குஜராத் மீல்ஸும், காஷ்மீர் டீயும் . . .

நீண்ட நாட்களாகவே மனோஜ் சொல்லிக் கொண்டிருந்த குஜராத் மீல்ஸ் கடைக்கு இன்று அழைத்துச் சென்றான். ஒளிப்பதிவாளர் மார்ட்டினின் புல்லட் பின்னால் நான் அமர்ந்து கொள்ள, முன்னால் ‘பெண்கள்’ வாகனம் ஒன்றில் மனோஜ் வேகமாக சென்று கொண்டிருந்தான். அவ்வப்போது நாங்கள் வழி தவறி மனோஜை தொடர்பு கொண்டு ‘எங்கேடா இருக்கே? இன்னும் எவ்வளவு தூரம்டா?’ என்று கேட்டுக் கொண்டே பயணித்தோம். சுட்டெரிக்கும் வெயிலில் பசியும் சேர்ந்து கொள்ள, வாடி வதங்கி செல்லும்போது எக்மோர் ரயில்வே நிலையம் வந்தது.

‘மார்ட்டின்! இவன் நம்மள கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல ஏத்தி நாஞ்சில் நாட்டுல ஏதோ சாப்பாட்டுக் கடைக்குக் கூட்டிட்டுப் போறதுக்கு பிளான் பண்றான்’ என்றேன்.
‘சேச்சே! அப்படில்லாம் இருக்காது’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கினார், மார்ட்டின்.

அடுத்த ஃபோனில் ‘பக்கத்துல வந்துட்டோம் ஸார்’ என்றான் மனோஜ். அடுத்து புரட்சி தலைவர் டாக்டர எம் ஜி ஆர் மத்திய ரயில் நிலையம் . . . ஸ்ஸ்ஸ் . . . எங்கே விட்டேன்? ஆங்! சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும் இந்த முறை மார்ட்டினுக்கும் சந்தேகம் வந்தது. ‘ஏங்க? இவன் குஜராத் மீல்ஸை குஜராத்துக்கேக் கூட்டிட்டுப் போய் சாப்பிட வைப்பானோ?’ என்றார். இந்த முறை மனோஜே ஃபோன் பண்ணி ‘பக்கத்துலதான் ஸார்’ என்றான். பதிலுக்கு நான் சொன்ன பீப் வார்த்தைகளை வழக்கம் போல கண்டுகொள்ளாமல் ஃபோனை வைத்தான்.

ஒரு வழியாக பிராட்வே மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து உள்ளே சென்று குஜராத் கடையை அடைந்தோம். மார்ட்டின் பரவசமானார். ‘நான் குஜராத்துக்கு போனதே இல்லங்க’ என்றார். கொஞ்சம் நெருக்கடியான இடம்தான். பல ஆண்டுகளாக புகழ் பெற்று விளங்கக் கூடிய கடை என்பது அதன் வாடிக்கையாளர்களைப் பார்க்கும் போது தெரிந்தது. அவர்களில் ஒருவன் மனோஜ்.



வழக்கமாக தனக்கு ஹிந்தி தெரியாது என்று (என்) தலையில் அடித்து சத்தியம் செய்யும் மனோஜ் சரளமாக ஹிந்தி பேசி எக்ஸ்டிரா சப்பாத்திகளை வாங்கிக் கொண்டான். முறைத்த என்னைப் பார்த்து ‘அன்லிமிட்டட் ஸார்’ என்றவன், சப்ளையரைப் பார்த்து என்னைக் காண்பித்து ஹிந்தியில் ஆபாசமாக ஏதோ சொன்னான். என் தட்டில் மேலும் சப்பாத்திகள் விழுந்தன. தொடு கறிகள், ஊறுகாய், சோறு, சாம்பார், ரசம் என்று மேலும் உணவுவகைகள் அணிவகுத்து வந்து சேர்ந்தன. இந்த முறை கிளுகிளுப்பாக ஹிந்தியில் ஏதோ கேட்டான் மனோஜ். எனக்கு அந்த ஒலி ‘ஊ சொல்றியா மாமா’வாக ஒலித்ததால் மஞ்சள் நிறத்தில் வந்த அந்த திரவத்தை மறுத்தேன். மார்ட்டினுக்கு ‘ஓ சொல்றியா மாமா’வாக அது ஒலித்திருக்க வேண்டும். ஒரே மடக்கில் குடித்து முடித்தார். மாம்பழ ஜூஸுங்க. ஓவர் தித்திப்பு என்றார்.

வழக்கம் போல நண்பர்கள் குழுவுக்கு சாப்பாடு புகைப்படங்கள் அனுப்பி வைத்தேன்.



விக்னேஷ் சுப்பிரமணியம் (விக்கி) ‘அண்ணாச்சி! அதென்ன ஓலைச்சுவடி மாதிரி சுருட்டி வச்சிருக்கான்?!’ என்று கேட்டார்.

அது ‘அப்பளம் மேலகரத்துத் தம்பி’ என்றேன்.

‘அது பப்பட்லா’ என்றார் ரஜினி ரசிகர் என்கிற கவிஞர் ஹரன் பிரசன்னா.
‘நம்மூர்ல அதை அப்பளம்னுதானவே சொல்லுவோம்’ என்றேன்.
‘அப்பம் ரெண்டெண்ணம் வாங்கி நொறுக்கிப் போட்டு தின்னுங்க அண்ணாச்சி’ என்றார்.
‘அதெல்லாம் முடிச்சுட்டுத்தானவே ஃபோட்டோவே போட்டேன்’ என்றேன்.
‘ஒரு திருநவேலிக்காரனா ரொம்பப் பெருமையா இருக்கு அண்ணாச்சி’ என்று ஒருசில ஆனந்தக் கண்ணீர்த் துளிகளை அனுப்பி வைத்தார் பிரசன்னா.



சாலிகிராமம் வந்து சேரும் போது மார்ட்டினின் முதுகில் சாய்ந்து உறங்கியிருந்தேன். உறக்கம் கலையும்போது என் வீட்டுக்கு அருகே உள்ள Tea time கடையில் வண்டி நின்றது. வழக்கமாக நானும், மார்ட்டினும் அங்கு தேநீர் அருந்துவதுண்டு. ‘எனக்கு மாம்பழ ஜூஸ் குடுத்துட்டு அவன் தப்பிச்சுட்டான். நெஞ்சுக்குள்ளேயே நிக்குது. ஒரு இஞ்சி டீ அடிப்போம்’. புல்லட்டை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார், மார்ட்டின். நான் ‘காஷ்மீர் டீ’ சொன்னேன்.

‘ஏன் காஷ்மீர் டீ?’ என்று கேட்டார், மார்ட்டின்.

‘நான் காஷ்மீருக்கு போனதில்ல. அதான்’ என்றேன்.

கடிதத்திலிருந்து விருது வரை . . .

வாணி மகாலுக்குள் நுழைந்தவுடன் வாசலின் இடதுபுறத்தில் ‘எழுத்துச் சித்தர்’ பாலகுமாரனின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வலது பக்க மேசையில் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதி, கையெழுத்து போட்டு, கைபேசி எண் குறித்த பின், உடல் வெப்பம் சரி பார்த்து, உள்ளங்கையில் சானிட்டைஸர் தெளித்து உள்ளே அனுப்பி வைத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு செல்லும் பொது நிகழ்ச்சி. நிறைய நாற்காலிகளில் பிளாஸ்டிக் வெண்கயிறு ஒட்டப்பட்டிருந்தது. 

‘யாரோ வர்றாங்க போல’ என்றேன்.

‘இல்ல ஸார். கோவிட்ல சீட் அரேஞ்ச்மெண்ட் இப்படித்தான் இருக்கும். நான் ஏற்கனவே தியேட்டர்ஸ்ல  பாத்தேன்’ என்றான், மனோஜ். 

அப்புறம்தான் கவனித்தேன். ஒரு நாற்காலி விட்டு ஒரு நாற்காலி கயிறால் கட்டப்பட்டிருந்தது.

வழக்கம் போல கடைசி வரிசையில் உட்காராமல் அதிக கூட்டம் இல்லாததால் ஆறாவது, ஏழாவது வரிசையில் உட்காரலாம் என்று நானும், மனோஜும் அமர்ந்தோம். அப்போதுதான் முன் பக்கக் கதவு வழியாக கவிஞர் கலாப்ரியா அரங்கத்துக்குள் நுழைவது தெரிந்தது. பாலகுமாரன் அறக்கட்டளையின் சார்பாக விருது பெறப் போகிற கலாப்ரியாவை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசி முடிக்கும்வரைக் காத்திருந்து விட்டு தன்னுடைய இருக்கையில் அமரப் போன கலாப்ரியாவின் அருகில் சென்று மாமா என்று வணங்கினேன். ‘ஆகா மருமகனே! எதிர்பார்க்கவே இல்ல’ என்று அருகிலுள்ள ஒன்று விட்ட நாற்காலியில் அமரச் செய்தார். எனக்கு ஒன்று விட்ட நாற்காலியில் வந்து அமர்ந்தார் ரங்கராஜ் பாண்டே. வழக்கமாக நாங்கள் பேசிக்கொள்ளும் அசலான தெக்கத்தி பாஷையில்  பாண்டேயும், நானும் பேசிக் கொண்டிருந்தோம். 

விழா துவங்கியது. விருது பெறுபவர், வழங்குபவர், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டனர். மேடையில் வந்து அமர்ந்த கவிஞர் ரவி சுப்பிரமணியத்தை முன் வரிசையில் மாஸ்குக்குள் ஒளிந்திருந்த ‘அளகிய முகம்’ சுண்டி இழுத்திருக்க வேண்டும். வணக்கம் சொன்னார். பதில் வணக்கமும் கிடைக்கப் பெற்றார். அவர்தான் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை எனக்கு அனுப்பியிருந்தார். நிகழ்ச்சியை பாலகுமாரனின் மகள் தொகுத்து வழங்கினார். முதலில் இல. கணேசன் பேச வந்தார். அவரது பிரத்தியேக உச்சரிப்புடன் ச் ப் த் ள் ழ் என அழுத்தம் திருத்தமாக பேசினார். பாலகுமாரனின் பிறந்த நாளை முன்னிட்டு நடக்க இருக்கும் நிகழ்வை தனது ‘பொற்றாமரை இயக்கம்’ நடத்தத் தயாராக உள்ளது என்று அறிவித்து விட்டு அமர்ந்தார். அடுத்து பாலகுமாரனின் தீவிர வாசகரான சசிக்குமார் பேசினார். ‘ஸாரோட நெறய புக்ஸ் என் வீட்டு ரேக்ல இருக்கும்’ என்று துவங்கி பாலகுமாரன் எப்படி அவருக்கு ஆசான் ஆனார் என்பதை மேடைப்பேச்சு தந்த பதற்றத்துடன் விளக்கிச் சொல்லி முடித்துக் கொண்டார். அடுத்து இல கணேசன் அவர்களின் அண்ணியாரும் , பாலகுமாரனின் தீவிர வாசகியுமான திருமதி சந்திரா கோபாலன் பேசினார். திருவையாற்றில் பிறந்த தன்னால் தியாக பிரும்மத்தையும், ஐயன் பாலகுமாரனையும் ஒருமுகமாகப் பார்க்க முடிவதாக உணர்ச்சிமயமாக சொன்னார்.  இந்த நேரத்தில் பின் வரிசையிலிருந்து மனோஜ் குறுஞ்செய்தி அனுப்பினான். ‘ஸார். நடேசன் பார்க் பொடி தோசக்கட இன்னும் தொறக்கலையாம். விசாரிச்சுட்டேன். வேற எங்கே சாப்பிடப் போகலாம்?’ என்று கேட்டிருந்தான். அவனுக்கு பதில் அனுப்ப முயன்றால் பேசிக்கொண்டிருக்கும் சந்திரா கோபாலன், ‘எல! இங்கெ ஒருத்தி கண்கலங்க பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்னல போன நோண்டிக்கிட்டிருக்கே?’ என்று ஏசிவிடுவாரோ என்று பயந்து அவரது பேச்சில் மட்டுமே கவனம் செலுத்தும் முகபாவத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு கார்ப்பரேட் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த சமயத்தில் தனக்கிருந்த தாழ்வுணர்ச்சியைப் போக்கியது, பாலகுமாரனின் ‘கரையோர முதலைகள்’ நாவலின் ஸ்வப்னா கதாபாத்திரம்தான் என்றார் சந்திரா கோபாலன். அடுத்து கவிஞர் ரவிசுப்பிரமணியன் பேச வந்தார். பாடும் போது கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டார். ரவி சுப்பிரமணியன் பேசும் போது அவருக்கும், பாலகுமாரனுக்கும் இடையே இருந்த உறவை, நட்பைப் பற்றி சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனக்கு ஆச்சரியமாகவும், புதிதாகவும் இருந்தன. ரவி சுப்பிரமணியத்தின் முதல் கவிதைத் தொகுப்புக்கு பாலகுமாரன் அணிந்துரை எழுதிய செய்தி, ‘இலக்கியம்லாம் வேண்டாம்டா. வசதியான வீட்டுப் பையன் நீ. உனக்கு எதுக்கு இந்த பொழைப்பெல்லாம்? இங்கே வந்தா சாகணும்டா. சொன்னா கேளுடா’ என்று பாலகுமாரன் தன்னிடம் வாஞ்சையும், அக்கறையுமாக சொன்ன விஷயங்கள் உட்பட ரவி சுப்பிரமணியன் சொன்ன அனைத்துமே சுவாரஸ்யமான தகவல்கள். பாலகுமாரன் பற்றி விலாவாரியாகப் பேசிவிட்டு ஒருவழியாக கலாப்ரியாவுக்கு வந்து சேர்ந்தார், ரவி. கவிஞர் கலாப்ரியாவின் புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்றான ‘விதி’ என்னும் கவிதையை வாசித்தார். 

‘அந்திக் கருக்கலில்

இந்தத் திசை தவறிய

பெண் பறவை

தன் கூட்டுக்காய்

தன் குஞ்சுக்காய்

அலைமோதிக் கரைகிறது.

எனக்கதன் 

கூடும் தெரியும்

குஞ்சும் தெரியும்

இருந்தும்

எனக்கதன்

பாஷை புரியவில்லை.

கூடவே கலாப்ரியாவின் மற்றொரு புகழ் பெற்ற 

‘கொலு வைக்கும் 

வீடுகளில்

ஒருகுத்து சுண்டல் 

அதிகம் கிடைக்குமென்று 

தங்கையைத் 

தூக்க முடியாமல் 

தூக்கி வரும்

அக்காக் குழந்தைகள்’ வரிகளைச் சொன்னார். நிகழ்வுக்கு வந்திருந்த கலாப்ரியா கவிதைகளை அதுவரை அறியாதோருக்கு நிச்சயம் அந்த வரிகள் அவரது கவியுலகத்துக்கு அழைத்துச் செல்ல உதவி புரிந்திருக்கும். கலாப்ரியாவின் கவிதைகளைத் தவிர்த்து விட்டு புதுக்கவிதையின் வரலாற்றை எழுதிவிட முடியாது என்று சொன்ன ரவி சுப்பிரமணியன் அடுத்து வாசித்த கலாப்ரியாவின் கவிதையொன்றை படமாக்க வேண்டும் என்றார்.

சந்திரோதயம் நன்கு

தெரியும் விதமாய் ஒரு தோட்டம்

தோட்டத்து

நெல்லி மரத்தில் 

கயிற்றால் ஒரு ஊஞ்சல்.

‘கருக்கலாகியும்

சமஞ்ச குமரிக்கு என்ன 

விளையாட்டுடி?’யெனச்

சத்தமாய் அம்மாவின்

கூப்பாடு;

அப்படியே குதித்து இறங்கி

ஓடுவாள்.

ஊஞ்சல் மட்டும் 

தனியே ஆடிக்கொண்டிருக்கும்

கைரேகை மங்கும் கருக்கலில்’.

இந்தக் கவிதையின் கடைசி வரியை வெகுவாக சிலாகித்தார், ரவி சுப்பிரமணியன். 

அடுத்து பேச வந்த ரங்கராஜ் பாண்டே பாலகுமாரனை சந்திப்பதுதான் தன் வாழ்வின் முக்கியமான விருப்பமாக இருந்ததாகச் சொல்லி தன் உரையைத் துவக்கினார். தனது பேட்டிகளின் வாத பிரதிவாத உத்திகளை பாலகுமாரனின் எழுத்துகளிலிருந்து பயின்று கொண்டதாகச் சொன்னார், பாண்டே.  இந்த சமயத்தில் என் மனம் நான் படித்திருந்த பாலகுமாரனின் எழுத்துகளை நோக்கி பாய்ந்தது. எல்லோரும் சொல்கிற மெர்க்குரி பூக்கள், அதிகம் பேர் சொல்லாத பலாமரம், அ.தி.மு.கவின் ‘ஜெ ஜா’ பிரிவின் சமயம் எழுதப்பட்ட உயிர்ச்சுருள் என ஒரு சின்ன ரவுண்ட் அடித்து பின் பாண்டேயிடம் வந்து சேரும் போது தான் மேற்கோள் காட்டுவதற்காக எடுத்து வைத்திருந்த கவிஞர் கலாப்ரியாவின் சில கவிதைகளை ரவி சுப்பிரமணியன் சொல்லி விட்டதாகச் சொல்லி செல்ல கண்டனம் தெரிவித்தார். பிறகு கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை மற்றும் ஜெயகாந்தனின் வரிகளை கலாப்ரியாவின் கவிதைகளாக்கி சொல்லி மகிழ்ந்தார். அதற்குப் பிறகு தி.ஜானகிராமனுக்கு கலாப்ரியா சமர்ப்பித்திருந்த கவிதையொன்ற வெகுவாக சிலாகித்தார், பாண்டே.

கூட்டிலிருந்து

தவறிவிழுந்த 

குஞ்சுப் பறவை

தாயைப் போலவே

தானும் பறப்பதாய்

நினைத்தது

தரையில் மோதிச்சாகும்

வரை.

மேடையில் முழங்கி, வீதியில் கொடி பிடித்துதான் அரசியல் பேச வேண்டுமென்றில்லை. கவிதை மூலமாகவும் வலுவாக நம் அரசியல் பார்வையைச் சொல்லலாம் என்பதற்கு கலாப்ரியாவின் ‘வளர்ச்சி’ என்னும் கவிதை மிகச் சிறந்த உதாரணம் என்றார், ரங்கராஜ் பாண்டே.

எங்கள் வீடுகளையொட்டி
ஒரு வாய்க்கால்
ஒரு காலத்தில்
அதன் நீர்
எல்லோருக்கும்
பலவழிகளில்
பயன் பட்டது
நாங்கள் குழந்தைகள்
வாழை மட்டையில்
தெப்பம் செய்து
தெரிந்தவரை
அலங்கரித்து கயிறு கட்டி
படித்துறையில் இருந்தபடி
எட்டும் மட்டும் மிதக்கவிடுவோம் பின்
இழுத்துக் கொள்வோம்.
மறுபடி செல்ல அனுமதிப்போம்
மறுபடி…..மறுபடி
தெப்பம் கொஞ்சங் கொஞ்சமாய் சிதைந்து
மட்டைகளாகி நீரோடு போகும்
மனமில்லாமல்
விளையாட்டைப் பிரிவோம்.
**** **** ****
இப்போது கெட்டுப் போய்
இழுப்பற்றுத் தேங்கிய நீரில்
குப்புற மிதக்கும்
என்புதோல்ப் பிணமொன்று
வீட்டருகே
ஒதுங்கி நிற்பதாய்ச் சொல்ல
கழியெடுத்துப் போய்
தள்ளி விட்டோம்
எங்கள் எல்லையைத் தாண்டி
எங்கள் எல்லைக்குள் நின்று
தயாராய் இருந்தார்
அடுத்தடுத்த வீடுகளிலும்
அவரவர் கழிகளோடு.

இறுதியாக பேச வந்த கலாப்ரியா தனது ஏற்புரையில் உணர்ச்சிமிகுந்தவராக இருந்தார். பாலகுமாரனுக்கும் தனக்கும் 70களின் துவக்கத்தில் ஏற்பட்ட கடிதத்தொடர்பு இன்றைக்கு அவர் பெயரில் தனக்கு வழங்கப்படும் விருது வரைக்கும் வந்திருப்பதை எண்ணி நெகிழ்ந்த அவர், இதை எங்கிருந்தாவது பாலா பார்த்துக் கொண்டுதானிருப்பான் என்று கலங்கினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் கலாப்ரியாவை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விருப்பம் அவரது எண்ணற்ற வாசகர்கள் பலருக்கு இருந்திருக்கும். இந்த கோவிட் கெடுபிடி காலத்தின் காரணமாக அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவிதை, கட்டுரை, நாவல் என தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலும் அது குறித்த எந்த சத்தமும் கொடுக்காதவர் கலாப்ரியா. அன்றைய ஏற்புரையிலும் சத்தமில்லாமல் நம் அருகில் அமர்ந்து நட்புடன் பேசிக் கொண்டிருப்பது போலத்தான் பேசினார். ‘ப்ரியா’ எனத் துவங்கி ‘பாலா’ என்று முடிந்த பாலகுமாரனின் கடிதங்கள் குறித்து கலாப்ரியா உணர்ச்சிமயமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது விருது பெற்றவரைப் போலவே அவர் இல்லை. அன்றைய மேடையில் அவருக்குச் சொல்லப்பட்ட வாழ்த்துகளை அவர் வாங்கிக் கொள்ளாதவராகவே இருந்தார். 

நானும்

எல்லாரும்

எல்லா வாழ்த்துக்களையும்

காலியாக்கிவிட்ட

நம் மனிதர்களுடன்

நாள் கடத்துகிறோம்.

இந்தக் கவிதையை எழுதியவர் அப்படித்தானே இருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.

நிகழ்ச்சி முடிந்த பின் கலாப்ரியாவிடம் ‘கெளம்புதேன் மாமா’ என்று விடைபெற்றுக் கொண்டேன். 

