“சினிமாவில் இருப்பவர்கள் அனைவருமே வேறோர் கிரகத்திலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கென்று ஒரு தனியுலகம் உண்டு. கண்டிப்பாக அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு இந்தப் பக்கமென்றால் மதுரைக்காரர்களை அனுமதிப்பார்கள். திருநெல்வேலியைச் சேர்ந்தவர்களெல்லாம் அந்த மாய உலகத்துக்குள் நுழையவே முடியாது.” இப்படியெல்லாம் நெல்லைக்காரர்கள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் ஒரு படம் வந்தது. திருநெல்வேலி முழுவதும் ஒரே பரபரப்பு. அவர்கள் குளித்த அதே தாமிரபரணியில் குளித்து, படித்த அதே சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, படம் பார்த்த அதே பார்வதி தியேட்டரில் படம் பார்த்து, டீ குடித்த அதே சந்திப் பிள்ளையார் கோயில் முக்கு டீக்கடையில் டீ குடித்து வளர்ந்த ஒரு இளைஞர் சினிமா டைரக்டர் ஆகிவிட்டாரென்றால் சும்மாவா?

‘எல, நம்ம முத்தையாபிள்ளை பேரன் ஒரு படம் எடுத்திருக்கானாம். தெரியுமா?’

‘யாரு? மூத்தவனா?’

இல்லலெ. கடைக்குட்டி. சொடக்கு மணி’

‘அவன் எப்படில அங்கெ போனான்?’

‘அவ ஐயாவுக்கு நல்ல துட்டுல்லா. பெறகு ஏன் போகமாட்டான்?’

‘அது சரி. படம் எப்படி? வெளங்குமா? இல்ல, அடுத்த தேரோட்டத்துக்கு தேர் இளுக்க வந்துருவானா?’

‘புது வசந்தம்’ என்ற படம் ரிலீஸான புதிதில் இந்தப் பேச்சுக்கள் நெல்லையைச் சுற்றி உலா வந்தன. அதன் இயக்குனர் விக்ரமனைத் தெரிந்தவர்கள், தெரிந்ததாகச் சொல்லிக் கொண்டவர்கள் அனைவருமே ஒருவித மயக்கத்தில் இருந்தார்கள். ‘மணி நேத்து கூட எனக்கு ஃபோன் பண்ணினான்’ என்று கூசாமல் பொய் சொல்லிக் கொண்டார்கள். அநேகமாக மணி என்ற விக்ரமனைத் தெரிந்த அனைவருக்குமே சினிமா ஆசை வந்தது. வாகையடி முக்கில் உள்ள கல்பனா ஸ்டூடியோ வாசலில் கதை விவாதம் செய்யத் துவங்கினார்கள். பெரிய பெரிய தூண்கள் உள்ள அந்தக் காலக் கட்டிடமான கல்பனா ஸ்டூடியோவைத் தாண்டிச் செல்லும் போதெல்லாம், ‘அடுத்த ஸீன்ல நான் என்ன சொல்ல வாரெம்னா’ என்ற சத்தம் தேய்ந்து கேட்கும்.

விக்ரமனைப் பார்த்து சினிமாப் பித்து தலைக்கேறியவர்களில் டாக்ஸி டிரைவர் லட்சுமணப்பிள்ளையின் மகன் கண்ணனும் ஒருவன். சினிமாவுக்காக கண்ணன் செய்த முதல் வேலை, தன் பெற்றோர் வைத்த பெயரை மாற்றியதுதான். அவனாக சூட்டிக் கொண்ட புதிய பெயரும், அதைவிட அதற்கு அவன் சொன்ன காரணமும் படு சுவாரஸ்யமானது. ‘நாம இப்போ திருநவேலில இருக்கோம். ஏவியெம் ஸ்டூடியோல்லாம் மெட்ராஸிலெல்லா இருக்கு. இங்கெ நெல்லையப்பர் மாதிரி அங்கே யாரு சாமி? அப்போ அவர் பேரைத்தானே வச்சுக்கிடணும். என்ன சொல்லுதிய?’ என்றான். ஆக கண்ணன் கபாலியானான். கபாலி தீவிர ராதா ரசிகன். அவனுடைய சினிமா ஆசை ராதாவை ரசிப்பதிலிருந்துதான் தொடங்கியது. எல்லா விஷயத்திலும் தன் மகனைக் கண்டித்து வந்த லட்சுமணப்பிள்ளை ராதா விஷயத்தில் மட்டும் அமைதி காத்தார். அதன் ரகசியம் ஒரு நாள் தெரிய வந்தது. ‘எனக்கும் ராதாவைப் பிடிக்கும்’ என்றார் வெட்கத்துடன். நீண்ட நாட்கள் கழித்து ராதா குறித்தும் மகனை வறுத்தெடுத்தார். ‘யோவ், இவ்வளவு நாளா ஒமக்கும் ராதா புடிக்கும்னு அந்தப் பயலை ஒண்ணும் சொல்லாம இருந்தீரு. இப்போ என்னாச்சு திடீருன்னு?’ என்று கேட்டதற்கு, ‘ நான் ராதா புடிக்கும்னு சொன்னது, எம்.ஆர்.ராதாவை. இந்த செறுக்கியுள்ளெ ஏதோ மலையாளத்துக் குட்டியைப் பாத்துல்லா பல்லைக் காட்டிக்கிட்டிருந்திருக்கான்’ என்று அவமானத்துடன் வேதனைப்பட்டார்.

