க்ளோ

நண்பர் சீமானின் வீடு ஒரு சேவற்கூடாரம். பத்திலிருந்து இருபது சேவல்கள் வரை உண்டு. ஒரு கம்யூன் வாழ்க்கை வாழ்ந்து வருகிற கூட்டம். உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், சின்ன நடிகர்கள் . . இப்படி நிறைய நண்பர்கள் அங்கு ஒரு குடும்பமாக உள்ளனர். யார்யாருக்கு வேலை கிடைக்கிறதோ, அவர்கள் செலவைப் பார்த்துக் கொள்ள, மற்றவர்கள் சாமான்கள் வாங்க, ஒரு சிலர் சமைக்க, எல்லோரும் சாப்பிடுவார்கள். யாருக்கும், யாரோடும் வருத்தமோ, கோபமோ வருவது இல்லை. எங்கோ பிறந்து, எங்கெங்கோ வளர்ந்து அங்கு வாழும் சகோதரர்கள் ஒருவருக்கொருவரை முறை சொல்லி அழைத்துக் கொள்வதைப் பார்ப்பதே அழகு. மாமா, மருமகன், அத்தான், மைத்துனன், சித்தப்பா, மகன், அண்ணன், தம்பி இப்படி பல. எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். சமையல் வேலைகள் சதா நடந்து கொண்டே இருக்கும். யாராவது ஒருவர் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருப்பதை நான் அங்கு போகும் போதெல்லாம் தவறாமல் பார்த்திருக்கிறேன். எப்படியும் ஒருவர் சவரம் செய்து கொண்டிருப்பார். ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருவர் ராஜ் டிஜிட்டல் பிளஸ்ஸில் பழைய பாடாவதிப் படமொன்றை உணர்ச்சி பொங்கப் பார்த்துக் கொண்டிருப்பார். மற்றொருவர் சத்தமாக தினத்தந்தி படித்துக் கொண்டிருப்பார். படிக்கும் ஒவ்வொரு செய்திக்கும் தனது கமெண்ட்டுடன். உ.தா. என்னைப் பார்த்து மற்ற கட்சிகள் பயப்படுகின்றன – விஜயகாந்த். பயப்படுவாஞ்ஞல்ல . . . முதுகில் குத்திய தேவகெளடா – எடியூரப்பா. குத்தத்தான் செய்வென் . . . இப்படி மதுரைத் தமிழில். வயதில் மூத்த ஒரு சிலர் அந்த வீட்டில் இருந்தாலும் குடும்பத் தலைவர் என்னவோ சீமான்தான்.

ஒரு நாள் காலையில் நண்பர் சீமானை செல்பேசியில் அழைத்தேன். பதிலில்லை. உடனே அவரது இல்லத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டேன். எதிர்முனையில் ஒரு குரல், ‘க்ளோ’ என்றது. அராஜகம் இல்லையா? நான் ஒருவன்தான் சீமானை அராஜகம் என்றழைப்பேன் என்பது அங்குள்ள எல்லோருக்கும் தெரியுமென்பதால், எதிர்முனைக் குரல் என்னை அடையாளம் கண்டுகொண்டு, ‘அண்ணே, வணக்கமுண்ணே . . நான் ஜிந்தா பேசுறேன்னே. அண்ணன் குளிக்கிறாருண்ணே என்றது. சரி, நான் வற்ரேன்னு சொல்லு. போனை வைத்த பின் எனக்கு யோசனை. இவன் போனை எடுத்து என்னவோ வினோதமாகச் சொன்னானே. சரி, அப்புறமாகக் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

மற்றோர் நாள் சீமான், மற்றும் சில நண்பர்களுடன் நானும் அமர்ந்து அவர் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி மணி ஒலித்தது. ஜிந்தா போய் போனை எடுத்து ‘க்ளோ’ என்றான். அடடே, இப்படித்தான் அன்றைக்கு நம்மிடமும் சொன்னானா? ஏன் இப்படி உச்சரிக்கிறான்? என்று நண்பர்களிடம் கேட்க நினைத்து, அதை அங்குள்ள யாருமே கவனிக்காமல் இருக்க, சரி அவங்க ஊரில் ஹலோவுக்கு பதில் க்ளோதான் போல என்று சும்மா இருந்து விட்டேன். இனி அந்தத் தொலைபேசி உரையாடல்.

