விகடனிலிருந்து கிழக்கு வரை . . .

‘கிழக்கு’ பதிப்பகத்திலிருந்து ஹரன்பிரசன்னா ஃபோன் பண்ணும்போது எப்படியும் சாயங்காலம் ஐந்து, ஐந்தரை இருக்கும்.
‘அண்ணாச்சி, புக் ஃபேருக்கு வந்துக்கிட்டிருக்கேளோ?’.

‘அட! நான் வாரது எனக்கே தெரியாதெய்யா. ஒங்களுக்கு எப்பிடி தெரிஞ்சுது?’

‘ரஜினிக்கு அப்பொறம் ஒங்க விஷயம்தாம்யா ஜாஸ்தி லீக் ஆகுது. சரி, எப்பொ வாரிய? அத சொல்லுங்க’.

பிரசன்னாவிடம் சொன்னபடி ஒருமணிநேரத்துக்குள் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடியாதபடி கடுமையான போக்குவரத்து நெரிசல். உள்ளே நுழையும்போதே ஏதோ ஒரு ஸ்டாலிலிருந்து என்னைவிட இரண்டுமடங்கு உயரமான ஒரு மனிதர், தன் நீண்ட கைகளை நீட்டியபடி என்னருகில் வந்து கைகளைப் பற்றிக் குலுக்கினார். ‘வாராவாரம் திருநெல்வேலிக்குக் கூட்டிட்டுப் போயி காமிச்சதுக்கு ரொம்ப நன்றி’ என்றார். அண்ணாந்து பார்த்து அவருக்கு நன்றியைச் சொல்லிவிட்டு நேரே ‘ஆனந்த விகடன்’ ஸ்டாலுக்குச் சென்றேன். முந்தைய தினமே ‘விகடன்’ ஸ்டாலுக்கு வரச் சொல்லிக் கேட்டிருந்தார், ‘விகடன்’ பதிப்பகத்தைச் சேர்ந்த நண்பர் பொன்ஸீ. விகடன் ஸ்டாலைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் இன்னும் சில கைகுலுக்கல்கள், விசாரிப்புகள்.

‘இன்னும் கொஞ்ச வாரம் எளுதியிருக்கலாம். Unexpected-ஆ சட்டுன்னு முடிச்சிட்டீங்க.’

‘ஸார், நீங்க ச்சுக்காதானெ?’

‘மூங்கில் மூச்சு மாதிரியே மூங்கில் பேச்சுன்னு அடுத்து நீங்க எளுதலாமெ? அப்பிடி ஏதும் ஐடியா இருக்கா?’

ஒருசிலர் கையைப் பிடித்து அழுத்தி, ‘ஆங், அப்பொறம்? ஒரு காப்பி சாப்பிடுவோம், வாங்க’ என்று தோளணைத்து வலுக்கட்டாயமாக இழுத்தார்கள். ‘வீட்ல எல்லாரும் சௌக்யமா? ஆமா, இவரு யாரு?’ கூட வந்திருந்த நண்பன் பகவதியைக் கேட்டார்கள். ‘நம்ம ஃபிரெண்டு. திருநவேலில இரும்புக்கட வச்சிருக்காரு. பேரு பகவதி’. கூச்சத்தில் பகவதி நெளிந்தான். ‘எல, என்னய யாருக்கும் இண்ட்ரொட்யூஸ் பண்ணாத. லேடீஸ்னா ஓகே’ என்றான்.

‘விகடன்’ ஸ்டாலைத் தேடி கண்டுபிடித்துச் சென்றவுடன் ‘விகடன்காரர்கள்’ அடையாளம் தெரிந்து அநியாயத்துக்குக் கண்டுகொண்டார்கள்.

‘ஸார், மொதல்ல உக்காருங்க’.

சட் சட்டென்று ஒளியடிக்க ஆரம்பித்தது. பொன்ஸீ பாய்ந்து வந்தார். உடனே பதிப்பகத்தைச் சேர்ந்த மற்றொரு நண்பரும் வந்து கைகுலுக்கி, ‘ஸார், ‘மூங்கில் மூச்சுதான் நம்பர் ஒன் சேல்ஸ். கொடவுன்ல இருந்து பண்டில் பண்டிலா கொண்டு வந்து எறக்கிக்கிட்டிருக்கோம். ஒங்களோடது, முத்துக்குமார் ஸாரோடதும்தான் மூவ் ஆகிட்டே இருக்கு’ என்றனர். சந்தோஷப்படுவதற்கு பதிலாக ஏனோ பயமாக இருந்தது. தொடர்ந்து பொன்ஸீ பரபரப்பானார். ‘உள்ளெ அனௌன்ஸ் பண்ணுங்க’. அதைத் தொடர்ந்து ‘மூங்கில் மூச்சு ஆத்தர் வந்திருக்காரு. புஸ்தகத்துல கையெளுத்து வாங்கணும்னு நெனைக்கறவங்க வாங்கிக்கலாம்’. ஒவ்வொருவரிடமும் அவரவர் பெயரைக் கேட்டு எழுதி நடுங்கும் கரங்களால், எனக்கே புரியாத கையெழுத்தை இட்டேன். ஒருசிலர் புகைப்படங்கள் எடுத்தனர். இதற்கிடையே பொன்ஸீ ஸ்டாலுக்கு உள்ளே அழைத்தார். ‘ஸார், ஒருநிமிஷம் வாங்க’. நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கு நடுவே என்னை நிற்க வைத்து, கையில் தண்டியான ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைக் கொடுத்து பிரித்துப் படித்தவாறு, ஓரக்கண்ணால் காமிராவைப் பார்க்க வைத்து சில புகைப்படங்கள் எடுத்தார்.

‘லெஃப்ட்ஸைடு பேஜப் பாருங்க ஸார்.’

‘கீளெ பாத்தீங்கன்னா ஃபேஸ் தெரியாது ஸார்.மேல் பக்கம் பாருங்க.’

‘சும்மா பாக்காம, படிக்கிற மாதிரி பாருங்களேன்.’

