துரத்தும் பாடல் . . .

திரையிசை குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். ‘கர்ணன்’ திரைப்படத்தின் இசை குறித்து ‘கர்ணனுக்கு வழங்கியவர்கள்‘, ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா திரைப்படத்தின் இசையை விதந்தோதும் ‘ஹிஸ் ஹைனஸ் ரவீந்திரன்‘, ஜென்ஸியின் குரலை வர்ணிக்கும் ‘செண்பகத்தக்காவின் குரல்‘, ஸ்வர்ணலதாவின் மறைவு தந்த துக்கத்தில் எழுதப்பட்ட ‘சின்னஞ்சிறு கிளியே‘, மறக்கவே முடியாத மலேஷியா வாசுதேவன் பற்றிய ‘அண்ணன்களின் பாடகன்‘ , இப்படி இன்னும் பல. இவை எல்லாமே பலரது அபிமானத்தைப் பெற்ற கட்டுரைகள். ஆனால் நான் எழுதிய இசைக் கட்டுரைகளிலேயே ஒரே ஒரு பாடல் குறித்து எழுதிய ‘தேவனின் கோயில்’ கட்டுரை குறித்த எதிர்வினைகள் இன்னும் எனக்கு வந்து கொண்டேயிருக்கின்றன. ஓரிரு மாத இடைவெளியில் யாரோ ஒருவர் எங்கிருந்தோ மின்னஞ்சலிலோ, அலைபேசியிலோ, குறுஞ்செய்தியிலோ கண்ணீர் உகுத்து, என்னையும் கலங்க வைப்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்மணி ‘தேவனின் கோயில்’ கட்டுரையைப் படித்து விட்டு தொலைபேசியில் பேசத் துவங்கியவர், அடக்க இயலா அழுகையுடன் இணைப்பைத் துண்டித்து விட்டார். சில நிமிடங்களில் இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தது: ‘இந்தக் கட்டுரையை நான் படித்திருக்கக் கூடாது. படித்த பின் இந்தப் பாடலை நான் கேட்டிருக்கக் கூடாது. உங்களை, உங்கள் பெயரை நான் அறிந்திருக்கக் கூடாது.’ ஒரு திரையிசைப் பாடலுக்கு இத்தனை சக்தி உள்ளதா? அது குறித்து எழுதப்பட்ட வார்த்தைகள் ஏன் படித்தவரின் மனதை பாதித்தன? இந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. வழக்கமாக என் மனதை பாதிக்கும் எந்த ஒரு பாடலையும் கேட்காமல் கடந்து விடுவதே வழக்கம். ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் ‘அழகிய கண்ணே’ அதற்கு தலையாய உதாரணம். அது போக ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் ‘கற்பூர பொம்மை ஒன்று’, ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் ‘குயில் பாட்டு’, ‘அச்சாணி’ திரைப்படத்தின் ‘மாதா உன் கோயிலில்’ போன்ற பாடல்களுடன் ‘மூன்றாம் பிறை’யின் ‘கண்ணே கலைமானே’ பாடலையும் எல்லா சமயத்திலும் கேட்கும் திராணி இருந்ததே இல்லை. இது போன்ற பட்டியல் எல்லோருக்கும் இருக்கக் கூடும். நண்பன் குஞ்சு ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல் துவங்கும் போதே, ‘பாட்டை மாத்தித் தொல’ என்பான். அது அவனுக்குப் பிடிக்காத பாடலல்ல. அது தரும் தொந்தரவிலிருந்துத் தப்பிக்கவே தவிர்ப்பான்.

‘தேவனின் கோயில்’ பாடலின் இசை, பாடல் வரிகள், சித்ராவின் பாடும் முறை, மற்றும் வாத்தியக் கருவிகளின் சேர்க்கை குறித்து விலாவாரியாக எழுதியாயிற்று. இனி அந்தப் பாடல் குறித்து வியக்கவோ, சிலாகிக்கவோ என்னிடம் ஒரு சொல் கூட மிச்சமில்லை. கிட்டத்தட்ட அந்தப் பாடலை மறந்து போகும் காலம் வரும் போது சொல்லி வைத்தாற்போல் யாராவது அந்தப் பாடலைப் பற்றி என்னிடம் பேசுவார்கள். திரைக்கதை குறித்த அறிவும், ஆர்வமும் கொண்ட திரைக்கதையாசிரியரும், திரைக்கதை மற்றும் திரையிசை குறித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறவருமான சகோதரர் ‘கருந்தேள்’ ராஜேஷும், நானும் பரஸ்பரம் எழுத்து மூலமாக அறிமுகம் ஆனவர்கள். அவர் எழுதும் விதத்தைப் பார்த்த போது நிச்சயமாக இவர் ஓர் அறிவுஜீவிதான் என்ற அச்சம் எனக்கிருந்தது. நேரில் பார்த்த மாத்திரத்தில் அச்சம் ஊர்ஜிதமானது. அவரது உயரமும், திரண்ட புஜங்களும், வெறித்த பார்வையும் ‘’இந்தாளு வஸ்தாதேதான்யா’ என்று முதலில் மிரள வைத்தது. பேசத்துவங்கிய பிறகு வளர்ந்த அந்தக் ‘குழந்தைப்பையன்’ தேளல்ல, தேன் என்பது புரிந்தது. சந்தித்த சில தினங்களில் ராஜேஷிடமிருந்து ஒரு நீண்ட குறுஞ்செய்தி வந்தது. ‘தேவனின் கோயில்’ பாடல் மற்றும் கட்டுரை குறித்து கிட்டத்தட்ட புலம்பியிருந்தார். இறுதியில் இப்படி சொல்லியிருந்தார். ‘இந்தப் பாட்டு கேக்கும் போதெல்லாம் உங்க தோளில் சாய்ந்து அழணும்னு தோணுது’. என் தோளை நினைத்துக் கவலை கொண்டாலும் அவரது உணர்வைப் புரிந்து கொள்ள முடிந்தது. தன் வாழ்வோடு கலந்த பாடல் என்று தேவனின் கோயிலைச் சொல்லியிருந்தார், ராஜேஷ்.

ஜான் சுந்தர் எழுதிய ‘நகலிசைக் கலைஞன்’ புத்தக அறிமுக விழாவில் பார்வையாளனாக கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். பாடகர் ஏ.வி.ரமணன், இசை விமர்சகர் ஷாஜி, கவிஞர் மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் கலந்து கொண்ட அந்நிகழ்வில் பத்திரிக்கையாளர் கவின்மலர் ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ பாடலை அற்புதமாகப் பாடினார். இறுதியில் ஏற்புரை ஆற்ற அழைக்கப்பட்ட ஜான்சுந்தர் எடுத்த எடுப்பிலேயே தேவனின் கோயில் பாடலின் இடையிசையில் வரும் இளையராஜாவின் குரலில் ‘ஏய்ய்ய் … ஏஹேய் . . .

தந்தனா தந்தனா தந்தனா

ஆஆ . . .

தந்தானாத் தனனானத்தானன்னா

அஅஅஅ ஆ
தந்தானா தந்தானா . . . ஹேய் . . .

’ என்று பாடிவிட்டு சொன்னார். ‘எங்கோ கோயில் திருவிழா ஒலிபெருக்கியில் கேட்ட இந்தக் குரல் வழியே ஒரு கரம் நீண்டு என்னை அழைத்தது. நகலிசைக் கலைஞனாக நான் மாறியது அந்தக் கரம் நீட்டிய திசை நோக்கித்தான். ஆனால் நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது சுகா அண்ணனின் கரத்தை’. அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் ‘இந்தப் பயலுக சகவாசமே இதுக்குத்தான்பா வச்சுக்கவே கூடாது’ என்று எழுந்து ஓடி வந்துவிட்டேன். 

‘தேவனின் கோயில்’ கட்டுரையின் துவக்கத்தில் அந்தப் பாடலை மதுரையின் ஏதோ ஒரு பகுதியிலுள்ள ஆசிரியை ஒருவர் பாடிய காணொளியைப் பார்க்க நேர்ந்ததைப் பற்றி எழுதியிருப்பேன். சொல்லப் போனால் அது குறித்த கட்டுரை எழுதத் தூண்டியதே அக் காணொளிதான். கட்டுரை எழுதிய சமயத்தில் அதை எங்கோ தொலைத்து _விட்டேன். தேவனின் கோயில் கட்டுரை காணொளி இல்லாமல்தான் இணையத்தில் வெளியானது. நான்கு தினங்களுக்கு முன் தற்செயலாகக் கிடைத்த அக்காணொளி மீண்டும் மீண்டும் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வைத்தது. தன்னை மறந்து சிறு தயக்கத்துடன் பாடத்துவங்குகிற அந்த ஆசிரியை சில நொடிகளில் பாடலுக்குள் மூழ்கி வெகுதூரம் செல்கிறார்.  மனதிலிருந்துப் பாடுகிற பாசாங்கில்லாத குரல். மீண்டும் தேவனின் கோயிலுக்குள் சென்றது மனது. ஒரு வழியாக அதிலிருந்து மீண்டிருந்த நேற்றைய காலைப் பொழுதில் ஊட்டியிலிருந்து அழைத்தார் நண்பர் மணி எம்.கே. மணி. 

