கதையல்லாத Non fiction ஐட்டங்களின் மேல் சிறுவயது முதலே எனக்கோர் ஈர்ப்புண்டு. ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரின் கடிதங்கள் தொடங்கி ஜெயகாந்தனின் ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’ மற்றும் ‘அவர்கள் வெளியே இருக்கிறார்கள்’, சுஜாதாவின் ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கற்றதும் பெற்றதும்’, வண்ணதாசன் அண்ணாச்சியின் ‘என்றென்றும் அன்புடன்’, நாஞ்சில் சித்தப்பாவின் ’தீதும், நன்றும்’, பெரியவர் அ.முத்துலிங்கத்தின் கதையும், கட்டுரையுமல்லாத நடைச்சித்திரங்கள் வரை மனதைக் கவர்ந்தவை, கவர்பவை அவைதாம். (இந்தப் பட்டியலில் இன்னும் இரண்டு புத்தகங்களைச் சொல்லலாம் என்று பார்த்தால் பாழாய்ப் போன தன்னடக்கம் தடுத்துத் தொலைகிறது, சனியன்.) மேற்சொன்னவை யாவுமே புத்தகவடிவில் என்னிடத்தில் உள்ளன. ஆனால் இவற்றுள் மீண்டும், மீண்டும் எடுத்துப் படிக்கும் புத்தகமாக ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், அது பாரதி மணி அவர்களின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தைத்தான். ஊருக்கெல்லாம் அவர் (பாரதி படத்துக்குப் பிறகு) பாரதி மணி. எனக்கு அவர் ‘பாட்டையா’. இப்போது பலரும் அவரை ‘பாட்டையா’ என்றழைப்பதைப் பார்க்கும் போது, அவரை அப்படி விளித்த முதல் ஆள் நான் என்பதில் மகிழ்கிறேன்.

‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தின் கட்டுரைகள் அனைத்தையும் ‘உயிர்மை’யில் வெளிவந்த போதே படித்திருக்கிறேன். சிலவற்றை அதற்கு முன்பே. முதல் கட்டுரைக்கே ஜெயமோகன் என்னும் வாசகர் பாட்டையாவுக்குக் கிடைத்தார் என்றால் அதற்கு மேல் அவரது எழுத்தைப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்லை. அப்படியென்றால் இந்தக் கட்டுரையை இப்படியே முடித்து விடலாமா? அதுவும் முடியாது. நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது.

