பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு எனது பெரியப்பாவின் வீட்டிலிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. (இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன்.) நான் ஏழாவதோ, எட்டாவதோ படித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை கடைசியாகப் பார்த்திருந்தேன். எல்லாப் பெரிய குடும்பங்களையும் போல உப்புப் பெறாத காரணங்களுக்காக அத்தனை காலம் தொடர்பில்லாமல் பிரிந்திருந்தோம். அவ்வளவு நீண்ட இடைவெளியில் நான் சென்னைக்கு வந்து திரைப்படத்துறையில் நுழைந்திருந்தேன். பெரியப்பா பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரி. குடும்பத்துடன் பல அண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறியவர். என்னை அவர்கள் அழைத்தது, அவர்களின் இரண்டாவது மகனின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு. மூத்த மகனின் திருமணத்துக்கு அழைக்கவேயில்லை. எங்கள் குடும்பத்தின் சார்பாக இதற்கு என்னைப் போகச் சொல்லியிருந்தனர் என்பெற்றோர். சிறுவனாக என்னைப் பார்த்துப் பழகியிருந்த பெரியப்பாவுக்கும், பெரியம்மைக்கும் நீண்ட தாடி, மீசையுடன் வளர்ந்த வாலிபனான என்னைப் பார்த்ததில் ஆச்சரியம் கலந்த சந்தோஷம். ஐயா வா, ஐயா வா என்று தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறைதான்.
பெரியப்பாவின் வீட்டில் காலைச் சிற்றுண்டி அருந்திவிட்டு ஒரு வேனில் பெண்ணின் வீட்டில் நடக்க இருந்த நிச்சயதார்த்த விழாவுக்குக் கிளம்பினோம். வேனில் இருக்கும் போதே அத்தனை வருஷம் விட்டுப் போன பல கதைகளை பெரியம்மை சொல்லிக் கொண்டே வந்தாள். ஏதோ நினைவு வந்தவளாய் வேன் டிரைவரிடம் சொன்னாள்.
‘அந்த டர்னிங்க்ல ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போகணும். நிறுத்த மறந்துராதீங்க’
‘யார?’ நான் கேட்டேன்.
‘அவருதான் துப்பு சொன்னவரு’
‘என்னது துப்பச் சொன்னவரா?’
‘கொளுப்பு மட்டும் இந்தப் பயலுக்குக் கொறையவே இல்ல′.
சிரிப்பை அடக்கியபடி சொன்னாள் பெரியம்மை.
துப்பு என்னும் வார்த்தையை கொலை, கொள்ளை வழக்கு பற்றிய செய்திகளில் செய்தித்தாள்களில் மட்டுமேதான் படிப்பது வழக்கமாகயிருந்ததால் அதற்கு உள்ள வேறோர் அர்த்தத்தை நான் சுத்தமாக மறந்திருந்தேன். திருமணத்துக்கான வரன் குறித்த தகவல் சொல்வதை துப்பு சொல்வது என்று திருநெல்வேலியில் சொல்வதுண்டு. மற்ற ஊர்களில் இது வழக்கத்தில் உள்ளதா என்று தெரியவில்லை.
இப்படி துப்பு சொல்பவர்களை வெறுமனே தரகர்கள் என்று குறுக்கி விட முடியாது. இப்படி துப்பு சொல்பவர்கள் பணம் பெற்றுக் கொள்வதுண்டுதான் என்றாலும் அதையும் தாண்டி இரு குடும்பங்களின் நன்மைக்காகவும் உளமாற பாடுபடுபவர்கள். எப்படியும் இவர்கள் சம்பந்தப் பட்ட பெண், மாப்பிள்ளை வீடுகளின் குறை, நிறையை நன்கு அறிந்தவராகவே இருப்பர். கூடுமானவரை அதை முழுக்க தெரியப்படுத்தாமல் சமாளித்து பரஸ்பரம் இரு குடும்பத்தாருக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தி கல்யாணப் பேச்சு நடக்கும் போதே அவர்களை நெருக்கமானவர்களாக மாற்றி விடுவர். திருமணம் நடந்து முடிந்த பிறகும் கூட ஏற்படும் சின்னச் சின்ன குடும்பச் சச்சரவுகளில் உறவுப் பாலமாக செயல்பட்டு அதை நீக்கி வைப்பவர்களும் உண்டு.
