கருப்பையா பிள்ளையின் இளைய மகன்

‘விஞ்சை விலாஸின் சுவை’ கட்டுரையில் சாலிகிராமத்திலுள்ள ‘திருநெல்வேலி சைவாள் ஹோட்டல்’ பற்றி எழுதியிருந்தேன். அதில் அந்த ஹோட்டல் உரிமையாளரின் இளைய மகன் வேறொரு ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்த விஷயத்தையும் சொல்லியிருந்தேன். இதை படித்த அன்பரொருவர் திருநெல்வேலி ஹோட்டலுக்குப் போயிருக்கிறார். வழக்கமாக அவர் அங்கு போய் சாப்பிடுவதுண்டாம். கருப்பையா பிள்ளையின் மறைவுக்குப் பின் அந்த ஹோட்டலை இப்போது நடத்தி வருபவர் அவரது இளைய மகன். வேறொரு ஹோட்டலில் வேலை செய்வதாகச் சொல்லப்பட்டவர் இந்த ஹோட்டலை நடத்துகிறாரே என்று அன்பருக்குத் தோன்றியிருக்கிறது. மெல்ல அவரிடம் ‘நீங்க ‘அக்ஷயா ஹோட்டல்ல வேல செஞ்சீங்களோ!’ என்று வினவியிருக்கிறார். கருப்பையா பிள்ளையின் இளைய மகன் அந்தத் தகவலை மறுத்திருக்கிறார். உடனே இவர் கட்டுரையின் அந்தக் குறிப்பிட்ட பகுதி எழுதியவரின் கற்பனை என்று முடிவு செய்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து கருப்பையா பிள்ளையின் இளைய மகன் தானாகவே வந்து ‘ஆமா, கொஞ்ச நாள் அங்கெ வேல செஞ்சேன். ஒங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்டிருக்கிறார்.

‘வார்த்தை’ இதழில் வெளிவந்த ‘விஞ்சை விலாஸின் சுவை’ கட்டுரையில் இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைச் சொன்னவுடன் கருப்பையா பிள்ளையின் இளைய மகன் அந்தக் கட்டுரையைப் படிக்க ஆசைப்பட்டிருக்கிறார். மறுமுறை இவர் அங்கு செல்லும் போது ‘வார்த்தை’ இதழை கொண்டு கொடுக்கவும், அதை வாங்கிப் படித்து ஆனந்தப்பட்ட கருப்பையா பிள்ளையின் மகன், ‘ஒங்களுக்கு என்ன வேணுமோ நல்லா சாப்பிடுங்க’ என்று இவரை உணர்ச்சி பொங்க உபசரித்தாராம். இதை எழுதியவரை நான் பார்க்கணுமே என்று கேட்க, இவரும் தான் அழைத்து வருவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல்களையெல்லாம் பிரபுராம் என்கிற அந்த அன்பரே எனக்கு மெயில் மூலம் சொல்லியிருந்தார்.

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக அந்த ஹோட்டலுக்குச் சென்று வருகிறேன். ‘விஞ்சை விலாஸின் சுவை’ எழுதிய பிறகும் கூட பலமுறை சென்றிருக்கிறேன். திரு.நாஞ்சில் நாடன் அவர்களையும் சமீபத்தில் அங்கு அழைத்துச் சென்றேன். எண்ணெய் தோசையும், ஆம வடையும் சாப்பிடும் போது, ‘ஏ அய்யா, நம்ம ஊர்ல சாப்பிடுற மாதிரில்லா இருக்கு’ என்றார் நாஞ்சிலார். கூடவே ‘இதெல்லாம் வயித்துக்கு ஒண்ணும் பண்ணாது’ என்று சான்றிதழும் வழங்கினார். அன்றைக்கும் கருப்பையா பிள்ளையின் மகனிடம் என்னை நான் காட்டிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் ‘என்னண்ணே, ஆளையே காணோம்’ என்றார் என்னைப் பார்த்து.

சில நாட்களாக ‘திருநெல்வேலி’ ஹோட்டல் பூட்டப்பட்டிருந்தது. நேற்று மாலை நான் சாலிகிராமத்தில் நடந்து கொண்டிருந்தவன் ‘திருநெல்வேலி’ ஹோட்டல் திறந்திருப்பதைப் பார்த்து நுழைந்தேன். கடை கொஞ்சம் நகர்ந்திருந்தது. உள்ளுக்குள் சில பூச்சு வேலைகள் செய்யப்பட்டிருந்தாலும், கடைக்கே அழகு சேர்க்கும் அந்தப் பழைய இருட்டும், வாசனையும் அப்படியே இருந்தன. ‘தோச கொண்டு வரவாண்ணே’ என்று கேட்ட கருப்பையா பிள்ளையின் மகனிடம் தலையாட்டினேன். உள்ளே சென்றவர் போகும் போதே வானொலி ஸ்விட்சை ஆன் செய்து விட்டுப் போனார். உலகமே பண்பலை வரிசையில் சிக்குண்டு ‘சொல்லுங்க, ஒங்க லவ்வருக்கு நீங்க என்ன சொல்ல விரும்புரீங்க’ என்று கேட்டுக் கொண்டு இளிக்க, ‘திருநெவேலி ஹோட்டலின் வானொலி’ ஆல் இண்டியா ரேடியோவின் வழக்கமான சோகக்குரல் அறிவிப்பாளரின் எச்சில் முழுங்கலோடு பழைய பாடல் ஒன்றை ஒலிபரப்பியது. இளையராஜா என்னும் புதிய இசையமைப்பாளர் அறிமுகமாயிருந்த காலத்துக்கு ஒரே நிமிடத்தில் நகர்ந்து நான் மூழ்கியிருந்த போது, கருப்பையா பிள்ளையின் மகன் தோசையுடன் வந்து என் கவனம் கலைத்தார்.

சாப்பிடும் போது எனக்கு முன்னே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த வழுக்கைத்தலை பெரியவர் எழுந்து கைகழுவினார். சில்லறையை எண்ணி கொடுத்துவிட்டு அவர் சென்றுவிட, இப்போது நானும், கருப்பையா பிள்ளையின் மகனும் மட்டும். ‘சாம்பார் ஊத்தட்டுமாண்ணே?’. சாம்பார் ஊற்றிக் கொண்டிருந்தவரிடம் மெல்ல கேட்டேன். ‘ஒங்களப் பத்தி ஒரு பத்திரிக்கைல வந்திருந்துதே’. மூக்குக் கண்ணாடிக்குள் கண்கள் அகல விரிந்தன. ‘ஆமாண்ணே. யாரோ ரொம்ப உன்னிப்பா கவனிச்சு எளுதியிருக்காங்க. அப்பா காலத்துல இருந்தே இங்கெ வந்து போறவங்கன்னு மட்டும் தெரிஞ்சுது. அத படிச்சுட்டு அன்னிக்கு பூரா சந்தோசமா இருந்தேண்ணே’ என்றார்.
நான்தான் அதை எழுதியவன் என்பதைச் சொல்ல எனக்கு தயக்கமாக இருந்ததற்குக் காரணம், அவர் அதை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது சரியாகத் தெரியாததால். திடீரென ‘எல, எங்க குடும்பம் கஷ்டப்பட்டதையெல்லாம் நீ ஊரு பூரா சொல்லி அசிங்கப்படுத்துதியோ’ என்று சொல்லி சாம்பார் வாளியை என் தலையில் கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்ற யோசனை. ஆனால் அவர் தொடர்ந்து அந்தக் கட்டுரையைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். இப்போது சொல்லலாம் என்றால் மற்றுமோர் யோசனை. ஒருவேளை இவர் உணர்ச்சிவசப்பட்டு சாப்பிட்டதற்கு பணம் வாங்க மறுத்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்தேன். சாப்பிட்டு முடித்த பின் கைகழுவி விட்டு, காசும் கொடுத்துவிட்டு வெளியே வரும் போது சொன்னேன். ‘அத நாந்தான் எளுதினென்’. சட்டென்று என் கையைப் பிடித்தார் கருப்பையா பிள்ளையின் மகன்.

