‘எத்தைநாம் செய்தாலும்
பித்தம் தெளியாது
இத்தரை வாழ்வின் இயல்பது’.

இந்த வரிகளும் மோகன் அவர்கள் எழுதியவைதான். அவர் எழுதிய நகைச்சுவை வசனங்களை மட்டும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம். எனக்கு மோகன் என்னும் மனிதரை இழந்ததுதான் பேரிழப்பாக உள்ளது. எந்தவிதத்திலும் பிறத்தியார் மனதைப் புண்படுத்திவிடாத, எல்லோரையும் மதித்த, எப்போதும் சந்தோஷமாக இருக்க முடிந்த, உடலுக்கு வந்த மூப்பை மனதுக்குள் புகுந்து விடாமல் பார்த்துக் கொண்ட மோகனைப் போன்ற சிறுவனை இனி என் வாழ்வில் எங்காவது காண முடியுமா என்பது சந்தேகம்தான். இந்த இடத்தில் இளைஞன் என்று சொல்லாமல் நான் சிறுவன் என்று சொல்வதுதான் பொருத்தமான ஒன்று. ஏனென்றால் ஓர் இளைஞனுக்கு அந்த பருவத்தில் இயல்பாக இருக்கிற லாவகம், தன்முனைப்பு, தோரணை இவை எதையுமே மோகன் அவர்களிடம் நான் கண்டதில்லை. பள்ளி பேட்ஜ் அணிந்த வெள்ளை சட்டையும், நீல நிற டிரவுசரும், நீள சாக்ஸும், ஷூவும் அணிந்து, முதுகுப் பையுடன் அவர் காட்சியளிக்கவில்லையே தவிர, என் கண்களுக்கு அவர் எப்போதும் பள்ளிச் சிறுவனாகத்தான் தெரிந்தார். பார்த்த சினிமா, படித்த புத்தகம், ருசித்த உணவு, பழகிய மனிதர்கள் என எதைப் பற்றியும் ஒரு சிறுவனுக்குரிய பிரமிப்பு விலகாத அதீதச்சுவையுடன் தான் அவரால் விவரிக்க முடியும். வேடிக்கையாக அவரிடம் சொல்வதுண்டு. ‘நீங்க மிஸ்டர் மோகன் இல்ல ஸார். மாஸ்டர் மோகன். காமெடிக்கு மாஸ்டர்னும் சொல்லலாம். சின்னப்பையன்கற அர்த்தத்துலயும் சொல்லலாம்.’

திருநெல்வேலிக்குச் சென்று வந்த பின் ஒரு நாள் அழைத்தார்.

‘திருநவேலில நம்ம சுந்தரம் கொண்டாந்து குடுத்த தயிர்சாதத்துக்கு இன்னொரு பேர் தேவாமிர்தம். ஆகா! இன்னும் நாக்குலயும், நெஞ்சிலேயும் இனிக்கறது.’

‘திருநவேலி பாத்தேளா. அதான் சுந்தரம் அண்ணன் கொஞ்சம் அல்வாவ தயிர்சாதத்துலக் கலந்து குடுத்திருப்பாரு!’

‘ஐயோ சுகா! அபாரம். திருநவேலின்ன ஒடனே வெல்லக்கட்டியா இனிக்கறதே உங்க கமெண்ட்டு?’

இதுபோன்ற எண்ணற்ற சம்பாஷனைகளைச் சுமந்தபடிதான் மோகன் அவர்கள் மறைந்த தினத்தன்று அவரது உடலைப் பார்க்க இயலாமல் தவி(ர்)த்துக் கொண்டிருந்தேன்.

