அம்மாவின் ஊரான ஆழ்வார்குறிச்சிக்குப் போனால் சிவைசலநாதர் கோயிலுக்குச் செல்லாமல் வருவதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையைப் பார்த்தபடி அமைந்திருக்கும் சிவசைலநாதர் கோயில்.

’இங்கெ மட்டும் ஏன்வே செவன்கோயில் மேக்கெ பாக்க இருக்கு?’

‘அகத்தியரு மேக்கெ அந்தா அந்த மல மேலதானவே இருக்காரு. ஒலகமெ அளிஞ்சாலும் அவாள் மலய விட்டு எறங்க மாட்டால்லா. அதான் அம்மையும், அப்பனும் தங்களோட கல்யாணத்த அவரு பாக்கணும்ங்கிறதுக்காக மேக்கெ பாக்க காட்சி குடுக்காங்க’.

பொதிகையில் அமர்ந்திருக்கும் அகத்திய(ர்)ரைப் பார்க்க அமைந்திருக்கும் சிவசைலநாதர் கோயில் ஓர் அழகு என்றால், கோயிலை ஒட்டி ஓடும் கடனாநதியும், அதன் படித்துறையில் உள்ள கல்மண்டபமும் வேறோர் அழகு. கருவறையில் சடைமுடியோடு காட்சி தரும் சிவசைலநாதரை, பிரகாரத்தின் பின்பக்கத்திலிருந்து மிரட்சியுடன் பார்த்து வணங்கிய சிறுவயது ஞாபகங்கள் இன்னும் மனதில் உள்ளன.

சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்
செங்கனி வாயிதழுந்துடிப்பச்
சேயிழை யீர் சிவலோகம் பாடிக்
கங்கை இரைப்ப அராஇரைக்குங்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே.

‘நாளைக்கு ஆள்வாருச்சி கோயில் தேரோட்டம். ரொம்ப வருஷமாச்சு, நான் பாத்து. வா போவோம்’. அம்மா அழைக்கும் போது உற்சாகமாகவேக் கிளம்பிப் போனேன். ஆழ்வார்குறிச்சிக்குப் போவதென்றால் எப்போதும் சந்தோஷம்தான். ஆச்சி கையால் உருட்டி போடப்படும் சோற்றுருண்டைகளிலிருந்து, மாட்டுத் தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகள் மற்றும் காலைநேரத்தில் வீட்டின் கொல்லைப்பகுதியில் வந்து நிற்கும் மயில்கள், அம்மாவின் செல்ல நாய் என என்னை ஈர்க்கும் விஷயங்கள் ஏராளம். தேரோட்டத்துக்குக் காலையிலேயே கிளம்பிப் போனோம். நாங்கள் போவதற்குள் தேரோட்டம் துவங்கிவிட்டது. ‘இதுக்குத்தான் சீக்கிரம் எந்தி, எந்தின்னேன். இப்போ பாரு, தேரு நெலைக்கு வந்துரும். வேகமா ஓடியா’. என்னைவிட வேகமாக அம்மா தேர் இருக்கும் பகுதிக்கு ஓடினாள். பக்கத்தில் போனதும் எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதுவரைக்கும், தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேரான நெல்லையப்பர் கோயில் தேரை, பிரம்மாண்ட வடங்களுடன் பார்த்துப் பழகிய எனக்கு, சங்கிலியைப் போட்டு கன்றுக்குட்டியை இழுப்பது போல ‘தரதர’வென இழுத்து வந்து நிலையத்தில் சேர்ப்பிக்கப்பட்ட குட்டியூண்டு பொம்மைத் தேரை, தேர் லிஸ்டில் சேர்க்கவே மனம் ஒப்பவில்லை.