க்ளோ . . .யாருங்க . . கிருஷ்ணமூர்த்தியா . . . ? ஒரு நிமிசம் . . . .சுற்றி எங்கள் எல்லோரையும் பார்த்தான். எங்கள் யார் முகத்திலாவது கிருஷ்ணமூர்த்தி தெரிகிறாரா என்று . அங்கு கிருஷ்ணமூர்த்தி என்கிற பெயரில் யாருமே இல்லை என்பது எனக்கே தெரியும்.அப்படி யாரும் இல்லீங்களே.ஓ . . .அப்பிடீங்களா . . .என்னங்க . . . இன்னொரு தடவ சொல்லுங்க .. .
சீமான் பொறுமை இழக்க ஆரம்பித்தார்.

ஜிந்தா விடுவதாக இல்லை. சத்தமாக,நீங்க என்ன நம்பர் போட்டிங்க ?ரெண்டு மூணு ஏளு ஆறு ஆறு எட்டு மூணு சைபரா? அடடா , இது ரெண்டு மூணு ஏளு ஆறு ஆறு எட்டு ரெண்டு சைபராச்சே?

ராங்நம்பர்ன்னு சொல்லேன்டா, சீமான் கத்தினார். பவ்யமாகத் திரும்பி, அதாண்ணே சொல்லிக்கிட்டு இருக்கேன், என்றான் ஜிந்தா.தலையைக் குறி வைத்துப் பறந்து வந்த வஸ்துவுக்கு லாவகமாகக் குனிந்து சமாளித்து போனை வைத்து விட்டு வந்த ஜிந்தாவுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டது. இனி நீ போனை எடுத்தால், தென்னை மரத்தில் கட்டி வைத்து உதைப்போம். உதைப்பார்கள். நான் கண்கூடாகப் பார்த்து மிரண்டிருக்கிறேன்.

ஜிந்தாவின் உண்மையான பெயர் கணேசனோ, ரவியோ, குமாரோ. சினிமாவில் நடிப்பதற்காக அவனாக வைத்துக் கொண்ட பெயர்தான் ஜிந்தா. மதுரைக்காரன். கருத்த முரட்டு உடல். முறுக்கிய மீசை. கையில், காதில் வகை வகையாய் ஏதேதோ வளையங்கள். கொஞ்சம் காது மந்தம். அதற்கு ஒரு பின்னணிக் கதையுண்டு. ஊரில் த.மு.எ.ச., மற்றும் பல கலை குழுக்களுடன் சேர்ந்து நாடகங்களில் நடித்து வந்த அனுபவம் உண்டு ஜிந்தாவுக்கு. அப்படி ஒரு நாடகத்தில் போராட்டம் நடத்தும் விவசாயக் கூட்டத்தில் ஜிந்தாவும் ஒருவன். போராட்டக்களம், போர்க்களமாகிறது. போலீஸ் வந்து கண்ணீர்ப் புகை குண்டுகளை எறிகிறார்கள். பதிலுக்கு போராட்டக்காரர்களும் வெடிகுண்டுகளை எறிய, இருபுறமும் உயிர்ச்சேதம். செத்து விழும் போராட்டக்காரர்களில் ஜிந்தாவும் ஒருவன். இறந்து கிடக்கும் ஜிந்தாவின் காதருகில் வெடிக்காமல் புகைந்து கொண்டிருந்திருக்கிறது ஒரு வெடிகுண்டு. அசையாமல் பிணமாகக் கிடந்த ஜிந்தா, ஒரு கண்ணைத் திறந்து புகைந்து கொண்டிருந்த குண்டைப் பார்த்திருக்கிறான். ஆனாலும் தீராக்கலைவெறியில் பாத்திரமாகவே, அதாவது பிணமாகவே அசையாமல் கிடந்து, அது வெடிக்கும் வரை பொறுமைகாத்து பாதி கேட்கும் திறனை இழந்தான்.