இனிப்புக்கும், அவருக்குமான உறவு அபாரமானது. இனிப்பின் மேல் அத்தனை பிரியம். ஒருமுறை கமல் அண்ணாச்சியின் இல்லத்தில் விருந்து. சைவப்பட்சிகளான நாங்கள் தனித்து விடப்பட்டோம். அவ்வப்போது கமல் அண்ணாச்சி வந்து எங்களுடன் கேலியாகப் பேசி உற்சாகப்படுத்தி விட்டு செல்வார். மௌலி அவர்களும் அன்றைய விருந்தில் உண்டு. உணவு நிறைந்த பின், ‘ஸ்வீட் ஏதும் இருக்கா சுகா?’ என்றார், மோகன். ‘தெரியலியே ஸார்’ என்றேன். ‘சரி. ஏழைக்கேத்த வெத்தல சீவலைப் போட்டுக்க வேண்டியதுதான்’ என்று தன் வெற்றிலைப் பையைத் திறந்தார். கமல் அண்ணாச்சியை அழைத்தேன். ‘இனிப்பு கேக்கறாரு. ஏதும் இருக்கா?’ என்றேன். மோகன் அவர்களும் அதை ஆமோதித்து, ‘பிரமாதமா சாப்பாடு போட்டேள். டெஸெர்ட் கிஸர்ட் ஏதாவது . . .’ என்றார். ‘ஒரு நிமிஷம்’ என்று சொல்லி விட்டுச் சென்ற கமல் அண்ணாச்சி ஒரு கோப்பை நிறைய கரும் சாந்து போன்ற வஸ்துவைக் குழைத்து எடுத்து வந்து மோகனிடம் நீட்டினார். ‘பிளாக் சாக்லேட். நம்ம தயாரிப்பு’. என்னை விட கருப்பாக இருந்த அந்த சாக்லெட்டை விட்டு சில அடிகள் நகர்ந்து பாதுகாப்பான பகுதியில் நான் நின்று கொண்டேன். சுவைப்பதற்கு முன்பே ‘அடடே அற்புதம் ஸார்’ என்றபடி மோகன் ஸ்பூனால் அந்தக் கோப்பையிலிருப்பதை வழித்து வாயில் போடவும் அவரது முகம் அஷ்டகோணலாக மாறியது. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் இயலாமல் தவித்தபடி, ஒரு பெரும் போராட்டத்துக்குப் பின் அதை தொண்டைக்குள் இறக்கி விட்டு, ‘என்ன ஸார் இப்படி பண்ணிட்டேள்? வீட்டுக்குக் கூப்பிட்டு நன்னா விதம் விதமா வாய்க்கு ருசியா சாப்பாடு போட்டு, கடைசில அதையெல்லாம் மறக்கடிக்கிறா மாதிரி இப்படி ஒரு உலகக்கசப்பைக் குடுத்துட்டேளே!’ மோகனின் முகபாவத்தையும், கசப்பு தந்த விரக்தி சொற்களையும் கேட்டு அனைவரும் சிரித்து உருள, பொங்கி வந்த சிரிப்பை சமாளிக்க முடியாமல் கௌதமி வயிற்றைப் பிடித்தபடி தரையில் உட்கார்ந்து விட்டார். இந்த சம்பவம் நீண்ட நாட்களுக்குப் பேசிப் பேசி சிரிக்கப்பட்டது. மோகன் அவர்கள் என்னிடம் ஃபோனில் கேட்பார்.

‘சுகா! இன்னிக்குத்தானே கமல் ஸார் வீட்டு விருந்து? நீங்க வரேள்தானே? நாம எத்தனை மணிக்கு வந்தா சரியா இருக்கும்?’

‘ஆமா ஸார். கொஞ்சம் சீக்கிரமாவே வந்திருங்க. டார்க் சாக்லேட்டோட வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காராம்’.

‘எனக்கு இன்னிக்கு டிராமா இருக்கே.’

‘ஸார்! சும்மா சொல்லாதீங்க. உங்களுக்கு இன்னிக்கு டிராமா இல்லேன்னு தெரியும்’.

‘எங்க டிராமா இல்ல ஸார். ‘ரவா கேசரி’ன்னு வேற ஒரு ட்ரூப்போட டிராமா பாக்கப் போறேன். நீங்க டார்க் சாக்லேட்ட எஞ்சாய் பண்ணுங்கோ.’