கண்கள் கலங்க, ‘அண்ணே, நீங்கதானா அது? ரொம்ப சந்தோஷண்ணே. எங்க அப்பாவப் பத்தி, அம்மாவப் பத்தில்லாம் படிக்கதுக்கு அவ்வளவு இதா இருந்துதுண்ணே.’ வார்த்தைகள் சிக்காமல் திணறினார். ‘பொறந்ததுலேருந்தே மொதலாளியா இருந்துட்டு, அப்பா எறந்ததுக்கப்புறம் வேற வளியில்லாம கொஞ்ச நாள் அந்த கடைல வேல பாத்தேன். அப்பொ கரக்டா நீங்க அங்கெ வந்துருக்கியெ.’ அழுதுவிடுவார் என்று தோன்றியது. அவர் தோளைத் தொட்டு ‘இப்போதான் நல்லா இருக்கீங்களே. அப்பா கடைய நல்லா நடத்திக்கிட்டிருக்கும் போது வேற என்ன வேணும்?’ என்றேன். கண்ணாடிக்குள் கைலியின் நுனியை விட்டு துடைத்தபடி, ‘ ரொம்ப நன்றிண்ணே’ என்றபடி என் கையைப் பிடித்தபடி வாசல் வரை வந்தார் கருப்பையா பிள்ளையின் இளைய மகன்.
[email protected]

திருநவேலி

திருநெல்வேலியை விட்டு எவ்வளவு தூரம் சென்று வாழ்ந்தாலும் ஊரை மறக்க முடியாமல் ஊர்நினைப்பிலேயே வாழும் எத்தனையோ பேரை சந்தித்திருக்கிறேன். திருநெல்வேலிக்காரரான எழுத்தாளர் வண்ணநிலவனால் சென்னைக்கு வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் திருநெல்வேலியை மறக்க முடியவில்லை என்பதை அவர் எழுதும் கதைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ‘சென்னையில் வாழ்வது ஒரு பெரிய வாளை கையில் வைத்துக் கொண்டு சண்டை போடுவது மாதிரி இருக்கிறது. இப்போதே திருநெல்வேலியில் ஏதேனும் ஒரு பலசரக்குக்கடையில் ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு யாராவது வேலை கொடுத்தால் சந்தோஷமாகச் சென்று விடுவேன்’ என்று ஒருமுறை சொன்னார். திருநெல்வேலிக்காரரான பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய ‘புலிநகக்கொன்றை’ நாவலைப் படித்தவுடன் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அப்போது அவர் தில்லியில் இருந்தார். ‘திருநெல்வேலியை விட்டுச் சென்று எத்தனையோ ஆண்டுகள் நீங்கள் தில்லியில் வாழ்ந்து வந்தாலும் தினமும் சுலோச்சனா முதலியார் பாலத்தில் ஏறி ஏறி இறங்குகிறீர்கள் என்பதை உங்கள் நாவலைப் படிக்கும் போது உணர முடிந்தது’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதை மகிழ்ச்சியுடன் ஆமோதித்து பதில் எழுதினார்.

சென்னைக்கு வந்த புதிதில் ஊர் நினைப்பு வந்து வாட்டும்போதெல்லாம் ரொம்பவும் சிரமப்படுவேன். சாலிகிராமத்திலிருந்து கிளம்பி பாரிமுனை திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப் பேரூந்து நிலயத்துக்குச் செல்வேன். அப்போதெல்லாம் கோயம்பேடு பஸ்நிலையம் வந்திருக்கவில்லை. பாரிமுனைக்குத்தான் செல்ல வேண்டும். திருநெல்வேலிக்குச் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதிக்குச் சென்று அங்கு சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். எப்படியும் எனக்குத் தெரிந்த ஒரு திருநெல்வேலி முகத்தையாவது பார்த்து விடுவேன். இல்லையென்றாலும் காது குளிர ஊர் பாஷையைக் கேட்டுவிட்டு திரும்பி விடுவேன்.

‘ஏட்டி . ..இட்லி பார்ஸல் வாங்கிக்கிடட்டுமா?’

‘இட்லியவே கெட்டி அளுங்கோ . . அதான் நெதமும் முளுங்குதேளே . . ஒரு சப்பாத்தி கிப்பாத்தி வாங்கினா என்ன கொள்ள?’

‘நம்ம வீட்ல இட்லி வாயில வைக்க மாதிரியாட்டி இருக்கு?’

‘நல்லா வருது என் வாயில . . . பெறகு ஈரமண்ணையா திங்கியொ . . . அவிச்சுப் போட்டு முடியல . . . பேசுதாவோ பேச்சு . . எவ நல்லா அவிச்சு போடுதாளோ அங்க போயி நிக்க வேண்டியதானே தட்டத் தூக்கிட்டு . . . . .’

