post

என்னை ‘நான்’ ஆக்கியவர் . . .

கைபேசியில் அவரது எண்ணுடன் கம்பீரமான அவரது பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை வைத்திருப்பேன். அவர் அழைக்கும்போது ‘மூன்றாம் பிறை’யின் ‘பூங்காற்று புதிதானது’ பாடலின் துவக்க இசை ஒலிக்கும். அதை முழுமையாக ஒலிக்க ஒருமுறையும் விட்டதில்லை. ’ஸார்’ என்பேன். நிதானமான குரலில் ‘நான் பாலு பேசறேன். உன்னால ஒரு பத்து நிமிஷம் வந்துட்டு போக முடியுமா? என்பார். ‘கிளம்பி வாடா’ என்று சொல்வதற்கான முழு உரிமையும் கொண்ட அந்த மனிதரின் அடிப்படையான பண்பு, இது. அழைத்த சில நிமிடங்களில் அவர் முன் போய் நிற்பேன். படித்துக் கொண்டோ, எழுதிக் கொண்டோ இருப்பவர் சட்டென்று அதை ஏறக்கட்டிவிட்டு, ‘உக்காரு. ப்ளாக் டீ சாப்பிடலாமா?’ என்பார். ‘ஏதும் முக்கியமான விஷயமா, ஸார்?’ என்று கேட்டால், ‘உன்னப் பாக்கணும் போல இருந்துச்சு. அதான்’ என்பார்.

இருபத்தோரு ஆண்டுகளாக அவரது வீடு, அலுவலகம் இருக்கும் பகுதியிலேயே வசித்து வருகிறேன். எந்த நேரமும் அவர் அழைத்தால் ஓடிப் போய் நிற்க வேண்டும் என்கிற ஒரே காரணத்தைத் தவிர வேறில்லை. அதனாலேயே இன்றைக்கும் சென்னையில் எனக்கு சாலிகிராமத்தை விட்டால் வேறு எந்த ஒரு பகுதிக்கும் துணையில்லாமல் போய்வரத் தெரியாது. அவர் அழைக்காமல் நானாகப் போயும் பார்ப்பதுண்டு. எப்போதும் திறந்தே இருக்கும் அவரது அறையின் கதவைத் தட்டி ‘ஸார்’ என்றால், நிமிர்ந்து பார்த்து எப்போதும் அவர் சொல்லுவதைச் சொல்லுவார். ‘நம்புவியா? இப்ப நீ வரலேன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல நானே உனக்கு ஃபோன் பண்ணியிருப்பேன்’.

தொன்னூறுகளில் துவக்கத்தில் நான் அவருடன் வந்து இணைந்த நாளிலிருந்து இன்றுவரை என் வாழ்வின் ஆதாரமாகத் திகழும் பாலுமகேந்திரா என்னும் உன்னதமான கலைஞன்பால் எனக்கேற்பட்ட ஈர்ப்புக்குக் காரணமென்னவோ அவரது திரைப்படங்கள்தான். ஆனால் பாலுமகேந்திரா என்கிற மனிதர், பாலு மகேந்திரா என்னும் ஆளுமை, பாலுமகேந்திரா என்றழைக்கப்படுகிற என்னுடைய குருநாதரை மறக்க முடியாமல் செய்து, தொடர்ந்து அவருடைய நினைவுகளால் இன்னும் கதறச்செய்து கொண்டிருப்பது அவருடனான எனது தனிப்பட்ட அனுபவங்கள்தான். அவை எல்லாமே நினைத்து நினைத்து மகிழக்கூடிய சுகமான அனுபவங்கள் மட்டுமல்ல. வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் மூத்த அந்த பெரிய மனிதரிடம் சண்டை போட்டிருக்கிறேன். கோபம் கொண்டு பேசாமல் இருந்திருக்கிறேன். முகத்துக்கு நேராக முறைத்திருக்கிறேன். ஓரிருமுறை அவரை விட்டு விலகிச் சென்றிருக்கிறேன். அப்படி கோபித்துச் சென்ற ஒரு சந்தர்ப்பத்தில், சென்னையில் உள்ள என் வீட்டு படுக்கையறையில், தூங்கி விழிக்கும் போது என் முன் அமர்ந்திருந்தார். பாலுமகேந்திரா என்னும் அந்த மகத்தான ஆளுமைக்கு முன்னால் சின்னஞ்சிறு பயலான நான் சுக்குநூறாகிப் போன மறக்கவே முடியாத தருணமது. இன்னொருமுறை கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, திருநெல்வேலிக்குச் சென்று விட்டேன். மறுநாளே தன் துணைவியாரோடு திருநெல்வேலிக்கு வந்தவர், ‘நீ இருந்து அவனைக் கூட்டிக்கிட்டு வா’ என்று அகிலா அம்மையாரிடம் சொல்லி அவரை எங்கள் இல்லத்திலேயே விட்டுவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, செ.கணேசலிங்கம், செ.யோகநாதன், எஸ்.பொ, கோமல் சாமிநாதன், வண்ணநிலவன் போன்ற இலக்கிய மற்றும் பத்திரிக்கையுலக ஆளுமைகளோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். இளையராஜா, கமல்ஹாசன், பரதன், கிரீஷ் காசரவல்லி, கே.விஸ்வநாத், ஷாஜி கருண், கவிஞர் வாலி, மோகன்லால், மம்முட்டி, மகேஷ்பட், அனந்து, கிரேசி மோகன் போன்ற திரையுலகக் கலைஞர்களுடன் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். இன்று நான் சினிமாவில் இருப்பதற்கு மட்டுமல்ல, சென்னையில் நான் இருப்பதற்கே காரணமானவர். ஏற்கனவே எனக்கிருந்த வாசிக்கும் பழக்கத்தைத் தீவிரப்படுத்தியவர். தனது முதல் படமான ‘கோகிலா’வை திரையிட்டு, தன் அருகிலேயே என்னை அமரவைத்துக் கொண்டு ‘ஷாட் பை ஷாட்’டாக Film making என்பது ஒன்றும் கம்பசூத்திரமல்ல என்பதை எளிமையாக விளக்கியவர். இது போன்ற எத்தனையோ உலகத் திரைப்படங்களை அருகில் அமர்ந்து பார்க்கச் செய்து தொழில்நுட்ப அறிவை சுவையாகப் புகட்டியவர். பின்பு அவரது சினிமா பட்டறையில் அவருடைய தற்போதைய மாணவர்களுக்கு என்னை வகுப்பெடுக்க வைத்தவர். இப்படி இன்னும் பல பல.

சினிமா மற்றுமல்லாமல் வாழ்வின் யதார்த்தமான விஷயங்களை மிக எளிதாகப் புரியும்படி உரைத்தவர். அவரது நண்பர் ஒருவரின் இல்லத்துக்கு என்னை அழைத்துச் சென்றிருந்தார். தென்னக ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூர்த்தி என்ற அந்த மனிதருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. திரு. மூர்த்தி, Wildlife Photographyயில் உலக அளவில் சிறந்து விளங்கும் அல்ஃபோன்ஸ் ராயின் தகப்பனார். ’மூர்த்தி! இந்தப் புள்ளைக்கும் ஒங்க ஊர்தான்’. சந்தோஷமாக அறிமுகம் செய்து வைத்தார். ஊர்ப்பாசம் கண்களில் கொப்பளிக்க பெரியவர் மூர்த்தி காபி கொடுத்து உபசரித்தார். அப்போதெல்லாம் காபி, டீ அருந்தும் பழக்கம் எனக்கில்லை என்பதால் காபியைத் தவிர்த்தேன். ‘அப்ப பால் சாப்பிடறீங்களா? ஜூஸ் தரட்டுமா? என்று கேட்டார், மூர்த்தி.

காரில் வீடு திரும்பும் போது வாத்தியார் சொன்னார்.

‘காபி, டீ குடிக்காதது நல்ல பழக்கம்தான். ஆனா யார் இடத்துக்கோ நாம போயிருக்கும் போது, அவங்களால அதுதான் குடுக்க முடியும்னா யோசிக்காம வாங்கிக் குடிச்சிடு. உனக்காக அவங்க அவங்க வீட்ல இல்லாத ஒண்ண தயார் பண்ணிக் குடுக்கிற சிரமத்தை இனியாவது தவிர்த்திடு’.

வேதவாக்காக இன்று வரை நான் கடைப்பிடித்து வரும் பழக்கம், இது. இப்படி அறிவுறுத்தியவர் ஒருபோதும் என்னை அசைவம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியதில்லை. ‘எப்படிப்பா சைவம் மட்டுமே சாப்பிட்டு உன்னால இருக்க முடியுது!’ என்று வியந்ததோடு சரி.

