ஜித்துமா . . .

 

 

எழுதப்பட்டிருந்ததா
இது முன்னரே
இக்கணம் கனவில்
உணரப்பட்டிருந்ததா
எந்த புள்ளியில்
துவங்கும் ஒரு
தினம்
எந்த தினத்தில்
நீ உன்னை
அறிந்தாய்
களிப்பில் மிதந்த போது
புதிரின் முதல் சொட்டாய்
காதலை சப்பு கொட்டிய போது
கண்ணீரில் பிசுபிசுத்த
யாரோ ஒருவனின்
கரங்களை பற்றும் போது
கடவுளில் வியக்கும் போது
திடுக்கிடுகிறோம்
யார் நமக்கு முன்
எல்லாம் தெரிந்து வந்து
நமக்குள்
இருந்து கொள்வது
ஏழு கடல்
ஏற முடியாத
எழுபது மலைகள் தாண்டி
எங்கள் உயிர்க்கிளி
கிறக்கத்தில்
இருப்பது எங்கே
உண்மை
வெறும் வார்த்தை இல்லை
இந்த கணத்தை இந்த கனவை
சிருஷ்டித்து
இதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்
எத்தனை அநீதி,
எம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

 

இளையராஜாவைப் பற்றி இப்படியெல்லாம் ஒரு மனிதன் எழுதியதைப் படித்த பிறகு எப்படி அவருடன் நட்பு கொள்ளாமல் இருக்க முடியும்? மணி எம் கே மணியுடனான நட்புக்கும், அவரது எழுத்துகளுக்கும் மேற்கண்ட வரிகள்தான் வாசலாக அமைந்தது.

மணியின் எழுத்துலகுக்குள் நுழைந்தால் ஏராளமான திரைப்படங்கள் குறித்து எழுதித் தள்ளியிருந்தார். பொதுவாக திரைப்படங்கள் குறித்து எழுதப்படுகிற எழுத்துகளில் ஆர்வமில்லாத நான் மணியின் திரைப்பார்வையை ஆச்சரியமும், சந்தோஷமுமாக ரசிக்க ஆரம்பித்தேன். பதின் வயதுகளில் பார்த்து, பின் மனதுக்குள் எப்போதும் அசை போடும் அற்புதமான மலையாளப் படங்கள் குறித்து மணி அட்டகாசமாக எழுதியிருந்தார். அதுவும் என்ன மாதிரியான படங்கள்? அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேட்டம், ஸ்வம்வரம், பி. பாஸ்கரனின் நீலக்குயில் போன்ற படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்துக்கு அதிகம் வராத பத்மராஜனின் அரப்பட்டு கட்டிய கிராமத்தில் படத்தைப் பற்றியெல்லாம் சொல்லியிருந்தார். பத்மராஜனையும், பரதனையும் சிநேகிக்கும் மணி என் சிநேகிதரானார். வெறுமனே திரைப்படங்களைப் பார்த்து கதைச்சுருக்கம் எழுதுகிற வேலையை மணி செய்யவே இல்லை. கலைஞர்கள் குறித்து அவர் எழுதிய ஒன்றிரண்டு வரிகள் அவரோடு நெருக்கமாக்கின. பத்மராஜனைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.

“ஆனால் பத்மராஜன் நூறு வயது வாழ்ந்திருந்தாலும் வெட்ட வெளியில் இருந்து பூப்பறித்து காட்டி நம்மை திடுக்கிட வைத்துக் கொண்டு தான் இருந்திருப்பார். பொதுவாய் தன்னை விடவும் வித்தைக்காரனை கடவுள் நீடிக்க விட்டு வைக்க மாட்டான்.”

திரைக்கலைஞர்கள் மட்டும்தான் என்றில்லை. இலக்கியவாதிகளை மணி போற்றும் விதம் அலங்காரமில்லாதது.

