விருந்தோம்பல்


Courtesy: The Hindu

ஒங்களால எங்க வீட்ல நடக்கக் கூடாததல்லாம் நடந்துக்கிட்டிருக்குங்க’. பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் தொலைபேசியில் சொன்னார். ’ஐயையோ! என்ன ஸார் ஆச்சு?’ பதறினேன். ‘பின்னே? நீங்க எங்க வீட்டுக்கு சாப்பிட வாரிய. அதான் அதிசயமா எங்க வீட்ல சைவ சமையல் நடந்துக்கிட்டிருக்கு. நானே போயி காய்கறில்லாம் வாங்கிட்டு வந்தேன்’ என்றார். மிகச் சமீபத்துப் பழக்கம். ஆனால் பல வருடங்களாக நெருங்கிப் பழகியது போன்ற உணர்வு. கலப்படமில்லாத அன்பைப் பொழியும் பேராசிரியர் எனக்கு ஃபோன் பண்ணுகிறார் என்றால், அவர் காரில் வத்தலகுண்டு பட்டிமன்றத்துக்கோ, நாகர்கோயிலில் ஏதேனும் சொற்பொழிவுக்கோ, இல்லை ஏதேனும் திரைப்படப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகவோ சென்று கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஆங்காங்கே வண்டிகள் சர் சர்ரென்று செல்லும் சத்தம் கேட்கும். இடையில் யாராவது வந்து பேச்சு கொடுப்பார்கள்.

‘ஐயா, நீங்கதானெ ஜெயா டி.வில ஜோசியம் சொல்றது?’

இதற்கிடையில் என்னிடமும் பேசுவார்.

பேராசிரியரிடம் எனக்குப் பிடித்த பண்பே, அவரது சுயஎள்ளல்தான். தன்னுடைய தொழில்நுட்ப அறிவு குறித்து அவருக்கும், எனக்குமான சம்பாஷணை, எப்போதுமே வேடிக்கைதான். எப்போது குறுஞ்செய்தி அனுப்பினாலும், உடனே ஃபோன் பண்ணுவார். ஆனால் தனக்கு வந்த குறுஞ்செய்தியைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் வைத்து விடுவார். ’ஏன் ஸார் எஸ் எம் எஸ்ஸுக்குப் போயி இப்படி பதட்டமடைறீங்களே!’ என்று கேட்டால், இப்படி சொல்லுவார். ‘சுகா, என்னதான் இப்ப நகர வாழ்க்கைக்குள்ள வந்துட்டாலும், நான்லாம் இன்னும் மனதளவுல கிராமத்தான்தான். சிறு வயசுல நம்ம ஊர்கள்லல்லாம் தந்தி வந்துட்டாலெ, ஊரே கூடி அழுகிற கலாச்சாரத்துல வளந்தவன். சட்டுன்னு மாறிட முடியுங்களா? ஒருமுற நான் வீட்ல இல்லாதபோது எனக்கு தந்தி வந்திருக்கு. தந்திய வாங்கி வச்சுக்கிட்டு ஊரே என் வீட்டுவாசல்ல காத்து நிக்குது. தெருமுக்குல என் பைக் திரும்பவும், ‘கே’ன்னு ஒரே கதறல். ஒருத்தரு என் பைக்கை வாங்கி ஸ்டாண்ட் போடறார். இன்னொருத்தர், என் கையப் புடிச்சு என் வீட்டுக்கு எனக்கே வழிகாட்டிக் கூட்டிட்டுப் போறாரு. வேற ஒரு அம்மா, வீட்டுக்குள்ள போயி தண்ணி கொண்டு வந்து குடுத்து, ‘மொதல்ல கொஞ்சம் தன்ணி குடிச்சுக்கப்பா’ங்குது. என் வீட்டுக்கு வந்து போற சொந்தக்காரங்க யாராயிருக்கும்னு அவங்களே ஆளாளுக்கு கற்பன பண்ணிக்கிட்டு, ‘தைரியமா இரு’ன்னு கண்ணீரோட, என் தோளத் தட்டிக் குடுக்க்றாங்க. கடைசில தந்தியப் பிரிச்சுப் பாத்தா, ‘போடிநாயக்கனூர் ப்ரோக்ராம் போஸ்ட்போண்ட்’னு வந்திருந்தது. ஆக எங்களப் பொருத்தவரைக்கும் இந்த எஸ் எம் எஸ்ஸையெல்லாம் நாங்க அந்தக் காலத்துத் தந்தியாத்தான் பாவிப்போம்’.

குறுஞ்செய்திக்கே இப்படியென்றால், மின்னஞ்சலுக்கு அவர் அடைகிற பதற்றம், அவர் வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர்களின் பதற்றத்தை விட அதிகம். ஒற்றை மின்னஞ்சல் மூலம், பேராசிரியரை எந்த ஊரிலிருந்தும் நேரிலேயே வரவழைத்து விடலாம். இத்தனைக்கும் ‘உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்’ என்கிற குறுஞ்செய்தி போதுமானது. மின்னஞ்சலைப் பார்த்திருக்கவே மாட்டார்.

