மூத்தோர்

‘வணக்கம். நான் தி.க.சி பேசுதென். இவ்வளவு நாளா எங்கெய்யா இருந்தேரு! பிரமாதமா எளுத வருது, ஒமக்கு. விட்டுராதேரும்’. சாகித்ய அகாடெமி விருது பெற்ற தமிழ் இலக்கியத்தின் மூத்த விமர்சகர் தி.க.சிவசங்கரன் அவர்கள், தொலைபேசியில் அழைத்துப் பேசிய அந்த சமயத்தில் நான் ஒன்றும் பெரிதாக எழுதியிருக்கவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் ஒன்றிரண்டு கட்டுரைகள் வந்திருந்தன, அவ்வளவுதான். அவரது வார்த்தைகளில் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனேன். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அச்சில் வெளிவந்த என் எழுத்துக்கான முதல் எதிர்வினை அது. அதற்குப் பிறகு மாதாமாதம் ஃபோன் வரும். அப்போது ‘வார்த்தை’ மாத இதழாக வந்து கொண்டிருந்தது. ‘இதெல்லாம் புஸ்தகமா வரணும்யா’. ஒருநாள் சொன்னார். நான் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வில்லை. சில மாதங்களில் ‘தாயார் சன்னதி’ என்னும் பெயரில் புத்தகமாக என்னுடைய கட்டுரைத் தொகுப்பு உருவான போது, என்னை விட அதிகமாக சந்தோஷப்பட்டவர், தி.க.சி. தாத்தா.

[தி.க.சி]

‘புஸ்தகம் வந்தாச்சு. சந்தோஷம். ஆனா நீரு ஃபிக்ஷன் எளுதணும். அதுவும் விகடன் மாதிரி பத்திரிக்கைல. பல பேருக்குப் போயி சேரணும்’ என்றார். பெரியவரின் வாக்கு பலித்தது. ‘ஆனந்த விகடன்’ பத்திரிக்கையில் நான் எழுதிய ‘நாகு பிள்ளை’ என்ற சிறுகதை வெளிவந்த போது, நண்பர் ஜெயமோகன் அது சிறுகதையே அல்ல என்றார். வண்ணதாசன் அண்ணாச்சியும் ‘சிறுகதைக்கு இன்னும் ஏதோ ஒன்று வேண்டும்’ என்னும் பொருள்பட அபிப்ராயம் சொன்னார். நான் வழக்கம்போல, எழுதி முடித்தபின் வேறு யாரோவாக இருந்தேன். ஆனால் தி.க.சி தாத்தாவின் ஃபோன் ஒரு புது செய்தி சொல்லியது.

‘யோவ் பேரப்பிள்ள, என்னய்யா விகடன்ல இப்பிடி பண்ணிட்டேரு?’

‘ஆமா தாத்தா. சரியா வரல.’

‘யாருய்யா சொன்னா, சரியா வரலென்னு? ஒரு நாவல அடக்கி, சுருக்கி, குறுக்கி எளுதிட்டேரேன்னு நான் வருத்தப்பட்டுக்கிட்டிருக்கென்’.

நான்கூட ஏதோ நம்மை உற்சாகப்படுத்த சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அந்த சிறுகதையின் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக எடுத்துரைத்து, கதையின் எந்தெந்த பகுதிகளை நீட்டினால் அது நாவலாக உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பதை பொறுமையாக எடுத்துச் சொன்னார். ‘அத்தன கிளைக்கதைகள் அதுல ஒளிஞ்சிக்கிட்டிருக்குயா’ என்றார்.