முகமூடி அணிந்திருந்த என்னை நோக்கி வந்த பாலகுமாரனின் மகன், ‘சுகா ஸார். நான் உங்க ரசிகன். அட்லீயின் கதை விவாதங்களில் உங்களைப் பற்றிப் பேசாத நாட்கள் இல்லை’ என்றார். அவரது தாயாரிடம் சென்று நான் வந்திருப்பதாகச் சொல்லி அழைத்து வந்தார். அவர்களும் வந்து ‘வணக்கம் சுகா’ என்று வணங்கினார்கள். பதிலுக்கு வணங்கி சில வார்த்தைகள் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு பதற்றத்தை மறைத்தபடி கிளம்பினேன். வாணி மகாலின் வாசலில் பாலகுமாரன் அறக்கட்டளையின் சார்பில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவும், யோகி ராம்சுரத்குமார் படம் அச்சிட்ட முகக்கவசமும் தந்தார்கள். பார்க்கிங் ஏரியாவில் பாலகுமாரன் விருதை சென்ற முறை பெற்றிருந்த கவிஞரும், சிறுகதையாசிரியருமான நரனும், எழுதுவதோடு நன்றாகப் பாடவும் செய்கிற கவிஞர் வெய்யிலும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சில வார்த்தைகள் பேசி விட்டு வண்டிக்குச் செல்லும் போது மனோஜ் பிளாஸ்டிக் டப்பாவைத் திறந்து ‘ஸா . . .ர்’ என்று அலறினான். டப்பாவை எட்டிப் பார்த்த போது என்னுடைய சந்தோஷ அலறலும் மனோஜின் அலறலுடன் சேர்ந்து கொண்டது. டப்பாவுக்குள் மூன்று இட்லிகள் மிளகாய்ப்பொடி நல்லெண்ணெய் தடவி பச்சைப்பிள்ளைகள் மாதிரி அழகாக இருந்தன. எடுத்துக் கொஞ்ச மனம் துடித்தது.

‘இருங்க ஸார். வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்துடறேன்’

சாலையைக் கடந்து சென்று மனோஜ் தண்ணீர் கொண்டு வருவதற்குள் இரண்டு டப்பாக்களில் ஒன்று காலியாகியிருந்தது. 

‘நீ சாப்பிடுடா’ என்று சொல்லிவிட்டு கைகழுவி தண்ணீர் குடிக்கும் போது வீட்டிலிருந்து அழைப்பு.

‘சாப்பிட்டுட்டேன்மா. ஒரு இலக்கிய நிகள்ச்சில இட்லி குடுக்கறதெல்லாம் அதிசயத்திலும் அதிசயம். அதுவும் நம்ம வீட்டு மொளாப்டி இட்லி. பாலகுமாரன் இருந்திருந்தாலும் இதத்தான் செஞ்சிருப்பாரு’ என்று துவங்கி ‘அத ஏன் கேக்கே? ஒலகம் பூரா ஃபேன்ஸ் இருக்கற பாலகுமாரனோட ஃபேமிலி மெம்பர்ஸ் எனக்கு ஃபேன்ஸாம். என்னத்தச் சொல்ல?!’ என்று சொல்லி முடிக்கவும் அதுவரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த, கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்த எதிர்முனைக்குரல் நிதானமாக அந்தக் கேள்வியைக் கேட்டது.

‘பாலகுமாரன்னா யாரு?’

நடைப்பழக்கம் . . .

சாலிகிராமத்தின் காந்திநகரிலிருந்து நடைப்பயிற்சிக்காகக் கிளம்பி குமரன் காலனியின் பாதியில் வலது பக்கமாகத் திரும்பி நேரே சென்று முட்டினால் அங்கு ஒரு பிள்ளையார் கோயில் இருக்கும். அந்த பிள்ளையார் எங்களால் ‘சமீரா பிள்ளையார்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். காரணம், அந்தப் பிள்ளையார் கோயில் ‘சமீரா டப்பிங் தியேட்டர்’ வளாகத்தின் முன்பு அமைந்துள்ளது. ‘சதிலீலாவதி’ உட்பட வாத்தியார் பாலுமகேந்திராவின் சில படங்களுக்கான டப்பிங் பணிகள் சமீரா டப்பிங் தியேட்டரில்தான் நடைபெற்றன. ஆபாவாணனின் நிழலிசையாகத் திகழ்ந்த மனோஜ் கியான் இரட்டையரில் ஒருவருக்கு சொந்தமான டப்பிங் தியேட்டர் அது. வழக்கமாக அதைக் கடக்கும் போது சமீராவுக்குச் சென்று அங்குள்ள தலைமை சவுண்ட் இஞ்சினியர் கிருஷ்ணனை சந்தித்து விட்டு வருவது வழக்கம். கிருஷ்ணன் பின்னாளில் திரைப்பட இயக்குநராக மாறினார்(ன்).  ’விகடகவி’ என்னும் திரைப்படத்தின் மூலம் கிருஷ்ணன் அறிமுகப்படுத்திய நாயகி பிறகு நிறைய படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்று, கல்யாணம், விவாகரத்து என எல்லாவற்றையும் பார்த்து இப்போது ஆன்மிகத் தேடலில் இருக்கிற அமலா பால். நடைப்பயிற்சிக்காக செல்லும் போது சமீராவை எட்டிப் பார்ப்பதில்லை. கிருஷ்ணன் பிடித்துக் கொள்வான். ‘இப்ப நீ வாக்கிங் போய் ஃபிட் ஆகி எங்களையெல்லாம் ஏளனமாப் பாப்பே. அதுக்குத்தானே? பேசாம உக்காரு. ஒரு ரீலை முடிச்சுட்டு வரேன். ஸாருக்கு டீ கொண்டு வாங்கப்பா’ என்று காலி பண்ணிவிடுவான். அதனால் தூரத்தில் நின்று சமீரா பிள்ளையாருக்கு மட்டும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு இடது பக்கம் திரும்பி அருணாசலம் சாலையை இணைக்கிற தெருவுக்குள் நுழைந்து விடுவேன். அப்படி ஒருநாள் பிள்ளையாருக்கு ஹாய் சொல்லும் போதுதான் அந்த இளைஞரைப் பார்த்தேன். அவரும் நடைப்பயிற்சிக்கு செல்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் என்னைப் போல நடைப்பயிற்சிக்கான வேஷ உடையோ, காலணிகளோ இல்லாமல் சாதாரண அரைக்கை சட்டையும், இளம்பச்சை வண்ணத்தில் மடித்துக் கட்டிய சாரமும் அணிந்திருந்தார். நான் முதன்முறையாக அவரைப் பார்க்கிறேன். அதற்கு முன் பல புகைப்படங்களிலும், காணொளிகளிலும் பார்த்து பழகிய முகம். அவர் என்னை கவனிக்கவில்லை. ஒரு மாதிரியான ‘தக்கு தக்கு’வென நடக்கத் துவங்கினார். 

அடுத்த சில நாட்களில் அவரும், நானும் அதே சமீரா பிள்ளையார் கோயிலுக்கு அருகில் மோதிக் கொண்டோம். வேறு வழியேயில்லாமல் என் முகத்தைப் பார்த்து புன்னகைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். புன்னகை என்றால் முகம் மலர்ந்து கண்கள் சிரிக்கின்ற புன்னகை அல்ல. மனசுக்குள் புன்னகைப்பது லேசாக உதட்டில் தெரிவதாக ஒரு பாவனை. அவ்வளவுதான். எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது. இருவரும் இணைகிற இடத்தில் அப்படி ஒரு புன்னகையுடன் எங்களது நடையைத் தொடங்கி, அருணாசலம் சாலை, கே கே சாலை என தொடர்ந்து தசரதபுரம் வழியாக வந்து காந்தி நகருக்குத் திரும்புகிற பாதை வரைக்கும் ஒன்றாக நடப்போம். பின்பு அவரவர் பாதையில் திரும்பி விடுவோம். திரும்பும் போதும் அதே மனப்புன்னகை. 

மழை பெய்து சாலையெல்லாம் தண்ணீர் தேங்கி வடிந்திருந்த ஒரு நாளில் தசரதபுரத்தில் பார்த்துப் பார்த்து அன்னநடை பயில வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் என் முகம் பார்த்து உதடு பிரித்து லேசாக சிரித்தவர், ‘வாக்கிங் போகும் போதும் விபூதியா?’ என்றார். அத்தனை நாட்களில் அவர் என்னைப் பார்த்து பேசிய ஒரே வரி அதுதான். அவர் கேட்டதற்கு  சற்றே பிரகாசமான மனப்புன்னகையையே பதிலாக அளித்தேன். அதை அவர் எதிர்பார்க்கவுமில்லை. காந்திநகர் பாதை வந்ததும் வழக்கம் போல பிரிந்து போனோம். சில மாதங்களில் காந்தி நகரிலிருந்து நான் சாய் நகருக்குச் சென்ற பிறகு எனது நடைப்பயிற்சியின் தெருக்கள் சாலிகிராமத்தின் வேறு பகுதிக்கு மாறிவிட்டன. நடைநண்பரைப் பார்க்க இயலவில்லை.

தி இந்து(ஆங்கிலம்)வில் பணிபுரியும் நண்பர் கோலப்பன் மூலம் லால்குடி ஜெயராமனின் புதல்வர் கிருஷ்ணன் என்னை தொடர்பு கொண்டு அவரது தகப்பனாரைப் பற்றிய ‘The Incurable Romantic’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு இளையராஜா அவர்களை அழைக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அமரர் லால்குடி ஜெயராமன் மீது நன்மதிப்பு கொண்டிருந்த இளையராஜா விழாவுக்கு வர சம்மதித்தார். தியாகராய நகரிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியின் அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின் முன் வரிசையில் அமர்ந்திருந்த இளையராஜா அவர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது எனது நடைநண்பர் அரங்குக்குள் வந்தார். இளையராஜா அவர்களை வணங்கி விட்டு அருகில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்ததும் அவரது புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்து இறங்கின. ‘இவன் என்ன இங்கே இருக்கிறான்? யார்தான் இவன்?’ என்பதாக இருந்தன அவரது முகபாவம். நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதற்கான மற்றொரு சந்தர்ப்பம் இளையராஜா அவர்கள் ஏதோ கேட்கவும் கலைந்து போனது. அதற்குப் பிறகு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவே இல்லை.

தொடுபுழாவில் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நண்பர் கோலப்பன் அழைத்தார். எனது நடைநண்பர் காலமான செய்தியைச் சொல்லி இளையராஜா அவர்களிடம் தெரியப்படுத்தச் சொன்னார். அதிர்ச்சியான அந்த செய்தியை இளையராஜா அவர்களை அழைத்து நான் சொல்லவும், ‘என்னய்யா சொல்றே? நல்லா விசாரிச்சியா?’ என்று கேட்டார். அவராலும் அந்த செய்தியை நம்ப முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்ப விரும்பவில்லை என்பது அவரது குரலில் தெரிந்தது. நான் ஃபோன் செய்த சில நிமிடங்களிலேயே அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று இளையராஜா அவர்கள் அஞ்சலி செலுத்திய செய்தியை பிறகு தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். சில மாதப்பரிச்சயம். ஒரு வரி தவிர வேறேதும் பேசிக்கொண்டதில்லை. முறையாக அறிமுகம் ஆகிக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. எனக்கது குறையாகத் தெரியவில்லை. அடிக்கடி நான் கேட்டு உவக்கும் முத்துஸ்வாமி தீக்‌ஷிதரின் ஶ்ரீ காந்திமதிம் கீர்த்தனை மூலம் ஹேமவதி ராகத்தைக் குழைத்துக் கொடுத்தபடி மெல்லிய குரலில் என்னிடம் பேசிக்கொண்டுதானிருக்கிறார், எனது நடைநண்பர் அமரர் மாண்டலின் ஶ்ரீநிவாஸ்.

கோவிட் காலம்

பிரதம மந்திரி கை தட்டச் சொல்லும் வரை ஒன்றும் தெரியவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் மெல்ல நிலைமை மாறி சகஜநிலைக்குத் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. விளக்கேற்றிய வாரத்தில் எங்கள் தெருவில் ஜனநடமாட்டம் இயல்பாக இருந்தது. காய்கறிக்காரர் முகக்கவசம் அணியாமல் கத்தரிக்காயும், முட்டைக்கோஸும் விற்றார். சைக்கிளின் பின்னால் பெரிய எவர்சில்வர் கேனைக் கட்டி டீ விற்றார், மற்றொருவர். ‘குட்டி சமோசா இருக்கா?’ என்று கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார், பக்கத்துத் தெரு டெய்லர். பால்கனியில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்கு காகிதத் தேநீர் கோப்பை மட்டும்தான் தெரிந்தது. ‘குட்டி’ சமோசா தென்படவில்லை. மாலை மங்கிய வேளையில் சின்ன ஒலிபெருக்கி ‘இடியாப்பம் இடியாப்பம்’ என்று கூவியது. ஒரு நண்பகல் பொழுதில் வேறொரு ஒலிபெருக்கி ‘ஏ பூட்டு ரிப்பேர்’ என்று ரகசியமாக அழைத்தது. தொலைக்காட்சியில் தினமும் மாலை 6 மணிக்கு டாக்டர் பீலா ராஜேஷ் மறந்தும் புன்னகைத்து விடாமல் அன்றைய தினத்தின் புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார். அதற்கடுத்த நாட்களில் சென்னை கார்ப்பரேஷன் ஊழியர் வீட்டுக் கதவைத்தட்டி ‘எல்லாரும் நல்லா இருக்கீங்கதானே? இருமலோ, காய்ச்சலோ வந்தா என் நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு நம்பரைக் கொடுக்காமலேயே, ‘அடுத்த வீடு கே. ஜெய்சிங்’ என்று தன் கையிலுள்ள பட்டியலை வாசித்தபடிக் கிளம்பிச் சென்று விட்டார். அடுத்த நாள் மறக்காமல் அவரது கைபேசி என்ணை அவராகவே கொடுத்து விட்டு, ‘நான்தான் ஏதோ அவசரத்துல போயிட்டேன். நீங்களாவது கேட்டு வாங்கியிருக்கலாம்ல?’ என்று செல்லமாக கோபித்தார். பதில் சொல்ல முயன்றால் இருமல் வந்து விடுமோ என்று பயந்து வராத இருமலை அடக்கிச் சிரிக்க வேண்டியிருந்தது. 

இனி சில காலத்துக்கு வீட்டுக்குள் அடைந்து கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது புத்திக்கு புலப்பட மேலும் சில நாட்கள் ஆனது. இந்த காலத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த உள்ளம் கிடந்து துடியாய்த் துடித்தது. ஆறு நாவல், எண்பது சிறுகதைகள், பதினாறு திரைக்கதைகள், போனால் போகிறதென்று பத்திருபது குறுநாவல்களை எழுதிப் போட்டு விடுவோம் என்று மனம் சூளுரைத்தது. ஒரு புண்ணாக்கும் நடக்கவில்லை. சாப்பிடுவதும், தூங்குவதுமாகத்தான் பொழுது கழிந்தது. கழிகிறது. அந்த சமயத்தில்தான் இளையராஜாவின் டிரம்மர் புருஷோத்தமன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘ராஜதாளம்’ கட்டுரையை எழுத வேண்டியிருந்தது. அது போக ஆனந்த விகடனில் ‘பண்டிதன் கிணறு’ சிறுகதை எழுத வாய்த்தது. மற்றும் சில சிறுகதைகள் எழுத முடிந்தது. இந்த ஊரடங்கு நேரத்தில் பத்திரிக்கை வாங்கிப் படிக்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் ஆனந்த விகடனில் எனது கதையை இன்று வரைக்கும் எழுதிய நானும், ‘படிச்சியா இல்லியா’ என்று நான் மிரட்டிய காரணத்தால் எனது பள்ளித் தோழன் பகவதியும் மட்டுமே வாசித்திருக்கிறோம். மற்றவர்கள் இணையத்தில் படித்திருக்கக் கூடும். எனது கதை வெளியான விகடன் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்து தொலைபேசியில் அழைத்துப் பேசிய கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் கந்தசுப்பிரமணியத்தின் மூலம் கதை மூன்றாம் நபரைச் சென்றடைந்திருப்பது தெரிய வந்தது. (அதற்கு முந்தைய வாரம் நான்தான் அவருக்கு என் கதை விகடனில் வெளிவந்திருக்கிற விஷயத்தைச் சொல்லியிருந்தேன்).

எழுதுவது குறைவாக இருந்தாலும் வாசிப்பது நிறைவாகத்தான் இருந்தது. தினம் ஒரு சிறுகதை எழுதித் தள்ளும் ஜெயமோகனின் எல்லா கதைகளையும் உடனுக்குடன் வாசித்தேன். வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பேன். ஒவ்வொரு கதைக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கடைசியில் ‘மதுரம்’ சிறுகதைக்கும் மட்டும் கடிதம் எழுதினேன். மற்ற கதைகளைப் படித்துவிட்டு கடிதம் எழுத முனைவதற்கு முன் ஜெயமோகன் அடுத்தடுத்து பதினாறு கதைகள் எழுதி விடுகிறார். அதற்குள் எந்தக் கதைக்கு கடிதம் எழுத நினைத்தோம் என்பது மறந்து போய்விடுகிறது. இதற்கிடையில் நான் மனச்சோர்வில் இருப்பதாக அவராக நினைத்துக் கொண்டு ‘சங்கரன் மாமா போல் உற்சாகமாக இருக்கவும். மற்றவர்களையும் உற்சாகப்படுத்தவும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவருக்காக சங்கரன் மாமாவின் கேள்வி ஒன்றை அனுப்பி வைத்தேன். 

‘கொரோனா விளிப்புணர்வு பாடல்களுக்கு ஏதாவது தடுப்பூசி இருக்கா, மருமகனே?’

ஜெயமோகன் உற்சாகமாகியிருக்க வேண்டும் என்பதை அவரது அடுத்தடுத்த குறுஞ்செய்திகள் காட்டின. 

இந்தக் கொரோனா காலத்தில் ஜெயமோகனின் சிறுகதைகள் பெரும் துணையாக உடன் நிற்கின்றன. வாசிக்கிற பழக்கமுள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஜெயமோகன் தற்சமயம் எழுதி வரும் கதைகளைப் பற்றிச் சொல்லி வருகிறேன். கமல் அண்ணாச்சிக்கும் சொல்லி ஜெயமோகனது சில கதைகளை அனுப்பியும் வைத்தேன். படித்து விட்டு உற்சாகமடைந்த அவர், ஜெயமோகனின் எண்ணைக் கேட்டு வாங்கி அவரிடம் பேசினார். கமல் அண்ணாச்சி உட்பட ஜெயமோகனின் சிறுகதைத் தாக்குதலைப் படித்து விட்டு பலரும் ‘ராட்சஸன், அரக்கன்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள். ஒரு நாள் சொப்பனத்தில் கருப்பு கட் பனியனும், நீள ஜடாமுடியும், காதில் குண்டலங்களும், கையில் குறுவாளும் வைத்தபடி, என் மார்பின் மீதமர்ந்து, ‘சாயா குடிக்காமோ?’ என்று மலையாளத்தில் மிரட்டினார், ஜெயமோகன். அடுத்த நாள் அவரது தளத்துக்குச் சென்றால் ‘முத்தங்கள்’ என்றொரு பேய்க்கதையை எழுதியிருந்தார். அன்றிரவு உறங்காமல் வெகுநேரம் ஜெயமோகனுக்காகக் காத்திருந்தேன். ஆளைக் காணோம். குறுவாளோடு வேறெங்கோ சாயா குடிக்கப் போய்விட்டார்.

பி.சி.ஶ்ரீராம் சொன்னது போல அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் படங்கள் ஒருகட்டத்தில் அலுத்துவிட்டன. வெப் சீரீஸ்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கதையமைப்பைக் கொண்டவையாக இருந்தன. இந்த உலகத்தில் கேங்க்ஸ்டர்ஸ் மட்டும்தான் வாழுகிறார்களோ என்று கொரோனாவைத் தாண்டிய அச்சம் ஏற்பட்டது. ‘Game of thrones, Banshee’ போன்ற வெப் சீரிஸ்களை முடித்தபின் Homeland 8வது சீஸனை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பெரும்பாலான மலையாளத் திரைப்படங்களை திரையரங்கிலேயே பார்த்து விடுவதால் பழைய கிளாஸிக் திரைப்படங்கள் சிலவற்றை மீண்டும் பார்க்க வாய்த்தது. உதா: கிரீடம். அப்போது பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சி இப்போதும் ஏற்பட்டது. மறந்தும் இன்னொரு முறை பார்த்து விடக்கூடாது என்று முடிவெடுக்க வைத்த ‘தனியாவர்த்தனம்’ பக்கம் தலைவைத்தே படுக்க வில்லை. மெல்ல திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நாட்டம் குறைந்து யூ டியூப் பக்கம் போய் ‘Hope for paws’ பார்க்க ஆரம்பித்து, தினமும் அதிலேயே அதிக நேரம் செலவிடும் படியாக ஆயிற்று. நாய்ப்பிரியர்களுக்கான சேனல் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆதரவற்ற, நோய்வாய்ப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, தெருவோரம் திரிகிற நாய்களை மீட்டு, தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து, உடல்நலம் தேறும் வரை அவற்றை போஷித்து, பின் அதை வளர்க்க விரும்புபவர்களுக்கு அளிக்கிறார்கள். தமக்கு உதவ வருகிறார்கள் என்பதை அறியாத முரட்டு நாய்களை இவர்கள் அணுகும் கலையை வியந்துத் தீரவில்லை. ஒரு நல்ல திரைப்படம் கொடுக்கிற அத்தனை காட்சி அனுபவத்தையும் இந்த சேனலிலுள்ள காணொளிகள், ‘நாய்ப்பிரியர்களுக்கு’க் கொடுக்கின்றன.  

இடைப்பட்ட நேரங்களில் தினமும் பள்ளி நண்பர்களுடனான Conference call உரையாடல், மாலைநேரத்து மொட்டை மாடி நடைப்பயிற்சி, அவ்வப்போது நிகழும் காலை நேரத்து யோகப் பயிற்சி என பொழுதை பயனுள்ள வகையில் போக்கும் முயற்சிகளும் தொடர்கின்றன. நண்பர் பி.கே. சிவகுமாரின் அழைப்பின் பேரில் ஒரு நாள் நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்துக்காக காணொளியில் சிற்றுரையும், உரையாடலும் அமைந்தன. இன்னொரு நாள் நார்வே திரைப்பள்ளி மாணவ மாணவிகளுக்காக திரைக்கதை குறித்த சிற்றுரை மற்றும் உரையாடல். காணொளிகள் மூலம் நிகழ்ந்த திரைத்துறை வேலைகள் தொடர்பான குழு உரையாடல்களின் முடிவில் கேட்கப்பட்ட ‘அடுத்து என்ன?’ என்ற கேள்விக்கு இன்னும் யாரிடமும் விடையில்லை. வீட்டுக்குள்ளேயே இருப்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஆனால் வருகிற செய்திகளைப் பார்க்கும் போது இருந்துதான் ஆக வேண்டும்.

