காப்பிக் கடை . . .

 

unnamed (1)

 

கோடை விடுமுறை காலங்களில் அம்மாவின் சொந்த ஊரான ஆழ்வார்குறிச்சிக்குப் போகும்போதெல்லாம், சாயங்காலக் காப்பி நேரத்தில் வாழையிலையில் சுற்றி சுடச் சுட பஜ்ஜி வாங்கி வருவார், தாத்தா. நான்கைந்து தினத்தந்தி தாள்களை எண்ணெய்க்காக ஒற்றியெடுக்கத் தேவையில்லாத பஜ்ஜி. பஜாரில் உள்ள சண்முகம் தாத்தாவின் கடை பஜ்ஜியை அவர் எண்ணெய்ச் சட்டியில்தான் போட்டு எடுக்கிறாரா, இல்லை இட்லி கொப்பரையில் போட்டு அவித்துத் தருகிறாரா என்று சந்தேகமாக இருக்கும். சொட்டு எண்ணெயைப் பார்க்க முடியாத, சுவையான பஜ்ஜியும், தொட்டுக் கொள்ள ரெண்டு மிளகாய் கிள்ளிப் போட்டு அரைத்து, கடுகு உளுத்தம்பருப்பும், கறிவேப்பிலையும் போட்டுத் தாளித்த தேங்காய்ச் சட்னியும் கிடைக்கும். எப்போதாவது சண்முகம் தாத்தாவின் காப்பிக் கடைக்கும் செல்வதுண்டு.

‘பேரப்பிள்ள திருநோலில பெரிய கிளப்லல்லாம் சாப்பிட்டிருப்பேரு! இங்கெ தாத்தா கடைல காத்தாடி கூட கெடயாதவே!’

சண்முக தாத்தா சொல்லுவார். அவரது காப்பிக் கடையில் வெறும் காப்பி மட்டுமில்லாமல் பலகாரங்களும் கிடைக்கும். ஆனாலும் அது காப்பிக்கடைதான். அவர் சொன்னது போல திருநவேலியில் உள்ள ஹோட்டல்கள் அவரைப் பொருத்தவரைக்கும் கிளப்புக் கடைகள். பல சின்ன ஹோட்டல்களை ஹோட்டல்களாக அதை நடத்துபவர்களே நினைப்பதில்லைதான். திருநவேலி கீழப்புதுத் தெருவிலுள்ள ராமன் கடை முகப்பில் ‘ராமன் டீ ஸ்டால்’ என்றே போர்டு மாட்டப்பட்டிருக்கும். அங்கு காப்பி, டீ மட்டுமல்ல. இட்லி, தோசை, பூரி கிழங்கு உட்பட எல்லா டிஃபன் ஐட்டங்களும் கிடைக்கும். ஆனாலும் அது ராமன் டீ ஸ்டால்தான். கீழப்புதுத் தெரு, அம்மன் சன்னதி, கல்லத்தி முடுக்கு தெரு, சுவாமி சன்னதி மக்களுக்கு அது ராமன் கடை. கீழப்புதுத் தெருவிலேயே கண்ணன் மாமா நடத்துகிற காப்பிக் கடைக்கு பெயர் ‘ஐயர் கடை’.

திருநெல்வேலி பகுதிகளில் சின்னச் சின்ன கிராமங்களில் நிறைய காப்பிக் கடைகள். பெரும்பாலும் சிறுநகரப் பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் சாப்பிடாமல், பெயர்ப் பலகை இல்லாத கிராமத்துக் காப்பிக் கடைகளில் சாப்பிடுவது வழக்கம். ஒருமுறை ஸ்ரீவைகுண்டத்துக்கருகில் உள்ள சிவகளையில் ஓலைக்கூரை போட்ட காப்பிக் கடையில் மாலை வேளையில் நண்பர்களுடன் சென்றிருந்தேன். புகை படிந்த மர பெஞ்ச், மேசைகள். ஒரே ஒரு டேபிள் ஃபேன். கல்லாவில் அமர்ந்திருப்பவர், ‘வாருங்க! என்ன சாப்பிடுதிய? காப்பியா, டீயா?’ என்று கேட்டுவிட்டு, அவரே எழுந்து சென்று சின்னத் துண்டுகளாக நறுக்கிய வாழை இலைகளை மேசையில் விரித்து, ‘தண்ணி தொளிச்சுக்கிடுங்க’ என்றார். ‘காப்பிதானே கேட்டோம்! எதுக்கு இலை?’ என்று யோசிப்பதற்குள், ஒரு பெரிய தூக்குச் சட்டியிலிருந்து, எவர்சில்வர் கரண்டியில் பூந்தியை அள்ளி இலையில் வைத்தார். கூடவே ஒரு கரண்டி மிக்சர்.