இளையராஜாவுக்குப் பிடித்தமான புகைப்படக்காரர் என்பதாலும், ‘வருசநாட்டுஜமீன்’ எழுதிய மதிப்புக்குரிய எழுத்தாளர் என்பதாலும் பொன்ஸீயின் பிரியமான இம்சைகளை வேறுவழியில்லாமல் பொறுத்துக் கொண்டு ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை ஏந்தியபடி சில நிமிடங்கள் நின்றேன். புத்தகங்கள் வாங்குவதற்கு இடைஞ்சலாக நந்தி மாதிரி நான் நிற்பதை முறைத்துப் பார்த்தபடி ஒரு மாமி நின்று கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அவர் பற்கள் அரைபடும் சத்தம் கேட்டது. வெளியே வந்து விட்டேன்.

எனக்குக் கிடைத்த சொற்பநேர புகழ்வெளிச்சத்துக்கு தடையாக தம்பி நா.முத்துக்குமார் வந்து என் தோள் தொட்டு ‘எப்பண்ணே வந்தீங்க?’ என்றபடி என்னருகில் அமர்ந்தான். ‘வாங்க ஸார். ஒங்க புஸ்தகம்தான் ஸார் நம்பர் ஒன் சேல்ஸு. குடவுன்ல இருந்து எறக்கி முடியல. ஒங்க புஸ்தகமும், ஸாரோட மூங்கில் மூச்சும்தான் டாப்பா போயிக்கிட்டிருக்கு’. வழக்கமான உணர்ச்சியற்ற முகத்துடன் முத்துக்குமார் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ‘நா,முத்துக்குமார் ஸார் ஸ்டாலுக்கு வெளியெ உக்காந்த்திருக்காரு. கையெளுத்து வாங்க நெனைக்குறவங்க அவர்கிட்டெ கையெளுத்து வாங்கிக்கலாம்’. பேனா கைமாறியது. ‘ஏ, முத்துக்குமார் ஸார்டி. ஸெவென் ஜீ பாட்டுல்லாம் எளுதுனாரே’. அரைநொடியில் காட்சி மாறி, வெளிச்சம் இடம் பெயர்ந்தது. வேறு புத்தகங்களில் கையெழுத்து வாங்க வந்தவர்களிடம் முத்துக்குமார் கேட்டான். ‘என் புஸ்தகம் வாங்கலியா? மத்தவங்க புஸ்தகத்துல என் கையெளுத்த கேக்குறீங்க’. ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணம் சொல்லி சமாளித்தார்கள். இப்படி கேட்கிறானே, கோவித்துக் கொள்ள மாட்டார்களா என்று தோன்றியது. சரி, என்ன இருந்தாலும் பிரபலமான பாடலாசிரியன். அவன் கேட்கலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, ‘எட்டு சக்தி உங்களுக்குள்’ புத்தகத்தில் எதுவுமே கேட்காமல் கையெழுத்திட்டேன். புத்தகத்தை நீட்டிய அந்த மாமா வேறு ரொம்பப் பெரிதாக இருந்தார்.

‘ஸார், நெஜம்மாவே குஞ்சுன்னு ஒருத்தர் இருக்காரா?’ கையெழுத்து வாங்கிய ஒரு அம்மையார் கேட்டார். அருகில் நின்ற பகவதி சிரித்தான். இதற்குள் ‘கிழக்கு’ ஸ்டாலில் இருந்து ஹரன் பிரசன்னா மீண்டும் ஃபோன் பண்ணினார். ’போயிட்டு மறுபடியும் வரேன்’. விகடனிலிருந்து கிளம்பி கிழக்குக்குச் செல்லும் போது பகவதி கேட்டான்.

‘குஞ்சுன்னு ஒருத்தன் இருப்பாங்கறதையெ இவங்களுக்கெல்லாம் நம்பமுடியலயோல?’

‘கிழக்கு’ ஸ்டாலை நெருங்கும் போது தூரத்திலேயே ஒரே ஒரு நாற்காலி போட்டு சாதாரண மனிதர்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்ததால், பிரசன்னா அங்கில்லை என்பது உறுதியானது. வழக்கமாக பிரசன்னா மூன்று, நான்கு நாற்காலிகளின் வளைந்த கால்கள் கதற கதற அதன் மீது பரந்து விரிந்து நிறைந்திருப்பார். உள்ளே சென்று புத்தகங்களை நோட்டமிட்டேன். அங்கும் சிலர் கண்டு கொண்டார்கள். ‘ஸார், எனக்கும் திருநவேலிதான். கீளப்புதுத்தெரு. எங்க அக்காமகன் ஒங்கள பாக்கணும்ங்கான்’. ஒரு சின்னப்பையன் என்னைப் பார்த்துத் தயங்கிச் சிரித்தான். எட்டாம் கிளாஸ் படிப்பானாக இருக்கும். அவன் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் என்ற செய்தியை கொஞ்சம் கூட நம்பாமலேயே அவர்களிடம் சிலநிமிடங்கள் பேசினேன். சந்தேகத்துடனேயே அவன் கன்னம் தொட்டு பேசினேன். ‘என்னடே படிக்கெ?’ இதற்குள் பிரசன்னா வந்தார். ‘வாங்க வாங்க. ஒங்கள பாக்கணும்னு நம்ம ஊர்க்காரரு ராஜகோபால் காத்துக்கிட்டிருக்காரு. எப்பிடியும் வருவாரு’ என்றார். நான் கேட்காமலேயே தன்னை மறந்து, ‘தாயார் சன்னதி’ பட்டயக் கெளப்புதுய்யா. டாப் டூல இருக்கு’ என்று உண்மையை உளறி, ‘சே’ என்று கையை உதறி நாக்கைக் கடித்துக் கொண்டார். ‘கொஞ்சம் புஸ்தகம் வாங்கணும். வாங்கிட்டு வாரேன். பி.ஏ.கிருஷ்ணனோட ‘கலங்கிய நதி’ நம்மக்கிட்டெ இருக்கா?’ என்று கேட்டேன். ‘அது காலச்சுவடுல்லா’ என்றார்.

‘காலச்சுவடு’ போய் ‘கலங்கிய நதி’ உட்பட மேலும் சில புத்தகங்களைப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்த போது, ‘தாயார் சன்னதி எளுதுனது நீங்கதானெ?’ ‘தாயார் சன்னதி’ புத்தகத்திலேயே கையெழுத்து கேட்டார், ஒரு வாசகர். கையெழுத்து போட்டு சில நிமிடங்கள் ஆகி ‘டச்’ விட்டுப் போயிருந்ததால், அவரது பெயரைக் கேட்டு, பதற்றத்தில் அவரது கையெழுத்தையே போட்டு அடித்து, கஷ்டப்பட்டுத் தேடிப் பார்த்தால் தோராயமாகக் கண்டுபிடித்து விடுகிற மாதிரி, ‘சுகா’ என்று எழுதி அவர் கையில் கொடுத்தேன். ‘எங்கெ போனாலும் ஒன்னய தேடி வந்து கையெளுத்து வாங்குதாங்களே. பாக்கதுக்கு பெருமையா இருக்குலெ.’ பகவதி நெகிழ்ந்தான். ஆயிரம் ரூபாய்க்குப் பெறுமான புத்தகங்களுக்கான பில்லை அவன் கையில் கொடுத்தேன்.

