ரே திரைப்படத்தை பலமுறை பார்த்த அனுபவம் எனக்குண்டு. அப்படி பார்த்த படங்களில் பல படங்களை இப்போது சொல்ல வெட்கமாக உள்ளது என்றாலும், சில படங்களைப் பற்றிய நினைவுகள் இன்னும் அப்படியே அதே சந்தோஷத்துடன் மனதில் தங்கியுள்ளன. ஆனால் எவ்வளவுதான் சினிமா கோட்டியாக இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் ஒரே படத்தைப் பார்க்கத் தோன்றியதேயில்லை. நீண்ட நாட்களாக என்னை அறியாமலேயே கடைப்பிடித்து வந்த இந்த பழக்கத்தை உடைத்தது ஒரு படம். அதுவும் ஒரு மலையாளப் படம். மலையாளப் படம் என்றால் மேற்படி படமல்ல. என் உள்ளம் கவர்ந்த நடிகர் மோகன்லால் நடித்து, லோகிததாஸின் எழுத்தில், சிபிமலயிலின் இயக்கத்தில் வெளியான ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ என்ற படம்தான் அது.

hishighnessabdullah-014days

‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்தை திருநெல்வேலியின் ‘சிவசக்தி’ தியேட்டரில் ஒரு மாலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. பார்ப்பதற்கு முன்புவரை அந்தத் திரைப்படத்தின் மேல் எனக்கிருந்த ஒரே ஈர்ப்பு, மோகன்லாலும், வயல்கள் சூழ்ந்த ‘சிவசக்தி’ திரையரங்கின் திறந்து கிடக்கும் கதவுகளைத் தாண்டி வந்து நம்மை வருடும் மாலைநேரக் காற்றும்தான். ஒரு கமர்ஷியல் சினிமாவுக்குரிய விறுவிறுப்பான அம்சங்களுடன் கூடிய கதையை சங்கீதப் பின்னணியில் அமைத்து லோகிததாஸ் எழுதியிருந்த திரைக்கதைக்கு மோகன்லாலுடன் இணைந்து நெடுமுடி வேணு, திக்குரிசி சுகுமாரன் நாயர், சுகுமாரி, கே.பி.ஏ.சி.லலிதா, சங்கராடி, சீனிவாசன், சோமன், கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரி, சிபிமலையில் போன்றோர் வலு சேர்த்திருந்தார்கள் என்றாலும், ’ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்தின் ஆதார ஸ்ருதி என்னவோ அதன் இசையமைப்பாளர், அமரர் ரவீந்திரன் அவர்கள்தான்.

பாரம்பரியம் மிக்க ஒரு பழைய அரண்மனையில் (பத்மனாபபுரம்) வாழ்ந்து வரும் ராஜவம்சத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரை, அவரது ரத்த உறவுகளே கொல்லத் துடிக்கின்றன. அதற்காக மும்பையில் பிழைப்புக்காக இரவு விடுதிகளில் கவாலி (Qawwali) பாடிக் கொண்டிருக்கும் ஒருவனை வரவழைக்கின்றனர். கூலிக்காகக் கொலை செய்யத் துணிந்து, நம்பூதிரி வேடமணிந்து அரண்மனைக்குள் நுழையும் ‘அப்துல்லா’வான மோகன்லால், இறுதியில் ஒத்துக் கொண்ட வேலையை முடிக்கிறாரா, இல்லையா என்பதுதான் கதை.

சாஸ்திரிய சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவரான ரவீந்திரனுக்கு உற்சாகமளிக்கும் விதமான ஒரு திரைக்கதையை காலம் சென்ற லோகிததாஸ் எழுதியிருக்கிறார். கதையின் மையக் கதாபாத்திரமான உதயவர்ம மகாராஜா, ஒரு சங்கீதப் பிரியர். முக்கியமான சங்கீதக்காரர்களை தன் அரண்மனைக்கு அவ்வப்போது வரவழைத்து பாடச் சொல்லி, மகிழ்ந்து அனுபவித்து, அந்தக் கலைஞர்களுக்கு சன்மானம் கொடுத்து கௌரவித்து அனுப்புவதை வாடிக்கையாகவே வைத்திருப்பவர். ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’வின் முதல் பாடல், அப்படி ஒரு சூழலில்தான் இடம் பெற்றுள்ளது.