வீட்டுக்கு வந்த பிறகும் அம்மாவிடம் ‘ஆழ்வார்குறிச்சி’ கோயிலின் சின்னத் தேரை கேலி செய்து கொண்டே இருந்தேன். ‘நல்லாருக்கே! அதுக்காக ஒங்க ஊரு தேர நெனச்சுக்கிட்டெ எல்லா தேரயும் பாக்கலாமா? அந்தந்த ஊருக்குத் தக்கதான் எல்லாம் இருக்கும்.’ மகளுக்கு சப்போர்ட்டாகவும், ஊரை விட்டுக் கொடுக்காமலும் ஆச்சி களத்தில் குதித்தாள். ‘அதுக்காக இப்பிடியா? ஒங்க ஊரு தேரு ஒன்னையும் விடல்லா குட்டையா இருக்கு’. சிரிப்பை அடக்க முடியாமல், ‘தூரப் போல’ என்றபடி செல்லமாக அடிக்க வந்தாள், ஆச்சி. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே ஆச்சி என்னை விட குட்டையாகிப் போனாள். ‘ம்ம்ம், அப்பொல்லாம் என் ஒக்கல்ல விட்டு எறங்கவே மாட்டான். இப்பொ வளந்துட்டாம்லா. அதான் சீமய வித்து செப்புல அடைக்க மாரி பேசுதான்’. இதைச் சொல்லும் போதும் சிரிப்பை அடக்கியபடிதான் சொல்வாள், ஆச்சி. ‘நீ ஏசுதியா, பாராட்டுதியான்னே தெரியலியே’ என்பேன். ‘தெரியலன்னா பள்ளிக்கூடத்துல பாடம் சொல்லிகுடுக்காம்லா, ஒன் வாத்தியான். அவன்ட்ட போயி கேளு’ என்று பதில் வரும்.

அதிகபட்சமாக ஆழ்வார்குறிச்சியில் ஒருவாரம் தங்குவேன். ஒரு வாரத்தில் தினமும் ஆற்றுக்குளியல். குளித்து சிவந்த விழிகளுடன் வீட்டுக்குள் நுழையும் போது அதுவரைக்கும் தெரியாத பசியை, அடுக்களையிலிருந்து வரும் இட்லி ஆவியின் மணம், அதிகரிக்கச் செய்யும். மிளகாய் வத்தல் கண்ணில் படும்படியான ஒரு துவையலுடன், கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்த தேங்காய்ச் சட்னியுடன், மணக்க மணக்க செக்கு நல்லெண்ணெயை ஊற்றுவாள், ஆச்சி. ஒரு தட்டு இட்லி முடிவதற்குள் தோசைக்கல் காய்ந்து விடும். ஆழ்வார்குறிச்சியில் மட்டுமே அவ்வளவு புஷ்டியான தோசையை பார்த்திருக்கிறேன். ‘ஆளாருச்சி அத்த ரெண்டு வெரல் தண்டிக்குல்லா தோச சுடுவா’. ஆச்சியின் பேச்சு வந்தாலே முருகப் பெரியப்பா சொல்லும் முதல் வரி, இதுதான். மதியத்துக்கு பொட்டல்புதூர் பஜாரிலிருந்து தாத்தா வாங்கி வந்துப் போடும் புத்தம்புது காய்கறிகளுடன் பேரன்களுக்காக விசேஷ சமையல் தயாராகும். எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் கண்டிப்பாக அவியல் உண்டு. ‘நீ வந்தாத்தான் அப்பளச் சட்டியையே அடுப்புல வைப்பேன். இல்லென்னா இங்கெ யாரு அப்பளம் திங்கா?’ ஒருமுறை ஆச்சி வைத்த அவியலில் ‘புதிதாக ஒன்று’ சேர்ந்திருந்தது. முன்பின் அறிந்திராத அதன் சுவை என்னைக் கவர, ஆச்சியிடம் அதன் பெயரைக் கேட்டேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சின்ன மாமா உடனே, ‘அதுவா? நீ பீட்ரூட் திங்கெல்லா? அதமாதிரி இது ஏட்ரூட்’ என்றான். அதற்குப் பிறகு நான் ஆழ்வார்குறிச்சிக்குப் போகும் போதெல்லாம் எனக்காக ஆச்சி தனியாக ‘ஏட்ரூட்’ வைக்க ஆரம்பித்தாள். நாளடைவில் ‘ஏட்ரூட்’ என்பது பலாக்கொட்டையை அவித்து, துண்டு துண்டாக நறுக்கி சமைக்கப்படும் சமாச்சாரம் என்பது தெரிய வந்தாலும் இன்றுவரை எனக்கு ‘பசுமரத்தாணி’யாக அது ‘ஏட்ரூட்’தான்.

