நாத தனுமனிஷம்

‘மஞ்சரில விளாத்திகுளம் சாமியப் பத்தி வீரகேரளம்புதூர் விநாயகம் பிள்ளைன்னு ஒருத்தர் எழுதியிருக்காரு. படிச்சு பாருங்க. நல்லா இருக்கு’. வேறு ஏதோ பேசிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக இதை சொன்னார் நண்பர் ஜெயமோகன். ‘மோகன், அது வேற யாருமில்ல. எங்க பெரியப்பா’ என்றேன். விளாத்திகுளம் சாமியைப் பற்றி மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ மனிதர்களைப் பற்றி, எவ்வளவோ விஷயங்கள் பற்றி விநாயகத்துப் பெரியப்பா சொல்லி நான் தெரிந்திருக்கிறேன்.

விநாயகத்துப் பெரியப்பா ஒன்றும் எனக்கு ரத்த உறவு இல்லை. ஆனாலும் பெரியப்பா. இப்படி பல உறவுகள் எனக்கு உண்டு. ஐம்பதுகளில் நெல்லை சகோதரர்கள் என்றழைக்கப்பட்டு கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்து கொண்டிருந்த எனது பெரியப்பாக்களோடு மிருதங்கம் வாசிப்பவராக அறிமுகமாகி எங்கள் குடும்பத்துக்குள் வந்தவர்தான் விநாயகத்துப் பெரியப்பா. அதன் பின் தாத்தாவுக்கும், ஆச்சிக்கும் மற்றொரு மகனாக ஆகியிருக்கிறார். எனது சொந்த பெரியப்பாக்களை விட நான் அதிகமாக பெரியப்பா என்றழைத்தது விநாயகத்துப் பெரியப்பாவைத்தான். எப்போதுமே வெள்ளை அரைக்கைச் சட்டையும், வேட்டியும்தான் உடை. மாநிறம். சற்று பருமனான உடல்வாகு. மீசையில்லாத முகத்தில் சிரிக்கும் போது சற்றுத் தூக்கலான முன்பல் இரண்டும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கும்.

ரசிகமணி டி.கே.சி.யுடன் நெருங்கிப் பழகிய பெரியப்பாவைப் போன்ற ஒரு கலா ரசிகரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை. புகழ் பெற்ற தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். அந்த வகையில் தமிழறிஞர்கள் கி.வா.ஜ, திருக்குறள் முனுசாமி போன்றோரின் நண்பர். எந்த ஒரு சூழலுக்கும் ஒரு குறள் சொல்லுவார். ‘இதுக்கும் ஒரு கொறள் வச்சிருப்பேளே’ என்று கேட்டால், ‘என்ன செய்யச் சொல்லுதெ? அந்த பேதீல போவான் எல்லா எளவுக்கும்லா எளுதி வச்சிருக்கான்’ என்பார். மிருதங்கம், ஹார்மோனியம் போக தானே உருவாக்கிய ஒற்றைக் கம்பி வாத்தியம் ஒன்றும் வாசிப்பார். அந்த வாத்தியத்தை பத்திருபது நிமிடங்களுக்குள் உருவாக்கி வாசிப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒற்றைத் தந்தியில் அத்தனை ஸ்வரங்களையும் கொண்டு வந்து இசைப்பது அவ்வளவு எளிதில்லை.

திருநெல்வேலிக்கு பெரியப்பா வந்தால் குறைந்தது நான்கு நாட்களாவது எங்கள் வீட்டில் தங்குவார். அந்த நான்கு நாட்களும் வீடே நிறம் மாறிவிடும். காலையில் கொஞ்சம் தாமதமாகவே குளிக்கச் செல்வார் பெரியப்பா. அரைத்தூக்கத்தில் இருக்கும் என்னை ஹார்மோனியமோ, மிருதங்கமோ வந்து வருடி எழுப்பும். ஹார்மோனியம் வாசிக்கும் போது பெரியப்பாவிடம் ஒரு கனிவு தெரியும். சித்தரஞ்சனி ராகத்தில் ‘நாத தனுமனிஷம்’ கீர்ததனைதான் பெரியப்பா அடிக்கடி வாசிப்பது. சில சமயங்களில் இருமலோடு பாடுவதும் உண்டு. சித்தரஞ்சனி ஒரு சுவாரஸியமான ராகம். அதில் மேல் ஸட்ஜமத்துக்கு மேலே உள்ள ஸ்வரங்களுக்கு வேலை இல்லை. அந்தச் சின்ன ஏரியாவுக்குள் பெரியப்பா சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக வாசித்துக் கொண்டிருப்பார். தூக்கம் கலையாத கண்களுடன் அவரருகில் சென்று உட்காருவேன். ஹார்மோனியத்திலிருந்து கையை எடுக்காமலேயே, அந்த சமயத்தில் தான் வாசித்துக் கொண்டிருக்கும் பிடிமானத்தை கண்களால் எனக்குக் காட்டிச் சிரிப்பார்.

