‘விஞ்சை விலாஸின் சுவை’ கட்டுரையில் சாலிகிராமத்திலுள்ள ‘திருநெல்வேலி சைவாள் ஹோட்டல்’ பற்றி எழுதியிருந்தேன். அதில் அந்த ஹோட்டல் உரிமையாளரின் இளைய மகன் வேறொரு ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்த விஷயத்தையும் சொல்லியிருந்தேன். இதை படித்த அன்பரொருவர் திருநெல்வேலி ஹோட்டலுக்குப் போயிருக்கிறார். வழக்கமாக அவர் அங்கு போய் சாப்பிடுவதுண்டாம். கருப்பையா பிள்ளையின் மறைவுக்குப் பின் அந்த ஹோட்டலை இப்போது நடத்தி வருபவர் அவரது இளைய மகன். வேறொரு ஹோட்டலில் வேலை செய்வதாகச் சொல்லப்பட்டவர் இந்த ஹோட்டலை நடத்துகிறாரே என்று அன்பருக்குத் தோன்றியிருக்கிறது. மெல்ல அவரிடம் ‘நீங்க ‘அக்ஷயா ஹோட்டல்ல வேல செஞ்சீங்களோ!’ என்று வினவியிருக்கிறார். கருப்பையா பிள்ளையின் இளைய மகன் அந்தத் தகவலை மறுத்திருக்கிறார். உடனே இவர் கட்டுரையின் அந்தக் குறிப்பிட்ட பகுதி எழுதியவரின் கற்பனை என்று முடிவு செய்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து கருப்பையா பிள்ளையின் இளைய மகன் தானாகவே வந்து ‘ஆமா, கொஞ்ச நாள் அங்கெ வேல செஞ்சேன். ஒங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்டிருக்கிறார்.

‘வார்த்தை’ இதழில் வெளிவந்த ‘விஞ்சை விலாஸின் சுவை’ கட்டுரையில் இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைச் சொன்னவுடன் கருப்பையா பிள்ளையின் இளைய மகன் அந்தக் கட்டுரையைப் படிக்க ஆசைப்பட்டிருக்கிறார். மறுமுறை இவர் அங்கு செல்லும் போது ‘வார்த்தை’ இதழை கொண்டு கொடுக்கவும், அதை வாங்கிப் படித்து ஆனந்தப்பட்ட கருப்பையா பிள்ளையின் மகன், ‘ஒங்களுக்கு என்ன வேணுமோ நல்லா சாப்பிடுங்க’ என்று இவரை உணர்ச்சி பொங்க உபசரித்தாராம். இதை எழுதியவரை நான் பார்க்கணுமே என்று கேட்க, இவரும் தான் அழைத்து வருவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல்களையெல்லாம் பிரபுராம் என்கிற அந்த அன்பரே எனக்கு மெயில் மூலம் சொல்லியிருந்தார்.

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக அந்த ஹோட்டலுக்குச் சென்று வருகிறேன். ‘விஞ்சை விலாஸின் சுவை’ எழுதிய பிறகும் கூட பலமுறை சென்றிருக்கிறேன். திரு.நாஞ்சில் நாடன் அவர்களையும் சமீபத்தில் அங்கு அழைத்துச் சென்றேன். எண்ணெய் தோசையும், ஆம வடையும் சாப்பிடும் போது, ‘ஏ அய்யா, நம்ம ஊர்ல சாப்பிடுற மாதிரில்லா இருக்கு’ என்றார் நாஞ்சிலார். கூடவே ‘இதெல்லாம் வயித்துக்கு ஒண்ணும் பண்ணாது’ என்று சான்றிதழும் வழங்கினார். அன்றைக்கும் கருப்பையா பிள்ளையின் மகனிடம் என்னை நான் காட்டிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் ‘என்னண்ணே, ஆளையே காணோம்’ என்றார் என்னைப் பார்த்து.

சில நாட்களாக ‘திருநெல்வேலி’ ஹோட்டல் பூட்டப்பட்டிருந்தது. நேற்று மாலை நான் சாலிகிராமத்தில் நடந்து கொண்டிருந்தவன் ‘திருநெல்வேலி’ ஹோட்டல் திறந்திருப்பதைப் பார்த்து நுழைந்தேன். கடை கொஞ்சம் நகர்ந்திருந்தது. உள்ளுக்குள் சில பூச்சு வேலைகள் செய்யப்பட்டிருந்தாலும், கடைக்கே அழகு சேர்க்கும் அந்தப் பழைய இருட்டும், வாசனையும் அப்படியே இருந்தன. ‘தோச கொண்டு வரவாண்ணே’ என்று கேட்ட கருப்பையா பிள்ளையின் மகனிடம் தலையாட்டினேன். உள்ளே சென்றவர் போகும் போதே வானொலி ஸ்விட்சை ஆன் செய்து விட்டுப் போனார். உலகமே பண்பலை வரிசையில் சிக்குண்டு ‘சொல்லுங்க, ஒங்க லவ்வருக்கு நீங்க என்ன சொல்ல விரும்புரீங்க’ என்று கேட்டுக் கொண்டு இளிக்க, ‘திருநெவேலி ஹோட்டலின் வானொலி’ ஆல் இண்டியா ரேடியோவின் வழக்கமான சோகக்குரல் அறிவிப்பாளரின் எச்சில் முழுங்கலோடு பழைய பாடல் ஒன்றை ஒலிபரப்பியது. இளையராஜா என்னும் புதிய இசையமைப்பாளர் அறிமுகமாயிருந்த காலத்துக்கு ஒரே நிமிடத்தில் நகர்ந்து நான் மூழ்கியிருந்த போது, கருப்பையா பிள்ளையின் மகன் தோசையுடன் வந்து என் கவனம் கலைத்தார்.

