ராயல் டாக்கீஸ் . . .

காசிதான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தான். தம்பி வரப்போவது பற்றி அவன் வீட்டுக்கே அரசல்புரசலாகத்தான் தெரியும். ஆனால் காசிக்கு மட்டும்தான் உறுதியாக இன்ன தேதிக்கு, இந்த ரயிலில் வருகிறேன் என்பதை தம்பி சொல்லியிருந்தான்.

தம்பியின் உண்மையான பெயரான கணபதிசுப்பிரமணியம் என்பது அவனது சர்ட்டிஃபிக்கேட்டில் மட்டும்தான் உள்ளது. சுந்தரம் ஸார்வாள் சொல்வார். ‘ஒண்ணு கணவதின்னு வச்சிருக்கணும். இல்லென்னா சுப்ரமணின்னு வச்சிருக்கணும். அதென்னடே ஒருத்தனுக்கு ரெண்டு பேரு?’ வீட்டிலும் சரி. நண்பர்கள் மத்தியிலும் கணபதிசுப்பிரமணியம் எப்போதும் தம்பிதான். தாத்தா பெயரைச் சொல்லக் கூடாதென்று ஆச்சிதான் ‘தம்பி’ என்று விளிக்கத் தொடங்கினாள். ஆச்சி ஒன்றைச் சொல்லிவிட்டால் அதுதான் சட்டம். யாரும் அதை மீற மாட்டார்கள். ‘அதென்ன சாவி? தொறவோல்னு சொல்ல மாட்டேளோ?’ என்பாள். ‘ஆமா! ஒலகமே சாவின்னுதான் சொல்லுது. ஒங்க அம்மைக்கு மட்டும் எங்கெருந்துதான் வார்த்த மொளைக்கோ?’ லோகு பெரியம்மை முனகுவாள். ‘ஏட்டி! திறவுகோல்ங்கறது சுத்தமான தமிள்வார்த்த. அதச் சொல்றதுக்கு ஒங்களுக்குல்லாம் வலிக்கி. என்னா?’. சண்முகப் பெரியப்பா ஏசுவார்.

லோகநாயகியும், சண்முகமும் தம்பிக்கு பெரியம்மை, பெரியப்பா என்பது வெறும் முறைக்குத்தான். ஆனால் தம்பிக்கு அவர்கள்தான் அம்மையும், அப்பாவும். தம்பி அவர்களை அழைப்பதும் அப்படித்தான். லோகுவை அம்மா என்றழைப்பவன், சண்முகத்தை சண்முகப்பா என்பான். தம்பியைப் பெற்ற ஒருசில தினங்களிலேயே அவன் அம்மை போய்ச் சேர்ந்துவிட்டாள். ஏற்கனவே கொஞ்சம் அப்படி இப்படி இருந்த தம்பியின் அப்பா, சொத்தைப் பிரித்துத் தரச் சொல்லி சண்டை போட்டு வாங்கிக் கொண்டு யாரோ ஒரு பெண்ணுடன் எங்கோ காணாமலேயே போனார். அதற்குப் பிறகு தம்பியை வளர்த்தது, ஆச்சியும், லோகநாயகியும், சண்முகமும்தான்.

