ காலமான பிறகு நாயில்லாத அவர் வீட்டைப் பார்க்கப் பிடிக்காமல், சாலிகிராமத்துக் குப்பைத் தொட்டியிருந்து, பிறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்த தெருநாய்க்குட்டி ஒன்றை எடுத்து அவரிடம் சென்றுக் கொடுத்தேன். பச்சைக் குழந்தையை வாங்குவது போல கைகளில் ஏந்திக் கொண்டார். வாங்கிய மறுநிமிடமே, ‘சுப்பிரமணி! மறுபடியும் வந்துட்டியாடா?’ என்றார். சுப்பிரமணி என்ற சுப்புவுக்குத் துணையாக ‘வள்ளி’ என்கிற இன்னொரு நாட்டுநாய்க்குட்டியை வளர்க்கத் துவங்கினார். கடந்த மாதத்தில் ஒருநாள் வீட்டுக்குச் சென்ற என்னைப் பார்த்து மெதுவாக நடந்து அருகில் வந்து கொஞ்சினான், சுப்பு. தடவிக்கொடுத்தபடியே, ‘டல்லாயிட்டானே ஸார், இவன்?’ என்றேன்.

‘வயசாகுதில்லையா? அதான். His days are numbered’ என்றவர், ‘சுப்பு, இங்க வாடா’ என்றழைத்து அதன் தலையையும், கழுத்தையும் தடவிக் கொடுத்தவாறே, ‘எனக்கு முன்னாடி நீ போயிடாதடா’ என்றார்.

ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘மூங்கில் மூச்சு’ தொடரின் இரண்டாவது வாரத்திலேயே அவரைப் பற்றி எழுதியிருந்தேன். படித்துவிட்டு தொலைபேசியில் பேச முடியாமல் உடைந்து அழுதார். ‘உனக்கெல்லாம் ஒண்ணுமே செய்யாத சாமானியன் நான். என்னைப் போயி இப்படித் தலையிலத் தூக்கி வச்சு எழுதியிருக்கியேம்மா!’ என்றார். சென்ற வருடம் அதே விகடனில் நான் எழுதிய ‘சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்’ சிறுகதையைப் படித்து விட்டும் தாங்க முடியாமல் அழுதார். அந்தக் கதையின் பின்னணியை நாங்கள் இருவரும் அறிந்திருந்ததே அவரது அழுகைக்குக் காரணம். அவர் காலமான அன்று நிகழ்ந்த சில கசப்பான விஷயங்களைக் கண்டும், காணாமல் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருந்த வாத்தியாரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்’ சிறுகதையின் கடைசி வரி, துல்லியமாக வாத்தியாரின் வாழ்விலும் நடந்தேறும் என்று உறுதியாக நம்பினேன். அதுவே நடந்தது.

இயற்கையான தலைவழுக்கையை தொப்பி போட்டு மறைத்தததைத் தவிர, தன்னுடைய எந்த பலவீனத்தையும் அவர் மறைத்ததில்லை. அதையுமே ‘தலைமுறைகள்’ படத்துக்காகத் துறந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளையராஜாவைப் பார்க்க காரில் சென்று கொண்டிருந்தோம். செல்லும் வழியில் ‘தலைமுறைகள்’ திரைப்பட போஸ்டர் ஒன்றில் வழுக்கைத்தலையுடன் அவர் இருக்கும் க்ளோஸ்-அப் புகைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.

‘இதுக்குத்தான் இத்தன வருஷமா மறச்சு வச்சிருந்தீங்களோன்னு தோணுது’ என்றேன்.

‘Exactly. சொக்கலிங்க பாகவதர் இருந்தாருன்னா அவரத்தான் நடிக்க வச்சிருப்பேன். நானே இதை எப்படி செஞ்சேன்னே தெரியல’ என்றார்.

‘இத செஞ்சது நீங்க இல்ல, ஸார். காலம்’ என்றேன்.

