அண்ணன்களின் பாடகன்

‘எல, முத்தக்கா கல்யாணத்துக்கு சின்ன சுப்பையாதான் மேளம் தெரியும்லா? சாயங்காலம் சில்வர் டோன்ஸ் கச்சேரி.’

பெரிய அக்காவின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது சிறுவனான என்னிடம் பெரியண்ணன் சொன்னான். அவளது திருமணம் திருநெல்வேலியிலுள்ள எங்கள் பூர்வீகப் பெரிய வீட்டில் விமரிசையாக நடந்தது. சின்னசுப்பையாவின் நாதஸ்வரத்தையும் விட சாயங்காலம் ரிஸப்ஷனில் (அப்போதெல்லாம் கல்யாணத்தன்றுதான் ரிஸப்ஷன்) நடக்கவிருக்கும் மெல்லிசைக் கச்சேரியில்தான் எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனாலும் பெரியப்பாவுக்கு பயந்து நாதஸ்வரக் கச்சேரியின் போது முன்வரிசையில் சின்னப்பிள்ளைகள் அனைவரும் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துப் பார்த்து தாளம் போட்டுக் கொண்டிருந்தோம். சாயங்காலம் மெல்லிசைக் கச்சேரியின் போது பெரியப்பா அந்தப் பக்கமே வரவில்லை.

எங்கள் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த மேடையில் வழக்கம் போல தியாகராஜ மாமா ஹார்மோனியத்தில் அமர்ந்திருந்தார். திருநெல்வேலி மெல்லிசைக் குழுக்களில் உள்ள அனைவருமே அநேகமாக பெரியண்ணனின் நண்பர்கள். பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்த்து வந்த அவன் ஒரு தபெலா பிளேயர். கணபதியே வருவாய், முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கு போன்ற சம்பிரதாயத் தொடக்கப் பாடல்கள் முடிந்து சினிமாப் பாடல்கள் முறை வந்த போது ‘மணிப்பூர் மாமியார்’ திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை ஆரம்பித்தார்கள். முதலில் பெண்குரலின் ஆலாபனையைத் தொடர்ந்து ‘ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே’ என்று ஆண்குரல் பாடத் துவங்கியது. தன்மகள்வீட்டு வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த காக்கும்பெருமாள்பிள்ளை தாத்தா அருகில் உட்கார்ந்திருந்த தன் தோழர் சுப்பிரமணிய பிள்ளை என்னும் எவர்சில்வர் தாத்தாவிடம் கேட்டார்.

‘வே, யார் கொரல் தெரியுதா?’

‘ஜெயராமன் கொரல் தெரியாதாக்கும். எத்தன ரெக்கார்டு கேட்டுருக்கென்.’

சற்றும் தாமதிக்காமல் சொன்னார் எவர்சில்வர் தாத்தா.

மலேஷியா வாசுதேவனின் குரலில் எனக்கு நினைவு தெரிந்த முதல் பாடலாக அந்தப் பாடல்தான் இன்றுவரை என் மனதில் உள்ளது. பின்னர் தேடித் தேடி இனம்பிரித்துப் பாடல்கள் கேட்க ஆரம்பிக்கும் போது ‘ஏ… முத்து முத்தா’ என்று பாடல் துவங்கும் போதே ‘அய், வாசுதேவன்’ என்று தெரிந்து போனது.

0000506343_350

வாசுதேவனின் பாடல்களை எனக்கு நிறைய அறிமுகப்படுத்தியவன் யாரென்று யோசித்துப் பார்த்தால் கணேசண்ணன்தான் நினைவுக்கு வருகிறான். கணேசண்ணன் அப்போது ஐ.டி படித்து முடித்துவிட்டு கண்ணில் படுகிற பெண்களையெல்லாம் காதலித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் எந்த ஒரு புதிய பாடலையும் கணேசண்ணன் குரலில்தான் நாங்கள் முதலில் கேட்போம். ‘முடிவல்ல ஆரம்பம்’ திரைப்படப்பாடலான ‘தென்னங்கீற்றும் தென்றல்காற்றும்’ பாடலில் ‘வண்ணாத்திப் பாறைக்கு வரவேணும் நாளைக்கு’ என்னும் வரியை கணேசண்ணன் யாரையோ நினைத்தபடி ரசித்துப் பாடுவான். ‘கோழி கூவுது’ படத்தின் ‘பூவே இளைய பூவே’ பாடலின் ’காமாட்சி’ என்று துவங்கும் வசனத்திலிருந்தே ஆரம்பித்து விடுவான். அதுவும் ‘தம்பி ராமகிருஷ்ணா, கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று சுற்றி அமர்ந்திருக்கும் எங்களில் யாரையாவது பார்த்துச் சொல்லுவான். பின்னர் எனது இசை வகுப்புகளின் போது சங்கராபரண ராகப் பயிற்சிக்கு மேற்கண்ட பாடல் பேருதவியாக இருந்தது.

காதல்பாடல்கள் என்றில்லை. கணேசண்ணனின் இசைரசனை வித்தியாசமானது. தென்தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களின் பாடலாக பரவலாக அறியப்பட்ட ‘அலை ஓசை’ படத்தின் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ என்ற வாசுதேவனின் பாடலை கணேசண்ணன் உணர்ச்சிப் பெருக்கோடு பாடிக் கேட்டிருக்கிறேன். அதுவும் அந்தப் பாடலின் முதல் இண்டெர்லூடில் ‘தந்தானே தந்தானே’ என்ற குழுவினர் குரலை திருநெல்வேலிப்பகுதி கோயில் கொடைகளில் மேளக்காரர்கள் உற்சாகமாக வாசிக்க, கும்பக்குடக் கலைஞர்கள் சுழன்று ஆடுவதை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். நாமும் கூட சேர்ந்து ஆடமாட்டாமோ என்று ஒவ்வொருமுறையும் தோன்றச் செய்யும் அட்டகாசத் துள்ளல் தாளமது.

கணேசண்ணனின் அப்போதைய மனநிலைக்கேற்ப பாடும் பாடல்களில் பெரும்பாலானவை மலேஷியா வாசுதேவனின் பாடல்களே. என்னையும், தம்பியையும் சினிமாவுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு அவ்வப்போது கணேசண்ணனுக்கே வழங்கப்படும். ரத்னா தியேட்டரில் ‘காளி’ படம் பார்த்துவிட்டு திருநெல்வேலி ஊரிலேயே குறுகலான தெருவான வடிவுமுடுக்குத் தெரு வழியாகத் திரும்பி வரும்போது எங்கள் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு ‘அடி ஆடு பூங்கொடியே’ பாடலை ரஜினிகாந்த மாதிரியே நடந்து, வாசுதேவன் மாதிரியே பாடினான். ‘ஏல, ஒங்களுக்கு என்ன கோட்டியா, ரோட்ட அடச்சுக்கிட்டு போறதப் பாரு. சவத்து மூதியொ’ என்று ஒரு சைக்கிள்காரர் திட்டிவிட்டுச் சென்றதை அவன் பொருட்படுத்தவேயில்லை. அவமானப்பட்டு கையை உதற முயன்ற என்னையும், தம்பியையும் வீடு வரும்வரை அவன் விடவேயில்லை. காரணம், பாட்டு வீட்டுவாசலில்தான் முடிந்தது.

சிலநாட்களாக தன் பக்கத்து வீட்டிலுள்ள ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தான் கணேசண்ணன். நான்கு அல்லது ஐந்து வயதான அந்தச் சிறுமி எந்த நேரமும் கை, வாய் நிறைய சாக்லெட்டாகவே காட்சியளித்தாள். அந்தச் சிறுமியை உட்கார வைத்துக் கொண்டு கணேசண்ணன் சினிமாவில் வருகிற மாதிரியே அத்தனை தத்ரூபமாக ‘வா வா வசந்தமே, சுகந்தரும் சுகந்தமே’ என்று ‘புதுக்கவிதை’ படப்பாடலைப் பாடுவான். குழந்தை அவனை நிமிர்ந்தே பார்க்காமல் வாயிலுள்ள மிட்டாயை முழுங்கி விட்டு, கையிலுள்ளதை வாயில் திணிக்கும். அதற்கெல்லாம் கவலைப்படாத கணேசண்ணன் இன்னொரு முறை அந்தப் பாடலைப் பாடத் தொடங்குவான். அந்தச் சிறுமியின் சித்தியை கணேசண்ணன் தீவிரமாகக் காதலித்து வந்த விஷயம், உச்சினிமாகாளி அம்மன் கோயில் முன்னால் அந்தப் பெண்ணின் வீட்டார் முன் கணேசண்ணன் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்கும் போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது.

மேற்படி சம்பவத்துக்குப் பிறகு திருநெல்வேலியில் எங்கு மெல்லிசைக் கச்சேரி நடந்தாலும் கணேசண்ணன் துண்டுச் சீட்டில் எழுதி ஒரு குறிப்பிட்டப் பாடலைப் பாடச் சொல்லி விண்ணப்பிப்பான். பெருங்குரலெடுத்து வாசுதேவன் ‘பார்வதி என்னைப் பாரடி’ திரைப்படத்தில் பாடியிருக்கும் ‘வாலிபரே வாலிபரே’ என்ற பாடல்தான் அது.

திருநெல்வேலியிலுள்ள புகைப்படக்கலைஞர்களில் முக்கியமானவரான விருத்தாச்சலம் அண்ணன், பெயரில் மட்டுமல்லாமல் உண்மையாகவே புதுமைப்பித்தனின் உறவினர். பெரியண்ணனின் தோழனான அவர் காதலில் தோல்வியடைந்தவர்.

‘அப்படி ஒரு சம்பவம் அவன் வாள்க்கைல நடந்தது அவனுக்கு மட்டுந்தான்டே தெரியும்.’ விருத்தாச்சலம் அண்ணனின் நெருங்கிய நண்பரான அனந்தசங்கர் மாமா சொல்வார்.

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு மிகவும் பிடித்தவர் விருத்தாச்சலம் அண்ணன். அதனாலேயே அவர் தன் சிறுகதைகளிலும், கவிதைகளிலும் ஒரு கதாபாத்திரமாக விருத்தாச்சலம் அண்ணனைச் சித்தரித்திருப்பார். ‘நெஞ்சிலாடும் பூ ஒன்று’ படத்தின் ‘ஒரு மூடன் கதை சொன்னான்’ என்ற பாடலை எப்போது கேட்டாலும் விருத்தாச்சலம் அண்ணனை நினைக்காமல் என்னால் இருக்கமுடிந்ததில்லை. ‘பெண்ணை படைத்தானே பிரம்மனே. பாவம் ஆண்களே, பரிதாபம் நாங்களே’ மற்றும் ‘எந்த மடையனோ சொன்னான், சொர்க்கமாம். பெண்கள் உலகமே நரகமே’ போன்ற வரிகளை உணர்ச்சி பொங்கக் கண்ணீருடன் பாடுவார் விருத்தாச்சலம் அண்ணன்.

‘தம்பி, இந்தப் பாட்ட படிச்சது மலேசியான்னு நெனைக்காதெ. விருத்தாச்சலமாக்கும்… என்னடே முளிக்கெ? நெசமாவே நான்தான் பாடுனேன். எல்லா வரியும் நான் பாடுனதாக்கும்.’ பெனட்ரில் இருமல் மருந்து வாசனையடிக்க, சிகரெட் புகைக்கு இடையே அழுதபடி இதைச் சொன்ன விருத்தாச்சலம் அண்ணன் இப்போது உயிருடன் இல்லை.

இது போன்று ‘சில்வர் டோன்ஸ் டி.ஆர். குமார், ‘ஆடலரசன்’ நெல்லை பிரபாகர், ‘சங்கீத சுதா’ உமாபதி போன்ற புகழ்பெற்ற திருநெல்வேலி மெல்லிசைக்குழு பாடகர்கள் வாயிலாகவே மலேஷியா வாசுதேவனின் பாடல்களை நினைவுகூர்கிறேன். எல்லா கச்சேரிகளிலும் ரஜினி ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடப்படும் பெரும்பாலான ரஜினி படப்பாடல்கள் வாசுதேவன் பாடியவையே. யோசித்துப் பார்த்தால் ரஜினிகாந்தின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை நோக்கிய பயணத்துக்கு உதவியாக அமைந்த முக்கியமான பாடல்களைப் பாட இளையராஜா, வாசுதேவனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். மெல்ல மெல்ல இது நிகழ்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

‘நான் போட்ட சவால்’ திரைப்படத்தின் ‘சுகம் சுகமே’ , ‘தர்மயுத்தம்’ திரைப்படத்தின் ‘ஆகாய கங்கை’ ‘பாயும் புலி’ திரைப்படத்தின் ‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்’ போன்ற இருகுரல் பாடல்களும், ‘தர்மயுத்தம்’ திரைப்படத்தின் புகழ் பெற்ற ‘ஒரு தங்க ரதத்தில்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப்படத்தின் ‘பட்டுவண்ணச் சேலைக்காரி’ போன்ற தனிக்குரல் பாடல்களும் ரஜினிகாந்த்துக்காக வாசுதேவன் பாடிய பல பாடல்களின் உதாரணங்கள். இவற்றுள் ரஜினிகாந்தின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை உறுதி செய்யும் பாடலாக அவரது ரசிகர்கள் கொண்டாடிய பாடல், ஒரு சாமானியனின் குரலில் ஒலிக்கும் ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தின் ‘பொதுவாக என் மனசு தங்கம்.’ கிளப்வகை தனிப்பாடல்களில் ரஜினிகாந்தின் மிக முக்கிய பாடலாக இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு பாடலையும் இளையராஜாவின் இசையில் வாசுதேவனே பாடியிருக்கிறார். இன்றைய ரீமிக்ஸ் கலாச்சாரத்தில் சிக்கிச் சீரழிக்கப்பட்டாலும் அந்தப் பாடல் தன் சுயத்தை இன்னும் இழக்கவில்லை என்றே சொல்லவேண்டும். அந்தப் பாடல் ‘அடுத்த வாரிசு’ திரைப்படத்தின் ‘ஆசை நூறுவகை’.

index_02

அடிப்படையில் வாசுதேவனின் குரல் டி.எம்.எஸ், சி.எஸ்.ஜெயராமன் போன்ற நம் முன்னோடி திரையிசைப்பாடகர்களைப் போல கனத்த குரல். இரண்டு ஸ்தாயிகளிலும் தங்கு தடையின்றி பயணிக்கக்கூடிய அந்தக் குரலில் அவர் நவீனமான பாடுமுறையை வெளிப்படுத்தினார். இதனாலேயே மரபான குரலும், நவீனமான விளையாட்டுத்தனமும், துள்ளலும் தேவைப்படும் பாடல்களுக்கு வாசுதேவனை விட்டால் வேறு ஆளே இல்லை என்று சொல்லுமளவுக்கு அவரை உயர்த்தியது. ‘ஆசை நூறுவகை’ போலவே எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு க்ளப் வகைப் பாடல் ‘பாட்டெங்கே’ (பூவிழி வாசலிலே) என்ற பாடல். இப்பாடலின் சரணங்களை மட்டும்தான் வாசுதேவன் பாடியிருப்பார். ஜாஸ் ஃப்யூஷன் வகையறாவைச் சேர்ந்த இப்பாடலில் அவர் வெளிப்படுத்தியிருந்தது முழுக்க முழுக்க மேற்கத்திய ஸ்டைல் சார்ந்ததொரு பாடுமுறையை. வாசுதேவன் பாடும் சரணங்கள், கிட்டத்தட்ட ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ஸ்டைல் போல மேலுயராத கனத்தோடு இருந்தாலும், “ஏனென்றும் தெரியாது, ஏக்கங்கள் புரியாது”, “வா பூவே வா” போன்ற இடங்களில் அந்தக் குரலின் அழுத்தத்தோடு சேர்த்து அழகான துள்ளலையும் தந்திருப்பார். இப்பாடலின் உயிர்ப்புக்கு வாசுதேவனின் இத்தகைய பாடுமுறை மிக முக்கியமான காரணம். இதைப் போலவே ‘மாமாவுக்கு குடுமா குடுமா’ (புன்னகை மன்னன்) என்ற ராக்-அண்ட்-ரோல் ஸ்டைல் பாடலின் சரணமும் அசாத்தியமானது.

இந்த அநாயசமான குரல்வீச்சுதான் மேற்கத்திய ஸ்டைல், கர்நாடக ராகம் இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைத்த முக்கியமான பாடல்களை வாசுதேவனைப் பாடவைக்கும் நம்பிக்கையை இளையராஜாவுக்குத் தந்திருக்கவேண்டும். கடல்மீன்கள் படத்தில் “என்றென்றும் ஆனந்தமே” பாடல் சரசாங்கி ராகத்தில் அமைந்த டிஸ்கோ பாடல். ரிதமும், கிடார் பகுதிகளும் அதற்கொரு தெளிவான மேற்கத்திய சட்டையை மாட்டிவிட்டிருக்கும். டிஸ்கோவுக்கான வழக்கமான எட்டு பீட் வடிவத்தை உபயோகிக்காமல், ஆறு பீட் ரிதத்திலேயே டிஸ்கோவின் எட்டு பீட் உணர்வைத் தந்திருப்பார் இளையராஜா. ‘வாலிபத்தின் ரசனை’ வரிகளில் அதைத் தெளிவாகக் கேட்கமுடியும். இப்படிப்பட்டதொரு முக்கியமான பாடலைப் பாடும்போது ராகபாவத்தை வெளிப்படுத்தும் மெலடி, மேற்கத்தியப் பாடுமுறை இரண்டையும் சிதைக்காமல் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. இப்படிப்பட்ட சவாலானதொரு பாட்டை வாசுதேவனிடம் கொடுத்தார் இளையராஜா. பாடலின் ஆரம்பத்தில் வரும் ‘பாபப்ப பாபப்பா’ பிரயோகங்கள், “இசை மழை பொழிந்தது குயிலே” என்ற இடத்தில் ‘குயிலே’யில் வாசுதேவன் வெளிப்படுத்தியிருக்கும் நெளிவு போன்றவற்றை வாசுதேவன் பாடிய விதத்தின் மூலம் இப்பாடலை வெகு சிறப்பான ஒன்றாக்கியது! இதே போன்ற இன்னொரு முக்கியமான ஃப்யூஷன் பாடலான, நெற்றிக்கண் படத்தில் ஜாஸ்-பாப் வடிவில் அமைந்த ‘ராஜா ராணி ஜாக்கி’ என்ற பாடலின் இடையிசையில் வாசுதேவன் மேற்கத்திய சாயல், ஸ்வரம் பாடுவது இரண்டையுமே வெகு அழகாகச் செய்திருப்பார். ‘அஜயா’ என்ற கன்னடப்படத்தில் ‘எல்லா கலைய பல்லே’ என்ற பாட்டில் கர்நாடக சங்கீதம், பாப், டிஸ்கோ என வெவ்வேறு இசைவகைகளைத் தனித்தனியாக ஒவ்வொரு சரணத்தில் பாடிக்காட்டவேண்டிய பாட்டை வாசுதேவனைப் பாடவைத்தார் இளையராஜா.

தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் பெரும்புகழ் பெற்ற ‘ஹரிதாஸ்’ திரைப்படப்பாடலான ‘என்னுடல் தன்னில்’ என்னும் பாடலின் ஒரு பகுதியை ‘எனக்கு நானே நீதிபதி’ என்ற படத்தில் பயன்படுத்தினார் இளையராஜா. ‘அம்மையப்பா’ என்று தொடங்கும் அந்தப் பகுதி ஷண்முகப்ரியா ராகத்தில் அமைக்கப்பட்ட ஒன்று. வேடிக்கையான சிச்சுவேஷனுக்கு சாஸ்திரிய சங்கீதமாக அமைந்த ‘ஹரிதாஸ்’ படப்பாடலை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஓர் அசாத்திய துணிச்சல் வேண்டும். காரணம் அந்தப் பாடலுக்கு மெட்டமைத்தவர், ‘இசைமேதை’ என்றழைக்கப்பட்ட ஜி.ராமநாதன். பாடலைப் பாடியவர், ஒப்பற்ற குரலுக்குச் சொந்தக்காரரும், ‘ஏழிசை மன்னர்’ என்று அழைக்கப்பட்டவருமான எம்.கே.தியாகராஜ பாகவதர். பாகவதருக்கு இணையாக அந்த உச்சஸ்தாயியில் பிசிறில்லாமல் பாட மலேஷியா வாசுதேவனையே தேர்ந்தெடுத்திருந்தார் இளையராஜா. இதற்குக் காரணம், இப்பாடலுக்கு அழுத்தமான, சுருதி சுத்தமாக ஸ்வரங்களைப் பேசக்கூடிய, மரபிசையை லாவகமாகப் பாடும் பாடகர் தேவை. அதே சமயம், முற்றிலும் மரபிசையாக்கிவிடாமல் பாட்டுக்குரிய விளையாட்டுத்தனமும் தேவை. அதற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போனவர் வாசுதேவன். இளையராஜா தன் குரல் மேல் வைத்திருந்த நம்பிக்கையை வாசுதேவன் காப்பாற்றினார். இந்த காம்பினேஷனில் வரக்கூடிய, சாஸ்திரிய சங்கீத தொனியில், ராகங்களில் அமைந்த துள்ளலான பாடல்களைப் பெரும்பாலும் வாசுதேவனையே பாடவைத்தார் இளையராஜா. மணிரங்கு ராகத்தில் அமைந்த ‘சுகராகமே’ (கன்னிராசி), ஆரபி ராகத்தில் அமைந்த ‘ஆசைக்கிளியே’ (தம்பிக்கு எந்த ஊரு), சிம்மேந்திர மத்யமத்தில் அமைந்த ‘மதனமோக ரூப சுந்தரி’ (இன்றுபோய் நாளை வா), சாரங்கா ராகத்தில் அமைந்த ‘காதலில் மாட்டாமல் உலவுகின்ற காளை அவன்’ (பார்வதி என்னைப் பாரடி), ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த ‘காதலிச்சுப் பாரு கிளியே’ (தங்கத்தாமரைகள்), போன்றவை அவற்றுக்கு சிறப்பான உதாரணங்கள்.

ஒரு பக்கம் ரஜினிக்காகப் பாடிய துள்ளலான பாடல்கள், இன்னொரு பக்கம் ‘கோடைகாலக் காற்றே’ (பன்னீர் புஷ்பங்கள்), ‘குயிலுக்கொரு நிறமிருக்கு’ (சொல்லத் துடிக்குது மனசு), ‘ஒரு தங்க ரதத்தில்’ (தர்ம யுத்தம்), ‘ஏ ராசாத்தி’ (என் உயிர்த்தோழன்) போன்ற மெலடிப் பாடல்கள், ‘பாட்டெங்கே’, ‘ஆசை நூறு வகை’ போன்ற மேற்கத்திய ஸ்டைல் பாடல்கள், ’என்றென்றும் ஆனந்தமே’, ‘ராஜா ராணி ஜாக்கி’ போன்ற ஃப்யூஷன்கள், ‘கட்டிவச்சுக்கோ எந்தன் அன்பு மனச’ (என் ஜீவன் பாடுது), ‘ராத்திரியில் பாடும் பாட்டு’ (அரண்மனைக் கிளி), ‘கம்மாக்கரை ஓரம்’ (ராசாவே உன்னை நம்பி) போன்ற கிராமியப்பாடல்கள், எண்ணற்ற கேலிப்பாடல்கள் என வாசுதேவன் பாடாத பாடல்வகையே இல்லை. இதனாலேயே வாசுதேவன் வெறும் டப்பாங்குத்துப் பாடல்கள் மூலம் வீணடிக்கப்பட்டார் என்றோ, ‘அவர் வெறும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்தானே?’ என்றோ பேசுபவர்களைப் பார்த்து எனக்கு சிரிப்பாக இருக்கும்.

1

ராகங்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் எனது இசையாசிரியர் கிருஷ்ணன் அவர்களிடம் இளையராஜாவின் பாடல்களின் மெட்டுக்களை நான் ஹார்மோனியத்தில் வாசித்துக் காண்பித்து கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திரைப்படங்கள் பார்க்கும் பழக்கமில்லாத எனது ஆசிரியர் ராகங்களை மட்டும் சொல்லி விட்டு விலகிக் கொள்வார். அந்தந்தப் பாடலின் விசேஷ குணங்களைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொள்வது எனது இசையாசிரியரின் கடைக்குட்டி மகனான பாலாஜியிடம்தான். பாலாஜியும், அவரது மூன்று சகோதரர்களும் வயலின் கலைஞர்கள். இன்றைக்கும் ‘திண்டுக்கல் அங்கிங்கு’ மெல்லிசைக் குழுவில் வயலின் வாசித்து வருபவர்கள். பாலாஜியின் மூத்த சகோதரரான தியாகு அண்ணன் வங்கியில் பணியாற்றிக் கொண்டே கச்சேரிகளிலும் வாசித்து வருகிறார். சகோதரர்கள் அனைவருமே தடுக்கி விழுந்தால் ஏதாவது ராகத்தில்தான் விழுவார்கள். எங்காவது இடித்துக் கொண்டாலும் அது ஏதாவதொரு தாளமாக இருக்கும்.

பாலாஜி வயலினிலும், நான் ஹார்மோனியத்திலும் வாசுதேவனின் பல பாடல்களை வாசித்துப் பார்த்து வியந்திருக்கிறோம். அவற்றுள் ‘கரும்பு வில்’ திரைப்படத்தின் ‘மலர்களிலே ஆராதனை’யும், ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் ‘கோயில்மணி ஓசைதன்னை’யும், ‘சட்டம் என் கையில்’ திரைப்படத்தின் ‘ஆழக்கடலில் தேடிய முத்து’வும், ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் ‘மாப்பிள்ளைக்கு மாமன் மனசு’ பாடலும் தவறாது இடம்பெறுபவை. இதில் ராகங்களின் அடிப்படையிலான பாடல்கள் அதிகம் இடம்பெற்றதை தற்செயலாக ஒருமுறை கவனித்தோம். சண்முகப்ரியாவின் அட்டகாசப் பாடலான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தின் ‘ஊருவிட்டு ஊரு வந்து’, கீரவாணியில் அமைந்த ‘தூறல் நின்னு போச்சு’ திரைப்படத்தின் ‘தங்கச் சங்கிலி’, ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் ‘மலர்களே நாதஸ்வரங்கள்’ என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

கல்யாணி ராகத்தில் எத்தனையோ திரையிசைப்பாடல்கள் உள்ளன. ‘ஒருவர் வாழும் ஆலயம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மலையோரம் மயிலே’ என்னும் இருகுரல் பாடல் கல்யாணி ராகப்பாடல்களில் வித்தியாசமான ஒன்று. சங்கீதமும், நடனமும் கற்ற ஒரு பெண்ணும், ஒரு சாமானியனும் பாடுவதாக அந்தப் பாடலை அமைத்திருப்பார் இளையராஜா. கல்யாணி ராகத்தின் பிடிமானங்களுடன் ஜதியும் சொல்லி சர்வலட்சணமாக ஒருபுறம் சித்ரா பாட, மறுபுறம் ஆன்மாவிலிருந்து அநாயாசமாகப் பாடும் ஆண்குரலுக்குச் சொந்தக்காரர் வாசுதேவன். அந்தப்பாடலை ரொம்பவும் வெகுளித்தனமாக ஆரம்பிப்பார் வாசுதேவன். அவரிடமிருந்து பாட்டை வாங்கி சித்ரா எங்கோ கொண்டு செல்ல, அவ்வளவுதான் வாசுதேவன் என கேட்போருக்குத் தோன்றும். எல்லாம் சரணம் வரைக்கும்தான். சரணத்தில் ‘மாநிறப்பூவே யோசனை ஏனோ, மாமனைத்தானே சேரணும் நீயே’ என்னும் வரியைக் கேட்டுப் பாருங்கள். அந்த வரிக்குப் பின் சித்ராவின் குரல், வாசுதேவனின் ஆத்மார்த்தமான பிடிக்குள் சிக்கி சரணடைந்திருப்பது கண்கூடாக நமக்கு தெரியும்.

இவைபோக வித்தியாசமான வாசுதேவனின் பாடல்களின் பக்கமும் நாங்கள் கவனம் செலுத்துவதுண்டு. ‘பொண்ணுக்கேத்த புருஷன்’ திரைப்படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து வாசுதேவன் பாடிய ‘சாரங்கதாரா’ எனும் பாடல் முக்கியமானது. மற்றொன்று அதிகம் அறியப்படாத ‘வாசுகி’ திரைப்படத்தில் மால்குடி சுபாவுடன் வாசுதேவன் இணைந்து பாடிய ‘காதல் நிலவே’ என்னும் பாடல்.

ஒருமுறை இப்படி ஒவ்வொரு பாடலாக நானும், பாலாஜியும் வாசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பாலாஜியின் மூத்த சகோதரரான தியாகு அண்ணன் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். தயக்கத்தில் நாங்கள் கொஞ்சம் நெளிய, ‘ஏ, என்னையும் ஆட்டைல சேத்துக்கிடுங்கடே’ என்றார் தியாகு அண்ணன். வாசுதேவனின் பாடல்களை ஆரம்பகாலத்திலிருந்து நினைவுகூர்ந்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“சாமானியன் கொரல் பாத்துக்கோ வாசுதேவனுக்குள்ளது. பதினாறு வயதினிலே படத்துலேருந்துதான் அவனுக்கு சூடு புடிச்சுது. தாயளி அஞ்சு பாட்டுல மூணு அவங்குள்ளதுதானெ. அப்புறம் வண்டி நிக்கவே இல்ல. நாலுகால் பாச்சல்தான். ஒரு கோட்டிக்காரப்பய பாடுத மாதிரி மோசமா பாடச் சொன்னா ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாட்ட நல்லா பாடித் தொலச்சுட்டான் வாசுன்னு எளையராஜாவே தந்தி பேப்பர் வரலாற்றுச் சுவடுகள்ல சொல்லியிருந்தாரு, பாத்தியா. அதான் விடாம ரஜினிலே இருந்து ராமராஜன் வரைக்கும் பாட வச்சாரு. வேடிக்கைப் பாட்டும் பாடவச்சிருக்காரு. சீரியஸாவும் பாட்டு குடுத்திருக்காரு. பாலசுப்ரமணியத்துக்கு சமமா இல்லென்னா ஒருத்தன் பாடி நிக்க முடியுமா சொல்லு, பாப்போம்” என்றார்.

தியாகு அண்ணன் பேசப் பேசக் கேட்டுக் கொண்டேயிருக்கத் தோன்றியது. ஒரு கட்டத்துக்கு மேல் அமைதியாகிவிட்டார். மனதுக்குள் ஏதோ வாசுதேவனின் பாடல் ஓடியிருக்கவேண்டும்.

பிறகு பாலாஜியிடமிருந்து வயலினை வாங்கி ஹரிகாம்போதி வாசிக்க ஆரம்பித்தார். மெல்ல ஹரிகாம்போதி ஒரு மலேஷியா வாசுதேவன் பாடலானது. ‘தங்கத்தாமரைகள்’ திரைப்படத்தின் ‘காதலிச்சுப் பாரு கிளியே’ பாடல்தான் அது. அந்தப் பாட்டின் சரணத்தில் ‘காதல்வந்த காளையெல்லாம் கன்னியரைப் பார்த்தால் கண்சிமிட்ட நேரமின்றி ஆசைகளைச் சேர்ப்பார்’ என்ற வரியில் ‘ஆ… ஆ…சைகளைச் சேர்ப்பார்’ என்ற இடத்திலுள்ள பிடிமானத்தை வாசிக்கும்போது கண்ணால் அதை எங்களுக்குக் காண்பித்துக்கொண்டே ‘வாசுதேவன் இந்த எடத்த என்னமா பாடியிருப்பாங்கெ’ என்றார். அந்த இடம் கடந்தவுடன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராய் வயலினை தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு எழுந்துகொண்டார்.

‘சே, சண்டாளப்பாவி. மனசாரல்லா பாடியிருப்பான்’.

தியாகு அண்ணன் தனக்குத் தானே சொல்வதுபோல்தான் இருந்தது.

பிறந்த நாள்

எந்த ஒரு பள்ளியிலும் யூனிஃபார்ம் அணிந்த பிள்ளைகளுக்கு மத்தியில் யாராவது ஒரு பிள்ளை வண்ண உடை அணிந்து காணப்பட்டால் அது பிறந்தநாள்குழந்தை என்று எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வாய் நிறைய சிரிப்பும், கையில் சாக்லெட் டப்பாவுமாக அன்றைக்கு முழுக்க அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். ரொம்பவும் வயதில் சிறியதாக இருந்தால் சாக்லெட் டப்பாவில் பாதியை அதுவே காலி பண்ணிவிடும்.

‘பாப்பா, இன்னைக்கு ஸ்கூல்ல எல்லாருக்கும் சாக்லெட் குடுத்தியா? டப்பா காலியா இருக்கு?’

‘கௌஷிக் மூணு சாக்லெட்ட புடுங்கிட்டான்ம்மா.’

‘அதுசரி. நீ எல்லாருக்கும் குடுத்தியா?’

‘சி.வசுமதி வாங்கி தின்னுட்டு நீ குடுக்கவே இல்லெடின்னா.’

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆளாளுக்கு, ஊர் ஊருக்கு மாறுபடுகின்றன. திருநெல்வேலிப் பகுதியில் முதல் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளை (அவை எங்கே கொண்டாடுகின்றன?) அவர்களின் நினைவுக்குப் புரியாமலேயே பாடாய்ப்படுத்தி பம்பரமாக ஆக்குவார்கள். முதல்நாள் இரவே வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்து இறங்கிவிடுவார்கள். வீட்டிற்குள்ளே நுழைந்ததும் செருப்பைக் கிழற்றிப் போட்டுவிட்டு முதல்வேலையாக தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை ஈவிரக்கில்லாமல் தூக்கிக் கொஞ்சுவார்கள். அதிலும் சில முரட்டு ஜென்மங்கள் அரைத்தூக்கத்திலிருக்கும் குழந்தையை தூக்கி தட்டாமாலை சுற்றுவார்கள்.

‘ஏல, யாரு வந்திருக்கா பாத்தியா? கொங்கராயக்குறிச்சி அத்த. சொல்லு… கொங்..கரா…யக்..கு..றி..ச்சி அத்த்த்த.’

கொங்கராயக்குறிச்சி என்னும் ஊரின் பெயரை அந்த ஊரின் ஊராட்சிமன்றத் தலைவருக்கேச் சரியாகச் சொல்லவராது. குழந்தை அலறி அழுவதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், ‘அத்த லேட்டா வந்திருக்கேன்னுல்லா கோவப்படுதான்’ என்பார்கள்.

மறுநாள் காலையிலேயே இரண்டு வேன்களில் ஆட்கள் சாமான்களை ஏற்றத் தொடங்குவார்கள். பித்தளை தாம்பாளம், போணிச்சட்டி, தூக்குச்சட்டிகள், எவர்சில்வர் தம்ளர்கள், தட்டுகள், தேங்காய், பழங்கள், மல்லிகை, பிச்சி, கதம்பப் பூமாலைகள், ஒயர்க்கூடைகள், புளியோதரை, எலுமிச்சை, தயிர்சாதத் தயாரிப்புகள், காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் அடைத்த பாட்டில்கள், சின்ன ஃபிளாஸ்குகள் இவற்றுக்கு மத்தியில் இன்னும் தூக்கக் கலக்கத்தில் உள்ள பிறந்தநாள் குழந்தையும் சிணுங்கிக்கொண்டு யார் மடியிலோ உட்கார்ந்திருக்கும்.

‘எனக்கு, என் தங்கச்சிக்கு, கடைக்குட்டித்தம்பிக்கு அப்புறம் என் பயல்களுக்கு எல்லாருக்கும் திருச்செந்தூர்லதான் மொட்ட போட்டு காது குத்துனது. எங்க அம்மைக்கும் அங்கெதானாம்.’

லட்சத்து சொச்ச தடவையாக ஒரு தாத்தா சொல்லுவார். அநேகமாக அதை எல்லோரும் ஆமோதிப்பார்கள்.

‘ஏ, போற வளில சந்திப்பிள்ளையாருக்கு ஒண்ணு, அப்பொறம் பாளயங்கோட்ட தாண்டும் போது செரட்ட பிள்ளையாருக்கு ஒண்ணு. வெடலய மறந்துராதீங்கடே.’

‘அதெல்லாம் கணேசன் கையிலயே ரெடியா வச்சிருக்கான்.’

கையில் இரண்டு தேங்காய்கள் உள்ள பையுடன் பின்சீட்டில் வாயெல்லாம் பல்லாக கணேசன் உட்கார்ந்திருப்பான். அநேகமாக அவன் திருச்செந்தூர் செல்வது அதுதான் முதல் முறையாக இருக்கும்.

பாளையங்கோட்டை தாண்டியவுடனேயே ஒருவர் சொல்லுவார்.

‘ஏ, அந்த டேப்பத்தான் தட்டி விடுங்களேன். பாட்ட கீட்ட கேட்டுட்டு கொஞ்சம் சந்தோசமாத்தான் போவோமெ. செத்த சவம் மாதிரில்லா உக்காந்துருக்கொம்.’

‘நல்ல காரியத்துக்கு போகும்போது ஒங்க அத்தான் வாயில வார வார்த்தய பாத்தியா? தீயத்தான் வைக்கணும் அவர் வாயில.’

ரகசியமாக அருகிலிருக்கும் பெண்ணிடம் சொல்வாள் அவர் மனைவி.

விரல்சூப்பித் தூங்க ஆரம்பித்திருக்கும் குழ்ந்தையின் தலைக்கு மேலே உள்ள ஸ்பீக்கர் ‘என் உச்சி மண்டைல கிர்ர்ர்ர்ர்ர்ருங்குது’ என்று அலற ஆரம்பிக்க, குழந்தை திடுக்கிட்டு எழுந்து ஸ்பீக்கருக்குப் போட்டியாகக் கதறும். அதன் பெரியம்மையோ, சித்தியோ கோபம் கொள்வாள். என்ன இருந்தாலும் ஒரு தாயில்லையா?

‘எப்பா, அந்த பாட்ட மாத்துங்க. பிள்ளைக்கு புடிக்கல. அளுதான் பாருங்க.’

’புலி உறுமுது புலி உறுமுது’ பாடலுடன் போட்டி போடமுடியாமல் குழந்தை விக்கித்து விசும்ப, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியப்பா முறுக்கு பொட்டலத்தைப் பிரித்து ஆளுக்கொன்றாய் விநியோகித்துவிட்டு மிச்சத்தை மடியில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியே தின்ன ஆரம்பிப்பார்.

ஒருமணிநேரப் பயணத்தில் பாட்டையும் ஒலிக்கவிட்டு பெரியவர்களும் இரைச்சலாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். சொல்லமுடியாத துயரத்தில் குழந்தை அழும்போதெல்லாம் இருக்கவே இருக்கிறது, புட்டிப்பால். வலுக்கட்டாயமாக வாயில் திணிப்பார்கள்.

திருச்செந்தூரில் போய் இறங்கும்போதே மற்ற வேன் வந்துவிட்டதா என்ற கவலையில் சுற்றுமுற்றும் பார்ப்பார்கள்.

‘பகவதி அந்த வண்டிலதானே வாரான்? அந்த மூதிக்கு ஒரு ஃபோன போடுங்க. எங்கன வந்துக்கிட்டிருக்கானுவொ. இதுக்குத்தான் நான் அந்த வண்டில வந்திருக்கணும்ங்கென்.’