‘இப்பதாம்ல மதுரயத் தாண்டுதான்’. தம்பியின் வாட்ஸ் அப் மெஸேஜைப் பார்த்துவிட்டு காசி லேசாகச் சிரித்துக் கொண்டான். ஏற்கனவே டிரெயின் இரண்டுமணிநேரம் தாமதம் என்னும் அறிவிப்பைக் கேட்டிருந்தான், காசி. வீட்டுக்குப் போய்விட்டு வருவானேன் என்று ஸ்டேஷனிலேயே காத்திருந்தான். தம்பி திருநெல்வேலியை விட்டுப் போய் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. ஆச்சி இறந்ததற்குக் கூட வரவில்லை. அந்த சமயத்தில் தம்பி எந்த ஊரில் இருக்கிறான் என்றே தெரியவில்லை. காசிதான் கூடமாட நின்றுகொண்டு எல்லா வேலைகளையும் செய்தான். ‘இந்த வீட்ல நீ வேற, அவன் வேறயா? இந்தா பிடி’ என்று வெளித் தெப்பக்குளத்தில் ஈரவேட்டியுடன் நின்று கொண்டிருந்த சண்முகப் பெரியப்பா, காசியின் கைகளில் நெய்ப்பந்தத்தைக் கொடுத்தார். ‘முங்கி எந்திடே! திருநாறு விட்டுக்கோ. அப்புறமா அவன் கைல பந்தத்தக் குடுக்கலாம் சம்முவம்’ என்றார், டெய்லர் மகாலிங்கம் மாமா. ‘ஐயா அரசேன்னு வளத்த பய இல்லாம அவளக் கொண்டாந்து எரிக்கோம். அவ நெஞ்சு வேகும்ன்னா நெனைக்கெ? மூதிக்கு அப்படியாய்யா ஊரும், மனுசாளும் அத்துப் போச்சு?’ கருப்பந்துறையில் வைத்து பேச்சியாபிள்ளை தாத்தா சொல்லும் போது, காசிக்கு அழுகையுடன், தம்பியின் மேல் கோபமும் வந்தது. இப்போது அதெல்லாம் இல்லை. மனசு முழுக்க தம்பியைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை மட்டும்தான்.

ரயிலிலிருந்து இறங்கும் போது தம்பி வேறு ஆளாகத் தெரிந்தான். ஏற்றி வாரப்பட்ட தலைமுடி, பிடரி முழுக்க அடர்ந்துத் தவழ்ந்தது. தடித்த ஃபிரேமில் மூக்குக் கண்ணாடி. கையில் ஒரு பெட்டி, தோளில் ஒரு பை. அவ்வளவுதான். காசியைப் பார்த்தவுடன் லேசாக ஒரு குறுஞ்சிரிப்பு மட்டுமே தம்பியின் முகத்தில் காண முடிந்தது. கண்களில் நீர் துளிர்க்க காசி, தம்பியைக் கட்டிக் கொண்டான். ‘பையக் குடு’. வாங்கிக் கொண்டு வேகவேகமாக நடக்கத்தொடங்கினான். காசியின் வேகத்துக்கு தம்பியால் ஓடித்தான் வர வேண்டியிருந்தது. காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்யவும் காசி சொன்னான். ‘உன்னயப் பாத்தா கல்கத்தால இருந்து வாரவன் மாரியே தெரியல’.

‘ஏம்ல?’

‘பொறவு?என்னமோ சஷ்டிக்கு திருச்செந்தூர்க்கு போயிட்டு வாரவன் மாரி ஒரு பொட்டி, பையோட வந்து எறங்குதெ!’

பதிலேதும் சொல்லாமல் சிரித்த தம்பி, ரோட்டைப் பார்த்தபடி ‘தானா மூனா ரோடே மாறிட்டெல!’ என்றான்.

பதில் சொல்வதைத் தவிர்க்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட காசி மேற்கொண்டு ஏதும் கேட்காமல் வண்டியை ஓட்டினான். ‘நெல்லை லாட்ஜுல்லாம் மாறவே இல்ல’. மேம்பாலத்தில் போகும் போது தம்பி சொன்னான். ‘சென்ட்ரல்ல இப்பம்லாம் பளைய படம்தானா? இந்த கிரவுண்ட்ல தட்டான் புடிப்பமே! விளாமரம் நிக்கால? வாசல்ல சவ்வுமிட்டாய் வித்த ஆத்தால்லாம் இப்பம் செத்திருப்பாள்லா?’ சாஃப்டர் ஸ்கூலைத் தாண்டும் போது வரிசையாகக் கேட்டுக் கொண்டு வந்தான் தம்பி. பதிலேதுமே காசி சொல்லவில்லையென்றாலும், அதற்காகக் காத்திருக்காமல் அடுத்தடுத்த கேள்விகளுக்குத் தாவிக் கொண்டிருந்தான், தம்பி. ‘நல்ல வேளடே. ஆர்ச்ச விட்டு வச்சிருக்கிய. எங்க ரோட்ட அகலப்படுத்த இடிச்சுத் தள்ளியிருப்பேளோன்னு நெனச்சேன்’.
திருநெல்வேலி டவுணின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஆர்ச்சைக் கடக்கும் போது, தம்பியின் முகத்தில் அப்படி ஒரு நிறைவு. அதற்குப் பிறகு தெற்குப்புதுத் தெரு வரும் வரையிலும் தம்பி ஏதும் பேசவுமில்லை. கேட்கவுமில்லை.