மலையேற்றத்துக்கான உடையணிந்த ஒரு வாலிபர் அருகில் வந்து ‘ஹாய் ஸார்’ என்றார். ’ ‘சொல்வனம்னு இண்டெர்நெட்ல ஒரு பத்திரிக்கை நடத்துறீங்கள்ல?’

‘அது நான் நடத்தலெங்க. ஒரு பெரிய க்ரூப் அத நடத்துது. அதோட மொதல் இஷ்யூல இருந்து அதுல எளுதுறென். அவ்வளவுதான்.’

சிறிதுநேரத்தில் அவரது நண்பர் ஒருவர் ’மச்ச்ச்சான்’ என்றபடி அருகில் வந்தார். அவரது உடை குதிரையேற்றத்துக்கானது.

‘விகடனுக்கு அப்பொறம் இப்பொ எதுல எளுதுறீங்க ஸார்?’

‘சொல்வனம்னு ஒரு பத்திரிக்க நடத்துறாரே! அதுல எளுதுறாராம். இப்பொதான் சொன்னார்’.

பகவதியிடம், ‘ரொம்ப தாகமா இருக்கு. வெளியெ போயி ஒரு டீ கீ குடிச்சுட்டு வருவோமா?’ என்றேன்.

வெளியே சென்ற போது ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சித்திடலையும் காவல் காக்கும் ‘பூதத்தான் சாமி’ மாதிரி ‘பாட்டையா’ பாரதி மணி ஒரு நாற்காலி போட்டு பைப் புகைத்துக் கொண்டிருந்தார். ‘ஏ, வாடே’. சில நிமிடங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பிரசன்னா அழைத்தார். ‘ஐயா, ராஜகோபால் வந்திருக்காரு. வாரேளா?’ மீண்டும் ‘கிழக்கு’ ஸ்டாலுக்குச் சென்ற போது நான் முன்பின் பார்த்திராத, மின்னஞ்சல்கள் மூலம் மட்டுமே அறிமுகமாயிருக்கிற ராஜகோபால் தயக்கத்துடன் என்னருகில் வந்து, ‘அண்ணாச்சி’ என்றழைத்து அறிமுகம் செய்து கொண்டார். அவருடன் இன்னும் இரண்டு நண்பர்கள். ‘மூங்கில் மூச்சு’ புத்தகத்தில் கையெழுத்து வாங்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ராஜகோபால் ‘எறும்பு’ என்ற பெயரில் எழுதி வருவதாக முன்பே மின்னஞ்சலில் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் கூட உறுத்தாமல், மென்மையாக, பணிவாகப் பேசி ‘பிள்ளையார் எறும்பாக’ நடந்து கொண்டார். அவரிடமும் அவரது நண்பர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன். வாங்கிய புத்தகப்பைகளின் கனம், தோளிலும், கைகளிலும் வலியைத் தந்தன.

வெளியே வரும்போது காவி வேட்டி கட்டிய ஒரு மனிதர் ஓடி வந்தார். ‘ஸார், நீங்கதானெ விகடன்ல தொடர்கத எளுதுனது?’ கையைப் பிடித்து நிறுத்தினார். ‘தொடர்கட்டுர எளுதினென்’. திருத்தினேன். ‘அதுசரி. ரெண்டும் ஒண்ணுதானெ. ஒங்க பேரச் சொல்லுங்க. ச்சே. சட்டுன்னு மறந்துட்டனெ?’. பகவதி சிரிப்பை அடக்கியபடி நகர்ந்து சென்றான். கடுப்பை அடக்கிக் கொண்டு ‘சுகா’ என்றேன். ‘ஆங், ஸாரி ஸார். பொதுவா எனக்கு மெமரிபவர் அதிகம். எப்பிடியோ மறந்துட்டென். ஆமா, ஒங்க தொடர் பேரென்ன?’

புத்தகக் கண்காட்சியை விட்டு கார் கிளம்பியபோது இதைச் சொல்லிச் சொல்லி சிரித்தான் பகவதி. ’இத்தன பேரு ஒன்ன பாத்து, கையெளுத்து வாங்கி, ஃபோட்டோ எடுத்ததையெல்லாம் ஒரே ஒருத்தன் வந்து காலி பண்ணிட்டானெல’. கோபத்தில் ஏதோ சொல்ல வாயெடுத்தேன். பேச்சை மாற்றும் விதமாக, ‘ஆனா நல்ல வேளடே, கடேசி வரைக்கும் என்னய யாருக்கும் அடையாளம் தெரியல. நீயும் சொல்லல’ என்றான், ‘பகவதி’ என்னும் தற்காலிகப் பெயரில் அதுவரை ஒளிந்திருந்த ‘குஞ்சு’.