‘என்ன மணி? கிளைமேட் எப்படி இருக்கு?’

‘அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. கோயம்புத்தூர்லேருந்து சாம்ஸன் தான் எங்களை ஊட்டிக்குக் கார்ல கூட்டிக்கிட்டு வந்தாரு.’

‘அட! நான் கோயம்புத்தூருக்குப் போனா சாம்ஸன் தான் பிக் அப் பண்ண வருவார். நல்லா இருக்காரா?

‘ம்ம்ம். ராத்திரி பூரா விடிய விடிய இளையராஜாதான். கூடவே உங்களைப் பத்தியும்தான் பேச்சு. அந்த ஹேங்க் ஓவர் தீந்தபிறகுதான் உங்களுக்குப் பேசணும்னு வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன். இல்லேன்னா நேத்தே கூப்பீட்டிருப்பேன்.’

‘ராத்திரி பூரா அவர் பாட்டு கேக்கறதும், அதைப் பத்திப் பேசறதும் எப்பவும் நாம பண்றதுதானே, மணி?’

‘அட அது இல்லீங்க. நாங்க பேசிக்கிட்டிருந்தது, உங்களோட ‘தேவனின் கோயில்’ பத்தி’.

மேற்கொண்டு மணியிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. ‘சரி மணி. சென்னை வந்ததும் கூப்பிடுங்க’ என்று ஃபோனை வைத்து விட்டேன்.

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் ஜான் சுந்தர் ஒரு கவிதையை அனுப்பி வைத்தார். 

தேவனின் கோவில்

மூடிய நேரம்

நானென்ன கேட்பேன்

தெய்வமே

எங்கேயும் செருகலாம்

பிடுங்கலாம்

ஒண்டிக்கட்டையை

தற்கொலை

இரங்கல் கூட்டம்

விவாகரத்து

எல்லாமே

விளையாட்டு

பேரானந்தம்

அதற்கு

என்ன இப்படிப் பண்றீங்க

டாக்டர் குரலுக்கும்

அவ்வளவு குதூகலம்

உனக்கென்ன

குடும்பமா

குழந்தையா

எனும்போது மட்டும்

ஏய்ய்ய் … ஏஹேய் . . .

தந்தனா தந்தனா தந்தனா

ஆஆ . . .

தந்தானாத் தனனானத்தானன்னா

அஅஅஅ ஆ
தந்தானா தந்தானா . . . ஹேய் . . .

கடந்த சில தினங்களுக்கு முன் காலமான கவிஞர் ‘தக்கை’ பாபுவின் கடைசிக் கவிதையாம், இது. அட போங்கப்பா!


தீபாவளியும், புதுத்துணியும் . . .

எல! டபுள்கலர் சட்டத்துணி ஆரெம்கேவில காலியாயிட்டாம். நவராத்திரி முடிஞ்ச ஒடனெ வரும். சொல்லுதேன்னு செதம்பரம் சொல்லியிருக்கான்’. தீபாவளி என்றால் பதின் வயதின் இறுதிகளில் புதுத்துணி. அதற்கு முந்தைய பருவத்தில் வெடி. பட்டாசு என்ற வார்த்தை எங்கள் நண்பர்களிடையே புழக்கத்தில் இல்லை. பழைய பேட்டையிலிருந்தோ, பாட்டப்பத்திலிருந்தோகட்டசண்முகம் அண்ணன் ரகசியமாக வாங்கி வரும்கல் வெடிக்காகக் காத்துக் கிடப்போம். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தேகட்டசண்முகம் அண்ணனிடம் கெஞ்ச ஆரம்பிப்போம். திருநவேலி பகுதிகளில் குட்டையாக இருப்பவர்களை கட்டையாக இருப்பவர்கள் என்று சொல்வது வழக்கம். அந்த வகையில் குட்டையாக இருக்கும் சண்முக அண்ணன், ‘கட்டைசண்முகம் என்றழைக்கப்பட்டு, பின் பேச்சு வழக்கில்கட்டசண்முகம் ஆனான். எவ்வளவு சிறிய நாற்காலியில் உட்கார்ந்தாலும், ‘கட்டசண்முகம் அண்ணனின் கால்கள் தரையைத் தொடாமல் ஆடிக் கொண்டிருக்கும்.

ச்சம்மொண்ணே! இந்த மட்டம் ஆளுக்கு ஒரு அம்பது கல் வெடியாவது வாங்கிக் குடுண்ணே!’

அம்பதா? என்ன வெளாடுதேளா? போலீஸ்காரன் கண்ணுல படாம இதைக் கொண்டாறதுக்குள்ள நான் படுத பாடு எனக்குத்தான் தெரியும்! ஆளுக்கு பத்துத்தான். அதுக்கு மேல கெடயாது!’.

கட்டசண்முகண்ணன் சொல்வது ஓரளவு உண்மைதான். ‘கல்வெடி என்பதுமினிகையெறி குண்டு. சின்னச் சின்ன உருண்டையாக பச்சை சணல் சுற்றி இருக்கும். எடுத்து வரும் போதே கவனமாக இருக்க வேண்டும். பொதுவாககல்வெடியை பெரிய கல்சுவரில், தார் ரோட்டில், சிமிண்டு தரையில் ஓங்கி எறிந்து வெடிக்கச் செய்ய வேண்டும். ஊதுபத்தியைப் பொருத்தி, பயந்து பயந்து, ‘எல பத்திட்டுஎன்கிற சத்தம் கேட்கவும் ஓட வேண்டிய அவசியம் இல்லாத வெடி. இன்னும் சொல்லப் போனால் நம் தமிழ் சினிமாவின் நிரந்தர ஹீரோவாகிவிட்ட ரௌடித்தனமான ஆண்மையை பறைசாற்றும் வெறித்தனமான வெடி. சில சமயம் கைகளில் ஏந்தி வரும் போது ஒன்றிரண்டுகல்வெடிகள் கை தவறி கீழே விழுந்து வெடித்துஆண்மைக்கு சேதம் விளைவிப்படுண்டு. நாளடைவில்கல்வெடிகள் காணாமல் போயின. எங்களுக்கும் வெடி மீதிருந்த ஆசை மெல்ல விலகி, துணி மீது போனது. தீபாவளிக்கு புதுத்துணி போடுவது என்பது, நமக்காக அல்ல. பெண்பிள்ளைகள் பார்ப்பதற்காக என்னும் உண்மை யார் சொல்லாமலும் எங்களுக்கே விளங்கியது.

பிராமணர்கள் வசிக்கும் தெப்பக்குளத் தெருவுக்கு தீபாவளியன்று மாலை வேளைகளில் செல்வதுதான் சிறப்பானது என்பதை குஞ்சு சொல்வான்.

எல! தெப்பக்குளத்தெரு பிள்ளேள் தரைச் சக்கரமும், புஸ்வாணமும் இருட்டுனதுக்கப்புறம்தான்

வைக்கும். அப்பம் நாம சுத்திக்கிட்டிருக்கிற தரைச்சக்கரத்துக்குள்ள நடந்து போனாத்தான் எல்லா பிள்ளேளும் நம்மளப் பாக்கும். ஈச்சமரம் வைக்கும் போது எதுத்தாப்ல நின்னுக்கிட்டோம்ன ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தரப் பாக்கலாம்.’

கண்கள் கூச ஈச்சமரத்தின் பொறிபறக்கும் ஜ்வாலைக்குள் எதிர்ப்புறம் பார்க்கும் கலை எங்களுக்கு கைவந்ததே இல்லை. ஆனால் குஞ்சுவின் எக்ஸ்ரே கண்கள் துல்லியமாக எதிர்த்தரப்பின் மனசு வரைக்கும் ஊடுருவிச் சென்று பார்த்து விடும்.

என் டிரெஸ் நல்லா இருக்குன்னு கண்ணைக் காட்டிச் சொன்னா, கவனிச்சியா?’ என்பான்.

ராதாவையா சொல்லுதே! அவதான் அடுத்த வெடியை எடுக்க வீட்டுக்குள்ள போயிட்டாளே!’

கோட்டிக்காரப்பயலெ! அவ அம்மையைச் சொன்னென். என்னத்தப் பாத்தே?’