வாசல்கதவு திறந்தே கிடந்தது. தம்பியைப் பார்த்தறியாத நாட்டுநாய் ஒன்று கட்டில் கிடந்தது. தம்பியைப் பார்த்ததும் கழுத்துச் சங்கிலி இறுக, வாஞ்சையுடன் வாலாட்டிச் சிரித்து வரவேற்றது. அதனருகில் நின்று அதன் தலையை சில நொடிகள் தடவிக் கொடுத்தான் தம்பி. கையில் பையுடன் நின்று கொண்டிருந்த காசி மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

‘மூதிக்கு இன்னும் நாய்க்கோட்டி போகல’.

பட்டுப்பாவாடை அணிந்த ஒரு சின்னப்பெண் வாசலுக்கு ஓடி வந்தாள். தம்பியைப் பார்த்தவுடன் ஒரு முழி முழித்து மீண்டும் வீட்டுக்குள் ஓட எத்தனித்தவளைத் தடுத்து நிறுத்தினான், காசி.

‘ஏட்டி! இதான் தம்பி மாமா’.

கண்களை அகல விரித்துப் பார்த்த அந்தப் பெண், ‘ஆச்சி! தம்பி மாமா வந்துட்டாங்க’ என்றபடி உள்ளே ஓடினாள்.

புருவம் தூக்கிய தம்பியிடம் ‘சுந்தரி மக’ என்றான், காசி. ஒரு கணம் தம்பியின் கண்களில் சின்னதாக ஏதோ ஒன்று தோன்றி மறைந்தது. இதற்குள் சண்முகப் பெரியப்பாவின் மகள் சுந்தரி வாசலுக்கு வந்தாள்.

‘வாண்ணே! சும்மா இருக்கியா?’

கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். சுந்தரியின் கைகள் குளிர்ச்சியாக இருந்தது.

‘ஏம்ணே ஒன் கை சுடுது?’ என்றாள், சுந்தரி.

பின்னால் தொடர்ந்த காசி, ‘ஒங்கண்ணனுக்குக் கை மட்டுமா சுடும்?’ என்றான்.

தம்பியிடம் அதற்கும் பதிலில்லை.

‘அப்பா பொறவாசல்ல இருக்கா’ என்றாள், சுந்தரி.

பின்வாசலில் மருதாணி மரத்துக்கருகே நாற்காலி போட்டு அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், சண்முகப்பா. ‘எப்பா! தம்பியண்ணன்’ என்ற சுந்தரியின் குரல் கேட்டு பேப்பரை விலக்கிய சண்முகப்பாவின் தொடைகளைத் தொட்டபடி அவர் காலருகில் அமர்ந்தான், தம்பி. இருவர் தொண்டையும் சட்டென்று வறண்டது. பொங்கிய கண்ணீரை மறைக்கும் விதமாக இருமியபடி, ‘ஏட்டி! தொண்ட பொகயுதுல்லா. தண்ணி கேட்டாத்தான் கொண்டுட்டு வருவியோ?’ என்று சுந்தரியைப் பார்த்து ஏசினார். ‘நீ சாப்பிட்டியா?’. எதிரே படிக்கட்டில் உட்கார்ந்து கொண்ட காசியைப் பார்த்துக் கேட்டார். இதற்குள் தன் ஆச்சி லோகநாயகியின் கைகளைப் பிடித்து இழுத்தபடி பின்வாசலுக்கு வந்து சேர்ந்தாள், சுந்தரியின் மகள்.

