ஜெயா நீ ஜெயிச்சுட்டே

கீழப்புதுத் தெரு என்று ஏனோ அழைக்கப் படுகிற திருநெல்வேலி டவுணில் உள்ள பாரதியார் தெருவில் ஒரு உச்சினிமாகாளி கோயில் உள்ளது. உழக்கு சைஸிலுள்ள அந்த கோயிலின் கொடைவிழா வருடாவருடம் சித்திரை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்படும். எந்த ஊரில் இருந்தாலும் அந்த தெருக்காரர்கள் இந்த கொடைக்கு மட்டும் எப்படியாவது வந்து சேர்ந்து விடுவார்கள். இதில் பல பேருக்கு அங்கு வீடே இருக்காது. ஆனாலும் நண்பர்களின் வீட்டில் தங்கிக் கொண்டு கொடை முடிந்ததும் கிளம்பிச் செல்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் வந்தால் தங்க இடம் கொடுக்கும் நண்பர்கள் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். கொடைக்கு மட்டும் அப்படி ஒரு சலுகை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடக்கும். பட்டிமன்றம் ஒன்றின் நடுவராக ஒருமுறை குன்றக்குடி அடிகளார் வந்திருந்தார். உச்சினிமாகாளிக்கு பூஜை செய்யும் சிதம்பரம் பிள்ளையிடம் அடிகளார் ‘தமிழில்தானே பூஜை செய்கிறீர்கள்’ என்று கேட்டார். சிதம்பரம் பிள்ளை என்னும் தன் பெயரை சிதம்பாரம்பிள்ளை என்று கொட்டை எழுத்தில் கையெழுத்து போடும் பிள்ளைவாள் வேறு என்ன பதில் சொல்வார். 80களில் புகழ்பெற்ற கோவை சேரன் போக்குவரத்துக் கழக மெல்லிசைக் குழுவின் கச்சேரி நடந்தது. அதில் பாடிய ஒரு ஸ்டார் பாடகரை ரொம்ப வருடங்கள் கழித்து தேவாவின் குழுவில் கோரஸ் பாடகராக பார்த்தேன். உள்ளூர்ப் பிரமுகர்களின் சொற்பொழிவும் உண்டு. ஒரு எழுத்து மேஜையை முன்னே போட்டு தேங்காப்பூ டவல் விரித்து உட்கார்ந்து பிச்சையா பிள்ளையின் மகன் பூதத்தான் எதைப் பற்றியும் கவலைப் படாமல் சைவ சித்தாந்தப் பேருரை ஆற்றிக் கொண்டிருப்பான். தூக்கம் வராத ஒன்றிரண்டு விதவை ஆச்சிகள் மட்டும் அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அவர்களில் இருவருக்கு காது கேட்காது.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சிஷ்யர் எஸ்.ஆர்.கோபாலின் நாடகம் ஏற்பாடாகியிருந்தது. அதில் போலிஸ் இன்ஸ்பெக்டராக நடித்த நெல்லையைச் சேர்ந்த நடிகர் வசனத்தை மறந்து திரைச்சீலைக்குப் பின் வசன பேப்பரை வைத்தபடி நின்று கொண்டிருந்தவரிடம் ‘சொல்லு சொல்லு’ என்று கேட்டு நடித்ததைப் பார்த்து சிரித்த நான், பல வருடங்களுக்கு பிறகு திரைப்படப் படப்பிடிப்புகளில் பல நடிகர்களுக்கு தொடர்ந்து வசனம் ப்ராம்ப்ட் பண்ணும் போது ஏற்படும் எரிச்சலினூடே நாடகத்தில் நடிக்கும் கஷ்டத்தை புரிந்து கொண்டேன்.

திருநெல்வேலிப் பகுதியின் புகழ்பெற்ற கணியன் குழுவினரின் மகுட இசை.விரல்களை உருட்டி அறைந்து அடிவயிற்றிலிருந்து அவர்கள் பாடும் உச்சினிமாகாளி கதை, இசக்கியம்மன் கதை, முத்தாரம்மன் வரலாறு போன்றவை நம்மை இழுத்துப் பிடித்து நிறுத்தி விடும். தீச்சட்டி ஏந்தி வரும் சாமி கொண்டாடிக்கு முன்பாக அவர்கள் பாடி வருவார்கள். சில சமயங்களில் காளி வேஷமும் உண்டு. சின்ன வயதில் காளி வேஷம் போட்டவரைப் பார்த்து பல முறை பயந்திருக்கிறேன். ஆனால் மேளக் காரர்கள் வாசிக்கும் அப்போது வந்த சினிமாப் பாடல்களின் தாளத்துக்கு ஏற்ப காளி நடனமாடுவதைப் பார்க்க, பார்க்க பயம் குறைந்து பின் வேடிக்கையாகவே ஆகிவிட்டது.