‘அட! அத ஏன் கேக்குறீங்க சுகா! கமல் இப்படித்தான் அடிக்கடி, ‘பேராசிரியர் தொழில்நுட்ப அறிவை வளத்துக்குங்கம்பாரு. ஒருதடவ அந்த நம்பர எனக்கு எஸ் எம் எஸ் அனுப்புங்கன்னு சொல்லிட்டு ஃபோன வச்சுட்டாரு. அப்புறம் நான் தடவி தடவி, கமலத் தவிர மத்த எல்லாருக்கும் அவரு கேட்ட நம்பர அனுப்பி வச்சு . . . கடைசியா அவருக்கும் ஒரு ப்ளாங்க் எஸ் எம் எஸ் அனுப்பினேன்னா பாத்துக்குங்களேன். இதுக்கே சாயங்காலம் வரைக்கும் ஆயிப் போச்சுங்க’.

தொலைக்காட்சிகளில், இணையத்தில் கேட்டிருக்கிறேனென்றாலும் பேராசிரியரின் பேச்சை நான் முதலில் நேரில் கேட்டது, சென்னையில் அவர் ‘நெடுநல்வாடை’ பற்றிப் பேசும் போதுதான். வெறும் துணுக்குத் தோரணங்களாக பட்டி மன்றம் பேசுபவர்தானே என்று நினைப்பவர்களை வியக்க வைக்கும் பேச்சு, அது. பழந்தமிழில் பயிற்சி என்பதில் கூட ஆச்சரியமில்லை. நவீன இலக்கியத்திலும் அவருக்கிருக்கும் ஆர்வம் அளவிட முடியாதது. அநேகமாக நவீன இலக்கிய உலகில் எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருடைய படைப்பையும் தேடிப் பிடித்துப் படித்து விடுகிறார். ‘எப்படி ஸார் எல்லாத்தையும் படிச்சுடறீங்க?’ என்று கேட்டால், ‘முன்னாடில்லாம் பேசறதுக்காகப் படிச்சேன். இப்பல்லாம் படிக்கிறதுக்காகப் பேசறேன்’ என்பதுதான் அவருடைய பதிலாக இருக்கிறது. சமீபகாலமாக நான் படிக்காமல் விட்டுப் போன புத்தகங்களைப் பற்றி பேராசிரியரிடமே கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்.

நான் பேச ஆரம்பிச்ச புதுசுல எங்கப்பா முதல்நாளே கூப்பிட்டு, அது படிச்சியா, இது படிச்சியான்னு கேப்பாருங்க. படிக்கிற பழக்கம் அவர்கிட்டேருந்து வந்ததுதான். அவரு எறந்து, நான் கொள்ளி வைக்கும் போது, ஒரு நூலகத்துக்குக் கொள்ளி வைக்கிற உணர்வுதாங்க எனக்கிருந்தது.’

சிரிக்கச் சிரிக்கப் பேசுகிற பேராசிரியர், சாதாரணமாக இப்படிச் சொல்லி அழ வைப்பார். உடனே நம் மூடை மாற்றும் பேச்சு, அவருடையது. ‘நான் என்னவா வரக்கூடாதுன்னு அவர் நெனைச்சாரோ, அப்படித்தானே வந்தேன்! அதாங்க, தமிழாசிரியரா ஆயிட்டேன்ல! ஏன்னா எங்கப்பாவும் ஒரு தமிழாசிரியர்’.

மதுரையில் நான் தங்கியிருந்த விடுதியிலேதான் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பொதிகை டி.வி. புகழ் ‘இசைக்கவி’ ரமணன் அவர்களும் தங்கியிருந்தனர். மாலையில் விடுதிக்கு எதிரே இருக்கும் ராஜா முத்தையா மன்றத்தில் பேராசிரியரின் தலைமையில் ‘கண்ணதாசன் பாடல்கள்’ குறித்த பட்டி மன்றத்தில் பேச வந்திருந்தார்கள். ‘வேற ஹோட்டல்னா கூட நீங்க தப்பிச்சிரலாம். இப்ப தப்பிக்க வளியேயில்ல. எங்க பேச்ச கேட்டுத்தான் தீரணூம்’. மரபின் மைந்தன் மிரட்டினார். ‘ஸார் பாடுறதா சொன்னாங்களே! அவாள் பாடுறதும் பேச்சுலதான் வருமோ?’ என்று ‘இசைக்கவி’ ரமணனைக் காண்பித்துக் கேட்டேன். ‘சுகா, இது உங்க கையில்ல. காலு. தயவு செய்து முன்வரிசைல உக்காந்து சிரிச்சு கலாட்டா பண்ணிடாதீங்க, ப்ளீஸ்’ என்றார், இசைக்கவி. ‘அப்ப நீங்க நெஜம்மாவே நீங்க பாட ட்ரை பண்ணுவீங்களா?’ என்றேன். ’முத்தையா, கண்டிப்பா இந்த நிகழ்ச்சில நான் கலந்துக்கிடத்தான் வேணுமா?’ மரபின் மைந்தனிடம் கேட்டார், இசைக்கவி.

பேராசிரியர் காரை அனுப்பி வைத்து ஃபோனும் பண்ணினார். ‘சுகா, நீங்க வர்றது சந்தோஷம்னா, ஐயா வர்றது கௌரவம். அவர நல்லபடியா கூட்டிட்டு வாங்க’ என்றார். ‘ஐயா’ என்று பேராசிரியர் மரியாதையுடன் சொன்னது, வண்ணதாசன் அண்ணாச்சியை. அண்ணாச்சி அன்று காலை திருநெல்வேலியிலிருந்து கிளம்பி மதுரை வந்திருந்தார்கள்.

