post

உள்காய்ச்சல்

‘எல, இப்பதானெ காலேஜு விட்டு வந்தே? அதுக்குள்ள எங்கெ கெளம்பிட்டெ? பதிலேதும் சொல்லாமல் கண்ணாடி முன் நின்று உதட்டைக் கடித்தபடி தலை சீவிக் கொண்டிருந்தான் திரவியம்.

’ஒன்ட்டத்தானெ கேக்கென்?’

சிவகாமி மறுபடியும் மகனைப் பார்த்துக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை. செருப்பை மாட்டிக் கொண்டு, ‘சொக்கத்தானப் பாத்துட்டு வாரேன்’ என்று சொல்லிவிட்டு, கிளம்பினான் திரவியம்.

‘சொக்கத்தானாம்லா சொக்கத்தான். அவன் ஒன் வாள்க்கைல சொக்கட்டான் ஆடத்தான் போறான். விடிஞ்சு போனா அடஞ்சு வார மனுசன் காதுலயும் என் பொலப்பம் விளமாட்டெங்கு. இந்த வீட்ல யாரு என்னை மதிக்கா? எல்லாரும் பைத்தியாரின்னுல்லா நெனைக்கியொ! எக்கேடும் கெட்டுப் போங்கொ.’.

சிவகாமியின் வார்த்தைகள் திரவியத்தின் காதுகளில் தேய்ந்து விழுந்தன. அதற்குள் அவன் செக்கடியைத் தாண்டியிருந்தான்.
இனி ராத்திரி சாப்பாட்டுக்குத்தான் திரவியம் வீட்டுக்கு வருவான். அதுவரை அவனை நெல்லையப்பர் கோயிலின் சுவாமி சன்னதியிலுள்ள சொக்கலிங்கத்தின் வளையல் கடையில் பார்க்கலாம். நெற்றியில் பிறை போன்ற சந்தனக் கீற்றும், செந்தூரமுமாக, ஜவ்வாது மணக்க,கடும் கோடைக் காலத்திலும் குளிர்ச்சியாக இருக்கும் வளையல்கடையில் உட்கார்ந்திருக்கும் சொக்கலிங்கம், திரவியத்துக்கு தூரத்துச் சொந்தக்காரன். திரவியத்துக்கும், அவனுக்கும் எப்படியும் இருபது வயது வித்தியாசம் இருக்கும். திரவியத்துக்கு வாழ்க்கையின் நெளிவுசுளிவுகள் கற்றுக் கொடுத்தவன். கொடுப்பவன். தான் இதுவரைக்கும் கேள்வியே பட்டிராத அபூர்வமான புத்தகங்கள் பலவற்றை சொக்கலிங்கம் மூலம் திரவியம் படித்திருக்கிறான். ’பெண்களை வசியம் செய்வது எப்படி?, மங்கையரை மயக்குவதன் ரகசியங்கள், பெண்களுக்கே தெரியாமல் பெண்களின் மனதை அறிவோம்’ போன்ற பொது அறிவுக் களஞ்சியப் புதையலே சொக்கலிங்கத்திடம் இருந்தது.

‘இந்த புஸ்தகத்துல எளுதியிருக்கிறதுல்லாம் நெசந்தானா அத்தான்?’

தொண்டையைக் கனைத்துக் கொண்டு ரகசியமாக திரவியம் பலமுறை, சொக்கலிங்கத்திடம் கேட்டிருக்கிறான். அதற்கெல்லாம் சொக்கலிங்கத்திடமிருந்து ஒரே பதில்தான் வரும்.

‘எல்லாத்தயும் அத்தான் டெஸ்ட் பண்ணியே பாத்திருக்கென். போதுமா?’.

எப்போதும் சிரித்த முகமாகக் காட்டும் தூக்கலான முன்பல்லுடன், மேலும் சிரித்தபடி சொல்லிவிட்டு, கண்ணடிப்பான், சொக்கலிங்கம். திரவியத்துக்குக் காதெல்லாம் சூடாகும். மேற்கொண்டு கேட்க தைரியமில்லாமல் அமைதியாகிவிடுவான்.

‘காலேஜ் படிக்கெ? இன்னும் நீ தனியாளா இருக்கக் கூடாது மாப்ளெ. ஒனக்கொரு ஏற்பாடு பண்ணியிருக்கென்’.

