பந்தி

1
ஆடிஅமாவாசை, மற்றும் தாத்தா, ஆச்சியின் திவச நாட்களில் எங்கள் வீட்டிலுள்ள யாரும் சாப்பிடாமல் குருக்களையாத்தாத்தாவின் வருகைக்காகக் காலையிலிருந்தே பசியுடன் காத்துக் கொண்டு இருப்போம். ஆச்சிக்கும், தாத்தாவுக்கும் அப்பா தர்ப்பணம் செய்து காரில் தாமிரபரணியாற்றங்கரைக்குச் சென்று பிண்டம் கரைத்துவிட்டு வீட்டுக்கு வந்த பின்தான் சாப்பிட முடியும். அதுவுமே கூட உடனடியாக சாப்பிட்டு விடமுடியாது. படிப்படியாக அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் கடைப்பிடித்த பிறகே பந்தி பரிமாறுவார்கள். குடும்ப உறுப்பினர்கள் போக, குருக்களையாத் தாத்தாவையும் சேர்த்து குறைந்தது பத்திலிருந்து இருபது பேராவது பந்தியில் அமர்ந்திருப்போம்.
சுருண்ட ஒற்றை ஜமுக்காளமோ, பந்திப் பாயோ ஆட்களின் எண்ணிக்கைக்கேற்ப விரிக்கப்படும். முதலில் வரிசையாக வாழையிலைகள் போடப்பட, அதன்பின் எவர்சில்வர் தம்ளர்களில் தண்ணீர். குருக்களையாத் தாத்தாவுக்கு மட்டும் பித்தளைச் செம்பு. அடுத்து பரிமாற்றம் தொடங்கும். ஒவ்வொன்றையும் தாத்தா உன்னிப்பாக கவனிப்பார். இலையின் இடது கைமூலையில் உப்பும், சுண்டவத்தலும், வலது கீழ்மூலையில் பருப்பும் பந்தி பரிமாறுதலின் தொடக்கங்கள். இதை சரியாக ஒருவர் பரிமாறிவிட்டால் அவருக்கு பாஸ்மார்க். அடுத்து சுடச்சுட சோறு. அதை இரண்டாகப் பிரித்து இடது பக்கம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் மோரின்போதுதான் அதை எடுக்க வேண்டும். அப்போது நன்றாக ஆறியிருக்கும். சூடான சோற்றில் மோர் ஊற்றக் கூடாது என்பது அடிப்படை விதி.
இடமிருந்து வலமாக உப்புக்கு அருகில் துவரம், பொரியல், அவியல், கூட்டு, பச்சடி போன்றவை பரிமாறப்படும். நன்றாக கவனித்தால் இலை பெரிதாக, ஆக நீர் அதிகமுள்ள பதார்த்தங்களான அவியல், கூட்டு, பச்சடி வகையறாக்கள் சற்று விஸ்தாரமான இலைப்பரப்பில் இடம்பிடித்திருப்பது தெரிய வரும்.
‘இல்லென்னா சவம் தண்ணிச்சத்து அதிகமுள்ள கறிங்க எலைல ஓடிரும்லா.’
பதார்த்தங்களை மாற்றி யார் வைத்தாலும் சராமாரியான வசவுதான். அதுவும் பெண்களுக்குத்தான் ஏச்சு. திருமணமாகாத பெண்களானால் ‘ இன்னொரு வீட்டுக்கு போகப் போறே. அங்கெ என்னைய மெச்சுவாம்லா, பிள்ள வளத்துருக்காம்பாரு, பருமாறக்கூடத் தெரியாமன்னு’. திருமணமான பெண்களுக்கு சிறப்பு அர்ச்சனை. ‘மாமா, இப்பொ தெரிஞ்சுக்குடுங்க. ஒங்க மக்கமாருக லச்சணத்த. இவளுவொ கூடயும் நாங்க இருவத்தஞ்சு வருசமா குடும்பத்த ஓட்டிட்டோமெய்யா’.
தவறாகப் பரிமாறிவிட்டவர்கள ஆண்களாக இருந்தால், பந்தியில் உட்கார்ந்திருக்கும் பெரியவர்கள் லாவகமாக பரிமாறியவரை தன் இடது கையால் பிடித்து இழுத்து, வலதுகையால் முதுகில் சொத்தென்று மொத்துவார்.
‘செறுக்கியுள்ள, அவியல எங்கெல வைக்க? ஒங்க அம்மைட்ட போயி கேளு. சொல்லுவா’.
அது கல்யாண வீடாக இருந்தாலும் சரி, திவசச் சாப்பாடு பரிமாறும் இடமாக இருந்தாலும் சரி. கண்டிப்பு கண்டிப்புதான்.
தர்ப்பணம் பண்ணுபவர்களின் இலையில் எல்லாப் பதார்த்தங்களுமே பரிமாறப்படும். அதாவது சாம்பார், ரசம், பாயசம், வடை, அப்பளம் உட்பட எல்லாமே. எல்லாம் வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின் குருக்களையாத் தாத்தா தொண்டையைக் கனைத்துக் கொண்டு ‘திருச்சிற்றம்பலம்’ எனவும் நாங்களும் அதற்காகவேக் காத்திருந்து ‘திருச்சிற்றம்பலம்’ என்போம். பிறகு பதிகம் பாடுவார் தாத்தா.
‘அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை
என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே’.
குருக்களையாத் தாத்தாவின் பசிக்கு ஏற்ப பதிகத்தின் வேகம் கூடும், குறையும். பிறகு எல்லாப் பதார்த்தங்களிலும் ஒரு பங்கு எடுத்து இலையின் வலதுமூலையில் பச்சடிக்குப் பக்கத்தில் வைத்து நைவேத்தியம் செய்தபின் சாப்பிட ஆரம்பிப்பார்கள். அதற்கு பிறகே மற்றவர்கள் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். இடையில் ரகசியமாக அப்பளத்தை எடுத்து கடிக்க முயன்றாலும் பிடரியில் அடி விழும். ஆண்கள் சாப்பிட ஆரம்பித்த பின் அவர்களின் முகபாவத்தை ரகசியமாக அடுத்த அறையின் கதவோரத்திலிருந்து பெண்கள் கவனிப்பார்கள். அமாவாசை, திவசச் சாப்பாடு போன்றவை விரதச் சாப்பாடு என்பதால் அவர்கள் உப்பு கூட பார்த்திருக்க மாட்டார்கள். எல்லாமே மனக்கணக்கில் போட்டு சமைத்திருப்பார்கள்.
கைகழுவும்போது எப்படியும் ஆண்களிடமிருந்து ஏதாவது குறை சொல்லப்படும்.
‘ஏட்டி வாளைக்கா புட்ட சலிச்சவ சரியா சலிக்க வேண்டாமா? தண்டி தண்டியால்லா இருக்கு?’
வாய் கொப்பளித்துவிட்டு கையைத் துடைத்துவிட்டு அவர் நகரவும், ‘கொற சொல்லலேன்னா ஏளுமட்டம் வாங்கி வாங்கி முளுங்குனது செமிக்காதுல்லா.’ பெண்கள் மத்தியிலிருந்து முணுமுணுப்பு மெல்ல கேட்கும்.
pb190107திருநெல்வேலியில் கல்யாணவீடு, சடங்கு காரியங்கள் போன்ற சுப, அசுப விசேஷங்களுக்கு சமையல் செய்பவர்களை தவுசுப்பிள்ளை என்று அழைப்பார்கள். அப்படி எங்கள் குடும்பத்துக்கான தவுசுப்பிள்ளையின் பெயர் விசுப்பிள்ளை. கல்யாணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னாலேயே எங்கள் வீட்டு பட்டாசலில் வந்து துண்டை உதறி தொடையில் போட்டுக் கொண்டு தரையில் சட்டமாக சம்மணம் போட்டு உட்காருவார். கணீரென்று சத்தமாகப் பேசி சாமான்கள் லிஸ்ட் போடுவார். வழக்கம் போல பிள்ளையார் சுழி போட்டு மஞ்சள்பொடியிலிருந்து லிஸ்ட் ஆரம்பமாகும். விசேஷவீட்டின் தரம், மற்றும் அழைப்பிதழின் எண்ணிக்கைக்கேற்ப சாமான்களைத் தோராயமாக முடிவு செய்வார் விசுப்பிள்ளை.
‘மறுநா சொதில கை வச்சுராதீரும். மனம் போல செலவளியும், என்னா?’
‘நீங்க சொல்லணுமா. பிள்ளமாரு வீட்டுல சொதிச்சாப்பாடு சரியில்லென்னா தெய்வக்குத்தம்லா?’
சிரித்தபடியே அட்வான்ஸ் வாங்கி வேஷ்டியில் முடிந்து கொண்டு துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு கிளம்புவார்.
திருமணத்துக்கு முதல்நாளே விசுப்பிள்ளையின் பட்டாளம் வந்து இறங்கிவிடும். காய்கறி வெட்டு, தேங்காய்த் துருவல், இலை நறுக்கு என விடிய விடிய வேலை நடக்கும்.
கல்யாணவீட்டுப் பந்தியில் பரிமாறும் வேலையை பெரும்பாலும் கல்யாண வீட்டுக்காரர்களேதான் கவனித்துக் கொள்வார்கள். அதை ஒரு கடைமையாகச் செய்யாமல் உரிமையுடன் இழுத்துப் போட்டுக் கொண்டு ஓடியாடி வேலை செய்வதை மனசும், உடம்பும் நிறைந்து மணமக்களின் பெற்றவர்கள் பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.
‘நம்ம கோமு கல்யாணத்துக்கு வேலாயுதம் மாப்ளே அலைஞ்ச அலைச்சல மறக்க முடியுமா? கடைசி பந்திவரைக்கும்லா நின்னு கவனைச்சுக்கிட்டான்!’
உறவினர்கள், நண்பர்கள் சூழ ஒருவருக்கொருவர் கேலி செய்து கொண்டு பரிமாறிக் கொள்ளும் அழகே அழகு.
‘மாமா, இன்னும் கொஞ்சம் சொதி ஊத்துங்க’
‘தாயளி, வீட்ல புளிக்கொளம்புக்கு வளியில்ல. இங்கெ ஒமக்கு சொதி கேக்கு என்னா சொதி. ம்ம்ம்ம் . . . சாப்பிடு.’
கேலி செய்தாலும் சொதியை அள்ளி ஊற்றுவார்.
எந்தக் கல்யாணவீட்டுக்குப் போனாலும் தாலி கட்டியவுடன் மீனாட்சி பரபரப்பாகி விடுவான்.
‘சித்தப்பா, அந்தாக்ல அப்பிடியே இருந்திராதிய. எந்திருச்சு வாங்க. மொத பந்தில உக்காந்திருவொம்’.
‘ஏ மூதி ஏன் இப்பிடி கெடந்து பறக்கெ? ரெண்டு மூணு பந்தி களிச்சுத்தான் சாப்பிடுவோமெ’.
‘வெவரம் இல்லாம பேசாதிய சின்னையா. மூணாம் பந்தில சாம்பார்ல தண்ணிய ஊத்திருவான். கூட்டத்தப் பாத்தா சாம்பார் காணாதுன்னுதான் தோனுது. நான் அப்பதயே நைஸா ஒண்ணுக்கு போற மாதிரி போயி ஆக்குப்பொறைல சாம்பார் கொப்பறைய எட்டி பாத்துட்டெம்லா’.
படுத்தப் படுக்கையாக இருக்கும் வயதானவர்களின் இறுதி நாள் கிட்டத்தட்ட தெரியவரும் போது வீட்டில் உள்ளவர்கள் முதலில் முன்நடவடிக்கையாக ஏற்பாடு செய்வது சாப்பாடு காரியங்களைத்தான்.
‘எப்பிடியும் நாளைக்கு ராத்திரி தாண்டாது கேட்டியா. பெரியவ பாம்பேல இருந்து வரணும். ரெண்டு மூணு நாளைக்குத் தேவையானத வாங்கிப் போடணும். மொதல்ல வெறகுக்கு சொல்லிட்டு வா’.
படுக்கையில் கிடப்பவர் உயிருடன் இருக்கும் போதே அவரை வழியனுப்பும் வேலைகள் தீவிரமாக நடக்கும். பலசரக்கு சாமான்கள், காய்கறிகள் என எல்லாவற்றிற்கும் தயாராகச் சொல்லி வைத்திருப்பார்கள். மரணப் படுக்கையில் இருப்பவரின் தலைமாட்டில் திருவாசகம் படித்துக் கொண்டிருப்பார்கள். எல்லா ஏற்பாடுகளும் சரியாக நடந்து முடிந்த செய்தி வந்தவுடன், மெல்ல ஒருவர் லேசாக விசும்பிக் கொண்டே படுக்கையில் கிடப்பவரின் தலையைப் பிடித்துத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு வெள்ளி தம்ளரில் உள்ள பாலை அவர் வாயில் ஊற்றுவார். வாசலில் புதிதாகப் போடப்பட்ட டியூப்லைட் வெளிச்சத்தில் மாலைமுரசு படித்துக் கொண்டிருப்பவரின் கவனத்தை, வீட்டுக்குள்ளிருந்து வரும் ‘எளா, என்னப் பெத்தா, என்னைய விட்டுட்டு போயிட்டியெ, இனிமெ நான் என்ன செய்வென்’ என்னும் கதறலொலி கலைக்கும்.
அடுத்த சில நிமிடங்களில் ஆக்குப்புறையில் அடுப்பு பற்ற வைக்கப் படும். சுடச்சுட இட்லி அவித்துத் தட்டப்பட, சாம்பார் கொதிக்கும், தேங்காய்ச் சட்னி தயாராகும். விடிய, விடிய காபி கொதித்துக் கொண்டே இருக்கும். துட்டிக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கவனமாகப் பார்த்து கணிப்பவர் தவுசுப்பிள்ளைதான்.
‘ராமையா, கூட ரெண்டு படி அரிசிய போடு. எக்ஸ்ட்ரா எலை சொல்லிட்டெல்லா.’
மரணவீட்டில் அழுது கொண்டு இருக்கும் பெரியவர்களுக்கு மத்தியில் குழந்தைகளின் பசியை முன்பின் தெரியாதவர்கள் கூட போக்குவார்கள்.
‘ஏட்டி, நீ யாரு சங்கரி மகளா? ஒங்க அம்மைய எங்கெ? சரி சரி இங்கெ வா. அளாத. இட்லி திங்கியா. பெரியம்ம தாரென். இந்தா.’
மறுநாள் சாம்பல் கரைத்த பிறகு சுடுகாட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பியவுடன் பந்தி பரிமாறுவார்கள். அன்றைய சாப்பாட்டில் கண்டிப்பாக அகத்திக் கீரை உண்டு. முதல் நாள் சரியாகச் சாப்பிடாமல் பட்டினியாகக் கிடந்த வயிறைச் சரி செய்வதற்காகவே அகத்திக்கீரை. மற்றபடி வழக்கமான விசேஷச் சமையல்தான்.
சமையலின் ருசி மெல்ல மரணத்தின் சோகத்தை மறக்கடிக்கும் தருணமது.
‘மருமகனே, அவியல் நல்லாருக்கு. கூட கொஞ்சம் வாங்கி சாப்பிடுங்க’.
‘நான் நாலு மட்டம் வாங்கிட்டென் மாமா’.
‘சுப்ரமணிப்பய சரியா சாப்புடுதானா? மூதி அவந்தான் கெடந்து அத்த அத்தன்னு கூப்பாடு போட்டு அளுதுக்கிட்டுருந்தான்’.
சுப்ரமணியை எட்டிப் பார்த்தால் அவர் ரசத்தைக் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்தபடி, வாளிக்குள் தலையை விட்டுக் கொண்டிருப்பார்.
திருநெல்வேலியில் வருடாவருடம் நான் பார்க்கும் ஒரு வித்தியாசப் பந்தி ‘வைக்கத்தஷ்டமி’ பந்தி. அம்மன்சன்னதித் தெருவில் பிராமணர்களுக்கான பஜனை மடத்தில் கார்த்திகை மாதத்தின் மஹாதேவஅஷ்டமியன்று ஹோமங்கள் வளர்த்து பூஜை முடிந்து பரிமாறுவார்கள். அதற்காக ரசீது புத்தகத்துடன் பணம் வசூலிக்கும் வேலையை புரட்டாசி மாதத்தின் இறுதியிலேயே ஆரம்பித்து விடுவார்கள்.
‘கோபாலன் வைக்கத்தசமிக்கு இந்த வருசமாது ரூவா குடுப்பானால’.
‘அவன் தண்ணில வெண்ணெ கடையிரவம்லா. மயிரயாக் குடுப்பான்’.
திருநெல்வேலி பிராமணர்கள் செந்தமிழில் செப்புவதை இந்த அளவுதான் சொல்ல முடியும்.
‘எல, வைக்கதசமிச் சாப்பாடு சாப்பிட்டா வியாதியே வராதுன்னு சொல்லுதாங்களெ. நெசமாவாலெ?’
குஞ்சுவிடம் கேட்டேன்.
‘அதெல்லாம் ஒரு நம்பிக்கைதான். ஆனா உண்மையிலயே இவங்க அவ்வளவு பேருக்கும் வீட்டுல நெனச்சத சாப்பிட முடியாது, பாத்துக்கொ. மாமி என்ன சமையல் பண்ணி போடுதாளோ அதத்தான் தின்னு தொலைக்கணும், கேட்டியா. அதான் இவங்களா துட்டு பிரிச்சு வருஷத்துக்கு ஒரு மட்டமாது வசமா சாப்பிடுதானுவொ’.
இவ்வளவு வியாக்கியானம் பேசும் குஞ்சு வைக்கத்தஷ்டமியின் போது முதல் பந்தியில் சாப்பிட தன் தகப்பனாருடன் மல்லுக்கு நிற்பான்.
‘எல, நீ அப்பொறம் வா. மொத பந்தி பிராமணாக்குத்தான்’.
‘அப்பொ நான் பாப்பான் இல்லையா. இல்ல இதுதான் பூணூல் இல்லையா’.
பெரிய புரட்சிக்காரன் மாதிரி பூணூலை எடுத்துக் காண்பிப்பான்.
‘கோட்டிக்காரப் பயலெ. ஹோமம் பண்ணுன வாத்தியாருங்கதாம்ல மொதல்ல சாப்பிடணும். நீ வளக்கமா பொம்பளைங்க பந்திக்குதானெ பல்லக் காமிச்சிக்கிட்டு வருவெ. அப்பொறம் இப்பொ என்ன மயித்துக்கு வந்தேங்கென்?’
போட்டு வாங்குவார் குஞ்சுவின் அப்பா.
பெண்கள் பந்தியை நினைத்துக் கொண்டே மகிழ்ந்து சிரித்தபடி பஜனைமடத்திலிருந்து வெளியே வந்து விடுவான் குஞ்சு.
சென்னையில் கேட்டரிங் சர்வீஸ் பரிமாறும் பந்திக்கு இப்போதெல்லாம் மனம் பழகிவிட்டது. கைகளில் பாலிதீன் உறை போட்டு பரிமாறுபவர்கள் கல்யாண வீட்டில் சுடச் சுட முறுகலாக தோசை போட்டு அசத்துகிறார்கள். எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அவர்களின் இல்லத் திருமணவீட்டுப் பந்தியில் கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் ஒரு காகிதக் கோப்பையில் சோன்பப்டி போன்ற ஒரு வஸ்துவை வைத்து விட்டுச் சென்றார்கள். அது என்னவாயிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அருகில் உட்கார்ந்திருந்த நாஞ்சில் நாடன் சித்தப்பா, ‘மகனே, அது பேரு பேனி. வெளிமாநில சமாச்சாரம். சாப்பிடுங்க. யோசிக்கெண்டாம்’ என்று உற்சாகப்படுத்தினார். சித்தப்பா சொன்ன பெயர் ஒரு கலக்கத்தைக் கொடுத்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேனியை எடுத்து வாயில் போடப் போனேன். எனக்கு இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த எழுத்தாளரும், திரைப்பட நடிகருமான பாரதி மணி பாட்டையா தடுத்தார்.
‘ஏ, இருடே. அதுல பால் ஊத்திதான் சாப்பிடணும். இப்பொ வரும். அவசரப்படாதெ’.
உண்மைதான். பால் ஊற்றிச் சாப்பிட சுவையாகவே இருந்தது பேனி. வரிசையாக பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. கேட்டரிங் சர்வீஸ்காரர் மோர்மிளகாய் வைத்து விட்டுச் செல்லவும் பாரதிமணி பாட்டையா அவரை அழைத்து, ‘தம்பி, இதவிட கர்ர்ர்ருப்பா இன்னொரு மோர்மொளகா எனக்கு வேணும்’ என்றார்.
தனது நாக்கின் நீளம் நாலுமுழம் என்று அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருப்பது தன்னடக்கத்தினால் என்பது எனக்கு அன்றைக்குத்தான் தெரிந்தது. நியாயமாக அவரது நாக்கின் நீளம் நாற்பது முழம்.
2