அந்த வேன் வந்து நிற்பதற்குள்ளாக அதிலிருந்து வீடியோ மற்றும் ஃபோட்டோகிராஃபர் குதித்து ஓடிவருவார்கள்.

‘ஏ, நீங்க இந்த வண்டில வந்திருக்கலாம்லா? எவ்வளவு நேரம் நிக்கோம்?அங் அங்… எடுங்க.’

பின்மண்டையிலிருக்கிற ஒன்றிரண்டு முடியை இழுத்து வழுக்கைத் தலையை மறைக்கும் வண்ணம் சீவியவாறே கேமராவை முறைத்துப் பார்ப்பார் ஒரு மாமா.

’எல, அய்யா. எந்தி. திருச்செந்தூர் வந்தாச்சுல்லா. அன்னா… அங்கெ பாரு கடலு. என்ன பெத்த அய்யால்லா. எந்தி எந்தி.’

அப்போதுதான் தூங்க ஆரம்பித்திருக்கும் குழந்தையின் கன்னத்தைத் தட்டி எழுப்புவார்கள்.

1வெளிப்பிரகாரத்தில் நடந்துவரும்போது கடல்காற்று முகத்தில் அடிக்க, பெரியவர்களுக்கே தூக்கம் வரும். குழந்தைக்குக் கேட்பானேன்? முடியெடுக்கும் இடத்துக்கு வந்து சேர்வதற்குள் அதை மாற்றி மாற்றி வாங்கி ஆளாளுக்குக் கொஞ்சி அதன் கொஞ்சநஞ்சத் தூக்கத்தையும் தொலைப்பார்கள். அழுகையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் குழந்தை, மொட்டையடிக்கப்போகிறவரைப் பார்த்தவுடன் நிச்சயம் வெடித்து அழத்துவங்கும். ஜடாமுடியும், பெரிய மீசையுமாக இருக்கும் அவர் சிரித்தபடியே , ‘அளக்கூடாது. ஒங்க பேரென்ன ராசா? என் தங்கம்’ என்று வரவேற்பார். குழந்தையின் தாய்மாமனின் மடியில் வைத்து சரட் சரட்டென்று பிஞ்சுத்தலையை மழிக்கத் துவங்கும்போது குழந்தையுடன் சேர்ந்து அருகில் நின்று கொண்டிருக்கும் அதன் தாயும் கண்ணீர் சிந்துவாள். மற்ற உறவினர்கள் காற்று புக இடமில்லாமல் நெருக்கமாக எட்டிப்பார்த்தபடி சூழ்ந்து நிற்பார்கள். ஒருசிலர் கையில் கிலுகிலுப்பை, பலூன், விசில் போன்றவற்றை வாங்கி வந்து அழுது கொண்டிருக்கும் குழந்தையின் முன்னால் வந்து அதன் தாய்மாமனின் காதில் ஊதுவார்கள். தாங்கமாட்டாமல் அவனும் அழ ஆரம்பிப்பான்.

ஒருமாதிரியாக மொட்டை போட்டு முடித்தபின் அழ அழ பிள்ளையைக் குளிப்பாட்டி, மொட்டைத்தலையில் சந்தனத்தை அப்புவார்கள். தாங்கமுடியா எரிச்சலில் குழந்தை கதறத்தொடங்க, அடுத்து காதுகுத்து என்னும் ஆபத்து காத்திருக்கும். இப்போதும் தாய்மாமன் மடிதான் பிள்ளையின் இருக்கை. நாக்கைக் கீழ் உதட்டின் மீது நீட்டியவாறே நாசூக்காக காது குத்த முனைவார் ஆசாரி. எத்தனையோ பிள்ளைகளுக்குக் காது குத்திய அனுபவம் காரணமாக நிதானமாக அதேசமயம் கண்ணிமைக்கும் நேரத்தில் வேலையை முடித்துவிடுவார். இப்போது பயலை சமாதானப்படுத்த பிளாஸ்டிக் நாதஸ்வரம் ஒன்றை வாங்கிவந்து தாய்மாமனின் காதில் வசமாக ஊதுவார் ஒருவர்.

அடுத்து சந்நிதானம் நோக்கிச் செல்வார்கள். கூட்ட நெரிசலில் வேர்த்து விறுவிறுத்து அழுகையும், நடுக்கமும், தூக்கமுமாக இருக்கும் குழந்தையை செந்திலாண்டவன் சன்னதியின் முன் நின்றுகொண்டு ‘எல, அங்கெ பாரு முருகரு. எங்கெ சொல்லு.

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்

சொல்லுலெ. சொல்லுதானா பாரென்.’

ஒருவயதுக் குழந்தையின் கையைப் பிடித்துக் கும்பிட வைத்து நச்சரிப்பாள் அத்தை. அவனுக்கு மட்டும் நன்றாகப் பேசத் தெரிந்திருந்தால் நிச்சயம் அவனது அப்போதைய மனநிலைக்கு பாடாய்ப்படுத்தும் அந்த அத்தையின் தாயாரை வசை பாடியிருப்பான்.

அர்ச்சனை முடிந்து சாமிகும்பிட்டுவிட்டு விடுதிக்கு வந்து பந்தி விரித்து, கொண்டு வந்த எலுமிச்சை, புளியோதரை, தயிர்சாத வகையறாக்களைப் பரிமாறி சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

‘ஏட்டி, ஊறுகாய மறந்துட்டேளா? ஒங்களையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்னன்னு கேக்கென்?’

ஒரு ஓரத்தில் அமர்ந்து பால்குடிக்க மறுக்கும் பிறந்தநாள் குழந்தைக்கு புகட்ட முயன்றுகொண்டிருப்பாள் அதன் தாய்.

சாப்பிட்டு முடிந்து ஆளாளுக்கு ஊர்வம்பு பேசிக் கொண்டே கிளம்ப ஆயத்தமாகும் போது ஒருசிலர் கடல்நீராட சென்றிருப்பார்கள்.

‘எல, ஒங்க அத்தான எங்கெ காணோம்?’

‘திருச்செந்தூர்வரைக்கும் வந்துட்டு கடலாடாம போலாமாய்யா? அதான் அவாள் துண்டக் கட்டிட்டு போயிருக்கா.’

‘ஏ, அவாள் பொத்தாமரைக் கொளத்துல முங்கு போடும்போதே கூட தொணைக்கு நாலுபேரு நிக்கணும். கடல் இளுத்துட்டு போயி எலங்கைல கொண்டு தள்ளீரும். சிங்களன் பயந்துரப் போறான். போயி பாருங்கடே.’

திருச்செந்தூரில் சாயங்காலம் உளுந்தவடை, வாழைக்காய் பஜ்ஜி சகிதம் காப்பி குடித்து விட்டு இரண்டு வேன்களும் கிளம்பும் போது பொழுதுசாயத் தொடங்கியிருக்கும். எல்லோர் தலைகளும் தூக்கத்தில் நடனமாடியபடி பயணிக்க பிறந்தநாள்க்காரன் காய்ந்த சந்தன மொட்டைத்தலையுடன் தன் தாயின் மடியில் கைசூப்பியபடி கொட்டக் கொட்ட முழித்திருப்பான்.

இப்போது ஆங்கிலமுறைப்படி கேக் வெட்டும் கலாச்சாரம் வந்துவிட்டது. ஒருவயது குழந்தையின் பிறந்தநாளுக்கு பேனரெல்லாம் வைக்கிறார்கள். ஒருபுறம் அல்டிமேட் ஸ்டார் ஃபுல்சூட்டில் அட்டகாசமாகச் சிரிக்க, இன்னொருபுறம் இளையதளபதி வேகமாக ஓடி நம்மீது பாய வருகிறார். நடுவில் பிறந்தநாள் குழந்தை மலங்க மலங்க முழித்துக் கொண்டிருக்கிறது.

பிறந்தநாள் குழந்தையே நம்மை வரவேற்பதுபோல அழைப்பிதழ்கள் ஆங்கிலத்தில் அச்சடிக்கப் பட்டு விநியோகிக்கப் படுகின்றன. வசதியுள்ளவர்கள் ஒரு ஹோட்டலின் ஹாலை வாடகைக்கு எடுத்து கொண்டாடுகின்றனர். பெரிய ஸ்பீக்கர்களில் சத்தமாக சின்மயி, தேவன், ராகுல் நம்பியார் போன்றவர்கள் நம்மை வரவேற்கிறார்கள். பெரிய கேக்கின் முன் குழந்தையைத் தூக்கி வந்து, மெழுகுவர்த்தி ஏற்றி, மறுநிமிடமே அணைக்கச் செய்து, பெரியவர்களே பயப்படும்வண்ணம் படார் என்ற சத்தத்துடன் ஒரு வஸ்து வெடித்து ஜிகினாக்கள் வானிலிருந்து நம் தலையை நனைக்கின்றன.

ஹேப்பி பெர்ர்ர்ர்ர்த் டேஏஏஏஏ டூஊஊஊ யூ,
ஹேப்பி பெர்ர்ர்ர்ர்ர்த் டேஏஏஏ டூஊஊஊ யூ
ஹேப்பி பெர்ர்ர்ர்ர்ர்த் டேஏஏஏ டூஊஊஊஊஊஊஊ

(ஏட்டி கொளந்த பேரு என்ன?)

கேக்கை வெட்டி ஆளாளுக்கு குழந்தையின் நாக்கில் பேருக்கு தொட்டுத் தடவி விட்டு, பெரிய பாளத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒதுங்கி விடுகிறார்கள். அதன் பிறகு குழந்தையின் ஒரு வயது பிறந்தநாளை முன்னிட்டு மதுபான மற்றும் அறுசுவை விருந்து.

எல்லோரும் சாப்பிடும்போது, அழுதுகொண்டிருக்கும் குழந்தையை வேலைக்காரச் சிறுமியிடம் கொடுத்து பார்த்துக்கொள்ளச் சொல்லுவாள் அதன் தாய்.

‘செல்வி, கொஞ்சம் காத்தாட வெளியெ வச்சிரியென். புளுக்கம் தாங்காம அளுதா பாரு.’

மூலக்கரைப்பட்டியிலிருந்து வீட்டு வேலைக்காக வந்திருக்கும் செல்வி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து சாலையில் செல்லும் கார்களைக் காண்பிப்பாள். பிறப்பதற்கு முன்பே தகப்பனையும், பிறந்தவுடன் தாயையும் முழுங்கிய செல்விக்கு அவளது பிறந்த நாள் நிச்சயம் தெரிந்திருக்காது.

புத்தகம்

இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகவிருக்கின்றன. ஒன்று திரு. ராமன்ராஜா அவர்கள் எழுதிய ‘சிலிக்கான் கடவுள்’ கட்டுரைத் தொகுப்பு. மற்றொன்று சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ கட்டுரைத் தொகுப்பு.

புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் “உடுமலை.காம்” அரங்கில் (அரங்க எண்: 302) விற்பனைக்குக் கிடைக்கின்றன.
தாயார் சன்னதி – சுகா – 256 பக்கங்கள் – ரூ.150
சிலிக்கான் கடவுள் – ராமன் ராஜா – 160 பக்கங்கள் -ரூ 100 

