அரசுப் பொருட்காட்சி பொதுவாக திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆனிமாதம்தான் நடத்தப்படும்.வேறு பொழுதுபோக்குக்கு வழியேயில்லாத நெல்லை மக்கள் பொருட்காட்சிக்கு தினமும் வருவார்கள்.குறிப்பாக பெண்களுக்கு அபூர்வமாக வெளியே சுற்றும் தருணம் வாய்ப்பதால், பார்த்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் பார்ப்பதில் அலுப்பு ஏற்படுவதில்லை.தேரோட்டம் பார்ப்பதில் கூட அவர்களுக்கு அவ்வளவு ஆர்வமிருக்காது.வைகாசி மாதமே அவர்களிடம் பொருட்காட்சி பற்றிய எதிர்பார்ப்பு வந்துவிடும்.”எக்கா,இந்த வருசமாவது பொருள்காட்சி போடுவானா . . இல்ல போன வருசம் மாதிரி த்ராட்டுல விட்டுருவானா” . . . . “இந்த வருசம் கண்டிப்பா உண்டுமாம் . . ஒங்க அத்தான் சொன்னா . . .”

பொருட்காட்சித் திடலில் சாமான்கள் வந்து இறங்கி பந்தல் வேலைகள் ஆரம்பமான உடனேயே ஊருக்குள் உற்சாகம் பரவ ஆரம்பித்து விடும்.குற்றால சீஸனும்,ஆனித்திருவிழா கொண்டாட்டங்களும்,பொருட்காட்சியும் திருநெல்வேலி ஊரை வேறு ஊராக மாற்றிவிடும்.பணமுள்ளவர்கள் பொருட்காட்சிக்குள் ஸ்டால் எடுப்பார்கள். வேலையில்லாத இளைஞர்கள்,வயதுப் பெண்கள் அந்த தற்காலிக ஸ்டால்களில் வேலை செய்வார்கள்.

தூரத்தில் இருந்து பார்க்கும் போதே பொருட்காட்சி நடக்கும் இடத்தை ராட்சத ராட்டினம் என்னும் Giant wheel காட்டிக் கொடுத்து விடும்.அப்போதைய முதல்வரின் ஆளுயர கட்டவுட்டுக்கள் பொருட்காட்சித் திடலின் நுழைவுவாயிலில் நம்மை வரவேற்கும்.பொருட்காட்சியில் மட்டுமே நாங்கள் காணக் கிடைக்கிற பேல் பூரி,பானி பூரி வகையறாக்கள் வாசனையோடு சுண்டி இழுக்கும்.பானி பூரிக்கு ஆசைப் பட்டு,எது பேல் பூரி,எது பானி பூரி என்ற வித்தியாசம் தெரியாமல், வருடா வருடம் மிகச்சரியாக பேல் பூரியை வாங்கி திணறலோடு தின்போம்.

“இன்றோடு சென்றுவிடு”,வசந்தத்தைத் தேடி” போன்ற நாடகங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்.டில்லி அப்பளம் வாங்கி தின்றபடியே நடந்து செல்பவர்கள் போகிற போக்கில் அந்நாடகங்களை ஒரு பார்வை பார்த்த படி செல்வர்.எல்லா அரசுத் துறை அரங்குகளிலும் வேகவேகமாக சுற்றி விட்டு வெளியே வரும் இளைஞர்கள்,சுகாதாரத் துறையில் மட்டும் அதிக நேரம் செலவிடுவர்.குடும்பக்கட்டுப்பாடு பற்றிய சில மருத்துவ புகைப்படங்களைப் பார்த்து அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர்.வேளாண்துறை பக்கம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.சிறிய தொலைக்காட்சிப் பெட்டிகளில் பீலிசிவம்,என்னத்த கன்னையா போன்ற டிரேட்மார்க் நடிகர்கள் நடித்த அரசாங்கக் குறும்படங்கள் பார்ப்பாரின்றி ஓடிக் கொண்டிருக்கும்.குறிப்பாக ஹெரான் ராமசாமி நடித்த குமரிக்கண்டம் விளக்கப் படம் போடும் பகுதியில் ஜனநடமாட்டமே இருக்காது.

அம்மாவுக்கு எப்போழுதுமே பொருட்காட்சிக்கு போனால் giant wheelஇல் ஏறி சுற்ற ஆசை.தைரியமெல்லாம் கிடையாது.பல்லைக் கடித்துக் கொண்டே பயந்தபடி அந்த த்ரில்லை அனுபவிக்க வேண்டும் அவளுக்கு.தான் பயந்தாலும்,பயப்படும் மற்றவர்களை கேலி செய்வதும் உண்டு.அம்மா இறந்த பிறகு அவள் நினவாகத்தானோ என்னவோ எனக்கும் giant wheel மேல் ஒரு காதல்.Giant wheelஇல் ஏறிச் சுற்றுவது போக யார்யாரெல்லாம் பயப்படுகிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.