“வாழ்வின் கூரிய உண்மைகளை அணைத்துக் கொண்டு அதை வாதையுடன் உள்வாங்கி சொட்டு சொட்டாய் விளக்கி செல்லும் திராணி இல்லாதவர்கள் பேசுகிற நாண்சென்ஸ் எல்லாம் சித்தாந்தங்களாகிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் அசோகமித்திரன் எத்தனை வலியவர் என்பதை சொல்லி முடியாது.”

யோவ்! யாருய்யா நீ? இத்தனை நாளா எங்கேய்யா இருந்தே? என்று மனதுக்குள் கத்தினேன். ‘இங்கேதான் இருக்கேன். உங்களை எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்குத்தான் என்னை இப்ப தெரிஞ்சிருக்கு’ என்று எங்களின் முதல் தொலைபேசி உரையாடலில் சொல்லாமல் சொன்னார், மணி.

 

அதுவரை அறிந்திருந்த மணியின் சொற்பமே என்னை சொக்க வைத்துக் கொண்டிருந்தபோது, அறிய நேர்ந்த மிச்சம் மேலும் நெருக்கமாக்கிவிட்டது. அதற்குப் பிறகு மணியின் எதுவும் எனக்கு அந்நியமில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து பல நாட்கள் பல விஷயங்கள் குறித்து பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டேயிருந்தோம். சுந்தரராமசாமியின் வாசகர் மணி என்பது ஏற்கனவே தெரியும். அவருடன் பேசும் போதுதான் அது பொய் என்பது தெரிய வந்தது. அவர் சு. ராவின் வாசகர் அல்ல. காதலர். மணி ஒரு விநோதக் கலவை. ஒரு பக்கம் மஸோக்கிஸம் பற்றி பேசுவார். பேச்சு அதிலிருந்து எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ‘அம்ருதம் கமயா’ திரைக்கதை நோக்கிச் செல்லும். பின் அங்கிருந்து நேராக வண்டி ரோமன் பொலான்ஸ்கியின் ‘Venus in fur’க்குச் செல்லும். பின் எங்கெங்கோ சென்று சம்பந்தமே இல்லாமல் எங்க வீட்டுப் பிள்ளையில் வந்து நிற்கும். எம்.ஜி.ஆரின் சினிமாவை மணி வியந்து பேசும் போது அவர் குரலில் தயக்கமோ, கூச்சமோ இருக்காது. பாசாங்கில்லாதவர் மணி என்பதற்கு எம்.ஜி.ஆர் குறித்த அவரது சிலாகிப்பு, மற்றுமோர் உதாரணம். இப்படி மணியுடன் பேசத் துவங்கி, பேசிக்கொண்டே  வெளியூர்களுக்குச் சென்றோம். இரவெல்லாம் கண்முழித்து பேசித் தீரவில்லை. தூக்கம் கலையாமல் சென்னைக்குத் திரும்பி வந்து பேச்சைத் தொடர்ந்தோம். இன்னும் தொடர்கிறது. பேச்சினூடே ஒருநாள் லேசான கூச்சத்துடன் சொன்னார்.

‘சிறுகதைத் தொகுப்பு வரும் போல தெரியுது!’

‘யாரோடது, மணி?’

வேறெங்கோ பார்த்தபடி, ‘என்னோடதுதான்’.

எனக்கு அப்போதுதான் உறைத்தது. எத்தனை நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறார்! இன்னும் இவருடைய புத்தகம் ஏதும் அச்சில் வரவில்லை. எல்லாவிதத்திலும் சின்னவனான நான் எழுதி நான்கு புத்தகங்கள் வந்துவிட்டன. இப்போது கூச்சம் மணியிடமிருந்து இறங்கி வந்து என் தோளில் ஏறிக் கொண்டது.

‘என்னாலான எல்லா உதவியும் செய்றேன்’ என்றேன்.

