மூப்பு

‘அவன் ப்ளஷர் போன பாதைல உள்ள புளுதிய எடுத்து பொம்பளப்புள்ளைய மூஞ்சில பூசிக்கிடுவாளுவளாம். ஆளும் அதுக்கு ஏத்தமாதிரி சும்மா பளபளன்னு இருப்பாம்லா’.

‘ஆராதனா’ படம் பார்க்கும் போது, ராஜேஷ்கண்ணா பற்றி நான் கேட்ட செய்திகள் எல்லாம் உண்மையாகத்தான் இருக்குமோ என்று தோன்றத்தான் செய்தது. கேள்விப்பட்ட மாதிரி சிவப்பாக, அழகாக, வளமாக இருந்தார். ஆனாலும், அவரது கார் போன பாதையில் உள்ள புழுதியை எடுத்து பெண்கள் முகத்தில் பூசிக் கொண்டார்கள் என்பதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தியாகத் தோன்றியது. சமீபத்தில் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில் காட்டப்படும் காட்சிகளைப் பார்க்கும் போது, ‘சவம், அது உண்மதான் போலுக்கெ’ என்றே தோன்றுகிறது. பழைய, இளமை கொப்பளிக்கும் அழகுமுகத்துடன் நடிகர் ராஜேஷ்கண்ணாவையும், அவரது ரசிகைகளையும் காட்டும் அந்த ஃபேன் விளம்பரத்தில், கோட் சூட் அணிந்த, நரைத்த தாடியுடன், களையிழந்த முகத்துடன், தள்ளாடியபடி ஒரு முதியவர் வருகிறார். ‘ஏ சண்டாளப்பாவி, இது ராஜேஷ்கண்ணால்லா’ என்று கண்ணை நம்பாத மூளை ஒருகணம் பதறியது.

தொண்ணூறுகளின் துவக்கத்தில், நல்ல புஷ்டியான கருகரு மீசையும், சவரம் செய்த கொழுப்பான கன்னமும், தனது டிரேட்மார்க் தொப்பியுமாக ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா விறுவிறுவென வேகமாக நடப்பார். அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் எனக்கு மூச்சு வாங்கும். ‘இதுக்குத்தான் ஃபிஷ்லாம் சாப்பிடணுங்கறது! ம்ம்ம், க்விக் க்விக்’ என்பார். ஓட்டமும், நடையுமாக அவரை பின்தொடர்வேன். ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு கடந்த வருடத்தில் ஒருநாள் அவரைப் பார்க்கப் போயிருந்த போது, சற்றும் எதிர்பாராத அவரது தோற்றம் அதிரவைத்தது. நரைத்த தாடி, மீசையுடன் தளர்ந்து அமர்ந்திருந்தார். ‘ஏன் ஷேவ் பண்ணல? சுத்தமா நல்லா இல்ல. என் மனசுல இருக்குற ஒங்களோட பளைய இமேஜ்தான் சரி’ என்று கொஞ்சம் கடுமையான குரலில் வருந்தினேன். ‘அடப்போடா, எத்தன நாளைக்குத்தான் ஓடிக்கிட்டிருக்குற வயச புடிச்சு நிறுத்துறது? இனி அதுபோக்குல விட்டுர வேண்டியதுதான்’ என்று சொன்னார். மெல்ல மெல்ல நானுமே அவரது தற்போதைய தோற்றத்துக்குப் பழகிவிட்டேன். சமீபத்தில் ஒருமழைநாளில் திருமதி ஜீவா இளையராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற போது, ஒரு கையில் மாலைகளையும், இன்னொரு கையில் வாத்தியாரையும் பிடித்தபடி அழைத்துச் சென்றேன்.

