வாகையடி முக்கு லாலா கடை, கல்பனா ஸ்டூடியோ திண்ணை, சுடலைமாடன் கோயில் தெரு முனையிலுள்ள கோயில் வாசல், நெல்லையப்பர் கோயிலின் வசந்த மண்டபம், ஜோதீஸ் காப்பித்தூள்க்கடை, நயினார்குளம் பிள்ளையார் கோயிலை ஒட்டிய மரத்தடி என இவை எல்லாவற்றிலும் கந்தையா பெரியப்பாவைப் பார்க்கலாம். வட்டமாக நெற்றியில் சந்தனமும், அதில் குங்குமமும் வைத்து, ‘தொளதொள’வென வெள்ளைக் கதர்ச் சட்டையும், நாலு முழ வேட்டியும் அணிந்திருப்பார். சட்டைக்குள்ளே, வேட்டிக்கு மேலே, இடுப்பில் துண்டை இறுக்கமாகக் கட்டியிருப்பது வெளியே தெரியாது. ஆற்றில் குளிக்க வரும் போது, மதியப் பொழுதில் சிறிது நேரம் கட்டையைச் சாய்க்கும் போது என அபூர்வமான தருணங்களில்தான், அந்தத் துண்டை அவிழ்த்து உதறுவார். ஒட்ட வெட்டிய மிலிட்டரி கிராப்புக்கு நேர்மாறான நாலுநாள் தாடி, நிரந்தரமாக கந்தையா பெரியப்பா முகத்தில் உண்டு. 

எல்லோருமே அவரை ‘பெரியப்பா’ என்று அழைத்தார்கள். கந்தையா பெரியப்பாவின் குடும்பம் ரொம்பப் பெரியது. மூன்று தம்பிகளின் குடும்பங்களுடன், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவில் ஒரு பழைய சுண்ணாம்புச் சுவர் வீட்டில்தான் எல்லோரும் குடியிருந்தார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்களைத்தான் குடியிருந்தார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. சொந்த வீட்டில் இருப்பவர்களையும், அப்படி சொல்லலாம்தான்! 

கந்தையா பெரியப்பாவுக்கு வாரிசு இல்லை. மூன்று தம்பிகளின் குழந்தைகளையும் கூட்டிப் பார்த்தால் எப்படியும் ஒரு பன்னிரெண்டு, பதிமூன்று பேர் தேறுவார்கள். எல்லாப் பிள்ளைகளையும் கந்தையா பெரியப்பாதான் வளர்த்தார். பிள்ளைகளை மட்டுமல்ல. பிள்ளைகளின் தகப்பன்களையும்தான். தன் தம்பிகளுக்கும், கந்தையா பெரியப்பாவுக்கும் நிறையவே வயது வித்தியாசம். அண்ணன் சொல்லைத் தட்டாத தம்பிகள். தம்பிகள் அனைவருக்கும் தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து கந்தையா பெரியப்பாதான் திருமணம் செய்து வைத்தார். தனக்கு பிள்ளைகள் இல்லை என்கிற குறையை தன் மனதுக்குள் புதைத்து விட்டு, தம்பி பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவே வளர்த்தார். கந்தையா பெரியப்பாவின் மனைவி மங்கையர்க்கரசியும் கணவருக்கு இணையாக, தம் கொழுந்தனார்களின் பிள்ளைகளை சீராட்டினார்.

எல்லாப் பிள்ளைகளும் சிறுவயதிலிருந்தே, தங்கள் அப்பாவையோ, அம்மையையோ தேடியதில்லை. எல்லாவற்றிற்கும் பெரியப்பா, பெரியம்மைதான்.

‘கந்தையா பெரியப்பா வீட்டுப் பிள்ளேளு, வாயத் தொறந்து பேசுன மொத வார்த்தயே பெரியப்பாதானடே!’

திருநெல்வேலி ஊரில் இப்படி சொல்லிக் கொள்வார்கள்.

