இரண்டு தினங்களுக்கு முன் காலை எட்டு மணியளவில் எழுத்தாளர் வ.ஸ்ரீனிவாசன் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார். சாதாரணமாக எப்போதும் பேசும் தொனியில் ‘சொல்லுங்க ஸார்’ என்றேன். ஆனால் எதிர்முனைக்குரல் பதற்றமாக இருந்தது.

‘சுகா, இங்கெ பாரதிமணி ஸாரை பாக்க வந்தேன். ஸார் கால்வலியால துடிச்சிக்கிட்டு இருக்கார். அவரால உக்கார, நிக்க, படுக்கன்னு எதுவுமே செய்ய முடியலெ. ரொம்ப சிரமப்படுறார்’.

‘ஒடனெ வரென் ஸார்’.

ஃபோனை வைத்த பதினைந்தாவது நிமிடத்தில் நானும், நண்பர் மனோவும் பாரதி மணி ஸார் வீட்டுக்குச் சென்றோம். (நான், வ.ஸ்ரீ, மனோ, பாரதிமணி அனைவரும் ‘எழுத்தும், எண்ணமும்’ குழுமத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்கள்) அதற்குள் வ.ஸ்ரீ ஸார் மாத்திரை வாங்கிக் கொடுத்திருந்தார். எங்களைப் பார்த்ததும் பாட்டையாவுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. இருந்தாலும் ‘என்ன இது. ஒங்க எல்லாரையும் சங்கடப்படுத்துறேனே’ என்றார். ஆஸ்பத்திரிக்கு அழைத்தோம். ‘பொறுத்துக்கக் கூடிய வலிதான். இப்போ அவசியமில்லை’ என்றார். சுமார் ஒருமணிநேரம் அவருடன் இருந்தோம். உயிர்மை வெளியிட்டிருக்கும் பாரதிமணி அவர்கள் எழுதிய ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகம் சுடச்சுட வந்திருந்தது. அதில் அவரைப் பற்றி அடியேன், வ.ஸ்ரீ, மனோ மூவரும் எழுதியிருந்தோம். எழுதிய பொய்க்கு தண்டனையாய் ஆளுக்கொரு புத்தகம் கொடுத்தார். வணங்கி வாங்கிக் கொண்டோம். கலை, இலக்கியம், இசை என பல்வேறு திசைகளில் எங்கள் உரையாடல் பயணித்தது. பேச்சு சுவாரஸ்யத்தின் நடுவே பாட்டையா கால் மடக்கி உட்கார்ந்திருந்ததை கவனித்தோம். ‘அட, இப்பொ என்னால உக்கார முடியுதே’ என்றார். பேச்சில் உற்சாகம் மேலும் கூடியது. அன்றைக்கு நாங்கள் பேசிச் சிரித்த அனைத்து சமாச்சாரங்களும் ‘கழுத்தும், கன்னமும்’ குழுமத்தில் வரவேண்டியவை.

‘ஒங்க காலுக்கு ஒண்ணும் இல்லெ ஸார். எதுனாலும் எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க. எந்த ராத்திரியும் எங்கள கூப்பிடறதுக்கு நீங்க தயங்க வேண்டாம்’ என்று சொல்லி விட்டு கிளம்பினோம். ‘ஆகா, உங்களுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்’. பாட்டையாவின் குரல் தழுதழுத்தது. மாலையில் மறுபடியும் தொலைபேசிமூலம் விசாரித்துக் கொண்டோம். ‘இப்போ கொஞ்சம் தேவலை’ என்றார். நேற்று காலை மறுபடியும் வ.ஸ்ரீ அவர்களிடமிருந்து ஃபோன். மணிஸார் இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டிருக்கிறார் என்று தகவல் சொன்னார். மீண்டும் நானும், மனோவும் கிளம்பிச் சென்றோம். அழைப்பு மணி அழுத்தி காத்து நின்றோம். கதவை வந்து திறப்பதில் கூட சிரமம் இருந்தது பாட்டையாவுக்கு. ‘என்னால முடியலப்பா. என் கால் என் வசமில்ல’ என்றார். சுவர் பிடித்தே தன் அறைக்குச் சென்றார். சற்று நேரத்தில் வ.ஸ்ரீ அவர்கள் தன் காரை எடுத்துக் கொண்டு வந்துவிட பாட்டையாவை எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்று விவாதித்தோம். சில நண்பர்களிடம் ஃபோன் மூலம் யோசனை கேட்டுக் கொண்டிருந்தோம்.