 

எங்களைப் பொருத்தவரைக்கும் தீபாவளி கொண்டாட்டம் என்பது தீபாவளி அன்றைக்கு அல்ல. சொல்லப் போனால் தீபாவளி அன்று அடங்கி விடுவோம். தீபாவளிக்கு முந்தைய ஒரு மாதகாலம்தான் எங்களுக்கு தீபாவளி. தீபாவளிக்கு துணி எடுக்கப் போவதாகச் சொல்லி விட்டு தினமும் ஆரெம்கேவி தொடங்கி பின்னால் வந்த போத்தீஸ் உட்பட சின்னச் சின்னக் கடைகள் வரைக்கும் துணியெடுக்க வரும் பெண் பிள்ளைகள் பின்னால் செல்வதுண்டு.

இன்னைக்கு கௌசல்யா தீபாவளிக்கு துணியெடுக்கப் போறாளாம். கொலு பாக்க வந்திருந்த அவங்கம்மா எங்கம்மாக்கிட்ட சொன்னா. வா கெளம்புஎன்பான் குஞ்சு.

எல! அந்தப் பிள்ளை இவனையோ, நம்மளையோ திரும்பிக் கூட பாக்காது. முன்னாடி போயி வெக்கமே இல்லாம இவன் நின்னாலும் அது மொறச்சுத்தான் பாக்கும். இந்த அவமானத்துக்கு நம்மளும் என்னத்துக்குப் போகணுங்கேன்?’ ராமசுப்பிரமணியனின் புலம்பல் வழக்கம் போல வீணாகத்தான் போகும். அதற்கும் மறுநாள் சந்திராவுக்குத் துணியெடுக்க அவள் பின்னால் செல்வோம்.

இவை எல்லாமே மனதிலிருந்து கலைந்து போய் விட்டன. ஆனாலும் தீபாவளி என்றால் இப்போதும் நினைவுக்கு வருவது தீபாவளி பலகாரம் சுடும் எண்ணெயும், பாகும் கலந்து வரும் வாசனைதான். தீபாவளிக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பாகவே எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் ஏற்றும் வீடுகள் உண்டு. இதற்காகவே வெளியூரிலிருந்து சில விதவை ஆச்சிகளும், வாழ்வரசி அத்தை மற்றும் சித்திகளும் வருவார்கள்.

ஏளா! தேன்குளலுக்கு மாவு பெசய வேண்டாம். கருங்குளத்துக்காரி வந்துரட்டும். அவ கைப்பக்குவம் நம்ம யாருக்கும் வராது.’

தேன்குழலுக்கு கருங்குளத்து லோகு பெரியம்மை, சுசியத்துக்கு குலசேகரப்பட்டணம் சோமு ஆச்சி, ஆம வடையென்றால் அது நிச்சயம் கொங்கராயக்குறிச்சி விஜயா சித்தி, அதிரசத்தின் பக்குவத்துக்கு இலஞ்சி சாமியார் ஆச்சி. இப்படி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பண்டத்துக்கு ஸ்பெஷலிஸ்ட். பட்சணம் என்போர் பிராமணர். பலகாரம் என்பது பொதுச் சொல். பண்டம் என்பதே எங்கள் புழக்கத்தில் உள்ள சொல். ‘பண்டம் திங்காம வெறும் காப்பியை மனுசன் குடிப்பானாவே?’ என்பார்கள்.

தீபாவளியின் முதல் நாள் இரவு தூங்கும் குடும்பப் பெண்களை நான் பார்த்ததில்லை. அதிகாலையிலேயே குளித்து விளக்கேற்றி, காலை சமையல் முடித்து, மதிய சமையலுக்கும் தயார் செய்து கொண்டிருப்பார்கள். அப்போதுதான் வீட்டிலுள்ள ஆண்கள் ஒவ்வொருவராக அவரரவர் சௌகரியத்துக்கு எழுந்து வந்து காபி கேட்பார்கள். அதற்கும் சளைக்காமல் வேலையோடு வேலையாக காபி போட்டு கொடுப்பார்கள். ‘சீக்கிரம் குளிச்சுட்டு வந்துட்டியேன்னா பூசைய முடிச்சுட்டு பிள்ளேள சாப்பிடச் சொல்லிரலாம். புது துணி மஞ்ச தடவி ரெடியா இருக்கு. சின்னவன் நாலு மணிக்கே குளிச்சுட்டு ஏக்கமா பாத்துக்கிட்டே இருக்கான். வெடிக்கட்டையும் பிரிக்கல.’

பூஜை முடிந்து, அம்மா அப்பாவின் கையால் புது துணியை வாங்கி, பின் அணிந்து வந்து, பெரியவர்கள் கால்களில் விழுந்து வணங்கி, திருநீறு பூசிக் கொண்ட அடுத்த நிமிடம் சாப்பிடாமல் கொள்ளாமல் வெடிக் கட்டை நோக்கிப் பாய்வார்கள் சிறுவர்கள். அதற்குள் ஒருவன் தயாராக ஊதுபத்தியைப் பற்ற வைத்திருப்பான்.

மொதல்ல லெச்சுமி வெடிதான் வெடிக்கணும்ல. ஒரு பைசா வெடி, குருவி அவுட்டுல்லாம் வெடிச்சு முடிச்சிருங்க. சின்னப் பிள்ளேளுக்கு பாம்பு மாத்திரையை எடுத்துக் குடுத்துருங்க. டுப்பாக்கிக்கு ரோல் கேப் அப்பா வந்து மாட்டித் தாரேன், என்னா? மத்தாப்பு எல்லாத்தையும் காலி பண்ணிராதியடே. ராத்திரிக்கு இருக்கட்டும். வெங்காச்சு மாமா சாப்பிட்டுட்டு வார வரைக்கும் அணுகுண்டு டப்பாவை யாரும் தொடப்பிடாது’.

வெடிச்சத்தம் ஓரளவு குறைந்து, தெரு நாய்களும், வளர்ப்பு நாய்களும் மெல்ல வெளியே எட்டிப்பார்க்கும் நண்பகல் பொழுதில் அம்மாக்கள் தாங்கள் செய்த பலகாரங்களை, பக்கத்து வீடுகளுக்குக் கொண்டு கொடுக்க தத்தம் வீட்டுப் பிள்ளைகளைப் பணிப்பர். அப்படி ஒரு தீபாவளி நண்பகல் பொழுதில் கந்தையா மாமா வீட்டுக்கு அம்மா கொடுத்த பலகாரப் பாத்திரத்துடன் சென்றேன். அவர்கள் வளவிலேயே குடியிருக்கும் நமசு அண்ணன் வீட்டைத் தாண்டிச் செல்லும் போது வாசலில் நின்று வானம் பார்த்து கண்கள் சுருங்க சூரியனை வணங்கிக் கொண்டிருந்தான் நமசு அண்ணன். கந்த விலாஸ் கடைக்கு முன் தள்ளு வண்டியில் செருப்புக் கடை வைத்திருக்கும் நமசு அண்ணனிடம் முன்னே பின்னே ஒரு வார்த்தை கூட நான் பேசியதில்லை. தள்ளு வண்டியில் செருப்புகள் விற்கும் நமசு அண்ணனின் செருப்பில்லாத கால்களை பலமுறை வெறித்துப் பார்த்ததுண்டு. வீட்டுக்குள்ளிருந்து ஏதோ சொல்லும் மனைவியிடம், ‘ஊருக்காகல்லா புதுசு போட வேண்டியிருக்கு. கசங்கியிருந்தா என்ன? வெளுத்திருந்தாத்தான் நமக்கென்ன? சும்மா புளுபுளுங்காதே?’ என்று முணுமுணுத்தபடி பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

கந்தையா மாமா வீட்டுக்குள் பலகாரப் பாத்திரத்துடன் நான் நுழையும் போது, அத்தை ஏனம் கழுவிக் கொண்டிருந்தாள். ‘எய்யா வா! வா! அம்மை குடுத்து விட்டாளாக்கும்!’ ஈரக்கைகளைப் புடவையில் துடைத்துக் கொண்டு பாத்திரத்தை வாங்கிக் கொண்டாள். ‘இட்லி சாப்பிடுதியா?’ என்றபடி மர ஸ்டூலை எடுத்துப் போட்டு, ‘இரி. இந்தா வந்திருதேன்என்றபடி அடுக்களைக்குள் போனாள். அவள் வீட்டு பலகாரங்களை எங்கள் பாத்திரத்தில் வைத்துக் கொடுக்க போகிறாள் என்பது புரிந்து அமைதியாக உட்கார்ந்திருந்தேன். ஆனாலும் அத்தை எனது தீபாவளி சட்டையைப் பார்த்து ஒன்றுமே சொல்லவில்லையே என்ற வருத்தம் இருந்தது. வழக்கமாக அத்தை அப்படி இல்லை. நிச்சயம் நல்ல வார்த்தை சொல்லக் கூடியவள்தான்.