திடீரென்று ஒருநாள் சொன்னான் சொக்கலிங்கம். சொன்ன கையோடு, ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் ‘வா, பெருமாள் சன்னதி தெருவரைக்கும் போயிட்டு வருவோம்’ என்று தன்னுடைய டி.வி.எஸ் 50யில் திரவியத்தை அழைத்துக் கொண்டு சென்றான். திரவியத்துக்கு எதற்காக பெருமாள் சன்னதி தெருவுக்கு செல்கிறோம் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும் சொக்கலிங்கத்திடம் கேட்க முடியாது. ‘அத்தான் எது செஞ்சாலும் ஒன் நன்மக்குத்தான் செய்வென். குறுக்கெ பேசக் கூடாது’ என்று வாயை அடைத்து விடுவான். பெருமாள் சன்னதி தெருவிலுள்ள ஒரு வீட்டுக்கு முன்னால் வண்டியை நிறுத்தி விட்டு, ‘வா மாப்ளே’ என்று வீட்டுக்குள்ளே போனான் சொக்கலிங்கம். தயங்கியபடியே பின் தொடர்ந்த திரவியத்தை அந்த வீட்டிலுள்ள ஒரு வயதான பெண்மணியிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்.

‘பெரியம்மை, இது யாரு தெரியுதா? பிரஸ்ல வேல பாக்காள்லா, கணவதி மாமா? அவாள் மகன் தெரவியம்’.

அந்த அம்மாளுக்குப் புரிந்த மாதிரியே தெரியவில்லை. ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு, ‘காப்பி குடிக்கேளாடே?’ என்றபடி எழுந்து உள்ளே சென்றார். திரவியம் ஒடுங்கி உட்கார்ந்திருந்தான். டி.விக்கு பின்னால் சுவற்றில் ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்றெழுதி எம்.ஜி.ஆர் படம் ஒட்டப்பட்டிருந்தது. ‘பெரியம்ம, நாங்க வெளிய உக்காந்திருக்கொம்’. உரக்கச் சொல்லிவிட்டு, திரவியத்தை சைகை காண்பித்து வெளியே அழைத்தான், சொக்கலிங்கம். வெளியே வந்து நிற்கவும், கோதுமை மாவு வாசனை மூக்கை அடைத்தது. ஒட்டினாற்போல் இருந்த பக்கத்து வீட்டைக் காண்பித்து திரவியத்திடம் ஏதோ சொல்ல வந்தான், சொக்கலிங்கம். அதற்குள் இரண்டு தம்ளர்களில் காப்பி வந்தது. ‘லெச்சுமிய எங்கெ? கடைக்கு போயிருக்காளா?’. காப்பி தம்ளரை வாங்கியபடியே கேட்டான் சொக்கலிங்கம். ‘சேட்டு வீட்ல இருப்பா. இரி, கூப்பிடுதென்’ என்று சொல்லிவிட்டு, பக்கத்து வீட்டைப் பார்த்து ‘லெச்சுமி, லெச்சுமி’ என்று சத்தம் கொடுத்தார்கள். திரை விலக்கி லெட்சுமியும், செக்கச் செவேலென இன்னொரு பெண்ணும் வாசலுக்கு வந்தார்கள்.

’என்ன லெச்சுமி, எப்டி இருக்கெ?’ என்றான் சொக்கலிங்கம். ‘நேத்துத்தானெ பாத்தெ? அதுக்குள்ள எனக்கென்ன கொள்ள? நல்லாத்தான் இருக்கென்’. வெடுக்கென்று பதில் சொன்னாள் லெட்சுமி.

