ஆய்புவன்

எங்களுக்கு தெரிந்து நெல்லையப்பர் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த நந்தி பட்டர் மாமாதான் முதலில்  டி.வி வாங்கினார். வழக்கம் போல இந்தத் தகவலையும் எங்களுக்குச் சொன்னவன் குஞ்சுதான்.

‘டைனமோ கம்பேனிக்காரனோட டிவியாம்ல. ப்ளாக் அன்ட் வொயிட்டுதான். ஆனா நேர்ல பாக்கற மாதிரி இருக்குறதா ஐயெங்கார் பாலாஜி சொன்னான்’.

மறுவாரமே குஞ்சு, நந்தி பட்டர் மாமா வீட்டுக்கு நேரிலேயே சென்று ஓர் ஆய்வு நடத்திவிட்டு வந்து அம்மன் சன்னதி பஜனைமடத்தில் வைத்து அறிக்கை சமர்ப்பித்து விட்டான்.

‘ஐயெங்கார் பேச்ச கேட்டு அசிங்கப்பட்டு போனேம்ல. அது டைனமோ கம்பேனியில்ல. டைனோரா கம்பெனி.

இது என்ன கம்பெனி டிவி மாமான்னு கேட்டதுக்கு நந்திபட்டர் மாமாதான் அப்பிடி சொன்னா. ஒடனெ என் தலைய போட்டு உருட்டுதேளே’.

ஐயெங்கார் பாலாஜி கோபப்பட்டான். குஞ்சுவின் தம்பி பெயரும் பாலாஜி என்பதால் மற்றொரு பாலாஜி, ‘ஐயெங்கார் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டான்.
அதற்குப் பிறகு குஞ்சு நந்திபட்டர் மாமா வீட்டுக்கு டி.வி பார்க்கப் போவதை வழக்கமாக்கிக் கொண்டான். அதுவும் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் சமயத்தில் கண்டிப்பாக செல்வான். அதுவரை ரேடியோ கமெண்ட்ரி மூலம் மட்டுமே அறிந்து வைத்திருந்த கிரிக்கெட்டை நேரடியாக டி.வி.யில் பார்த்த பரவசத்தை ஒரு கதை போல எங்களுக்குச் சொல்லி வந்தான். எனக்கு அப்போது கிரிக்கெட் மீதும், டி.வி. மீதும், பெரிய மோகமில்லாததால் குஞ்சு சொல்லும் தகவல்களே போதுமானதாகயிருந்தன.

‘எல . . . . இந்த பௌலர் பயலுவொ பந்து போடதுக்கு முன்னாடி எங்க வச்சு தேய்க்கானுவொ, தெரியுமா?’

எங்கல?

காதில் ரகசியமாகச் சொன்னான்.

என்னல சொல்லுதெ, நெஜமாவா?

பெறகு? நான் என்ன பொய்யா சொல்லுதேன்? வேணும்னா ஐயெங்கார் பாலாஜிய கேட்டுப் பாரு.

அத ஏம்ணே கேக்கிய! குஞ்சண்ணன் கூடல்லாம் ஒரு எடத்துக்கு போலாமா? அங்கெ சாமி சன்னதில உள்ள மாமிங்கள்லாம் டி.வி. பாக்க வந்திருந்தாங்க பாத்துக்கிடுங்க. பந்த பௌலருங்க அங்கெ வச்சு தேய்க்கவும் குஞ்சண்ணன் என்ட்ட ‘எல, எங்கெ தேய்க்கனுவொ பாரு’ன்னு சொல்லிட்டு சத்தம் போட்டு ஒரே சிரிப்பு. நந்தி பட்டர்மாமா காதுல விளுந்துட்டு. எந்திருச்சு வெளியெ போங்கலன்னு ஏசி போட்டாரு. ரொம்ப அசிங்கமா போச்சுண்ணெ.

எல, பந்த அங்கெ வச்சு தேயி தேயின்னு தேய்க்கறவனுக்கு அசிங்கமில்ல. நாங்க சிரிச்சதுதான் மயிராண்டி ஒங்களுக்கு அசிங்கமாப் போச்சோ! தெரியாமத்தான் கேக்கேன்’.

இந்த பிரச்சனைக்குப் பிறகு கைலாசம் அண்ணன் வீட்டில் டி.வி வாங்கினார்கள். அன்றிலிருந்து தினமும் மாலை நேரங்களில் கைலாச அண்ணன் வீட்டில் குஞ்சு தென்பட ஆரம்பித்தான். இத்தனைக்கும் அப்போது திருநெல்வேலிப் பகுதியில் இலங்கையின் ரூபவாஹினி நிகழ்ச்சிகள் மட்டுமே தொலைக்காட்சியில் தெரிந்து வந்தது. அதற்கே ஆங்காங்கு ஆன்டெணாக்கள் முளைத்தன. பெரும்பாலான தொலைக்காட்சிப் பெட்டிகள் கருப்பு வெள்ளைதான். கலர் டி.வி வர கொஞ்ச நாள் ஆனது. அதுவரை பிளாக் அன்ட் வொயிட் டி.வியின் திரையில் ஒரு வண்ண ஸ்கிரீனை பொருத்தி படம் பார்த்தார்கள். மணி மாமா வேலை பார்த்த ‘விஜயகுமார் சைக்கிள் மார்ட்’ கடையில் அப்படி ஒரு ‘வானவில்’ வண்ணத் திரையில் ‘வெள்ளிக் கிழமை விரதம்’ பார்த்தேன். படத்தை ஈஸ்ட்மெண்ட் கலரில் தயாரித்திருந்த சின்னப்பா தேவரே அவ்வளவு வண்ணத்தில் அந்த படத்தைப் பார்த்திருக்க மாட்டார்.

