காபி குடிக்கும் பழக்கம் ஏனோ என்னிடத்தில் சிறுவயதிலிருந்தே இல்லை. சென்னைக்கு, அதுவும் சினிமாவுக்கு, வந்த பிறகுதான் டீ குடிக்கும் பழக்கம் வந்தது. படப்பிடிப்பின் போது குடிக்கும் டீயின் எண்ணிக்கை தெரிவதேயில்லை. யார் வீட்டுக்குப் போனாலும் குடிப்பதற்கு காபி கொடுத்தார்களானால் வேண்டாம் என்று மறுத்து விடுவேன். ‘ஒருவாய் காப்பி குடிக்கறதுனால ஒன் கிரீடம் ஒண்ணும் எறங்கிறாது’. குஞ்சு எத்தனையோ முறை சலித்திருக்கிறான். நான் கேட்டதேயில்லை. ‘இங்கெ பாரு. ஒனக்கு காபி குடிக்கிற பழக்கம் இல்லேங்கறதுக்காக வேண்டாங்குறே. ஆனா அவங்க அதுக்காக ஒனக்குன்னு வேற ஏதோ தயார் பண்ணனும். எதுக்கு தேவையில்லாம மத்தவங்களுக்குக் கஷ்டத்த குடுக்கறே?’ வாத்தியார் பாலு மகேந்திரா ஒருமுறை சொன்னார். அன்றிலிருந்து எங்கு சென்றாலும், என்னிடம் கேட்காமல் காபி கொடுத்தால் எதுவும் சொல்லாமல் வாங்கி குடித்து விடுவேன்.

காபியை விலக்கியே வைத்திருந்தாலும் மற்ற பானங்களான நன்னாரி சர்பத், எலுமிச்சை சாறுடன் சோடா கலந்து உப்பிட்டு குடிக்கிற போஞ்சி, பதனீர், இளநீர் என இவையெல்லாம் அவ்வப்போது என் வாழ்க்கையில் இடம்பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. ராவண்ணா என்று எங்கள் குடும்பத்தினரால் அழைக்கப்பட்டு எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்த ராமையா பிள்ளை இப்போது உயிருடனில்லை. கட்டிட மேஸ்திரியாக இருந்த ராவண்ணா எங்கு சென்றாலும் உடன் செல்பவரிடம், ‘யோவ் வாங்க. அந்தா அந்தக் கடைல போயி ஆளுக்கு ரெண்டு கலர் அணைச்சுக்கிடுவோம்’ என்பார். டொரினோ, பவண்டோ, கோல்ட் ஸ்பாட் எதுவாக இருந்தாலும் மொட்டையாக அது கலர்தான்.

ராவண்ணாவின் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அவரது மனைவி மட்டுமே இருந்தார். என்னைப் பார்த்ததுமே பரபரப்படைந்தார். ‘உள்ள வாய்யா’. இரும்பு மடக்கு நாற்காலியை எடுத்துப் போட்டார். ‘வராதவன் வந்திருக்கே. இந்தப் பய வேற இல்லையெ. பள்ளிக்கூடம் போயிருக்கானெ. ஒரு அஞ்சு நிமிசம் இருக்கியா? முக்குக் கடையில போயி கலர் வாங்கிட்டு வந்திருதென்’ என்றார்கள். ராவண்ணா மட்டுமல்ல அவரது குடும்பத்துக்குள்ளும் கலருக்கு இருக்கும் செல்வாக்கைப் புரிந்து கொண்டேன். ‘வீட்டுக்கு வந்த ஆளுக்கு ஒரு கலர் கிலர் வாங்கிக் குடுத்து அனுப்ப வேண்டாமாட்டி?’ என்று ராவண்ணா சத்தம் போடுவார் போல. அதற்குப் பின் நான் அங்கு எத்தனை முறை போனாலும் கலர் குடிக்காமல் திரும்பியதில்லை. ‘அவாள் வீடு வரைக்கும் வந்துட்டோம். போயி ஆளுக்கொரு கலர் குடிச்சுட்டுத்தான் வருவோமே’. கிண்டல் செய்வான் குஞ்சு.