அத்தை வந்து பாத்திரத்தைக் கொடுக்கவும், நமசு அண்ணன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. ‘நமசு . . . வா! அவள எங்கெ காங்கல?’ என்றாள், அத்தை. நமசு அண்ணனின் சட்டையை இப்போது நன்றாகப் பார்க்க முடிந்தது. ராத்திரியோடு ராத்திரியாக தீபாவளிக்கு புதுசு போட வேண்டுமே என்பதற்காக எங்கோ மலிவு விலையில் வாங்கியிருக்கிறான் போல. அவனது தள்ளு வண்டி செருப்புக் கடை போலவே ஏதாவது தள்ளு வண்டி துணிக்கடையில் வாங்கியிருக்கலாம். புதுத் துணி மாதிரியே தெரியவில்லை. கசங்கிய முரட்டுத் துணி. பல வண்ணங்களை இறைத்து  அகல அகலமான கட்டங்கள் போட்டிருந்த சட்டை. இடுப்பில் நாலு முழ கைத்தறி வேட்டி. ‘திருநாறு பூசி விடு அத்தஎன்றபடி அத்தையின் கால்களில் விழுந்து வணங்கினான். சாமி படத்துக்கு முன் இருந்ததிருநாத்து மரவையை எடுத்து, திருநீற்றை இரண்டு விரல்களால் குவித்துத் தொட்டு நமசு அண்ணனின் நெற்றியில் பூசியபடி, ‘திருநோலி ஊர்லயே இந்த வருசம் தீவாளிக்கு நமசு சட்டதான் ரொம்ப நல்லா இருக்கு. மகராசனா இரிஎன்றாள் கந்தையா மாமா விட்டு அத்தை.

நன்றி: காமதேனு

வாசக உறவுகள் . . .

சிறுகதைகளும், நாவல்களும், கட்டுரைகளும், கவிதைகளும் எழுதிக் குவித்த எத்தனையோ எழுத்தாளர்களுக்குக் கிடைத்த வாசகவட்டம் பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால் நான்கு கட்டுரைத் தொகுப்பும், அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சிறுகதைகளும் எழுதியிருக்கும் எனக்கு அமைந்த ‘பிரபலங்களும், சாமானியர்களுமான வாசக வட்டம்’ ஆச்சரியமானது. துவக்கத்தில் இதை நம்பவும் முடியாமல், புரிந்து கொள்ளவும் இயலாமல் திணறியதுண்டு. இப்போது அவற்றை உணர்ந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது.

நேரில் பார்த்து பேசிய, பாராட்டிய முதல் வாசகர் என்று மணிகண்டனைத்தான் சொல்ல வேண்டும். திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் புத்தக விற்பனைக்கு வந்திருந்த மணிகண்டன், புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த என்னிடம் வந்து, ‘நீங்க சுகாதானே? உங்க கட்டுரை பிரமாதம்!’ என்றார். அப்போது ‘வார்த்தை’ சிற்றிதழில் என்னுடைய கட்டுரைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தன. மணிகண்டன் இத்தனைக்கும் சாந்தமான பி.பி.எஸ் குரலில்தான் கேட்டார். ஆனால் என் காதுகளில் சீர்காழியின் குரலில் கணீரென ஒலித்து, பயந்து பின்வாங்க வைத்துவிட்டது. குலுக்கிய கையை உதறிவிட்டு, ‘ஆமாங்க. நன்றி. வரட்டுமா?’ என்று அந்த இடத்தைவிட்டு ஓடி விட்டேன். மணிகண்டனுக்கு என்னுடைய செயல் ஆச்சரியமளித்திருக்க வேண்டும். அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர் என்னைப் பார்த்து சிரித்த நமட்டுச் சிரிப்பு அதை உணர்த்தியது. மணிகண்டனின் வடிவமைப்பில்தான் என்னுடைய முதல் புத்தகமான ‘தாயார் சன்னதி’ உருவாகப் போகிறது என்பது அப்போது எனக்குத் தெரியாது. தனது ‘நூல்வனம்’ பதிப்பகத்தின் மூலம் அற்புதமான சிறார் புத்தகங்களை வெளியிட்டு வரும் மணிகண்டனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

        மணிகண்டன்

‘வார்த்தை’ மற்றும் ‘ரசனை’ சிற்றிதழ்களின் மூலம் சிறு வட்டத்துக்கு மட்டும் அறிமுகமாகியிருந்த என்னை சட்டென்று பரந்த வாசகர் வட்டத்துக்குள் இட்டுச் சென்றது, ஆனந்த விகடனில் நான் எழுதி வந்த தொடரான ‘மூங்கில் மூச்சு’. எண்ணிலடங்காத தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்களுக்குக்கிடையே புத்தகத் திருவிழா உட்பட பல பொது இடங்களில் வாசகர்கள் வந்து பேசத் துவங்கினர். ஆனால் நூற்றில் ஓரிருவர்தான் ‘மூங்கில் மூச்சு’ என்று சரியாகச் சொன்னார்கள்.

‘ஸார்! விகடன்ல நீங்க எளுதின மூங்கில் காத்து அட்டகாசம்!’

‘மூங்கில் குருத்துன்னு பொருத்தமா எப்படி ஸார் தலைப்பு வச்சீங்க?’

‘நீங்க முந்தானை முடிச்சு எளுதின சகாதானே?’

கிரேஸி மோகன் போன்ற பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் ஒரு புகழ் பெற்ற சாதனையாளர் என்பதால் அவருக்கு மட்டும் கூடுதல் சலுகை.

‘சுகா! சும்மா சொல்லக்கூடாது. உங்க தாயார் பாதம் அமர்க்களம்!’

‘ஸார்! அது தாயார் சன்னதி!’

‘இருந்துட்டுப் போறது! பிரமாதமா எழுதறேள்! விகடன்ல சீரியல் எழுதினேளே, மூச்சுக் காத்து! மறக்க முடியுமா?’

ஒரு கட்டத்துக்கு மேல் நான் விட்டுவிட்டேன். ஒவ்வொரு சந்திப்பிலும் ஒவ்வொரு புது புத்தகத் தலைப்பு சொல்லிப் பாராட்டுவார். அதன் பிரகாரம் நான் இதுவரை நானூற்றி இருபத்தொன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.

சம்பிரதாய வாசகர் கடிதங்கள் போக ஒரு சிலர் தொடர்ந்து எழுதுவார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு செய்தியைச் சுமந்து வருகிற கடிதங்கள். அப்படி தொடர்ச்சியாக கடலூரிலிருந்து ராதா மகாதேவன் என்கிற பெயரில் கடிதங்கள் வரும். நாளடைவில் தொலைபேசியில் பேசத் துவங்கினார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவரின் மனைவி. வயது எண்பதுக்கு மேல். கணவர் காலமானதற்குப் பிறகு தனியாக வசித்து வருபவர். நடுங்கும் குரலில் பேசுவார். ‘சரியாக் கேக்கலை. நான் அப்புறமா லெட்டர் போடறேன்’ என்பார். போஸ்ட் கார்ட் மற்றும் இன்லேண்ட் லெட்டரில் நுணுக்கி நுணுக்கி எழுதி அனுப்புவார். அநேகமாக அந்த சமயத்தில் நான் எங்கோ எழுதியிருக்கும் கதை குறித்தோ, கட்டுரை குறித்தோ விலாவாரியாக எழுதியிருப்பார். கூடவே ஏதேனும் ஸ்லோகங்கள், கோயில் பற்றிய விவரங்கள் எழுதி, ‘உங்களுக்கு சௌகரியப்பட்டா இதைச் சொல்லுங்கோ. கோயிலுக்கும் போயிட்டு வாங்கோ. போக முடியலேன்னாலும் ஒண்ணும் பாதகமில்லை’ என்று கடிதத்தின் ஓரத்தில் சிறு குறிப்பு இருக்கும். எப்போதோ கேட்டு அறிந்து வைத்திருந்த தகவலை மறக்காமல் நினைவூட்டி, ‘வர்ற புதன்கிழமை உங்க ஜென்ம நட்சத்திரம் வர்றது. ஞாபகத்துக்கு சொல்றேன்’ என்றொரு கடிதம் வரும். அந்த அம்மையாரை நான் இதுவரை சந்தித்ததில்லை. ஒருமுறை அவர்களை நேரில் சந்தித்த ‘வம்சி’ பதிப்பகத்தின் உரிமையாளரும், மொழிபெயர்ப்பாளருமான தோழி சைலஜாவிடம் எனக்காக ஒரு காந்திமதி அம்பாளின் புகைப்படத்தைக் கொடுத்தனுப்பினார். ‘ஒரு நாள் கடலூர் போய் அம்மாவைப் பாத்துட்டு வாங்கப்பா’ என்றார் ஷைலு. ராதாம்மாவைப் பார்க்கப் போய் எங்கே நான் காலம் சென்ற என் அம்மையை, அவளைப் பெற்ற அம்மையைப் பார்க்க நேர்ந்து விடுமோ என்கிற அச்சமோ என்னவோ! இன்னும் கடலூருக்குச் செல்லும் மனம் வாய்க்கவில்லை.