மொத்தம் பதினெட்டு கட்டுரைகள். அவற்றில் மூன்று ‘அமுதசுரபி’யிலும், ஒன்று ‘உயிர் எழுத்து’ இதழிலும், மற்றொன்று ‘தீராநதி’யிலும், பிற அனைத்தும் ‘உயிர்மை’யிலும் வெளியானவை. ‘பாட்டையா’வைப் போல நானும் ஒரு சங்கீதக் கோட்டி என்பதால், இந்தப் புத்தகத்தின் என்னுடைய Most favourite ’நாதஸ்வரம் – என்னை மயக்கும் மகுடி’ என்னும் கட்டுரைதான். சின்னஞ்சிறுவனாக தன் தகப்பனாருடன் கன்னியாகுமரி ஜில்லாவின் சுசீந்திரம், மஹாதானபுரம், ஆராம்புளி(ஆரல்வாய்மொழி), தேரூர், பத்மநாபபுரம், பூதப்பாண்டி, மண்டைக்காடு, ராஜாக்கமங்கலம் போன்ற ஊர்த் திருவிழாக்களுக்குச் சென்று தான் கேட்டு ருசித்த நாதஸ்வரக் கச்சேரிகளை நினைவுகூரும் அசத்தலான கட்டுரை இது. நாதஸ்வரத்தை நாகஸ்வரம் என்றுதான் அழைக்க வேண்டும் என்பது தெரிந்தாலும், அது இன்றைக்கும் பெரும்பாலோனாரால் நாதஸ்வரம் என்றே அழைக்கப்படுகிறது. அதையும் இந்தக் கட்டுரையில், எனக்கு நாதஸ்வரம்தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார். நாதஸ்வரத்தின் போனஜென்மத்துப் பெயர் ‘திமிரிநாயனம்’ என்பதையும், அது ‘பாரிநாயனம்’ ஆக மாறியதையும் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையைத் தேடிப் பிடித்துப் படியுங்கள். இதுபோக, தான் கேட்டு ரசித்த நாதஸ்வர மேதைகளைப் பட்டியல் இடுகிறார். ‘நாதஸ்வரச் சக்கரவர்த்தி’ திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி பி. அருணாசலம், நாச்சியார்கோயில் ராகவபிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல் என இவர் அடுக்கும் போது பொறாமையில் வயிறு எரிகிறது. அதுவும் என் உள்ளம் கவர்ந்த நாதஸ்வர மாமேதை காருகுறிச்சியாரை ‘குருவை மிஞ்சிய சிஷ்யர்’ என்று, பெரியவர் ராஜரத்தினம் பிள்ளையுடன் ஒப்பிடும் போது மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது. சுசீந்திரம் கோயில் மேடையில் தன் சிஷ்யர் காருகுறிச்சி பின்னால் அமர்ந்திருக்க ராஜரத்தினம் பிள்ளை வாசித்த கச்சேரியின் போது ‘மேடைக்கு முன்னால் உட்கார்ந்து, தலையாட்டி, பஞ்சமம் போனாலே கைதட்டும் சுசீந்திரம்காரர்கள் பேசிக் கொண்டதை இப்படி சுவாரஸ்யமாகக் குறிப்பிடுகிறார்.

ராஜரத்தினம் பிள்ளை அடிக்கடி வெள்ளி டம்ளரில் ‘ஏதோ’ குடிப்பதைப் பார்த்துவிட்டு, இப்படி சொல்வார்களாம். ‘அன்னா அந்த பிளாஸ்கிலெருந்து, வெள்ளி தம்ளர் வளியா உள்ளெ போகுல்லா, அதுதான் தோடியாட்டும், காம்போதியாட்டும், கல்யாணியாட்டும் வெளீல வருது’.

ஒரு மனிதர் செத்துப் போனதற்குப் பிறகு அவரை ‘இந்திரன் சந்திரன்’ என்றுதான் எழுத வேண்டும் என்கிற அசட்டுசம்பிரதாயத்தை மீறி, உள்ளது உள்ளபடியே எழுதப்பட்டிருக்கிற ‘சுப்புடு’ பற்றிய கட்டுரை ஒன்றும் இந்தப் புத்தகத்தில் உள்ளது. ஆனால் அதைப் படிக்கும் ‘சுப்புடு அபிமானிகள்’ யாருக்கும் வருத்தம் வராதவண்ணமே கட்டுரை அமைந்திருப்பதை, அதை முடித்திருக்கும் விதம் நமக்கு சொல்கிறது.

‘ஜவஹர்லால் நேரு இவரு தோள்ல கைபோட்டாராம்லா! நல்லா கத விடுதாருவே, பாட்டையா’ என்றுதான் ‘நான் பார்த்த ரோஜாவின் ராஜா’ கட்டுரையைப் படித்தபோது நினைக்கத் தோன்றியது. ஆனால் பெரியவர் வெங்கட் சாமிநாதன் தன்னுடைய அணிந்துரையில் (அது அணிந்துரைதானே?) ‘ராஜீவ் காந்தியாவது, ஷேக் ஹசீனாவாவது, மனுஷன் அளக்கிறார் என்று தோன்றலாம். இல்லை, அவர் சொன்னவற்றில் சொல்லாமல் விட்டதும் நிறைய உண்டு’ என்கிறார். உண்மைதான். பாட்டையா நேரில் சொன்ன, எழுத்தில் சொல்லாமல் விட்ட பல விஷயங்களை அறிவேன். அதையெல்லாம் அவர் எழுதினால், இணையத்தில் பாய்கிற 66A மாதிரி, வேறேதாவது A,Bயில் தொடங்கி Z வரை அவர் மீது பிரியமாகப் பாய்ந்துத் தழுவக்கூடும். நானும் புழலுக்கோ, பாளையங்கோட்டைக்கோ ஆரஞ்சுப் பழம் வாங்கிக் கொண்டு போய்ப் பார்க்க வேண்டியதிருக்கும். அப்போதும் கூட, பாட்டையா ‘மசால்வடய எங்கல, காணோம்?’ என்று கோபித்தாலும் கோபிப்பார்.