திருநெல்வேலிக்காரர்கள் சுகவாசிகள். தாமிரபரணித் தண்ணீரும், குறுக்குத்துறைக்காற்றும், நெல்லையப்பர் கோயிலும், இருட்டுக் கடை அல்வாவும் லேசில் அவர்களை அந்த ஊரை விட்டு எங்கும் நகர விடாது. ஒரு சில இளைஞர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் கூடுமானவரை அந்த ஊரிலேயே இருக்க முனைவார்கள். எஸ்.எஸ்.எல்.சியோ, பிளஸ்-டூவோ முடித்து விட்டு ஆர்.எம்.கே.வி.யில் வேலைக்குச் சேர்ந்தால் போதும். மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் ராஜா மாதிரி வாழலாம் என்பார்கள். ஆர்.எம்.கே.வி. வேலை என்றால் கண்ணை மூடிக் கொண்டு பெண் கொடுப்பார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை. அப்படி நடந்தும் இருக்கிறது. தினமும் தாமிரபரணிக்குச் சென்று குளியல். சனிக்கிழமை கண்டிப்பாக எண்ணெய்க் குளியல் உண்டு. மாலையில் சின்ன வாழையிலையில் சுற்றிய ஐம்பது கிராம் இருட்டுக்கடை அல்வா. கொசுறாகக் கொஞ்சம் காரச்சேவு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விடவும் பரப்பளவில் பெரிதான நெல்லையப்பர் கோயிலை ஒரு முறை சுற்றி வந்தால், ‘ஆடு மேய்ச்சாப்புலயும் ஆச்சு அண்ணனுக்குப் பொண்ணு பாத்தாப்பிலயும் ஆச்சு’ என்பது போல நடைக்கு நடையும் ஆயிற்று. சாமி கும்பிட்ட மாதிரியும் ஆயிற்று. மேற்படி சமாச்சாரங்களில் சிறு வயதிலிருந்தே முங்கிப் பழகிய மீனாட்சி சுந்தரத்திற்கு பட்டப் படிப்பு முடித்தவுடன் சென்னையில் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மறுத்துவிட்டான். சென்னையில் கிடைக்கும் சம்பளத்தில் இரண்டாயிரம் ரூபாய் கம்மியாகக் கிடைத்தாலும் திருநெல்வேலியில்தான் தனக்கு நிம்மதியாக இருக்க முடியும். அதுவே தனக்கு சந்தோஷம் என்று கறாராகச் சொல்லிவிட்டான். ‘சித்தப்பா, திருநவேலில இருந்தா நமக்கு மனச்சிக்கலும் கெடையாது. மலச்சிக்கலும் கெடையாது. பெறகு என்ன மயித்துக்கு அசலூருக்கு போகணும்ங்கேன் . . என்ன சொல்லுதிய . . . தச்சநல்லூரைத் தாண்டுனாலே நமக்குக் காய்ச்சல் வந்துரும், கேட்டேளா’ என்றான். திருநெல்வேலிக்கு அடுத்த ஊரான தச்சநல்லூர், திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குப் போகும் வழியில் உள்ளது.
நண்பன் குஞ்சு சிறுவயதில், ‘இந்த ஊர்ல மனுஷன் இருப்பானாலெ . . நான்லாம் பெரியவனானா அமெரிக்கா போயிருவேன்’ என்றே சொல்லிவந்தான். அதென்ன அமெரிக்கா என்று கேட்டால், ‘பின்னே . . . என்ன இருந்தாலும் நாங்க பிறாமின்ஸ்ல்லா’ என்று வேண்டுமென்றே நக்கலாக அழுத்திச்சொல்வான். நானும் அவனும் பாளையங்கோட்டையில் ஒரு கடைப்பக்கம் நின்று கொண்டு பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பதினாறு வயது மதிக்கத் தக்க பையன் கடைக்கு வந்தான். நெற்றியிலும் உடம்பிலும் குழைத்துப் பூசப்பட்ட திருநீற்றுப்பட்டைகள். பிராமணப்பையன் என்பது அந்த நெற்றிப்பட்டையிலேயே எழுதிச் சின்னதாக ஒட்டியிருந்தது. வண்ணமாக இருந்தான். அபோதுதான் வேஷ்டி கட்டப் பழகியிருக்கிறான் என்பது அவனது கவனமான நடையிலேயே தெரிந்தது. வந்தவன் நேரே கடைக்காரரிடம் சென்று அங்கு நின்று கொண்டிருக்கும் மற்றவர்களைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் சத்தமாக, ‘கடக்காரரே, கடக்காரரே . . எனக்கு ஒரு எல்.ஜி.பெருங்காய டப்பா ஒண்ணு குடுங்கோளேன்’ என்றான். எனக்கு அவன் அப்படி கேட்டது அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்தது. உடனே குஞ்சு, ‘ ஆமா நீ இப்படி சிரிச்சுக்கிட்டே இரி . . .இன்னும் மூணு வருஷத்துல அம்பி அமெரிக்கா போயிருவான்’ என்றான். அப்போதெல்லாம் அநியாயத்துக்கு குஞ்சு என்னை கிண்டல் பண்ணுவான். தான் அமெரிக்காவிலிருந்து குடும்பத்துடன் விடுமுறைக்கு வரும் போது நான் திருநெல்வேலியில் ஒரு அழுக்கு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வெற்றிலை போட்டபடி திண்ணையில் சாய்ந்திருப்பேனாம். அப்போது அவனுடைய மகனிடம் என்னைக் காட்டி, ‘பாத்தியா . . இவன்லாம் நான் அமெரிக்கா கெளம்பும் போது இப்படி சாஞ்சு ஒக்காந்தவன். இன்னும் எந்திரிக்கவே இல்லை’ என்று சொல்வானாம். காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. வெற்றிலைக்கு பதில் சிகரட் பிடித்தபடி இப்போது திண்ணையில் சாய்ந்தே இருப்பது அவன்தான். நான் எப்போதாவது ஊரூக்குப் போகிறேன்.

பிராமணர்கள் அதிகம் குடியிருக்கும் தெப்பக்குளத் தெருவில் ராமசாமி என்னும் செக்கச்செவேல் நண்பன் ஒருவன் இருந்தான். எங்களை விட ஒன்றிரண்டு வயது சீனியர்.தளதளவென்று உயரமாக இருப்பான். ரஜினி ரசிகன். நெல்லைவாசிகளான பிராமணர்களின் வாயில் பெரும்பாலும் பிராமண பாஷை வராது என்றாலும் ராமசாமியின் வாயிலிருந்து சுத்தமான திருநெல்வேலி பாஷை மட்டுமே கிளம்பும். மறந்தும் வேறு பேச்சு வராது. சொல்றேன் என்பதை நெல்லைக்காரர்கள் சொல்லுதேன் என்பார்கள். வரேன் என்பதை வாரேன் என்பார்கள். ராமசாமி வாரேன் என்பதையும் வருதேன் என்பான். அவனைத் தவிர எனக்குத் தெரிந்து எந்தத் திருநெல்வேலிக்காரனும் வருதேன் என்று சொல்லி நான் கேட்டதில்லை. ராமசாமிக்கும் தச்சநல்லூரைத் தாண்டினால் காய்ச்சல்தான். அது மட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்த யாராவது திருநெல்வேலியை விட்டு வெளியூருக்கு வேலை தேடிச் சென்று விட்டால் ரொம்பவே ஆத்திரப் படுவான். சுவற்றில் அடித்த பந்தாய் எப்படியும் அவர்கள் திரும்பி திருநெல்வேலிக்கே வருவார்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பான். அதன் படியே அவர்களில் யாராவது ஊரை விட்டு இருக்க முடியாமல் திரும்பி ஊருக்கே வந்து விட்டால் ராமசாமிக்கு குஷி அதிகமாகிவிடும். ‘ யோவ், யாரை கேட்டுய்யா திருநவேலியை விட்டுப் போனீரு . . மறுபடியும் ஒம்ம ஊருக்குள்ளெ சேக்கணும்னா நெல்லையப்பர் கோயில் வாசல்ல உக்காந்து நீரு செருப்பு தொடைக்கணும்’ என்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்வான். ராமசாமி இப்போது இருப்பது பட்டுக்கோட்டையில்.

திருநெல்வேலியை விட்டு பட்டுக்கோட்டைக்குச் சென்றுவிட்ட ராமசாமி சுத்தமாக திருநெல்வேலியையும், அதைவிட ஆச்சரியமாக திருநெல்வேலி பாஷையையுமே மறந்து விட்டதாக எல்லோரும் சொன்னார்கள். சில நாட்களுக்கு முன் எனது மொபைல் ஃபோனுக்கு தெரியாத வெளியூர் லேண்ட்லைன் நம்பரிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. யாராக இருக்கும் என்று தயங்கியபடியே ஹலோ என்றேன்.

‘சௌக்யமா? நான் ராமசாமி’

‘தெரியலியே . . . எ . .ந்த ராமசாமி?’

‘தெப்பக்குளத்தெரு ராமசாமி’

உற்சாகமானேன்.

‘ராமசாமி . . . ஏ அப்பா . . .எவ்வளவு நாளாச்சு . . .சௌக்கியமா?’

‘நல்லா இருக்கேன். நான் இப்போ பட்டுக்கோட்டையில இருக்கறேன். குஞ்சுக்கிட்டேதான் நம்பர் வாங்கினேன். ரொம்ப நாளாச்சுல்ல நாம பேசி’.

ஸ்டைலாக ராமசாமி பேசியது எனக்கு அந்நியமாக இருந்தது. மகிழ்ச்சி அனைத்தும் வடிந்து சம்பிரதாயமாகப் பேசினேன்.

‘திருநவேலிக்கு இப்போதைக்குப் போகலியா ராமசாமி?’

‘ம் ம் ம் . . .இங்கேயிருந்து திருநெல்வேலிக்கு எங்கே போறது? ரொம்ப நாளாச்சு’.