பெரியப்பாவின் ஹார்மோனிய வாசிப்புக்கு நான் பலமுறை மிருதங்கம் வாசித்திருக்கிறேன். அவரது வேகத்துக்கும், லயிப்புக்கும் என்னால் ஈடு கொடுக்க முடிந்ததே இல்லை. கொஞ்ச நேரத்திலேயே நைஸாக மிருதங்கத்தை பெரியப்பாவின் பக்கம் தள்ளிவிட்டு நான் ஹார்மோனியத்தை எடுத்துக் கொள்வேன். மிருதங்கம் கையில் வந்தவுடன் பெரியப்பா ஆளே மாறிவிடுவார். அசுர பலம் வந்து வாசிப்பார். அவர் வாசிப்பில் மிருதங்கம் பேசும். அழும். சிரிக்கும். அதற்குப் பின் மிருதங்கத்திலிருந்து பெரியப்பா வெளியே வர ரொம்ப நேரம் ஆகும். ‘சாமியாடிட்டேளே பெரிப்பா’ என்பேன். ‘வாசிச்சா அப்படித்தான்யா வாசிக்கணும். இல்லென்னா அதத் தொடவே கூடாது’ என்பார். அவரைப் போலவே என்னையும் அந்த இரண்டு வாத்தியங்களிலும் தயார் செய்து விடவேண்டும் என்று பெரியப்பா விரும்பினார். நான் தான் அதற்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. இதில் என் மேல் அவருக்கு எப்பொழுதும் ஒரு தீராத வருத்தம் இருந்தது. ‘எல்லாருக்கும் இது வராது. ஒனக்கு வருது. ஆனா வாசிக்க ஒனக்கு வலிக்கி’. பாளயங்கோட்டையில் ஒரு கச்சேரியில் நான் மிருதங்கம் வாசித்து விட்டு திரும்பும் போது உடன் வந்திருந்த பெரியப்பா சலிப்புடன் இதை சொன்னார்.

பெங்களூர் சுந்தரம் அவர்களின் ‘ஆனந்த ரகஸ்யம்’ புத்தகத்தை வைத்துக் கொண்டு நானாக சில ஆசனங்களை பயின்று கொண்டிருந்தேன். ‘பொஸ்தகத்த பாத்துல்லாம் ஆசனம் போடக் கூடாதுய்யா’ என்று சொல்லி, முறையாக எனக்கு யோகாசனம் கற்றுக் கொடுத்த ஆசான் அவர். எனக்கு தெரிந்து அப்போதே அவர் எழுபதை நெருங்கியிருந்தார். ஆனால் அந்த வயதிலும் சிரசாசனம் உட்பட கடினமான ஆசனங்களைப் போட்டு காண்பித்து என்னை அசரடித்தார். இத்தனைக்கும் வாதம் காரணமாக அவரது இரண்டு கால்களும் சற்று வளைந்திருக்கும். அந்தக் கால்களை வைத்துக் கொண்டு அவர் நடக்கும் தூரம் நம்ப முடியாதது. பெரியப்பாவுக்கு மாலையிலும் ஒரு குளியல் உண்டு. குளித்து முடித்த பின் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து நடுவகிடெடுத்து தலை வாருவார். மெல்ல நடக்க ஆரம்பிப்பார். இரண்டு மணிநேரம் கழித்து நெற்றி நிறைய திருநீறுடன் வீடு திரும்புவார். நெல்லையப்பர் கோயிலைச் சுற்றி வந்திருக்கும் களைப்பு அவர் உட்காரும் போது நமக்கு தெரியும்.

‘நானேதானெ இங்கெ வந்துக்கிட்டிருக்கென். நீ ஒரு நாளைக்கு வீரகேரளம்புதூர் வாய்யா’. ரொம்ப நாட்கள் சொல்லிக் கொண்டிருந்த பெரியப்பாவுக்காக ஒரு மாலையில் அங்கு சென்றேன். சந்தோஷத்தில் பெரியப்பாவின் வீட்டிலுள்ள அனைவரும் உபசரித்தார்கள். தடபுடலான இரவு உணவுக்குப் பின் சுகமான காற்றடிக்க இருவரும் சிறிது தூரம் நடந்தோம். ஊரே அடங்கிய அமைதியான பொழுதில் வீட்டு வாசலறையில் வந்து உட்கார்ந்தோம். பெரியப்பா ‘அந்த பொட்டிய எடு’ என்றார். பெரியம்மை ஒரு பழைய அழுக்குப் பெட்டியை எடுத்து கொடுக்க, அதை தன் பக்கம் நகர்த்தி உள்ளுக்குள்ளிருந்து நிறைய கேஸட்டுக்களை எடுத்தார். எல்லாமே பழையவை. ஒரு மோனோ டேப்ரிக்கார்டர் அருகில் இருந்தது. ‘எய்யா, இத கொஞ்சம் கேளேன்’. கரகரவென கேஸட் ஓடத் துவங்கியது. ஆல் இண்டியா ரேடியோவின் ஒலிபரப்பை பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. மயக்கும் குழலிசை. ‘என்ன ராகம் தெரியுதா?’. சற்று நேரம் யோசித்து விட்டு மால்கௌன்ஸ் மாதிரி இருக்கு’ என்றேன். ‘அதேதான். எப்படி வாசிச்சிருக்கான் பாத்தியா?’ பன்னாலால் கோஷ் என்னும் மேதையை அந்தப் பழைய கரகர ஒலிபரப்பில் அன்றைக்குத்தான் முதன்முறையாகக் கேட்டேன். ‘பேஸ் வாசிக்கறதுக்காக தான் விரல அறுத்து ஆபரேஷன் செஞ்சுக்கிட்ட சண்டாளன்யா இவன்’. இந்த மாதிரி ஏதாவது சொல்லும் போது உணர்ச்சி மிகுதியில் பெரியப்பாவின் குரல் உடையும். அப்போது அவர் அழுகிறாரோ என்று நமக்கு சந்தேகம் வரும். பன்னாலால் கோஷைத் தொடர்ந்து படே குலாம் அலிகானும் அன்றைய எங்களின் இரவை நிறைத்தார்.