இந்தத் தொகுப்பில் உள்ள ‘நான் வாழ்ந்த திருவாங்கூர் சமஸ்தானம்’ கட்டுரையை நாஞ்சில் நாடன் சித்தப்பா உட்பட பல பெரியவர்கள் வரலாற்று ரீதியான பல பதிவுகளைக் கொண்ட மிக முக்கியமான கட்டுரை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நம் ஊர் மதிய உணவுத் திட்டத்துக்குத் தாத்தாவான(அப்படித்தான் கட்டுரையில் சொல்கிறார்) Vanchi poor fundஇன் கஞ்சியும், சம்மந்தியுமான இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது திருவிதாங்கூர்தான் என்னும் செய்தியில் தொடங்கி, இன்னும் எத்தனையோ இந்தக் கட்டுரையில் அறிந்து கொள்ள முடிகிறது. கொள்கை மாறுபாடுடைய நேருவைப் போன்றவர்களே மதிக்கும் அளவுக்கு ஆங்கிலப்புலமை கொண்ட Sir C.P. ராமசாமி ஐயரின் மார்பிள் சிலை, கிளர்ச்சியின்போது தரையில் கோலமாவாகச் சிதறியிருந்ததைக் கண்ணால் பார்க்க முடிகிறது. மலையாளிகளின் Personal hygeineஉம், பத்மநாபசுவாமி கோயிலைச் சுற்றி மலிந்திருக்கிற ‘யானைக்கால்’ வியாதியும், ‘பெரிய பை’ வியாதியும், கூடவே புத்தக ஆசிரியர் நாவாப் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் ஆசனம் கற்றுக் கொண்டதையும் சுவாரஸ்யமாக நமக்கு சொல்கிறது, இந்தக் கட்டுரை.

இந்தப் புத்தகத்தில் ‘செம்மீனும் தேசிய விருதுகளும்’ கட்டுரையைப் படித்தால் பாட்டையாவை வியக்காதவர்களே இருக்க முடியாது. தில்லி பிலிம் சொஸைட்டியில் தான் பார்த்த உலக சினிமாக்களைப் பற்றி விவரமாகச் சொல்லிகொண்டே கட்டுரையைத் துவக்கும் அவர், ஒருகட்டத்தில், அதாவது ஐந்தாவது பக்கத்தில்தான் போனால் போகிறது என்று கட்டுரையின் தலைப்புக்குள் வருகிறார். தேசிய திரைப்பட விருதுக்கான தேர்வுக் கமிட்டி எந்த லட்சணத்தில் இயங்குகிறது என்பதைப் படம் போட்டுக் காட்டும் இந்தக் கட்டுரையில் நடிகர் திலகம், ’வாத்தியார்’ பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்திய ராமு காரியாட் போன்றவர்கள் சர்வசாதாரணமாக வந்து போகிறார்கள். அகில இந்திய அளவில் புகழ் பெற்ற தகழியின் ‘செம்மீன்’ திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைப்பதற்கு பாட்டையா முக்கிய காரணம் என்று சொன்னால் நம்புகிற மாதிரியா இருக்கிறது? ஆனால் தில்லி விஞ்ஞான பவனில் விருது விழாவின் போது, பாட்டையாவின் கைகளைப் பிடித்து, ‘வளரே நந்நி, வளரே நந்நி’ என்று சொல்லி கண்களில் ஒற்றி, மேடையில் தனக்குப் போட்ட மாலையை, பாட்டையாவின் கழுத்தில் போட்டு ராமு காரியாட் மகிழ்ந்ததைப் படித்தபின் நம்பாமல் எப்படி இருப்பதாம்?