சின்னஞ்சிறு கிளியே

கர்நாடக இசைக் கச்சேரிகளில் இன்றைக்கும் பாடப்பட்டு வரும் சுப்பிரமணிய பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடல் ஒரு திரைப்படத்துக்காக மெட்டமைக்கப்பட்டது என்பதை ஒரு நண்பரிடம் பேச்சுவாக்கில் நான் சொன்னபோது நம்ப மறுத்தார். அதுவும் இப்போது இல்லை. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மெட்டமைக்கப்பட்டு மேடையேறிய பாடல் அது என்ற செய்தியும் அவருக்கு வியப்பை அளித்தது. மிகச் சிறுவயதிலேயே காலமாகிவிட்ட மாமேதை சி.ஆர்.சுப்பராமன் அவர்களால் காபி, மாண்ட், வசந்தா, திலங், நீலமணி என்று ராகமாலிகையில் மெட்டமைக்கப்பட்ட அந்தப் பாடல், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த ‘மணமகள்’ திரைப்படத்தில் இடம்பெற்றது. எம்.எல்.வசந்தகுமாரியும், வி.என்.சுந்தரமும் பாடிய அந்தப் பாடல் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் வாய்ப்பாட்டு பாடுபவர்களால் மட்டுமல்லாது வாத்தியக்காரர்களாலுமே வெகுவாக வாசித்துக் கொண்டாடப்பட்ட ஒன்று.
‘மணமகள்’படம் வெளிவந்து கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்குப் பிறகு ‘நீதிக்கு தண்டனை’ என்ற படத்துக்காக எம்.எஸ்.விஸ்வனாதன் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலுக்கு புதிதாக மெட்டமைத்தார். ஏற்கனவே இத்தனை பிரபலமாகக் கொண்டாடப்படும் பாடலை புதிய மெட்டில் அமைப்பதற்கு அசாத்திய மேதைமையோடு, பாடகர்களின் குரல் தேர்விலும் மிகுந்த கவனம் தேவை. எம்.எஸ்.விஸ்வநாதன் சரியான குரல் தேர்விலும், பாடகர்கள் சரியாகப் பாடுவதிலும் மிக மிக கண்டிப்பானவர் என்பது நன்கறியப்பட்டதொரு விஷயம். அவரிடம் பாடிய பல பாடகர்களும் தங்கள் பேட்டியில் நிறைய பெருமிதத்தோடும், கொஞ்சம் பயத்தோடும் அதைக் குறித்துச் சொல்லியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் அப்பாடலின் ஆண் குரலுக்கு, செம்பை வைத்தியநாத பாகவதரின் சிஷ்யரும், கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவருமான கே.ஜே.யேசுதாசைத் தெரிவு செய்கிறார். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அப்பாடல் தொடங்குவதே பெண் குரல்தான். அந்தப் பெண்குரல் பகுதிக்கு பதினான்கு வயதே நிரம்பிய ஒரு புதிய பெண் பாடகியைப் பாடவைக்கிறார். அப்படியென்றால் அவருக்கு அந்தப் பெண் குரல் மீது எத்தனை நம்பிக்கையும், அங்கீகரிப்பும் இருந்திருக்க வேண்டும்! ‘சின்னஞ்சிறு கிளியே’ என்று பல்லவியை அனுபவித்துப் பாடித் துவக்கிய அந்த இளம்பாடகியின் பெயர் ஸ்வர்ணலதா.
இசையமைப்பாளர்களின் மனதில் உள்ள மெட்டை அப்படியே திருப்பிப் பாடவே சிரமப்படும் பாடகர், பாடகிகளுக்கு மத்தியில், கேட்ட மாத்திரத்தில் தன்னிடமுள்ள தனித்துவக் குரலால் அனைவரையும் கவர்ந்த ஒரு பாடகியாகவே ஸ்வர்ணலதா அறியப்பட்டார். போதையில் பாடிடும் ஓர் இளம்பெண்ணின் குரலுக்கு முதன்முதலாக இவரை குருசிஷ்யன் என்னும் திரைப்படத்தில் ‘உத்தமபுத்திரி நானு’ என்னும் பாடலில் பயன்படுத்திய இளையராஜா, பிற்பாடு ஸ்வர்ணலதாவைப் பல்வேறு பாடல்கள் பாடவைத்தார். அவையெல்லாமே ஸ்வர்ணலதாவைத் தவிர வேறு எந்த பாடகியையும் கொண்டு கற்பனை பண்ணிப் பார்க்க முடியாதவை.
singer-swarnalathaகருப்புவெள்ளைத் திரைப்படங்களின் காலத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது போன்ற கிளப்வகைப் பாடல்கள், 90களில் ஸ்வர்ணலதாவின் தனித்துவக் குரலால் மேலும் புகழ் பெற்றன. ‘தளபதி’ திரைப்படத்தின் ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாடலில் துவங்கி, பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘ஜெண்டில்மேன்’ திரைப்படத்தின் ‘உசிலம்பட்டி பெண்குட்டி’, ‘காதலன்’ திரைப்படத்தின் ‘முக்காலா முக்காபுலா’, ‘இந்தியன்’ திரைப்படத்தின் ‘அக்கடான்னு நாங்க’ போன்ற பல பாடல்களுக்கு மத்தியில் இன்றைக்கும் மெல்லிசைக் கச்சேரிகளில் தவறாது இடம்பெறும் ஒரு முக்கியமான பாடலாக ‘கேப்டன் பிரபாகரன்’ படப்பாடலான ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் உள்ளது. பாடுபவரையும், இசைப்பவர்களையும், கேட்பவர்களையும் துள்ளாட்டம் போடவைக்கும் உற்சாகப் பாடலது. இப்பாடலைக் கவனித்துக் கேட்டால் தெரியும் ‘ஆட்டமா’, ‘தேரோட்டமா’ என்ற வார்த்தைகளில் ‘மா’வில் ஒரு தனித்த நெளிவு இருக்கும். அந்த நெளிவு செயற்கையாக வலிந்து செய்ததைப் போல இல்லாமல் வெகு இயல்பாக இருக்கும். இந்த நெளிவுதான் ஸ்வர்ணலதாவைப் பிற குரல்களிலிருந்து தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் தனிச்சிறப்பு. மேடைக்கச்சேரிகளில் இப்பாடலை நன்கு கவனித்துக் கேட்டால் தெரியும், இதைப் பாட முயற்சிப்பவர்கள் ஒன்று அந்த நெளிவை ஃப்ளாட்டாகப் பாடி கடந்து சென்று விடுவார்கள். இல்லை செயற்கையாகத் தெரியும் ஒரு கமகத்தைத் தருவார்கள். எளிதில் நகலெடுத்துவிட முடியாத குரலும், பாடுமுறையும் ஸ்வர்ணலதாவுடையது!
நான் இங்கே சொல்லியிருக்கும் இந்தப்பாடல்கள் படுபிரபலமானவை. ஆனால் அதிகம் வெளியே தெரியாத க்ளப் பாடல் ஒன்று இருக்கிறது. ‘எத்தனை ராத்திரி’ என்ற அந்தப்பாடலை நான் வெகு முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். மலேஷியா வாசுதேவனுடன், ஸ்வர்ணலதா இணைந்து பாடிய அப்பாடலில் சரணத்தில் ‘இடத்தைப் பிடிச்சுக்கோ… நீ… குடியும் இருந்துக்கோ’ என்ற இடத்தில் ஸ்வர்ணலதா ஒரு பிருகா தருகிறார் பாருங்கள், எந்த ஒரு செவ்வியல் பாடலுக்கும் இணையான ஒன்றாக இப்பாடலை உயர்த்துகிறது அந்த பிருகா.
ஒருபுறம் க்ளப் வகைப்பாடல்களைப் பாடினாலும், இன்னொரு பக்கம் உணர்ச்சிகரமான முக்கியமான பாடல்களும் ஸ்வர்ணலதாவைத் தேடி வந்தன. பெரும்புகழ் பெற்ற ‘போவோமா ஊர்கோலம்’ என்னும் ‘சின்னத்தம்பி படப்பாடலில் இளையராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் கலைஞரும், பின்னணிப் பாடகருமான நெப்போலியன் என்ற அருண்மொழி வாசித்த புல்லாங்குழல் பகுதிகளின் நுணுக்கங்களை, போட்டி போட்டு கொண்டு தன்குரலில் கொண்டு வந்திருக்கிறார் ஸ்வர்ணலதா. உடன் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அப்பாடலின் ஆண் கதாபாத்திரம் செய்யும் சேட்டைகள் வெகு எளிதாக மொத்த கவனத்தையும் ஆண்குரல் பக்கம் திருப்பிவிடும் சாத்தியம் கொண்டவை. எஸ்.பி.பாலசுப்ரமணியமும் அப்பகுதிகளைப் பிரமாதமாகப் பாடியிருப்பார். இதையெல்லாம் மீறி, நம்மை வந்தடைந்தது ஸ்வர்ணலதாவின் குரல். குறிப்பாக அந்தப் பாடலின் இன்னொரு வடிவமான ‘நீ எங்கே’ என்று துவங்கும் தனிக்குரல் சோகப்பாடலை உணர்ச்சிகரமாக ஸ்வர்ணலதா பாடியிருக்கும் விதம் அபாரமானது. அப்பாடலின் நாடகத்தன்மை காரணமாகப் பலரும் அப்பாடலை கவனிக்காமல் கடந்து சென்றிருப்பார்கள். ஆனால் அப்பாடலின் இரண்டாம் இண்டர்லூடில் ஸ்வர்ணலதா தந்திருக்கும் கீரவாணி ராக அடிப்படையில் அமைந்த ஆலாபனை அசாத்தியமானது. ‘காற்றில் எந்தன் கீதம்’ பாடலின் ப்ரிலூடில் எஸ்.ஜானகி தந்த கீரவாணி ஆலாபனைக்கு இணையானது. அதைப்போலவே பாடல் முடியும் இடத்தில் ‘நீ எங்கே’யின் இறுதியில் கேட்கும் நெளிவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ‘ஆட்டமா, தேரோட்டமா’வில் துள்ளலைத் தந்த நெளிவு, இங்கே சோகத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறது.
ஸ்வர்ணலதா ஏ.ஆர்.ரஹ்மான் மூலமாக தேசியவிருது வென்ற ‘கருத்தம்மா’ படத்தின் ‘போறாளே பொன்னுத்தாயி’யும் நம் நெஞ்சத்தை உருக்கும் சோகப்பாடல்தான். ‘போறாளே பொன்னுத்தாயி’ பாடலை தேர்வுக்குழுவினர் முழுமையாகக் கேட்டிருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. ‘ஓ’வென்று தன் சோகக்குரலால் ஸ்வர்ணலதா அந்தப் பாடலைத் துவக்கும்போதே தேர்வுக்குழுவினர் விருதை எடுத்து மேஜைமேல் வைத்திருந்திருக்க வேண்டும்.
swarna4
‘அலைபாயுதே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எவனோ ஒருவன்’ என்னும் அருமையான பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வர்ணலதாவுக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்தார். அதன் நியாயமான காரணத்தை பாடலின் துவக்கம் முதல் இறுதி வரை உணர்ச்சி ததும்பப் பாடி நமக்கு உணர்த்தியிருப்பார் ஸ்வர்ணலதா. ‘முதல்வன்’ திரைப்படத்தின் ஜோடிப்பாடலான ‘குறுக்கு சிறுத்தவளே’ பாடலை, படத்தில் இன்னொரு முறை பயன்படுத்தும் போது ஸ்வர்ணலதாவைக் கொண்டே பாடவைத்திருக்கிறார் ரஹ்மான். ‘உளுந்து வெதைக்கையிலே’ என்ற அந்தப் பாடல் துவங்கும் முன்பே ஸ்வர்ணலதா ‘எ எ . . ஏலே . .ஏலே’ என்று பாடலைத் துவக்கி விடும் விதம் அலாதியானது. 
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாலிவுட் இசையுலகில் ஒரு வலுவான ஸ்தானத்தை ஏற்படுத்திக் கொடுத்த ராம்கோபால்வர்மாவின் ‘ரங்கீலா’ திரைப்படத்தில் ஸ்வர்ணலதா அற்புதமாகப் பாடியது ‘ஹாய் ராமா’ என்னும் பந்துவராளி ராகப்பாடல். அதன் மூலம் பாலிவுட்டிலும் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார் ஸ்வர்ணலதா. இந்தியத் திரையிசையுலகின் மரியாதைக்குரிய இசைமேதையான நௌஷாத் அலியின் இசையமைப்பில் ‘முகல் ஏ ஆஸம்’ திரைப்படப்பாடல்கள் தமிழில் டப்செய்யப்பட்டபோது அதிலிருந்த முக்கியமான பாடல்களைப் பாடியவர் ஸ்வர்ணலதா.
தனிப்பாடல்களில் ஸ்வர்ணலதாவுக்குப் பேர் சொல்லும்படியாக பல பாடல்கள் அமைந்தது அவரது அதிர்ஷ்டம் என்று சொல்ல முடியாது. அவரது குரலில் உள்ள தனித்துவமே அவரை அப்பாடல்கள் தேடி வர காரணமாக அமைந்தது. பண்பலை வானொலிகளில் நிச்சயமாக ஒரு நாளைக்கு ஒருமுறையாவது இடம்பெறும் பாடலாக ‘சத்ரியன்’ படத்தின் ‘மாலையில் யாரோ’ பாடல் இன்றுவரை இருக்கிறது. ‘வள்ளி’ திரைப்படப்பாடலான ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல்தான் ஸ்வர்ணலதா பாடிய பாடல்களிலேயே சிறந்த பாடல் என்று அடித்துச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
‘உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்’ படத்தில் ஆபேரி ராகத்தின் அடிப்படையில் இளையராஜா மெட்டமைத்திருந்த ‘என்னைத் தொட்டு’ என்ற பாடல் கேட்பவரின் மனதைக் கொள்ளை கொள்ளும் மற்றுமொரு நல்ல ஸ்வர்ணலதா பாடல். இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் ஆலாபனையில் எடுத்த எடுப்பிலேயே மேல்ஸ்தாயிக்குச் சென்று பாடலின் மொத்த ரசத்தையும் தந்து விடுகிறார் ஸ்வர்ணலதா. இந்த உணர்வைத்தான் பாடலில் மீண்டும் மீண்டும் வரும் ‘அன்பே ஓடிவா’ என்ற வரிகளில் நாம் பெற்றுக்கொள்கிறோம். இப்பாடலின் பிற்பகுதியை எஸ்பிபி பாடியிருந்தாலும் மைய உணர்வைத்தரும் அந்த முக்கியமான ஆலாபனையைப் பாட ஸ்வர்ணலதாவைத்தான் பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.
கவிஞர் மு.மேத்தா தயாரித்த ‘தென்றல் வரும் தெரு’ திரைப்படத்தின் ‘புதிய பறவை’ என்னும் சுத்த தன்யாசி ராக அடிப்படையில் அமைந்த பாடலும் அவரது முக்கியமான பாடல்களின் வரிசையில் உள்ள ஒன்று. இதே பாடலின் நாதஸ்வர வடிவம் ஒன்றும் இத்திரைப்படப் பாடல் கேஸட்டில் இருக்கிறது. அதைக் கேட்டுவிட்டு ஸ்வர்ணலதா பாடிய வடிவத்தைக் கேட்டால்தான், ஸ்வர்ணலதாவின் தனித்துவமும், அது ஏன் முக்கியமான பாடல் என்பதும் புரியும். இப்பாடலின் ட்யூனே உள்ளத்தை உருக்கும் தன்மையையுடையது என்பதை அந்த நாதஸ்வரத்தைக் கேட்டால் வரிகளில்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். பல்லவியின் முதல் இரண்டு வரிகளும் கீழிருந்து மேலேறி, மேலிருந்து கீழிறங்கும் வகையில் ஒன்றுக்கொன்று எதிரிடையான தன்மை கொண்டவை. அதில் ‘புதிய பறவை பறந்ததே’ என்ற மூன்றே வார்த்தைகளில் முழு ஆக்டேவும் மேலேற வேண்டும். நாதஸ்வரத்தில் அதை இயல்பாகவே காட்டிவிடலாம். ஆனால் குரலில் வார்த்தைகள் வழியாகச் சொல்வது கத்தி மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் பிசகினாலும் இழுவையாகத் தெரிந்துவிடும். பிறகெப்படி பாடவேண்டும்? ஸ்வர்ணலதா பாடியிருப்பதை வைத்து அதை எப்படிப்பாட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
’நாங்கள்’ என்று ஒரு படம். இப்படி ஒரு படம் வந்த செய்தியை பெரியவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் சொன்னால்தான் யாரும் நம்புவார்கள். இத்தனைக்கும் அதில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ‘பாரடி குயிலே’ என்றொரு பாடலை ஸ்வர்ணலதாவைப் பாட வைத்திருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடலின் சரணத்தில் ‘நான் விரும்பிய திருநாள் பிறந்தது’ என்ற வரியை ஸ்வர்ணலதாவின் குரலில் கேட்கும் போது உருகாத மனிதர்கள் யாராவது இருந்தார்களென்றால், அவர்களுக்குச் செவிக்கோளாறு என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்பாடலின் சரணம் பிரபலமான அபூர்வ சகோதரர்கள் தீம் இசையின் இன்னொரு வடிவம். ஆனால் அதையும் நேரடியாக உபயோகிக்காமல் அபூர்வ சகோதரர்கள் தீம் இசையின் தைவதத்தை மாற்றிப்போட்டு நடபைரவி ஸ்கேலிலிருந்து கரஹரப்ரியா ஸ்கேலுக்கு மாற்றியிருப்பார் இளையராஜா. ஸ்வர்ணலதா சரணத்தில் அந்த தைவதத்துக்குத் தரும் அழகே தனிதான்.
நண்பர் சீமான் நெருக்கமான நண்பர்களுடன் இருக்கும் போதெல்லாம் ‘ஆத்தோரம் தோப்புக்குள்ளே’ என்னும் நாட்டுப்புறப் பாடலை அருமையாக அனுபவித்துப் பாடுவார். முதன் முதலில் அவர் இயக்கிய ‘பாஞ்சாலங்குறிச்சி’ என்னும் திரைப்படத்தில் தன் மனதுக்கு நெருக்கமான அந்தப் பாடலை அவர் பயன்படுத்தியிருந்தார். தேவாவின் இசைச்சேர்க்கையில் உருவான அந்தப் பாடலில் ‘அத்தனையும் பொய்யாச்சே ராசா, ஒத்தையில நிக்குதிந்த ரோசா’ என்ற வரியை ஸ்வர்ணலதா பாடியிருக்கும் விதத்தை என்னவென்று சொல்வது? கேட்டுக் கேட்டு உருகத்தான் முடியும்.
ஜோடிப்பாடல்களில் ஸ்வர்ணலதா பாடிய பல புகழ்பெற்ற பாடல்களுக்கு மத்தியில் அதிகம் பேசப்படாத ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சமுத்ரப்ரியா ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை பி.ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடியிருப்பார் ஸ்வர்ணலதா. ‘ஜல் ஜல் சலங்கை குலுங்க’ என்று துவங்கும் அந்தப் பாடல் இளையராஜாவின் இசையில் ‘பொண்ணுக்கேத்த புருஷன்’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்தது. மாயாமாளவகௌளையில் அமைந்த ‘ஆறடிச்சுவருதான்’ என்ற ‘இது நம்ம பூமி’ படப்பாடலை, யேசுதாசுக்கு இணையாக சிறப்பாகப் பாடியிருந்தார் ஸ்வர்ணலதா. இத்தனைக்கும் பல்லவி முடிந்து, முதலாம் சரணமும் முடியும் இடத்தில்தான் யேசுதாசுடன் வந்து இணைவார். ‘ராத்திரி வலம்வரும் பால்நிலா எனை வாட்டுதே’ என்று அவர் பாட ஆரம்பிக்கும் போதே, அத்தனை நேரம் பாடியிருந்த யேசுதாசின் குரலுக்கு மிக அருகில் எளிதாக வந்து சேர்ந்து விடும் ஸ்வர்ணலதாவின் அற்புதக்குரல். இதே ராகத்தில் அமைந்த ‘உடன்பிறப்பு’ திரைப்படத்தில் ‘நன்றி சொல்லவே உனக்கு’என்ற பாடலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. மூத்த பாடகியான உமாரமணனுடன் இணைந்து பாடிய இரு பெண்குரல் பாடலான ‘புதுப்பட்டி பொன்னுத்தாயி திரைப்படத்தின் ‘ஊரடங்கும் சாமத்துல’ பாடலும் மிக முக்கியமான ‘ஸ்வர்ணலதா’ பாடல்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு இணைந்து பாடிய சண்முகப்ரியா ராகத்தில் அமைந்த ‘ராஜாதி ராஜா உன் மந்திரங்கள்’ பாடலும் ஸ்வர்ணலதா பாடிய மிக மிக முக்கியமான பாடல்களில் ஒன்று. ஒரு சரணம் மேற்கத்திய ஸ்டைலிலும், இன்னொரு சரணம் முழுக்க நாட்டுப்புற ஸ்டைலிலும் இருக்கும். இதில் நாட்டுப்புற ஸ்டைலில் வரும் சரணம் உச்சஸ்தாயியில் தொடர்ந்து நான்கு ஆவர்த்தங்கள் பாடப்படவேண்டிய ஒன்று. கொஞ்சம் பிசகினாலும் பெருங்குரலெடுத்து கத்துவதைப் போலாகிவிடும். அதை ஸ்வர்ணலதா பாடிய விதத்தைக் கேட்கையில் நமக்கு அது ஒரு வெகு வெகு எளிமையான ஒரு பாடலைப் போல் தோன்றும்.
தனது முப்பத்தியேழாம் வயதில் அகால மரணமடைந்த ஸ்வர்ணலதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பண்பலை வானொலி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் அவர் பாடிய எண்ணற்ற பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டேயிருந்தன. பீம்பிளாஸ் ராக ஆலாபனையுடன் அட்டகாசமாக ஸ்வர்ணலதா பாடியிருக்கும் ‘ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது’ என்ற பாடல் மட்டும் அவருக்காகவே அவர் பாடிய பாடலாக எனக்குத் தோன்றியது.
நண்பன் குஞ்சுவின் ஒன்றுவிட்ட சகோதரன் பாலாஜி பொறியியல் இறுதிவருடம் படித்துக் கொண்டிருந்த நேரம். திருநெல்வேலி பார்வதி தியேட்டரில் ‘என் ராசாவின் மனசிலே’ படம் பார்க்கச் சென்றபோது அவனையும் உடன் அழைத்துச் சென்றேன். படம் துவங்கியதிலிருந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த பாலாஜி, ‘குயில் பாட்டு’ பாடல் ஆரம்பமானவுடனே ஒருமாதிரியாக, படபடப்பாக ஆனான். பாட்டு தொடரத் தொடர கலங்க ஆரம்பித்தவன், இறுதியில் வெடித்து அழத்தொடங்கி விட்டான். அவனை சமாதானம் செய்து வீட்டுக்குக் கூட்டி வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. மேற்படி சம்பவத்தை இப்போது அவனிடம் நினைவுகூர்ந்து கேட்டாலும் அன்றைக்கிருந்த அதே உணர்வுடன்தான் பேசுகிறான்.
‘அத ஏன் கேக்கே? லாலாச் சத்திரமுக்குல நடந்து போகும்போது எங்கையாவது டீக்கடைல அந்தப் பாட்ட போடுவான். என்னால லேசுல அதத் தாண்டி வரமுடியாது, பாத்துக்கோ’.
திருமணம் ஆன நாளிலிருந்து தான் வெறுத்து ஒதுக்கிய தன் கணவனை மனம் மாறி ஏற்றுக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மகிழ்ச்சியுடன் பாடும் விதமாக அமைந்த அந்த‘குயில் பாட்டு’ என்னுடைய தனிப்பட்ட ரசனையின்படி விசேஷமானப் பாடல். கதைப்படி அந்தப் பாடலை பாடி முடிக்கும்போது அந்தப் பெண் கால்தவறி விழுந்து மரணமடைவாள். அப்பாடலின் முடிவில் நடக்கவிருக்கும் அவளது துர்மரணத்தை முன்கூட்டியே உணர்த்தும் விதமாக இளையராஜா சிவரஞ்சனி ராகத்தில் ஒற்றை வயலினைக் கொண்டு அற்புதமாக அந்தப் பாடலைத் துவக்கியிருப்பார். இனி அந்த வயலினைக் கேட்கும்போதெல்லாம் ஸ்வர்ணலதாவின் அகால மரணத்தைக் குறித்தும் நினைக்காமல் இருக்க முடியாது.