‘சாப்பிட்டுக்கிட்டிரிங்க. காப்பி போட்டு எடுத்துட்டு வாரேன்’.

‘எல வெளங்குதா! சுவீட் காரம் காப்பி. மாமியா வீட்டுக்குப் போனாலும் நமக்கு இதெல்லாம் கெடைக்காது. போன ரெண்டாவது நாளே வெறும் கடுங்காப்பில்லா அரைமடக்கு தருவாளுவொ!’ என்றான் சரவணன்.

எவர்சில்வர் வட்டகை தம்ளர்களில் நுரை பொங்க, சூடாக காப்பி வந்தது.

‘சீனி காணுமா பாருங்கொ! இல்லென்னா இன்னும் ரெண்டு கரண்டி போடுதென்’.

மேல் சட்டையில்லாமல் வேட்டியை மடித்துக் கட்டியிருந்த ஓனரும், சப்ளையருமான அண்ணாச்சி சொன்னார். அன்றைய நாள் முழுதும் சிவகளை காப்பியின் சுவை நாக்கில் இருந்தது.

‘நாரோயில்ல காபி சாபிட்டேளான்னு கேட்டா சாப்பிட்டாச்சுன்னு சொல்லிரப்படாதுடே! அப்புறம் மத்யானம் சோறு போடற வரைக்கும் காத்துக் கெடக்கணும் பாத்துக்கொ. அங்கெ காப்பி சாப்பிட்டேளான்னா, டிபன் சாப்பிட்டேளான்னு அர்த்தம்’. நரசுஸ் ஆறுமுகம் சித்தப்பா சொன்னார். சிறு வயதிலிருந்தே திருநவேலி தெப்பக்குளத்துக்கு எதிரே உள்ள நரசுஸ் காப்பிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த சித்தப்பாவை மேலாளராக பதவி உயர்வு கொடுத்து நாகர்கோயில் நரசுஸ் கிளைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்குதான் சித்தப்பாவுக்கு இந்த ‘காப்பி சாப்பிட்டேளா’ அனுபவம்.  சமீபத்தில் பழைய ‘பிரக்ஞை’, புதிய ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவில் இருக்கும் ரவிசங்கரிடம் இந்தத் தகவலைச் சொன்ன போது, ‘அப்படியா?’ என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டுவிட்டு, ‘இனிமேல் நாகர்கோயில் பக்கம் போனா ஜாக்கிரதையா இருக்கேன்’ என்றார். இப்போதைய நாகர்கோவில்வாசிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சென்னைவாசிகளாகி விட்டாலும் அவ்வப்போது ஊருக்குப் போய் வருகிற நாகர்கோயில்காரர்களான நண்பர்கள் கோலப்பன், அழகம்பெருமாள் போன்றோரோ, நாகர்கோவிலிலேயே வசிக்கிற  ஜெயமோகனோதான் சொல்ல வேண்டும்.

போர்டு இல்லாமல் நடத்தப்படுகிற சின்ன காப்பிக்கடைகள் நாளடைவில் ஹோட்டல்களாவதுண்டு.

‘புட்டாரத்தியம்மன் கோயில் டர்னிங்ல மொத மொதல்ல ஒரு சின்னக் காப்பிக் கட போட்டு சுக்குவெந்நிதான் வித்துக்கிட்டிருந்தான், நம்ம தெய்வு! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வளந்து பஜார்ல ஒரு கட புடிச்சு, அப்புறம் அப்படியே புது பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ஹோட்டல் நடத்தி, இப்பம் தியாகராஜ நகர்ல எத்தா பெரிய வீடு கெட்டியிருங்கான்ங்க! அவ அய்யா கடைசி வரைக்கும் ரைஸ் மில்ல மூட சொமந்தாரு! அவர் சாகற வரைக்கும் அவ்வொ வீட்ல கரெண்ட்டு கெடயாது தெரியும்லா!’

திருநவேலியைத் தாண்டி மற்ற ஊர்களில் கிடைத்த காப்பிக் கடை அனுபவத்தில் நிச்சயம் ஸ்ரீரங்கத்தைச் சேர்க்கத்தான் வேண்டும். வழக்கறிஞர் முரளியும், ‘சிவாஜி’ சண்முகமும் என்னையும், நண்பர் அழகம்பெருமாளையும் ஸ்ரீரங்கம் கோயிலில் விஸ்வரூப தரிசனத்துக்கு அழைத்துச் சென்று, தரிசனம் முடித்து வெளியே கூட்டி வந்ததும், ஸார்! ஸ்ரீரங்கத்துக்கு வந்துட்டு முரளி காப்பிக் கடைல காப்பி குடிக்காமப் போகக் கூடாது’ என்றார்கள். அதிகாலையிலேயே கடைக்கு முன் கூட்டம் திரண்டிருந்தது. ‘இங்கெ எப்பவுமே காப்பி ஸ்பெஷல். இருந்தாலும் உள்ளே போயி ஓனர்க்கிட்ட சொல்லிட்டு வர்றேன்’ என்று உள்ளே போனார், வழக்கறிஞர். சற்று நேரத்தில் சுடச் சுட காப்பி டம்ளர்களுடன் ஓனரே வாசலுக்கு வந்தார்.