பெருமாள் சன்னதி தெருவிலிருந்து திரும்பும் போது, காந்தி சதுக்கத்தில் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, திரவியத்திடம் சொக்கலிங்கம் கேட்டான். ’அந்தப் பிள்ள எப்டி இருந்துது?’. திரவியத்துக்கு புரியவில்லை. ‘எந்தப் பிள்ள அத்தான்?’. எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக, திரவியத்தின் தோளைப் பிடித்தபடி, ‘எங்க பெரியம்ம வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பிள்ள. பாக்கறதுக்கு சோனியா அக்ரிகால் மாரி இருக்கா பாத்தியா?’. பதில் சொல்லாமல் எங்கோ பார்த்தபடி நின்றான், திரவியம். ‘என்ன மாப்ளே? சொல்லு. எப்டி இருந்தா?’ தோளைப் பிடித்து சொக்கலிங்கம் உலுக்கவும், திரவியத்துக்கு அந்தப் பெண்ணின் உருவம் மனதில் தோன்றி மறைந்தது. தொண்டை வறண்டது. ‘ரொம்ப அளகா இருந்தா அத்தான்’. சத்தமாகச் சிரித்தான் சொக்கலிங்கம். ‘பொறவு? அத்தான் செலக்சன் சாதாரணமா இருக்குமா? இத்தன நாளா அந்தப் பிள்ள ஜங்க்ஷன்ல இருந்திருக்கு. போன மாசந்தான் டவுணுக்கு வந்தாங்களாம். நேத்து நெல்லையப்பர் கோயிலுக்கு போகும் போது நம்ம கடவாசல்ல வச்சு பாக்கும் போதெ முடிவு பண்ணிட்டெம்லா அந்தப் பிள்ள ஒனக்குத்தான்னு’. திரவியத்தின் தொண்டை மேலும் வறண்டது. எச்சில் முழுங்கி, ‘எத்தான்’ என்றான்.

‘மேலு சுடுத மாரி இருக்குமெ?’

‘ஆமா அத்தான்’

‘அப்ப ஒர்க்ஸ் அவுட் ஆயிட்டு. இதான் உள்காய்ச்சல். வெளியெ தெரியாது. ஆனா நீ மட்டும் ஃபீலிங் பண்ணலாம். இனிமெ எல்லாம் கரெக்டா நடக்கும் மாப்ளெ’.

வண்டியை ஸ்டார்ட் செய்தான் சொக்கலிங்கம்.

அதற்குப் பிறகு எல்லா சனிக்கிழமை மாலைகளிலும், சொக்கலிங்கத்தின் கடையில் அந்த சேட்டுப் பெண்ணுக்காகக் காத்திருந்தான் திரவியம். அவள் பெயர் சொப்னா என்பது தெரியவே பதினொறு சனிக்கிழமைகள் ஆனது. ஒருநாள் கூட அந்தப் பெண் சொப்னா திரவியத்தை ஏறிட்டுப் பார்த்ததில்லை. ஆனாலும் அவள்தான் திரவியத்தின் காதலி என்று சொக்கலிங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தாள். ஒவ்வொரு முறை அவள், சொக்கலிங்கத்தின் கடையைத் தாண்டிச் செல்லும் போதும் திரவியத்துக்குக் கை, கால்கள் நடுங்க ஆரம்பிக்கும். ஆனால் சொப்னா எந்த சலனமுமில்லாமல் கோயிலுக்குள் நுழைவாள். திரும்பி வரும் போதும் அதே நிலைமைதான். அடுத்தடுத்த சனிக்கிழமைகளில் சொப்னாவைப் பற்றிய தகவல்களை சேகரித்துச் சொன்னான் சொக்கலிங்கம்.

‘சாரதா காலேஜ்ல பி.காம் மூணாம் வருசம் படிக்கா. அப்பா எலக்ட்ரிக் சாமான் கட வச்சிருக்காரு. இந்திக்காரின்னாலும் தமிள் தெரியும். ஆனா விஜய் ம்யூசிக்கல் கடைல போயி இந்திப் படம் கேசட்டா வாங்குதா. இந்த சட்டயக் கெளட்டி போட்டு ஆடுவானெ! அவன் பேரென்ன! ஆங், சலாம்கான். அவன் ரசிக. வேறென்ன டீட்டெயில்ஸு வேணும் மாப்ளெ?’

மனமுடைந்து நம்பிக்கை இழந்தான் திரவியம்.

‘நான் பி.ஏ மொத வருசம்தானெத்தான் படிக்கென்?’

‘அட கோட்டிக்காரா? நீதான் ஏளாப்புலயும், ஒம்பதாப்புலயும் பெயிலானெல்லா?’

‘ஆறாப்புலயும்ந்தான் அத்தான்’.

‘பொறவு என்ன? அப்பம் அவள விட நீ ஒரு வயசு மூப்புல்லா.’

ஆனாலும் திரவியத்துக்கு எதுவுமே சரியாக இல்லை. ‘திரும்பிக் கூடப் பாக்க மாட்டக்காளெ அத்தான்? ஒரு ஆளு நிக்குற உணர்வே இல்லாமல்லா அவ பாட்டுக்கு நம்மளத் தாண்டிப் போறா.’