‘கதைகள் தரேன். படிச்சுட்டு உங்களுக்குத் தோணறத எழுதிக் குடுங்க. அதுக்கப்புறம் புஸ்தகம் வந்தாப் போதும்’.

பிரியத்தின் குரலல்ல அது. மதிப்பின் குரல். அத்தனை மதிப்பிற்குறியவன்தானா நான் என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு ஒரு சின்ன நடுக்கத்துடன் படிக்கத் துவங்கினேன். எதிர்பார்த்த மாதிரிதான் இருந்தன, கதைகள். உண்மையைச் சொல்வதானால் எதிர்பார்த்ததற்கும் மேலாக. சில கதைகளைத் தொடர்ந்து வாசிக்க அச்சமாக இருந்தது. இதெல்லாம் எழுதலாமா என்று சில வரிகளும், இப்படியெல்லாம் எழுதலாமா என்று பல வரிகளும் இருந்தன. படித்து முடித்தவுடன் சில வார்த்தைகள் எழுதிக் கொடுத்தேன். கவனமாக ‘வாசகவுரை’ என்று எழுதினேன். ஆம். அது வாசகவுரைதான். மணியின் வாசிப்புக்கு முன், அவரது பரந்த வாழ்வனுபவத்துக்கு முன், அவரது பாசாங்கில்லாத ரசனைக்கு முன் சின்னஞ் சிறியனான நான் அவருக்கு அணிந்துரை எழுதுவதாவது?!

கடைசியில் அந்த நாள் வந்தது. எக்மோர் இக்ஸா மையத்தில் மணியின் புத்தக வெளியீடு. மணி முதலில் தன் புத்தகத்துக்கு வைக்க நினைத்திருந்த பெயர் ‘பால்வீதி’. ஆனால் ‘பாதரசம்’ பதிப்பாளர் சரோலாமா, தூரத்திலிருந்தே வாசித்து விட முடிகிற மாதிரியான, சட்டென்று மனதில் பதிகிற  ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ என்கிற எளிய குறுந்தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஒளிப்பதிவாளரும், நடிகரும், நல்ல வாசகருமான இளவரசு அண்ணாச்சியும், நானும் சென்றிருந்தோம். மணியை தனக்குப் பிடிக்கும் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்த கவிஞர் இசையை மணியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர முடியுமா தம்பி என்று கேட்டேன். தனக்கு லத்தீன் அமெரிக்க வாசகர்கள் இருக்கிறார்கள் என்கிற மமதை கிஞ்சித்தும் இல்லாத கவிஞர் இசை பெருந்தன்மையுடன் நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்து, தோளில் மாட்டிய பையுடன் வந்தும் விட்டார்.

வாத்தியார் பாலு மகேந்திரா அவர்களின் திரைப்பள்ளியில் பயின்ற நிறைய இளைஞர்கள் மணியின் சிஷ்யர்கள் என்று அறிவேன். அவர்கள்தான் அரங்கை நிறைத்தனர். கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான நண்பர் ரவி சுப்பிரமணியம், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எங்க ஊர் மக்கா  தாமிரா, ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பு ஆசிரியரும், விரைவில் திரைப்படம் இயக்க இருப்பவருமான கவிஞர் சாம்ராஜ் உட்பட தெரிந்த சில முகங்களும், தெரியாத பல முகங்களுமாக நிகழ்ச்சி துவங்கியது. ரவி சுப்பிரமணியம் வழக்கமாக என்னிடம் சொல்வதைச் சொல்லிவிட்டு பாடித் துவக்கினார். ‘உங்க முன்னாடி பாடறேன். பிழையிருந்தா பொறுத்துக்கணும்’. அதற்கு இரு தினங்களுக்கு முன் வேறோர் நிகழ்ச்சியில் ஒரு பாடகர் சுபபந்துவராளி பாடினார். துவக்கத்தில் மட்டும்தான் சுபம் இருந்தது. அதை ரவியும், நானுமே கேட்டு மகிழ்ந்திருந்தோம்.  ‘சுதியில்லாம அந்தாள் பாடினதையே கேட்டாச்சு. உங்க பாட்டுல நிச்சயமா சுதி விலகாது. பாடுங்க ரவி’ என்று உற்சாகப்படுத்தினேன். பக்க வாத்தியம் ஏதும் இல்லாமல் சுதிசுத்தமாகப் பாடினார் ரவி.