சாப்பிடும் போது எனக்கு முன்னே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த வழுக்கைத்தலை பெரியவர் எழுந்து கைகழுவினார். சில்லறையை எண்ணி கொடுத்துவிட்டு அவர் சென்றுவிட, இப்போது நானும், கருப்பையா பிள்ளையின் மகனும் மட்டும். ‘சாம்பார் ஊத்தட்டுமாண்ணே?’. சாம்பார் ஊற்றிக் கொண்டிருந்தவரிடம் மெல்ல கேட்டேன். ‘ஒங்களப் பத்தி ஒரு பத்திரிக்கைல வந்திருந்துதே’. மூக்குக் கண்ணாடிக்குள் கண்கள் அகல விரிந்தன. ‘ஆமாண்ணே. யாரோ ரொம்ப உன்னிப்பா கவனிச்சு எளுதியிருக்காங்க. அப்பா காலத்துல இருந்தே இங்கெ வந்து போறவங்கன்னு மட்டும் தெரிஞ்சுது. அத படிச்சுட்டு அன்னிக்கு பூரா சந்தோசமா இருந்தேண்ணே’ என்றார்.
நான்தான் அதை எழுதியவன் என்பதைச் சொல்ல எனக்கு தயக்கமாக இருந்ததற்குக் காரணம், அவர் அதை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது சரியாகத் தெரியாததால். திடீரென ‘எல, எங்க குடும்பம் கஷ்டப்பட்டதையெல்லாம் நீ ஊரு பூரா சொல்லி அசிங்கப்படுத்துதியோ’ என்று சொல்லி சாம்பார் வாளியை என் தலையில் கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்ற யோசனை. ஆனால் அவர் தொடர்ந்து அந்தக் கட்டுரையைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். இப்போது சொல்லலாம் என்றால் மற்றுமோர் யோசனை. ஒருவேளை இவர் உணர்ச்சிவசப்பட்டு சாப்பிட்டதற்கு பணம் வாங்க மறுத்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்தேன். சாப்பிட்டு முடித்த பின் கைகழுவி விட்டு, காசும் கொடுத்துவிட்டு வெளியே வரும் போது சொன்னேன். ‘அத நாந்தான் எளுதினென்’. சட்டென்று என் கையைப் பிடித்தார் கருப்பையா பிள்ளையின் மகன்.

கண்கள் கலங்க, ‘அண்ணே, நீங்கதானா அது? ரொம்ப சந்தோஷண்ணே. எங்க அப்பாவப் பத்தி, அம்மாவப் பத்தில்லாம் படிக்கதுக்கு அவ்வளவு இதா இருந்துதுண்ணே.’ வார்த்தைகள் சிக்காமல் திணறினார். ‘பொறந்ததுலேருந்தே மொதலாளியா இருந்துட்டு, அப்பா எறந்ததுக்கப்புறம் வேற வளியில்லாம கொஞ்ச நாள் அந்த கடைல வேல பாத்தேன். அப்பொ கரக்டா நீங்க அங்கெ வந்துருக்கியெ.’ அழுதுவிடுவார் என்று தோன்றியது. அவர் தோளைத் தொட்டு ‘இப்போதான் நல்லா இருக்கீங்களே. அப்பா கடைய நல்லா நடத்திக்கிட்டிருக்கும் போது வேற என்ன வேணும்?’ என்றேன். கண்ணாடிக்குள் கைலியின் நுனியை விட்டு துடைத்தபடி, ‘ ரொம்ப நன்றிண்ணே’ என்றபடி என் கையைப் பிடித்தபடி வாசல் வரை வந்தார் கருப்பையா பிள்ளையின் இளைய மகன்.
[email protected]

3 thoughts on “கருப்பையா பிள்ளையின் இளைய மகன்

  1. NELLAI S MUTHIAH
    my uncle has told about this hotel.Especially about its idly and NANNARI PAAL.We planned to go many years ago,but still i have not visited.If iam correct,it is near RATHNA THEATRE and PARVATHI THEATRE.

Comments are closed.