ஜிம் ரீவ்ஸின்(Jim reeves) குரல் விநாயகத்துப் பெரியப்பாவுக்குப் பிடித்தமான ஒன்று. ‘இந்த ரீவ்ஸ் பய அடியோஸ் அமிகோஸ்னு பாடும் போது நம்ம தோள்ல கையப் போட்டுக்கிட்டு காதுக்குள்ள வந்து பாடுற மாதிரி இருக்குல்லா’ என்பார். லாரல் ஹார்டி இரட்டையர்களும் அவருக்கு பிடித்தமானவர்கள். சில வசனங்களை மீண்டும் மீண்டும் சொல்லி ஒரு குழந்தை போல ரசித்துச் சிரிப்பார். வீரகேரளம்புதூர் என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து கொண்டு இவர் எப்படி எல்லாவற்றையும் ரசிக்கிறார் என்று ஆச்சரியமாகவே இருக்கும். நான்கைந்து ஆண்டுகளாகச் சந்திக்கும் வாய்ப்பில்லாமல் இருந்தேன். அவ்வப்போது போஸ்ட் கார்டில் நுணுக்கி எழுதி அனுப்புவார். அதில் ஒரு குறுங்கவிதையோ, சங்கீத சமாச்சாரமோ, குற்றாலச் சாரல் பற்றிய செய்தியோ இருக்கும். அந்தச் சின்ன அஞ்சலட்டைக்குள் அதிக பட்சம் எவ்வளவு எழுத முடியுமோ, அவ்வளவு எழுதியிருப்பார். ‘முதுமை காரணமாக இப்போதெல்லாம் எங்குமே செல்ல முடிவதில்லை. வீரகேரளம்புதூரிலேயே இருக்கிறேன். நீ இங்கு வா. ஆசி’ என்றெழுதிய ஒரு கார்டு சென்ற ஆண்டில் வந்திருந்தது. ஒரு சில வாரங்களில் வீரகேரளம்புதூர் செல்லும் வாய்ப்பு வந்தது. கொஞ்சம் இளைத்திருந்த பெரியப்பா என்னைக் கண்டது எழுந்திருக்க முடியாமல் எழுந்து வந்து கட்டியணைத்து கன்னங்களில் மாறி மாறி முத்தினார்.

‘மிருதங்கத்த எப்பவோ கைகளுவிட்டெ. ஆர்மோனியமாது வாசிக்கியாய்யா’ என்று கேட்டார். ‘அப்பப்பொ வாசிக்கென். அன்னைக்குக் கூட நாத தனுமனிஷம் வாசிச்சென்’ என்றேன். ‘நானும் அன்னைக்கு டெலிவிஷன்ல சின்னப்பா காதல் கனிரசமே பாடும் போது ஒன்னத்தான் நெனச்சுக்கிட்டென்’ என்றார். சில மாதங்களுக்கு முன் என் தம்பி என்னிடம் இனி நாம் வீரகேரளம்புதூருக்குச் செல்லும் அவசியமில்லை என்ற அர்த்தத்தில் விநாயகத்துப் பெரியப்பாவைப் பற்றிய சேதி சொன்னான். அதுவே அவனுக்கு தாமதமாக வந்த செய்தி. அன்றைக்கு முழுக்க என் மனதில் நாததனுமனிஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

[email protected]