பந்தி

1
ஆடிஅமாவாசை, மற்றும் தாத்தா, ஆச்சியின் திவச நாட்களில் எங்கள் வீட்டிலுள்ள யாரும் சாப்பிடாமல் குருக்களையாத்தாத்தாவின் வருகைக்காகக் காலையிலிருந்தே பசியுடன் காத்துக் கொண்டு இருப்போம். ஆச்சிக்கும், தாத்தாவுக்கும் அப்பா தர்ப்பணம் செய்து காரில் தாமிரபரணியாற்றங்கரைக்குச் சென்று பிண்டம் கரைத்துவிட்டு வீட்டுக்கு வந்த பின்தான் சாப்பிட முடியும். அதுவுமே கூட உடனடியாக சாப்பிட்டு விடமுடியாது. படிப்படியாக அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் கடைப்பிடித்த பிறகே பந்தி பரிமாறுவார்கள். குடும்ப உறுப்பினர்கள் போக, குருக்களையாத் தாத்தாவையும் சேர்த்து குறைந்தது பத்திலிருந்து இருபது பேராவது பந்தியில் அமர்ந்திருப்போம்.
சுருண்ட ஒற்றை ஜமுக்காளமோ, பந்திப் பாயோ ஆட்களின் எண்ணிக்கைக்கேற்ப விரிக்கப்படும். முதலில் வரிசையாக வாழையிலைகள் போடப்பட, அதன்பின் எவர்சில்வர் தம்ளர்களில் தண்ணீர். குருக்களையாத் தாத்தாவுக்கு மட்டும் பித்தளைச் செம்பு. அடுத்து பரிமாற்றம் தொடங்கும். ஒவ்வொன்றையும் தாத்தா உன்னிப்பாக கவனிப்பார். இலையின் இடது கைமூலையில் உப்பும், சுண்டவத்தலும், வலது கீழ்மூலையில் பருப்பும் பந்தி பரிமாறுதலின் தொடக்கங்கள். இதை சரியாக ஒருவர் பரிமாறிவிட்டால் அவருக்கு பாஸ்மார்க். அடுத்து சுடச்சுட சோறு. அதை இரண்டாகப் பிரித்து இடது பக்கம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் மோரின்போதுதான் அதை எடுக்க வேண்டும். அப்போது நன்றாக ஆறியிருக்கும். சூடான சோற்றில் மோர் ஊற்றக் கூடாது என்பது அடிப்படை விதி.
இடமிருந்து வலமாக உப்புக்கு அருகில் துவரம், பொரியல், அவியல், கூட்டு, பச்சடி போன்றவை பரிமாறப்படும். நன்றாக கவனித்தால் இலை பெரிதாக, ஆக நீர் அதிகமுள்ள பதார்த்தங்களான அவியல், கூட்டு, பச்சடி வகையறாக்கள் சற்று விஸ்தாரமான இலைப்பரப்பில் இடம்பிடித்திருப்பது தெரிய வரும்.
‘இல்லென்னா சவம் தண்ணிச்சத்து அதிகமுள்ள கறிங்க எலைல ஓடிரும்லா.’
பதார்த்தங்களை மாற்றி யார் வைத்தாலும் சராமாரியான வசவுதான். அதுவும் பெண்களுக்குத்தான் ஏச்சு. திருமணமாகாத பெண்களானால் ‘ இன்னொரு வீட்டுக்கு போகப் போறே. அங்கெ என்னைய மெச்சுவாம்லா, பிள்ள வளத்துருக்காம்பாரு, பருமாறக்கூடத் தெரியாமன்னு’. திருமணமான பெண்களுக்கு சிறப்பு அர்ச்சனை. ‘மாமா, இப்பொ தெரிஞ்சுக்குடுங்க. ஒங்க மக்கமாருக லச்சணத்த. இவளுவொ கூடயும் நாங்க இருவத்தஞ்சு வருசமா குடும்பத்த ஓட்டிட்டோமெய்யா’.
தவறாகப் பரிமாறிவிட்டவர்கள ஆண்களாக இருந்தால், பந்தியில் உட்கார்ந்திருக்கும் பெரியவர்கள் லாவகமாக பரிமாறியவரை தன் இடது கையால் பிடித்து இழுத்து, வலதுகையால் முதுகில் சொத்தென்று மொத்துவார்.
‘செறுக்கியுள்ள, அவியல எங்கெல வைக்க? ஒங்க அம்மைட்ட போயி கேளு. சொல்லுவா’.
அது கல்யாண வீடாக இருந்தாலும் சரி, திவசச் சாப்பாடு பரிமாறும் இடமாக இருந்தாலும் சரி. கண்டிப்பு கண்டிப்புதான்.
தர்ப்பணம் பண்ணுபவர்களின் இலையில் எல்லாப் பதார்த்தங்களுமே பரிமாறப்படும். அதாவது சாம்பார், ரசம், பாயசம், வடை, அப்பளம் உட்பட எல்லாமே. எல்லாம் வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின் குருக்களையாத் தாத்தா தொண்டையைக் கனைத்துக் கொண்டு ‘திருச்சிற்றம்பலம்’ எனவும் நாங்களும் அதற்காகவேக் காத்திருந்து ‘திருச்சிற்றம்பலம்’ என்போம். பிறகு பதிகம் பாடுவார் தாத்தா.
‘அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை
என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே’.
குருக்களையாத் தாத்தாவின் பசிக்கு ஏற்ப பதிகத்தின் வேகம் கூடும், குறையும். பிறகு எல்லாப் பதார்த்தங்களிலும் ஒரு பங்கு எடுத்து இலையின் வலதுமூலையில் பச்சடிக்குப் பக்கத்தில் வைத்து நைவேத்தியம் செய்தபின் சாப்பிட ஆரம்பிப்பார்கள். அதற்கு பிறகே மற்றவர்கள் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். இடையில் ரகசியமாக அப்பளத்தை எடுத்து கடிக்க முயன்றாலும் பிடரியில் அடி விழும். ஆண்கள் சாப்பிட ஆரம்பித்த பின் அவர்களின் முகபாவத்தை ரகசியமாக அடுத்த அறையின் கதவோரத்திலிருந்து பெண்கள் கவனிப்பார்கள். அமாவாசை, திவசச் சாப்பாடு போன்றவை விரதச் சாப்பாடு என்பதால் அவர்கள் உப்பு கூட பார்த்திருக்க மாட்டார்கள். எல்லாமே மனக்கணக்கில் போட்டு சமைத்திருப்பார்கள்.
கைகழுவும்போது எப்படியும் ஆண்களிடமிருந்து ஏதாவது குறை சொல்லப்படும்.
‘ஏட்டி வாளைக்கா புட்ட சலிச்சவ சரியா சலிக்க வேண்டாமா? தண்டி தண்டியால்லா இருக்கு?’
வாய் கொப்பளித்துவிட்டு கையைத் துடைத்துவிட்டு அவர் நகரவும், ‘கொற சொல்லலேன்னா ஏளுமட்டம் வாங்கி வாங்கி முளுங்குனது செமிக்காதுல்லா.’ பெண்கள் மத்தியிலிருந்து முணுமுணுப்பு மெல்ல கேட்கும்.
pb190107திருநெல்வேலியில் கல்யாணவீடு, சடங்கு காரியங்கள் போன்ற சுப, அசுப விசேஷங்களுக்கு சமையல் செய்பவர்களை தவுசுப்பிள்ளை என்று அழைப்பார்கள். அப்படி எங்கள் குடும்பத்துக்கான தவுசுப்பிள்ளையின் பெயர் விசுப்பிள்ளை. கல்யாணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னாலேயே எங்கள் வீட்டு பட்டாசலில் வந்து துண்டை உதறி தொடையில் போட்டுக் கொண்டு தரையில் சட்டமாக சம்மணம் போட்டு உட்காருவார். கணீரென்று சத்தமாகப் பேசி சாமான்கள் லிஸ்ட் போடுவார். வழக்கம் போல பிள்ளையார் சுழி போட்டு மஞ்சள்பொடியிலிருந்து லிஸ்ட் ஆரம்பமாகும். விசேஷவீட்டின் தரம், மற்றும் அழைப்பிதழின் எண்ணிக்கைக்கேற்ப சாமான்களைத் தோராயமாக முடிவு செய்வார் விசுப்பிள்ளை.
‘மறுநா சொதில கை வச்சுராதீரும். மனம் போல செலவளியும், என்னா?’
‘நீங்க சொல்லணுமா. பிள்ளமாரு வீட்டுல சொதிச்சாப்பாடு சரியில்லென்னா தெய்வக்குத்தம்லா?’
சிரித்தபடியே அட்வான்ஸ் வாங்கி வேஷ்டியில் முடிந்து கொண்டு துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு கிளம்புவார்.
திருமணத்துக்கு முதல்நாளே விசுப்பிள்ளையின் பட்டாளம் வந்து இறங்கிவிடும். காய்கறி வெட்டு, தேங்காய்த் துருவல், இலை நறுக்கு என விடிய விடிய வேலை நடக்கும்.
கல்யாணவீட்டுப் பந்தியில் பரிமாறும் வேலையை பெரும்பாலும் கல்யாண வீட்டுக்காரர்களேதான் கவனித்துக் கொள்வார்கள். அதை ஒரு கடைமையாகச் செய்யாமல் உரிமையுடன் இழுத்துப் போட்டுக் கொண்டு ஓடியாடி வேலை செய்வதை மனசும், உடம்பும் நிறைந்து மணமக்களின் பெற்றவர்கள் பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.
‘நம்ம கோமு கல்யாணத்துக்கு வேலாயுதம் மாப்ளே அலைஞ்ச அலைச்சல மறக்க முடியுமா? கடைசி பந்திவரைக்கும்லா நின்னு கவனைச்சுக்கிட்டான்!’
உறவினர்கள், நண்பர்கள் சூழ ஒருவருக்கொருவர் கேலி செய்து கொண்டு பரிமாறிக் கொள்ளும் அழகே அழகு.
‘மாமா, இன்னும் கொஞ்சம் சொதி ஊத்துங்க’
‘தாயளி, வீட்ல புளிக்கொளம்புக்கு வளியில்ல. இங்கெ ஒமக்கு சொதி கேக்கு என்னா சொதி. ம்ம்ம்ம் . . . சாப்பிடு.’
கேலி செய்தாலும் சொதியை அள்ளி ஊற்றுவார்.
எந்தக் கல்யாணவீட்டுக்குப் போனாலும் தாலி கட்டியவுடன் மீனாட்சி பரபரப்பாகி விடுவான்.
‘சித்தப்பா, அந்தாக்ல அப்பிடியே இருந்திராதிய. எந்திருச்சு வாங்க. மொத பந்தில உக்காந்திருவொம்’.
‘ஏ மூதி ஏன் இப்பிடி கெடந்து பறக்கெ? ரெண்டு மூணு பந்தி களிச்சுத்தான் சாப்பிடுவோமெ’.
‘வெவரம் இல்லாம பேசாதிய சின்னையா. மூணாம் பந்தில சாம்பார்ல தண்ணிய ஊத்திருவான். கூட்டத்தப் பாத்தா சாம்பார் காணாதுன்னுதான் தோனுது. நான் அப்பதயே நைஸா ஒண்ணுக்கு போற மாதிரி போயி ஆக்குப்பொறைல சாம்பார் கொப்பறைய எட்டி பாத்துட்டெம்லா’.
படுத்தப் படுக்கையாக இருக்கும் வயதானவர்களின் இறுதி நாள் கிட்டத்தட்ட தெரியவரும் போது வீட்டில் உள்ளவர்கள் முதலில் முன்நடவடிக்கையாக ஏற்பாடு செய்வது சாப்பாடு காரியங்களைத்தான்.
‘எப்பிடியும் நாளைக்கு ராத்திரி தாண்டாது கேட்டியா. பெரியவ பாம்பேல இருந்து வரணும். ரெண்டு மூணு நாளைக்குத் தேவையானத வாங்கிப் போடணும். மொதல்ல வெறகுக்கு சொல்லிட்டு வா’.
படுக்கையில் கிடப்பவர் உயிருடன் இருக்கும் போதே அவரை வழியனுப்பும் வேலைகள் தீவிரமாக நடக்கும். பலசரக்கு சாமான்கள், காய்கறிகள் என எல்லாவற்றிற்கும் தயாராகச் சொல்லி வைத்திருப்பார்கள். மரணப் படுக்கையில் இருப்பவரின் தலைமாட்டில் திருவாசகம் படித்துக் கொண்டிருப்பார்கள். எல்லா ஏற்பாடுகளும் சரியாக நடந்து முடிந்த செய்தி வந்தவுடன், மெல்ல ஒருவர் லேசாக விசும்பிக் கொண்டே படுக்கையில் கிடப்பவரின் தலையைப் பிடித்துத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு வெள்ளி தம்ளரில் உள்ள பாலை அவர் வாயில் ஊற்றுவார். வாசலில் புதிதாகப் போடப்பட்ட டியூப்லைட் வெளிச்சத்தில் மாலைமுரசு படித்துக் கொண்டிருப்பவரின் கவனத்தை, வீட்டுக்குள்ளிருந்து வரும் ‘எளா, என்னப் பெத்தா, என்னைய விட்டுட்டு போயிட்டியெ, இனிமெ நான் என்ன செய்வென்’ என்னும் கதறலொலி கலைக்கும்.
அடுத்த சில நிமிடங்களில் ஆக்குப்புறையில் அடுப்பு பற்ற வைக்கப் படும். சுடச்சுட இட்லி அவித்துத் தட்டப்பட, சாம்பார் கொதிக்கும், தேங்காய்ச் சட்னி தயாராகும். விடிய, விடிய காபி கொதித்துக் கொண்டே இருக்கும். துட்டிக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கவனமாகப் பார்த்து கணிப்பவர் தவுசுப்பிள்ளைதான்.
‘ராமையா, கூட ரெண்டு படி அரிசிய போடு. எக்ஸ்ட்ரா எலை சொல்லிட்டெல்லா.’
மரணவீட்டில் அழுது கொண்டு இருக்கும் பெரியவர்களுக்கு மத்தியில் குழந்தைகளின் பசியை முன்பின் தெரியாதவர்கள் கூட போக்குவார்கள்.
‘ஏட்டி, நீ யாரு சங்கரி மகளா? ஒங்க அம்மைய எங்கெ? சரி சரி இங்கெ வா. அளாத. இட்லி திங்கியா. பெரியம்ம தாரென். இந்தா.’
மறுநாள் சாம்பல் கரைத்த பிறகு சுடுகாட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பியவுடன் பந்தி பரிமாறுவார்கள். அன்றைய சாப்பாட்டில் கண்டிப்பாக அகத்திக் கீரை உண்டு. முதல் நாள் சரியாகச் சாப்பிடாமல் பட்டினியாகக் கிடந்த வயிறைச் சரி செய்வதற்காகவே அகத்திக்கீரை. மற்றபடி வழக்கமான விசேஷச் சமையல்தான்.
சமையலின் ருசி மெல்ல மரணத்தின் சோகத்தை மறக்கடிக்கும் தருணமது.
‘மருமகனே, அவியல் நல்லாருக்கு. கூட கொஞ்சம் வாங்கி சாப்பிடுங்க’.
‘நான் நாலு மட்டம் வாங்கிட்டென் மாமா’.
‘சுப்ரமணிப்பய சரியா சாப்புடுதானா? மூதி அவந்தான் கெடந்து அத்த அத்தன்னு கூப்பாடு போட்டு அளுதுக்கிட்டுருந்தான்’.
சுப்ரமணியை எட்டிப் பார்த்தால் அவர் ரசத்தைக் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்தபடி, வாளிக்குள் தலையை விட்டுக் கொண்டிருப்பார்.
திருநெல்வேலியில் வருடாவருடம் நான் பார்க்கும் ஒரு வித்தியாசப் பந்தி ‘வைக்கத்தஷ்டமி’ பந்தி. அம்மன்சன்னதித் தெருவில் பிராமணர்களுக்கான பஜனை மடத்தில் கார்த்திகை மாதத்தின் மஹாதேவஅஷ்டமியன்று ஹோமங்கள் வளர்த்து பூஜை முடிந்து பரிமாறுவார்கள். அதற்காக ரசீது புத்தகத்துடன் பணம் வசூலிக்கும் வேலையை புரட்டாசி மாதத்தின் இறுதியிலேயே ஆரம்பித்து விடுவார்கள்.
‘கோபாலன் வைக்கத்தசமிக்கு இந்த வருசமாது ரூவா குடுப்பானால’.
‘அவன் தண்ணில வெண்ணெ கடையிரவம்லா. மயிரயாக் குடுப்பான்’.
திருநெல்வேலி பிராமணர்கள் செந்தமிழில் செப்புவதை இந்த அளவுதான் சொல்ல முடியும்.
‘எல, வைக்கதசமிச் சாப்பாடு சாப்பிட்டா வியாதியே வராதுன்னு சொல்லுதாங்களெ. நெசமாவாலெ?’
குஞ்சுவிடம் கேட்டேன்.
‘அதெல்லாம் ஒரு நம்பிக்கைதான். ஆனா உண்மையிலயே இவங்க அவ்வளவு பேருக்கும் வீட்டுல நெனச்சத சாப்பிட முடியாது, பாத்துக்கொ. மாமி என்ன சமையல் பண்ணி போடுதாளோ அதத்தான் தின்னு தொலைக்கணும், கேட்டியா. அதான் இவங்களா துட்டு பிரிச்சு வருஷத்துக்கு ஒரு மட்டமாது வசமா சாப்பிடுதானுவொ’.
இவ்வளவு வியாக்கியானம் பேசும் குஞ்சு வைக்கத்தஷ்டமியின் போது முதல் பந்தியில் சாப்பிட தன் தகப்பனாருடன் மல்லுக்கு நிற்பான்.
‘எல, நீ அப்பொறம் வா. மொத பந்தி பிராமணாக்குத்தான்’.
‘அப்பொ நான் பாப்பான் இல்லையா. இல்ல இதுதான் பூணூல் இல்லையா’.
பெரிய புரட்சிக்காரன் மாதிரி பூணூலை எடுத்துக் காண்பிப்பான்.
‘கோட்டிக்காரப் பயலெ. ஹோமம் பண்ணுன வாத்தியாருங்கதாம்ல மொதல்ல சாப்பிடணும். நீ வளக்கமா பொம்பளைங்க பந்திக்குதானெ பல்லக் காமிச்சிக்கிட்டு வருவெ. அப்பொறம் இப்பொ என்ன மயித்துக்கு வந்தேங்கென்?’
போட்டு வாங்குவார் குஞ்சுவின் அப்பா.
பெண்கள் பந்தியை நினைத்துக் கொண்டே மகிழ்ந்து சிரித்தபடி பஜனைமடத்திலிருந்து வெளியே வந்து விடுவான் குஞ்சு.
சென்னையில் கேட்டரிங் சர்வீஸ் பரிமாறும் பந்திக்கு இப்போதெல்லாம் மனம் பழகிவிட்டது. கைகளில் பாலிதீன் உறை போட்டு பரிமாறுபவர்கள் கல்யாண வீட்டில் சுடச் சுட முறுகலாக தோசை போட்டு அசத்துகிறார்கள். எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அவர்களின் இல்லத் திருமணவீட்டுப் பந்தியில் கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் ஒரு காகிதக் கோப்பையில் சோன்பப்டி போன்ற ஒரு வஸ்துவை வைத்து விட்டுச் சென்றார்கள். அது என்னவாயிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அருகில் உட்கார்ந்திருந்த நாஞ்சில் நாடன் சித்தப்பா, ‘மகனே, அது பேரு பேனி. வெளிமாநில சமாச்சாரம். சாப்பிடுங்க. யோசிக்கெண்டாம்’ என்று உற்சாகப்படுத்தினார். சித்தப்பா சொன்ன பெயர் ஒரு கலக்கத்தைக் கொடுத்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேனியை எடுத்து வாயில் போடப் போனேன். எனக்கு இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த எழுத்தாளரும், திரைப்பட நடிகருமான பாரதி மணி பாட்டையா தடுத்தார்.
‘ஏ, இருடே. அதுல பால் ஊத்திதான் சாப்பிடணும். இப்பொ வரும். அவசரப்படாதெ’.
உண்மைதான். பால் ஊற்றிச் சாப்பிட சுவையாகவே இருந்தது பேனி. வரிசையாக பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. கேட்டரிங் சர்வீஸ்காரர் மோர்மிளகாய் வைத்து விட்டுச் செல்லவும் பாரதிமணி பாட்டையா அவரை அழைத்து, ‘தம்பி, இதவிட கர்ர்ர்ருப்பா இன்னொரு மோர்மொளகா எனக்கு வேணும்’ என்றார்.
தனது நாக்கின் நீளம் நாலுமுழம் என்று அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருப்பது தன்னடக்கத்தினால் என்பது எனக்கு அன்றைக்குத்தான் தெரிந்தது. நியாயமாக அவரது நாக்கின் நீளம் நாற்பது முழம்.
2