திருநவேலியை திருநெல்வேலி என்று சுத்தமாகச் சொல்லும் அளவுக்கு ராமசாமி மாறிவிட்டானே என்று வருத்தமாக இருந்தது. பேச்சை முடிக்கும் எண்ணம் வந்து விட்டது.

‘அப்புறம் ராமசாமி . . .மெட்றாஸ் பக்கம்லாம் வாரதில்லையா . . ‘
‘ஒரு ·பங்ஷனுக்கு வரவேண்டியதிருக்கு. வரும்போது ஃபோன் பண்ணிட்டு கண்டிப்பா நேர்ல பாக்க வருதேன்’.

எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

[email protected]

வாசம்

கிறிஸ்டி டீச்சர் வீட்டுக்கு டியூஷனுக்குப் போகும் போதெல்லாம் டெட்டால் வாசமடிக்கும். டீச்சரின் தகப்பனார் ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக வேலை பார்த்தார். அதனால்தான் டெட்டால் வாசம். இத்தனைக்கும் என் கண்ணுக்கு டெட்டாலோ, வேறேதும் மருந்துகளோ தட்டுப்பட்டதேயில்லை. ராதாகிருஷ்ணன் டாக்டரின் ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலுக்குக் காட்டப் போகும் போது அங்கு கிறிஸ்டி டீச்சர் வீட்டுவாசமடித்தது. அப்போதுதான் அது ஆஸ்பத்திரி வாசம் என்று எனக்கு பிடிபட ஆரம்பித்தது. ஹைஸ்கூலுக்குப் போன பிறகு நான் கிறிஸ்டி டீச்சரைப் பார்க்கவேயில்லை, இன்றுவரை. ஆனால் ஒவ்வொரு ஆஸ்பத்திரி வாசத்திலும் காட்டன் புடவையணிந்த, ஒல்லியான, எப்போதும் பவுடர் பூசிய கிறிஸ்டி டீச்சரின் முகம் என் நினைவுக்கு வந்து போகிறது.

நண்பன் குஞ்சுவின் வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளி இருக்கிறது, இருட்டு லாலாக்கடை மாமாவின் வீடு. அவர் வீட்டுக்கு அருகேயே இன்னொரு வீட்டில்தான் இருட்டுக் கடை அல்வா தயாராகிறது. குஞ்சுவின் வீட்டைத் தாண்டும் போதே நெய்கலந்த ஒரு இனிப்பு வாசம் சுற்றிச் சுற்றி வரும். பழக்கப்பட்டு விட்டதால் அங்குள்ள ஜனங்கள் அந்த வாசத்தை சட்டை பண்ணுவதில்லை. அந்த வாசத்தைக் கடந்து செல்பவர்களில் யாரேனும் ‘ஏ எப்பா, என்னமா மணக்கு’ என்று மூச்சை இழுத்துச் சொல்லி வாசம் எங்கிருந்து வருகிறது என்று திரும்பித் திரும்பிப் பார்த்து சென்றார்களானால் அவர்கள் வெளியூர்க்காரர்கள் என்று எங்களுக்கு தெரிந்துவிடும். இருட்டு லாலா மாமாவிடம் ஒரு நாளும் அல்வா வாசமடித்து நாங்கள் பார்த்ததில்லை.

வேறொரு லாலாக்கடையில் சரக்கு போடும் நண்பன் சந்திரஹாஸன் தூரத்தில் வரும்போதே டால்டா வாசம் நம் மூக்கை வந்து முட்டும். ‘எல, கட்டையன் வாரான் போலுக்கு’ என்பான் குஞ்சு. இத்தனைக்கும் சந்திரஹாஸன் வேலை முடிந்து வீட்டுக்குப் போய் நன்றாகக் குளித்து முழுகி வேறு உடை அணிந்துதான் வருவான். டால்டா வாசம் அவன் உடம்புடனே தங்கிவிட்டது. ‘எல, இவன் என்னத்தெ குளிச்சாலும் இந்த டால்டா வீச்சம் போக மாட்டக்கெ’. அவன் காதுக்குக் கேட்டால் கஷ்டப்படுவான் என்பதால் நாங்கள் எங்களுக்குள்ளே பேசிக் கொள்வோம்.

சுருட்டு வாசத்தை எங்களுக்கு முதன்முதலில் காண்பித்தது சண்முகம் பிள்ளை. பேப்பர் போடும் சண்முகம் பிள்ளை நடந்தே திருநெல்வேலியைச் சுற்றி வருபவர். திருநெல்வேலியின் எல்லா தெருக்களிலும் அவரை பார்க்கலாம். மடித்து கட்டிய வேட்டியும், மேல் துண்டும் அணிந்திருப்பார். நெஞ்சோடு அணைத்துப் பிடித்திருக்கும் பேப்பர், புத்தகங்கள். அவர் மார்போடு மார்பாக எங்களின் நாயகர்களான இரும்புக்கை மாயாவி, ரிப் கிர்பி, டெஸ்மாண்ட், மந்திரவாதி மாண்ட்ரேக், லொதார், சுட்டிக் குரங்கு கபிஷ், வேட்டைக்காரன் மாத்தையா என எல்லோரும் சாய்ந்திருப்பர். சண்முகம் பிள்ளையின் வாயில் எப்போதும் சுருட்டு புகைந்து கொண்டிருக்கும். அதை பாதியைச் சவைத்துத் தின்றிருப்பார். பக்கத்தில் வந்தால் நாற்றம் முகம் சுளிக்க வைக்கும்.

‘அண்ணாச்சி, இந்த நாத்தத்தை எப்படி குடிக்கியெ? சை . . .’

மூக்கைப் பொத்திக் கொண்டு கேட்போம்.

‘நாத்தம் ஒங்களுக்குத்தானடே!’

சுருட்டின் நுனியைச் சவைத்துக் கொண்டே சொல்வார்.

வாழ்க்கையில் காபி குடித்து பழக்கமில்லாத எனக்கு காபி வாசமென்றால் அது ஆறுமுகச் சித்தப்பாதான். நரசுஸ் காபிக்கடையின் மேனேஜராக நீண்ட நாட்கள் வேலை பார்த்த ஆறுமுகம் சித்தப்பாவை நாங்கள் அழைப்பதே ‘நரசுஸ் சித்தப்பா’ என்றுதான். அந்த காலத்தில் நெல்லையில் புகழ் பெற்ற நாடக நடிகர். கலாட்டா கல்யாணம் படத்து சிவாஜி சாயலில் இருப்பார். பெரும்பாலும் வேட்டி சட்டைதான் உடையென்றாலும் பேண்ட் ஷர்ட்டும் அணிவதுண்டு. பெயருக்கேற்ப சித்தப்பாவின் வேட்டி சட்டையெங்கும் காபி மணக்கும். அதுவும் நரசுஸ் காபி. ‘சித்தப்பாவை பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு ஒரு தம்ளர்ல சூடா வெந்நி குடிச்சாலும் காபி குடிச்சாப்புல இருக்கும்லா’. நைஸாகச் சீண்டுவான் கணேசண்ணன். ‘ஆனா ஒன்கிட்ட வந்தாலே கிரகப்பிரவேசத்துக்குப் போன மாதிரிலாடே இருக்கு’ என்பார் நரசுஸ் சித்தப்பா. கணேசண்ணன் நன்றாகப் படித்து ஏதேதோ வேலை பார்த்து இப்போது வீடுவீடாக வெள்ளையடித்து வருகிறான். சுண்ணாம்பு, பெயிண்ட் என கலந்து கட்டி எப்போதும் ஒரு புது வீட்டுவாசம் அவன் மீது அடிக்கும்.