75 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து, ஜூன் 2ஆம் தேதி இளையராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து விட்டு வந்தேன். டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸும், நானும் சென்ற போது வீட்டுக்குள் யாரையும் பெரியவர் அனுமதிக்கவில்லை. நாங்கள் இருவரும் மட்டும் சென்று தள்ளி நின்றபடி பார்த்து வணங்கி வாழ்த்து சொல்லி விட்டு வந்தோம். ‘வருஷா வருஷம் இன்னிக்கு உங்க கூடத்தானே இருப்பேன். அதான் வந்தேன்’ என்றேன். ‘நாங்கல்லாம் வெளியே கூப்பிடும்போதெல்லாம் அண்ணன் வரல. எளுபத்தஞ்சு நாள் களிச்சு இன்னைக்கு உங்களைப் பாக்கணும்தான் வந்தாங்க’ என்றார், ஆல்பர்ட். சிரித்தபடி ‘ரொம்ப சந்தோஷம்யா. இனி வெளியே எங்கேயும் போகாதே’ என்றார், பெரியவர். இதற்குள் நான் வெளியே வந்ததை நடிகர் இளவரசுவுக்கு ஆல்பர்ட் சொல்ல, ‘யோவ். கொஞ்சம் இடைவெளி விட்டு நின்னு காப்பி குடிப்போம்யா. எவ்வளவு நாளாச்சு’ என்றார், இளவரசு. ‘ஓகே அண்ணாச்சி’ என்றேன். சாலிகிராமம் சரவணபவனில் வழக்கமாக தினமும் கூடும் நாங்கள், அன்றைக்கு தள்ளித் தள்ளி நின்றபடி காப்பி ஆர்டர் செய்தோம். சரவணபவனில் வழக்கத்துக்கு மாறாக பச்சைக் காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எங்களை நன்கறிந்த சரவணபவன் ஊழியர்கள் முகமூடிக்குள் சிரித்தபடி, ‘ஸார். நீங்களா? அடையாளமே தெரியாம மாறிட்டீங்களே!’ என்றார்கள். முகமூடிக்குள் மறைந்து சிரித்த எங்கள் பதில் சிரிப்பை அவர்கள் கண்டுகொண்டார்கள். ‘காப்பி குடிக்கும் போது மாஸ்க்கைக் கெளட்டணும்யா. ஏற்கனவே தம்பி பிரஸாத்து மாஸ்க்கைக் களட்டாம மாஸ்க்கையும், சட்டையும் நனைச்சு இன்னொரு காப்பி வாங்கிக் குடிச்ச கத தெரியும்லா?’ என்றேன். எல்லோரும் சிரித்து, காப்பி குடித்து விலகி நின்றபடி விடைபெற்று மீண்டும் வீட்டுக்குள் புகுந்து கொண்டோம்.

கொரோனா குறித்த பயம், கவலை, சந்தேகங்கள் எல்லோருக்கும் இருக்கிறதுதான். நாம் கவனமாக இருப்பது ஒன்றுதான் ஒரே வழி. மருந்து கண்டுபிடிக்கும் போது கண்டுபிடிக்கட்டும். அதுவரைக்கும் நாமும் பாதுகாப்பாக இருந்து, மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக இருப்போம். சந்தேகங்களை வளர விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சீனு ராமசாமியின் உதவியாளன் கேட்ட சந்தேகம் மாதிரி பலருக்கும் இருக்கிறதா, அறியேன்.

‘அண்ணே! ரொம்ப பயமுறுத்தறாங்களேண்ணே’.

‘தம்பி! சக்கர வியாதி, ரத்தக்கொதிப்பு, இதயக் கோளாறு இருக்கறவங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். அவ்வளவுதான். மத்தவங்க அவங்களவுல கவனமா இருந்துக்கிட்டாலே போதும்பா.’

‘அப்ப பைல்ஸ் வந்தா பயம் இல்லதானண்ணே?’

இந்த அவலச்சுவை உரையாடல்களுக்கு மத்தியில் உண்மையாகவே பதற்றமடையும் நண்பர்களுக்கு கவிஞர் இசையின் ஒரு வரியைச் சொல்லி வருகிறேன்.

‘எந்த மனிதனும் ஒரேயடியாகக் கைவிடப்படுவதில்லை. அவ்வளவு இரக்கமன்றதன்று இறை’.

இதில் இறையை விரும்பாதோர், ‘றை’யன்னாவுக்கு பதிலாக ‘சை’யன்னாவைப் போட்டுக் கொள்ளலாம்.

நடைச்சித்திரம் . . .

90களின் துவக்கத்தில் சாலிகிராமம் அபுசாலி தெருவில் ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே வந்த கே.ஜே.யேசுதாஸின் ஒன்று விட்ட சகோதரர், வாத்தியாரைப் பார்த்து பதறி வணங்கி, ‘என்ன ஸார் இது? நீங்க நடந்து போறீங்க?’ என்றார். ‘ஏன்? நான் நடந்தா என்ன?’ என்றார், வாத்தியார். ‘வேணும்னா தம்பிய போகச் சொல்லலாமே! நீங்க போய் நடந்துக்கிட்டு?’ என்னைக் காண்பித்து சொன்னார். ‘எனக்காக நானும், அவனுக்காக அவனும் நடக்கறான்’. வாத்தியாரின் பதில் அவருக்கு திருப்தியளிக்கவில்லை என்பது அவரது முகபாவனையில் தெரிந்தது. ‘என்னவோ போங்க’ என்பது போல நகர்ந்து சென்றார். ‘வாடா போகலாம்’. சிரித்தபடி வாத்தியார் நடையைத் தொடர, நானும் அவரைத் தொடர்ந்தேன். சாலிகிராமத்துக்குள்ளேயே எங்கு செல்வதாக இருந்தாலும் வாத்தியார் நடந்துதான் செல்வார். அப்போதெல்லாம் அநேகமாக வாரத்தில் நான்கு நாட்கள் பாண்டி பஜார் நடைபாதைக் கடைகளையொட்டி வாத்தியாரும், நானும் நடந்து செல்வோம். சும்மா நடப்பதும் உண்டு. அது தவிர சின்னச் சின்ன ஆபரணங்கள், துணிமணிகள் உட்பட இன்னும் சில கலைப்பொருட்களை அங்குள்ள நடைபாதைக் கடைகளில்தான் வாத்தியார் தேர்ந்தெடுத்து வாங்குவார். அங்கும் எதிர்ப்படும் மனிதர்கள் கேட்கும் ‘என்ன ஸார் நடந்து வர்றீங்க?’ கேள்விகளைப் பொருட்படுத்தாமல் அடுத்த கடைக்குச் செல்வோம். ஒருமுறை அப்படி ஒரு நடைபாதைக் கடையில் பின்னணி பாடகி எஸ்.ஜானகியைக் கண்டோம். ஜானகி அம்மாவும், வாத்தியாரும் பரஸ்பரம் ‘என்ன நடந்து வர்றீங்க?’ என்று கேட்டுக் கொள்ளவில்லை. 

‘வாக்கிங்’ போவதற்காகப் பூங்காக்களையோ, கடற்கரையையோ நாடாமல் நாம் இருக்கும் பகுதியிலுள்ள தெருக்களிலேயே நடப்பது என்கிற முடிவை எடுக்க வைத்தவர், வாத்தியார்தான். முன்பெல்லாம் சாலிகிராமம் அருணாசலம் சாலையில் நடப்பதுண்டு. சூர்யா மருத்துமனைக்கு அருகிலுள்ள ‘திருநெல்வேலி ஹோட்டல்’ கதிர் கண்களில் சிக்கிக் கொள்வேன். ‘என்னண்ணே! ஆளையே காணோம்?’ கதிரின் தாயுள்ளம் கொண்ட வாஞ்சைக் குரல், சில நொடிகளில் வாழை இலையில் வைக்கப்பட்ட வடைகளின் முன் உட்கார வைத்துவிடும். கூடவே முறுகலான எண்ணெய் தோசையும் வந்து அமரும். ஒருகட்டத்துக்குப் பின் அந்தப் பக்கம் செல்வதைத் தவிர்த்து, நடேசன் நகர் பக்கம் நடையைத் திருப்பினேன். அங்கும் சாத்தான் காத்திருந்தது. அங்குள்ள ‘சுவாமிநாத் கபே’யின் உரிமையாளர் என்னவோ கும்பகோணத்துக்காரர்தான். ஆனால் அங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலோர் திருநவேலி ஜில்லாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் கல்லிடைக்குறிச்சி ஆச்சி ஒருத்தி இருக்கிறாள். என் நேரத்துக்கு  கடையை ஒட்டி வெளியே காபி போட்டுக் கொண்டிருக்கும் அவள் கண்களில் சிக்கிக் கொள்வேன். 

‘என்னய்யா? பாத்தும் பாக்காத மாரி போறே?’ 

‘இல்ல பெரிம்ம. ஒன்னப் பாத்துட்டுதானெ ரோட்ட க்ராஸ் பண்ணி வாரென்’.

பிள்ளேள்லாம் சும்ம இருக்கா? இப்போதைக்கு ஊருக்குப் போனியா? நான் போறதுக்கு ரெண்டு மாசம் செல்லும். கோயில் கொட வருதுல்லா’.

கல்லிடைக்குறிச்சிக்காரியின் வட்டார வழக்குப் பேச்சில் மயங்கி காபிக்கு முன், இட்லி மற்றும் பூரி கிழங்கு சாப்பிடுவேன். சுவாமிநாத் கபேயில் சாப்பிடும்போதெல்லாம் அண்ணாச்சி இளவரசுவிடம் மாட்டுவேன். 

‘யோவ்! நீ வாக்கிங் போற லட்சணத்த தயவு செஞ்சு வெளிய சொல்லி கில்லித் தொலச்சுராதே. ஒருத்தன் மதிக்க மாட்டான். ஏன் பூரியோட நிறுத்தறே? ஒரு ரவா சொல்லி சாப்பிடேன்’.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சுவாமிநாத் கபேக்கு எதிரே உள்ள உடற்பயிற்சி நிலையத்துக்கு தினமும் செல்வது இளவரசு அண்ணாச்சியின் வழக்கம். அவர் உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக தினமும் அந்த ஜிம்முக்குச் சென்று எல்லோருடனும் மனம் விட்டுப் பேசிவிட்டு, களைப்புடன் சுவாமிநாத் கபேக்கு வந்து சீனியில்லாத காபி குடித்துவிட்டு செல்வார். 

நடேசன் நகர் பக்கம் நடைப்பயிற்சி செல்வதும் சரிவராத காரணத்தால் மீண்டும் சில நாட்கள் அருணாசலம் சாலைப் பக்கம் தொடர்ந்தேன். இந்தமுறை மனக்குரங்கு திருநவேலி ஹோட்டல் கதிர் அழைக்காமலேயே உள்ளே இழுத்துச் செல்லத் துவங்கிவிட்டது. 

‘அப்புறம் கதிரு! என்ன ஒன்னய ஆளையே காங்கல?’

‘நான் இங்கனயேதானெண்ணெ கெடக்கென். நமக்கு எங்கெ போக்கெடம் சொல்லுங்க. இன்னொரு வட வைக்கட்டுமா?’

தனியாக அமர்ந்து ‘எங்கே தவறு நடக்கிறது?’ என்று யோசித்துப் பார்த்து ஹோட்டல்கள் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் நடக்க தீர்மானம் செய்து உடனடியாக செயல்படுத்தவும் தொடங்கினேன். சாலிகிராமம் காந்தி நகரைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டுக்கு நான்கைந்து வீடுகள் தள்ளி உள்ள ஒரு வீட்டு வாசல் கேட் அருகே போகிற வருகிற ஜனங்களை வேடிக்கை பார்க்கும் ‘கியூட்டி’ என்கிற லாப்ரடார் வகை நாயைத் தாண்டிச் செல்ல சில நிமிடங்கள் ஆகும். கியூட்டியிடமும், அவளை மகள் போல வளர்க்கும் மனிதரிடமும் நின்று பேசுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. சில நேரங்களில் கியூட்டியைப் பார்க்காமல் நடந்து போனால் சத்தம் போட்டு ‘கியூட்டி’ அழைக்கும். குரலில் ‘மாமா’ என்று கேட்கும். ‘இப்படி பாக்காம போகாதீங்க ஸார். அப்புறம் அவ அப்ஸெட் ஆயிடுவா’. கியூட்டியுடன் சில நிமிடங்கள் செலவழித்துவிட்டு அடுத்த தெருவுக்குள் நுழைந்தால் அங்கு ‘ரூனோ’ காத்திருப்பான். ‘ரூனோ’ பீகிள் வகையைச் சேர்ந்த பையன். ‘கியூட்டியை’யாவது அவள் வீட்டு வாசலில் நின்று கொஞ்சுவதோடு ஜோலி முடிந்துவிடும். ஆனால் ‘ரூனோ’வுக்கு என்னுடன் வெளியே ஒரு ரவுண்டு வர வேண்டும். அவன் வீட்டு ஆட்கள் என் தலையைப் பார்த்ததும் அவன் கழுத்துப் பட்டையில் ஒரு வாரைப் பொருத்தி என் கைகளில் கொடுத்து விடுவார்கள். அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று விட்டு, அவனை வீட்டில் விட்டுவிட்டு நான் வீடு திரும்பிவிடுவேன். இப்படியே போச்சுன்னா நாம நடந்த மாதிரிதான் என்று தோன்றவே வடபழனி குமரன் காலனியைத் தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பித்தேன். அங்குதான் திரைப்பட தயாரிப்பு நிர்வாக உதவியாளர்கள் சங்கம் இருக்கிறது. அதை கவனிக்காமல் அது வழியாக நடந்து சரியாக கோபாலிடம் மாட்டிக் கொண்டேன். 

‘ஸாஆஆஆர்! வண்டில ஏறுங்க’.

கிட்டத்தட்ட மிரட்டினான், கோபால்.

‘கோபால். சொன்னாப் புரிஞ்சுக்கோ. நான் கொஞ்சம் நடக்கணும்’.

‘நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன். வண்டில ஏறப்போறீங்களா, இல்லியா?’

கோபாலால் தெருகடத்தப்பட்டு என் வீட்டுக்குள் அடைக்கப்பட்டேன். குமரன் காலனியை ஒட்டியுள்ள தெருக்களில் நடக்கலாமே! அங்கு யார் நம்மை என்ன செய்து விட முடியும்? சுமுகமாக நடக்க முடிந்தது. சில தினங்கள்தான். அங்கு(ம்) ஒரு சினிமா பட்டறை இருப்பதை கவனிக்கத் தவறினேன். விளைவு, ‘அப்பத்தாவை ஆட்டயைப் போட்டுட்டாங்க’(ஆம். அதுதான் படத்தின் பெயர்) திரைப்படத்தின் இயக்குநர் ஸ்டீஃபனால் மறிக்கப்பட்டேன். வழக்கமான ‘என்ன ஸார் நடந்து போ . . .’. ஸ்டீஃபனை முடிக்க விடவில்லை. ‘ஆமா ஸ்டீஃபன். நான் நடந்து போயிக்கறேன். நீ பைக்கை ஆஃப் பண்ணு’. திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். அதற்கு அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள். குமரன் காலனியையும், அருணாசலம் சாலையையும் இணைக்கிற சாலைத் திருப்பத்தில் ‘பரணி டப்பிங் தியேட்டர் இன்சார்ஜ்’ தனகோடியின் கைனட்டிக் ஹோண்டா என் மீது மோதியது. வண்டியில் தனகோடி இருந்தார். தூயசினிமா பாஷையில் ‘ஜி’ என்றழைத்தபடி தனகோடி என் கைகளை எட்டிப் பிடித்தார். தனகோடி அணிகிற சட்டைத்துணியில் என் அளவுக்கு நான் ஆறு முழுக்கை சட்டையும் மூன்று கைக்குட்டைகளும் தைத்துக் கொள்ளலாம். அத்தனை அகலமான மனிதர். உள்ளமும் குறைச்சலில்லை. 

‘எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா ஜி, நீங்க நடந்து போறதப் பாக்கறதுக்கு’.

கண்கள் கலங்க முயன்றன. 

‘நீங்க கலங்கற அளவுக்கு ஒண்ணும் ஆகல தனகோடி. ‘பழமுதிர்சோலை’க்கு வந்தேன். பளம் வாங்கிட்டு அப்படியே நடந்து போகலாம்னு பிளான். நீங்க கெளம்புங்க’.

இன்னொரு நாள் இருட்டியபிறகு திருநவேலி ஹோட்டல் வரைக்கும் செல்லாமல் அருணாசலம் சாலையின் பாதிதூரம் வரைக்கும் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு காரில் என்னைக் கடந்து சென்ற கவிஞருமான ‘கவிஞர் சிநேகன்’ ஒரு நொடி காரின் வேகத்தைக் குறைத்து, பிறகு என்ன நினைத்தாரோ, நல்ல வேளையாக ஒரு கவிஞருக்கேயுரிய இலாவகத்துடன் காரை வேகமாகச் செலுத்தினார். ஒரு கவிஞர் போல ஒப்பனைக்கலைஞர் இருக்க வேண்டிய அவசியமில்லையே! அமரர் தமிழ்வாணனின் தொப்பியைப் போன்ற தொப்பி அணிபவர் திரைப்பட ஒப்பனைக் கலைஞர் ராமச்சந்திரன். கலைஞர் கருணாநிதி சாலை என்கிற கே கே சாலையிலுள்ள நாட்டு மருந்து கடை அருகே வரும் போது எதிரே தெரிந்த ராமச்சந்திரனின் தொப்பியை சரியாகப் பார்க்காமல் விட்டதன் விளைவு, ராமச்சந்திரன் என் கைகளில் பணத்தைத் திணிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றது. ‘ஆட்டோல போங்க ஸார். ஏன் ஸார் நடந்து போறீங்க? உங்கக்கிட்ட காசு இல்லங்கறது புரியுது. நான் தரேன் ஸார்’. கிட்டத்தட்ட ஓட்டமும், நடையுமாக ராமச்சந்திரனிடமிருந்துத் தப்பி வந்தேன். இனிமேல் பக்கத்து வீட்டுக்கே ஊபர்லதான் போக வேண்டியது வருமோ என்கிற கவலையை என்னைத் தெரிந்த சொற்ப மனிதர்கள் எனக்கு அளித்து வருகிறார்கள். சென்ற மாதத்தில் தசரதபுரம் போலீஸ் பூத் தாண்டி மீன் மார்க்கெட்டுக்கு முந்தைய வளைவில் உள்ள தெருவில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் ‘நாசே’ ராமச்சந்திரன் வீட்டுக்கு முன் நடந்து வரும்போது, முற்றிலும் முகம், கைகளை மறைத்து துணி சுற்றிய ஒரு பெண் தனது டூ வீலரால் என்னை மறித்து என்னைத் திடுக்கிட வைக்கும் விதமாக ‘ஸா . . . .ர்’ என்று அலறி வண்டியை அவசர அவசரமாக சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார். யாராக இருக்கும் என்று நான் யோசிப்பதற்குள் முகமூடியை அவிழ்த்தபடியே, ‘என்னைத் தெரியலியா ஸார்? நான் தான் பேச்சியம்மாள்’ என்றார். 

‘அடிப்பாவி, நீயா? நான் பயந்துல்லா போனேன். எங்கெ இந்தப்பக்கம்?’

‘பக்கத்து ஸ்டிரீட் டப்பிங் தியேட்டர்ல ஒரு டப்பிங். நம்ம விஜிமேடம்தான் இன்சார்ஜ். அத முடிச்சுட்டு வரேன்.’

பேச்சியம்மாளுக்கு சொந்த ஊர் சங்கரன்கோயில். ‘அசுரன்’ திரைப்படத்தில் இரண்டு, மூன்று கதாபாத்திரங்களுக்கு மாற்றி மாற்றிப் பேச வைத்திருந்தேன். 

பேச்சியம்மாள் வாயிலிருந்தும் அதே கேள்வி: ‘என்ன ஸார் நடந்து போறீங்க?’

‘யம்மா! என் வீடு பக்கத்துலதான் இருக்கு. முடி வெட்டிட்டு அப்படியே நடந்து வாரென்.’

‘அதுக்காக நீங்க நடந்து போகலாமா? என்னால பாத்துட்டுப் போக முடியல. நீங்க என் குருல்லா’.

‘ஏ பிள்ள! அன்னா தெரியுது பாரு ஒரு பில்டிங்கு. அதான் என் வீடு. நீ கெளம்பு’. சற்று கண்டிப்பான குரலில் சொல்லி பேச்சியம்மாளை அனுப்பி வைத்தேன்.

இதைப் படித்த யாரேனும் சாலிகிராமத்திலுள்ள காந்தி நகர் மற்றும் வடபழனி குமரன் காலனி தெருக்களில் சுட்டெரிக்கும் வெயிலில் கூட குரங்கு குல்லா அணிந்து, கழுத்தில் மஃப்ளர் சுற்றி, கருப்பு கூலிங் கிளாஸ் போட்டு, முகத்தை மறைக்கும் விதமாக கைக்குட்டை கட்டி ஓர் உருவம் நடந்து செல்வதைப் பார்த்தீர்களானால் ஏதோ வடநாட்டு சம்பல் கொள்ளைக்காரனென்றோ, பிள்ளை பிடிக்கிறவன் என்றோ நினைத்து ‘ஒன்று பூஜ்யம் பூஜ்யம்’ எண்ணை அழைத்து விடாதீர்கள்.

பைரவ ப்ரியம்

அழிலும் தொழிலும் உருக்காட்டான்

அஞ்சேலென்னான் அவனொருவன்

தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று

போகானால்

தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி

 வருகின்ற

குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத்

தடவீரே!

‘என்னய்யா இப்பிடி உருகி உருகி பாடியிருக்கா!’

எடுத்த எடுப்பில் ஃபோனில் இப்படித்தான் ஆரம்பிப்பார், கோலப்பன். நான் தான் லூசு மாதிரி சம்பிரதாயமாக ‘ஹலோ’வில் துவங்கி நல்லா இருக்கேளா கோலப்பன்? பிள்ளேள்லாம் சும்ம இருக்கா?’ என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பேன். அதற்குள் கோலப்பன் தான் சொல்ல வந்ததில் பாதி சொல்லி முடித்திருப்பார். மூத்த பத்திரிக்கையாளர் கோலப்பனை அபூர்வமாக தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்கலாம். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் பணிபுரியும் கோலப்பன், நாஞ்சில் நாட்டுக்காரர். பறக்கை என்னும் கிராமத்துச் சிறுவன் கோலப்பனை இன்னும் பத்திரிக்கையாளர் கோலப்பன் தொலைத்து விடாமல் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். ஆண்டாளின் பாடலை வியப்பதில் துவக்குவார், கோலப்பன்.

“நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது.

கூறாதோ நான் படும் பாடுகள் நூறு.

நானொரு ஆண்டாளோ திருப்பாவைப்பாட  

ஏழையை விடலாமோ இதுபோல வாட” என்று ‘மோகமுள்’ திரைப்படத்தின் பாடலுக்குத் தாவுவார்.

‘அதென்னய்யா சண்முகப்ரியால இந்தப் பாட்டப் போட்டுட்டாரு? வளக்கமா பக்திக்குத்தானே அந்த ராகத்துல பாட்டு போடுவாங்க?’

கேட்டுவிட்டு அவரே பதிலும் சொல்லிக்கொள்வார்.

‘அதுசரி. பக்தியும், காதலும், காமமும் கிட்டக் கிட்டதானெ கெடக்கு!’

நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவரே இப்படி தொடர்வார்.

‘ஒருவேளை ஆண்டாள் மாரியே தங்கம்மாவும் நாச்சியார் திருமொளியோ திருப்பாவையோ பாடியிருந்தா அவளுக்கு அந்தப் பய பாபு கெடச்சிருப்பானோய்யா?’

கோலப்பனின் தொலைபேசி அழைப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் அமையும்.

மின்னஞ்சலில் ஏதேனும் இசைத்துணுக்குகள் அனுப்பி வைத்து ராகம் குறித்து கேட்பார்.

‘சுகா. இந்த மலயாளத்தான் பாட்டு காம்போதிதானெ?’ பதில் அனுப்புவதற்குள் ஃபோன் பண்ணுவார்.

‘காம்போதிதான், கோலப்பன்.’

‘அவ்வொ அம்மையும் அப்பனும் தேனும், பாலுமா சிவபெருமானுக்கு அபிசேகம் பண்ணியிருப்பாங்கய்யா. இல்லென்னா சவம் இப்பிடி தொண்ட வாய்க்குமா சொல்லுங்கொ’.

கோலப்பனுக்கு ஆழ்வார் பாசுரங்கள், கர்நாடக சங்கீதம், குறிப்பாக நாகஸ்வரம், நாஞ்சில் நாட்டு உணவு, மற்றும் தி. ஜானகிராமன், கிருஷ்ண பிரேமி இவையெல்லாம் அத்தனை இஷ்டம். பெரும்பாலும் அவரது பேச்சு இவற்றைச் சுற்றிதான் இருக்கும். இதெல்லாம் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு. சமீபகாலமாக கோலப்பனின் விருப்பம், சிந்தனை, பேச்சு எல்லாமே ஒரே விஷயம் குறித்து மட்டுமாகி விட்டது. ஜெயமோகன் ஒருமுறை சொன்னார்.

‘இப்பல்லாம் கோலப்பன் நாயைத் தவிர வேற எதைப் பத்தியும் பேசறதில்ல. கவனிச்சீங்களா?’

சென்னையில் கோலப்பனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். மனைவி, மகன், மகளுடன் வசிக்கும் கோலப்பனின் வீட்டின் இன்னொரு பக்கம் கோலப்பனின் வயதான மாமியாரும் வசிக்கிறார். கோலப்பனின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தைத் தாண்டும். அவ்வப்போது எண்ணிக்கை கூடும், குறையும். வீட்டுக்குள் நாம் நுழைந்ததும் முதலில் ஒரு கோம்பை நாய் வந்து நம்மை வரவேற்கும். அடுத்து வெளிநாட்டு சொகுசு வகை நாயான பீகிள் வந்து வாலாட்டும். அதற்குப் பின்னாலேயே வேட்டை நாய்களான சிப்பிப்பாறையும், ராஜபாளையமும் நம்மைப் பார்த்து முறைத்து பின் சிரிக்கும்.

‘ஏ பிள்ளேளா! ஆரு வந்திருக்கா தெரியுதா? உள்ளெ வாங்கொன்னு கூப்பிடுங்கொ’.

இப்படி சொல்வது கோலப்பனின் இல்லாள். அந்த வகையில் கோலப்பன் அதிர்ஷ்டக்கட்டை. அவரது குடும்பமே பைரவ ப்ரியர்கள்தான்.

‘அத ஏன் கேக்கியோ? நேத்து இந்தச் சின்னப்பய என்ன பண்ணுனான் தெரியுமாய்யா? என் சாக்ஸைத் தூக்கிக் கொண்டு போயி எங்கனயோ ஒளிச்சு வச்சுட்டு ஒண்ணும் தெரியாத மாரி என் மூஞ்சியப் பாத்துக்கிட்டு நிக்கான். எல அப்பா சாக்ஸ எடுத்தியான்னு நானும் கேக்கேன். அவொ அம்மையும் கேக்கா. வாயத் தொறப்பனான்ட்டாம்யா’.

கோலப்பனின் சின்னப்பையனான பீகிள் நாய்க்குட்டியை உற்றுப் பார்த்தேன். பதிலுக்கு அதுவும் என் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு தலையைக் கவிழ்ந்து கொண்டதோடு சரி. என்னிடமும் ஒரு வார்த்தை சாக்ஸைப் பற்றிப் பேசவில்லை. நாய்களை பெற்ற பிள்ளைகளாகக் கருதும் பெற்றோருடன் அவை பேசும்தான். பல வீடுகளில் செல்ல நாய்களுடன் அமர்ந்து குடும்பக் கதைகளைப் பேசும் மனிதர்களை, நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது நாட்டு நடப்புகளை நாயுடன் பேசிக் கொண்டே செல்பவர்களை, பள்ளிக்கூட வேன் வரைக்கும் வந்து வழியனுப்பும் நாயுடன் பேசும் சிறுமிகளை, (ஐயோ. நான் போயிக்கிடுதேன். நீ வீட்டுக்குப் போ) கடைக்குச் சென்று அம்மா எழுதிக் கொடுத்த சாமான்கள் வாங்கும் போது உடன் வந்த நாய்க்கு பிஸ்கட்டோ, பொறையோ, ரஸ்க்கோ வாங்கிப் போட்டு ‘குட் கேர்ளா சாப்பிட்டுட்டு கெளம்பு. நான் சாமான்லாம் வாங்கிட்டு வாரேன்’ என்று சொல்லும் பையன்களை, இப்படி நிறைய . . .

ஒரு மங்கிய மாலை வேளையில் தசரதபுரம் நாகாத்தம்மன் கோயிலின் பின் தெருவொன்றில் கனத்த குரலில் கண்டிப்புடன் யாருடனோ ஒரு பெண்மணி பேசிக் கொண்டிருந்தார்.

‘நீ ஒண்ணும் பஸ் ஸ்டாண்டுக்குப் போயிக் காத்துக் கெடந்து அவளக் கூட்டிக்கிட்டு வர வேண்டாம். அவளே ஆட்டோல வந்திருவாளாம். இப்பதான் ஃபோன் பண்ணுனா. நீ ஒளுங்கா வீட்டுக்கு வந்து சேரு. அவ்ளோதான் சொல்லுவேன்’.

அரைமனதோடு அந்த அம்மையாரின் குரலுக்குக் கட்டுப்பட்டு, யாரையோ திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் தளர்ந்த நடையுடன் சென்று கொண்டிருந்தது. கோலப்பனுக்கு ஃபோன் செய்து இந்த விஷயத்தைச் சொன்னேன்.

‘பாக்க பாவமா இருந்தது, கோலப்பன். என்ன இருந்தாலும் அந்தம்மா அப்படி ஏசியிருக்கக் கூடாது. பிள்ள மொகம் வாடிப் போச்சு. இதையெல்லாம் வேற யாருக்கிட்டயும் சொன்னா நம்மள கோட்டிக்காரம்பாங்க. அதான் ஒங்கக்கிட்ட சொல்லுதென்’.

அதற்காகவே காத்திருந்த மாதிரி கோலப்பன் சொல்ல ஆரம்பித்தார்.

‘நீங்க என்ன நெனச்சாலும் சரி சுகா. இப்பம் நான் ஒங்கள கூப்பிடணும்னு நெனச்சேன். நீங்களே போன் பண்ணிட்டியோ. என் கூட வேல பாக்கற ஃபிரெண்டு ஒருத்தன் ஒரு பக்கு (Pug) நாய்க்குட்டி வாங்கியிருக்கான் பாத்துக்கிடுங்க. அதப் பாக்க என்னய கூப்பிட்டுக்கிட்டெ இருந்தான். இன்னைக்குத்தான் நேரம் வாய்ச்சுது. நான் பாக்கப்போனதென்னமோ அந்த பக்கு குட்டியத்தான். ஆனா வராதவன் வந்திருக்கானேன்னு என் ஃபிரெண்டு என் கூட பேசிக்கிட்டே இருக்கான். நானும் பேச்சு சுவாரஸ்யத்துல குட்டிய லேசா கொஞ்சிட்டு கீள எறக்கி விட்டுட்டு அவன் கூடவே பேசிக்கிட்டு இருந்தேன். சொன்னா நம்ப மாட்டிய சுகா. அந்த பக்குக் குட்டி அண்ணாந்து என் மூஞ்சியப் பாத்துக்கிட்டு ‘கோலப்பன் மாமா என்னயத் தூக்குங்க, கோலப்பன் மாமா என்னயத் தூக்குங்கன்னு நெலையா நின்னுட்டு’.

‘நான் நம்புதென், கோலப்பன்’.

‘அதுக்குத்தானய்யா ஒங்கக்கிட்ட சொல்லுதென்’.

இதைச் சொல்லும்போது கோலப்பனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. கோலப்பனின் வாழ்நாள் கனவு ஒன்று உண்டு. பணி ஓய்வு பெற்ற பின் தமது சொந்த கிராமமான பறக்கையில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு பத்து நாய்கள் வீதம் வளர்த்தபடி காருகுறிச்சி அருணாசலத்தின் நாகஸ்வர இசை கேட்டபடி நிம்மதியாக வாழவேண்டும். கோலப்பனின் கனவு நனவாக அவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

‘வாலிலே நன்றி சொல்லும்

வாயிலே பிள்ளை யாகும்

காலிலே அன்பு காட்டும்

கண்ணிலே உறவு காட்டும்

தோலிலே முளைத் தெழுந்த

ரோமமும் தோழ னாகும்

வேலினால் தாக்கி னாலும்

வீட்டில்தான் விழுந்து சாகும்.’

கோலப்பனிடம் ஒருநாள் இந்த வரிகளைச் சொன்னேன். உணர்ச்சிவசப்பட்டு குரல் கலங்கி, ‘யார் எளுதுனதுய்யா?’ என்றார்.

கவியரசு கண்ணதாசன் எழுதிய ‘என்னருமை சீசர்’ முழுப்பாடலையும் அனுப்பிவைத்தேன். முழுவதையும் படித்து விட்டு கோலப்பன் சொன்னார்.

‘சீசர் பாசத்தைப் பெற்ற தாயின் பாலிலும் கண்டேனில்லைன்னு எளுதிட்டாரேய்யா!’

‘ஆமா கோலப்பன். பாட்ட எப்பிடி முடிச்சிருக்காரு கவனிச்சேளா?வளர்த்தவன் சிரிக்கின்றானா?வாய்விட்டே அழுகின்றானா?’

மீதமுள்ள வரிகளை உணர்ச்சி பொங்க கோலப்பனே சொல்லத் துவங்கினார்.

‘தளர்ச்சியில் வீழ்கின்றானா?

தன்வரை குமைகின்றானா?

கிளர்ச்சியில் எழுகின்றானா?

கேலியில் சமைகின்றானா?

உளத்தினில் வளர்வதெல்லாம்

உணர்வது நாயின் நெஞ்சே!’

அத்துடன் கோலப்பன் நிறுத்தவில்லை.

‘இந்தப்பாட்ட ஒரு ஆயிரம் பிட் நோட்டீஸ் அடிச்சு தெருவுல போறவஙக வாரவங்ககிட்டயெல்லாம் குடுக்கணும்யா’ என்றார்.

கோலப்பன் வெறுமனே நாய்கள் மேல் பிரியம் மட்டும் வைத்திருப்பவர் அல்ல. அவற்றின் வகைகள் குறித்த அறிவும் உள்ளவர். எழும்பூர் ரயில் நிலையத்தின் வாசலில் ஒரு நாயைக் காட்டிச் சொன்னார். ‘இந்தப் பய கன்னிக்கும், சிப்பிக்கும் க்ராஸாக்கும். மூக்க கவனிங்க. அப்பிடியே களுத்து மடிப்பையும் பாருங்கொ. நான் சொல்லது வெளங்கும்.’

எனக்கு ஒன்றும் விளங்கவில்லையென்றாலும் கோலப்பனை கவனித்தேன். அவர் அந்த கன்னி, சிப்பி நாயைத் தடவியபடி பேச ஆரம்பித்தார்.

‘எங்கப்போவ் போறே? பிஸ்கட் திங்கியா? இரி. மொதல்ல தண்ணி தாரேன். குடி.’

நாய்களுக்கு, குறிப்பாக தெரு நாய்களுக்கு உணவை விட தண்ணீர்தான் கிடைக்காது. அதை முதலில் கொடுக்க வேண்டும் என்பது போன்ற அடிப்படையான விஷயங்களை கோலப்பனிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

தன் வீட்டில் தான் வளர்க்கும் நாய்கள்தான் என்றில்லை. தெருவில் அடிபட்டு, உடம்பெல்லாம் புண்ணாகிக் கிடக்கும் நாய்க்குட்டிகளை வீட்டுக்குத் தூக்கி வந்து பண்டுவம் பார்த்து அவற்றை நல்ல கெதியாக்கி பின் தன்னைப் போன்ற பைரவ ப்ரியர்களைத் தேடிக் கொண்டு போய் கொடுப்பது கோலப்பனின் வழக்கம். கொடுத்ததோடு கடமை முடிந்தது என்று இருந்து விடாமல் அவ்வப்போது போய் அந்தப் பிள்ளைகளைப் போய்ப் பார்த்து நலம் விசாரித்து விட்டும் வருவார்.

‘சுகா! நீங்க எவ்வளவோ டாப்பிக் எளுதியிருக்கியோ. இல்லேங்கல. ஆனா நாய்களப் பத்தி விகடன் தொடர்ல எளுதுனிய பாத்தேளா! அதுலேருந்துதாம்யா ஒங்க மேல மரியாதயே வந்தது!’.

எனக்கும் நாய்கள் என்றால் அத்தனை இஷ்டம்தான். ஆனால் கோலப்பனைப் போன்ற ஒரு நாய்க் காதலரை, நாய்களின் தகப்பனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. தான் பெற்ற பிள்ளைகளைப் பற்றி என்னிடம் பேசியதை விட நாய்களைப் பற்றி அவர் பேசியதுதான் அதிகம். அதுவும் நாய்கள் என்று மறந்தும் சொன்னதில்லை. பிள்ளைகள்தான். தெற்கத்தி பாஷையில் பிள்ளேள்.

அவ்வளவு சௌகரியமாகவும், விஸ்தாரமாகவும் இல்லாத வீட்டில் அத்தனை வகை நாய்களையும் போட்டு வளர்த்து வரும் கோலப்பனை வியந்து ஒருமுறை குஞ்சுவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

‘எப்பிடித்தான் அந்தச் சின்ன வீட்டுக்குள்ள நாய்களை சீராட்டி வளக்காரோ, தெரியல. காலுக்குள்ளயும், கைக்குள்ளயும் வந்து விளுந்து ஆளுக நடமாடவே முடியாது, பாத்துக்கொ.’

‘அவாள் மனவிஸ்தாரத்துக்கு முன்னாடி வீடாவது, ஒண்ணாவது? கோலப்பனால தெருவோரத்துலப் போட்டுக் கூட நாய்கள வளக்க முடியும்’ என்றான், குஞ்சு.

கோலப்பனைப் பற்றி குஞ்சு சொன்னதுதான் நிஜம். எந்த இடத்திலும் அவரால் நாய்களைப் பேண முடியும்.

‘இந்தப் பயலுக்கு நல்லா கித்தார் வருதுய்யா. அவனா கெடந்து வாசிக்கான். ஒளுங்குப்படுத்தி விட்டா நல்லா வாசிப்பான்னு தோணுது. சதா ஸார்க்கிட்ட சேத்து விடுங்களேன்.’

அதிசயமாக தன் மகன் குறித்துப் பேசினார், கோலப்பன்.

‘பேசிட்டு சொல்லுதென், கோலப்பன்’.

இளையராஜாவின் கிடாரிஸ்ட் சதானந்தம் அவர்களிடம் கோலப்பனின் மகனை கிடார் வகுப்பில் கொண்டு போய் சேர்ப்பதற்காக தியாகராய நகரிலுள்ள அவரது இசைக் கூடத்துக்கு நானும், கோலப்பனும் அவரது மகனை அழைத்துச் சென்றோம். வழக்கம் போல வகுப்பை விட்டு விட்டு சதா ஸார் என்னிடம் வெவ்வேறு இளையராஜாவின் பாடல்கள் குறித்துப் பேசத் துவங்கினார். ஒரு கட்டத்துக்கு மேல் சுதாரித்துக் கொண்டு, ‘நாம இன்னொரு நாள் பேசுவோம், ஸார். உங்க க்ளாஸ் நடக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு நானும், கோலப்பனும் கிளம்பி வெளியே வந்தோம். சதானந்தம் அவர்களின் இசைக்கூடத்தை ஒட்டியுள்ள தேநீர்க்கடையில் தேநீர் சொல்லிவிட்டு நின்று பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் குஞ்சு ஃபோன் பண்ணியிருந்தான். சென்னைக்கு வந்திருந்த அவனை நாங்கள் இருக்கும் இடத்துக்கு வரச் சொல்லியிருந்தேன். ஆட்டோவில் வந்து எதிர்முனையில் இறங்கி சாலையைக் கடந்து எங்களுருகே வந்த குஞ்சுவைப் பார்த்ததும் கோலப்பன் பரவசமானார். பதிலுக்கு பதில் பரவசத்துடன் குஞ்சுவும், கோலப்பனை நெருங்கி வந்து கைகளை விரிக்க, இருவரும் ஆசையுடன் ஒருவரைக்கொருவர் ‘சம்பந்தி’ என்றழைத்தபடி ஆரத் தழுவிக்கொண்டனர். குஞ்சுவின் ஆண் பிள்ளை நாய்க்கு கோலப்பன் தனது பெண்பிள்ளை நாயை ஆறு மாதத்துக்கு முன்புதான் கட்டிக் கொடுத்திருந்தார்.

கருப்புகவுணியும், கருங்குறுவையும் . . .

‘ஒடம்பைக் கொறைக்கலாம்னு இருக்கேன், ஸார்’. 

ஹைதராபாத்தில் மோகன்லாலின் ‘மரைக்காயர்’ படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்து ஃபோனில் இதைச் சொல்லும் போது மனோஜின் குரலில் உறுதி தெரிந்தது. எனக்குத்தான் பதற்றமாக இருந்தது. 

‘வேண்டாம்டா மனோஜ். அடையாளம் தெரியாமப் போயிரும்’.

‘இல்ல ஸார். நான் முடிவு பண்ணிட்டேன். சென்னைக்கு வந்தவுடனே ஒங்கள வந்து பாக்கறேன்.’

மனோஜ், திரைப்பட ஒலிப்பதிவாளர். ஒலிப்பதிவு அறையில் அமர்ந்து வேலை செய்வதில் மனோஜுக்கு விருப்பமில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடிக, நடிகையரின் வசனங்களை ஒலிப்பதிவு செய்வதில் ஆர்வம் உள்ள இளைஞன். ஒலிப்பதிவு சம்பந்தமான ஆழமான அறிவும், தேடலும் உள்ளவன். ஏ. ஆர். ரஹ்மானின் உள்வட்டத்தைச் சேர்ந்தவன். ரஹ்மானின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் பாடி உலகப்புகழ் பெற்ற பல பாடகர்கள் மனோஜின் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையை அவ்வப்போது அலங்கரிப்பவர்கள். திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி உட்பட அவரது அலுவலக ஊழியர்கள் அனைவருமே மனோஜை ‘சுகாவின் தத்துப்புத்திரன்’ என்றே சொல்வார்கள். எல்லா இடங்களிலும் என்னுடன் காணப்படும் மனோஜைக் காண்பித்து பலர் என்னிடம், ‘உங்க ஸன்னா, ஸார்?’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘ஆம்’ என்றே சொல்லியிருக்கிறேன். 

ஜெயகாந்தனின் ‘குருபீடம்’ சிறுகதையைப் போல என்னை தன் குருவாக அவனாகவே முடிவு செய்து, ஏற்றுக் கொண்ட மனோஜ், ஒலிப்பதிவு மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த சகல விஷயங்களிலும் எனது குரு. ஆனால் குருவை அதட்டித்தான் கற்றுக் கொள்வேன்.

‘என்னடா இது? நீ வாங்கிக் குடுத்த ப்ளூடூத் ஸோனி ஸ்பீக்கர் லேப்டாப்போட கனக்ட் ஆகவே மாட்டேங்குது?’

‘ஸார். அதுக்கு மொதல்ல ப்ளூடூத்தை ஆன் பண்ணனும், ஸார்’.

படப்பிடிப்புக்காக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு சென்றுவிட்டாலும் தவறாமல் ஃபோனில் பேசுபவன். சென்னைக்கு வந்து விட்டாலும் ஃபோன் வரும்.

‘என்ன மனோஜ்! வந்துட்டியா?’

‘இப்பதான் ஸார் வந்தேன். ஒங்களைப் பாக்க வரலாமா?’

‘வாயேன். எங்கே இருக்கே?’

‘ஒங்க ஏரியாலதான் ஸார்’.

‘வடபழனி வந்துருக்கியா?’

‘இல்ல ஸார். சாலிகிராமத்துக்கே வந்துட்டேன்.’

‘அடப்பாவி. சாலிகிராமத்துல எங்கே இருக்கே?’

‘ஒங்க பில்டிங்குக்குக் கீளதான் ஸார் நிக்கறேன்’.

மனோஜின் முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்று, செல்ஃபி எடுத்துக் கொள்வது. நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி எப்படியும் ஆயிரமாவது இருக்கும். இன்னொரு பொழுதுபோக்கு இன்ஸ்டாக்ராமில் லைக் போடுவது. பிரபஞ்சத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்த அழகியாக இருந்தாலும் மனோஜின் லைக்கிலிருந்துத் தப்ப முடியாது. 

சென்னைக்கு வெகு அருகே உள்ளே செம்பாக்கத்தில்தான் மனோஜின் வீடு உள்ளது. ஒரே ஒரு முறை என்னை அழைத்துச் சென்றிருக்கிறான். பலமணிநேரப் பயணத்துக்குப் பிறகு செம்பாக்கம் அடைந்ததும் என் மன பிராந்தியத்தில் தாமிரபரணி தெரிந்தது.

‘அடேய்! என்னை திருநவேலிக்கேக் கூட்டிக்கிட்டு வந்துட்டியா?’

மனோஜின் தாய்மொழி கன்னடம். அவனது தாயார் தீவிர தமிழ் வாசகி. அன்றைக்கு மனோஜின் பெற்றோர் என்னை வரவேற்ற விதம் அத்தனை கூச்சத்தை வரவழைத்தது. ‘நீங்க எங்க பையனோட குரு. ஒங்களைக் கூட்டிக்கிட்டு வரப்போறதா சொன்னான். ஒங்கள சரியா கவனிக்கணுமேன்னு எங்களுக்கு டென்ஷனா ஆயிடுச்சு.’ மனோஜின் தாயார் இன்னும் என்னென்னவோ சொன்னார். நான் மனோஜின் தகப்பனாரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மனோஜுக்கும், அவனது தகப்பனாருக்குமான ஒரே வித்தியாசம், அவனது தகப்பனார் வைத்திருந்த மீசை. மற்றபடி அவரும் மகனைப் போலவே உருண்டையாக இருந்தார். சின்ன உருண்டை, பெரிய உருண்டையெல்லாம் இல்லை. மொத்தமாக உருண்டை. அவ்வளவுதான். முறுக்கு மீசையை பசு நெய் தடவி நீவி விட்டிருந்தார். மீசையைத் தாண்டி அவரது சிரிப்பைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. அவர் பேச ஆரம்பித்ததும் அவருக்கும் என் மேல் அத்தனை மரியாதையை அவரது மகன் புகட்டி வைத்திருந்தது புலப்பட்டது.

