‘மிருதங்கம் – ஒரு பறவைப்பார்வை எழுப்பும் பல கேள்விகள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சொல்வனத்தில் படித்தேன். தலைப்பில் இருந்த மிருதங்கம் என்ற வார்த்தைதான் என்னை படிக்கத் தூண்டிற்று. எழுதியவர் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. பிறகு மீண்டும் ‘மிருதங்கம் – தஞ்சாவூரும், புதுக்கோட்டையும்’ என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரையையும் படிக்க நேர்ந்தது. இதற்கு அடுத்ததாக ‘மான்பூண்டியா பிள்ளை’ என்ற கட்டுரையைப் படித்த பிறகுதான் அதை எழுதியவர் ‘லலிதாராம்’ என்றறிந்தேன். சேதுபதி அருணாசலத்திடம், ‘சேது, சொல்வனத்துல இசைக்கட்டுரைகள்லாம் எளுதுறாங்களே, லலிதாராம்! யாருங்க அந்த அம்மா? பிரமாதமா இருக்கு’ என்றேன். அடக்க முடியாமல் சிரித்தபடி, ‘அய்யோ அண்ணாச்சி. அது பொம்பள இல்ல. ஆம்பிள. நம்ம நண்பர்தான். பேரு ராமச்சந்திரன்’ என்றார் சேதுபதி. அதற்குப் பிறகும் ‘லலிதாராம்’ எழுதிய ‘தட்சிணாமூர்த்தி பிள்ளை, பழனி முத்தையா பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி’ போன்ற இசைமேதைகளைப் பற்றிய கட்டுரைகளையெல்லாம் படித்தேன்தான் என்றாலும், ‘டங்குஸ்லிப்பாக’க்கூட அவற்றைப் பாராட்டி ஒரு வார்த்தையும் சொல்லிவிடவில்லை. இதற்கிடையே நான் எழுதிய சில கட்டுரைகளைப் பாராட்டி லலிதாராமிடமிருந்து ஒன்றிரண்டு மின்னஞ்சல்கள் வந்து, அவற்றுக்கு சம்பிரதாயமாக பதிலும் போட்டிருந்தேன். ஆக, பார்த்தேயிராத லலிதாராமுடனான எனது உறவு இந்த அளவில்தான் இருந்தது. இந்த சமயத்தில்தான் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணிய பிள்ளை பற்றி லலிதாராம் எழுதிய ‘துருவநட்சத்திரம்’ என்ற புத்தகத்தை ‘சொல்வனம்’ வெளியிட இருக்கிறது என்ற செய்தி வந்தது.

‘துருவநட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைக்க விரும்புவதாகவும், அதற்காக என்னுடைய கைபேசி எண்ணை லலிதாராம் கேட்பதாகவும் சேதுபதியிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. ‘தாராளமாக எண்ணைக் கொடுங்கள்’ என்று சேதுபதிக்கு பதில் அனுப்புவதற்குள், ‘லலிதாராமுக்கு ஒன்னோட மொபைல் நம்பர குடுத்திருக்கேன்’ என்று ‘பாட்டையா’ பாரதி மணியிடமிருந்து தகவல் வந்தது. சிறிது நேரத்திலேயே ’அழைக்கலாமா’ என்ற குறுஞ்செய்தியும், பதிலுக்குப் பின் அழைப்பும் வந்தது. ‘வணக்கம் ஸார். நான் லலிதாராம் பேசுறேன்’. மனதோரத்தில் ரகசியமாக ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து போகிற மாதிரி ‘லலிதாராம்’ என்ற ஆண்குரல் என்னிடத்தில் பேசியது. ‘முடிந்தால் வருகிறேன் பிரதர்’ என்றேன்.

எனது முதல் புத்தகமான ‘தாயார் சன்னதி’யை வெளியிட்ட அப்பாவிகள் சொல்வனக்காரர்கள் என்பதாலும், மறைந்த இசை மாமேதைகள் பலரைப் பற்றி ஆத்மார்த்தமாக தொடர்ந்து எழுதிவரும் லலிதாராம் என்கிற உண்மையான இசை ரசிக எழுத்தாளருக்காகவும் ‘துருவநட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றேன். சாலிகிராமத்திலிருந்து மயிலாப்பூர் செல்வதென்பது, என்னைப் பொருத்தவரைக்கும் வெளிநாட்டுப் பயணம். முதல் நாள் இரவிலிருந்தே மனதுக்குள் கிளம்பிக் கொண்டிருந்தேன். மிகச் சரியாக ‘ராகசுதா ஹால்’ இருக்கும் இடத்தைத் தவறவிட்டு, முழித்தபடி ‘ஹிந்து’வில் பணிபுரியும் நண்பர் கோலப்பனை கைபேசியில் அழைத்தேன். ‘இந்தா வாரேன்’ என்றபடி ஒரு கட்டிடத்துக்குள்ளிருந்து கோலப்பன் வெளியே வந்தார். ‘இதான் ராகசுதா ஹாலா?’ என்றபடி பார்க்க, ‘பொஸ்தகமெல்லாம் வெளியிட்டு முடிச்சாச்சு. நீங்க உள்ள போங்க. நான் இன்னொரு நிகழ்ச்சிக்கு போயிட்டு ஓடி வந்திடறேன்’.