மாங்குலை இல்லாத கல்யாணம்

‘மிருதங்கம் – ஒரு பறவைப்பார்வை எழுப்பும் பல கேள்விகள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சொல்வனத்தில் படித்தேன். தலைப்பில் இருந்த மிருதங்கம் என்ற வார்த்தைதான் என்னை படிக்கத் தூண்டிற்று. எழுதியவர் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. பிறகு மீண்டும் ‘மிருதங்கம் – தஞ்சாவூரும், புதுக்கோட்டையும்’ என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரையையும் படிக்க நேர்ந்தது. இதற்கு அடுத்ததாக ‘மான்பூண்டியா பிள்ளை’ என்ற கட்டுரையைப் படித்த பிறகுதான் அதை எழுதியவர் ‘லலிதாராம்’ என்றறிந்தேன். சேதுபதி அருணாசலத்திடம், ‘சேது, சொல்வனத்துல இசைக்கட்டுரைகள்லாம் எளுதுறாங்களே, லலிதாராம்! யாருங்க அந்த அம்மா? பிரமாதமா இருக்கு’ என்றேன். அடக்க முடியாமல் சிரித்தபடி, ‘அய்யோ அண்ணாச்சி. அது பொம்பள இல்ல. ஆம்பிள. நம்ம நண்பர்தான். பேரு ராமச்சந்திரன்’ என்றார் சேதுபதி. அதற்குப் பிறகும் ‘லலிதாராம்’ எழுதிய ‘தட்சிணாமூர்த்தி பிள்ளை, பழனி முத்தையா பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி’ போன்ற இசைமேதைகளைப் பற்றிய கட்டுரைகளையெல்லாம் படித்தேன்தான் என்றாலும், ‘டங்குஸ்லிப்பாக’க்கூட அவற்றைப் பாராட்டி ஒரு வார்த்தையும் சொல்லிவிடவில்லை. இதற்கிடையே நான் எழுதிய சில கட்டுரைகளைப் பாராட்டி லலிதாராமிடமிருந்து ஒன்றிரண்டு மின்னஞ்சல்கள் வந்து, அவற்றுக்கு சம்பிரதாயமாக பதிலும் போட்டிருந்தேன். ஆக, பார்த்தேயிராத லலிதாராமுடனான எனது உறவு இந்த அளவில்தான் இருந்தது. இந்த சமயத்தில்தான் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணிய பிள்ளை பற்றி லலிதாராம் எழுதிய ‘துருவநட்சத்திரம்’ என்ற புத்தகத்தை ‘சொல்வனம்’ வெளியிட இருக்கிறது என்ற செய்தி வந்தது.

‘துருவநட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைக்க விரும்புவதாகவும், அதற்காக என்னுடைய கைபேசி எண்ணை லலிதாராம் கேட்பதாகவும் சேதுபதியிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. ‘தாராளமாக எண்ணைக் கொடுங்கள்’ என்று சேதுபதிக்கு பதில் அனுப்புவதற்குள், ‘லலிதாராமுக்கு ஒன்னோட மொபைல் நம்பர குடுத்திருக்கேன்’ என்று ‘பாட்டையா’ பாரதி மணியிடமிருந்து தகவல் வந்தது. சிறிது நேரத்திலேயே ’அழைக்கலாமா’ என்ற குறுஞ்செய்தியும், பதிலுக்குப் பின் அழைப்பும் வந்தது. ‘வணக்கம் ஸார். நான் லலிதாராம் பேசுறேன்’. மனதோரத்தில் ரகசியமாக ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து போகிற மாதிரி ‘லலிதாராம்’ என்ற ஆண்குரல் என்னிடத்தில் பேசியது. ‘முடிந்தால் வருகிறேன் பிரதர்’ என்றேன்.

எனது முதல் புத்தகமான ‘தாயார் சன்னதி’யை வெளியிட்ட அப்பாவிகள் சொல்வனக்காரர்கள் என்பதாலும், மறைந்த இசை மாமேதைகள் பலரைப் பற்றி ஆத்மார்த்தமாக தொடர்ந்து எழுதிவரும் லலிதாராம் என்கிற உண்மையான இசை ரசிக எழுத்தாளருக்காகவும் ‘துருவநட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றேன். சாலிகிராமத்திலிருந்து மயிலாப்பூர் செல்வதென்பது, என்னைப் பொருத்தவரைக்கும் வெளிநாட்டுப் பயணம். முதல் நாள் இரவிலிருந்தே மனதுக்குள் கிளம்பிக் கொண்டிருந்தேன். மிகச் சரியாக ‘ராகசுதா ஹால்’ இருக்கும் இடத்தைத் தவறவிட்டு, முழித்தபடி ‘ஹிந்து’வில் பணிபுரியும் நண்பர் கோலப்பனை கைபேசியில் அழைத்தேன். ‘இந்தா வாரேன்’ என்றபடி ஒரு கட்டிடத்துக்குள்ளிருந்து கோலப்பன் வெளியே வந்தார். ‘இதான் ராகசுதா ஹாலா?’ என்றபடி பார்க்க, ‘பொஸ்தகமெல்லாம் வெளியிட்டு முடிச்சாச்சு. நீங்க உள்ள போங்க. நான் இன்னொரு நிகழ்ச்சிக்கு போயிட்டு ஓடி வந்திடறேன்’.

முக்கால்வாசிக்கும் மேலே நிறைந்திருந்த அரங்குக்குள் நான் நுழையும் போது திருச்சி சங்கரன் பேசிக் கொண்டிருந்தார். கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையின் ஓரத்து நாற்காலியில் அமர்ந்திருந்த ‘சொல்வனம்’ பாஸ்கர் என்னைப் பார்த்து கையை ஆட்டினார். அவரருகில் சென்று அமர்ந்த பிறகும் அவர் கை ஆடிக் கொண்டிந்ததை கவனித்தேன். உற்றுப் பார்க்கும் போது ஒட்டுமொத்த பாஸ்கரிலும் ஓர் ஆட்டம் தெரிந்தது. ‘ஒருமாதிரியா பேசிட்டேன்’. சத்தமாகச் சொல்லியபடி பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தார். ‘பேசுறதென்ன. டைப் பண்ணிட்டு வந்து வாசிச்சுட்டேன்’. மேலும் சத்தமாகச் சொல்லியபடி அச்சிட்ட காகிதத்தை என்னிடம் கொடுத்தார். கண்மருத்துவமனையில் பெரிய எழுத்துகளில் ‘அ, ம, ச, ப’ போர்டு வைத்திருப்பது போல, பெரிய எழுத்துகளில் டைப் செய்யப்பட்டிருந்தது. ‘முன்ன பின்ன பேசி பளக்கமில்ல பாத்தீங்களா. அதான்’. இந்த முறை பாஸ்கர் என்னிடம் சொன்னது மேடையில் பேசிக் கொண்டிருந்த திருச்சி சங்கரனுக்கேக் கேட்டது. மெதுவாக பாஸ்கரின் தொடையை அழுத்தினேன். ஆதரவாக நான் அவரைத் தட்டிக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு இன்னும் சத்தமாக ‘பொன்னாடைல்லாம் பையில வச்சிருக்கேன். ஆனா யாருக்கு போத்துறதுன்னு தெரியல’என்றார். மனிதருக்கு முதல் முறையாக மேடையேறிய பதற்றம் இன்னும் குறையவில்லை என்பது புரிந்தது. மனதுக்குள் ‘நல்ல வேளை, நாம லேட்டா வந்தோம். இல்லேன்னா நம்மளையும் மேடையேத்தி விட்டிருப்பாங்க. ரொம்பப் பெரிய எளுத்துல வணக்கம்னு சொல்லி அசிங்கப்பட்டிருப்போம்’ என்று நினைத்துக் கொண்டேன்.