சின்னஞ்சிறு கிளியே

கர்நாடக இசைக் கச்சேரிகளில் இன்றைக்கும் பாடப்பட்டு வரும் சுப்பிரமணிய பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடல் ஒரு திரைப்படத்துக்காக மெட்டமைக்கப்பட்டது என்பதை ஒரு நண்பரிடம் பேச்சுவாக்கில் நான் சொன்னபோது நம்ப மறுத்தார். அதுவும் இப்போது இல்லை. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மெட்டமைக்கப்பட்டு மேடையேறிய பாடல் அது என்ற செய்தியும் அவருக்கு வியப்பை அளித்தது. மிகச் சிறுவயதிலேயே காலமாகிவிட்ட மாமேதை சி.ஆர்.சுப்பராமன் அவர்களால் காபி, மாண்ட், வசந்தா, திலங், நீலமணி என்று ராகமாலிகையில் மெட்டமைக்கப்பட்ட அந்தப் பாடல், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த ‘மணமகள்’ திரைப்படத்தில் இடம்பெற்றது. எம்.எல்.வசந்தகுமாரியும், வி.என்.சுந்தரமும் பாடிய அந்தப் பாடல் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் வாய்ப்பாட்டு பாடுபவர்களால் மட்டுமல்லாது வாத்தியக்காரர்களாலுமே வெகுவாக வாசித்துக் கொண்டாடப்பட்ட ஒன்று.
‘மணமகள்’படம் வெளிவந்து கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்குப் பிறகு ‘நீதிக்கு தண்டனை’ என்ற படத்துக்காக எம்.எஸ்.விஸ்வனாதன் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலுக்கு புதிதாக மெட்டமைத்தார். ஏற்கனவே இத்தனை பிரபலமாகக் கொண்டாடப்படும் பாடலை புதிய மெட்டில் அமைப்பதற்கு அசாத்திய மேதைமையோடு, பாடகர்களின் குரல் தேர்விலும் மிகுந்த கவனம் தேவை. எம்.எஸ்.விஸ்வநாதன் சரியான குரல் தேர்விலும், பாடகர்கள் சரியாகப் பாடுவதிலும் மிக மிக கண்டிப்பானவர் என்பது நன்கறியப்பட்டதொரு விஷயம். அவரிடம் பாடிய பல பாடகர்களும் தங்கள் பேட்டியில் நிறைய பெருமிதத்தோடும், கொஞ்சம் பயத்தோடும் அதைக் குறித்துச் சொல்லியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் அப்பாடலின் ஆண் குரலுக்கு, செம்பை வைத்தியநாத பாகவதரின் சிஷ்யரும், கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவருமான கே.ஜே.யேசுதாசைத் தெரிவு செய்கிறார். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அப்பாடல் தொடங்குவதே பெண் குரல்தான். அந்தப் பெண்குரல் பகுதிக்கு பதினான்கு வயதே நிரம்பிய ஒரு புதிய பெண் பாடகியைப் பாடவைக்கிறார். அப்படியென்றால் அவருக்கு அந்தப் பெண் குரல் மீது எத்தனை நம்பிக்கையும், அங்கீகரிப்பும் இருந்திருக்க வேண்டும்! ‘சின்னஞ்சிறு கிளியே’ என்று பல்லவியை அனுபவித்துப் பாடித் துவக்கிய அந்த இளம்பாடகியின் பெயர் ஸ்வர்ணலதா.
இசையமைப்பாளர்களின் மனதில் உள்ள மெட்டை அப்படியே திருப்பிப் பாடவே சிரமப்படும் பாடகர், பாடகிகளுக்கு மத்தியில், கேட்ட மாத்திரத்தில் தன்னிடமுள்ள தனித்துவக் குரலால் அனைவரையும் கவர்ந்த ஒரு பாடகியாகவே ஸ்வர்ணலதா அறியப்பட்டார். போதையில் பாடிடும் ஓர் இளம்பெண்ணின் குரலுக்கு முதன்முதலாக இவரை குருசிஷ்யன் என்னும் திரைப்படத்தில் ‘உத்தமபுத்திரி நானு’ என்னும் பாடலில் பயன்படுத்திய இளையராஜா, பிற்பாடு ஸ்வர்ணலதாவைப் பல்வேறு பாடல்கள் பாடவைத்தார். அவையெல்லாமே ஸ்வர்ணலதாவைத் தவிர வேறு எந்த பாடகியையும் கொண்டு கற்பனை பண்ணிப் பார்க்க முடியாதவை.
singer-swarnalathaகருப்புவெள்ளைத் திரைப்படங்களின் காலத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது போன்ற கிளப்வகைப் பாடல்கள், 90களில் ஸ்வர்ணலதாவின் தனித்துவக் குரலால் மேலும் புகழ் பெற்றன. ‘தளபதி’ திரைப்படத்தின் ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாடலில் துவங்கி, பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘ஜெண்டில்மேன்’ திரைப்படத்தின் ‘உசிலம்பட்டி பெண்குட்டி’, ‘காதலன்’ திரைப்படத்தின் ‘முக்காலா முக்காபுலா’, ‘இந்தியன்’ திரைப்படத்தின் ‘அக்கடான்னு நாங்க’ போன்ற பல பாடல்களுக்கு மத்தியில் இன்றைக்கும் மெல்லிசைக் கச்சேரிகளில் தவறாது இடம்பெறும் ஒரு முக்கியமான பாடலாக ‘கேப்டன் பிரபாகரன்’ படப்பாடலான ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் உள்ளது. பாடுபவரையும், இசைப்பவர்களையும், கேட்பவர்களையும் துள்ளாட்டம் போடவைக்கும் உற்சாகப் பாடலது. இப்பாடலைக் கவனித்துக் கேட்டால் தெரியும் ‘ஆட்டமா’, ‘தேரோட்டமா’ என்ற வார்த்தைகளில் ‘மா’வில் ஒரு தனித்த நெளிவு இருக்கும். அந்த நெளிவு செயற்கையாக வலிந்து செய்ததைப் போல இல்லாமல் வெகு இயல்பாக இருக்கும். இந்த நெளிவுதான் ஸ்வர்ணலதாவைப் பிற குரல்களிலிருந்து தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் தனிச்சிறப்பு. மேடைக்கச்சேரிகளில் இப்பாடலை நன்கு கவனித்துக் கேட்டால் தெரியும், இதைப் பாட முயற்சிப்பவர்கள் ஒன்று அந்த நெளிவை ஃப்ளாட்டாகப் பாடி கடந்து சென்று விடுவார்கள். இல்லை செயற்கையாகத் தெரியும் ஒரு கமகத்தைத் தருவார்கள். எளிதில் நகலெடுத்துவிட முடியாத குரலும், பாடுமுறையும் ஸ்வர்ணலதாவுடையது!
நான் இங்கே சொல்லியிருக்கும் இந்தப்பாடல்கள் படுபிரபலமானவை. ஆனால் அதிகம் வெளியே தெரியாத க்ளப் பாடல் ஒன்று இருக்கிறது. ‘எத்தனை ராத்திரி’ என்ற அந்தப்பாடலை நான் வெகு முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். மலேஷியா வாசுதேவனுடன், ஸ்வர்ணலதா இணைந்து பாடிய அப்பாடலில் சரணத்தில் ‘இடத்தைப் பிடிச்சுக்கோ… நீ… குடியும் இருந்துக்கோ’ என்ற இடத்தில் ஸ்வர்ணலதா ஒரு பிருகா தருகிறார் பாருங்கள், எந்த ஒரு செவ்வியல் பாடலுக்கும் இணையான ஒன்றாக இப்பாடலை உயர்த்துகிறது அந்த பிருகா.
ஒருபுறம் க்ளப் வகைப்பாடல்களைப் பாடினாலும், இன்னொரு பக்கம் உணர்ச்சிகரமான முக்கியமான பாடல்களும் ஸ்வர்ணலதாவைத் தேடி வந்தன. பெரும்புகழ் பெற்ற ‘போவோமா ஊர்கோலம்’ என்னும் ‘சின்னத்தம்பி படப்பாடலில் இளையராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் கலைஞரும், பின்னணிப் பாடகருமான நெப்போலியன் என்ற அருண்மொழி வாசித்த புல்லாங்குழல் பகுதிகளின் நுணுக்கங்களை, போட்டி போட்டு கொண்டு தன்குரலில் கொண்டு வந்திருக்கிறார் ஸ்வர்ணலதா. உடன் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அப்பாடலின் ஆண் கதாபாத்திரம் செய்யும் சேட்டைகள் வெகு எளிதாக மொத்த கவனத்தையும் ஆண்குரல் பக்கம் திருப்பிவிடும் சாத்தியம் கொண்டவை. எஸ்.பி.பாலசுப்ரமணியமும் அப்பகுதிகளைப் பிரமாதமாகப் பாடியிருப்பார். இதையெல்லாம் மீறி, நம்மை வந்தடைந்தது ஸ்வர்ணலதாவின் குரல். குறிப்பாக அந்தப் பாடலின் இன்னொரு வடிவமான ‘நீ எங்கே’ என்று துவங்கும் தனிக்குரல் சோகப்பாடலை உணர்ச்சிகரமாக ஸ்வர்ணலதா பாடியிருக்கும் விதம் அபாரமானது. அப்பாடலின் நாடகத்தன்மை காரணமாகப் பலரும் அப்பாடலை கவனிக்காமல் கடந்து சென்றிருப்பார்கள். ஆனால் அப்பாடலின் இரண்டாம் இண்டர்லூடில் ஸ்வர்ணலதா தந்திருக்கும் கீரவாணி ராக அடிப்படையில் அமைந்த ஆலாபனை அசாத்தியமானது. ‘காற்றில் எந்தன் கீதம்’ பாடலின் ப்ரிலூடில் எஸ்.ஜானகி தந்த கீரவாணி ஆலாபனைக்கு இணையானது. அதைப்போலவே பாடல் முடியும் இடத்தில் ‘நீ எங்கே’யின் இறுதியில் கேட்கும் நெளிவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ‘ஆட்டமா, தேரோட்டமா’வில் துள்ளலைத் தந்த நெளிவு, இங்கே சோகத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறது.
ஸ்வர்ணலதா ஏ.ஆர்.ரஹ்மான் மூலமாக தேசியவிருது வென்ற ‘கருத்தம்மா’ படத்தின் ‘போறாளே பொன்னுத்தாயி’யும் நம் நெஞ்சத்தை உருக்கும் சோகப்பாடல்தான். ‘போறாளே பொன்னுத்தாயி’ பாடலை தேர்வுக்குழுவினர் முழுமையாகக் கேட்டிருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. ‘ஓ’வென்று தன் சோகக்குரலால் ஸ்வர்ணலதா அந்தப் பாடலைத் துவக்கும்போதே தேர்வுக்குழுவினர் விருதை எடுத்து மேஜைமேல் வைத்திருந்திருக்க வேண்டும்.
swarna4
‘அலைபாயுதே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எவனோ ஒருவன்’ என்னும் அருமையான பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வர்ணலதாவுக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்தார். அதன் நியாயமான காரணத்தை பாடலின் துவக்கம் முதல் இறுதி வரை உணர்ச்சி ததும்பப் பாடி நமக்கு உணர்த்தியிருப்பார் ஸ்வர்ணலதா. ‘முதல்வன்’ திரைப்படத்தின் ஜோடிப்பாடலான ‘குறுக்கு சிறுத்தவளே’ பாடலை, படத்தில் இன்னொரு முறை பயன்படுத்தும் போது ஸ்வர்ணலதாவைக் கொண்டே பாடவைத்திருக்கிறார் ரஹ்மான். ‘உளுந்து வெதைக்கையிலே’ என்ற அந்தப் பாடல் துவங்கும் முன்பே ஸ்வர்ணலதா ‘எ எ . . ஏலே . .ஏலே’ என்று பாடலைத் துவக்கி விடும் விதம் அலாதியானது. 
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாலிவுட் இசையுலகில் ஒரு வலுவான ஸ்தானத்தை ஏற்படுத்திக் கொடுத்த ராம்கோபால்வர்மாவின் ‘ரங்கீலா’ திரைப்படத்தில் ஸ்வர்ணலதா அற்புதமாகப் பாடியது ‘ஹாய் ராமா’ என்னும் பந்துவராளி ராகப்பாடல். அதன் மூலம் பாலிவுட்டிலும் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார் ஸ்வர்ணலதா. இந்தியத் திரையிசையுலகின் மரியாதைக்குரிய இசைமேதையான நௌஷாத் அலியின் இசையமைப்பில் ‘முகல் ஏ ஆஸம்’ திரைப்படப்பாடல்கள் தமிழில் டப்செய்யப்பட்டபோது அதிலிருந்த முக்கியமான பாடல்களைப் பாடியவர் ஸ்வர்ணலதா.
தனிப்பாடல்களில் ஸ்வர்ணலதாவுக்குப் பேர் சொல்லும்படியாக பல பாடல்கள் அமைந்தது அவரது அதிர்ஷ்டம் என்று சொல்ல முடியாது. அவரது குரலில் உள்ள தனித்துவமே அவரை அப்பாடல்கள் தேடி வர காரணமாக அமைந்தது. பண்பலை வானொலிகளில் நிச்சயமாக ஒரு நாளைக்கு ஒருமுறையாவது இடம்பெறும் பாடலாக ‘சத்ரியன்’ படத்தின் ‘மாலையில் யாரோ’ பாடல் இன்றுவரை இருக்கிறது. ‘வள்ளி’ திரைப்படப்பாடலான ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல்தான் ஸ்வர்ணலதா பாடிய பாடல்களிலேயே சிறந்த பாடல் என்று அடித்துச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
‘உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்’ படத்தில் ஆபேரி ராகத்தின் அடிப்படையில் இளையராஜா மெட்டமைத்திருந்த ‘என்னைத் தொட்டு’ என்ற பாடல் கேட்பவரின் மனதைக் கொள்ளை கொள்ளும் மற்றுமொரு நல்ல ஸ்வர்ணலதா பாடல். இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் ஆலாபனையில் எடுத்த எடுப்பிலேயே மேல்ஸ்தாயிக்குச் சென்று பாடலின் மொத்த ரசத்தையும் தந்து விடுகிறார் ஸ்வர்ணலதா. இந்த உணர்வைத்தான் பாடலில் மீண்டும் மீண்டும் வரும் ‘அன்பே ஓடிவா’ என்ற வரிகளில் நாம் பெற்றுக்கொள்கிறோம். இப்பாடலின் பிற்பகுதியை எஸ்பிபி பாடியிருந்தாலும் மைய உணர்வைத்தரும் அந்த முக்கியமான ஆலாபனையைப் பாட ஸ்வர்ணலதாவைத்தான் பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.
கவிஞர் மு.மேத்தா தயாரித்த ‘தென்றல் வரும் தெரு’ திரைப்படத்தின் ‘புதிய பறவை’ என்னும் சுத்த தன்யாசி ராக அடிப்படையில் அமைந்த பாடலும் அவரது முக்கியமான பாடல்களின் வரிசையில் உள்ள ஒன்று. இதே பாடலின் நாதஸ்வர வடிவம் ஒன்றும் இத்திரைப்படப் பாடல் கேஸட்டில் இருக்கிறது. அதைக் கேட்டுவிட்டு ஸ்வர்ணலதா பாடிய வடிவத்தைக் கேட்டால்தான், ஸ்வர்ணலதாவின் தனித்துவமும், அது ஏன் முக்கியமான பாடல் என்பதும் புரியும். இப்பாடலின் ட்யூனே உள்ளத்தை உருக்கும் தன்மையையுடையது என்பதை அந்த நாதஸ்வரத்தைக் கேட்டால் வரிகளில்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். பல்லவியின் முதல் இரண்டு வரிகளும் கீழிருந்து மேலேறி, மேலிருந்து கீழிறங்கும் வகையில் ஒன்றுக்கொன்று எதிரிடையான தன்மை கொண்டவை. அதில் ‘புதிய பறவை பறந்ததே’ என்ற மூன்றே வார்த்தைகளில் முழு ஆக்டேவும் மேலேற வேண்டும். நாதஸ்வரத்தில் அதை இயல்பாகவே காட்டிவிடலாம். ஆனால் குரலில் வார்த்தைகள் வழியாகச் சொல்வது கத்தி மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் பிசகினாலும் இழுவையாகத் தெரிந்துவிடும். பிறகெப்படி பாடவேண்டும்? ஸ்வர்ணலதா பாடியிருப்பதை வைத்து அதை எப்படிப்பாட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
’நாங்கள்’ என்று ஒரு படம். இப்படி ஒரு படம் வந்த செய்தியை பெரியவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் சொன்னால்தான் யாரும் நம்புவார்கள். இத்தனைக்கும் அதில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ‘பாரடி குயிலே’ என்றொரு பாடலை ஸ்வர்ணலதாவைப் பாட வைத்திருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடலின் சரணத்தில் ‘நான் விரும்பிய திருநாள் பிறந்தது’ என்ற வரியை ஸ்வர்ணலதாவின் குரலில் கேட்கும் போது உருகாத மனிதர்கள் யாராவது இருந்தார்களென்றால், அவர்களுக்குச் செவிக்கோளாறு என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்பாடலின் சரணம் பிரபலமான அபூர்வ சகோதரர்கள் தீம் இசையின் இன்னொரு வடிவம். ஆனால் அதையும் நேரடியாக உபயோகிக்காமல் அபூர்வ சகோதரர்கள் தீம் இசையின் தைவதத்தை மாற்றிப்போட்டு நடபைரவி ஸ்கேலிலிருந்து கரஹரப்ரியா ஸ்கேலுக்கு மாற்றியிருப்பார் இளையராஜா. ஸ்வர்ணலதா சரணத்தில் அந்த தைவதத்துக்குத் தரும் அழகே தனிதான்.
நண்பர் சீமான் நெருக்கமான நண்பர்களுடன் இருக்கும் போதெல்லாம் ‘ஆத்தோரம் தோப்புக்குள்ளே’ என்னும் நாட்டுப்புறப் பாடலை அருமையாக அனுபவித்துப் பாடுவார். முதன் முதலில் அவர் இயக்கிய ‘பாஞ்சாலங்குறிச்சி’ என்னும் திரைப்படத்தில் தன் மனதுக்கு நெருக்கமான அந்தப் பாடலை அவர் பயன்படுத்தியிருந்தார். தேவாவின் இசைச்சேர்க்கையில் உருவான அந்தப் பாடலில் ‘அத்தனையும் பொய்யாச்சே ராசா, ஒத்தையில நிக்குதிந்த ரோசா’ என்ற வரியை ஸ்வர்ணலதா பாடியிருக்கும் விதத்தை என்னவென்று சொல்வது? கேட்டுக் கேட்டு உருகத்தான் முடியும்.
ஜோடிப்பாடல்களில் ஸ்வர்ணலதா பாடிய பல புகழ்பெற்ற பாடல்களுக்கு மத்தியில் அதிகம் பேசப்படாத ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சமுத்ரப்ரியா ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை பி.ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடியிருப்பார் ஸ்வர்ணலதா. ‘ஜல் ஜல் சலங்கை குலுங்க’ என்று துவங்கும் அந்தப் பாடல் இளையராஜாவின் இசையில் ‘பொண்ணுக்கேத்த புருஷன்’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்தது. மாயாமாளவகௌளையில் அமைந்த ‘ஆறடிச்சுவருதான்’ என்ற ‘இது நம்ம பூமி’ படப்பாடலை, யேசுதாசுக்கு இணையாக சிறப்பாகப் பாடியிருந்தார் ஸ்வர்ணலதா. இத்தனைக்கும் பல்லவி முடிந்து, முதலாம் சரணமும் முடியும் இடத்தில்தான் யேசுதாசுடன் வந்து இணைவார். ‘ராத்திரி வலம்வரும் பால்நிலா எனை வாட்டுதே’ என்று அவர் பாட ஆரம்பிக்கும் போதே, அத்தனை நேரம் பாடியிருந்த யேசுதாசின் குரலுக்கு மிக அருகில் எளிதாக வந்து சேர்ந்து விடும் ஸ்வர்ணலதாவின் அற்புதக்குரல். இதே ராகத்தில் அமைந்த ‘உடன்பிறப்பு’ திரைப்படத்தில் ‘நன்றி சொல்லவே உனக்கு’என்ற பாடலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. மூத்த பாடகியான உமாரமணனுடன் இணைந்து பாடிய இரு பெண்குரல் பாடலான ‘புதுப்பட்டி பொன்னுத்தாயி திரைப்படத்தின் ‘ஊரடங்கும் சாமத்துல’ பாடலும் மிக முக்கியமான ‘ஸ்வர்ணலதா’ பாடல்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு இணைந்து பாடிய சண்முகப்ரியா ராகத்தில் அமைந்த ‘ராஜாதி ராஜா உன் மந்திரங்கள்’ பாடலும் ஸ்வர்ணலதா பாடிய மிக மிக முக்கியமான பாடல்களில் ஒன்று. ஒரு சரணம் மேற்கத்திய ஸ்டைலிலும், இன்னொரு சரணம் முழுக்க நாட்டுப்புற ஸ்டைலிலும் இருக்கும். இதில் நாட்டுப்புற ஸ்டைலில் வரும் சரணம் உச்சஸ்தாயியில் தொடர்ந்து நான்கு ஆவர்த்தங்கள் பாடப்படவேண்டிய ஒன்று. கொஞ்சம் பிசகினாலும் பெருங்குரலெடுத்து கத்துவதைப் போலாகிவிடும். அதை ஸ்வர்ணலதா பாடிய விதத்தைக் கேட்கையில் நமக்கு அது ஒரு வெகு வெகு எளிமையான ஒரு பாடலைப் போல் தோன்றும்.
தனது முப்பத்தியேழாம் வயதில் அகால மரணமடைந்த ஸ்வர்ணலதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பண்பலை வானொலி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் அவர் பாடிய எண்ணற்ற பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டேயிருந்தன. பீம்பிளாஸ் ராக ஆலாபனையுடன் அட்டகாசமாக ஸ்வர்ணலதா பாடியிருக்கும் ‘ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது’ என்ற பாடல் மட்டும் அவருக்காகவே அவர் பாடிய பாடலாக எனக்குத் தோன்றியது.
நண்பன் குஞ்சுவின் ஒன்றுவிட்ட சகோதரன் பாலாஜி பொறியியல் இறுதிவருடம் படித்துக் கொண்டிருந்த நேரம். திருநெல்வேலி பார்வதி தியேட்டரில் ‘என் ராசாவின் மனசிலே’ படம் பார்க்கச் சென்றபோது அவனையும் உடன் அழைத்துச் சென்றேன். படம் துவங்கியதிலிருந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த பாலாஜி, ‘குயில் பாட்டு’ பாடல் ஆரம்பமானவுடனே ஒருமாதிரியாக, படபடப்பாக ஆனான். பாட்டு தொடரத் தொடர கலங்க ஆரம்பித்தவன், இறுதியில் வெடித்து அழத்தொடங்கி விட்டான். அவனை சமாதானம் செய்து வீட்டுக்குக் கூட்டி வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. மேற்படி சம்பவத்தை இப்போது அவனிடம் நினைவுகூர்ந்து கேட்டாலும் அன்றைக்கிருந்த அதே உணர்வுடன்தான் பேசுகிறான்.
‘அத ஏன் கேக்கே? லாலாச் சத்திரமுக்குல நடந்து போகும்போது எங்கையாவது டீக்கடைல அந்தப் பாட்ட போடுவான். என்னால லேசுல அதத் தாண்டி வரமுடியாது, பாத்துக்கோ’.
திருமணம் ஆன நாளிலிருந்து தான் வெறுத்து ஒதுக்கிய தன் கணவனை மனம் மாறி ஏற்றுக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மகிழ்ச்சியுடன் பாடும் விதமாக அமைந்த அந்த‘குயில் பாட்டு’ என்னுடைய தனிப்பட்ட ரசனையின்படி விசேஷமானப் பாடல். கதைப்படி அந்தப் பாடலை பாடி முடிக்கும்போது அந்தப் பெண் கால்தவறி விழுந்து மரணமடைவாள். அப்பாடலின் முடிவில் நடக்கவிருக்கும் அவளது துர்மரணத்தை முன்கூட்டியே உணர்த்தும் விதமாக இளையராஜா சிவரஞ்சனி ராகத்தில் ஒற்றை வயலினைக் கொண்டு அற்புதமாக அந்தப் பாடலைத் துவக்கியிருப்பார். இனி அந்த வயலினைக் கேட்கும்போதெல்லாம் ஸ்வர்ணலதாவின் அகால மரணத்தைக் குறித்தும் நினைக்காமல் இருக்க முடியாது.