கோடைவிடுமுறைக்கு அம்மாவின் ஊரான ஆழ்வார்குறிச்சிக்கு செல்லும்போதெல்லாம் சிவசைலத்திலிருந்து மாம்பழத்தாச்சி வருவாள். ஒரு குறிப்பிட்ட வருடத்தில் மாம்பழத்தாச்சி ரொம்பவே வயதானவளாகத் தோன்றினாள். ’என்னாச்சி, இப்பிடி கெளவி ஆயிட்டெ?’ முதிரா சிறுவயதில் மாம்பழத்தாச்சியிடம் நேரடியாக இப்படிக் கேட்டுவிட்டேன். இத்தனைக்கும் மாம்பழத்தாச்சி, பிறக்கும் போதே கிழவர்களாகப் பிறந்திருப்பார்களோ என்று நான் சந்தேகிக்கும் வி.கே.ராமசாமி, வி.எஸ்.ராகவன் போல எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே கிழவியாகத்தான் தெரிந்தாள். ஆனாலும் அந்த முறை ரொம்பவே அவள் மீது முதுமை படிந்திருந்ததால், அப்படி கேட்டு விட்டேன். ‘பொறவு? நான் என்ன கொமரியா? வயசாகுதுல்லா’ என்று சிரித்தபடியே பதில் சொன்னாள், மாம்பழத்தாச்சி. அந்த சமயம் ஆச்சியுடன் சேர்ந்து சிரித்துக் கொண்ட அம்மா, அன்று இரவு தனியான ஒரு சந்தர்ப்பத்தில் , மாம்பழத்தாச்சியை நான் கிழவி என்று சொன்னதைக் கடிந்து கொண்டாள். ‘ஆச்சியே சிரிச்சுக்கிட்டுதானெ பதில் சொன்னா?’ என்று நான் கேட்டதற்கு, ‘ஆனா மனசுக்குள்ளெ வருத்தப்பட்டிருப்பா. பெரியவங்ககிட்டெ என்னைக்கும் இப்பிடி சொல்லக் கூடாது’ என்றாள். அதற்குப் பிறகு நீண்ட காலம் கழித்து சந்திக்கும், வயதில் மூத்தவர்களிடமெல்லாம் அம்மா என்னவிதமாகப் பேசுகிறாள் என்பதை கவனிக்க ஆரம்பித்தேன். ரொம்ப சின்ன வயதில் நான் பார்த்திருந்த கல்லிடைக்குறிச்சி நாராயண தாத்தா எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது, ‘அன்னைக்கு பாத்த மாரி அப்பிடியே இருக்கேளெ, மாமா’ என்று அம்மா வரவேற்றாள். நாராயண தாத்தா உடுத்தியிருக்கும் வேட்டி, சட்டையையே அவர் உடம்பு தாங்க முடியாமல் சிரமப்பட்டது, கண்கூடாகத் தெரிந்தது. அதற்குப் பிறகு நீண்ட காலம் கழித்து யாரைப் பார்த்தாலும், ‘அப்பிடியே இருக்கேளெ’தான்.