ரொம்ப சத்தமாகப் பேசுகிறார் என்பதால் பாஸ்கரிடம் மேலும் பேச்சு கொடுக்காமல், அமைதியாகவே இருந்தேன். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஒருவரைப் பார்த்தவுடன், மெதுவாக பாஸ்கரின் காதுக்கருகில் கையைக் குவித்து, எல்.ஆர்.ஈஸ்வரியின் ‘காதோடுதான் நான் பேசுவேன்’ போல, ‘பாஸ்கர், அவருதான் லலிதாராமா?’ என்று கேட்டேன். ‘சே, அவரு சின்ன வயசுக்காரர். இவரு இல்ல’. இன்னும் அதே பெரிய சைஸ் எழுத்தில்தான் சொன்னார். சிறிது நேரத்தில் ‘கிழக்கு பதிப்பகத்தின் புத்தக வடிவமைப்பாளர் மணிகண்டன்’ வந்தார். ‘பாஸ்கர், இவர்தான் மணிகண்டன். இவருக்கு ஒரு பொன்னாடையை போர்த்திடுங்க’ என்றேன். என்னைப் பார்த்து சிரித்தபடி அருகில் வந்த மணிகண்டனுக்கான பொன்னாடையை எடுத்து, ‘நீங்களே குடுத்திருங்க’ என்றார் பாஸ்கர். ‘சொல்வனம் சார்பா நீங்கதாங்க குடுக்கணும்’ என்று நான் சொன்னதை காதிலேயே வாங்கிக் கொள்ளாதவராக, ‘அம்மையப்பன் தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன்’ என்பது போல ‘நீங்கதான் சொல்வனம், சொல்வனம்தான் நீங்க’ என்றார். இந்த கூத்து நடக்கும் போது இன்னும் மேடையில் பேசிக் கொண்டுதானிருந்தார்கள். சிரித்தபடி ஸ்நேகமாக என்னருகில் வந்த மணிகண்டனின் முகம் மாறத் தொடங்கியது. சட்டென்று பாஸ்கரின் கையிலிருந்து சால்வையை வாங்கி மணிகண்டன் கைகளில் திணித்தேன். கடமை முடிந்த ஆசுவாசத்துடன் ‘அப்போ நான் கிளம்பறேன் ஸார்’. வணங்கி வழி விட்டேன். ‘ஆனா பாருங்க. இன்னும் ஒரு பொன்னாட பாக்கி இருக்கு. இத என்ன பண்றதுன்னு தெரியல’ என்று போகிற போக்கில் பாஸ்கர் சொன்னதைக் கேட்காத மாதிரி உட்கார்ந்திருந்தேன்.

‘ரஜினி’ ராம்கி அருகில் வந்து உட்கார்ந்தார். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த உற்சாகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். இதற்குள் மேடையில் பேச்சு முடிந்து கச்சேரி தொடங்க இருந்தது. கதவைத் திறந்து கொண்டு மின்னல் வேகத்தில் பாஸ்கர் வந்தார். எங்கே மீந்து போன பொன்னாடையை எனக்கு போர்த்தி விடுவாரோ என்று பயந்தேன். பாஸ்கருடன் சிகப்பு ஜிப்பா அணிந்த ஒரு இளைஞர் வந்தார். பால்மணம் மாறா பூமுகம். ‘இவர்தான் சுகா’. பாஸ்கர் சொல்லவும், ‘அண்ணா, நான் தான் லலிதாராம்’. ‘முக்கா முக்கா மூணுவாட்டி’ கட்டிப்பிடித்து, ‘என்னை கௌரவப்படுத்திட்டீங்க, அண்ணா’ என்றார். சங்கோஜமாக இருந்தது. ‘பாரதிமணி ஸார் வரமுடியாதுன்னு சொன்னது வருத்தமா இருந்துச்சு. ஆனா நீங்க வந்து ஹானர் பண்ணி அத மறக்க வச்சுட்டீங்க’ என்றார். ‘ஏன் அவரு வரல?’ என்றேன். ‘அவரு பல்ல புடுங்கி பாக்கறதுக்கே பயங்கரமா இருக்காறாம்’ என்றார். ‘ஏற்கனவே அப்பிடித்தானே இருப்பாரு’ என்று நான் சொன்னதற்கு ராம்கி சரிந்து சிரித்தார். இதற்குள் கச்சேரி ஆரம்பமாக ‘விழாநாயகன்’ லலிதாராம் என்னருகிலேயே அமர்ந்து கொண்டார். லலிதாராமை அறிமுகம் செய்து விட்டு வெளியே சென்ற பாஸ்கர், மீண்டும் நைஸாக உள்ளே வர, ‘பாஸ்கர், நீங்கதான் அப்பொவெ கெளம்பறதா சொன்னீங்கள்ல? ஏன் மறுபடியும் மறுபடியும் வரீங்க?’ கொஞ்சம் சத்தமாக நான் சொல்லவும், ‘இந்த வாட்டி நெஜமாவே போயிடறேன் ஸார்’. பாஸ்கர் கிளம்பிப் போனார்.