வருடத்தின் 355 நாட்களில் சீந்துவாரின்றி சாதாரணமாக நடத்தப் படும் அருணாசலம்பிள்ளைதான் சாமி கொண்டாடி. கொடைக்கு கால் நட்ட நாளிலிருந்து பிள்ளைவாளின் நடையே மாறிவிடும். கையில் போட்டிருக்கும் பித்தளைக் காப்புகளை அவ்வப்போது மேலே ஏற்றுவதும், இறக்குவதுமாக இருப்பார். கொடை முடியும் வரை உச்சினிமாகாளி அம்மனாகவேதான் நடந்து கொள்வார். அவரின் தர்மபத்தினியாகிய பிரமு ஆச்சிக்கும் சாமி வரும். அதில் பிள்ளைவாளுக்கு வருத்தமுண்டு. அவர் கம்பீரமாக தன்னை மறந்து ஆடிக் கொண்டிருக்கும் போது வீட்டிலிருக்கும் அவர் மனைவி, சாமி வந்து தலைவிரிகோலமாகக் கோயிலுக்கு ஓடி வந்து நாக்கைத் துருத்திக் கொண்டு தனக்கு போட்டியாக ஆடுவதை எப்படி சகிப்பார்? இங்கும் நிம்மதியாக இருக்க விட மாட்டேங்கிறாளே முண்டை என்கிற நினைப்பில் சாமி என்கிற சலுகையில் பொண்டாட்டியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து போட்டு அடிப்பார்.

நீ எங்கே உள்ளவட்டி . . என் கோயில்ல ஒனக்கென்ன சோலி

சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்

சொல்லப் போறியா உன் ரத்தத்த குடிக்கட்டுமா?

சுக்கு வெந்நீர் குடித்தாலே விக்கிக் கொள்கிற அருணாசலம் பிள்ளை கேட்பார். இதற்குள் மேளக்காரர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு அடிக்கத் தொடங்க தம்பதி சமேதராக தாளத்துக்குத் தக்க ஆடி முடிப்பார்கள். ஒரு முறை கொடை முடிந்த பின் பிரமு ஆச்சி வந்து கோயில் முன் எதையோ குனிந்து தேடிக் கொண்டிருந்தாள். அருள் வந்து ஆடும்போது, தான் காதில் அணிந்திருந்து எங்கோ விழுந்து விட்ட ஒற்றைத் தோட்டைத்தான் ஆச்சி அழுது கொண்டே தேடினாள் என்பது எங்களுக்கு பிறகு தெரிய வந்தது. அதற்கு அடுத்த வருஷத்திலிருந்து ஆச்சி கவனமாக தோடுகளை கழற்றி வீட்டில் வைத்து விட்டு வந்த பிறகே உச்சினிமாகாளி அவள் மீது வந்தாள்.
இத்தனை சுவாரஸ்யங்கள் நடந்தாலும் எனக்கென்னவோ கொடையின் கடைசி நாளன்று தெரு நடுவில் திரை கட்டி காட்டப்படும் திரைப்படங்களில்தான் ஆர்வம். “ஐந்து பூமார்க் பீடி வழங்கும்” என்கிற துணி பேனர் கட்டப் படும்போதே எனக்கு உற்சாகத்தில் வேர்க்கத் தொடங்கி விடும். எப்படியும் ஒரு எம்.ஜி.ஆர். படம் உண்டு. அது போக இரண்டு படங்கள் கண்டிப்பாக திரையிடப்படும். அதில் ஒன்று, இன்றுவரை எனக்கு புதிராக உள்ள ‘ஜெயா நீ ஜெயிச்சுட்டே’. வி.சி.குகநாதனின் படம் என்று நினைவு. அவர் மனைவி ஜெயாதான் படத்தின் கதாநாயகி. வருடா வருடம் இந்த படம் திரையிடப்படும். வி.சி.குகநாதனே அந்த படத்தை அத்தனை தடவை பார்த்திருக்க மாட்டார். இந்த படத்தைப் பற்றி குகநாதனைத் தவிர யார்யாரிடல்லாமோ விசாரித்துப் பார்த்து விட்டேன். யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. எந்த தனியார் தொலைக்காட்சியும் இந்த படத்தை இதுவரை ஒளிபரப்பவில்லை, ராஜ் டிஜிட்டல் பிளஸ் உட்பட. எனக்கு இருக்கிற சந்தேகமே, வி.சி.குகநாதன் ஐந்து பூமார்க் பீடி கம்பெனிக்கென்றே இந்த படத்தை எடுத்து, அதை திருநெல்வேலி கீழப்புதுத் தெரு உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடைக்கு மட்டும்தான் திரையிட வேண்டும் என்று எழுதி வாங்கியிருப்பாரோ என்பதுதான்.

மற்றொரு படம் ரஜினிகாந்த் நடித்த படமான குப்பத்து ராஜா. அது நெல்லையைச் சேர்ந்த தயரிப்பாளரால் எடுக்கப் பட்டது. அதில் ஒரெ ஒரு காட்சியில் நெல்லையைச் சேர்ந்த ஒரு மனிதர் நடித்திருப்பார். அவர் ஒரு சகல கலாவல்லவர்.நடிகர்.சித்த மருத்துவர். இலக்கிய சொற்பொழிவாளர். நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழாவின் போது நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை கண்ணீர்ப் புகையில்லாமலேயே விரட்டி விடும் வல்லமை அவரது சொற்பொழிவுக்கு உண்டு. குப்பத்து ராஜாவில் அவர் வரும் ஒரே காட்சிக்காக ஜனங்கள் காத்திருப்பர். அந்த காட்சியில் அவரது வீட்டின் கதவை ரஜினிகாந்த் தட்டுவார். இவர் கதவைத் திறந்து ‘ஆ ஜக்கு நீயா’ என்பார். உடனேயே ரஜினி இவர் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவார். மக்களின் கரகோஷத்தைப் பார்க்க வேண்டுமே.

சுகா
[email protected]