வண்ணதாசன் என்னும் ரசிகர் . . .

vannadasan
ஒரு சிறுகதை என்றால் அதில் கதை சொல்லியே ஆக வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் ஒன்றுமில்லை என்பதை எனக்கு உணர்த்தியவர் வண்ணதாசன். வண்ணதாசனைப் படிப்பதற்கு முன்புவரை என் மனதில் இருந்த சிறுகதை குறித்த வடிவம் முற்றிலுமாகக் கலைந்து போனது.

வண்ணதாசனிடம் எனக்குள்ள முதல் ஈர்ப்பாக திருநெல்வேலியே இருந்தது. சிறுவயதில் நான் பார்த்த மனிதர்கள், நான் புழங்கிய பகுதிகள் என வண்ணதாசனின் கதைகளில் வரும் அத்தனையையும் நேரடியாக பார்த்து அனுபவித்திருந்தேன். கீழப்புதுதெருவில் குடியிருந்த ‘தாடி’ ரத்தின பாகவதர் மார்கழிமாதக் காலையில் தன் சிறு குழுவுடன் பஜனை சங்கீதம் இசைத்துச் செல்வதை வண்ணதாசனின் ‘வேர்’ சிறுகதையில் படித்தபோது மனதுக்குள் அப்படி ஒரு சந்தோஷம்! ‘தாடி’ பாகவதர் வாயாலேயே ‘மோர்சிங்’ ஒலியெழுப்புவதை வண்ணதாசன் குறிப்பிட்டிருந்ததையும்விட, பாகவதரின் கூடவே புல்லாங்குழல் இசைத்து வரும் கண்பார்வையற்றவரைப் பற்றி இப்படி எழுதியிருந்தார். ’கண்ணில்லாதவர்களுக்குத்தான் புல்லாங்குழல் வாசிக்க வரும் என்று நான் சிறுவயதில் நம்பியிருக்கிறேன். எதிர்த்தவீட்டுப் பிள்ளைகளுக்கு எப்படியென்று தெரியவில்லை. கேட்க வேண்டும்’. Read More