திருமதி விஜயலக்ஷ்மி சுப்பிரமணியத்தின் கச்சேரி ஆரம்பமானது. எல்.சுப்பிரமணியம், அக்ஷய் ஆனந்த் இருவரின் இரட்டை மிருதங்கம். இருவரும் பிரமாதமாக வாசித்தார்கள். விஜயலக்ஷ்மியும் அவரது குரல் எல்லைக்குட்பட்டு நன்றாகவே பாடினார். லலிதாராமுக்காக ‘லலிதா’ ராகமும், பிறகு கல்யாணியும் பாடினார். கல்யாணியை ராகவேந்திர ராவ் வயலினில் வாசித்த போது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. ராகவேந்திர ராவின் முகத்தில் துளியும் தென்படாத ‘பாவம்’, கைகளில் அநாயசமாகப் பேசியது. இரட்டை மிருதங்கத்தின் கைகளை, ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி கொஞ்சம் கொஞ்சம் அவிழ்த்து விட்டிருக்கலாம். ‘எல, லலிதாரம் என்னைப் பாடக் கூப்பிட்டிருக்கானா, இல்ல ஒங்கள வாசிக்கக் கூப்பிட்டிருக்கானா’ என்பது போல கொஞ்சம் கண்டிப்பாக நடந்து கொண்டார். எனக்கு அதிகம் பழக்கமில்லாத காந்தாமணியில் சௌக்கியமாகவே பாடினார். சாதாரணமாக துணிந்து யாரும் பாடிவிட முடியாத ஒரு ராகத்தில் அவர் பாடியது, அவரது சாதகத்தையும், அனுபவம் தந்த தைரியத்தையும் காட்டியது. ரொம்ப நாட்கள் கழித்து என்னை மறந்து கைகளை வீசி, தாளம் போட்டு ரசித்து கேட்ட கச்சேரி. இரட்டை மிருதங்கத்தில் ஒற்றை மிருதங்கக்காரனான சிறுவன், இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறான்.

மங்களம் பாடி கச்சேரி முடியும்வரை நானும், கோலப்பனும் இருந்தோம். கிளம்பும்போதும், ‘நீங்க வந்தது பெரிய கௌரவம் அண்ணா’ என்றார், லலிதாராம். ஒருமாதிரி நிறைவாகவே இருந்தது. ஆனாலும் ‘பாட்டையா’ பாரதிமணி அவர்களுடன் அமர்ந்து ரசித்து சங்கீதம் கேட்கும் வாய்ப்பில்லாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான். அவரது வீட்டில் நாங்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, எங்களுடன் பின்னணியில் ராஜரத்தினம் பிள்ளையோ, மதுரை மணி ஐயரோ, காருகுறிச்சியாரோ துணைக்கிருப்பார்கள். இப்படி ஒரு விழாவில் அவர் இல்லாமல் போனது பெரும் குறைதான். வழக்கமாக சென்னையில் எந்த ஒரு இலக்கிய விழா நடப்பதாக இருந்தாலும், மைக்செட்டுக்குச் சொல்கிறார்களோ, இல்லையோ ‘பாட்டையா’வுக்குத்தான் முதலில் சொல்வார்கள். அவர்கள் சொல்லவில்லையென்றாலும் முதல் ஆளாக பன்னீர்சொம்புக்கு பதிலாக பைப் பிடித்தபடி ‘கௌரவம்’ சிவாஜியாக வாசலில் நிற்பார். திருநெல்வேலியில் கேலியாகச் சொல்வார்கள்.

‘ஏ என்னடே, காவன்னா சூனாக்கு காயிதம் குடுத்தாச்சா?’

‘குடுக்கலேன்னா என்னா? அவாள் மாங்கொலல்லா. மாங்கொல இல்லாத கல்யாணம் ஏது?’

‘மாவிலை’யை திருநெல்வேலியில் வழக்கு தமிழில் ‘மாங்குலை’ என்பர்.

இந்த கட்டுரையைப் படித்துவிட்டு எப்படியும் ‘பாட்டையா’ பாரதி மணி எனக்கு ஃபோன் பண்ணுவார். ‘எலேய், நாலு கட்டுரைக்கு ஒரு கட்டுரைல என் வேட்டிய அவுக்கலென்னா ஒனக்கு தூக்கம் வராதெ’ என்று சொல்லியபடி போனஸாக, இல்லாத என் சகோதரியையும் ஏசுவார். அந்த ஃபோனுக்காகக் காத்திருக்கிறேன்.

ஓவியம் : வள்ளிநாயகம்

சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘தாயார் சன்னதி’

சென்ற புத்தகக் கண்காட்சியில் ‘சொல்வனம்’ பதிப்பகம் வெளியிட்ட ‘தாயார் சன்னதி’யின் இரண்டாம் பதிப்பு, நாளை (5.1.2012) துவங்க இருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு ஸ்டாலில் (F-7)கிடைக்கும்.

இணையத்தில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-192-5.html

காதலர் பூங்கா

எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அப்போது சென்னையில் இருந்தார். அதுவும் சாலிகிராமத்தில். சென்னையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அவரும் என்னைப் போலவே ‘திசையறியாதவர்’ என்பதால் எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி நாங்கள் இருவரும் கைகோர்த்துக் கொண்டு (தொலைந்துவிடாமல் இருக்கத்தான்) சாலிகிராமத்தில் எங்களுக்குத் தெரிந்த வீதிகளில் ‘Walking போகிறோம் பேர்வழிகளாக’ நடை பயில்வோம். எங்களுக்குத் தெரியாத ஏதாவது தெருவுக்குள் நுழைந்து விட்டால், இருக்கவே இருக்கிறது ‘மதுரைக்கு வழி வாயில’. சொல்லிவைத்த மாதிரி, நாங்கள் Walking செல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு லாரியிலிருந்து கிளீனர் ஒருவர் கையில் ஒரு துண்டுச் சீட்டுடன் எங்களுக்குப் பக்கத்தில் ‘திடும்’ என்று குதிப்பார்.

‘ஸார், இந்த அட்ரஸ் எங்கென்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்’.

கொஞ்சமும் தயங்காமல் வாங்கிப் பார்ப்போம். ஒரே நேரத்தில் நான் வலது பக்கத்தையும், வ.ஸ்ரீ ஸார் இடது பக்கத்தையும் காண்பித்து வழியும் சொல்லிவிடுவோம். விநோதமாகப் பார்த்தபடி அட்ரஸ் கேட்பவர்கள் பின்வாங்கிடுவர். இப்படி எங்களை குறிவைத்து அட்ரஸ் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, நாங்கள் இருவரும் ‘Walking’ செல்ல சாலிகிராமத்திலேயே உள்ள ஒரு பூங்காவைத் தேர்ந்தெடுத்தோம். தொடர்ந்து நாங்கள் அந்தப் பூங்காவில் ‘Walking’ போனாலும், எங்கள் இருவரின் உடம்பும் இளைக்காமல் போனதற்குக் காரணம், இரண்டு மாதங்களுக்கு நான்கே நான்கு முறை மட்டும் நாங்கள் அந்தப் பூங்காவுக்குச் சென்றது மட்டும் காரணமில்லை. உட்கார இடம் தேடி அந்தப் பூங்காவில் நாங்கள் அலையும் நேரம் மட்டுமே எங்கள் ‘Walking’ அமையும்.