முக்கால்வாசிக்கும் மேலே நிறைந்திருந்த அரங்குக்குள் நான் நுழையும் போது திருச்சி சங்கரன் பேசிக் கொண்டிருந்தார். கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையின் ஓரத்து நாற்காலியில் அமர்ந்திருந்த ‘சொல்வனம்’ பாஸ்கர் என்னைப் பார்த்து கையை ஆட்டினார். அவரருகில் சென்று அமர்ந்த பிறகும் அவர் கை ஆடிக் கொண்டிந்ததை கவனித்தேன். உற்றுப் பார்க்கும் போது ஒட்டுமொத்த பாஸ்கரிலும் ஓர் ஆட்டம் தெரிந்தது. ‘ஒருமாதிரியா பேசிட்டேன்’. சத்தமாகச் சொல்லியபடி பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தார். ‘பேசுறதென்ன. டைப் பண்ணிட்டு வந்து வாசிச்சுட்டேன்’. மேலும் சத்தமாகச் சொல்லியபடி அச்சிட்ட காகிதத்தை என்னிடம் கொடுத்தார். கண்மருத்துவமனையில் பெரிய எழுத்துகளில் ‘அ, ம, ச, ப’ போர்டு வைத்திருப்பது போல, பெரிய எழுத்துகளில் டைப் செய்யப்பட்டிருந்தது. ‘முன்ன பின்ன பேசி பளக்கமில்ல பாத்தீங்களா. அதான்’. இந்த முறை பாஸ்கர் என்னிடம் சொன்னது மேடையில் பேசிக் கொண்டிருந்த திருச்சி சங்கரனுக்கேக் கேட்டது. மெதுவாக பாஸ்கரின் தொடையை அழுத்தினேன். ஆதரவாக நான் அவரைத் தட்டிக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு இன்னும் சத்தமாக ‘பொன்னாடைல்லாம் பையில வச்சிருக்கேன். ஆனா யாருக்கு போத்துறதுன்னு தெரியல’என்றார். மனிதருக்கு முதல் முறையாக மேடையேறிய பதற்றம் இன்னும் குறையவில்லை என்பது புரிந்தது. மனதுக்குள் ‘நல்ல வேளை, நாம லேட்டா வந்தோம். இல்லேன்னா நம்மளையும் மேடையேத்தி விட்டிருப்பாங்க. ரொம்பப் பெரிய எளுத்துல வணக்கம்னு சொல்லி அசிங்கப்பட்டிருப்போம்’ என்று நினைத்துக் கொண்டேன்.