திருநெல்வேலியில் எங்கள் வீட்டில் சாப்பிடும்போது முகம் சுளித்து நான் ஒதுக்கி வைக்கும் பல காய்கறிகளை மறுப்பேதும் சொல்லாமல் ஆழ்வார்குறிச்சியில் சாப்பிடுவேன். ‘பாத்தியாம்மா. நான் அங்கெ கத்திரிக்கா வச்சா, மூஞ்சிய தூக்குவான். இங்கெ எப்பிடி முளுங்குதான், பாரென்.’ ஆச்சரியத்தில் தாங்கமாட்டாமல் புலம்பும் அம்மாவை சத்தம் போடுவாள், ஆச்சி. ‘பிள்ள சாப்பிடுதுன்னு சந்தோசப்படுவியா! கண்ணு போட்டுக்கிட்டு. நீ சாப்பிடுய்யா. அவ கெடக்கா’.

ஆழ்வார்குறிச்சி நான் பிறந்த ஊராக இருந்தாலும், அந்த ஊரையோ, ஆச்சியையோ நினைக்கும் போது பிரதானமாக மனதில் எழுவது அதன் சாப்பாட்டு ருசிதான். ‘ஆளாருச்சி தவுசுப்பிள்ளன்னா ரொம்ப ஃபேமஸ்லா’. அம்மாவை கேலி செய்வதற்காக சுந்தரம் பிள்ளை பெரியப்பா அடிக்கடி சொல்வார். ‘இங்கெ நீங்க வகவகயா செஞ்சு தின்னாலும் வயிறு வேணா நெறையும். மனசு நெறயவா செய்யும். எங்க ஊரு சாப்பாடு அப்பிடி இல்லெல்லா. வெறும் சோத்தத் தின்னாலும் ஆளாருச்சி சோத்துருசியே தனிதான்’. அம்மாவும் விட்டுக் கொடுக்காமல் சொல்வாள். அது உண்மைதான். இரவு நேரங்களில் ‘தண்ணி ஊத்தின சோற்றுக்கு’த் தொட்டுக் கொள்ள, அம்மியில் தேங்காய், கல் உப்பு, கொஞ்சம் பொரிகடலை(சென்னையில் அதை ஒடச்ச கடலை என்கிறார்கள்) வைத்து நைத்து, மையாக அரைத்து, உருட்டி ஒரு பந்து சைஸுக்கு ‘பொரிகடலை தொவையல்’ வைப்பாள், ஆச்சி. என் வாழ்நாளில் அப்படி ஒரு ‘அமிர்த ருசி’யை நான் இதுவரை வேறெங்கிலும் சுவைத்ததில்லை. நாஞ்சில் நாடன் சித்தப்பாவிடம் இதுபற்றி ஒருமுறை சொல்லிக் கொண்டிருந்த போது, சித்தப்பா சொன்னார். ‘ஆச்சி மனசு, கைவளியா தொவையல்ல எறங்கியிருக்கும்லா! அதான் அந்த ருசி’.