இசைமேதையின் புகைப்படம்

ஆச்சி இருந்த காலத்தில் தாத்தா, கொள்ளுத் தாத்தா இவர்களின் புகைப்படங்கள் தவிர திருநெல்வேலியில் உள்ள எங்கள் வீட்டில் இன்னொரு மனிதரின் புகைப்படமும் இருந்தது. பச்சை வண்ணப் பின்னணியில் மார்பளவுப் புகைப்படமான அதை மட்டும் தார்சாவில் பழைய சீனச்சுவர்க்கடிகாரத்துக்கு அருகே மாட்டி வைத்திருந்தனர். சிறுவனாக இருக்கும் போது அந்தப் புகைப்படத்தில் இருப்பவரைப் பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர் பெயர் மட்டும் தெரியும். காரணம், அந்தப் புகைப்படத்திலேயே அது குறிக்கப்பட்டிருந்தது, ‘இசைமேதை’ ஜி. ராமனாதன் என்று.
gr11
எங்கள் குடும்பம் முழுக்கவே ஜி.ராமனாதனின் ரசிகர்களாக இருந்ததை நாட்கள் ஆக ஆகப் புரிந்து கொண்டேன். அவரது முழுப்பெயரை எங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் யாருமே சொல்லி நான் கேட்டதில்லை. ஜி.ஆர், என்றும் ஐயர் என்றும்தான் சொல்வார்கள். விவரம் தெரியாத சிறுவயதிலிருந்தே ஜி.ராமனாதனின் இசையில் வெளிவந்தத் திரைப்படப் பாடல்கள் அனைத்தும் நான் விரும்பியும், விரும்பாமலும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அதன் பலனாக பெயர் தெரியாமலேயே பல ராகங்கள் எனக்கு பரிச்சயமாயின. ஷண்முகப்ரியா, தர்பாரி கானடா, கல்யாணி, ஆரபி, காம்போதி, மோகனம், சாருகேசி, கம்பீரநாட்டை, சாரங்கா, சங்கராபரணம், நாட்டக்குறிஞ்சி, பீம்ப்ளாஸ், காபி, ஆனந்தபைரவி, சஹானா, செஞ்சுருட்டி, சரஸ்வதி, சிந்துபைரவி, ரதிபதி ப்ரியா, பந்துவராளி என அந்தந்த ராகங்களின் லட்சணங்கள் புரிந்த பிறகே அவற்றின் பெயர்கள் எனக்கு தெரிய வந்தன.
ஜி.ராமனாதனின் பாடல்களைக் கேட்பதுடன் நின்றுவிடாமல், அதைப் பற்றிய சுவையான பல தகவல்களும் எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூலம் எனக்குத் தெரிய வந்தன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும், கண்ணதாசனுக்கும், கே.வி.மஹாதேவனுக்கும், விஸ்வநாதன் ராமமூர்த்திக்கும் கிடைக்க வேண்டிய புகழனைத்தும் எம்.ஜி.ஆர் ஒருவருக்கே போய் எப்படி அவை எம்.ஜி.ஆர் பாடல்களாகப் பார்க்க, கேட்கப் பட்டவையோ, அதே போல ஆரம்பகாலத்தில் ஜி.ராமனாதனின் பாடல்கள் அனைத்துமே எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களாகவே அறியப்பட்டிருக்கின்றன. தூக்கு தூக்கி, உத்தமப்புத்திரன் போன்ற படங்களின் பாடல்களிலேயே ஜி.ராமனாதன் பரவலாக அறியப்பட்டார் என்று பெரியவர்கள் பேசிக்கொள்ளும் போது கேட்டிருக்கிறேன். இதில் உத்தமப்புத்திரன் திரைப்படம் இரண்டுமுறை எடுக்கப்பட்டது என்றும், இரண்டுக்குமே ஜி.ஆர்தான் இசை என்பதும் சுவாரஸ்யமான செய்தியாக இருந்தது. இருந்தும் இரண்டாவது உத்தமப்புத்திரன் திரைப்படத்தின் பாடல்கள் மூலம் ஜி.ஆருக்குக் கிடைத்த பாராட்டுக்களே அதிகம் என்பதும் தெரிய வந்தது.
‘பளைய உத்தமப்புத்திரன் சின்னப்பா படம்லா? ஐயர் மியூஸிக்கையெல்லாம் எவம்ல கவனிச்சான்?’
‘கணேசனையும் மீறில்லா ஐயர் நின்னாரு. என்ன சொல்லுதெ?’
‘அதும் ஒண்ணுக்கு ரெண்டு கணேசன மீறில்லா!’
கர்நாடக இசையை முறையாகப் பயின்றிருந்த பெரியப்பாக்கள், அத்தைகள் எல்லோருமே ஜி.ராமனாதனைக் கொண்டாடியிருக்கிறார்கள். அடுத்தத் தலைமுறைக்கு மிக எளிமையான முறையில் அவர்கள் கர்நாடக இசையைக் கடத்துவதற்கு ஜி.ராமனாதன்தான் பெரிதும் உதவியாக இருந்திருக்கிறார் என்பதை எங்களால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.
பிற்பாடு இசைவகுப்புகளில் ஹார்மோனியம் வாசிக்கும் போது ராகங்களை இனங்கண்டு எளிதாக பயில முடிந்ததற்கு சிறுவயதிலிருந்தே கேட்டுக் கேட்டுப் பழகியிருந்த ஜி.ஆரின் பாடல்களே காரணமாயிருந்தன. குறிப்பாக சாருகேசி. ’ஆடமோடிகலதே’ என்னும் தியாகராஜ கீர்த்தனையை பாடமாக எழுதிக் கொண்டு மலைத்தபடியே சாருகேசியை வாசிக்க முயலும் போது மெல்ல பிடிபட ஆரம்பித்தது. என்ன ராகமென்றே தெரியாமல் ஏற்கனவே வாசித்துப் பழகியிருந்த ‘வசந்தமுல்லை போலே வந்து’ பாடலின் ஸ்வரங்களுக்குள் விரல்கள் சென்று திரும்பின. வெற்றிலை புகையிலையைத் துப்பிவிட்டு வந்து உட்கார்ந்த இசையாசிரியர் கிருஷ்ணன்ஸார் சொன்னார்.
‘அப்பிடியே மன்மதலீலையை வென்றாரும் வாசிச்சுரு. வெளங்கிரும்.’
நிமிர்ந்துப் பார்க்க தைரியமில்லாமல் ஹார்மோனியத்திலேயே தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.
‘நீ வாய்ப்பாட்டு படிச்சேன்னா அந்தப் பாட்டு வாசிச்சதுக்கு ஏசுவேன். பொட்டிதானெ வாசிக்கெ. வாசி வாசி. ஆனா ராகம் தெரிஞ்சுக்கிடதுக்கு மட்டும்தான். செம்மங்குடியே மார்க் போட்ட பாட்டாக்கும். ராமநாதன் துப்புரவா போட்டிருப்பான். ராயல் டாக்கீஸ்ல மூணு வருசம்லா ஓடுச்சு’.
சமாதானப்படுத்தும் விதமாகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.
 உற்சாகத்தில் வாசிக்கத் துவங்க சாருகேசி கைக்குள் வந்தது.
‘பீம்ப்ளாஸ்ல ஒருத்தன் இப்பிடி ஒரு பாட்டு போட முடியுமாய்யா? பாரு, எடுத்த எடுப்புலுயே என்னமா ஏறுதுன்னு?’
‘வாராய் நீ வாராய்’ மெட்டை ஹார்மோனியத்தில் வாசித்தபடியே சொல்வார், வீரகேரளம்புதூர் விநாயகத்துப் பெரியப்பா. பல்லவியின் சங்கதிகளை ஒவ்வொரு முறையும் வேறுவேறாக அமைத்து அசத்தியிருப்பார் ஜி.ராமனாதன். தொடர்ந்து அந்தப் பாட்டு தந்த உற்சாகத்தில் பீம்ப்ளாஸ் வாசித்துக் கொண்டே இருந்து, என்னிடம் ஹார்மோனியத்தைத் தருவார் பெரியப்பா. பீம்ப்ளாஸ் ராகத்தின் ஸ்வரங்களே தெரியாமல் ‘வாராய் நீ வாராய்’ வாசித்துப் பார்ப்பேன். பிறகு சங்கீத வகுப்புகளில் பீம்ப்ளாஸ் பாடத்தின் போது எளிதாக நான் வாசிப்பதைப் பார்த்து நாலுமாவடியிலிருந்து வரும் மாணவர் சாந்தக்குமார் சலித்துக் கொண்டார்.
‘இந்த சவத்துப்பயவுள்ள பீம்பிளாசு வருவெனாங்கெய்யா?
அவரிடம் மெல்ல ‘வாராய் நீ வாராய்’ பாட்டை வாசித்துப் பழகச் சொன்னேன். சில நாட்கள் கழித்துச் சொன்னார்.
‘யோவ், நீரு ஆள சோலிய முடிக்கதுக்குல்லா வளி சொல்லியிருக்கேரு. ஒமக்கென்ன ஆர்மொனியத்துல ஒரு இளுப்பு இளுத்து விட்டுருவேரு. மூச்சு முட்டுது போரும். ஒருவாரத்துலயே எனக்கு ஆஸ்துமா வந்துட்டு. பாட்டாவா போட்டிருக்கான், சண்டாளப்பாவி.’
அவர் புல்லாங்குழல் கற்றுக் கொண்டிருந்தார்.
கங்கைகொண்டானிலிருந்து வரும் ராமச்சந்திரன் பெரியப்பா பிறப்பால் பிராமணர். கிட்டத்தட்ட எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நாங்கள் நினைக்கிற அவர், கேள்வி ஞானத்திலேயே எல்லா ராகங்களையும் துல்லியமாகச் சொல்பவர். சத்தமாகப் பேசுவார். சத்தமாகச் சிரிப்பார். சத்தமாகச் சாப்பிடுவார். ‘சுந்தரி சௌந்தரி’ ஆரம்பித்தவுடனேயே ‘எல, தெரியுதா. குறிஞ்சி’ என்பார். இத்தனைக்கும் சங்கீதம் படித்தவரல்ல. ஸ்வரங்கள் பற்றிய அறிவும் கிடையாது.
‘ஒங்களயெல்லாம் பாத்தா பொறாமையா இருக்குல. எல்லா ராகத்துக்கும்லா ஸ்வொரம் சொல்லுதியெ’ என்பார்.
‘பெறகு எப்பிடி பெரிப்பா, ராகம்லாம் கரெக்டா சொல்லுதீங்க?’ என்று கேட்டால், ‘ஐயன்தாம்ல காரணம். ஒரு நெளிசல் இல்லாம சொல்லி குடுத்துருவாம்லா. பாடிப் பாடிப் பாரு. தெரிஞ்சுரும்’ என்பார்.
‘கட்டபொம்மன்ல வரலச்சுமி குறிஞ்சில பாடுவா பாரு, மனம் கனிந்தருள் வேல்முருகான்னு. அந்தப் பய முருகன் அந்தாக்ல எறங்கி எளா என்னப் பெத்த அம்மைன்னு ஓடியாந்துர மாட்டான்?’. உற்சாகமாகக் கேட்பார். அம்பிகாபதி படத்தின் ‘வாடாமலரே’ என்னும் காதல் பாடலை சோகராகமான முகாரியில் ஜி.ஆர் அமைத்திருப்பதைச் சொல்லி அதை இனிமையாகப் பாடியும் காட்டுவார் ராமச்சந்திர பெரியப்பா.
அப்பாவின் அக்காள் மனோன்மணி அத்தை நான் ஹார்மோனியம் வாசிக்கும் போதெல்லாம் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வாள். சங்கீதம் முறையாகப் படித்தவள். அதனால் எனக்குக் கொஞ்சம் உதறல் எடுக்கும். நான் சம்பூர்ண ராகங்களின் ஆரோகண, அவரோகணங்கள் மட்டும் வாசித்து ஏமாற்றிக் கொண்டிருந்த காலமது. ஆனால் அத்தை எந்த கெடுபிடியும் பண்ணாமல் சினிமாப்பாட்டு வாசிக்க அனுமதிப்பாள். சினிமாப் பாட்டு என்றால் ஜி.ஆர் பாட்டுதான்.
‘ஜி.ஆர். எவ்வளவோ ராகமாலிகை போட்டிருக்காரு. அதெல்லாம் பிராக்டீஸ் பண்ணு. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஒண்ணுலெருந்து இன்னொண்ணுக்கு போறதே தெரியாம டிரான்ஸிஷன்லாம் அவ்வளவு ஸிம்பிளா இருக்கும்’.
கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்வாள்.
‘கேக்கறதுக்குத்தான் ஸிம்பிள். வாசிச்சுப் பாரு. பெண்டு நிமிந்திரும்’.
gr-2உண்மைதான். ஜி.ஆரின் ராகமாலிகைகளை வாசித்துப் பார்த்தாலோ, பாடிப் பார்த்தாலோ தெரியும் சங்கதி. மனோன்மணியத்தையின் ராகமாலிகைத் தேர்வு எப்பொதும் உத்தமப்புத்திரன் திரைப்படத்தின் கானடா, சாரமதி, திலங், மோகனம் என்ற அற்புதக் கலவையான ‘காத்திருப்பான் கமலக்கண்ணன்’தான்.
பெரியவர்கள் சொல்லிக் கேட்டது போக கொஞ்சம் விவரம் தெரிந்தவுடன் நானாக ஜி.ராமனாதனின் பாடல்களைத் தேடிப் பிடித்துக் கேட்கத் தொடங்கினேன். கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் என்று புகழ்பெற்ற படப்பாடல்கள் வரிசையில் எனது விருப்பப்பாடலாக இன்றளவும் என் மனதிலிருக்கும் பாடலும் ஜி.ராமனாதனின் ராகமாலிகைதான்.
‘தெய்வத்தின் தெய்வம்’ திரைப்படத்தின் ‘கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்’ என்னும் பாரதி பாடல்தான் அது. வீணை பிரதானமாக ஒலிக்கும் இந்தப் பாடலில் ஷெனாய் என்னும் வடநாட்டு வாத்தியத்தை ஜி.ராமனாதன் பயன்படுத்தியிருக்கும் விதத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஆபேரி, பாகேஸ்ரீ, பெஹாக் என்று ஜி.ராமநாதனின் அற்புதமான இசையமைப்புக்கு உயிர் கொடுத்துப் பாடியிருந்த எஸ்.ஜானகியை, இது போன்ற பாடல்கள் வழியாகத்தான் பின்னால் வந்த இளையராஜா நிறைய பாடல்களைக் கொடுத்து மேலும் பிரபலமாக்கியிருக்க வேண்டும். ‘தெய்வத்தின் தெய்வம்’ படமே ஜி.ராமனாதனின் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
என் தகப்பனாரின் மூத்த சகோதரரான சங்கரன் பெரியப்பா நாற்பது வயதிலேயே காலமாகிவிட்டார். பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரியாக இருந்த, கர்நாடகக் கச்சேரிகள் செய்து கொண்டிருந்த தன் கணவரின் நினைவாக சேகரித்து வைத்திருந்த புகைப்படங்களை ஒரு நாள் ஒவ்வொன்றாக எடுத்து தூசிதட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெரியம்மை. அவற்றில் ஒரு புகைப்படம் எனக்கு நம்பவே முடியாத ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எங்கள் வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு பழைய கருப்புவெள்ளைப் புகைப்படத்தில் நடுநாயகமாக ஒரு மனிதர் வீணையுடன் அமர்ந்திருக்க, உடன் இன்னும் சில வாத்தியக்காரர்களுடன் பெரியப்பா, மற்றொரு பெரியப்பா, அத்தைகள், அண்ணன் என்று அனைவருமே அமர்ந்திருக்கின்றனர். வீணையுடன் அமர்ந்திருந்த அந்த மனிதர் இசைமேதை ஜி.ராமனாதன்.
அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டு சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடத்தின் நவம்பர் மாதத்தில் தூத்துக்குடி விமானநிலையத்துக்கு இளையராஜா அவர்களுடன் சென்றிருந்தேன். விமானநிலைய அதிகாரி ஓடோடிவந்து வி.ஐ.பி அறையைத் திறந்து அமர வைத்தார். இன்னும் ஒரு சில நிமிடங்களில் விமானம் வந்துவிடும் என்று தகவல் சொன்னவர் சடாரென்று இளையராஜாவின் கால்களில் விழுந்து வணங்கினார். ஒருமாதிரியான உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த அவர் தன்னை கே.வி.மஹாதேவனின் உறவினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நடுங்கும் குரலில் சொன்னார்.
‘ஸார், எங்க வீட்டுல எங்க குடும்பத்துப் பெரியவா ஃபோட்டோஸ்கூட ஒங்க ஃபோட்டோவையும் மாட்டியிருக்கோம்’.
நான் எங்கள் வீட்டிலுள்ள ஜி.ராமனாதனின் புகைப்படத்தை நினைத்துக் கொண்டேன்.