வராது வந்த நாயகன்

“சினிமாவில் இருப்பவர்கள் அனைவருமே வேறோர் கிரகத்திலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கென்று ஒரு தனியுலகம் உண்டு. கண்டிப்பாக அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு இந்தப் பக்கமென்றால் மதுரைக்காரர்களை அனுமதிப்பார்கள். திருநெல்வேலியைச் சேர்ந்தவர்களெல்லாம் அந்த மாய உலகத்துக்குள் நுழையவே முடியாது.” இப்படியெல்லாம் நெல்லைக்காரர்கள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் ஒரு படம் வந்தது. திருநெல்வேலி முழுவதும் ஒரே பரபரப்பு. அவர்கள் குளித்த அதே தாமிரபரணியில் குளித்து, படித்த அதே சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, படம் பார்த்த அதே பார்வதி தியேட்டரில் படம் பார்த்து, டீ குடித்த அதே சந்திப் பிள்ளையார் கோயில் முக்கு டீக்கடையில் டீ குடித்து வளர்ந்த ஒரு இளைஞர் சினிமா டைரக்டர் ஆகிவிட்டாரென்றால் சும்மாவா?

‘எல, நம்ம முத்தையாபிள்ளை பேரன் ஒரு படம் எடுத்திருக்கானாம். தெரியுமா?’

‘யாரு? மூத்தவனா?’

இல்லலெ. கடைக்குட்டி. சொடக்கு மணி’

‘அவன் எப்படில அங்கெ போனான்?’

‘அவ ஐயாவுக்கு நல்ல துட்டுல்லா. பெறகு ஏன் போகமாட்டான்?’

‘அது சரி. படம் எப்படி? வெளங்குமா? இல்ல, அடுத்த தேரோட்டத்துக்கு தேர் இளுக்க வந்துருவானா?’

‘புது வசந்தம்’ என்ற படம் ரிலீஸான புதிதில் இந்தப் பேச்சுக்கள் நெல்லையைச் சுற்றி உலா வந்தன. அதன் இயக்குனர் விக்ரமனைத் தெரிந்தவர்கள், தெரிந்ததாகச் சொல்லிக் கொண்டவர்கள் அனைவருமே ஒருவித மயக்கத்தில் இருந்தார்கள். ‘மணி நேத்து கூட எனக்கு ஃபோன் பண்ணினான்’ என்று கூசாமல் பொய் சொல்லிக் கொண்டார்கள். அநேகமாக மணி என்ற விக்ரமனைத் தெரிந்த அனைவருக்குமே சினிமா ஆசை வந்தது. வாகையடி முக்கில் உள்ள கல்பனா ஸ்டூடியோ வாசலில் கதை விவாதம் செய்யத் துவங்கினார்கள். பெரிய பெரிய தூண்கள் உள்ள அந்தக் காலக் கட்டிடமான கல்பனா ஸ்டூடியோவைத் தாண்டிச் செல்லும் போதெல்லாம், ‘அடுத்த ஸீன்ல நான் என்ன சொல்ல வாரெம்னா’ என்ற சத்தம் தேய்ந்து கேட்கும்.

விக்ரமனைப் பார்த்து சினிமாப் பித்து தலைக்கேறியவர்களில் டாக்ஸி டிரைவர் லட்சுமணப்பிள்ளையின் மகன் கண்ணனும் ஒருவன். சினிமாவுக்காக கண்ணன் செய்த முதல் வேலை, தன் பெற்றோர் வைத்த பெயரை மாற்றியதுதான். அவனாக சூட்டிக் கொண்ட புதிய பெயரும், அதைவிட அதற்கு அவன் சொன்ன காரணமும் படு சுவாரஸ்யமானது. ‘நாம இப்போ திருநவேலில இருக்கோம். ஏவியெம் ஸ்டூடியோல்லாம் மெட்ராஸிலெல்லா இருக்கு. இங்கெ நெல்லையப்பர் மாதிரி அங்கே யாரு சாமி? அப்போ அவர் பேரைத்தானே வச்சுக்கிடணும். என்ன சொல்லுதிய?’ என்றான். ஆக கண்ணன் கபாலியானான். கபாலி தீவிர ராதா ரசிகன். அவனுடைய சினிமா ஆசை ராதாவை ரசிப்பதிலிருந்துதான் தொடங்கியது. எல்லா விஷயத்திலும் தன் மகனைக் கண்டித்து வந்த லட்சுமணப்பிள்ளை ராதா விஷயத்தில் மட்டும் அமைதி காத்தார். அதன் ரகசியம் ஒரு நாள் தெரிய வந்தது. ‘எனக்கும் ராதாவைப் பிடிக்கும்’ என்றார் வெட்கத்துடன். நீண்ட நாட்கள் கழித்து ராதா குறித்தும் மகனை வறுத்தெடுத்தார். ‘யோவ், இவ்வளவு நாளா ஒமக்கும் ராதா புடிக்கும்னு அந்தப் பயலை ஒண்ணும் சொல்லாம இருந்தீரு. இப்போ என்னாச்சு திடீருன்னு?’ என்று கேட்டதற்கு, ‘ நான் ராதா புடிக்கும்னு சொன்னது, எம்.ஆர்.ராதாவை. இந்த செறுக்கியுள்ளெ ஏதோ மலையாளத்துக் குட்டியைப் பாத்துல்லா பல்லைக் காட்டிக்கிட்டிருந்திருக்கான்’ என்று அவமானத்துடன் வேதனைப்பட்டார்.