‘நீங்கல்லாம் எனக்குன்னு கெளம்பி வரேளே. எத்தன பேருக்கு இந்த கொடுப்பினை கெடைக்கும்’. பாட்டையா நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார். ‘ஒரு மார் வலி, கீர்வலின்னா கௌரமாவாது இருக்கும். கால்வலில செத்துப் போறதுன்னா கேவலம் இல்லையா’. இப்படி இருந்தது அவரது பேச்சு. ‘சினிமாலதான் ஆஸ்பத்திரி ஸீனெல்லாம் பாத்திருக்கேன். நானா ஆஸ்பத்திரில இத்தனை வருஷத்துல ஒரு நாளும் அட்மிட் ஆனதேயில்ல’ என்றார். ‘இப்பவுமெ ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு நான் சம்மதிக்கறதுக்கு காரணம் அடுத்த வாரம் எனக்கு ஷூட்டிங் இருக்கு. நம்மள நம்பி படம் எடுக்கறான். அவன் செரமப்படக்கூடாது பாரு’ என்றார். ரஜினிகாந்துக்கு அப்புறம் இவருக்கு சினிமா மீது இருக்கும் தொழில் பக்தியை நினைத்து கண்ணீர் விட்டேன். ‘அளாதெ சுகா, எனக்கு ஒண்ணும் ஆகாது’ என்றார் பாட்டையா.

அதுவரை பரணி ஆஸ்பத்திரியா, விஜயாவா என்பது குறித்து எங்களால் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். ‘ஏம்பா, ஆபரேஷன் தியேட்டருக்குள்ளெல்லாம் சினிமாவுல வர்ற மாதிரி எல்லாரும் முகமூடி போட்டுக்கிட்டு பயமுறுத்துவாளா என்ன’ என்றார். ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல ஸார். ஒரு அரை மணிநேரம் டென்ஷனுக்கு பெறகு டாக்டர் வெளியில வந்து பெண் குளந்த பொறந்துருக்குன்னு சொல்வார்’ என்றார் வ.ஸ்ரீ. ‘அத மனோக்கிட்டே வந்து சொல்லி கைகுடுத்து கங்கிராஜுலேஷன்ஸ்ன்னு சொல்வாரில்லையா ஸார்’ என்றேன் நான். சிரித்துக் கொண்டே மனோ கிளம்பி எங்களுக்கு முன்னால் விஜயா ஹெல்த் சென்டர் சென்றார்.

சிறிது நேரத்தில் மனோ டாக்டரிடம் பெயரை பதிவு செய்து விட்டு ஃபோன் பண்ணவும் நானும், வ.ஸ்ரீ அவர்களும் பாட்டையாவை மெல்ல மாடிப்படியிலிருந்து இறக்கிக் கூட்டி வந்து வ.ஸ்ரீ அவர்களின் புதிய சான்ட்ரோ காரில் ஏற்றினோம். வடபழனி பஸ்ஸ்டாண்ட் அருகில் வந்தவுடன் என்னுடைய வழக்கமான திசையறிவில் விஜயா கார்டனுக்குள் காரை திருப்பச் சொன்னேன். திசை விஷயத்தில் எனக்கு தாத்தாவான வ.ஸ்ரீயும் உடனே காரை விஜயா கார்டனுக்குள் திருப்ப எத்தனித்தார். எதற்கும் கேட்டு விடுவோமே என்று மனோவுக்கு ·போன் பண்ணினேன். ‘சரியா போச்சு. ஏன் சுகா, அவர என்ன ரெக்கார்டிங் தியேட்டருக்கா கூட்டிக்கிட்டு போகப் போறோம்? அடுத்த லெஃப்டுல திரும்புங்கய்யா’ என்றார் கடுப்புடன்.

விஜயா ஹெல்த் சென்டரை முதன்முறையாக சுற்றிப் பார்த்தபடியே உள்ளே சென்று பாட்டையாவை உட்கார வைத்தோம். வ.ஸ்ரீ அவர்கள் பாட்டையாவுடன் டாக்டரின் அறைக்குள் செல்ல, நானும், மனோவும் வராந்தாவில் நகம் கடித்துக் காத்திருந்தோம். ஸ்கேன் எடுக்கச் சொல்லியிருப்பதாக ஒரு சீட்டுடன் இருவரும் வெளியே வந்தனர். எதிரே இருக்கும் ஸ்கேன் சென்டருக்குச் சென்றால் அங்கு இரண்டு மணிநேரம் காத்திருக்கச் சொன்னார்கள். மணி மதியம் ஒன்றைத் தொட இருந்தது. கேன்டீனுக்குச் சென்று வரலாம் என்று கிளம்பினோம். ஒரே காம்பவுண்ட்டுதான் என்றாலும் கேன்டீனுக்கு கொஞ்சம் நடக்க வேண்டியிருந்தது. பாட்டையாவால் முடியவில்லை. ஒரு ஒரமாக உட்கார்ந்து பைப்பைப் பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்து விட்டார். ‘ஸார், ஹாஸ்பிட்டல் ஸார்’ பதறினேன். ‘ஸோ வாட்?’ என்றார் எகத்தாளமாய். ஒருமாதிரியாக கிளப்பிக் கூட்டிச் சென்றோம். போகும் வழியில் ஒரு வீல் சேர் இருந்தது. இதில் வைத்து தள்ளிச் சென்று விட்டால் என்ன? என்றார் மனோ. அங்கிருக்கும் செக்யூரிடி அதற்கு அனுமதிக்க மறுத்தார். பாட்டையாவோ ‘மனோகர் வேற ஆச காட்டிட்டான். நான் இதுவரைக்கும் இந்த வண்டில போனதே இல்ல. வந்தா நான் இதுலதான் வருவேன்’ என்று அடம் பிடிக்க ஆரம்பித்தார். இதென்னடா வம்பாப் போச்சு என்று வ.ஸ்ரீ அவர்கள் உள்ளே சென்று அனுமதி வாங்கி வந்தார்.