ரொம்ப சத்தமாகப் பேசுகிறார் என்பதால் பாஸ்கரிடம் மேலும் பேச்சு கொடுக்காமல், அமைதியாகவே இருந்தேன். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஒருவரைப் பார்த்தவுடன், மெதுவாக பாஸ்கரின் காதுக்கருகில் கையைக் குவித்து, எல்.ஆர்.ஈஸ்வரியின் ‘காதோடுதான் நான் பேசுவேன்’ போல, ‘பாஸ்கர், அவருதான் லலிதாராமா?’ என்று கேட்டேன். ‘சே, அவரு சின்ன வயசுக்காரர். இவரு இல்ல’. இன்னும் அதே பெரிய சைஸ் எழுத்தில்தான் சொன்னார். சிறிது நேரத்தில் ‘கிழக்கு பதிப்பகத்தின் புத்தக வடிவமைப்பாளர் மணிகண்டன்’ வந்தார். ‘பாஸ்கர், இவர்தான் மணிகண்டன். இவருக்கு ஒரு பொன்னாடையை போர்த்திடுங்க’ என்றேன். என்னைப் பார்த்து சிரித்தபடி அருகில் வந்த மணிகண்டனுக்கான பொன்னாடையை எடுத்து, ‘நீங்களே குடுத்திருங்க’ என்றார் பாஸ்கர். ‘சொல்வனம் சார்பா நீங்கதாங்க குடுக்கணும்’ என்று நான் சொன்னதை காதிலேயே வாங்கிக் கொள்ளாதவராக, ‘அம்மையப்பன் தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன்’ என்பது போல ‘நீங்கதான் சொல்வனம், சொல்வனம்தான் நீங்க’ என்றார். இந்த கூத்து நடக்கும் போது இன்னும் மேடையில் பேசிக் கொண்டுதானிருந்தார்கள். சிரித்தபடி ஸ்நேகமாக என்னருகில் வந்த மணிகண்டனின் முகம் மாறத் தொடங்கியது. சட்டென்று பாஸ்கரின் கையிலிருந்து சால்வையை வாங்கி மணிகண்டன் கைகளில் திணித்தேன். கடமை முடிந்த ஆசுவாசத்துடன் ‘அப்போ நான் கிளம்பறேன் ஸார்’. வணங்கி வழி விட்டேன். ‘ஆனா பாருங்க. இன்னும் ஒரு பொன்னாட பாக்கி இருக்கு. இத என்ன பண்றதுன்னு தெரியல’ என்று போகிற போக்கில் பாஸ்கர் சொன்னதைக் கேட்காத மாதிரி உட்கார்ந்திருந்தேன்.

‘ரஜினி’ ராம்கி அருகில் வந்து உட்கார்ந்தார். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த உற்சாகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். இதற்குள் மேடையில் பேச்சு முடிந்து கச்சேரி தொடங்க இருந்தது. கதவைத் திறந்து கொண்டு மின்னல் வேகத்தில் பாஸ்கர் வந்தார். எங்கே மீந்து போன பொன்னாடையை எனக்கு போர்த்தி விடுவாரோ என்று பயந்தேன். பாஸ்கருடன் சிகப்பு ஜிப்பா அணிந்த ஒரு இளைஞர் வந்தார். பால்மணம் மாறா பூமுகம். ‘இவர்தான் சுகா’. பாஸ்கர் சொல்லவும், ‘அண்ணா, நான் தான் லலிதாராம்’. ‘முக்கா முக்கா மூணுவாட்டி’ கட்டிப்பிடித்து, ‘என்னை கௌரவப்படுத்திட்டீங்க, அண்ணா’ என்றார். சங்கோஜமாக இருந்தது. ‘பாரதிமணி ஸார் வரமுடியாதுன்னு சொன்னது வருத்தமா இருந்துச்சு. ஆனா நீங்க வந்து ஹானர் பண்ணி அத மறக்க வச்சுட்டீங்க’ என்றார். ‘ஏன் அவரு வரல?’ என்றேன். ‘அவரு பல்ல புடுங்கி பாக்கறதுக்கே பயங்கரமா இருக்காறாம்’ என்றார். ‘ஏற்கனவே அப்பிடித்தானே இருப்பாரு’ என்று நான் சொன்னதற்கு ராம்கி சரிந்து சிரித்தார். இதற்குள் கச்சேரி ஆரம்பமாக ‘விழாநாயகன்’ லலிதாராம் என்னருகிலேயே அமர்ந்து கொண்டார். லலிதாராமை அறிமுகம் செய்து விட்டு வெளியே சென்ற பாஸ்கர், மீண்டும் நைஸாக உள்ளே வர, ‘பாஸ்கர், நீங்கதான் அப்பொவெ கெளம்பறதா சொன்னீங்கள்ல? ஏன் மறுபடியும் மறுபடியும் வரீங்க?’ கொஞ்சம் சத்தமாக நான் சொல்லவும், ‘இந்த வாட்டி நெஜமாவே போயிடறேன் ஸார்’. பாஸ்கர் கிளம்பிப் போனார்.