மனோஜின் புஷ்டியான உடல்வாகு அவனது தாய் மற்றும் தகப்பன் வீட்டு சீதனம். உலகிலுள்ள சகல சைவ உணவு வகைகளையும் தேடித் தேடிச் சென்று சுவைப்பவன். சென்னையில் உள்ள அனைத்து சைவ ஹோட்டல்களுக்கும் மனோஜ் என்னை அழைத்துச் சென்றிருக்கிறான். 

‘ஸார். சௌகார்ப்பேட்டைல ஒரு தோசைக் கட. நெய்ல முக்கி தர்றாங்க, ஸார்.’

சொன்ன கையோடு அழைத்தும் சென்றான். அடுத்த முறை அழைத்தபோது மறுத்து விட்டேன்.

‘வேண்டாம்டா மனோஜ். அன்னிக்கு நெய் தோச சாப்பிட்டதுக்கப்புறம் ஒரு வாரத்துக்கு  தண்ணி குடிச்சாலும் நெய் குடிச்ச மாதிரியே இருந்தது.’

‘அப்ப போரூர்ல ஒரு நல்லெண்ணெய் தோசைக் கடை இருக்கு. போலாமா, ஸார்?’

இந்தளவுக்கு தேடல் உள்ள மனோஜ் ‘ஒடம்பைக் கொறக்கலாம்னு இருக்கேன், ஸார்’ என்று சொன்னால் மனம் பதறத்தானே செய்யும்!?

மயிலாப்பூரிலிருந்து மனோஜின் இரு சக்கர வாகனம் ஆழ்வார்ப்பேட்டைக்குத் திரும்பி ஒரு கடையின் வாசலில் நிற்கும் போது, இனிமேலும் நாம் உட்கார்ந்திருக்கலாகாது என்று பின் இருக்கையிலிருந்து இறங்கினேன்.

‘வாங்க ஸார்.’ வேகம் வேகமாகக் கடைக்குள் சென்றான். அது பாரம்பரிய அரிசி, மற்றும் தானியங்கள் விற்கும் கடை. கருப்பு கவுணி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பூங்கார் அரிசி, காட்டுயானம் அரிசி(யானை அல்ல), கருத்தக் கார் அரிசி, காலாநமக் அரிசி, மூங்கில் அரிசி, அறுபதாம் குருவை அரிசி, தூயமல்லி அரிசி, குழியடிச்சான் அரிசி, சேலம் சன்னா அரிசி, பிசினி அரிசி, சூரக்குறுவை அரிசி, வாலான் சம்பா அரிசி என பற்பல அரிசிகள். இவற்றில் சில பெயர்களை மட்டும் அறிந்திருக்கிறேன். சிலவற்றை பெயரறியாமல் சிறு வயதில் உண்டுமிருக்கிறேன். ஒவ்வொன்றையும் வாங்கி பையில் போட்டுக் கொண்டே இருந்தான், மனோஜ். 

‘ஸார் ஒங்களுக்கு?’

‘கருப்பு கவுணியும், கருங்குறுவையும் மட்டும் எடுத்துக்கறேன்டா. எனக்கென்னவோ அது ரெண்டும் எனக்காகத்தான் வச்சிருக்காங்கன்னு தோணுது.’

குருசிஷ்யன் இருவரும் கருப்பு கவுணியிலும், கருங்குறுவையிலும் தீவிரமாக இறங்கினோம். விதி குன்றக்குடியிலிருந்து அழைத்தது. என் உடன் பிறவா சகோதரர்கள் சரவணனும், பாலசுப்பிரமணியமும் குன்றக்குடிக்கு அழைத்தனர். பாலசுப்பிரமணியம் அமெரிக்காவில் பணி புரிபவர். வருடாவருடம் தனது சொந்த ஊரான குன்றக்குடிக்கு வரும் போதெல்லாம் என்னை தமது இல்லத்துக்கு அழைப்பார். 

‘அண்ணே! நம்ம வீட்டுக்கு வந்துட்டு, சண்முகநாதனை தரிசிச்சுட்டு அப்படியே பிள்ளையார்ப்பட்டிக்கும் போயிட்டு வரலாம்ணே!’. 

இந்த வருடம் தம்பியின் அழைப்பைத் தட்ட இயலவில்லை. பாலசுப்பிரமணியத்துக்கு என் மூலம் அறிமுகமான தம்பிகள் ரமேஷ், மற்றும் ‘கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இருவரும் என்னுடன் கிளம்பினர். நான் கிளம்பியதால் எனக்கு முன்பாகவே காரில் மனோஜ் இருந்தான். கருப்பு கவுணிக்கும், கருங்குறுவைக்கும் குன்றக்குடியில் ஆபத்து காத்திருப்பதை அறியாத சிரிப்பு மனோஜின் குண்டு முகத்தில் தவழ்ந்தது. மாலையில் கிளம்பிய கார், போகிற வழியில் மேல் மருவத்தூர் தாண்டி, 99 காப்பிக்கடையில் நின்ற போதே குன்றக்குடி யானையின் மணியோசை ஒலிக்கத் துவங்கியது. ‘சுக்கு காபி மட்டும் குடிக்கலாம், ஸார்’ என்றபடி அமர்ந்த மனோஜுக்கு முன் வெண் பொங்கலும், ஆப்பமும், வாழைப்பூ வடைகளும் வந்து அமர்ந்து மனோஜைப் பார்த்து புன்முறுவல் பூத்தன. முதலில் சாப்பிட ஆரம்பித்தவன், மனோஜ்தான். நான் முறைத்துப் பார்த்ததை தன் மனக்கண்ணால் கவனித்த மனோஜ், ‘பொங்கல் வரகுல பண்ணியிருக்காங்க, ஸார். ஹெல்தி ஃபுட்’ என்றபடி வாழைப்பூ வடைக்குத் தாவினான். கடைசி வரைக்கும் சுக்கு காபி வரவே இல்லை. இரவுணவுக்கு திருச்சி சென்றோம். திருநவேலி தம்பி குமரேசனின் பரிந்துரையின் பேரில் பைபாஸ் சங்கீதாஸ் சென்றோம். திருநவேலியிலிருந்து திருச்சிக்குக் கிளம்பி வந்த அவன் எங்களுக்காக சங்கீதாஸ் வந்திருந்தான். சங்கீதாஸுக்குள் நுழைந்ததும், அங்கு ஒட்டப்பட்டிருந்த ஒரு வண்ண ஸ்டிக்கர் மனோஜின் கண்களைப் பறித்தது. 

‘ஸார். வெஜிடபிள் ஆம்லேட்டாம், ஸார். அதுவும் ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீயாம்’ என்றான். 

‘ஆம்லேட்டா?! என்னடா மனோஜ்?’

‘ஸார். ஆமெலெட்டுன்னா ஆம்லெட் இல்ல ஸார். பயிறுல செஞ்சது. அடை மாதிரி இருக்கும்’.

குண்டுப்பயல் ஏற்கனவே சாப்பிட்டிருக்கிறான் போல. ‘சரி சொல்லித் தொலை’ என்றேன்.

‘இந்தக் கடைல தோசைல்லாம் வித்தியாசமா இருக்கும்னு குமரேசன் அண்ணன் சொல்றாரு, ஸார்’.

குமரேசனும் அவன் பங்குக்கு ‘ஆமாண்ணே. மெனு கார்டு பாருங்க. ஒங்களுக்குப் புடிச்ச தோசையைச் சொல்லுங்க’ என்றான். 

மெனு கார்டைப் பார்த்ததும் மூடி வைத்து விட்டேன். ‘ரெண்டு இட்லி சொல்லுப்பா’ என்றேன்.

‘ஏம்ணே? வெரைட்டியா தோச இருக்குமே! சொல்லலியா? வேறெங்கயும் கெடைக்காதுல்லா?’ என்றான், குமரேசன்.

‘குமரேசா! அண்ணன் மேல நெஜமாவே ஒனக்கு மரியாத இருந்தா அந்த தோசையல்லாம் சாப்பிடச் சொல்லுவியாடே?’ கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டேன்.

‘அப்படி என்னண்ணே போட்டிருக்கான்? ஏன் கோவப்படுதியோ? குடுங்க பாப்போம்’ என்று வாங்கியவனுக்கு ஒன்றும் புரிந்த மாதிரி தெரியவில்லை. மெனு கார்டை எட்டிப் பார்த்த மனோஜ் சொன்னான். 

‘ஸார். மூணாவதா போட்டிருக்கற தோசயத்தானே சொல்றீங்க?’

‘ஆமாடா’ என்றபடி இட்லியை சாப்பிட ஆரம்பித்தேன்.

‘நல்லா இருக்கும்னு நெனைக்கறேன். ஒண்ணு சொல்லி பாதி பாதி ஷேர் பண்ணலாமா, ஸார்?’ என்று கேட்ட மனோஜை முறைத்துப் பார்த்தேன்.

‘ஸாரி ஸார்’ என்றபடி, ‘இன்னொரு வெஜ் ஆம்லேட் கொண்டு வாங்க’ என்றான், மனோஜ். நகர்ந்த சர்வரிடம், ‘எக்ஸ்கியூஸ் மீ. ஒரு ஆம்லெட் வாங்கினா இன்னொண்ணு ஃப்ரீதானே?’ என்றும் கேட்டுக் கொண்டான். 

குன்றக்குடிக்கு நள்ளிரவில் போய்ச் சேர்ந்தோம். மறுநாள் காலை சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்களின் தாயாரை வணங்கினோம். அம்மா தன் பிள்ளைகளிடம் கண்களால் ஏதோ சொன்னார்கள். சற்று நேரத்தில் காலை உணவுக்காக பாலசுப்பிரமணியத்தின் வீட்டு டைனிங் டேபிளில் பெரிய இலை போடப்பட்டது. 

மனோஜ் காதைக் கடித்தான்.’ஸார். குன்றக்குடில இலைல உக்காந்துதான் சாப்பிடணும் போல. அதுவும் என் சைஸுக்கே எல்லா இலையும் போட்டிருக்காங்க’.

‘மாயாபஜார்’ (பழைய) திரைப்படத்தின் ரவிகாந்த் நிகாய்ச்சின் தந்திரக் காட்சிகள் போல கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு இட்லி, இரண்டு வடை, முந்திரிப் பூக்கள் பூத்த கேஸரித் தோட்டம், தனித் தீவு போலக் காட்சியளித்த வெண் பொங்கல், எண்ணெயில் ஜொலித்த இரண்டு அப்பம், சிறிதும் தண்ணீர் கலக்காத கெட்டி சாம்பார், முல்லை மலர் போன்ற சட்னி என அவ்வளவு பெரிய இலையின் பச்சை கண்ணுக்கேத் தெரியாமல் நிறைந்திருந்தது. டைனிங் டேபிளுக்கு இருபுறமும், கைகளைக் கட்டியபடி நின்று கொண்ட சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்கள் எங்களை எழுந்து ஓட விடாமல் பார்த்துக் கொண்டார்கள். முதலில் நீண்ட நாள் பழக்கமான இட்லியிலிருந்துத் தொடங்கலாம் என்கிற எண்ணத்துடன் மெதுவாக இட்லியைத் தொடும் போது, பக்கத்து மனோஜ் இலையில் இட்லி வைத்த இடம் பச்சையாகத் தெரிந்தது. பொங்கலுக்குள் அவன் இறங்கியிருந்தான். பிரசாத்தின் கண்கள் கலங்கியிருந்தன. 

‘ஏன் தம்பி? சட்னி காரமோ?’

‘இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கலண்ணே!’

‘அப்புறம் என்ன தம்பி?’

‘இல்லண்ணே. சைடுல பாருங்க. கையைக் கட்டிக்கிட்டு ரெண்டு அண்ணன்களும் கிங்கரர்கள் மாரி நிக்காங்க. ஒங்களையாவது அண்ணன்னு விட்டிருவாங்க. எங்க நெலம மோசம்ணே. இந்த மனோஜ் வேற டயட்ல இருக்கறதா சொல்லிட்டு வெளுத்து வாங்குதானேண்ணே! உடனயொத்த பய அவ்வளவு அளகா சாப்பிடுதான். ஒனக்கென்னல கொள்ளன்னு அடிப்பாங்களோன்னு பயமா இருக்குண்ணே!’

தம்பி சரவணனை லேசாகத் திரும்பிப் பார்த்தேன். ‘நல்லா சாப்பிடுங்கண்ணே!’ என்றார். அவரது தோற்றம் கவலையளித்தது. காரணம், சரவணனுக்கு முன் மனோஜ் ரொம்ப ஒல்லியாகத் தெரிவான்.

‘ஏன் தம்பி? முழுசையும் சாப்பிடலன்னா அண்ணன் மேல கோபப்பட மாட்டீங்கல்ல?’

‘கோபப்பட மாட்டேம்ணே. வருத்தப்படுவேன்.’

‘ஸார். ஆறிடப் போகுது. சாப்பிடுங்க. கேஸரி நல்லாருக்கு’ என்றான், மனோஜ்.

அரை மணிநேரம் கழித்து கிட்டத்தட்டத் தவழ்ந்து பாலசுப்பிரணியனின் வீட்டிருந்து வெளியே வந்து காரில் ஏறியதும் எல்லா திசையிலிருந்தும் குறட்டையொலி கேட்டது. பிள்ளையார்ப்பட்டியில் பிள்ளையார் முன் அரைமயக்கத்தில் நின்று வணங்கினோம். தூக்கத்தைப் போக்க தோப்புக்கரணங்கள் போட்டுப் பார்க்க முயன்றும், நிறைமாத வயிறு அதற்கு இடம் கொடுக்கவில்லை. பிள்ளையார்ப்பட்டியிலிருந்து அரியக்குடி செல்லும் வழியில், 

‘பிள்ளையார்ப்பட்டியில இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம், ஸார்’ என்றான், மனோஜ். என் மனதுக்கு நெருக்கமாக மனோஜ் இருப்பதற்கு இந்தச் சிறு வயதில் அவன் இப்படி கோயில் கோயிலாகச் சென்று சாமி கும்பிடுவதும் ஒரு காரணம். 

‘வேணா சாயந்தரம் ஒரு வாட்டி பிள்ளையார்ப்பட்டி வரலான்டா. அவ்வளவுதானே?’

‘இல்ல ஸார். இப்பதான் சூடா புளியோதரை குடுப்பாங்களாம். சாயந்தரம் சக்கரப் பொங்கல்தானாம்’ என்றான். 

நல்ல வேளையாக அதற்குள் அரியக்குடி வந்தது. திருவேங்கடமுடையானை தரிசித்து விட்டு அருகில் உள்ள சொக்கநாதபுரம் சென்று அங்குள்ள பிரத்யேங்கரா தேவி கோயிலுக்கும் சென்று வந்தோம். மதிய உணவு காரைக்குடியில். கருங்குறுவையை மறந்து விட்டிருந்த மனோஜ், அநேகமாக அங்குள்ள எல்லா வகைகளையும் ஆர்டர் செய்து சாப்பிட்டான். ‘கோயில் கோயிலா அலைஞ்சதுல நல்ல பசி ஸார். இங்கெல்லாம் பெருமாள் கோயில்ல பிரசாதம் குடுக்கறதே இல்ல. ஏன் ஸார்?’ என்று கேட்டு விட்டு பதிலை எதிர்பாராமல், வெஜிடபிள் பிரியாணி சாப்பிட ஆரம்பித்தான். மதிய ஓய்வுக்குப் பிறகு குன்றக்குடி சண்முகநாதன் தரிசனம். சிறப்பு பூஜை. நாகஸ்வர பின்னணியில், ரம்யமான மலைக் காற்று. தரிசனம் நிறைந்து வெளியே வரும் போது சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்கள் கைகளில் தூக்குச்சட்டி தொங்கியது. ‘ஸார். காலைல மிஸ் ஆன புளியோதரை’ என்றான், மனோஜ். குரலில் கொப்பளித்த குதூகலத்தில் கருப்பு கவுணி காணாமல் போயிருந்தது. ‘ஆனா இப்ப புளியோதரை வேண்டாம், ஸார்’ என்றான். தொடர்ந்து மனோஜே சொன்னான். ‘காரைக்குடில ஒரு ஹோட்டல்ல பொரிச்ச பரோட்டாவும், பால் குருமாவும் நல்லா இருக்குமாம் ஸார். பாலு ஸார் நம்மளக் கூட்டிக்கிட்டு போகணும்னு ஆசப்படறா, ஸார். பாவம் நல்ல மனுஷன்’.

கோமா நிலையில் வந்து படுக்கையில் சரிந்த பிறகு சொப்பனத்தில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். 

‘மனோஜ்க்கு புளியோதரை சாப்பிடாததுல வருத்தம்ணே’ என்றார், பிரசாத்.

‘அதுக்காக நம்ம ஊர்ல சாப்பிடற மாதிரி பொரி கடல தொவையல் அரச்சு புளியோதரை சாப்பிடற நேரமா தம்பி, இது? இது பிரசாதம்லா. காலைல சாப்பிட்டா போச்சு.’

அரைத் தூக்கத்தில் இதைச் சொல்லும் போது தம்பி பாலசுப்பிரமணியம் அறையில் இருந்ததை நான் கவனிக்கவில்லை. மறுநாள் காலை நாங்கள் சென்னை கிளம்புவதாகத் திட்டம். காலை ஆறரை மணிக்கு எங்கள் அறையின் கதவைத் தட்டிய பாலசுப்பிரமணியம், சரவணன் சகோதரர்கள் கைகளில் எவர்சில்வர் தட்டுகள், தூக்குச்சட்டிகள், சிறிய பாத்திரம். அதிகாலையில் அரைத்த பொரிகடலைத் துவையலுடன் புளியோதரை பரிமாறப்பட்டது. மனோஜ் சாப்பிடத் தயாரானான். குன்றக்குடி சகோதரர்கள் பரிமாறும் முஸ்தீபுகளில் இறங்கினார்கள்.

‘பல் மட்டுமாவது தேச்சுக்கிடறேன், தம்பி’ என்றேன்.

‘நான் தேச்சிட்டேன், ஸார்’. சாப்பிடத் துவங்கினான், மனோஜ். சரவணன், பாலசுப்பிரமணியனின் முரட்டன்புப் பிடியிலிருந்து விடுபட்டு, ஶ்ரீரங்கம் சென்றடைந்தோம், அம்மா மண்டபத்தில் கூடியிருந்த பெரும் கூட்டத்தில் புகுந்து, காவிரியில் குளித்துக் கரையேறி, ஶ்ரீரங்கநாதனை தரிசித்து விட்டு வெளியே வரும் போது மனோஜின் கைகளில் புளியோதரை. முறைத்தேன். ‘இது குன்றக்குடி புளியோதரை இல்ல, ஸார். அதைத்தான் காலைல சாப்பிட்டோமே! இது ஶ்ரீரங்கம் பிரசாதம்’ என்றான். ‘சாயங்காலம் சாப்பிட்டுக்கலாம். இப்ப லஞ்ச் டைம்’ என்றார், பிரசாத். 

மதிய உணவுக்கு அதே பைபாஸ் சங்கீதாஸ். நான் மறந்திருப்பேன் என்று நினைத்து அந்த பிரத்தியேக தோசை இருக்கிறதா என்று நைஸாக கேட்டுப் பார்த்தான், மனோஜ். அது இரவில் மட்டும்தான் என்பதில் அவனுக்கு வருத்தம்தான். கூடவே ஒன்று வாங்கினால் மற்றொன்றும் இலவசமாகக் கிடைக்கிற வெஜிடபிள் ஆம்லேட்டும் இரவு மட்டும்தான் என்பதில் அவனுக்கு டபிள் வருத்தம். சென்னைக்குத் திரும்பியவுடன் மீண்டும் கருப்பு கவுணிக்கும், கருங்குறுவைக்கும் திரும்பிய மனோஜிடம் கேட்டேன். 

‘அப்படி என்னடா அந்த தோசை மேல ஒரு காதல், ஒனக்கு?’

‘நேம் இண்டெரெஸ்டிங்கா இருந்துச்சு ஸார். அதான். இங்கே சென்னைல எங்கேயாவது கிடைக்குதான்னு செக் பண்ணிட்டு சொல்றேன், ஸார். ஒரு நாள் போயி டேஸ்ட் பண்ணிப் பாக்கலாம். நீங்க கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணலேன்னா நான் வேணா நீங்க சாப்பிட்டதை யார்க்கிட்டயும் சொல்லாம இருந்துக்கறேன், ஸார்’.

உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ள மனோஜின் உள்ளம் கவர்ந்த திருச்சி சங்கீதாஸின் மெனு கார்டில் மூன்றாவதாக உள்ள  அந்தக் கவர்ச்சி தோசையின் பெயர், ‘டிங்கிரி டோல்மா தோசை’. 

சுளுக்கு . . .

இந்தமுறை திருநவேலி வாசம் ஒரு வாரத்துக்கு மேல் எடுத்துக் கொண்டது. கவிஞர்கள் பாஷையில் சொல்வதாக இருந்தால் ‘ஒரு மழைநாளில் சில்லென்று சிலிர்த்தபடி தூறலும், சாரலுமாக திருநவேலி என்னை வரவேற்றது’. போய் இறங்கிய நாளிலிருந்து தொடர் பயணம். முதல் இரண்டொரு தினங்களில் ‘அசுரன்’ திரையரங்குகளுக்கும், மீதி நாட்களில் திவ்ய தேசம், நவ திருப்பதி, திருச்செந்தூர், சித்தூர் தென்கரை மகராஜா திருக்கோயில் மற்றும் அம்மையப்பன் வீற்றிருக்கும் நெல்லையப்பர் கோயில் என சுற்றியபடியே இருந்தேன். இதில் நெல்லையப்பர் கோயிலைத் தவிர மற்ற கோயில்களுக்கும், ஊர்களுக்கும் காரில் பயணம் செய்ததால், சென்னைக்குக் கிளம்பும் முந்தைய நாளில் கடும் உடல்வலி. ஏற்கனவே ‘அசுரன்’ பட இறுதிக்கட்ட பணிகளுக்காக இரண்டு மாதங்களாக ஒரே அறைக்குள் ஒரு பிரத்தியேக நாற்காலியில் அமர்ந்தபடியே இரவுபகலாக வேலை செய்ததன் பலன் முதுகில் மெல்ல மெல்ல இறங்கியிருந்தது. கூடவே இந்தத் தொடர்பயணம் மேலும் வலியை வலுவாக்கியது. படுத்து உறங்க இயலவில்லை. மல்லாக்க, ஒருச்சாய்த்து எப்படி படுத்தாலும் வலி குறையவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க இயலாமல் தங்கையின் கணவரை ஃபோனில் அழைத்தேன். அவர்தான் என்னை நவதிருப்பதிக்கு அழைத்துச் சென்று பெருமாளை சேவிக்க வைத்து, செல்ஃபி எடுத்துக் கொண்டவர்.