அதோடு விடாமல் இன்னொன்றும் சொன்னார். ‘வேணா பாரும். இந்த கத ஒமக்கு பல கதவுகள தொறக்கப் போகுது. இனிமெ நீரு தப்பவே முடியாது. ஒம்மக்கிட்டெ இருக்குற சரக்குக்கு நீரெல்லாம் விகடன்ல தொடரே எளுதலாம்யா’.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஆனால் பிற்பாடு அதுவும் நடந்தது. ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுத ஆரம்பித்த புதிதில், தி.க.சி தாத்தா ஒரு விஷயம் சொன்னார். ‘பொதுவா இப்படி எளுதுங்க, அப்படி எளுதுங்கன்னு யாருக்கும் நாம சொல்லக் கூடாது. அத எளுதுறவந்தான் தீர்மானிக்கணும். ஆனா ஒங்களுக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லுதென். தனிநபர் தாக்குதல் வேண்டாம். என்னா?’ என்றார். மறுப்பேதும் சொல்லாமல், ‘சரி தாத்தா’ என்றேன். வாராவாரம் விகடன் வரும்போது கொண்டாடுவார். ‘ஒலகத்துல இருக்கிற திருநவேலிக்காரன்லாம் ஒம்மப் பாத்தாத் தூக்கிட்டே போயிருவான், பேரப்பிள்ள. பத்திரமா இரியும்’. சொல்லிவிட்டு சத்தமாகச் சிரிப்பார்.

ஒருகட்டத்துக்கு மேல் தி.க.சி தாத்தாவுக்கும், எனக்குமான உறவு ஆழமாகி இன்றுவரை தரைதட்டாமல் மேலும் மேலும் உள்ளே இறங்கிப் போய்க் கொண்டே இருக்கிறது. திருநவெலிக்கு நான் சென்றால் முதல் வேலையாக அம்மன் சன்னதியிலிருந்து, சுடலைமாடன் கோயில் தெருவுக்கு ஓடுவேன். வளவு சேர்ந்த, பழைய சுண்ணாம்பு வீட்டில் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கும் தி.க.சி.தாத்தாவைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை. மாலையில் எழுத்தாளர் நாறும்பூநாதனைச் சந்திக்கும்போது, எடுத்த உடனேயே, ‘தி.க.சி ஐயாவ பாத்துட்டேள்லா?’ என்று கேட்பார். நான் பதில் சொல்வதற்குள், கவிஞர் க்ருஷி, ‘என்ன தம்பி கேள்வி இது? வண்டி மொதல்ல அங்கெதானெ போகும்? அப்பொறந்தானெ நாமல்லாம்?’ என்பார். பொதுவாக நான் திருநவேலிக்கு வரும் செய்தியை தி.க.சி தாத்தாவை கண்ணும் கருத்துமாக உடனிருந்து கவனித்து வரும் தம்பிகள், ‘ஓவியர்’ பொன் வள்ளிநாயகமோ, பொன்னையனோ சொல்லிவைத்து விடுவார்கள். தாத்தாவைப் பார்க்கக் கிளம்பிச் சென்றுக்கொண்டிருக்கும் போதே வேகத்தடை போல குறுக்கே மறித்து, சந்திப்பிள்ளையார் முக்கில் பொன்னையன் சொல்லுவான். ‘தாத்தா முந்தாநாளெ சொல்லியாச்சுல்லா, நீங்க வாரியென்னு. பேரப்பிள்ளக்கு ஆயிரம் ஜோலி இருக்கும். நேரம் இருந்தா, என்னைய வந்து எட்டிப் பாக்கச் சொல்லுங்க. ஆனா, நான் பாக்கணும்னு பிரியப்பட்டேன்னு சொல்ல மறந்துராதீங்கன்னு சொன்னா’.

என் காலடிச் சத்தம் கேட்டவுடனேயே, உற்றுப் பார்த்துப் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தையோ, செய்தித் தாளையோ மடக்கி வைத்து விட்டு ‘வாங்கய்யா. ரயில் ப்ரயாணம் சௌக்யமா இருந்துதா?’ என்று சத்தமாகச் சிரித்தபடியே கேட்பார். பிறகு உள்ளே எழுந்து போய் பல்செட்டையும், சட்டையும் மாட்டிக் கொண்டு வந்து, உட்கார்ந்து நிதானமாகப் பேச ஆரம்பிப்பார். அநேகமாக முதல் கேள்வி இப்படித்தான் இருக்கும்.

‘இப்ப ரீஸண்டா என்ன எளுதுனேரு?’

ஒவ்வொன்றாக, ஒவ்வொருவராகக் கேட்பார். பெரும்பாலும் எழுத்தாளர்களைப் பற்றிய விசாரிப்புகள்தான்.