கபாலியின் சினிமா ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. கதை, கவிதைகள் எழுத ஆரம்பித்தான். சினிமாவில் நடிக்கும் ஆர்வமுள்ள அனைத்து இளைஞர்களும் ஒரு நாள் தம்மை கபாலி கதாநாயகனாயாக்கி விடுவான் என்று உறுதியாக நம்பி அவன் பின்னால் அலைந்தனர். காலையிலேயே கபாலியைத் தேடி அவன் வீட்டுக்கு வந்துவிடுவர். ‘நாமதான் ஒரு லூசுப்பயலைப் பெத்து வச்சிருக்கோம்னு பாத்தா, ஊருல ஏகப்பட்ட கோட்டிக்காரப் பயலுவல்லா அலையுதானுவொ’. வேலைக்குக் கிளம்பும் லட்சுமணப் பிள்ளை தலையில் அடித்துக் கொள்வார்.

லட்சுமணப்பிள்ளையுடன் டாக்ஸி ஸ்டாண்டில் டாக்ஸி ஓட்டும் ராமனும் கபாலியின் நடிகர் குழுவில் வந்து இணைந்தான். ராமன் பார்ப்பதற்கு கொஞ்சம் விஜயகாந்த் சாயலில் இருப்பான். கபாலி ராமனைப் பார்த்து ‘ நீதான் என் படத்துக்கு நாயகன்’ என்று சொல்லிவிட்டான். ராமனின் நடை மாறியது. கபாலியின் கட்டளைகளில் ஒவ்வொன்றாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தான். காபி, டீ குடிப்பதை நிறுத்தினான். நடிகர்கள் ஜூஸ்தான் குடிக்க வேண்டும் என்று கபாலி சொல்லியிருந்ததால் தினமும் எலுமிச்சம்பழ ஜூஸ் குடித்தான். என்றைக்காவது ஒரு நாள் மது அருந்திக் கொள்ளலாம் என்று கபாலி விதியை சற்று தளர்த்தியிருந்தான். அன்று மட்டும் மது. ஒரே ஒரு கண்டிஷன், அன்றைக்கு கபாலிக்கு மூடு இருக்க வேண்டும்.

இப்படியே எத்தனை நாளைக்குத்தான் ஜூஸ் குடித்துக் கொண்டே இருப்பது? நாம் சினிமா எடுக்கப் போவது எப்போ? என்று ஒரு நாள் ராமன் கோபமாகக் கேட்க, கபாலி அவனை சமாளிக்கும் விதமாக ராமனின் பெயரை மாற்றினான். புதிதாக கற்பனை செய்தெல்லாம் ராமனுக்கு பெயர் வைக்கவில்லை. ஒரே ஒரு ‘காந்த்’தை மட்டும் இணைத்து ராமனை ராம்காந்த் ஆக்கினான். ராம்காந்த் கொஞ்சம் அமைதியானான். நாள் ஆக ஆக சினிமாவில் நுழைவது குறித்து பெரும் சந்தேகம் வர ஆரம்பித்தது ராம்காந்த்துக்கு. காரணம், எல்லா திருநெல்வேலிக் காரர்களையும் போல கபாலியும் தச்சநல்லூரைத் தாண்டுவதாக இல்லை என்பது ராம்காந்துக்கு நன்றாக புரிந்து போனது. ராம்காந்தின் மனநிலை தனக்கு தெரிய வந்ததும் தினமும் சாப்பிடும் புரோட்டா சால்னாவுக்கும், இருட்டுக் கடை அல்வாவுக்கும், செகண்ட் ஷோ சினிமாவுக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கபாலி அதிரடியாக ஓர் யோசனையைச் சொன்னான். ராம்காந்த்தை கதாநாயகனாக்கி ஒரு வீடியோ படம் எடுக்கும் திட்டம்தான் அது. ராம்காந்த் உற்சாகமானான்.