ராதாம்மா போலவே இன்னொரு தாயார். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் ஆசிரியை. திருமதி மீனாட்சி பெரியநாயகம். மீனாம்மாவுக்கு என்னுடைய எழுத்துகள் மீது அத்தனை மதிப்பு. என் மீது அவர் காட்டும் பிரியமும் அதைவிட மரியாதையும் என்னைக் கூசச் செய்வன. சத்குரு ஜக்கி வாசுதேவின் மீது பற்று கொண்ட அவர்கள், வயதில், அறிவில், அனுபவத்தில் சிறியவனான என் மீது வைத்திருக்கும் மதிப்பு, நான் பெரிதாக நினைக்காத என் எழுத்து ஏற்படுத்திக் கொடுத்தது. ஆங்கிலப் பேராசிரியையான அவர்கள் என்னிடத்தில் பேசும்போது ஆங்கிலம் கலக்காத தாய்பாஷையில்தான் பேசுவார்கள். சொந்த ஊரை விட்டு வெளியே வந்து நாற்பது வருடங்களுக்கு மேலானாலும் ‘தாயார் சன்னதி’யின் பாதிப்பில் திருநவேலி தமிழில்தான் உரையாடல்.

சுகா எளுதறதையெல்லாம் படிச்சாலே போதும். திருநவேலிக்கே டிக்கெட் எடுக்க வேண்டாம்ட்டின்னு எங்க நடுவுல உள்ள அக்கா சொல்லுதா’.

‘நானும் நீங்க ஈஷாவுக்குப் போயிட்டு வந்ததப் பத்தி எளுதுவிய எளுதுவியன்னுப் பாக்கென். எளுத மாட்டங்கேளே!’

‘மனசு சரியில்லன்னா ஒண்ணு ஈஷா. இல்லென்னா உங்க புஸ்தகம்தான்.’

‘ஆனந்த விகடனத் தவிர வேற எதுல எளுதுனாலும் கொஞ்சம் சொல்லுங்க. வாங்கிப் படிக்கணும்லா!’

குருவை மிஞ்சின சிஷ்யையாக தமிழச்சி தங்கபாண்டியனும் என்னுடைய வாசகி என்பதை அவரே வந்து சொன்ன போது அதிர்ந்துதான் போனேன். ஒரு நட்சத்திர விடுதியில் நடந்த கமல்ஹாசன் அவர்களது பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, யாருடனோ நான் பேசிக் கொண்டிருந்தேன். நான் பேசி முடிக்கும்வரை காத்திருந்து, ‘வணக்கம் சுகா! நான் உங்கள் ரசிகை’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். உடன் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் இருந்தார். பதற்றத்தில் எனக்கு என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை. பதிலுக்கு வணங்கியபடி ஏதோ ஒரு பாஷையில் நன்றி சொன்னேன். ‘மூங்கில் மூச்சு சமயத்துல உங்கக்கிட்ட ஃபோன்ல பேசியிருக்கேன்’ என்று மேலும் அவர் சொல்லவும், தெரியாத பாஷை கூட தொண்டைக்கு வர மறுத்தது. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தகப்பனார், சகோதரர் இருவரும் முன்னாள் அமைச்சர்கள் என்பதும், அவரது கணவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்பதும் நான் ஏற்கனவே அறிந்திருப்பதனால், ‘சுகா! நீங்கள் ஒரு முட்டாளூ’ என்று தமிழச்சி என்னிடத்தில் சுந்தரத் தெலுங்கில் சொல்லியிருந்தாலும் ‘மிக்க தேங்க்ஸுங்க’ என்று சொல்லியிருப்பேன். செல்லுமிடமெல்லாம் தமிழச்சி என்னுடைய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை சிலாகித்து சொல்கிறார் என்பதை பல நண்பர்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன். பல பேட்டிகளில் தனக்குப் பிடித்த புத்தகமாக தாயார் சன்னதியைச் சொல்லியிருப்பதையும் படித்திருக்கிறேன். அவருடைய நூல்கள் குறித்த கருத்தரங்குக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். கூடுமானவரை இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிர்த்து விடுவேன். கூட்டுக் குடும்பத்தின் சுப, அசுப வீடுகளில் நடக்கும் சச்சரவுகளுக்கு இணையாக நடைபெறும் இலக்கிய அசம்பாவிதங்களைப் பார்ப்பதில் நாட்டமில்லை என்பதே காரணம். அப்படியே செல்வதாக இருந்தாலும் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்து அமைதியாக வெளியேறி விடுவதுதான் வழக்கம். தமிழச்சி தங்கபாண்டியனின் நிகழ்ச்சியிலும் அப்படி கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். தனது உரையின் துவக்கத்தில், ‘இந்த அரங்கில் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் சுகா இருப்பதை நான் பெருமையாக உணர்கிறேன்’ என்று அவர் சொன்னதுதான் தாமதம். எல்லா நாற்காலிகளிலும் அமர்ந்திருந்த உடம்புகளின் தலைகள் மட்டும் பதஞ்சலி பாபா ராம்தேவின் புதியவகை யோகாப்பியாசம் போல என்னைத் திரும்பிப் பார்த்தன. அவரது அடுத்த நிகழ்ச்சி நடைபெறும்போது நான் சென்னையிலேயே வெளியூரில் இருந்தேன்.

‘ரசிகனின் கடிதம்’ என்கிற தலைப்புடன் எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. பி.எஸ்.ரங்கநாதன் என்பவர் எழுதியிருந்தார். அடைப்புக்குறிக்குள் ‘கடுகு’ என்று குறிப்பிட்டிருந்தார். பழம் பெரும் எழுத்தாளர் கடுகு. மனதாரப் பாராட்டியிருந்த மடல் அது. பெரியவர் ரா.கி. ரங்கராஜனின் எழுத்துடன் என்னுடைய எழுத்தை ஒப்பிட்டு எழுதியிருந்த கடுகு அவர்கள் தொடர்ந்து மடல்கள் எழுதினார். ஒவ்வொரு முறையும் ரசிகனின் கடிதம் என்றே எழுதுவார். மடலின் இறுதியில் பதில் போட வேண்டிய அவசியமில்லை என்று எழுதியிருப்பார். ஆனால் ஒவ்வொரு மடலுக்கும் பதில் போட்டுவிடுவேன். அவருடைய ஒவ்வொரு பாராட்டும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உதாரணத்துக்கு,

மூத்தோர் கட்டுரை பார்த்தேன். பிரமாதம் என்று சொல்லமாட்டேன். ‘ரொம்பப் பிரமாதம்என்றுதான் சொல்வேன்! பாராட்டுகள்.

 You are a painter with words!  

இது உங்களுக்கு இயற்கையாக வந்த வரப்பிரசாதம். ஆகவே நீங்கள் மார்தட்டிக் கொள்ளமுடியாது

ஆண்டவனுக்கு நன்றிதான் சொல்லவேண்டும்.

பெரியவர் ரங்கநாதன் அவருடைய சதாபிஷேகத்துக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். ‘பாட்டையா’ பாரதி மணி அவர்களுடன் சென்றிருந்தேன். ரங்கநாதன் அவர்கள் ஐயங்கார் என்றாலும் திருநவேலி பாஷையில் சொல்வதாக இருந்தால் ‘ஆச்சியும் ஐயரும்’ மணமேடையில் இருந்தார்கள். வாழ்த்தி, வணங்குவதற்காக மணமேடைக்குச் சென்ற போது, என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, அன்புடன் ஆரத்தழுவி ‘I am honoured’ என்றார். விளையாட்டாக எதையோ எப்போதோ எழுதி வரும் என்னைப் போன்ற எளியவனுக்கு இதெல்லாம் எப்பேர்ப்பட்ட அங்கீகாரம்! இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே போன்று மற்றோர் அனுபவம். ‘வலம்’ பதிப்பகம் வெளியிட்ட எனது ‘உபசாரம்’ புத்தகத்தை வெளியிட காலச்சுவடு பதிப்பகத்திலிருந்த கவிஞர் சுகுமாரனை அழைத்தேன். ‘வெளியிட’ என்றால் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போடுவது. சுகுமாரன் வெளியிட எனது முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ பதிப்பாளரான தோழி ஷைலஜா பெற்றுக் கொண்டார். புகைப்பட சம்பிரதாயம் முடிந்தவுடன் சுகுமாரன் என்னை தோளோடு தோள் சேர்த்து மெல்ல அணைத்தபடி ‘I am honoured’ என்றார்.