ரூபவாஹினியில் சார்லிசாப்ளின், லாரல் ஹார்டி தவிர ஸ்டார்ஸ்கை அன்ட் ஹட்ச், ஸ்டார்ட்ரெக், ப்ளேக்ஸ் 7 போன்ற சீரியல்கள் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாயின. அவற்றுள் ‘டைனஸ்டி’ என்னும் ஆங்கில சீரியலுக்குத்தான் மவுசு ஜாஸ்தி. காரணம் அந்தத் தொடர் தொடங்கும் முன்பே அது வயது வந்தவர்களுக்கான தொடர் என்ற அறிவிப்பார்கள். அந்த சமயம் மட்டும் கைலாச அண்ணன் வீட்டில் வெள்ளையடிப்பு வேலை நடப்பதாகக் காரணம் சொல்லி வந்தார்.

‘அதென்னலெ பொதன்கெளமதோறும் கைலாசண்ணன் வீட்ல வெள்ளையடிக்காங்க?’

மற்ற நாட்களில் குஞ்சுவையும், அவன் தம்பியையும் கைலாச அண்ணன் கடுமையான சோதனைக்கு பின்பே வீட்டுக்குள் விடுவார். கைலாச அண்ணன் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினர்கள் போக ஏராளமான மூட்டைப் பூச்சிகளும் வாழ்ந்து வந்தன. மாதம் ஒருமுறை முடி வெட்டுகிறாரோ, இல்லையோ கைலாச அண்ணன் கண்டிப்பாக தன் வீட்டுக்கு மூட்டைப் பூச்சி மருந்து அடிப்பார். அதனால் வெளியே இருந்து தன் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்கள் மூட்டைப் பூச்சியைக் கொண்டு வந்து தன் வீட்டுக்குள் விடுவதற்காகவே வருகிறார்கள் என்று சந்தேகப் பார்வை பார்ப்பார்.
குஞ்சுவும், அவன் தம்பியும் சரியாக மாலை ஆறு ஐம்பதுக்கு கைலாச அண்ணன் வீட்டு முன்பு நின்று சட்டையையும், டிரௌசரையும் கிழற்றி உதறிக் காண்பித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டு மூன்று உதறல்களுக்குப் பின்பு கைலாச அண்ணன் குத்துமதிப்பான ஒரு திருப்தி முகபாவத்துடன் இவர்களை உள்ளே அனுமதிப்பார்.

இதிலும் குஞ்சு தன் வேலையைக் காண்பிப்பதாக அவன் தம்பி பாலாஜி ஒரு முறை சீறினான்.

‘கைலாச அண்ணன் தங்கச்சிக்கிட்ட போயி மூட்டப் பூச்சி இருக்கான்னு வேணா செக் பண்ணுங்கங்கான்’.

குஞ்சுவின் வீட்டில் டி.வி வாங்கிய பின்னும் அவன் கைலாச அண்ணன் வீட்டுக்கு டி.வி பார்க்க போன போதுதான் எங்களுக்கு சந்தேகம் வந்தது. ஆரம்பத்தில் ஏதேதோ சொல்லி மழுப்பினான்.

‘எல, எங்க வீட்ல டைனோரா. அவங்க வீட்ல சாலிடெர். பிக்சர்ல்லாம் சும்மா பளிங்கு மாதிரி தெரியுது. அதான் அங்கெ போறேன்.’

ஆனால் உண்மையான காரணம் கைலாச அண்ணனின் சகோதரிதான் என்பது அவளது திருமணத்துக்குப் பின் குஞ்சு தன் வீட்டிலேயே டி.வி பார்க்க ஆரம்பித்ததிலிருந்து தெளிவாக உலகுக்குத் தெரிந்தது. கைலாச அண்ணனின் சகோதரி எங்களை விட பன்னிரெண்டு வயது மூத்தவள் என்பதுதான் இதில் விசேஷம்.

