Giant வீல்

அரசுப் பொருட்காட்சி பொதுவாக திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆனிமாதம்தான் நடத்தப்படும்.வேறு பொழுதுபோக்குக்கு வழியேயில்லாத நெல்லை மக்கள் பொருட்காட்சிக்கு தினமும் வருவார்கள்.குறிப்பாக பெண்களுக்கு அபூர்வமாக வெளியே சுற்றும் தருணம் வாய்ப்பதால், பார்த்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் பார்ப்பதில் அலுப்பு ஏற்படுவதில்லை.தேரோட்டம் பார்ப்பதில் கூட அவர்களுக்கு அவ்வளவு ஆர்வமிருக்காது.வைகாசி மாதமே அவர்களிடம் பொருட்காட்சி பற்றிய எதிர்பார்ப்பு வந்துவிடும்.”எக்கா,இந்த வருசமாவது பொருள்காட்சி போடுவானா . . இல்ல போன வருசம் மாதிரி த்ராட்டுல விட்டுருவானா” . . . . “இந்த வருசம் கண்டிப்பா உண்டுமாம் . . ஒங்க அத்தான் சொன்னா . . .”

பொருட்காட்சித் திடலில் சாமான்கள் வந்து இறங்கி பந்தல் வேலைகள் ஆரம்பமான உடனேயே ஊருக்குள் உற்சாகம் பரவ ஆரம்பித்து விடும்.குற்றால சீஸனும்,ஆனித்திருவிழா கொண்டாட்டங்களும்,பொருட்காட்சியும் திருநெல்வேலி ஊரை வேறு ஊராக மாற்றிவிடும்.பணமுள்ளவர்கள் பொருட்காட்சிக்குள் ஸ்டால் எடுப்பார்கள். வேலையில்லாத இளைஞர்கள்,வயதுப் பெண்கள் அந்த தற்காலிக ஸ்டால்களில் வேலை செய்வார்கள்.

தூரத்தில் இருந்து பார்க்கும் போதே பொருட்காட்சி நடக்கும் இடத்தை ராட்சத ராட்டினம் என்னும் Giant wheel காட்டிக் கொடுத்து விடும்.அப்போதைய முதல்வரின் ஆளுயர கட்டவுட்டுக்கள் பொருட்காட்சித் திடலின் நுழைவுவாயிலில் நம்மை வரவேற்கும்.பொருட்காட்சியில் மட்டுமே நாங்கள் காணக் கிடைக்கிற பேல் பூரி,பானி பூரி வகையறாக்கள் வாசனையோடு சுண்டி இழுக்கும்.பானி பூரிக்கு ஆசைப் பட்டு,எது பேல் பூரி,எது பானி பூரி என்ற வித்தியாசம் தெரியாமல், வருடா வருடம் மிகச்சரியாக பேல் பூரியை வாங்கி திணறலோடு தின்போம்.

“இன்றோடு சென்றுவிடு”,வசந்தத்தைத் தேடி” போன்ற நாடகங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்.டில்லி அப்பளம் வாங்கி தின்றபடியே நடந்து செல்பவர்கள் போகிற போக்கில் அந்நாடகங்களை ஒரு பார்வை பார்த்த படி செல்வர்.எல்லா அரசுத் துறை அரங்குகளிலும் வேகவேகமாக சுற்றி விட்டு வெளியே வரும் இளைஞர்கள்,சுகாதாரத் துறையில் மட்டும் அதிக நேரம் செலவிடுவர்.குடும்பக்கட்டுப்பாடு பற்றிய சில மருத்துவ புகைப்படங்களைப் பார்த்து அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர்.வேளாண்துறை பக்கம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.சிறிய தொலைக்காட்சிப் பெட்டிகளில் பீலிசிவம்,என்னத்த கன்னையா போன்ற டிரேட்மார்க் நடிகர்கள் நடித்த அரசாங்கக் குறும்படங்கள் பார்ப்பாரின்றி ஓடிக் கொண்டிருக்கும்.குறிப்பாக ஹெரான் ராமசாமி நடித்த குமரிக்கண்டம் விளக்கப் படம் போடும் பகுதியில் ஜனநடமாட்டமே இருக்காது.

அம்மாவுக்கு எப்போழுதுமே பொருட்காட்சிக்கு போனால் giant wheelஇல் ஏறி சுற்ற ஆசை.தைரியமெல்லாம் கிடையாது.பல்லைக் கடித்துக் கொண்டே பயந்தபடி அந்த த்ரில்லை அனுபவிக்க வேண்டும் அவளுக்கு.தான் பயந்தாலும்,பயப்படும் மற்றவர்களை கேலி செய்வதும் உண்டு.அம்மா இறந்த பிறகு அவள் நினவாகத்தானோ என்னவோ எனக்கும் giant wheel மேல் ஒரு காதல்.Giant wheelஇல் ஏறிச் சுற்றுவது போக யார்யாரெல்லாம் பயப்படுகிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.

சுந்தரம்பிள்ளை பெரியப்பா கமிஷன் கடை வைத்திருந்தார்.சிவதீக்ஷை எடுத்திருந்ததால் தினமும் சிவ பூஜை பண்ணுபவர்.உட்கார்ந்தால்,எழுந்தால்,படுத்தால் சிவநாமம்தான்.கழுத்து வழியாக போடும் அந்த கால தொள தொள சட்டையும்,வேஷ்டியும்தான் உடை.அசப்பில் டி.எஸ்.பாலையா மாதிரியே இருப்பார்.வேர்க்கும் போதெல்லாம் ‘V’ cut உள்ள சட்டையின் கீழ்ப் பகுதியை இரண்டு கைகளாலும் பிடித்து விசிறியாக மேல் நோக்கி வீசிக் கொள்வார். சின்னப் பையனான என்னை பொருட்காட்சிக்கு அழைத்து போகும் பொறுப்பை ஒரு நாள் அவர் ஏற்றுக் கொண்டார்.கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.எல்லா அரங்குகளுக்கும் சென்றோம்.இந்து,அறநிலையத் துறையில் மட்டும் அதிக நேரம் ஆனது.மரணக்கிணறு பார்த்தே தீர வேண்டும் என்றார்.”உயிரைக் கொடுத்து மோட்டார் ஸைக்கிள் ஓட்டுதான். . . அவனுக்கு துட்டு குடுத்தா புண்ணியம். . .” பக்கத்திலேயே giant wheel.என் முகத்தை பார்த்து என் ஆசையை புரிந்து கொண்டார்.நிறைய செலவழித்து விட்டாரே என்று நானாக கேட்கவில்லை.
“ராட்டுல ஏறணுமாடே” . . . . .

“பரவா இல்ல பெரியப்பா வேண்டாம்” . . .

“அதான் உன் மூஞ்சியே சொல்லுதே . . .வா ஏறுவோம் . . .பயப்பட மாட்டயே . . . . . .”
Giant wheelஇல் ஏறும்வரை பேசிக் கொண்டிருந்த பெரியப்பா,ஏறி அமர்ந்தவுடன் ‘சிவாயநம’ என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார்.சுற்ற ஆரம்பிக்கும் முன்பே கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டார்.ஆட்கள் நிறைந்தவுடன் பெல் அடித்து சுற்ற ஆரம்பித்தது.ஒரு சுற்றிலேயே பெரியப்பா கதறலுடன் “. . ஏ . . ..நிறுத்து . . .சின்னப்பையன் பயப்படுதான்” என்றார்.”எனக்கு ஒண்ணும் பயமில்ல பெரியப்பா . . ஜாலியாத்தான் இருக்கு” . . . “எல . . .நிறுத்தப் போறியா இல்லியால” . . . .ராட்டுக்காரனுக்கு காதில் விழவில்லை.”எல . .அய்யா . .நல்லாயிருப்ப . . .கூட துட்டு தாரேன் . . .எறக்கி விடு” . . . வெட்கத்தை விட்டு லேசாக அழுது பார்த்தார்.வேகம் எடுத்தது.இனி கத்தி பிரயோஜனமில்லை என்பது தெரிந்து போனது.கீழிருந்து மேலே போகும்போது சிவநாமமும்,மேலிருந்து கீழே வரும் போது மலச்சிக்கல் முக்கலுமாகத் தொடர்ந்தார்.சுற்று முடிந்தது.சிரிப்பை அடக்கியபடி உட்கார்ந்திருந்தேன்.ஆட்கள் இறக்கப்பட்டனர்.சரியாக நாங்கள் அமர்ந்திருந்த இருக்கை உச்சிக்கு வந்து நின்றது.பெரியப்பா என்னை பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்க்கும் விதமாக உர்ரென்று அமர்ந்திருந்தார்.முகமெல்லாம் வேர்த்து திருநீறு அழிந்திருந்தது.மற்ற நேரம் என்றால் சட்டையை பிடித்து விசிறிக்கொள்வார்.இப்போது சிக்கென்று கம்பியை பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்.சுற்று முடிந்த நிம்மதி முகத்தில் தெரிந்தது.ஆனாலும் பதற்றம் குறையவில்லை.மனிதர் அவமானப் பட்டுவிட்டார்.நாம்தான் சரி செய்ய வேண்டும் என்று மெதுவாக பேச்சு கொடுத்தேன்.

பெரியப்பா . . . அங்கே பாத்தேளா . . . நெல்லையப்பர் கோயில் தெரியுது . . .

சிவப்பழமான பெரியப்பா கடும் எரிச்சலுடன் சொன்ன பதில்.

ஒரு மயிராண்டி கோயிலையும் நான் பாக்கல.