துப்பு

பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு எனது பெரியப்பாவின் வீட்டிலிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. (இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன்.) நான் ஏழாவதோ, எட்டாவதோ படித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை கடைசியாகப் பார்த்திருந்தேன். எல்லாப் பெரிய குடும்பங்களையும் போல உப்புப் பெறாத காரணங்களுக்காக அத்தனை காலம் தொடர்பில்லாமல் பிரிந்திருந்தோம். அவ்வளவு நீண்ட இடைவெளியில் நான் சென்னைக்கு வந்து திரைப்படத்துறையில் நுழைந்திருந்தேன். பெரியப்பா பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரி. குடும்பத்துடன் பல அண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறியவர். என்னை அவர்கள் அழைத்தது, அவர்களின் இரண்டாவது மகனின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு. மூத்த மகனின் திருமணத்துக்கு அழைக்கவேயில்லை. எங்கள் குடும்பத்தின் சார்பாக இதற்கு என்னைப் போகச் சொல்லியிருந்தனர் என்பெற்றோர். சிறுவனாக என்னைப் பார்த்துப் பழகியிருந்த பெரியப்பாவுக்கும், பெரியம்மைக்கும் நீண்ட தாடி, மீசையுடன் வளர்ந்த வாலிபனான என்னைப் பார்த்ததில் ஆச்சரியம் கலந்த சந்தோஷம். ஐயா வா, ஐயா வா என்று தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறைதான்.
பெரியப்பாவின் வீட்டில் காலைச் சிற்றுண்டி அருந்திவிட்டு ஒரு வேனில் பெண்ணின் வீட்டில் நடக்க இருந்த நிச்சயதார்த்த விழாவுக்குக் கிளம்பினோம். வேனில் இருக்கும் போதே அத்தனை வருஷம் விட்டுப் போன பல கதைகளை பெரியம்மை சொல்லிக் கொண்டே வந்தாள். ஏதோ நினைவு வந்தவளாய் வேன் டிரைவரிடம் சொன்னாள்.
‘அந்த டர்னிங்க்ல ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போகணும். நிறுத்த மறந்துராதீங்க’
‘யார?’ நான் கேட்டேன்.
‘அவருதான் துப்பு சொன்னவரு’
‘என்னது துப்பச் சொன்னவரா?’
‘கொளுப்பு மட்டும் இந்தப் பயலுக்குக் கொறையவே இல்ல′.
சிரிப்பை அடக்கியபடி சொன்னாள் பெரியம்மை.
துப்பு என்னும் வார்த்தையை கொலை, கொள்ளை வழக்கு பற்றிய செய்திகளில் செய்தித்தாள்களில் மட்டுமேதான் படிப்பது வழக்கமாகயிருந்ததால் அதற்கு உள்ள வேறோர் அர்த்தத்தை நான் சுத்தமாக மறந்திருந்தேன். திருமணத்துக்கான வரன் குறித்த தகவல் சொல்வதை துப்பு சொல்வது என்று திருநெல்வேலியில் சொல்வதுண்டு. மற்ற ஊர்களில் இது வழக்கத்தில் உள்ளதா என்று தெரியவில்லை.
இப்படி துப்பு சொல்பவர்களை வெறுமனே தரகர்கள் என்று குறுக்கி விட முடியாது. இப்படி துப்பு சொல்பவர்கள் பணம் பெற்றுக் கொள்வதுண்டுதான் என்றாலும் அதையும் தாண்டி இரு குடும்பங்களின் நன்மைக்காகவும் உளமாற பாடுபடுபவர்கள். எப்படியும் இவர்கள் சம்பந்தப் பட்ட பெண், மாப்பிள்ளை வீடுகளின் குறை, நிறையை நன்கு அறிந்தவராகவே இருப்பர். கூடுமானவரை அதை முழுக்க தெரியப்படுத்தாமல் சமாளித்து பரஸ்பரம் இரு குடும்பத்தாருக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தி கல்யாணப் பேச்சு நடக்கும் போதே அவர்களை நெருக்கமானவர்களாக மாற்றி விடுவர். திருமணம் நடந்து முடிந்த பிறகும் கூட ஏற்படும் சின்னச் சின்ன குடும்பச் சச்சரவுகளில் உறவுப் பாலமாக செயல்பட்டு அதை நீக்கி வைப்பவர்களும் உண்டு.
marriage-2எங்கள் குடும்பத்துக்கு அப்படி வேண்டிய ஒரு துப்பு சொல்பவராக முனியப்ப தாத்தாவை பார்த்து வருகிறேன். திருநெல்வேலி சைவ வேளாளர்களில் வள்ளிநாயகம், கோமதிநாயகம், மீனாட்சிசுந்தரம், நல்லகண்ணு, நெல்லையப்பன், சபாபதி என்ற பெயர்களுக்கு மத்தியில் எனக்கு தெரிந்த ஒரே ‘முனியப்பன்’ இவர்தான். முனியப்ப தாத்தா என் தகப்பனாருக்கு சித்தப்பா முறை. ஆனால் என் தகப்பனாரை விட பதினைந்து வயது இளையவர். குள்ளமாக, குண்டாக, மாநிற உடம்பெல்லாம் புசு புசுவென முடியாக உள்ள முனியப்பத் தாத்தா இல்லாமல் திருநெல்வேலியில் எந்த ஒரு வேளாளர் வீட்டுத் திருமணத்தையும் நான் பார்த்ததில்லை. மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து மறுநாள் மறுவீட்டுப் பலகாரப் பந்தியிலும், சொதிச் சாப்பாட்டிலும் அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருப்பார் தாத்தா. மணவயதிலுள்ள எல்லா பெண்களும் முனியப்ப தாத்தாவுக்கு பேத்திகள்தான். பையன்கள் பேரன்கள்தான். வசதி குறைந்த, வசதியான யார் வீட்டிலும் முனியப்ப தாத்தாவை அவர்கள் வீட்டு அடுக்களை வரை அனுமதிப்பார்கள். குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் அந்தஸ்து, சக்தி தெரிந்து அதற்கேற்ற வரனை முனியப்ப தாத்தாவே முதலில் மனதுக்குள் முடிவு செய்து விடுவார். அவருக்கு தெரியும் யார் யாருக்கு பொருந்திப் போகும் என்று. அந்த வகையில் பெரும்பாலான திருநெல்வேலி சைவ வேளாள ஆண்களுக்கு ‘மனைவி அமைவதெல்லாம் முனியப்ப தாத்தா கொடுத்த வரம்’.
முனியப்ப தாத்தாவை விட வயதில் மூத்தவர்களே ‘என்னடே முனியப்பா! பேத்தி உக்காந்து வருஷம் எட்டாகுது. இன்னும் ஒனக்கு அக்கற இல்லையே’ என்பார்கள். அவர்கள் சொல்லும் பேத்தி அவர்களின் பேத்திதான் என்றாலும் பொதுவாக உரிமையுடன் முனியப்ப தாத்தாவிடம் சொல்லி வைப்பார்கள். ‘நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியணுமாக்கும். எல்லாம் மனசுல இருக்கு’ என்று பதில் சொல்வார். மனதில் இருப்பதை செய்யும் வண்ணம் மாப்பிள்ளையின் ஜாதகத்தோடு சில நாள் கழித்து வருவார். ‘ நம்ம செவகாமி மூல நட்சத்திரம்லா. அதான் பொறுத்துக்கிட்டே இருந்தேன். இந்தா பாத்தேளா? பையனுக்கு அம்மை இல்லை. ஜாதகமும் பொருந்தி வருது. என்ன சொல்லுதிய?’ என்பார். எப்படியும் ஓரிரு மாதங்களில் அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிந்து விடும். அது முடிந்து அடுத்த திருமண வேலைகளில் மும்முரமாக இறங்கி விடுவார். அந்த சிவகாமிக்கு பிள்ளை பிறந்ததும் முதலில் முனியப்ப தாத்தாவுக்குதான் சொல்லி விடுவார்கள். அந்தப் பிள்ளைக்கு பெயர் சூட்டும் வைபவத்திலும் முனியப்பா தாத்தாவின் ஆட்சிதான். நாள் குறிப்பதிலிருந்து ஆசாரிக்குச் சொல்வது வரை இவர்தான் எல்லாவற்றையும் முடிவு செய்து சொல்வார்.
ஊருக்கெல்லாம் துப்பு சொல்லி திருமணம் நடத்தி வைக்கும் முனியப்ப தாத்தாவின் மனைவி அவருடன் வாழ்ந்தது ஒரு சில வருடங்கள்தான். பெரும் பணக்காரியான அவர் இவரிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு தன் மகனுடன் தனியே வாழ்ந்து வருகிறார். மகன் மீது கொள்ளைப் பாசம் முனியப்ப தாத்தாவுக்கு. அவன் கல்லூரிக்குச் செல்லும் போது எதிரே இவர் வந்தால் தன் தாயின் வளர்ப்பு காரணமாக சிரிக்கக் கூட செய்யாமல் பாராமுகமாகச் சென்றதை ஒருமுறை என்னிடம் கண்கலங்கிச் சொல்லியிருக்கிறார். ‘விடுங்க தாத்தா. அந்தப் பயலுக்குக் குடுத்து வைக்கல′ என்று சமாதானப் படுத்தினேன். தனக்குத்தான் குடும்ப வாழ்க்கை அமையவில்லை, மற்றவர்களாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்னும் நல்லெண்ணமே முனியப்ப தாத்தாவை இந்த துப்பு சொல்லும் வேலையில் ஆரம்பித்து திருமண வைபவங்களை முன் நின்று நடத்தச் செய்கிறது என்றே எண்ணுகிறேன்.
துப்பு கேட்பதில் மட்டுமல்ல. அசுப காரியங்களாக இருந்தாலும் முதலில் முனியப்ப தாத்தாவுக்குத்தான் ஆள் போகும். ஓடி வருவார். மரணம் நிகழ்ந்த வீட்டுக் காரர்கள் எப்படியும் படபடப்புடன் இருப்பார்கள். முனியப்பா துக்கத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாக எல்லா காரியங்களையும் கவனித்துக் கொள்வார். முதலில் சமையலுக்கு ‘தவுசுப் பிள்ளை’க்குச் சொல்லி விடுவார். பிறகு பலசரக்கு சாமான்கள் வாங்கி வருவார். நெல்லையப்பர் கோயிலுக்கு தகவல் சொல்வார். அம்மன் சன்னதி தெரு, ஸ்வாமி சன்னதி தெருவாக இருந்தால் பிணத்தை எடுக்கும் வரை நெல்லையப்பரும், காந்திமதி அம்மையும் குளிக்க மாட்டார்கள். எந்தெந்த ஊரில் அந்த வீட்டின் உறவினர்கள் இருக்கிறார்கள் என்னும் விவரம் அறிந்தவராதலால் அவரே எல்லோருக்கும் தகவல் சொல்வார். குடியானவனுக்கும் விஷயம் சொல்லி நீர்மாலை எடுத்தலில் ஆரம்பித்து மறுநாள் சாம்பல் கரைக்கும் வரை கூடவே இருந்து பொறுப்புடன் எல்லா விஷயங்களையும் செய்து முடிப்பார். துப்பு சொல்லும் வேலையை கூடுமானவரை பதினாறு நாட்களுக்கு ஒத்தி வைப்பார்.
முனியப்ப தாத்தாவைப் போலவே இன்னும் பலர் இந்தத் துப்பு சொல்லும் வேலையில் உண்டு. அவர்கள் அனைவருக்குமே இந்த பொது நற்குணங்கள் உண்டுதான். திரைப்படங்களில் பெரும்பாலும் காட்டப் படும் அசட்டுத் தரகர்கள் போல் ஒருவரை கூட நான் இதுவரையில் திருநெல்வேலியில் பார்த்ததில்லை. சென்னையில் பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் திருநெல்வேலியிலும் கூட துப்பு சொல்பவர்கள் மறைந்து போய் திருமண தகவல் நிலையங்கள் மலிந்து விட்டதாகத் தகவல். இந்தத் தகவல் நிலையங்களால் ஜாதகங்களையும், அவர்களின் வசதிகளையும் மட்டும்தான் தெரிவிக்க முடியும். முனியப்ப தாத்தா போன்ற துப்பு சொல்பவர்களால்தான் அந்தந்த குடும்பத்து உறுப்பினர்களின் வரவு, செலவு, தரம் அறிந்து சகலத்தையும் மனதுக்குள் கணக்கு போட்டுப் பார்த்து பொருத்தமான ஜோடிகளை இணைக்க முடியும். திருமணத்துக்குப் பின் வரும் பிணக்குகளையும் அலைந்து திரிந்து போராடி, தான் கெட்ட பெயர் வாங்கினாலும், கசப்பை சம்பாதித்தாலும் குடும்பத்தை இணைக்க பாடுபடவும் முடியும். வாழ்க்கை அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அனுபவம் காரணமாக யாருக்கு யார் பொருத்தம் என்பதை அவர்களால் தெளிவாக முடிவு செய்ய முடியும்.
‘நல்லா விசாரிக்க வேண்டாமா? துப்பு சொன்னது யாரு? போ, அவனா? அப்போ வெளங்கினாப்லதான் இருக்கும்.’ இப்படி பேச்சுக்களில் தொடங்கி விவாகரத்தில் போய் முடிந்த திருமணங்களும் உண்டு. அதனாலேயே விசாரிப்பில் லேசில் திருப்தி அடைந்து விடாமல் அதே வேலையாக இருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.
marriage-1சென்ற வருடத்தின் துவக்கத்தில் திருநெல்வேலியின் கிராமப் பகுதிகளில் நண்பர்களுடன் காரில் சுற்றிக் கொண்டிருந்தேன். என்னுடன் குஞ்சுவின் தம்பி பாலாஜி (பொறியியற்கல்லூரியின் விரிவுரையாளன்), எனது உறவுக்கார மீனாட்சி சுந்தரம், ஓவியர் பொன்.வள்ளிநாயகம் போன்ற நண்பர்களும் வந்திருந்தனர். எங்கெங்கெல்லாமோ சுற்றி விட்டு திருப்புடைமருதூர் தாமிரபரணியில் குளித்து விட்டு மாலையில் வீரவநல்லூர் வந்து சேர்ந்தோம். ‘ எண்ணே, இங்கனெ ஒரு கடையில ஆம வட நல்லா இருக்கும். அப்படியே டீயும் குடிச்சுருவோம்’ என்றார் வள்ளிநாயகம். வீரவநல்லூர் அவரது சொந்த ஊர் என்பது எங்களுக்கு அப்போதுதான் தெரிந்தது. காரை ஓரமாக நிறுத்தி விட்டு அந்த சின்னக் காப்பிக் கடையின் திண்ணையில் உட்கார்ந்தோம். ‘எண்ணெ காயுது. ஒரு அஞ்சு நிமிசம்’ என்றார்கள். ‘சித்தப்பா, நீங்க இரிங்க. நான் வட போட்டவொடனே எடுத்துட்டு வாரேன்’ என்று கடைக்குள் சென்றான் மீனாட்சி. 
எல்லோருமே வேட்டி சட்டையில் இருந்தோம். பாலாஜி துண்டை தலைப்பாகையாகக் கட்டியிருந்தான். குளிர்ந்த காற்றில் மேலே போட்டிருந்த ஈர வேஷ்டியும், சட்டையும் ஒரு வித சுகத்தைக் கொடுக்க, ‘காத்து நல்லா அடிக்கி. என்னண்ணே? என்றார் வள்ளிநாயகம். சற்றும் சம்பந்தமில்லாமல் ‘ இதுதான் என் மாமனார் ஊரு’ என்றான் பாலாஜி. ‘என்ன சொல்லுதியெ? யாரு அது? இது என் சொந்த ஊருல்லா!’ என்றார் வள்ளி. மாமனாரின் பெயரை பாலாஜி சொன்னவுடனேயே வள்ளிக்குத் தெரிந்து போனது. ‘சரியாப் போச்சு. ஜம்பு தங்கச்சியையா நீங்க கட்டியிருக்கியே? அவன் என் கிளாஸ்மேட்டுல்லா!’ என்றார். இதற்குள் மீனாட்சி தந்தி பேப்பரில் சுற்றிய ஆம வடையைக் கொண்டு வந்தான். ‘சித்தப்பா, சூடா இருக்கு. பெருசா எண்ணெ குடிக்கல. எடுத்துக்குங்க. டீய வாங்கிட்டு வாரேன்’ என்று வடையைக் கொடுத்து விட்டுப் போனான்.
‘ஜம்பு படிச்சு முடிக்கவுமே அவங்க இந்த ஊர விட்டு போயிட்டாங்க. எனக்கு அவங்க வீட்டுல எல்லாரையும் நல்லா தெரியுமெ’ என்றார் வள்ளி. வடையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அதை கடிக்காமல் மெல்ல பாலாஜி வள்ளியிடம் கேட்டான்.
‘பொண்ணு நல்ல பொண்ணுதானா?’
பாதி வடையை வாயில் வைத்திருந்த வள்ளிநாயகம் அவசரமாக, அவசரமாகக் கடித்து முழுங்கிவிட்டு சொன்னார்.
‘சே, தங்கமான பிள்ள′.
இந்த கேள்வியை வள்ளிநாயகத்திடம் கேட்டபோது பாலாஜியின் மகன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