மாற்று அபிப்ராயமுடையவர்களை கொலைவெறியுடன் முறைத்துப் பார்ப்பதை இயல்பாகத் தவிர்க்கச் செய்தவர். நெருக்கடியான காலக்கட்டத்தில் அவரை கடுமையாக வசை பாடியவர்களிடத்திலும் மரியாதையுடன் பழகியவர். இன்றுவரை அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள முனையும் பழக்கம், இது. மாற்றுக் கருத்துடையவர்களை முறைப்பதில்லையே தவிர அவரைப் போன்று இன்முகம் காட்டிப் பழக இயலாமல் விலகிச் சென்று விடுகிறேன்.

இயல்பிலேயே Dog Loversஆன அவரும், நானும் மிக அதிகமான நேரங்களில் நாய்களைப் பற்றிப் பேசியிருக்கிறோம். ‘மூன்றாம் பிறை’ சுப்பிரமணி, ‘சத்மா’ சில்கி போன்ற நாய்களுக்குப் பிறகு, ‘பீட்டர்’ என்னும் லேப்ரடார் வகை நாயை பிரியமுடன் வளர்த்து வந்தார். ‘பீட்டர்’ காலமான பிறகு நாயில்லாத அவர் வீட்டைப் பார்க்கப் பிடிக்காமல், சாலிகிராமத்துக் குப்பைத் தொட்டியிருந்து, பிறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்த தெருநாய்க்குட்டி ஒன்றை எடுத்து அவரிடம் சென்றுக் கொடுத்தேன். பச்சைக் குழந்தையை வாங்குவது போல கைகளில் ஏந்திக் கொண்டார். வாங்கிய மறுநிமிடமே, ‘சுப்பிரமணி! மறுபடியும் வந்துட்டியாடா?’ என்றார். சுப்பிரமணி என்ற சுப்புவுக்குத் துணையாக ‘வள்ளி’ என்கிற இன்னொரு நாட்டுநாய்க்குட்டியை வளர்க்கத் துவங்கினார். கடந்த மாதத்தில் ஒருநாள் வீட்டுக்குச் சென்ற என்னைப் பார்த்து மெதுவாக நடந்து அருகில் வந்து கொஞ்சினான், சுப்பு. தடவிக்கொடுத்தபடியே, ‘டல்லாயிட்டானே ஸார், இவன்?’ என்றேன்.

‘வயசாகுதில்லையா? அதான். His days are numbered’ என்றவர், ‘சுப்பு, இங்க வாடா’ என்றழைத்து அதன் தலையையும், கழுத்தையும் தடவிக் கொடுத்தவாறே, ‘எனக்கு முன்னாடி நீ போயிடாதடா’ என்றார்.

ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘மூங்கில் மூச்சு’ தொடரின் இரண்டாவது வாரத்திலேயே அவரைப் பற்றி எழுதியிருந்தேன். படித்துவிட்டு தொலைபேசியில் பேச முடியாமல் உடைந்து அழுதார். ‘உனக்கெல்லாம் ஒண்ணுமே செய்யாத சாமானியன் நான். என்னைப் போயி இப்படித் தலையிலத் தூக்கி வச்சு எழுதியிருக்கியேம்மா!’ என்றார். சென்ற வருடம் அதே விகடனில் நான் எழுதிய ‘சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்’ சிறுகதையைப் படித்து விட்டும் தாங்க முடியாமல் அழுதார். அந்தக் கதையின் பின்னணியை நாங்கள் இருவரும் அறிந்திருந்ததே அவரது அழுகைக்குக் காரணம். அவர் காலமான அன்று நிகழ்ந்த சில கசப்பான விஷயங்களைக் கண்டும், காணாமல் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருந்த வாத்தியாரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்’ சிறுகதையின் கடைசி வரி, துல்லியமாக வாத்தியாரின் வாழ்விலும் நடந்தேறும் என்று உறுதியாக நம்பினேன். அதுவே நடந்தது.

இயற்கையான தலைவழுக்கையை தொப்பி போட்டு மறைத்தததைத் தவிர, தன்னுடைய எந்த பலவீனத்தையும் அவர் மறைத்ததில்லை. அதையுமே ‘தலைமுறைகள்’ படத்துக்காகத் துறந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளையராஜாவைப் பார்க்க காரில் சென்று கொண்டிருந்தோம். செல்லும் வழியில் ‘தலைமுறைகள்’ திரைப்பட போஸ்டர் ஒன்றில் வழுக்கைத்தலையுடன் அவர் இருக்கும் க்ளோஸ்-அப் புகைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.

‘இதுக்குத்தான் இத்தன வருஷமா மறச்சு வச்சிருந்தீங்களோன்னு தோணுது’ என்றேன்.

‘Exactly. சொக்கலிங்க பாகவதர் இருந்தாருன்னா அவரத்தான் நடிக்க வச்சிருப்பேன். நானே இதை எப்படி செஞ்சேன்னே தெரியல’ என்றார்.

‘இத செஞ்சது நீங்க இல்ல, ஸார். காலம்’ என்றேன்.

நான் இப்படி சொல்லவும் என் கைகளைப் பிடித்துக் கொண்டவர், ‘நான் முதன்முதல்ல ஷேவ் பண்றத நிறுத்தினவுடனே நீதான் வந்து சத்தம் போட்டே. இப்ப நீதான் இதையும் சொல்றே’ என்றார். மருத்துவமனையில் இளையராஜாவைப் பார்த்தவுடன், ‘என்ன ராஜா, இது! ஹாஸ்பிட்டல்ல வந்து படுத்துக்கிட்டு! நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் நாலஞ்சு படம் பண்ண வேண்டாமா?’ என்றார்.

‘தலைமுறைகள்’ திரைப்படத்துக்கு அடுத்ததாக ஒரு திரைக்கதையை எழுதும் திட்டத்திலிருந்தார். முழுக்கதையையும் என்னை அழைத்துச் சொன்னவர், ’உன்கிட்ட சொன்னதுக்கப்புறம்தான் ராஜாக்கிட்ட சொல்லணும்னு நெனைக்கிறேன். இன்னும் இதை கொஞ்சம் ஷேப் பண்ணிட்டு, ராஜாவப் போய்ப் பாத்து சொல்லிடலாம். நீயும் வந்திடு’ என்று சொன்னபோது, அது நடக்கும் என்று நம்பினேன்.

கடந்த வியாழனன்று காலை இயக்குனர் வெற்றி மாறன் எனக்கு ஃபோன் பண்ணி, ‘எங்கண்ணே இருக்கீங்க?’ என்றான்.

‘வீட்லதான். ஏன் வெற்றி?’ என்று கேட்டதற்கு,

‘சரி சரி. பதட்டப்படாம கெளம்பி விஜயா ஹாஸ்பிடல் போங்க. ஸார்க்கு ஒடம்பு முடியலியாம். நான் பெங்களூர்ல இருக்கேன். மத்தியானம் வந்துடறேன்’ என்றான்.

விஜயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் வாசலில் அமர்ந்திருந்த அகிலா அம்மாவைத் தவிர்த்து சற்றுத் தள்ளி வந்தேன். ‘வந்துட்டியா?’ என்று என்னை அடையாளம் தெரிந்து கொண்டு கையை எட்டிப் பிடித்தார், நான் வாழ்க்கையில் முதன் முறையாகப் பார்க்கும் அர்ச்சனா அக்கா. என்னைப் பார்த்ததும், அருகில் வந்து நின்று கொண்ட பாலாவும், நானும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. இயக்குனர்கள் சீனுராமசாமியும், ராமும் வந்து சேர்ந்தனர். சீனு ‘ஸாருக்கு ஒண்ணும் ஆயிருக்காதுண்ணே’ என்று சொல்லிக் கொண்டே இருந்தான். ராம் தொடர்ந்து என்னிடத்தில் ‘ஸார் நல்லாத்தானே இருக்காரு?’ என்று கேட்டபடி இருக்க நேரடியாக பதில் சொல்லாமல் ஏதேதோ சொல்லி சமாளித்தேன். சைகை காண்பித்து பாலா என்னை வெளியே அழைக்க, இருவரும் விஜயா மருத்துவமனைக்கு வெளியே வந்தோம். பாலா ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து இழுக்கத் துவங்கினார். பாலாவின் முகம் எனக்கு வாத்தியாரின் உடல்நிலை குறித்த உண்மையைச் சொல்லாமல் சொல்லியது.