க்ளோ

நண்பர் சீமானின் வீடு ஒரு சேவற்கூடாரம். பத்திலிருந்து இருபது சேவல்கள் வரை உண்டு. ஒரு கம்யூன் வாழ்க்கை வாழ்ந்து வருகிற கூட்டம். உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், சின்ன நடிகர்கள் . . இப்படி நிறைய நண்பர்கள் அங்கு ஒரு குடும்பமாக உள்ளனர். யார்யாருக்கு வேலை கிடைக்கிறதோ, அவர்கள் செலவைப் பார்த்துக் கொள்ள, மற்றவர்கள் சாமான்கள் வாங்க, ஒரு சிலர் சமைக்க, எல்லோரும் சாப்பிடுவார்கள். யாருக்கும், யாரோடும் வருத்தமோ, கோபமோ வருவது இல்லை. எங்கோ பிறந்து, எங்கெங்கோ வளர்ந்து அங்கு வாழும் சகோதரர்கள் ஒருவருக்கொருவரை முறை சொல்லி அழைத்துக் கொள்வதைப் பார்ப்பதே அழகு. மாமா, மருமகன், அத்தான், மைத்துனன், சித்தப்பா, மகன், அண்ணன், தம்பி இப்படி பல. எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். சமையல் வேலைகள் சதா நடந்து கொண்டே இருக்கும். யாராவது ஒருவர் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருப்பதை நான் அங்கு போகும் போதெல்லாம் தவறாமல் பார்த்திருக்கிறேன். எப்படியும் ஒருவர் சவரம் செய்து கொண்டிருப்பார். ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருவர் ராஜ் டிஜிட்டல் பிளஸ்ஸில் பழைய பாடாவதிப் படமொன்றை உணர்ச்சி பொங்கப் பார்த்துக் கொண்டிருப்பார். மற்றொருவர் சத்தமாக தினத்தந்தி படித்துக் கொண்டிருப்பார். படிக்கும் ஒவ்வொரு செய்திக்கும் தனது கமெண்ட்டுடன். உ.தா. என்னைப் பார்த்து மற்ற கட்சிகள் பயப்படுகின்றன – விஜயகாந்த். பயப்படுவாஞ்ஞல்ல . . . முதுகில் குத்திய தேவகெளடா – எடியூரப்பா. குத்தத்தான் செய்வென் . . . இப்படி மதுரைத் தமிழில். வயதில் மூத்த ஒரு சிலர் அந்த வீட்டில் இருந்தாலும் குடும்பத் தலைவர் என்னவோ சீமான்தான்.

ஒரு நாள் காலையில் நண்பர் சீமானை செல்பேசியில் அழைத்தேன். பதிலில்லை. உடனே அவரது இல்லத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டேன். எதிர்முனையில் ஒரு குரல், ‘க்ளோ’ என்றது. அராஜகம் இல்லையா? நான் ஒருவன்தான் சீமானை அராஜகம் என்றழைப்பேன் என்பது அங்குள்ள எல்லோருக்கும் தெரியுமென்பதால், எதிர்முனைக் குரல் என்னை அடையாளம் கண்டுகொண்டு, ‘அண்ணே, வணக்கமுண்ணே . . நான் ஜிந்தா பேசுறேன்னே. அண்ணன் குளிக்கிறாருண்ணே என்றது. சரி, நான் வற்ரேன்னு சொல்லு. போனை வைத்த பின் எனக்கு யோசனை. இவன் போனை எடுத்து என்னவோ வினோதமாகச் சொன்னானே. சரி, அப்புறமாகக் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

மற்றோர் நாள் சீமான், மற்றும் சில நண்பர்களுடன் நானும் அமர்ந்து அவர் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி மணி ஒலித்தது. ஜிந்தா போய் போனை எடுத்து ‘க்ளோ’ என்றான். அடடே, இப்படித்தான் அன்றைக்கு நம்மிடமும் சொன்னானா? ஏன் இப்படி உச்சரிக்கிறான்? என்று நண்பர்களிடம் கேட்க நினைத்து, அதை அங்குள்ள யாருமே கவனிக்காமல் இருக்க, சரி அவங்க ஊரில் ஹலோவுக்கு பதில் க்ளோதான் போல என்று சும்மா இருந்து விட்டேன். இனி அந்தத் தொலைபேசி உரையாடல்.

க்ளோ . . .யாருங்க . . கிருஷ்ணமூர்த்தியா . . . ? ஒரு நிமிசம் . . . .சுற்றி எங்கள் எல்லோரையும் பார்த்தான். எங்கள் யார் முகத்திலாவது கிருஷ்ணமூர்த்தி தெரிகிறாரா என்று . அங்கு கிருஷ்ணமூர்த்தி என்கிற பெயரில் யாருமே இல்லை என்பது எனக்கே தெரியும்.அப்படி யாரும் இல்லீங்களே.ஓ . . .அப்பிடீங்களா . . .என்னங்க . . . இன்னொரு தடவ சொல்லுங்க .. .
சீமான் பொறுமை இழக்க ஆரம்பித்தார்.

ஜிந்தா விடுவதாக இல்லை. சத்தமாக,நீங்க என்ன நம்பர் போட்டிங்க ?ரெண்டு மூணு ஏளு ஆறு ஆறு எட்டு மூணு சைபரா? அடடா , இது ரெண்டு மூணு ஏளு ஆறு ஆறு எட்டு ரெண்டு சைபராச்சே?

ராங்நம்பர்ன்னு சொல்லேன்டா, சீமான் கத்தினார். பவ்யமாகத் திரும்பி, அதாண்ணே சொல்லிக்கிட்டு இருக்கேன், என்றான் ஜிந்தா.தலையைக் குறி வைத்துப் பறந்து வந்த வஸ்துவுக்கு லாவகமாகக் குனிந்து சமாளித்து போனை வைத்து விட்டு வந்த ஜிந்தாவுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டது. இனி நீ போனை எடுத்தால், தென்னை மரத்தில் கட்டி வைத்து உதைப்போம். உதைப்பார்கள். நான் கண்கூடாகப் பார்த்து மிரண்டிருக்கிறேன்.

ஜிந்தாவின் உண்மையான பெயர் கணேசனோ, ரவியோ, குமாரோ. சினிமாவில் நடிப்பதற்காக அவனாக வைத்துக் கொண்ட பெயர்தான் ஜிந்தா. மதுரைக்காரன். கருத்த முரட்டு உடல். முறுக்கிய மீசை. கையில், காதில் வகை வகையாய் ஏதேதோ வளையங்கள். கொஞ்சம் காது மந்தம். அதற்கு ஒரு பின்னணிக் கதையுண்டு. ஊரில் த.மு.எ.ச., மற்றும் பல கலை குழுக்களுடன் சேர்ந்து நாடகங்களில் நடித்து வந்த அனுபவம் உண்டு ஜிந்தாவுக்கு. அப்படி ஒரு நாடகத்தில் போராட்டம் நடத்தும் விவசாயக் கூட்டத்தில் ஜிந்தாவும் ஒருவன். போராட்டக்களம், போர்க்களமாகிறது. போலீஸ் வந்து கண்ணீர்ப் புகை குண்டுகளை எறிகிறார்கள். பதிலுக்கு போராட்டக்காரர்களும் வெடிகுண்டுகளை எறிய, இருபுறமும் உயிர்ச்சேதம். செத்து விழும் போராட்டக்காரர்களில் ஜிந்தாவும் ஒருவன். இறந்து கிடக்கும் ஜிந்தாவின் காதருகில் வெடிக்காமல் புகைந்து கொண்டிருந்திருக்கிறது ஒரு வெடிகுண்டு. அசையாமல் பிணமாகக் கிடந்த ஜிந்தா, ஒரு கண்ணைத் திறந்து புகைந்து கொண்டிருந்த குண்டைப் பார்த்திருக்கிறான். ஆனாலும் தீராக்கலைவெறியில் பாத்திரமாகவே, அதாவது பிணமாகவே அசையாமல் கிடந்து, அது வெடிக்கும் வரை பொறுமைகாத்து பாதி கேட்கும் திறனை இழந்தான்.

ஒருமுறை ஊருக்குப் போய்விட்டு வீட்டுக்குள் நுழையும் ஜிந்தாவின் கையில் பையுடன் இருந்த இன்னொரு பொருளைப் பார்த்து ஒரு கணம் எல்லோருமே துணுக்குற்றிருக்கின்றனர். அவன் கையிலிருந்தது உறையிடப்பட்ட உண்மையான ஒரு நாதஸ்வரம். என்னடா இது ஜிந்தா? பஸ்ல வரும் போது ஒரு மேளக்காரங்கூட தகராறுண்ணே. க்காளி, என்ன சொல்லியும் அடங்க மாட்டேண்ணுட்டென். அதான் அடிச்சு இதை புடுங்கிட்டு வந்துட்டேன். அதோடு விட்டிருந்தால் அவன் ஜிந்தாவே இல்லை. ஒரு அதிகாலையில் அசந்துத் தூங்கிக் கொண்டிருக்கும் சீமான் குடும்பத்தினரின் காதுகளில் நிறைமாத கர்ப்பிணிப்பூனை ஒன்றின் பிரசவக்கதறலொலி கேட்க, தூக்கம் கலைந்த எரிச்சலோடு எழுந்து பார்த்திருக்கின்றனர். சத்தம் வந்த திசை, மொட்டை மாடியிலிருந்து. தூக்கக் கலக்கத்துடன் பூனைக்கு உதவும் நோக்கோடு மாடிக்குப் போன அவர்கள் கண்டது, ஜிந்தாவின் நாதஸ்வரச் சாதகக் காட்சி. பிறகென்ன. அந்த நாதஸ்வரத்தைப் பிடுங்கி, அதாலேயே . . . . . . .

ரொம்ப நாள் ஃபோனைத் தொடாமலேயே இருந்தான் ஜிந்தா. ஒரு நாள் நாங்கள் அனைவரும் சீமானின் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். தொலைபேசி மணியடித்தது. எடுறா ஜிந்தா என்றார் சீமான். வேண்டாண்ணே, தயங்கினான். எடுறான்னா. இன்னும் தயங்கினான். நான் உடனே சீமானிடம், ஏன் அராஜகம்? போனை எடுத்தா தென்னைமரத்துல கட்டி வச்சு அடிப்பேன்னா, அவன் எப்படி எடுப்பான் என்றேன். ஐயாமகனே . . அது சும்மா ஒரு கோபத்துல சொன்னது. ஜிந்தா நம்ம தம்பியில்லியா? அவன அடிப்போமா, சொல்லுங்க என்றார். மணியடிப்பது நின்றுவிட்டது. சீமான் தொடர்ந்தார். இப்பெல்லாம் தம்பி ஜிந்தா புத்திசாலியா ஆயிட்டானே! இல்லியாடா தம்பி! பெருமிதம் பொங்கும் முகத்துடன் அதை ஆமோதிக்கும் விதமாக மெல்ல சிரித்தபடி தலைகுனிந்தான் ஜிந்தா. மீண்டும் மணியடித்தது. உற்சாகத்துடன் சென்று போனை எடுத்த ஜிந்தா,

க்ளோ . . .