அம்மாவின் சமையலை ஊரே மெச்சினாலும் அம்மா என்னவோ ஆச்சியின் சமையலுக்கு முன்னால் தன்னுடையது ஒன்றுமேயில்லை என்பாள். அவளுக்கு தன் தாயார் வைக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன பதார்த்தமும் அவ்வளவு ருசியை அளித்தவை. ‘வெறும் புளித்தண்ணி வச்சாலும் எங்க அம்ம கைமணமே மணம்’. மகள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் போது, அவளுக்குப் பிடித்த ’கத்திரிக்காய் கொத்சு’ செய்து, சோற்றுடன் பிசைந்து சின்னக் குழந்தைக்கு ஊட்டிவிடுவது போல் ஆசைஆசையாக ஆச்சி ஊட்டி விட்டதைப் பார்க்க முடியாமல் அந்த இடத்தை விட்டுத் தள்ளி வந்து அழுதேன். இரண்டொரு தினங்களில் அம்மா காலமானாள். ’கடைசி நேரத்துல் என் கையால அவளுக்கு புடிச்சத செஞ்சு குடுக்க முடிஞ்சுதெ! அது ஒண்ணே போதும் எனக்கு’. அழுகையினூடே ஆச்சி அடிக்கடி இதைச் சொல்லி, தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

மகளும் போய், அடுத்த சில மாதங்களில் தன் மகனும் போய், இப்போது தன் கணவரையும் இழந்து தனியே ஆழ்வார்குறிச்சியில் படுத்துக் கிடக்கும் ஆச்சியை இந்த நவராத்திரியின் போது சென்று பார்த்தேன். நீண்ட நாட்கள் கழித்து என்னையும், என் மகனையும் பார்த்து மகிழ்ந்தாள், ஆச்சி. ஆச்சிக்குத் துணையாக ஆச்சியைவிட வயதில் குறைந்த இன்னொரு ஆச்சி இருந்தார். ‘நீ வந்தா சொல்லச் சொல்லி எதுத்த வீட்டு சம்மொத்தாத்தா வீட்டு ஆச்சி சொல்லியிருந்தா. வரச் சொல்லட்டுமா?’ கட்டிலில் இருந்தபடி, அனுமதி கேட்கும் விதமாக ஆச்சி கேட்டாள். ‘ம்ம்ம், வரச் சொல்லு’ என்றேன். சற்று நேரத்தில் கையால் சுவற்றைப் பிடித்து தடவித் தடவி அங்கு வந்த சண்முகதாத்தா வீட்டாச்சி, ’எய்யா, சும்மா இருக்கியா?’ என்று எங்கோ பார்த்தபடி கேட்டார். ‘நல்லா இருக்கேன் ஆச்சி’. என் மகனின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியபடி, ‘சின்னப்பிள்ளைல இருந்தமாரியே புசுபுசுன்னுதான் இன்னும் இருக்கான்’ என்றார். ’மூதிக்கு கண்ணு சுத்தமா அவிஞ்சு போச்சு’. ஆச்சி என் காதில் மெதுவாகச் சொன்னாள்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே மணமாக இருக்கும் ஆழ்வார்குறிச்சி ஆச்சிவீட்டின் அடுக்களை, எந்த வாசமுமில்லாமல் வெறுமனே இருந்தது. அடுக்களைக்கு வெளியே வெயிலில் காய்ந்து களையிழந்து கிடந்த அம்மியையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘என்ன பாத்துக்கிட்டிருக்கெ?’ மகன் கவனம் கலைத்தான். அவனிடம் அடுக்களையைக் காட்டி சொன்னேன். ‘இங்கெதான் நான், சித்தப்பா எல்லாரும் பொறந்தோம்’. நம்பவே முடியாமல், ‘இங்கெ எப்படி பொறப்பாங்க? இது என்ன ஹாஸ்பிட்டலா?’ என்று கேட்ட அவனிடம் விளக்கம் ஏதும் சொல்லாமல், தூசியடைந்து ஓரமாகக் கிடந்த கல் உரலைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். உரலின் குழியில் பழைய குப்பைத்தாள்கள் அடைந்து கிடந்தன.