‘அமுதகம்’ என்று பெயரிட்ட பேராசிரியர் வீட்டு வாசலில் பேராசிரியரும், அவர் துணைவியாரும் நின்று எங்களை வரவேற்றனர். எங்களுடன் தஞ்சை செழியனும், அவர் நண்பரும் வந்திருந்தார்கள். முதலில் பேராசிரியர் தன் வீட்டு நூலகத்துக்கு அழைத்துச் சென்றார். கீழே ஒன்று, மாடியில் ஒன்று என இரண்டு நூலகங்கள். பழைய, புதிய புத்தகங்கள் ஒவ்வொன்றும், நம்பர் போட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்னாலுள்ளவையோ என சந்தேகிக்கும் வண்ணம், பார்க்கும் போதே தும்மலை வரவழைத்தன, சில அரதப்பழசான புத்தகங்கள். வண்ணதாசன் அண்ணாச்சி ஒரு பழைய புத்தகத்தை எடுத்து பூப்போலப் புரட்டினார். அடுத்தடுத்தப் பக்கங்களை அவர் புரட்டும் போது, எந்தப் பக்கத்திலிருந்தாவது ஏதேனும் பூதம் குதித்து, எங்களைச் சுற்றி வந்து காலைக் கடித்துவிடுமோ என்று கலக்கமாக இருந்தது. நல்லவேளையாக அதற்குள் சாப்பிட அழைத்தார்கள்.

டைனிங் டேபிளில் இலை போட்டு, அநேகமாக இதுநாள் வரை நான் கேள்விப்பட்ட அத்தனை காய்கறிகளும் வரிசையாக அணிவகுத்தன. அவைபோக நவதானியங்கள், சாம்பார், ரசம், திருநவேலி வத்தக்குழம்பு, நாகர்கோயில்காரர்களுக்குப் போட்டியாக ஒன்றுக்கு இரண்டு பாயாசம், அப்பளம் என விருந்து அமர்க்களப்பட்டது. இரண்டாவது பாயசமான இளநீர்ப் பாயாசத்தை விருந்துக்குப் பின் அருந்துவதாக ஏற்பாடு. எங்கே பேராசிரியரும், அவர் துணைவியாரும் அதைக் கொடுக்க மறந்துவிடுவார்களோ என்கிற பதற்றத்தில் அவசரவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், ‘இசைக்கவி’. ‘ஸார்! சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் இளநீர்ப் பாயாசம் தர்றதா சொன்னீங்க. மறந்துராதீங்க’. நொடிக்கொருதரம் நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தார். ‘இளநீ . . . .ர்ப் . . . பாயாசமே . . . . உனை அருந்தினால் . . . பறக்கும் என் ஆயாச . . . மே’ என்று அவர் பாடத்தான் இல்லை. முழு விருந்தையும் பேராசிரியரும், அவர் துணைவியாரும் நின்று பரிமாறினார்கள். எனக்கு என் பெற்றோரின் விருந்தோம்பல் நினைவுக்கு வந்து கண்ணீர் துளிர்த்தது.

விருந்து முடிந்து, இளநீர்ப் பாயாசம் வந்து இசைக்கவியை ஆசுவாசப்படுத்தியது. ‘பாயாசம், ஆயாசம்’ பாட்டு பிறக்கும் முன்னே மரித்து, எங்களை ஆசுவாசப்படுத்தியது. பேராசிரியர் சாப்பிட்டு விட்டு வந்து, தாம்பூலம் தரிக்க ஏற்பாடு செய்தார். தான் எழுதிய புத்தகங்களை எடுத்து வந்து கையெழுத்திட்டு எங்களுக்குக் கொடுத்தார். எனக்குக் கொடுக்கும் போது மட்டும், அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. காரணம், ஏற்கனவே எனது ’தாயார் சன்னதி’ புத்தகத்தை அவருக்கு நான் கொடுத்திருந்தேன். பழிக்குப் பழி வாங்கிவிட்ட திருப்தி, பேராசிரியரின் முகத்தில் தெரிந்தது. ‘இனி நீங்க தப்பிக்க முடியாது’ என்றார். ‘ஏன்? அதான் குடுத்துட்டீங்களே! எப்படியும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருவேன். நம்புங்க’ என்றேன். ‘அதெல்லாம் அவ்வளவு லேசுல தட்டிக்களிச்சுர முடியாது. ரெண்டு நாளைக்கு ஒருக்க ஃபோன் பண்ணி அந்தந்த புஸ்தகத்துல இருந்து கேள்வி கேப்பேன்’ என்றார், பேராசிரியர். நாக்கில் மிச்சமிருந்த இளநீர்ப் பாயாசத்தின் சுவை மனதுக்குள் பரவுவதற்கு முன்பே தடுத்தார்.

மாலையில் ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த ‘கண்ணதாசன் சிறந்து விளங்கியது அவரது தனிப்பாடலிலா, திரைப்பாடலிலா’ என்கிற பட்டிமன்றத்துக்குச் சென்றோம். அரங்கம் நிரம்பி வழிந்தது. கவிஞர் சக்தி ஜோதி வந்திருந்தார். வணக்கம் சொன்னார். அவரை அதற்கு முன்பு நாற்பத்திரண்டு புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். முன்வரிசையில் வண்ணதாசன் அண்ணாச்சியும், நானும் சென்று அமர்ந்தோம். மேடையில் பட்டிமன்றத்து நடுவராக வீற்றிருந்த பேராசிரியர், வண்ணதாசன் அண்ணாச்சியையும், என்னையும் வரவேற்று எங்களைப் பற்றி ஒருசில வார்த்தைகள் பேசினார். முதலில் வண்ணதாசன் அண்ணாச்சி எழுந்து நின்று கைத்தட்டல்களுக்கிடையே அரங்கில் அமர்ந்திருந்தவர்களை வணங்கினார். அடுத்து நான். ‘மூங்கில் மூச்சு, தாயார் சன்னதியோடு என் தகப்பனாரின் பெயரையும் சேர்த்து பேராசிரியர் சொல்ல, அரங்கமே அதிர, நடுங்கும் கால்களுடன் எழுந்து நின்று அனைவரையும் வணங்கி, இருக்கையில் ’சொத்’தென்று சரிந்தேன்.