‘கெளவன் போயிட்டானோ, பாலா?’ கேட்கும்போதே என் குரல் உடைந்தது.

பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு ‘ஆம்’ என்பது போல தலையசைத்த பாலாவிடம் அதற்குப் பிறகு எனக்குப் பேச ஒன்றுமில்லாமல் போனது.

உடம்பும், மனசும் நடுங்கியதே தவிர அழுகை வரவில்லை. சீனுராமசாமி, ராம் இருவரையும் அழைத்து, ‘ரெண்டு பேரும் கெளம்பி நம்ம ஸ்கூலுக்குப் போயி ஏற்பாடுகள கவனிங்கடா’ என்றேன். ‘மறக்காம அவரோட தொப்பிய எடுக்கணும்’ என்றார் பாலா. அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளைச் செய்யத் துவங்கினோம்.

என் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் ‘பாலு மகேந்திரா சினிமா பட்டறை’யில் வாத்தியாருக்காகக் காத்திருந்தோம். படுத்திருந்த வாத்தியாரை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கும்போது கூட அழுகை வரவில்லை. எல்லோரும் வந்தனர். அஞ்சலி செலுத்தினர். கண்ணீர் உகுத்தனர். இரவு நெருங்கவும் மகனிடம், ‘இன்னைக்கு ஒருநாள்தான் பாலு தாத்தா கூட அப்பாவால இருக்க முடியும். என்னைத் தேடாதே’ என்று ஃபோனில் சொன்னேன். நள்ளிரவில் உறங்குவது போலவே எங்களுக்குத் தோன்றிய வாத்தியாரின் உடலுக்கருகே அமர்ந்தபடி நானும், அர்ச்சனா அக்காவும் விடிய விடிய அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இடையிடையே ‘அக்கா! வாத்தியார் மூச்சு விடற மாதிரியே இருக்குக்கா’ என்று பதறினேன். எழுந்து சென்று கண்ணாடிப் பெட்டிக்குள் எட்டிப் பார்த்தோம். இருவருக்குமே அது பைத்தியக்காரத்தனம் என்று தோன்றினாலும் அதைச் செய்தோம். பாலுமகேந்திரா என்கிற மகத்தான மனிதரைப் பற்றிய நான் கேள்வியேபட்டிராத செய்திகளை கண்ணீருடன் அர்ச்சனா என்கிற நடிகைக்குள் இருக்கிற சுதா என்ற அந்தப் பெண்மணி சொல்லச் சொல்ல வாத்தியாரை கைகூப்பி அழுதபடி வணங்கியபடியே அமர்ந்திருந்தேன்.

இலங்கையில் ‘அமிர்தகழி’ என்னும் சிற்றூரில் துவங்கிய அந்த மனிதரின் வாழ்க்கைப் பயணம், சென்னையில் ‘போரூர்’ மின் தகன மயானத்தில் முடிவடைந்தபோது முழுவதுமாக நொறுங்கிப்போய்விட்டேன். ’மறுபடியும்’ திரைப்படத்தை ‘என்னை ‘நான்’ஆக்கிய எல்லா பெண்களுக்கும்’ என்றொரு டைட்டில் கார்டு போட்டு சமர்ப்பித்திருப்பார், ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா. என் வாழ்க்கையை வடிவமைத்த அந்தப் பெரிய மனிதரை இழந்துத் தவிக்கிறேன். இரவெல்லாம் எழுந்து உட்கார்ந்து கதறி அழுகிறேன். அந்த மனிதர் இருக்கும் போது ஒன்றும் தெரியவில்லை. இப்போதுதான் இன்றைய ‘என்னை’ தட்டித் தடவி உருவாக்கியவர் அவர்தான் என்பது எனக்கு புரியவருகிறது. திருச்சியிலிருக்கும் Caricaturist சுகுமார்ஜி என்கிற நண்பர் வரைந்திருந்த வாத்தியாரின் கேரிகேச்சர் ஒன்றை, ஃபிரேம் செய்து சமீபத்தில் வாத்தியாரிடம் சென்று கொடுத்தேன். அதைப் பார்த்த மாத்திரத்தில் மகிழ்ந்தவர், ‘அவருக்கு ஃபோன் பண்ணேன். ஒரு நன்றி சொல்லிடலாம்’ என்றார். அவரது ஃபோன் நம்பர் என்னிடத்தில் அப்போது இருக்கவில்லை. ‘நீங்க வேணா அவருக்கு நன்றி சொல்லிப் பேசுங்க. வீடியோல பதிவு பண்ணி அவருக்கு அனுப்பிடறேன்’ என்றேன். அவரது மேஜையில் இருந்த அந்த கேரிக்கேச்சர் படத்திலிருந்து அவரது ஸ்டைலிலேயே Slow pan இல் கேமராவை நகர்த்தி, அவருக்கு focus செய்து Action sir என்றேன். பேசத் துவங்கினார். பொக்கிஷமாக என்னிடமுள்ள அந்த வீடியோவைப் பார்த்து மீண்டும் மீண்டும் அழுது கொண்டிருக்கிறேன்.

‘வாழ்க்கைல முக்கியமான விஷயங்களை மனதால முடிவு செய்யாதே. பொறுமையா அறிவால முடிவெடு’ என்பார் வாத்தியார். எழுபது வயதைத் தாண்டிய, உடல்நலம் குன்றிய முதியவர் காலமாவது இயற்கைதான் என்பதை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. சம்பிரதாயமாக அனைவரும் ‘அவர் மறைந்தாலும் அவர் படைப்புகள் நம்மிடையே வாழும்’ என்கிறார்கள். ‘எவனுக்குய்யா வேணும் படைப்பு? எனக்கு எங்க வாத்தியார் வேணும்யா’ என்று கத்தத் தோன்றுகிறது.

post

முடிந்தது :-(

மின் தகன மேடையில் வாத்தியாரின் உடல் கிடத்தப்பட்டு, மார்பில் கற்பூரத்தைக் கொளுத்தி வைக்கவும் நா.முத்துக்குமாரிடம் கதறத் தொடங்கினேன்.

‘முத்து! ஸாருக்கு சுடும்டா. வேண்டாம்டா’.

அவரது டிரேட்மார்க் ஃபிடம் கேஸ்ட்ரோ தொப்பியுடன் சேர்த்து அவரது தலையைத் தொட்டு வணங்கிய அடுத்த நொடியில் சரேலென வாத்தியாரை உள்ளே இழுத்துக் கொண்டது, அந்த யந்திரம். கதறலும், கேவலுமாக அழுது மயங்கிச் சரிந்தேன். இயக்குனர் பாலாஜி சக்திவேல் தாங்கிக் கொண்டார். யார் யாரோ என்னைக் கடத்தி அங்கிருந்து நகர்த்தினர்.

‘நீங்களே இப்பிடி கண்ட்ரோல் இல்லாம அழுதீங்கன்னா என்னண்ணே அர்த்தம்?’

வெற்றி மாறன் கடிந்தான்.

‘நீங்க அழுது எங்க எல்லாரயும் அழ வைக்கிறீங்க. மொதல்ல இவர பத்திரமா வெளியெ கூட்டிட்டுப் போங்க.’

யாரிடமோ சத்தமாகச் சொன்னான், இயக்குனர் ராம்.

’வாங்க சுகா’. இயக்குனர் சசி கைப்பிடித்து வெளியே கொணர்ந்தார்.

‘சுகா! இந்தாங்க. கொஞ்சம் மோர் சாப்பிடுங்க’.

இயக்குனர் விக்ரமன் கொடுத்தார்.

‘!என்னண்ணே இது? சின்னப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு?’

தோளைப் பிடித்து அணைத்துச் சொல்லும் போதே அடக்க முடியாமல் அழுது என் மார்பில் சாய்ந்தான், இயக்குனர் சீனு ராமசாமி.

மாலையில் ராஜா ஸாரிடமிருந்து ஃபோன்.

‘என்னய்யா? பத்திரமா அனுப்பி வச்சுட்டீங்களா?’

பதில் சொல்லாமல் அழுதேன்.

புரிந்து கொண்டு மறுமுனையில் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,

‘சரி சரி. நாளைக்கு வா’ என்றார்.

நாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். இனி அவர்தானே ’வாத்தியார்’!

post

சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்

’கே.ஏ.அப்பாஸ்தான் அதுக்குக் காரணம். இன்னைக்கும் ராஜ்கபூர் படங்கள்லயே ‘மேரா நாம் ஜோக்கர’ அதானெ நம்மால மறக்க முடியல. அப்பாஸ லேசுப்பட்டவன்னு நெனச்சுராதெ. ‘ஆவாரா’வும் அவன் கததான்’. சஞ்சீவி மாமா இப்படித்தான் திடீரென பாதியிலிருந்து பேசத் துவங்குவார். அதற்கு முந்தைய நாளோ, முந்தைய சந்திப்பிலோ எங்களது உரையாடலின் தொடர்ச்சியாக, விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் பேசிக் கொண்டேபோவார். அவர் பேசப் பேசத்தான் எனக்கு முதல்நாள் என்ன பேசினோம் என்பது மெல்ல நினைவுக்கு வரும். சஞ்சீவி மாமா பேசுவது போலவே அவரைப் பற்றிய தகவலொன்றும் இப்படி திடீரென்று வந்தது.

ஒருவாரமாக திருநெல்வேலியிலேயே இருந்தவன், சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்த்திருக்கலாம்தான். இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கப் போகிறோமே, சென்னைக்குக் கிளம்புமுன் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தது, எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை தொலைபேசியில் வந்த தகவல் உணர்த்திவிட்டது. இத்தனைக்கும் டவுணிலிருந்து ஒரு அழுத்து அழுத்தினால் பதினைந்து நிமிடங்களில் பாளையங்கோட்டை கோபால்சாமி கோயில் பக்கம் போய் விடலாம். அதற்குப் பக்கத்தில்தான் சஞ்சீவி மாமாவின் வீடு. பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியிலிருந்து பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருக்கும் போது, சமாதானபுரம் பஸ்ஸ்டாப் பக்கத்தில் ‘காதி வஸ்திராலயத்தில்’ சஞ்சீவி மாமாவின் தலை தெரிந்தால் உடனே இறங்கி விடுவேன். அருகில் போய் ‘மாமா’ என்றழைத்தாலும் உடனே ஏதும் பேசிவிட மாட்டார். ஒரு சின்ன சிரிப்பைக் கூட எதிர்பார்க்க முடியாது. சில நிமிடங்கள் கழித்து, அவராகப் பேசத் தொடங்குவார். முரட்டு கதரில் முழுக்கைச் சட்டையும், கதர் பேண்டுமே சஞ்சீவி மாமாவின் உடை. நடுமுதுகு வரைக்கும் புரளும் நீண்ட தலைமுடி. பின்னால் இருந்து பார்க்கிறவர்கள், திருநவேலி ஊருக்குள் பேண்ட் சட்டையில் ஒரு பெண் போகிறாள் என்று சந்தேகித்து முன்னால் வந்து பார்த்து, சஞ்சீவி மாமாவின் தொங்கு மீசையைப் பார்த்து முகம் கோணி, நாணி பின்வாங்குவதை பலமுறை பார்த்து சிரித்திருக்கிறேன். மாமாவுடன் அவரது ராஜ்தூத் பைக்கின் பின்னால் உட்கார்ந்து ஒருமுறை கிருஷ்ணாபுரம் சென்று கொண்டிருக்கும் போது, மற்றொரு பைக்கில் ஒரு இளைஞன் எங்களை ரொம்ப நேரமாகப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தான். கூந்தல் பறக்க மாமா பைக் ஓட்டுவதைப் பின்னால் இருந்து பார்த்தவன், ஒரு முடிவோடு எங்களை முந்தாமல் வந்து கொண்டிருந்தான். இதை புரிந்து கொண்ட மாமா, வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்தார். ஆனாலும் அவன் அசரவில்லை. கிருஷ்ணாபுரம் வந்தவுடன் மாமா, ஓரமாக பைக்கை நிறுத்தியபிறகு, வேறு வழியில்லாமல் கடந்து சென்றபடி திரும்பிப் பார்த்தவன், தன்னை மறந்து ‘ச்சை’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கி பறந்தான்.

அன்றைக்கு முழுவதும் கிருஷ்ணாபுரம் சிற்பங்களை சஞ்சீவி மாமா புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவைதான். ஆனால் அவற்றை சஞ்சீவி மாமாவின் புகைப்படங்களில் அவரது கேமரா கோணங்களில் பார்க்கும் போது, அச்சிற்பங்கள் அனைத்தும் ஓர் இனம்புரியாத அழகும், உயிர்ப்பும் அடைந்து விடும். சிற்பங்கள் மட்டுமில்லை. மனிதர்களும்தான். மாமாவின் புகைப்படங்களில் சாலையோரத்தில் நுங்கு விற்பவர்கள், ரைஸ்மில்லிலிருந்து மரப்பொடி சுமந்து திரும்புபவர்கள், திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போட்டுவிட்டு சந்தனத் தலையோடு பேரூந்தின் ஜன்னலோரம் தூங்குபவர்கள், சின்ன டிரான்ஸிஸ்டரில் பாட்டு கேட்டபடியே மார்க்கெட் பூக்கடையில் பூ சுற்றிக் கொண்டிருக்கும் பெண்கள், வேண்டா வெறுப்பாக புத்தப்பை சுமந்து வாடிய முகத்துடன் தளர்ந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மாலையில் பள்ளி முடிந்து குதூகலத்துடன் துள்ளலாக நடந்து வரும் அதே குழந்தைகள் என சஞ்சீவி மாமாவின் கேமராவில் சிக்கிய முகங்கள் ஏராளம்.

கேமரா மட்டுமல்ல. கிதார் என்னும் வாத்தியத்தை எனக்கு முறையாக அறிமுகப்படுத்தியவரும் சஞ்சீவி மாமாதான். அதற்கு முன்னால் கிதார் என்றால் எனக்கு ’மூடுபனி’ திரைப்படத்தின் ‘என் இனிய பொன்நிலாவே’ பாடலில் பிரதாப் போத்தன் கையிலும், இன்னும் வேறு சில ஹிந்தி திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். கிதாரில் எத்தனை வகைகள் உள்ளன, அவை என்னென்ன போன்றவற்றை சஞ்சீவி மாமாதான் விளக்கினார். மாமாவிடம் நான்கைந்து கிதார்கள் இருந்தன. ’இது அகௌஸ்டிக், இது எலக்ட்ரிக், இப்படி வாசிக்கறது லீட் கிதார், இப்படி வாசிச்சா பாஸ்’. இவை போக சின்ன கிதார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த மாண்டலினும் மாமாவிடம் இருந்தது.

‘நம்ம ஊர்ல எல்லா பயலுவளும் பேஸ் கிதார்னு சொல்லுதானுவொ. பாஸ் கிதார்னுதான் சொல்லணும்’.

மாமா திருத்துவார். தேவ் ஆனந்தின் ‘Guide’ படப்பாடலான ‘தேரே மேரே சப்னே’ பாடலையெல்லாம் கிதாரில் வாசிக்க முடியும் என்பது, சஞ்சீவி மாமா வாசிக்கும்போதுதான் தெரிந்தது. நிறைய பழைய ஹிந்தி பாடல்களை கிதாரில் வாசித்து காண்பிப்பார். தமிழ்ப் பாடல்களும் வாசிப்பார்தான். அப்படி மாமா அடிக்கடி தன்னை மறந்து ஒரு பாடலை ரகசியக் குரலில் ‘என் கானம் இன்று அரங்கேறும்’ என்று பாடியவாறே ரசித்து வாசிப்பார். அதற்கு முன்னர் அந்தப் பாடலை நான் கேட்டதே இல்லை. ‘இந்தப் பாட்ட மட்டும் இல்ல மாப்ளெ . . இந்தப் படத்தயும் ஒரு பய பாக்கல. படம் பேரு ‘ஈரவிளிக்காவியங்கள்’. ஒவ்வொரு முறை அந்தப் பாடலை வாசித்து முடிக்கும் போதும் ’ராஸ்கல்’ என்று முணுமுணுக்க மாமா தவறுவதில்லை.

