இடுக்கண் களைவதாம்

நண்பன் குஞ்சரமணி அப்போது கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தான். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஸ்டிரைக் என்று சொல்லி திருநெல்வேலிக்கு வந்துவிடுவான். அப்படி வந்திருந்த ஒரு நாளில் என்னை அவனுடனேயே இருக்கச் சொல்லி வற்புறுத்தினான். வீட்டுக்குள்ளும் செல்லாமல் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு யார் வரவையோ எதிர்பார்த்து காத்திருந்தான்.

‘யாருல வரப்போறா’ . . . .

‘இரு . . சொல்லுதேன்’.

அம்மன் சன்னதி மண்டபம் வழியாக போஸ்ட்மேன் வருவது தெரிந்தது. அவர் எங்களுக்கு அருகில் வருவதற்குள் என்னையும் இழுத்துக் கொண்டு அவரிடம் சென்றான். ‘ எனக்கு ஏதும் லெட்டர் வந்திருக்கா’. வெயிலில் வந்த களைப்பும், சலிப்புமாக ‘ வந்தா வீட்டுல கொண்டு தர மாட்டேனா’ என்று சொல்லியபடி எரிச்சலோடு பைக்குள் பார்த்து ஒரு இன்லேண்ட் லெட்டரை எடுத்து கொடுத்தார் போஸ்ட்மேன் .

பஜனை மடத்தின் உட்திண்ணை நிழலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வாயெல்லாம் பல்லாக என்னிடம் அந்த இன்லேண்ட் லெட்டரை கொடுத்து பிரிக்கச் சொன்னான். ‘ வாள்க்கைல எனக்கு வர்ற மொத லவ்லெட்டரை நீதாம்ல பிரிக்கணும் ‘. என்னதான் உயிர் நண்பனாக இருந்தாலும் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதால் அதை பிரித்த வேகத்தில் படிக்கத் துவங்கினேன். அதில் குஞ்சுவுக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. அவனுக்கு தேவையெல்லாம் எனது பொறாமை ஒன்றே என்பதால் ஒரு போலி பெருந்தன்மை மூஞ்சியை வைத்துக் கொண்டு என்னை ஒரு புண்ணாக்கு பார்வை பார்த்தான். எனக்கு மட்டுமே தெரிந்த இவனது அக்கிரமங்களையெல்லாம் வீர பராக்கிரமங்களாக அந்த முட்டாள் பெண் புகழ்ந்து எழுதியிருந்தாள். பின் வழக்கம் போல தத்துபித்தென கவிதை.

‘தித்திக்கும் முத்தம் நீ தந்தாய்
பத்திக்கும் முத்தம் நான் தந்தேன்
எத்திக்கும் செல்லும் நம் காதல் எண்ணம்
யார் புத்திக்கும் புரியாத கவிதைச் சின்னம் ‘

‘இதுக்கு பதிலா அவ அசந்து போற மாதிரி ஒரு கவிதையை நீதாம்ல எளுதணும்’ என்றான் குஞ்சு. அந்த பிள்ளைக்கு முத்தமெல்லாம் கொடுத்திருக்கிறானே என்று தாங்க முடியாமல் உடனே சொன்னேன்.

‘தித்திக்கும் முத்தத்தை நீ சம்மதித்தால்
உன் சித்திக்கும் தருவேனடி பேதைப் பெண்ணே’

‘ஒன் கவித மயிர நீயே வச்சுக்கோ வயித்தெரிச்சல் புடிச்ச பயலே’ என்று லெட்டரை என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு போனான்.

பாளையங்கோட்டையிலுள்ள அந்த பெண்ணின் அண்ணனுக்கு இவர்களின் காதல் விவகாரம் தெரிய வந்து குஞ்சுவைத் தேடி வந்துவிட்டான். அம்மன் சன்னதி வந்தவனுக்கு குஞ்சுவை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. ஒரு வீட்டுத் திண்ணையில் சாய்ந்து கொண்டு போகிற வருகிற பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரை பார்த்திருக்கிறான். சட்டை போடாத பூணூல் போட்ட ஒல்லியான உடல்வாகுடைய அவரிடம் போய், ‘ இங்கெ குஞ்சிதபாதம் வீடு எங்கே இருக்கு’ என்று விசாரித்திருக்கிறான். அதற்கு அந்த பெரியவர், ‘நோ நோ ஹி இஸ் நாட் குஞ்சிதபாதம். குஞ்சரமணி, மை சன்’ என்று சொல்லி வீட்டுக்குளிருந்த குஞ்சுவை அழைத்து அவனிடம் பெருமிதம் பொங்க ஒப்படைத்து விட்டார். குஞ்சுவுக்கு அவனை பார்த்தவுடனேயே அவன் யார் என்பது தெரிந்து போய்விட்டது. ‘பஸ்ஸ்டாண்டுக்கு வா தனியாக பேச வேண்டும்’ என்று அழைத்தவனிடம் ‘நீ போ பின்னால் வருகிறேன் என்று சொல்லிவிட்டு என்னை பார்க்க வந்துவிட்டான்.

