(அ)சைவம்

இன்றைக்கும் நான் அதிகமாக எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்று, ‘திரைப்படத்துறையில் இருந்து கொண்டு எப்படி நீங்கள் சைவமாக இருக்கிறீர்கள்?’. திரைப்படத்துறையில் நுழையும் போதே அசைவ உணவு சாப்பிடவும், மது அருந்தவும், எனக்கு சொல்ல வெட்கமாக இருக்கிற மற்றொன்றை பழகவும் வகுப்பெடுப்பார்கள் என்றே பலரும் நம்புகிறார்கள். திரைத்துறையில் இருக்கும் எனது நண்பர்கள் சிலரும் நான் சைவ உணவுக்காரன் என்பதை ஆச்சரியமாக பார்ப்பார்கள். எனது வாத்தியார் பாலு மகேந்திராவும் கேட்டிருக்கிறார். அவரது சந்தேகம் கொஞ்சம் அதிகம்தான். ‘ஒரு மனிதன் சைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ முடியுமா என்ன?’. புதுச்சேரியில் அவருக்காக நல்ல அசைவ உணவைத் தேடி நாங்கள் இருவருமே நள்ளிரவில் அலைந்து கண்டுபிடித்த ஒரு உணவுவிடுதியில் அவர் மீனையும், நான் பழச்சாறையும் அருந்தும் போது இதை கேட்டார்.

பொதுவாக அசைவம் உண்பவர்கள் அந்த உணவின் மீது எந்த அளவுக்கு பிரியம், காதல், வெறி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாகத்தான் உள்ளது. இரண்டு தம்ளர் தண்ணீர் குடித்தாலே அதிலும் கலோரி இருக்கிறது உடம்புக்கு ஆகாது என்று அநியாயத்துக்கு மற்றவர்களை பயமுறுத்துகிற நண்பர் ஜெயமோகனை சிக்கன் பெயரைச் சொல்லி ஏழிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் வரை நடத்தியே கூட்டிச் சென்றுவிடலாம். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் திடீரென்று தானும் என்னை போலவே சைவமாகிவிட்டதாக சொன்னார்.அசைவம் சாப்பிட்டு சலித்துவிட்டதனாலேயே சைவத்துக்கு மாறிவிட்டதாகக் காரணமும் சொன்னார். ‘சரி, எத்தனை நாட்களுக்கு சைவமாக இருப்பீர்கள், உங்கள் மேல் நம்பிக்கை இல்லையே’ என்றேன். ‘அது என் கையில் இல்லை. சைவ உணவு வகைகளின் கைகளில் உள்ளது. என்னை திருப்தியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவைகளின் பொறுப்பு’ என்றார். சரியாக ஒரு மண்டலத்தில் சைவ அணியிலிருந்து கௌரவமாக விலகி தாய்க் கழகத்துக்கே திரும்பி விட்டார்.

சைவம் சாப்பிடுபவனாக இருந்தாலும் அசைவம் உண்பவர்கள் அருகில் உட்கார்ந்து உணவருந்துவதில் எனக்கு எந்த சிக்கலுமில்லை. அதற்கு காரணம் சிறுவயதிலிருந்தே அசைவம் சாப்பிட்டு வருகிற நண்பன் குஞ்சுதான். திருநெல்வேலியில் குஞ்சு போய் விரும்பி அசைவம் சாப்பிடும் கடையின் பெயர் ‘வைர மாளிகை’. திருநெல்வேலி சைவ வேளாளர்கள் மற்றும் குஞ்சுவைப் போன்ற சுத்தமான பிராமணர்களின் ஏகோபித்த ஆதரவினால் வைர மாளிகைக்கு இப்போது பாளையங்கோட்டையில் ஒரு கிளை திறந்துவிட்டனர்.

எனக்கு தெரிந்து திருநெல்வேலியிலும், இலங்கையிலும் மட்டுமே ‘சொதி’ என்னும் குழம்பு உள்ளது. முழுக்க முழுக்க தேங்காய்ப் பாலில் தயாராகும் சொதி, திருநெல்வேலி சைவ வேளாளர் வீட்டுத் திருமணங்களில் தவறாமல் இடம்பெறும். திருமணத்துக்கு மறுநாள் மறுவீட்டுப் பந்தியில் சொதி பரிமாறப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. ‘அதென்ன, கல்யாணத்துக்கு வந்துட்டு சொதிச் சாப்பாடு சாப்பிடாம போறிய?’ என்று திருமண வீட்டார் உறவினர்களிடம் சொல்லாமல் இருப்பதில்லை. பார்ப்பதற்கு வெள்ளைவெள்ளேரென்று காணப்படும் சொதியில் கேரட், உருளைகிழங்கு மற்றும் முருங்கைக்காய் போட்டிருப்பர் . தொட்டுக் கொள்ள கண்டிப்பாக இஞ்சிப் பச்சடி உண்டு. அப்போதுதான் சொதி ஜீரணமாகும். சென்னைக்கு வந்த புதிதில் எழுத்தாளர் வண்ணநிலவன், வாத்தியார் இருவருடனும் சென்று சரவணபவன் போய் இடியாப்பமும், சொதியும் சாப்பிட்டிருக்கிறேன். (வண்ணநிலவன் ‘ சொதி ‘ என்ற தலைப்பிலேயே ஒரு சிறுகதை எழுதியுள்ளார்). வாத்தியார் எனக்காக ஒருமுறை வீட்டில் அவர் துணைவியாரை சொதி வைக்கச் சொன்னார். ஆசையுடன் சாப்பிடப் போனேன். ஆனால் சாப்பிடத்தான் முடியாமற்போயிற்று. அகிலா அம்மையார் நன்றாகத்தான் சொதி வைத்திருந்தார்கள். இரண்டே இரண்டு மீன் துண்டுகளை அதில் போட்டிருந்தார்கள்.