கண்ணதாசனின் தனிப்பாடல்கள் பற்றிப் பேசிய சகோதரர் ‘மரபின் மைந்தன்’ முத்தையா எந்தவிதக் குறிப்புமில்லாமல் அருமையாகப் பேசினார். கவிஞர் வைரமுத்து சொன்னாராம். ‘என்னிடம் இருக்கும் அத்தனை புத்தகங்களும் அழிந்து போனாலும் எனக்குக் கவலையில்லை. என்னுடன் முத்தையா இருக்கிறார்’ என்று. பொதுவாக வைரமுத்து அவர்களின் புகழ்ச்சியில் அதீதம் இருக்கும் என்பது எல்லோருக்கும் (அவருக்குமே) தெரிந்த ஒன்று. ஆனால் ‘மரபின் மைந்தன்’ விஷயத்தில் அது முற்றிலும் உண்மை. நண்பர் ஜெயமோகனின் ‘கொற்றவை’ வெளிவந்த வெகுசில நாட்களிலேயே அதைப் படித்து, ஜெயமோகனிடமே அதைப் பற்றி விவாதித்து அதிர்ச்சிக்குள்ளாக்கினவர், அவர். ஆக, கொற்றவை வாசகர் ஒருவரை எனக்குத் தெரியும். (நான் இப்படியெல்லாம் பேசுவதாலேயே கொற்றவை புத்தகத்தை ‘நண்பன்’(?) என்று எழுதி, எனக்குப் பரிசளித்தார், நண்பர் ஜெயமோகன்). அடுத்து ‘இசைக்கவி’ பேச வந்து, பாடினார். மைக் முன் வரும்போதே, முன்வரிசையில் இருந்த என்னைப் பார்த்து, ‘அமைதியா உக்காந்திரு. கொன்னிடுவேன்’ என்பது போல சைகை காட்டி, மிரட்டினார். அவரது மிரட்டல் அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்தது. ஆனால் அவரது பாட்டு சிரிப்பை விரட்டியது. மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொண்டார், ‘இசைக்கவி’. அடுத்தடுத்து இரண்டு பெண்கள். அவர்கள் பங்குக்கு ஒருவர் பாட, மற்றொருவர் முயன்றார். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு சீட்டு வந்தது. ‘இசைக்கவி’ மேலும் பாட வேண்டும் என்று அதில் எழுதியிருந்ததாக பேராசிரியர் அறிவித்தார். ‘இசைக்கவி’ வந்து பாடினார். இந்த முறையும் என்னை எச்சரிக்க அவர் தவறவில்லை. ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்கிற பாடலை தன் குரலில் அழகாகப் பாடினார். நிகழ்ச்சி முடியும் வரைக்கும் தேடினேன். சீட்டு எழுதிக் கொடுத்தவர் கடைசி வரைக்கும் கண்ணில் தட்டுப் படவேயில்லை.

முடிவுரையில் வழக்கம் போல பேராசிரியரின் பேச்சில் சுவைக்குக் குறைவில்லை. நிகழ்ச்சி முடிந்து, இரவு உணவுக்குப் பின்னர் எங்கள் அறைக்கு வந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பேராசிரியர் கிளம்பிச் சென்றார். பிறகு பதினோரு மணிக்கு மேல் அதிகாலை நான்கு மணிவரைக்கும் வண்ணதாசன் அண்ணாச்சியும், நானும் பேசிக் கொண்டிருந்தோம். திருநவேலி பற்றிய எங்கள் இருவருக்குமான பார்வைகள், ஆசைகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், சந்தோஷங்கள் என நீண்டது, எங்கள் பேச்சு. அண்ணாச்சியின் ஒவ்வொரு கதையாக நினைவுபடுத்திச் சொல்லிக் கொண்டேயிருந்தேன். அவரது ‘போய்க் கொண்டிருப்பவள்’ கதையைப் பற்றிப் பேசியபோது, ‘நடுராத்திரி ரெண்டு மணிக்கு ‘போய்க்கொண்டிருப்பவள்’ பத்தி ஒரு மனுஷன் பேசறதக் கேக்கும் போது இந்தாக்ல செத்துப் போயிரலாம் போல இருக்கெய்யா’ என்றார். மறக்க முடியாத அந்த இரவில், அந்த மதுரை விடுதியறையில் எங்களுக்காக அன்று இரவு முழுவதும் தாமிரவரணி ஓடிக் கொண்டேயிருந்தது.

சென்னைக்கு நான் வந்த பிறகு பேராசிரியர் பேசும் போது இதைச் சொன்னேன். ‘நல்ல வேள சுகா. நான்லாம் கெளம்பிப் போனேன்! நானும் எடஞ்சலுக்கு உக்காந்தேயிருந்தேன்னு வைங்க. அவுகளும், நீங்களும் இப்பிடில்லாம் பேசிக்கிட்டிருந்திருப்பீங்களா!’ என்றார். பேராசிரியரின் உயர்ந்த குணங்களில் ஒன்று இது. மதுரை நிகழ்ச்சிக்குப் பிறகு பேராசிரியரை இன்னும் நேரில் சந்திக்கவில்லை. ஆனால் அவ்வப்போது ஃபோனில் பேசுவோம்.