‘மாப்ளே! நம்ம ஊர்ல கோட்டக்கல் வைத்திய சாலை எங்கன இருக்கு?’

வலியில் முனகினேன்.

‘என்ன விஷயம் அத்தான்? சிரிச்சுக்கிட்டே கேக்கேளே! ஏன்?’

தங்கை கணவரென்பதால் வலியையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு, ‘கடுமையான முதுகு வலி மாப்ளே. அங்கனன்னா சுளுக்கு கிளுக்கு தடவுவாங்கல்லா?’

‘முதுகு வலியா? இத மொதல்லயே சொல்ல வேண்டியதுதானே? இரிங்க. அரை மணிநேரத்துல வாரென்’.

சொன்ன படியே ஒரு மணிநேரத்தில் கையில் ஒரு புட்டியுடன் வந்து சேர்ந்தார், மாப்பிள்ளை. அதன் மேல் ஓர் அழுக்குத்தாளில் மங்கிய எழுத்துகளில் கேரள ஆயுர்வேத சாலை என்று தமிழ் போன்ற மலையாளத்தில் எழுதியிருந்தது. 

‘இதுக்குப் போய் அங்கன போய் முன்னப்பின்ன தெரியாத மலையாளத்தான்கிட்ட முதுகக் காட்டுவேளாக்கும்?! சட்டயக் கெளட்டுங்க. நானே தடவி விடுதென்’ என்று சொன்ன கையோடு என் மேல் பாய்ந்து சட்டைப் பித்தான்களைக் கழட்ட ஆரம்பித்தார். 

‘இரிங்க மாப்ளே. நானே களட்டுதேன்’. 

‘ச்செரி.அப்பம் நான் போயி ஸ்டூலைக் கொண்டு வாரென்’.

மாப்பிள்ளை வருவதற்குள் சட்டையைக் கழட்டி விட்டு வேஷ்டியுடன் அமர்ந்திருந்தேன். ஸ்டூலுடன் வந்த மாப்பிள்ளை, ‘வாங்கத்தான். இதுல வந்து உக்காருங்க’ என்று ஸ்டூலைக் காட்டினார். உட்காரப் போன என்னைப் பிடித்து நிறுத்தி சட்டென்று இடுப்பில் கை வைத்தார். 

‘மாப்ளே! என்ன இது? என்ன இருந்தாலும் நான் ஒங்க அத்தான். அத மறந்துராதிய.’ 

கோபத்தில் முறைத்தபடி சொன்னேன்.

‘அட நீங்க ஒரு ஆளு. வேட்டிய அவுருங்கய்யா’.

‘மாப் . . .ளே’

‘துண்ட உடுத்திக்கோங்க. கொண்டாந்துருக்கெம்லா!’

துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஸ்டூலில் அமர்ந்தேன். அழுக்கு புட்டியிலிருந்த தைலம் என்னும் திரவத்தை கையில் ஊற்றிக் கொண்டார் மாப்பிள்ளை. நறுமணத்தில் மயக்கம் வந்தது. முதலில் தோள்பட்டையில் தைலத்தை வடிய விட்டார். மிதமான சூடு. நேரடியாக மூக்கில் மணம் அடித்து தலையைத் துவளச் செய்தது. 

‘ஆங்! தலையத் தொங்கப் போடாதிய’. பட்டென்று பிடரியில் அடி விழுந்தது. அடிகளின் பிள்ளையார்சுழி அது என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. தோளிலிருந்து மாப்பிள்ளையின் முரட்டுக்கரங்கள் நடு முதுகுக்கு இறங்கி அங்கு சிறிது நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டு இடுப்புக்குச் சென்றது.

‘அங்கனதான் அங்கனதான் மாப்ளே. குறுக்குலதான் வலி’.

‘ஆமாமா. திண்டு கணக்கால்லா ரத்தம் கெட்டியிருக்கு. இரிங்கொ’.

புட்டியிலிருந்து இன்னும் கொஞ்சம் தைலத்தை கைகளில் ஊற்றிக் கொண்டார். தைலக் கைகளோடு ‘சளத் சளத்’ என இடுப்பில் வைத்து சாத்தினார். என் கேவல் ஒலி மாப்பிள்ளையின் காதுகளை எட்டவே இல்லை. அவர் தியானம் பண்ணுவது போல மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு என் இடுப்பில் கைகளால் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தார். 

‘துண்டை லேசா தூக்குங்கொ’.

அம்பாசமுத்திரத்திலிருந்து அந்தக் காலத்தில் டிரங்க் காலில் ஒலிக்கும் குரல் போல மாப்பிள்ளையில் குரல் எங்கோ கேட்டது. நான் சுயநினைவுக்குத் திரும்புவதற்குள் மாப்பிள்ளை என் தொடைகளில் தைலத்தை வழிய விட்டார். அடி அங்கும் பலமாகத்தான் விழுந்தது. பாதம் வரைக்கும் வழிந்த தைலம் சின்ன வாய்க்கால் போல அறையெங்கும் ஓடியது. ஆனாலும் திருப்தியடையாத மாப்பிள்ளை மேலும் புட்டியைக் கையில் கவிழ்த்து தைலத்தை ஏந்தினார்.

‘போதுமே மாப்ளே! அதான் நல்ல்ல்லா தேச்சுட்டேளே!’

‘சும்ம கெடைங்கத்தான். எறநூறு ரூவா குடுத்துல்லா வாங்கியிருக்கென். முளுசா கவித்திருவோம்.’

மாப்பிள்ளையின் கரங்களிலிருந்து நான் விடுபடும் போது வெளியிலும், எனக்குள்ளும் இருட்டத் துவங்கியிருந்தது. 

‘நல்லது மாப்ளே! ஒங்களுக்கு ஆயிரம் சோலி கெடக்கும். ஒங்கள வேற சங்கடப்படுத்திட்டென். நீங்க கெளம்புங்க’.

‘நல்ல கதயா இருக்கெ! வெந்நி போடச் சொல்லியிருக்கென். ஒங்களுக்கு முதுகு தேச்சுக் குளிப்பாட்டிவிட்டுட்டுத்தான் கெளம்புவென். எண்ணெ போணும்லா!’

நான் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தேன். உடம்பு வலியும், மனவலியும் சேர்ந்து கொண்டு பரிசாக அளித்த சோர்வு. 

‘எத்தான் . . . . எத்தான்’.

கவனம் கலைந்து, ‘சொல்லுங்க மாப்ளே’.

‘வெந்நி சுடதுக்குள்ள இந்தாக்ல ஒரு செல்ஃபி எடுக்கிடுவோமா?! இந்த மாரில்லாம் அமையாது பாத்துக்கிடுங்க’.

காந்திமதித்தாயின் அருளால் தங்கை அங்கு வந்து சேர்ந்தாள்.

‘எய்யா! வெந்நி சுட்டுட்டு. கூட்டிட்டு வாருங்கொ’.

‘மாடு குளுப்பாட்டுன கையால அண்ணன போட்டு என்னா பாடு படுத்துட்டியோ!’

தங்கையின் முணுமுணுப்பை மனக்காது கேட்க மறுத்தது. மாப்பிள்ளை இயற்கை விவசாய ஆர்வலர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் விருது பெற்றவர். அவர் மாடு குளிப்பாட்டும் விவரம் அறிந்த பின்னும் அவர் கைகளினால் குளிப்பாட்டப்பட சென்றேன்.

கொதிக்கக் கொதிக்க சுடுநீரை முதுகில் ஊற்றித் தேய்க்கத் துவங்கினார். மாப்பிள்ளையின் கரங்களில் வைக்கோல் இருப்பதாகவே என் மடமுதுகு உணர்ந்தது. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் ஈனஸ்வரத்தில் ‘மா . . .ப் . . .ளே’ என்று என் உதடு பிரிந்து லேசாக சத்தம் வந்தது. மாப்பிள்ளையின் காதுகளில் அது எட்டியதொ இல்லையோ அறியேன். ஆனால் அவராகவே, ‘சவம் எண்ணெ போவெனாங்கு. மலயாளத்தான் எண்ணெல்லா’ என்றபடி மேலும் தேய்த்தார்.

குளித்து முடித்து மாடிப்படிகளில் தவழ்ந்து சென்று நான் படுக்கையில் விழுந்த போது, மாப்பிள்ளை விடைபெறும் குரல் கேட்டது.

நா . . .  ன் ரா . . . த்த்த் . . . திரி வா . . . ரேன் . . . அத்தான். தூ . . . ங்கு . . . ங்கொ. தா . . . வல ஆ . . . யி . . .ரு . . .ம்.’

சில நிமிடங்களில் முதுகு வலி குறைந்ததை உணர்ந்தேன். ‘மாப்ளெ சொன்ன மாரி என்ன இருந்தாலும் மலயாளத்தான் எண்ணெல்லா!’ என்று மனதுக்குள் சிலாகித்து முடிப்பதற்குள், இடுப்பிலிருந்து கால் வரைக்கும் பேயாக வலி பரவுவதை உணர்ந்தேன். இந்த முறை மறந்தும் மாப்பிள்ளையை அழைக்காமல் குத்துமதிப்பாக யாரையோ அழைத்து அலறினேன். கொஞ்ச நேரத்தில் காதருகில் ஓர் அறிந்த குரல்.

‘யண்ணே! சும்ம இருக்கேளா?’ மந்திரம்லா வந்துருக்கென்’.

சிறு வயதிலிருந்தே மனதில் பதிந்திருக்கும் மந்திரத்தின் குரல். அதாவது மந்திரத்தின் சிறு வயதைலிருந்ந்தே. சின்னஞ்சிறுவனாக அம்மன் சன்னதியில் ஒரு நடமாடும் இஸ்திரி வண்டி வைத்து துணிகளைத் தேய்த்துக் கொடுக்கும் காலத்திருந்தே மந்திரத்தின் குரல் மாறவில்லை. உருவத்தில் ஒரு பெரிய மனிதர் நின்று கொண்டிருந்தார்.

‘மந்திரம்! ஆளே அடையாளம் தெரியலயடே!’ என்றபடி சிரமத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தேன்.

அருகில் அமர்ந்த மந்திரம் என் கைகளைப் பிடித்து கண்களை மூடிக் கொண்டு ‘நாடி’ பார்த்தான். 

‘இடுப்புலதான் சுளுக்கு இருக்கு. கரண்டக்கால் வரைக்கும் ஒளைச்சல் இருக்குமெ!’

‘ஆமா மாந்திரம். தாங்க முடியல.’

‘துண்டக் கட்டிக்கிட்டு நில்லுங்க. தடவி விட்டு உப்பு கட்டி அடிச்சிருவொம். பத்தே நிமிசத்துல சரி ஆயிரும்.’

தீர்க்கமாக ஒலித்த மந்திரத்தின் குரல் திருமந்திரம் போல ஒலித்தது. பாதிவலி குறைந்த மாதிரி இருந்தது. 

துண்டைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன். கையில் ஒரு புட்டி. அதே புட்டி. அதே என்றால் அதே. கேரள வைத்தியசாலை புட்டி. மனம் மிரள குமுறி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘இது எதுக்குடே?’ என்றேன்.

‘ஒங்க மாப்பிள்ள சொல்லிட்டுப் போனாவொ. எறநூறு ரூவா குடுத்து வாங்கியிருக்காக. வம்பாப் போயிரக்கூடாதுல்லா!’

மாப்பிள்ளையை மனதுக்குள் காதலிக்க ஆரம்பித்தபடி, ‘ஸ்டூல் வேண்டாமாடே?’ என்றேன்.

‘அதெதுக்கு? சுவத்தப் புடிச்சுக்கிட்டுத் திரும்பி நில்லுங்கொ’

சுவரைப் பிடித்தபடி நிற்கவும், கண்ணிமைக்கும் நேரத்தில் ‘அது’ நிகழ்ந்தது. விருட்டென்று என் இடுப்பில் உடுத்தியிருந்த துண்டை உருவினான், மந்திரம்.

‘கிருஷ்ணாஆஆஆஆஆஆஆ’ என்று அலறினேன். 

‘காசியாபிள்ள மவன் கிட்ணன் செத்துப் போயி ஆறு மாசம் ஆச்சுல்லா. ஹார்ட் அட்டாக்கு’ என்றான், மந்திரம்.

எதையும் கேட்கும் மனநிலையில் நான் அப்போது இல்லை. ‘எல்லாம் போச்சு. இனிமேல் நாம் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை’ என்றெல்லாம் மனம் யோசிக்க ஆரம்பித்து விட்டது.

தேய்த்து முடித்த பின் மந்திரம் துணியில் கல் உப்பைக் கட்டி வெந்நீரில் முக்கி ஒத்தடம் கொடுக்கத் துவங்கினான். அந்த சோகத்திலும் சுகமாகத்தான் இருந்தது.

வேலையை முடித்தபின், ‘அப்பொ நான் வாரென்’ என்றான், மந்திரம்.

திரும்பாமலேயே, ‘ம்ம்ம்’ என்றேன். 

‘இன்னும் ஏன் சொவத்தப் புடிச்சிக்கிட்டெ நிக்கியோ?’ என்றான் மந்திரம்.

‘கொஞ்ச நேரம் சொவத்தப் புடிச்சுக்கிட்டு நின்னா சொகமா இருக்கு. நீ கெளம்பித் தொலடே. நல்லாயிருப்ப’ என்றேன்.

இரவு டாக்டர் ராமச்சந்திரன் மாமா வந்து பார்த்தார். ‘இப்பந்தான் க்ளினிக்கச் சாத்திட்டு வாரென். ஊசி போட்டிருதென். அப்பதான் தூங்குவிய. மருமகன் ஊசிக்கு பயப்பட மாட்டேளே!’ என்றார்.

‘அதெல்லாம் இல்ல மாமா. கத்தாம லேசா அளுவென். அவ்வளவுதான்’ என்றேன்.

‘சரி. வேட்டிய எறக்குங்க’, என்றார். ‘சரி இது மாமாவின் முறை போல’ என்று நினைத்தபடி, திரும்பி நின்றேன். மாப்பிள்ளையின் கரங்களும், மந்திரத்தின் உப்பு ஒத்தடமும் ‘எதையும் தாங்கும் பின் புறத்தை’ எனக்கு வழங்கியிருந்ததால் வாழ்க்கையில் முதன் முறையாக ஊசிக்குக் கண்ணீர் சிந்தாமல் கல்லாய்ச் சமைந்து நின்றேன்.

இரவு ஆழ்ந்த உறக்கம். காலையில் எல்லாம் சரியானது. குஞ்சுவின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். சின்ன தாத்தா வீட்டு வாசலில் தனது இஸ்திரி வண்டியை நிறுத்தி துணிகளைத் தேய்த்துக் கொண்டிருந்த மந்திரம், என்னைப் பார்த்ததும் பாசத்துடன் பாய்ந்து அருகில் வந்து, ‘எங்கண்ணெ கெளம்பிட்டியொ? குஞ்சண்ணனப் பாக்கவா? இப்பமும் ஒரு மட்டம் சுளுக்கு தடவி விட வரணும்லா நெனச்சென். துணி நெறய சேந்துட்டு’ என்றான்.

‘வேண்டாம்டெ. தாவல ஆயிட்டு. வரட்டுமா? தேங்க்ஸு’. மந்திரத்தின் கண்களைத் தவிர்த்தபடி குஞ்சுவின் வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.

குஞ்சுவின் தகப்பனாரிடம் ஆசியும், குஞ்சுவின் மனைவியிடம் ஏச்சும் வாங்கி விட்டு குஞ்சுவை இழுத்துக் கொண்டு வெளியே கிளம்பினேன். தாமிரபரணிக்குச் செல்லும் வழியில் நாங்கள் வழக்கமாகக் காதல் கடிதங்கள் எழுதுகிற குறுக்குத் துறை ரோட்டுக்குச் சென்றோம்.

வழக்கம் போல புத்திசாலித்தனமாகத் துப்பறிவதாக நினைத்துக் கொண்டு, மருத மரங்களைப் பார்த்துக் கொண்டு, என் முகம் பார்க்காமல், ‘யாருல அவ?’ என்றான், குஞ்சு.

‘கோட்டிக்காரப்பயல. அவ இல்லல. அவன். அவன் கூட இல்ல. அவன்கள்’ என்றேன்.

‘என்னல சொல்லுதெ?’ முகம் சுளித்தபடி என் கண்களைப் பார்த்துக் கேட்டான், குஞ்சு. நான் கற்பிழந்த கதையை ஒன்று விடாமல் சொல்லி முடித்தேன்.

‘இனிமேல் வாள்க்கைல நீ என்ன டிரஸ் போட்டாலும் நம்ம மந்திரம் கண்ணுக்குத் தெரியாது’ என்றான், குஞ்சு.  

கிரிவலம் . . .

பகவதி, என் பள்ளித் தோழன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விகடனில் நான் எழுதிக் கொண்டிருந்த ‘மூங்கில் மூச்சு’ வெளியான காலத்தில் சுகாவின் வாசகனாகத் தேடி வந்து என்னைக் கட்டிக்கொண்டான். புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரி. ‘ஏ யப்பா! பகவதிக்கு எவ்ளோ முடி’ என்று பார்ப்போர் ஆச்சரியப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் தலையில் உள்ள முடி அனைத்தையும் முகத்துக்குக் கொணர்ந்து அதற்கு ‘தாடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறான். அத்தனை வருடங்களுக்குப் பின் பகவதியை சந்தித்த நான், அவனது தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து, அவனை அவராகப் பார்க்கத் துவங்கினேன். திருநவேலி பாஷையில் ‘அவாள்’. பகவதியைப் பார்த்த மாத்திரத்தில் நான் அவனுக்கு போட்ட ஒரே கண்டிஷன். ‘சபைல நாலு பேருக்கு முன்னாடி என்னை நீ ஒருமைலதான் கூப்பிடணும், பேசணும். தேவைப்பட்டா கெட்ட வார்த்த கூட யூஸ் பண்ணிக்கோ. ஆனா நான் உன்னை மத்தவங்க முன்னாடி அநாகரிகமா பன்மைலதான் கூப்பிடுவேன். உன்னை போடா வாடான்னு கூப்பிட்டு கிளாஸ்மேட்டுங்கற மரியாதய நான் தருவேன்னு மட்டும் எதிர்பாத்துராதே!’

எனக்குத் தெரிந்த பள்ளித்தோழன் பகவதிக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. இப்போதும் பிடிவாதமாக அந்தப் பழக்கத்தைப் பாதுகாக்கிறான். ஆனால் சென்னையில் பகவதி அநாயசமாகக் கார் ஓட்டுவது இன்னும் எனக்கு ஏற்புடையதாக இல்லை. ‘அதெப்படிடே! சைக்கிள் ஓட்டத் தெரியாது. கார் ஓட்டுதே!’ என்று கேட்டதற்கு ஒரு நக்கல் சிரிப்புடன், ‘ஒனக்கு கார் ஓட்டத் தெரியாது. சைக்கிள் ஓட்டத் தெரியும்லா. அப்படித்தான்’ என்று பதில் சொல்கிறான். பகவதி வைத்திருக்கும் செலெரியோ காருக்கு அப்படியே பகவதியின் முகச்சாடை. சில சமயங்களில் பார்க்கிங்கில் நிற்கும் அவன் காரின் பானட்டை பகவதியாக பாவித்துப் பேசியிருக்கிறேன். அதுவும் மென் சிரிப்புடன் நான் பேசுவதைக் கேட்டபடி அமைதியாக இருந்ததுண்டு.

கடந்த மூன்று வருடங்களாக நான் உட்பட பள்ளித் தோழர்கள் சிலரை தமிழ்நாட்டில் உள்ள அநேக கோயில்களுக்கு பகவதி அழைத்துச் சென்று வருகிறான். குறிப்பாக மாத சிவராத்திரிக்கு எங்களை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று, (இழுத்துச் சென்று) கிரிவலம் வர வைக்கிறான். கிரிவலம் செல்வதற்கான நேரத்தை பகவதியேதான் குறிப்பான். சென்னையிலிருந்து மதிய உணவுக்கு முன்போ, பின்போ கிளம்பி இருட்டத் துவங்கிய பின் திருவண்ணாமலை அடைந்து, பின் நள்ளிரவில் கிரிவலத்தைத் துவக்குவோம். கிரிவலம் செல்வதை விட சென்னையிலிருந்து ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை செல்வது அத்தனை ஆயாசமாக இருக்கும். கிரிவலத்துக்கு முந்தைய நாளே நண்பன் குஞ்சு திருநவேலியிலிருந்துக் கிளம்பி சென்னை வந்து சேர்ந்து விடுவான். முதல் நாளிலிருந்தே எங்களை மனதளவில் கிரிவலத்துக்கு பகவதி தயார் செய்வான். ‘நாளைக்கு பச்சை வேட்டி உடுத்தணும்பா. குபேர லிங்கத்துல ஆளுக்கு ஆறு நெய் வெளக்கு போடணும். அடி அண்ணாமலைல இருவத்தேளு வெளக்கு. அப்புறம் ஆரஞ்சு பள தானம்’. குஞ்சு பரிதாபமாக என் முகத்தைப் பார்ப்பான். பகவதிக்குக் கேட்காதவண்ணம் என் காதருகே, ‘எல கவனிச்சியா! இந்தத் தாயளி நாளைக்கு நம்ம தலைல ஆரஞ்சு பள மூட்டையை ஏத்திருவான் போலுக்கே!’ என்று புலம்பத் துவங்குவான். ‘சரி சரி விடு. ஆளுக்குக் கொஞ்ச நேரம் சொமந்துட்டு நைஸா ராமசுப்பிரமணியன் தலைக்கு மாத்தி விட்டிருவோம். புண்ணியம்னு சொன்னா திருவண்ணாமலை என்ன, திருநவேலிக்கே மூட்டையச் சொமந்துட்டு வருவான்’ என்று சமாதானப்படுத்துவேன்.

கிரிவலம் கிளம்பும் அன்று கோயம்பேட்டில் உள்ள ‘தளவாய்’ ராமலிங்கத்தின் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் ஒன்று கூடுவோம். நண்பன் ‘தளவாய்’ ராமலிங்கம், திருநவேலியின் புகழ் பெற்ற ‘தளவாய்’ முதலியார் குடும்பத்தைச் சேர்ந்தவன். நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் பேராசிரியர் அன்பழகனுக்கு பேரன் முறை. நாங்கள் திருநவேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது, அவனும் எங்களுடன் பள்ளிக்கு வந்து போய்க் கொண்டிருந்தான்.