சுந்தரம் பிள்ளை பெரியப்பாவும் கலர்ப்பிரியர்தான். குறிப்பாக டொரினோ. ‘நேத்து ராயல் டாக்கீஸ்க்கு செகண்ட் ஷோ போயிருந்தேன். இண்டர்வல்ல டொரினோ குடிக்கும் போது கணேசன்பய வந்து பெரிப்பான்னு தோளத் தொடுதான். அத ஏன் கேக்கெ? அந்தாக்ல, வா மூதின்னு அவனுக்கும் ஒரு டொரினோவ வாங்கிக் குடுத்தேன்.’ ஸ்ட்ரா போட்டுக் குடிப்பது பெரியப்பாவுக்குப் பிடிக்காத ஒன்று. ரொம்ப நாட்களாக ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக்கொண்டுதான் இருந்தார். ஒரு முறை அப்படி உறிஞ்சிக் கொண்டிருந்த போது பாட்டில் காலியானது தெரியாமல் சத்தம் வரும் வரை உறிஞ்சியிருக்கிறார். ‘பாத்தா பெரிய மனுசன் மாதிரி தெரியுது. இப்படியா பாட்டில் காலியானது தெரியாம அசிங்கம் புடிச்சாக்ல சத்தம் போட்டு உறியறது மாடு களனி குடிக்க மாதிரி?’ போகிற போக்கில் யாரோ சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவமானத்தில் அன்றோடு பெரியப்பா தூக்கி எறிந்தது, ஸ்ட்ராவை. டொரினோவை அல்ல. இறக்கும் வரை டொரினோவை அவர் மறக்கவேயில்லை.

ஸெவென் அப் வாங்கிக் குடித்து ‘ஏவ் ஏவ்’ என ஊரையே காலி செய்யுமளவுக்கு சத்தமாக ஏப்பம் விடும் நபர்களைப் பார்த்திருக்கிறேன். ஸ்டைலாக ஒரு சமோசா அல்லது ஒரு பஃப் வாங்கிக் கடித்துக் கொண்டு, கொக்க கோலாவைக் குடித்து விட்டு ‘இதுதான் என்னாட லஞ்ச்’ என்று சொல்லும் இளைஞர்களும், யுவதிகளும் இப்போது இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாகரிகச் சிறுசுகள் பிஸ்ஸா தின்று பெப்ஸி குடிக்கிறார்கள். ஃப்ரூட்டி உறியாத சின்னப் பிள்ளைகள் இப்போது எங்குமே இல்லை.

மேற்படி பாட்டில் பானங்களில் சிலரது பிரத்தியேக ரஸனை ஆச்சரியத்தை வரவழைப்பவை. என் வாத்தியார் பாலு மகேந்திரா கோக்கில், பெப்ஸியில் கொஞ்சம் உப்பு போட்டு குடிப்பார். ‘கேஸ கம்ப்ளீட்டா எடுத்துரும். குடிச்சு பாரேன்’. குடித்துப் பார்த்திருக்கிறேன். உண்மைதான். பாரதி மணி பாட்டையாவுக்கு அது சிம்லாவாகவே இருந்தாலும் ஃபிரிட்ஜில், அதுவும் ஃப்ரீஸரில் வைத்து ச்சில்லென்று கை நடுங்க எடுத்து கொடுக்கும் தண்ணீரோ, பாட்டில் பானங்களோ வேண்டும். இதமான சூட்டில் பருத்திப் பால் குடிப்பது போல் மடக்கென்று முழுங்கி விடுவார். ‘இன்னும் சில்னஸ் பத்தல’ என்பார். ‘இவருக்கு ஐஸ ஒடச்சுத்தான் வாயில தட்டணும்’. மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