ஆனால் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த என் ‘இளவயது ஹீரோ’வான மணிமாமாவைப் பார்த்தவுடன் ‘அப்பிடியே இருக்கியே மாமா’ என்று கேட்க முடியவில்லை. ஸ்டெப் கட்டிங் ஹேர்ஸ்டைலும், அளவான உடற்கட்டும் கொண்ட மணிமாமா எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பான். அமைதியாக ஒரு இடத்தில் மணிமாமா அமர்ந்து நான் பார்த்ததில்லை. என்னையும் சும்மா இருக்க விடமாட்டான். காலையிலேயே தூக்கத்திலிருந்து எழுப்பி, ‘எல எந்தி, ஆத்துக்குப் போவோம்’ என்பான். தனது சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வேகவேகமாக அழுத்தி, தாமிரபரணிக்கு அழைத்துச் சென்று குளிக்க வைத்து, திரும்பும் போது வெள்ளரிக்காய் வாங்கித் தருவான். பலநாட்கள் என்னை பள்ளியில் இறக்கிவிட்டு வேலைக்குச் சென்றிருக்கிறான். எப்போதும் சுறுசுறுப்பாக, பரபரவெனத் திரியும் மணிமாமாவாக மாற சிறுவயதில் பலமுறை ஆசைப்பட்டிருக்கிறேன். இன்னொருவர் சைக்கிள் ஓட்டி பின்னால் உட்கார்ந்து நான் பார்த்தறிந்திடாத மணிமாமாவை, சென்ற வருடம் கீழப்புதுத் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாகப் பார்த்தேன். தன் மகன் சைக்கிளை அழுத்த, பின்னால் உட்கார்ந்து என்னைக் கடந்து சென்று கொண்டிருந்த மணிமாமா என்னைப் பார்த்து அடக்க முடியாத சந்தோஷச் சிரிப்புடன், ‘எல’ என்று கத்தினான். தன் மகனின் தோள் பிடித்து மெல்ல சைக்கிளிலிருந்து இறங்கினான். குரல் மூலம் மட்டுமே என்னால் மணிமாமாவை அடையாளம் காண முடிந்தது. வழுக்கைத் தலையின் சொச்ச நரைமுடிகளுடன், பற்களில்லாமல் சிரித்தபடி என்னருகில் வந்து, ‘எப்பிடிலெ இருக்கெ?’ என்று என் கன்னம் தடவி முத்திக் கொண்டான். நடுங்கிக் கொண்டே இருக்கும் ஒரு கையை மற்றொரு கையால் பிடித்துக் கொண்டான். சிரமத்துடன் கண்ணீரை அடக்கிக் கொண்டு, ‘என்ன மாமா ஆச்சு, ஒன் கைக்கு?’ என்றேன். ‘அது ஒண்ணுமில்லலெ. நரம்புத் தளர்ச்சிதான். ஒனக்கு எத்தன பிள்ளேளு?’ என்றான்.

மணிமாமாவைப் பார்த்த பிறகு திருநெல்வேலியில் என் இளவயது தொடர்புகளில் உள்ள மூத்தவர்களை சந்திக்க மனம் அஞ்சுகிறது. மனதில் தங்கியிருக்கும் அவரவர்களுடைய பழைய தோற்றத்துடனேயே அவர்களைப் பற்றிய நினைவுகளையும் பத்திரமாக வைத்துக் கொண்டால் போதும் என்று தோன்றுகிறது. இப்போதும் யாராவது, ‘எல, நேத்து நம்ம மீனாட்சி அக்காவ பாத்தென். அத ஏன் கேக்கெ? ஆளே அடையாளம் தெரியல. ஒன்னய பாக்கணுங்கா’ என்று சொன்னால் நாசூக்காகத் தவிர்த்து விடவே விரும்புகிறேன். மீண்டும் மீண்டும் நான் மறக்க முயன்று தோற்கிற, அம்மாவின் இறுதிக்காலத் தோற்றநினைவுகளும் ஒரு காரணமாக இருக்கலாம். புற்று நோய்க்கான சிகிச்சையினால் தனது நீண்ட தலைமுடியை இழந்து, முற்றிலுமாக முகமும், குரலும் மாறி வேறொரு உருவமாகவே மாறியிருந்தாள்.

காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறதுதான். நான் பார்த்து பழகிய, பழகிப் போன உருவங்களில் மாற்றம் வரும்போது அதை சட்டென்று எதிர்கொள்ள முடியாமல் திணறித்தான் போகிறேன். வாத்தியாரைத் தொடர்ந்து என்னைத் திணறவைத்தது, எழுத்தாளர் ஜெயகாந்தனின் தோற்றம். முன்பு நான் பார்த்த ஜெயகாந்தன், தனது மடத்தில், சுழலும் நாற்காலியில் அமர்ந்தபடி மீசையை முறுக்கியவாறே முழங்கிக் கொண்டிருப்பார். ’என்னை மதித்து ஒருவர் எனக்கு கடிதம் எழுதுகிறார். பதிலுக்கு நான் அவரை மதிப்பதனால் அவருக்கு ஒரு பதில் கடிதம் எழுதுகிறேன். அது முழுக்க முழுக்க இரண்டு மனிதர்களின் தனிப்பட்ட, அந்தரங்கமான விஷயம். கடித இலக்கியம் என்ற பெயரில் இதை பிரசுரிப்பதன் மூலம் நீங்கள் என்னையும், எனக்கு கடிதம் எழுதிய நண்பரையும் அவமானப்படுத்துகிறீர்கள்’. ‘கடித இலக்கியம்’ குறித்த தனது அபிப்ராயத்தை இப்படி அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போதைய அவரது மடம்முழுக்க ‘சிவமூலிகைப் புகை’ படர்ந்திருந்தது. அந்த ஒவ்வாமையையும் மீறி அவரது கம்பீரக் குரல் எங்களை வசீகரித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போதைய ஜெயகாந்தன் பழைய மடத்தில் இல்லை. சமீபகாலமாக அவரைப் போய் சந்திக்காமல் இருப்பதற்கு, இடமும், சூழலும் மட்டும் காரணமல்ல.