‘மாப்ளெ’. கொஞ்சம் சீரியஸான தொனியில் பேச ஆரம்பித்தான் சொக்கலிங்கம். ‘அவ ஒன்னைய க்ராஸ் பண்ணும் போது ஒனக்கு மேலு சுடுதா இல்லயா?’

‘அதெல்லாம் சுடத்தான் செய்யுது? அவளுக்கும் சுடணும்லா?’

‘நீ கண்டயா? அவளுக்கும் சுடத்தான் செய்யும். நீ தொட்டுப் பாத்தாலும் தெரியாது. உள்காய்ச்சல்லா? எத்தனயோ பிள்ளைள பாக்கெ. எல்லாரப் பாக்கும் போதுமா மேலு சுடுது. அத்தான் சொன்னா சரியா இருக்கும். தைரியமா இரி. ஒங்க அம்மைக்கு சொப்புனா சப்பாத்தியா சுட்டு போடத்தான் போறா, பாரேன்’.

அதோடு விடவில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை திரவியத்தை ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள ராஜஸ்தான் ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்று சப்பாத்தியாய் வாங்கிக் கொடுத்தான்.

‘நாளைக்கு கல்யாணத்துக்கப்புறம் அந்த பிள்ள இதத்தான் செஞ்சு போடப் போகுது. இப்பவெ பளகிக்கோடே.’

மூன்று வேளையும் சோற்றைத் தின்று பழகிய திரவியத்துக்கு சப்பாத்தி ஒத்துக் கொள்ளவில்லை. ஒருநாள் ராஜஸ்தான் ஹோட்டலுக்குப் போகும் வழியில், சாலைக்குமார கோயிலுக்கு முன், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தாங்க முடியாமல் சொக்கலிங்கத்தின் கையைப் பிடித்துக் கெஞ்சி விட்டான். ‘தப்பா நெனைக்காதெ அத்தான். நீ என் நல்லதுக்குத்தான் செய்தே. இல்லேங்கல. ஆனா எனக்கு கொஞ்ச நாளா சரியா மோஷன் போக மாட்டெங்கு. சொன்னா புரிஞ்சுக்கொ’. உடைந்து அழுதே விட்டான்.

‘இதத்தான் மாப்ளெ கண்ணதாசன் எளுதுனாரு, பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்னு’. வயிற்று உபாதையையும் விட சொக்கலிங்கத்தின் இந்த பொருந்தா உதாரணம் திரவியத்தைக் கொடுமைப்படுத்தியது. கேட்டால், குறுக்கெ பேசக்கூடாது என்று சொல்வான் என்பதால் அமைதியாகவே இருந்தான்.

‘மாப்ளே. மஞ்சன வடிவம்மனுக்கு ஒரு சுலோகம் இருக்கு. நான் பசிஃபிக்கா ஒனக்காக அதச் சொல்லி வேண்டியிருக்கென். கூடிய சீக்கிரம் ஒனக்கு நல்லது நடக்கும், பாரேன்’ என்றான்.

‘அத்தானுக்குத்தான் நாப்பது வயசாகியும் கல்யாணம் ஆகல. ஒனக்காவது காலாகாலத்துல எல்லாம் நடக்கணும். அதுக்குத்தானெ நான் இப்படி கெடந்து எல்லாம் செய்தென்.’. திரவியத்துக்கு அழுகை வந்தது. இத்தனை நல்ல மனமுள்ளவனைப் புரிந்து கொள்ளாமல் அம்மை ஏசுகிறாளே என்று மனதுக்குள் வருந்தினான். ‘அவன் வயசென்ன? ஒன் வயசென்னல? ஐஸ்கூலுக்குக் கூட போகாத பய, கூட, காலேஜு படிக்கிற பயலுக்கு அப்படி என்ன சகவாசம்ங்கென்?’ திரவியத்தின் அம்மா மட்டுமல்ல, சொக்கலிங்கத்தின் அப்பாவுமே அவனை கடுமையாக ஏசி வந்தார். ‘என் காலத்துக்கப்புறம் நீ இந்த கடய தூக்கி நிறுத்துவேன்னு எனக்கு நம்பிக்க இல்ல. இப்பவெ கடன்காரனுக்கு பதில் சொல்ல முடியாம நான் கெடந்து தட்டளியுதென். நான் மண்டயப் போட்டுட்டென்னா நீ சோத்துக்கு சிங்கிதான் அடிக்கணும், தெரிஞ்சுக்கோ’. அந்த மாதிரி சமயங்களில் திரவியம்தான் , சொக்கலிங்கத்துக்கு ஆதரவாய் இருப்பான்.