மகாராஜாவின் முன்னிலையில் தன் பக்கவாத்தியக்காரர்களுடன் ’பத்மஸ்ரீ’ ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரி என்னும் புகழ் பெற்ற இசைக்கலைஞர் தன்னை மறந்து பாடுகிறார். அந்தப் பாடகரின் இசைமேதமையில் கரைந்து உருகிப் போகிறார், ராஜா. இந்தக் காட்சியில் ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரியாக நடித்திருப்பவர், கேரள திரையுலகின் புகழ் பெற்ற கவிஞரான ‘கைதப்புரம்’ தாமோதரன் நம்பூதிரி. பொதுவாகவே ஒரு சாதாரண மெலடியைக் கூட, பாடுவதற்கு சிரமமான முறையில் கடுமையான ஏற்ற இறக்கங்களுடன் அமைப்பது ரவீந்திரனின் வழக்கம். உதாரணத்துக்கு ‘ரசிகன் ஒரு ரசிகை’ திரைப்படத்தின் ‘பாடி அழைத்தேன்’ மற்றும் ‘ஏழிசை கீதமே’ போன்ற (அதன் மூலமும் மலையாளம்தான்) பாடல்களைச் சொல்லலாம். அப்படியிருக்க, வலுவான சங்கீதப் பின்னணியில் அமையும் ஒரு பாடலுக்குக் கேட்பானேன்? ‘கானடா’ ராகத்தில் அமைந்த ‘நாதரூபிணி’ என்று துவங்கும் இந்தப் பாடலை கம்பீரமான முறையில் ‘கைதப்புரம்’ தாமோதரன் நம்பூதிரிக்காகப் பாடியவர், எம்.ஜி.ஸ்ரீகுமார். என்னுடைய யூகப்படி இந்தப் பாடலைப் பாடுவதற்கு ஸ்ரீகுமார் குறைந்தது இருபது டேக்குகள் வாங்கி, ஒரு நாள் முழுக்கப் பாடியிருக்க வேண்டும். அவ்வளவு சிரமமான துரிதகதிஸ்வரவரிசைகளைக் கொண்ட இந்தப் பாடலைப் பாடியதன் பலனை ஸ்ரீகுமார், அந்த வருடத்துக்கான தேசிய விருதின் மூலம் அடைந்தார். இத்தனைக்கும் இதே படத்தில்,கேரளாவின் மூலைமுடுக்கெல்லாம் இன்றளவும் பெரும் புகழ் பெற்றிருக்கும் ஒரு பாடலை யேசுதாஸ் பாடியிருந்தார். மிகச்சரியாக அந்தப் பாடல்தான் படத்தில் இடம்பெற்றுள்ள அடுத்த பாடல்.