‘என்ன சுகா! எங்கெ இருக்கிய?’

‘நான் இருக்கிறது இருக்கட்டும். நீங்க மதுரல இல்லியே?’

‘அதெப்படி? மதுரைல இருந்து ஃபோன் பண்ணினாத்தான் நீங்க எடுக்க மாட்டியளே! இப்ப கோவைல இருக்கென். விஜயா பதிப்பகத்துல நெறய புஸ்தகங்க வாங்கிட்டு வந்தேன். ராத்திரிக்கு ஆச்சு.’

பேராசிரியரின் பிசியான சுற்றுப்பயணங்களில் அவ்வப்போது மதுரையும் எட்டிப் பார்க்கும். போனால் போகிறதென்று அவர் பணிபுரியும் தியாகராஜர் கல்லூரிக்கும் அவ்வப்போது சென்று வருகிறார். மூன்று நாட்கள் அவர் தொடர்ச்சியாக கல்லூரிக்குச் சென்றால் கல்லூரி நிர்வாகமே அவரை ஏதாவது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வெளியூருக்கு அனுப்பி விடுகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதை பேராசிரியரிடமே பலமுறை சொல்லியிருக்கிறேன். அடக்க முடியாமல் சிரித்து விழுந்திருக்கிறார். அவரது நண்பர்கள், செல்லுகின்ற இடத்தில் அவர் சந்திக்கும் பெரிய மனிதர்கள் அனைவரிடமும் என்னைப் பேசச் செய்வார். அப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்கிற அவசியமே அவருக்கில்லை. ஆனாலும் அவரது பரந்த மனமானது, தனக்குத் தெரிந்த எல்லா மனிதர்களும், தன் நண்பர்களுக்கும், தனக்குப் பிரியமானவர்களுக்கும் தெரிய வேண்டும் என்று நினைக்கிறது.

சென்ற மாதத்தில் ஒருநாள் ஃபோன் பண்ணினார். வழக்கம் போல நான் ஃபோனை எடுத்த எடுப்பிலேயே, ‘ஸார், நீங்க மதுரைல இல்லியே? ஆமான்னீங்கன்னா ஃபோனை வச்சிருவென்’ என்றேன். ‘இல்ல சுகா. சென்னைக்கு வந்திருக்கென். கொஞ்சம் இருங்க. உங்கக்கிட்டெ ஒருத்தர் பேசணுங்கறாரு’.

‘வணக்கம். எப்பிடி இருக்கீங்க. நான் கமலஹாசன் பேசறேன்’ என்றது எதிர்முனைக்குரல்.

திருநவேலியும், திருநெல்வேலியும் . . .

கி.ரா. பாட்டையாவின் ‘கதவு’ சிறுகதையை குறும்படமாக யாரோ எடுத்திருக்கிறார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் எடுத்திருப்பது, பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியின் விஷுவல் கம்யூனிக்கேஷன் மாணவர்கள் என்னும் தகவலை எனக்குச் சொன்னவர், கவிஞர் க்ருஷி. அதுவும் ‘கதவு’ குறும்படத்தின் திரையிடலுக்காக நான் திருநவேலிக்கு வர வேண்டும் என்றார். ‘குறும்படம் எடுத்த இயக்குனர், நீங்க கண்டிப்பா வரணும்னு பிரியப்படுதாரு. வாரேளா?’ என்று க்ருஷி ஸார்வாள் கேட்டபோது, உடனே வருகிறேன் என்று சொல்ல முடியவில்லை. சென்னையில் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருக்கும் வேலைகளுக்கிடையே திருநவேலிக்குப் போய்வர, மனம் விரும்பினாலும் சூழல் ஒத்துழைக்கவில்லை. ‘யோசிச்சு சொல்லுங்க. ஆனா பாஸிட்டிவா சொல்லுங்க’ என்றார் ஸார்வாள். அடுத்தடுத்து இரண்டு, மூன்று அழைப்புகள், குறுஞ்செய்திகள். கிடப்பது கிடக்கட்டும், திருநவேலிக்குச் சென்று வரும் வாய்ப்பைத் தவற விட வேண்டாம் என்று கிளம்பிவிட்டேன்.

சென்னைக்கு வந்துவிட்ட இருபது ஆண்டுகளில் எப்போது திருநவேலிக்குக் கிளம்பினாலும், பயணத்துக்கு முந்தைய நாளிலிருந்தே திருநவேலி கண்ணுக்குப் புலப்படத் துவங்கி விடும். எக்மோருக்குள் நுழையும் போது, நெல்லை எக்ஸ்பிரஸ்ஸோ, கன்னியாகுமரியோ, அனந்தபுரியோ கண்ணில் பட்டால் பாதி திருநவேலியைப் பார்த்த மாதிரிதான். ஏறி இடம் பார்த்து, கால்களுக்கடியில் பெட்டியைத் தள்ளி விட்டு, எதிரெதிர் மனிதர்களின் முகம் பார்த்து, லேசாகச் சிரித்து வண்டி கிளம்பும் போது,

‘வே மாப்ளே! ஒமக்கு அப்பர்ல சீட்டு. தவளும் கிருஷ்ணர் மாதிரி தவள்ந்து போரும்’.