கோடை விடுமுறைக்கு ஆழ்வார்குறிச்சியில் அம்மையின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் நெல் அவித்துக் கொண்டிருப்பார்கள். வெயிலோடு இந்த புழுங்கல் வாடையும் சேர்ந்து கொண்டு ஒருவித கதகதப்பான மணம் வீசும். இப்போது அங்கு நெல்லெல்லாம் அவிப்பதில்லை. ஆனால் அந்த வாசம் மட்டும் அந்த வீட்டிலேயே தங்கிவிட்டதாகத்தான் தெரிகிறது. கல்யாண வீடுகளின் ஆக்குப்புரைகளில் வீசும் சோற்று வாசமும், குழம்புக் கொதியின் வாசமும் எனக்கு ஏனோ நெல் அவிக்கும் வாசத்தோடு சேர்ந்து ஆழ்வார்குறிச்சியின் ஞாபகத்தை ஏற்படுத்தும்.

நண்பன் ராமசுப்ரமணியனின் வீட்டுக்கு எப்போது சென்றாலும் சாம்பிராணி வாசமடிக்கும். அவனது ஆச்சிக்கு சாம்பிராணி வாசமில்லையென்றால் வீட்டில் இருக்கவே பிடிக்காது என்பார்கள். அவ்வளவு பெரிய வீட்டில் ஏதோ ஒரு மூலையில் கொளுத்தி வைக்கப்பட்டிருக்கும் சாம்பிராணியின் புகை வீடு முழுக்க தவழ்ந்து வரும். இப்போது அந்த வீட்டை விற்றுவிட்டார்கள். வீட்டின் முகத்தைத் திருத்தி உள்ளேயும் ஏதேதோ வாஸ்து மாற்றங்கள் செய்து பழமையை இழந்து அந்த வீடு அதே இடத்தில் வேறொரு வீடாய் நின்றுகொண்டிருக்கிறது. உள்ளே சாம்பிராணி வாசம் அடிக்கிறதா என்று போய் பார்க்கவில்லை.

திருநெல்வேலியில் அப்போதெல்லாம் கையிலுள்ள டேப்பைத் தட்டி பாடியபடியே ஒரு சாய்பு வருவார். நீண்ட தாடியுடன் அநேகமாக பச்சை நிற நீள அங்கியும், கூம்புவடிவக் குல்லாவும் அணிந்து கொண்டு வீடு வீடாக வந்து வாசலில் நின்று பாடுவார். காசு கொடுத்தவுடன் தன் தோள்ப்பையிலிருக்கும் விதவிதமான குச்சிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து சிறுவர்களுக்குக் கண்மை வரைந்து விட்டு செல்வார். நெருக்கமாக அவரிடம் கண்மை வரைவதற்கு கண்ணைக் காட்டிக் கொண்டு நிற்கும் போது ஒரு வாசமடிக்கும். அப்போது அது என்ன வாசமென்று தெரியவில்லை. ‘கண்மைசாய்பு’ வாசம் என்றுதான் அதற்கு பெயர் வைத்திருந்தோம். பின்னர் வெகுகாலத்துக்குப் பின் சர்வோதய சங்கத்தில் ஜவ்வாது வாங்கியபோதுதான் ‘கண்மைசாய்பு’ வாசத்தின் உண்மையான பெயர் தெரிய வந்தது.

குட்டிக்குரா பவுடரை இப்போது நான் எங்குமே பார்க்கவில்லை. சின்ன வயதில் அந்தப் பவுடரின் வாசத்துடனேயேதான் வளர்ந்தேன். ஸ்டேட் பேங்கில் வேலை பார்க்கும் எனது பெரியண்ணன் குட்டிக்குரா பவுடர்தான் போடுவான். எல்லோரையும் போல முகத்துக்கு மட்டுமல்ல. முகம், கழுத்து, கை, கால் என குட்டிகுராவில் குளித்து எழுவான். அவன் பேங்க் முடிந்து தெரு முக்கு திரும்பும் போதே ‘பெரியண்ணன் வாரான்’ என்று சொல்லிக் கொள்வோம். வயதாக ஆக அவனது முடி முழுதும் கொட்டிப் போக பிறகு குட்டிக்குரா அவனது தலையிலும் இடம் பிடித்து விட்டது. அண்ணனின் புண்ணியத்தில் இத்தனை ஆண்டுகளில் இப்போது நினைத்தாலும் குட்டிக்குரா பவுடரின் வாசத்தை என்னால் உணர முடிகிறது.

ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று என் வீட்டுக்கு வந்த உதவி இயக்குனர் தியாகு ‘ஸார், கீழே யார் வீட்டிலயோ இன்னைக்கு மீன் கொழம்பு’ என்றான். குஞ்சுவும் இப்படித்தான். யார் வீட்டில் உப்புமா கிண்டினாலும் தெருவில் நடந்து போகும் போதே சொல்லிவிடுவான். இதைவிட கொடுமை, எங்காவது கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தாலே அவன் மூக்கு கண்டுபிடித்துவிடும். அந்த விதத்தில் அவன் ஒரு உசத்தியான நாய். தாமிரபரணியில் குளிக்கும் போது யார் யார் என்னென்ன சோப் போடுகிறார்கள் என்பதை பார்க்காமலேயே சொல்லும் திறன் அவன் மூக்குக்கு உண்டு. மீனாட்சி ஒரு படி மேல். ‘சித்தப்பா, அந்த அக்கா தலைக்கு வேப்பெண்ணெ தேச்சிருக்கா’ என்பான். தாமிரபரணியை நினைவு கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும், லை·பாய் சோப் வாசத்தோடுதான் தாமிரபரணி என் கண்முன் ஓடுகிறது. கூடவே கோபால் பல்பொடி வாசமும். மேலுக்கும், வேட்டிக்கும் லை·பாய் சோப்பையே பயன்படுத்தும் மனிதர்களை நான் அதிகம் தாமிரபரணியில் பார்த்திருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு கல்யாண வீட்டில் கிறிஸ்டி டீச்சரைப் பார்த்ததாக குஞ்சு சொன்னான். முன்னை விட இப்போது டீச்சர் குண்டாகியிருப்பதாகவும், உடன் வளர்ந்த இரண்டு பையன்கள் இருந்தனர் என்றும் சொன்னான். தன்னை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லையென்பதால் தான் போய் அவர்களிடம் பேசவில்லை என்றான். ‘நீ எப்பவும் சொல்லுவியே, ஆஸ்பத்திரி வாட. அது அவங்ககிட்டெ இல்லயே’ என்ற குஞ்சுவிடம், ‘அப்படின்னா அது கிறிஸ்டி டீச்சர் இல்ல’ என்றேன்.

[email protected]

வலி

இரண்டு தினங்களுக்கு முன் காலை எட்டு மணியளவில் எழுத்தாளர் வ.ஸ்ரீனிவாசன் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார். சாதாரணமாக எப்போதும் பேசும் தொனியில் ‘சொல்லுங்க ஸார்’ என்றேன். ஆனால் எதிர்முனைக்குரல் பதற்றமாக இருந்தது.

‘சுகா, இங்கெ பாரதிமணி ஸாரை பாக்க வந்தேன். ஸார் கால்வலியால துடிச்சிக்கிட்டு இருக்கார். அவரால உக்கார, நிக்க, படுக்கன்னு எதுவுமே செய்ய முடியலெ. ரொம்ப சிரமப்படுறார்’.

‘ஒடனெ வரென் ஸார்’.