               எழுத்தாளர் கடுகு

நான் அதிகமாக எழுதிய சொல்வனம் இணைய பத்திரிக்கை, எனது சொந்த வலைத்தளமான வேணுவனம், மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் என்னைத் தொடர்ந்து படித்து வரும் எத்தனையோ வாசக, வாசகிகள் இருக்கிறார்கள். எனது பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்து எனது எழுத்துகளை சிலாகித்துக் கொண்டே இருக்கும் அவர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நினைத்துக் கொள்கிறேன்.

வாசகராக அறிமுகமாகி உற்ற உறவாகிப் போன பாலசுப்பிரமணியன் சக்திவேலுவைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. துவக்கத்தில் காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மின்னஞ்சல்கள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார். பிறகு என்னை நேரில் சந்திக்க வந்தார். தற்போது அமெரிக்காவில் ஐ.டி துறையில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன் என்னை முதன் முதலில் சந்திக்க வந்தபோது என் முன்னால் உட்கார மறுத்து என்னை சங்கோஜப்படுத்தினார். அவரை உட்கார வைப்பதற்கே நான் பெரும் பாடு பட வேண்டியிருந்தது. நான் இதுவரை எழுதியிருக்கும் எல்லா எழுத்துகளும் ‘தம்பி’ பாலுவுக்கு மனப்பாடம் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘தம்பி! ஜாகைங்கற வார்த்தைய நான் எங்கே பயன்படுத்தியிருக்கேன்?’

‘அண்ணே! அடைப்புக்குறிக்குள்ள ‘ஆனா’ போட்டு அசைவம்னு ஒரு கட்டுரை எளுதியிருப்பீகளே! அதுலதாண்ணே! ‘தாயார் சன்னதி’ தொகுப்புல இருக்குண்ணே!’

தீவிர முருகபக்தரான ‘தம்பி’ பாலு ஒவ்வொருமுறை இந்தியா வரும் போதும் பழனி, திருச்செந்தூர் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். அங்கிருந்து ஃபோன் பண்ணுவார்.

அண்ணே! இப்பதாம்ணே அண்ணன் பேருக்கு அர்ச்சனை வச்சுட்டு வெளியே வாரேன். நல்ல தரிசனம்ணே!

இந்த அன்புக்கெல்லாம் நன்றி சொல்வதா, இல்லை வேறேதும் வார்த்தை இருக்கிறதா என்று ஒவ்வொருமுறையும் பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திணறியிருக்கிறேன்.

காரைக்குடியிலிருந்து அழைக்கும் போது தன் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரையும் பேச வைப்பார்.

‘அண்ணே! உங்கக்கிட்ட அண்ணன் பேசணும்கறாங்க. ஒரு நிமிஷம் குடுக்கலாமாண்ணே? அண்ணன் ஓய்வா இருக்கீயளா?’

‘குடுங்க தம்பி!’

பாலுவின் அண்ணனும் என்னை விட வயதில் இளையவர் என்பதால், ‘அண்ணே’ என்றழைத்து சில வார்த்தைகள் பேசுவார். தொடர்ந்து அவரது மனைவி. அவரும் ‘அண்ணே’ என்றுதான் விளிப்பார். ‘காரைக்குடில நம்ம வீட்டுக்கு நீங்க வரணும்ணே’ என்று கேட்டுக் கொள்வார். ‘தம்பி’ பாலுவின் தகப்பனார் காலமாகிவிட்டார். அவ்வப்போது அவரது தாயாரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று ஒரு சில மாதங்கள் உடன் வைத்துக் கொள்வார். ஒரு முறை அவரது தாயாரிடமும் ஃபோனில் பேச வைத்தார். எடுத்த எடுப்பில் அவர்களும் ‘அண்ணே! நல்லா இருக்கீகளா?’ என்றார்கள். இப்படியாக ‘தம்பி’ பாலுவின் குடும்பத்துக்கே நான் ‘அண்ணன்’.

ஒருமுறை தழுதழுத்த குரலில் தம்பி சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன.

 

இங்கே என்னுடைய தனிமையை, வெறுமையை உங்க எழுத்துகள்தான் போக்குதுண்ணே! மன அழுத்தத்தையும், வருத்தத்தையும் காணாம ஆக்கி, எங்களுக்கெல்லாம் நீங்க செய்ற சர்வீஸைப் பத்தி உங்களுக்கே தெரியாதுண்ணே!’

பாலசுப்பிரமணியன் சக்திவேலு

முகம் தெரியாத வாசகர்களுடன் விநோதமான அனுபவங்கள் ஏராளம். காளஹஸ்தி கோயிலுக்குக் குடும்பத்துடன் போய்விட்டு களைப்பாக சென்னை திரும்பி ஓர் உணவு விடுதிக்குள் நுழைந்தோம். சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞர் என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து எழுந்து எச்சில் கையுடன் வணங்கினார். அதிர்ச்சியுடனான அசட்டுச் சிரிப்புடன் பதிலுக்கு வணங்கி விட்டுக் கடந்து சென்றேன். நாங்கள் சாப்பிடத் தொடங்கிய பிறகு மகன் சொன்னான். ‘உன்னையே பாத்துக்கிட்டு ஃபோன்ல பேசறாங்க, பாரு!’.

ஓரக்கண்ணால் பார்த்தேன். ஃபோனில் பேசிக் கொண்டிருந்த இளைஞர் என்னைப் பார்த்து தலையை ஆட்டிச் சிரித்தபடி மெல்ல அருகில் வந்தார். எழுந்து நின்றேன்.

ஃபோன்ல என் சிஸ்டர்க்கிட்ட உங்களைப் பாத்தத சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உங்கக்கிட்ட பேச முடியுமான்னு கேக்கறாங்க. அவங்க ஒரு காலேஜ் லெக்ச்சரர்’ என்றார். வாங்கிப் பேசினேன்.

வணக்கம்ங்க. உங்களைப் பாத்ததா தம்பி சொன்னான். அவங்கதானான்னு கன்ஃபர்ம் பண்ணிட்டு போய்ப் பேசுடான்னு சொன்னேன். நானும் எங்கம்மாவும் உங்க ரைட்டிங்க்ஸைப் படிச்சு அப்படி சிரிச்சிருக்கோம். சில சமயம் கலங்கவும் வச்சிருவீங்க’.

‘நன்றிங்க’.

இன்னிக்குப் போயி அம்மாக்கிட்ட சொல்லணும். ரொம்ப சந்தோஷப்படுவாங்க. திருச்சிக்கு வந்தா அவசியம் எங்க வீட்டுக்கு வரணும்.’

‘நல்லதுங்க’.

பிறகு அந்த இளைஞர் நான் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் காத்திருந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

மறுநாள் மேற்படி சம்பவத்தை முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களிடம் சொன்னேன்.

இதெல்லாம்தான் சுகா கொடுப்பினை. கேக்கற எனக்கே நெகிழ்ச்சியா இருக்கு! முகம் தெரியாத மனுஷங்க அன்பை சம்பாதிக்கிறதுங்கறது லேசுப்பட்ட காரியமில்ல’.

‘ஆனா எனக்கு அதை அத்தனை நெகிழ்ச்சியா எடுத்துக்க முடியல, ஸார்!’

‘ஏன் சுகா?’

கடைசி வரைக்கும் அந்தப் பையனும், அவங்க அக்காவும் நான் யாருங்கறத என்கிட்ட சொல்லவே இல்ல!’ என்றேன்.

 

நன்றி: அந்திமழை இதழ்

எழுத்தாளர் கடுகு அவர்களின் வலைத்தளம்: https://kadugu-agasthian.blogspot.com/2010/02/

 

ஜித்துமா . . .

 

 

எழுதப்பட்டிருந்ததா
இது முன்னரே
இக்கணம் கனவில்
உணரப்பட்டிருந்ததா
எந்த புள்ளியில்
துவங்கும் ஒரு
தினம்
எந்த தினத்தில்
நீ உன்னை
அறிந்தாய்
களிப்பில் மிதந்த போது
புதிரின் முதல் சொட்டாய்
காதலை சப்பு கொட்டிய போது
கண்ணீரில் பிசுபிசுத்த
யாரோ ஒருவனின்
கரங்களை பற்றும் போது
கடவுளில் வியக்கும் போது
திடுக்கிடுகிறோம்
யார் நமக்கு முன்
எல்லாம் தெரிந்து வந்து
நமக்குள்
இருந்து கொள்வது
ஏழு கடல்
ஏற முடியாத
எழுபது மலைகள் தாண்டி
எங்கள் உயிர்க்கிளி
கிறக்கத்தில்
இருப்பது எங்கே
உண்மை
வெறும் வார்த்தை இல்லை
இந்த கணத்தை இந்த கனவை
சிருஷ்டித்து
இதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்
எத்தனை அநீதி,
எம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

 

இளையராஜாவைப் பற்றி இப்படியெல்லாம் ஒரு மனிதன் எழுதியதைப் படித்த பிறகு எப்படி அவருடன் நட்பு கொள்ளாமல் இருக்க முடியும்? மணி எம் கே மணியுடனான நட்புக்கும், அவரது எழுத்துகளுக்கும் மேற்கண்ட வரிகள்தான் வாசலாக அமைந்தது.