தன்னுடைய நண்பன் என்ற அறிமுகத்துடன் மகாராஜாவின் மருமகன் ரவிவர்மா(சீனிவாசன்) அப்துல்லாவை ’அனந்தன் நம்பூதிரி’ என பெயர் மாற்றி, உருமாற்றி அரண்மனைக்குள் அழைத்து வருகிறான். உதயவர்ம மகாராஜாவுக்கு அந்நியர்களை அரண்மனைக்குள் தங்க வைப்பதில் சம்மதம் இருக்கவில்லை. போனால் போகிறது என்று இரண்டு நாட்களுக்குத் தங்க அனுமதிக்கிறார். இரண்டொரு நாட்களில் அரண்மனையின் ஏதோ ஒரு மூலையிலிருந்து மனதை உருக்கும் விதமாக யாரோ பாடுவது கேட்டு, மகாராஜா அங்கு வருகிறார். தன் மருமகனின் நண்பன் பாடிக் கொண்டிருக்கிறான். கண்மூடி லயித்து பாடிக் கொண்டிருப்பவன், கண்களைத் திறக்கும் போது தன் முன்னால் மகாராஜா நிற்பதைப் பார்த்து பதறிப் போகிறான். ‘அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன்’ என்று வணங்கிக் கிளம்பப் போகிறவனை, மகாராஜா தடுக்கிறார். ‘இனி நீ எப்போ போகணும்னு நான் சொல்றேன்’ என்கிறார். அரண்மனையில் நுழைவதற்கே அனுமதிக்க மறுத்தவரைக் கட்டிப் போட வேண்டுமென்றால், என்ன மாதிரியான ஒரு பாடலை அவன் பாடியிருக்க வேண்டும்! இந்த இடத்துக்கு ரவீந்திரன் தேர்வு செய்த ராகம் ‘ஜோக்’ (Jog). இந்த ராகத்தை ‘பண்டிட்’ பாலேஷ் அவர்கள் எனக்கே எனக்காக மட்டும் ஷெனாயில் வாசித்து மகிழ்வித்த அந்த மாலைப்பொழுதை நினைத்துப் பார்க்கிறேன்.

பாடலின் துவக்கத்தில் ரம்மியமான முறையில் ‘ஜோக்’ ராகத்தை பாடுவதன் மூலம், மகாராஜாவுடன் நம்மையும் இழுத்து தன்வசம் அமர்த்தி விடுகிறார், யேசுதாஸ். ’ப்ரமதவனம்’ என்று தொடங்கும் அந்தப் பாடலை ரவீந்திரன் மெட்டமைத்திருக்கும் முறையையும், யேசுதாஸ் அதைப் பாடியிருக்கும் விதத்தையும் பார்த்து, ‘ஜோக்’ ராகத்தின் மேல் ஆசை கொண்டு, யாரும் அந்தப் பாடலைப் பாட முயன்றால் ‘ஜோக்’(Jog), ’ஜோக்’ (Joke) ஆகிவிடும் அபாயம் உண்டு. கேரளாவின் எல்லா பாட்டுப் போட்டிகளிலும் ’ப்ரமதவனம்’ பாடலைத் தேர்ந்தெடுத்து பாடுவதை, ஒரு சிறப்புத் தகுதியாகவே நினைக்கிறார்கள். ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ படத்தின் ‘நாதரூபினி’ பாடலைப் பாடியதற்காக எம்.ஜி.ஸ்ரீகுமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட போது, நியாயமாக ‘ப்ரமதவனம்’ பாடலுக்காக யேசுதாஸுக்குத்தான் விருது வழங்கியிருக்க வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலித்தது.

கேரளத்தின் பாரம்பரியமிக்க கலைகளில் ஒன்றான ‘கதகளி’யின் பின்னணியில் துவங்கும் டூயட் ஒன்றை ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்துக்காக ரவீந்திரன் அமைத்திருக்கிறார். கதகளியின் தாளம், மற்றும் நடன அசைவுகளுடன் துவங்கும் அந்தப் பாடலை யேசுதாஸும், சித்ராவும் பாடியிருக்கிறார்கள். ‘கோபிகா வசந்தம்’ என்று அந்தப் பாடல் துவங்கும் போது அமைக்கப்பட்டிருக்கும் கதகளிக்கான ஜண்டை வாத்திய தாளம், மிக இயல்பாக பாடலின் தன்மையோடு இயைந்து அழகாக மாறுகிறது.

’சண்முகப்ரியா’ ராகத்தில் அமைந்த ‘கோபிகா வசந்தம்’ என்ற அந்தப் பாடலை, காதலனும், காதலியும் பாடும் ஒரு சினிமா டூயட் பாடல் என்று சொல்லவே மனம் கூசுகிறது. அந்த அளவுக்கு சண்முகப்ரியா ராகத்தின் சகல லட்சணங்களுடன் அமைக்கப்பட்ட, ஓர் உயர்ந்த இசைப்பாடல் அது. கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு உயர்ந்த தமிழ் டூயட்டாக ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தின் ‘இதழில் கதை எழுதும் நேரமிது’ என்ற பாடலைச் சொல்லலாம். ‘லலிதா’ ராகத்தில் அமைக்கப்பட்ட அந்தப் பாடலும் சாதாரண டூயட் பாடல்களுடன் எளிதாகச் சேர்த்து விடமுடியாத ஓர் உயர்ரக இசைப்பாடல்.