‘எல, கணேசன்ட்ட இட்லி பொட்டணத்த எங்கெ வச்சான்னு கேளு. இந்தப் பைல புளியோதரல்லா இருக்கு. சவம் ராத்திரி பூரா எதுக்களிச்சுக்கிட்டேல்லா கெடக்கும்!’

‘ஏளா, மண்ணெண்ணெய ஒளிச்சு வையி. ட்டி.ட்டி.ஆர் வாராரு’.

தாம்பரம் தாண்டுவதற்குள் ‘திருநவேலி பாஷை’ பேசும் மனிதர்கள், திருநவேலியை ரயிலுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள்.

முன்பெல்லாம் தெரிந்த ‘திருநவேலி முகங்கள்’ ஒன்றிரண்டாவது கண்ணுக்குத் தென்படும். இப்போது சமீபகாலமாக அப்படி நடப்பதில்லை. அடுத்தடுத்த தலைமுறையினரின் முகங்கள் நான் அறியாத காரணமா, இல்லை எனக்குத் தெரிந்த, ஆனால் நான் பழகியேயிராத முந்தைய பழைய மனிதர்கள் இப்போதெல்லாம் பயணம் செய்வதில்லையா, அறியேன். திருநவேலி ரயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கியபோது, ரயிலுக்குள் இருந்த திருநவேலியைப் பார்க்க முடியவில்லை. வேறு ஏதோ ஓர் ஊரில் போய் இறங்கிய உணர்வுதான் ஏற்பட்டது. அதனாலேயே, திருநவேலிக்குச் செல்வதாக இருந்தால் யாருக்குச் சொல்கிறேனோ, இல்லையோ! மீனாட்சிக்குச் சொல்ல மறப்பதில்லை. நான் அறிந்த திருநவேலிக்காரர்களில் இன்னும் பழைய திருநவேலியை விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களில் மீனாட்சிசுந்தரமும் ஒருவன். தாமிரவரணிக் குளியல், நெல்லையப்பர் கோயில் தரிசனம், இருட்டுக்கடை அல்வா, துணி எடுத்துத் தைத்த டெரிக்காட்டன் சட்டை, பேண்ட், கூடுமானவரை வேட்டி சட்டை(கோ-ஆப்டெக்ஸ்). தோற்றத்திலும் அவனை ஒத்திருக்கும் 30 கிலோமீட்டரை எப்போதுமே தாண்டாத டி.வி.எஸ் 50, வாரத்துக்கு இருமுறை சவரத்தை சந்திக்கும் இளநரை முகம் என மீனாட்சி எழுபது, எண்பதுகளின் திருநவேலிச் சித்திரத்தைக் கண்முன் நடமாட விடுபவன்.

‘எல! சாய்ங்காலம் ஜானகிராம் ஹோட்டல்ல ஒரு நிகள்ச்சி. நாலரைக்குல்லாம் வந்திரு.’

‘எலக்கியமா, சித்தப்பா?’

‘ம்ம்ம். கிட்டத்தட்ட அப்படித்தான். ஏன் கேக்கெ?’

‘சரி. அப்ப ராத்திரி சாப்பாட்ட சோலிய முடிச்சிருவாங்க. வீட்ல சொல்லிட்டு வந்திருதென்’.

‘கதவு’ குறும்படத் திரையிடலுக்கான அழைப்பிதழில் ‘கரிசல்’ எழுத்தாளர்கள் அனைவரின் பெயர்களும் இருந்தன. அநேகமாக அனைவரும் வந்திருந்தனர். வண்ணதாசன் அண்ணாச்சி, நீண்ட நாட்களாக நான் சந்திக்க விரும்பிய தமிழ்ச்செல்வன் அண்ணாச்சி, கவிஞர் தேவதச்சன், எழுத்தாளர்கள் உதயசங்கர், சோ.தர்மன், தாங்க முடியா கொடுங்கவிதை ஒன்றை படித்த நிரந்தர முகபாவனையுடனான பண்பாட்டு ஆய்வாளர் ஐயா தொ.பரமசிவன், பிரியத்துக்குரிய தோழர் நாறும்பூநாதன் என ஒரே எழுத்தாளர் கூட்டம். தோழர் நாறும்பூநாதன் என்னருகில் அமர்ந்து மெதுவான குரலில், வழக்கமாக அவர் சொல்லும் செய்தியைச் சொன்னார். ‘இன்னிக்கு பாத்து எனக்கு வேற ஒரு நிகள்ச்சி இருக்கு, பாத்துக்கிடுங்க. நான் போயிட்டு ராத்திரி எப்படியாது வந்திருதென்’.

(தோழர் நாறும்பூநாதனுடன்)