ஃபோனை வைத்த பதினைந்தாவது நிமிடத்தில் நானும், நண்பர் மனோவும் பாரதி மணி ஸார் வீட்டுக்குச் சென்றோம். (நான், வ.ஸ்ரீ, மனோ, பாரதிமணி அனைவரும் ‘எழுத்தும், எண்ணமும்’ குழுமத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்கள்) அதற்குள் வ.ஸ்ரீ ஸார் மாத்திரை வாங்கிக் கொடுத்திருந்தார். எங்களைப் பார்த்ததும் பாட்டையாவுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. இருந்தாலும் ‘என்ன இது. ஒங்க எல்லாரையும் சங்கடப்படுத்துறேனே’ என்றார். ஆஸ்பத்திரிக்கு அழைத்தோம். ‘பொறுத்துக்கக் கூடிய வலிதான். இப்போ அவசியமில்லை’ என்றார். சுமார் ஒருமணிநேரம் அவருடன் இருந்தோம். உயிர்மை வெளியிட்டிருக்கும் பாரதிமணி அவர்கள் எழுதிய ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகம் சுடச்சுட வந்திருந்தது. அதில் அவரைப் பற்றி அடியேன், வ.ஸ்ரீ, மனோ மூவரும் எழுதியிருந்தோம். எழுதிய பொய்க்கு தண்டனையாய் ஆளுக்கொரு புத்தகம் கொடுத்தார். வணங்கி வாங்கிக் கொண்டோம். கலை, இலக்கியம், இசை என பல்வேறு திசைகளில் எங்கள் உரையாடல் பயணித்தது. பேச்சு சுவாரஸ்யத்தின் நடுவே பாட்டையா கால் மடக்கி உட்கார்ந்திருந்ததை கவனித்தோம். ‘அட, இப்பொ என்னால உக்கார முடியுதே’ என்றார். பேச்சில் உற்சாகம் மேலும் கூடியது. அன்றைக்கு நாங்கள் பேசிச் சிரித்த அனைத்து சமாச்சாரங்களும் ‘கழுத்தும், கன்னமும்’ குழுமத்தில் வரவேண்டியவை.

‘ஒங்க காலுக்கு ஒண்ணும் இல்லெ ஸார். எதுனாலும் எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க. எந்த ராத்திரியும் எங்கள கூப்பிடறதுக்கு நீங்க தயங்க வேண்டாம்’ என்று சொல்லி விட்டு கிளம்பினோம். ‘ஆகா, உங்களுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்’. பாட்டையாவின் குரல் தழுதழுத்தது. மாலையில் மறுபடியும் தொலைபேசிமூலம் விசாரித்துக் கொண்டோம். ‘இப்போ கொஞ்சம் தேவலை’ என்றார். நேற்று காலை மறுபடியும் வ.ஸ்ரீ அவர்களிடமிருந்து ஃபோன். மணிஸார் இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டிருக்கிறார் என்று தகவல் சொன்னார். மீண்டும் நானும், மனோவும் கிளம்பிச் சென்றோம். அழைப்பு மணி அழுத்தி காத்து நின்றோம். கதவை வந்து திறப்பதில் கூட சிரமம் இருந்தது பாட்டையாவுக்கு. ‘என்னால முடியலப்பா. என் கால் என் வசமில்ல’ என்றார். சுவர் பிடித்தே தன் அறைக்குச் சென்றார். சற்று நேரத்தில் வ.ஸ்ரீ அவர்கள் தன் காரை எடுத்துக் கொண்டு வந்துவிட பாட்டையாவை எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்று விவாதித்தோம். சில நண்பர்களிடம் ஃபோன் மூலம் யோசனை கேட்டுக் கொண்டிருந்தோம்.

‘நீங்கல்லாம் எனக்குன்னு கெளம்பி வரேளே. எத்தன பேருக்கு இந்த கொடுப்பினை கெடைக்கும்’. பாட்டையா நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார். ‘ஒரு மார் வலி, கீர்வலின்னா கௌரமாவாது இருக்கும். கால்வலில செத்துப் போறதுன்னா கேவலம் இல்லையா’. இப்படி இருந்தது அவரது பேச்சு. ‘சினிமாலதான் ஆஸ்பத்திரி ஸீனெல்லாம் பாத்திருக்கேன். நானா ஆஸ்பத்திரில இத்தனை வருஷத்துல ஒரு நாளும் அட்மிட் ஆனதேயில்ல’ என்றார். ‘இப்பவுமெ ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு நான் சம்மதிக்கறதுக்கு காரணம் அடுத்த வாரம் எனக்கு ஷூட்டிங் இருக்கு. நம்மள நம்பி படம் எடுக்கறான். அவன் செரமப்படக்கூடாது பாரு’ என்றார். ரஜினிகாந்துக்கு அப்புறம் இவருக்கு சினிமா மீது இருக்கும் தொழில் பக்தியை நினைத்து கண்ணீர் விட்டேன். ‘அளாதெ சுகா, எனக்கு ஒண்ணும் ஆகாது’ என்றார் பாட்டையா.

அதுவரை பரணி ஆஸ்பத்திரியா, விஜயாவா என்பது குறித்து எங்களால் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். ‘ஏம்பா, ஆபரேஷன் தியேட்டருக்குள்ளெல்லாம் சினிமாவுல வர்ற மாதிரி எல்லாரும் முகமூடி போட்டுக்கிட்டு பயமுறுத்துவாளா என்ன’ என்றார். ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல ஸார். ஒரு அரை மணிநேரம் டென்ஷனுக்கு பெறகு டாக்டர் வெளியில வந்து பெண் குளந்த பொறந்துருக்குன்னு சொல்வார்’ என்றார் வ.ஸ்ரீ. ‘அத மனோக்கிட்டே வந்து சொல்லி கைகுடுத்து கங்கிராஜுலேஷன்ஸ்ன்னு சொல்வாரில்லையா ஸார்’ என்றேன் நான். சிரித்துக் கொண்டே மனோ கிளம்பி எங்களுக்கு முன்னால் விஜயா ஹெல்த் சென்டர் சென்றார்.

சிறிது நேரத்தில் மனோ டாக்டரிடம் பெயரை பதிவு செய்து விட்டு ஃபோன் பண்ணவும் நானும், வ.ஸ்ரீ அவர்களும் பாட்டையாவை மெல்ல மாடிப்படியிலிருந்து இறக்கிக் கூட்டி வந்து வ.ஸ்ரீ அவர்களின் புதிய சான்ட்ரோ காரில் ஏற்றினோம். வடபழனி பஸ்ஸ்டாண்ட் அருகில் வந்தவுடன் என்னுடைய வழக்கமான திசையறிவில் விஜயா கார்டனுக்குள் காரை திருப்பச் சொன்னேன். திசை விஷயத்தில் எனக்கு தாத்தாவான வ.ஸ்ரீயும் உடனே காரை விஜயா கார்டனுக்குள் திருப்ப எத்தனித்தார். எதற்கும் கேட்டு விடுவோமே என்று மனோவுக்கு ·போன் பண்ணினேன். ‘சரியா போச்சு. ஏன் சுகா, அவர என்ன ரெக்கார்டிங் தியேட்டருக்கா கூட்டிக்கிட்டு போகப் போறோம்? அடுத்த லெஃப்டுல திரும்புங்கய்யா’ என்றார் கடுப்புடன்.