நான்கைந்து வீடுகள் உள்ள ஒரு காம்பவுண்டின் ஒரு மாடியறையில் மாமா தனியாகவே இருந்தார். மாமாவின் மனைவி எதிரே உள்ள பெரிய வீட்டில் தனது சகோதரர்களுடன் வசித்தார். சஞ்சீவி மாமாவுக்கும், அத்தைக்கும் பேச்சு வார்த்தை அறவே இல்லாமல் போனதற்கு அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் போனதுதான் காரணம் என்று ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். ஒரே ஒருமுறை இது பற்றிப் பேசும் போது மாமா தனக்குத் தானே சொல்வது போல, ‘எல்லா டெஸ்ட்டும் எடுத்து பாத்தாச்சு. கம்ப்ளெயிண்ட் எண்ட்ட இல்லன்னு எல்லா டாக்டரும் சொல்லிட்டாங்க. அதுல ஒங்க அத்தைக்கு தாங்கல’ என்றார். அதற்கு ஏற்றாற் போலத்தான் அத்தையின் நடவடிக்கைகளும் இருந்தன. அத்தையின் தகப்பனார் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் போதுமான அளவுக்கு இருந்ததால், யாரையும் எதிர்பார்க்காமல், வீட்டு வாடகைகள், நிலபுலன்கள் மூலம் வரும் வருமானத்தை வைத்து தன் சகோதரர்களின் குடும்பங்களையும் கவனிக்கும் அளவுக்கு அத்தை செழிப்புடனே வாழ்ந்து வந்தார். மாமாவைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் ‘அவன்’ என்று ஒருமையிலேயே சொல்லுவார். மாமாவை விட அத்தை ஒரு வயது மூப்பு என்றும் ஒரு தகவல் உண்டு. ‘என்ன சொல்லுதான் ஒன் மாமன்காரன்?’ ஆனால் என்னிடத்தில் பாசமாக இருப்பார். வாய் நிறைய ’மருமகனே’ என்றழைப்பார். ‘நீ பாட்டுக்கு மச்சுல இருந்து அரவமில்லாம எறங்கி அவன் கூட ஓட்டலுக்கு கீட்டலுக்கு போயிராதெ. சாப்ட்டுட்டு போ’ என்பார். ‘என்னய மட்டும் அத்தைக்கு எப்பிடி மாமா புடிச்சு போச்சு?’ வியப்புடன் மாமாவிடம் ஒருமுறை கேட்டேன். ‘நீ என்னய மாரி இல்லாம சாமி கும்பிடுதெல்லா? அதான்’ . சிரித்தபடி சொன்னார்.

சஞ்சீவி மாமாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. வைணவ குடும்பத்தில் பிறந்தவரான மாமா, திருநெல்வேலி மாவட்டத்திலுல்ள ‘நவதிருப்பதி’ கோயில்கள் அனைத்துக்கும் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு வந்தாலும் அவரது கேமராவுக்குத்தான் வேலை. சிற்பங்கள், அக்ரஹாரத்து திண்ணைகள், ஆடுமாடுகள், மண் தெருக்கள், பழைய வீடுகள், டூரிங் தியேட்டர் போஸ்டர்கள் என எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார். தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயிலுக்கு ஒருமுறை மாமாவுடன் சென்றிருந்த போது மாமா கோயிலுக்குள் வரவேயில்லை. ‘நீ போயிட்டு வாடே’ என்று சொல்லிவிட்டு கேமராவுடன் வாசலிலேயே நின்று கொண்டார். இருட்டுக்குள் இருந்த பெருமாளைப் பார்த்து

‘ஓடும் புள்ளேறி சூடும் தன்துழாய்

நீடுநின்றவை ஆடும் அம்மானே

அம்மானாய் பின்னும் எம்மாண்பும் ஆனான்

வெம்மாவாய் கீண்ட செம்மா கண்ணனே’

என்று உருகி வணங்கி விட்டு வெளியே வந்தால், தயிர் விற்கும் ஒரு மூதாட்டியுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே அவளை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார், மாமா. ஒருசில தினங்களில் அவற்றை பிரிண்ட் போட்டு காண்பித்தபடி சொன்னார். ‘இந்த அம்மா மொகத்துல இருக்குற சுருக்கங்கள பாத்தியா? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு கத சொல்லுது, பாரு. அவ ஸ்கின் டோன கவனி’.

***************** ******************** *********************

வழக்கமாக மாமா தென்படும் ‘காதி வஸ்திராலயம், காளி மார்க் கேண்டீன், வ.உ.சி மைதானம்’ போன்ற எந்த இடத்திலும் மாமாவை சில நாட்கள் பார்க்க முடியாமல் போனது. எங்கெல்லாமோ தேடிப் பார்த்து விட்டு அத்தையிடமும் கேட்காமல் விட்டு விட்டேன். ஒரு இடைவெளிக்குப் பிறகு மாமாவின் வீட்டுக்குச் சென்ற போது, மாமாவின் வீட்டில் ராஜ்தூத் நின்று கொண்டிருந்தது. உடனே மாமாவைப் பார்க்க சென்றால் அத்தை ஏசுவார் என்பதால் சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, மாடியறைக்குச் சென்றேன். குமார் கந்தர்வாவின் ஹிந்துஸ்தானி சங்கீதம் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கமாஸ் போன்ற ஏதோ ஒரு வடநாட்டு ராகம். மாமா ஒரு புகைப்படத்தை எடுத்து என் முன்னால் இருந்த சிறிய மர மேஜையில் போட்டார். மாமாவால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்துகிற ஒரு பெண்ணின் புகைப்படம். வியப்புடன் எடுத்துப் பார்த்தேன். ‘யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’. இந்தக் கேள்விதான் என்னிடமிருந்து வரும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தவராக, ‘அவளேதான்’ என்றார், மாமா. ‘அவளேதான்’ என்று அவர் சொன்னது ஸ்மிதா பாட்டீலை இல்லை. சுமி அக்காவை. சுமி அக்காவை சஞ்சீவி மாமா, ஸ்மிதா பாட்டீலாகவேதான் நினைத்தார்.

அருஞ்சுணை காத்த அய்யனார் கோயிலில் வைத்து சுமி அக்காவை முதன் முறையாக எனக்கு அறிமுகம் செய்து வைக்கும் போதும் ‘இது ஸ்மிதா’ என்றார். பார்த்த மாத்திரத்திலேயே ஆண்பிள்ளைகள் மாதிரி, என் கைகளைப் பற்றிக் குலுக்கியபடி சுமி அக்கா, ‘எப்டி இருக்கெ மக்கா?’ என்றாள். கழுத்தில், காதில் எதுவும் இல்லை. பளிச்சென்ற பவுடர் பூசிய முகம். நெற்றியில் கூர்ந்து கவனித்தால் தென்படுகிற ஒரு துளி சாந்துப் பொட்டு. ’நீங்க சோஃபியா பவுடர் போட்டிருக்கீங்க. கரெக்டா?’ என்றேன். சட்டென்று சிரித்தபடி ’அடப்பாவி’ என்றாள். சுமி அக்காவுக்கு என்னை ரொம்பவே பிடித்து போய்விட்டது. என்னைவிட நான்கு வயது அதிகமான அவளை ‘சுமி அக்கா’ என்று இயல்பாக என்னால் கூப்பிட முடிந்தது.

சுமி அக்காவுக்கு திருச்செந்தூர் பக்கம் என்றார் மாமா. தாய், தந்தை இல்லாத சுமி அக்கா முதுகலை பட்டப்படிப்பு முடித்திருந்தாள். ஆதரவற்றோர் விடுதி ஒன்றிற்கு மாமா சென்றிருந்த போது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சுமி அக்காவின் வருகைக்குப் பிறகு சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. மாமாவும் ‘என்னடே ஆளையே காணோம்?’ என்று சம்பிரதாயமாகக் கேட்பதோடு சரி. ஒருநாள் மாமா தன் கிதார் ஒன்றின் கம்பிகளை சரி பார்த்துக் கொண்டிருக்க, நான் அவரது புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தேன். அதுவரைக்கும் மாமாவின் மாடியறைக்கு வந்தேயறியாத அத்தை, மூச்சு வாங்க மாடியேறி வந்து, அந்த அறையில் ஃபிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்த சுமி அக்காவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை எடுத்து கீழே போட்டு சுக்குநூறாக உடைத்தார். வேறேதும் பேசாமல் கீழே இறங்கி சென்று விட்டார். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு மாமா எழுந்து உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுக்க குனிந்தார். ‘நான் எடுக்கென் மாமா’. மாமாவைத் தடுத்து விட்டு, ஒவ்வொரு கண்ணாடித் துண்டாகப் பொறுக்கி எடுத்தேன். ’பூமிகா’ திரைப்படத்தின் ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்தும் விதமாக கழுத்திலும், காதுகளிலும் நகையணிந்து சிரித்தபடி சுமி அக்கா இருக்கும் கிழிந்த, கசங்கிய புகைப்படத்தை மாமாவின் மேஜை டிராயரில் வைத்தேன். மாமா என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் விதமாக கிடார் கம்பிகளில் மும்முரமாக ஏதோ செய்யும் பாவனையில் இருந்தார். அதற்குப் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக எனக்கும் சஞ்சீவி மாமாவுக்குமான உறவு குறைந்து போனது. சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குப் போகும் போதெல்லாம் சஞ்சீவி மாமாவைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். பிறகு ஏதேதோ காரணங்களால் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மாமாவின் வீட்டு காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே நுழையும் போது ஏதோ ஒரு புதிய இடத்துக்கு வருவது போல தோன்றியது. அத்தை வீட்டு வாசலில் ஷாமியானா போட்டு நான்கைந்து பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. வீட்டுக்கு உள்ளே அத்தை சோஃபாவில் சாய்ந்திருந்தார். முன்பை விட உடல் கனம் கூடியிருந்தது. உடன் ஏதேதோ புதிய மனிதர்கள். என்னைப் பார்த்ததும் உடனே அடையாளம் பிடிபடாமல், பிறகு சுதாரித்து, சிநேகப் பார்வை பார்த்து ‘வந்துட்டியா? ம்ம்ம், போ. அங்கனயேதான்’ என்று மாடியை காண்பித்தார்.