marriage-2எங்கள் குடும்பத்துக்கு அப்படி வேண்டிய ஒரு துப்பு சொல்பவராக முனியப்ப தாத்தாவை பார்த்து வருகிறேன். திருநெல்வேலி சைவ வேளாளர்களில் வள்ளிநாயகம், கோமதிநாயகம், மீனாட்சிசுந்தரம், நல்லகண்ணு, நெல்லையப்பன், சபாபதி என்ற பெயர்களுக்கு மத்தியில் எனக்கு தெரிந்த ஒரே ‘முனியப்பன்’ இவர்தான். முனியப்ப தாத்தா என் தகப்பனாருக்கு சித்தப்பா முறை. ஆனால் என் தகப்பனாரை விட பதினைந்து வயது இளையவர். குள்ளமாக, குண்டாக, மாநிற உடம்பெல்லாம் புசு புசுவென முடியாக உள்ள முனியப்பத் தாத்தா இல்லாமல் திருநெல்வேலியில் எந்த ஒரு வேளாளர் வீட்டுத் திருமணத்தையும் நான் பார்த்ததில்லை. மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து மறுநாள் மறுவீட்டுப் பலகாரப் பந்தியிலும், சொதிச் சாப்பாட்டிலும் அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருப்பார் தாத்தா. மணவயதிலுள்ள எல்லா பெண்களும் முனியப்ப தாத்தாவுக்கு பேத்திகள்தான். பையன்கள் பேரன்கள்தான். வசதி குறைந்த, வசதியான யார் வீட்டிலும் முனியப்ப தாத்தாவை அவர்கள் வீட்டு அடுக்களை வரை அனுமதிப்பார்கள். குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் அந்தஸ்து, சக்தி தெரிந்து அதற்கேற்ற வரனை முனியப்ப தாத்தாவே முதலில் மனதுக்குள் முடிவு செய்து விடுவார். அவருக்கு தெரியும் யார் யாருக்கு பொருந்திப் போகும் என்று. அந்த வகையில் பெரும்பாலான திருநெல்வேலி சைவ வேளாள ஆண்களுக்கு ‘மனைவி அமைவதெல்லாம் முனியப்ப தாத்தா கொடுத்த வரம்’.
முனியப்ப தாத்தாவை விட வயதில் மூத்தவர்களே ‘என்னடே முனியப்பா! பேத்தி உக்காந்து வருஷம் எட்டாகுது. இன்னும் ஒனக்கு அக்கற இல்லையே’ என்பார்கள். அவர்கள் சொல்லும் பேத்தி அவர்களின் பேத்திதான் என்றாலும் பொதுவாக உரிமையுடன் முனியப்ப தாத்தாவிடம் சொல்லி வைப்பார்கள். ‘நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியணுமாக்கும். எல்லாம் மனசுல இருக்கு’ என்று பதில் சொல்வார். மனதில் இருப்பதை செய்யும் வண்ணம் மாப்பிள்ளையின் ஜாதகத்தோடு சில நாள் கழித்து வருவார். ‘ நம்ம செவகாமி மூல நட்சத்திரம்லா. அதான் பொறுத்துக்கிட்டே இருந்தேன். இந்தா பாத்தேளா? பையனுக்கு அம்மை இல்லை. ஜாதகமும் பொருந்தி வருது. என்ன சொல்லுதிய?’ என்பார். எப்படியும் ஓரிரு மாதங்களில் அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிந்து விடும். அது முடிந்து அடுத்த திருமண வேலைகளில் மும்முரமாக இறங்கி விடுவார். அந்த சிவகாமிக்கு பிள்ளை பிறந்ததும் முதலில் முனியப்ப தாத்தாவுக்குதான் சொல்லி விடுவார்கள். அந்தப் பிள்ளைக்கு பெயர் சூட்டும் வைபவத்திலும் முனியப்பா தாத்தாவின் ஆட்சிதான். நாள் குறிப்பதிலிருந்து ஆசாரிக்குச் சொல்வது வரை இவர்தான் எல்லாவற்றையும் முடிவு செய்து சொல்வார்.