விஜயா ஹெல்த் சென்டரை முதன்முறையாக சுற்றிப் பார்த்தபடியே உள்ளே சென்று பாட்டையாவை உட்கார வைத்தோம். வ.ஸ்ரீ அவர்கள் பாட்டையாவுடன் டாக்டரின் அறைக்குள் செல்ல, நானும், மனோவும் வராந்தாவில் நகம் கடித்துக் காத்திருந்தோம். ஸ்கேன் எடுக்கச் சொல்லியிருப்பதாக ஒரு சீட்டுடன் இருவரும் வெளியே வந்தனர். எதிரே இருக்கும் ஸ்கேன் சென்டருக்குச் சென்றால் அங்கு இரண்டு மணிநேரம் காத்திருக்கச் சொன்னார்கள். மணி மதியம் ஒன்றைத் தொட இருந்தது. கேன்டீனுக்குச் சென்று வரலாம் என்று கிளம்பினோம். ஒரே காம்பவுண்ட்டுதான் என்றாலும் கேன்டீனுக்கு கொஞ்சம் நடக்க வேண்டியிருந்தது. பாட்டையாவால் முடியவில்லை. ஒரு ஒரமாக உட்கார்ந்து பைப்பைப் பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்து விட்டார். ‘ஸார், ஹாஸ்பிட்டல் ஸார்’ பதறினேன். ‘ஸோ வாட்?’ என்றார் எகத்தாளமாய். ஒருமாதிரியாக கிளப்பிக் கூட்டிச் சென்றோம். போகும் வழியில் ஒரு வீல் சேர் இருந்தது. இதில் வைத்து தள்ளிச் சென்று விட்டால் என்ன? என்றார் மனோ. அங்கிருக்கும் செக்யூரிடி அதற்கு அனுமதிக்க மறுத்தார். பாட்டையாவோ ‘மனோகர் வேற ஆச காட்டிட்டான். நான் இதுவரைக்கும் இந்த வண்டில போனதே இல்ல. வந்தா நான் இதுலதான் வருவேன்’ என்று அடம் பிடிக்க ஆரம்பித்தார். இதென்னடா வம்பாப் போச்சு என்று வ.ஸ்ரீ அவர்கள் உள்ளே சென்று அனுமதி வாங்கி வந்தார்.

மூணாங்கிளாஸ் பையன் ரங்கராட்டினம் ஏறுவது போன்ற முகபாவத்துடன் சந்தோஷம் பொங்க பாட்டையா வீல் சேரில் அமர, மனோ அதைத் தள்ள ஆரம்பித்தார். நானும், வ.ஸ்ரீ அவர்களும் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ பாடியபடியே பின் தொடர்ந்தோம். ‘சுகா, நானும் எத்தனையோ வண்டில போயிருக்கென். இந்த வண்டி ரொம்ப நல்லாயிருக்கு. எவ்வளவுன்னு கேட்டு ஒண்ணு வாங்கி போடு. ஆனா டிரைவர் மட்டும் மனோதான். சும்மா சொல்லக் கூடாது. நல்லாவே ஓட்டறான்’ என்றார் பாட்டையா. மனோ சிரித்தபடியே தள்ளிச் செல்ல கையில் சாப்பாட்டுக் கூடையுடன் ஒரு பெண்மணி எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே தெலுங்கில் ஏதோ முணுமுணுத்தபடி கடந்து சென்றார்.

கேன்டீனில் அதிகக் கூட்டமில்லை என்றாலும் வாகாக ஒரு இடம் பார்த்து அங்கு அமர்ந்து கொண்டார் பாட்டையா. காலையில் காபி மட்டும் குடித்திருந்ததால் தனக்கு ஒரு தயிர் சாதம் வேண்டும் என்றார். மனோ காலையிலேயே சாப்பிட்டுவிட்டதால் தனக்கு அவ்வளவாக பசியில்லை என்று சொல்லி ஒரு தயிர் சாதமும், குண்டாக ஒரு சமோசாவும் வாங்கிக் கொண்டிருந்தார். எனக்கும் தனக்கும் கூல்டிரிங்க்ஸ் வாங்க வ.ஸ்ரீ அவர்கள் சென்று விட, நான் மட்டும் பாட்டையாவுடன் அமர்ந்திருந்தேன். சுற்றும் முற்றும் பாட்டையா பார்த்தார். நான் பயந்த மாதிரியே சட்டென்று பைப்பைப் பற்ற வைத்தார். அதற்குள் ஒருவன் ஓடி வந்து ‘ஸார், இங்கெல்லாம் சிகரெட் குடிக்கக் கூடாது’ என்றான். ‘இது சிகரெட் இல்லெப்பா’ என்று வம்பு பண்ணினார் பாட்டையா. ‘ஐயா, கொஞ்ச நேரந்தான் அந்த எளவெ குடிக்காம இருங்களென். ஒங்களுக்கு கால் வலின்னு காமிக்க வந்துருக்கோம். அத மறந்துராதீங்க’ என்றேன்.

மனோ இரண்டு பிளேட்டுடன் வந்து அமர்ந்தார். வ.ஸ்ரீ இரண்டு அமுல் ரோஸ் மில்க் பாட்டில்களுடன் வந்தார். ஒன்றை வாங்கிக் கொண்டேன். ‘ஸார், நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து மொதமுறையா குடிக்குறோம் இல்லையா?’ என்றேன் வ.ஸ்ரீயிடம். ‘ஆமா சுகா. சியர்ஸ்’ என்று பாட்டிலை பாட்டிலால் இடித்து கண் சிமிட்டினார் வ.ஸ்ரீ. மேஜையில் இருக்கும் தன் மெடிக்கல் ரிப்போர்ட் ஃபைலின் மேல் ஒரு கையை வைத்துக் கொண்டு தயிர் சாதம் சாப்பிட ஆரம்பித்த பாட்டையா எங்களைப் பார்த்து வாய் விட்டு சிரித்தார். அவருக்கு வலி சரியாகிவிடும் என்று தோன்றியது.

[email protected]

சின்னப்பையன்


சரவணன் என் பால்ய சினேகிதன். தற்போது திரைப்பட விநியோகஸ்தர். படப்பிடிப்பிற்கான சில லொக்கேஷன்கள் தேர்வு செய்ய திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அவனுடன் அலைந்து கொண்டிருந்தேன். மூலக்கரைப்பட்டியைத் தாண்டி முனைஞ்சிப்பட்டிக்குள் கார் நுழைந்த போது தற்செயலாக என் மாமனார் ‘பெங்களூருவிலிருந்து’ போனில் அழைத்தார். நான் முனைஞ்சிப்பட்டியிலிருக்கிறேன் என்பதை சொன்னவுடன் உற்சாகமாகி பக்கத்திலிருக்கும் கஸ்தூரிரங்கபுரம் என்னும் கிராமத்தைப் பற்றிச் சொல்லி அங்கு சென்று பார்த்தால் நான் எதிர்பார்க்கிற சில இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொன்னார். அதோடு நிற்காமல் அங்கு கணபதி என்று ஒரு பையன் இருப்பதாகவும், பிறருக்கு உதவுவதில் அவன் அதிக ஆர்வம் காட்டுபவன் என்றும் சொல்லி அவனிடம் தன் பெயரை சொன்னால் தேவையான உதவிகளை உற்சாகமாகச் செய்வான் என்றும் சொன்னார்.

கஸ்தூரிரங்கபுரம் சின்ன கிராமம். அழகாக இருந்தது. மாமனார் சொன்ன பையன் கணபதியின் முகவரியைக் கண்டுபிடிப்பதில் அதிக சிரமம் இருக்கவில்லை. சரியாக கணபதியின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு ‘அம்மா’ என்றேன். ஒரு வயதான ஆச்சி வந்தார்கள்.

யாரு வேணும் . . .

ஆச்சி. . . கணபதி இல்லீங்களா . . .

கேக்கல . . .