உட்காருவதற்கு வாகாக ஓர் இடத்தைத் தேடி அமர்ந்தவுடன், முதலில் சுற்றும் முற்றும் சிறிது நேரம் பார்ப்போம். வேர்க்க விறுவிறுக்க பலர் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பது, ஏதோ நாங்களே அவற்றை செய்து கொண்டிருப்பது போன்ற ஒரு மனநிறைவைத் தரும். ‘பரவாயில்ல சுகா. இப்பொல்லாம் எல்லாருக்கும் ‘Health consciousness’ வந்துடுத்து. இல்லியா?’ அதற்குப் பிறகு நீண்ட நேரம் மற்றவர்க்குக் கேட்காத வண்ணம், கிசுகிசுத்த குரலில் ‘புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா, கு.ப.ரா, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், வண்ணநிலவன், வண்ணதாசன்’ என ஒரு ரவுண்டு இலக்கியம் பேசி களைப்பாகி வீடு திரும்புவோம். இப்படியாக ‘விளையாட்டுப் பூங்கா’வை, தனியாக அமர்ந்து ரகசியமாகப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தி ‘காதலர் பூங்கா’வாக்கினோம்.

வ.ஸ்ரீ ஸார் கோவை சென்ற பின், ஜோடியில்லாமல் போவதற்குத் தயங்கி ‘காதலர் பூங்கா’வுக்கு செல்லாமலேயே இருந்தேன். ஆனால் கோவையில் அவர் தனியாகவே அங்குள்ள ஒரு ‘காதலர் பூங்கா’வில் ‘Walking’ செல்வதாகக் கூறியதைக் கேட்ட பின் நானும் எங்கள் ‘காதலர் பூங்கா’வில் நிஜமாகவே ‘Walking’ செல்லத் துவங்கினேன். இப்போது உண்மையாகவே எங்கள் பூங்கா ‘காதலர் பூங்கா’வாக நிறைய மாற்றங்களுடன் உருமாறியிருந்தது. ஆரம்பத்தில் முன்பின் பழக்கமில்லாத செயலான ‘Walking’ செல்வதில் சிரமம் இருந்தது. பிறகு அங்கு வாடிக்கையாக வரும் சில மனிதர்களைப் பார்ப்பதற்காகவே தினமும் செல்லத் துவங்கினேன்.

ஷட்டில்காக் விளையாடும் யுவன்கள், யுவதிகளின் உற்சாகக் குரல்களுக்கிடையே நடப்பது நமக்கும் உற்சாகம் அளிக்கும் ஒன்றுதான். மஞ்சள் தேய்த்து குளித்த முகத்துடன், தலைநிறைய பூ வைத்து, மங்களகரமாக ஒரு பெண்மணி நடக்க வருவார். அவர் வந்த சிலநிமிடங்களில் அவரது கணவர் கையில் செய்தித்தாளுடன் வந்து பூங்காவின் ஓரமாக அமர்வார். ஒருமுறை நடந்தபடியே தன் கையிலிருந்த சாவியைத் தூக்கி இந்த அம்மாள் போட, தட்டுத்தடுமாறி பிடித்தார், கணவர். சட்டென்று கோபம் தலைக்கேற மனைவியின் பின்புறம் பார்த்து முறைத்த மனிதர், அந்த அம்மாள் திரும்பிப் பார்த்தவுடன் ‘கரெக்டா கேட்ச் புடிச்சுட்டென்மா’ என்று கோபம் மறைத்து வலிந்து சிரித்தார். மனிதரின் இரண்டு வெவ்வேறு உணர்ச்சிகளையும் நான் பார்த்து விட்டதால், அன்றிலிருந்து என்னைப் பார்த்தாலே செய்தித்தாளுக்குள் ஒளிந்து கொண்டு ரகசியமாக நான் போய்விட்டேனா என்று பார்ப்பார்.

எங்கள் சுந்தரம் பிள்ளை பெரியப்பாவை நினைவுபடுத்துகிற ஒரு பெரியவர் கொஞ்சம் தாமதமாக மூச்சிரைக்க பூங்காவுக்குள் நுழைவார். கழுத்து வழியாகப் போடும் சட்டையும், சாரமும் உடுத்தியிருக்கும் அவரது மீசையில்லா முகத்தின் பாதியை அவரது மூக்குக் கண்ணாடி மறைத்திருக்கும். தனது பெரிய பாதங்களை அகலமாக வைத்தபடி நடைபயிலும் அவருக்குப் பின்னால் நடப்பது சிரமத்திலும் சிரமம். சற்றும் எதிர்பாராமல் திடீரென்று கைகளைப் பக்கவாட்டில் விரித்து உடற்பயிற்சி செய்தவாறே நடக்க ஆரம்பித்து விடுவார். அவருக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த எனக்கு ஒருமுறை உதட்டிலும், இன்னொரு முறை கண்ணிலும் காயம் ஏற்பட்டது. நாளடைவில் பழக்கத்தின் காரணமாக அவர் கைகளைத் தூக்கும் போது சட்டென்று குனிந்து தப்பித்து நடக்கலானேன். நான்கைந்து ரவுண்டுகளுக்குப் பிறகு பூங்காவில் உள்ள ஒரு மரத்தினருகில் நின்று கொண்டு, ஏதோ ஒரியா தொலைக்காட்சியில் பார்த்த உடற்பயிற்சி முறைகளைச் செய்யத் துவங்கி விடுவார். சரியாக அந்த நேரம்தான் மடித்துக் கட்டிய வேட்டி, சட்டையுடன் குள்ளமான இளைஞர் ஒருவர் பூங்காவுக்குள் வரும் நேரம். ஆரம்பத்தில் என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்த அந்த இளைஞர், ஒருநாள் என்னுடனேயே நடந்தபடி, ‘அண்ணாச்சி, எனக்கும் நம்ம ஊருதான்’ என்றார்.

‘அப்பிடியா? ரொம்ப சந்தோஷம்’.

‘வெகடன்ல மூங்கில் காத்து என்னமா எளுதுதிய! எங்க அம்மல்லாம் ஒங்கள நேர்ல பாக்கணுங்கா.’

அப்போது ஆனந்த விகடனில் நான் ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுதிக் கொண்டிருந்தேன்.