கோட்டி

‘ஒரு பத்து பிசா குடேன்’. 
வாசலில் கொஞ்சம் சத்தமாகக் கேட்கும் குரல். எட்டிப் பார்த்தால் நீளமான தன் விரல் நகங்களால் பரட் பரட்டென்று சொறிந்தபடி நிற்பாள், அந்த கோட்டிக்காரி. சின்ன வயதில் நான் பார்த்த முதல் கோட்டிக்காரி அவள்தான். எப்படியும் ஒரு ஐம்பது வயது இருக்கும். இந்திராகாந்தியின் ஹேர்ஸ்டைலில், தொள தொள ரவிக்கை அணிந்திருப்பாள். நைந்து போன சேலை காற்றில் பறந்து கொண்டிருக்கும். எப்போதாவது அதை சரி செய்வாள். கண்கள் கலங்கிச் சிவந்திருக்கும். உதட்டில் எப்போதுமே சிறு சிரிப்பு.
‘எதுக்கு துட்டு கேக்கா?
‘அங் . . . மூதி பீடி குடிக்கும்.’
ஆச்சி சொல்வாள். அவள் அப்படி வந்து கேட்பது பிடிக்கவில்லையென்றாலும், அவள் கேட்ட பத்து பைசாவுக்கும் அதிகமாக நாலணாவோ, எட்டணாவோ கொடுக்கத்தான் செய்வாள் ஆச்சி. பெரிய மாமா வழியில் அந்த கோட்டிக்காரி எங்களுக்கு தூரத்து சொந்தம் என்று சொல்வார்கள். நல்ல வசதியான குடும்பப் பின்னணியுள்ள அவளது கணவனும், பிள்ளைகளும் ரயிலில் அடிபட்டு இறந்து போனதிலிருந்து அவளுக்கு இப்படி கோட்டி பிடித்து விட்டதாக பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
kotti1ஒருமுறை வந்தால் அதற்கு பிறகு அவள் எப்போது வருவாள் என்று சொல்லமுடியாது. அடிக்கடி வருவதில்லையென்பதால், சிலசமயம் ‘எங்கெ அந்த மூதிய ஆளயே காணோம்?’ என்று ஆச்சியே கேட்கும் அளவுக்கு இடைவெளி விட்டுதான் வருவாள். இடைவெளி ஒருமுறை நீண்டு, பிறகு அவள் வரவேயில்லை. ரயில் தண்டவாளத்தையொட்டி பீடி குடித்தபடியே அவள் நடந்து போனதை பார்த்ததாக குருக்களையா தாத்தா சொன்னதுதான் அந்த கோட்டிக்காரி பற்றி நாங்கள் கேட்ட கடைசி தகவல்.
திருநெல்வேலி பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கோட்டி என்றழைப்பது வழக்கமான ஒன்று. பைத்தியம் என்ற சொல்லை திருநெல்வேலிக்காரர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. கோட்டி என்ற வார்த்தையை ஒருவர் சொல்வதை வைத்தே அவர் திருநெல்வேலிக்காரர் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். செல்லமாகவும் ஒருவருக்கொருவர் கோட்டி என்று சொல்லிக் கொள்வதுண்டு. சமயங்களில் குழந்தைகளைக் கொஞ்சுவதற்கும் கோட்டி என்ற சொல் பயன்படும்.
‘அட கோட்டி, நீ இவ்வளவு நேரம் இங்கனயா ஒளிஞ்சிக்கிட்டிருந்தே!’
ஆச்சரியமும், மகிழ்ச்சியும் பொங்கும் கண்களோடு மர பீரோவுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு எட்டிப் பார்க்கும் பிள்ளையை ஓடிச் சென்று ஆவிசேர்த்து கட்டிக் கொஞ்சி முத்திக் கொள்வாள் அம்மை.
நண்பர்களுக்குள்ளும் கோட்டி அடிபடுவதுண்டு. குஞ்சு அடிக்கடி என்னை விளிக்கும் சொற்களுள் கோட்டியும் ஒன்று.
‘நான் அன்னைக்கெ சொன்னென். நீதான் கோட்டிக்காரப்பய கேக்கல.’
அப்பளாம் மாமி வீட்டுக்கு டியூஷன் படிக்க போகும் பிள்ளைகள் மாமியின் வீட்டிலுள்ள ஒரு பூட்டப்பட்ட அறையைப் பார்த்தபடியேதான் வீட்டுப்பாடம் எழுதுவார்கள் என்று அம்மன் சன்னதியில் பேசிக் கொள்வார்கள். அப்பளாம் மாமிக்கு கணவன் இல்லை. அப்பளம் போட்டு விற்பது, ஒயர் கூடை பின்னுவது, டியூஷன் எடுப்பது என்று ஜீவனத்துக்காக ஏதேதோ செய்து கொண்டிருந்தாள். மாமி இவ்வளவு கஷ்டப்படுவது அவளது புத்திசுவாதீனமில்லாத ஒரே மகனுக்காகத்தான் என்பது எல்லோருக்குமே தெரியும்தான். ஆனாலும் சரியாக படிக்காத பிள்ளைகளை பயமுறுத்தும் விதமாக அப்பளாம் மாமியிடம் டியூஷனுக்கு அனுப்பப் போவதாக மிரட்டி வந்தார்கள்.
‘அப்பளாம் மாமி வீட்டுக்கு டியூஷன் படிக்க போற புள்ளைங்க ஒளுங்கா படிக்கலென்னா, அவங்க வீட்டுல ஒரு கோட்டி இருக்குல்லா. அதுட்ட புடிச்சு குடுத்துருவாங்களாம்’.
அத்தனை சிரமமான வாழ்க்கையிலும் வருடாவருடம் தன் வீட்டில் கொலு வைக்க மாமி தவறுவதேயில்லை. பெரியம்மையும், அப்பளாம் மாமியும் தோழிகள். ஒருமுறை பெரியம்மையுடன் அப்பளாம் மாமி வீட்டு கொலுவுக்கு நானும் போயிருந்தேன். தவழும் கிருஷ்ணர், பட்டாபிஷேக ராமர், வேடன் கண்ணப்பன், சஞ்சீவி மலை தாங்கிய அனுமன், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி சாயலிலேயே உள்ள பக்த மீரா, நவதானிய தட்டுகளுக்கு முன்னே பெரிய தொந்தியுடன் உட்கார்ந்திருக்கும் செட்டியார், மாரீச மானைக் காட்டும் சீதாபிராட்டி, உடன் ராமலட்சுமணர்கள் போன்ற பொம்மைகளுக்கிடையே கையில் கம்பூன்றியபடி மஹாத்மா காந்தியும் சிரித்துக் கொண்டிருந்தார். எல்லா பொம்மைகளையும் விட நான் அதிகம் பார்த்துக் கொண்டேயிருந்தது, ஹார்மோனியத்தில் ‘வாதாபி கணபதிம்’ வாசித்துக் கொண்டிருந்த அப்பளாம் மாமியின் மகனைத்தான். நடுவகிடெடுத்து தலை சீவி, கழுத்து பட்டன் வரை போட்டிருந்த சட்டையுடன் குனிந்தபடியே ஹார்மோனியக் கட்டைகளில் உள்ள தன் விரல்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் ஒரு கிண்ணத்தில் வைக்கப் பட்டிருந்த சுண்டல் அப்படியே இருந்தது. அவ்வப்போது ‘வாசிச்சது போதும். நாளைக்கு வாசிக்கலாம். சுண்டல் சாப்பிடு’ என்று மாமி சொல்வதை அவன் கேட்கவில்லை. தலை நிமிர்ந்து எங்களை பார்க்கவுமில்லை.
‘அவனையே பாத்துக்கிட்டிருக்காதெ’.
ரகசியமாகச் சொல்லி என் தொடையில் கிள்ளினாள் பெரியம்மை.
‘வெக்கந்தான். வேறொண்ணுமில்ல. நீங்க போனதுக்கப்புறம் எடுத்து சாப்பிடுவான்’.
நாங்கள் எதுவும் கேட்காமலேயே பதில் சொன்னாள் மாமி.
சென்னையில் சாலிகிராமத்துத் தெருக்களில் அவ்வப்போது ஒரு அழுக்கு மனிதர் தென்படுவார். ஏதாவதொரு கடையின் முன் வந்து நிற்பார். கடைக்காரரோ, வாடிக்கையாளர்களோ காசு கொடுத்தால் வாங்கிக் கொள்வார். இல்லையென்றால் சிறிது நேரம் கழித்து சென்று விடுவார். வாயைத் திறந்தோ, கைநீட்டியோ ஏதும் கேட்பதில்லை. ஒருமுறை ராஜேஸ்வரி கோயில் பக்கம் நடந்து வரும் போது ஒரு புல்லாங்குழலிசை கேட்டது. ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தின் ‘வான் போலே வண்ணங்கொண்டு’ என்ற வேடிக்கை பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழலிசை அது. வேறேதும் வாத்தியங்கள் ஒலிக்காததால் எங்கிருந்து வருகிறது என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒரு டீக்கடையின் வாசலில் குழுமியிருக்கும் இளைஞர் கூட்டத்துக்கு நடுவே நின்று நான் எப்போதும் பார்க்கும் அந்த அழுக்கு மனிதர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு ஒருநாள்கூட அவர் புல்லாங்குழல் வாசித்து நான் பார்க்கவில்லை. அவ்வப்போது காசு கொடுக்கும் போது அதுபற்றி கேட்க நினைப்பதோடு சரி. கேட்டதில்லை.
thirteenth_l_1இதே பகுதியில் ஆளவந்தான் என்றழைக்கப்படும் ஒரு விநோதமான மனிதர் நடமாடுவார். எப்போதும் மொட்டைத் தலையுடன் பேண்டும், ஷூசும் அணிந்திருப்பார். அவ்வப்போது சட்டையும் அணிவதுண்டு. முகம், கை, கால்களில் ஏதேனும் வண்ணம் பூசியிருப்பார். சமயங்களில் ஏதாவது கடை அல்லது வீட்டு படிக்கட்டுகளில் உட்கார்ந்து தன் மார்பில் தானே சிரமப்பட்டு பூக்கள் வரைவார். அருகிலேயே பெயிண்ட், பிரஷ் எல்லாம் இருக்கும். அவரை உட்கார்ந்த நிலையில் பார்க்க முடிவது இது மாதிரியான தருணங்களில்தான். மற்றபடி எப்போதுமே ஓட்டமும் நடையும்தான். பெரும்பாலும் ஒரே உடை. கால்களில் மட்டும் ஷூக்கள் அவ்வப்போது மாறும். பழையவைதான் என்றாலும் துடைத்து பளிச்சென்று இருக்கும். அந்த காலணிகளுடன் மிடுக்காக, படுவேகமாக செல்லும் போது அவர் ஒரு டென்னிஸ் பிளேயர் என்று சொன்னால் யாராலும் மறுக்காமல் நம்ப முடியும்.
அந்தப் பகுதியிலுள்ள காய்கறி, பழ வியாபாரிகள், மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்பவர்கள், டீக்கடை, பேப்பர் ஸ்டோர்காரர்கள் எல்லோரும் ஏதேதோ சொல்லி அவரை வம்பிழுக்கிழுத்தாலும் அவர்களிடம் பதிலேதும் சொல்லாமல், அவர்களை முறைத்து பார்த்தபடியே ஒரு காகிதத்தில் குறிப்பெடுப்பது மாதிரி ஏதோ எழுதுவார்.
‘டேய், ஆளவந்தான் கம்பிளெயிண்ட் எழுதுறான்டா. நீ காலி மகனே’.
‘ஆமா இவுரு பெரிய சிபிஐ. போடாங் . . . . .’
மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு நாள் மாலையில் தெருவில் ஒரே கூச்சலாகக் கேட்டது. கேட்ட மாத்திரத்தில் ஏதோ தகராறு என்பது புரிந்தது. மாடியிலிருந்து பார்க்கும் போது ஆளவந்தான் என்றழைக்கப்பட்ட அந்த மொட்டைத்தலை மனிதனை இரண்டு பேர் பிடித்துக் கொள்ள மெக்கானிக்ஷாப்காரர் அடி அடியென்று அடித்துக்கொண்டிருந்தார். மாறி மாறி கன்னத்தில் அறை விழுந்துகொண்டிருந்தது. கொஞ்சம் கூட எதிர்ப்பு காட்டாமல் பொறுமையாகவே நின்று அடிகளை வாங்கிக் கொண்டிருந்தார். சுற்றிலும் ஜனங்கள். எல்லோருமே அவரை அடிக்கச் சொல்லுகிறார்கள். இவர்களில் பெண்களும் உண்டு. ஆளவந்தான் எதற்கும் கலங்குபவராகவே தெரியவில்லை. மேலும், மேலும் அடித்து களைத்து அவர்கள் திரும்பும் போது ஒருவன் ஏதோ நினைவு வந்தவனாய் ஓடி வந்து ஆளவந்தானின் பேண்டைக் கிழற்றி உருவ முயன்றான். பலங்கொண்ட மட்டும் போராடும் விதமாக அவன் கைகளைக் கெட்டியாக பிடித்தபடி ‘என்ன அவமானப்படுத்ததெப்பா. நான் ஒண்ணும் பைத்தியமில்லெ’ என்று கதறினார், எல்லோரையும் போல கோட்டிக்காரன் என்று நானும் நினைத்துக் கொண்டிருந்த அந்த பெரியவர்.

ஆய்புவன்

எங்களுக்கு தெரிந்து நெல்லையப்பர் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த நந்தி பட்டர் மாமாதான் முதலில்  டி.வி வாங்கினார். வழக்கம் போல இந்தத் தகவலையும் எங்களுக்குச் சொன்னவன் குஞ்சுதான்.

‘டைனமோ கம்பேனிக்காரனோட டிவியாம்ல. ப்ளாக் அன்ட் வொயிட்டுதான். ஆனா நேர்ல பாக்கற மாதிரி இருக்குறதா ஐயெங்கார் பாலாஜி சொன்னான்’.

மறுவாரமே குஞ்சு, நந்தி பட்டர் மாமா வீட்டுக்கு நேரிலேயே சென்று ஓர் ஆய்வு நடத்திவிட்டு வந்து அம்மன் சன்னதி பஜனைமடத்தில் வைத்து அறிக்கை சமர்ப்பித்து விட்டான்.

‘ஐயெங்கார் பேச்ச கேட்டு அசிங்கப்பட்டு போனேம்ல. அது டைனமோ கம்பேனியில்ல. டைனோரா கம்பெனி.

இது என்ன கம்பெனி டிவி மாமான்னு கேட்டதுக்கு நந்திபட்டர் மாமாதான் அப்பிடி சொன்னா. ஒடனெ என் தலைய போட்டு உருட்டுதேளே’.

ஐயெங்கார் பாலாஜி கோபப்பட்டான். குஞ்சுவின் தம்பி பெயரும் பாலாஜி என்பதால் மற்றொரு பாலாஜி, ‘ஐயெங்கார் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டான்.
அதற்குப் பிறகு குஞ்சு நந்திபட்டர் மாமா வீட்டுக்கு டி.வி பார்க்கப் போவதை வழக்கமாக்கிக் கொண்டான். அதுவும் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் சமயத்தில் கண்டிப்பாக செல்வான். அதுவரை ரேடியோ கமெண்ட்ரி மூலம் மட்டுமே அறிந்து வைத்திருந்த கிரிக்கெட்டை நேரடியாக டி.வி.யில் பார்த்த பரவசத்தை ஒரு கதை போல எங்களுக்குச் சொல்லி வந்தான். எனக்கு அப்போது கிரிக்கெட் மீதும், டி.வி. மீதும், பெரிய மோகமில்லாததால் குஞ்சு சொல்லும் தகவல்களே போதுமானதாகயிருந்தன.

‘எல . . . . இந்த பௌலர் பயலுவொ பந்து போடதுக்கு முன்னாடி எங்க வச்சு தேய்க்கானுவொ, தெரியுமா?’

எங்கல?

காதில் ரகசியமாகச் சொன்னான்.

என்னல சொல்லுதெ, நெஜமாவா?

பெறகு? நான் என்ன பொய்யா சொல்லுதேன்? வேணும்னா ஐயெங்கார் பாலாஜிய கேட்டுப் பாரு.

அத ஏம்ணே கேக்கிய! குஞ்சண்ணன் கூடல்லாம் ஒரு எடத்துக்கு போலாமா? அங்கெ சாமி சன்னதில உள்ள மாமிங்கள்லாம் டி.வி. பாக்க வந்திருந்தாங்க பாத்துக்கிடுங்க. பந்த பௌலருங்க அங்கெ வச்சு தேய்க்கவும் குஞ்சண்ணன் என்ட்ட ‘எல, எங்கெ தேய்க்கனுவொ பாரு’ன்னு சொல்லிட்டு சத்தம் போட்டு ஒரே சிரிப்பு. நந்தி பட்டர்மாமா காதுல விளுந்துட்டு. எந்திருச்சு வெளியெ போங்கலன்னு ஏசி போட்டாரு. ரொம்ப அசிங்கமா போச்சுண்ணெ.

எல, பந்த அங்கெ வச்சு தேயி தேயின்னு தேய்க்கறவனுக்கு அசிங்கமில்ல. நாங்க சிரிச்சதுதான் மயிராண்டி ஒங்களுக்கு அசிங்கமாப் போச்சோ! தெரியாமத்தான் கேக்கேன்’.

இந்த பிரச்சனைக்குப் பிறகு கைலாசம் அண்ணன் வீட்டில் டி.வி வாங்கினார்கள். அன்றிலிருந்து தினமும் மாலை நேரங்களில் கைலாச அண்ணன் வீட்டில் குஞ்சு தென்பட ஆரம்பித்தான். இத்தனைக்கும் அப்போது திருநெல்வேலிப் பகுதியில் இலங்கையின் ரூபவாஹினி நிகழ்ச்சிகள் மட்டுமே தொலைக்காட்சியில் தெரிந்து வந்தது. அதற்கே ஆங்காங்கு ஆன்டெணாக்கள் முளைத்தன. பெரும்பாலான தொலைக்காட்சிப் பெட்டிகள் கருப்பு வெள்ளைதான். கலர் டி.வி வர கொஞ்ச நாள் ஆனது. அதுவரை பிளாக் அன்ட் வொயிட் டி.வியின் திரையில் ஒரு வண்ண ஸ்கிரீனை பொருத்தி படம் பார்த்தார்கள். மணி மாமா வேலை பார்த்த ‘விஜயகுமார் சைக்கிள் மார்ட்’ கடையில் அப்படி ஒரு ‘வானவில்’ வண்ணத் திரையில் ‘வெள்ளிக் கிழமை விரதம்’ பார்த்தேன். படத்தை ஈஸ்ட்மெண்ட் கலரில் தயாரித்திருந்த சின்னப்பா தேவரே அவ்வளவு வண்ணத்தில் அந்த படத்தைப் பார்த்திருக்க மாட்டார்.

ரூபவாஹினியில் சார்லிசாப்ளின், லாரல் ஹார்டி தவிர ஸ்டார்ஸ்கை அன்ட் ஹட்ச், ஸ்டார்ட்ரெக், ப்ளேக்ஸ் 7 போன்ற சீரியல்கள் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாயின. அவற்றுள் ‘டைனஸ்டி’ என்னும் ஆங்கில சீரியலுக்குத்தான் மவுசு ஜாஸ்தி. காரணம் அந்தத் தொடர் தொடங்கும் முன்பே அது வயது வந்தவர்களுக்கான தொடர் என்ற அறிவிப்பார்கள். அந்த சமயம் மட்டும் கைலாச அண்ணன் வீட்டில் வெள்ளையடிப்பு வேலை நடப்பதாகக் காரணம் சொல்லி வந்தார்.

‘அதென்னலெ பொதன்கெளமதோறும் கைலாசண்ணன் வீட்ல வெள்ளையடிக்காங்க?’

மற்ற நாட்களில் குஞ்சுவையும், அவன் தம்பியையும் கைலாச அண்ணன் கடுமையான சோதனைக்கு பின்பே வீட்டுக்குள் விடுவார். கைலாச அண்ணன் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினர்கள் போக ஏராளமான மூட்டைப் பூச்சிகளும் வாழ்ந்து வந்தன. மாதம் ஒருமுறை முடி வெட்டுகிறாரோ, இல்லையோ கைலாச அண்ணன் கண்டிப்பாக தன் வீட்டுக்கு மூட்டைப் பூச்சி மருந்து அடிப்பார். அதனால் வெளியே இருந்து தன் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்கள் மூட்டைப் பூச்சியைக் கொண்டு வந்து தன் வீட்டுக்குள் விடுவதற்காகவே வருகிறார்கள் என்று சந்தேகப் பார்வை பார்ப்பார்.
குஞ்சுவும், அவன் தம்பியும் சரியாக மாலை ஆறு ஐம்பதுக்கு கைலாச அண்ணன் வீட்டு முன்பு நின்று சட்டையையும், டிரௌசரையும் கிழற்றி உதறிக் காண்பித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டு மூன்று உதறல்களுக்குப் பின்பு கைலாச அண்ணன் குத்துமதிப்பான ஒரு திருப்தி முகபாவத்துடன் இவர்களை உள்ளே அனுமதிப்பார்.

இதிலும் குஞ்சு தன் வேலையைக் காண்பிப்பதாக அவன் தம்பி பாலாஜி ஒரு முறை சீறினான்.

‘கைலாச அண்ணன் தங்கச்சிக்கிட்ட போயி மூட்டப் பூச்சி இருக்கான்னு வேணா செக் பண்ணுங்கங்கான்’.

குஞ்சுவின் வீட்டில் டி.வி வாங்கிய பின்னும் அவன் கைலாச அண்ணன் வீட்டுக்கு டி.வி பார்க்க போன போதுதான் எங்களுக்கு சந்தேகம் வந்தது. ஆரம்பத்தில் ஏதேதோ சொல்லி மழுப்பினான்.

‘எல, எங்க வீட்ல டைனோரா. அவங்க வீட்ல சாலிடெர். பிக்சர்ல்லாம் சும்மா பளிங்கு மாதிரி தெரியுது. அதான் அங்கெ போறேன்.’

ஆனால் உண்மையான காரணம் கைலாச அண்ணனின் சகோதரிதான் என்பது அவளது திருமணத்துக்குப் பின் குஞ்சு தன் வீட்டிலேயே டி.வி பார்க்க ஆரம்பித்ததிலிருந்து தெளிவாக உலகுக்குத் தெரிந்தது. கைலாச அண்ணனின் சகோதரி எங்களை விட பன்னிரெண்டு வயது மூத்தவள் என்பதுதான் இதில் விசேஷம்.

