நவராத்திரி விழா நாளைக்கு தொடங்குகிறது என்றால் இன்று அதிகாலையில் வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு, பருத்த பிருஷ்டங்கள் தெரிய, நெல்லையப்பன் தொழுவத்தின் பரண் மேலிருக்கும் கொலுப்பலகைகளை இறக்குவார். ‘எய்யா, கண்ணுல தூசி விளுந்துரும். தள்ளிப் போங்க.’ தும்மியபடியே விலகி வந்துவிடுவேன். பைப்படியில் பலகைகளைப் போட்டு ப்ளீச்சிங் பவுடரைக் கொட்டி, தேயோதேயென்று தேய்த்து, வெயிலில் காயவைப்பார். மாலையில் பலகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரியாக மாட்டும் வேலை துவங்கும். ‘காப்பி குடியும் நெல்லையப்பன்’. அம்மா கொடுக்கும் காப்பியை வாங்க மறுத்து, ‘மொதல்ல பொம்ம எதயும் கீள போட்டுராம வேலய முடிச்சுக்கிடுதெம்மா. அப்பொறம் நிம்மதியா செம்பு நெறைய குடிக்கென்’.

எங்கள் வீட்டில் இரண்டு பழங்காலத்து பெரிய பீரோ நிறைய கொலுபொம்மைகள் உண்டு. தாத்தா வாங்கி சேகரித்தவை. நாங்கள் பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த காலத்தில் வண்ணம் கலைந்து, பொலிவிழந்து போன அத்தனை பழைய பொம்மைகளுக்கும் அப்பாவின் ஏற்பாட்டில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு, சரி செய்யப்பட்டது . சூர்ப்பனகையாகிப் போன ஒருசில பொம்மைகளை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. திருநெல்வேலியின் புகழ் பெற்ற MSV ARTS ஓவியர் முத்துக்குமாரின் கலைத்திறனில் பழைய பெரிய பிள்ளையார், சரஸ்வதி, லக்ஷ்மி, கட்டுமஸ்தான உடற்கட்டுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிவபெருமான், மாரீச மானைக் காட்டும் சீதாபிராட்டி, உடன் வில்லுடன் நிற்கும் அவர் வீட்டுக்காரர் மற்றும் கொழுந்தனார், ரொம்பவே புஷ்டியான, தவழும் கிருஷ்ணக்குழந்தை, தேவாரம் பாடிய மூவருடன் நிற்கும் மாணிக்கவாசகர், சப்பரத்தில் பார்வதிபரமேஸ்வரனைத் தூக்கி வரும் சிவனடியார்கள், முன்னே செல்லும் நாதஸ்வர, மேளக் கலைஞர்கள், அசரடிக்கும் கலைமேதமையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர், இரண்டு பெரிய யானைகள், பப்பி ஷேமாகக் காட்சியளிக்கும் பாலமுருகன், கீதோபதேச கண்ணனுடன் இருக்கும் அர்ஜுனன், தன் தலையில் தானே தீயை வைத்துக் கொண்ட பத்மாசுரன் மற்றும் மோகினி வடிவில் உள்ள திருமால், எங்கள் அம்மாக்குட்டி ஆச்சியை நினைவுபடுத்தும் அவ்வையிடம் சுட்ட பளம் வேணுமா, சுடாத பளம் வேணுமா என்று மரத்தில் அமர்ந்தபடி கேட்கும் தலைப்பா கட்டிய சிறுவன் ‘முருகன்’, அசல் காய்கறிகள் போல் காட்சியளிக்கும், மண்ணில் வண்ணம் குழைத்துச் செய்யப்பட்ட வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, பூசணிக்காய், முருங்கைக்காய், தேங்காய், வாழைப்பழங்கள் இவர்களுடன் மஹாத்மா காந்தியும், நேரு மாமாவும், கைகட்டி விறைப்பாக நிற்கும் விவேகானந்தரும் உண்டு.