வந்ததும், வராததுமாக தன் கணவரின் கால்மாட்டில் உட்கார்ந்திருந்த தம்பியின் அருகில் வந்து குனிந்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் லோகநாயகி.

‘வளி தெரிஞ்சுட்டோல ஒனக்கு? அம்ம இருக்காளா, செத்துட்டாளான்னு பாக்க வந்தியோ? எறப்பாளி நாயே. என் சீவனப் புடிச்சுக்கிட்டாக்கும் இத்தன வருசம் இருந்தேன்’.

உடல் நடுங்க தம்பியின் அருகில் தரையில் கையை ஊன்றி உட்கார்ந்தவள், ‘என்னப் பெத்த ஐயா’ என்று தம்பியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறலானாள். இனி மறைக்க ஏதுமில்லை என்பது போல் சண்முகப்பாவும் பெருங்குரல் எடுத்து அழுதார். சொம்பில் தண்ணீர் கொண்டு வந்த சுந்தரியைத் தடுத்தான், காசி. ‘ஒங்கப்பாக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு தண்ணி தவிக்காது’.

royal talkies

ooOoo

மறுநாள் காலை தூங்கி தம்பி எழுந்திருக்கும் போது நன்றாக விடிந்திருந்தது. மச்சு ரூம் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது தட்டட்டியில் லோகம்மை கூழ்வற்றல் ஊற்றிக் கொண்டிருந்தாள். உடன் சுந்தரியும், அவள் மகளும்.

‘நீ இன்னும் இத விடலயா?’

ஜன்னலுக்குள்ளிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த லோகம்மை ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். காலையிலேயே குளித்திருந்த முகத்தில் துளிர்த்திருந்த புது வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.

‘ஏன் கேக்க மாட்டே? நாங்கல்லாம் கேட்டா சலிச்சுக்கிடுவா. ஒவ்வொரு மட்டம் ஊருக்குப் போகும்போதும் மணி ஐயர் கடைலதான் வாங்கிக் குடுத்தனுப்புவா. இப்பம் மகன் வந்திருக்காம்லா! அதான் இந்தத் தாளிப்பு’.

சுந்தரியின் செல்லக் கோபத்தை சிரிப்பால் கடந்து சென்றபடி தன் வேலையில் மும்முரமாக இருந்தாள், லோகம்மை. இதற்குள் கீழிருந்து சண்முகப்பாவின் குரல் கேட்டது.

‘ஏட்டி ஒங்கண்ணன் வாரானா இல்லயா? அவனுக்காகத்தான் இன்னும் ரெண்டாம் காப்பி குடிக்காம இருக்கேன்’.

சண்முகப்பாவின் தலைமுடி நரைத்ததைப் போல, லோகம்மையின் முகமும், உடலும் தளர்ந்ததைப் போல, திருநவேலியின் தோற்றத்திலும் சுருக்கங்களையும், மாற்றங்களையும் கண்டான், தம்பி. சிறுவயதில் சைக்கிளில் சுற்றிய பகுதிகளில் காசியுடன் நடந்தே சென்றான். நெல்லையப்பர் கோயில் வசந்த மண்டபத்து வாசலில் வீசும் காற்றை நின்று வாங்கிக் கொண்டான்.

‘இந்த காத்து மாறல. வாட கூட அப்படியேதான் அடிக்கி’.

பக்தியே இல்லாமல் கோயிலைச் சுற்றுகிறான் என்பது காசிக்குப் புரிந்தது. நடையில் அப்படி ஓர் ஆவேசம். சந்நிதிகளில் திருநீறு, குங்குமம் பிரசாதங்களை வாங்கிக் கொள்ளவில்லை. காந்திமதி யானையிடம் மட்டும் சிறிது நேரம் செலவழித்தான். கோயிலைவிட்டு வெளியே வந்த பிறகு சாந்தமானான். தேரடியைத் திரும்பிப் பார்க்கும் போது, காசி பதற்றமடைந்தான்.

‘ராயல் தியேட்டர் பக்கம் போக வேண்டாமா? அப்படியே ஆரெம்கேவி, லாலா சத்திரமுக்கு, தொண்டர் சன்னதில்லாம் போலாம்லா?’