புகழ் பெற்ற அவருடைய நகைச்சுவை வசனங்களை அவர் யோசித்து எழுதுவதில்லை என்பது அவருடன் பழகியவர்கள் அறிவார்கள். அந்த சமயத்தில் அவருக்குத் தோன்றுவதுதான். மண்டையை உடைத்துக் கொண்டு அவர் மெனக்கிடுவதே இல்லை. அதற்கான தேவையும் அவரது கற்பனாசக்திக்கு இருந்ததில்லை. கடகடவென சொல்லுவார். மளமளவென எழுதித் தள்ளிவிடுவார். அவரது மனதின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவரது வலது கை திணறும். அதனால் அவரது எழுத்து அவருக்கே சமயங்களில் புரியாமல் போய் விடும். எழுதியதை வாசித்துக் கொண்டே வருபவர், ஒரு இடத்தில் நிறுத்தி கண்களைச் சுருக்கி, ‘என்ன எழவுடா இது?’ என்பார். ‘சதிலீலாவதி’ சமயத்தில் அவரது எழுத்தைப் படிக்க பலமுறை நான் உதவியிருக்கிறேன். எனக்கு அப்போது அவரது மன எழுத்து நன்றாகப் பிடிபட்டிருந்ததனால் அவரது கிறுக்கலான கையெழுத்தைப் படித்துத் தெரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கவில்லை.

என்னைப் போலவே மோகனும் தீவிரமான ஜெயகாந்தனின் வாசகர். அநேகமாக எங்களின் எல்லா உரையாடல்களிலும் ஜேகே இடம் பெற்று விடுவார். ஏதாவது ஒரு கதையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை, வரியைச் சொல்வேன்.

‘பாரீஸுக்குப் போ’ முன்னுரைல ஜே கே இப்படி சொல்றார் ஸார். “இலக்கியத்தில் வெற்றி என்பது உங்களது புகழ்ச்சி அல்ல; எனது அகம்பாவமும் அல்ல. உங்களை வெல்வது ஒரு வெற்றியே அல்ல . . . சில சமயங்களில் அதுவே ஒரு வீழ்ச்சி”.

‘ஃபோனை வைங்கோ ஸார்’ என்பார். அதீத உணர்ச்சியின் வெளிப்பாடுதான் அது. மறுநாள் ஃபோன் பண்ணி அந்த வரிகளைத் திரும்பவும் சொல்லச் சொல்லிக் கேட்பார். ‘ஜேகே கூடல்லாம் நான் பேசியிருக்கேனே ஸார்! வேறென்ன ஸார் வேணும் எனக்கு?’ என்பார்.

மௌலி அவர்களின் தகப்பனார் பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் நினைவுநாள் நிகழ்ச்சி ஒன்றை அவரது குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பேசுவதற்காக பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் சென்ற போது என்னையும் உடன் அழைத்துச் சென்றார். பேராசிரியர் மேடைக்குச் சென்று விட, மௌலி அவர்கள் என்னை கை பிடித்து அழைத்துச் சென்று முன் வரிசையில் அமர வைத்தார். அருகில் பெரியவர் நீலு அமர்ந்திருந்தார். வழக்கமான சபைக் கூச்சத்துடன் அங்கிங்குப் பார்க்காமல் அமர்ந்திருக்கும் போது சற்று நேரத்தில் ‘ஐயையோ சுகாவா? இப்பதான் பாக்கறேன்.’ என்றொரு குரல். நீலுவுக்கு அடுத்த இருக்கையில் மோகன் அமர்ந்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். நீலு அவர்களிடம், ‘ஸார். நான் சொன்னேனே சுகா. இவர்தான்’ என்று அறிமுகம் செய்தார். பரஸ்பர வணக்கம் சொல்லிக் கொண்டபின் மேற்கொண்டு சகஜமாக அங்கு அமர்ந்திருக்க முடியாத சூழலை உருவாக்கும் விதமாக தொடர்ந்து எனது எழுத்துகளைப் பற்றி நீலுவிடம் சொல்லிக் கொண்டே இருந்தார் மோகன். அத்தனையும் அதீதமான புகழ்ச்சி. எனக்கு இருப்பு கொள்ளவில்லை.