குறும்படத்தைத் துவக்கும் முன், என்னை அறிமுக உரை நிகழ்த்தச் சொன்னார்கள். ‘மூத்த படைப்பாளி கி.ரா பாட்டையாவின் சிறுகதை ஒன்றை குறும்படமாக எடுத்திருப்பதற்காக இந்த குறும்படத்தின் தயாரிப்பாளரை முதலில் பாராட்டுகிறேன்’ என்று துவங்கி ‘ஒரு படைப்பாளியை அவர் வாழும் காலத்திலேயே கௌரவிப்பது முக்கியமானது. உயிரோடு இருக்கும் போது மதிக்காம, செத்துப் போன சுப்பையாவுக்கு சிலை வைத்து நாம கும்பிடறத இனிமேலாவது செய்ய வேண்டாம்’ என்றேன். சுப்பிரமணிய பாரதிதான் சுப்பையா என்பது திருநவேலிக்காரர்களுக்குத் தெரிந்திருந்தது. குறும்படம் துவங்கியது. மிகச் சில குறைகளுடன், கூடுமானவரை சரியான முறையில், மூலக்கதையைச் சிதைக்காமல் எடுக்கப்பட்டிருந்தது. கரிசல் கிராமத்து சிறுவர், சிறுமிகளின் தேர்வு அசலாக இருந்தது. இன்றைய தலைமுறையினருக்கு கொஞ்சமும் பரிச்சயமில்லாத , புரிந்து கொள்ள இயலாத விஷயங்களை ‘கதவு’ குறும்படம் காண்பித்தாலும், கதையின் அடிப்படையான விஷயமாக ‘குழந்தைமை’யே என் கண்ணுக்குத் தெரிந்தது. தங்கள் குழந்தைமையை, விளையாட்டை, தட்டிப் பறிக்கப்பட்ட விளையாட்டின் உரிமையை, இழந்து தவிக்கும் குழந்தைகளின் கதையே ‘கதவு’. அவர்களின் வறுமையையும் தாண்டி இந்தக் கவலையே அவர்களின் கண்களின் நிறைந்து நிற்கிறது. அதை முடிந்த அளவில் சரியாகவே சொல்ல முயன்றிருந்தார் ‘கதவு’ குறும்படத்தின் இயக்குனர் மரிய தங்கராஜ். குறும்படத்தின் இறுதியில் தன்னுடைய நேர்காணலில் கி.ரா பாட்டையாவும் இதையே சொன்னது நிறைவாக இருந்தது.

படம் முடியும் நேரத்தில் மின்னலென அரங்கத்துக்குள் நுழைந்தார் ஒரு மனிதர். கையில் ஒரு ஊன்றுகோலும் , தலையில் ‘பித்துக்குளி’ முருகதாசின் காவித்துணியும், நெற்றியில், தமிழ் சினிமாவில் வில்லனை அழிக்கப் புறப்படும் நாயகனின் நெற்றியில் காதலியோ, ஆசைநாயகியோ, அன்னையோ, சித்தியோ, பெரியம்மையோ இடும் நீண்ட குங்குமத் தீற்றலுமாக வந்த அந்த மனிதர், படம் முடிந்ததும் சட்டென்று மைக்கைப் பிடுங்கினார். பிடுங்கிய வேகத்தில் ‘அரட்டை அரங்கம்’ விசுவின் குரலில் ‘கண் . . . . .ணா’ என்று அலறலுடம் மிமிக்ரி பண்ண ஆரம்பித்து விட்டார். அரங்கத்திலிருந்த இலக்கியவாதிகள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, யாரோ ஒருவர் மட்டும் மட்டும் பின்னால் இருந்து கைதட்டினார். திரும்பிப் பார்த்தேன். நான் சந்தேகப்பட்ட மாதிரியே என்னுடன் வந்த மீனாட்சிதான் அது. என்னைப் பார்த்ததும் தட்டிக் கொண்டிருந்த கைகளை மடக்கிக் கொண்டான். அழையா விருந்தாளியாக வந்து இம்சித்த ‘மிமிக்ரி’காரரிடமிருந்து மைக்கைப் பறிப்பது, ஒரு பின்நவீனத்துவ சிறுகதையைப் படிப்பதை விட சிரமமாக இருந்தது. அதற்குள் அவர் ‘கும்கி’ விக்ரம் பிரபுவின் குரலுக்கு முயன்று கொண்டிருந்தார். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ‘மிமிக்ரி’ மாமா, ‘வாகை’ சந்திரசேகரின் குரலில் கூடியிருந்த இலக்கியவாதிகள் அனைவரையும் ஆங்கிலத்தில் சபித்தபடி அரங்கை விட்டு வெளியேறினார். கவிஞர் க்ருஷி அதையும் ஆமோதிக்கும் பாவனையில் அமர்ந்திருந்தார்.

அண்ணாச்சிகள் வண்ணதாசன், தமிழ்ச்செல்வன், தேவதச்சன் போன்றோர் இளம் இயக்குனர் மரிய தங்கராஜை வெகுவாக ஊக்குவித்தனர். தமிழ்ச்செல்வன் அண்ணாச்சி, தோழர் உதயசங்கர் உட்பட கரிசல் எழுத்தாளர்கள் அனைவரும் கி.ரா பாட்டையாவை ‘நைனா’ என்று உரிமையுடன் விளித்தது, இயல்பாக இருந்தது. வண்ணதாசன் அண்ணாச்சி கி.ராவைப் பற்றிப் பேசும் போது சொன்னார். ‘சுகாவுக்கு பாட்டையா. கோவில்பட்டிக்காரங்களுக்கு ’நைனா’. எனக்கு ‘மாமா’.

’கூகை’ எழுதிய சோ.தர்மன் அண்ணாச்சி, நரைத்த நீண்ட மீசை துடிக்க, தன்னுடைய இயல்பான மொழியில் ‘கதவு’ குறும்படத்தைப் பாராட்டிப் பேசினார்.

‘சோத்துச் சட்டியா படத்துல என்ன காட்டியிருந்திய ? எவர்சில்வரா? எனக்கு சரியா தெரியல. அதான் கேட்டென். . . . .எவர்சில்வர்தானா? வாய்ப்பே இல்ல. . . . ஐம்பதுகள்ல ஏது எவர்சில்வர்? ஈயம்தான்’.