‘வணக்கம், மூங்கில் மூச்சுக்காரரே! திருநவேலி சங்கர் கபே சங்கரய்யர் மகனுக்குத்தான் என் பொன்ணக் குடுத்திருக்கேன். நான் போற கல்யாண வீடுகளுக்கு பிரஸண்டேஷனா குடுக்கிறதே உங்க மூங்கில் மூச்சுதான். ரொம்ப சந்தோஷம். காப்பி குடிச்ச கையோட எங்க கட புஸ்தகத்துல ரெண்டு வார்த்த எழுதுங்க’ என்றார். குடிப்பதற்கு முன்பே ‘காப்பி பிரமாதம்’ என்றேன். குடித்த பிறகு சுவையாக உணர்ந்ததால் அதையே எழுதியும் வந்தேன்.

unnamed

 

காலையில் மட்டும் திறக்கப்படும் காப்பிக் கடைகள், மதியம் மட்டும் நடத்தப்படும் மெஸ்கள், மாலை நேரங்களில் மட்டுமே காணக்கிடைக்கிற சின்ன ஹோட்டல்களை இங்கே சென்னையிலும் காண முடிகிறது. பொதுவாக காப்பியை அதிகம் விரும்பாமல், தேநீர் அதிகம் குடிக்கிற பழக்கம் உள்ள என்னை சமீபகாலமாக காப்பி பிரியனாக மாற்றியவர் கவிஞர் ரகன். ரகன், வளர்ந்து வரும் ஒரு ஃபேஸ்புக் கவிஞர்.

‘அட நீயா!

அடடே நீதானா!!

அடடடே நீயேதானா!!!’

போன்ற கவிதைகள் மூலம் ஃபேஸ்புக்கில் அவரது முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் மத்தியில் உலகப் புகழ் பெற்ற ஒரு கவிஞர். இந்த வருட இறுதிக்குள் கவிஞர் ரகனின் ‘தோராயமாய் ஒரு ஆகாயம்’ ‘மஸ்கோத் அல்வாவும், மஸ்லின் துணியும்’ வகைத் தலைப்புகளில் அவரது கவிதைத் தொகுப்புகள் வெளியாகும் அபாயம் உள்ளது.

மாலை 4 மணிவாக்கில் ரகனிடமிருந்து காப்பி கோப்பை படம் போட்ட வாட்சப் செய்தி வரும். ‘போகலாம்’ என்று நான் பதில் அனுப்பிய உடனே தனது சின்னக் காரில் ரகன் கிளம்பி வருவார். அநேகமாக சாலிகிராமத்து சரவண பவன். அங்கே கீழ்த் தளத்தில்தான் காப்பி போடுவார்கள். முதல் தளத்தில் அமர்ந்து கொண்டு காப்பிக்கு முந்தைய வடை மற்றும் அடைகளைத் தின்று முடிக்கவும் கீழ்த்தளத்திலிருந்து ஆறிய காப்பி வரவும் சரியாக இருக்கும். சூடான காப்பிக்காக சில வேளைகளில் நானும், ரகனும் சுவாமிநாத் கபேயிலும் காப்பி குடிக்கச் செல்வதுண்டு.

‘ஒரே மாதிரி காப்பி குடிச்சு போர் அடிக்க ஆரம்பிச்சுட்டு. வேற ஏதாவது காப்பிக் கடையைத் தேடணும்’ என்று சொன்னேன்.

‘அண்ணா நகர்ல ‘கட்டிக்கரும்புன்னு’ ஒரு காப்பிக் கடை இருக்குண்ணே. ஒருநாள் அங்கே போயிக் குடிச்சுப் பாக்கலாம்’ என்றார், ரகன்.