திருமதி விஜயலக்ஷ்மி சுப்பிரமணியத்தின் கச்சேரி ஆரம்பமானது. எல்.சுப்பிரமணியம், அக்ஷய் ஆனந்த் இருவரின் இரட்டை மிருதங்கம். இருவரும் பிரமாதமாக வாசித்தார்கள். விஜயலக்ஷ்மியும் அவரது குரல் எல்லைக்குட்பட்டு நன்றாகவே பாடினார். லலிதாராமுக்காக ‘லலிதா’ ராகமும், பிறகு கல்யாணியும் பாடினார். கல்யாணியை ராகவேந்திர ராவ் வயலினில் வாசித்த போது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. ராகவேந்திர ராவின் முகத்தில் துளியும் தென்படாத ‘பாவம்’, கைகளில் அநாயசமாகப் பேசியது. இரட்டை மிருதங்கத்தின் கைகளை, ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி கொஞ்சம் கொஞ்சம் அவிழ்த்து விட்டிருக்கலாம். ‘எல, லலிதாரம் என்னைப் பாடக் கூப்பிட்டிருக்கானா, இல்ல ஒங்கள வாசிக்கக் கூப்பிட்டிருக்கானா’ என்பது போல கொஞ்சம் கண்டிப்பாக நடந்து கொண்டார். எனக்கு அதிகம் பழக்கமில்லாத காந்தாமணியில் சௌக்கியமாகவே பாடினார். சாதாரணமாக துணிந்து யாரும் பாடிவிட முடியாத ஒரு ராகத்தில் அவர் பாடியது, அவரது சாதகத்தையும், அனுபவம் தந்த தைரியத்தையும் காட்டியது. ரொம்ப நாட்கள் கழித்து என்னை மறந்து கைகளை வீசி, தாளம் போட்டு ரசித்து கேட்ட கச்சேரி. இரட்டை மிருதங்கத்தில் ஒற்றை மிருதங்கக்காரனான சிறுவன், இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறான்.

மங்களம் பாடி கச்சேரி முடியும்வரை நானும், கோலப்பனும் இருந்தோம். கிளம்பும்போதும், ‘நீங்க வந்தது பெரிய கௌரவம் அண்ணா’ என்றார், லலிதாராம். ஒருமாதிரி நிறைவாகவே இருந்தது. ஆனாலும் ‘பாட்டையா’ பாரதிமணி அவர்களுடன் அமர்ந்து ரசித்து சங்கீதம் கேட்கும் வாய்ப்பில்லாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான். அவரது வீட்டில் நாங்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, எங்களுடன் பின்னணியில் ராஜரத்தினம் பிள்ளையோ, மதுரை மணி ஐயரோ, காருகுறிச்சியாரோ துணைக்கிருப்பார்கள். இப்படி ஒரு விழாவில் அவர் இல்லாமல் போனது பெரும் குறைதான். வழக்கமாக சென்னையில் எந்த ஒரு இலக்கிய விழா நடப்பதாக இருந்தாலும், மைக்செட்டுக்குச் சொல்கிறார்களோ, இல்லையோ ‘பாட்டையா’வுக்குத்தான் முதலில் சொல்வார்கள். அவர்கள் சொல்லவில்லையென்றாலும் முதல் ஆளாக பன்னீர்சொம்புக்கு பதிலாக பைப் பிடித்தபடி ‘கௌரவம்’ சிவாஜியாக வாசலில் நிற்பார். திருநெல்வேலியில் கேலியாகச் சொல்வார்கள்.

‘ஏ என்னடே, காவன்னா சூனாக்கு காயிதம் குடுத்தாச்சா?’

‘குடுக்கலேன்னா என்னா? அவாள் மாங்கொலல்லா. மாங்கொல இல்லாத கல்யாணம் ஏது?’

‘மாவிலை’யை திருநெல்வேலியில் வழக்கு தமிழில் ‘மாங்குலை’ என்பர்.

இந்த கட்டுரையைப் படித்துவிட்டு எப்படியும் ‘பாட்டையா’ பாரதி மணி எனக்கு ஃபோன் பண்ணுவார். ‘எலேய், நாலு கட்டுரைக்கு ஒரு கட்டுரைல என் வேட்டிய அவுக்கலென்னா ஒனக்கு தூக்கம் வராதெ’ என்று சொல்லியபடி போனஸாக, இல்லாத என் சகோதரியையும் ஏசுவார். அந்த ஃபோனுக்காகக் காத்திருக்கிறேன்.

ஓவியம் : வள்ளிநாயகம்

4 thoughts on “மாங்குலை இல்லாத கல்யாணம்

  1. பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    மாங்குலை மற்றும் மஞ்சள், கரும்புடன்!!!

  2. திருநோலித் தமிழ் கொஞ்சுகிறது. இன்பத் (திருநெல்வேலி)தமிழ் வந்து காதினில் பாய உவகைஉற்றேன்

  3. இல்லாத சகோதரியையும் ஏசுவார் …
    இந்த ஒருவரி போதும் இந்த கட்டுரையை ரசிப்பதற்கு .. மற்றபடி உங்கள் சங்கீத ரசனை , அறிவு.. ஏற்கனவே அறிந்த்ததுதான் ..பாராட்டுகள். மற்றுமொரு ரசிக்கத் தகுந்த கட்டுரை.

Comments are closed.