எங்கள் வீட்டின் பிரம்மாண்ட கொலு போக ஓரிரண்டு பொம்மைகள் வைத்து பூஜை செய்து சுண்டல் விளம்புகிற வீடுகளையும் பார்த்திருக்கிறேன். அங்கும் கொலுவுக்கான சூழலும், வாசமும் நிலவும்தான். வீடுவீடாக கொலுபார்க்க பெண்கள் அழைப்பது ஒரு சடங்காகவே நடக்கும். குஞ்சுவின் தாயார் மரியாதை நிமித்தம் அழைத்த வீடுகளில் தலைகாட்டச் செல்வார். அம்மன் சன்னதி போக, சுவாமி சன்னதி, தெப்பக்குளத்தெரு, கீழரதவீதி, பெருமாள்சன்னதி தெரு என அவர் செல்லும் எல்லா வீடுகளுக்கும் ஒட்டிக் கொண்டு குஞ்சுவும் செல்வான். அப்படி ஒரு வீட்டுக்கு கொலு பார்க்கப் போயிருந்த போது அந்த வீட்டு மாமியிடம் யதார்த்தமாக குஞ்சு கேட்ட கேள்வி, குஞ்சுவை நிரந்தரமாக யார்வீட்டுக்கும் கொலு பார்க்கச் செல்ல விடாமல் தடுத்து விட்டது. ‘ஏன் மாமி! பெரியமனுஷி ஆனதுக்கப்பொறம் உங்காத்து ஷோபாவ இப்பெல்லாம் ஜாஸ்தி வெளியெ பாக்க முடியறதில்லையே!’ என்று பெரியமனுஷத்தனமாக குஞ்சு கேட்டபோது, அவன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். சற்றும் எதிர்பார்த்திராத தருணத்தில் காலை மிதித்தாலும் அநிச்சையாக திருநவேலி பாஷையில் பொத்தாம் பொதுவாக யாருடைய சகோதரியையாவதுத் திட்டும் குஞ்சு, பிராமணப் பெண்களிடம் மட்டும் ஏனோ பிராமணாள் பாஷை பேசுவான். ஒரு நவராத்திரிக்கு தன் வீட்டுக்கு வந்திருந்த தூரத்து உறவுக்கார பெண்மணியிடம், ‘என் கண்ணே பட்டுடும் போல இருக்கறது. இந்த புடவைல ஒங்களப் பாக்கறதுக்கு அச்சு அசல் அப்பிடியே ‘வாள்வே மாயம்’ ஸ்ரீப்ரியா மாதிரியே இருக்கேள். ஆத்துக்குப் போன ஒடனெ மாமாக்கிட்டெ சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்கோ,’ என்று சொல்லி குடும்பத்துக்குள் பெரிய பிரச்சனையாகி, அவர்களுடனான உறவு அத்துடன் முறிந்து போனது. மேற்படி சம்பவத்துக்குப் பிறகு குஞ்சு தீவிர ‘பிராமண பாஷை எதிர்ப்பாளனாக’ மாறிப் போனான். ‘அதெல்லாம் ஒரு பாஷையால? மனசுல பட்டத யதார்த்தமா சொன்னாலும் அது வேற அர்த்தத்துல டிரன்ஸ்லேட் ஆயிருது.’

கல்லூரிக்காலங்களில் நவராத்திரி சமயத்தில், குறிப்பாக மாலைநேரங்களில், வெளியே சுற்றவே மனம் விரும்பும். ஆனால் அப்படி வெளியே செல்ல முடியாமல் சாயங்காலம் பூஜை முடிந்தவுடன் ஹார்மோனியத்தில் விநாயகத்து பெரியப்பா இருமியபடியே உட்காருவார். ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், இன்னொரு கிண்ணத்தில் ரவையுமாக வேண்டாவெறுப்பாக மிருதங்கத்தை எடுத்துக் கொண்டு உட்கார்வேன். முதலில் கொஞ்ச நேரம் பெரியப்பா (அவர்) மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒரு ராக ஆலாபனையில் மெதுவாக புகுந்து உள்ளே செல்வார். அது முடிவதற்குள் மிருதங்கத்தில் சேர்த்த ரவையின் ஈரம் காய்ந்து நான் இரண்டு, மூன்றுமுறை நனைத்து விடுவேன். கொலு பார்க்க வரும் கூட்டத்தைப் பொறுத்து எங்களின் கச்சேரி நீடிக்கும் அல்லது தடைபட்டு முடியும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தேங்காய், எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை, சுண்டல், தட்டாம்பயிறு, பூம்பருப்பு என விதவிதமாக பிரசாதங்கள் செய்து நாங்களே வயிறுமுட்ட சாப்பிடுவோம். சூட்டோடு சூடாக பூஜை முடிந்தவுடன் பெரியப்பா ’ஹிமகிரிதனயே’ ஆரம்பித்துவிட, மனதுக்குள் சுண்டலை நினைத்தபடியே சுத்ததன்யாசிக்கு மிருதங்கம் வாசிப்பேன். ஒவ்வொரு பாட்டும் முடியப் போகிற ஆசையில் ‘தளாங்குதக்கதின்ன, தளாங்குதக்கதின்ன’ என்று சாப்பு கொடுத்து முடிக்க முயல்வேன். சாப்பு தந்த உற்சாகத்தில் பெரியப்பா கானடாவுக்குள் பிரவேசிக்க, ‘ஹ்ம்ம், இன்னைக்கும் ஆறுன பிரசாதந்தான்’ என்று மனதுக்குள் அழுது கொண்டு, ‘சொத்து சொத்தென்று’ மிருதங்கத் தொப்பியில் அறைவேன்.