‘ஜெயமோகன் சினிமால எளுதுதாரெ? சினிமாக்காரங்க ஒளுங்கா துட்டு கிட்டு குடுக்காங்களா?’

‘நாஞ்சில் நாடன எப்பப் பாத்தாலும் என் விசாரிப்புகளச் சொல்லும்’.

‘அறிவுமதியப் பாக்கறதுண்டா? நீங்கல்லாம் ஒரே ஸ்கூல்தானெய்யா? அவரு நமக்கு நல்ல நண்பர். விசாரிச்சதா சொல்லுங்க’.

‘பாட்டையா பாரதி மணி எப்பிடியா இருக்காரு? மனுஷன் தொடர்ந்து எளுத மாட்டெங்காரே?’
இதற்கு மட்டும் நான் குறுக்கிட்டு, ‘அது சவம் துன்பம்லா?’ என்பேன். வெடித்து சிரிப்பார். ‘தொடர்ந்து அந்த மனுசன என்னா மாரி கேலி பண்ணி எளுதுதேரு! அதுவும் அந்த ‘வலி’ கட்டுர! அவருக்கும் ஒம்ம மேல அவ்வளவு பிரியம்! சுகா சுகான்னு பாசமா இருக்காரெ!’

‘ஜெயகாந்தன் ஒங்கள விசாரிச்சாரு, தாத்தா’ என்பேன். பொங்கி வரும் மகிழ்ச்சியுடன், ‘அவரையெல்லாம் அப்பப்ப போயி பாருங்கய்யா’ என்பார். அதே போல தி.க.சி தாத்தா அடிக்கடி என்னைப் போய்ப் பார்க்கச் சொல்லும் கலைஞர் ஒருவர் இருக்கிறார்.

‘திருநவெலிக்கு வந்தாலெ நெல்லையப்பரப் பாக்க ஓடுதேருல்லா! அந்த மாரி சென்னைல அந்த மனுசனையும் போயி அடிக்கடி பாத்து ஒரு கும்பிடு போடும். பல நூற்றாண்டுகளுக்கு ஒரு மட்டம்தான் அந்த மாதிரி கலைஞர்களெல்லாம் நம்ம மண்ணுல தோன்றுவாங்க’ என்பார். அந்த ‘கலைஞர்’ இளையராஜா.

எழுத்துலகில் நாம் அறியாத பல வரலாற்று சிறப்புகளை தி.க.சி தாத்தா மூலம் தெரிந்து கொள்ளலாம்.

‘மூக்கப்பிள்ளன்னு ஒரு நாவல் எளுதப் போறென்னு புதுமைப்பித்தன் சொல்லிக்கிட்டெ இருந்தாரு. கடசிவரைக்கும் எளுதல’. வருத்தமாகச் சொல்வார்.

வாழ்ந்து, பழுத்த அனுபவஸ்தரான தி.க.சி தாத்தாவிடம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கையின் அடிப்படை விஷயங்கள் எத்தனையோ உள்ளன. அவ்வப்போது என்னுடைய கட்டுரைகளில் இடம்பெறும் மீனாட்சிசுந்தரத்தை, என்னுடைய கட்டுரைகள் வாயிலாகத்தான் தி.க.சி தாத்தாவுக்கு அறிமுகம். என்னையும் விட வயதில் இளைய மீனாட்சி சுந்தரம், இப்போது தி.க.சி தாத்தாவுக்கு நெருக்கமான நண்பன். ‘மீனாட்சி சுந்தரம். ஒம்மப் பத்தி ஒங்க சித்தப்பா மூங்கில் மூச்சுல எளுதியிருக்காரெய்யா?’ என்று தி.க.சி தாத்தா உற்சாகமாகக் கேட்கும் போதுகூட, அருகில் கிடக்கும் ஆனந்த விகடனை ஏறெடுத்தும் பார்க்காத அளவுக்கு தீவிர வாசகன், எனது மகன் முறையான மீனாட்சி சுந்தரம். ஆனாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் தி.க.சி தாத்தாவுடன் மீனாட்சியைப் பார்க்கலாம். அதற்குக் காரணம் தி.க.சி. தாத்தா தன் நண்பனிடம் காட்டும் பரிவுதான். சமீபத்தில் மீனாட்சியின் தாயார் காலமான செய்தி வந்த போது, மாநகர நெருக்கடி வாழ்க்கையின் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் வண்ணம், குறுஞ்செய்தியிலேயே அனுதாபித்து வேறுவேலை பார்க்கச் சென்று விட்டேன். ஆனால், தன்னுடைய தள்ளாத வயதிலும் தி.க.சி தாத்தா மீனாட்சியின் இல்லம் தேடிச் சென்றிருக்கிறார்.