ஆச்சிக்கு காது கேட்கவில்லை. சரவணன் உடனே சத்தமாக ‘கணபதி இருக்கானா’ என்றான். யாரு . . ஆச்சியின் குரலில் ஒரு மாற்றம் தெரிவதை கவனிக்காத சரவணன்,’கணபதி இருக்கானா, வெளியே போயிருக்கானா ஆச்சி’ என்றான். ஆச்சி உடனே கடும் கோபம் கொண்டு, ‘வாரியல கொண்டு அடி . . ஆருல நீ . .. எங்கெருந்து வாரே . . ஒரு மரியாத வேண்டாம் . . . சின்னப் பயவுள்ள’ என்றார்கள். சரவணன் திகிலடைந்து என்னைப் பார்க்க, நான் என்ன செய்வதென்று புரியாமல் அவனைப் பார்க்க, உள்ளிருந்து ஒரு தாத்தா வந்து, ‘வாங்க யாரு நீங்க, நான்தான் கணவதி’ என்றார். திக்கித்திணறி என் மாமனாரின் பெயரை சொல்லி நான் அவருடைய மருமகன் என்றேன். கணபதித் தாத்தா உடனே பிரகாசமாகச் சிரித்து ‘சரியாப் போச்சு. . . அவன் என் கிளாஸ்மேட்லா . . .உள்ளே வாங்க மருமகனே’ என்றார். ஆச்சியை காபி கொடுக்க சொன்னார். எங்களைப் பார்த்து முறைத்துக் கொண்டே ஆச்சி உள்ளே சென்றார்கள். பாயை எடுத்துப் போட்டு உட்காரச் சொன்னார்,கணவதித் தாத்தா. தானும் உட்கார்ந்து கொண்டார். ஆச்சி வந்து காப்பி கொடுத்தார்கள். குறிப்பாக சரவணனைப் பார்த்து மருந்துக்கும் சிரிக்காமல். வாங்கும் போது சரவணனின் கைகள், ஆச்சியின் கைகளைவிட நடுங்கின. காபியை குடிப்பதில் சரவணனுக்கு சந்தேகம் கலந்த பயம் இருந்தது. ஒரு மடக்கு குடித்த பிறகு அது காப்பிதான் என்பதை உறுதி செய்து கொண்டு மிச்சத்தையும் குடித்தான்.

இதே போல் ஒரு முறை அம்மையைப் பெற்ற தாத்தாவைப் பார்க்க கிராமத்துக்கு போயிருந்தேன். பேரனைப் பார்த்த மகிழ்ச்சி இருந்தாலும் தாத்தாவின் முகத்தில் எப்போதும் காணப்படும் மலர்ச்சி இல்லை. பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அதற்கான காரணம் தெரிய வந்தது. தாத்தாவின் ஒன்றுவிட்ட தம்பி ‘பரமசிவத்தின்’ மரணத்துக்கு போய்விட்டு அப்போதுதான் தாத்தா வந்திருக்கிறார். இறந்து போன தாத்தாவை எனக்கு தெரியுமென்பதால் அதிர்ச்சியும்,சோகமும் அடைந்தேன். ஆறுதலாக கேட்பதாக நினைத்துக் கொண்டு ‘பரமசிவம் தாத்தாவுக்கு வயசு இருக்கும்லா’ என்றேன். . சே . . அவன் எம்புட்டு பய . . .சின்ன வயசுதான்’ . .என்று சொன்னார் தாத்தா. எனக்கு தெரிந்து பரமசிவம் தாத்தாவுக்கு எழுபத்தைந்து வயது. ‘சாகிற வயசா அவனுக்கு’ . .வருத்தமாகச் சொன்னார் எழுபத்தைந்து வயதுத் தம்பியின் எண்பத்தைந்து வயது அண்ணன்.

சில ஆண்டுகளுக்கு முன் அறிவுமதி அண்ணனின் (பாடல் பெற்ற ஸ்தலமான) புகழ்பெற்ற அறைக்குச் சென்றேன். அங்கு யாரோ ஒரு பெரியவர் ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார். புகைப்படங்களைக் காட்டி அண்ணனிடம்’இது யார் எடுத்தது’ என்று அந்த பெரியவர் கேட்க அண்ணன் ‘பாலு மகேந்திரா ஸார்’ என்றார். உடனே அவர்,’அதானே பார்த்தேன். அவன் எடுத்தால் பின்ன நன்றாக இல்லாமல் எப்படி இருக்கும்’ என்றார். நான் உடனே அறிவுமதியின் காதில், ‘அண்ணே யாருன்னே இந்த ஆளு, வாத்தியார மரியாதை இல்லாம பேசுறாரு’ என்றேன். பதறிப் போன அண்ணன் என்னை தனியே கூட்டி வந்து, ‘தம்பி அவர்தானடா கவிஞர் காசி ஆனந்தன்.நம் வாத்தியாருடைய பள்ளித் தோழர்’ என்றார். அன்றளவும் இளமையாக, ஜம்மென்றிருந்த என் வாத்தியாரின் கிளாஸ்மேட் இந்த பெரியவரா என்று வருத்தமாக இருந்தது. இருந்தாலும் மனம் சமாதானமடையாமல் எதற்கும் வாத்தியாரிடம் போய் கேட்டு விடுவோம் என்று கேட்டே விட்டேன். நான் கேட்டதுதான் தாமதம். வாத்தியார் படு உற்சாகமாக ‘அப்படியா . . . காசி வந்திருந்தானா . . . நீ பாத்தியா அவனை. உனக்கு தெரியுமா . . அவன்தான் எனக்கு பெண் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்தான்’ என்றெல்லாம் சொன்னவுடன் அது உறுதியாகி மனதுக்கு ஏனோ கஷ்டமாக இருந்தது.

சமீபத்தில் திருநெல்வேலி போயிருக்கும் போது ராதாபுரத்தில் ஒரு நண்பரைப் பார்க்க சென்றிருந்தேன். அங்கிருந்து கிளம்பும்போதுதான் பக்கத்து ஊர் பரமேஸ்வரபுரம் என்பது ஞாபகம் வந்தது. ஆகா,அது நம் மாமனாரின் சொந்த ஊராச்சே,அங்கே போய் வீட்டம்மாவிடம் நல்ல பெயர் வாங்குவோம் என்று அவளுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு பரமேஸ்வரபுரத்துக்கு சென்றேன். ஊருக்குள் நுழைவதற்குள் பெங்களூருவிலிருந்து போன். அதற்குள் மகள் சொல்லிவிட்டாள் போல.

சொல்லுங்க மாமா . . ஒங்க ஊருக்குத்தான் போயிக்கிட்டு இருக்கேன்.

சொன்னா சொன்னா . . . ரொம்ப சந்தோஷம் மாப்ளே . . . .அங்கே ஒரு அம்மன் கோயில் இருக்கும். . . அதுதான் எங்க குலதெய்வம். . . .அதுக்கு போகாம வந்துராதீங்க. . . . கோயில் பூட்டியிருந்துதுன்னா அங்கே தனுஷ்கோடின்னு நம்ம பையன் ஒருத்தன் இருப்பான். . . .கோயிலுக்கு பக்கத்துலேயே மூணாவது வீடு. . . . அவன போய் பாருங்க . . .

எனக்கு கஸ்தூரிரங்கபுரம் கணபதி தாத்தா ஞாபகம் வந்தது. தயக்கத்துடன் கேட்டேன்.

மாமா . . . கேக்குறேன்னு தப்பா நெனைக்காதீங்க . . . . இந்த தனுஷ்கோடி உங்க செட்டா . . .இல்ல . . . . . .

உடனே சொன்னார்.

சே சே . . . நீங்க வேற . . .அவன் ரொம்ப சின்னப்பையன் . . ரிட்டயர்ட் ஆகி ரெண்டுமூணு வருஷந்தான் இருக்கும்.

[email protected]