இலங்கையின் ரூபவாஹினியை மட்டுமே நம்பி திருநெல்வேலியில் பல வீடுகளில் டி.வி வாங்கினார்கள்.  ரூபவாஹினி நல்ல மனநிலையில் இருந்தால் மட்டுமே திருநெல்வேலியில் தெரிவாள். இல்லையென்றால் டி.வி.யில் சள சளவென்ற சத்தத்துடன் தாமிரபரணி ஓடும். அந்த மாதிரி சமயங்களில் குஞ்சுவின் பெரியப்பா சோமப்பா மேல்துண்டை தலப்பா கட்டிக் கொண்டு தட்டட்டிக்கு ஏறுவார். ஆன்டெணாவுடன் மல்லுக்கு நிற்பார்.  மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க மாட்டை அடக்குவது மாதிரி ஆண்டெனாவை அங்கும் இங்குமாகத் திருப்பி ‘இப்ப தெரியுதால, இப்ப தெரியுதா, இப்ப,. . . .ப’.

உடம்பெல்லாம் வேர்த்து, களைத்து கீழே வந்து சோமப்பா உட்காரும் போது நிகழ்ச்சி முடிந்திருக்கும். சிங்களச் செய்திகள் வாசிக்கும் இளம்பெண் ‘ஆய்புவன்’ என்று வணங்கிச் சிரித்தபடி செய்தி வாசிக்க ஆரம்பிப்பாள்.

‘இப்ப என்னட்டி சிரிப்புமயிரு வேண்டிக் கெடக்கு?’

களைப்பின் கோபத்தில் பெயர் தெரியா பெண்ணிடம் நேருக்கு நேர் சீறுவார்.
ரூபவாஹினி செய்திகள் துவங்கு முன் செய்தி வாசிப்பவர்கள், தமிழ், சிங்களம் இரண்டிலும், இயல்பாக வணக்கம் சொல்லித் துவங்கி எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செய்திகளில் மட்டும் கவனம் கொள்ளச் செய்வர். ஓரளவு இந்த தன்மையை இப்போது மக்கள் தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்க முடிகிறது.

டைனோரா, சாலிடெர் டி.வியைத் தொடர்ந்து என்ஃபீல்ட், மஸ்டங், பி.ப்பி.எல் என பல டி.விக்கள் அணிவகுத்து வந்தன. சில நாட்களில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் திருநெல்வேலியில் தெரிய ஆரம்பிக்க, ரூபவாஹினி மெல்ல மங்க ஆரம்பித்தது. அதன்பின் அநேகமாக எல்லா வீடுகளிலும் டி.வி வந்துவிட ஒருகட்டத்துக்குப் பிறகு முற்றிலுமாக தூர்தர்ஷனை மட்டும் நம்பி வாழ ஆரம்பித்தனர்.

மொழியே தெரியவில்லையென்றாலும் விடாது ‘புனியாத்’ ஹிந்தி சீரியலை முறைத்து பார்த்தபடி உட்கார்ந்திருப்பார் நமச்சிவாயம் பிள்ளை.

‘மருமகனே, வடநாட்டு பொம்பளேளெல்லாம் எந்த நேரமும் சப்பாத்தி போட்டுட்டே இருக்காளுவளே என்னடே? அவ்வொ புருசமாருல்லாம் அவ்வளவு கானம் திம்பானுவொ, என்னா?’

பெரும் பணக்காரரான அவர் ஸோனி டி.வி வாங்கி நடுவீட்டில் வைத்திருந்தார். தினமும் மாலை வேளையில் அவர் வீட்டிலுள்ள அனைவரும் கோயிலுக்குக் கிளம்புவது போல் முகம் கழுவி, தலை சீவி, பவுடர் போட்டு, திருநீறு பூசி தயாராவார்கள். நமச்சிவாயம் பிள்ளையின் மனைவி அவசர அவசரமாக விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு வருவார். எப்போதும் குடும்பமே ஒன்றாக உட்கார்ந்துதான் டி.வி பார்ப்பார்கள்.

‘ஆயிரந்தான் சொல்லு. ஜப்பான்காரன் ஜப்பான்காரன்தான். ஒங்க வீட்லயுந்தான் மெட்ராஸ்ல இருந்து டி.வி வாங்கி கொண்டாந்து வச்சிருக்கியெ. என்னவெ பிரயோஜனம். மைரு மாரில்லா இருக்கு. அதான் நான் பாத்தெம்லா. நம்ம வீட்டு டி.விய பாரும். சும்மா திடும் திடும்னு ஒதறுது பாத்தேறா சவுண்டு.’

சொற்ப தமிழ் நிகழ்ச்சிகளில் ஒன்றைக் கூட விடுவதில்லை அவர், ‘வயலும் வாழ்வும்’ உட்பட. ஒரு வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதில் குடும்பமே ஸோனி டி.வி முன் உட்கார்ந்திருக்க, ‘ஒலியும்,ஒளியும்’ தந்த தைரியத்தில் அவர்கள் வீட்டுக்கு பால் ஊற்றிக் கொண்டிருந்த கோவிந்தனுடன் தைரியமாக தெருவில் இறங்கி ஓடிப் போனாள், அவரது இளைய மகனின் மனைவி.

நட்சத்திரம் பார்த்தல்

’ஊர்ல என்ன நடக்குன்னு தெரியாம அப்படி என்னவே தூக்கம் வேண்டிக்கெடக்கு, எந்திங்க’. 

எங்கள் வீட்டு தார்சாவில் படுத்துக் கிடந்த என்னையும், தம்பியையும் ராமையா பிள்ளை உலுக்கினார். அதிகாலைத் தூக்கம் கலைந்த எரிச்சலில் ‘ஏன், காலங்காத்தால வந்து உயிர வாங்குதிய?’ என்றபடியே கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தேன்.

‘நெல்லையப்பர் கோயிலுக்கு சினிமா நடிகர்கள்லாம் வந்திருக்காங்களாம்வே’.

ராமையா பிள்ளையின் குரலில் ஒருவித பரபரப்பும், உற்சாகமும் தெரிந்தது. அவையிரண்டும் சட்டென்று என்னையும் தொற்றிக் கொள்ள உடனே அவருடன் கிளம்பினேன். தம்பி அசைவதாயில்லை.

ஓட்டமும், நடையுமாக இருவரும் நெல்லையப்பர் கோயிலை நெருங்கவும் அதற்குள் விஷயம் தெரிந்து ஆங்காங்கே ஜனக் கூட்டம். வழக்கமாக மாலை நேரம் மட்டுமே நிறைந்திருக்கும் இருட்டு லாலாக்கடை வாசலில் பலரும் நின்றபடி, உட்கார்ந்தபடி, சாய்ந்தபடி கோயில் வாசலையே பார்த்து நின்றனர்.

‘ரஜினிகாந்தும் வந்திருக்கானாம்லா?’

‘கமலஹாசன் வரலயால?’

‘அந்தப் பயதான் சாமி கும்புட மாட்டானெ’.

‘நடிகைங்க யாரும் வரலயாடே’.

‘அங் . . . சிலுக்கு வந்திருக்காளாம்’.

‘எல, இங்கன காத்துகெடக்கதுக்கு உள்ள போலாம்லா?’

‘ஏ மூதி. இன்னைக்கு அம்மாவாசல்லா! குளிக்காம கொள்ளாம கோயிலுக்குள்ள போலாமால! கேக்காம் பாரு.’

மெல்ல ஆளோடு ஆளாக நானும், ராமையா பிள்ளையும் போய் நின்றோம். கோயிலுக்குள்ளிருந்து சப்பரப் புறப்பாடு மாதிரி சிறு கூட்டம் சூழ நடிகர்கள் வெளியே வந்தனர். எல்லோரும் காவியுடை அணிந்திருந்தனர். யாரையுமே எங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. சிரித்தபடியே ஒரு சிவத்த பெரியவர் முன்னே வந்தார்.

‘ஏ, அன்னா பாரு நம்பியாரு’.

ஜனங்கள் போட்ட சத்தம் எம்.என்.நம்பியாரிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. சாந்தமாகவே இருந்தது அவரது முகம். அவருக்குப் பின் நிறைய ஐயப்ப சாமிகள். சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. பக்கத்து வீட்டு சேது அண்ணன் கண்களுக்கு நடிகர் பாலாஜி சிக்கினார்.  அவருக்குப் பின்னாலேயே போய் அவரது முகத்தைப் பார்த்து சிரித்து வணங்கி கைகொடுத்துவிட்டு வந்தான். எல்லோருக்கும் கைகாட்டி விட்டு நடிகர்கள் அவர்கள் வந்த பஸ்ஸில் ஏறிச் சென்ற பிறகுதான், தான் பார்த்தது நடிகர் பாலாஜி அல்ல, ஸ்ரீகாந்த் என்பது சேது அண்ணனுக்குத் தெரிய வந்தது.

‘அதனால என்னய்யா? ஏதோ ஒரு நடிகருக்கு கை குடுத்தாச்சுல்லா! அதுவும் தங்கப்பதக்கத்துல சிவாஜி கூட நடிச்ச ஆளு!’

தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான் சேது அண்ணன்.
எனக்கும், ராமையா பிள்ளைக்கும் நம்பியாரைப் பார்த்ததே போதுமானதாக இருந்தது. அதற்கு பிறகு எப்போது வாக்குவாதம் வந்தாலும்  என் தம்பியை மட்டம் தட்டி வந்தார் ராமையா பிள்ளை.

 ‘நீரு என்னத்த பேசி என்னத்துக்குவே? ஒமக்குத்தான் அம்மாவாசையும் அதுவுமா குருசாமிய பாக்க குடுத்து வக்கலையே!’

தேர்தல் பிரச்சாரத்துக்கு பாக்யராஜ் திருநெல்வேலிக்கு வந்த அன்றுதான் கமிஷன் கடை சுந்தரம் பிள்ளை பெரியப்பாவுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியும் என்பது எனக்கு தெரிய வந்தது. ‘வேகு வேகு’வென்று மூச்சிரைக்க அழுத்திக் கொண்டு என்னையும் பின்னால் உட்கார வைத்து அழைத்துச் சென்றார். சந்திப் பிள்ளையார் முக்கில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. தளவாய் முதலியார் வீட்டுக்கும் காந்தி சதுக்கத்துக்கத்தும் இடையே ஒரு அவசர மேடை போட்டிருந்தார்கள்.

‘வர நேரம் ஆகும்னு நெனைக்கென். போஞ்சி குடிப்போமாடே!’

சோடாவில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து கொஞ்சம் ஐஸ்சும், உப்பும்  போட்டு போஞ்சியை ரசித்து உறிஞ்சிக் குடித்து விட்டு காத்திருந்தோம். கூடியிருந்த ஜனங்கள் கலையத் தொடங்கிய பின் கொளுத்தும் உச்சி வெயில் பொழுதில் வந்து மேடையேறினார் பாக்யராஜ். தளவாய் முதலியார் வீட்டு பழைய பால்கனியில் நின்று கொண்டிருந்த பெண்களுடன் மேலும் சிலர் வந்து சேர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தனர். அப்போது அ.தி.மு.கவில் இருந்த பாக்யராஜ், அப்போது தி.மு.கவில் இருந்த டி.ராஜேந்தரை வம்புக்கிழுத்து கேலியாக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு இறங்கிச் சென்றார்.

‘சினிமால பாக்கற மாதிரி அப்படியே இருக்கானெடே!’

பாக்யராஜைப் பார்த்து விட்ட திருப்தியில் வீட்டுக்குத் திரும்பும் போது சுந்தரம் பிள்ளை பெரியப்பா சொன்னார்.

‘மகனே, பாக்யராஜ பாத்தத ஒங்க பெரியம்மைக்கிட்டெ சொல்லிராதெ, என்னா!

ஏன் பெரியப்பா?

வேற ஒண்ணுமில்ல, என்னய ஏன் கூட்டிட்டு போகலேம்பா.’

அம்மன் சன்னதி தெருவில் அதிகாலையில் தன் வீட்டு மாடி ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து தெய்வு மாமா ‘ஹிந்து’ பேப்பர் படிக்கும் காட்சியை இன்றைக்கும் திருநெல்வேலிக்குப் போனால் பார்க்க முடிகிறது. ஐ.ஓ.பியில் வேலை பார்க்கும் தெய்வு மாமாவுக்கு நண்பர்கள் குறைவு. ரோட்டில் தெய்வு மாமா இறங்கி நடந்து போகும் போது முன்பின் அறிமுகமில்லாதவர்களால் கூட அவரை ஒரு வங்கி ஊழியராக அடையாளம் சொல்லி விட முடியும்.

‘நாமளும்தான் துணியெடுத்து தச்சு போடுதோம். அதென்னடே இந்த பேங்க்’காரங்களுக்குன்னு தனியா துணி தைக்கானுவோ. ஐ.ஓ.பி தெய்வு, ஸ்டேட் பேங்க் துரை இவனுவ எல்லாரும் ஒரே மாதிரி சட்டை போடுதானுவொ. கவனிச்சியா?’

ஆல்பர்ட் சித்தப்பா அடிக்கடி வியப்புடன் சொல்லும் விஷயம் இது.

திரைப்படத்துறைக்கு நான் வந்த பிறகு ஊருக்குப் போகும் போதெல்லாம் தெய்வு மாமா ‘ஏ மாப்ளே, எப்பொ வந்தே? சும்மா இருக்கேல்லா?’ என்று கேட்கத் தவறுவதில்லை. ஒருபோதும் நின்று பேசியதில்லை. வேலைக்குச் செல்லும் அவசரத்திலும் ஒருமுறை என்னைப் பார்த்த தெய்வு மாமா அதிசயமாக நின்று பேசினார்.

‘மாப்ளே, நான் போன வாரம் ஒரு ஜோலியா மெட்ராஸ் வந்திருந்தென். மைலாப்பூர்ல வச்சு டெல்லி கணேஷப் பாத்தென். . . . . . . சாதாரணமா நடந்து போனான்’ என்றார். முகத்தில் அத்தனை ஆச்சரியம்.

ஒரு கோடைவிடுமுறையில் சென்னைக்கு ஒருவாரம் சென்ற குஞ்சு பெருமிதத்தோடு திரும்பி வந்தான். ஏதோ ஒரு களிப்பு தெரிந்தது அவனிடம். பஜனை மடத்தின் சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்து மெல்ல அவனிடம் பேச்சு கொடுத்தோம்.

‘என்னமோ நடந்திருக்கு. என்ன விஷயம்ல சொல்லு’.

நண்பர்கள் பலரும் வற்புறுத்திக் கேட்ட பிறகு முற்றிலுமாக நாங்கள் இருந்த திசையைப் புறக்கணித்து விட்டு வானத்தைப் பார்த்தபடி சொன்னான்.

‘மெட்ராஸ்ல நான் ஒரு நடிகர பாத்தென், ரொம்பப் பக்கத்துல’.

‘நடிகரை’ என்று அவன் சொன்னது எங்களுக்கெல்லாம் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

‘சரி, நடிகர் யாரு? அதச் சொல்லு’.

இப்போது நாங்கள் அவனிருக்கும் திசையைத் தவிர்த்தோம்.
‘சண்முகசுந்தரம்’ என்றான் குஞ்சு. ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கனகாவுக்கு அப்பாவாக வருவாரே, அவர்தான். அதற்குப் பிறகு சண்முகசுந்தரம் நடித்த எந்தப் படம் பார்த்தாலும் குஞ்சு எங்களிடம் வறுபட்டான்.

நெல்லை மாவட்ட சினிமா ரசிகர் சங்கம் என்றொரு அமைப்பு இருந்தது. தாலுகா அலுவலக ஊழியரான வேலாயுதம் அண்ணன்தான் அதன் நிறுவனர். டி.வி.எஸ் 50யில் எப்போதும் ஊர்ந்து செல்லும் வேலாயுதம் அண்ணனுக்கு சஃபாரி உடைதான் கவச குண்டலம். குளிக்கும் போது கூட அவர் சஃபாரி உடையைக் கிழற்றுவது இல்லை என்றொரு வதந்தி நெல்லையில் உலவியது. வேலாயுதம் அண்ணன் நெல்லை மாவட்ட சினிமா ரசிகர் சங்கத்தின் சார்பாக சென்னையிலிருந்து திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து ஆண்டுதோறும் விமரிசையாக விழா நடத்துவார். காமாட்சி கல்யாண மண்டபத்தை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து நடத்திய ஓர் ஆண்டு விழாவுக்கு நானும், குஞ்சுவும் சென்றோம். லூஸ் மோகன், குண்டு கல்யாணம், பிந்துகோஷ், ராக்கெட் ராமனாதன் போன்ற நடிகர்களைப் பார்க்க முடிந்தது. வருடாவருடம் விழா நடக்கும். ஒவ்வொரு வருடமும் மேற்குறிப்பிட்ட நடிகர்கள்தான். இத்தனை நட்சந்திரங்களுடன் பழக்கம் உள்ள கர்வம் கொஞ்சமும் இல்லாமல் வேலாயுதம் அண்ணன் நெல்லைவாழ் மக்களுடன் எளிமையாகவே பழகி வந்தார்.

திருநெல்வேலி டவுண் சொக்கப்பனையடி முக்கில் பால்கடை நடத்தி வந்த மணி என்பவரும் சினிமா ரசிகர் சங்க ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார். ‘ஒருவர் வாழும் ஆலயம்’ என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்ற போது அதில் ஒரு காட்சியில் நடித்த பெருமை அவருக்கு இருந்தது. கையில் ஒரு அல்சேஷன் நாயைப் பிடித்தவாறே வாக்கிங் செல்லும் நடிகர் மணி, இன்னொரு திரைப்படத்தில் நடிகை காந்திமதியுடன் ஒரு காட்சியில் இணைந்து நடித்திருந்தார். அந்த காட்சியில் நடிகை காந்திமதியை கட்டிப் பிடித்தபடி அவர் இருக்கும் புகைப்படம் அவரது பால்கடையின் முகப்பை அலங்கரித்து வந்தது. கடைக்கு பால் குடிக்க வருபவர்கள் அந்த புகைப்படத்தை கவனிக்கிறார்களா என்று பால் ஆற்றும் போது ஓரக் கண்ணால் நைஸாகப் பார்ப்பார்.

அம்மன் சன்னதி முக்கில் ஒரு நாள் மாலையில் ஜேஜே என்று கூட்டம். வாகையடி முக்கில் நடைபெற இருக்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்வி.ஜெயலலிதா கீழப்புதுத்தெரு வழியாகச் செல்வதாக ஏற்பாடு. எங்கள் வீட்டு வாசலில் நின்றாலே ஜெயலலிதா செல்வதைப் பார்த்து விட முடியும். குஞ்சு வந்தான். ‘இது ரொம்ப அவசியமா? வா, வெளியே போவோம்’ என்றான்.

‘பத்து நிமிஷம் பொறேம்ல. பாத்துட்டு போவோம்’ என்று நான் சொன்னதை அவன் கேட்பதாக இல்லை.

‘ஏன் மத்தவங்கள மாதிரி நீயும் கெடந்து அலையுதெ? படிச்சவன் மாதிரி நடந்துக்கொ’.

ஏகத்துக்கும் அட்வைஸ் செய்தான்.

இந்த குஞ்சுதான் ஒருமுறை காணாமல் போனதற்காக அவன் அப்பா டவுண் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து ஊரெல்லாம் தேடினார்கள். கடைசியில் இவன் ஷாஃப்டர் ஸ்கூல் மைதானத்தில் எம்.ஜி.ஆரைப் பார்க்கப் போய் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் போது பிடிபட்டான். அதையும், சென்னையில் சண்முகசுந்தரத்தைப் பார்த்த பெருமையில் இவன் நடமாடியதையும் ஞாபகப் படுத்தினேன்.

‘எல, அது வெவரம் தெரியாத வயசுல நடந்த விஷயம். சின்னப் பிள்ளைல இத விட என்னென்ன கிறுக்குத்தனம்லாம் பண்ணிருக்கோம். அதுக்காக இப்பவும் அப்படியேவா இருக்கோம்? பெரிய மயிரு மாதிரி பேசிக்கிட்டிருக்காதெ. இப்ப வரப் போறியா, இல்லையால?’.

கடும் கோபமாகப் பேசினான்.

சரி, இனி கிளம்பவில்லையென்றால் அடித்தே விடுவான் என்று அவனுடன் கிளம்பினேன். சர் சர்ரென்று கார்களின் சீற்றச்சத்தம். தொடர்ந்து ஒலிபெருக்கி அலறல். ‘உங்கள் பொன்னான வாக்குகளைக் கேட்டு இதோ வருகிறார்’. கூட்டத்தை விலக்கி பாய்ந்து முன்னே சென்ற குஞ்சு ‘புரட்சித் தலைவி வாழ்க’ என்று அவர் கார் கடந்து செல்லும் போது இரட்டை விரலைக் காண்பித்து வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான்.