தன் தம்பிகளின் பிள்ளைகள் அனைவரும் ‘பெரியப்பா, பெரியப்பா’ என்றழைப்பதால், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவில் அந்த வீடே ‘கந்தையா பெரியப்பா வீடு’ என்று அடையாளம் சொல்லப்படலாயிற்று. அண்டை வீட்டுக்காரர்கள், மைத்துனிகளின் உறவினர்கள் என உற்றார் உறவினரில் தொடங்கி, ஊரில் இருக்கும் அனைவருக்குமே ’பெரியப்பா’ ஆனார், கந்தையா.

‘நீங்க மிலிட்டரில இருந்தது, நெசந்தானா, பெரியப்பா?’

பழக்கடை மந்திரம் ஒருமுறை கேட்டான்.

‘நெசம் இல்லாம, என்ன? பென்ஷன் வருதுல்லா! ஆனா, நீ நெனைக்குற மாரி டுப்பாக்கிய தூக்கிட்டு போயி சண்டல்லாம் போடல. எலக்ட்ரீஷியனா இருந்தேன். தம்பிங்க படிச்சு நிமிர்ற வரைக்கும் பல்லக் கடிச்சுட்டு இருக்க வேண்டியதாயிட்டு. பெரிய தம்பிக்கு முனிசிபாலிட்டில வேல கெடச்ச ஒடனேயே காயிதம் போட்டுட்டான். போங்கலெ, ஒங்க ரொட்டியும், சப்பாத்தியும்னு வடக்கே பாக்க ஒரு கும்பிடு போட்டுட்டு, அன்னைக்கே திருநவேலிக்கு ரயிலேறிட்டம்லா’.

கந்தையா பெரியப்பா ஓர் உணவுப்பிரியர். வாயைத் திறந்தால் சாப்பாட்டுப் புராணம்தான். எதையும், எவரையும் உணவோடு சம்பந்தப்படுத்திதான் பேசுவார்.

‘தீத்தாரப்பன் பாக்கதுக்குத்தான் உளுந்தவட மாதிரி மெதுவா இருக்கான். ஆனா, மனசு ஆமவட மாதிரிடே. அவ ஐயா செத்ததுக்கு பய ஒரு சொட்டு கண்ணீர் விடலயே!’

அத்தனை உணவுப்பிரியரான கந்தையா பெரியப்பா ஏனோ ஹோட்டல்களில் சாப்பிட விரும்புவதில்லை..

‘போத்தி ஓட்டல என்னைக்கு இளுத்து மூடுனானோ, அன்னைக்கே வெளிய காப்பி குடிக்கிற ஆச போயிட்டுடே!’

ஆனால், கல்யாண விசேஷ வீட்டு பந்திகளில் சாப்பிடுவதில் அலாதிப் பிரியம்.

‘செய்துங்கநல்லூர்ல ஒரு சடங்கு வீடு. நான் கைநனைக்காம பஸ் ஏறிரணும்னுதான் நெனச்சேன். ஏன்னா சடங்கான பிள்ளைக்கு அப்பன்காரன், ஒரு கொணங்கெட்ட பய, பாத்துக்கோ. ஆனா அவன் பொண்டாட்டி, நல்ல பிள்ள. எப்ப வீட்டுக்குப் போனாலும், ஒண்ணும் இல்லேன்னாலும் சின்ன வெங்காயத்த வதக்கி, கூட ரெண்டு கேரட்ட போட்டு கண்ண மூடி முளிக்கறதுக்குள்ள ரவையைக் கிண்டி சுடச் சுட உப்புமா தயார் பண்ணிருவா. சாப்பிட்டு முடிக்கதுக்குள்ள,  கருப்பட்டி காப்பியும் போட்டிருவா. அவ மனசுக்கேத்த மாரியே, ஆக்குப்புரைல இருந்து வந்த கொதி மணமே சுண்டி இளுத்துட்டு. அப்புறந்தான் வெவரம் தெரிஞ்சுது. தவிசுப்பிள்ளைக்கு ரவணசமுத்திரமாம்’. 