‘தொணைக்கு வள்ளியக் கூட்டிக்கிட்டு ஒரு ஆட்டோ புடிச்சு தாத்தா வந்துட்டா, சித்தப்பா. சொல்லச் சொல்லக் கேக்காம, மச்சுப்படி ஏறி வந்து, அத ஏன் கேக்கிய?’ ஊருக்குப் போயிருக்கும் போது, கலங்கிய குரலில் மீனாட்சி சொன்னான்.

வழக்கமாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கப் போகும் போது அவர் படித்துக் கொண்டிருந்தால் அருகில் சென்று, ‘தாத்தா’ என்பேன். எழுதிக் கொண்டிருந்தாரானால், அவர் எழுதி முடிக்கும் வரையிலும் சற்றுத் தள்ளியே நின்று கொள்வேன். அப்படி ஒருமுறை, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த தாத்தா நிமிர்ந்து பார்க்கும் வரை, அந்த பெரிய வளவு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தது.

எழுதி முடித்து, பேனாவை மூடி, ஸ்டூலை நகர்த்தி, கையில் எழுதிய கடிதத்துடன் தாத்தா நிமிர்ந்து பார்த்தவுடன் சத்தமாக ‘வாங்கய்யா’ என்று சிரித்தார், வழக்கம் போல. ஆனால் கண்கள் கலங்கியிருந்தன. பல்செட்டை மாட்டிக் கொண்டு வந்து அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

‘கணவதி எறந்து போனத விசாரிச்சு, கி.ராஜநாராயணன் லெட்டர் போட்டிருந்தாரு. வளக்கமா ஒடனெ பதில் போட்டிருவென். இதுக்கு மட்டும் முடியாமப் போச்சு. அதான் பதில் எளுதிக்கிட்டிருந்தென். ரொம்ப நேரமா உக்காந்திருந்தேரா?’

கணபதி அண்ணன், தி.க.சி தாத்தாவின் புதல்வர். வண்ணதாசன் அண்ணாச்சியின் மூத்த சகோதரர்.

படிக்காமலோ, எழுதாமலோ சும்மா உட்கார்ந்திருந்த தி.க.சி தாத்தாவை நான் பார்த்ததே இல்லை. எல்லா பத்திரிக்கைக்கும் தன்னுடைய அபிப்ராயங்களை எழுதுவது அவரது வழக்கம். இதுபற்றி அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வந்த பின்னும் அவர் அதை பொருட்படுத்தாமல் தனது கடமையாக, பத்திரிக்கைகளுக்கு எழுதவதை இன்னும் செய்து வருகிறார்.

‘பேரப்பிள்ள, எளுதுறதுங்கறது எல்லாருக்கும் வராது, கேட்டேரா? எளுதுறதுன்னா சும்மா பேப்பர்ல பேரெளுதி பாக்கானெ! அவன் இல்ல. எளுதரவங்கள நாம பாராட்டுனா, மேலும் அவங்க நல்லா எளுதுவாங்க. அதே மாரிதான் பத்திரிக்க நடத்துறதும். அரசாங்கம் நடத்துறத விட செரமமான காரியம். அவங்களயல்லாம் தொடர்ந்து நாம ஊக்குவிக்கணும்’.

அதனால்தானோ என்னவோ, எழுத்தாளராகக் குறிப்பிடும்போது ’வண்ணதாசன் இதப் பத்தி எளுதியிருக்காரெ’ என்றும், மகனாகச் சொல்லும் போது, ‘கல்யாணி ஏற்கனவெ சொன்னானெய்யா’ என்றும் இயல்பாகச் சொல்ல அவரால் முடிகிறது.
எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என்றில்லை. அரசியல் தலைவர்களும் சுடலைமாடன் கோயில் தெருவுக்கு வந்து, தி.க.சி தாத்தாவுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது வைகோ மாமா வருவார். அந்த மாதிரி சமயங்களில் தாத்தாவுடன் இருக்கும் வள்ளிநாயகம் சொல்லுவான்.