‘ஏன்? தேரடிப்பக்கம் அவங்க யாரும் இருக்காங்களா? அதான் எல்லாரும் போயாச்சே! அப்புறம் என்ன? சும்மா ஒரு நடை நடந்துட்டு போவோம்.’

இப்படித்தான் தேரடிப் பக்கமே கிடையாகக் கிடந்த காலம் ஒன்று இருந்தது. சைக்கிளை எடுத்துக் கொண்டு காசியும், தம்பியும் வருவார்கள். ஜோதீஸ் காப்பிக்கடையிலிருந்துப் பார்த்தால் பவானியின் வீடு தெரியும்.

பாளையங்கோட்டையில் ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக இருக்கும் பவானியின் அப்பா, விடிந்து போனால், அடைந்துதான் வருவார். வீட்டுக்கு அருகில் இருந்ததாலோ என்னவோ அம்மாவும், மகளும் ராயல் தியேட்டரில்தான் சினிமா பார்ப்பார்கள். அநேகமாக கீழரதவீதி, வடக்குரதவீதி, தெப்பக்குளத்தெரு, சுவாமி சன்னதிகளில் வசிப்பவர்கள் வாராவாரம் ராயல் தியேட்டரில் சினிமா பார்ப்பது வழக்கம்.

’தில்லானா மோகனாம்பாள்’ பாக்காத படமாவே? அதான் சிவாஜிக்கு ஒரு மட்டம், பாலையாவுக்கு ஒரு மட்டம், நாகேசுக்கு ஒரு மட்டம், பத்மினிக்கு அஞ்சாறு மட்டம்னு வளச்சு வளச்சுப் பாத்தாச்சுல்லா! என்னமோ புதுப்படம் மாரி செகண்ட் ஷோக்குப் போவோமான்னுக் கேக்கேரு?’

‘வே! ராயல்ல போட்டிருக்கான். பாக்காம இருக்க முடியுமா? வீட்ல பாத்த மாரில்லா இருக்கும். சும்மா சளம்பாதீரும். நலந்தானான்னு நம்மள பாத்து கேக்கற மாரியேல்லா, புருவத்த வளச்சுப் பாடுவா. வாரும், போவோம்’. பட்டுப்பிள்ளை அண்ணாச்சி சொல்வார்.

மாலைநேரக் காட்சிக்கு பவானியும், அவள் தாயும் கிளம்பும்போது தம்பி படபடப்புடன் காத்திருப்பான். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் காசியை இழுத்துக் கொண்டு ராயல் தியேட்டருக்குச் செல்வான். மற்ற நேரங்களில் சோஃபா டிக்கெட்டில் படம் பார்ப்பவன், பவானி வந்தால் மட்டும் காசியை விட்டு பெஞ்ச் டிக்கெட்தான் எடுக்கச் சொல்லுவான். காரணம், பவானி தன் தாயுடன் பெஞ்ச் டிக்கெட்டில்தான் படம் பார்ப்பாள். ’அவ ஒருபக்கம் உக்காந்திருக்கோம். நாம எங்கயோ உக்காந்திருக்கோம். இதுல என்ன கெடைக்கோ, தெரியல. கேட்டா நீயும், அவளும் ஒண்ணா படம் பாத்ததா சொல்லுவே!’

இப்படி ஒன்றிரண்டு அல்ல. அநேகமாக எல்லா வார இறுதிகளிலும் ராயல் தியேட்டரில் பவானியுடன் படம் பார்ப்பான், தம்பி. இதுபோக தினமுமவள் டியூஷனுக்குக் கிளம்பும்வரைக்கும் காத்திருந்து அவளுடனேயே செல்வான். மீனாட்சிபுரத்தில் எஸ்.ஆர்.கே ஸார்வாளிடம்தான் பவானியும், தம்பியும், காசியும் மேத்ஸ் டியூஷன் படித்தார்கள். டியூஷன் தொடங்கும் முன், முடிந்த பின் இரண்டொரு வார்த்தைகள் தம்பியும், பவானியும் பேசிக் கொள்வார்கள்.