வீடியோ படத்துக்கான மொத்த செலவையும் கதாநாயகன் ராம்காந்த் ஏற்றுக் கொள்ள பட பூஜை சந்திப்பிள்ளையார் கோயிலில் போடப்பட்டது. படத்தின் பெயர் ‘வராது வந்த நாயகன்’. அரைமணிநேரம் ஓடக்கூடிய அந்தப் படத்தின் கதாநாயகியைத் தேர்வு செய்ய கபாலி வள்ளியூர் கிளம்பிப் போனான். அங்கு கரகம் ஆடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு புடவையைச் சுற்றி கூட்டி வந்தான். ஆலங்குளத்துக்குப் பக்கத்திலுள்ள மானூரில் இரண்டு நாள் ஷ¥ட்டிங். மூன்றாவது நாள் படம் ரிலீஸாகிவிட்டது. அதாவது நண்பர்களுக்குப் போட்டுக் காட்டினான். அந்த சமயம் பார்த்து நான் ஊருக்குப் போயிருந்தேன். நானும் ‘வராது வந்த நாயகன்’ பார்க்கும் பாக்கியம் பெற்றேன். படம் ஆரம்பித்த உடனேயே ராம்காந்த்தும், அந்த வள்ளியூர் பெண்ணும் ‘வராது வந்த நாயகன்’ பாடலுக்கு இடுப்பை அசைத்து ஆடினார்கள். பிறகு எங்கோ ஒரு காட்டுக்குள் சென்றார்கள். அவர்கள் இருவரும் காதல் செய்து கொண்டிருக்கும் போது டைரக்டர் கபாலி ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு கிளைமாக்ஸ் வந்து விட்டது. கதாநாயகி மூன்று விடுகதைகள் போடுகிறாள். அதன் விடையை ராம்காந்த் சரியாக சொல்லி விடுகிறான். உடனே கதாநாயகி ‘போட்டீல நீங்க செவுச்சிட்டீங்க. இனிமே இந்த காலா உங்களுக்குத்தான்’ என்று ராம்காந்தைக் கட்டி அணைத்துக் கொள்கிறாள். படம் பார்த்து முடிந்ததும் கபாலியிடம் கேட்டேன்.

‘ஜெயிச்சுட்டீங்கங்கிறதை செவுச்சிட்டீங்கங்கறா. அது புரியுது. அது என்ன காலா?’

கபாலி பதில் சொன்னான்.

‘அந்த கேரக்டர் பேரு கலா. அதைத்தான் அந்த ஆர்டிஸ்ட் அப்படி சொல்லிட்டா. டப்பிங்க்ல சரி பண்ணிடலாம்னு விட்டுட்டேன்.’

‘வராது வந்த நாயகன்’ எடுத்த பின் கபாலி தன்னை ஒரு இயக்குனராக உறுதி செய்து கொண்டான். நான் ஊருக்கு போனால் என்னிடத்தில் மணிரத்னத்தை மணி என்றும், வாத்தியாரை பாலு என்றும், இளையராஜாவை ராஜா என்றும் விளித்துப் பேசுவான். அவனைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கு வயதாகி விட்டது. ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டனர். கடைசியாக நான் பார்க்கும் போது கபாலி ஒரு கரும்புச் சாறுக் கடையில் நின்று கொண்டிருந்தான். உடன் கருப்பாக ஒல்லியான ஒரு இளைஞன். கபாலி என்னிடம் வந்து பேசும் போது அந்த ஒல்லி இளைஞனும் அருகில் வந்து நின்றான். ‘இது யாரு? புதுசா இருக்கு?’ என்று கேட்டேன். உடனே கபாலி அவனைப் பார்த்து ‘ம், சொல்லு உன் பேரை. அவாள் சினிமால இருக்கா. தெரியும்லா’ என்றான். தயங்கித் தயங்கி கபாலியைப் பார்த்தவாறே அந்தப் பையன் என்னிடம் சொன்னான். ‘ என் பேரு செல்வகாந்த்’.

[email protected]

கலர்

காபி குடிக்கும் பழக்கம் ஏனோ என்னிடத்தில் சிறுவயதிலிருந்தே இல்லை. சென்னைக்கு, அதுவும் சினிமாவுக்கு, வந்த பிறகுதான் டீ குடிக்கும் பழக்கம் வந்தது. படப்பிடிப்பின் போது குடிக்கும் டீயின் எண்ணிக்கை தெரிவதேயில்லை. யார் வீட்டுக்குப் போனாலும் குடிப்பதற்கு காபி கொடுத்தார்களானால் வேண்டாம் என்று மறுத்து விடுவேன். ‘ஒருவாய் காப்பி குடிக்கறதுனால ஒன் கிரீடம் ஒண்ணும் எறங்கிறாது’. குஞ்சு எத்தனையோ முறை சலித்திருக்கிறான். நான் கேட்டதேயில்லை. ‘இங்கெ பாரு. ஒனக்கு காபி குடிக்கிற பழக்கம் இல்லேங்கறதுக்காக வேண்டாங்குறே. ஆனா அவங்க அதுக்காக ஒனக்குன்னு வேற ஏதோ தயார் பண்ணனும். எதுக்கு தேவையில்லாம மத்தவங்களுக்குக் கஷ்டத்த குடுக்கறே?’ வாத்தியார் பாலு மகேந்திரா ஒருமுறை சொன்னார். அன்றிலிருந்து எங்கு சென்றாலும், என்னிடம் கேட்காமல் காபி கொடுத்தால் எதுவும் சொல்லாமல் வாங்கி குடித்து விடுவேன்.