‘எண்ணே, அத ஏன் கேக்கிய? அன்னைக்கு சொல்லாம கொள்ளாம திடுதிடுப்னு நல்லகண்ணு ஐயா வந்து நிக்கா. தாத்தா கூட உக்கார வச்சுட்டு, நான் அந்தாக்ல காப்பி ஏற்பாடு பண்ணப் போனென். அவாள் என்னடான்னா நீத்தன்ணிதான் வேணும்னுட்டா. தாத்தாவும் ஒடனெ ஒங்க அம்மைக்கிட்டெ வாங்கிக் கொண்டாந்து குடுங்கய்யான்னுட்டா. ஒரு சொம்பு நெறய நீத்தண்ணி குடிச்சதுக்கப்புறம் அவாளுக்கு குளுந்துட்டு. அதப் பாத்து தாத்தாக்கு ஒரே சந்தோசம்’.

திருநவேலிக்கு அடிக்கடி செல்ல முடியாமல் போனாலும் தி.க.சி தாத்தாவிடம் அவ்வப்போது ஃபோனில் பேசாமல் இருப்பதில்லை.

‘தாத்தா, சும்ம இருக்கேளா?’

‘நல்லா இருக்கென் பேரப்பிள்ள. மதுரல ஒரு பாராட்டு விளா. என்னமாரி கருப்பந்துறைக்குக் காத்திருக்கிற கெளடுகட்டகளயா பொறக்கியெடுத்து விருது குடுக்காங்க’. கொஞ்சமும் அசராத குரலில் சொல்லிவிட்டு சிரிப்பார்.

‘நமக்கு விருப்பமில்லென்னாலும் நண்பர்களுக்காக செல விஷயங்கள நாம செஞ்சுதான் ஆகணும். அந்த எடத்துல நட்பு மட்டும்தான் கண்ணுக்குத் தெரியணும்’.

நண்பர்களிடம் காட்டும் பரிவையும், அன்பையும் கருத்து ரீதியாக தன்னை மறுப்பவர்களிடத்திலும் தி.க.சி தாத்தா கொண்டிருக்கிறார். ஒருநாள் தற்செயலாக பெரியவர் வெங்கட் சாமிநாதன் பற்றிய பேச்சு வந்தது. சற்று நேரம் அமைதியாக இருந்தார். இலக்கிய உலகில் தி.க.சியும், வெங்கட் சாமிநாதனும் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கையில் கிடைத்ததைக் கொண்டெல்லாம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுமளவுக்கு கணவன், மனைவி போல அவ்வளவு அந்நியோன்யமானவர்கள். சிறிது நேர அமைதிக்குப் பின், ‘பேரப்பிள்ள, ஒங்களுக்கு அவரு அறிமுகமா?’ என்றார்.

‘பேசிப் பளக்கமில்ல தாத்தா. ஆனா இணையத்துல, நம்மள நாமளெ பாராட்டிக்கறதுக்கும், மத்தவங்கள ஏசறதுக்கும் Facebookனு ஒரு சமாச்சாரம் இருக்கு. அதுல நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்’ என்றேன்.

‘Facebook தெரியும்யா. சமூக இணைய தளம்தானெ? விகடன்லதான் வருதெ? சாமிநாதன்கிட்டெ பேசுனா ஒண்ணு சொல்லணுமெ?’

தி.க.சி தாத்தாவை கடுமையாக விமர்சித்து எழுதிய, எழுதுகிற, எழுத இருக்கிறவரிடம் என்ன செய்தியைச் சொல்ல இருக்கிறாரோ என்ற கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல், ‘சொல்லுங்க தாத்தா’ என்றேன். ‘அவரு மனைவியும் காலமான பெறகு பெங்களூர்ல தனியா உக்காந்து என்ன செய்யுதாரு? இங்கன ஒத்தக்காட்டுக் கொரங்கா நானும் தனியாத்தானெய்யா இருக்கென்? இங்கெ வந்து ஒரு வாரம், பத்து நாளு எங்கூட இருக்கச் சொல்லுங்கய்யா’ என்றார்.