சென்னையில் ஆடம்பரமான குளிர்பானங்களை வேறு வழியில்லாமல் குடித்துப் பழகி வெறுத்துப் போயிருந்தார் கவிஞரும், ஒளிப்பதிவாளருமான நண்பர் செழியன். திருநெல்வேலியிலிருந்து நாங்கள் பாவநாசம் செல்லும் வழியில் திடீரென செழியனுக்கு ஓர் ஆசை தோன்றியது. ‘ ஏங்க, காளி மார்க் பவண்டோ குடிச்சு ரொம்ப வருஷமாச்சு. இங்கெ கெடைக்கும்ல?’ என்றார். அப்போது நாங்கள் காரை நிறுத்திவிட்டு விக்கிரமசிங்கபுரத்தில் நின்று கொண்டிருந்தோம். உடனிருந்த மீனாட்சி பயலிடம் சொன்னேன். ‘சித்தப்பா, நீங்க இங்கனையே இரிங்க. நான் போயி வாங்கிட்டு வாரேன்’ என்று நகர்ந்தான். ‘எல, கெடைக்கலென்னா விட்டுரு. திருநவேலி போயி பாத்துக்கிடலாம்’ என்றேன். ‘அவாள் ஆசப்பட்டுட்டா. ஒடனெ வாங்கிக் குடுக்கெண்டாமா? பெறகு நம்மள பத்தி என்ன நெனப்பா?’ கொஞ்ச நேரத்தில் இரண்டு பவண்டோக்களோடு வந்து விட்டான். காரில் போகும் போது எங்களுக்கு பெருமாள் கோயில் தீர்த்தம் மாதிரி பேருக்குக் கொஞ்சம் போல கொடுத்து விட்டு, பவண்டோவுடனே வாழ்ந்து கொண்டு பாவநாசம் வரை வந்தார் செழியன்.

‘ரொம்ப நாள் ஏங்கிக்கிட்டு இருந்துருப்பா போலுக்கு’. திரும்பிப் பார்த்து காதுக்குள் ரகசியமாகச் சொன்னான் மீனாட்சி. வயிறு நிறைய பவண்டோவை நிரப்பி விட்டு இரண்டொரு ஏப்பங்களோடு தூங்கியும் போனார் செழியன். பாவநாசம் தாண்டி உள்ளே சொரிமுத்தையனார் கோயில் பாலத்துக்குச் சென்றவுடன் காரை நிறுத்தினோம். ஸ்படிகம் போல் ஓடும் தாமிரபரணியைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் குளிக்கும் ஆசை வந்து விட்டது. குளிப்பதற்கு வாகான இடத்தை மீனாட்சி தேர்வு செய்துச் சொல்ல, ஒவ்வொருவராக ஆற்றுக்குள் இறங்கினோம். ‘சித்தப்பா, மொதல்ல ஒரு முங்கு போட்டிருங்க’ என்றான் மீனாட்சி. அவன் கையைப் பிடித்துக் கொண்டே முங்கி எழுந்தேன். மனம் குதூகலமடைந்தது. ‘எல, இருட்டுற வரைக்கும் குளிப்போம். என்னா?’ என்றேன். எல்லோரும் அவரவர்க்கு வசதியான இடத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள். செழியனை மட்டும் காணவில்லை.

‘செளியன எங்கலெ?’

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மீனாட்சி தூரத்தில் ஒரு திசையைக் காண்பித்து சொன்னான்.

‘சித்தப்பா, அங்கெ பாருங்க’.

தோளில் கிழற்றி போட்டிருக்கும் பேண்டுடன் ஒரு புதருக்குள் ஓட்டமும், நடையுமாகச் சென்று கொண்டிருந்தார் செழியன். கையில் காலியான ஒரு பவண்டோ பாட்டில்.

[email protected]

2 thoughts on “கலர்

  1. எலேய், நாம்பாட்டுக்கு ஒரு மூலையிலே ‘செவனேண்ணு’ கிடக்கேன். என்னை ஏம்புலே வம்புக்கு இளுக்கே?

    சுகா, நல்ல பதிவு. வாழ்த்துகள்.

    பாரதி மணி

  2. Bovonto என்னுடைய all time fave drink. முன்பு ஊரில் மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்தது, இப்போது சென்னையில் கூட கிடைக்கிறது. அதன்பின் செழியனை பத்திரமாக ஊருக்கு அழைத்து வந்தீர்களா? ;))

Comments are closed.