மூணாங்கிளாஸ் பையன் ரங்கராட்டினம் ஏறுவது போன்ற முகபாவத்துடன் சந்தோஷம் பொங்க பாட்டையா வீல் சேரில் அமர, மனோ அதைத் தள்ள ஆரம்பித்தார். நானும், வ.ஸ்ரீ அவர்களும் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ பாடியபடியே பின் தொடர்ந்தோம். ‘சுகா, நானும் எத்தனையோ வண்டில போயிருக்கென். இந்த வண்டி ரொம்ப நல்லாயிருக்கு. எவ்வளவுன்னு கேட்டு ஒண்ணு வாங்கி போடு. ஆனா டிரைவர் மட்டும் மனோதான். சும்மா சொல்லக் கூடாது. நல்லாவே ஓட்டறான்’ என்றார் பாட்டையா. மனோ சிரித்தபடியே தள்ளிச் செல்ல கையில் சாப்பாட்டுக் கூடையுடன் ஒரு பெண்மணி எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே தெலுங்கில் ஏதோ முணுமுணுத்தபடி கடந்து சென்றார்.

கேன்டீனில் அதிகக் கூட்டமில்லை என்றாலும் வாகாக ஒரு இடம் பார்த்து அங்கு அமர்ந்து கொண்டார் பாட்டையா. காலையில் காபி மட்டும் குடித்திருந்ததால் தனக்கு ஒரு தயிர் சாதம் வேண்டும் என்றார். மனோ காலையிலேயே சாப்பிட்டுவிட்டதால் தனக்கு அவ்வளவாக பசியில்லை என்று சொல்லி ஒரு தயிர் சாதமும், குண்டாக ஒரு சமோசாவும் வாங்கிக் கொண்டிருந்தார். எனக்கும் தனக்கும் கூல்டிரிங்க்ஸ் வாங்க வ.ஸ்ரீ அவர்கள் சென்று விட, நான் மட்டும் பாட்டையாவுடன் அமர்ந்திருந்தேன். சுற்றும் முற்றும் பாட்டையா பார்த்தார். நான் பயந்த மாதிரியே சட்டென்று பைப்பைப் பற்ற வைத்தார். அதற்குள் ஒருவன் ஓடி வந்து ‘ஸார், இங்கெல்லாம் சிகரெட் குடிக்கக் கூடாது’ என்றான். ‘இது சிகரெட் இல்லெப்பா’ என்று வம்பு பண்ணினார் பாட்டையா. ‘ஐயா, கொஞ்ச நேரந்தான் அந்த எளவெ குடிக்காம இருங்களென். ஒங்களுக்கு கால் வலின்னு காமிக்க வந்துருக்கோம். அத மறந்துராதீங்க’ என்றேன்.

மனோ இரண்டு பிளேட்டுடன் வந்து அமர்ந்தார். வ.ஸ்ரீ இரண்டு அமுல் ரோஸ் மில்க் பாட்டில்களுடன் வந்தார். ஒன்றை வாங்கிக் கொண்டேன். ‘ஸார், நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து மொதமுறையா குடிக்குறோம் இல்லையா?’ என்றேன் வ.ஸ்ரீயிடம். ‘ஆமா சுகா. சியர்ஸ்’ என்று பாட்டிலை பாட்டிலால் இடித்து கண் சிமிட்டினார் வ.ஸ்ரீ. மேஜையில் இருக்கும் தன் மெடிக்கல் ரிப்போர்ட் ஃபைலின் மேல் ஒரு கையை வைத்துக் கொண்டு தயிர் சாதம் சாப்பிட ஆரம்பித்த பாட்டையா எங்களைப் பார்த்து வாய் விட்டு சிரித்தார். அவருக்கு வலி சரியாகிவிடும் என்று தோன்றியது.

[email protected]

4 thoughts on “வலி

  1. நண்பரே.. மிகவும் ரசித்து, நெகிழ்ந்து போய் படித்தேன் 🙂

    அற்புதமான எழுத்து.

  2. வலியையும் சிரிப்புடன் சொல்கிறீர்கள்.
    சென்ற வாரம்தான் அவருடன் போனில் பேசிக்கொண்டிருந்தேன். பெங்களூரில் இருப்பதாக சொன்னார். இந்த சம்பவம் நடந்தபோது நான் சென்னையில்தான் இருந்திருக்கிறேன். உங்களை சந்தித்தேன். அவரை மிஸ் செய்துவிட்டேன்.

  3. நல்ல பதிவு..நெகிழ்ச்சியாக இருந்தது. சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் நட்புகளின் தேவையை விட உடல் நிலை சரியாக இல்லாதபோது தோழமைகளின் தோள் நிச்சௌஅம் ஆறுதல் அளிக்கும். பாட்டையா அவர்கள் விரைவில் குணமாக பிரார்த்தனைகள்.

Comments are closed.