நான் இப்படி சொல்லவும் என் கைகளைப் பிடித்துக் கொண்டவர், ‘நான் முதன்முதல்ல ஷேவ் பண்றத நிறுத்தினவுடனே நீதான் வந்து சத்தம் போட்டே. இப்ப நீதான் இதையும் சொல்றே’ என்றார். மருத்துவமனையில் இளையராஜாவைப் பார்த்தவுடன், ‘என்ன ராஜா, இது! ஹாஸ்பிட்டல்ல வந்து படுத்துக்கிட்டு! நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் நாலஞ்சு படம் பண்ண வேண்டாமா?’ என்றார்.

‘தலைமுறைகள்’ திரைப்படத்துக்கு அடுத்ததாக ஒரு திரைக்கதையை எழுதும் திட்டத்திலிருந்தார். முழுக்கதையையும் என்னை அழைத்துச் சொன்னவர், ’உன்கிட்ட சொன்னதுக்கப்புறம்தான் ராஜாக்கிட்ட சொல்லணும்னு நெனைக்கிறேன். இன்னும் இதை கொஞ்சம் ஷேப் பண்ணிட்டு, ராஜாவப் போய்ப் பாத்து சொல்லிடலாம். நீயும் வந்திடு’ என்று சொன்னபோது, அது நடக்கும் என்று நம்பினேன்.

கடந்த வியாழனன்று காலை இயக்குனர் வெற்றி மாறன் எனக்கு ஃபோன் பண்ணி, ‘எங்கண்ணே இருக்கீங்க?’ என்றான்.

‘வீட்லதான். ஏன் வெற்றி?’ என்று கேட்டதற்கு,

‘சரி சரி. பதட்டப்படாம கெளம்பி விஜயா ஹாஸ்பிடல் போங்க. ஸார்க்கு ஒடம்பு முடியலியாம். நான் பெங்களூர்ல இருக்கேன். மத்தியானம் வந்துடறேன்’ என்றான்.

விஜயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் வாசலில் அமர்ந்திருந்த அகிலா அம்மாவைத் தவிர்த்து சற்றுத் தள்ளி வந்தேன். ‘வந்துட்டியா?’ என்று என்னை அடையாளம் தெரிந்து கொண்டு கையை எட்டிப் பிடித்தார், நான் வாழ்க்கையில் முதன் முறையாகப் பார்க்கும் அர்ச்சனா அக்கா. என்னைப் பார்த்ததும், அருகில் வந்து நின்று கொண்ட பாலாவும், நானும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. இயக்குனர்கள் சீனுராமசாமியும், ராமும் வந்து சேர்ந்தனர். சீனு ‘ஸாருக்கு ஒண்ணும் ஆயிருக்காதுண்ணே’ என்று சொல்லிக் கொண்டே இருந்தான். ராம் தொடர்ந்து என்னிடத்தில் ‘ஸார் நல்லாத்தானே இருக்காரு?’ என்று கேட்டபடி இருக்க நேரடியாக பதில் சொல்லாமல் ஏதேதோ சொல்லி சமாளித்தேன். சைகை காண்பித்து பாலா என்னை வெளியே அழைக்க, இருவரும் விஜயா மருத்துவமனைக்கு வெளியே வந்தோம். பாலா ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து இழுக்கத் துவங்கினார். பாலாவின் முகம் எனக்கு வாத்தியாரின் உடல்நிலை குறித்த உண்மையைச் சொல்லாமல் சொல்லியது.

‘கெளவன் போயிட்டானோ, பாலா?’ கேட்கும்போதே என் குரல் உடைந்தது.

பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு ‘ஆம்’ என்பது போல தலையசைத்த பாலாவிடம் அதற்குப் பிறகு எனக்குப் பேச ஒன்றுமில்லாமல் போனது.