கபாலியின் சினிமா ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. கதை, கவிதைகள் எழுத ஆரம்பித்தான். சினிமாவில் நடிக்கும் ஆர்வமுள்ள அனைத்து இளைஞர்களும் ஒரு நாள் தம்மை கபாலி கதாநாயகனாயாக்கி விடுவான் என்று உறுதியாக நம்பி அவன் பின்னால் அலைந்தனர். காலையிலேயே கபாலியைத் தேடி அவன் வீட்டுக்கு வந்துவிடுவர். ‘நாமதான் ஒரு லூசுப்பயலைப் பெத்து வச்சிருக்கோம்னு பாத்தா, ஊருல ஏகப்பட்ட கோட்டிக்காரப் பயலுவல்லா அலையுதானுவொ’. வேலைக்குக் கிளம்பும் லட்சுமணப் பிள்ளை தலையில் அடித்துக் கொள்வார்.

லட்சுமணப்பிள்ளையுடன் டாக்ஸி ஸ்டாண்டில் டாக்ஸி ஓட்டும் ராமனும் கபாலியின் நடிகர் குழுவில் வந்து இணைந்தான். ராமன் பார்ப்பதற்கு கொஞ்சம் விஜயகாந்த் சாயலில் இருப்பான். கபாலி ராமனைப் பார்த்து ‘ நீதான் என் படத்துக்கு நாயகன்’ என்று சொல்லிவிட்டான். ராமனின் நடை மாறியது. கபாலியின் கட்டளைகளில் ஒவ்வொன்றாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தான். காபி, டீ குடிப்பதை நிறுத்தினான். நடிகர்கள் ஜூஸ்தான் குடிக்க வேண்டும் என்று கபாலி சொல்லியிருந்ததால் தினமும் எலுமிச்சம்பழ ஜூஸ் குடித்தான். என்றைக்காவது ஒரு நாள் மது அருந்திக் கொள்ளலாம் என்று கபாலி விதியை சற்று தளர்த்தியிருந்தான். அன்று மட்டும் மது. ஒரே ஒரு கண்டிஷன், அன்றைக்கு கபாலிக்கு மூடு இருக்க வேண்டும்.

இப்படியே எத்தனை நாளைக்குத்தான் ஜூஸ் குடித்துக் கொண்டே இருப்பது? நாம் சினிமா எடுக்கப் போவது எப்போ? என்று ஒரு நாள் ராமன் கோபமாகக் கேட்க, கபாலி அவனை சமாளிக்கும் விதமாக ராமனின் பெயரை மாற்றினான். புதிதாக கற்பனை செய்தெல்லாம் ராமனுக்கு பெயர் வைக்கவில்லை. ஒரே ஒரு ‘காந்த்’தை மட்டும் இணைத்து ராமனை ராம்காந்த் ஆக்கினான். ராம்காந்த் கொஞ்சம் அமைதியானான். நாள் ஆக ஆக சினிமாவில் நுழைவது குறித்து பெரும் சந்தேகம் வர ஆரம்பித்தது ராம்காந்த்துக்கு. காரணம், எல்லா திருநெல்வேலிக் காரர்களையும் போல கபாலியும் தச்சநல்லூரைத் தாண்டுவதாக இல்லை என்பது ராம்காந்துக்கு நன்றாக புரிந்து போனது. ராம்காந்தின் மனநிலை தனக்கு தெரிய வந்ததும் தினமும் சாப்பிடும் புரோட்டா சால்னாவுக்கும், இருட்டுக் கடை அல்வாவுக்கும், செகண்ட் ஷோ சினிமாவுக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கபாலி அதிரடியாக ஓர் யோசனையைச் சொன்னான். ராம்காந்த்தை கதாநாயகனாக்கி ஒரு வீடியோ படம் எடுக்கும் திட்டம்தான் அது. ராம்காந்த் உற்சாகமானான்.