மணியின் எழுத்துலகுக்குள் நுழைந்தால் ஏராளமான திரைப்படங்கள் குறித்து எழுதித் தள்ளியிருந்தார். பொதுவாக திரைப்படங்கள் குறித்து எழுதப்படுகிற எழுத்துகளில் ஆர்வமில்லாத நான் மணியின் திரைப்பார்வையை ஆச்சரியமும், சந்தோஷமுமாக ரசிக்க ஆரம்பித்தேன். பதின் வயதுகளில் பார்த்து, பின் மனதுக்குள் எப்போதும் அசை போடும் அற்புதமான மலையாளப் படங்கள் குறித்து மணி அட்டகாசமாக எழுதியிருந்தார். அதுவும் என்ன மாதிரியான படங்கள்? அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேட்டம், ஸ்வம்வரம், பி. பாஸ்கரனின் நீலக்குயில் போன்ற படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்துக்கு அதிகம் வராத பத்மராஜனின் அரப்பட்டு கட்டிய கிராமத்தில் படத்தைப் பற்றியெல்லாம் சொல்லியிருந்தார். பத்மராஜனையும், பரதனையும் சிநேகிக்கும் மணி என் சிநேகிதரானார். வெறுமனே திரைப்படங்களைப் பார்த்து கதைச்சுருக்கம் எழுதுகிற வேலையை மணி செய்யவே இல்லை. கலைஞர்கள் குறித்து அவர் எழுதிய ஒன்றிரண்டு வரிகள் அவரோடு நெருக்கமாக்கின. பத்மராஜனைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.

“ஆனால் பத்மராஜன் நூறு வயது வாழ்ந்திருந்தாலும் வெட்ட வெளியில் இருந்து பூப்பறித்து காட்டி நம்மை திடுக்கிட வைத்துக் கொண்டு தான் இருந்திருப்பார். பொதுவாய் தன்னை விடவும் வித்தைக்காரனை கடவுள் நீடிக்க விட்டு வைக்க மாட்டான்.”

திரைக்கலைஞர்கள் மட்டும்தான் என்றில்லை. இலக்கியவாதிகளை மணி போற்றும் விதம் அலங்காரமில்லாதது.

“வாழ்வின் கூரிய உண்மைகளை அணைத்துக் கொண்டு அதை வாதையுடன் உள்வாங்கி சொட்டு சொட்டாய் விளக்கி செல்லும் திராணி இல்லாதவர்கள் பேசுகிற நாண்சென்ஸ் எல்லாம் சித்தாந்தங்களாகிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் அசோகமித்திரன் எத்தனை வலியவர் என்பதை சொல்லி முடியாது.”

யோவ்! யாருய்யா நீ? இத்தனை நாளா எங்கேய்யா இருந்தே? என்று மனதுக்குள் கத்தினேன். ‘இங்கேதான் இருக்கேன். உங்களை எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்குத்தான் என்னை இப்ப தெரிஞ்சிருக்கு’ என்று எங்களின் முதல் தொலைபேசி உரையாடலில் சொல்லாமல் சொன்னார், மணி.

 

அதுவரை அறிந்திருந்த மணியின் சொற்பமே என்னை சொக்க வைத்துக் கொண்டிருந்தபோது, அறிய நேர்ந்த மிச்சம் மேலும் நெருக்கமாக்கிவிட்டது. அதற்குப் பிறகு மணியின் எதுவும் எனக்கு அந்நியமில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து பல நாட்கள் பல விஷயங்கள் குறித்து பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டேயிருந்தோம். சுந்தரராமசாமியின் வாசகர் மணி என்பது ஏற்கனவே தெரியும். அவருடன் பேசும் போதுதான் அது பொய் என்பது தெரிய வந்தது. அவர் சு. ராவின் வாசகர் அல்ல. காதலர். மணி ஒரு விநோதக் கலவை. ஒரு பக்கம் மஸோக்கிஸம் பற்றி பேசுவார். பேச்சு அதிலிருந்து எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ‘அம்ருதம் கமயா’ திரைக்கதை நோக்கிச் செல்லும். பின் அங்கிருந்து நேராக வண்டி ரோமன் பொலான்ஸ்கியின் ‘Venus in fur’க்குச் செல்லும். பின் எங்கெங்கோ சென்று சம்பந்தமே இல்லாமல் எங்க வீட்டுப் பிள்ளையில் வந்து நிற்கும். எம்.ஜி.ஆரின் சினிமாவை மணி வியந்து பேசும் போது அவர் குரலில் தயக்கமோ, கூச்சமோ இருக்காது. பாசாங்கில்லாதவர் மணி என்பதற்கு எம்.ஜி.ஆர் குறித்த அவரது சிலாகிப்பு, மற்றுமோர் உதாரணம். இப்படி மணியுடன் பேசத் துவங்கி, பேசிக்கொண்டே  வெளியூர்களுக்குச் சென்றோம். இரவெல்லாம் கண்முழித்து பேசித் தீரவில்லை. தூக்கம் கலையாமல் சென்னைக்குத் திரும்பி வந்து பேச்சைத் தொடர்ந்தோம். இன்னும் தொடர்கிறது. பேச்சினூடே ஒருநாள் லேசான கூச்சத்துடன் சொன்னார்.

‘சிறுகதைத் தொகுப்பு வரும் போல தெரியுது!’

‘யாரோடது, மணி?’

வேறெங்கோ பார்த்தபடி, ‘என்னோடதுதான்’.

எனக்கு அப்போதுதான் உறைத்தது. எத்தனை நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறார்! இன்னும் இவருடைய புத்தகம் ஏதும் அச்சில் வரவில்லை. எல்லாவிதத்திலும் சின்னவனான நான் எழுதி நான்கு புத்தகங்கள் வந்துவிட்டன. இப்போது கூச்சம் மணியிடமிருந்து இறங்கி வந்து என் தோளில் ஏறிக் கொண்டது.

‘என்னாலான எல்லா உதவியும் செய்றேன்’ என்றேன்.

‘கதைகள் தரேன். படிச்சுட்டு உங்களுக்குத் தோணறத எழுதிக் குடுங்க. அதுக்கப்புறம் புஸ்தகம் வந்தாப் போதும்’.

பிரியத்தின் குரலல்ல அது. மதிப்பின் குரல். அத்தனை மதிப்பிற்குறியவன்தானா நான் என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு ஒரு சின்ன நடுக்கத்துடன் படிக்கத் துவங்கினேன். எதிர்பார்த்த மாதிரிதான் இருந்தன, கதைகள். உண்மையைச் சொல்வதானால் எதிர்பார்த்ததற்கும் மேலாக. சில கதைகளைத் தொடர்ந்து வாசிக்க அச்சமாக இருந்தது. இதெல்லாம் எழுதலாமா என்று சில வரிகளும், இப்படியெல்லாம் எழுதலாமா என்று பல வரிகளும் இருந்தன. படித்து முடித்தவுடன் சில வார்த்தைகள் எழுதிக் கொடுத்தேன். கவனமாக ‘வாசகவுரை’ என்று எழுதினேன். ஆம். அது வாசகவுரைதான். மணியின் வாசிப்புக்கு முன், அவரது பரந்த வாழ்வனுபவத்துக்கு முன், அவரது பாசாங்கில்லாத ரசனைக்கு முன் சின்னஞ் சிறியனான நான் அவருக்கு அணிந்துரை எழுதுவதாவது?!

கடைசியில் அந்த நாள் வந்தது. எக்மோர் இக்ஸா மையத்தில் மணியின் புத்தக வெளியீடு. மணி முதலில் தன் புத்தகத்துக்கு வைக்க நினைத்திருந்த பெயர் ‘பால்வீதி’. ஆனால் ‘பாதரசம்’ பதிப்பாளர் சரோலாமா, தூரத்திலிருந்தே வாசித்து விட முடிகிற மாதிரியான, சட்டென்று மனதில் பதிகிற  ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ என்கிற எளிய குறுந்தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஒளிப்பதிவாளரும், நடிகரும், நல்ல வாசகருமான இளவரசு அண்ணாச்சியும், நானும் சென்றிருந்தோம். மணியை தனக்குப் பிடிக்கும் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்த கவிஞர் இசையை மணியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர முடியுமா தம்பி என்று கேட்டேன். தனக்கு லத்தீன் அமெரிக்க வாசகர்கள் இருக்கிறார்கள் என்கிற மமதை கிஞ்சித்தும் இல்லாத கவிஞர் இசை பெருந்தன்மையுடன் நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்து, தோளில் மாட்டிய பையுடன் வந்தும் விட்டார்.