இலங்கையின் ரூபவாஹினியை மட்டுமே நம்பி திருநெல்வேலியில் பல வீடுகளில் டி.வி வாங்கினார்கள்.  ரூபவாஹினி நல்ல மனநிலையில் இருந்தால் மட்டுமே திருநெல்வேலியில் தெரிவாள். இல்லையென்றால் டி.வி.யில் சள சளவென்ற சத்தத்துடன் தாமிரபரணி ஓடும். அந்த மாதிரி சமயங்களில் குஞ்சுவின் பெரியப்பா சோமப்பா மேல்துண்டை தலப்பா கட்டிக் கொண்டு தட்டட்டிக்கு ஏறுவார். ஆன்டெணாவுடன் மல்லுக்கு நிற்பார்.  மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க மாட்டை அடக்குவது மாதிரி ஆண்டெனாவை அங்கும் இங்குமாகத் திருப்பி ‘இப்ப தெரியுதால, இப்ப தெரியுதா, இப்ப,. . . .ப’.

உடம்பெல்லாம் வேர்த்து, களைத்து கீழே வந்து சோமப்பா உட்காரும் போது நிகழ்ச்சி முடிந்திருக்கும். சிங்களச் செய்திகள் வாசிக்கும் இளம்பெண் ‘ஆய்புவன்’ என்று வணங்கிச் சிரித்தபடி செய்தி வாசிக்க ஆரம்பிப்பாள்.

‘இப்ப என்னட்டி சிரிப்புமயிரு வேண்டிக் கெடக்கு?’

களைப்பின் கோபத்தில் பெயர் தெரியா பெண்ணிடம் நேருக்கு நேர் சீறுவார்.
ரூபவாஹினி செய்திகள் துவங்கு முன் செய்தி வாசிப்பவர்கள், தமிழ், சிங்களம் இரண்டிலும், இயல்பாக வணக்கம் சொல்லித் துவங்கி எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செய்திகளில் மட்டும் கவனம் கொள்ளச் செய்வர். ஓரளவு இந்த தன்மையை இப்போது மக்கள் தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்க முடிகிறது.

டைனோரா, சாலிடெர் டி.வியைத் தொடர்ந்து என்ஃபீல்ட், மஸ்டங், பி.ப்பி.எல் என பல டி.விக்கள் அணிவகுத்து வந்தன. சில நாட்களில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் திருநெல்வேலியில் தெரிய ஆரம்பிக்க, ரூபவாஹினி மெல்ல மங்க ஆரம்பித்தது. அதன்பின் அநேகமாக எல்லா வீடுகளிலும் டி.வி வந்துவிட ஒருகட்டத்துக்குப் பிறகு முற்றிலுமாக தூர்தர்ஷனை மட்டும் நம்பி வாழ ஆரம்பித்தனர்.

மொழியே தெரியவில்லையென்றாலும் விடாது ‘புனியாத்’ ஹிந்தி சீரியலை முறைத்து பார்த்தபடி உட்கார்ந்திருப்பார் நமச்சிவாயம் பிள்ளை.

‘மருமகனே, வடநாட்டு பொம்பளேளெல்லாம் எந்த நேரமும் சப்பாத்தி போட்டுட்டே இருக்காளுவளே என்னடே? அவ்வொ புருசமாருல்லாம் அவ்வளவு கானம் திம்பானுவொ, என்னா?’

பெரும் பணக்காரரான அவர் ஸோனி டி.வி வாங்கி நடுவீட்டில் வைத்திருந்தார். தினமும் மாலை வேளையில் அவர் வீட்டிலுள்ள அனைவரும் கோயிலுக்குக் கிளம்புவது போல் முகம் கழுவி, தலை சீவி, பவுடர் போட்டு, திருநீறு பூசி தயாராவார்கள். நமச்சிவாயம் பிள்ளையின் மனைவி அவசர அவசரமாக விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு வருவார். எப்போதும் குடும்பமே ஒன்றாக உட்கார்ந்துதான் டி.வி பார்ப்பார்கள்.

‘ஆயிரந்தான் சொல்லு. ஜப்பான்காரன் ஜப்பான்காரன்தான். ஒங்க வீட்லயுந்தான் மெட்ராஸ்ல இருந்து டி.வி வாங்கி கொண்டாந்து வச்சிருக்கியெ. என்னவெ பிரயோஜனம். மைரு மாரில்லா இருக்கு. அதான் நான் பாத்தெம்லா. நம்ம வீட்டு டி.விய பாரும். சும்மா திடும் திடும்னு ஒதறுது பாத்தேறா சவுண்டு.’

சொற்ப தமிழ் நிகழ்ச்சிகளில் ஒன்றைக் கூட விடுவதில்லை அவர், ‘வயலும் வாழ்வும்’ உட்பட. ஒரு வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதில் குடும்பமே ஸோனி டி.வி முன் உட்கார்ந்திருக்க, ‘ஒலியும்,ஒளியும்’ தந்த தைரியத்தில் அவர்கள் வீட்டுக்கு பால் ஊற்றிக் கொண்டிருந்த கோவிந்தனுடன் தைரியமாக தெருவில் இறங்கி ஓடிப் போனாள், அவரது இளைய மகனின் மனைவி.