உடனே பதில் சொல்லத் தெரியாமல் திணறினேன். ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் தி.க.சி தாத்தா இல்லை. அவர் மனம் எங்கோ சென்று கொண்டிருந்ததை அவரது முகம் காட்டியது.

‘என்னா மனுசன்யா அவரெல்லாம்? கருத்து ரீதியா நாங்க ரெண்டு பேரும் எதிர் எதிரானவங்கதான். எல்லாத்தயும் தாண்டி மனுசனுக்கு மனுசந்தானெ முக்கியம். அதத்தானெ எல்லா இலக்கியமும் சொல்லுது! தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரு!’

நான் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

சட்டென்று என் முகம் பார்த்து, ‘ஐயா, இங்கெ வந்து என் கூட கொஞ்ச நாளு இருந்துட்டு போயி, ‘தி.க.சி ஒரு முட்டாள்னு எளுதட்டுமெ! அதுக்காகவாது வெங்கட் சாமிநாதன் இங்கெ வரலாம்லா! என்ன சொல்லுதேரு?’.

சொல்லிவிட்டு, சத்தமாக தனது வழக்கமான சிரிப்பைச் சிரித்தார்.

சென்னைக்கு வந்தவுடன் ஒருநாள் பெரியவர் வெங்கட் சாமிநாதனுக்கு Facebook வழியாக தகவல் சொன்னேன். எனது தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டவர், மறுநாள் அழைத்தார்.

[வெங்கட் சாமிநாதன்]

‘தி.க.சி தாத்தா ஒங்கள விசாரிச்சார் ஸார்’ என்றேன். சன்னமான குரலில், ‘திட்டினாரா?’ என்றார். ‘இல்ல ஸார். ஒங்கள திருநவேலிக்குக் கூப்பிடறார். அவரோட வந்து தங்கணுமாம்’ மேலும் விவரங்கள் சொன்னேன். எதிர்முனையில் இருக்கிறாரா என்று சந்தேகிக்கும் அளவுக்கு கனத்த மௌனம் நிலவியது. ‘ஸார்’ என்றேன். ‘சுகா, நாளைக்கு என்னை கூப்பிடறேரா?’ என்றார். பொதுவாகவே மூத்தோர் சொல்லை மதிக்கும் நான், பெரியவர் வெங்கட் சாமிநாதன் சொன்னபடி மறுநாளே அவரை அழைக்க மறந்து, இரண்டு தினங்கள் கழித்து அழைத்தேன்.

‘என்னய்யா இது, மறுநாளே கூப்பிடுவேருன்னு நெனச்சேன்’.

‘ஸாரி ஸார். வேலைகள்ல சிக்கிக்கிட்டென்’.

‘பரவாயில்ல. அப்புறம் தி.க.சி விஷயம் சொன்னீரே!’

‘ஆமா ஸார். நான் என்ன சொல்லணும்னு சொல்லுங்க’.

‘இல்ல. எனக்கு ஒரே ஒரு விஷயம் தெரிஞ்சுக்கிட்டா நல்லது. அத மட்டும் விசாரிச்சு சொல்ல முடியுமா?’

தி.க.சி தாத்தா அளவுக்கு எனக்கு ‘பெரியவர்’ வெங்கட் சாமிநாதன் பழக்கமில்லை. அவருடைய கறாரான எழுத்து மட்டுமே பரிச்சயம். இன்னும் நேரில் சந்தித்ததில்லை. ஃபோனில் பேசியதோடு சரி. என்ன கேட்கப் போகிறாரோ என்று யோசித்தபடியே, சற்று தயக்கத்துடன் ‘சொல்லுங்க ஸார்’ என்றேன்.

‘ஒண்ணுமில்ல. தி.க.சி வீட்ல டாய்லட் வெஸ்டெர்ன் ஸ்டைலா, இண்டியன் ஸ்டைலா?’ என்று கேட்டார், ‘பெரியவர்’ வெங்கட் சாமிநாதன்.

புகைப்படங்கள் : சுகா, சேதுபதி அருணாசலம்.