எங்கு சாப்பிட வேண்டும், எங்கு சாப்பிடக்கூடாது என்கிற தெளிவு அவரிடத்தில் இருந்தது. 

ஆரெம்கேவியில் வேலை பார்க்கிற ராமலிங்கம் ஒருநாள் கொதிப்புடன் சொன்னான்.

‘நம்ம லெச்சுமணன் தங்கச்சி கல்யாணத்துக்குன்னு லீவ போட்டுட்டு, நாங்குனேரிக்கு போனேன் பெரியப்பா. போற வளில பஸ்ஸு வேற பிரேக்டவுணாகி, நல்ல பசில போயி சேந்தேன், கேட்டேளா! . . . மண்டபத்த சுத்தி தெரிஞ்ச மனுஷாள் ஒருத்தரயும் காணோம். லெச்சுமணப்பய மணவறைல நிக்கான். கையக் கையக் காட்டுதென். திரும்பிப் பாப்பெனாங்கான். சரி, தாலி கட்டுறதுக்குள்ள காலைச் சாப்பாட்ட முடிச்சிருவோம்னு பந்திக்குப் போனேன். ஒரு பய எலையப் போட்டான். தண்ணி தெளிக்கதுக்குள்ள, இன்னொரு பய வந்து எலைய எடுத்துட்டுப் போயிட்டான், பெரியப்பா’.

இதை சொல்லி முடிப்பதற்குள் அழுதேவிட்டான், ராமலிங்கம்.

‘அட கூறுகெட்ட மூதி. அந்த லெச்சுமணன், சந்திப்பிள்ளையார் முக்குல டீ குடிக்கும் போதே, யாரும் பாத்திருவாளோன்னு அவசர அவசரமா வேட்டிக்குள்ள சம்சாவ ஒளிச்சு வச்சுத் திங்கற பயல்லா. நீ அவன் வீட்டு கல்யாணத்துக்குப் போனதே, தப்பு. மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு கெளவி சும்மாவா சொல்லிட்டுப் போயிருக்கா. யார்யார் வீட்டு விசேஷங்களுக்குப் போகணும்னு ஒரு கணக்கு இருக்குடே’.

கந்தையா பெரியப்பாவின் ருசிப் பழக்கம், அவர் தாயாரிடமிருந்து தொடங்கியிருக்கிறது.

‘எங்கம்மை ஒரு புளித்தண்ணி வப்பா, பாரு. ரெண்டு சீனியவரக்காய நறுக்கி போட்டு, தொட்டுக்கிட எள்ளுப் போல பொரிகடலத் தொவயலயும் வச்சு, சோத்த உருட்டி குடுப்பா.  தின்னுட்டு, அந்தாக்ல செத்துரணும் போல இருக்கும்வே. அதெல்லாம் அவளோடயே போச்சு, மாப்ளே.’

மாப்பிள்ளை என்று அவரால் அழைக்கப்படுகிறவர்களுமே கூட, ‘அப்படியா, பெரியப்பா?’ என்றே கேட்பார்கள். ஆக, ‘பெரியப்பா’ என்பது கந்தையா போல திருநெல்வேலிக்காரர்களுக்கு ஒரு பெயராகியே போனது.

கல்யாண வீட்டுப் பந்திகளில் கந்தையா பெரியப்பாவின் தலை தென்பட்டு விட்டால் போதும். ‘தவிசுப்பிள்ளை’ வீரபாகு அண்ணாச்சி தானே பரிமாற வந்து விடுவார்.

‘தண்ணிப் பானைல நன்னாரி வேர் கெடக்கும் போதே நெனச்சேன், தவிசுப்பிள்ளை நீதான்னு.’

கந்தையா பெரியப்பா சாப்பிட்டு முடிக்கும் வரை வீரபாகு அண்ணாச்சி அவரது இலையை விட்டு அங்கே இங்கே நகர மாட்டார்.