பாட்டையாவுக்கு நாக்கு நாப்பது முழம் நீளம் என்று நான் எனது ‘பந்தி’ கட்டுரையில் எழுதியிருந்தேன். அதற்குக் காரணமான ஒரு கட்டுரை, ’தில்லியில் தென்னிந்திய ஹோட்டல்களும் கையேந்தி பவன்களும்.’ சிறுவயதில் திருநவேலியின் ‘விஞ்சை விலாஸ்’ இட்லி சாம்பாரும், இப்போது சென்னையில் சாலிகிராமத்து ‘திருநெல்வேலி சைவாள் ஹோட்டல்’ எண்ணெய் தோசையும் சாப்பிடும் என்னைப் போன்ற எச்சிக்கலை சைவனை, மேலும் எச்சிக்கலையாக்கும் இந்தக் கட்டுரையை நான் எத்தனை முறை படித்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. கனாட்பிளேஸ் மதராஸ் ஹோட்டல் சட்னி வெறும் பொட்டுக்கடலையாலேயே தயாரிக்கப்பட்டிருக்குமாம். சிறுவயதில் சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது , தலைக்குத் தேய்த்த கடலைமாவு வாயில் வழிந்தால் என்ன ருசியோ அதே ருசிதான் மதராஸ் ஹோட்டல் சட்னிக்கும் என்கிறார், பாட்டையா. மனுஷனுக்கு என்ன ரசனை, பாருங்கள்!

மொரார்ஜி தேசாயின் புதல்வரான காந்திபாய் தேசாய் பற்றிய கட்டுரையான ‘தலைவர்களும், தனயர்களும்’ மற்றுமோர் வியக்க வைக்கும் முக்கியமான கட்டுரை. அந்தக் கட்டுரையில் இப்படி சொல்கிறார். ”Frankfurt Airport சிறிய சுத்தமான நகரம் போல் இருக்கும். Sex shopகளில் உடம்பில் பொட்டுத்துணியில்லாமல் , போனால் போகிறதென்று காலுக்கு செருப்பு மட்டும் போட்டுக் கொண்டு நடமாடும் பெண்களை ஓரிரு தடவைகளுக்குப் பார்க்க காணமுடியாது. இலைமறைவு காய்மறைவுதானே நமக்குத் தெரியும்?”. இவ்வளவு நன்னூலாகச் சொல்லும் ‘பாட்டையா’ இதே கட்டுரையில் ஒரு சமஸ்கிருதப் பாடலுக்கு விளக்கம் சொல்லியிருப்பதைப் படித்துப் பாருங்கள். ‘பாட்டையா’ எப்பேர்ப்பட்ட ஆசாமி என்பது என்பது உங்களுக்குப் புரியும். நானே கூட அதைச் சொல்லிவிடுவேன். ஒருவேளை லேடீஸ் இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தால்? கூச்சமாக உள்ளது. புத்தகத்திலேயே படித்துக் கொள்ளுங்கள்.