இசைமேதையின் புகைப்படம்

ஆச்சி இருந்த காலத்தில் தாத்தா, கொள்ளுத் தாத்தா இவர்களின் புகைப்படங்கள் தவிர திருநெல்வேலியில் உள்ள எங்கள் வீட்டில் இன்னொரு மனிதரின் புகைப்படமும் இருந்தது. பச்சை வண்ணப் பின்னணியில் மார்பளவுப் புகைப்படமான அதை மட்டும் தார்சாவில் பழைய சீனச்சுவர்க்கடிகாரத்துக்கு அருகே மாட்டி வைத்திருந்தனர். சிறுவனாக இருக்கும் போது அந்தப் புகைப்படத்தில் இருப்பவரைப் பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர் பெயர் மட்டும் தெரியும். காரணம், அந்தப் புகைப்படத்திலேயே அது குறிக்கப்பட்டிருந்தது, ‘இசைமேதை’ ஜி. ராமனாதன் என்று.
gr11
எங்கள் குடும்பம் முழுக்கவே ஜி.ராமனாதனின் ரசிகர்களாக இருந்ததை நாட்கள் ஆக ஆகப் புரிந்து கொண்டேன். அவரது முழுப்பெயரை எங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் யாருமே சொல்லி நான் கேட்டதில்லை. ஜி.ஆர், என்றும் ஐயர் என்றும்தான் சொல்வார்கள். விவரம் தெரியாத சிறுவயதிலிருந்தே ஜி.ராமனாதனின் இசையில் வெளிவந்தத் திரைப்படப் பாடல்கள் அனைத்தும் நான் விரும்பியும், விரும்பாமலும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அதன் பலனாக பெயர் தெரியாமலேயே பல ராகங்கள் எனக்கு பரிச்சயமாயின. ஷண்முகப்ரியா, தர்பாரி கானடா, கல்யாணி, ஆரபி, காம்போதி, மோகனம், சாருகேசி, கம்பீரநாட்டை, சாரங்கா, சங்கராபரணம், நாட்டக்குறிஞ்சி, பீம்ப்ளாஸ், காபி, ஆனந்தபைரவி, சஹானா, செஞ்சுருட்டி, சரஸ்வதி, சிந்துபைரவி, ரதிபதி ப்ரியா, பந்துவராளி என அந்தந்த ராகங்களின் லட்சணங்கள் புரிந்த பிறகே அவற்றின் பெயர்கள் எனக்கு தெரிய வந்தன.
ஜி.ராமனாதனின் பாடல்களைக் கேட்பதுடன் நின்றுவிடாமல், அதைப் பற்றிய சுவையான பல தகவல்களும் எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூலம் எனக்குத் தெரிய வந்தன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும், கண்ணதாசனுக்கும், கே.வி.மஹாதேவனுக்கும், விஸ்வநாதன் ராமமூர்த்திக்கும் கிடைக்க வேண்டிய புகழனைத்தும் எம்.ஜி.ஆர் ஒருவருக்கே போய் எப்படி அவை எம்.ஜி.ஆர் பாடல்களாகப் பார்க்க, கேட்கப் பட்டவையோ, அதே போல ஆரம்பகாலத்தில் ஜி.ராமனாதனின் பாடல்கள் அனைத்துமே எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களாகவே அறியப்பட்டிருக்கின்றன. தூக்கு தூக்கி, உத்தமப்புத்திரன் போன்ற படங்களின் பாடல்களிலேயே ஜி.ராமனாதன் பரவலாக அறியப்பட்டார் என்று பெரியவர்கள் பேசிக்கொள்ளும் போது கேட்டிருக்கிறேன். இதில் உத்தமப்புத்திரன் திரைப்படம் இரண்டுமுறை எடுக்கப்பட்டது என்றும், இரண்டுக்குமே ஜி.ஆர்தான் இசை என்பதும் சுவாரஸ்யமான செய்தியாக இருந்தது. இருந்தும் இரண்டாவது உத்தமப்புத்திரன் திரைப்படத்தின் பாடல்கள் மூலம் ஜி.ஆருக்குக் கிடைத்த பாராட்டுக்களே அதிகம் என்பதும் தெரிய வந்தது.
‘பளைய உத்தமப்புத்திரன் சின்னப்பா படம்லா? ஐயர் மியூஸிக்கையெல்லாம் எவம்ல கவனிச்சான்?’
‘கணேசனையும் மீறில்லா ஐயர் நின்னாரு. என்ன சொல்லுதெ?’
‘அதும் ஒண்ணுக்கு ரெண்டு கணேசன மீறில்லா!’
கர்நாடக இசையை முறையாகப் பயின்றிருந்த பெரியப்பாக்கள், அத்தைகள் எல்லோருமே ஜி.ராமனாதனைக் கொண்டாடியிருக்கிறார்கள். அடுத்தத் தலைமுறைக்கு மிக எளிமையான முறையில் அவர்கள் கர்நாடக இசையைக் கடத்துவதற்கு ஜி.ராமனாதன்தான் பெரிதும் உதவியாக இருந்திருக்கிறார் என்பதை எங்களால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.
பிற்பாடு இசைவகுப்புகளில் ஹார்மோனியம் வாசிக்கும் போது ராகங்களை இனங்கண்டு எளிதாக பயில முடிந்ததற்கு சிறுவயதிலிருந்தே கேட்டுக் கேட்டுப் பழகியிருந்த ஜி.ஆரின் பாடல்களே காரணமாயிருந்தன. குறிப்பாக சாருகேசி. ’ஆடமோடிகலதே’ என்னும் தியாகராஜ கீர்த்தனையை பாடமாக எழுதிக் கொண்டு மலைத்தபடியே சாருகேசியை வாசிக்க முயலும் போது மெல்ல பிடிபட ஆரம்பித்தது. என்ன ராகமென்றே தெரியாமல் ஏற்கனவே வாசித்துப் பழகியிருந்த ‘வசந்தமுல்லை போலே வந்து’ பாடலின் ஸ்வரங்களுக்குள் விரல்கள் சென்று திரும்பின. வெற்றிலை புகையிலையைத் துப்பிவிட்டு வந்து உட்கார்ந்த இசையாசிரியர் கிருஷ்ணன்ஸார் சொன்னார்.
‘அப்பிடியே மன்மதலீலையை வென்றாரும் வாசிச்சுரு. வெளங்கிரும்.’
நிமிர்ந்துப் பார்க்க தைரியமில்லாமல் ஹார்மோனியத்திலேயே தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.
‘நீ வாய்ப்பாட்டு படிச்சேன்னா அந்தப் பாட்டு வாசிச்சதுக்கு ஏசுவேன். பொட்டிதானெ வாசிக்கெ. வாசி வாசி. ஆனா ராகம் தெரிஞ்சுக்கிடதுக்கு மட்டும்தான். செம்மங்குடியே மார்க் போட்ட பாட்டாக்கும். ராமநாதன் துப்புரவா போட்டிருப்பான். ராயல் டாக்கீஸ்ல மூணு வருசம்லா ஓடுச்சு’.
சமாதானப்படுத்தும் விதமாகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.
 உற்சாகத்தில் வாசிக்கத் துவங்க சாருகேசி கைக்குள் வந்தது.
‘பீம்ப்ளாஸ்ல ஒருத்தன் இப்பிடி ஒரு பாட்டு போட முடியுமாய்யா? பாரு, எடுத்த எடுப்புலுயே என்னமா ஏறுதுன்னு?’
‘வாராய் நீ வாராய்’ மெட்டை ஹார்மோனியத்தில் வாசித்தபடியே சொல்வார், வீரகேரளம்புதூர் விநாயகத்துப் பெரியப்பா. பல்லவியின் சங்கதிகளை ஒவ்வொரு முறையும் வேறுவேறாக அமைத்து அசத்தியிருப்பார் ஜி.ராமனாதன். தொடர்ந்து அந்தப் பாட்டு தந்த உற்சாகத்தில் பீம்ப்ளாஸ் வாசித்துக் கொண்டே இருந்து, என்னிடம் ஹார்மோனியத்தைத் தருவார் பெரியப்பா. பீம்ப்ளாஸ் ராகத்தின் ஸ்வரங்களே தெரியாமல் ‘வாராய் நீ வாராய்’ வாசித்துப் பார்ப்பேன். பிறகு சங்கீத வகுப்புகளில் பீம்ப்ளாஸ் பாடத்தின் போது எளிதாக நான் வாசிப்பதைப் பார்த்து நாலுமாவடியிலிருந்து வரும் மாணவர் சாந்தக்குமார் சலித்துக் கொண்டார்.
‘இந்த சவத்துப்பயவுள்ள பீம்பிளாசு வருவெனாங்கெய்யா?
அவரிடம் மெல்ல ‘வாராய் நீ வாராய்’ பாட்டை வாசித்துப் பழகச் சொன்னேன். சில நாட்கள் கழித்துச் சொன்னார்.
‘யோவ், நீரு ஆள சோலிய முடிக்கதுக்குல்லா வளி சொல்லியிருக்கேரு. ஒமக்கென்ன ஆர்மொனியத்துல ஒரு இளுப்பு இளுத்து விட்டுருவேரு. மூச்சு முட்டுது போரும். ஒருவாரத்துலயே எனக்கு ஆஸ்துமா வந்துட்டு. பாட்டாவா போட்டிருக்கான், சண்டாளப்பாவி.’
அவர் புல்லாங்குழல் கற்றுக் கொண்டிருந்தார்.
கங்கைகொண்டானிலிருந்து வரும் ராமச்சந்திரன் பெரியப்பா பிறப்பால் பிராமணர். கிட்டத்தட்ட எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நாங்கள் நினைக்கிற அவர், கேள்வி ஞானத்திலேயே எல்லா ராகங்களையும் துல்லியமாகச் சொல்பவர். சத்தமாகப் பேசுவார். சத்தமாகச் சிரிப்பார். சத்தமாகச் சாப்பிடுவார். ‘சுந்தரி சௌந்தரி’ ஆரம்பித்தவுடனேயே ‘எல, தெரியுதா. குறிஞ்சி’ என்பார். இத்தனைக்கும் சங்கீதம் படித்தவரல்ல. ஸ்வரங்கள் பற்றிய அறிவும் கிடையாது.
‘ஒங்களயெல்லாம் பாத்தா பொறாமையா இருக்குல. எல்லா ராகத்துக்கும்லா ஸ்வொரம் சொல்லுதியெ’ என்பார்.
‘பெறகு எப்பிடி பெரிப்பா, ராகம்லாம் கரெக்டா சொல்லுதீங்க?’ என்று கேட்டால், ‘ஐயன்தாம்ல காரணம். ஒரு நெளிசல் இல்லாம சொல்லி குடுத்துருவாம்லா. பாடிப் பாடிப் பாரு. தெரிஞ்சுரும்’ என்பார்.
‘கட்டபொம்மன்ல வரலச்சுமி குறிஞ்சில பாடுவா பாரு, மனம் கனிந்தருள் வேல்முருகான்னு. அந்தப் பய முருகன் அந்தாக்ல எறங்கி எளா என்னப் பெத்த அம்மைன்னு ஓடியாந்துர மாட்டான்?’. உற்சாகமாகக் கேட்பார். அம்பிகாபதி படத்தின் ‘வாடாமலரே’ என்னும் காதல் பாடலை சோகராகமான முகாரியில் ஜி.ஆர் அமைத்திருப்பதைச் சொல்லி அதை இனிமையாகப் பாடியும் காட்டுவார் ராமச்சந்திர பெரியப்பா.
அப்பாவின் அக்காள் மனோன்மணி அத்தை நான் ஹார்மோனியம் வாசிக்கும் போதெல்லாம் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வாள். சங்கீதம் முறையாகப் படித்தவள். அதனால் எனக்குக் கொஞ்சம் உதறல் எடுக்கும். நான் சம்பூர்ண ராகங்களின் ஆரோகண, அவரோகணங்கள் மட்டும் வாசித்து ஏமாற்றிக் கொண்டிருந்த காலமது. ஆனால் அத்தை எந்த கெடுபிடியும் பண்ணாமல் சினிமாப்பாட்டு வாசிக்க அனுமதிப்பாள். சினிமாப் பாட்டு என்றால் ஜி.ஆர் பாட்டுதான்.
‘ஜி.ஆர். எவ்வளவோ ராகமாலிகை போட்டிருக்காரு. அதெல்லாம் பிராக்டீஸ் பண்ணு. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஒண்ணுலெருந்து இன்னொண்ணுக்கு போறதே தெரியாம டிரான்ஸிஷன்லாம் அவ்வளவு ஸிம்பிளா இருக்கும்’.
கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்வாள்.
‘கேக்கறதுக்குத்தான் ஸிம்பிள். வாசிச்சுப் பாரு. பெண்டு நிமிந்திரும்’.
gr-2உண்மைதான். ஜி.ஆரின் ராகமாலிகைகளை வாசித்துப் பார்த்தாலோ, பாடிப் பார்த்தாலோ தெரியும் சங்கதி. மனோன்மணியத்தையின் ராகமாலிகைத் தேர்வு எப்பொதும் உத்தமப்புத்திரன் திரைப்படத்தின் கானடா, சாரமதி, திலங், மோகனம் என்ற அற்புதக் கலவையான ‘காத்திருப்பான் கமலக்கண்ணன்’தான்.
பெரியவர்கள் சொல்லிக் கேட்டது போக கொஞ்சம் விவரம் தெரிந்தவுடன் நானாக ஜி.ராமனாதனின் பாடல்களைத் தேடிப் பிடித்துக் கேட்கத் தொடங்கினேன். கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் என்று புகழ்பெற்ற படப்பாடல்கள் வரிசையில் எனது விருப்பப்பாடலாக இன்றளவும் என் மனதிலிருக்கும் பாடலும் ஜி.ராமனாதனின் ராகமாலிகைதான்.
‘தெய்வத்தின் தெய்வம்’ திரைப்படத்தின் ‘கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்’ என்னும் பாரதி பாடல்தான் அது. வீணை பிரதானமாக ஒலிக்கும் இந்தப் பாடலில் ஷெனாய் என்னும் வடநாட்டு வாத்தியத்தை ஜி.ராமனாதன் பயன்படுத்தியிருக்கும் விதத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஆபேரி, பாகேஸ்ரீ, பெஹாக் என்று ஜி.ராமநாதனின் அற்புதமான இசையமைப்புக்கு உயிர் கொடுத்துப் பாடியிருந்த எஸ்.ஜானகியை, இது போன்ற பாடல்கள் வழியாகத்தான் பின்னால் வந்த இளையராஜா நிறைய பாடல்களைக் கொடுத்து மேலும் பிரபலமாக்கியிருக்க வேண்டும். ‘தெய்வத்தின் தெய்வம்’ படமே ஜி.ராமனாதனின் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
என் தகப்பனாரின் மூத்த சகோதரரான சங்கரன் பெரியப்பா நாற்பது வயதிலேயே காலமாகிவிட்டார். பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரியாக இருந்த, கர்நாடகக் கச்சேரிகள் செய்து கொண்டிருந்த தன் கணவரின் நினைவாக சேகரித்து வைத்திருந்த புகைப்படங்களை ஒரு நாள் ஒவ்வொன்றாக எடுத்து தூசிதட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெரியம்மை. அவற்றில் ஒரு புகைப்படம் எனக்கு நம்பவே முடியாத ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எங்கள் வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு பழைய கருப்புவெள்ளைப் புகைப்படத்தில் நடுநாயகமாக ஒரு மனிதர் வீணையுடன் அமர்ந்திருக்க, உடன் இன்னும் சில வாத்தியக்காரர்களுடன் பெரியப்பா, மற்றொரு பெரியப்பா, அத்தைகள், அண்ணன் என்று அனைவருமே அமர்ந்திருக்கின்றனர். வீணையுடன் அமர்ந்திருந்த அந்த மனிதர் இசைமேதை ஜி.ராமனாதன்.
அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டு சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடத்தின் நவம்பர் மாதத்தில் தூத்துக்குடி விமானநிலையத்துக்கு இளையராஜா அவர்களுடன் சென்றிருந்தேன். விமானநிலைய அதிகாரி ஓடோடிவந்து வி.ஐ.பி அறையைத் திறந்து அமர வைத்தார். இன்னும் ஒரு சில நிமிடங்களில் விமானம் வந்துவிடும் என்று தகவல் சொன்னவர் சடாரென்று இளையராஜாவின் கால்களில் விழுந்து வணங்கினார். ஒருமாதிரியான உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த அவர் தன்னை கே.வி.மஹாதேவனின் உறவினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நடுங்கும் குரலில் சொன்னார்.
‘ஸார், எங்க வீட்டுல எங்க குடும்பத்துப் பெரியவா ஃபோட்டோஸ்கூட ஒங்க ஃபோட்டோவையும் மாட்டியிருக்கோம்’.
நான் எங்கள் வீட்டிலுள்ள ஜி.ராமனாதனின் புகைப்படத்தை நினைத்துக் கொண்டேன்.