ஊருக்கெல்லாம் துப்பு சொல்லி திருமணம் நடத்தி வைக்கும் முனியப்ப தாத்தாவின் மனைவி அவருடன் வாழ்ந்தது ஒரு சில வருடங்கள்தான். பெரும் பணக்காரியான அவர் இவரிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு தன் மகனுடன் தனியே வாழ்ந்து வருகிறார். மகன் மீது கொள்ளைப் பாசம் முனியப்ப தாத்தாவுக்கு. அவன் கல்லூரிக்குச் செல்லும் போது எதிரே இவர் வந்தால் தன் தாயின் வளர்ப்பு காரணமாக சிரிக்கக் கூட செய்யாமல் பாராமுகமாகச் சென்றதை ஒருமுறை என்னிடம் கண்கலங்கிச் சொல்லியிருக்கிறார். ‘விடுங்க தாத்தா. அந்தப் பயலுக்குக் குடுத்து வைக்கல′ என்று சமாதானப் படுத்தினேன். தனக்குத்தான் குடும்ப வாழ்க்கை அமையவில்லை, மற்றவர்களாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்னும் நல்லெண்ணமே முனியப்ப தாத்தாவை இந்த துப்பு சொல்லும் வேலையில் ஆரம்பித்து திருமண வைபவங்களை முன் நின்று நடத்தச் செய்கிறது என்றே எண்ணுகிறேன்.
துப்பு கேட்பதில் மட்டுமல்ல. அசுப காரியங்களாக இருந்தாலும் முதலில் முனியப்ப தாத்தாவுக்குத்தான் ஆள் போகும். ஓடி வருவார். மரணம் நிகழ்ந்த வீட்டுக் காரர்கள் எப்படியும் படபடப்புடன் இருப்பார்கள். முனியப்பா துக்கத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாக எல்லா காரியங்களையும் கவனித்துக் கொள்வார். முதலில் சமையலுக்கு ‘தவுசுப் பிள்ளை’க்குச் சொல்லி விடுவார். பிறகு பலசரக்கு சாமான்கள் வாங்கி வருவார். நெல்லையப்பர் கோயிலுக்கு தகவல் சொல்வார். அம்மன் சன்னதி தெரு, ஸ்வாமி சன்னதி தெருவாக இருந்தால் பிணத்தை எடுக்கும் வரை நெல்லையப்பரும், காந்திமதி அம்மையும் குளிக்க மாட்டார்கள். எந்தெந்த ஊரில் அந்த வீட்டின் உறவினர்கள் இருக்கிறார்கள் என்னும் விவரம் அறிந்தவராதலால் அவரே எல்லோருக்கும் தகவல் சொல்வார். குடியானவனுக்கும் விஷயம் சொல்லி நீர்மாலை எடுத்தலில் ஆரம்பித்து மறுநாள் சாம்பல் கரைக்கும் வரை கூடவே இருந்து பொறுப்புடன் எல்லா விஷயங்களையும் செய்து முடிப்பார். துப்பு சொல்லும் வேலையை கூடுமானவரை பதினாறு நாட்களுக்கு ஒத்தி வைப்பார்.
முனியப்ப தாத்தாவைப் போலவே இன்னும் பலர் இந்தத் துப்பு சொல்லும் வேலையில் உண்டு. அவர்கள் அனைவருக்குமே இந்த பொது நற்குணங்கள் உண்டுதான். திரைப்படங்களில் பெரும்பாலும் காட்டப் படும் அசட்டுத் தரகர்கள் போல் ஒருவரை கூட நான் இதுவரையில் திருநெல்வேலியில் பார்த்ததில்லை. சென்னையில் பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் திருநெல்வேலியிலும் கூட துப்பு சொல்பவர்கள் மறைந்து போய் திருமண தகவல் நிலையங்கள் மலிந்து விட்டதாகத் தகவல். இந்தத் தகவல் நிலையங்களால் ஜாதகங்களையும், அவர்களின் வசதிகளையும் மட்டும்தான் தெரிவிக்க முடியும். முனியப்ப தாத்தா போன்ற துப்பு சொல்பவர்களால்தான் அந்தந்த குடும்பத்து உறுப்பினர்களின் வரவு, செலவு, தரம் அறிந்து சகலத்தையும் மனதுக்குள் கணக்கு போட்டுப் பார்த்து பொருத்தமான ஜோடிகளை இணைக்க முடியும். திருமணத்துக்குப் பின் வரும் பிணக்குகளையும் அலைந்து திரிந்து போராடி, தான் கெட்ட பெயர் வாங்கினாலும், கசப்பை சம்பாதித்தாலும் குடும்பத்தை இணைக்க பாடுபடவும் முடியும். வாழ்க்கை அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அனுபவம் காரணமாக யாருக்கு யார் பொருத்தம் என்பதை அவர்களால் தெளிவாக முடிவு செய்ய முடியும்.