சுற்றிலும் கிதார்கள்,பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி உட்பட பழைய புத்தகங்களின் வாசனையுடன் கண்ணாடிப் பெட்டிக்குள் சஞ்சீவி மாமா தூங்குவது போல கண்மூடி படுத்திருந்தார். நெற்றியில் சூர்ணம் இடப்பட்டிருந்தது. அருகில் அத்தையின் சகோதரர் அமர்ந்திருந்தார். ‘வெயில் தாள எடுத்துரலான்னு இருக்கொம்’ என்றார். நான் பார்க்காத காலங்களில் மாமாவின் முகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என ஆராயும் விதமாக மாமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘நீங்கள்லாம் மெட்ராஸ்ல இருக்கணும் மாமா’. பலமுறை சொல்லுவேன்.

‘மெட்ராஸ்ல இருந்து?’ எதிர்க்கேள்வி கேட்பார்.

‘பெரிய ஆளா ஆயிரலாம்லா’. சிறுபிள்ளைத்தனமாகச் சொல்லியிருக்கிறேன்.

‘பெரிய ஆளுன்னா என்னதுடே?’. என்பார்.

அதற்குள் கீழே இருந்து சத்தம் கேட்டது. ‘நவநீதா சீக்கிரம் கீள வா. அந்த முண்ட வந்திருக்கா’.

அத்தையின் இன்னொரு சகோதரரின் குரலது. என்னருகில் இருந்தவர், ‘இந்தா வாரேன்’ என்று பாய்ந்து செல்லவும், நிலைமையை உணர்ந்து அவருக்குப் பின்னால் மாடிப்படிகளில் இறங்கி ஓடினேன். காம்பவுண்டுக்கு வெளியே அழுதபடி சுமி அக்கா நின்று கொண்டிருந்தார். உடன் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். சிறு வயது புகைப்படத்தில் சஞ்சீவி மாமா இருப்பது போலவே இருந்தான். அத்தையின் சகோதரர்கள் இருவரும் சுமி அக்காவை, ‘எங்கெட்டி வந்தெ?’ என்று சத்தம் போட்டபடியே நெருங்கினார்கள். அவர்கள் சுமி அக்காவை எதுவும் செய்துவிடக் கூடாதே என்கிற பதைபதைப்பில் நான் அவர்களைத் தாண்டிச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்ட சுமி அக்கா, ‘மக்கா’ என்று என் கைகளைப் பிடித்து, என் மீது சாய்ந்த படி கதறி அழுதாள். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த அத்தை, முறைத்தபடி நிற்கும் தன் சகோதரர்களிடம், ‘எல, இங்கெ வாங்க’ என்று அதட்டி அழைத்தார். சுமி அக்காவுடன் நிற்கும் என்னைப் பார்த்து, ‘மருமகனே, அவள மச்சுக்குக் கூட்டிட்டு போ’ என்றார்.

சொந்த ரயில்காரியின் தகப்பன் . . .

’நீங்க எழுதின தாயார் சன்னதி புத்தகத்துக்கு கோவைல ஒரு வெறி பிடித்த வாசகர் இருக்காரு. அவர் பேரு ஜான் சுந்தர்’.

மூன்றாண்டுகளுக்கு முன்பே சகோதரர் ‘மரபின் மைந்தன்’ முத்தையா அவர்கள் சொல்லி ‘ஜான் சுந்தர்’ என்ற பெயரை அறிந்திருந்தேன். அதன்பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ‘ஜான்சுந்தர்’ என்னும் பெயர், எனக்கும், மரபின் மைந்தனுக்குமான உரையாடல்களில் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துச் சென்றிருக்கிறது. கூடுதல் தகவலாக ஜான் சுந்தர் ஒரு இசைக்கலைஞர் என்பதும், ‘இளையநிலா’ ஜான்சுந்தராக கோவையில் அறியப்படுகிற ஒரு மெல்லிசை மேடைப் பாடகர் என்பதையும் அறிய நேர்ந்தது. கடந்த மாதத்தில் ஒருநாள் மரபின் மைந்தனின் தொலைபேசி அழைப்பு.

‘அடுத்த மாதம் 2ஆம் தேதி நீங்க கோவைக்கு வரணுமே!’ என்றார்.

என் தகப்பனாருக்கு நெருக்கமான மரபின் மைந்தன் அவர்கள், எங்கள் குடும்ப நண்பர். உரிமையுடன் நான் பழகுகிற வெகுசிலரில் முதன்மையானவர். காரணமே கேட்காமல், ‘வருகிறேன்’ என்றேன். அதன் பிறகுதான், ‘நம்ம ஜான்சுந்தரோட கவிதைப் புத்தக வெளியீட்டு விழா. அவருக்கு ஆதர்ஸமான நீங்க வரணும்னு பிரியப்படறாரு. இருங்க, ஒரு நிமிஷம். ஜான் பேசறாரு’.

’வணக்கம்ண்ணா. நீங்க அவசியம் வரணும்ணா.’ மெல்லிய குரலில் பேசினார், ஜான். ஒரு மேடைப் பாடகனின் குரலாக அது ஒலிக்கவில்லை. பேசிய இரண்டு வரிகளிலேயே கூச்சமும், சிறு அச்சமும், பணிவும் கலந்த ஜான் சுந்தரின் குணாதிசயத்தை உணர முடிந்தது. இரண்டொரு தினங்களில் ஜானிடமிருந்து அவரது ‘சொந்த ரயில்காரி’ புத்தகம் வந்து சேர்ந்தது. கவிதைப்புத்தகங்கள் பெரும்படையாகத் திரண்டு, விடாமல் என்னைத் துரத்தி மூச்சிரைக்க ஓட வைத்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம், இது. வீடு தேடி வரும் மனிதர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் முகம் பார்த்து இயல்பாகப் பேச முடிவதில்லை. எந்த நொடியில் அவர்களது பையிலிருந்து கவிதைத் தொகுப்பை உருவி, நம்மைச் சுட்டுப் பொசுக்குவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வந்தவர், பையிலிருந்து கவிதைத் தொகுப்புக்கு பதிலாக திருமண அழைப்பிதழை எடுத்துக் கொடுத்த பிறகே என் வீட்டு நாற்காலியிலேயே என்னால் இயல்பாக உட்கார முடிகிறது. இந்த அச்சம் கவிதைகளின் பால் அல்ல. கவிதைகள் என்னும் பெயரில் வரி விளம்பரங்களை எழுதிக் கொண்டு வந்து நம்மிடம் நீட்டும் அசடுகளினால் ஏற்பட்ட கலக்கம். அந்தக் கலக்கம் ‘சொந்த ரயில்காரி’யிடம் எனக்கில்லாமல் போனதற்குக் காரணம், மரபின் மைந்தன்தான். அநாவசியப் பரிந்துரைகள் எதையும் அவர் செய்வதில்லை. சிலசமயம் அவசியப் பரிந்துரைகளையும் அவர் தவிர்ப்பார் என்பதை அறிவேன். தான் படித்த நல்ல புத்தகங்களை நான் கேட்காமலேயே எனக்கனுப்பி வைப்பவர், அவர். பதினேழு ஆண்டுகளில் அவர் எனக்கனுப்பிய புத்தகங்களின் எண்ணிக்கை இன்னும் ஐம்பதைத் தாண்டவில்லை. மரபின் மைந்தனின் ரசனையின் மேல் எனக்குள்ள நம்பிக்கையின் காரணமாகவே ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன்.