ஒருமுறை ஊருக்குப் போய்விட்டு வீட்டுக்குள் நுழையும் ஜிந்தாவின் கையில் பையுடன் இருந்த இன்னொரு பொருளைப் பார்த்து ஒரு கணம் எல்லோருமே துணுக்குற்றிருக்கின்றனர். அவன் கையிலிருந்தது உறையிடப்பட்ட உண்மையான ஒரு நாதஸ்வரம். என்னடா இது ஜிந்தா? பஸ்ல வரும் போது ஒரு மேளக்காரங்கூட தகராறுண்ணே. க்காளி, என்ன சொல்லியும் அடங்க மாட்டேண்ணுட்டென். அதான் அடிச்சு இதை புடுங்கிட்டு வந்துட்டேன். அதோடு விட்டிருந்தால் அவன் ஜிந்தாவே இல்லை. ஒரு அதிகாலையில் அசந்துத் தூங்கிக் கொண்டிருக்கும் சீமான் குடும்பத்தினரின் காதுகளில் நிறைமாத கர்ப்பிணிப்பூனை ஒன்றின் பிரசவக்கதறலொலி கேட்க, தூக்கம் கலைந்த எரிச்சலோடு எழுந்து பார்த்திருக்கின்றனர். சத்தம் வந்த திசை, மொட்டை மாடியிலிருந்து. தூக்கக் கலக்கத்துடன் பூனைக்கு உதவும் நோக்கோடு மாடிக்குப் போன அவர்கள் கண்டது, ஜிந்தாவின் நாதஸ்வரச் சாதகக் காட்சி. பிறகென்ன. அந்த நாதஸ்வரத்தைப் பிடுங்கி, அதாலேயே . . . . . . .

ரொம்ப நாள் ஃபோனைத் தொடாமலேயே இருந்தான் ஜிந்தா. ஒரு நாள் நாங்கள் அனைவரும் சீமானின் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். தொலைபேசி மணியடித்தது. எடுறா ஜிந்தா என்றார் சீமான். வேண்டாண்ணே, தயங்கினான். எடுறான்னா. இன்னும் தயங்கினான். நான் உடனே சீமானிடம், ஏன் அராஜகம்? போனை எடுத்தா தென்னைமரத்துல கட்டி வச்சு அடிப்பேன்னா, அவன் எப்படி எடுப்பான் என்றேன். ஐயாமகனே . . அது சும்மா ஒரு கோபத்துல சொன்னது. ஜிந்தா நம்ம தம்பியில்லியா? அவன அடிப்போமா, சொல்லுங்க என்றார். மணியடிப்பது நின்றுவிட்டது. சீமான் தொடர்ந்தார். இப்பெல்லாம் தம்பி ஜிந்தா புத்திசாலியா ஆயிட்டானே! இல்லியாடா தம்பி! பெருமிதம் பொங்கும் முகத்துடன் அதை ஆமோதிக்கும் விதமாக மெல்ல சிரித்தபடி தலைகுனிந்தான் ஜிந்தா. மீண்டும் மணியடித்தது. உற்சாகத்துடன் சென்று போனை எடுத்த ஜிந்தா,

க்ளோ . . .

சீமான் அண்ணனா . . . .

இருக்கறாருங்க . . . .

நீங்க?

ஒரு நிமிசம் . .

கவனமாக மவுத்பீஸைப் பொத்திக் கொண்டு, பணிவுடன் சீமானிடம் •போனை நீட்டியபடியே ஜிந்தா சொன்னது,

அண்ணே, புருசோத்தமன்னு யாரோ ஒரு முஸ்லிம் பேசுறாருண்ணே.