‘நல்லா விசாரிக்க வேண்டாமா? துப்பு சொன்னது யாரு? போ, அவனா? அப்போ வெளங்கினாப்லதான் இருக்கும்.’ இப்படி பேச்சுக்களில் தொடங்கி விவாகரத்தில் போய் முடிந்த திருமணங்களும் உண்டு. அதனாலேயே விசாரிப்பில் லேசில் திருப்தி அடைந்து விடாமல் அதே வேலையாக இருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.
marriage-1சென்ற வருடத்தின் துவக்கத்தில் திருநெல்வேலியின் கிராமப் பகுதிகளில் நண்பர்களுடன் காரில் சுற்றிக் கொண்டிருந்தேன். என்னுடன் குஞ்சுவின் தம்பி பாலாஜி (பொறியியற்கல்லூரியின் விரிவுரையாளன்), எனது உறவுக்கார மீனாட்சி சுந்தரம், ஓவியர் பொன்.வள்ளிநாயகம் போன்ற நண்பர்களும் வந்திருந்தனர். எங்கெங்கெல்லாமோ சுற்றி விட்டு திருப்புடைமருதூர் தாமிரபரணியில் குளித்து விட்டு மாலையில் வீரவநல்லூர் வந்து சேர்ந்தோம். ‘ எண்ணே, இங்கனெ ஒரு கடையில ஆம வட நல்லா இருக்கும். அப்படியே டீயும் குடிச்சுருவோம்’ என்றார் வள்ளிநாயகம். வீரவநல்லூர் அவரது சொந்த ஊர் என்பது எங்களுக்கு அப்போதுதான் தெரிந்தது. காரை ஓரமாக நிறுத்தி விட்டு அந்த சின்னக் காப்பிக் கடையின் திண்ணையில் உட்கார்ந்தோம். ‘எண்ணெ காயுது. ஒரு அஞ்சு நிமிசம்’ என்றார்கள். ‘சித்தப்பா, நீங்க இரிங்க. நான் வட போட்டவொடனே எடுத்துட்டு வாரேன்’ என்று கடைக்குள் சென்றான் மீனாட்சி. 
எல்லோருமே வேட்டி சட்டையில் இருந்தோம். பாலாஜி துண்டை தலைப்பாகையாகக் கட்டியிருந்தான். குளிர்ந்த காற்றில் மேலே போட்டிருந்த ஈர வேஷ்டியும், சட்டையும் ஒரு வித சுகத்தைக் கொடுக்க, ‘காத்து நல்லா அடிக்கி. என்னண்ணே? என்றார் வள்ளிநாயகம். சற்றும் சம்பந்தமில்லாமல் ‘ இதுதான் என் மாமனார் ஊரு’ என்றான் பாலாஜி. ‘என்ன சொல்லுதியெ? யாரு அது? இது என் சொந்த ஊருல்லா!’ என்றார் வள்ளி. மாமனாரின் பெயரை பாலாஜி சொன்னவுடனேயே வள்ளிக்குத் தெரிந்து போனது. ‘சரியாப் போச்சு. ஜம்பு தங்கச்சியையா நீங்க கட்டியிருக்கியே? அவன் என் கிளாஸ்மேட்டுல்லா!’ என்றார். இதற்குள் மீனாட்சி தந்தி பேப்பரில் சுற்றிய ஆம வடையைக் கொண்டு வந்தான். ‘சித்தப்பா, சூடா இருக்கு. பெருசா எண்ணெ குடிக்கல. எடுத்துக்குங்க. டீய வாங்கிட்டு வாரேன்’ என்று வடையைக் கொடுத்து விட்டுப் போனான்.
‘ஜம்பு படிச்சு முடிக்கவுமே அவங்க இந்த ஊர விட்டு போயிட்டாங்க. எனக்கு அவங்க வீட்டுல எல்லாரையும் நல்லா தெரியுமெ’ என்றார் வள்ளி. வடையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அதை கடிக்காமல் மெல்ல பாலாஜி வள்ளியிடம் கேட்டான்.
‘பொண்ணு நல்ல பொண்ணுதானா?’
பாதி வடையை வாயில் வைத்திருந்த வள்ளிநாயகம் அவசரமாக, அவசரமாகக் கடித்து முழுங்கிவிட்டு சொன்னார்.
‘சே, தங்கமான பிள்ள′.
இந்த கேள்வியை வள்ளிநாயகத்திடம் கேட்டபோது பாலாஜியின் மகன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

5 thoughts on “துப்பு

  1. எவ்வளவு அருமையான மனிதர்களை தொலைத்து விட்டு இயந்திரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அற்புதமான பதிவு.

  2. இவ்வளவு நாள் கழித்து பாலாஜிக்கு இப்படியொரு சந்தேகமா?

Comments are closed.