இந்தியன் ரயில்வேயைக் குறை கூறுபவர்கள் சிவன்கோயிலில் விளக்கணைத்த பாவத்துக்கு ஆளாவார்கள். இப்படி துவங்குகிறது, ‘ஒரு நீண்ட பயணம்’ கட்டுரை. ரயிலைப் பிடிக்காத, ரயில் பயணத்தை விரும்பாத மனிதர்கள் ஒருவேளை இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரையைப் பிடிக்காதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. நிலா, கடல், யானை வரிசையில் ரயிலையும் சேர்க்கும் பாட்டையா, ரயில் பிரயாணத்தை மிகவும் நேசிக்கிறார். முடிந்தால் லண்டனுக்கும் ரயிலில் போகத் தயார் என்கிறார். தில்லியிலிருந்து தில்லியிலிருந்து சென்னை வரைக்கும் ப்ராட்கேஜில் ஓடும் ஜி.டி.எக்ஸ்பிரஸ்ஸிலும், பிறகு சென்னையிலிருந்து நெல்லை வரை மீட்டர்கேஜில் டின்னவேலி எக்ஸ்பிரஸ்ஸிலும், பிறகு ரிட்டர்னாகவும் கட்டுரை முழுதும் நம்மை ரயிலில் அழைத்துச் செல்கிறார். ஐம்பதுகளில் தில்லியிலிருந்து சென்னைக்கு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்ஸும், ஜனதா எக்ஸ்பிரஸ்ஸும்தான் ஓடிக் கொண்டிருந்தனவாம். ஆனால் பயணிகள் ‘போன ஜென்மத்தின் பிரும்மஹத்தி தோஷம் இருந்தாலொழிய ஜி.டி எக்ஸ்பிரஸ்ஸையே விரும்புவார்களாம். காரணம், ஜனதா எப்போது சென்னை வந்து சேருமென்று அப்போதைய ரயில்வே மந்திரி ஜகஜீவன்ராமுக்கே தெரியாதாம். வழியில் எந்த பிளட்ஃபாரத்தைப் பார்த்தாலும் உடனே நிற்க வேண்டுமென்ற தணியாத ஆசை ஜனதா எக்ஸ்பிரஸ்ஸுக்கு உண்டாம். குறுக்கே ஒரு எருமைமாடு போனாலும், அதற்கு வழிவிட்டபிறகே தொடருமாம்’. நாகர்கோவில் கொலஸ்ட்ரால் இது.

திருநவேலி இருட்டு லாலா கடை ஹரி சிங் மாமாவைத் தவிர வேறெந்த சிங்கையும் அறியாத என்னைப்போன்றவர்க்கு, சிங் என்றாலே முட்டாள் சர்தார்ஜி ஜோக்குகளில் காணப்படுபவர்கள்தாம். இப்போது தில்லியில் இருப்பவரைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் ’சிங் இஸ் கிங்’ படித்த பிறகு அவர்களை வணங்கத் தோன்றுகிறது. சீக்கியர்களைப் பற்றி கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள பல செய்திகள் உள்ளன. குறிப்பாக ’பிச்சையெடுக்கும் ஒரு சர்தார்ஜியை நான் பார்த்ததில்லை. கைகால் இல்லாதவர் கூட தில்லி கோடையின் போது, ஒரு மரத்தடியில் பெரிய மண்பானையில் குளிர்ந்த நீரும், குடிக்க ஒரு பெரிய குவளையும் வைத்திருப்பார். தண்ணீர் குடித்துவிட்டு முன்னால் விரித்த கைக்குட்டையில், உங்களுக்குப் பிரியமிருந்தால் முடிந்ததைப் போடலாம். ஆனால் சர்தார்ஜி கைநீட்டி கேட்கமாட்டார்கள்’ என்று கட்டுரையில் சொல்கிறார், பாட்டையா. பஞ்சாபிகளின் புத்திசாலித்தனத்துக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசுதான் இன்று பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்கிற ரகசியம் சொல்கிறார். விருந்தாளிகளுக்கு ஒன்றரை லிட்டர் பிடிக்கும் பெரிய லோட்டாவில் அவர்கள் கொடுக்கும் லஸ்ஸி, மில்கா சிங் பேசும் சுத்தமான தமிழ் வசவு வார்த்தைகள், பாட்டையா வீட்டுக்கு ஷிவாஸ் ரீகல் சாப்பிட வரும் குஷ்வந்த்சிங் என இவர்கள் அனைவரைப் பற்றியும் ஒற்றவரியில் இப்படி சொல்கிறார், பாட்டையா. ‘வயிற்றில் பல் இல்லாதவர்கள்’.