காபியை விலக்கியே வைத்திருந்தாலும் மற்ற பானங்களான நன்னாரி சர்பத், எலுமிச்சை சாறுடன் சோடா கலந்து உப்பிட்டு குடிக்கிற போஞ்சி, பதனீர், இளநீர் என இவையெல்லாம் அவ்வப்போது என் வாழ்க்கையில் இடம்பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. ராவண்ணா என்று எங்கள் குடும்பத்தினரால் அழைக்கப்பட்டு எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்த ராமையா பிள்ளை இப்போது உயிருடனில்லை. கட்டிட மேஸ்திரியாக இருந்த ராவண்ணா எங்கு சென்றாலும் உடன் செல்பவரிடம், ‘யோவ் வாங்க. அந்தா அந்தக் கடைல போயி ஆளுக்கு ரெண்டு கலர் அணைச்சுக்கிடுவோம்’ என்பார். டொரினோ, பவண்டோ, கோல்ட் ஸ்பாட் எதுவாக இருந்தாலும் மொட்டையாக அது கலர்தான்.

ராவண்ணாவின் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அவரது மனைவி மட்டுமே இருந்தார். என்னைப் பார்த்ததுமே பரபரப்படைந்தார். ‘உள்ள வாய்யா’. இரும்பு மடக்கு நாற்காலியை எடுத்துப் போட்டார். ‘வராதவன் வந்திருக்கே. இந்தப் பய வேற இல்லையெ. பள்ளிக்கூடம் போயிருக்கானெ. ஒரு அஞ்சு நிமிசம் இருக்கியா? முக்குக் கடையில போயி கலர் வாங்கிட்டு வந்திருதென்’ என்றார்கள். ராவண்ணா மட்டுமல்ல அவரது குடும்பத்துக்குள்ளும் கலருக்கு இருக்கும் செல்வாக்கைப் புரிந்து கொண்டேன். ‘வீட்டுக்கு வந்த ஆளுக்கு ஒரு கலர் கிலர் வாங்கிக் குடுத்து அனுப்ப வேண்டாமாட்டி?’ என்று ராவண்ணா சத்தம் போடுவார் போல. அதற்குப் பின் நான் அங்கு எத்தனை முறை போனாலும் கலர் குடிக்காமல் திரும்பியதில்லை. ‘அவாள் வீடு வரைக்கும் வந்துட்டோம். போயி ஆளுக்கொரு கலர் குடிச்சுட்டுத்தான் வருவோமே’. கிண்டல் செய்வான் குஞ்சு.

சுந்தரம் பிள்ளை பெரியப்பாவும் கலர்ப்பிரியர்தான். குறிப்பாக டொரினோ. ‘நேத்து ராயல் டாக்கீஸ்க்கு செகண்ட் ஷோ போயிருந்தேன். இண்டர்வல்ல டொரினோ குடிக்கும் போது கணேசன்பய வந்து பெரிப்பான்னு தோளத் தொடுதான். அத ஏன் கேக்கெ? அந்தாக்ல, வா மூதின்னு அவனுக்கும் ஒரு டொரினோவ வாங்கிக் குடுத்தேன்.’ ஸ்ட்ரா போட்டுக் குடிப்பது பெரியப்பாவுக்குப் பிடிக்காத ஒன்று. ரொம்ப நாட்களாக ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக்கொண்டுதான் இருந்தார். ஒரு முறை அப்படி உறிஞ்சிக் கொண்டிருந்த போது பாட்டில் காலியானது தெரியாமல் சத்தம் வரும் வரை உறிஞ்சியிருக்கிறார். ‘பாத்தா பெரிய மனுசன் மாதிரி தெரியுது. இப்படியா பாட்டில் காலியானது தெரியாம அசிங்கம் புடிச்சாக்ல சத்தம் போட்டு உறியறது மாடு களனி குடிக்க மாதிரி?’ போகிற போக்கில் யாரோ சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவமானத்தில் அன்றோடு பெரியப்பா தூக்கி எறிந்தது, ஸ்ட்ராவை. டொரினோவை அல்ல. இறக்கும் வரை டொரினோவை அவர் மறக்கவேயில்லை.

ஸெவென் அப் வாங்கிக் குடித்து ‘ஏவ் ஏவ்’ என ஊரையே காலி செய்யுமளவுக்கு சத்தமாக ஏப்பம் விடும் நபர்களைப் பார்த்திருக்கிறேன். ஸ்டைலாக ஒரு சமோசா அல்லது ஒரு பஃப் வாங்கிக் கடித்துக் கொண்டு, கொக்க கோலாவைக் குடித்து விட்டு ‘இதுதான் என்னாட லஞ்ச்’ என்று சொல்லும் இளைஞர்களும், யுவதிகளும் இப்போது இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாகரிகச் சிறுசுகள் பிஸ்ஸா தின்று பெப்ஸி குடிக்கிறார்கள். ஃப்ரூட்டி உறியாத சின்னப் பிள்ளைகள் இப்போது எங்குமே இல்லை.