சீமான் அண்ணனா . . . .

இருக்கறாருங்க . . . .

நீங்க?

ஒரு நிமிசம் . .

கவனமாக மவுத்பீஸைப் பொத்திக் கொண்டு, பணிவுடன் சீமானிடம் •போனை நீட்டியபடியே ஜிந்தா சொன்னது,

அண்ணே, புருசோத்தமன்னு யாரோ ஒரு முஸ்லிம் பேசுறாருண்ணே.

தாயார் சன்னதி

அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் தனது இறுதி நாட்களை அம்மா கழித்துக் கொண்டிருந்த போது அங்கு அவளுக்கு பல ஸ்நேகிதிகள் கிடைத்தனர். எல்லோரும் அம்மாவைப் போலவே. நோயின் தன்மையும், தீவிரமும் மட்டுமே மாறுபட்டிருந்தது. அவர்களில் சிலர் அம்மாவின் வயதை ஒத்தவர்கள். ஒரு சிலர் மூத்தவர்கள். தங்களின் நோய் குறித்த கவலைகளை மறந்து ஏதோ பிக்னிக் வந்தது போல அவர்கள் பழகிக் கொள்வதைப் பார்க்கும் போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவருக்குமாக சேர்த்து வேதனை மனதைப் பிசையும். ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்திலிருந்து வந்தவர்கள். அங்கிருந்த நாட்களில் அநேகமாக ஒருவரின் குடும்பத்தைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிந்திருந்தது. தங்களின் நோய் போக அவரவர், தங்களின், மற்றவரின் குடும்பங்களுக்காகவும் கவலைப்பட ஆரம்பித்தனர். அது போலவே சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ள அவர்கள் தவறவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவரும் அம்மாவுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு முஜிபுர் என்று ஒரு மகன். இருபது வயது இருக்கலாம். சட்டையும், கைலியும் அணிந்திருப்பான். மண்டை சின்னதாகவும், உடம்பு குண்டாகவும் இருக்கும். கொஞ்சம் மனநிலை சரியில்லாதவன். என் தகப்பனாரைப் பார்த்தால் ‘மாமா, சும்மா இருக்கேளா’ என்பான். பதிலுக்கு ‘மருமகனே’ என்று என் தந்தை அழைக்கும் போது சந்தோஷமாகச் சிரிப்பான். என்னிடமும் நன்றாக பழகினான். முஜிபுரின் தாயார் தன மகன் யாரிடமும் பேசுவதை கட்டுப்படுத்தியே வந்தார்கள். அவனது மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் யாரும் அவனையும், தன்னையும் காயப் படுத்தி விடுவார்களோ என்ற பயம் அந்தத் தாய்க்கு. ஆனால் எங்களிடம் முஜிபுர் பழகுவதை நாளடைவில் அவர்கள் தடுக்கவில்லை. முஜிபுருக்கு எந்த நேரமும் சாப்பாட்டைப் பற்றி மட்டுமே சிந்தனை. ‘மெட்ராசுல ஒரு ஹோட்டல்லயும் சின்ன வெங்காயத்தையே கண்ணுல காணோம். எல்லாத்துக்கும் பல்லாரி வெங்காயத்தத்தான் போடுதானுவொ. இட்லியை ஒரு கடையிலயும் வாயில வைக்க வெளங்கலையே. திருநெவேலி அல்வான்னு போர்டு போட்டிருக்கான். ஆனா வாயில போட்டா சவுக்குன்னு சவுக்குன்னு சவைக்கவே முடியலே’ . . இப்படி பல புலம்பல்கள். ஒரு நாள் அம்மாவைப் போய்ப் பார்த்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்திருந்தேன். மனது அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. முஜிபுர் அருகில் வந்து உட்கார்ந்தான். ‘அண்ணே, இங்கனக்குள்ளெ நல்ல மீனு எந்த கடையில கிடைக்கும்’ என்று கேட்டான். ‘எனக்கு தெரியாதே முஜிபுர். நான் சாப்பிடறதில்லையே’ என்றேன். ‘நீங்க ஐயரா? கருப்பா இருக்கீங்க?’ என்றான். நான் பதிலேதும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். உடனேயே ‘மன்னிச்சுக்கிடுங்க. உங்களை கருப்பா இருக்கீங்கன்னு சொல்லிட்டேன்’ என்று எழுந்து சென்றான். வருகிற, போகிற எல்லோரிடமும் போய் பேசிக் கொண்டே இருக்கிறான் என்று முஜிபுரை அவன் தாயார் மனமே இல்லாமல் சில நாட்களிலேயே ஊருக்கு அனுப்பிவிட்டார்கள்.

அம்மாவின் வார்டிலேயே பாப் ஹேர்கட்டிங்கில் ஒரு பெண்மணி இருந்தார்கள். நீண்ட காலம் டெல்லியில் வாழ்ந்த அவர்களுக்கு சாந்தமான முகம். மெல்லப் பேசுவார்கள். நன்கு படித்தவர்கள் என்பது அவர்களின் தோற்றத்திலேயே தெரிந்தது. சில வேளைகளில் ப்ரீத்தி ஜிந்தா சாயலில் உள்ள அவர் மகள் அவருக்கு சாப்பாடு எடுத்து வருவாள். எப்போதும் பேண்ட் ஷர்ட்தான் அணிந்திருப்பாள். தன் தாயாருக்கு நேரெதிராக முகத்தில் ஒரு துளி சிரிப்பு இருக்காது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அம்மாவிடம் ‘அந்தப் பொண்ணுக்கிடே ஏதோ சோகம் இருக்கும்மா’ என்பேன். ‘எல்லா ஆம்பிளைப் பயல்களும் பொம்பளைப் பிள்ளையைப் பாத்து சொல்றது இது. உளறாதே’ என்பாள் அம்மா. ஒரு நாள் அம்மாவின் அறைக்கு சென்ற போது அந்தப் பெண்ணின் தாய், அம்மாவிடம் அழுது கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டு அவசர அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள். நான் வெளியே வந்துவிட்டேன். பிறகு அம்மா சொன்னாள். ‘நீ சொன்னது சரிதான். அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட புருஷனோட வாழலியாம். இன்னிக்கு அவளோட கல்யாண நாளாம். தான் போறதுக்குள்ளே அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி பாத்துரணும்னு சொல்லுதாங்க’ என்றாள். இந்த விஷயம் தெரிந்ததிலிருந்து அந்தப் பெண் ப்ரீத்தி ஜிந்தாவை என்னால் இயல்பாகப் பார்க்க முடியவில்லை.

கீமோதெரபி என்னும் கதிரியிக்கச் சிகிச்சையை அம்மாவுக்குக் கொடுக்கத் துவங்கினார்கள். அம்மாவுக்கு எப்போதுமே நீண்ட கரு கரு கூந்தல். கீமோதெரபியின் விளைவாக முதலில் கடுமையான வாந்தியும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தலைமுடி உதிர்வதும் ஆரம்பிக்கும். அம்மாவுக்கும் அதுவே நேர்ந்தது. சில நாட்களிலேயே மொட்டையாகிப் போனாள். அம்மாவின் உடன்பிறந்த தங்கையான என் சித்தி சிறு வயதிலிருந்தே அம்மாவின் தலைமுடியைப் பார்த்து சொல்வாள். ‘ உனக்கு முடியும் உதிர மாட்டேங்குது. நரைக்கவும் இல்லையே’ என்று. அம்மாவின் மொட்டைத் தலையைப் பார்த்து தாங்க மாட்டாமல் கதறி அழுதவள் சித்திதான். திரையுலகின் பிரபல விக் மேக்கரான ரவியிடம் சொல்லி ஒரு நல்ல விக் ஏற்பாடு செய்து அம்மாவுக்குக் கொடுத்தேன். ஓரிருமுறை அதை அணிந்திருப்பாள். பிறகு அவள் அதை விரும்பவுமில்லை. அதற்கு அவசியமும் இல்லாமல் போனது.

அந்த கொடுமையான கட்டத்திலும் அம்மா மகிழ்ச்சியாகவே இருந்தாள். அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அம்மாவுடன் சிகிச்சை பெற்று வந்த ஒரு பிராமணப் பாட்டி. சதா சிரிப்பும், கேலியுமாக சந்தோஷமாக மருத்துவமனையில் வளைய வந்து கொண்டிருந்தார் அந்த பாட்டி. பார்ப்பதற்கு மூன்றாம் பிறை படத்தில் கமலின் வீட்டுக்கு அருகில் ஒரு பாட்டி இருப்பாரே! அவரை அப்படியே உரித்து வைத்திருப்பார். நான் விளையாட்டாக இதை அவரிடம் கேட்டு வைக்க, என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘என் ஆட்டோகிரா·ப் வேணுமா’ என்பார். தீவிர கிரிக்கெட் ரசிகையான பாட்டியைப் பார்க்க அவரது மகன் வருவார். அவருக்கு ஒரு நாற்பது வயதிருக்கும். ‘இன்னிக்கு மேட்ச் இருக்காடா?’. மகனைக் கேட்பார் பாட்டி. ‘ஆமாமா. எப்படியும் இந்தியா தோத்திரும். ஆஸ்திரேலியா definiteஆ win பண்ணிருவான்’. . . வம்பு பண்ணுவார் மகன். ‘அடேய் தேசத் துரோகி’. . . சிரித்துக் கொண்டே மகனை கடிந்து கொள்வார் அந்த வயதான தாய்.

முஜிபுர், ப்ரீத்தி ஜிந்தா, மூன்றாம் பிறை பாட்டியின் மகன் என தங்கள் தாயார்களை உள்ளே அனுமதித்து விட்டு, மருத்துவமனைக்கு வெளியே இருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் ரகசியமாக மற்றவரைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்தான். அதில் நானும், அம்மாவும் நிச்சயம் இருந்திருப்போம். சிகிச்சை முடிந்து வெளியே வந்த சில காலத்திலேயே அம்மா காலமாகிவிட்டாள். அந்தத் தாயார்கள் யாரைப் பற்றிய தகவலும் எங்களுக்கு தெரியவில்லை. அம்மாவுக்கு தெரிந்திருக்கும்.