‘நான் இதுக்கெல்லாம் கலங்கல, மாப்ளெ. எனக்கு அம்மயும் இல்ல. இவாள் ஒரு ஆளுக்காகத்தான் திருநவெலில கெடக்கென். இவாள் போயிட்டான்னா டக்குன்னு போயி மிலிட்டரில சேந்துருவென்’.

‘நாப்பது வயசுக்கு மேலல்லாம் மிலிட்டரில ஆள் எடுக்க மாட்டாங்கத்தான்’. வாய் தவறி திரவியம் சொல்லி விட்டான்.

‘அதெல்லாம் எக்ஸ்ப்ரஷன் உண்டு மாப்ளெ’. திரவியம் மனதுக்குள் சொக்கலிங்கம் அத்தான் சொன்ன எக்ஸ்பிரஷன், எக்ஸெப்ஷனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

‘ஆனா அதுக்கு முன்னாடி ஒன் கல்யாணத்தப் பாத்துரணும், மாப்ளெ’.

தனக்காக இல்லையென்றாலும், சொக்கலிங்கம் அத்தானுக்காகவாவது சொப்னாவைக் காதலித்து திருமணம் செய்து விட வேண்டும் என்கிற ஆசை நாளுக்கு நாள் திரவியத்துக்கு அதிகமாகிக் கொண்டே வந்தது. வீட்டில் அம்மா சொல்லி, திரவியத்தின் அப்பாவும் சொக்கலிங்கத்தின் கடைக்கு திரவியம் போவதற்கு தடை விதித்தார். ‘ஒளுங்கா மரியாதயா காலேஜ் படிப்ப முடிக்க பாரு. எங்க மொதலாளி மேலப்பாளையம் கடைல ஒன்னைய எடுத்துக்கிடுதென்னு சொல்லியிருக்காரு. இனிமேலும் அந்த வளயல்கடக்காரப் பய கூடப் பாத்தேன்னா, ஒன்ன ஒண்ணும் செய்ய மாட்டென். நேரே அவன் கடைக்குப் போயி ஆடு ஆடுன்னு ஆடிருவென், பாத்துக்கொ’.

தன்னால் சொக்கலிங்கம் அத்தான் அசிங்கப்படுவதை திரவியம் விரும்பவில்லை. சில நாட்கள் சொக்கலிங்கத்தின் கடைக்குப் போகாமல் தவிர்த்தான். இரண்டு வாரங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. காலேஜில் இருந்து கோயில் வாசல் ஸ்டாப்பில் இறங்கி, வீட்டுக்குக் கூட போகாமல் நேரே சொக்கலிங்கத்தின் கடைக்குப் போனான். கடை பூட்டியிருந்தது. பக்கத்துக் காப்பித்தூள் கடையில் கறைபடிந்த உள்பனியனோடு உட்கார்ந்திருந்த பாப்பையா அண்ணாச்சி, இவனைப் பார்த்து, ‘போயிரு போயிரு’ என்று சைகை செய்தார். ஒன்றும் புரியாமல், திரவியம் முழித்தபடி வீடு வந்து சேர்ந்தான். வாசலில் செருப்பைக் கழட்டும் போது அம்மா சொன்னாள்.

‘சொக்கத்தான் சொக்கத்தாம்பியே? ஒங்க சொக்கத்தான் செஞ்ச காரியம் தெரியுமா? பெருமாள் சன்னதி தெருல யாரோ ஒரு சேட்டுப்பிள்ளய இளுத்துக்கிட்டு ஓடிட்டானாம். போலீஸு கேஸாயிட்டு. ஒளுங்கா மரியாதயா வீட்டுக்குள்ள கெட’.

திரவியத்துக்கு மேல் சுடுகிற மாதிரி இருந்தது.

ஓவியங்கள்: ஸ்யாம்
நன்றி, ஆனந்த விகடன்