வாத்தியார் பாலு மகேந்திரா அவர்களின் திரைப்பள்ளியில் பயின்ற நிறைய இளைஞர்கள் மணியின் சிஷ்யர்கள் என்று அறிவேன். அவர்கள்தான் அரங்கை நிறைத்தனர். கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான நண்பர் ரவி சுப்பிரமணியம், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எங்க ஊர் மக்கா  தாமிரா, ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பு ஆசிரியரும், விரைவில் திரைப்படம் இயக்க இருப்பவருமான கவிஞர் சாம்ராஜ் உட்பட தெரிந்த சில முகங்களும், தெரியாத பல முகங்களுமாக நிகழ்ச்சி துவங்கியது. ரவி சுப்பிரமணியம் வழக்கமாக என்னிடம் சொல்வதைச் சொல்லிவிட்டு பாடித் துவக்கினார். ‘உங்க முன்னாடி பாடறேன். பிழையிருந்தா பொறுத்துக்கணும்’. அதற்கு இரு தினங்களுக்கு முன் வேறோர் நிகழ்ச்சியில் ஒரு பாடகர் சுபபந்துவராளி பாடினார். துவக்கத்தில் மட்டும்தான் சுபம் இருந்தது. அதை ரவியும், நானுமே கேட்டு மகிழ்ந்திருந்தோம்.  ‘சுதியில்லாம அந்தாள் பாடினதையே கேட்டாச்சு. உங்க பாட்டுல நிச்சயமா சுதி விலகாது. பாடுங்க ரவி’ என்று உற்சாகப்படுத்தினேன். பக்க வாத்தியம் ஏதும் இல்லாமல் சுதிசுத்தமாகப் பாடினார் ரவி.

முதலிலேயே கவிஞர் இசை பேசினார். எழுதிக் கொண்டு வந்திருந்த தாள்களைப் புரட்டி பாயிண்ட் பாயிண்டாக ஒரு கறாரான விமர்சகராகவே பேசினார் இசை. குரல் நடுங்கினாலும், உடல் மொழியில் ஜெனரல் சக்கரவர்த்தி போல் ஒரு மிடுக்கு.  ‘இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?’ என்கிற மாதிரியான கேள்வியை முன் வைத்தார். பாராட்ட வேண்டிய இடங்களையும் பாராட்ட மறக்கவில்லை. அடுத்து இளவரசு அண்ணாச்சி பேசினார். அவரது அறியா முகத்தை அன்று பலரும் அறிந்து கொண்டனர். ஆழ்ந்த படிப்பாளி அவர். தினமும் பேசிக் கொள்கிற  மிக நெருக்கமான நண்பர்கள் நாங்கள்  என்பதால் அவரது பேச்சில் எனக்கு ஆச்சரியமில்லை. மணியைப் பற்றியே அமைந்திருந்தது அவரது பேச்சு.

இறுதியாக நான் அழைக்கப்பட்டேன். இக்ஸா மையத்தின் கட்டுமானத்தின் போது என்னமோ மலையாள மாந்திரீகம் நடந்திருக்க வேண்டும். மைக்கில் நாம் பேசும் வார்த்தைகள் சுடச்சுட உடனுக்குடன் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நம் காதிலேயே கேட்கிறது. ‘ஆங் எந்தா? எந்து பறயு?’ என்று மனதுக்குள் கேட்டபடியே பேச்சைத் தொடர்வது சிரமமாக இருந்தது. நான் பேசிய அதே இடத்தில் அதற்கு முந்தைய நாள் நண்பர் ஜெயமோகன் தங்குதடையில்லாமல் நீண்ட நேரம் பேசினார். ஒருவேளை நாயர்களை மாந்திரீகம் தீண்டாது போல!

இசை தன் பேச்சில்  மணி எழுதியிருக்கும் ‘இதனால் அறியவரும் நீதி’ கதை வாசிப்பதில் தனக்கு ஏற்பட்ட தயக்கத்தைச் சொல்லியிருந்தார்.

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்
அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று
கிடைக்கிறது.
அதிலிருந்து தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது

‘இதனால் அறியவரும் நீதி’ குறித்து இசை பேசியபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்து, ‘தற்கொலைக்கு தயாராகுபவன்கற கவிதய எளுதி படிக்கிறவனைக் கொலை பண்ணின பாவிப்பய இப்படி சொல்லுதானெய்யா! இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்ன?’ என்று மனதுக்குள் நினைத்து, தம்பியின் ஹிப் சைஸைப் பார்த்து நினைத்ததை உடனே மனதுக்குள் அழித்தேன்.

அடுத்து பேசிய பதிப்பாளர் சரோலாமா, தொகுப்பிலுள்ள ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்கிற கதை குறித்து ஒரு விஷயம் சொன்னார். அந்தக் கதையில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்’ போல கடவுள் ஒரு கதாபாத்திரமாக வருவார். தான் ஒரு சிவபக்தன் என்பதால் அந்தக் கதை தனக்கு நெருடலாக இருந்ததாகவும், அதனால் அதன் தலைப்பை மணியின் ஒப்புதலோடு மாற்றிவிட்டதாகவும் சரோலாமா சொன்னார். ‘நாளைபின்னே ஒரு நல்லது கெட்டதுக்கு அவாள் மூஞ்சில என்னால முளிக்க முடியுமாய்யா?’ என்பதாக இருந்தது அவர் பேச்சு.

ஒரு சிவபக்தனுக்கும், கடவுளுக்கும் இடையே ஆன உறவு என்னை ஆச்சரியப்படுத்தியது. அதைவிட ஆச்சரியம் சரோலாமா ஒரு சிவபக்தனுக்குரிய எந்த அலங்காரமுமில்லாமல் சாதாரணமாகக் காட்சியளித்தது. நான் பார்த்த சிவபக்தர்கள் எல்லாரும் தெருமுக்கில் வரும் போதே திருநீறும், சிமிண்டும் கலந்த மணம் ஒன்று நம்மை வந்து சேரும். எழுந்தால், அமர்ந்தால், சாய்ந்தால் சிவநாமத்தை உச்சரிப்பார்கள். மணிக்கொரு தடவை சீலிங் ஃபேனைப் பார்த்தும் சிவநாமம் சொல்வார்கள். ஆனால் சரோலாமாவோ, மணி வீட்டு மீன் குழம்புக்கு அடிமையான சிவபக்தராக இருக்கிறார்.

இறுதியாக மணி ஏற்புரை நிகழ்த்தினார். மணி வழக்கமாக யாரையாவது கேலியாகவோ, கோபமாகவோ திட்டும் போது ‘ஜித்துமா’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்.
உதாரணத்துக்கு ஒன்று.

“உண்மையில் வெறுப்பின் அடியில் விருப்பம் இருக்கிறது என்பதெல்லாம் கப்ஸா தான். எனக்கு தெரிந்து ஹேட் அண்ட் லவ் என்பது பொறாமையின் நிஜ முகம். காதலில், பிடித்தவர் கரத்தை விட்டு விட ஈகோ சம்மதிப்பதில்லை என்பதே அறிவதற்கான முள். கைவசத்தில் இருந்தால் அப்புறமாய் கொன்று கொள்ளலாம் என்கிற நப்பாசை கூட இருக்கும். குறைந்த பட்ஷம் குற்றவாளி என்று நிரூபித்து கீழடக்குவது. ஆக்ரமிப்பின்றி வேறொன்றில்லை என்று அறிந்த போதிலும் எவ்வளவு சப்பைக்கட்டுகள் வேண்டியிருக்கிறது ஜித்துமா.”

நண்பர்கள் மத்தியில் அவருடைய ‘ஜித்துமா’ பிரபலமான ஒன்று. எங்கே அவர் பேசும் போது அந்த வார்த்தையை பயன்படுத்துவாரோ என்று நினைத்தேன். ஆனால் மிகச் சுருக்கமாக, வழக்கமாக நண்பர்களுடன் பேசுவது போல இயல்பாகப் பேசி ‘எல்லாருக்கும் தேங்க்ஸ்’ என்றார்.

முன் வரிசையில் மணியின் மனைவியும், அவரது மகனும் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி முழுக்க மணியைப் பற்றி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மணியின் மனைவி, ‘அப்ப நெஜமாவே இந்தாளு கெட்டிக்காரன்தானா? நாம நினைக்கிற மாதிரி இல்லியா?’ என்கிற குழப்பமும், ஆச்சரியமும் முகத்தில் தெரிந்து விடாதவண்ணம் கவனமாக அமர்ந்திருந்தார். கழுத்தில் ஒரு பைனாகுலருடன் அமர்ந்திருந்த மணியின் சின்னஞ்சிறு மகன் யாழன் எல்லோரையும் ஒரு வெறித்த பார்வை பார்த்தபடி இருந்தான். அதைப் பார்க்கும் போது, ‘ஜித்துமா’ என்று அவன் சொல்வது போலத்தான் இருந்தது.