ஹார்மோனியம்

ஹார்மோனியத்தை நான் முதன்முதலில் பார்த்தது, தியாகராஜ மாமா வாசிக்கும் போதுதான். எங்கள் வீட்டின் முன்னறையில் மெல்லிசைக் கச்சேரிக்கான ரிஹர்ஸலில் பள்ளி ஆசிரியரான தியாகராஜ மாமா ஹார்மோனியமும், பெரியண்ணன் தபலாவும் வாசிக்கும் போது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். தியாகராஜ மாமா ஹார்மோனியம் வாசிப்பதில் சூரர். எந்த சங்கதியையும் சர்வசாதாரணமாக ஹார்மோனியத்தில் கொண்டு வந்துவிடுவார். அண்ணனும், அவரும் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள். ‘அன்றொரு நாள் இதே நிலவில்’ பாடலில் வரும் ஹார்மோனிய பிட்டை (bit) மாமா வாசித்துக் கேட்க வேண்டும். அதேபோல் ஜி.ராமநாதனின் பெரும்பாலான பாடல்கள். உதாரணத்துக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’.

அதற்குப் பிறகு நான் ஹார்மோனியத்தைப் பார்த்தது ஷா·ப்டர் மேல்நிலைப்பள்ளியில். கையால் போடும் பெல்லோஸுக்கு பதில் காலால் பெடல் செய்து வாசிக்கும் ‘கால் ஹார்மோனியம்’ அந்தப் பள்ளியில் இருந்தது. ஷா·ப்டர் பள்ளியில் கிறிஸ்தவ ஸ்தோத்திரப் பாடல்கள் பாடும் குழுவில் பாடுவதற்காகப் பையன்களைத் தேர்வு செய்தார்கள். ஒவ்வொருவராகப் பாடச் சொல்லி கால் ஹார்மோனியத்தில் ஸ்வரம் பிடித்து வாசித்துக் கொண்டிருந்தார் கோயில் பிள்ளை ஸார். அதில் நான் தேர்வானேன். நியாயமாகப் பார்த்தால் கோயில் பிள்ளை ஸார் வாசித்தது ஹார்மோனியம் இல்லை. ஆர்கன். அவ்வளவு பெரிது. அதன் கருப்பு வெள்ளை கட்டைகளில் கோயில் பிள்ளை ஸாரின் விரல்கள் விளையாடும் போது அதிலிருக்கும் கிளம்பும் இசை, அந்தப் பெரிய சர்ச் ஹால் முழுவதையும் அதிர வைக்கும்.

‘சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய்சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே,எத்தால்நானடியேன் கடைத்தேறுவேன் என்பவந்தீர்ந்துஅத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே?’

ஸ்கூல் அஸெம்பிளியில் கோயில் பிள்ளை ஸார் ஹார்மோனியத்தில் இந்தப் பாட்டை வாசிக்கத் தொடங்க, அதைத் தொடர்ந்து நாங்கள் பாடுவோம். இந்தப் பாடலின் மெட்டு சங்கராபரணம் ராகத்தில், ரூபக தாளத்தில் போடப்பட்டிருந்தது. மற்ற பையன்களை விட எனக்கு இந்த மெட்டு சீக்கிரம் வசப்பட்டது. காரணம், இந்த மெட்டு நினைவு தெரிந்த நாளிலிருந்தே என் காது கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்ட ‘பொன்னார் மேனியனே’யை ஒத்து இருந்தது. அந்தக் குழுவில் சிறுவயதில் நான் பாடிய பல பாடல்களை இன்று ஹாரிஸ் ஜெயராஜ் புண்ணியத்தில் சினிமாப் பாடல்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பள்ளிப் படிப்புக்குப் பிறகு எனக்கும் ஹார்மோனியத்துக்கும் தொடர்பில்லாமல் போனது. ஹார்மோனியத்தின் இடத்தை சிறிது காலம் மிருதங்கம் பிடித்துக் கொண்டது. முறையாக மிருதங்கம் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். கிருஷ்ணமூர்த்தி ஸாரும், அவர் மகன் ராஜூவும் எனக்கு மிருதங்க வகுப்பெடுத்தார்கள். இந்த ராஜூ பள்ளியில் என்னைவிட ஒரு வகுப்பு சீனியர். அவன் வகுப்பெடுக்கும் போதெல்லாம் மிருதங்கம் சொல்லிக் கொடுப்பதை விடவும் அவன் காலில் விழுந்து நான் வணங்குவதில் மட்டுமே அதிக பிரியம் காட்டுவான். அதில் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம். அவனாலேயே மிருதங்கத்தின் மீது எனக்கிருந்த விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாயிற்று. அதன் பிறகு வீரகேரளம்புதூர் விநாயகத்துப் பெரியப்பாவின் ரூபத்தில் ஹார்மோனியம் என் வாழ்வில் மீண்டும் நுழைந்தது. விநாயகத்துப் பெரியப்பா எங்கள் வீட்டு கொலுவுக்கு வரும் போதெல்லாம் அவர் ஹார்மோனியம் வாசித்தபடி இருமிக் கொண்டே பாட, நான் அவரது இருமலுக்கு பாதியும், பாட்டுக்கு மீதியுமாக மிருதங்கம் வாசிப்பேன். ‘நாத தனுமனிஷம்’ என்று பெரியப்பா ஆரம்பிக்கும் போதே ஹார்மோனியமும் சேர்ந்து அவருடன் இரும ஆரம்பிக்கும்.

பூட்டியிருந்த எங்கள் வீட்டின் மாடியறைக்குள் செல்ல, பக்கச் சுவர் வழியாக நண்பன் சந்திரஹாசனுடன் சேர்ந்து நான் போக முயலும் போது சுவற்றின் விளிம்புப் பகுதி உடைந்து கீழே விழுந்தேன். விளைவு, எனது இரண்டு மணிக்கட்டுகளும் முறிந்து போயின. ஆறு மாதத்துக்குப் பிறகு மிருதங்கம் வாசிக்க முயலும் போது அது இனிமேல் முடியாது என்பது தெரிய வந்தது. பூஜையறையின் ஒரு மூலையிலிருந்த ஹார்மோனியம் என்னை மெல்ல தன் பக்கம் இழுத்தது. மெல்ல மெல்ல நானாக வாசிக்கத் தொடங்கினேன். ஒருவிதப் பித்து தலைக்கேற, இரவுபகலாக ஹார்மோனியத்துடனேயே கிடந்தேன். மதுரைலிருந்து வரும் போது அப்பாவின் காரிலிருந்து ஒரு சின்ன கேஸியோ (casio) இறங்கியது. பல வாத்திய ஒலிகளடங்கிய அந்தப் புத்தம்புது வாத்தியத்துடன் சில காலம் கழிக்க, அடுத்து பெரிய கேஸியோ ஒன்றும் கிடைத்தது. இளையராஜாவின் பாடல்களனைத்தையும் வெறி பிடித்தவன் போல் வாசித்துக் கொண்டிருந்ததை கவனித்த விநாயகத்துப் பெரியப்பா, இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது என்று முடிவு செய்தவராய், அவரது நண்பர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். திருநெல்வேலியின் புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞரான அவர் பெயர் கிருஷ்ணய்யர்.

வயலின் என்றாலே நமக்கு ஞாபகம் வருகிற குன்னக்குடி வைத்தியநாதன் சாயலிலேயே கிருஷ்ணன் ஸாரும் இருப்பார். நெற்றியில் டிரா·பிக் சிக்னல் லைட்டும், உடம்பில் பொன்னாடைச் சட்டையும் இல்லாத வைத்தியநாதனே, கிருஷ்ணன் ஸார். பெரும்பாலும் சட்டை அணிய மாட்டார். வேஷ்டியின் இடுப்புப் பகுதியில் ஹியரிங் எய்டு மிஷின் இருக்கும். நாம் பேச ஆரம்பிக்கும் போது அதன் வால்யூமைக் கூட்டிக் கொள்வார். மனைவியை இழந்தவர். எல்லா திருநெல்வேலி பிராமணர்களையும் போல சுத்தமான நெல்லை பாஷைதான் பேசுவார். அபூர்வமாகவே பிராமண பாஷைச் சொற்கள் வரும். கூன் விழுந்தமாதிரிதான் உட்காருவார். அப்படி உட்கார்ந்திருக்கும் போது வயிற்றில் விழும் மடிப்புகளும், நெற்றியில் இருக்கும் சுருக்கங்களும் ஒரே மாதிரி இருக்கும். கிருஷ்ணன் ஸார் வயலின் கலைஞராக இருந்தாலும், எனக்கு ஹார்மோனியம் சொல்லிக் கொடுக்கச் சம்மதித்தார். ஹார்மோனியம் போக அவரிடம் புல்லாங்குழல், வீணை, வயலின் கற்றுக் கொண்ட மாணவர்களும் உண்டு. நான் ஏற்கனவே ஓரளவு ஹர்மோனியம் வாசிக்கக் கூடியவன் என்பதால் வெகு சீக்கிரத்திலேயே கிருஷ்ணன் ஸாரின் சீனியர் மாணவனானேன். அவர் வயலினில் வாசிக்கும் எதையும், நான் ஹார்மோனியத்தில் வாசித்து விட அவருக்கு பிரியமான, நம்பிக்கைக்குரிய சிஷ்யனானேன். அவர் இல்லாத நேரங்களில் என்னிடம் மற்ற மாணவர்களை பாடம் வாசித்து காட்டச் சொல்லும் அளவுக்கு என்னை உயர்த்தினார். வீணை கற்றுக் கொண்டிருந்த, கிட்டத்தட்ட வீணை சைஸிலுள்ள ஜானகி மாமிக்கு இது பொறுக்கவில்லை. ஒரு சின்னப் பயலிடம் போய் பாடத்தை வாசித்துக் காட்டுவதா என்று பொருமினார். ஸாரிடம் ஜாடைமாடையாக சொல்லியும் பார்த்தார். அவர் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அந்த மாமி செய்யும் தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டி என்னை சரியாக அவற்றை ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்டச் சொல்லி மாமியை மேலும் வெறுப்பேற்றுவார்.