‘ஸார். இனிமேல் நீங்க இருக்கிற இடத்துக்கு நான் வர்றதா இல்ல’ என்றேன்.

‘என் இடத்துக்கு நீங்க வந்துடலாம். உங்க இடத்துக்குத்தான் என்னாலல்லாம் வரவே முடியாது. அதுவும் உங்க லேட்டஸ்ட் புஸ்தகம் உபசாரம் இருக்கே. நீங்க வெறும் சுகா இல்ல. பரமசுகா’. மேலும் அடித்தார்.

‘அட போங்க ஸார்’ என்று விட்டு விட்டேன். இது ஏதோ தன்னடக்கத்தினால் சொல்வதல்ல. இளையோரை வஞ்சனையில்லாமல் பாராட்டும் மோகன் அவர்களின் நன்னடத்தையைக் குறிப்பதற்காக இங்கே இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஓவியர் கேஷவ் தினமும் வரையும் கிருஷ்ணரின் ஓவியங்களுக்கு வெண்பா எழுதுவது மோகனின் அன்றாடப் பணிகளில் ஒன்றாக இருந்தது. எழுதி அதை சில குறிப்பிட்ட நண்பர்களுக்கு அனுப்பி வைப்பார்.

“தாய்க்குப் பணிந்தன்று
தாம்பில் நடந்தரக்கன்
சாய்க்கக் கடைந்தவன்
சாகஸன் – ஆய்க்குல
மாதாவைக் கட்டினன் மாயக்
கயிற்றினால்
கோதை அறி(ரி)வாள்(ல்)
குறும்பு”.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன் என்னை ஃபோனில் அழைத்தார்.

‘சுகா. வெண்பா எழுதறது துன்பத்தைத் தரும். கூடாதுன்னு கண்ணதாசன் சொல்லிருக்காராமே! அப்படியா?

‘தெரியலியே ஸார்.’

‘பஞ்சு அருணாசலம் ஸார் சொல்றாரே. மேடைல இளையராஜா ஸார், நீங்கல்லாம் இருக்கறேளே. இப்பத்தான் யூ டியூப்ல பாத்தேன்’.

‘ஓ! அதுவா ஸார்? ஆமா ஆமா. ஆனா அதைப் பத்தி எனக்கு ஒரு ஐடியாவும் இல்ல ஸார்’.

மேற்படி விஷயத்தைப் பற்றி பலரிடம் மோகன் பேசி விசாரித்ததாக பின்னர் அறிந்தேன். அவரது திடீர் மறைவுச் செய்தி வந்தபோது மேற்சொன்ன இந்த உரையாடலும், அந்த சமயத்தில் ஒலித்த அவரது குரலும் மீண்டும் மீண்டும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. என் கைபேசியை எடுத்து அவர் எனக்கனுப்பிய குறுஞ்செய்திகள் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் கடைசியாக அவர் எனக்கனுப்பிய பாடல் இது.

‘முன்னோர்கள் மட்டும்
மரணமுறாதிருந்தால்
என்னாகும் உன்னிருப்பு
எண்ணிப்பார் – உன்னிப்பாய்
ஆராய்ந்தால் சாவ(து)
அகந்தையே ஆன்மாவல்ல
கூறாமல் சாவாய்
குளிர்ந்து’.

2 thoughts on “மாஸ்டர் மோகன் . . .

  1. திரு. கிரேஸி மோகன் அவர்களின் சிறந்த நகைச்சுவை பற்றி மட்டுமே அறிந்த என் போன்றோர்க்கு தங்களது இனிய அன்பு புகழஞ்சலி அவரை அஷ்டாவதானி என்பதை நயம்பட உரைகிறத. நன்றிகள் பல.

  2. பல புதிய தகவல்களுடன் அவசியமான அழுத்தமான அஞ்சலி இது…

Comments are closed.