வீட்டு வேலைகள் செய்வதிலாகட்டும், தொழுவத்திலுள்ள பசு, கன்றுக்குட்டிகளைப் பராமரிப்பதிலாகட்டும். அங்கும் இங்குமாக அலைந்தபடி சுறுசுறுப்பாகவே பார்த்து பழகிய ஆச்சி, இப்படி படுக்கையில் கிடப்பதைப் பார்க்க சகிக்காமலேயே, நான் அடிக்கடி அவளைப் பார்க்கச் செல்வதில்லை. அத்தனை ருசியாக சமைத்து போட்டு, எங்களை வளர்த்த ஆச்சி தன் கடைசிக்காலத்தில் ஹோட்டலில் இருந்து வரும் ‘எடுப்பு’ சாப்பாடு சாப்பிடுவோம் என்பதை கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்தான். ஆனாலும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவளாக , என்னிடத்தில் ‘நான் நல்லாத்தான் இருக்கென். ஒருகொறையும் இல்ல. யாரையும் தொந்தரவு பண்ணாம இந்தமட்டோட போயிரணும்’ என்றாள். சொன்னபடியே இந்தமாதத்தின் துவக்கத்தில் போயும் விட்டாள்.

ஆச்சி புறப்பட்டுவிட்ட செய்தி கிடைத்தவுடன், ஆழ்வார்குறிச்சிக்குப் போக வேண்டாம் என்று முடிவெடுத்தேன். ஆழ்வார்குறிச்சியுடனான எனது தொப்புள்கொடியுறவு அறுந்து போனதை தற்சமயம் என்னால் ஜீரணிக்க முடியவேயில்லை. அதற்காக ஆழ்வார்குறிச்சிக்குப் போகாமலேயே இருக்கப் போவதில்லை. அம்மா காலமானபிறகு திருநெல்வேலிக்குப் போனால், நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்லாமல் இருப்பதில்லை. காந்திமதியம்மன் சன்னதியில் சில நிமிடங்கள் நின்று அவள் முகத்தைப் பார்த்துவிட்டு வந்தால், என்னமோ அம்மையைப் பார்த்த நிறைவு ஏற்படும். இனி ஆழ்வார்குறிச்சிக்குப் போனால் சிவசைலநாதர் கோயிலுக்குச் சென்று, பரமகல்யாணி அம்பாளின் முகத்தைப் பார்க்க வேண்டும்.

17 thoughts on “காந்திமதியின் தாயார்

  1. ரொம்ப அழ வச்சுட்டீங்க சுகா… எங்க அம்மாவையும் ஆத்தாவையும் நெனச்சு நல்லா ஒரு மூச்சு அழுதுட்டேன்…அம்பாசமுத்திரத்தையும் திருப்புடைமருதூரையும் நெனச்சா… மனசு கலங்குது

  2. Really I like each and every writings of Suga. Thanks for knowing him. Generally in his writing there will be a small amusement but this time it is very opposite. I am sorry this type of feelings will not be compensated by any means.

  3. சுகா, நீங்கள் சொல்ல சொல்ல கண்ணில் படமாய் விரிந்து கொண்டே வந்த உங்கள் ஆச்சி இறந்ததை குறிப்பிடும் போது, என் கண்ணில் நீர் வந்தது, அது உங்கள் ஆச்சியை நினைத்தா அல்லது என் எம்மாவை(என் அம்மாவை பெற்ற பாட்டியை இப்படி தான் கூப்பிடுவேன், அவர்களுக்கு பணகுடி தான் சொந்த ஊர், அதனால் எங்க அம்மா தன அம்மாவை எம்மா என்று தான் கூபிடுவர் அதை நான் அவர்கள் பெயர் என்று சின்ன வயதில் நினைத்து விட்டதால் அவர் காலம் முழுவதும் எனக்கு எம்மாவாகிவிட்டார் ) இறந்ததை நினைத்த என்று புரியவில்லை.

  4. தன் ஆச்சியின் மீது இருக்கும் பாசத்தை மிக அழகாக சொல்லிருக்கீர்கள்,என்னையும் அறியாமல் கண்கலங்கிவிட்டேன்.உங்கள் எழுத்துக்கும்,திரைப்பயணத்திற்கும் மிக உயரமான இடம் காத்துகொண்டிருக்கிறது.வாழ்த்துகள் சுகா..,

  5. எத்தனை கொடுத்தாலும் அம்மா கைப்பாசமும் ஆச்சி கைப்பாசமும் எங்கும் கிடைக்காது. ஒவ்வொரு பாட்டியையும் மனதில் இறக்கிவிட்டீர்கள்.வேணுவனம் சுகவனமாக என்னைச் சுற்றி நிற்கிறது. மிகவும் நன்றி.