சாஸ்திரிய சங்கீதப் பின்னணியில் உருவான இந்தியத் திரைப்படங்களில் ‘சங்கராபரணம்’ படப் பாடல்களுக்கு இணையான ஒரு பாடலை ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்துக்காக ரவீந்திரன் அமைத்திருக்கிறார். மகாராஜாவின் பிரியத்துக்குரிய இசை வித்வான் ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரிக்கும், அப்துல்லா என்கிற அனந்தன் நம்பூதிரிக்கும் இடையேயான போட்டிப் பாடல் அது. கதைப்படி அப்துல்லா, தன்னைப் பற்றித் தவறாகப் பேசி வருவதாக நினைத்துக் கொண்டு, கடும் கோபத்துடன் அரண்மனைக்கு தன் பரிவாரங்களுடன் வருகிறார் அந்த இசைக் கலைஞர். மஹாராஜாவுக்கு முன் அமர்ந்து புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருக்கும் அப்துல்லாவுக்கு, திடீரென்று அங்கு வருகை தந்திருக்கும் அந்த ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரியைப் பார்த்து, எழுந்து நின்று அவரது பாதம் தொட்டு வணங்கப் போகிறான். அதற்கு அனுமதி மறுத்த அவர், ‘என்னைப் பற்றி என்னடா சொன்னாய்? நான் பத்மஸ்ரீ பட்டத்தை காசு கொடுத்து வாங்கினேன். அப்படித்தானே? உன்னுடன் நான் கொஞ்சம் பாட வேண்டும்’ என்று சொல்லிவிட்டு, ஹிந்தோள ராகத்தில் பாடத் தொடங்குகிறார். ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம்,மத்தியமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம் என ஏழு ஸ்வரங்களுக்கும், ஏழு ராகங்களைத் தேர்ந்தெடுத்து கம்பீரமாகப் பாடுகிறார், அந்த வித்வான். சாஸ்திரிய சங்கீத அடிப்படையில் அவர் பாடும் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும், ராகத்துக்கும் பதிலளிக்கும் விதமாக ஹிந்துஸ்தானி முறைப்படி அடக்கமாக, அதே சமயம் அழுத்தமாக அப்துல்லா பாடுகிறான். நியாயமாக இப்படி ஒரு சூழலுக்கு இசையமைப்பதற்கு திறமையையும் விட தைரியம் வேண்டும். ரவீந்திரனைப் போன்ற இசைமேதைகளால் மட்டுமே இது போன்ற இசைச்சவால்களைத் துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டு அற்புதமாக இசையமைக்க முடியும். இதற்கு முன்பு நம் தமிழ்த்திரையுலகில் அப்படி ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் ‘ஒரு நாள் போதுமா’ என்ற ராகமாலிகைப் பாடலை, ‘திரை இசைத் திலகம்’ கே.வி.மகாதேவன் நமக்கு வழங்கியிருக்கிறார். அந்தப் பாடலில் டி.எஸ்.பாலையா என்னும் மாமேதையின் அசாத்திய நடிப்பாற்றல், பாடலின் இசையை மேலும் உயரத்துக்குக் கொண்டு சென்றதை ஆண்டுகள் பல போனாலும் நம்மால் மறக்க முடியுமா, என்ன?

