கமலஹாசன் அவர்களிடம் ஒரு முறை கேட்டேன். ஏழெட்டு மொழிகள் தெரிந்த நீங்கள் வேற்று மொழி கற்றுக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன் என்று. கொஞ்சம் முயற்சியும், நிறைய ஆர்வமும் இருந்தால் எந்த பாஷையும், எத்தனை பாஷையும் கற்றுக் கொள்ளலாம் என்றார். அது உண்மைதான். என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு ஒன்றிருந்தால் ஒன்று இருக்காது. தமிழையே ஒழுங்காகக் கற்றுக் கொள்ளவில்லை என்கிற தாழ்வுணர்ச்சி இன்று வரை உண்டு. அது போக கொஞ்சம் உடைந்த ஆங்கிலம் தெரியும். அதாவது எங்காவது போனால் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு தங்க, குளிக்க, சாப்பிட முடியும். அது போதாதா. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தமிழ், ஆங்கிலம் தவிர ஹிந்தி எழுதப்படிக்கத் தெரியும். தொடர்ந்து ஆர்வமுடன் பார்த்த மலையாளப் படங்களின் புண்ணியத்தில், யார் என்னிடம் மலையாளத்தில் பேசினாலும் என்னால் புரிந்து கொள்ள முடியும். முக்கியமான மலையாள ஜோக்குகளை நண்பர் ஜெயமோகன் என்னிடத்தில் மலையாளத்திலேயே சொல்வார். மோகனுக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம் தவிர சமஸ்கிருதப் பரிச்சயமும் உண்டு. சகோதரி அருண்மொழிக்கும் தமிழ், ஆங்கிலம் தவிர மலையாளம் தெரியும் என்றே நினைக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் படித்த ஹிந்தியில் ‘க’ ஒன்றைத் தவிர வேறு ஒன்றுமே நினைவில் இல்லை.1996 ஆம் வருடம் என் ஆசான் திரு.பாலு மகேந்திரா அவர்கள் ஒரு ஹிந்தி படம் எடுக்க முடிவு செய்தார். நான் அவருடைய அஸோஸியேட் டைரக்டர். படப்பிடிப்பு தேதி நெருங்க நெருங்க, எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ரேவதி, ரமேஷ் அரவிந்த், ஹீரா என எனக்கு நன்கு பழக்கமான தென்னிந்திய நட்சத்திரங்கள்தான் நடிக்கிறார்கள் என்றாலும் வசனம் சொல்லிக் கொடுக்க வேண்டுமே. அங்குதான் சிக்கல். பொதுவாகவே நான் வசனம் சொல்லிக் கொடுக்கும் முறையில் திருப்தி அடைந்து காமிராவிலேயே அமர்ந்து விடுவார் என் வாத்தியார். பாடல்கள் பற்றி முடிவு செய்ய இளையராஜா அவர்களைப் பார்க்க போய் அவருக்காகக் காத்திருந்த போது மெல்ல வாத்தியாரிடம் விஷயத்தை சொன்னேன். என்ன சொல்றே. உனக்கு ஹிந்தி தெரியாதா என்றார். ‘நமஸ்தே’ங்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றேன். பிறகு ஹிந்தி தெரிந்த உதவியாளர்களை வைத்துக் கொண்டு சமாளித்தோம். இளையராஜா அவர்களும் எனக்குத்தெரிந்து தமிழ், ஆங்கிலம், மலையாளம்,தெலுங்கு பேசுவார். ஹிந்தியும் புரிந்து கொள்வார். வாத்தியாருக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலைமை உண்டு. சிங்களமும் தெரியும். மலையாளம் பேச மாட்டார். புரிந்து கொள்வார்.

நண்பர்களில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தமிழ், ஆங்கிலம் தவிர மலையாளம் படிப்பார்.தெலுங்கு புரிந்து கொள்வார். ‘நான் கடவுள்’ படத்தில் பணியாற்றியவரும், இசை விமரிசகரும், ஏ.ஆர்.ரஹ்மானின் நண்பருமான எழுத்தாளர் ஷாஜிக்கு எட்டு பாஷைகள் எழுதப் படிக்க தெரியும். நாஞ்சில் நாடன் அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, மராட்டி என ஐந்து மொழிகள் தெரியும் என்றே கருதுகிறேன். பாரதி மணி பாட்டையாவுக்கும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் என பல பாஷைகளில் புலமை உண்டு. எங்களைப் போன்ற நெருக்கமானவர்களிடம் அவர் பேசும் பிரத்தியேக பாஷை பற்றி பொதுவில் சொல்ல இயலாது.

என் வீட்டம்மாவுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகள் தெரியும். இதில் தமிழில் மட்டும்தான் கொஞ்சம் புலமை கம்மி. தனக்குத் தெரிந்த எல்லா பாஷைகளிலும் என்னை சராமாரியாக அவர்கள் தாக்கும் போதெல்லாம் எல்லா கணவர்களுக்குமான பொது மொழியாகிய மெளனமொழியில் பதிலடி கொடுப்பேன். நிலைகுலைந்து போவார்.