‘அது மூங்கில் காத்து இல்லையெ, தம்பி’.

‘பாத்தேளா, மாத்தி சொல்லிட்டென். மூங்கில் முடிச்சு மூங்கில் முடிச்சு’.

நான் நடையை வேகமாகத் தொடர்ந்தேன். இதற்குள் மரத்தடியில் நின்று ஒரியா உடற்பயிற்சி செய்யும் ‘பெரிய சைஸ் மனிதர்’ கால்களை விரித்து நின்று கொண்டு, கைகளை முன்னே நீட்டி, மணிக்கட்டை மடக்கி நீட்டிக் கொண்டு, தலையை மேலும், கீழுமாக அசைத்துக் கொண்டிருந்தார். திருநெல்வேலி இளைஞர், ‘என்ன அண்ணாச்சி கூப்பிட்டேளா?’ என்றபடி அவர் பக்கம் சென்றார். ’இல்லெப்பா. இது எக்ஸர்ஸைசு.’ ‘இல்ல, கூப்பிட்ட மாரி இருந்துது. அதான் கேட்டென்’. மேற்படி சம்பவம் தினமும் தொடர்ந்தது. ‘டேய், நீ போறியா என்னடா?’

முன்னே நடப்பவர்களுக்கு வழிவிடாமல், ஐபாடில் பாட்டு கேட்டுக் கொண்டே பாதையை மறைத்தபடி நடப்பவர்கள், நடக்கும் போதே செல்ஃபோனில் பேசியபடி நடுவில் நின்றுகொள்பவர்கள் என ஓர் ஒழுங்கில்லாமல் சென்று கொண்டிருந்த மனிதர்களுக்காகவே ஓர் அழகிய இளம் யுவதியை வடபழனி முருகப்பெருமான் ‘காதலர் பூங்கா’வுக்கு அனுப்பிவைத்தார். ‘வருஷம் 16′ குஷ்புவை நினைவு படுத்துகிற அந்தப் பெண், ஆண்பிள்ளை சட்டையும், நீள பாவாடையும் அணிந்தபடி தினமும் பூங்காவுக்கு வரத் துவங்கினார். அதற்குப் பிறகு எல்லோருமே அந்தப் பெண்ணுக்குப் பின்னால் நல்ல பிள்ளைகளாக, சீரான மித வேகத்தில் நடக்கத் துவங்கினர். முன்னால் ஒருவர் கூட இல்லை. வழக்கமாக நாங்கள் நடக்கும் போது பின் கட்டிடத்திலுள்ள ஒரு வீட்டுக்கார மாமா, பஞ்ச பாத்திரத்தைக் கையில் வைத்து சாய்த்தபடி ‘சந்தி’ பண்ணுவார். உதடு படு சீரியஸாக முணுமுணுத்தபடி இருக்கும். ஒரு சுற்று முடிவதற்குள் காணாமல் போய்விடுவார். குஷ்புவின் வருகைக்குப் பிறகு பின் வீட்டு மாமா கையிலுள்ள பஞ்சபாத்திரத்துத் தீர்த்தம் வற்றவே இல்லை. அநேகமாக மூன்று சந்திகளையும் ஒருசேரப் பண்ணினார்.

நடைப்பயிற்சி முடிந்தவுடன் செல்வி குஷ்பு சிறிதுநேரம் இளைப்பாறும் விதமாக, பூங்காவில் சிறுகுழந்தைகள் விளையாடுவதற்காக போடப்பட்டிருக்கும் ஊஞ்சலில் Tinto brass படநாயகிகள் போல அபாயகரமாக ஆடுவார். சுதந்திர, குடியரசு தின அணிவகுப்பில் கவர்னர் பக்கம் தலையை மட்டும் திருப்பியபடி நேராக விறைப்பாக நடக்கும் ராணுவ வீரர்கள் போல எல்லோரும் ஊஞ்சலுக்கு வீரவணக்கம் செலுத்தியபடி நடப்பார்கள்.

வழக்கமாக காலையில் நான் ‘காதலர் பூங்காவுக்குள்’ நுழைந்த ஒருசில நிமிடங்களிலேயே ஒரு மனிதர் பைக்கில் வந்து இறங்குவார். பைக்கை நிறுத்தியவுடன் கண்ணாடி பார்த்து, நிதானமாக தலை சீவுவார். டி-ஷர்ட்டும், ஷார்ட்ஸும், கேன்வாஸும் அணிந்திருக்கும் அவரது கையில் ‘தினத்தந்தி, தினகரன், தினமலர் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பேப்பர்கள் வைத்திருப்பார். கையிலுள்ள செய்தித்தாள்களை, நிழல் பார்த்துத் தேர்ந்தெடுத்த ஒரு பெஞ்சின் ஓரமாக வைத்து விட்டு, தன் கைகளை தோள்மீது வைத்து முன்னும் பின்னுமாக சில்லறையாகச் சுழற்றுவார். பிறகு முதலில் ‘தினத்தந்தி’யில் ஆரம்பிப்பார். வரிசையாக எல்லா செய்தித்தாள்களையும் படித்த பின்னர், மீண்டும் ஒருமுறை தோள்மீது கைவைத்து சில்லறைச் சுழற்றல். வரும்போது வந்த அதே நிதானத்துடன் எழுந்து பைக்கருகே சென்று, பேண்ட் பாக்கெட்டிலிருந்து சீப்பு எடுத்து, மீண்டும் தலைசீவி கண்ணாடியில் சரிபார்த்துக் கிளம்பிச் செல்வார்.

கடந்த சில மாதங்களாக நான் ‘காதலர் பூங்கா’வுக்குச் செல்லவில்லை. Walking போகிறேனோ இல்லையோ, விதவிதமான மனிதர்களையும், அவர்களது செய்கைகளையும் பார்த்து ரசிப்பதற்காகவாவது செல்ல வேண்டும் என்று நினைக்காத நாளில்லை. தினமும் இரவில் ‘நாளைலேருந்து மறுபடியும் Walking ஆரம்பிச்சுட வேண்டியதுதான்’ என்று மனதில் சூளுரைப்பதோடு சரி. இதோ அதோ என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். நான் Walking போய்க் கொண்டிருந்த காலத்திலேயே ‘காதலர் பூங்கா’வுக்குத் தனது வருகையை நிறுத்தி, காணாமல் போய்விட்ட ‘செல்வி குஷ்பு’வுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.