’இளம்பிராயத்தில் ஞாயிறு மறைகல்வி வகுப்பில் பாடலொன்றை பாடியவனுக்கு எவர்சில்வர் டிபன் பாக்ஸையும், பிளம்கேக் ஒன்றையும் ரெஜினா சிஸ்டர் கொடுத்ததுதான் மாபெரும் தவறு. தான் ரொம்பப் பிரமாதமாகப் பாடுவதாக அன்றிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பித்துக்குளி. உண்மையில் இது சுமாராகத்தான் பாடும்.தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பாடுவதைக் கேட்டு பொறாமையில் கண்ணீர் விடும். அப்புறம் ‘நான் வேறு ஏதாவது வேலைக்குப் போனால் என்ன?’ என்று கேட்கவும் செய்யும்’.

முன்னுரையில் தன்னைப் பற்றி இப்படி எழுதியிருந்தார், ஜான் சுந்தர். இந்த வரிகளைப் படித்தப் பிறகு என்னால் தயக்கமில்லாமல் புத்தகத்துக்குள் செல்ல முடிந்தது.

’யேசுவை அப்பா என்றுதான் நீயும் அழைக்கிறாய்
அவ்வாறே சொல்ல என்னையும் பணிக்கிறாய்
தாத்தா என்பதுதானே சரி. வினவுகிறாள் மகள்
விழிக்கிறோம், நானும் யேசுவும்’.

‘உறங்கியபின்
போட்டாலென்ன ஊசியை எனக்கேட்டு
விசும்பலைப் போர்த்திக் கொண்டு
தூங்கிப் போனாள்.
விடிந்தும் தீராவலி எனக்கு’.

இதுபோன்ற எளிமையான கவிதைகள், புத்தகத்தை முழுமையாக வாசிக்க உதவின.

கோவைக்குச் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரெஸ் ரயிலில் ஏறும்போது எனக்கிருந்த உற்சாகத்தை ’சொந்த ரயில்காரி’யே எனக்கு வழங்கியிருந்தாள். அதிகாலை ஐந்து மணிக்கு கோவை ரயில் நிலையத்தில், என் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு, ‘அண்ணா! எங்க இருக்கீங்க?’ என்று கைபேசியில் அழைத்த ஜானை முதன்முதலில் சந்தித்த போது, அவர் குரல் மூலம் நான் யூகித்து வைத்திருந்த உடல்மொழி கலையாமல் இருந்தார். விடுதியறைக்குச் சென்று உடையைக் களையாமல், பல் துலக்காமல் தொடர்ந்து தேநீர் வரவழைத்துக் குடித்தபடி, அந்தக் கவிஞனுக்குள் இருந்த பாடகனை மெல்ல மெல்லத் தூண்டிக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று குச்சிகளின் விரயத்துக்குப் பின், பற்றிக் கொண்டு சுடர் விட்டது, விளக்கு. பிறகு மூன்றிலிருந்து நான்குமணிநேரம் வரைக்கும் நின்று ஒளிர்ந்தது. பத்து மணிவாக்கில் மரபின் மைந்தன், விடுதியறைக்குள் நுழைந்த போது ஜான் என்னோடு பழகத் துவங்கி பத்திருபது ஆண்டுகள் ஆகியிருந்தன.

மாலையில் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் செல்ல அந்தக் கால சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தன் அத்தானுடன் ‘நெல்லை லாலா ஸ்வீட்ஸ்’ மாரியப்பன் அண்ணாச்சி வந்திருந்தார். 1978இலிருந்து கோவைவாசியாக இருக்கும் மாரியப்பன் அண்ணாச்சியின் பேச்சு திருநவேலியின் ரதவீதிகளில் நடமாட வைத்தது.

‘அப்பதயே வரலாம்னு பாத்தென். நீங்க தூங்குவேளோ, என்னமோன்னுதான் வரல, பாத்துக்கிடுங்க . . .’

’மூங்கில் மூச்சு’ல அப்படியே எங்க எல்லாத்தையும் ஊருக்குக் கொண்டு போயிட்டியள்லா’.

மாரியப்பன் அண்ணாச்சி வரும்போது, என்னுடன் கோவையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஓர் இளைஞன் இருந்தான். ’இவாள் யாரு?’ பவ்யமாக விசாரித்த மாரியப்பன் அண்ணாச்சியிடம், ‘மூங்கில் மூச்சுல வர்ற குஞ்சுவின் மகன் இவன்’ என்று நான் சொல்லவும் மாரியப்பன் அண்ணாச்சியுடன் சேர்ந்து கொண்டு, சிவாஜி ரசிகரான அவரது அத்தான் ‘சிவாஜி’ மாதிரியே கண்களை உருட்டி ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் முழித்தார்.

நிகழ்ச்சிக்குக் கிளம்பி விடுதியின் வாசலுக்கு நான் வரவும், அண்ணாச்சி பரபரப்பாகி, ஃபோனில் பேசினார்.

‘அவாள் கெளம்பி கீளெ வந்துட்டா. சீக்கிரம் வண்டிய கொண்டுட்டு வா’.

‘ஏறுங்க’. காரில் என்னை ஏற்றி, தானும் ஏறிக் கொண்டார். கார் சக்கரங்கள் உருளத் துவங்கிய ஏழாவது நொடியிலேயே, ‘எறங்குங்க’ என்றார். ‘ஏன் அண்ணாச்சி? வேற கார்ல போறோமா?’ என்று கேட்கத் தோன்றும் முன்பே, நான் தங்கியிருந்த விடுதியின் அடுத்தக் கட்டிடத்தில்தான் நிகழ்ச்சி என்பது தெரிந்து போனது.

அரங்கத்தில் ‘கவியன்பன்’ கே.ஆர்.பாபு, ‘வெள்ளித் திரையில் கோவை’ என்கிற தலைப்பில் புள்ளிவிவரங்கள் மூலம் அசரடித்துக் கொண்டிருந்தார். பேச்சை நிறுத்தி எனக்கு வணக்கம் சொன்ன பாபுவுக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு, கவிஞர் கலாப்ரியா மாமாவை வணங்கினேன். ‘மருமகனே’ என்று என் கைகளைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார், மாமா.

தேவ. சீனிவாசன் விழாவைத் தொகுத்து வழங்க, ரத்தினச் சுருக்கமாக வரவேற்புரை நிகழ்த்தினார் இளஞ்சேரல். பிறகு ’எனக்கு பேசத் தெரியாது’ என்று சொல்லியபடி நிதானமாகப் பேசத் துவங்கினார் கலாப்ரியா மாமா. விசேஷ வீடுகளில் இளையதலைமுறை சொந்தங்கள் சூழ்ந்திருக்க, தமது அனுபவச்சாரங்களை அவர்களோடு சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கிற பெரியவரின் வாஞ்சையான குரலாக கவிஞர் கலாப்ரியாவின் குரல் அத்தனை பிரியமாக அந்த அரங்கில் ஒலித்தது.

அதன்பிறகு சுருக்கமாகப் பேசி அமர்ந்த மாரியப்பன் அண்ணாச்சிக்குப் பிறகு கவிஞர் லிபி ஆரண்யா பேச வந்தார். லிபியின் குரலிலும், தோற்றத்திலும் அப்படி ஒரு மிடுக்கு. ஆனால் பேசிய விஷயங்களில் அத்தனை கவிநயம். கொஞ்சம் கோபம், கொஞ்சம் வியப்பு, கொஞ்சம் எரிச்சல், நிறைய கனிவு என கலவையாக அமைந்தது லிபியின் பேச்சு. விழாவில் பேசிய அத்தனை பேரில் லிபி ஆரண்யாவின் பேச்சை மட்டும் அருகில் வந்து தன் செல்ஃபோனில் வீடியோ மூலம் பதிவு செய்து கொண்டார் கவிஞர் சாம்ராஜ். ஒருவேளை லிபியைப் பற்றி ஏதும் டாக்குமெண்டரி எடுக்கிறாராக இருக்கும். நான் எப்போதும் வியந்து ரசிக்கும் மரபின் மைந்தனின் விஸ்தாரமான பேச்சு அன்றைக்கு அத்தனை கச்சிதமாக, சுருக்கமாக அமைந்து என்னை திகிலுக்குள்ளாக்கியது. மரபின் மைந்தன் அதிகநேரம் பேசுவார் என்று எதிர்பார்த்து, சற்று ஆசுவாசமாக உட்கார்ந்திருந்த என்னை அதிகநேரம் பேச வைக்க வேண்டுமென்பதற்காகவே மரபின் மைந்தன் தன் உரையைச் சுருக்கிக் கொண்டதாகச் சொன்னார். ஏற்கனவே ‘உன் பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கில்லாமல் போனதே’ என்று வண்ணதாசன் அண்ணாச்சி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பேச நினைத்ததையெல்லாம் லிபி ஆரண்யா பேசிவிட்டாரே! நாம் என்ன பேசப் போகிறோம் என்கிற கவலையில் இருந்த எனக்கு அப்போதைக்கு ஆறுதலாக இருந்தது, என் கைக்கடிகாரம் மட்டுமே. எட்டு மணி பத்து நிமிடங்கள் என்று காட்டியது. எட்டரைக்கு அந்த ஹாலை ஒப்படைக்க வேண்டும் என்று ஏற்கனவே மரபின் மைந்தன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்து, படபடப்பைக் குறைத்தது.