‘நீ பரிமாறினேன்னா, ஒண்ணும் சொல்லாம சாப்பிடலாம்! வேற யாரும்னா பருப்புக்கு மேல சாம்பார ஊத்தாதே, ரசத்த கலக்காம ஊத்து, தயிர்ப்பச்சடிய தடியங்காக் கூட்டு மேல படாம வையின்னு மாறி மாறி சொல்லிக்கிட்டேல்லா இருக்கணும்! சமையல் படிச்சா மட்டும் போதுமாவே! பருமாறவும் தெரியணும்லா! என்ன சொல்லுதே?’

பேச்சு பேச்சாக இருந்தாலும், சாப்பிட்டுக் கொண்டேதான் சொல்வார், கந்தையா பெரியப்பா. வீரபாகு அண்ணாச்சி பதிலேதும் சொல்ல மாட்டார். அவரது கவனம் முழுக்க, கந்தையா பெரியப்பாவின் இலை மீதுதான் இருக்கும். என்ன காலியாகியிருக்கிறது, என்ன வைக்க வேண்டும் என்கிற யோசனையிலேயே இருப்பார்.

சாப்பிட்டு முடித்து, கைகழுவி வெற்றிலை பாக்கு போட உட்காரும் போது, கந்தையா பெரியப்பா சொல்வார்.

‘நம்ம பளனியப்பன் மனம் போல அவன் வீட்டு கல்யாணச் சாப்பாட்டுல ஒரு கொறையுமில்ல’.

இப்படித்தான் கந்தையா பெரியப்பா சர்ட்டிஃபிக்கேட் கொடுப்பார்.

எல்லோருக்கும் இப்படி அவர் சர்ட்டிஃபிக்கேட் கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. கிருஷ்ணபிள்ளையின் கடைசி மகள் கல்யாணத்திற்காக, மதுரையிலிருந்து ‘கேட்டரிங் சர்வீஸ்காரர்களை’ வரவழைத்து, தடபுடலாக விருந்துச் சாப்பாடு போட்டார். வழக்கமான கல்யாணச் சாப்பாட்டில் பார்க்க முடியாத வெஜிடபிள் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன், விதம் விதமான ஐஸ்கிரீம்கள், பீடா என அமர்க்களப்படுத்தியிருந்தார். இவை போக சம்பிரதாயச் சாப்பாடும் இருந்தது. கந்தையா பெரியப்பா பெயருக்குக் கொஞ்சம் கொறித்து விட்டு சட்டென்று பந்தியை விட்டு எழுந்து விட்டார்.

கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறும் வரை ஒன்றுமே பேசவில்லை. சாயங்காலம் கல்பனா ஸ்டூடியோ திண்ணையில் அமர்ந்து மாலைமுரசு படித்துக் கொண்டிருக்கும் போது சொன்னார். அப்போதுமே கூட சொல்லியிருக்க மாட்டார். கிருஷ்ண பிள்ளை வீட்டுக் கல்யாணச் செய்தி, மாலை முரசில் வந்திருந்தது. பேப்பரை மடித்து வைத்து விட்டு சொன்னார்.

‘மந்திரி வந்தாராம்லா, மந்திரி! எவன் வந்தா என்னத்துக்குங்கேன்! பந்தில ஒண்ணையாவது வாயில வக்க வெளங்குச்சா! எளவு மோருமாய்யா புளிக்கும்!’

கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவர் தொடர்ந்தார்.

‘புது பணக்காரம்லா! அதான் பவுசக் கொளிக்கான். பெத்த அம்மைக்கு சோறு போடாம பட்டினி போட்ட பய வீட்டு சாப்பாடு எப்பிடி ருசியா இருக்குங்கேன்!’

கந்தையா பெரியப்பா அப்படி சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சாப்பிடும் உணவின் ருசிக்கும், அதற்குப் பின்னணியிலுள்ள மனிதர்களின் ஆத்மாவுக்கும் சம்பந்தமுள்ளது என்பார். 