எங்கள் வீட்டில் உள்ள ஹார்மோனியத்தை விடவும் கிருஷ்ணன் ஸார் வீட்டு ஹார்மோனியமே எனக்கு வாசிப்பதற்கு சுகமாக இருந்தது. இத்தனைக்கும் எங்கள் வீட்டு ஹார்மோனியம் புத்தம் புதியது. ஸாரின் ஹார்மோனியம் அருதப் பழசு. ஆனாலும் அதுவே எனக்கு பிடித்திருந்தது. என்னுடைய பாடம் முடிந்த பிறகும் நான் ஏதேனும் ராகங்கள் வாசிப்பேன். பெரும்பாலும் இளையராஜாவின் இசையில் உள்ள பாடல்கள்தான். வேஷ்டியின் மடிப்பில் உள்ள மெஷின் பக்கம் ஸாரின் கை தானாகச் செல்லும். ‘இது ஸ்ரீரஞ்சனில்லா? ஆரு போட்டது? அவந்தானா?’ தரையில் ‘இ’ என்று எழுதிக் காண்பித்து கேட்பார். ஆமாம் என்பேன். ‘அவனை வாரியலக் கொண்டு அடிக்க வேண்டாமா. என்னமா போட்டிருக்கான். இன்னொரு மட்டம் வாசி’ என்று கேட்டு, அவரும் வயலினை எடுத்துக் கொள்வார். சிம்மேந்திர மத்தியமம், அம்ருதவர்ஷினி, குந்தலவராளி, மணிரங்கு என பல ராகங்களில் இளையராஜா மெட்டமைத்த பாடல்களை வாசித்துக் காட்டி நான் கிருஷ்ணன் ஸாரிடம் அந்தந்த ராகங்களின் நுணுக்கங்கள் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வேன். அடிக்கடி சொல்வார். ‘ஒனக்கு குரு அவம்லா’. தரையில் எழுதி காண்பிப்பார் ‘இ’ என்று.

சென்னைக்கு நான் கிளம்பும்போது அவரிடம் சொல்லிக் கொள்ள போனேன். காலில் விழுந்து வணங்கியவனை திருநீறு பூசி ஆசீர்வதித்தவர், நான் சற்றும் எதிர்பாராவண்ணம் கட்டிப் பிடித்து ஓவென அழத் துவங்கிவிட்டார். உடைந்து உருகிப் போனேன். நீண்ட நேரம் கழித்தே என்னால் இயல்பு நிலைக்கு வர முடிந்தது. கிருஷ்ணன் ஸாரின் நான்கு மகன்களும் வயலின் கலைஞர்களே. திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவில் வாசித்து வந்தார்கள். ஸாரின் கடைசி மகன் பாலாஜிதான் எனது இசைத் தோழர். இன்றைக்கும் எனது இசை குறித்த எந்த ஒரு சந்தேகத்தையும் தீர்த்து வைப்பவர் அவரே. என்னைத் தொடர்ந்து பாலாஜியும் சென்னைக்கு வந்துவிட, கொஞ்ச நாளில் கிருஷ்ணன் ஸாரும் வந்து விட்டார். சென்னையில் சில நாட்கள் இளைய மகன் வீட்டிலும், சில காலம் மகள் வீட்டிலும், இன்னும் சில காலம் மற்றொரு மகன் வீட்டிலுமாக ஸார் இருந்தார். அவ்வப்போது பார்க்கப் போவேன். ஒருமுறை அவர் மகள் வீட்டில் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். கமலா அக்காதான் கதவைத் திறந்தார்கள். ‘ஏ அப்பா. தம்பிக்கு இப்போதான் அக்கா வீட்டுக்கு வர வளி தெரிஞ்சுதாக்கும்’ என்றபடியே வரவேற்றார்கள். ‘அப்பா, இங்கே பாரு, யாருன்னு’ சத்தமாகச் சொன்னார்கள். மெஷினை எடுத்துக் காதில் மாட்டியபடியே என்னைப் பார்த்த ஸாருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ‘ வா வா. இரி’ என்றபடியே தரையில் அமர்ந்தார். நானும் உட்கார, உட்கார்ந்தபடியே நகர்ந்து சற்றுத் தள்ளியிருந்த ஹார்மோனியம் ஒன்றை இழுத்து என் பக்கம் தள்ளினார். ‘·பர்ஸ்ட் கிளாஸ் சரக்காக்கும் ஜெர்மன் ரீடு.’ அந்த ஹார்மோனியத்தில் பெல்லோஸ் பக்கவாட்டில் இருந்தது. ஹிந்துஸ்தானி இசைக் கச்சேரிகளில் பார்த்திருக்கிறேன். வாசிக்க வாசிக்க வழுக்கிக் கொண்டு போனது. ‘ஸ்பீடு இளுக்கு பாத்தியா. நீ வந்து வாசிக்கணும்னு ஆசைப்பட்டேன். வந்துட்டே’ என்றார்.

பிறகு கொஞ்ச காலம் திருநெல்வேலி, இன்னொரு மகனுடன் திண்டுக்கல், பின் மறுபடியும் சென்னை என்று கிருஷ்ணன் ஸார் சுற்றிக் கொண்டிருந்தார். ‘அப்பா வந்திருக்கா’ என்று பாலாஜி ·போனில் சொல்வார். போய்ப் பார்ப்பேன். சந்தோஷமாக வரவேற்று சம்பிரதாயமாக, ‘சௌக்கியமா இருக்கேல்லா?’ என்று விசாரித்துவிட்டு, ‘பொட்டி வாசிக்கியா?’ என்று ஹார்மோனியத்தை எடுத்துத் தருவார். தானும் வயலினை எடுத்துக் கொள்வார். எப்படியும் எங்களது வாசிப்பில் ஏதாவது ஒரு ராகம் வழியாக இளையராஜா வந்துவிடுவார்.

பிறகு ரொம்ப நாட்களாகவே பாலாஜியின் வீட்டுக்கு கிருஷ்ணன் ஸார் வரவில்லை. திண்டுக்கல்லில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பாலாஜியைப் பார்க்கும் போதெல்லாம் விசாரித்துக் கொள்வேன். ஸாரை போய்ப் பார்க்க முடியவில்லை என்பதால் ஹார்மோனியமும் வாசிக்கவில்லை. வீட்டில் பெரிய கீபோர்டு இருந்தாலும் என்றாவது ஒரு நாள் என் மகன் வாசிக்கும் போது எடுத்து வாசித்துப் பார்ப்பதோடு சரி. கைக்கு அடக்கமான ஹார்மோனியம் வாசிப்பதில் உள்ள சுகம், அத்தனை பெரிய கீபோர்டில் கிடைப்பதில்லை. மற்ற வாத்தியங்களில் இல்லாத ஒரு சௌகரியம் ஹார்மோனியத்தில் உண்டு. ஸ்வரங்களை கண்ணால் பார்க்க முடிகிற ஒரே வாத்தியம் ஹார்மோனியமே. பிற வாத்தியங்களில் வாசித்துதான் சொல்ல முடியும். ஆனால் ஹர்மோனியத்தில் தூரத்தில் இருந்தே, அதோ அதுதான் ‘ஸ’, அதுதான் ‘க’ என கட்டைகளைக் காட்டி ஸ்வரங்களைச் சொல்லி விடலாம். இப்படி ஒரு வாத்தியத்தைப் போய், இது வெளிநாட்டில் இருந்து வந்து நம் சங்கீதத்தில் புகுந்ததாலோ என்னவோ, பாரதியார் எதிர்த்து எழுதியிருக்கிறார். அதுபோக ஹார்மோனியத்தில் உள்ள இன்னொரு விசேஷம், சங்கீதத்தின் ஆதார ஸ்வரங்களான ‘ஸ ப ஸ’ பிடித்து அதனுடனேயே ஒரு மனிதன் பாடினால், அவன் குரலைப் போலவே அந்த ஸ்வரங்களும் ஒலிக்கும். இந்த சங்கதி, சங்கீதம் நன்கு தெரிந்த எங்களூர் சுப்பையாவுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமே.

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு நாள் மாலையில் சாலிகிராமத்திலுள்ள சங்கரநாராயணர் கோயிலுக்குச் சென்றுவிட்டு அதன் நேர்திசையிலுள்ள தெரு வழியாக வந்து கொண்டிருந்தேன். ஒரு வீட்டின் மாடியில் உள்ள பால்கனியில் ஒரு சேரில் அமர்ந்தபடி தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன் ஸார். ஒரே சமயத்தில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். வேகவேகமாக அந்த மாடிப்படிகளில் ஏறி என் குருநாதரின் கால்களில் விழுந்தேன். ‘வா வா’ என்று என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். வழக்கம் போல் அவர் தரையில் உட்கார, நானும் அவருடன் அமர்ந்து கொண்டேன். வயதின் காரணமாக ஆள் ரொம்பவும் குறுகியிருந்தார். முகத்தில் பழைய தேஜஸ் இல்லை. ‘உடம்பு சரியில்லியா?’ என்றேன். ‘ இந்த ஒடம்பு என்னை விட்டுப் போவேனாங்கு. வேற என்ன சொல்லச் சொல்லுதெ?’ கண் கலங்கினார். என்னால் மேற்கொண்டு எதுவும் கேட்க முடியவில்லை. அவரே தொடர்ந்தார். ‘என் கூட சேந்த ஸெட்டு யாரும் இல்ல. பரபரன்னு தெக்கையும், வடக்கையும் சுத்துன காலம் போயி இப்போ ஒத்தைக்காட்டுக் கொரங்கு கணக்கா தனியா ஒக்காந்திருக்கேன். என்னைய இந்த நாசமாப் போற ஊர்ல கொண்டு வந்து நட்டுட்டானுவொ. எல்லாம் அந்த முண்டையச் சொல்லணும்.’ மேலே காண்பித்தார். எப்படியும் அன்று ஒருமணி நேரம் அவருடன் இருந்திருப்பேன். நாங்கள் இருந்த அறையில் எங்கள் கண் முன்னேயே ஹார்மோனியம் இருந்தது. ஆனால் அங்கிருந்து நான் கிளம்பும்வரை அவர் என்னை வாசிக்கச் சொல்லவேயில்லை. நானும் கேட்கவில்லை.