இருப்பு

‘தென்கலம் சைவத்திரு.காசியாபிள்ளையின் மனைவியும், எங்களின் தாயாருமான திருமதி.சிவகாமியம்மாள் இன்ன தேதியில் சிவலோக பதவி அடைந்தார்கள். அன்னாரது பதினாறாவது நாள் விசேஷக் காரியங்கள் இன்ன தேதியில் நடைபெறும். இப்படிக்கு, கா.சுப்பையா, கா.சங்கரலிங்கம்.’ கருப்பு எழுத்துகளில் அச்சடிக்கப்பட்ட அஞ்சலட்டை வந்தவுடன் விவரம் தெரிந்து கொண்டு உடனேயே அதை கிழித்துப் போடச் சொல்வார்கள் பெரியவர்கள். தொலைபேசிவசதி வந்தபிறகும் கூட இந்த வழக்கம் இருந்தது. இப்போது மாறிவரும் கைபேசி கலாச்சாரத்தில் ஒரு எஸ்.எம்.எஸ்.ஸிலேயே எல்லோருக்கும் எல்லா விஷயத்தையும் கடத்தி விடுகிறார்கள். சென்ற வாரம் அப்படி ஒரு எஸ்.எம்.எஸ். எனக்கு வந்தது. அண்ணனின் பெரிய மாமனார் தனது எண்பத்து நான்காவது வயதில் காலமானார் என்னும் செய்திதான் அது. பதிலுக்கு நானும் எஸ்.எம்.எஸ்.ஸிலேயே அனுதாபித்தேன்.அண்ணனின் மாமனாருக்கும் அவரது அண்ணனுக்கும் பன்னிரெண்டு வயது வித்தியாசம். இறக்கும் தறுவாயில் தன் அண்ணன் இருக்கும் போது எழுபத்திரண்டு வயது தம்பி சொன்னாராம். ‘நீ தைரியமா முன்னால போ. நான் பின்னாலேயே வாரேன்’ என்று. கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் பெருக சிறிது நேரத்திலேயே காலமாகிவிட்டாராம் பெரியவர்.

அறுபதாவது வயதை அடைந்த சில மாதங்களிலேயே இறந்து போன தன் கணவர், அடுத்த சில ஆண்டுகளிலேயே தன்னை பரிதவிக்க விட்டுவிட்டு தனது நாற்பதாவது வயதில் கண்மூடிய தனது மூத்த மகன், அதற்கடுத்து சொல்லிவைத்த மாதிரி தன் அண்ணனுக்குப் பின் தனது இருபத்தேழாவது வயதில் கிளம்பிச் சென்ற தனது கடைக்குட்டி மகன், இப்படி மூன்று உயிர்களை அடுத்தடுத்து பறி கொடுத்த அப்பாவைப் பெற்ற ஆச்சியின் முகத்தை என்னால் கண்ணீரில்லாத முகமாக கற்பனையில் கூட பார்க்க முடியவில்லை. சில சமயங்களில் எங்கள் வீட்டு  பூஜையறையின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டு நாட்கணக்காக ஆச்சி அழுது கொண்டிருப்பாள். பூஜையறையில் அம்மையப்பன்,  அவர்களின் மகன் கணபதி, இளையவன் குமரன் அனைவரையும் திட்டியபடியே ஆச்சி அழும் குரல் மெலிதாக வெளியே விட்டு விட்டு கேட்கும்.

ஆச்சிக்கும் காலம் வந்தது. படுத்த படுக்கையானாள். அவளது வயதையொத்த தோழிகள் ஒவ்வொருவராக வந்து பார்க்கலாயினர். களக்காட்டாச்சி,
 பத்தமடையாச்சி, கருங்குளத்தாச்சி, ஆறுமுகநேரியாச்சி இப்படி பலர்.  பார்த்துவிட்டு செல்லும் போது ஒவ்வொருவர் முகத்திலும் வெவ்வேறு
 உணர்ச்சிகள். அவர்களில் ஒருவரின் பெயர் கூட எனக்கு இன்றைக்கும் தெரியாது.
   
ஆராம்புளியாச்சி எங்கள் வீட்டுக்கு நேரெதிர் வீட்டில் இருந்தாள். பார்த்தாலே தெரியும் அவள் நாஞ்சில் நாட்டுக்காரியென்று. செக்கசெவேலென
 வாட்டசாட்டமாக இருப்பாள். எந்த சூழலிலும் அவளால் சிரிக்க முடியும். அபார  நகைச்சுவையுணர்வுடையவள். ஆச்சியைவிட வயதில் இளையவளான ஆராம்புளியாச்சி, ஆச்சியை ‘மதினி’ என்றே அழைப்பாள். அவள் வந்து பார்க்கும் போது ஆச்சி பேசமுடியாத நிலையிலிருந்தாள். இருந்தாலும் உடலில் அசைவிருந்தது. ஆராம்புளியாச்சி வந்து ஆச்சியின் அருகில் உட்கார்ந்து அவள் கையைப் பிடித்து நீவிக் கொண்டே சொன்னாள். ‘ மதினி, நீங்க போயி லெட்டெர் போடுங்கோ. நான் கெளம்பி வாரென்’. ஆராம்புளியாச்சியின் வேண்டுகோளுக்கிணங்க ஆச்சி அனுப்பிய லெட்டர் கொஞ்சம் தாமதமாக பத்து வருடங்கள் கழித்து ஆராம்புளியாச்சிக்கு வந்தது.

தாமிரபரணியாற்றங்கரையில் உள்ள சுடுகாடான கருப்பந்துறையின் மண்டபத்தில் இறந்தவர் எரிந்து கொண்டிருக்க அவர் வயதையொத்தவர்கள் பேசிக் கொள்வது புதிதாகக் கேட்பதற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், வாழ்வின் யதார்த்தத்தை அட்டகாசமாக நமக்கு உணர்த்தும். சுப்ரமணியபிள்ளை தாத்தா எரிந்து கொண்டிருக்கிறார். அவர் வயதையொத்த அவரது தோழர்கள் பெருமாள் பிள்ளையும், வெங்கடாசல ரெட்டியாரும் பேசிக் கொள்கிறார்கள்.

    ‘எல பெருமாளு, அடுத்த டிக்கட்டு யாரு? நீயா, நானா?’

    ‘செவஞானந்தான்’

    ‘அதெப்படி அவன் நம்மளுக்கு முந்திருவாங்கே?’

    ‘எல மயிராண்டி. அவன் ஆர்.ஏ.ஸி. நாம வெயிட்டிங் லிஸ்ட்டுல்லாலெ மூதி’.

    சிவஞானம் பிள்ளை தாத்தா அப்போது படுக்கையிலிருந்தார்.

மரணத்தை இப்படி வேடிக்கையாக எதிர்கொள்ளும் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் அதை நினைத்து பயந்து நடுங்கியபடியே காலத்தைத் தள்ளிய தாத்தாக்களும் இருக்கத்தான் செய்தார்கள். எனது சின்னத் தாத்தாவை கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே சிவலோகபயம் பிடித்து ஆட்டி வந்தது. நான் பார்க்கப் போகும் போதெல்லாம், ‘பேரா, என் கையைக் கொஞ்சம் பிடிச்சுக்கோயேன். பயமா இருக்கு’ என்பார். இத்தனைக்கும் அவருக்கு ஒரு வியாதியும் கிடையாது. கொஞ்சம் பார்வை கோளாறு. அவ்வளவுதான். ஆனாலும் ஒரு ரூபாய் நாணயத்தைக் கீழே போட்டால் பாய்ந்து எடுத்து வேஷ்டியில் முடிந்து கொள்வார். பார்க்கும் போதெல்லாம் ‘ஒங்களுக்கு ஒண்ணும் இல்ல. தைரியமா இருங்க’ என்று எல்லோரும் சொல்லி வந்தோம். சின்னத் தாத்தாவை விட ஆச்சிக்கு ஒரு வயது அதிகம் என்பார்கள். இருவருமே கனிந்து படுக்கையில் விழுந்துவிட்டார்கள். ஆறு மாதத்துக்கு முன் தாத்தா காலமாகிவிட்டார். வீட்டின் வேறோர் அறையில் போடப்பட்டிருந்த கட்டிலில் கிடந்த ஆச்சியிடம்  போய் மெல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ நான்தான் முந்துவேன்னு நெனச்சேன். அவரு பொறப்புட்டாராக்கும். சரி சரி. ஆக வேண்டியத கவனிங்க’. எவ்வித உணர்ச்சியுமில்லாமல் இதைச் சொன்ன ஆச்சி கொஞ்சம் கூட கலங்கவில்லையாம்.

ஏ.வி.எம். நிறுவனத்தின் ஆரம்ப கால ஊழியர்களான டி.எம்.ஆரும்,  ஈ.வி.கே.நாயரும் பிற்காலத்தில் எங்கள் வாத்தியார் பாலுமகேந்திராவின்  யூனிட்டில் இருந்தனர். இவர்கள் இருவருமே ஏ.வி.எம். ஸ்டூடியோ காரைக்குடியில் இருந்த போதே அங்கு வேலை செய்தவர்கள். இவர்களில்
 டி.எம்.ஆர் மேக்கப்மேன். ஈ.வி.கே.நாயர் ஸ்டில் ·போட்டோகிரா·பர்.  ‘பராசக்தி’யில் கணேசனுக்கு முதலில் மேக்கப் போட்டவர் டி.எம்.ஆர். ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்துக்குப் பின் கே.பாலச்சந்தருடன் ஈ.வி.கே.நாயர் இணைந்து கொண்டார். கமலஹாசன், ரஜினிகாந்த் இருவரையும் அவர்களின் ஆரம்ப காலத்திலிருந்தே அறிந்தவர். அதுவும் ரஜினிகாந்தை முதன் முதலில் டெஸ்ட்  ஸ்டில் எடுத்து ஓகே சொன்னவர். ரஜினியை ரெஜினி என்றே அழைப்பார். பழைய நன்றியில் ரெஜினி ஈ.வி.கெ.நாயரிடம் பணிவுடன் நின்று பேசுவதைப் பார்த்திருக்கிறேன். ‘சதிலீலாவதி’ படத்தின் போது ஈ.வி.கே.நாயர் புற்று நோயால் அவதிப்பட்டு வீட்டிலேயே இருந்தார். வேலை எதுவும் செய்வதில்லை.அவருக்கு எதற்கு வேலை? அவரை தினமும் படப்பிடிப்புக்கு அழைத்து வாருங்கள் என்று கமல் சொல்லிவிட்டார். தினமும் அவருடன் சேர்ந்து கொண்டு சிரிப்பும், கூத்துமாக இருப்பார் கமல்.

சதிலீலாவதி படப்பிடிப்பின் போதும் சரி, மற்ற நேரங்களிலும் சரி ஈ.வி.கே.நாயரை அவரது ஆரம்ப கால நண்பர் டி.எம்.ஆர். கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். காரில் அவருடன் வருவது, அவருக்குப் பிடித்தமான உணவைப் பரிமாறுவது, மதியம் சிறிது நேரம் அவரை தூங்கச் செய்வது என நண்பருக்கு டி.எம்.ஆர். செய்த பணிவிடைகள் நிறைய. படம் முடிந்து டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது ஈ.வி.கே.நாயர் எங்களைப் பார்க்க டப்பிங் ஸ்டூடியோவுக்கு வந்தார். டப்பிங் இடைவேளையில் வெளியே வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அதற்குள் உள்ளிருந்து ஸவுண்ட் அஸிஸ்டண்ட் வந்து ‘ஸார், ரீல் ரெடி’ என்றார். தர்மசங்கடத்துடன் எழுந்து நின்றேன். உடனே தானும் எழுந்துகொண்டு, ‘ஓகே ஸார். யூ கேரி ஆன்’ என்று சொல்லிவிட்டு என் கைகளைப் பிடித்துக் குலுக்கி ‘மை டேஸ் ஆர் நம்பர்ட்’ என்றார். ‘ ஸார் அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. தைரியமா இருங்க’ என்று சொல்லி வழியனுப்பினேன். அடுத்த வாரமே நாயர் கிளம்பிவிட்டார் என்ற தகவல் வந்த போது அவருடனான கடைசி உரையாடல் எனக்கு நினைவு வந்து சங்கடப்படுத்தியது.

நாயர் மறைந்த செய்தியை டி.எம்.ஆருக்கு தொலைபேசியில் சொன்னேன். ‘எப்போ?’ என்று கேட்டவர் வேறேதும் பேசாமல் அமைதியாக இருந்தார். ‘நான் வந்து உங்களை நாயர் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன். நீங்க தனியா போக வேண்டாம்’ என்று சொல்லி ·போனை வைத்துவிட்டு சிறிது நேரத்தில் அவர் வீட்டுக்குப் போனேன். தட்டு நிறைய சோறு வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் டி.எம்.ஆர்.

 

உ.சு.வா.

சின்ன அண்ணனை அன்னண்ணன் என்று நாங்கள் அழைக்கும் போது தெரியாதவர்களுக்கு சற்று குழப்பமாக இருக்கும். அவனது முழுப்பெயர் அன்னபூரணன் என்பதை சுருக்கி அன்னண்ணன் என்று கூப்பிடுவதை விளக்கிச் சொன்ன பிறகு லேசாக புரிந்து கொண்ட மாதிரி பார்ப்பார்கள். (அன்னபூரணி கேள்விப்பட்டிருக்கோம். அது என்னடே அன்னபூரணன்?) என்னை விட பன்னிரெண்டு வயது மூத்த அன்னண்ணன், இப்போது இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலை இருக்கிற தாழையூத்தில் தனிவீடு கட்டி மனைவி, மக்களுடன் வசிக்கிறான். இன்றைக்கும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து கண்ணாடி முன் நின்று வகிடெடுத்து தலை சீவுகிறான். ஆரெம்கேவியில் துணியெடுத்து சட்டை, பேண்ட் தைத்துக் கொள்கிறான். அபூர்வமாகவே எனக்கு ஃபோன் பண்ணுவான்.

எல . . என்னா பிஸியா இருக்கியா?

இல்லண்ணே. சொல்லு. எப்படி இருக்கே?

நல்லா இருக்கென். . . நேத்து ராத்திரியே ஒன்ன கூப்பிடணும்னு நெனச்சென். சரி, நீ தூங்கியிருப்பியோன்னு விட்டுட்டென்.

ஏன்ணே?

அத ஏன் கேக்கெ. கே.டிவில கலங்கர வெளக்கம் போட்டாம்ல.

குரலில் மகிழ்ச்சி பொங்கி வழியும். அதற்கப்புறம் நான் ஃபோனிலேயே கலங்கரை விளக்கம் படம் பார்ப்பேன். இடையில் இண்டெர்வெல்லெல்லாம் கூட விடுவான். வணக்கம் போட்டு முடிக்கும் போது  எம்.ஜி.ஆரின் மகத்துவம் பற்றி ஃபிரெஷ்ஷாக பேச ஆரம்பிப்பான். எப்போதாவதுதானே பேசுகிறான் என்பதால் நானும் உற்சாகம் இழக்காமலேயே கேட்பேன். சுவாரஸ்யம் குறையாமல் சொல்வதால் நமக்குமே அலுக்காது அன்னண்ணணின் பேச்சு.

அன்னண்ணன் எப்படி எம்.ஜி.ஆர் ரசிகனானான் என்பதே சுவாரஸ்யம்தான். பாளையங்கோட்டை  கான்வெண்டில் படித்த அன்னண்ணனை தினமும் பள்ளிக்குக் கூட்டிச் சென்று வந்த சிவராமண்ணன் ஒரு தீவிர தி.மு.க அனுதாபி. எம்.ஜி.ஆர் அப்போது தி.மு.க.வில் இருந்திருக்கிறார். சிவராமண்ணன் எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்தவர். மிகச் சிறுவயதிலேயே அன்னண்ணனின் தகப்பனார்(எனது பெரியப்பா) காலமாகி விட்டார்கள். சோர்வடைந்திருந்த அந்தச் சிறுவனின் உள்ளத்தில் மெல்ல மெல்ல வந்து உட்கார்ந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

” என்னைக்கு தலைவர் சினிமாவ விட்டு போனாரோ, அன்னைக்கே தியேட்டருக்கு போறத விட்டுட்டெண்டே.

தலைவர் இப்பொ இருந்தாருன்னா எலங்கை பிரச்சன இவ்வளவு மோசமா போயிருக்கும்னு நெனைக்கியா?

சாப்புட்டா எங்க வீட்டு பிள்ளல சாப்பிடுவாருல்லா! அப்பிடி சாப்பிடணும்ல.”

வாழ்க்கையையே அன்னண்ணன் எம்.ஜி.ஆர் வழியாகத்தான் பார்க்கிறான். அன்னண்ணன் ஒரு கல்லூரியின் வணிகவியல் விரிவுரையாளன் என்பது கூடுதல் தகவல்.

அன்னண்ணன் தவிர எங்கள் குடும்பத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வேறு யார் என்று யோசித்துப் பார்க்கும் போது முன்னே வந்து விழுபவர் அய்யாப்பிள்ளை சித்தப்பா. குடும்பத்தின் மூத்த மகனுக்கு எங்கள் குடும்ப வழக்கப்படி தாத்தாவின் பெயரை சூட்ட வேண்டும்.  அய்யாப்பிள்ளை சித்தப்பாவுக்கும் அவர்கள் தாத்தாவின் பெயர். அதை சொல்லி பெண்கள் கூப்பிட முடியாது. (அப்புறம் என்ன இழவிற்கு அந்தப் பெயரை வைக்கிறார்களோ?) அதனால் ‘அய்யாப்பிள்ளை’. அதே காரணத்தால் நான் கூட குடும்பப் பெண்களுக்கு ’அய்யா’தான்.
தமிழ்நாடு வேளாண்துறையில்  பணிபுரிந்த அய்யாப்பிள்ளை சித்தப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் உடனே பேண்டைக் கிழற்றிப் போட்டுவிட்டு ஒரு சாரத்தை உடுத்திக் கொண்டு வெளியே கிளம்பி விடுவார். அப்போது காலில் செருப்பு அணிவதில்லை. இரவுதான் வீடு திரும்புவார். இந்த நிகழ்ச்சி நிரல் ஒருநாளும் தப்புவதில்லை. அதற்கான காரணத்தை சித்தப்பா சொல்லி கேட்டிருக்கிறேன்.

‘வீட்ல இருந்தா தேவையில்லாம ஒங்க சித்தி கூட சண்ட வரும்.’

சினிமா பார்ப்பதைத் தவிர வேறு பொழுதுபோக்குக்கு வழியில்லாத நெல்லை மக்களுக்கென்றே டவுணிலிருந்து ஜங்ஷன் வரைக்கும் அடுத்தடுத்து ஒன்பது தியேட்டர்கள் உண்டு. ஒரு ரவுண்ட் படங்கள் முடிந்து அடுத்த ரவுண்ட் வரும் போது புதுப் படங்கள் வரவில்லையென்றால் பழைய படங்களையே இன்னொரு முறை பார்ப்போம். அப்படி வேறேதும் படம் கிடைக்காமல் பார்வதி தியேட்டரில் ‘காலத்தை வென்றவன் பார்க்கப் போனேன். அது எம்.ஜி.ஆரின் பல படங்களிலுள்ள பாடல், சண்டைக் காட்சிகளின் தொகுப்பு. எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலக்காட்சியையும் கடைசியில் இணைத்திருந்தார்கள். படம் முடிந்து மக்கள் மௌனமாகக் கலைந்து வரும் போது சற்று சத்தமாகவே அழுதபடி ஒரு மனிதர் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். நடையும், உடைந்த அந்தக் குரலும் அய்யாப்பிள்ளை சித்தப்பாதான் அது என்பதை காட்டிக் கொடுத்தது. பின்னால் வருபவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சாரத்தைத் தூக்கிக் கண்ணைத் துடைத்து, மூக்கைச் சிந்தி கவர்ச்சியாக நகர்ந்து சென்று கொண்டிருந்தார் சித்தப்பா. அவரது தகப்பனார் இறந்தபோது கூட அவ்வளவு அழவில்லை அவர். ‘தாத்தாவுக்கு வயசாயிட்டுல்லா’ என்று சாதாரணமாகத்தான் சொன்னார்.