ராமலிங்கத்தின் ஸ்கார்ப்பியோ கார் எங்களுக்கு முன்பாகவேக் கிளம்பி, திருவண்ணாமலை நோக்கிப் பாயத் தயாராக நின்று கொண்டிருக்கும். நானும், குஞ்சுவும் சாலிகிராமத்திலிருந்துக் கிளம்பி கோயம்பேடு சென்று ராமலிங்கத்துடன் பகவதியின் வருகைக்காகக் காத்துக் கிடப்போம். ராகுகாலம் முடிந்த பின் உள்ளாடை அணிந்து, வேளச்சேரியிலிருந்து பகவதி கிளம்பி கோயம்பேடு வந்து சேர்வதற்குள் பசிமயக்கத்தில் குஞ்சு மெல்ல பகவதியை சைவக் கெட்ட வார்த்தைகளால் ஏசத் துவங்கியிருப்பான். ‘ஒளுங்கு மயிரா சாப்பிட்டுட்டு வருவோம்னு சொன்னா நீ கேக்கியா? இந்தக் . . . ல்லாம் நம்புனா வெளங்குமா? இப்பமே எனக்கு தல சுத்துது’. ராமலிங்கம் பதறிப் போய் கண்ணைக் காட்டுவான். ‘கோயிலுக்குக் கூட்டிட்டு போறவனப் போயி அந்த வார்த்தல்லாம் சொல்லலாமாப்பா?’. ராமலிங்கம் நாங்கள் வருவதற்கு முன்பே சேஃப்டி சப்பாத்திகள் சாப்பிட்டிருப்பான் என்பது எங்களுக்குத் தெரியுமென்பதால் அவனை பசியோடு முறைத்துப் பார்ப்போம். ‘இல்லப்பா. மனசுல பட்டதச் சொன்னேன். சம்போ மகாதேவா’ என்று ஏப்பம் விட்டபடி, ‘முக்குல நின்னு பகவதி வண்டி வருதான்னு பாக்கென்’ என்று நைஸாக எழுந்து சென்று விடுவான். அநேகமாக பகவதி வந்து சேரும் போது, சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டின் வரவேற்பறையின் சோஃபாவில் நானும், குஞ்சுவும் மயங்கிக் கிடப்போம். பகவதியும், ராமலிங்கமும் ஒரே நட்சத்திரக்காரர்கள். சில சமயங்களில் சொல்லி வைத்தாற் போல அவர்கள் இருவருக்கும் சந்திராஷ்டமம் இருக்கும் போது நாங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதை குஞ்சுதான் சொல்லிக் கொண்டே இருப்பான். ‘இவனுவொ ரெண்டு பேருக்கும் சந்திராஷ்டமம். என்ன பாடு படுத்தப் போகுதோ!’. காரில் சாமான்களை ஏற்றும் போது ‘ணங்’கென்று குஞ்சுவின் முழங்காலில் பெட்டியை இடித்தபடி ராமலிங்கம் காரில் ஏற்ற, கதறிய குஞ்சுவை சமாதானப்படுத்தும் விதமாக ராமலிங்கம், ‘நீ சொன்ன மாரியே சந்திராஷ்டமம் வேல செய்யுதேடே!’ என்று சொல்ல, வலி தாங்க முடியாத குஞ்சு, ‘ஒனக்கு சந்திராஷ்டமம்னா என் கால்ல வந்து ஏம்ல இடிக்கே, தாயோளி?’ என்று கதற, ‘சம்போ மகாதேவா’ என்றபடி கார் கிளம்பும்.

நண்பகலில் சென்னை மாநகரைத் தாண்டுவதற்குள் கிட்டத்தட்ட மாலை ஆகி விடும். பசியில் அதுவரை நண்பர்களை ஏசி வந்த குஞ்சு, சிவபெருமானை ஏச நினைப்பதற்குள் காரை ‘ஒன்லி காபி’ ஹோட்டலுக்கு முன் நிறுத்தச் சொல்வான் பகவதி. கிடைத்த வடைகள், முறுக்குகள், சுண்டல்கள் அனைத்தையும் தின்று சுடச் சுட ஃபில்டர் காபியும் குடித்து முடித்த பின் குஞ்சுவுக்கு மீண்டும் பக்தி வந்து சேரும். ‘உளுந்த வட ஃபர்ஸ்ட் க்ளாஸா இருந்துது பாத்தியா? நம்ம ஊரு விசாக பவன் வட மாரியே. எல்லாம் சிவன் அருள்’. இதைக் கண்டும் காணாதது போல கடந்து செல்லும் ராமலிங்கம் ‘சம்போ மகாதேவா’ என்று காரில் ஏறுவான்.

குரோம்பேட்டையில் காரில் ஏறிக் கொள்ளும் நண்பன் ராமசுப்பிரமணியன் உணவிலும், வார்த்தைகளிலும் சுத்த அசைவத்தைக் கடைப்பிடிப்பவன். அசைவ அடைமொழி இல்லாமல் எங்களில் யாரையும் அவன் விளித்ததே இல்லை. அத்தனை பேசுகிறவனுக்கு கடவுள் பக்தியை விட கடவுள் குறித்த பயம் உண்டு. தெய்வக் குத்தம் ஆயிரும் என்ற வார்த்தைகள் அவனை எப்போதும் அச்சுறுத்துபவை. காரில் ஏறியதிலிருந்தே எல்லோரையும் சகட்டு மேனிக்கு அர்ச்சிப்பவன், பகவதியையும் விட்டு வைப்பதில்லை. ‘நீயெல்லாம் ஒரு ஆளு! என்னடா பகவதி?’ என்று துவங்கி ‘மூளைன்னு ஏதாவது இருக்கா உனக்கு’ என்று தொடர்ந்து, ‘ரொம்பப் பேசினேன்னா அப்பிடியே பொடதில அடிச்சு கீள எறக்கி விட்டிருவேன்’ என்பதாக நிறையும். இவை எல்லாம் திருவண்ணாமலை வரும் வரைக்குமான கதை. திருவண்ணாமலை லெவல் கிராஸிங் வந்த பின் ராமசுப்பிரமணினின் வாய் தானாக பகவதியை பன்மையில் வணங்க ஆரம்பித்து விடும். குஞ்சு சொல்லுவான். ‘பகவதிபுரம் ரயில்வே கேட் வந்துட்டுல. ராமசுப்பிரமணியன் இனிமேல் பகவதியோட அடிமை’.

பொதுவாக திருவண்ணாமலை கிரிவலம் என்றால் அநேக பேருக்கு பௌர்ணமி கிரிவலம்தான். ஆனால் நாங்கள் பௌர்ணமிக்குச் செல்வதில்லை. மாத சிவராத்திரிக்குத்தான் செல்வது வழக்கம். கூட்டமும் குறைவாக இருக்கும். தொந்தரவில்லாமல் கிரிவலம் வரலாம். கோயிலை ஒட்டி காரை பார்க் செய்து விட்டு, எதிரே இருக்கும் விடுதியில் குளிக்கச் செல்வான், பகவதி. அவன் குளித்து விட்டு, பச்சை வேட்டி அணிந்து, கையில், கழுத்தில் ருத்திராட்சை அணிந்து, நெற்றி முழுக்க திருநீறு, சந்தன, குங்குமம் சகிதம், மேல் சட்டையில்லாமல் பகவதியடிகளாகக் காட்சி தருவான்(ர்). பகவதியடிகளின் சீடனாக அவரது உடமைகளைச் சுமந்தபடி பயபக்தியுடன் நின்று கொண்டிருப்பான், ராமசுப்பிரமணியன்.

அதற்குப் பிறகும் கிரிவலம் துவங்கியபாடிருக்காது. நிறைய துணிப்பைகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து ராமசுப்பிரமணியனிடம் கொடுத்தபடி இருப்பான், பகவதி. ஐவகை எண்ணெய், சின்ன மண் சட்டிகள், திரிகள், வித விதமான ஊதுபத்திகள், சின்னதும், பெரிதுமாக புத்தகங்கள், இவை போக அந்த மாதத்துக்கான கிரிவல தானப் பொருள் என ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணம் இருக்கும். ராமசுப்பிரமணியனின் தோளில் பாரம் ஏறி ஏறி சிறிது நேரத்திலேயே பிட்டுக்கு மண் சுமந்த சிவன் போல ஆகிவிடுவான். ‘எல! இந்த மட்டம் மெட்டீரியல எறக்கிக்கிட்டே இருக்கானே! அநேகமா ராமசுப்பிரமணியனை கிரிவலம் முடியவும் ஆஸ்பத்திரில சேக்க வேண்டியிருக்கும்’ என்பன் குஞ்சு.

எல்லோரும் காத்து நிற்க, ‘போலாம்பா’ என்று ஜாடை காட்டி முன்னே நடப்பான், பகவதி. அமைதியாகப் பின்  தொடர்வோம். ரெட்டைப் பிள்ளையார் முன் விளக்கு போட அனைவரையும் பணிப்பான். கையில் பிரம்மாண்ட ஊதுபத்தி கொடுத்து விடுவான். ஒவ்வொரு ஊதுபத்திக்கும் ஒவ்வொரு பெயர். ‘இது பைரவர் ஊதுபத்திப்பா. இது கிரிவலத்துக்கானது. இது ராகு கேதுக்கானது.’  ரெட்டைப் பிள்ளையார் வாசலில் பூ விற்கும் பெண்கள், எங்களைப் பார்த்ததுமே, ‘க்கா! தோ பாரு. ஊதுவத்திக்காரங்க வந்துட்டாங்க’ என்பார்கள். ‘ண்ணா! எங்களுக்கும் ஒண்ணு குடுத்துட்டுப் போங்கண்ணா’. ஆளுக்கு மூன்று விளக்கு ஏற்றிய பின், பிள்ளையாரை வணங்கி விட்டு கிரிவலத்தைத் துவக்குவோம். ‘இப்பம் மூணு தோப்புக்கரணம் போட்டா போதும்பா. முடிச்சுட்டு வரும் போதுதான் இருவத்தொண்ணு’. ஒரு முறை இந்திர லிங்கத்தைத் தாண்டும் போது கையில் பெரிய ஊதுபத்தியுடன் எங்களைக் கண்ட சிறுவர்கள் அவர்களுக்குள் பேசியபடி பின் தொடர்ந்தனர். எங்கோ தூரத்தில் தெரிந்த தங்கள் நண்பனை அழைத்தார்கள். ‘டேய் விநோத்து. பட்டாஸ் வெடிக்கப் போறாங்கடா. பத்திய பாத்தியா, ஜெயிண்ட் சைஸு. தவுஸண்ட் வாலாவாத்தான் இருக்கணும். பைக்குள்ள இருக்கும் பாரேன்.’ கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘டேய் தம்பி. பைக்குள்ள ஆரஞ்சு பளமும், பைரவருக்குப் போட பிஸ்கட்டும், பொறையும் தான்டா இருக்கு. நீங்க போயி வெளையாடுங்க, போங்க போங்க’ என்று கெஞ்ச வேண்டியிருந்தது. 

ஊதுபத்திதான் என்றில்லை. ஒவ்வொரு முறை கிரிவலத்தின் போதும் ஒவ்வொரு தினுசான ஐட்டங்களை இறக்குவான், பகவதி. அதற்குச் சொல்லும் காரணமும் பகீரென்றிருப்பதால் சத்தமில்லாமல் அவன் சொன்னதைச் செய்வோம். ‘இந்த கிரிவலம் கொட்டாங்குச்சி சித்தர் தலைமைலதான் போகணும்பா. அதுக்கு கைல தென்னங்கன்னு ஒண்ணை வச்சுக்கிட்டு சுத்தணும்.’ எல்லோரும் அமைதியாகிவிட பகவதி மட்டும் கையில் தென்னங்கன்றுடன் கிரிவலம் வந்தான். தென்னங்கன்றின் குருத்து கண்ணைக் குத்தியதால், நான் சற்றுத் தள்ளி நடக்க ஆரம்பித்தேன். ‘பகவதி! எதுக்கும் அப்பப்பத் திரும்பிப் பாத்துக்கோ. சின்னப்பயலுக தென்னங்கன்னுல ஏறிரப் போறானுக’.

‘தளவாய்’ ராமலிங்கத்துக்கு சில பூர்வீகச் சொத்துகள் வர வேண்டியிருக்கிறது. அது விரைவாகக் கிடைக்கவேண்டுமென்றால் அதற்கும் கிரிவலத்தில் ஒரு சமாச்சாரம் இருப்பதாகச் சொன்னான், பகவதி. அதாவது சந்திர லிங்கத்திலிருந்து குபேர லிங்கம் வரைக்கும் குதிகாலிலேயே கிரிவலம் வர வேண்டும் என்றான். ‘தளவாய்’ ராமலிங்கம் கொஞ்சம் கூட யோசிக்காமல் குதிகாலில் நடக்க ஆரம்பித்தான். துணைக்கு நானும் அவனுடன் மெதுவாக ஊர்ந்து நடக்க வேண்டியிருந்தது. முகத்தில் வலியை மறைத்தபடி, சர்க்கஸில் பார் விளையாடும் பாலன்ஸுடன் முக்கி முனகி ‘தளவாய்’ ராமலிங்கம் நடந்தபடி, ‘குபேர லிங்கம் வந்துட்டா வந்துட்டா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தான். ‘அதைக் கேக்கக் கூடாதுப்பா. அப்புறம் சொத்து கைக்கு வராது’ என்று மிரட்டினான், பகவதி. அதற்குப் பிறகு ராமலிங்கம் வாயைத் திறக்கவில்லை. ஆனால் அவன் பற்களைக் கடித்தபடி வலியைத் தாங்கிக் கொண்டு மனதுக்குள் பகவதியை ‘அந்த’ வார்த்தை சொல்லி ஏசியது, முகத்தில் தெரிந்தது.

கிரிவலத்தின் போது கொடுக்க வேண்டிய தானங்கள் ஒவ்வொரு முறையும் மாறுபடும். ஒரு கிரிவலத்துக்குக் கிளம்பிச் செல்லும் வழியில் வேளச்சேரி தாண்டி ஏதோ ஒரு பிரதேசத்துக்குள் வண்டியைத் திருப்பச் சொன்னான், பகவதி. அங்கு ஒரு வீட்டின் முன் பச்சை வேட்டி கட்டிய மனிதர் ஒருவர் காத்திருந்தார். காரிலிருந்து இறங்கிய பகவதியும், பச்சை வேட்டிக்காரரும் ஒருவரை ஒருவர் ‘ஓம்ஜி’ என்று அழைத்துக் கொண்டனர். வீட்டுக்குள்ளிருந்து சிறிதும், பெரிதுமாக சில பைகள் வந்தன. அத்தனையையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு ஓம்ஜியை வணங்கிவிட்டுக் கிளம்பினோம். கிரிவலத்தின் போது ஆளுக்கொரு பையை, தோளில் ஏற்றினான் பகவதி. ‘ஏன் பகவதி! பைக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?’ தயங்கியபடியே ராமசுப்பிரமணியன் கேட்டான்.

‘எப்படியும் தெரிஞ்சுக்கிடத்தானேப்பா செய்யணும்? நீங்கதானே தானம் குடுக்கப் போறீங்க? பன் பட்டர் ஜாமுப்பா’.

கிரிவலப் பாதையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி பன் பட்டர் ஜாம் கொடுத்தபடியே சென்றோம். அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாய் பன் பட்டர் ஜாம் தீர்ந்தபாடில்லை. காருக்குள் நிறைய பைகள் மிச்சமிருந்தன. டிரைவர் மெதுவாக ஓட்டியபடியே வந்து கொண்டிருந்தார். கிரிவலம் நிறைவடையும் பகுதி வந்த பிறகும் பொட்டலங்கள் உப்பலாகக் காருக்குள் காத்திருந்தன.

‘பகவதீ! எத்தன பொட்டலம்ப்பா?’

‘அதிகமா ஒண்ணும் இல்லப்பா. ஆயிரந்தான்’.

‘அடுத்த கிரிவலம் வரைக்கும் குடுக்கணுமெப்பா?’

‘அதெல்லாம் இல்லப்பா. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் வாங்க. பட்டுவாடா பண்ணிடலாம்’. பகவதி முன்னே நடக்க, ‘தளவாய்’ ராமலிங்கமும் பைகளைச் சுமந்தபடி பின்னே நடந்தான். ஒரு வட இந்திய நிறுவனத்தின் தமிழக விற்பனை அதிகாரியான ராமசுப்பிரமணியன், மக்களோடு மக்களாகப் பழகுவதில் தான் ஒரு நிபுணன் என்று சொல்லிக் கொள்பவன். ஆனால் மக்கள் புழக்கம் அதிகமுள்ள பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல மறுத்தான். பைகளைச் சேகரித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல முயன்ற என்னைத் தடுத்துச் சொன்னான்.

‘அவனுகளுக்குத்தான் கூறு இல்லன்னா உனக்கெங்கெல புத்தி போச்சு?’

‘ஏம்ல?’

எல! ஞாவகம் இருக்கா? திருவண்ணாமலை பக்கத்துலதான் ஒரு குடும்பம் கார்லேருந்து பிஸ்கட், சாக்லெட் எடுத்து சின்னப் பிள்ளைகளுக்குக் குடுத்தாங்கன்னு ஊரே கூடி அடிச்சுது. மறந்துட்டியா?’

பகவதியும், ‘தளவாய்’ ராமலிங்கமும் திரும்பி வந்து தேடியபோது எங்களைக் காணவில்லை.

பொதுவாக மாத சிவராத்திரியின் போது கிரிவலப்பாதையில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது. அப்படியே கூட்டம் வந்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள்  வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வரும். கிரிவலம் துவங்கும் போதே குஞ்சுவின் காந்தக் கண்கள் சுழல ஆரம்பிக்கும். தானாக யாராவது ஒரு பெண்ணின் பின்னால் அவனது கால்கள் நடக்க ஆரம்பிக்கும். அப்படி ஒருமுறை வெண்பட்டுச் சேலையணிந்து, குளித்த ஈரம் காயாத தலைமுடியுடன், நெற்றியில் சந்தனத் தீற்றுடன் கிரிவலம் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணுடன் நடந்தபடியே பேச்சு கொடுத்தான்.

‘சேச்சிக்கு ஸ்தலம் எவிடையானு?’

‘கோட்டயம்’.

‘ஓ! எண்ட அம்மைக்கு கொல்லமானு. ஞான் ஹாஃப் மலையாளி கேட்டோ’ என்றபடி தனக்குத் தெரிந்த மலையாளச் சொற்களை அந்தப் பெண்ணின் மீது தெளித்தவாறே கிரிவலத்தை நிறைவு செய்தான்.

அடுத்த முறை கிரிவலத்தைத் துவக்கும் போது அதிகளவில் ஆந்திர மக்கள் தென்பட்டார்கள். ராமசுப்பிரமணியன் சொன்னான். ‘இந்தத் தாயளி இன்னைக்கு எங்கம்மைக்கு விஜயவாடான்னு சொல்லுவானாலெ!’

ஒவ்வொரு முறை கிரிவலம் சென்று வந்த பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யாவிடமிருந்து ஃபோன் வரும்.

‘ஏன் ஸார் என்னை கிரிவலத்துக்குக் கூட்டிட்டுப் போகல?’

‘ஸாரி ரம்யா. அடுத்த வாட்டி போகலாம்’.

‘இப்படித்தான் ஒவ்வொரு வாட்டியும் சொல்றீங்க?’

‘பதினாலு கிலோமீட்டர். கால்ல செருப்பில்லாம உன்னால நடக்க முடியாது. சொன்னா புரிஞ்சுக்கோ’.

‘யாரு சொன்னா? திருப்பதிக்கெல்லாம் நான் நடந்தே போயிருக்கேன். என்னைக் கூட்டிட்டுப் போகாம இருக்கறதுக்கு சும்மா சாக்கு சொல்றீங்க’.

‘அப்படில்லாம் இல்லம்மா. நெஜம்மா அடுத்த வாட்டி போகலாம்’.

ஆனால் ஒரு முறையும் ரம்யாவை அழைத்துச் சென்றதில்லை. ஆனால் இந்த விஷயத்தை நண்பர்களிடம் அவ்வப்போது சொல்லுவேன். ‘இத என்ன மயித்துக்கு எங்கக்கிட்ட சொல்லுதேன்னு கேக்கென்?’ என்று தானம் கொடுப்பதற்காக பகவதியினால் தோளில் ஏற்றப்பட்ட கேரட் மூட்டையைத்  சுமந்தபடி கிரிவலம் வந்து கொண்டிருந்த  ராமசுப்பிரமணியன் கத்தினான். ‘எப்பா! அந்தப் பிள்ள கேட்டதைத்தானெ சொன்னேன்! இப்பம் என்ன அதைக் கூட்டிக்கிட்டா திருவண்ணாமலைக்கு வந்துட்டேன்?’ என்றேன். ‘நீ மட்டும் அந்தப் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு திருவண்ணாமலைக்குள்ள நொளஞ்சு பாரு. இங்கெ ஆட்கள ஏற்பாடு பண்ணி ஒன் கால வெட்டச் சொல்லுதென்’. பூர்வீக சொத்து குறித்த வேண்டுதலையும் மீறி உணர்ச்சிவசப்பட்ட ‘தளவாய்’ ராமலிங்கம் இப்படி சொல்லவும், அமைதியாக அவனையும், வானத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு, ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்றேன். சட்டென்று தன் நிலை உணர்ந்து ‘எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்றபடி குதிகாலில் நடந்து அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்று, ‘அண்ணாச்சி! ஒரு லைட் டீ’ என்றான்.

இவற்றையெல்லாம் வழக்கமாக குஞ்சு கண்டுகொள்வதில்லை. அவனைப் பொருத்தவரைக்கும் இது மாதிரியான விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் அது பொய்யாகி விடும் என்ற அபார நம்பிக்கை உண்டு. கிரிவலத்துக்குக் கிளம்பி வருவதில் உள்ள தாமதம். அதனால் வருகிற அலுப்பு. திருவண்ணாமலை வந்த பிறகும் பகவதி போடுகிற பக்தி சட்டத்திட்டங்களைக் கடைப்பிடித்தாக வேண்டிய கட்டாயம் போன்றவற்றினால் குஞ்சு ஒவ்வொரு முறையும் புலம்புவான்.

‘இந்தப் பயலுவொ படுத்துத பாட்டுல மனசுல பக்தியே இல்லாம போயிருதுல. ச்சை.’

‘ஆமால. நானும் வாள்க்கைல ஒரு மட்டமாது கைய நல்லா வீசிக்கிட்டு கிரிவலம் வரணும்னு நெனைக்கென். நடக்க மாட்டெங்கெ. இத்தா நீளத்துக்குல்லா ஊதுபத்திய குடுத்துருதான்’ என்றேன்.