துப்பு

பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு எனது பெரியப்பாவின் வீட்டிலிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. (இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன்.) நான் ஏழாவதோ, எட்டாவதோ படித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை கடைசியாகப் பார்த்திருந்தேன். எல்லாப் பெரிய குடும்பங்களையும் போல உப்புப் பெறாத காரணங்களுக்காக அத்தனை காலம் தொடர்பில்லாமல் பிரிந்திருந்தோம். அவ்வளவு நீண்ட இடைவெளியில் நான் சென்னைக்கு வந்து திரைப்படத்துறையில் நுழைந்திருந்தேன். பெரியப்பா பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரி. குடும்பத்துடன் பல அண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறியவர். என்னை அவர்கள் அழைத்தது, அவர்களின் இரண்டாவது மகனின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு. மூத்த மகனின் திருமணத்துக்கு அழைக்கவேயில்லை. எங்கள் குடும்பத்தின் சார்பாக இதற்கு என்னைப் போகச் சொல்லியிருந்தனர் என்பெற்றோர். சிறுவனாக என்னைப் பார்த்துப் பழகியிருந்த பெரியப்பாவுக்கும், பெரியம்மைக்கும் நீண்ட தாடி, மீசையுடன் வளர்ந்த வாலிபனான என்னைப் பார்த்ததில் ஆச்சரியம் கலந்த சந்தோஷம். ஐயா வா, ஐயா வா என்று தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறைதான்.
பெரியப்பாவின் வீட்டில் காலைச் சிற்றுண்டி அருந்திவிட்டு ஒரு வேனில் பெண்ணின் வீட்டில் நடக்க இருந்த நிச்சயதார்த்த விழாவுக்குக் கிளம்பினோம். வேனில் இருக்கும் போதே அத்தனை வருஷம் விட்டுப் போன பல கதைகளை பெரியம்மை சொல்லிக் கொண்டே வந்தாள். ஏதோ நினைவு வந்தவளாய் வேன் டிரைவரிடம் சொன்னாள்.
‘அந்த டர்னிங்க்ல ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போகணும். நிறுத்த மறந்துராதீங்க’
‘யார?’ நான் கேட்டேன்.
‘அவருதான் துப்பு சொன்னவரு’
‘என்னது துப்பச் சொன்னவரா?’
‘கொளுப்பு மட்டும் இந்தப் பயலுக்குக் கொறையவே இல்ல′.
சிரிப்பை அடக்கியபடி சொன்னாள் பெரியம்மை.
துப்பு என்னும் வார்த்தையை கொலை, கொள்ளை வழக்கு பற்றிய செய்திகளில் செய்தித்தாள்களில் மட்டுமேதான் படிப்பது வழக்கமாகயிருந்ததால் அதற்கு உள்ள வேறோர் அர்த்தத்தை நான் சுத்தமாக மறந்திருந்தேன். திருமணத்துக்கான வரன் குறித்த தகவல் சொல்வதை துப்பு சொல்வது என்று திருநெல்வேலியில் சொல்வதுண்டு. மற்ற ஊர்களில் இது வழக்கத்தில் உள்ளதா என்று தெரியவில்லை.
இப்படி துப்பு சொல்பவர்களை வெறுமனே தரகர்கள் என்று குறுக்கி விட முடியாது. இப்படி துப்பு சொல்பவர்கள் பணம் பெற்றுக் கொள்வதுண்டுதான் என்றாலும் அதையும் தாண்டி இரு குடும்பங்களின் நன்மைக்காகவும் உளமாற பாடுபடுபவர்கள். எப்படியும் இவர்கள் சம்பந்தப் பட்ட பெண், மாப்பிள்ளை வீடுகளின் குறை, நிறையை நன்கு அறிந்தவராகவே இருப்பர். கூடுமானவரை அதை முழுக்க தெரியப்படுத்தாமல் சமாளித்து பரஸ்பரம் இரு குடும்பத்தாருக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தி கல்யாணப் பேச்சு நடக்கும் போதே அவர்களை நெருக்கமானவர்களாக மாற்றி விடுவர். திருமணம் நடந்து முடிந்த பிறகும் கூட ஏற்படும் சின்னச் சின்ன குடும்பச் சச்சரவுகளில் உறவுப் பாலமாக செயல்பட்டு அதை நீக்கி வைப்பவர்களும் உண்டு.
marriage-2எங்கள் குடும்பத்துக்கு அப்படி வேண்டிய ஒரு துப்பு சொல்பவராக முனியப்ப தாத்தாவை பார்த்து வருகிறேன். திருநெல்வேலி சைவ வேளாளர்களில் வள்ளிநாயகம், கோமதிநாயகம், மீனாட்சிசுந்தரம், நல்லகண்ணு, நெல்லையப்பன், சபாபதி என்ற பெயர்களுக்கு மத்தியில் எனக்கு தெரிந்த ஒரே ‘முனியப்பன்’ இவர்தான். முனியப்ப தாத்தா என் தகப்பனாருக்கு சித்தப்பா முறை. ஆனால் என் தகப்பனாரை விட பதினைந்து வயது இளையவர். குள்ளமாக, குண்டாக, மாநிற உடம்பெல்லாம் புசு புசுவென முடியாக உள்ள முனியப்பத் தாத்தா இல்லாமல் திருநெல்வேலியில் எந்த ஒரு வேளாளர் வீட்டுத் திருமணத்தையும் நான் பார்த்ததில்லை. மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து மறுநாள் மறுவீட்டுப் பலகாரப் பந்தியிலும், சொதிச் சாப்பாட்டிலும் அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருப்பார் தாத்தா. மணவயதிலுள்ள எல்லா பெண்களும் முனியப்ப தாத்தாவுக்கு பேத்திகள்தான். பையன்கள் பேரன்கள்தான். வசதி குறைந்த, வசதியான யார் வீட்டிலும் முனியப்ப தாத்தாவை அவர்கள் வீட்டு அடுக்களை வரை அனுமதிப்பார்கள். குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் அந்தஸ்து, சக்தி தெரிந்து அதற்கேற்ற வரனை முனியப்ப தாத்தாவே முதலில் மனதுக்குள் முடிவு செய்து விடுவார். அவருக்கு தெரியும் யார் யாருக்கு பொருந்திப் போகும் என்று. அந்த வகையில் பெரும்பாலான திருநெல்வேலி சைவ வேளாள ஆண்களுக்கு ‘மனைவி அமைவதெல்லாம் முனியப்ப தாத்தா கொடுத்த வரம்’.
முனியப்ப தாத்தாவை விட வயதில் மூத்தவர்களே ‘என்னடே முனியப்பா! பேத்தி உக்காந்து வருஷம் எட்டாகுது. இன்னும் ஒனக்கு அக்கற இல்லையே’ என்பார்கள். அவர்கள் சொல்லும் பேத்தி அவர்களின் பேத்திதான் என்றாலும் பொதுவாக உரிமையுடன் முனியப்ப தாத்தாவிடம் சொல்லி வைப்பார்கள். ‘நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியணுமாக்கும். எல்லாம் மனசுல இருக்கு’ என்று பதில் சொல்வார். மனதில் இருப்பதை செய்யும் வண்ணம் மாப்பிள்ளையின் ஜாதகத்தோடு சில நாள் கழித்து வருவார். ‘ நம்ம செவகாமி மூல நட்சத்திரம்லா. அதான் பொறுத்துக்கிட்டே இருந்தேன். இந்தா பாத்தேளா? பையனுக்கு அம்மை இல்லை. ஜாதகமும் பொருந்தி வருது. என்ன சொல்லுதிய?’ என்பார். எப்படியும் ஓரிரு மாதங்களில் அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிந்து விடும். அது முடிந்து அடுத்த திருமண வேலைகளில் மும்முரமாக இறங்கி விடுவார். அந்த சிவகாமிக்கு பிள்ளை பிறந்ததும் முதலில் முனியப்ப தாத்தாவுக்குதான் சொல்லி விடுவார்கள். அந்தப் பிள்ளைக்கு பெயர் சூட்டும் வைபவத்திலும் முனியப்பா தாத்தாவின் ஆட்சிதான். நாள் குறிப்பதிலிருந்து ஆசாரிக்குச் சொல்வது வரை இவர்தான் எல்லாவற்றையும் முடிவு செய்து சொல்வார்.
ஊருக்கெல்லாம் துப்பு சொல்லி திருமணம் நடத்தி வைக்கும் முனியப்ப தாத்தாவின் மனைவி அவருடன் வாழ்ந்தது ஒரு சில வருடங்கள்தான். பெரும் பணக்காரியான அவர் இவரிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு தன் மகனுடன் தனியே வாழ்ந்து வருகிறார். மகன் மீது கொள்ளைப் பாசம் முனியப்ப தாத்தாவுக்கு. அவன் கல்லூரிக்குச் செல்லும் போது எதிரே இவர் வந்தால் தன் தாயின் வளர்ப்பு காரணமாக சிரிக்கக் கூட செய்யாமல் பாராமுகமாகச் சென்றதை ஒருமுறை என்னிடம் கண்கலங்கிச் சொல்லியிருக்கிறார். ‘விடுங்க தாத்தா. அந்தப் பயலுக்குக் குடுத்து வைக்கல′ என்று சமாதானப் படுத்தினேன். தனக்குத்தான் குடும்ப வாழ்க்கை அமையவில்லை, மற்றவர்களாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்னும் நல்லெண்ணமே முனியப்ப தாத்தாவை இந்த துப்பு சொல்லும் வேலையில் ஆரம்பித்து திருமண வைபவங்களை முன் நின்று நடத்தச் செய்கிறது என்றே எண்ணுகிறேன்.
துப்பு கேட்பதில் மட்டுமல்ல. அசுப காரியங்களாக இருந்தாலும் முதலில் முனியப்ப தாத்தாவுக்குத்தான் ஆள் போகும். ஓடி வருவார். மரணம் நிகழ்ந்த வீட்டுக் காரர்கள் எப்படியும் படபடப்புடன் இருப்பார்கள். முனியப்பா துக்கத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாக எல்லா காரியங்களையும் கவனித்துக் கொள்வார். முதலில் சமையலுக்கு ‘தவுசுப் பிள்ளை’க்குச் சொல்லி விடுவார். பிறகு பலசரக்கு சாமான்கள் வாங்கி வருவார். நெல்லையப்பர் கோயிலுக்கு தகவல் சொல்வார். அம்மன் சன்னதி தெரு, ஸ்வாமி சன்னதி தெருவாக இருந்தால் பிணத்தை எடுக்கும் வரை நெல்லையப்பரும், காந்திமதி அம்மையும் குளிக்க மாட்டார்கள். எந்தெந்த ஊரில் அந்த வீட்டின் உறவினர்கள் இருக்கிறார்கள் என்னும் விவரம் அறிந்தவராதலால் அவரே எல்லோருக்கும் தகவல் சொல்வார். குடியானவனுக்கும் விஷயம் சொல்லி நீர்மாலை எடுத்தலில் ஆரம்பித்து மறுநாள் சாம்பல் கரைக்கும் வரை கூடவே இருந்து பொறுப்புடன் எல்லா விஷயங்களையும் செய்து முடிப்பார். துப்பு சொல்லும் வேலையை கூடுமானவரை பதினாறு நாட்களுக்கு ஒத்தி வைப்பார்.
முனியப்ப தாத்தாவைப் போலவே இன்னும் பலர் இந்தத் துப்பு சொல்லும் வேலையில் உண்டு. அவர்கள் அனைவருக்குமே இந்த பொது நற்குணங்கள் உண்டுதான். திரைப்படங்களில் பெரும்பாலும் காட்டப் படும் அசட்டுத் தரகர்கள் போல் ஒருவரை கூட நான் இதுவரையில் திருநெல்வேலியில் பார்த்ததில்லை. சென்னையில் பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் திருநெல்வேலியிலும் கூட துப்பு சொல்பவர்கள் மறைந்து போய் திருமண தகவல் நிலையங்கள் மலிந்து விட்டதாகத் தகவல். இந்தத் தகவல் நிலையங்களால் ஜாதகங்களையும், அவர்களின் வசதிகளையும் மட்டும்தான் தெரிவிக்க முடியும். முனியப்ப தாத்தா போன்ற துப்பு சொல்பவர்களால்தான் அந்தந்த குடும்பத்து உறுப்பினர்களின் வரவு, செலவு, தரம் அறிந்து சகலத்தையும் மனதுக்குள் கணக்கு போட்டுப் பார்த்து பொருத்தமான ஜோடிகளை இணைக்க முடியும். திருமணத்துக்குப் பின் வரும் பிணக்குகளையும் அலைந்து திரிந்து போராடி, தான் கெட்ட பெயர் வாங்கினாலும், கசப்பை சம்பாதித்தாலும் குடும்பத்தை இணைக்க பாடுபடவும் முடியும். வாழ்க்கை அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அனுபவம் காரணமாக யாருக்கு யார் பொருத்தம் என்பதை அவர்களால் தெளிவாக முடிவு செய்ய முடியும்.
‘நல்லா விசாரிக்க வேண்டாமா? துப்பு சொன்னது யாரு? போ, அவனா? அப்போ வெளங்கினாப்லதான் இருக்கும்.’ இப்படி பேச்சுக்களில் தொடங்கி விவாகரத்தில் போய் முடிந்த திருமணங்களும் உண்டு. அதனாலேயே விசாரிப்பில் லேசில் திருப்தி அடைந்து விடாமல் அதே வேலையாக இருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.
marriage-1சென்ற வருடத்தின் துவக்கத்தில் திருநெல்வேலியின் கிராமப் பகுதிகளில் நண்பர்களுடன் காரில் சுற்றிக் கொண்டிருந்தேன். என்னுடன் குஞ்சுவின் தம்பி பாலாஜி (பொறியியற்கல்லூரியின் விரிவுரையாளன்), எனது உறவுக்கார மீனாட்சி சுந்தரம், ஓவியர் பொன்.வள்ளிநாயகம் போன்ற நண்பர்களும் வந்திருந்தனர். எங்கெங்கெல்லாமோ சுற்றி விட்டு திருப்புடைமருதூர் தாமிரபரணியில் குளித்து விட்டு மாலையில் வீரவநல்லூர் வந்து சேர்ந்தோம். ‘ எண்ணே, இங்கனெ ஒரு கடையில ஆம வட நல்லா இருக்கும். அப்படியே டீயும் குடிச்சுருவோம்’ என்றார் வள்ளிநாயகம். வீரவநல்லூர் அவரது சொந்த ஊர் என்பது எங்களுக்கு அப்போதுதான் தெரிந்தது. காரை ஓரமாக நிறுத்தி விட்டு அந்த சின்னக் காப்பிக் கடையின் திண்ணையில் உட்கார்ந்தோம். ‘எண்ணெ காயுது. ஒரு அஞ்சு நிமிசம்’ என்றார்கள். ‘சித்தப்பா, நீங்க இரிங்க. நான் வட போட்டவொடனே எடுத்துட்டு வாரேன்’ என்று கடைக்குள் சென்றான் மீனாட்சி. 
எல்லோருமே வேட்டி சட்டையில் இருந்தோம். பாலாஜி துண்டை தலைப்பாகையாகக் கட்டியிருந்தான். குளிர்ந்த காற்றில் மேலே போட்டிருந்த ஈர வேஷ்டியும், சட்டையும் ஒரு வித சுகத்தைக் கொடுக்க, ‘காத்து நல்லா அடிக்கி. என்னண்ணே? என்றார் வள்ளிநாயகம். சற்றும் சம்பந்தமில்லாமல் ‘ இதுதான் என் மாமனார் ஊரு’ என்றான் பாலாஜி. ‘என்ன சொல்லுதியெ? யாரு அது? இது என் சொந்த ஊருல்லா!’ என்றார் வள்ளி. மாமனாரின் பெயரை பாலாஜி சொன்னவுடனேயே வள்ளிக்குத் தெரிந்து போனது. ‘சரியாப் போச்சு. ஜம்பு தங்கச்சியையா நீங்க கட்டியிருக்கியே? அவன் என் கிளாஸ்மேட்டுல்லா!’ என்றார். இதற்குள் மீனாட்சி தந்தி பேப்பரில் சுற்றிய ஆம வடையைக் கொண்டு வந்தான். ‘சித்தப்பா, சூடா இருக்கு. பெருசா எண்ணெ குடிக்கல. எடுத்துக்குங்க. டீய வாங்கிட்டு வாரேன்’ என்று வடையைக் கொடுத்து விட்டுப் போனான்.
‘ஜம்பு படிச்சு முடிக்கவுமே அவங்க இந்த ஊர விட்டு போயிட்டாங்க. எனக்கு அவங்க வீட்டுல எல்லாரையும் நல்லா தெரியுமெ’ என்றார் வள்ளி. வடையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அதை கடிக்காமல் மெல்ல பாலாஜி வள்ளியிடம் கேட்டான்.
‘பொண்ணு நல்ல பொண்ணுதானா?’
பாதி வடையை வாயில் வைத்திருந்த வள்ளிநாயகம் அவசரமாக, அவசரமாகக் கடித்து முழுங்கிவிட்டு சொன்னார்.
‘சே, தங்கமான பிள்ள′.
இந்த கேள்வியை வள்ளிநாயகத்திடம் கேட்டபோது பாலாஜியின் மகன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

கோட்டி

‘ஒரு பத்து பிசா குடேன்’. 
வாசலில் கொஞ்சம் சத்தமாகக் கேட்கும் குரல். எட்டிப் பார்த்தால் நீளமான தன் விரல் நகங்களால் பரட் பரட்டென்று சொறிந்தபடி நிற்பாள், அந்த கோட்டிக்காரி. சின்ன வயதில் நான் பார்த்த முதல் கோட்டிக்காரி அவள்தான். எப்படியும் ஒரு ஐம்பது வயது இருக்கும். இந்திராகாந்தியின் ஹேர்ஸ்டைலில், தொள தொள ரவிக்கை அணிந்திருப்பாள். நைந்து போன சேலை காற்றில் பறந்து கொண்டிருக்கும். எப்போதாவது அதை சரி செய்வாள். கண்கள் கலங்கிச் சிவந்திருக்கும். உதட்டில் எப்போதுமே சிறு சிரிப்பு.
‘எதுக்கு துட்டு கேக்கா?
‘அங் . . . மூதி பீடி குடிக்கும்.’
ஆச்சி சொல்வாள். அவள் அப்படி வந்து கேட்பது பிடிக்கவில்லையென்றாலும், அவள் கேட்ட பத்து பைசாவுக்கும் அதிகமாக நாலணாவோ, எட்டணாவோ கொடுக்கத்தான் செய்வாள் ஆச்சி. பெரிய மாமா வழியில் அந்த கோட்டிக்காரி எங்களுக்கு தூரத்து சொந்தம் என்று சொல்வார்கள். நல்ல வசதியான குடும்பப் பின்னணியுள்ள அவளது கணவனும், பிள்ளைகளும் ரயிலில் அடிபட்டு இறந்து போனதிலிருந்து அவளுக்கு இப்படி கோட்டி பிடித்து விட்டதாக பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
kotti1ஒருமுறை வந்தால் அதற்கு பிறகு அவள் எப்போது வருவாள் என்று சொல்லமுடியாது. அடிக்கடி வருவதில்லையென்பதால், சிலசமயம் ‘எங்கெ அந்த மூதிய ஆளயே காணோம்?’ என்று ஆச்சியே கேட்கும் அளவுக்கு இடைவெளி விட்டுதான் வருவாள். இடைவெளி ஒருமுறை நீண்டு, பிறகு அவள் வரவேயில்லை. ரயில் தண்டவாளத்தையொட்டி பீடி குடித்தபடியே அவள் நடந்து போனதை பார்த்ததாக குருக்களையா தாத்தா சொன்னதுதான் அந்த கோட்டிக்காரி பற்றி நாங்கள் கேட்ட கடைசி தகவல்.
திருநெல்வேலி பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கோட்டி என்றழைப்பது வழக்கமான ஒன்று. பைத்தியம் என்ற சொல்லை திருநெல்வேலிக்காரர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. கோட்டி என்ற வார்த்தையை ஒருவர் சொல்வதை வைத்தே அவர் திருநெல்வேலிக்காரர் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். செல்லமாகவும் ஒருவருக்கொருவர் கோட்டி என்று சொல்லிக் கொள்வதுண்டு. சமயங்களில் குழந்தைகளைக் கொஞ்சுவதற்கும் கோட்டி என்ற சொல் பயன்படும்.
‘அட கோட்டி, நீ இவ்வளவு நேரம் இங்கனயா ஒளிஞ்சிக்கிட்டிருந்தே!’
ஆச்சரியமும், மகிழ்ச்சியும் பொங்கும் கண்களோடு மர பீரோவுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு எட்டிப் பார்க்கும் பிள்ளையை ஓடிச் சென்று ஆவிசேர்த்து கட்டிக் கொஞ்சி முத்திக் கொள்வாள் அம்மை.
நண்பர்களுக்குள்ளும் கோட்டி அடிபடுவதுண்டு. குஞ்சு அடிக்கடி என்னை விளிக்கும் சொற்களுள் கோட்டியும் ஒன்று.
‘நான் அன்னைக்கெ சொன்னென். நீதான் கோட்டிக்காரப்பய கேக்கல.’
அப்பளாம் மாமி வீட்டுக்கு டியூஷன் படிக்க போகும் பிள்ளைகள் மாமியின் வீட்டிலுள்ள ஒரு பூட்டப்பட்ட அறையைப் பார்த்தபடியேதான் வீட்டுப்பாடம் எழுதுவார்கள் என்று அம்மன் சன்னதியில் பேசிக் கொள்வார்கள். அப்பளாம் மாமிக்கு கணவன் இல்லை. அப்பளம் போட்டு விற்பது, ஒயர் கூடை பின்னுவது, டியூஷன் எடுப்பது என்று ஜீவனத்துக்காக ஏதேதோ செய்து கொண்டிருந்தாள். மாமி இவ்வளவு கஷ்டப்படுவது அவளது புத்திசுவாதீனமில்லாத ஒரே மகனுக்காகத்தான் என்பது எல்லோருக்குமே தெரியும்தான். ஆனாலும் சரியாக படிக்காத பிள்ளைகளை பயமுறுத்தும் விதமாக அப்பளாம் மாமியிடம் டியூஷனுக்கு அனுப்பப் போவதாக மிரட்டி வந்தார்கள்.
‘அப்பளாம் மாமி வீட்டுக்கு டியூஷன் படிக்க போற புள்ளைங்க ஒளுங்கா படிக்கலென்னா, அவங்க வீட்டுல ஒரு கோட்டி இருக்குல்லா. அதுட்ட புடிச்சு குடுத்துருவாங்களாம்’.
அத்தனை சிரமமான வாழ்க்கையிலும் வருடாவருடம் தன் வீட்டில் கொலு வைக்க மாமி தவறுவதேயில்லை. பெரியம்மையும், அப்பளாம் மாமியும் தோழிகள். ஒருமுறை பெரியம்மையுடன் அப்பளாம் மாமி வீட்டு கொலுவுக்கு நானும் போயிருந்தேன். தவழும் கிருஷ்ணர், பட்டாபிஷேக ராமர், வேடன் கண்ணப்பன், சஞ்சீவி மலை தாங்கிய அனுமன், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி சாயலிலேயே உள்ள பக்த மீரா, நவதானிய தட்டுகளுக்கு முன்னே பெரிய தொந்தியுடன் உட்கார்ந்திருக்கும் செட்டியார், மாரீச மானைக் காட்டும் சீதாபிராட்டி, உடன் ராமலட்சுமணர்கள் போன்ற பொம்மைகளுக்கிடையே கையில் கம்பூன்றியபடி மஹாத்மா காந்தியும் சிரித்துக் கொண்டிருந்தார். எல்லா பொம்மைகளையும் விட நான் அதிகம் பார்த்துக் கொண்டேயிருந்தது, ஹார்மோனியத்தில் ‘வாதாபி கணபதிம்’ வாசித்துக் கொண்டிருந்த அப்பளாம் மாமியின் மகனைத்தான். நடுவகிடெடுத்து தலை சீவி, கழுத்து பட்டன் வரை போட்டிருந்த சட்டையுடன் குனிந்தபடியே ஹார்மோனியக் கட்டைகளில் உள்ள தன் விரல்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் ஒரு கிண்ணத்தில் வைக்கப் பட்டிருந்த சுண்டல் அப்படியே இருந்தது. அவ்வப்போது ‘வாசிச்சது போதும். நாளைக்கு வாசிக்கலாம். சுண்டல் சாப்பிடு’ என்று மாமி சொல்வதை அவன் கேட்கவில்லை. தலை நிமிர்ந்து எங்களை பார்க்கவுமில்லை.
‘அவனையே பாத்துக்கிட்டிருக்காதெ’.
ரகசியமாகச் சொல்லி என் தொடையில் கிள்ளினாள் பெரியம்மை.
‘வெக்கந்தான். வேறொண்ணுமில்ல. நீங்க போனதுக்கப்புறம் எடுத்து சாப்பிடுவான்’.
நாங்கள் எதுவும் கேட்காமலேயே பதில் சொன்னாள் மாமி.
சென்னையில் சாலிகிராமத்துத் தெருக்களில் அவ்வப்போது ஒரு அழுக்கு மனிதர் தென்படுவார். ஏதாவதொரு கடையின் முன் வந்து நிற்பார். கடைக்காரரோ, வாடிக்கையாளர்களோ காசு கொடுத்தால் வாங்கிக் கொள்வார். இல்லையென்றால் சிறிது நேரம் கழித்து சென்று விடுவார். வாயைத் திறந்தோ, கைநீட்டியோ ஏதும் கேட்பதில்லை. ஒருமுறை ராஜேஸ்வரி கோயில் பக்கம் நடந்து வரும் போது ஒரு புல்லாங்குழலிசை கேட்டது. ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தின் ‘வான் போலே வண்ணங்கொண்டு’ என்ற வேடிக்கை பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழலிசை அது. வேறேதும் வாத்தியங்கள் ஒலிக்காததால் எங்கிருந்து வருகிறது என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒரு டீக்கடையின் வாசலில் குழுமியிருக்கும் இளைஞர் கூட்டத்துக்கு நடுவே நின்று நான் எப்போதும் பார்க்கும் அந்த அழுக்கு மனிதர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு ஒருநாள்கூட அவர் புல்லாங்குழல் வாசித்து நான் பார்க்கவில்லை. அவ்வப்போது காசு கொடுக்கும் போது அதுபற்றி கேட்க நினைப்பதோடு சரி. கேட்டதில்லை.
thirteenth_l_1இதே பகுதியில் ஆளவந்தான் என்றழைக்கப்படும் ஒரு விநோதமான மனிதர் நடமாடுவார். எப்போதும் மொட்டைத் தலையுடன் பேண்டும், ஷூசும் அணிந்திருப்பார். அவ்வப்போது சட்டையும் அணிவதுண்டு. முகம், கை, கால்களில் ஏதேனும் வண்ணம் பூசியிருப்பார். சமயங்களில் ஏதாவது கடை அல்லது வீட்டு படிக்கட்டுகளில் உட்கார்ந்து தன் மார்பில் தானே சிரமப்பட்டு பூக்கள் வரைவார். அருகிலேயே பெயிண்ட், பிரஷ் எல்லாம் இருக்கும். அவரை உட்கார்ந்த நிலையில் பார்க்க முடிவது இது மாதிரியான தருணங்களில்தான். மற்றபடி எப்போதுமே ஓட்டமும் நடையும்தான். பெரும்பாலும் ஒரே உடை. கால்களில் மட்டும் ஷூக்கள் அவ்வப்போது மாறும். பழையவைதான் என்றாலும் துடைத்து பளிச்சென்று இருக்கும். அந்த காலணிகளுடன் மிடுக்காக, படுவேகமாக செல்லும் போது அவர் ஒரு டென்னிஸ் பிளேயர் என்று சொன்னால் யாராலும் மறுக்காமல் நம்ப முடியும்.
அந்தப் பகுதியிலுள்ள காய்கறி, பழ வியாபாரிகள், மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்பவர்கள், டீக்கடை, பேப்பர் ஸ்டோர்காரர்கள் எல்லோரும் ஏதேதோ சொல்லி அவரை வம்பிழுக்கிழுத்தாலும் அவர்களிடம் பதிலேதும் சொல்லாமல், அவர்களை முறைத்து பார்த்தபடியே ஒரு காகிதத்தில் குறிப்பெடுப்பது மாதிரி ஏதோ எழுதுவார்.
‘டேய், ஆளவந்தான் கம்பிளெயிண்ட் எழுதுறான்டா. நீ காலி மகனே’.
‘ஆமா இவுரு பெரிய சிபிஐ. போடாங் . . . . .’
மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு நாள் மாலையில் தெருவில் ஒரே கூச்சலாகக் கேட்டது. கேட்ட மாத்திரத்தில் ஏதோ தகராறு என்பது புரிந்தது. மாடியிலிருந்து பார்க்கும் போது ஆளவந்தான் என்றழைக்கப்பட்ட அந்த மொட்டைத்தலை மனிதனை இரண்டு பேர் பிடித்துக் கொள்ள மெக்கானிக்ஷாப்காரர் அடி அடியென்று அடித்துக்கொண்டிருந்தார். மாறி மாறி கன்னத்தில் அறை விழுந்துகொண்டிருந்தது. கொஞ்சம் கூட எதிர்ப்பு காட்டாமல் பொறுமையாகவே நின்று அடிகளை வாங்கிக் கொண்டிருந்தார். சுற்றிலும் ஜனங்கள். எல்லோருமே அவரை அடிக்கச் சொல்லுகிறார்கள். இவர்களில் பெண்களும் உண்டு. ஆளவந்தான் எதற்கும் கலங்குபவராகவே தெரியவில்லை. மேலும், மேலும் அடித்து களைத்து அவர்கள் திரும்பும் போது ஒருவன் ஏதோ நினைவு வந்தவனாய் ஓடி வந்து ஆளவந்தானின் பேண்டைக் கிழற்றி உருவ முயன்றான். பலங்கொண்ட மட்டும் போராடும் விதமாக அவன் கைகளைக் கெட்டியாக பிடித்தபடி ‘என்ன அவமானப்படுத்ததெப்பா. நான் ஒண்ணும் பைத்தியமில்லெ’ என்று கதறினார், எல்லோரையும் போல கோட்டிக்காரன் என்று நானும் நினைத்துக் கொண்டிருந்த அந்த பெரியவர்.

