கயத்தாற்றில் கீரைப் பாத்திகள் நிறைய உண்டு. அங்கு விளையும் கீரை, விற்பனைக்காக திருநெல்வேலிக்கு வந்து மூடை, மூடையாக குவியும். கயத்தாற்றிலிருந்து லாரியில் ஏற்றப்பட்ட கீரை மூடைகள் திருநெல்வேலி ஜங்ஷனில் கொண்டு வந்து இறக்கிப் போடப்படும். பின் அவற்றை தலைச்சுமையாகத் தூக்கிக் கொண்டு கீரைக்காரர்கள் என்று சொல்லப்படும் கீரை வியாபாரிகள் திருநெல்வேலி டவுணுக்கு வருவார்கள். முதல் நாள் இரவு வரும் மூடைகளிலுள்ள கீரை, மறுநாள் அதிகாலை தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு திருநெல்வேலித் தெருக்களில் விற்பனை செய்யப்படும்.

கயத்தாற்றுக் கீரைக்காரர்கள் சேசுமணி, ராஜேந்திரன், சேசுராஜ் போன்றவர்கள் டவுணில் ஆளாளுக்கு தெருக்களைப் பிரித்துக் கொண்டு கீரை விற்று வந்தார்கள். இவர்களில் ஒருவர் விற்கும் பகுதிக்கு மற்றவர் செல்வதில்லை. அப்படி ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் அவர்களுக்கிடையே இருந்தது. இம்மூவரும் இரவு கீரை மூடையுடன் தங்குமிடம், அம்மன் சன்னதியிலுள்ள எங்கள் வீடு. முப்பது பேர் படுக்கக்கூடிய விஸ்தாரத்துடன் உள்ள வாசல்வெளியில் இவர்கள் படுப்பதற்கு வசதியாகக் குளிர்ச்சிக்காக தரை முழுதும் தண்ணீர் ஊற்றி வைத்திருப்போம். அவர்கள் வந்து படுக்கும் நேரம் தரை நன்கு காய்ந்திருக்கும்.

இம்மூவரில் சேசுமணி வயதில் பெரியவர். உடம்பெல்லாம் முடியாக, குட்டையாக இருப்பார். கருத்த முகத்தில் மெலிதான பென்ஸில் மீசை உற்றுப் பார்த்தால்தான் தெரியும். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராஜேந்திரன் சேசுமணிக்கு இளையவர். ஆரம்பகால ரஜினிகாந்தின் ஹேர்ஸ்டைலுடைய ராஜேந்திரன், அவ்வப்போது தலையை சிலுப்பி தன் தலைமுடியை சரி செய்து கொள்வார். அவருக்கும் இளையவனான சேசுராஜ் எங்கள் தோழன். கழுத்தில் சிலுவை டாலரும், கையில் மேரிமாதா உருவம் பொறித்த பிளாஸ்டிக் மோதிரமும் அணிந்திருப்பான். ‘தும்’ என்று கீரை மூடைகளைக் கீழே போடும் சத்தம், இந்தக் கீரைக்காரர்களின் வருகையை எங்களுக்கு தெரிவிக்கும்.

ராஜேந்திரனும், சேசுராஜும் முன்னதாகவே வந்து விடுவார்கள். அகல கேரியர் வைத்த லோடு சைக்கிளில் கீரை மூடையை கட்டி ஓட்டி வருவர். சேசுமணி தாமதமாகவே வருவார். தலைச்சுமையாக மூடையைச் சுமந்து கொண்டு ஜங்க்ஷனிலிருந்து டவுண் வரை வியர்வையில் குளித்தபடி வந்து சேர்வார்.