‘அப்புறம் சோத்துப் பருக்கைய காமிச்சிருந்தீங்களோ? எனக்கு தெரியல. அதான் கேட்டென். . . . . சோத்துப் பருக்கையேதானா? அதெப்படி சோறு இருக்கும்? அப்பல்லாம் சோறே அபூர்வம். கம்மங்கஞ்சிய காமிச்சிருக்கணும்’.

‘அப்புறம் நாய் வந்து குடிச்சுட்டு போயிட்டுன்னு அந்த புள்ள சொல்லுது. அதெப்படி சொல்லுவாங்க, கரிசல் மண்ணுல? நாய் வாய் வச்சிட்டுன்னுதான் சொல்லணும்’.

’மத்தபடி நல்லா எடுத்திருக்கீங்க. வாழ்த்துகள்’.

மறுநாள் மாலை சென்னைக்குத் திரும்ப ரயில். காலையில் மீனாட்சியுடன் தி.க.சி தாத்தாவைப் பார்க்கக் கிளம்பினேன். அம்மன் சன்னதி, கீழரதவீதி, தெற்குரதவீதி, மேல ரதவீதி எல்லாமே மாறியிருந்தது.

‘தெரிஞ்ச மனுசங்களத்தான் காணோம். கட்டிடங்களுமால மாறும்?’ மீனாட்சியிடம் கேட்டேன்.

’இதுக்கே இப்பிடி சொல்லுதேளே! இன்னும் நீங்க வடக்கு ரதவீதிய பாக்கலேல்லா? வாங்க’.

கூட்டிக் கொண்டு போய் ராயல் டாக்கீஸ் முன்பு கொண்டு போய் நிறுத்தினான். அங்கு பிரமாண்டமாய் ‘போத்தீஸ்’ கட்டிடம் எழும்பி நின்று கொண்டிருந்தது. ‘ராயல் டாக்கீஸ்’ இடிக்கப்பட்டதும், அங்கு ‘போத்தீஸ்’ வந்து விட்டதும் நான் ஏற்கனவே அறிந்ததுதான். இருந்தாலும், அன்றைக்கு அந்தச் சூழலில் ஏனோ துக்கம் தொண்டையை அடைத்தது.

‘எல, பொதுமக்கள் நீங்க எல்லாரும் தெரண்டு போய் நின்னு, ராயல் டாக்கீஸ இடிக்க விடாம தடுத்திருக்கலாம்லா?’

சுத்த கோட்டிக்காரத்தனம்தானென்றாலும் மீனாட்சியிடம் இப்படி கேட்கத் தோன்றியது.

நான் வருவதை ஏற்கனவே அறிந்திருந்த தி.க.சி தாத்தா தன் வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்றார்.

‘வாங்கய்யா பேரப்பிள்ள. நேத்து ‘கதவு’ குறும்பட நிகழ்ச்சில நீங்க பேசுனது, இன்னிக்கு ஃபோட்டோவோட தினமணில வந்திருக்கே! நல்லா பேசியிருக்கேரு!’

காரை பெயர்ந்த சுவரின் பின்னணியில் தி.க.சி தாத்தாவுக்கு அருகில் உள்ள படியில் மீனாட்சி உட்கார்ந்து கொண்டான். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதையே கவனித்துக் கொண்டிருந்தேன். மனம் எங்கெங்கோ அலைந்தது. இரண்டு வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த வர்கள் இருவரும் அந்த சமயத்தில் , அவர்களின் அந்நியோன்யத்தில் எனக்கு ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களாகத் தெரிந்தார்கள்.

’கதவு’ குறும்பட நிகழ்ச்சி ஒன்றைத் தவிர, இந்த முறை திருநவேலி பயணம் அவ்வளவாக ருசிக்கவில்லை. குஞ்சு ஊரில் இருந்திருந்தானென்றால் ஒருவேளை நன்றாக இருந்திருக்கலாம். அவனும் திருவனந்தபுரம் சென்று விட்டான். அந்த வெறுமையும் ஒரு காரணம். ‘பாக்கேன்’ என்பதை ‘பாக்கிறேன்’ என்றும், ‘சொல்லுதென்’ என்பதை ‘சொல்றேன்’ என்றும் திருநவேலியை, திருநெல்வேலியாக்கும் இளைஞர்களின் நாகரிகப் பேச்சு ஒருபுறம். தோற்றத்திலேயே மாறத் துவங்கியிருக்கும் திருநவேலி நகரம் மறுபுறம். ‘அதெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது. சரி சரி. கடமயச் செய்யாம போயிராதிய. அம்மையப்பனப் பாத்துட்டு வந்திருவோம், வாங்க’. நெல்லையப்பர் கோயிலுக்கு அழைத்துச் சென்றான், மீனாட்சி. உள்ளே நுழையும் போதே அவன் சட்டை கிழன்று, கைகளில் மடிந்தது. கோயிலுக்குள்ளே மழைநீர் தேங்காமல் வடியும் விதமாக, நடுவில் குழி தோண்டிப் போட்டிருந்தார்கள். காந்திமதியம்மையை வணங்கிவிட்டு, சுவாமி சன்னிதிக்குச் செல்லும் வழியில் , முகப்பில் மாக்காளையைப் பார்க்கும் போதே, மனதுக்குள் இனம் புரியாத பரவசம். உள்ளே நெல்லையப்பர், ராமக்கோனின் கோடரியால் வெட்டப்பட்ட நெற்றியுடன், சின்னப் பிள்ளையாக இருக்கும் போது நான் பார்த்த அதே நெல்லையப்பராக இருந்தார்.