‘அத ஏம்ல கேக்கெ? ஒவ்வொரு மட்டமும் ஊதுபத்தி வேட்டில பட்டு ஓட்ட விளுந்து விளுந்து, இந்தா பாரு, என் வேட்டி கொசுவல மாரி ஆயிட்டு’.

வெட்கமே இல்லாமல் வேட்டியை அவிழ்த்து உதறிக் காட்டினான்.

‘சரி சரி. மொதல்ல உடுத்து. பொம்பளையாள் வருது’. பதறிப் போய் சொன்னேன்.

முகத்தில் மாறாத கடுப்புடன் வேட்டியை நிதானமாகக் கட்டியபடி குஞ்சு சொன்னான்.

‘நெசம்மா சொல்லுதென். இனிமேல் இந்தத் தாயளிங்க கூட நாம கிரிவலம் வர வேண்டாம் . . . நாம மட்டும் ரம்யா கூட வருவோம்’.

திருநவேலி இன்று . . .

கடந்த மாதத்தில் பாதி நாட்கள் திருநவேலியில் இருக்க வாய்த்தது. நீண்ட காலம் கழித்து இப்படி ஒரு வாய்ப்பு. அநேகமாக எல்லா நாட்களின் இரவுணவு, திருநவேலியின் பல்வேறு ரோட்டுக் கடைகளில்தான். அதற்காக விஞ்சை விலாஸுக்கும், விசாக பவனுக்கும் போகாமல் இல்லை.

வழக்கம் போல இந்த முறையும் பழைய, புதிய மனிதர்களின் சந்திப்புதான் விசேஷம். ஊருக்குப் போன அன்றைக்கே தேரடிக்கு எதிரே உள்ள மணீஸ் அல்வா கடையில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது குஞ்சு தோளைத் தொட்டுச் சொன்னான், “யார் வாரா பாரு”. தூரத்தில் காந்தி அத்தான் வந்து கொண்டிருந்தான். முழு பெயர் காந்திமதிநாதன். கட்டையான சிவத்த உடம்பு. உருண்டையான அவனது தோற்றத்தில் மாற்றம் தெரிந்தது. அவன் அருகில் வருகிற வரைக்கும் பால் குடித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் வரவும், “என்னத்தான்! எப்படி இருக்கே?” என்றேன். “என்னை மறந்துட்டியோன்னு நெனச்சேன்டா, மாப்ளே!” என்றான், வழக்கமான கரகரத்த குரலில். சிகரெட் குடித்து குடித்து அவன் குரல் அப்படி ஆகியிருந்தது. “உன்னை நான் எப்படி மறப்பேன்த்தான்! அநியாயத்துக்கு மெலிஞ்சுட்டே. நெஜமாவே அடையாளம் தெரியல,” என்றேன். அருகில் நின்ற குஞ்சுவைப் பார்த்து, “நீ சொல்லலியா, மாப்ளே! அத்தான் பைபாஸ் பண்ணிட்டெம்லா!” என்றான். சட்டையின் மேல் பித்தான்களை நீக்கிக் காட்டினான். குழப்பமும், வருத்தமுமாகப் பார்த்தேன். ஆனால் அத்தான் முகத்தில் அப்படி ஒரு பெருமை. சமூகத்தில் சொல்லிக் கொள்ளுமளவுக்கான ஓர் அந்தஸ்தை அடைந்து விட்ட  கர்வத்துடன் ‘காதலிக்க நேரமில்லை’ ரவிச்சந்திரன் ஸ்டைலில் கொஞ்சம் சாய்வாக நின்றபடி என்னை ஏளனமாகப் பார்த்தான். பார்வையில் “என்னை என்ன சொல்லிடா பாராட்டப் போறே, மாப்ளே?” என்ற கேள்வி காத்திருந்தது. சில நொடிகள் யோசித்து ஒன்றும் சிக்காமல் “காந்தி அத்தான் காந்தி அத்தான்தான்!” என்றேன். “இதச் சொல்றதுக்கு இவ்வளவு நேரமாடா?” என்றவன் தொடர்ந்து “வேற ஏதாவது புதுசா சொல்லுவேன்னு எதிர்பாத்தேன், மாப்ளே” என்றான். குரலில் ஏமாற்றம் தெரிந்தது. “ஒன்னப் பாத்த அதிர்ச்சிலேருந்து இன்னும் அவன் மீளலத்தான். அதான்,” என்று சொல்லி சமாளித்தான் குஞ்சு. “புரியுதுடா மாப்ளே!”. இருவரையும் புன்முறுவலுடன் பாராட்டி விட்டு காந்தி அத்தான் கிளம்பும் போது கையிலுள்ள மிச்சப் பால் ஆறியிருந்தது. “இன்னொரு பால் சொல்லுல,” என்றேன், குஞ்சுவிடம்.

நண்பர் கோலப்பன் சொல்லுவார். “எங்க ஊர்ல மதுசூதனன் மாமாவுக்கு பைபாஸ் ஆகி வீட்டுல கெடந்தாரு பாத்துக்கிடுங்க. முருகண்ணன் வந்து சொல்லுகான். எல கோலப்பா! நம்ம மசூதம் மாமாக்கு நெஞ்சுல ஜிப்பு வச்சு தச்சிருக்குல்லா! வா, போயி பாத்துட்டு வருவோம்”.

திருநவேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் முழுவதுமாக இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி வருவதாகச் சொன்னார்கள். ஏற்கனவே அறிந்த செய்தி அது. ஆனால் டவுண் நேதாஜி போஸ் மார்க்கெட்டும் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி ஆகிறதாம். “நீ எளுதியிருப்பெல்லா நம்ம மார்க்கெட்ல நான் எலை வாங்கப் போன கதய. அதப் படிச்சுத்தான் நம்ம மார்க்கெட் எப்பிடி இருந்ததுன்னு இனிமேல் தெரிஞ்சுக்கணும்.” குஞ்சு சொன்னான். “அப்பம் அங்கெ உள்ள லைப்ரரி எங்கெ போகும்?” எப்படியும் குஞ்சுவிடம் அதற்கான பதில் இருக்காது என்பதால் மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். மார்க்கெட்டுக்குள்ள போவோமா என்று குஞ்சு கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்து விட்டேன். ஆனால் மனதுக்குள் காய்கறி, தேங்காய், விபூதி, குங்குமம், ஊதுபத்தி, எலுமிச்சை, மாங்காய், சப்போட்டா, பெருங்காயம், சூடன், சாம்பிராணி, மூக்குப்பொடி, மாட்டுச் சாணம், சுருட்டு, காப்பித்தூள், சந்தனம், குல்கந்து என கலவையான வாசனையை நுகர்ந்தபடி நேதாஜி போஸ் மார்க்கெட் வழியாக நடந்து போலீஸ் ஸ்டேஷன் தாண்டி, அதன் பக்கத்தில் உள்ள ‘அளவெடுத்து செருப்பு தைக்கும் கடை’ யைப் பார்த்தபடி மேலரதவீதியில் இருக்கும் டிப்டாப் ரெடிமேட் கடையில் போய் முட்டி நின்றேன்.

என்னுடைய திருநவேலி என்பது நான்கு ரதவீதிகளும், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி மற்றும் ஒரு சில தெருக்கள் மட்டும்தான். இன்னும் நான் சொல்லாத மனிதர்கள் எத்தனையோ பேர் அங்கு உள்ளனர். அம்மன் சன்னதி நந்தி டாக்கர் வீட்டின் புகழ் பெற்ற மர பெஞ்ச் காலப்போக்கில் காணாமல் போனது, அம்மன் சன்னதிக்காரனான எனக்கு சொல்ல முடியாத இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் பெரியவர்கள் ‘நந்தி டாக்கர், அவரது பிள்ளைகள் சுப்பன், ராமுடு, ராதாகிருஷ்ணன் ஸார்வாள் (குஞ்சுவின் தகப்பனார்), குளத்து ஐயர்’ உட்பட பல பெரியவர்கள் சாய்ந்து கிடந்தபடி போகிற வருகிற பெண்களை வேடிக்கை பார்த்த அந்த மர பெஞ்சில் நான் உட்கார்ந்தது கூட இல்லை. நந்தி டாக்கரின் பேரன் தூஜா, “என்னடே எப்பிடி இருக்கே?” என்ற போதுதான் அப்படி ஒருவனை எனக்குத் தெரியும் என்பதே என் மண்டைக்கு உறைத்தது.

“தூஜா ஆள் அப்படியே இருக்கானாலே?” குஞ்சுவிடம் கேட்டேன்.

“ஆமாமா. பேரன் பேத்தி எடுத்துட்டான்னு சொன்னா ஒரு பய நம்ப மாட்டான். இன்னும் வக்கனையா சாப்பிடுதான். அவ்வளவு சொத்து இருக்கு. ஆனா வருசத்துக்கு ரெண்டு வேட்டி, ரெண்டு சட்டதான் எடுப்பான். டெய்லி காலைலயும், சாயங்காலமும் நெல்லேப்பர் கோயில்ல ஒரு சுத்து. வாக்கிங் ஆச்சு. இன்னும் அவனைப் பொருத்தவரைக்கும் எம்.ஜி.ஆர்.தான் முதலமைச்சர். இருட்டுக்கட ஹரிசிங் மாமா இவனப் பாத்த ஒடனேயே அம்பது அல்வாவை எலைல மடக்கிக் குடுத்துருவா. அன்னைய நாள் அதோட ஓவர். தந்தி பேப்பர் கூட படிக்க மாட்டான். டி.வி. பாக்க மாட்டான். நாட்டு நடப்பு எதைப் பத்தியும் அவனுக்குக் கவலையில்ல. அப்புறம் ஏன் ஆளு அப்பிடியே இருக்க மாட்டான்?” குஞ்சு சொல்லி முடிக்கவும் ஏக்கப் பெருமூச்சுடன் தூஜாவைப் பார்த்தேன். அழுக்கு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேக வேகமாக அம்மன் சன்னதி மண்டபத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

திருநவேலிக்குப் போய்விட்டு மீனாட்சியைப் பார்க்காமல் எப்படி? வழக்கம் போல சென்னையில் இருந்து கிளம்பும் போதே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். அவனது சௌகரியம் போல வந்து சேர்ந்தான்.

“நைட் எங்கெ சாப்பிடப் போணும், சித்தப்பா?”

“நீதானல கூட்டிட்டுப் போகணும்?”

“இல்ல. குஞ்சண்ணன் ஏதாவது பிளான் வச்சிருக்கானா? அதுக்குத்தான் கேட்டேன்.”

“மீனாட்சி வந்ததுக்கப்புறம் எனக்கென்னடே ப்ளான் இருக்கப் போது? நீ சொல்லுத கடைக்குப் போவோம்” என்றான், குஞ்சு.

புட்டாரத்தி அம்மன் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள ரோட்டுக் கடைக்கு அழைத்துச் சென்றான், மீனாட்சி. அரையிருட்டில் இரண்டு பெஞ்சுகள், ஏழெட்டு பிளாஸ்டிக் ஸ்டூல்கள் போடப்பட்டிருந்தன. இட்லிக் கொப்பரையில் ஆவி வந்து கொண்டிருந்தது. தோசைக் கல்லில் சின்ன வட்டங்களாக குழிழ் தோசைகள். ஒரு சட்டியில் பூரிக் குவியல். கிழங்கு, சாம்பார், சட்னி சட்டிகள்.

“அண்ணாச்சி! டேபிள விட எல பெருசா இருக்கு பாருங்க. இத எடுத்துட்டு சின்ன எல போடுங்க”. மீனாட்சி ஆரம்பித்தான். குஞ்சுவிடம் கண்ணைக் காட்டினேன். “நாம சாப்பிடதுக்கு மட்டும் வாயத் தொறந்தா போதும். மத்தத அவன் பாத்துக்கிடுவான்” என்றான், குஞ்சு. அடுத்தடுத்து மீனாட்சியின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டது சூழல்.

“ஏற்கனவே அவிச்சு தட்டி வச்சுருக்க இட்லி வேண்டாம். வெந்ததா எடுங்க. வெய்ட் பண்ணுதோம்”.

“காரச் சட்னி வைக்காதிய. வெங்காயம் சோலி முடிஞ்சு போச்சு. தேங்கா எளசோ! சவம் இனிக்கல்லா செய்யுது.”

“மொளாப்டி வச்சிருக்கேளா? . . . என்ன அண்ணாச்சி டால்டா மாரி இருக்கு?! சருவச்சட்டி பக்கத்துல நல்லெண்ண பாட்டில் வச்சிருப்பெளே! அத எடுங்கய்யா. . . ரெண்டே ரெண்டு கரண்டி போதும். . . பூரிக்கு கெளங்கு வேண்டாம். சாம்பாரே போதும் . . .”

சாப்பிட்டு கை கழுவியதும், “சித்தப்பா! புட்டாரத்தி அம்மைக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு என் பின்னால வாங்க” என்று நடையைக் கட்டினான். “தாயளி எங்கென கூட்டிட்டுப் போறான்னு தெரியலியே! சரி சரி வா, போயிப் பாப்போம்” என்றான், குஞ்சு. லாலா சத்திர முக்கும், தொண்டர் சன்னதியும் இணையும் வளைவில் சின்னதாக ஒரு பால் கடை இருந்தது. பால் கடை என்றால் அல்வாவும் இருக்கும் வழக்கமான திருநவேலி கடை. தாழ்வான கடைக்குள் வேட்டியை மடித்துக் கட்டியபடி ஒரு அண்ணாச்சி நின்று கொண்டிருந்தார். மீனாட்சியைப் பார்த்ததும், “என்னா? ஆளயே காங்கல?” என்றார். “நேத்து ஒரு நாள்தானேய்யா வரல? அம்பது அம்பது மூணா வெட்டுங்க” என்றான், மீனாட்சி. என்னிடம், “சித்தப்பா! அவாள் அல்வா வெட்டும் போது பாடி லேங்குவேஜ கவனிங்க. ஒரு ஸ்டெப் கீள போயி வெட்டுவா” என்றான். அவன் சொன்னபடியே அண்ணாச்சி அல்வா வெட்டும் போது, முட்டியை ஒரு நொடி மடக்கி நிமிர்ந்தார். குஞ்சு சிரிப்பை அடக்கிக் கொண்டு, “இந்தக் கடைல இன்னைக்குத்தான்டே அல்வா சாப்பிடுதென்” என்றான். “வாய்ல போடவும், தொண்ட, வயித்தத் தாண்டி வளுக்கிக்கிட்டுப் போயி பிருஷ்ட நுனில உக்காந்திரும், குஞ்சண்ணே”. மீனாட்சி சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அல்வாவை விழுங்கிய குஞ்சுவின் முகம் ஏதோ சொன்னது. “பால் வேண்டாம் , அண்ணாச்சி” என்று சொல்லி விட்டு, திரும்பிப் பார்க்காமல் லாலா சத்திர முக்கை நோக்கி நடந்தான், மீனாட்சி. “எல சொல்லிட்டுக் கூட்டிட்டுப் போ”. பின்னால் சென்ற எங்கள் குரலை அவன் கவனிக்கவில்லை. பழக்கடை ஒன்றின் முன் நின்றபடி, கோழிக்கூடு பழங்களைக் காட்டினான். “கோளிக்கூடு சப்பிடணும்னா இங்கதான் வரணும். கனிஞ்சும் கனியாம மெத்துன்னு இருக்கும். அன்னா பாத்தேளா, சேந்து முடிஞ்சதுக்கப்புறம் வீட்டம்மா கெடக்கற மாரி கோளிக்கூடு கெடக்கு பாருங்க” என்றான். அவனது உவமையில் ஒருகணம் ஆடித்தான் போனேன். இதை கவனித்த குஞ்சு சொன்னான். “இப்பிடி பேச்செல்லாம் கேக்கறதுக்காகவாது மாசம் ஒரு மட்டம் ஊருக்கு வால”.

ஒவ்வொரு முறையும் திருநவேலி பயணத்தை இனிதாக்குபவை, கோயில்களும், சந்திக்கும் மனிதர்களும், விதம் விதமான சாப்பாட்டுக் கடைகளும்தான். ‘தாயார் சன்னதி’ தந்த நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் போக பிரதோஷ வழிபாட்டுக்கு சென்ற கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோயில், பரமேஸ்வரபுரம் முத்தாரம்மன் கோயில், குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயில், பண்பொழி திருமலை முத்துக்குமாரஸ்வாமி கோயில், தென்காசி காசிவிசுவநாதர் கோயில், கோபாலசமுத்திரம் பெருமாள் கோயில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் மற்றும் வெட்டுவான் கோயில், சமணப்படுகைகள் என மனதை நிறைத்த பயணம் அமைந்தது.

நந்தி டாக்கர் வீட்டு தூஜா, மீனாட்சி, அல்வாக்கடைக்காரர், காந்தி அத்தான் போக கலாப்ரியா மாமாவை சந்தித்தது, நீண்ட நாள் சிநேகிதி, வாசகி, எழுத்தாளர், புகைப்படக் கலைஞர் திருமதி ராமலக்‌ஷ்மி ராஜன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு முதன்முறையாக அவர்களை சந்தித்துப் பேசியது, ஹலோ பண்பலை அலைவரிசையில் காதலர் தினத்துக்கான ஒலிபரப்பில் கலந்து கொண்டது, “அண்ணே! ஒரே ஒரு மட்டம் உங்க கன்னத்தைக் கடிச்சுக்கிடட்டுமா?” என்று கேட்பானோ என்று பயப்படும் அளவுக்கு என்னைக் காதலுடன் கவனித்துக் கொண்ட அன்புத் தம்பி கணபதிக்கு என்னுடைய புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தது, மூத்த உறவுகளுக்கான முழுமையான குடியிருப்புகளை உருவாக்கி சிறப்புற நடத்தி வருகிற ‘நங்கூரம்’ அமைப்பினரை சந்தித்தது, நாறும்பூநாதன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்புரை மற்றும் அந்த நிகழ்வில் சந்திக்க வாய்த்த முத்தமிழ் தம்பதியர், சகோதரர்கள் ரமணி முருகேஷ், தாணப்பன் கதிர், கவிஞர் சுப்ரா, டாக்டர் ராமானுஜம், பால்ய தோழர் ஸ்டேட் பாங்க் கணபதி, ஆறுமுகம் அண்ணன், வாசகர் பிரமநாயகம், அதைத் தொடர்ந்து தென்காசியில் விநாயகர் சிலை பரிசளித்து “இப்பதான் நாறும்பூ ஸார் நிகழ்ச்சில உங்க ஸ்பீச் யூ டியூப்ல கேட்டேன். என்னால நம்பவே முடியல. சங்கரன் மாமாவுக்கும், உங்களுக்கும் சம்பந்தமே இல்ல” என்று வியந்து, சிரித்து, தயங்கி உபசரித்து மகிழ்ந்த சகோதரி ராணி கணபதிசுப்பிரமணியன் என நிறைய அனுபவங்களைத் தந்த மனிதர்கள்.

திருநவேலி கீழ்ப்பாலத்தை ஒட்டி அமைந்திருக்கிற ‘முத்து மெஸ்’ என்கிற சாப்பாட்டுக் கடையின் அமோகமான மதிய சைவ உணவும், மாலை நேரத்தை விசேஷமாக்கிய விசாக பவனின் அசத்தலான உளுந்த வடை, ஃபில்டர் காப்பியும், இரவுணவை இதமாக்கிய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள சாலையோர இட்லிக் கடைகளும், அனிதா பால் கடையின் கல்கண்டு பாலும் இந்த முறை திருநவேலி விஜயத்தின் சுவையைக் கூட்டியவை. இரண்டு முறை விஞ்சை விலாஸுக்கும் செல்ல வாய்த்தது. பழைய விஞ்சை விலாஸ் அல்ல. புத்தம் புதிதாக எடுத்துக் கட்டப்பட்டிருக்கும் பளபள விஞ்சை விலாஸ். தோற்றத்தில் கவராமல் அந்நியமாக உணர வைத்தாலும், பழைய சுவை குன்றாமல் பார்த்துக் கொண்டது. முதலாளியும், அவரது மகனும் என் தலையைப் பார்த்ததும் ஓடோடி வந்து உபசரித்தார்கள். அவர்களது அதீத அன்பும், கவனிப்பும் கூச்சத்தைத் தரவே அடுத்தடுத்து அங்கு செல்ல நாக்கு இழுத்தாலும், மனசு தடை போட்டு விட்டது.

பெரும்பாலும் இரவுணவு வெளியேதான். பின் ஒரு சின்ன சுற்று. அப்படி ஓர் இரவுணவுக்குப் பின் காலாற நயினார் குளக்கரையை ஒட்டி நடந்து வந்து, ஆர்ச் பக்கம் திரும்பி சுவாமி சன்னதியில் நானும், குஞ்சுவும் செல்லும் போது, தற்செயலாக தெப்பக்குளம் பக்கம் உள்ள ‘நெல்லை கஃபே’ போர்டு கண்ணில் பட்டது. ஆச்சரியம் தாங்காமல் குஞ்சுவிடம் கேட்டேன். “எல! நெல்லை கபே இன்னும் இருக்கா? பரவாயில்லையே!” கடை திறந்து வியாபாரம் ஆகிக் கொண்டிருந்தது. அழுக்கு உடையும், சிக்கு பிடித்த தலைமுடி, தாடியுடனும் யாரோ ஒரு மனிதர் கடை வாசலில் நின்று கையேந்திக் கொண்டிருந்தார். கடைக்காரர் ஒரு பொட்டலத்தை எடுத்து அவர் கைகளில் போடவும், உடம்பு முழுவதையும் வளைத்து, குனிந்து அந்த மனிதர் பொட்டலத்துடன் நகர்ந்து எங்களுக்கு எதிர்திசையில் நடந்தார். “திருநவேலில கோட்டிக்காரங்களுக்கும் கொறச்சல்லில்ல. அவங்களுக்கு சாப்பாடு போடறவங்களும் கொறயல. நெல்லை கபேல்லாம் இந்த ஒலகம் இருக்கற வரைக்கும் இருக்கும்ல” என்றேன். “அது வாஸ்தவம்தான். அந்தக் கோட்டிக்காரன் யாருன்னு தெரியுதா?” என்றான், குஞ்சு. எதிரே உள்ள ஏதோ ஒரு நடைப்படியில் அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கோட்டிக்காரனை உற்றுப் பார்த்தேன். ஏதோ பிடிபட ஆரம்பித்து மனம் குழம்பி, பின் தெளிய ஆரம்பிப்பதற்கு முன் குஞ்சுவே சொன்னான். “சொல்ல சங்கடமாத்தான் இருக்கு. நம்ம சிவாதான். அதாம்ல சாப்ட்டர் ஸ்கூல்ல நம்ம க்ளாஸ்மேட்டு. நீ இன்னைக்குத்தான் பாக்கெ. நான் டெய்லி பாக்கென்”.