‘என்னடே, இன்னைக்கு நேரமாயிட்டு?’ என்று கேட்கும் ஆச்சிக்கு, ‘ராலிக்காரன் கொஞ்சம் சொணக்கிட்டான்’ என்று பதில் சொல்லிக் கொண்டே துண்டால் உடம்பு, முகமெல்லாம் துடைத்தபடி தரையில் உட்காருவார் சேசுமணி. (அவர் ராலி என்று சொல்வது லாரியை). லாரிக்காரன் மீது சேசுமணி வீண்பழி போடுகிறார் என்பது ஆச்சிக்குத் தெரியும். கூடவே சேசுமணிக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்ற விஷயமும் தெரியும். ஆனால் கேட்க மாட்டாள். தன் பக்கத்திலேயே வைத்திருக்கும் செம்புத் தண்ணீரை எடுத்து கொடுப்பாள்.
கொஞ்ச நேரம் ஆச்சியிடம் ஊர் மற்றும் குடும்பக்கதைகள் பேசிக்கொண்டிருப்பார் சேசுமணி. ராஜேந்திரனும், சேசுராஜும் என்னையும், என் தம்பியையும் அவர்களுடன் சேர்த்துக் கொண்டு கபடியும், கண்ணைக்கட்டியும் விளையாடுவார்கள். ஆடிக் களைத்த பின் சாப்பிட உட்காருவார்கள். அவர்கள் கொண்டு வந்த சோற்றுக்கு எங்கள் வீட்டு அடுக்களையிலிருந்து அவர்கள் கேட்காமலேயே தொடுகறியும், குழம்பும் வரும். துணியில் சுற்றி வைத்திருக்கும் சோற்றுப் பொட்டலத்தை அவர்கள் பிரிக்கும் போது துணி கிழிவது போன்ற சத்தம் கேட்கும். ஆனால் கிழியாது. அருகில் கிடக்கும் கீரை மூடைகளிலிருந்து மண்ணும், இலையும் கலந்த ஒரு வாசனை பரவ, பல இரவுகளில் எங்கள் இரவுச் சாப்பாடு அவர்களுடனே கழிந்திருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை போக கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசையன்று கீரைக்காரர்கள் வருவதில்லை. நாள், கிழமைகளை அவற்றை கடைப்பிடிக்கும் திருநெல்வேலிக்காரர்களை விட கீரைக்காரர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்.

‘எம்மா, வார பொதன்கெளமதானெ அம்மாசி? கொஞ்சம் கேலண்டர் பாத்து சொல்லுங்களேன்.’

காலண்டரில் மிகச்சரியாக புதன் கிழமையன்று அமாவாசை என்று வட்டக்கறுப்புக்குறி போடப்பட்டிருக்கும். ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்குப் போகவேண்டுமென்பதால் அன்றைக்கு அவர்கள் விற்பனைக்கு வருவதில்லை.

ஆச்சி காலத்துக்குப் பிறகும் கீரைக்காரர்கள் எங்கள் வீட்டில் கொண்டு வந்து மூட்டைகளைப் போட்டுத் தங்கிக் கொண்டுதானிருந்தார்கள். தனது வருமானத்தில் சொற்பத் தொகையை சேசுமணி அவ்வப்போது அம்மாவிடம் கொடுத்து வருவார். வருடத்துக்கு ஒருமுறை வரும் மாதா கோயில் திருவிழாவையொட்டி ஜவுளி எடுப்பதற்காகவே இந்த சேமிப்பு. கயத்தாற்றிலிருந்து அவரது மனைவியும், மகனும் வருவார்கள். ஆரெம்கேவியில் போய் துணி எடுத்துவிட்டு அம்மாவிடம் கொண்டு வந்து காட்டிவிட்டே பஸ் ஏறுவார்கள். கரும்பச்சை, ரத்தச்சிவப்பு போன்ற வண்ணங்களிலேயே உடைகளைத் தேர்வு செய்வார்கள்.

‘நீங்களே சொல்லுங்கம்மா. போன திருளாக்குத்தானெ மாம்பளக்கலர் சட்ட எடுத்து குடுத்தோம். இந்த வருசமும் அதையே கேக்கான். இந்த திக் ரோஸ்கலர் அவனுக்கு வேண்டாமாம். இப்பல்லாம் பிள்ளைய இந்த மாதிரிதான் போடுது. மூதிக்கு புரிய மாட்டெங்கு’.
மூக்கின் பாதியை மறைத்து மூக்குத்தியணிந்திருக்கும் சேசுமணியின் மனைவி சொல்வார். சேசுமணிக்கு டிரவுசர், சட்டையணிந்தால் எப்படி இருப்பாரோ, அதே சாயலில் உள்ள பெரிய காதுகளையுடைய அவரது மகன் கலங்கிய கண்களுடன் அம்மா முன் உட்கார்ந்திருப்பான்.

‘பிஸ்கட் திங்கியாலெ?

குனிந்த தலை நிமிராமல் ‘வேண்டாம்’ என்ற தலையசைப்பு.

‘பாக்கெட் முளுசும் ஒனக்குத்தான்’.

அம்மாவிடமிருந்து பிஸ்கட் பாக்கெட்டை வாங்கும் போதே அவன் கண்ணீர் மறைந்திருக்கும். பிஸ்கட் தின்னும் போது சிரிப்பை அடக்க முயல்வான். மாதா கோயில் திருவிழாவின் போது யார் நடித்த படம் போடுவது என்பது குறித்த சண்டை ராஜேந்திரனுக்கும், சேசுராஜுக்கும் ஆரம்பமாகிவிடும். ரஜினி ரசிகரான ராஜேந்திரனுடன், சிவாஜி ரசிகனான சேசுராஜ் மல்லுக்கு நிற்பான்.