‘களுத்துல உத்திராச்சக் கொட்ட எதுக்கு? அத களட்டு. கூட படிக்கிற பிள்ளைள்லாம் அதச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கி’.

‘எங்காச்சி போட்டு விட்டது. களட்டுனா ரொம்ப வருத்தப்படுவா. அவட்ட வேணா சொல்லிட்டு சீக்கிரமே கெளட்டிருதென்’.

‘வேண்டாம்பா. என்னமாது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிரப்போது’.

ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகத்தான் செய்தது. அத்தனை புத்திசாலியான, படிப்பில் சிறந்து விளங்கிய பெண் ஏன் அப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தாள் என்பது யாருக்குமே புரியாமல் போனது. தச்சநல்லூர் கணேசன்தான் அந்தக் கேமராவைக் கொண்டு வந்தான்.

‘ஃபாரின் மக்கா. எங்க அத்தான்குள்ளது’.

இரண்டு ரோல்களை எடுத்துத் தள்ளினார்கள். தனியாக எடுத்துக் கொள்ள சம்மதிக்காத பவானி, குரூப் ஃபோட்டோவில் மட்டும் வந்து நின்று கொண்டாள். முன்வரிசையில் பெண்பிள்ளைகள் உட்கார்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் பையன்கள் நின்றபடி படம் எடுத்துக் கொண்டார்கள். சரியாக பவானிக்குப் பின்னால் தம்பி. பிரிண்ட் போட்டு காப்பி வாங்கிக் கொள்ள பவானியின் தாய் பணம் தர மறுத்தாள்.

‘டியூஷன் படிக்கப் போன எடத்துல என்னத்துக்குட்டி போட்டொவும், கீட்டொவும்? மாசாமாசம் பீஸுக்கே ஒங்கப்பா மூக்கால அளுதுக்கிட்டெ குடுக்காக’.

தம்பிதான் பவானிக்கும் சேர்த்து பிரிண்ட் போட்டு ஒரு காப்பியை அவள் கையில் கொடுத்தான். வற்புறுத்திதான் திணிக்க வேண்டியிருந்தது.

‘எங்கம்மை ஏசுவா.’

‘நீ என்னத்துக்குக் காமிக்கெங்கென்?’

இத்தனைக்கும் நோட்டுப்புத்தகத்தில் மறைத்துதான் வைத்திருந்தாள். அப்படியே வைத்திருந்தால் கூட ஒன்றும் பிரச்சனை ஆகியிருக்காது. ஃபோட்டோவில் தானும், தம்பியும் இருக்கும் பகுதியை மட்டும் கத்தரித்து, தனியாக வைத்திருந்தது, பவானியின் தாய் கண்களில் சிக்கியது. படிப்பறிவில்லாத, பழமையில் ஊறிய, இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தன் கணவனுக்கு பயந்த பவானியின் தாய் உக்கிரமாகிப் போனாள். ஆத்திரமும், கோபமுமாக வசவைத் தொடங்கியவளிடம் ஒருகட்டத்தில் பவானி எதிர்க்குரல் எழுப்ப, அவமானத்தில் அடிக்கத் தொடங்கி, பின் அழுகையும் சேர்ந்து கொண்டு, மனம் பிசகி, கையில் மண்ணெண்ணெய்கேனைத் தூக்கினாள்.

‘ஒங்கப்பன் வந்து என்னைக் கொல்றதுக்குள்ள நான் கொளுத்திக்கிட்டுப் போயிருதேன்’.

பாய்ந்துப் பிடுங்கிய பவானி தாயின் கால்களில் விழுந்து, ‘நீ பயப்படுத மாரி என்னமும் நடக்காதும்மா. என்னய நம்பு’ என்று அழ, ஓரளவு நிலைமை சமாதானமானது. காலையில் பால் ஊற்ற வருகிற கோவிந்தன் சொல்லித்தான் தம்பியின் வீட்டுக்கு விவரம் தெரிய வந்தது.