உடம்பும், மனசும் நடுங்கியதே தவிர அழுகை வரவில்லை. சீனுராமசாமி, ராம் இருவரையும் அழைத்து, ‘ரெண்டு பேரும் கெளம்பி நம்ம ஸ்கூலுக்குப் போயி ஏற்பாடுகள கவனிங்கடா’ என்றேன். ‘மறக்காம அவரோட தொப்பிய எடுக்கணும்’ என்றார் பாலா. அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளைச் செய்யத் துவங்கினோம்.

என் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் ‘பாலு மகேந்திரா சினிமா பட்டறை’யில் வாத்தியாருக்காகக் காத்திருந்தோம். படுத்திருந்த வாத்தியாரை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கும்போது கூட அழுகை வரவில்லை. எல்லோரும் வந்தனர். அஞ்சலி செலுத்தினர். கண்ணீர் உகுத்தனர். இரவு நெருங்கவும் மகனிடம், ‘இன்னைக்கு ஒருநாள்தான் பாலு தாத்தா கூட அப்பாவால இருக்க முடியும். என்னைத் தேடாதே’ என்று ஃபோனில் சொன்னேன். நள்ளிரவில் உறங்குவது போலவே எங்களுக்குத் தோன்றிய வாத்தியாரின் உடலுக்கருகே அமர்ந்தபடி நானும், அர்ச்சனா அக்காவும் விடிய விடிய அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இடையிடையே ‘அக்கா! வாத்தியார் மூச்சு விடற மாதிரியே இருக்குக்கா’ என்று பதறினேன். எழுந்து சென்று கண்ணாடிப் பெட்டிக்குள் எட்டிப் பார்த்தோம். இருவருக்குமே அது பைத்தியக்காரத்தனம் என்று தோன்றினாலும் அதைச் செய்தோம். பாலுமகேந்திரா என்கிற மகத்தான மனிதரைப் பற்றிய நான் கேள்வியேபட்டிராத செய்திகளை கண்ணீருடன் அர்ச்சனா என்கிற நடிகைக்குள் இருக்கிற சுதா என்ற அந்தப் பெண்மணி சொல்லச் சொல்ல வாத்தியாரை கைகூப்பி அழுதபடி வணங்கியபடியே அமர்ந்திருந்தேன்.

இலங்கையில் ‘அமிர்தகழி’ என்னும் சிற்றூரில் துவங்கிய அந்த மனிதரின் வாழ்க்கைப் பயணம், சென்னையில் ‘போரூர்’ மின் தகன மயானத்தில் முடிவடைந்தபோது முழுவதுமாக நொறுங்கிப்போய்விட்டேன். ’மறுபடியும்’ திரைப்படத்தை ‘என்னை ‘நான்’ஆக்கிய எல்லா பெண்களுக்கும்’ என்றொரு டைட்டில் கார்டு போட்டு சமர்ப்பித்திருப்பார், ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா. என் வாழ்க்கையை வடிவமைத்த அந்தப் பெரிய மனிதரை இழந்துத் தவிக்கிறேன். இரவெல்லாம் எழுந்து உட்கார்ந்து கதறி அழுகிறேன். அந்த மனிதர் இருக்கும் போது ஒன்றும் தெரியவில்லை. இப்போதுதான் இன்றைய ‘என்னை’ தட்டித் தடவி உருவாக்கியவர் அவர்தான் என்பது எனக்கு புரியவருகிறது. திருச்சியிலிருக்கும் Caricaturist சுகுமார்ஜி என்கிற நண்பர் வரைந்திருந்த வாத்தியாரின் கேரிகேச்சர் ஒன்றை, ஃபிரேம் செய்து சமீபத்தில் வாத்தியாரிடம் சென்று கொடுத்தேன். அதைப் பார்த்த மாத்திரத்தில் மகிழ்ந்தவர், ‘அவருக்கு ஃபோன் பண்ணேன். ஒரு நன்றி சொல்லிடலாம்’ என்றார். அவரது ஃபோன் நம்பர் என்னிடத்தில் அப்போது இருக்கவில்லை. ‘நீங்க வேணா அவருக்கு நன்றி சொல்லிப் பேசுங்க. வீடியோல பதிவு பண்ணி அவருக்கு அனுப்பிடறேன்’ என்றேன். அவரது மேஜையில் இருந்த அந்த கேரிக்கேச்சர் படத்திலிருந்து அவரது ஸ்டைலிலேயே Slow pan இல் கேமராவை நகர்த்தி, அவருக்கு focus செய்து Action sir என்றேன். பேசத் துவங்கினார். பொக்கிஷமாக என்னிடமுள்ள அந்த வீடியோவைப் பார்த்து மீண்டும் மீண்டும் அழுது கொண்டிருக்கிறேன்.