‘வருசா வருசம் எங்கள் தங்க ராஜாவே பாத்திக்கிட்டிருக்க முடியுமா? இந்த வருசம் யார் என்ன சொன்னாலும் சரி. நான் போட்ட சவால்தான்.’

ராஜேந்திரன் அடித்துச் சொல்வார். வயதில் சிறியவனான சேசுராஜால் ஒன்றும் செய்ய முடியாது.

‘எனக்கென்ன. ஜிவாஜி படம் பாக்குறதுக்கு எங்களுக்கு கொட்டாயியா இல்ல. ராயல் டாக்கீஸ்ல இப்பொ கூட சங்கிலி போட்டிருக்கான். போய் பாத்துக்கிடுவென். எக்கேடும் கெட்டு போங்க.’

சிவாஜியை ஜிவாஜி என்றே உச்சரிக்கும் சேசுராஜ் சும்மா உட்கார்ந்திருக்கும் போது அவரது படப்பாடல்களைப் பாடி மகிழ்வான். மகிழ்ச்சி அவனுக்கு மட்டுமே. காரணம், அவன் பாடும் வரிகள்.
உதாரணம்
‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்
வாளவைப்பான் என்று பறந்து சென்றாள்.’

சேசுமணிக்கு பெரிதாக சினிமாவில் ஆர்வமில்லை. அவரது ஆர்வமெல்லாம் கோயில் கொடைகளில்தான். அதுவும் இரவு விடியவிடிய நடைபெறும் கும்பக்குட (கரகாட்டம்) ஆட்டத்தில் அவருக்கு தீராத மோகம். திருநெல்வேலி டவுணில் எந்தப்பகுதியில் கோயில் கொடையென்றாலும் அன்று இரவு அங்கு சேசுமணியைப் பார்க்கலாம். அது ராஜேந்திரனோ, சேசுராஜோ கீரை விற்கும் பகுதியாக இருந்தாலும் கும்பக்குடத்துக்காக சேசுமணி ஒப்பந்தத்தை மீறுவார். ஒருநாள் தேரடிப்பக்கம் ஒரு கும்பக்குட ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. பலமாக விசிலடித்தபடி கும்பக்குடக்காரியுடன் மேல்துண்டை இறுக்கமாகத் தலையில் தலைப்பாகையாகக் கட்டியிருந்த ஒரு மனிதர் ஆடிக் கொண்டிருந்ததை தூரத்திலிருந்தே நானும், கணேசண்ணனும் பார்த்துவிட்டோம். கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் சென்று நின்று கொண்டோம்.. ஆட்டத்தின் நடுவே தற்செயலாக நாங்கள் நிற்பதை கவனித்துவிட்ட சேசுமணி, சிக்கென்று தன் இரண்டு கண்களையும் மூடிக் கொண்டார். ஆட்டம் மட்டும் நிற்கவேயில்லை.

அம்மா இருக்கும் வரை கீரைக்காரர்களுக்கும், எங்களுக்குமான உறவு தொடர்ந்து வந்தது. பிறகு மெல்ல குறைந்து பின் சுத்தமாக தொடர்பே இல்லாமல் போய்விட்டது. மதுரையிலிருந்து காரில் திருநெல்வேலி செல்லும் போது வலது பக்கத்தில் கம்பீரமாக நிற்கும் நடிகர் திலகம் சாயலிலுள்ள கட்டபொம்மன் சிலையைப் பார்க்கும் போது கயத்தாறு வந்து விட்டது தெரியவரும். புதிதாக திருநெல்வேலிக்கு வருபவர்கள் காரை நிறுத்தி கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் அவரது சிலையை அண்ணாந்து பார்த்தபடி சிறிது நேரம் அங்கு செலவிடுவார்கள். ஒருசிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வதுமுண்டு. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் மூலம் தாங்கள் அறிந்து வைத்திருக்கிற கட்டபொம்மனைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போவார்கள். அவர்களுக்கெல்லாம் கயத்தாறென்றால் நிச்சயமாகக் கட்டபொம்மன்தான் நினைவுக்கு வருவார். எங்களுக்கு கீரைக்காரர்கள்.

3 thoughts on “கயத்தாறு

  1. நல்ல ஒரு பதிவு. ரசித்துப் படித்தேன். கீரைக்காரர்களை நேரில் பார்த்து, அவர்களுடன் பேசுவது போன்றே உணர்ந்தேன். பதிவிற்கு நன்றி.

    அது என்ன, அமாவாசையன்று கீரை சாப்பிட கூடாதா? என்ன காரணம்?

    ராஜ சுப்ரமணியன்

  2. Really nice to read .whenever I read ur blog I feel that as if I belongs to ur hometown.now a days I started talking about ur hometown always to everyone.really nice sir

Comments are closed.