கட்டிக்கரும்பு செல்லும் வரைக்கும் காத்திருக்காமல் இடையில் சில நாட்கள் மீண்டும் டீ’க்கு மாறினோம். வடபழனி கேம்பஸ் ஹோட்டலில் கேரளா டீ அருமையாக இருக்கும். அங்கு சென்று டீ குடித்தோம். பிறகு புகாரி ஹோட்டலில் கிடைக்கும் இரானியன் டீ ஞாபகத்துக்கு வந்து அங்கு சென்றோம். ‘இது நான் வெஜ் கடை. உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லியே அண்ணே!’ என்றார், ரகன். ‘திருநவேலி வைர மாளிகைலயே குஞ்சு கூட போயி உக்காந்திருக்கென். இதுல என்ன இருக்கு? நான் டீதானே குடிக்கப் போறேன். பரவாயில்ல’ என்றேன். வினை அங்குதான் ஆரம்பமானது. ‘வெறும் டீயா? ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடலாமாண்ணே?’ என்று கேட்ட ரகனிடம், ‘சரவண பவன் கத இங்கெயும் தொடர வேண்டாமே’ என்றேன். சரவணபவனுக்கு மாலை வேளைகளில் நாங்கள் செல்வதென்னவோ காப்பி குடிக்கத்தான். ஆனால் காப்பிக்கு முன்னுரையாக சில பல சாம்பார் வடைகளும், சில சமயங்களில் சாதா தோசைகளும் இடம் பெற்று விடும். அதுவும் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸும், செல்வகுமாரும் வந்தால், போட்டி போட்டுக் கொண்டு ஆனியன் பஜ்ஜிகள் வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கு பயந்தே புகாரியில் தஞ்சம் புகுந்தோம். ஆனால் விதி புகாரியில் மட்டுமே கிடைக்கும் ‘கோதுமை பரோட்டா’ வடிவில் வந்து விளையாடியது. ‘ஆளுக்கு ஒரே ஒரு கோதுமை பரோட்டா சாப்பிட்டு டீ குடிக்கலாம்ணே’ என்றார், ரகன். பொன் முறுகலில் வந்த கோதுமை பரோட்டாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றியது. ‘சூடு ஆறிடும்ணே, சாப்பிடுங்க’. கோதுமை பரோட்டாக்குப் பின் இரானியன் டீ, சொர்க்கத்துக்கு அருகே இட்டுச் சென்றது. அடுத்த இரண்டு  மாலை வேளையையும் புகாரியின் கோதுமை பரோட்டாவும், டீயும் நிறைத்தன.

‘இங்க வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களாண்ணே?’

ரகனின் கேள்வியிலேயே அவர் அதை ஆர்டர செய்யப் போகிறார் என்பது தெரிந்தது. ‘களுதயச் சொல்லுங்க. அதயும்தான் சாப்பிட்டுப் பாத்திருவோம். ஆனா இந்த நேரத்துல சாப்பிட முடியுமான்னு தெரியலியே!’

‘ஒண்ணும் பிரச்சனயில்லண்ணே. ஒரு வெஜ் பிரியாணி வாங்கி ஆளுக்கு பாதி பாதி சாப்பிடுவோம்’.
ஃபேஸ்புக் கவிஞரின் யோசனை புத்திசாலித்தனமாகப் பட்டது.

‘அதுக்காக கோதுமை பரோட்டாவ அவாய்ட் பண்ண வேண்டாம்ணே. ஒரு பரோட்டா. பாதி பிரியாணி. அப்புறம் டீ’.

முந்தைய அவரது நல்ல யோசனை, சட்டென்று அவர் எழுதும் கவிதை போலவே சிக்கலாக மாறியது.

புகாரி ஹோட்டலின் படிக்கட்டுகளை, கைப்பிடியைப் பிடித்தபடிதான் இறங்க முடிந்தது. காரில் வந்து ஏறி உட்கார்ந்தவுடன் கொட்டாவியை அடக்கியபடி, ‘இனிமேல் டீ வேண்டாம், ரகன். காப்பிக்கே திரும்பிருவோம்’ என்றேன்.

அதற்குப் பிறகு இரண்டு நாட்களாக கவிஞரிடமிருந்து தகவல் இல்லை.  வழக்கமான எங்களின் காப்பி நேரத்தில்  வாட்ஸ் அப்பில் ஒரு காப்பிக் கடையின் ஃபோட்டோ அனுப்பினார், ரகன். கூடவே குறுஞ்செய்தியும். ‘சுத்தமான பசும்பாலில் காப்பி போடுகிறார்கள். அதற்காகவே தனியாக பசுமாடுகள் வளர்க்கிறார்கள். சுவையைச் சொல்லி முடியாது. குடித்தால்தான் தெரியும்’.

எச்சில் முழுங்கியவாறே குறுஞ்செய்தியில் கேட்டேன். ‘இதை குறுஞ்செய்தியில் அனுப்புவதற்கு பதில், என்னை அழைத்துச் செல்லலாமல்லவா? இல்லையென்றால் இடத்தைச் சொல்லுங்கள். நான் கிளம்பி வருகிறேன்’.

உடனே ரகனிடமிருந்து பதில் வந்தது. ‘அடுத்த மாசத்துல ஒருநாள் போலாம்ண்ணே. இந்தக் கட மதுரைல இருக்கு. நான் இப்ப அங்கெதான் இருக்கென்’.

.

புகைப்படங்கள் – ரகன்