வீடியோ படத்துக்கான மொத்த செலவையும் கதாநாயகன் ராம்காந்த் ஏற்றுக் கொள்ள பட பூஜை சந்திப்பிள்ளையார் கோயிலில் போடப்பட்டது. படத்தின் பெயர் ‘வராது வந்த நாயகன்’. அரைமணிநேரம் ஓடக்கூடிய அந்தப் படத்தின் கதாநாயகியைத் தேர்வு செய்ய கபாலி வள்ளியூர் கிளம்பிப் போனான். அங்கு கரகம் ஆடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு புடவையைச் சுற்றி கூட்டி வந்தான். ஆலங்குளத்துக்குப் பக்கத்திலுள்ள மானூரில் இரண்டு நாள் ஷ¥ட்டிங். மூன்றாவது நாள் படம் ரிலீஸாகிவிட்டது. அதாவது நண்பர்களுக்குப் போட்டுக் காட்டினான். அந்த சமயம் பார்த்து நான் ஊருக்குப் போயிருந்தேன். நானும் ‘வராது வந்த நாயகன்’ பார்க்கும் பாக்கியம் பெற்றேன். படம் ஆரம்பித்த உடனேயே ராம்காந்த்தும், அந்த வள்ளியூர் பெண்ணும் ‘வராது வந்த நாயகன்’ பாடலுக்கு இடுப்பை அசைத்து ஆடினார்கள். பிறகு எங்கோ ஒரு காட்டுக்குள் சென்றார்கள். அவர்கள் இருவரும் காதல் செய்து கொண்டிருக்கும் போது டைரக்டர் கபாலி ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு கிளைமாக்ஸ் வந்து விட்டது. கதாநாயகி மூன்று விடுகதைகள் போடுகிறாள். அதன் விடையை ராம்காந்த் சரியாக சொல்லி விடுகிறான். உடனே கதாநாயகி ‘போட்டீல நீங்க செவுச்சிட்டீங்க. இனிமே இந்த காலா உங்களுக்குத்தான்’ என்று ராம்காந்தைக் கட்டி அணைத்துக் கொள்கிறாள். படம் பார்த்து முடிந்ததும் கபாலியிடம் கேட்டேன்.

‘ஜெயிச்சுட்டீங்கங்கிறதை செவுச்சிட்டீங்கங்கறா. அது புரியுது. அது என்ன காலா?’

கபாலி பதில் சொன்னான்.

‘அந்த கேரக்டர் பேரு கலா. அதைத்தான் அந்த ஆர்டிஸ்ட் அப்படி சொல்லிட்டா. டப்பிங்க்ல சரி பண்ணிடலாம்னு விட்டுட்டேன்.’

‘வராது வந்த நாயகன்’ எடுத்த பின் கபாலி தன்னை ஒரு இயக்குனராக உறுதி செய்து கொண்டான். நான் ஊருக்கு போனால் என்னிடத்தில் மணிரத்னத்தை மணி என்றும், வாத்தியாரை பாலு என்றும், இளையராஜாவை ராஜா என்றும் விளித்துப் பேசுவான். அவனைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கு வயதாகி விட்டது. ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டனர். கடைசியாக நான் பார்க்கும் போது கபாலி ஒரு கரும்புச் சாறுக் கடையில் நின்று கொண்டிருந்தான். உடன் கருப்பாக ஒல்லியான ஒரு இளைஞன். கபாலி என்னிடம் வந்து பேசும் போது அந்த ஒல்லி இளைஞனும் அருகில் வந்து நின்றான். ‘இது யாரு? புதுசா இருக்கு?’ என்று கேட்டேன். உடனே கபாலி அவனைப் பார்த்து ‘ம், சொல்லு உன் பேரை. அவாள் சினிமால இருக்கா. தெரியும்லா’ என்றான். தயங்கித் தயங்கி கபாலியைப் பார்த்தவாறே அந்தப் பையன் என்னிடம் சொன்னான். ‘ என் பேரு செல்வகாந்த்’.

[email protected]

3 thoughts on “வராது வந்த நாயகன்

  1. எனக்கும் வீடியோ படத்துல ஒரு சான்ஸ் கொடுப்பாரா கபாலி ?
    நானும் ஒங்க ஊர்ப்பக்கம்தான்,தெங்காசி.

    தேவ்

  2. நான் ராதா புடிக்கும்னு சொன்னது, எம்.ஆர்.ராதாவை. // ஹா ஹா சூப்பர்.

    நெடிய பதிவுகளைப் படித்தல் என்பது சைன் டீட்டா, காஸ்ட் டீட்டா கணக்குகளைப் போல கடினம் எனக்கு. வெகுநாட்களுக்குப் பின் ரசித்துப் படித்த நெடும்பதிவு இதுதான். அசத்தல்.

  3. ;)) கபாலிகள் நம்ம ஊரில் மட்டும் இல்லை சுகா, எல்லா ஊரிலும் இல்லையில்லை எல்லா வீதியிலும் இருக்கிறார்கள். jokes apart சீரியஸாக சினிமாவில் தேடல் இருந்து அது கிடைக்காமல் வாழ்க்கையைத் தொலைத்தவர்களை நினைத்தால் சில சமயம் சங்கடமாகவும் சில சமயம் கோபமாகவும் இருக்கிறது. என்ன செய்வது ‘கனவுத் தொழிற்சாலை’ நம்மை வசீகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

    பகிர்விற்கு நன்றி சுகா. ஊரை மனக் கண்முன் நிறுத்தும் மண்வாசம் கலந்த எழுத்து உங்களுடையது. வெகுவாக ரசித்தேன் ;)))

Comments are closed.