ஆய்புவன்

எங்களுக்கு தெரிந்து நெல்லையப்பர் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த நந்தி பட்டர் மாமாதான் முதலில்  டி.வி வாங்கினார். வழக்கம் போல இந்தத் தகவலையும் எங்களுக்குச் சொன்னவன் குஞ்சுதான்.

‘டைனமோ கம்பேனிக்காரனோட டிவியாம்ல. ப்ளாக் அன்ட் வொயிட்டுதான். ஆனா நேர்ல பாக்கற மாதிரி இருக்குறதா ஐயெங்கார் பாலாஜி சொன்னான்’.

மறுவாரமே குஞ்சு, நந்தி பட்டர் மாமா வீட்டுக்கு நேரிலேயே சென்று ஓர் ஆய்வு நடத்திவிட்டு வந்து அம்மன் சன்னதி பஜனைமடத்தில் வைத்து அறிக்கை சமர்ப்பித்து விட்டான்.

‘ஐயெங்கார் பேச்ச கேட்டு அசிங்கப்பட்டு போனேம்ல. அது டைனமோ கம்பேனியில்ல. டைனோரா கம்பெனி.

இது என்ன கம்பெனி டிவி மாமான்னு கேட்டதுக்கு நந்திபட்டர் மாமாதான் அப்பிடி சொன்னா. ஒடனெ என் தலைய போட்டு உருட்டுதேளே’.

ஐயெங்கார் பாலாஜி கோபப்பட்டான். குஞ்சுவின் தம்பி பெயரும் பாலாஜி என்பதால் மற்றொரு பாலாஜி, ‘ஐயெங்கார் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டான்.
அதற்குப் பிறகு குஞ்சு நந்திபட்டர் மாமா வீட்டுக்கு டி.வி பார்க்கப் போவதை வழக்கமாக்கிக் கொண்டான். அதுவும் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் சமயத்தில் கண்டிப்பாக செல்வான். அதுவரை ரேடியோ கமெண்ட்ரி மூலம் மட்டுமே அறிந்து வைத்திருந்த கிரிக்கெட்டை நேரடியாக டி.வி.யில் பார்த்த பரவசத்தை ஒரு கதை போல எங்களுக்குச் சொல்லி வந்தான். எனக்கு அப்போது கிரிக்கெட் மீதும், டி.வி. மீதும், பெரிய மோகமில்லாததால் குஞ்சு சொல்லும் தகவல்களே போதுமானதாகயிருந்தன.

‘எல . . . . இந்த பௌலர் பயலுவொ பந்து போடதுக்கு முன்னாடி எங்க வச்சு தேய்க்கானுவொ, தெரியுமா?’

எங்கல?

காதில் ரகசியமாகச் சொன்னான்.

என்னல சொல்லுதெ, நெஜமாவா?

பெறகு? நான் என்ன பொய்யா சொல்லுதேன்? வேணும்னா ஐயெங்கார் பாலாஜிய கேட்டுப் பாரு.

அத ஏம்ணே கேக்கிய! குஞ்சண்ணன் கூடல்லாம் ஒரு எடத்துக்கு போலாமா? அங்கெ சாமி சன்னதில உள்ள மாமிங்கள்லாம் டி.வி. பாக்க வந்திருந்தாங்க பாத்துக்கிடுங்க. பந்த பௌலருங்க அங்கெ வச்சு தேய்க்கவும் குஞ்சண்ணன் என்ட்ட ‘எல, எங்கெ தேய்க்கனுவொ பாரு’ன்னு சொல்லிட்டு சத்தம் போட்டு ஒரே சிரிப்பு. நந்தி பட்டர்மாமா காதுல விளுந்துட்டு. எந்திருச்சு வெளியெ போங்கலன்னு ஏசி போட்டாரு. ரொம்ப அசிங்கமா போச்சுண்ணெ.

எல, பந்த அங்கெ வச்சு தேயி தேயின்னு தேய்க்கறவனுக்கு அசிங்கமில்ல. நாங்க சிரிச்சதுதான் மயிராண்டி ஒங்களுக்கு அசிங்கமாப் போச்சோ! தெரியாமத்தான் கேக்கேன்’.

இந்த பிரச்சனைக்குப் பிறகு கைலாசம் அண்ணன் வீட்டில் டி.வி வாங்கினார்கள். அன்றிலிருந்து தினமும் மாலை நேரங்களில் கைலாச அண்ணன் வீட்டில் குஞ்சு தென்பட ஆரம்பித்தான். இத்தனைக்கும் அப்போது திருநெல்வேலிப் பகுதியில் இலங்கையின் ரூபவாஹினி நிகழ்ச்சிகள் மட்டுமே தொலைக்காட்சியில் தெரிந்து வந்தது. அதற்கே ஆங்காங்கு ஆன்டெணாக்கள் முளைத்தன. பெரும்பாலான தொலைக்காட்சிப் பெட்டிகள் கருப்பு வெள்ளைதான். கலர் டி.வி வர கொஞ்ச நாள் ஆனது. அதுவரை பிளாக் அன்ட் வொயிட் டி.வியின் திரையில் ஒரு வண்ண ஸ்கிரீனை பொருத்தி படம் பார்த்தார்கள். மணி மாமா வேலை பார்த்த ‘விஜயகுமார் சைக்கிள் மார்ட்’ கடையில் அப்படி ஒரு ‘வானவில்’ வண்ணத் திரையில் ‘வெள்ளிக் கிழமை விரதம்’ பார்த்தேன். படத்தை ஈஸ்ட்மெண்ட் கலரில் தயாரித்திருந்த சின்னப்பா தேவரே அவ்வளவு வண்ணத்தில் அந்த படத்தைப் பார்த்திருக்க மாட்டார்.

ரூபவாஹினியில் சார்லிசாப்ளின், லாரல் ஹார்டி தவிர ஸ்டார்ஸ்கை அன்ட் ஹட்ச், ஸ்டார்ட்ரெக், ப்ளேக்ஸ் 7 போன்ற சீரியல்கள் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாயின. அவற்றுள் ‘டைனஸ்டி’ என்னும் ஆங்கில சீரியலுக்குத்தான் மவுசு ஜாஸ்தி. காரணம் அந்தத் தொடர் தொடங்கும் முன்பே அது வயது வந்தவர்களுக்கான தொடர் என்ற அறிவிப்பார்கள். அந்த சமயம் மட்டும் கைலாச அண்ணன் வீட்டில் வெள்ளையடிப்பு வேலை நடப்பதாகக் காரணம் சொல்லி வந்தார்.

‘அதென்னலெ பொதன்கெளமதோறும் கைலாசண்ணன் வீட்ல வெள்ளையடிக்காங்க?’

மற்ற நாட்களில் குஞ்சுவையும், அவன் தம்பியையும் கைலாச அண்ணன் கடுமையான சோதனைக்கு பின்பே வீட்டுக்குள் விடுவார். கைலாச அண்ணன் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினர்கள் போக ஏராளமான மூட்டைப் பூச்சிகளும் வாழ்ந்து வந்தன. மாதம் ஒருமுறை முடி வெட்டுகிறாரோ, இல்லையோ கைலாச அண்ணன் கண்டிப்பாக தன் வீட்டுக்கு மூட்டைப் பூச்சி மருந்து அடிப்பார். அதனால் வெளியே இருந்து தன் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்கள் மூட்டைப் பூச்சியைக் கொண்டு வந்து தன் வீட்டுக்குள் விடுவதற்காகவே வருகிறார்கள் என்று சந்தேகப் பார்வை பார்ப்பார்.
குஞ்சுவும், அவன் தம்பியும் சரியாக மாலை ஆறு ஐம்பதுக்கு கைலாச அண்ணன் வீட்டு முன்பு நின்று சட்டையையும், டிரௌசரையும் கிழற்றி உதறிக் காண்பித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டு மூன்று உதறல்களுக்குப் பின்பு கைலாச அண்ணன் குத்துமதிப்பான ஒரு திருப்தி முகபாவத்துடன் இவர்களை உள்ளே அனுமதிப்பார்.

இதிலும் குஞ்சு தன் வேலையைக் காண்பிப்பதாக அவன் தம்பி பாலாஜி ஒரு முறை சீறினான்.

‘கைலாச அண்ணன் தங்கச்சிக்கிட்ட போயி மூட்டப் பூச்சி இருக்கான்னு வேணா செக் பண்ணுங்கங்கான்’.

குஞ்சுவின் வீட்டில் டி.வி வாங்கிய பின்னும் அவன் கைலாச அண்ணன் வீட்டுக்கு டி.வி பார்க்க போன போதுதான் எங்களுக்கு சந்தேகம் வந்தது. ஆரம்பத்தில் ஏதேதோ சொல்லி மழுப்பினான்.

‘எல, எங்க வீட்ல டைனோரா. அவங்க வீட்ல சாலிடெர். பிக்சர்ல்லாம் சும்மா பளிங்கு மாதிரி தெரியுது. அதான் அங்கெ போறேன்.’

ஆனால் உண்மையான காரணம் கைலாச அண்ணனின் சகோதரிதான் என்பது அவளது திருமணத்துக்குப் பின் குஞ்சு தன் வீட்டிலேயே டி.வி பார்க்க ஆரம்பித்ததிலிருந்து தெளிவாக உலகுக்குத் தெரிந்தது. கைலாச அண்ணனின் சகோதரி எங்களை விட பன்னிரெண்டு வயது மூத்தவள் என்பதுதான் இதில் விசேஷம்.

இலங்கையின் ரூபவாஹினியை மட்டுமே நம்பி திருநெல்வேலியில் பல வீடுகளில் டி.வி வாங்கினார்கள்.  ரூபவாஹினி நல்ல மனநிலையில் இருந்தால் மட்டுமே திருநெல்வேலியில் தெரிவாள். இல்லையென்றால் டி.வி.யில் சள சளவென்ற சத்தத்துடன் தாமிரபரணி ஓடும். அந்த மாதிரி சமயங்களில் குஞ்சுவின் பெரியப்பா சோமப்பா மேல்துண்டை தலப்பா கட்டிக் கொண்டு தட்டட்டிக்கு ஏறுவார். ஆன்டெணாவுடன் மல்லுக்கு நிற்பார்.  மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க மாட்டை அடக்குவது மாதிரி ஆண்டெனாவை அங்கும் இங்குமாகத் திருப்பி ‘இப்ப தெரியுதால, இப்ப தெரியுதா, இப்ப,. . . .ப’.

உடம்பெல்லாம் வேர்த்து, களைத்து கீழே வந்து சோமப்பா உட்காரும் போது நிகழ்ச்சி முடிந்திருக்கும். சிங்களச் செய்திகள் வாசிக்கும் இளம்பெண் ‘ஆய்புவன்’ என்று வணங்கிச் சிரித்தபடி செய்தி வாசிக்க ஆரம்பிப்பாள்.

‘இப்ப என்னட்டி சிரிப்புமயிரு வேண்டிக் கெடக்கு?’

களைப்பின் கோபத்தில் பெயர் தெரியா பெண்ணிடம் நேருக்கு நேர் சீறுவார்.
ரூபவாஹினி செய்திகள் துவங்கு முன் செய்தி வாசிப்பவர்கள், தமிழ், சிங்களம் இரண்டிலும், இயல்பாக வணக்கம் சொல்லித் துவங்கி எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செய்திகளில் மட்டும் கவனம் கொள்ளச் செய்வர். ஓரளவு இந்த தன்மையை இப்போது மக்கள் தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்க முடிகிறது.

டைனோரா, சாலிடெர் டி.வியைத் தொடர்ந்து என்ஃபீல்ட், மஸ்டங், பி.ப்பி.எல் என பல டி.விக்கள் அணிவகுத்து வந்தன. சில நாட்களில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் திருநெல்வேலியில் தெரிய ஆரம்பிக்க, ரூபவாஹினி மெல்ல மங்க ஆரம்பித்தது. அதன்பின் அநேகமாக எல்லா வீடுகளிலும் டி.வி வந்துவிட ஒருகட்டத்துக்குப் பிறகு முற்றிலுமாக தூர்தர்ஷனை மட்டும் நம்பி வாழ ஆரம்பித்தனர்.

மொழியே தெரியவில்லையென்றாலும் விடாது ‘புனியாத்’ ஹிந்தி சீரியலை முறைத்து பார்த்தபடி உட்கார்ந்திருப்பார் நமச்சிவாயம் பிள்ளை.

‘மருமகனே, வடநாட்டு பொம்பளேளெல்லாம் எந்த நேரமும் சப்பாத்தி போட்டுட்டே இருக்காளுவளே என்னடே? அவ்வொ புருசமாருல்லாம் அவ்வளவு கானம் திம்பானுவொ, என்னா?’

பெரும் பணக்காரரான அவர் ஸோனி டி.வி வாங்கி நடுவீட்டில் வைத்திருந்தார். தினமும் மாலை வேளையில் அவர் வீட்டிலுள்ள அனைவரும் கோயிலுக்குக் கிளம்புவது போல் முகம் கழுவி, தலை சீவி, பவுடர் போட்டு, திருநீறு பூசி தயாராவார்கள். நமச்சிவாயம் பிள்ளையின் மனைவி அவசர அவசரமாக விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு வருவார். எப்போதும் குடும்பமே ஒன்றாக உட்கார்ந்துதான் டி.வி பார்ப்பார்கள்.

‘ஆயிரந்தான் சொல்லு. ஜப்பான்காரன் ஜப்பான்காரன்தான். ஒங்க வீட்லயுந்தான் மெட்ராஸ்ல இருந்து டி.வி வாங்கி கொண்டாந்து வச்சிருக்கியெ. என்னவெ பிரயோஜனம். மைரு மாரில்லா இருக்கு. அதான் நான் பாத்தெம்லா. நம்ம வீட்டு டி.விய பாரும். சும்மா திடும் திடும்னு ஒதறுது பாத்தேறா சவுண்டு.’

சொற்ப தமிழ் நிகழ்ச்சிகளில் ஒன்றைக் கூட விடுவதில்லை அவர், ‘வயலும் வாழ்வும்’ உட்பட. ஒரு வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதில் குடும்பமே ஸோனி டி.வி முன் உட்கார்ந்திருக்க, ‘ஒலியும்,ஒளியும்’ தந்த தைரியத்தில் அவர்கள் வீட்டுக்கு பால் ஊற்றிக் கொண்டிருந்த கோவிந்தனுடன் தைரியமாக தெருவில் இறங்கி ஓடிப் போனாள், அவரது இளைய மகனின் மனைவி.