‘ஒலயக் கொதிக்க வச்சு, அதுல அரிசிய யாரு போட்டாலும் அது வெறும் சோறாத்தான் ஆகும். அது அன்னமா ஆகுறது, பொங்குற மனுஷி கைலயும், மனசுலயும்தான் இருக்கு’. 

அந்தநம்பிக்குறிச்சியில் கற்குளத்தம்மா இறந்த  பதினாறாவது நாள் விசேஷத்துக்குப் போயிருந்த போது, பந்தி முடிந்தவுடன் சொன்னார்.

‘கற்குளத்தம்மா ஆளுதான் கருப்பு. மனசு பூரா தங்கம்லா! எத்தன குடும்பத்த வாள வச்சிருக்கா! இன்னைக்கு இங்கெ இருக்கெற வெள்ளத்துர, கண்ணம்மா, மாயாண்டி குடும்பம்லாம் எதுக்கு கெடந்து இந்தா அளுக அளுதாங்கங்கே! இந்தக் குடும்பம்லாம் அவ போட்ட சோத்தத் தின்னுதானெவே வளந்துது! அதான் இன்னைக்கு பந்திய விட்டு எந்திரிக்கவே மனசு வரமாட்டேங்கு. தாயளி, சோறே மணக்கே!. கற்குளத்தம்மா ஆத்மா, அந்த மாதிரில்லாவே!’

நூற்றுக்கு நூறு கந்தையா பெரியப்பா சொன்ன வார்த்தைகளை எல்லோராலுமே உணர முடிந்தது. நல்ல வேக்காடில் வெந்த அரிசிச் சோறு, உருக்கின பசுநெய், பதமாக வெந்த பருப்பு, மணக்க மணக்க முள்ளங்கி சாம்பார், வெள்ளைப் பூண்டின் நெடி முகத்தில் அடிக்காத ரசம், சம அளவில் வெங்காயமும், வாழைக்காயும் சரியாகக் கலந்த புட்டு, தேங்காயை தாராளமாக போட்டு வைத்த அவியல்,கடலைபருப்பு போட்டு செய்த தடியங்காய்க் கூட்டு, அரிசி பாயாசம், பொரித்த அப்பளம் என அனைத்துமே அத்தனை ருசி.

வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள கந்தையா பெரியப்பா வீட்டில் அவரது பதினாறு நாள் விசேஷத்தின் பந்தி முடிந்ததும், எல்லோருமே சொன்னார்கள்.

‘கந்தையா பெரியப்பா ஆத்மா அந்த மாரில்லா! அதான் சாப்பாடு இந்த ருசி ருசிக்கி’.

புகைப்படம்: கார்த்திக் முத்துவாழி

8 thoughts on “ஆத்ம ருசி

  1. கல்யாண சாப்பாடு சாப்ட மாதிரில்ல இருக்கு

  2. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது. மண்வாசனை பேச்சுவழக்கு மாறாமல் உங்களின் இந்த கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.

    • Excellent.i could feel the depth of taste as well as the sorrow of the death… felt the heavy ness ultimately it’s success of the writer.keep writing more .my wishes.

  3. சுகமான, நடை சுகா! நேரே உட்காரவைத்து, விவரித்தமாரிலா இருக்கு! வாழ்த்துகள் சகோ!

  4. நீங்கள் முன்னால் ‌‌‌‌‌‌‌‌‌உட்கார்ந்து ‌‌‌பேசுவது போல் இருந்தது. மிகவும் அழகான உவமைகள். தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.
    நடுவில் ஏன் இடைவெளி. கமல் ‌‌‌‌‌‌அண்ணாச்சி விழா பற்றி எதிர் பார்த்தோம்.
    நன்றி

  5. அபாரமாக எழுதி இருக்கிறீர்கள். திருனவேலி என் அபிமான ஊர். சுலோச்சனா முதலியார் பாலத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றபோது என் உடலில் மின்சாரம் பாய்ந்தது. கல்கி, டி.கே.சியுடன், உங்களையும் மனக்கண்ணால் பார்த்தேன். – வியப்புடன் ரசிகன்‘கடுகு’

Comments are closed.