யுகசந்தி

விருகம்பாக்கம் ஏ.வி.எம். காலனியில் சில காலம் குடியிருந்தேன். அந்தப் பகுதி முழுவதுமே ஒரு குட்டி கிராமம் போல காட்சியளிக்கும். நான்கைந்து தெருக்களே உண்டு. மண்ரோடுதான். அந்த காலனியிலேயே சற்றுப் பெரிய கட்டிடம் என்று அங்குள்ள பிள்ளையார் கோயிலைச் சொல்லலாம். கோயிலைச் சுற்றி நல்ல விஸ்தாரமான பிரகாரம். முன்னே காலியாக நிறைய இடம். அதில் ஒரு வேப்ப மரம், மற்றும் அரச மரம். மாலை நேரங்களில் பெரும்பாலும் வயதானவர்கள் பேரன், பேத்திகளை அழைத்து வந்து, அவர்களை விளையாட விட்டு, பிள்ளையாரைப் பார்த்தபடியே அமைதியாக உட்கார்ந்து இருப்பர். இன்றைக்கு ஒளிபரப்பாகும் அநேக தொலைக்காட்சித் தொடர்களில் கதாநாயகிகளும், அவர்களின் அம்மாக்களும், சக்களத்திகளும் ஏ.வி.எம்.காலனி பிள்ளையாரிடமே தங்கள் குறைகளைச் சொல்லி முறையிடுகின்றனர்.

ஏ.வி.எம். காலனியில் நான் குடியிருந்த வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் ஒரு பிராமணக் குடும்பம் குடியிருந்தது. காலனியிலேயே அந்த வீடு ரொம்பப் பிரபலம். எப்போதும் அந்த வீடு சத்தமாகவே இருக்கும். ஒன்று அந்தக் குடும்பத் தலைவர் கடுமையான சத்தத்தில் குடும்பத்து உறுப்பினர்களை திட்டிக் கொண்டிருப்பார். இல்லையென்றால் உரத்தக் குரலில் பாடுவார். பெரும்பாலும் ஹிந்திப் பாடல்கள்தான். பாபி திரைப்படத்தின் புகழ்பெற்ற ‘பேஷாக் மந்திர்’ பாடலை அப்படியே சன்ச்சல் குரலில் பாடுவார். உச்ச ஸ்தாயியில் பிசிறடிக்காத குரலில் அந்த பாடலை கேட்கும் போதெல்லாம் வீட்டுக்கு வெளியே வந்து வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றபடி ரகசியமாக அவர் பாடுவதை ரசிப்பேன். ஒரு நாளாவது அந்தக் குரலுக்கு சொந்தக்காரரிடம் பேசவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அவரது சத்தமான பிற அர்ச்சனைகளுக்கும் என் காது பழக்கப்பட்டிருந்ததால் அந்த முயற்சியை எடுக்க மனம் துணியவில்லை. காலையிலும், மாலையிலும் குளித்து, நீரில் குழைத்துப் பூசிய திருநீற்று மணத்துடன் பஞ்சக்கச்சம் கட்டி, பட்டு அங்கவஸ்திரத்தை உடம்பில் போர்த்தியபடி அவர் கோயிலுக்குப் போவதைப் பார்ப்பேன். அவரது உயரமும், மீசையில்லாத கடுகடுத்த முகமும் பார்த்தவுடன் பதறிக் கும்பிடத் தோன்றும்.

ஏ.வி.எம் காலனி பிள்ளையார் கோயிலில் ஒரு குருக்கள் மாதச் சம்பளத்துக்கு பூஜை பண்ணிக் கொண்டிருந்தார். வேகமாக உரத்தக் குரலில் அவர் சொல்லும் மந்திரங்களில் நமஹ, ஓம், ஸ்வாஹா போன்ற ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே நம் காதில் தெளிவாக வந்து விழக் கூடியவை. மற்றவையெல்லாம் இப்படி அப்படிதான் இருக்கும். பிள்ளையாரும் அதை கண்டுகொள்வதில்லை. ஆனால் நமது ஐயர் கோயிலுக்குள் வந்துவிட்டாரென்றால் குருக்கள் பாடு திண்டாட்டமாகிவிடும். எல்லா மந்திரங்களையும் ஸ்பஷ்டமாக உச்சரிக்கச் சொல்லி பிராணனை வாங்கி விடுவார். சமயங்களில் மந்திரம் சொல்லி முடித்து பூஜையைத் துவங்க குருக்கள் முற்படும் போது ஐயர் உள்ளே புகுந்து மீண்டும் ஒன்றிலிருந்து துவங்கச் சொல்வார். அப்போதெல்லாம் பிள்ளையாரே ஐயரிடம் ‘அவன் ஏதோ பஞ்சத்துக்கு பூஜை பண்றான். அவனை விட்டுடேன் பாவம்’ என்று சொல்வது போல் இருக்கும். இதற்காகவே குருக்கள் ஒரு புத்தகத்தை வாங்கி கருவறைக்குள்ளேயே வைத்து விட்டார். எல்லா சமயமும் குருக்கள் அதை பயன்படுத்துவதில்லை. ஐயர் தலை தெரிந்து விட்டால் அனிச்சையாகவே அவர் கை அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து விடும். தினமும் காலையிலும் மாலையிலும் கோயிலுக்குச் சென்று குருக்களை பாடாய் படுத்தி பிள்ளையாரை வழிபடும் ஐயர், அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் அழுக்கு வேஷ்டியை மடித்துக் கட்டியபடி மதியப் பொழுதுகளில் பஸ்ஸ்டாண்ட் பக்கத்திலுள்ள பெட்டிக்கடையில் சிகரட் பிடித்துக் கொண்டிருப்பார்.

ஒரு கோடைகாலத்து மாலையில் வீட்டு வாசலில் உள்ள வேப்பமரத்தின் அடியில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து எனக்கு ரொம்பப் பிடித்த ஜெயகாந்தனின் ‘விழுதுகள்’ குறுநாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். ஓங்கூர் சாமியாரிடம் மனதைப் பறி கொடுத்து ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் ஏதோ நிழலாடியது. நிமிர்ந்து பார்த்தால் எதிர் வீட்டு ஐயர். சடாரென்று எழுந்து நான் பேசத் துவங்கும் முன் அவர் , ‘ஐ ஆம் சந்தானம்’ என்று கைகுலுக்கினார். இன்னொரு நாற்காலியை போட்டு அவரோடு நானும் அமர்ந்து கொண்டேன். ‘தூரத்திலிருந்து பாக்கும் போதே நீர் ஏதோ படிக்கிறது தெரிஞ்சது. என்னமோ பக்கத்துல வந்து பாக்கத் தோணித்து. நீரும் என்னை மாதிரியே ஜேகே படிக்கிறவர்னு தெரிஞ்சு சந்தோஷம்’ என்றார். பேச்சுவாக்கில் தன்னைப் பற்றி சொல்லத் துவங்கினார். வட இந்தியாவில் பல வருடங்கள் வேலை பார்த்து ஓய்வு பெற்ற அவர் ஜேகேயின் தீவிர ரசிகர் என்றும், நீண்ட காலம் கழித்து சென்னைக்கு வந்துவிட்டதாகவும் சொன்னார். என்னிடம் ஜேகேயின் எல்லா எழுத்துக்களும் இருக்கும் விஷயத்தைச் சொல்லி எது வேண்டுமோ, கேளுங்கள். தருகிறேன் என்றேன். ‘யுகசந்தி இருக்கா உம்மக்கிட்டே. அத படிக்கணும் ஓய்’ என்றார். ஜெயகாந்தனின் சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பின் இரண்டாம் பகுதியில் அந்த கதை உள்ளது. அந்த தொகுப்பை உடனே வீட்டுக்குள்ளே போய் எடுத்து வந்து கொடுத்தேன். பிறந்த குழந்தையை வாங்குவது போல் கவனமாக, ஆசையாக இரண்டு கைகளிலும் வாங்கினார். கண்கள் கலங்கச் சொன்னார். ‘ யூ நோ சம்திங்க்? அ·ப்டர் ட்வெண்டி ·பைவ் இயர்ஸ், ஐ அம் கோயிங்க் டு ரீட் ஜேகே. தேங்க் யூ வெரிமச்.’ சொல்லிவிட்டு விறு விறுவென நடந்து சென்றார். அன்றிலிருந்து நான்கு நாட்களுக்கு அவர் வீட்டின் வரவேற்பறையின் விளக்கு இரவு வெகுநேரம் எரிந்து கொண்டிருந்தது.

அடுத்தடுத்து ஜெயகாந்தனின் மற்ற நூல்களையும் அவருக்கு கொடுத்தேன். மெல்ல மெல்ல அவர் வீட்டின் சத்தம் குறையலாயிற்று. அவரது மனைவி, மகள்கள், மகன் என்று மொத்தக் குடும்பமும் எனக்கு நெருக்கமானார்கள். ‘உங்களுடன் பழக ஆரம்பித்த பிறகுதான் அப்பா சாந்தமாகியிருக்கிறார்’ என்றார் பிரசவத்துக்கு தாய் வீட்டிற்கு வந்திருந்த அவரது மூத்த மகள். கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த பின் தாங்கள் மாம்பலத்தில் இருந்ததாகவும், அங்கு இருக்கப் பிடிக்காமல் விருகம்பாக்கத்துக்கு வந்ததாகவும் சொன்னார். ‘ஏன், மாம்பலம் நல்ல ஏரியாதானே’ என்று கேட்டதற்கு ‘ஐய்யய்யோ, அங்கெல்லாம் ஒரே பிராமின்ஸ்’ என்றார் கல்கத்தாவிலேயே வளர்ந்த அந்தப் பெண். என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சந்தானம் இப்போது என்னிடம் நன்றாகப் பேச ஆரம்பித்திருந்தார். எனக்கு பிடித்த ஹிந்தி பாடல்களை பாடச் சொல்லி கேட்டு மகிழலானேன். அதில் என்னை கண்கலங்க வைக்கும் பாடல், ஆராதனா திரைப்படத்தில் எஸ்.டி.பர்மன் பாடிய ‘காஹே கஹோ’. வங்க தேசத்தின் நாட்டுப்புற மெட்டில் அமைந்த அந்த பாடலை சந்தானம் பாடும் போதெல்லாம் நான் எங்கோ தொலைதூரத்தில் இருப்பதாக உணர்வேன்.