அசைவ உணவுவகைகளின் மத்தியில் அமர்ந்து சைவம் சாப்பிடுவதில் சங்கடப்படாத என்னால் மீனின் வாடையை மட்டும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. சாலிகிராமத்தில் ஒரு மீன் மார்க்கெட் உள்ளது. அதை கடந்து செல்லும் போதெல்லாம் எனக்கு குமட்டிக் கொண்டுவரும். முன்பெல்லாம் அதைத் தாண்டி செல்லும் போது கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு, முகத்தையும் வேறுபக்கம் திருப்பிக் கொண்டு விறுவிறுவெனச் செல்வேன். இப்போது அப்படி செல்வதில்லை. காரணம், ஒரு முறை அப்படி செல்லும் போது கவனிக்காமல் நேரே மீன் வாங்க வந்து கொண்டிருந்த ஓர் இளம்பெண் மீது மோதிவிட்டேன். பார்ப்பதற்கு கல்லூரிக்குச் செல்லும் நவநாகரீகத் தோற்றத்தில் இருந்த அந்தப் பெண், சென்னை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசாங்கமே தாராளமாக அனுமதித்திருக்கிற பிரத்தியேக வசைச் சொல்லான அந்த மூன்றெழுத்து வார்த்தையை சொல்லி என்னை திட்டினாள். அதற்கு பதிலாக நான் போய் ஒரு கிலோ
மீனே வாங்கியிருக்கலாம்.

நண்பர் சீமானின் குழுவினர் அசைவம் உண்பதை கிட்டத்தட்ட ஓர் யாகம் போலவே செய்வர். பொழுது போகவில்லையென்றால் உடனே அசைவ விருந்துக்கு ஏற்பாடு நடக்கும். சமைப்பதற்கு ஒரு தெருவும், பின் சாப்பிடுவதற்கு ஓர் ஊரும் திரண்டுவரும். அவர் வீட்டுத் தோட்டத்தில் முதலில் ஒரு பெரிய அண்டா வந்து இறங்கும். பின் ஊர்வன, பறப்பன இத்யாதிகள். மீனுக்கு ஒரு இடம், ஆட்டுக்கு வேறு இடம், கோழிக்கு தனியாக மற்றொரு இடம் என்று தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளிலிருந்து எல்லாம் வந்து சேரும். சீமானே எல்லோருக்கும் தொலைபேசியில் அழைத்துச் சொல்வார். என்னிடம் ‘அய்யா மகனே . . உங்களுக்கு மட்டும் சிறப்பா சைவ உணவு தயாரா இருக்கு வந்திருங்க . ‘ என்பார். (சைவ உணவு என்றால் வேறொன்றுமில்லை. கொஞ்சம் அப்பளம் பொரித்திருப்பார்கள். அவ்வளவுதான்). மற்றவர்களுக்கு ‘மறக்காம மதிய உணவுக்கு வந்திருங்க. இன்னிக்கு நம்ம வீட்டுல உப்புக்கறி’. மேற்படி உப்புக்கறி வைப்பதில் சீமானின் தம்பிமார்களில் ஒருவனான ஜிந்தா நிபுணன். பார்ப்பதற்கு செக்கச்சிவப்பாக இருக்கிற அந்த உப்புக்கறியை கண்கலங்க மூக்கைத் துடைத்துக் கொண்டே அனைவரும் உண்டு மகிழ்வர். அமரர்கள் ஏவி.மெய்யப்பச் செட்டியார், எல்.வி.பிரசாத், நாகிரெட்டியார் போன்ற பெரியவர்களைத் தவிர சீமான் வீட்டு உப்புக்கறியை ருசி பார்க்காத திரையுலகப் பிரபலங்களே இல்லை எனலாம்.

இன்னதானென்றில்லாமல் என்னவெல்லாமோ சீமானின் வீட்டில் சமைக்கப்படும். கௌதாரிப் பறவையிருந்து பன்றி வரை அவர்கள் மெனுவில் வஞ்சகமில்லாமல் எல்லா உயிரினத்துக்கும் இடமுண்டு. ஒரு முறை கேட்டேன்.

‘ஏன் அராஜகம் . . எல்லா எளவையும் சாப்பிடுறியளே. . . விதிவிலக்கே கிடையாதா’. .

‘என்ன இப்படி கேட்டுட்டியெ அய்யா மகனே . . மனுசக் கறி சாப்பிடுறதில்லையே . . . சட்டப்படி தப்புங்குற ஒரே காரணத்துக்காகத்தானே இவனையெல்லாம் விட்டு வச்சிருக்கோம் . . . வெட்டி சாப்புட்டா தம்பி நல்லாத்தான் இருப்பான்’ . .

படுத்தபடி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஜிந்தாவைப் பார்த்து சொன்னார். அடுத்த வாரத்தில் ஜிந்தா தன் ஜாகையை மாற்றிக் கொண்டான்.

அசைவப் பிரியரான நண்பர் செழியனை சீமானின் விருந்தோம்பல் ஒருமுறை தலைதெறிக்க ஓட வைத்தது. காலையில் சீமானை சந்தித்துவிட்டு கிளம்பிய செழியனிடம் சீமான் அன்பொழுகச் சொல்லியிருக்கிறார்.

‘செல்லம் . .. மதியம் சாப்பிட வராம போயிறாதீய . . . உங்களுக்காக கொரங்கு

வத்தல் வறுக்கச் சொல்லியிருக்கேன்’.