‘வாழ்க்கைல முக்கியமான விஷயங்களை மனதால முடிவு செய்யாதே. பொறுமையா அறிவால முடிவெடு’ என்பார் வாத்தியார். எழுபது வயதைத் தாண்டிய, உடல்நலம் குன்றிய முதியவர் காலமாவது இயற்கைதான் என்பதை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. சம்பிரதாயமாக அனைவரும் ‘அவர் மறைந்தாலும் அவர் படைப்புகள் நம்மிடையே வாழும்’ என்கிறார்கள். ‘எவனுக்குய்யா வேணும் படைப்பு? எனக்கு எங்க வாத்தியார் வேணும்யா’ என்று கத்தத் தோன்றுகிறது.

post

முடிந்தது :-(

மின் தகன மேடையில் வாத்தியாரின் உடல் கிடத்தப்பட்டு, மார்பில் கற்பூரத்தைக் கொளுத்தி வைக்கவும் நா.முத்துக்குமாரிடம் கதறத் தொடங்கினேன்.

‘முத்து! ஸாருக்கு சுடும்டா. வேண்டாம்டா’.

அவரது டிரேட்மார்க் ஃபிடம் கேஸ்ட்ரோ தொப்பியுடன் சேர்த்து அவரது தலையைத் தொட்டு வணங்கிய அடுத்த நொடியில் சரேலென வாத்தியாரை உள்ளே இழுத்துக் கொண்டது, அந்த யந்திரம். கதறலும், கேவலுமாக அழுது மயங்கிச் சரிந்தேன். இயக்குனர் பாலாஜி சக்திவேல் தாங்கிக் கொண்டார். யார் யாரோ என்னைக் கடத்தி அங்கிருந்து நகர்த்தினர்.

‘நீங்களே இப்பிடி கண்ட்ரோல் இல்லாம அழுதீங்கன்னா என்னண்ணே அர்த்தம்?’

வெற்றி மாறன் கடிந்தான்.

‘நீங்க அழுது எங்க எல்லாரயும் அழ வைக்கிறீங்க. மொதல்ல இவர பத்திரமா வெளியெ கூட்டிட்டுப் போங்க.’

யாரிடமோ சத்தமாகச் சொன்னான், இயக்குனர் ராம்.

’வாங்க சுகா’. இயக்குனர் சசி கைப்பிடித்து வெளியே கொணர்ந்தார்.

‘சுகா! இந்தாங்க. கொஞ்சம் மோர் சாப்பிடுங்க’.

இயக்குனர் விக்ரமன் கொடுத்தார்.

‘!என்னண்ணே இது? சின்னப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு?’

தோளைப் பிடித்து அணைத்துச் சொல்லும் போதே அடக்க முடியாமல் அழுது என் மார்பில் சாய்ந்தான், இயக்குனர் சீனு ராமசாமி.

மாலையில் ராஜா ஸாரிடமிருந்து ஃபோன்.

‘என்னய்யா? பத்திரமா அனுப்பி வச்சுட்டீங்களா?’

பதில் சொல்லாமல் அழுதேன்.

புரிந்து கொண்டு மறுமுனையில் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,

‘சரி சரி. நாளைக்கு வா’ என்றார்.

நாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். இனி அவர்தானே ’வாத்தியார்’!