ஏஷியாநெட்டில் ஒரு நாள் மோகன்லால் நடித்த ‘பவித்ரம்’ என்ற மலையாளப்படம் பார்த்தேன். ஒரு சமையல் குடும்பத்தில் பிறந்த மோகன்லாலின் தாயார் எதிர்பாராவிதமாகக் கர்ப்பமடைந்து விடுவார். மோகன்லாலுக்கு திருமணமான ஒரு அண்ணன் உண்டு. டாக்டரான அவர் வெளியூரில் வசிப்பார். தன் தாயார் கர்ப்பமான செய்தி அறிந்த மோகன்லால், அவசர அவசரமாக வீட்டுக்கு ஓடிவருவார். உள்ளே நுழைந்தவுடன் தகப்பனாரிடம் அம்மா எங்கே என்று கேட்பார். தர்மசங்கடத்தில் தவிக்கும் அவரது தகப்பனார் மகனின் முகம் பார்க்காமலேயே அங்குதான் எங்காவது இருப்பாள் என்று சொல்லி நழுவி விடுவார். அம்மா என்றழைத்தபடி வீடு முழுக்க மகன் வளைய வரும்போது அவரது தாயார் தன் அறையில் நின்று கொண்டு திருமண வயதில் உள்ள தன் மகனை இந்த நிலைமையில் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று யோசித்தவாறே கூனிக்குறுகிச் சுவற்றுப் பக்கம் திரும்பி நின்றபடிக் காத்திருக்க, அவர் அறையின் வாசலில் வந்து நிற்கிறார் மோகன்லால். இனி வேறு வழியில்லை என்பதால் பெரும் கூச்சத்துடன் திரும்பி மகனை நிமிர்ந்து அந்தத் தாய் பார்க்கிறாள். மடித்துக் கட்டியிருந்த வேஷ்டியை அந்த மகன் அவிழ்த்துவிட, மாங்காய்கள் கொட்டுகின்றன. அன்று மாலையே என் வாத்தியார் பாலு மகேந்திராவைப் போய் பார்த்தேன். ‘இப்படி ஒரு காட்சியை நம் தமிழ் சினிமாவில் பார்க்க முடியுமா. மலையாளிகள் வாழ்க்கையிலிருந்து படம் எடுக்கிறார்கள். நமக்கெல்லாம் அந்த மாதிரியான உணர்வு எப்போது வரப் போகிறது’ என்றெல்லாம் புலம்பினேன். பொறுமையாக நான் சொல்வதைக் கேட்ட வாத்தியார், ‘நீ ஜேகேயோட ‘மௌனம் ஒரு பாஷை’ படித்ததில்லையா’ என்று கேட்டார். வெட்கிப் போனேன். நான் எப்படி ஜேகேயின் எழுத்தை விட்டிருக்கிறேன். அன்று இரவே சந்தானத்தை சந்தித்து இதை சொன்ன போது ‘மௌனம் ஒரு பாஷை’ முழுக்கதையையும் உணர்ச்சி பொங்க ஒப்பித்தார். அதன் பிறகே அந்த கதையை படித்தேன்.

ஜேகேயின் எழுத்துக்களைப் படிப்பதை விடவும் அதை பற்றிப் பேசுவதில் ஆர்வம் அதிகமானது சந்தானத்தின் மூலமாகத்தான். எதைப் பற்றி பேசினாலும் அதில் ஜேகேயை கொண்டு வந்து விடுவார். ‘தவறுகள் குற்றங்கள் அல்லன்னு தலைப்பிலேயே கதையை சொல்லிட்டாரே மனுஷன். அதில வர்ற ஜஸ்ட் எ ஸ்லிப் நாட் எ ·பால், ஞாபகம் இருக்கா’ என்பார். ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகத்தில வருகிற ஹென்றி, துரைக்கண்ணு, நான் ஜன்னலருகே உட்காந்திருக்கிறேனில் வரும் அந்த பாட்டி, குருபீடத்தின் பிச்சைக்காரன், இறந்த காலங்களில் வரும் ஓசியிலேயே கெட்டுப் போகும் அந்த பிராமணத் தாத்தா, சில நேரங்களில் சில மனிதர்களில் வரும் வெங்கு மாமா, ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன அலங்காரவல்லியம்மாள் என சந்தானத்தையும் என்னையும் சுற்றி ஜேகேயின் கதைமாந்தர்கள் உலவிவந்த நேரம் என் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்த காலங்களில் ஒன்று. அதற்குப் பிறகு நாங்கள் ஏ.வி.எம் காலனியை விட்டு வந்து விட்டோம். சந்தானமும் வேறு பகுதிக்கு வீடுகட்டிப் போய் விட்டார். தொடர்பில்லாமல் போனது. திடீரென்று ஒரு நாள் அவரது சஷ்டியப்த பூர்த்தி விழாவிற்கு அழைப்பு கொடுப்பதற்கு தம்பதி சமேதராக என்னைத் தேடி வீட்டுக்கே வந்தார்கள். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டோம். என்னை மறந்திருப்பார் என்றே நினைத்திருந்தேன். ‘வராம இருந்திராதீரும்’ என்றார். நானும், என் மனைவியும் சென்றோம். மணமேடையில் அமர்ந்தபடி சந்தானம் தம்பதியர் நெருங்கிய ரத்த உறவுகளுக்கு வேஷ்டி சேலை கொடுத்து கௌரவித்து வந்தனர். சற்றும் எதிர்பார்க்காத வேளையில் என்னையும் என் மனைவியையும் அழைத்து அதே மரியாதையை எங்களுக்கும் பண்ணினார். எங்களை அவர்களின் உறவினர்களோடு மணமேடையில் அமர வைத்து சந்தனம், குங்குமம் கொடுத்து பன்னீர் தெளித்து ஒரு தாம்பாளத்தில் வேஷ்டி, புடவை வைத்துக் கொடுத்து மகிழ்ந்தார். நான் கொஞ்சம் நெகிழ்ந்துதான் போனேன். அந்த மணிவிழாத் தம்பதியரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, மனம் நிறைந்து வீட்டுக்குத் திரும்பும் போது என் மனைவி கேட்டாள்.

‘அப்படி என்ன நம்ம மேல அவங்களுக்கு அப்படி ஒரு பிரியம்?’

சட்டென்று என் மனதில் தோன்றிய பதில் இதுதான்.

‘யுகசந்தி’.

விஞ்சை விலாஸின் சுவை

நண்பர் செழியன் ஒருமுறை கேட்டார். ‘திருநெல்வேலியில ஒரு சின்னக் கடையில இட்லி சாப்பிட்டேன். அப்படி ஒரு ருசி. முறுக்கெல்லாம் கொடுத்தாங்க.அது என்ன கடை?’என்று. அந்தக் கடையின் பெயர் விஞ்சை விலாஸ். திருநெல்வேலி டவுணுக்குள் நுழையும் போது ஒரு பழைய ஆர்ச் பச்சைக் கலரில் வளைந்து நிற்கும். அதற்கு கொஞ்சம் அருகில் இடதுகைப்பக்கம் இருக்கிறது விஞ்சை விலாஸ். அதிகபட்சம் நான்கைந்து பெஞ்சுக்களே உண்டு. அதன் உரிமையாளரான கைலாசம் பிள்ளை தாத்தா உடம்பு, நெற்றி எல்லாம் நீறுமணக்க கல்லாவில் அமர்ந்திருப்பார். கழுத்தில் ஸ்படிக, ருத்திராட்ச மாலைகள். சின்ன பத்மினி ஊதுபத்தியைப் பொறுத்தி வைத்திருப்பார். அந்தப் பத்திப் பாக்கெட்டிலேயே ஒரு சின்ன துளை உண்டு. அதில் பத்தியை பொறுத்தி நிறுத்தியிருப்பார். அந்த வாசனை எப்போதுமே விஞ்சை விலாஸில் நிறைந்து நிற்கும். இன்றைக்கும் கைலாசம்பிள்ளைத் தாத்தாவை நினைக்கும் போதெல்லாம் அந்தப் பத்தியின் வாசனையையும் நுகர முடிகிறது. தாத்தாவுக்கு வயிறு வரை நீண்டு படர்ந்திருக்கும் வெண்ணிற தாடி. சட்டை அணிந்திருக்க மாட்டார். செக்கச் செவேலென இருப்பார். சின்ன வயதில் மதுரை பஸ்ஸ்டாண்டில் தமிழகம் எண்ணெய்ப் பலகாரக் கடை போர்டைப் பார்க்கும் போதெல்லாம் கைலாசம்பிள்ளைத் தாத்தாவுக்கு மதுரையிலும் ஒரு கடை இருப்பதாகவே நினைத்துக் கொள்வேன். அந்த போர்டில் உள்ளவர் ஈ.வெ.ரா. பெரியார் என்னும் விவரம் ரொம்ப நாட்கள் கழித்தே எனக்கு தெரிய வந்தது.