‘தேவசபாதலம்’ என்று துவங்கும் இந்தப் பாடலின் காட்சியமைப்பை நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருக்கிறேன் என்பதை கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. ஒரு இசைப் போட்டியை சுற்றிச் சூழ்ந்து அநேகர் அமர்ந்திருக்க, அதை இயக்குனர் சிபிமலயில் படமாக்கியிருக்கும் விதத்தையும், குறிப்பாக அதன் படத்தொகுப்பையும்(editing) பாராட்ட வார்த்தைகளே இல்லை. குறிப்பிட்ட அந்தப் பாடல் காட்சியில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிக, நடிகையரும் அந்தச் சூழலோடு இயல்பாக ஒன்றியிருப்பார்கள். ஒவ்வொரு ஸ்வரமாக அப்துல்லா பாடப் பாட, தன் கோபம் மறந்து நாமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரி, அப்துல்லாவின் இசையை ரசிக்க ஆரம்பித்து விடுவார்.(கைதப்புரத்துக்காகக் குரல் கொடுத்திருப்பவர் ரவீந்திரன். பாடலில் மூன்றாவது குரலாக இசையமைப்பாளர் ஷரத்தும் பாடியிருக்கிறார்.) இரு இசைக்கலைஞர்கள் அள்ளி வழங்கும் சங்கீத விருந்தில் உண்டு மயங்கிய மகாராஜா தைவதம் வரும் போது தானே களத்தில் குதித்துப் பாடுகிறார். ஒட்டுமொத்தமாக அந்தப் பாடல்காட்சியில் உதயவர்ம மகாராஜாவாக நடித்திருக்கும் நெடுமுடி வேணுவின் உடல்மொழியைப் பற்றிச் சொல்ல என் தாய்மொழியில் வார்த்தைகளே இல்லை.

ஒரே ஒரு ஷாட்டில் மிக மென்மையாக மனதுக்குள் ரசிப்பதை உதட்டில் ஒரு சின்ன ‘ப்ச்’ மூலம் காண்பிக்கும் சுகுமாரி, தப்பும் தவறுமாக தாளம் போட்டபடி அமர்ந்திருக்கும் ஜெகதீஷ், எந்த விதமான உடற்பயிற்சி முறைகளையும், மலச்சிக்கல் முனகல்களையும் முகத்தில் காட்டாமல் இயல்பான சங்கீதக்காரனின் உதட்டசைவுகளை தன் மனதிலிருந்து பாடுவதன் மூலம் அற்புதமாகக் காட்டி நடித்திருக்கும் மோகன்லால், பாடலின் இறுதியில் கண்கலங்கி தன்நிலை மறந்து ததும்பி நிற்கும் கைதப்புரம் , இவர்கள் அனைவரையும் தனது இசைமேதமையால் தாண்டி நிற்கும் ரவீந்திரன் என இந்தப் பாடல் மலையாளத் திரையிசை வரலாற்றின் மிக முக்கிய பதிவு என்றால் அது மிகையில்லை.

பாடல் முடிந்தவுடன் அப்துல்லா எழுந்து நாமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரியின் கால்களில் விழப் போகிறான். ஆரம்பத்தில் அதற்கு அனுமதி மறுத்த ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரி இந்த முறையும் அவனை தன் கால்களில் விழவிடாமல் தடுத்து ‘இனி யார் காலிலுமே நீ விழாதே’ என்று கண்ணீர் மல்க அணைத்துக் கொள்கிறார். கலைச் செருக்குடைய அந்த இசைமேதையை உருக வைத்த ஹிந்தோளம், தோடி, பந்துவராளி, ஆபோகி, மோகனம், சங்கராபரணம், சண்முகப்ரியா, கல்யாணி, சக்ரவாகம், ரேவதி போன்ற ராகங்களை சரியாகக் கலந்து ராகமாலிகையாக அமைந்திருக்கும் ‘தேவசபாதலம்’ என்னும் இந்த ஒரு பாடலைத் தாண்டி, ரவீந்திரனின் இசைமேதமையைச் சொல்ல வேறு ஒரு பாடல் தேவையில்லை . ’இனி யார் காலிலும் விழாதே’ என்று அப்துல்லாவிடம், ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரி சொல்லும் வசனத்தை, லோகிததாஸ் நிச்சயமாக ரவீந்திரனை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதியிருக்க வேண்டும்.