அம்மன்சன்னதியில் அப்போது குடியிருந்த ஒரு பாட்டு டீச்சர் ஒருமுறை கொலு பார்க்க எங்கள் வீட்டுக்கு வந்தார். நடிகர் நீலுவின் சாயலிலுள்ள அவரது கணவரை வைத்து நாங்கள் அந்த பாட்டு டீச்சரை ‘நீலு சம்சாரம்’ என்றே அடையாளம் சொல்வோம். சரியாக நானும், விநாயகத்து பெரியப்பாவும் கச்சேரி செய்து கொண்டிருந்த போது வந்து விட்ட ‘நீலு சம்சாரத்தை’ ஒரு பாட்டு பாடச் சொல்லி எல்லோரும் கேட்டுக் கொள்ள, அவர் அநியாயத்துக்கு பெண்பார்க்கும் படலத்துப் பெண் போல வெட்கப்பட்டு, செட்டியார் பொம்மைக்குப் பின் ஒளிந்து கொண்டார். ‘ஏதாவது ஒரே ஒரு கீர்த்தன பாடுங்களென்’. ‘நீலு சம்சாரத்தின்’ பதற்றத்தை விநாயகத்து பெரியப்பா மேலும் கூட்டினார். நீண்ட நேர மௌனத்துக்குப் பின் ஒருமாதிரியாக பாடுவதற்கு முன் வந்தார். ‘தமிள் பாட்டே பாடுதென்’. அந்த சமயத்தில் விநாயகத்து பெரியப்பாவைத் தவிர வேறு யாருக்கும் மிருதங்கம் வாசித்தறியாத நான், ‘பாட்டு டீச்சரான நீலு சம்சாரத்துக்கு’ பயந்து நைஸாக பெரியப்பாவிடம் மிருதங்கத்தைத் தள்ளிவிட்டு, ஹார்மோனியத்தை எடுத்துக் கொண்டேன். பி.சுசீலா பாடிய ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலைப் பாடத் துவங்கினார் ‘நீலு சம்சாரம்’. எனக்கு நன்கு பழக்கமான மோகன ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை கண்டுபிடிக்கவே முடியாதபடி பல ராகங்களில் பாடி, ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலை ராகமாலிகையாக்கினார். ஒருமாதிரியாக பாட்டு முடியும் போது, எனக்கு சுத்தமாக ஹார்மோனியம் வாசிக்க மறந்து போயிருந்தது. பெரியப்பாவுக்கு மிருதங்கம்.

சரியாக நவராத்திரி சமயங்களில் ‘தசரா’ விழாவுக்காக திருநெல்வேலி வீதிகளில் ராமர், அனுமன், சிவன் குறிப்பாக ‘காளி’ வேடங்களில் பக்தர்கள் உலா வருவர். தென்னிந்தியாவில் மைசூருக்கு அடுத்து விமரிசையாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடக்கும் தசரா விழாவுக்காக நேர்ந்து கொண்ட பக்தர்கள் வீதி வீதியாக கடவுள் வேஷங்களில் காணிக்கை பெற்றுக் கொண்டிருப்பார்கள். பாளையங்கோட்டையில் நடக்கும் ‘தசரா’ விழாவும் புகழ் பெற்றதுதான். திருநெல்வேலி டவுணில் உள்ளவர்கள் தசரா சப்பரங்களைப் பார்ப்பதற்காகவே பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீடுகளில் போய்த் தங்குவதுண்டு. பிரிந்திருந்த உறவுகள் ‘தசரா’வை வைத்து கூடுவதும், உறவுகள் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து மகிழ்ச்சியுடன் சாமி கும்பிட்டுவிட்டு, மீண்டும் பழைய பகை தலைதூக்கிப் பிரிவதும், வருடாவருடம் தவறாமல் நடைபெறும் விஷயங்கள். ‘தசரா’ சமயங்களில் மட்டுமே பூத்துக் குலுங்கி, ‘தசரா’ முடியும் போது உதிர்ந்து போகும் காதல் கதைகளும் ஏராளம். சென்ற வருடத்தின் ‘தசரா’ காதலர், காதலிகள் இந்த வருடம் வேறு ஜோடியாகக் காதலிப்பதை, சம்பந்தப்பட்ட இருவருமே கண்டும் காணாதது போல் இருப்பார்கள். இதில் ‘காதல்’ என்பது அங்கும் இங்குமாக சாமி சப்பரங்கள் வரும் போது நின்று ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்ப்பது தவிர வேறேதுமில்லை.