அன்றைக்கு சரஸ்வதி பூஜை. புத்தகங்கள், தம்பூரா, ஹார்மோனியம், மிருதங்கம் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு சர்க்கரைப் பொங்கல், பூம்பருப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பதற்றத்தை மறைத்தபடி குஞ்சு வந்து பஸ்ஸ்டாண்டுக்கு அழைத்தான். பாதிவழி போகும் போதுதான் யாரை பார்க்க போகிறோம் என்று கேட்டேன். விஷயத்தை அவன் சொன்னவுடன் வயிற்றுக்குள் சர்க்கரைப் பொங்கலும், பூம்பருப்பும் சண்டை போட ஆரம்பித்தன. ஆனால் நாம் நேரே அந்த பெண்ணின் அண்ணனைப் பார்க்க போகவில்லை. அதற்கு முன் கோ-ஆப்டக்ஸ் ஷங்கரை பார்த்து அவனையும் உடன் அழைத்துச் செல்ல இருக்கிறோம் என்றான் குஞ்சு. நான் நிம்மதியடைந்தேன். ஷங்கர் பார்ப்பதற்கு அப்படியே ராதாரவி மாதிரி இருப்பான். அவனுடைய தகப்பனார் கோ-ஆப்டக்ஸில் மேலாளராக இருந்ததால் அவன் கோ-ஆப்டக்ஸ் ஷங்கர். ஷங்கருக்கு உள்ளூர் ரௌடிகள் அனைவரும் நண்பர்கள். அவர்களுடன் ஷங்கர் பல அடிதடிகளில் கலந்து கொண்டதாக செவிவழிச் செய்திகள் உண்டு. அந்த தைரியத்தில் ‘ ரெண்டுல ஒண்ணு பாத்துருவோம்ல ‘ என்றேன் குஞ்சுவிடம்.

பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டான் ஷங்கர். ‘அந்த பொண்ணு உன்னை காதலிக்கிறது உண்மைதானா’ என்றான் குஞ்சுவிடம். நான் ‘ அவ இவனுக்கு எழுதின லெட்டர படிச்சேன். அவ அண்ணன் ரொம்ப பேசுனான்னா நாம இத சொல்லுவோம். வா ஷங்கர்’ என்றேன். நடந்து போகும் தூரத்தில்தான் பஸ்ஸ்டாண்ட் இருந்தது என்றாலும் ஷங்கர் ஒரு ஆட்டோ பிடித்தான். எங்களுக்கு புரியவில்லை. இதில் ஏதோ சமயோசித சாதுர்ய யுத்த யுக்தி இருக்கிறது என்று யூகித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினோம். முரட்டு உடல்வாகுடைய ஷங்கர் இருக்கும் தெம்பில் இருந்த என் கண்ணுக்கு முதலில் தென்பட்டது அந்த பெண்ணின் அண்ணனுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபர்தான். ஷங்கருக்கு மாமா மாதிரி இருந்த அவர், தாராசிங் கருப்பாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத குஞ்சு இரண்டு வீரர்கள் ஆட்டோவில் இருக்கிற தைரியத்தில் இறங்கிச் சென்றான்.

பத்தடி தூரத்தில் போலீஸ் ஸ்டேஷன் இருந்ததாலோ, என்னவோ முதலில் சாதாரணமாகத்தான் பேசிக் கொண்டார்கள். திடீரென்று டப்டப்பென்று சத்தம் கேட்டது. இவன் அவனை அடிக்க, அவன் இவனை அடிக்க கட்டிப் பிடித்து தரையில் உருண்டார்கள். சட் சட்டென்று பக்கத்து கடைகளின் ஷட்டர்கள் இறக்கப்பட்டன. நாங்கள் உட்கார்ந்திருந்த ஆட்டோ லேசாக ஆடத் துவங்கியது. கோ-ஆப்டக்ஸ் ஷங்கர் பதற்றத்தில் குலுங்கிக் கொண்டிருந்தான். அந்த பெரிய குலுங்கலுக்குள் எனது சின்னக் குலுங்கல் அமுங்கிப் போனது. அடித்து சட்டையைக் கிழித்து உருண்டுக் கொண்டிருந்த இருவருக்கருகிலும் தலையைப் பிடித்தபடி அந்த தாராசிங் மாமா உட்கார்ந்து கொண்டு பெண்குரலில் ‘அய்யோ இப்படி கெடந்து அடிச்சிக்கிறாங்களே யாராவது வந்து விலக்குங்களேன்’ என்று கதறினார்.

ஒருமாதிரியாக அவர்களாகவே களைப்படைந்து விலகி குஞ்சு வந்து ஆட்டோவில் ஏறினான். ஆட்டோ கிளம்பி நகர ஆரம்பித்ததும் கோ-ஆப்டக்ஸ் ஷங்கர், ‘எல . . மேல கைய வச்சிட்டேல்லா . . பாருல . . இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள உன்ன தூக்குதோம்’ என்று ஓவராக சவுண்ட் விட்டான். நானும் என் பங்குக்கு அவனை விட சத்தமாக மனதுக்குள் சத்தம் போட்டேன். அம்மன் சன்னதிக்கு வந்ததும் குஞ்சுவிடம் ‘ரொம்ப அடி பட்டிருச்சா’ என்றேன். ‘ஒங்கள கூட்டிக்கிட்டு போனதுக்கு பதிலா ரெண்டு நாயை கூட்டிக்கிட்டு போயிருந்தாலாவது மேல விளுந்து கடிச்சிருக்கும்’ என்று சொல்லிவிட்டு உதட்டைப் பிதுக்கி ரத்தம் வருகிறதா என்று குஞ்சு பார்த்தான்.