சுந்தரம்பிள்ளை பெரியப்பா கமிஷன் கடை வைத்திருந்தார்.சிவதீக்ஷை எடுத்திருந்ததால் தினமும் சிவ பூஜை பண்ணுபவர்.உட்கார்ந்தால்,எழுந்தால்,படுத்தால் சிவநாமம்தான்.கழுத்து வழியாக போடும் அந்த கால தொள தொள சட்டையும்,வேஷ்டியும்தான் உடை.அசப்பில் டி.எஸ்.பாலையா மாதிரியே இருப்பார்.வேர்க்கும் போதெல்லாம் ‘V’ cut உள்ள சட்டையின் கீழ்ப் பகுதியை இரண்டு கைகளாலும் பிடித்து விசிறியாக மேல் நோக்கி வீசிக் கொள்வார். சின்னப் பையனான என்னை பொருட்காட்சிக்கு அழைத்து போகும் பொறுப்பை ஒரு நாள் அவர் ஏற்றுக் கொண்டார்.கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.எல்லா அரங்குகளுக்கும் சென்றோம்.இந்து,அறநிலையத் துறையில் மட்டும் அதிக நேரம் ஆனது.மரணக்கிணறு பார்த்தே தீர வேண்டும் என்றார்.”உயிரைக் கொடுத்து மோட்டார் ஸைக்கிள் ஓட்டுதான். . . அவனுக்கு துட்டு குடுத்தா புண்ணியம். . .” பக்கத்திலேயே giant wheel.என் முகத்தை பார்த்து என் ஆசையை புரிந்து கொண்டார்.நிறைய செலவழித்து விட்டாரே என்று நானாக கேட்கவில்லை.
“ராட்டுல ஏறணுமாடே” . . . . .

“பரவா இல்ல பெரியப்பா வேண்டாம்” . . .

“அதான் உன் மூஞ்சியே சொல்லுதே . . .வா ஏறுவோம் . . .பயப்பட மாட்டயே . . . . . .”
Giant wheelஇல் ஏறும்வரை பேசிக் கொண்டிருந்த பெரியப்பா,ஏறி அமர்ந்தவுடன் ‘சிவாயநம’ என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார்.சுற்ற ஆரம்பிக்கும் முன்பே கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டார்.ஆட்கள் நிறைந்தவுடன் பெல் அடித்து சுற்ற ஆரம்பித்தது.ஒரு சுற்றிலேயே பெரியப்பா கதறலுடன் “. . ஏ . . ..நிறுத்து . . .சின்னப்பையன் பயப்படுதான்” என்றார்.”எனக்கு ஒண்ணும் பயமில்ல பெரியப்பா . . ஜாலியாத்தான் இருக்கு” . . . “எல . . .நிறுத்தப் போறியா இல்லியால” . . . .ராட்டுக்காரனுக்கு காதில் விழவில்லை.”எல . .அய்யா . .நல்லாயிருப்ப . . .கூட துட்டு தாரேன் . . .எறக்கி விடு” . . . வெட்கத்தை விட்டு லேசாக அழுது பார்த்தார்.வேகம் எடுத்தது.இனி கத்தி பிரயோஜனமில்லை என்பது தெரிந்து போனது.கீழிருந்து மேலே போகும்போது சிவநாமமும்,மேலிருந்து கீழே வரும் போது மலச்சிக்கல் முக்கலுமாகத் தொடர்ந்தார்.சுற்று முடிந்தது.சிரிப்பை அடக்கியபடி உட்கார்ந்திருந்தேன்.ஆட்கள் இறக்கப்பட்டனர்.சரியாக நாங்கள் அமர்ந்திருந்த இருக்கை உச்சிக்கு வந்து நின்றது.பெரியப்பா என்னை பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்க்கும் விதமாக உர்ரென்று அமர்ந்திருந்தார்.முகமெல்லாம் வேர்த்து திருநீறு அழிந்திருந்தது.மற்ற நேரம் என்றால் சட்டையை பிடித்து விசிறிக்கொள்வார்.இப்போது சிக்கென்று கம்பியை பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்.சுற்று முடிந்த நிம்மதி முகத்தில் தெரிந்தது.ஆனாலும் பதற்றம் குறையவில்லை.மனிதர் அவமானப் பட்டுவிட்டார்.நாம்தான் சரி செய்ய வேண்டும் என்று மெதுவாக பேச்சு கொடுத்தேன்.

பெரியப்பா . . . அங்கே பாத்தேளா . . . நெல்லையப்பர் கோயில் தெரியுது . . .

சிவப்பழமான பெரியப்பா கடும் எரிச்சலுடன் சொன்ன பதில்.

ஒரு மயிராண்டி கோயிலையும் நான் பாக்கல.

8 thoughts on “Giant வீல்

  1. அற்புதமான நடை !!!!!

    கொசுவத்தி சுத்தவெச்சு, பெரிய அப்பளத்தை திங்கவெச்சுட்டீங்க !!!

    முடிவு சூப்பர் ~!!~

  2. SuKa,
    Jeyamohan website-la unga blog link paathu vandhen. Asathalaa ezhudhareenga – vaazhthukkal !

    Unga periyappavoda giant wheel anubhavathai padichu kannula thanni vara alavukku sirichen. Ezhuthula padichu, kadaisiyaa eppo ivvalavu sirichennu nyabagam illai. Sujatha-vai padikkarappo ippadi sirichirukken 🙂

    anbudan
    Hari Baskar

  3. eankkum romba payam undu .siru vayssula enga akka kuda chinna ratna suthunathuthan kadesi athuvum payathodathan, athukappuram innai varaikum rattu pakkam porathe illa

    joe

  4. சார் நான் பத்து வருடம் திருநெல்வேலியில் இருந்து விட்டு
    இப்போது நாக்பூரில் இருக்கிறேன். நெல்லை மண்ணை
    உங்களை விட அதிகம் யாரும் சுவாசித்து இருக்க மாட்டார்கள்
    அதனை ஒரு அருமையான மாவட்டம். பனி நிறைவுக்கு பின்னர்
    அங்கு தான் வீடு கட்டி இருக்க ஆசைபடுகிறேன்

Comments are closed.