முதலிலேயே கவிஞர் இசை பேசினார். எழுதிக் கொண்டு வந்திருந்த தாள்களைப் புரட்டி பாயிண்ட் பாயிண்டாக ஒரு கறாரான விமர்சகராகவே பேசினார் இசை. குரல் நடுங்கினாலும், உடல் மொழியில் ஜெனரல் சக்கரவர்த்தி போல் ஒரு மிடுக்கு.  ‘இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?’ என்கிற மாதிரியான கேள்வியை முன் வைத்தார். பாராட்ட வேண்டிய இடங்களையும் பாராட்ட மறக்கவில்லை. அடுத்து இளவரசு அண்ணாச்சி பேசினார். அவரது அறியா முகத்தை அன்று பலரும் அறிந்து கொண்டனர். ஆழ்ந்த படிப்பாளி அவர். தினமும் பேசிக் கொள்கிற  மிக நெருக்கமான நண்பர்கள் நாங்கள்  என்பதால் அவரது பேச்சில் எனக்கு ஆச்சரியமில்லை. மணியைப் பற்றியே அமைந்திருந்தது அவரது பேச்சு.

இறுதியாக நான் அழைக்கப்பட்டேன். இக்ஸா மையத்தின் கட்டுமானத்தின் போது என்னமோ மலையாள மாந்திரீகம் நடந்திருக்க வேண்டும். மைக்கில் நாம் பேசும் வார்த்தைகள் சுடச்சுட உடனுக்குடன் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நம் காதிலேயே கேட்கிறது. ‘ஆங் எந்தா? எந்து பறயு?’ என்று மனதுக்குள் கேட்டபடியே பேச்சைத் தொடர்வது சிரமமாக இருந்தது. நான் பேசிய அதே இடத்தில் அதற்கு முந்தைய நாள் நண்பர் ஜெயமோகன் தங்குதடையில்லாமல் நீண்ட நேரம் பேசினார். ஒருவேளை நாயர்களை மாந்திரீகம் தீண்டாது போல!

இசை தன் பேச்சில்  மணி எழுதியிருக்கும் ‘இதனால் அறியவரும் நீதி’ கதை வாசிப்பதில் தனக்கு ஏற்பட்ட தயக்கத்தைச் சொல்லியிருந்தார்.

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்
அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று
கிடைக்கிறது.
அதிலிருந்து தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது

‘இதனால் அறியவரும் நீதி’ குறித்து இசை பேசியபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்து, ‘தற்கொலைக்கு தயாராகுபவன்கற கவிதய எளுதி படிக்கிறவனைக் கொலை பண்ணின பாவிப்பய இப்படி சொல்லுதானெய்யா! இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்ன?’ என்று மனதுக்குள் நினைத்து, தம்பியின் ஹிப் சைஸைப் பார்த்து நினைத்ததை உடனே மனதுக்குள் அழித்தேன்.

அடுத்து பேசிய பதிப்பாளர் சரோலாமா, தொகுப்பிலுள்ள ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்கிற கதை குறித்து ஒரு விஷயம் சொன்னார். அந்தக் கதையில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்’ போல கடவுள் ஒரு கதாபாத்திரமாக வருவார். தான் ஒரு சிவபக்தன் என்பதால் அந்தக் கதை தனக்கு நெருடலாக இருந்ததாகவும், அதனால் அதன் தலைப்பை மணியின் ஒப்புதலோடு மாற்றிவிட்டதாகவும் சரோலாமா சொன்னார். ‘நாளைபின்னே ஒரு நல்லது கெட்டதுக்கு அவாள் மூஞ்சில என்னால முளிக்க முடியுமாய்யா?’ என்பதாக இருந்தது அவர் பேச்சு.