jk-sabha

[எழுத்தாளர் ஜெயகாந்தனும், எழுத்தாளர் வே.சபாநாயகமும்]

குழந்தைகளாக நாம் பார்த்து பழகிய பிள்ளைகளை, வெகுகாலம் கழித்து வளர்ந்தவர்களாகப் பார்க்கும் போது ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம் ஏற்படுகிறதுதான். சுமார் இருபது ஆண்டுகாலம் கழித்து, வளர்ந்த வாலிபனாக ‘மாமா’ என்று என் தோள் தொட்டு முத்தக்காவின் மகன் என்னை அழைத்த போது அடையாளம் பிடிபடாமல் திணறினேன். சில நொடிகளில் கண்டுகொண்டபின், மனதில் தங்கியிருந்த அவனது குழந்தைச்சித்திரத்தின் மேல் இப்போதைய வாலிப உருவம் திக்கித்திணறிப் படர்ந்தது.

கடந்த சிலதினங்களுக்கு முன் என்னை சந்திக்க ஒரு போலீஸ்காரர் வந்தார். சினிமாவில் போலீஸ்காரர்களாக நடிப்பவர்களிடமிருந்தே விலகி இருக்கும் நான், ஒருகணம் நடுங்கித்தான் போனேன். ‘சொல்லுங்க ஸார். உக்காருங்க’ என்றேன். உட்காரும் போதும்கூட, தனது விரிந்த நெஞ்சை மேலும் விரிக்கும்வண்ணம் தோளை உயர்த்தி, ஆழ்ந்து மூச்சிழுத்து, புருவம் தூக்கி ‘என்னய தெரியலியா?’ என்றார். மனதுக்குள் சொல்லத் துவங்கிய கந்தசஷ்டிகவசம் தடைபட்டது. ‘தெரியலீங் . .க . . ளெ . . .’ என்றேன். சத்தமாகச் சிரித்தபடி, மேஜையில் ஓங்கி தட்டி, ‘நாந்தாண்ணே வீரபாகு’ என்றார்(ன்). கல்லூரிக்காலங்களில் நாங்கள் வாலிபால் விளையாடும் போது, மரம் ஏறி எங்களுக்கு நெட் கட்டும் சிறுவன். ‘எண்ணே எண்ணே ஒரே ஒரு ரவுண்டு’ என்று கெஞ்சி எங்களிடமிருந்து சைக்கிளை வாங்கி, அரைபெடல் போட்டு சந்தோஷமாக ஓட்டும் பொடியன். ‘எலெ குட்டையான்னு கூப்பிடுவேளெ! மறந்துட்டேளா?’ என்றார், அந்த போலீஸ்காரக் குட்டையர். அவன் பேசிக் கொண்டே போகப் போக மெல்ல தயக்கம் விடைபெற்று கொண்டது. சகஜமாகப் பேச ஆரம்பித்தோம். ‘ஸாரிடே. வருசமாச்சு பாத்தியா. அதான் சட்டுன்னு புடிபடல’ என்றேன். ‘அதனால என்னண்ணே? ஆனா, நீங்க அப்பிடியே இருக்கேளெ’ என்றான், குட்டையன்.