மேற்படி பாட்டில் பானங்களில் சிலரது பிரத்தியேக ரஸனை ஆச்சரியத்தை வரவழைப்பவை. என் வாத்தியார் பாலு மகேந்திரா கோக்கில், பெப்ஸியில் கொஞ்சம் உப்பு போட்டு குடிப்பார். ‘கேஸ கம்ப்ளீட்டா எடுத்துரும். குடிச்சு பாரேன்’. குடித்துப் பார்த்திருக்கிறேன். உண்மைதான். பாரதி மணி பாட்டையாவுக்கு அது சிம்லாவாகவே இருந்தாலும் ஃபிரிட்ஜில், அதுவும் ஃப்ரீஸரில் வைத்து ச்சில்லென்று கை நடுங்க எடுத்து கொடுக்கும் தண்ணீரோ, பாட்டில் பானங்களோ வேண்டும். இதமான சூட்டில் பருத்திப் பால் குடிப்பது போல் மடக்கென்று முழுங்கி விடுவார். ‘இன்னும் சில்னஸ் பத்தல’ என்பார். ‘இவருக்கு ஐஸ ஒடச்சுத்தான் வாயில தட்டணும்’. மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

சென்னையில் ஆடம்பரமான குளிர்பானங்களை வேறு வழியில்லாமல் குடித்துப் பழகி வெறுத்துப் போயிருந்தார் கவிஞரும், ஒளிப்பதிவாளருமான நண்பர் செழியன். திருநெல்வேலியிலிருந்து நாங்கள் பாவநாசம் செல்லும் வழியில் திடீரென செழியனுக்கு ஓர் ஆசை தோன்றியது. ‘ ஏங்க, காளி மார்க் பவண்டோ குடிச்சு ரொம்ப வருஷமாச்சு. இங்கெ கெடைக்கும்ல?’ என்றார். அப்போது நாங்கள் காரை நிறுத்திவிட்டு விக்கிரமசிங்கபுரத்தில் நின்று கொண்டிருந்தோம். உடனிருந்த மீனாட்சி பயலிடம் சொன்னேன். ‘சித்தப்பா, நீங்க இங்கனையே இரிங்க. நான் போயி வாங்கிட்டு வாரேன்’ என்று நகர்ந்தான். ‘எல, கெடைக்கலென்னா விட்டுரு. திருநவேலி போயி பாத்துக்கிடலாம்’ என்றேன். ‘அவாள் ஆசப்பட்டுட்டா. ஒடனெ வாங்கிக் குடுக்கெண்டாமா? பெறகு நம்மள பத்தி என்ன நெனப்பா?’ கொஞ்ச நேரத்தில் இரண்டு பவண்டோக்களோடு வந்து விட்டான். காரில் போகும் போது எங்களுக்கு பெருமாள் கோயில் தீர்த்தம் மாதிரி பேருக்குக் கொஞ்சம் போல கொடுத்து விட்டு, பவண்டோவுடனே வாழ்ந்து கொண்டு பாவநாசம் வரை வந்தார் செழியன்.

‘ரொம்ப நாள் ஏங்கிக்கிட்டு இருந்துருப்பா போலுக்கு’. திரும்பிப் பார்த்து காதுக்குள் ரகசியமாகச் சொன்னான் மீனாட்சி. வயிறு நிறைய பவண்டோவை நிரப்பி விட்டு இரண்டொரு ஏப்பங்களோடு தூங்கியும் போனார் செழியன். பாவநாசம் தாண்டி உள்ளே சொரிமுத்தையனார் கோயில் பாலத்துக்குச் சென்றவுடன் காரை நிறுத்தினோம். ஸ்படிகம் போல் ஓடும் தாமிரபரணியைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் குளிக்கும் ஆசை வந்து விட்டது. குளிப்பதற்கு வாகான இடத்தை மீனாட்சி தேர்வு செய்துச் சொல்ல, ஒவ்வொருவராக ஆற்றுக்குள் இறங்கினோம். ‘சித்தப்பா, மொதல்ல ஒரு முங்கு போட்டிருங்க’ என்றான் மீனாட்சி. அவன் கையைப் பிடித்துக் கொண்டே முங்கி எழுந்தேன். மனம் குதூகலமடைந்தது. ‘எல, இருட்டுற வரைக்கும் குளிப்போம். என்னா?’ என்றேன். எல்லோரும் அவரவர்க்கு வசதியான இடத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள். செழியனை மட்டும் காணவில்லை.

‘செளியன எங்கலெ?’

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மீனாட்சி தூரத்தில் ஒரு திசையைக் காண்பித்து சொன்னான்.

‘சித்தப்பா, அங்கெ பாருங்க’.

தோளில் கிழற்றி போட்டிருக்கும் பேண்டுடன் ஒரு புதருக்குள் ஓட்டமும், நடையுமாகச் சென்று கொண்டிருந்தார் செழியன். கையில் காலியான ஒரு பவண்டோ பாட்டில்.

[email protected]