ஹிந்தி தெரியாமல் ஜெயமோகன், ஆர்தர் வில்ஸன், ஆர்யா உட்பட நாங்களனைவரும் நாற்பது நாட்கள் காசியில் பட்ட பாட்டை ஒரு தனி புத்தகமாகவே எழுதலாம். ரயிலில் நாங்கள் பயணிக்கும் போது எங்களுடன் நான் மிகவும் மதிக்கும் கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் வந்தார். ஜி.வி.ஐயர், எம்.டி.வாசுதேவன் நாயர், பரதன் போன்ற ஜாம்பவான்களுடன் பல மொழிப் படங்களில் பணியாற்றிய மேதை அவர். இந்தியா முழுதும் சுற்றியவர். இரண்டு நாட்களும் ரயிலில் பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டே சென்றோம். பேச்சுவாக்கில் நான் கிருஷ்ணமூர்த்தி ஸாரிடம் உங்களுக்கு ஹிந்தி தெரியும்தானே ஸார் என்று கேட்டுத் தொலைத்து விட்டேன். மனிதருக்கு மூக்கின் மேல் கோபம் வந்துவிட்டது. என்ன ஸார் கேக்குறீங்க.? எனக்கு எப்படி ஹிந்தி தெரியாமல் போகும் என்றார். நான் பதறிப் போய் அவர் கைகால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். ஜெயமோகனும் இதுதான் சாக்கென்று ‘அவருக்கிருக்கும் அனுபவத்திற்கு அவரிடம் போய் இப்படி முட்டாள்தனமாகக் கேட்கலாமா’ என்று என்னை வறுத்தெடுத்து விட்டார். அதன் பிறகு காசிக்குப் போய் சேரும் வரை கிருஷணமூர்த்தி ஸாரிடம் ஒரு சேவகன் போல் பணிவுடன் நடந்து கொண்டேன். ‘மோகன், நாம் காசியியில் எங்கு சென்றாலும் கிருஷ்ணமூர்த்தி ஸாருடனே செல்வோம். அதுதான் நமக்கும் நல்லது’ என்று ஜெயமோகனிடம் சொன்னேன். அவரும் ஒத்துக் கொண்டார். காசியில் போய் இறங்கியதும் போலீஸிடம் மாட்டிக் கொண்டோம். ஒற்றைக் கடுக்கன் போட்டிருக்கும் ஆர்தர் வில்ஸனும், பச்சை கண்கள் கொண்ட ஆர்யாவும் சந்தேகத்துக்கிடமின்றி தீவிரவாதிகள் என்றே உத்திரப் பிரதேச போலீஸார் நம்பினர். கிருஷ்ணமூர்த்தி ஸார் எங்களுக்கு முன்பே காரில் ஹோட்டலுக்குச் சென்று விட்டதால் எங்களை காப்பாற்ற ஹிந்தி தெரிவார் யாருமில்லை. அப்புறம் ஒரு வழியாக எங்கள் தயாரிப்பு நிர்வாகி லோகு வந்து இன்ன பாஷை என்றே கண்டுபிடிக்க முடியாத ஒரு பாஷையில் பேசி உ.பி.போலீஸை குழப்பி திகிலுக்குள்ளாக்கி எங்களை விடுவித்தார்.

கிருஷ்ணமூர்த்தி ஸாரிடம் போய் விஷயத்தை சொன்னோம். சே. . . . நான் இல்லாமல் போனேனே என்று வருந்தினார். அதன் பிறகு காசியில் கிருஷ்ணமூர்த்தி ஸாரை தொந்தரவு செய்யாமல் நாங்களே ஒரு மாதிரியாக சமாளித்துக் கொண்டோம். காரணம் வேறொன்றுமில்லை. ‘கிதர் ஹே’ என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த ஒரு ஹிந்தி வார்த்தையும் அவர் பேசி அந்த நாற்பது நாட்களில் நாங்கள் யாருமே கேட்கவில்லை. படப்பிடிப்பு முடிந்து ஒரு நாள் கங்கைக் கரையில் விறுவிறுவென நடந்து வந்து கொண்டிருந்த என்னிடமே ஒரு பேனரை காட்டி ‘ஈ கேலரி கிதர் ஹே’ என்று கிருஷ்ணமூர்த்தி ஸார் கேட்டதுதான் அதில் உச்சம்.

பல மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமிருந்தாலும் எனக்கும், கவிஞரும், ஒளிப்பதிவாளருமான என் நண்பர் செழியனுக்கும் தெரிந்ததென்னவோ தமிழும், ஆங்கிலமும்தான். இதுபோக இப்பூவலகில் எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த மூன்றாவது மொழியைப் பேசும் அந்த மூன்றாவது நபர் இப்போது உயிருடன் இல்லை.

அந்த நபர் காலஞ்சென்ற திரு.யாகவா முனிவர். மொழி இனான்ய மொழி.

8 thoughts on “பன்மொழிப்புலமை

  1. ஒரு பேனரை காட்டி ‘ஈ கேலரி கிதர் ஹே’ என்று கிருஷ்ணமூர்த்தி ஸார் கேட்டதுதான் அதில் உச்சம்
    நகைச்சுவை உட்சம்

    அந்த நபர் காலஞ்சென்ற திரு.யாகவா முனிவர். மொழி இனான்ய மொழி.
    :))

    நன்றி

  2. I like your sense of humour and your way of writing. I regularly read your “Moongil Moochu”. In this your “Mouna Mozhi” badiladi is superb.

    Vijayalakshmi Ramesh

  3. I like your post very very much. i became fan of yours
    But, Sorry, i can’t accept Anonymous comment (replaced great Sujatha)

  4. Hi sir. i came across your moongil moochu thru vikadan. i never missed reading it. but i felt that it ended in a jiffy. I come from a village in coimbatore. while i read your articles it reminds me of my childhood. u r a good writer. God bless U.

Comments are closed.