விஞ்சை விலாஸில் மிருதுவான இட்லியும், வீட்டு தோசை போன்ற குட்டி தோசையும், எள் மற்றும் சாதா மிளகாய்ப் பொடியும் கிடைக்கும். இது போக தேங்காய்ச் சட்னியும், சாம்பாரும் உண்டு. கைமுறுக்கு, அதிரசம், நெய்விளங்காய் போன்றவை அங்கே ரொம்ப விசேஷம். வேறு எங்குமே சாப்பிட முடியாத ருசியுடன் சின்ன ஆம வடையும் அங்கு கிடைக்கும். சில குறிப்பிட்ட நாட்களில் அடை போடுவார்கள். ஒரு நாள் நானும் குஞ்சுவும் சினிமாவுக்குக் கிளம்பிப் போய் கொண்டிருந்தோம். வீட்டைவிட்டு கொஞ்ச தூரம் வந்தவுடன் எனக்கு பசியெடுப்பதாகச் சொன்னேன். தான் இப்போதுதான் வீட்டில் சாப்பிட்டு வந்திருப்பதாகவும், கொஞ்ச நேரம் பொறுத்துக் கொண்டால் சினிமா முடிந்து இருவருமே ஹோட்டலுக்கு போய் நன்றாக சாப்பிடலாம் என்றான் குஞ்சு. எனக்கோ பசி பொறுக்க முடியவில்லை. நடந்து வந்த வழியில் விஞ்சை விலாஸ¤ம் வந்துவிட்டது. கால்கள் அதற்கு மேல் நகர மறுத்தன. ‘சொன்னா கேக்க மாட்டியே, கொஞ்ச நேரம் கழிச்சுன்னா நானும் நல்லா சாப்பிடுவேம்லா’ என்று சலித்தபடியே ,’சரி வந்துத் தொலை’ என்று விஞ்சைக்குள் நுழைந்தான் குஞ்சு. அப்போதுதான் இட்லி ஊற்றித் தட்டியிருந்தார்கள். எல்லாமே சுடச்சுட பரிமாறப்பட ஐந்து இட்லிகளில் எனக்கு வயிறு நிறைந்து விட்டது. அப்போதுதான் சாப்பிட்டு வந்திருக்கும் காரணத்தால் நான்கு இட்லிகளும், இரண்டே இரண்டு தோசைகளும், ஒரு கல்கண்டு பாலும் குடித்து முடித்து, வாயைத் துடைத்துக் கொண்டே, ‘சீக்கிரம் வா படம் போட்டிருவான்’ என்றபடியே எழுந்தான் குஞ்சு. கைலாசம் பிள்ளைத் தாத்தாவிடம் பில் பணம் கொடுக்கும் போது, ‘இன்னைக்கு அடை போடமாட்டேளோ தாத்தா?’ என்று கேட்டுக் கொண்டான்.

சென்னைக்கு வந்த பிறகு என்னைப் போன்ற சைவர்களுக்கு சரவண பவனை விட்டால் வேறு கதியில்லை. இப்போது வசந்த பவன். திருநெல்வேலியின் ஓர் ஓரத்தில் சின்னஞ்சிறிய கடையான விஞ்சை விலாஸின் சுவை நாக்கிலேயே தங்கிவிட்டது.அதை மறக்காமல் இருக்கும் வண்ணமே சரவணபவனும், வசந்தபவனும் பேருதவி புரிகின்றன. பெரும்புகழ் பெற்ற முருகன் இட்லிக் கடையுமே விதிவிலக்கில்லை. எல்லாவற்றிலும் ஆடம்பரமே. விலையிலும், சுவையிலும். ஆனால் சென்னையில் வசிக்கும் மக்கள் சரவணபவனை கொண்டாடுகிறார்கள். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூதானே சர்க்கரை.

‘சதிலீலாவதி’ படப்பிடிப்பின் போது தயாரிப்பு ஊழியர்கள் ஒரு மாலையில் ‘ஸாருக்கு திருநெல்வேலில டி·பன் வாங்க மறந்துடாதிங்க’ என்று பேசிக் கொண்டனர். ஸார் என்று அவர்கள் சொன்னது கமலஹாஸனை. திருநெல்வேலி என்று அவர்கள் எதை சொல்கிறார்கள் என்று குழம்பிப் போனேன். ஒருமணிநேரத்தில் திருநெல்வேலிக்கு போய் டி·பன் வாங்கிவிட முடியுமா என்ன? அப்போதுதான் என் கேள்விக்கு விடை கிடைத்தது. விடை அளித்தவர், தயாரிப்பு நிர்வாகி சுந்தர்ராஜன் மாமா. ‘ உனக்கு தெரியாதாடா . . நாளைக்கு காலையிலே உன்னை கூட்டிக்கிட்டு போறேன்’. சொன்னபடியே கூட்டிக் கொண்டு போனார். சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரே ஒரு தாழ்வான கட்டிடத்தில் ‘திருநெல்வேலி சைவாள் ஹோட்டல். உரிமையாளர் – இசக்கியம்மாள்’ என்று ஒரு அழுக்கு போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. அதில் எப்போதோ வைத்த சந்தனக் குங்குமப் பொட்டு காய்ந்திருந்தது. உள்ளே நுழைந்தவுடன் ஒரு திருநெல்வேலி வாசனை அடித்தது. இருட்டு லாலாக் கடை போன்றே ஒரு மங்கலான வெளிச்சம் கடைக்குள் இருந்தது. புகை படிந்த நான்கைந்து பெஞ்சுக்கள். கல்லாவில் உரிமையாளர் உட்கார்ந்திருந்தார். கருத்த, தடித்த உடல். பெரிய மூக்குக் கண்ணாடி. நெற்றியில் திருநீறு. ‘எல, என்ன வேணும் கேளு’ என்றார். இரண்டு சப்ளையர்களும் அவர் மகன்கள் என்பது புரிந்தது. மூத்தவன் அப்படியே அவர் அப்பாவைப் போல. இளைய மகன் கொஞ்சம் பலவீனமாக அப்பாவின் சாயலில்லாமல், ஆனால் கண்ணாடி மட்டும் அணிந்திருந்தார். சுந்தர்ராஜன் மாமா சொல்லியிருந்த எண்ணெய் தோசை வந்தது. தொட்டுக் கொள்ள இரண்டு விதமான மிளகாய்ப் பொடிகள் மற்றும் சாம்பார், தேங்காய்ச் சட்னி. வெங்காயச் சட்னி காரச் சட்னி என்னும் பெயரில் வந்தது. அப்படியே விஞ்சை விலாஸில் சாப்பிட்ட மாதிரியே இருந்தது.

திருநெல்வேலி சைவாள் ஹோட்டலின் வாடிக்கையாளனாக ஆகிவிட்ட பிறகு எனது முகம் அவர்களுக்கு பழக்கப் பட்டுவிட்டது. உரிமையாளர் கருப்பையா பிள்ளையும் என்னைப் பார்த்தால் ‘வாங்க . . எங்கே ஆளையே காணோம். ஊருக்கு போயிட்டேளோ’ என்று சிரித்தபடியே வரவேற்க ஆரம்பித்திருந்தார். திருநெல்வேலியை விட்டு வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட அவர், அவரது உறவினர்கள் ஒரு சிலரைப் பற்றி என்னிடம் சொல்லியிருந்தார். அவர்களை எனக்கும் தெரிந்திருந்தது. அவரைத் தவிர அவரது இரண்டு மகன்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆச்சியின் குரலை மட்டும் கேட்டிருக்கிறேன். அடுப்படியில் நிற்பது அவர்கள்தான். அங்கிருந்து பதில் சொல்வர்கள். ‘கல்லு காயுது. செத்த நேரம் ஆகும்’. மகன்கள் இருவரது வாயிலும் திருநெல்வேலி பாஷையின் சுவடே இல்லை. மிளகாய்ப் பொடியை சென்னைக் காரர்கள் மாதிரி இட்லிப் பொடி என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் சென்னைக்கு பழகியிருந்தார்கள்.

ஒரு நாள் இரவு நேரத்தில் சாப்பிடப் போனேன். கல்லாவில் கருப்பையா பிள்ளையின் பெரிய மகன் உட்கார்ந்திருந்தார். இளைய மகனிடம் கேட்டதற்கு அப்பா படுத்துட்டாரு என்றார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு சின்னக் குழந்தை வீட்டுக்குள்ளிருந்து வந்து என்னருகில் நின்று ஏதோ கேட்டது. என்ன கேட்கிறது என்று புரியவில்லை. சாப்பிடுறியா? என்றேன். அதற்குள் உள்ளிருந்து அதன் தாயார் வந்து , ‘மாமாவை தொந்தரவு பண்ணக் கூடாது. சாப்பிடுதாங்கல்லா’ என்றபடியே தூக்கிக் கொண்டு போனார்கள். கருப்பையா பிள்ளை தன் மகனுக்கு திருநெல்வேலியிலிருந்து பெண் எடுத்திருக்கிறார் என்பது அந்தப் பெண் பேசிய பாஷையிலேயே தெரிந்தது. அதன் பிறகு அதிகம் அங்கு போக முடியவில்லை. ஒரு நாள் அதிகாலை படப்பிடிப்புக்கு காரில் போய்க் கொண்டிருக்கும் போது திருநெல்வேலி சைவாள் ஹோட்டலின் வாசலில் பெஞ்சு ஒன்றை கழுவி அதில் கருப்பையா பிள்ளையின் புகைப்படம் ஒன்று மாலையணிவித்து வைக்கப் பட்டிருந்தது. போய் கேட்டிருக்கலாம்தான். அப்பாவுக்கு என்ன செய்தது என்று. அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான அவசரம். அதற்குப் பிறகு அந்தக் கடை அவ்வப்போது மூடியிருக்கும். திறந்திருக்கும். நான் போகவேயில்லை.

இளையராஜா அவர்களை பிரசாத் ஸ்டூடியோவில் போய் பார்த்துவிட்டு வாத்தியார் பாலு மகேந்திராவும், நானும் வெளியே வந்தோம். ‘பசிக்குதுடா. வா போய் ஏதாவது சாப்பிடலாம்’ என்றார் வாத்தியார். பிரசாத் ஸ்டூடியோவுக்கு நேரெதிரே உள்ள ‘அக்ஷயா’ ஹோட்டலுக்குள் நுழைந்தோம். அது கொஞ்சம் ஆடம்பரமான ஹோட்டல். வாத்தியாருக்காக வேறு வழியேயில்லாமல் மனசுக்கு பிடிக்காமலேயே போனேன். இளையராஜாவின் குழுவில் வாத்தியம் வாசிப்பவர்கள், மற்றும் ஸ்டூடியோவுக்கு வரும் மற்ற திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் என அந்த ஹோட்டல் எப்போழுதுமே பிஸியாக இருக்கும். வாத்தியாரும், நானும் போய் இடம் பிடித்து உட்கார்ந்தோம். ‘என்ன ஸார் சாப்பிடுறீங்க?’ கேட்ட சப்ளையரை பார்த்தேன். கருப்பையா பிள்ளையின் இளைய மகன்.