’கம்பவுண்டரு ராயல்ல செகண்ட் சோ முடிஞ்சு வந்திருக்காரு. உள்ள இருந்து பொகஞ்சிருக்கு. அதுக்குள்ள சாமிசன்னதி பட்டர்மாருங்க எல்லாரும் ஓடி வந்து கதவ ஒடச்சிருக்காங்க. ரெண்டு பேரும் கரிக்கட்டயாக் கெடந்திருக்காங்க. யாரு அம்மை, யாரு மகன்னே தெரியலயாம்’.

‘யாருடே அது?’ ஜோதீஸ் காபிக்கடை ஆனந்தம் மாமா கேட்டார். காசியுடன் வந்த தம்பி, அவரைப் பார்த்து லேசாகச் சிரித்தபடி, ‘என்ன மாமா? சும்மா இருக்கேளா?’ என்று கேட்கவும், ‘ஏ தம்பில்லா! எப்பிடி இருக்கே மாப்ளே’. வந்து அணைத்துக் கொண்டார். ‘எத்தன வருசம் ஆச்சு மாப்ளே ஒன்னப் பாத்து. காசி கூட முன்னமாரி வரமாட்டங்கான். காப்பி குடிக்கியா?’

தேரடிப் பக்கம் பவானி வீடு இருந்த இடத்தில் இப்போது வேறேதோ கடை ஒன்று நின்றது. சலனமேயில்லாமல் அந்தப் புதியக் கட்டடத்தைப் பார்த்தபடி சிறிதுநேரம் அமர்ந்திருந்தான், தம்பி.

ஆண்டிநாடார் கடையைத் தாண்டும் வரைக்கும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ராயல் தியேட்டர் பக்கம் நிமிர்ந்துப் பார்த்துக் குழம்பியவன், காசியிடம் ‘எல! ராயல் டாக்கீஸ் இப்பம் இல்லயா?’ என்று கேட்டான்.

தம்பி இப்படித்தான். தியேட்டர் என்று அவன் வாயில் வராது. டாக்கீஸ்தான். ‘இந்தக் காலத்துப்பிள்ளேளு மாரியா அவன் பேசுதான். எல்லாம் ஒன் வளப்பு’. சண்முகப்பா அவர் அம்மையைப் பார்த்து சொல்லுவார். ‘எல! நானாது டாக்கீஸுங்கென். எங்கம்மைல்லாம் கொட்டகைன்னுல்லா சொல்லுவா’. பதிலுக்கு ஆச்சி சொல்லுவாள்.

இரண்டொரு நாட்களில் தம்பி கல்கத்தாவுக்கேக் கிளம்புகிறான் என்கிற செய்தி வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

‘கல்யாணமும் பண்ணிக்கிடலங்கான். பளய மாரி இல்லன்னாலும் சின்ன யூனிட் போட்டு மில்லும் ஓடிக்கிட்டுதான இருக்கு! அத கவனிச்சுக்கிட்டு இங்கன இருக்கலாம்லா! அப்பிடியே ஒரு தாலியும் கட்ட வச்சிரலாம். நான் இன்னும் எத்தன நாளைக்கு இருக்கப் போறென்! நீயாது கொஞ்சம் சொல்லுடே காசி’.

சண்முகப்பாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே காசிக்குத் தெரியவில்லை. தம்பியிடம் அவன் இதைச் சொல்லாமல் இல்லை. ஆனால் அதற்கு அவன் கேட்கும் எதிர்க்கேள்விக்கான அர்த்தம் காசிக்குப் புரிந்தது. சண்முகப் பெரியப்பாவுக்கோ, லோகம்மைக்கோ அது புரிய வாய்ப்பில்லை. முகத்தில் உணர்ச்சியே இல்லாமல், அதே சமயம் சற்றே கலங்கிய கண்களுடன் துணிமணிகளை எடுத்துப் பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த தம்பி, காசியின் முகம் பார்க்காமல் கேட்டான்.

‘ராயல் டாக்கீஸ் இல்லாத ஊர்ல என்னால இருக்க முடியுமால?’

நன்றி- ஆனந்த விகடன்