‘அவாள மாதிரில்லாம் ஒரு ஆள பாக்க முடியாதுய்யா’ என்று ரொம்ப நாள் நெருங்கிப் பழகியவர் போல எம்.ஜி.ஆரை சொல்லுவார் நெல்லையப்பன். எங்கள் வீட்டு வாட்ச்மேனாக இருந்த நெல்லையப்பன் பெயருக்கேற்றார்போல் நெல்லையப்பர் கோயிலில் பணிபுரிந்து வந்தார். கோயிலில் பகல் டியூட்டி என்றால் இரவில் எங்கள் வீட்டுப் பணி. அவரை வாட்ச்மேன் என்று சொல்வது ஒரு அடையாளத்துக்காகவே. பகலென்றால் வாசலில் உட்கார்ந்தும், இரவென்றால் படுத்தும் தூங்கியபடி வீட்டை காவல் காப்பார். ஒரே ஒரு முறை சுவரேறி குதித்து திருட முயன்ற ஒரு மர்ம மனிதனை சொப்பனத்தில் விரட்டி பிடித்திருக்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் முரட்டு ஆசாமிதான்.

‘நம்ம வெறகுக்கட சங்கரன் மண்டய சொவத்துல முட்டியெ உடச்சுட்டெம்லா.

அவன் என்னய்யா பண்ணுனான்?

எய்யா, ஒண்ணாத்தான் கொட்டகைக்கு போனோம், கூண்டுக்கிளி பாக்க. அவன் ஜிவாஜி ரசிகன். படம் பாத்துக்கிட்டு இருக்கும் போதே வார்த்த தடிச்சிட்டு. நம்ம முன்னாடியெ அவாள தப்பா பேசுனா சும்மா விட முடியாதுல்லா, என்ன சொல்லுதியெ?’

நெல்லையப்பனின் அன்றாட நடமாட்ட்த்தில் உள்ள நுட்பமான மாற்றம் அம்மாவின் கண்ணுக்கு மட்டும் துல்லியமாகத் தெரிந்து விடும். இரவுச் சாப்பாடு முடிந்து வாசலில் வந்து நாங்களெல்லோரும் உட்காரும் போது நெல்லையப்பனுக்கு பணம் கொடுப்பாள். அதற்காகவே காத்திருக்கும் நெல்லையப்பன் வாயெல்லாம் பல்லாக இரண்டு கை நீட்டி வாங்கிக் கண்ணில் ஒற்றி மடியில் முடிந்து கொள்வார். ‘இந்த முடிவானையும் கூட்டிக்கிட்டு போரும்’. சமையல் வேலைகளை கவனித்துக் கொள்ளும் செல்வராஜ் அண்ணனைக் காட்டிச் சொல்வாள். செல்வராஜ் அண்ணன் பாண்ட்ஸ் பவுடர் போட்டு வெளுத்த வேஷ்டி கட்டி தயாராக இருப்பார். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருவரும் செகண்ட் ஷோவுக்குக் கிளம்பிச் செல்வார்கள்.

‘எல, சீக்கிரம் வந்திருவென். தூங்காம முளிச்சிக்கிட்டு இருக்கணும். என்னா?’

எங்கள் வீட்டு லேபரடார் ‘லியோ’விடம் பொறுப்பாகச் சொல்லி விட்டுத்தான் செல்லுவார் நெல்லையப்பன்.

ரத்னா தியேட்டரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்க்க நெல்லையப்பனுடன் சென்று வந்த செல்வராஜ் அண்ணன் மறு நாள் காலையில் சொன்னார்.

‘எம்மா, இனிமேல் என்னைய நெல்லையப்பண்ணன் கூட சினிமாக்கு அனுப்பாதீய.

ஏன்டே?

வீலுவீலுன்னு விசிலடிச்சு காத செவிடாக்கிருதாரு.

ஏ, தெரைல எம்.ஜி.ஆர பாத்தா விசிலடிக்க மாட்டாங்களா. அவரு மட்டுமா அடிக்காரு?

எம்.ஜி.ஆர பாக்கும் போது அடிச்சா பரவாயில்லம்மா. டிக்கெட் எடுக்க கவுண்டருக்குள்ள நொளயும் போதே ஆரம்பிச்சிருதாரு. இன்ட்ரோல்ல ஒண்ணுக்கு போகும் போதும் மனுசன் விடல. ச்சை . . ஒரே மண்டையிடி.’

அதற்கு பிறகு செல்வராஜ் அண்ணனுடன்  லெட்சுமண பிள்ளையின் மகன் கபாலி மாமா சேர்ந்து கொண்டான். கபாலி மாமாவின் எம்.ஜி.ஆர் பட அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்தும். எந்த ஒரு எம்.ஜி.ஆர் படத்தைப் பற்றிப் பேசும் போதும் அவரது கதாபாத்திரத்தின் பெயரையே சொல்லுவான்.

‘நாளை நமதேல விஜயகுமாரை விஜய்ன்னுதான் கூப்பிடணும். தெரியும்லா?

சிவசக்தி தியேட்டருக்கு இன்னைக்கு எப்படியாது போயிரணும். கோபியோட சேட்டைய பாத்து எவ்வளவு நாளாச்சு.’

உரிமைக்குரல் பார்க்க காலையில் அப்ஸரா பார்பர் ஷாப்பில் தினத்தந்தி படிக்கும் போதே முடிவு செய்து விடுவான். ‘என்னைக்கு பரிடசைக்கு போகாம படகோட்டிக்கு போனானோ, அன்னைக்கே இந்த தாயளி வெளங்க மாட்டான்னு நான் முடிவு பண்ணிட்டெம்லா?’ தனது தகப்பனார் லெட்சுமண பிள்ளையின் வழக்கமான ஏச்சுக்கள் கபாலி மாமாவின் காதுகளை மீறி உள்ளே செல்வதில்லை. அவன் நாளுக்கு நாள் எம்.ஜி.ஆரிடம் நெருங்கிக் கொண்டேதான் இருந்தான். இப்போது திருநெல்வேலி பகுதி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவும், அ.தி.மு.க தலைமைக்கழகப் பேச்சாளராகவும் செவ்வனே பணியாற்றி வருகிறான்.

எனக்கு வரும் எம்.ஜி.ஆர் பட சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைப்பவர் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன்.

‘ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் இண்டர்வியூக்கெல்லாம் போய் கஷ்டப்படறாரே! என்ன படம் அது?

அடடா, அது நான் ஏன் பிறந்தேனாச்சே! அந்த படம் சரியா போகல.

ஏன்?

ஏங்க, தலைவருக்கே வேலை கஷ்டப்படுறாருன்னா அதை யாராலேங்க ஒத்துக்க முடியும்? நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் பாட்டு அதுலதான். மிஸ் பண்ணிராதீங்க.’
எவ்வளவு சீரியஸான வேலையில் இருந்தாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பற்றி பேச எப்போதுமே ஆர்வமாக இருப்பார் ராமகிருஷ்ணன். மகிழ்ச்சி பொங்க விடிய, விடிய பேசுவார்.

ரோஜர் ஃபெடரரின் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் போட்டிருக்கும் அன்னண்ணனின் மகனிடம் பேச நான் எப்போதுமே பிரியப்படுவேன். படிப்பு, விளையாட்டு இரண்டிலுமே சிறந்து விளங்கும் அவனும் என்னைப் போலவே கீபோர்டு வாசிப்பதில் ஆர்வம் காட்டுபவன். அவ்வப்போது சில குறிப்பிட்ட ராகங்களின் ஸ்வரங்களை எழுதி, அவற்றில் உள்ள முக்கியமான பாடல்களையும் குறித்து கொடுப்பேன். சென்ற முறையும் அதுபோல நிறைய பாடல்கள் குறித்து பேசிவிட்டு கீபோர்டு வாசிக்கச் சொன்னேன். பயல் லயித்து வாசித்ததை அருகில் இருந்து பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. வேறு விஷயங்கள் குறித்து பேச்சு திரும்பியது.

‘தீபாவளிக்கு ஏதாவது படம் பாத்தியாலெ?

உ.சு.வா பாத்தேன் சித்தப்பா, ராஜ் டி.வில.’

உ.சு.வா? குழப்பத்துடன் அன்னண்ணனைப் பார்த்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை மடித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து என்னைப் பார்த்து,

‘எல, என்ன முளிக்கெ? தெரியலியா . . . உலகம் சுற்றும் வாலிபன்ல’

என்றான், முகத்தில் பெருமிதம் பொங்க.

கரையும் உள்ளம்

விஜயா அக்காவுக்கும், உமா அக்காவுக்கும் கல்யாணம் ஆகும் வரை அவர்கள்தான் அம்மாவுடன் சினிமாவுக்குச் செல்வார்கள். அதற்குப் பிறகு அப்போது கல்யாணம் ஆகாமலிருந்த ஜெயா அக்காவுக்கு அந்த பதவி கிடைத்தது. இவர்களனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் வீட்டுக்கு நேரெதிர் வீட்டில் வசித்து வந்தார்கள். அம்மாவை ‘மதினி’ என்றே அழைப்பார்கள். இவர்களில் விஜயா அக்கா எப்போதும் பார்ப்பதற்கு ஒரு நோயாளி மாதிரியே இருப்பாள். உமா அக்கா அதற்கு நேர்மாறாக குண்டாக இருப்பாள். ஜெயா அக்கா ரெண்டும் கெட்டான். உருவங்கள்தான் வேறு வேறு. ஆனால் உள்ளம் மட்டும் ஒன்றேதான்.

‘எந்தப் படம் பாத்தாலும் ஒங்களுக்கெல்லாம் அளுகையே வராதாட்டி?’

அம்மா சலித்தபடி சொல்வாள்.

‘அது சினிமாதானெ மதினி! என்னத்துக்கு அளணும்?’

ஒரே மாதிரியான பதில்தான் வரும்.

தனியார் மற்றும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் தலையெடுக்காத காலத்தில் திருநெல்வேலி மக்களுக்கு திரையரங்குகளை விட்டால் வேறு நாதியில்லை. இருக்கிற பத்து தியேட்டர்களில் வளைத்துப் பிடித்து படங்கள் பார்ப்பது என்பது கிட்ட்த்தட்ட நெல்லையப்பர் கோயிலுக்குப் போவதைப் போல அனிச்சையான ஒன்று. புத்தம்புதிய தமிழ், ஹிந்திப் படங்களுடன் பழைய கறுப்பு வெள்ளை படங்களும் திரையிடப்படுவதுண்டு. ரத்னா தியேட்டரில் ‘பார் மகளே பார்’ திரைப்படம் பார்க்க அம்மா செல்லும் போது உடன் நானும் சென்றிருந்தேன். ‘அவள் பறந்து போனாளே’ பாடலில் ‘அவள் எனக்கா மகளானாள், நான் அவளுக்கு மகனானேன்’ என்று சிவாஜி குலுங்கும்போது அம்மாவுடன் நானும் சேர்ந்து கதறினேன். பக்கத்தில் உட்கார்ந்து எந்தவித பாதிப்புமில்லாமல் அச்சு முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஜெயா அக்கா. அம்மாவுடன் சேர்ந்து கொண்டு ‘நீயெல்லாம் என்ன ஜென்மமோ’ என்று நறநறவென்று பல்லைக் கடித்தேன். ’போடே, ஒனக்கும் ஒங்கம்மைக்கும் வேற சோலி இல்ல’ என்று சாதாரணமாகச் சொல்லியபடி அடுத்த அச்சு முறுக்கைக் கடிக்கத் தொடங்கினாள்.

சினிமா பார்த்து அழுபவர்களின் கதைகள் சுவாரஸ்யமானவை. பெரிய அண்ணனின் தோழனான அம்பி மாமா பார்ப்பதற்கு ரொம்பப் பெரிதாக இருப்பார். எட்டு முழ வேஷ்டியும் அவர் இடுப்பில் அங்கவஸ்திரம் போல அபாயமாகக் காட்சியளிக்கும். அண்ணனும், அவரும் ‘பாசமலர்’ பார்க்கப் போயிருக்கிறார்கள். இறுதிக்காட்சியில் சிவாஜி ‘கைவீசம்மா கைவீசு’ என்று அழுதபடியே வசனம் பேசும் போது அம்பி மாமா பேச்சுமூச்சில்லாமல் மயங்கி விழுந்துவிட்டாராம். பதறிப் போன பெரியண்ணன் ரொம்ப சிரமப்பட்டு அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி, தேரடியில் உள்ள நாயுடு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டு வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டிருக்கிறான். பெரிய கூட்டுக் குடும்பமான அம்பி மாமாவின் வீட்டுக்குள் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் செல்ல, வீட்டிலுள்ள அனைவருமே கூச்சல் போட்டு அதிலும் ஒன்றிரண்டு வயதான பெரியவர்கள் ‘அய்யோ, அம்பிக்கு என்னாச்சு’ என்று அழுதபடி மயங்கிச் சரிந்திருக்கிறார்கள்.

மேற்படி சம்பவத்துக்குப் பின் அம்பி மாமாவின் உறவை பெரியண்ணன் ரொம்ப நாட்களுக்கு துண்டித்திருக்கிறான். சனி ‘பதினாறு வயதினிலே’ ரூபத்தில் அவனைத் தேடி வந்திருக்கிறது. அம்பி மாமாதான் அவனை அழைத்திருக்கிறார். மிகுந்த யோசனைக்குப் பிறகே அண்ணன் அவருடன் கிளம்பிச் சென்றிருக்கிறான். குருவம்மாள் சாகும் வரை ஒன்றும் பிரச்சனையில்லாமல் அம்பி மாமா ஜாலியாகவே படம் பார்த்திருக்கிறார். சப்பாணியின் துணையுடன் மயிலு சங்கடப்பட ஆரம்பிக்கும் போது அம்பி மாமாவிடமிருந்து ஒரு வகையான கேவல் ஒலி வந்திருக்கிறது. அதை கவனிக்கத் தவறிய அண்ணன், படத்தில் ஒன்றியிருக்கிறான். ‘ஆத்தா ஆடு வளத்தா, கோளி வளத்தா, நாய் வளக்கல’ என்று சப்பாணி வசனம் பேசும் போது அம்பி மாமா மீண்டும் மயங்கி விழுந்திருக்கிறார். இந்த முறை காரில் அழைத்துச் சென்றிருக்கிறான் அண்ணன். அவர் வீடு வரைக்கும் செல்ல தைரியமில்லாமல் பாதியிலேயே இறங்கிக் கொண்டானாம்.

அம்பி மாமா வீட்டுக்கு நேரெதிர் வீட்டுக்காரனான குஞ்சுவும், நானும் ‘அன்னை ஓர் ஆலயம்’ பார்க்க பார்வதி தியேட்டருக்குப் போனோம். உடன் ‘கோ-ஆப்டெக்ஸ் சங்கரும் வந்திருந்தான். பொதுவாக வாழ்க்கையில் எதற்குமே கலங்காத குஞ்சு கேவலப்பட்டது அன்றுதான். ரஜினிகாந்த் விரித்த வலையில் குட்டி யானை சிக்கியதுதான் தாமதம். இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான் குஞ்சு. படம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்கள் ‘ஏ தம்பி, அளாதடே. குட்டி யானைக்கு ஒண்ணும் ஆகாது’ என்று சமாதானம் செய்தார்கள். ஆனால் அவன் அடங்குவதாக இல்லை. நானும், கோ-ஆப்டெக்ஸ் சங்கரும் முறுக்கு, தட்டை, டொரினோ என எல்லாம் வாங்கிக் கொடுத்து ஆறுதல் கூறினோம். அனைத்தையும் தின்று விட்டு, டொரினோவையும் குடித்து முடித்து வாயைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அழத் தொடங்கினான்.

ரொம்ப நாட்கள் இதைச் சொல்லி குஞ்சுவை கேலி செய்து வந்தோம். ‘இவனாது பரவாயில்ல. எங்க அம்ம ’துலாபாரம்’ பாத்துட்டு ஒரு வாரம் படுத்த படுக்கையாயிட்டா, தெரியும்லா? வீட்ல சோறே பொங்கல’. பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து சொன்னார் செல்லப்பா மாமா.

சென்னையிலும் நான் சில கரையும் உள்ளங்களை சந்தித்ததுண்டு. நண்பர் சீமானின் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்த போது நண்பர்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். உள்ளே நான் நுழையும் போதே ‘நேத்து எங்கெ போயிட்டியெ ஐயா மகனே?’ என்றபடியே வரவேற்றார். ‘ஏன், என்ன விஷயம்?’ என்றபடி அருகே போய் உட்கார்ந்தேன். சேனல்கள் ஒவ்வொன்றாக மாறிக் கொண்டிருந்தது. வழக்கம் போல ஆங்காங்கே நண்பர்கள் சிதறிக் கிடந்தனர். சீமானே தொடர்ந்தார்.

‘நேத்து நம்ம தம்பி கருப்பையாவ சமாதானப் படுத்த முடியலங்க.’

‘என்னாச்சு கருப்பையா?’

சற்றுத் தள்ளி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கருப்பையாவைக் கேட்டேன். அதற்குள் சீமானே பதில் சொன்னார்.

‘அத ஏன் கேக்குறியே? நம்ம ஐயாவோட படம் நேத்திக்கு வந்தது, ‘பாசமலர்’. பய தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சிட்டான்.’

‘ஏங்க, பாசமலர் பாத்தா அளமாட்டாங்களா? இது ஒரு செய்தின்னு சொல்றியளே!’ என்றேன்.

‘அட நீங்க ஒரு ஆளு ஐயாமகனே, நடிகர் திலகம் வழங்கும்னு பேரு போட்டவுடனயே அள ஆரம்பிசுட்டாங்கறேன்!’ என்றார்.

கருப்பையாவைப் பார்த்து ‘ஏன் கருப்பையா, நெஜமாவா?’ என்றேன்.

‘பெறகு? அளாம இருக்க முடியுமா, நீங்களே சொல்லுங்க. அதுல்லாம் எப்படி படம்?’ என்று கலங்கிய குரலில் கேட்டார் கருப்பையா. இந்த கருப்பையாதான் ராசு மதுரவன் என பெயரை மாற்றிக் கொண்டு ‘மாயாண்டி குடும்பத்தார்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

பல்வேறு தேசிய விருதுகளை வாங்கிய மலையாள திரைப்பட இயக்குனர் டி.வி.சந்திரனின் டேனி திரைப்படத்தின் முக்கியமான காட்சிகளின் போது இயக்குனர் பாலாஜி சக்திவேல் கண்ணாடிக்குள் கையை விட்டு பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இருந்தார். மூக்கை உறிஞ்சியபடி ‘என்னால தாங்கவே முடியல சுகா’ என்றார். இத்தனைக்கும் அவர் படம் பார்க்கவில்லை. நான்தான் அந்தப் படத்தின் கதையை அவருக்கு விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு பிறகு கே.ஜி.ஜார்ஜின் மற்றோர் ஆள் படத்தின் கதையை சொன்ன போது மிகுந்த சிரமத்துடன் அழுகையை அடக்கிக் கொண்டார்.

சமீபத்தில் ‘மை நேம் இஸ் கான்’ பார்த்தேன். ஷாருக்-கஜோல் தம்பதியினரின் மகன் இறந்து போகும் காட்சி வரும் போது என்னை அறியாமல் கலங்கத் தொடங்கிய மனம் அதற்கு பிறகு தொடர்ந்து கண்ணீர் விட வைத்தது. யாரும் பார்த்து விடக் கூடாதே என்கிற ஜாக்கிரதையுணர்வுடன் சுற்றும் முற்றும் அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருந்தேன். என் அருகில் அமர்ந்திருந்த பத்து வயதுச் சிறுவனொருவன் எனக்கு ஜோடியாக அழுதபடி படம் பார்த்துக் கொண்டிருந்தான். கையை அவிழ்த்து விட்ட மாதிரி இருந்தது. சற்று சுதந்திரமாக அழ ஆரம்பித்தேன். பையனும் என்னோடு சேர்ந்து கொண்டான். தனது மகன் சாவுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ள கஜோலின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் என்னோடு இணைந்து பக்கத்து இருக்கைச் சிறுவனும் அழுதான். பத்து வயதே நிரம்பிய சிறுவனையும் கலங்க வைத்து விட்ட கரன் ஜோஹரை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டேன். ஒரு படைப்பாளியின் வெற்றி இதுதானே. கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.

ஒரு கட்டத்தில் திரையரங்கே அமைதியாக இருக்க பக்கத்து இருக்கைச் சிறுவனின் குரல் அந்த அமைதியைக் கிழித்தது.

‘மம்மி, இந்த சமோசாவையும் அண்ணா புடுங்கிட்டான்’.