ஒரு சிவபக்தனுக்கும், கடவுளுக்கும் இடையே ஆன உறவு என்னை ஆச்சரியப்படுத்தியது. அதைவிட ஆச்சரியம் சரோலாமா ஒரு சிவபக்தனுக்குரிய எந்த அலங்காரமுமில்லாமல் சாதாரணமாகக் காட்சியளித்தது. நான் பார்த்த சிவபக்தர்கள் எல்லாரும் தெருமுக்கில் வரும் போதே திருநீறும், சிமிண்டும் கலந்த மணம் ஒன்று நம்மை வந்து சேரும். எழுந்தால், அமர்ந்தால், சாய்ந்தால் சிவநாமத்தை உச்சரிப்பார்கள். மணிக்கொரு தடவை சீலிங் ஃபேனைப் பார்த்தும் சிவநாமம் சொல்வார்கள். ஆனால் சரோலாமாவோ, மணி வீட்டு மீன் குழம்புக்கு அடிமையான சிவபக்தராக இருக்கிறார்.

இறுதியாக மணி ஏற்புரை நிகழ்த்தினார். மணி வழக்கமாக யாரையாவது கேலியாகவோ, கோபமாகவோ திட்டும் போது ‘ஜித்துமா’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்.
உதாரணத்துக்கு ஒன்று.

“உண்மையில் வெறுப்பின் அடியில் விருப்பம் இருக்கிறது என்பதெல்லாம் கப்ஸா தான். எனக்கு தெரிந்து ஹேட் அண்ட் லவ் என்பது பொறாமையின் நிஜ முகம். காதலில், பிடித்தவர் கரத்தை விட்டு விட ஈகோ சம்மதிப்பதில்லை என்பதே அறிவதற்கான முள். கைவசத்தில் இருந்தால் அப்புறமாய் கொன்று கொள்ளலாம் என்கிற நப்பாசை கூட இருக்கும். குறைந்த பட்ஷம் குற்றவாளி என்று நிரூபித்து கீழடக்குவது. ஆக்ரமிப்பின்றி வேறொன்றில்லை என்று அறிந்த போதிலும் எவ்வளவு சப்பைக்கட்டுகள் வேண்டியிருக்கிறது ஜித்துமா.”

நண்பர்கள் மத்தியில் அவருடைய ‘ஜித்துமா’ பிரபலமான ஒன்று. எங்கே அவர் பேசும் போது அந்த வார்த்தையை பயன்படுத்துவாரோ என்று நினைத்தேன். ஆனால் மிகச் சுருக்கமாக, வழக்கமாக நண்பர்களுடன் பேசுவது போல இயல்பாகப் பேசி ‘எல்லாருக்கும் தேங்க்ஸ்’ என்றார்.

முன் வரிசையில் மணியின் மனைவியும், அவரது மகனும் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி முழுக்க மணியைப் பற்றி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மணியின் மனைவி, ‘அப்ப நெஜமாவே இந்தாளு கெட்டிக்காரன்தானா? நாம நினைக்கிற மாதிரி இல்லியா?’ என்கிற குழப்பமும், ஆச்சரியமும் முகத்தில் தெரிந்து விடாதவண்ணம் கவனமாக அமர்ந்திருந்தார். கழுத்தில் ஒரு பைனாகுலருடன் அமர்ந்திருந்த மணியின் சின்னஞ்சிறு மகன் யாழன் எல்லோரையும் ஒரு வெறித்த பார்வை பார்த்தபடி இருந்தான். அதைப் பார்க்கும் போது, ‘ஜித்துமா’ என்று அவன் சொல்வது போலத்தான் இருந்தது.