’சொந்த ரயில்காரி’ புத்தகத்தை நான் படித்திருக்கிறேன் என்பதை எல்லோரும் நம்பும் விதமாக புத்தகத்திலுள்ள ஒருசில கவிதைகளையும், குறிப்பாக ஜான் சுந்தரின் முன்னுரையையும் குறிப்பிட்டுச் சொல்லி அமர்ந்தேன். என் பேச்சின் முடிவில், ஜான்சுந்தரின் இளைய வயதிலேயே காலமாகிவிட்ட அவரது தகப்பனாரைப் பற்றி ஒருசில வார்த்தைகளைச் சொல்லியிருந்தேன். அடுத்து ஏற்புரை சொல்ல வந்த ஜான், ‘சிரிக்க சிரிக்கப் பேசிக்கிட்டே வந்து கடைசில இப்படி பலூனை உடச்சு விட்டுட்டீங்களேண்ணே’ என்றார்.

புத்தகத்தின் முன்னுரையில் கலங்க வைத்த ஜான், தனது ஏற்புரையிலும் அதையே செய்தார். தன் சகோதரியை, தகப்பனாரை, தன் பள்ளியை நினைவு கூர்ந்த போதெல்லாம் அவரிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. இயல்பான நெகிழ்ச்சி, அது. நன்றி சொல்லும் போதும், மற்றவரை வியக்கும் போதும், சூப்பர் சிங்கரில் ரஹ்மான் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ’தி ஒன் அண்ட் ஒன்லி’ ஸ்ரீநிவாஸ் ஸார் பிரத்தியேகமாகக் காட்டும் அபிநயம் போல் அல்லாமல், அத்தனை இயல்பான உணர்ச்சியை ஜானின் முகத்திலும், உடல்மொழியிலும் பார்க்க முடிந்தது.

’சொந்த ரயில்காரி’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மனதுக்கு இணக்கமான பல மனிதர்களை சந்திக்க முடிந்தது. மிகுந்த நம்பிக்கையும், பிரமிப்பையும் அளிக்கிற கவிஞர் இசை, ’கடந்து செல்லும் எல்லாப் பெண்களையும் கடக்கவா முடிகிறது’ என்றெழுதிய, விகடன் விருது பெற்ற கவிஞர் லிபி ஆரண்யா, எல்லோரிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கும் இளஞ்சேரல், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மரபின் மைந்தன் சொல்லிச் சொல்லிக் கேட்டு பழக்கமான பெயரான கவியன்பன் கே.ஆர்.பாபு, மாரியப்பன் அண்ணாச்சி என பலர். நிச்சயம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த ஓவியர் ஜீவானந்தன் அண்ணாச்சி வராதது வருத்தம்தான்.

மறுநாள் ஈஷா யோகமையத்துக்கு அழைத்துச் சென்றதன் மூலம் மரபின் மைந்தன் வேறொரு விவரிக்க முடியாத அனுபவத்துக்கு என்னை இட்டுச் சென்றார். உடன் வந்த ஜான் சுந்தருக்கும், எனக்கும் அன்றைய நாள் முழுவதுமே புத்தம் புதிது. இது குறித்து போகிற போக்கில் சொல்லிவிட முடியாது. அப்படி சொல்லவும் கூடாது. மதியத்துக்கு மேல் நிகழ்ந்த சௌந்தர் அண்ணாவின் சந்திப்பும் அப்படித்தான். உணர்வுபூர்வமான, விவரிக்க முடியாத ஒன்று. சௌந்தர் அண்ணாவுடனான சந்திப்பும், ஈஷா யோக மைய அனுபவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உயர்ந்த அனுபவங்கள். பின்பொரு சாவகாசமான சந்தர்ப்பத்தில் விரிவாகப் பகிர வேண்டியவை.

அன்றைய இரவு நான் தங்கியிருந்த விடுதியறையை கவியன்பன் கே.ஆர். பாபு, மாரியப்பன் அண்ணாச்சி, ஜான் சுந்தர், மரபின் மைந்தன் ஆகியோருடன் கண்ணதாசனும், விஸ்வநாதனும், சௌந்தர்ராஜனும், சுசீலாவும், இளையராஜாவும் நிறைத்துக் கொண்டனர். மறக்க முடியாத அந்தப் பொழுதை யாருக்கும் வீடியோ பதிவு செய்யத் தோன்றாமல் போனது, மாபெரும் இழப்புதான். பசியைப் பொருட்படுத்தாமல், கலைய மனமில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்த எங்களின் இசை சம்பாஷனையை ஜான் சுந்தர் பாடிய ’பகல்நிலவு’ திரைப்படத்தின் ‘வாராயோ வான்மதி’ என்கிற ரமேஷின் பாடலுடன் முடித்துக் கொண்டோம்.

அதிகாலை விமானப் பயணத்தில் இசையின் ‘அதனினும் இனிது அறிவினர் சேர்தல்’ புத்தகத்தைப் படித்துக் கொண்டு வந்தேன்.

‘என்ன படிக்கிறீங்க?

பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இயக்குனர் ராம் கேட்டதற்கு கையிலிருந்த புத்தகத்தைக் காட்டிவிட்டு, ‘ஒனக்கொரு புத்தகம் தர்றேன். படிச்சு பாரு. நிச்சயம் உனக்கு புடிக்கும்’ என்று சொல்லி, பையிலிருந்த ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைக் கொடுத்தேன்.

சென்னைக்கு வந்து இறங்கிய பின்னும் மனம் கோவையில் இருந்தது. மாலையில் ஜான் சுந்தரிடமிருந்து ஃபோன்.

‘அண்ணா! நல்லபடியா வீட்டுக்குப் போயிட்டீங்களா? தூங்கினீங்களா?’ போன்ற சம்பிரதாய விசாரிப்புகள்.

‘ரெண்டு நாளும் சந்தோஷமா இருந்தேன், ஜான். ரொம்ப நன்றி’ என்றேன்.

நான் சற்றும் எதிர்பாராதவிதமாக ’நினைவுச் சின்னம்’ திரைப்படத்திலிருந்து ‘சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன’ என்ற பாடலை ஏனோ பாடினார். பாடி முடிக்கும் போது, அவர் குரல் தளும்பியிருந்தது. என்னிடம் வார்த்தையே இல்லை. உடனே ஃபோனை வைத்து விட்டேன்.

திறமைக்கு சற்றும் பொருந்தா குறைந்த சன்மானத்துடன், கனவுகளோடு, நனவுகளை மோதவிட்டு, வேடிக்கை பார்த்தபடி வாழ்ந்து வரும் கவியுள்ளமும், கலாரசனையும் கொண்ட அந்த மேடைப் பாடகன், எனக்கு நன்றி சொல்லும் விதமாக ஏன் இந்தப் பாடலைப் பாடினான்? எனக்கு ஏன் இந்தப் பாடல் என் தாயாரை நினைவுபடுத்துகிறது? நான் ஏன் இன்னும் அழுது கொண்டிருக்கிறேன்? காரணமே தெரியவில்லை. ஒருவேளை சொல்லத் தெரியாத, சொல்லி என்ன ஆகப்போகிறது என்கிற சலிப்பில் நான் சொல்லாமல் விட்டுவிடுகிற என் வாழ்வின் துயரங்கள்தான் காரணமா?

ஒன்று மட்டும் தோன்றுகிறது.

‘சமதளப்படிகளில் இறங்கும்
வித்தையறிந்திருக்கிறான்
பியானோ கலைஞன்’
என்று எழுதிய இந்தத் தாயளி ஜான் சுந்தரின் தொலைபேசி அழைப்பை இனி எடுக்கக் கூடாது.