  6. சுகா,
    ஆச்சி போன்ற நல்ல ஆத்மாக்கள் இன்னும் இருப்தால்தான் மழை பெய்கிறது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

    படித்தபோது எனது மனம் 25-30 ஆண்டுகளும், பல்லாயிரம் மைல்களும் பயணித்தன, என்னது பாட்டி, அம்மாவின் சமையல் ருசி தேடி…

  7. சுகா அவர்களே! சிறப்பான எழுத்து!! ஆச்சியின் ஆத்மா சாந்தி அடையவும், நீங்கள் மேலும் பல அனுபவங்களை பெற்று எங்களோடு பகிர்ந்து கொள்ளவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!

  8. நீங்கள் இத்தனை ஆழமாக அழுத்தமாக எழதுவதற்காகவே உங்கள் வாழ்வில் சம்பவங்கள் நிகழ்கிறதா இல்லை வாழ்வில் நடக்கும் அத்தனை சம்பவங்களையுமே உணர்ச்சிப்பெருக்கோடு சொல்லும் வலிமை உங்களுக்கு இருக்கிறதா?

    ஆச்சி பற்றிய கட்டுரை வாசித்ததும் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை

  9. கல்லெறிந்தால், தன்னைப் பாதித்த அந்தக் கல்லை தனக்குள்ளே தேக்கிவிட்டு தன் வலியைக்கூட அழகாய் கோலங்களாய் காட்டும் நீர் நிறைந்த குளம். இந்த ”வேணுவனத்திலோ”, சுவாசித்த “மூங்கில் மூச்சிலோ”, சேவித்த “தாயார் சன்னதியிலோ”, உன் எண்ணக் குளத்தில் மலராய், கல்லாய், இன்ன பிற விதங்களாய் விழுந்தவர்களை படிப்பவரின் கண்முன்னே நிறுத்துவதோடு உனக்குள் ஏற்பட்ட பாதிப்புகளையும் அழகுணர்வோடு வட்டார மொழியழகோடு இயல்பாய் வெளிப்படுத்துகிறாய். சிவனின் இரு ரூப கோவில் தேர்களின் கன பரிமாணங்களில் தொடங்கி ஒரே குடும்பத்தின் இரு வேறு தலைமுறைகளின் தொப்புள் கொடி ஆழத்தை, வேறுவிதமான இழப்பின் வலியை… ஹ்ம்ம்ம்… ”காந்திமதியின் தாயார்” போன்ற சில பதிவுகள், யோசிக்க விடாமல் என் கண்களை குளமாக்கிவிடுகின்றன…

    பகவதி

  10. படிக்க படிக்க உடம்பே புல்லரிச்சிருச்சு சுகா . கண்ணீர் வாரத தவிர்க்க முடியல .

  11. அன்புள்ள சுகா,
    எனக்கு என்னோட அம்மாவை விட என் அவ்வாவைதான் (பாட்டி )ரொம்ப பிடிக்கும்,
    இத படிச்சுட்டு நான் ஒவ்வுறு வரியிலும் எனது அவ்வாவை நினைத்து கொண்டேன்.

    உணர்வும் உயிரும் நிறைந்த உங்களது எழுத்து திறமைக்கு எனது வாழ்த்துக்கள் ……

    அன்புடன் ,
    அருண் பிரசாத் ஜெ

  12. அன்புள்ள சுகா,

    அருமையான படைப்பு… உங்கள் ஆச்சி வீட்டிற்க்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள்
    அழவைத்தாலும்..,
    மாதமொருமுறை ஊர்செல்லும்போது மட்டுமே பார்க்க வாய்த்திருந்த என் அமத்தாவின் பிடிசோறு இங்கிருந்தே கிடைத்து விட்டதாய் ஓர்
    நிறைவு…

Comments are closed.