இந்த வருட ‘நவராத்திரி’க்கு திருநெல்வேலிக்குச் சென்றிருந்தேன். வழக்கம் போல அதே பெரிய ‘கொலு’. இப்போது புதிதாக சில பொம்மைகளும் சேர்ந்திருந்தன. விதவிதமான பிரசாதங்கள். பூஜை முடிந்தவுடன் சுடச்சுட உடனே சாப்பிடக் கிடைத்தது. ஹார்மோனியத்துக்கும், மிருதங்கத்துக்கும் வேலையில்லை. ஆனால் எனக்கு வாசிக்க வேண்டும் போல இருந்தது. விநாயகத்து பெரியப்பா இல்லாததால் மட்டுமல்ல. ஏனோ இப்போது ‘கொலு’வின் போது இயல்பாக உருவாகும் குதூகல மனநிலை இல்லை. வருடத்தில் குறிப்பிட்ட இந்த ஒன்பது நாட்களும் வேறு மாதிரியான உற்சாகத்தையே இதுவரை அளித்திருக்கின்றன. வெறுமையான மனதுடன் திருநெல்வேலி வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்கும் போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசராவுக்காக கடவுள் வேடமணிந்த பக்தர்களை அநேகமாக எல்லா வீதிகளிலும் பார்த்தேன். சந்திப்பிள்ளையார் முக்கில், மேலரதவீதியில், ரத்னா தியேட்டர் அருகில், குறுக்குத்துறை ரோட்டில் எங்கு சென்றாலும் மேளதாளத்துடன் உற்சாகமாக ஆடியபடி காணிக்கை வாங்கிக் கொண்டு கடவுள் வேடமணிந்த பக்தர்கள். முருகன்குறிச்சியில் சுடலைமாடன் வேடமணிந்த ஒரு பக்தர் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தார். பின்னால் சின்ன ‘சுடலைமாடனாக’ சிரித்தபடி அவர் மகன் உட்கார்ந்திருந்தான். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது அவர்களின் உற்சாகம் பார்ப்பவர்களையும் தொற்றிக் கொண்டது. ‘வசதியானவங்களும் இப்பிடி சாமி வேஷம் போட்டு கொலசேகரபட்டணம் போவாங்கண்ணே’. ஓவியர் பொன்.வள்ளிநாயகம் சொன்னார்.

சுலோச்சனா முதலியார் பாலமருகே வந்த போது, சுட்டெரிக்கும் வெயிலில், பாலத்தின் ஓரமாக ‘காளி’ வேஷமணிந்த பக்தர் ஒருவர், தொங்கிய நாக்குடன், செருப்பில்லா வெற்றுக்காலைப் பொருட்படுத்தாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். உடன் ஒரு தட்டு நிறைய திருநீறும், குங்குமம், கொஞ்சம் சில்லறைகளைச் சுமந்தபடி ஒரு மஞ்சள் சேலையணிந்த பெண்மணி, கால்சூடு தாங்க முடியாமல் ‘காளி’யுடன் நடந்து கொண்டிருந்தார். ‘காளி’ யின் மனைவியாக இருக்கலாம்.

4 thoughts on “கொலு

  1. திருநெல்வேலி மண் மணம் மாறாத உங்கள் எழுத்துக்கு நான் அடிமை …. முடிந்தால் கோவில்பட்டியை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணாச்சி …

  2. i am from chengalpattu..neenga kulasaegarapattinam la nadakura dasara vizha..mysoreko adutha periya dhasara nu sollierukkenga illa..chengalpattu layum dhasara vizha miga vimarisaiyaga kondadappadugirathu… mysoreku adthuta periya dhasara vizha ethuthan nu engayum solluvanga..!! ealla oorlayum eppidithan solllipanga pola…miga arumaiya pathivu dhasaravai parttri..!! ungal pani sirappaga thodara ennudiya vazthukkal..!!

  3. சார் குஞ்சு இப்ப என்க்கிருக்கார்.ஆனந்த விகடனில் படித்ததிலிருந்தே அந்த கேரக்டர் ரொம்ப பிடித்து பொய்விட்டது.போட்டோவை போடுங்களேன்.

Comments are closed.