10 thoughts on “ஹிஸ் ஹைனஸ் ரவீந்திரன்

  1. இது போன்று இசையினை ரசித்துக் கேட்டதில்லை. ஆனால் விமர்சனம் முழுவதும் இசைக்கே தான் எனும் போது படம் அருமையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

    நன்றி சார்

  2. WHY THIS கொலைவெறி என கொலைவெறியோடு பாடிகொண்டிருக்கும் நேரத்தில் இசையால் நிரம்பிய படம் குறித்த செய்தி அறிந்து மகிழ்ச்சி அண்ணாச்சி குலசை ஆ. கந்தசாமி

  3. சுத்தமாக பாடல்களே கேட்டிராமல் போய்
    உட்கார்ந்த படம். பிறகு பாடல்கள் மிக
    பிடித்து போய் இப்பொழுது அந்த படத்தை பார்க்கலாம் என்றால் வாய்ப்பு
    கிடைக்கவில்லை.ரவீந்திரன் இருக்கிறார்
    என்றே நினைத்துக்கொண்டிருந்தேன்.
    நிச்சயம் அவர் பாடல்கள் நிலைத்திருக்கும்.

  4. உங்க ஒவ்வொரு எழுத்திலும் மண் சார்ந்த உயிரும், உணர்வும் இருக்கு…

    நன்றி அண்ணா

    பாண்டியன்
    சிங்கப்பூர்

  5. சுகா

    சேலம் கீதாலயாவில் (college hostel days) நான்கு முறையும் பின்னர் நம்ம சிவசக்தியிலே, ஒருமுறையும் பார்த்த அந்த நினைவுகள், இந்த பதிவை படிக்கும் பொழுது எனக்குள்ளே… “தேவசபாதலம்” பாடலை கேட்பது அன்று கேஸட் வடிவிலிருந்து இன்று
    MP3 / youtube வடிவிற்கு மாறினாலும், ”தேவசபாதலம் ராகிலமாகுவான் நாதமயூகஃமே ஸ்வாகதம்” எனக் கேட்கத் துவங்கும் போது ஒரு இனம் தெரியாத உணர்வில் சஞ்சரிக்கும் மனம் “ஆனந்தம் அனந்தானந்தம் ஜெகதானந்தம் சங்கீதம்” என முடியும் பொழுது ஏன் அழுகிறேன் என்று தெரியாமல் அழுவது இன்றும் தொடர்கிறது. இந்த பதிவிற்கு பொருத்தமான தலைப்பு.

    இந்த படத்துடன் தொடர்புடைய ம்ற்றொரு நிகழ்வும் இங்கே சொல்லத் தோன்றுகிறது. சேலத்தில் ரசித்த இந்த படத்தை K.B -யின் பரம ரசிகரான என் அப்பாவை பார்க்க சொன்னேன். ”மலையாளம் புரியுமாடே?” எனக் கேள்வி கேட்டாலும், பார்த்து வந்து அவர் சொன்னது “அது ஏம்லே சிகண்டிய (மகாபாரதக் கதை பாத்திரம்) ஒரு இடத்திலே சொன்னாங்கன்னு வசனம் புரியல. climax வந்தப்புறம்தான் அது புரிஞ்சுச்சுடே”.

    பகவதி

  6. மிக நல்ல பதிவு.

    உங்களை போன்று இசை பற்றிய தெளிவு இல்லாவிட்டாலும், உங்களின் இந்த பதிவும், விளக்கமும் ரசனயை அதிகரிக்க செய்கிறது.

  7. ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா DVD, ஆங்கில வசன வரிகளோடு, சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா ஹாலில் நடைபெறும் “music season exhibition and sale by AVM’s Sound Zone” இல் கிடைக்கின்றது. Moserbaer வெளியீடு.

  8. அருமை. ஒவ்வொரு ராகத்தையும் அதன் நுணுக்கமான சங்கதிகளையும் வர்ணித்து எழுதி இருக்கும் பாங்கு அற்புதம். Beyond excellence ..

Comments are closed.