இவை போக சுஜாதா, பூர்ணம் விசுவநாதன் ஆகியோருக்கான அஞ்சலிக் கட்டுரைகள், மற்றும் நாஞ்சில் நாடன் சித்தப்பா வெகுவாக வியக்கும் ‘பங்களாதேஷ் நினைவுகள்’. அந்தக் கட்டுரையை பல சமூக, அரசியல் கேள்விகளை உள்ளடக்கியிருப்பது என்கிறார். உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் தகவல்கள் அடங்கியுள்ள கட்டுரை, அது. ’பூர்ணம்’ விசுவநாதனுக்கு பூர்வீகம் ‘திருநவேலி’ என்னும் செய்தியை ‘பாட்டையா’ சொல்லித்தான் அறிந்தேன். நிறைய வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறார். பாபி பேதி(பேடி அல்ல), கான் (கேன்ஸ் அல்ல), லாலு (லல்லு அல்ல). ஸ்வ்யீட் (ஸூட்டு அல்ல- suite).

ஒட்டுமொத்தப் புத்தகமும் ‘பாரதி மணி’ என்னும் தனிமனிதர், அவர்தம் வாழ்க்கையில் பார்த்த, பழகிய மனிதர்களைப் பற்றியதுதான். ஆக, எல்லாக் கட்டுரைகளிலும் பாட்டையா இருக்கிறார். ஆனால் ஒரே ஒரு கட்டுரையில்தான் அவர் நிறைந்து நிற்கிறார். கண் கலங்க அண்ணாந்து பார்த்து வணங்க வைக்கிறார். அது, ‘தில்லி நிகம்போத் சுடுகாடு’ என்னும் கட்டுரை. இந்தக் கட்டுரையைப் பற்றி ஒரு வார்த்தையைக் கூட இந்த இடத்தில் நான் சொல்ல விரும்பவில்லை. படிக்காதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். படித்தவர்கள் எப்படியும் மீண்டும் மீண்டும் படிப்பார்கள்.

‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தைப் பற்றி அ. முத்துலிங்கம், அசோகமித்ரனில் தொடங்கி ‘பாட்டையா’ பாரதி மணி வரை எத்தனையோ பேர் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்டுரையை நானாகத்தான் எழுதுகிறேன். ’எல, நானும் ரெண் . . . .டு, மூ . . . .ணு வருசமா சொல்லிக்கிட்டே இருக்கென். ஒளுங்கா, மரியாதயா என் பொஸ்தகத்த பாராட்டி எளுதுதியா? இல்ல, ஒன்ன வாரியலக் கொண்டு அடிக்கட்டுமா?’ என்று என்னை மிரட்டி எழுதச் சொன்னவர் ‘பாட்டையா’ இல்லை. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

3 thoughts on “பாட்டையா பார்த்த மனிதர்கள்

  1. தன்னடக்கம் தடுக்க வேண்டியது இல்லை அண்ணா…

    ஒரு வெகுஜன வாசகர் கூட்டமே படித்து, கிறுகிறுத்து, வாய் விட்டு சிரித்து, ஒரு வட்டார வழக்கை முழுமையாய் அறிந்து, அடுத்த தொடர் எப்போது என ஏங்கி தவிக்க வாய்த்த இரு புத்தகங்கள்

    தாயார் சன்னதியும் மூங்கில் மூச்சும் …

  2. சுஜாதா பற்றி நீங்கள் எழுதுவது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். அதை விடுங்கள். பாட்டையா உங்களை மிரட்டினாரா இல்லையா?

Comments are closed.